Tag: எம். ஜெயராம சர்மா

  • சிந்தையில் நிற்கும் சிட்னி திருவிழா! 

    -எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா 
                        
    sarmaஆங்கில நாட்டினிலே அழகுதமிழ் சபையேறி அனைவரையும் அணைத்துநின்ற அதிசயத்தைச் சொல்லுகிறேன். வெள்ளையர்கள் தாமும் விருப்புடனே சேலையுடன் துள்ளுதமிழ் விழாக்காண துடிப்புடனே வந்துநின்றார். நல்லதமிழ் பேசிநின்ற நம்முடைய பிள்ளைகளை நாலுபேர் அறிவதற்கு நற்சபையாய் அமைந்ததுவே!

    கவிகம்பன் விழாவினையே கருத்துடனே நடத்திநின்ற காளையரைக்கன்னியரைக் கனம்பண்ணல் முறையன்றோ. ஜெயராமின் துணிவாலும் பணிவான குணத்தாலும் ஜெயமான விழாவாக அமைந்தமையை அறிந்திடுவோம். யாழ்மண்ணில் நடக்கின்ற விழாவாக நான்கண்டேன். ராஜ கதிரைகளும் ராஜசபை அலங்காரமும் ஜோராக இருந்ததை யாவருமே ரசித்தார்கள். ஜெயராஜின் கற்பனைகள் சிந்தாமல்,சிதறாமல் அவரின் மனத்தைப் பிரதிபலிப்பதாக மண்டப ஒழுங்கமைப்பு, அலங்காரம், வரவேற்று உபசரித்தல், அத்தனையும் அமைந்தமையைக் கட்டாயம் குறிப்பிடவே வேண்டும்.

    அக்கால மன்னர்கள் தமிழுக்கு உழைத்தோர்களைக் கெளரவித்து அவர்களுக்குக் குடை, கொடி, ஆலவட்டம் சகிதம் சபைக்கழைத்து பரிசில்கள் வழங்கினார்கள் என்று இலக்கியங்கள் வாயிலாகப் படித்திருக்கின்றோம்.

    இக்காலத்தில் மன்னர்களுக்குப் பதிலாக அரசாட்சியாளர்கள் தங்கள் மனம் போனபடிப் பாராட்டிப் பரிசளிப்பதையும் காண்கின்றோம். ஆனால் கம்பன்கழகம் போன்ற ஒரு அமைப்பு செய்வதைப்போல வேறு எந்தத் தமிழ் அமைப்புகளும் இப்படி ஒரு கெளரவிப்பு விழாவினைச் செய்யவில்லை என்றே கூறலாம்.

    பொருத்தமானவர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு உரிய கெளரவம் கொடுத்து மனத்திலே இருத்திவைக்கும்படியான பெறுமதி மிக்க பரிசினையும் வழங்கும் நயத்தகு நாகரிகத்தினால் ஏனைய அமைப்புக்களைவிடக்கம்பன்கழகம் உயர்ந்தோங்கியே நிற்கிறது என்பதை எவருமே மறுக்க மாட்டார்கள்.   

    சிட்னி மாநகரில் அண்மையில் நடந்தேறிய கம்பன் விழாவில் நடந்த கெளரவிப்பைச் சோழ அரசபையில் நடந்த கெளரவிப்பாகக் கற்பனை செய்து நான் பார்க்கிறேன். அத்தனை நேர்த்தியும், சிறப்புமாக அந்த வைபவம் அமைந்திருந்தது. இதனைத் தனது மனத்தில் திட்டமிட்டுத் தனது சீடர்களுடன் இணைந்து அரங்கேற்றிய அன்புத்தம்பி ஜெயராம் அவர்களை அகமார வாழ்த்துகின்றேன்.

    21 அக்டோபர் ஆரம்பமான இத்திருவிழா, அறிஞர்பலர் சிறப்பிக்க 23அக்டோபர் வரை ஆனந்தமாக நடைபெற்றது.   21, 22 அக்டோபர் திகதிகளில் நடைபெற்ற விழாவில் பங்குகொள்ளும் பாக்கியத்தை இறைவன் எனக்குக் கொடுத்திருந்தார்.இரண்டு தினங்களும் “தன்னை மறந்தாள் தன்நாமம் கொட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” என்னும் நிலையில்தான் நானிருந்தேன் என்று சொல்லுவதில் பெருமகிழ்வு அடைகின்றேன்.

    உண்ணும் சோறும், பருகும் நீரும், கம்பனும் கன்னித்தமிழுமே என்றிருக்கும் தம்பி ஜெயராமையும் அவரது மாணாக்கர் பரம்பரையும் பார்க்கும்பொழுது தமிழ் இனி ஒருபோது வீழாது. அதற்கு என்றுமே உயர்ச்சிதான் 
    என்னும் எண்ணமே எனக்குத் தோன்றியது.

    சிட்னியில் நடந்த கம்பன் திருவிழாவில் வயது வேறுபாடின்றி மிகச் சிறியவரும் இடைத்தரமானவரும், நடுத்தரமானவரும், முதிர்வானவர்களும் நிகழ்ச்சிகளை அலங்கரித்தமை மிகவும் அற்புதமாக இருந்தது.

    அதிகமான விழாக்களில் சற்று முதிர்ந்தவர்களே முன்னிலை வகிப்பார்கள். ஆனால் பத்தாவது ஆண்டு கம்பனது திருவிழா வயதினைத்தூக்கி ஒருமூலையில் வைத்துவிட்டு வளரிளம் குருத்துக்களுக்கு வாய்ப்பளித்து ஊக்கப்படுத்தியமை மிகவும் முக்கிய விடயமாக அமைந்ததைக் கட்டாயம் சொல்லியே ஆகவேண்டும்.

    முதல் நாள் கவியரங்கம் கலாநிதி ஶ்ரீ பிரசாந்தன் நடுவராயிருக்க நடந்தது. இதில் கலந்தவர்கள் இளைஞரும் அல்லர் முதியவர்களும் அல்லர். ” எண்ணங்களும் வண்ணங்களும்” என்பதே கவியரங்கத் தலைப்பு. இதில் பங்கு கொண்டவர்கள் வெளிப்படுத்திய விதங்களைப் பார்த்து உண்மையில் வியந்தேவிட்டேன். சாதாரண வண்ணங்களுக்குள் இவ்வளவு விஷயங்களா என்று எண்ணத்தோன்றியது. இதில் பங்கு கொண்டவர்களில் தமிழ்முரசு ஆசிரியர் திரு. பாஸ்கரன் அவர்களை மட்டுமே எனக்குத் தெரியும். ஏனையவர்களை அன்றுதான் மேடையில் கண்டேன். பாஸ்கரன் அவர்கள் ‘முடிவுறா முகாரி’ என்னும் கவிதைநூலினை வெளியிட்டிருந்தார். நானும் அதனை வாசித்து விமர்சனமும் எழுதுயிருக்கிறேன். பாஸ்கரன் புதுக்கவிதை தானே பாடுவார். அவர் எப்படி இதற்குள் வந்தார் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும்போதே கறுப்பு வண்ணம் பற்றிக் கவிபாட வந்துவிட்டார்.    கொம்யூனிசமாகக் கொட்டப்போகிறாரே என்று எண்ணிய எனக்கு ஏமாற்றமே காத்திருந்தது. பாஸ்கரனின் மரபுக்கவிதை பக்தியுடன் பின்னிப்பிணைந்து எதுகை மோனையுடன் சந்தத்தமிழாய் கொட்டியது கண்டதும் உண்மையிலே பிரமித்தே விட்டேன். கறுப்பென்றால் வெறுக்கவேண்டாம் என்னும் கருவை மிகவும் நயமாக பாஸ்கரன் தந்தது எனக்குள் உறைந்துவிட்டது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

    வண்ணங்களைப் பற்றி உலகு பார்க்கும் பார்வை, உலக மக்கள் பார்க்கும் பார்வை, சாதாரணமாக மக்கள் பார்க்கும் பார்வை, இலக்கியங்கள் பார்க்கும் பார்வை எனப் பல பார்வைகளை பலவண்ணமாய் இக்கவியரங்கம் விருந்தாக அளித்தது. கவியரங்க நடுவரின் புன்சிரிப்பும், சுவையான, கலகலப்பான தமிழ்க் கவிதையும் கவியரங்கின் அழகுக்கு அழகூட்டியது என்பது எனது அவிப்பிராயமாகும்.

    இரண்டாம் நாள் திருவிழா இளைஞரையும் சிறுவர்களையும்முன்னிறுத்தி ஆரம்பமாகியது. தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த தமிழ்ப்பேராசிரியர் வி. அசோக்குமார் அவர்களது தலைமையில்,  “திட்டம் போட்டு எழுதினானே” என்னும் மகுடத்தில் காதல், தியாகம், வீரம், தாய்மை, நட்பு, வஞ்சகம் என்னும் பார்வையில் இளையர் பட்டாளம் இனிய தமிழைப் பொழிந்துநின்றார்கள்.

    அவுஸ்த்திரேலிய மண்ணில் உள்ள இளைஞர்கள் இங்கிலீசு மட்டும்தான் பேசுவார்கள். தமிழென்றால் எட்டவே நிற்பார்கள் என்னும் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது. அவர்கள் அனைவரையும் அகமாரப் பாராட்டி வாழ்த்துகிறேன். இவர்களால் இனிய தமிழ்இன்ப உலா வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

    இளைஞரைத் தொடர்ந்து வயதிலே மூத்தோர்கள் பலர் பங்கு கொள்ள, கம்பனது கண்பார்வையில் இருக்கும் கம்பவாரிதி ஜெயராஜின் தலைமையில் சிந்தனை அரங்கம் இடம்பெற்றது. இப்படியும் சிந்திக்க முடியுமா என்று சபையினரையே அதிரவைத்தது  இவ்வரங்கம்.    கம்பவாரிதியின் சொல்லாற்றலால் வாதிட்டவர்கள் மயங்கியே விட்டார்கள். சபையைக் கேட்கவா வேண்டும்? ஆடாமல் அசையாமல் யாவருமே கம்பவாரிதியையே கண்கொட்டாமல் பார்த்தபடி அவர் பேசுவதைக் கேட்டபடி இருந்தார்கள். யாவரையும் இனிய தமிழ் இறுக அணைத்தபடியால் நிகழ்ச்சி முடிந்துவிட்டதா என்பதே தெரியாமல் யாவரும் இருந்தார்கள் என்பதே உண்மை. அதற்கு நானும் விலக்கல்ல!

    சிறுவர்களைக் கொண்டு கம்பனது தெரிந்தெடுத்த பாத்திரங்களைக்கண்முன்னே நிறுத்திய நிகழ்ச்சியாக இது இருந்தது. பாத்திரப் பொருத்தமாகச் சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உரிய ஆடை ஆபரணங்களுடன் மேடையில் உலாவர விட்டமையை யாவருமே மனதார சித்தார்கள். அந்தக்குழந்தைகளையும் அன்புடன் நேசித்தார்கள். மனத்தில் பதியும் நிகழ்ச்சி என்று சொல்லவே வேண்டும். அவர்களை ஒழுங்கு படுத்தியவர்கள் பாராட்டுக்கு உரியவர்களே.

     கம்பன் கழகத்தால் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அவர்களின் திறலுக்காகப் பலநிலைகளில் பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து சான்றோர் விருதும் மாருதி விருதும் வழங்கும் நிகழ்சி இடம்பெற்றது.

    ஆங்கில மந்திரிகள் அரங்கினில் அமர்ந்து இருக்கச் சான்றோர் விருதுகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மாருதி விருது விழா மிகவும் கோலாகலமாகத் தொடங்கியது. நிறைவில் கம்பவாரிதியின் தலைமையில் மிகச் சிறப்பான பட்டிமண்டபம் இடம்பெற்றது. மீண்டும் தமிழ் மாரிப் பொழிந்தது, சபையிலே ஆனந்தம் பெருகியது.

    அக்டோபர் மாதத்தில் ஆனந்தம், அகநிறைவு அத்தனையும் தந்தவிழாவாக சிட்னி மாநகரில் நடைபெற்ற கம்பனது திருவிழாவைக் காணுகிறேன். இதுதமிழ்த் திருவிழா. தமிழைத் தழைக்கச் செய்யும் பெருவிழா. எங்குச் சென்றாலும் தமிழ் தமிழ்தான் என எடுத்தியம்பும் விழா என்பதே எனது மனத்தில் எழுந்த எண்ணமாகும். இப்படி விழாக்கள் நடந்தால் எல்லோரும் மகிழ்வடைவார். எங்கள் தமிழ் பெருமையுறும்.

     “கம்பனைப் படிப்போம்; கன்னித்தமிழ் காப்போம்!”

     

     

    Share
  • மனமிருத்தி வணங்கிடுவோம் !

     

          ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா ) 

     

     

     

          முருகனது திருநாமம் மூச்செல்லாம் நிறைந்திருக்கும்

          திருநீறு அவரிடத்தில் திகழொளியைத் தந்துநிற்கும் 

          வருகின்ற பொருளனைத்தும் வழங்கிடுவார் திருப்பணிக்கு

          வாழ்நாளில் வாரியார் வாழ்ந்திருந்தார் வையகத்தில் !

     

        இலக்கியங்கள் இலக்கணங்கள் எல்லாமே அறிந்திருந்தார்

        தலைக்கனத்தை ஒருநாளும் தானேற்றிக் கொண்டறியார் 

        நிலத்திலுள்ளார் கடவுள்தமை நினைத்துவிட பேசிநின்றார்

        பழுத்தசைவப் பழமாகப் பாரெல்லாம் சென்றுவந்தார் !

     

          அருணகிரி திருப்புகழை அவர்பாடும் விதத்தாலே

          அனைவருமே திருப்புகழை ஆசையுடன் படித்தார்கள்

          தெருவெங்கும் அவர்பேச்சைக் கேட்டுநின்ற காரணத்தால்

          முருகாவென் றழைக்கின்றார் முகிழ்ந்தெழுந்தார் மூலையெலாம் !

     

         சிரிப்பினைக் கையாண்டு சிந்தனையை ஊட்டிநின்றார்

         சிரிப்புடனே வாழ்வதற்குச் சிவனருளே தேவையென்றார்

         சிரிக்காதார் வாழ்வெல்லாம் சிறக்காது வெனவுரைத்தார் 

         சிரித்தமுகம் கொண்டுநின்ற சிவப்பழமாம் சுவாமியவர் !

     

          பாமரரரும் பண்டிதரும் பாராட்டப் பலசெய்தார் 

          பாடல்களை பிரித்ததற்குப் பாங்காக கருத்துரைத்தார் 

          அடுத்தவரின் முகஞ்சுழிக்க அவர்பேசும் விதமறியார் 

          அறிஞரெலாம் வாரியாரின் அருகுசெல்ல ஆசைப்பட்டார் ! 

     

          பல்கலைக் கழகத்தில் பலவுரைகள் அவர்செய்தார்

          பல்கலைக் கழகமாய் திகழ்ந்தாரே வாரியாரும் 

          விடைதெரியா பலவற்றை விளக்கிநின்றார் விரிவுரையால்

          விடைசொல்லும் விதத்தாலே வியக்கவைத்தார்  வித்தகரை !

     

          உலகமெலாம் சென்றிடினும் ஓம்முருகா மறக்காது 

          முருகனது திருநாமம் முழுமனதாய் ஓதிநின்றார் 

          வருகின்ற அடியார்க்கு திருநீறு உவந்தளித்து 

          மருளகளகற்றி மனம்திருந்த மாமருந்தாய் அவரிருந்தார் !

     

          பேசினார் எழுதினார் பெருத்தவுடல் தான்சுமந்தார் 

          கூசாமல் குறுகாமல் குணம்சிறக்க வாழ்ந்திருந்தார் 

          மாசில்லா அவர்வார்த்தை வையகத்தை வாழ்விக்கும்

          காசினியில் அவர்வாழ்ந்த காலமதை நாம்நினைப்போம் !

     

           வாரியார் சுவாமிகள் வரலாறாய் ஆகிவிட்டார் 

           வரலாற்றில் அவர்போல வருவதற்கு யாருள்ளார் 

           வையகத்தார் மனம்திருந்த மருந்தாக அவரிருந்தார்

           வாரியார் சுவாமிகளை மனமிருத்தி வணங்கிடுவோம் !

     

     

     

    Share
  • அனைவருக்கும் வேண்டுமையா !

       ( எம் .ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்த்திரேலியா )

     

     

    நூல்கள்பல கற்றாலும்

    நுண்ணறிவைக் காணவில்லை

    மால்மருகா வேல்முருகா

    மனமெல்லாம் குழப்பமையா

    நால்வேதப் பொருளோனே

    நம்பியவர்க் கருள்பவனே

    நாளுமுனைத் துதிபாட

    நற்கருணை தாருமையா !

     

     

    சூரர்தமை அழிப்பதற்கு

    சுடராக வந்தவனே

    பாரினிலே பலசூரர்

    பாதகங்கள் செய்கின்றார்

    யாருமே அவர்பக்கம்

    பார்ப்பதற்கு அஞ்சுகிறார்

    வேலவனே உன்வேலை

    விட்டுவிடு விரைவுடனே !

     

    ஆணவத்தை அழிப்பதற்கு

    அரனுன்னை அனுப்பிவைத்தார்

    ஆணவமோ இவ்வுலகில்

    அரியணையில் இருக்கிறதே

    ஆண்டவனை இப்போது

    வேண்டாது எனக்கூறும்

    ஆணவத்தை அழிப்பதற்கு

    ஐயாநீ வேலைவிடு !

     

    சஷ்டிவிரதம் இருப்பார்க்கு

    சங்கடங்கள் போகுமென்பார்

    கஷ்டம்பல இருந்தாலும்

    சஷ்டியை நாம்விடுவதில்லை

    துஷ்டர்பலர் வந்திங்கு

    கஷ்டம்பல கொடுக்கின்றார்

    இஷ்டமுடன் நீயிரங்கி

    எமக்கருள்வாய் கந்தவேளே !

     

    முருகாவுன் திருநாமம் முழுவுலகம் ஒலிக்கிறது

    தெருவெங்கும் உன்கோவில் சிறந்தோங்கி இருக்கிறது

    அருளான உன்னாட்சி அகிலமதைக் காப்பதற்கு

    ஐயாவுன் அருள்நோக்கே அனைவருக்கும் வேண்டுமையா !

     

    விழுந்தாலும் உன்நாமம் எழுந்தாலும் உன்நாமம்

    விருப்பமுடன் எம்மனதில் வீறுகொண்டு வருகிறது

    விண்ணவரைக் காப்பதற்காய் வேலுடனே வந்தவனே

    மண்ணுலகில் உள்ளார்கள் மனம்திருந்த வரம்தருவாய் !

     

    Share
  • இரட்சிக்க இறைஞ்சுகிறேன் !

    எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா

    image1

           செந்தமிழால் பாடிநிதம்

              கந்தாவுனை வேண்டுகிறேன்

           வந்தவினை போயகல

               வரமருள வேண்டுமையா

           சொந்தமெலாம் எனைச்சூழ

                சுகமுடனே வாழுதற்கு

           கந்தவேளே உந்தனருள்

                தந்துவிட வேண்டுகிறேன் !

     

          அசுரகுணம் அழிவதற்கு

              அவதாரம் எடுத்தவனே

          அசுரகுணம் எம்மிடத்தில்

                அழியாமல் இருக்கிறதே

          வழிமுழுக்க உனைவைத்து

                வணங்கிநாம் இருக்கின்றோம்

           வடிவேலா எமைத்திருத்தி

                 வரமருள வேண்டுகிறேன் !

     

             நீதிநெறி தவறாமல்

                 நான்வாழ வேண்டுமையா

             நெஞ்சமுள்ள வஞ்சனைகள்

                   நீறாக வேண்டுமையா

              சோதனையை நான்தாங்கும்

                    துணிவெனக்குத் தந்திடையா

                நாதனது திருப்புதல்வா

                      நல்லதுணை நீயன்றோ !

     

                 உன்நாமம் இப்போது

                      உலகமெங்கும் ஒலிக்குதையா

                 ஓங்காரப் பொருளுக்குள்

                        உலகமே அடங்குதையா

                  மண்மீது உள்ளாரின்

                        மனம்சிறக்க வைப்பதற்கு

                   மால்மருகா மனமிரங்கி

                         வரமருள வேண்டுகிறேன் !

     

                பட்டதுன்பம் போதுமையா

                   படித்துவிட்டேன்  பலபாடம்

                துட்டரது சகவாசம்

                      துயரமெலாம் தந்ததையா

                 இஷ்டமுடன் கந்தஷஷ்டி

                       இனிப்படிப்பேன் கந்தவேளே

                 இரக்கமுடன் எனைக்காத்து

                        இரட்சிக்க இறைஞ்சுகிறேன் !

    Share
  • நாடிவந்து நிற்குமன்றோ !

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

    நாநயம் இருந்துவிட்டால்
    நாணயம் நமக்குவரும்
    பேய்மனம் கொண்டுவிட்டால்
    பிணம்போல ஆகிடுவர்
    தூய்மையது மனமேறின்
    துட்டகுணம் மறைந்துவிடும்
    நாமென்றும் வாழ்வினிலே
    நாணயத்தை காத்திடுவோம் !

    மேடைகளில் முழங்கிடுவார்
    விதம்விதமாய் எழுதிடுவார்
    விவாதங்கள் வந்துவிட்டால்
    மேதையெனக் காட்டிடுவார்
    போதைபற்றி கதைசொல்வார்
    பொறுப்புப்பற்றி பலசொல்வார்
    போதையுடன் வீடுவந்து
    பொங்கிடுவார் வீட்டினிலே !

    அறவழியை விட்டுவிட்டால்
    அனைவர்க்கும் தீமையென்பார்
    அஹிம்சைதனை அரவணைத்தல்
    அனைவர்க்கும் நன்மையென்பார்
    அன்புபாசம் யாவருக்கும்
    அத்திவாரம் தானென்பார்
    அசிங்கமுள்ள அத்தனையும்
    அரங்கேற்றம் செய்தும்வைப்பார் !

    வள்ளுவரை அருகழைப்பார்
    வாய்மைபற்றிப் பேசிடுவார்
    தெள்ளுதமிழ் தலைவனென்பார்
    தில்லுமுல்லு பலசெய்வார்
    உள்ளமெலாம் கள்ளமுடன்
    ஒழுக்கமின்றி அவரிருப்பார்
    நல்லதமிழ் காத்திடுவோம்
    நாட்டிலுள்ளோர் வாருமென்பார் !

    கண்ணகியைப் போற்றிடுவார்
    கற்புப்பற்றி நூல்செய்வார்
    எண்ணமெலாம் திருவருளே
    எனச்சொல்லி திருடிநிற்பார்
    தன்னைவிட மேதாவி
    தோன்றவில்லை எனவுரைப்பார்
    தலைதெறிக்கக் காரியங்கள்
    சமத்தாகச் செய்துநிற்பார் !

    பெண்ணடிமை ஒழிவதற்கு
    பிரசாரம் செய்திடுவார்
    பெண்பித்து தலைக்கேறி
    பெண்ணைப் பிய்த்துஎறிந்திடுவார்
    மண்மீது போதையது
    மடிவதற்கு முழங்கிடுவார்
    மதுமீது அவர்தவழ்ந்து
    வந்துநிற்பார் மனைக்குள்ளே !
    வீண்வார்த்தை பேசாதீர்
    வீண்வாதம் புரியாதீர்
    மாண்புடனே பேசிடுவீர்
    மாண்புடனே நடந்திடுவீர்
    தான்வாழும் சமுதாயம்
    தலைநிமிர வேண்டுமென்று
    தான்நினைத்து வாழ்பவரே
    தலைவனாய் உயர்ந்திடுவார் !
    உள்ளொன்றும் புறமொன்றும்
    உயர்வினுக்கு ஏற்றதல்ல
    உரைக்கின்ற வார்த்தையது
    உள்ளிருந்து வரவேண்டும்
    கள்ளமிலா உள்ளமொடு
    கருணையுடன் வாழ்வதுதான்
    நல்லதொரு வாழ்வாக
    நமக்கெல்லாம் அமைந்துவிடும் !

    நாணயமாய் வாழ்ந்துவிட்டால்
    நாட்டுக்கே நன்மையன்றோ
    நாட்டுக்கே இப்போது
    நாணயமே தேவையன்றோ
    நாநயத்தைக் காப்பாற்றி
    நாணயமாய் நாமிருந்தால்
    நன்மையெலாம் எமைநோக்கி
    நாடிவந்து நிற்குமன்றோ !

    Share
  • வரம்கேட்போம் வாருங்கள் !

     

         ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

     

    தீபங்கள் எரியட்டும் பாவங்கள் பொசுங்கட்டும்

    கோபங்கள் மடியட்டும் குணமங்கே பிறக்கட்டும்

    சாபங்கள் தொலையட்டும் சந்தோஷம் மலரட்டும்

    தீபங்கள் ஒளிபரப்பத் தீபாவாவளி சிறக்கட்டும் !

     

    கோவில்சென்று கும்பிடுவோம் குணம்சிறக்க வேண்டிடுவோம்

    பாவவினை போகவெண்ணி பக்குவமாய் வணங்கிநிற்போம்

    தூய்மைநிறை மனம்கேட்போம் துட்டகுணம் அறக்கேட்போம்

    வாய்மையுடன் வாழ்வதற்கு வரம்கேட்போம் வாருங்கள் !

     

    குறைசொல்லும் குணமகல குட்டிக்குட்டிக் கும்பிடுவோம்

    கறைபடிந்த மனம்வெளுக்க கைகூப்பி தொழுதழுவோம்

    வறுமைபிணி நோயகல மனமார வேண்டிநிற்போம்

    மறுமையிலும் வாய்மையுடன் வாழ்வதற்கு வரம்கேட்போம் !

     

    ஏழையாய் பிறந்தாலும் கோழையாய் இருக்காமல்

    தாழ்மையிலும் தளர்வின்றி தலைநிமிர வேண்டிடுவோம்

    பொய்களவு சூதுவாது பொறாமைக் குணமணுகாமல்

    தெய்வமே காத்திடென தெண்டனிட்டு வணங்கிநிற்போம் !

     

    எத்திக்கும் ஒளிபரப்பும் தித்திக்கும் தீபாவளி

    எமைநோக்கி வருகிறது இன்முகமாய் வரவேற்போம்

    சுற்றியெமைச் சூழ்ந்திருக்கும் துன்பமெலாம் பறந்தோட

    சுமைதாங்கும் இறைவனைநாம் தொழுதேத்தி வணங்கிநிற்போம் !

    Share
  • வாய்க்கும் நல்லதீபாவளி

       ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

     

    இருளகற்றி ஒளியூட்டும் இனியவிழா தீபாவளி

    மருளகற்றி மனம்மகிழ வருமெமக்கு தீபாவளி

    நிறைவான மனதுவர  உதவிடட்டும்  தீபாவளி

    நலம்விளைக்க மனமெண்ணி வரவேற்போம் தீபாவளி !

     

    புலனெல்லாம் தூய்மைபெற

    புத்துணர்வு பொங்கிவர

    அலைபாயும் எண்ணமெலாம்

    நிலையாக நின்றுவிட

    மனமெங்கும் மகிழ்ச்சியது

    மத்தாப்பாய் மலர்ந்துவிட

    வாசல்நின்று பார்க்கின்றோம்

    வந்திடுவாய் தீபாவளி !

     

    பட்டாசு வெடித்திடுவோம் மத்தாப்புக் கொழுத்திடுவோம்

    தித்திக்கும் பட்சணங்கள் அத்தனையும் செய்திடுவோம்

    கஷ்டமான அத்தனையும் கழன்றோட வேண்டுமென்று

    இஷ்டமுடன் யாவருமே இறைவனிடம் இறைஞ்சிநிற்போம் !

     

    தீபாவளித் தினத்தில் தீயவற்றைக் தீயிடுவோம்

    தீபாவளித் தினத்தில் திருப்பங்கள் வரநினைப்போம்

    தீபாவளித் தினத்தில் சினம்சேரல் தவிர்த்திடுவோம்

    தீபாவளி எமக்குச் சிறந்ததெல்லாம் தந்திடட்டும் !

     

    ஓலைக் குடிசையிலும் ஒழுகிநிற்கும் வீட்டினிலும்

    கூழைக் குடித்தாலும் குறையெனவே எண்ணாமல்

    வாழக்கிடைத்ததை வரமாக எண்ணி எண்ணி

    வாழ்கின்றார் மகிழ்ந்துவிட வந்திடட்டும் தீபாவளி !

     

    ஏழையொடு பணக்காரர் எல்லார்க்கும் தீபாவளி

    வாழ்வினிலே வருவதனை வையகத்தில் பார்க்கின்றோம்

    வசதிபல வந்தாலும் மனமகிழ்ச்சி வரவேண்டும்

    மனநிறைவு பெற்றவர்க்கே வாய்க்கும் நல்லதீபாவளி !

     

    Share
  • நாளெல்லாம் மகிழ்ந்திருப்போம் !

     

       ( எம் .ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

     

     

     

    மாநிலத்தில் நாமுயர ஏணியாய் இருந்தார்கள்

    மாசகற்றி எம்மனதை மாண்புபெறச் செய்தார்கள்

    தாம்படித்து எமக்களித்து தலைநிமிர வைத்தார்கள்

    தாமுரமாய் ஆகிநின்றார் தலைசிறந்த ஆசான்கள் !

     

    அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமானார்

    ஆசான்கள் எம்வாழ்வில் அனைத்துக்கும் தெய்வமானார்

    ஆன்மாவை தூய்மையாய் ஆக்கிவிடும் அவர்களின்

    அடியினைத் தொழுதுநாம் அவராசி பெறுவோமே !

     

    வாழ்வெனும் பாதையில் வழுக்கிடா வண்ணம்

    தாழ்வெனும் சிக்கலில்  மாட்டிடா வண்ணம்

    ஆளுமை எம்மிடம் வளர்ந்திடும் வண்ணம்

    ஆற்றலை வளங்குவார் ஆசான்கள் அன்றோ  !

     

    நீதிநெறி நடவென்பார் நெஞ்சைதூய்மை ஆக்குவென்பார்

    போதனைகள் பலசொல்லி பொறுப்பதனை உணர்த்திடுவார்

    பேதமிலா மனம்வளர பெருங்கதைகள் பலவுரைப்பார்

    பாதகங்கள் களைந்தெறிவார் பண்புநிறை ஆசான்கள் !

     

    பாகற்காய் படிப்பையெலாம் பக்குவமாய் எமக்காக

    பதப்படுத்தி சுவையேற்றி பதியவைப்பார் நல்லாசான்

    சோதனைகள் வந்தாலும் சுமையின்றி நாம்படிக்க

    சாதகமாய் வழிசொல்வார் சரியான ஆசான்கள் !

     

    பள்ளிசென்று நாம்படிக்க உள்ளமதில் ஆசைதனை

    மெல்ல மெல்ல நுழைப்பதற்கு நல்லவழி கண்டுநிற்பார்

    கள்ளமனம் கரைந்தோட கனிவுடனே வகுப்பெடுத்து

    உள்ளமதில் அமர்ந்திடுவார் உண்மைநிறை ஆசான்கள் !

     

    ஒருநேரம் அடித்தாலும் பலநேரம் அரவணைப்பார்

    சிலநேரம் திட்டிடினும் அருள்வாக்காய் அமைந்துவிடும்

    குறைகண்டு விட்டாலும் நிறைவாக்க நினைந்திடுவார்

    அறிவுடனே அணுகிடுவார் அன்புநிறை ஆசான்கள் !

     

    பட்டம்பல பெற்றாலும் பதவிதனில் உயர்ந்தாலும்

    படிப்பித்த ஆசான்கள் பக்கத்தில் இருப்பார்கள்

    அவர்களது ஆசிகளும் அவர்களது வாழ்த்துகளும்

    அனைத்துமே எமையிப்போ அகமகிழ வைக்கிறதே !

     

    நல்லாசான் வாய்த்துவிட்டால் நமெக்கென்றும் ஒளிமயமே

    நல்லாசன் நம்வாழ்வில் நாழுமே வந்துநிற்பார்

    நல்லாசன் கிடைத்தவர்கள் நாளுமே உயர்ந்திடுவார்

    நல்லாசான் வாழ்த்துப்பெற்று நாளெல்லாம் மகிழ்ந்திருப்போம் !

    Share
  • மகிழ்ந்திடுவார் !

     
         (  எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

    வீரமொடு கல்விசெல்வம் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை

    பார்மீது வாழுதற்கு பலருக்கும் தேவையிவை

    ஊரெல்லாம் யாவருமே கொண்டாடி மகிழுமிந்த

    உயர்ந்த நவராத்திரியை உணர்வுடனே கடைப்பிடிப்போம் !

     

    வீரமொடு கல்விசெல்வம் வீணாகிப் போவதனை

    பாரினிலே பார்க்கையிலே பதைபதைப்பே வருகிறது

    ஊருக்கும் உதவாமல் உழைத்தவர்க்கும் சேராமல்

    சேராதவிடம் சேர்ந்து செயலொடுந்து போகிறதே !

     

    முச்செல்வம் பெறுவதற்கு முத்தேவிதனைத் துதிக்க

    இத்தரையில் நவராத்ரி இப்போது நடக்கிறது

    அத்தேவி அனைவரையும் அகமார வேண்டிநாம்

    சித்தமுடன் துதித்துநின்று சிந்தனையைத் திருத்திடுவோம் !

     

    உயர்ந்தசெல்வம் எதுவென்று உரத்தகுரல் எழுப்பிநின்று

    பட்டிமன்றம் போடுவதில் பலனெதுவும் இல்லையப்பா

    துட்டகுணம் உள்ளோரின் கைசேர்ந்த செல்வமெலாம்

    தூய்மைபெற வேண்டுமென்று துதித்திடுவோம் தேவியிடம் !

     

    கல்வியில்லார் கரயேறக் காட்டிடுவோம் நல்லவழி

    காசில்லார் வாழ்வதற்குக் கண்டிடுவோம் புதியவழி

    வீரமதை  விவேகமுடன்  விதைத்திடுவோம் மனமெல்லாம்

    மலைமகளும் அலைமகளும் கலைமகளும் மகிழ்ந்திடுவார் !

     

     

     

    Share
  • மெய்ஞ்ஞான இலக்கியத்தின் உச்சம் அல்லது வீழ்ச்சி! 

    எம். ஜெயராமசர்மா B.A Hons, Dip.in.Ed, Dip.in.Soc, M.Phil Edu, SLEAS.
    முன்னாள் கல்வி இயக்குநர்விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர்,
    மெல்பேண், அவுஸ்திரேலியா                          

    இலக்கியம் என்பதற்குப் பலவிதமான விளக்கங்கள் பலராலும் கூறப்படுகிறது. இலக்கு + இயம் இலக்கியம். அதாவது ஓர் இலக்கை நோக்கமாகக் கொண்டதுதான் இலக்கியம் என்பதாகும். இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்றும் சொல்லப்படுகிறது. உணச்சியுடன் கூடியதுதான் இலக்கியம் என்றும் சொல்லப்படுகிறது. அறம், பொருள், இன்பம் என்பவற்றைப் புலப்படுத்துவதுதான் இலக்கியம் என்றும் சொல்லப்பட்டது. அப்படியல்ல  – அறம், பொருள், இன்பம், வீடு நான்கையும் கொண்டதே இலக்கியம் என்னும் கருத்தும் முன்வைக்கப்பட்டது. இலக்கண வழுவின்றி எழுதப்படுவனயாவும் இலக்கியம் என்றும் கொள்ளப்படுகின்றது. இலக்கண நூல்கள் இலக்கியத்துக்குக் கொடுக்கும் விளக்கங்களும், இலக்கிய விமர்சகர்கள் இலக்கியத்துக்குக் கொடுக்கும் விளக்கங்களும் வித்தியாசமானவையாகும்.

    உரைநடையில் எழுதப்படுவன இலக்கியங்களா அல்லது செய்யுளில் எழுதப்படுவன இலக்கியங்களா என்றெல்லாம் அலசப்படுகிறது. அல்லது இரண்டையுமே இலக்கியங்களாக எடுக்கலாமா என்னும் எண்ணங்களும் இருக்கின்றன.  அறத்தை, நீதியை, தத்துவத்தை, சமயத்தை, ஆன்மிகத்தை எல்லாம்பற்றிக் கூறும்வகையில் அமைந்தவற்றை இலக்கியங்கியங்களாகக் கொள்ளலாமா ? அல்லது உணர்ச்சிகளை ஊட்டக்கூடியவற்றை, இன்பத்தை அள்ளித்தருவனவற்றை, பொழுதுபோக்கும் வகையில் எழுதப்பட்டவற்றை இலக்கியமாகக் கொள்ளலாமா? என்றெல்லாம் எண்ணும்  வகையிலெல்லாம் இலக்கியத்தைப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

    இலக்கியம் என்பது அவ்வக்கால நிலைகளை வெளிப்படுத்திக் காட்டுவதாகவே அமையப் பெற்றிருப்பதைக் காண்கின்றோம். கிரேக்க, உரோம, மேல்நாட்டு இலக்கியங்களுக்கும் – தமிழ் இலக்கியங்களுக்கும் வேற்றுமைகளைக் காண்கின்றோம். மேல்நாட்டாரின் நாகரிகம், பண்பாடு இவற்றின் வெளிப்பாடுகளைத்தான் அவர்களது இலக்கியங்களில் காணமுடியும். எமது பண்பாடு, நாகரிகத்தைத்தான் எங்களின் இலக்கியங்களில் காணமுடியும். எனவே இலக்கியம் என்பது பண்பாடுகளையும் அதன் ஊடாக வருகின்ற நாகரிகத்தினையும் புலப்படுத்தவேண்டும் என்பதும் ஒரு கருத்தாகப்பேசப்படுகிறது.

    இந்த வகையில் பார்க்கின்றபொழுது எந்த இலக்கியவகை உயர்ந்தது எந்த இலக்கியவகை குறைவானது என மதிப்பிடுவதும் பொருத்தமற்றது என்பதும் ஒரு கருத்தாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் இலக்கியம் கொண்டுள்ள நோக்கமே அதனை உயர்நிலையிலும், வாழுமிலக்கியமாக்கும் நிலையிலும் இருந்தும்வருகிறது என்பதுமட்டும் உண்மையான கருதுகோளாக அமைகிறது எனலாம்.

    இலக்கியத்தின் நோக்கம் அல்லது குறிக்கோள் எப்படி இருக்கவேண்டும் என்னும் நிலையிலே – ” கற்றார்க்கு இன்பஞ் செய்வதுடன் அவர்கள் வாழ்வைத் திருத்திச் செம்மை செய்வதும் இலக்கியத்தின் பயன் ” என்றும் ” படிக்கும் பொழுதே இன்பஞ்செய்வது தவிர வேறு பயனை விளைக்கக் கூடாது ” என்றும் இருவேறுபட்ட பதில்களை இலக்கியத் திறனாய்வாளர்கள் முன்வைப்பதையும் பார்க்கமுடிகிறது. இதில் முதலாவது நிலையினைக் கைக்கொண்டனவாகத் தமிழிலக்கியங்கள் அமைந்திருப்பதனை அவதானிக்கலாம். சங்க இலக்கியங்களில் காணப்பட்ட பண்பாடுகள், தொடர்ந்து தமிழ் இலக்கியங்களில் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. சங்க இலக்கியங்களை யாவரும் பெரிதும் மதிக்கின்றனர்; போற்றுகின்றனர். சங்க இலக்கிய காலத்தைப் பொற்காலம் என்று விதந்தும் கூறுவதுண்டு.அந்தளவுக்கு அக்கால இலக்கியம் விளங்கியிருக்கிறது என்பது கற்றறிந்தோர் கருத்தாகும்.

    சங்ககால மக்களின் வாழ்க்கையை இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்பர். இலக்கிய ஆய்வாளர்கள். வீரமும், காதலும்  அக்கால மக்களின் வாழ்க்கையின் அடித்தளமாக விளங்கியிருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கியங்கள் வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது.வீரமும், காதலும்.  பெருமளவில் போற்றப்பட்டாலும் கூட – அறக்கருத்துக்களும், நிலையாமை பற்றிய கருத்துக்களும் சங்க இலக்கியக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றன.   இதற்குப்பல எடுத்துக்காட்டுகளைச் சங்க இலக்கியத்தில் புறநானூற்றுப் பாடல்களில் கண்டுகொள்ளலாம். கணியன் பூங்குன்றனாரின் ” யாதும் ஊரே யாவரும் கேளிர் ” பாடலை நோக்கினால் நிலையாமை பற்றிய சிந்தனையைக் கண்டு கொள்ளலாம். வறுமை ஒழித்தல், பசிப்பிணி போக்குதல், பகுத்துண்டு வாழ்தல், பழியினை ஒழித்தல், மறுபிறவி பற்றிய சிந்தனை, அறம்செய்யும் சிந்தனை என்று பல விடயங்களைச் சங்க இலக்கியம் வெளிப்படுத்தி நிற்கிறது. இந்த விடயங்கள் யாவும் மெய்ஞ்ஞானம் சம்பந்தப்பட்டனவாகும். எனவே மெய்ஞ்ஞான இலக்கியம் என்று பார்க்கும்பொழுது அந்தக் கருவானது சங்ககாலத்திலேயே கருக்கொண்டு விட்டதாகக் கருதபக்கூடயதாக இருக்கிறதல்லவா?

    அறம் பற்றியும், நிலையாமை பற்றியும், பேரின்பம் என்றால் என்ன என்பது பற்றியும், நல்லொழுக்கம், வாழ்வாங்கு வாழுதற்கான ஒழுங்கு முறைகள் பற்றியும் சிந்திக்கும் நிலையினை மெய்ஞ்ஞானம் என்கின்றோம். இந்தக் கருத்துக்களையெல்லாம் தன்னகத்தேகொண்ட இலக்கியங்கள் பெருமளவில் சங்கமருவிய காலப் பகுதியில் தோன்றுவதைக் காண்கின்றோம். “அறவொழுக்கங்களைப் பொருளாகக் கொண்டுள்ள நூல்கள் சிறந்த இலக்கிய வரிசையில் வைத்துப் பாராட்டப்படுவது தமிழ் மொழிக்கு உள்ள ஒரு தனிச்சிறப்பாகும். ஆங்கிலம் முதலிய பிற மொழிகளில் அறநூல்கள் இலக்கிய நூல்களாகக் கொள்ளப்படுவதில்லை”  எனப் பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்கள் தம்முடைய ” தமிழ் இலக்கிய வரலாறு” நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    சங்ககால இலக்கியங்கள் அகம், புறம் என்று அமைந்திருந்தாலும் அவற்றில் ஆங்காங்கு மெய்ஞ்ஞானச் சிந்தனைகளும் இடம்பெற்றிருந்திருக்கின்றன. அரசர்களைத் திசைதிருப்பும் முகமாக அவர்களிடம் பரிசில்கள் பெறவருகின்ற புலவர்கள் நிலையாமைக் கருத்துகளை எடுத்துக்காட்டி நல்லன செய்யும்வண்ணம் தூண்டமுயல்வதைச் சங்க இலக்கியங்களில் காண்கின்றோம்.மெய்ஞ்ஞானத்தில் நிலையாமைக் கருத்து மிகவும் முக்கியமானதாகும்.

    உலகமும் அதில்காணப்படுகின்ற பொருள்களும்தான் உண்மையானவை என்ற சிந்தனையுடன் உள்ள இலக்கியங்கள் இன்பத்தை ஊட்டும் வகையில் வந்துவிடுகின்றன. இந்த உலகினுக்கும் அப்பால் பல உயர்ந்த விஷயங்களும் இருக்கின்றன, அவைதான் நிரந்தரமானவை, அதுதான் வாழ்வினைச் செம்மைப் படுத்தும் என்னும் நோக்கினை வெளிப்படுத்தும் வகையிலும் இலக்கியங்கள் தமிழில் அமைந்திருக்கின்றன. அதைத்தான் மெய்ஞ்ஞான இலக்கியம் என அழைக்கின்றனர் எனலாம்.

    இந்த மெய்ஞ்ஞான இலக்கியத்துள் பக்தியும், அறமும், நீதிக்கருத்துகளும், இணைந்துவிடுகின்றன. சங்கமருவிய காலத்தில் மெய்ஞ்ஞான இலக்கிய நூல்கள் பெருமளவில் தமிழிலக்கியமாக வந்திருக்கின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பதினொரு நூல்கள் மெய்ஞ்ஞானம் சம்பந்தமான இலக்கியம் எனக்கொள்ளக் கூடியதாக அமைந்திருக்கிறது.

    பெரும்பாலும் இவற்றில் அறக்கருத்துக்களே வலியுறுத்தப்படுகின்றன. இதில் திருக்குறள் சற்று வித்தியாசமானதாகும். இதில் அறமும், பொருளும், இன்பமும் கூறப்பட்டாலும் இதில் மேலோங்கி நிற்பதாக மெய்ஞ்ஞானக் கருத்துக்கள் இடம்பெறுகின்றன. சிலப்பதிகாரம் சமயம் தழுவாத இலக்கியமாக இருக்கின்ற போதிலும் இதுவும் மெய்ஞ்ஞானச் சிந்தனைகளை வெளிக்கொணரும் நிலையில் இருப்பதையும் அவதானிக்க முடிகிறது. மணிமேகலை சமயம் தழுவியதாக இருந்தும் மெய்ஞ்ஞான இலக்கியத்தினுள் வந்துவிடுகின்றது.

    காரைக்கால் அம்மையார் தொடக்கிவைத்த பக்தி இலக்கியமானது நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் வளர்த்தெடுக்கப்படுகின்றது. பக்தி இலக்கியம் மெய்ஞ்ஞான வழியில் சிந்திக்க வைக்கின்ற காரணத்தால் அவற்றை மெய்ஞ்ஞான இலக்கியம் என ஏற்றுக்கொள்ளலாம் என இலக்கிய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    பல்லவர்காலமும், சோழர்காலமும் பக்தியை வளர்க்கின்ற சூழலைப் பெற்றிருந்த காரணத்தால் இக்கால இலக்கியங்கள் பெரும்பாலும் மெய்ஞ்ஞானச் சிந்தனையினை வெளிப்படுத்துவனவாகவே அமைந்திருந்தன என்பது பொதுவான அபிப்பிராயமாகும். சோழர்காலத்தில் வந்த கம்பராமாயணம் பல்வேறு சுவைகளைக் கொண்டதாக விளங்கிய போதிலும் அன்றும், இன்றும் மெய்ஞ்ஞான இலக்கியமாகவே யாவரலும் பார்க்கப்படுகிறது. ”பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” எனப் போற்றப்பட்டசேக்கிழாரினால் அளிக்கப்பட்ட பெரியபுராணம் மெய்ஞ்ஞானத்தை ஒவ்வொரு நிலையிலும் உணர்த்துவதாக விளங்கும் இலக்கியமாகிப் பலராலும் ஆராயப்படத்தக்கதாயும் இருக்கிறது. வில்லிபுத்தூராரின் மகாபாரதமும் இந்தவகையில் இணைந்து கொள்கின்றது. சீவகசிந்தாமணி இன்பத்தைச் சொன்னபோதிலும் அதிலும் மெய்ஞ்ஞானமே முக்கிய நோக்கமாக அமைவதையும் காணமுடிகிறது.

    சைவசித்தாந்தம் பற்றிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் பல இலக்கியங்கள்புறப்பட்டு வந்தன. இவை யாவும் மெய்ஞ்ஞான இலக்கியமாகவே யாவராலும்பார்க்கப்படுகிறது. நாயக்கர் காலத்தில் ஏற்பட்ட அரசியல்சூழலினால் சமூகமே மாறியது.இதனால் சமயம் சார்ந்த மடங்கள் பல தோற்றம் பெற்றுச் சமயத்தையும் , அதன் பாரம்பரியத்தையும் காப்பாற்றும் அவசியமும் தேவையும் உருவானது. இதனால் பல தலபுராணங்கள் இக்காலத்தில் மிகுதியாக வந்தன. கலம்பகம், பள்ளு, உலா, தூது என்றவகையில் மெய்ஞ்ஞானம் சார்ந்த இலக்கியங்கள் பெருமளவில் இடம்பிடித்துக் கொண்டன.

    சித்தர்களது இலக்கியங்கள் தமிழிலில் மிகுந்து காணப்படுகின்றன. இந்தவகையில் திருமூலரின் இடம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். மூவாயிரம் பாடல்கள் கொண்ட அவரது திருமந்திரம் மெய்ஞ்ஞான இலக்கியத்தில் மணிமகுடமாக விளங்கிறது என்று பலரும் எண்ணுகின்றார்கள்.

    திருமூலரின் சிந்தனையானது நாத்திகமாகவும் தெரியும்; அதேவேளை ஆத்திகமாயும் கருத்துக்களை அள்ளிவழங்கியும் நிற்பதை நாம்கண்டு கொள்ளலாம். திருமூலர் வழியிலே வந்து வெட்டொன்று துண்டிரண்டாய் மெய்ஞ்ஞானக் கருத்துக்களைத் தந்துநிற்கின்றார் பட்டினத்து அடிகள். மெய்ஞ்ஞான இலக்கியம் என்றவுடன் முதலில்வந்து நிற்பவர் சித்தருள் உயர்ந்தவரான திருமூலர் அவர்களே. இந்த வகையில் வந்தன உயர்வான மெய்ஞ்ஞான இலக்கியங்கள் அல்லவா!

    அருணகிரிநாதர் தமிழ் இலக்கியவரலாற்றில் மிகவும் முக்கியமானவர். ஏனென்றால் அவர்கையாண்ட யாப்புவகை மிகவும் கடினமானதும் சிறப்பானதுமாகும். அவரின் கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி யாப்பைவிடத் திருப்புகழ் யாப்பே வியப்பினை நல்கிநிற்கும் யாப்பு என யாவருமே வியந்துபோற்றுகிறார்கள். சந்தத்தால் தமிழை வளம்படுத்தியதோடு மெய்ஞ்ஞான இலக்கியத்தில் தனது ஆற்றலை வெளிப்படுத்திய தமிழ்ப் பாவலராகவும் விளங்குகின்றார் அவர் எனலாம். தாயுமான சுவாமிகளின் அத்தனை படைப்புகளும் மெய்ஞ்ஞான இலக்கியமாகவே இருக்கின்றன. குமரகுருபரர் படைப்புகளும் மெய்ஞ்ஞான இலக்கியத்தினுக்கு வலுசேர்ப்பனவாகவே அமைந்துஇருக்கின்றன.

    இஸ்லாமியர்களும் மெய்ஞ்ஞான இலக்கியங்களை வழங்கித் தமது பங்களிப்பினால் அந்த இலக்கியத்தைச் செழிப்பாக்கி இருக்கின்றார்கள். உமறுப் புலவரால் இயற்றப்பட்ட சீறாப்புராணம், முதுமொழிமாலை, மெய்ஞ்ஞான இலக்கியமாய் மிளிர்வதைப் பார்க்கின்றோம். வண்ணக்களஞ்சியப்புலவர், அலியார் புலவர், குணங்குடி மஸ்தான் ஆகியவர்கள் மிகவும் சிறந்த இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்களை வழங்கி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

     ஈழத்தவர்கள் பலர் மெய்ஞ்ஞான இலக்கியங்களை அவ்வப்போது வழங்கி அந்த இலக்கியத்தை மெருகூட்டியிருக்கிறார்கள் என்பதை எவருமே மறந்துவிடக்கூடாது. சின்னத்தம்பி புலவர், கனகசபைப்புலவர்,சேனாதிராய முதலியார், மயில்வாகனப் புலவர், உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் இவர்கள் அனைவரும் செய்யுளாலான மெய்ஞ்ஞான இலக்கியங்களை வழங்கி அதற்கு வலுவூட்டி இருக்கின்றார்கள்.  வசனநடையாலும், பிரசங்கம் என்னும் வகையாலும், தன்வாழ்நாள் முழுவதையும் மெய்ஞ்ஞான இலக்கிய வழிக்கே அர்ப்பணித்த மிகச்சிறந்த சிந்தனையாளரும், செயல்வீரரும்தான் நல்லைநகர் ஈந்தளித்த ஆறுமுகநாவலர் பெருமான் அவர்கள். தமிழிலே பல சீர்திருத்தங்களைச் செய்தாலும், தமிழ் இலக்கணத்தில் நுண்மாண் அறிவினைப் பெற்றிருந்தாலும் அவரைப் பொறுத்தவரை இவ்வுலக வாழ்க்கையில் இறைவனை நினைந்து வழிபட்டு முத்தியின்பம் பெறுவதை வலியுறுத்தும் வகையில்தான் அவரின் தமிழும் அவரின் இலக்கியச் சிந்தனையும் உருவாகி இருந்தது என்பது தெளிவான உண்மையெனலாம். எனவே நாவலர் பெருமானின் இலக்கியப் படைப்புக்களின் அடிநாதமாக மெய்ஞ்ஞானமே இருந்திருக்கிறது.

      “ நல்லைநகர் நாவலர் பிறந்திலரேல்
        சொல்லுதமிழெங்கே சுருதியெங்கே
        எல்லரிய வேதமோடு ஏத்துஆகமங்கள் எங்கே

    என்று நாவலர் பெருமானின் வரவினைப் போற்றிப்பாடும் அளவுக்கு அவரின் மெய்ஞ்ஞான இலக்கியப்பணிகள் அமைந்திருந்தன என்பது எமக்கெல்லாம் மிகப் பெருமையை அளிக்கிறது அல்லவா!

    கிழக்கிலங்கையில் உதயமான மெய்ஞ்ஞான ஞாயிறான சுவாமிவிபுலாநந்தர் அவர்களால் உயர்மெய்ஞ்ஞான இலக்கியங்கள் உதயமாகிருப்பதையும் மறக்கமுடியுமா? நாவலர் பெருமானுக்கு வாய்த்த சூழல் வேறு. சுவாமி அவர்களுக்கு வாய்த்த சூழல் வேறாகும். இருவருமே தமிழில் மிகச்சிறந்த பாண்டித்தியம் பெற்றவர்களாக மிளிர்ந்தபோதிலும் – அவர்களிடம் மெய்ஞ்ஞான நோக்கே நிறைந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  ஆறுமுகநாவலர் காலத்தவரான கிறீஸ்தவ மதகுருவானசுவாமி ஞானப்பிரகாசரும் மிகச்சிறந்த புலமையாளராவர். அவராலும் மெய்ஞ்ஞான வழியில் பயணிக்கமுடிந்ததையும்காண்கின்றோம். நாவலரும் ஞானப்பிரகாசரும் இரண்டு கோணங்களில் நின்றாலும் அவர்களூடாக மெய்ஞ்ஞான இலக்கியம் செழுமைபெற்றது என்பது மனங்கொள்ளத் தக்கதே.

    ஐரோப்பியர் வருகையினால் அரசியல் மாற்றமும், சமயசமூக மாற்றங்களும் ஏற்பட்டன. அன்னிய மதங்களைப் பரப்பவந்த மதபோதகர்கள் பலர் தமிழைக் கற்றார்கள். கற்றதுடன் நின்றுவிடாது தத்தம் சமயங்களைப் பரப்பும் முகமாக மெய்ஞ்ஞான இலக்கியங்களைத் தமிழிலே தந்து தமிழிலக்கியத்துக்கு மேலும் வலுவூட்டி நின்றமை மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும்.   இந்தப் புதிய வரவு ஓர் எழுச்சியென்று கூடச்சொல்லலாம். தேம்பாவணி என்னும் இலக்கியம் கம்பராமாயணம், சீவசிந்தாமணி அளவுக்குச் சுவைமிகுந்த இலக்கியமாகி நிற்கிறது. இதனை ஆக்கியவர் பெஸ்கி என்னும் தனது பெயரினையே வீரமாமுனிவர் என ஆக்கிக்கொண்டார் என்பது இவரின் தமிழ்க் காதலைக் காட்டிநிற்கிறது எனலாம். தத்துவ போதக சுவாமிகள், ரேனியுஸ் ஐயர், ஜி.யூ.போப், டாக்டர் கால்டுவெல் ஆகியோர் மெய்ஞ்ஞான இலக்கியங்களைத் தந்த தமிழர் அல்லாதவர்கள் என்பது மிகவும் முக்கியமான செய்தியாகும்.

    பாரதியார் தேசியக்கவிஞனாக விளங்கிய பொழுதிலும் அவரின் படைப்புகளிலும் மெய்ஞ்ஞானச் சிந்தனைகள் நிறையவே காணப்படுகின்றன. திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், மெய்கண்டார் ஆதீனம், அளவிறந்த மெய்ஞ்ஞான இலக்கியங்களை உரைநடையிலும், செய்யுளிலும் வழங்கியிருக்கின்றன. இன்றுவரை அப்பணிகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன.

    பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் பலர் மெய்ஞ்ஞான இலக்கிய கர்த்தாக்களாக மிளிர்ந்தமையையும் காணமுடிகிறது. இந்த வகையில் மு.தளையசிங்கத்தை நோக்கலாம். மிகக்குறுகிய காலம்… அதாவது பாரதியார் போலவாழ்ந்தாலும் வாழ்ந்தகாலத்தில் மெய்ஞ்ஞானம் பற்றிய நிலையினுக்கு ஆட்பட்டு பகவான் ஶ்ரீநந்த கோபாலகிரியிடம் தீட்சையும் பெற்றுக்கொண்டார். “சர்வமதங்களும் சமமானவையல்ல. எல்லாம் ஒன்றே” என்ற ஞானம் சகல மக்களினதும் இன, மத, மொழி, கலாசார ஆணவத்தடைகளை அறுப்பதோடு அதன் இடத்தில் எழுகின்ற புது யுகத்தின் எல்லாப் பொதுமைகளையும் நிலைநாட்டவும், சகலமக்களையும் மெய்யை நோக்கி ஆற்றுப்படுத்தவும் சர்வமத ஐக்கியத்துவம் தூண்டுகிறது. இத்தூண்டுதலின் கலை ஒலிப்பே பாரதிகண்ட கிருதயுகம். பாரதி விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதாவின் சீடனாவர். அரவிந்தரோடும் உறவாடியவர். இந்த அனுபவச் சூழலின் தரிசன வார்ப்பாகவே மு.தளையசிங்கம் அவர்கள் விளங்குகின்றார். அவரின் மெய்ஞ்ஞான நிலை இதுவேயாகும். இந்த அடிப்படையில்தான் அவரின் மெய்ஞ்ஞானத் தத்துவவப் படையலாக “போர்ப்பறையும்”, மெய்யுளும் ” அமைந்து  இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். சர்வோதய சிந்தனைகளைத் தனது மனத்தில் நிறைத்தவராக தளையசிங்கம் இருந்தததால் அவரின் மெய்ஞ்ஞான இலக்கியச்சிந்தனையும் அதன்வழியிலேயே சென்றிருக்கின்றது. பாரதியை மிகவும் நேசித்த சிந்தனைவாதியாக மு. தளையசிங்கம் இருந்தமையால் அவரின் மெய்ஞ்ஞான இலக்கியமும் அதனையொட்டியே நகர்வதனையும் காண்கின்றோம்.

    மெய்ஞ்ஞான இலக்கியத்தின் உச்சம் என்பது தமிழிலக்கிய வரலாற்றில் சங்கமருவிய காலத்தின் பின்னர் ஆராம்பித்துச் சோழர்காலத்தில் உச்சம்பெற்று நாயக்கர் காலத்தில் புதுவடிவம்தாங்கி வந்திருக்கிறது என்றுதான் சொல்லலாம்.

    மெய்ஞ்ஞான இலக்கியம் என்று நோக்கும்பொழுது – இன்றும் அதன் நிலை உச்சம் என்று கொள்ள முடியாவிட்டாலும் வீழ்ச்சி என எடுத்துக் கொள்ளமுடியாமலே இருக்கின்றது. ஏனென்றால் இன்றும் மெய்ஞ்ஞான இலக்கியமானது எப்படியோ வந்துகொண்டேயிருப்பதைக் காண்கின்றோம்.

    வடிவம் மாறியிருக்கலாம்; ஆனால் வண்ணம் மாறவில்லை எனலாம். உரைநடையில் பல மெய்ஞ்ஞான இலக்கியங்கள் இன்றும் வந்தபடிதான் இருக்கின்றன. சினிமாக்கவியாக வளர்ச்சிபெற்றாலும் நல்ல சிந்தனைக் கவியாயும் விளங்கியவர்தான் கவியரசு கண்ணதாசன். அவர் செய்யுளினால் இயேசுகாவியத்தையும், உரைநடையால் அர்த்தமுள்ள இந்துமதத்தையும் மெய்ஞ்ஞான இலக்கியமாக்கித் தந்துள்ளதை  மறுக்கமுடியுமா!

    புராணங்களை அடிப்படையாகக் கொண்டு பேச்சுமுறை இலக்கியத்தாலும், சமயதத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு உரைநடை இலக்கியங்களாலும் வையத்துள் வாழ்வாங்குவாழும் வழிவகைகளைக் கற்றாரும் மற்றாரும் மனங்கொள்ளும் வகையில் மெய்ஞ்ஞான இலக்கியங்களை வழங்கிநின்ற வாரியார் சுவாமிகளை மறக்கமுடியுமா! பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களினால் வழங்கப்பட்ட அரிய பெரிய மெய்ஞ்ஞான இலக்கியங்களைத்தான் மறக்க முடியுமா!

     கணனியுக காலத்திலும்கூட மெய்ஞ்ஞான இலக்கியமாக வெளிரும் பக்திவிகடன், ஞானபூமி, பக்திக் குமுதம், தமிழ்நாட்டில் அரசினால் வெளியிடப்பட்ட திருக்கோயில் சஞ்சிகை இவையெல்லாம் மெய்ஞ்ஞான இலக்கியம் பற்றிய சிந்தனை இப்பொழுதும் இருக்கிறது என்பதைக் காட்டுகிறதல்லவா!

    நாத்திகமும், ஆத்திகமும் உலகம் உருவான காலந்தொடக்கமே இருந்து வருகிறது. அதற்கேற்பவே அவ்வக்காலத்து எழுந்த இலக்கியங்களும் அமைந்தும் வந்திருக்கின்றன. இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்பதை ஏற்றுக்கொள்வோமேயானால் மெய்ஞ்ஞான இலக்கியம் ஒருகுறிப்பிட்ட காலத்தில் அக்காலச் சூழலினைவைத்து உச்சநிலை எய்தியிருக்கலாம் என எண்ணமுடிகிறது. அதேவேளை தற்கால சூழலில் மெய்ஞ்ஞான இலக்கியம் பற்றிய சிந்தனைக்கு ஏற்பவே அந்தவகை இலக்கியங்களும் வருகின்றன.

    இன்று நிலவும் சூழலானது நூறுசதவீதம் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண் டதேயாகும். இங்கு விஞ்ஞானமே எல்லாவற்றிலும் முன்னிற்பதை எவராலும் தவிர்த்துவிடவோ அன்றித் தடுத்துவிடவோ முடியாது. விஞ்ஞானம் அரியாசனத்தில் வீற்றிருக்கின்ற நிலையில் மெய்ஞ்ஞானம் சற்று அடக்கி வாசிக்கவேண்டிய சூழலே ஏற்பட்டிருக்கின்றது. அதனால் மெய்ஞ்ஞானம் பற்றிய சிந்தனை இல்லாமற்போய்விட்டது என்பது அர்த்தமல்ல.

    இலக்கியம் காலத்தைப் புலப்படுத்தும் பாங்கில் இருப்பதால் இக்கால நிலைமையினை அனுசரித்துப் பலவகைஇலக்கியக்கியங்கள் பல்கிப்பெருகி வந்துகொண்டே இருக்கின்றன.அதற்கிடையில் மெய்ஞ்ஞானபடைப்புகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இதனால் மெய்ஞ்ஞான இலக்கியம் என்று பெரியளவில் அதாவது உச்சம் என்று சொல்லும் அளவுக்குக் காணப்படவில்லை என்பது நோக்கத்தக்கதே. ஆனாலும் மெய்ஞ்ஞானம் என்னும் சிந்தனை மனங்களில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

     

    Share
  • ஆருக்கும் வாய்ப்பதில்லை

     

    (    எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

    காரிருக்கு வீடிருக்கு கையினிலும்  பணமிருக்கு

    பலபேரின் நட்பிருக்கு பரிசுகளும் குவிந்திருக்கு

    என்றாலும் மனத்தளவில் என்னவோ குறையிருக்கு

    எதுவென்று தெரியாமல் ஏக்கமே நிறைந்திருக்கு !

     

    முதுமைவரும் காரணமா முறுவல்வர மறுப்பதுவா

    தனிமைவரும் எனும்நினைப்பு தலைதூக்கி வருவதுவா

    ஓடியோடி உழைத்துவாங்கி உள்வீட்டில் சேர்த்ததெலாம்

    யாரினிமேல் பார்த்திடுவார் எனுமெண்ணம் எழுவதுவா !

     

    பிறந்தநாள் வருவதனை பெரும்பாலும் விரும்பவில்லை

    குறைந்தநாள் ஆகிடுமோ எனுமேக்கம் வந்துநிற்கும்

    பட்சணங்கள் செய்தாலும் பசிகூட வருவதில்லை

    இஷ்டமுடன் அதைச்சுவைக்க இனிப்புநோய் விடுவதில்லை !

     

    பிள்ளைகளோ அவர்பாட்டில் பேரர்களோ விளையாட்டில்

    மருமக்கள் எமைக்கண்டால் மெளனமாய் சிரித்திடுவார்

    எமையொத்த வயதுடையார் இயலாமை காரணத்தால்

    ஏங்கித் தவிப்பதனை இன்டர்நெட்டில் பார்த்துநிற்போம் !

     

    காலையில் எழுவதற்குக் காரணமும் தெரிவதில்லை

    மாலைவந்து விட்டதென மணிக்கூடு காட்டிநிற்கும்

    பாயிலே எமக்குமுன்னே நோய்வந்து படுத்துவிடும்

    பதறிநாம் துடித்தாலும் பார்த்தபடி சிரித்துநிற்கும் !

     

    கலைநிகழ்ச்சி கல்யாணம் காண்பதற்குச் சென்றாலும்

    பலபேரும் எம்பக்கம் பார்த்திடவே மாட்டார்கள்

    சிலவேளை பார்த்தாலும் திரும்பாமல் சென்றிடுவார்

    அதுவே எம்மனநிலையை அடியோடு மாற்றிவிடும் !

     

    முதுமைபற்றி நினைத்துவிட்டால்

    முகங்கூட மாறிவிடும்

    எதுவுமே எங்களுக்கு

    எதிரியாய்தான் தெரியும்

    உடல்தளர்ந்து போனாலும்

    உளம்தளர்ந்து போகாமல்

    உளம்நிறைய மகிழ்ச்சிதனை

    ஊற்றெடுக்கச் செய்திடுவோம் !

     

    எமையொதுக்கி நிற்பவரும்

    இந்நிலைக்கு வந்திடுவார்

    இலையுதிர்வு நிலையதனை

    இயற்கையே கொடுத்திருக்கு

    தலைநரைக்கும் பல்லுவிழும்

    தளர்வுவந்து தாக்கிவிடும்

    அதைத்தவிர்த்து வாழ்ந்துவிடல்

    ஆருக்கும் வாய்ப்பதில்லை !

    Share
  • மலராக்க முனைந்திடுவோம்!

    -எம் .ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    முள்ளிருக்கும் செடியினிலே
    முகிழ்த்துவரும் ரோஜாவோ
    முள்பற்றிக் கவலையின்றி
    முறுவலுடன் பூத்துநிற்கும்!
    சொல்கொண்டு குத்துவதை
    மெள்ளவே ஒதுக்கிவிடின்
    சுமையெம்மைத் தாக்காது
    சுகம்பற்றி நினைத்திடலாம்!

    காந்திமகான் மார்பினிலே
    காலாலே உதைத்தவர்க்குக்          roses-and-thorns
    காலணியைத் தான்செய்து
    காந்திமகான் பரிசளித்தார்
    வாங்கிநின்ற வெள்ளையரோ
    மனதார உருகிநின்று
    காந்தியது பொறுமைகண்டு
    கண்திறந்து நின்றனரே!

    தொழுநோய்க்குத் தொண்டுசெய்ய
    துணிவுகொண்ட  தூயவராம்
    பழுதில்லாத் துறவறத்தைப்
    பாரினிலே பெற்றவராம்
    அன்னையாம் திரேசாவை
    அவமதித்த ஆட்களையே
    அரவணைத்த காரணத்தால்
    அவருயர்ந்தார் அவனிதனில்!

    சிலுவைதனில் அறைந்தார்கள்
    சித்ரவதை செய்தார்கள்
    பலவகையில் வசைவுகளைப்
    பகர்ந்துமே நின்றார்கள்
    அவையெல்லாம் தாங்கியவர்
    ஆண்டவரே மன்னியென
    அன்புடனே வேண்டியதால்
    அவர்வணங்கும் பேறுபெற்றார்!

    கல்லிலே கட்டிக்
    கடலிலே போட்டார்கள்
    கொல்லுதற்கு நஞ்சுதனை
    அஞ்சாமல் கொடுத்தார்கள்
    எல்லையில்லாக் கொடுமைசெய்தும்
    எதையுமவர் தாங்கிநின்று
    நல்லபடி சொல்லிநின்றார்
    நமசிவாய எனும்நாமம்!

    அவமானம் அசிங்கம்
    அத்தனையும் தாங்கியவர்
    அகிலமதில் இமயமாய்
    ஆகியே இருக்கின்றார்
    பொறுத்தவரே நிறைவடைவார்
    பொங்கினார் பொசுங்கிடுவார்
    வெறுத்தொதுக்கு வெறுப்பேற்றின்
    விரையமே வந்துநிற்கும்!

    வாழ்க்கையிலே முட்களாய்
    பலவந்து குத்திடினும்
    வாழவேண்டும் எனநினைத்தால்
    முட்கள்கூட  மலராகும்
    மலர்ந்துவிடச் செய்வதற்கு
    வழிவகுக்கும் மனம்வேண்டும்
    வழியில்வரும் முட்களையும்
    மலராக்க முனைந்திடுவோம்!

     

     

    Share
  • கண்டிடுவோம் தமிழ்ப்பணியை!

    -மகாதேவ ஜெயராமசர்மா  – மெல்பேண், அவுஸ்திரேலியா

    பிறப்பறியாத் தமிழன்னை பெற்ற மைந்தன்
    சிறப்புடனே தமிழ் கற்றுத் தேறிநின்றார்
    உவப்புடனே தமிழ்தன்னை உளத்தில் ஏற்றி
    ஓயாமல் தமிழ்சிறக்க உழைப்பை  ஈந்தார்
    களைப்பின்றிப் பலநூல்கள் கருத்தாய்த் தந்தார்
    கற்றவரும் மற்றவரும் விரும்பி யேற்றார்
    தனித்தமிழே உயிராக எண்ணி நின்றார்
    தன்பெயரைத் தனித்தமிழாய் ஆக்கிக் கொண்டார்!

    மறைமலையார் பெயர்கேட்கின் மகிழ்ந்திடுவாள் maraimalaiatikalதமிழன்னை
    குறையில்லாத் தமிழ்வளரக் குதித்திட்டார் களமதனில்
    சிரமீது தமிழ்வைத்தார் சிந்தையெலாம் தமிழ்நிறைத்தார்
    பலமொழிகள் தமிழ்மீது படையெடுக்கத் தடையானார்
    தமிழ்மொழியின் தூய்மையது தனித்துவமாய் இருப்பதற்குத்
    தனித்தமிழே தேவையெனத் தலைநிமிர்ந்து அவருரைத்தார்
    அமுதான தமிழ்மொழியில் அன்னியத்தை அகற்றவெனத்
    தனியான இயக்கம்கண்டார் தமிழான அடிகளாரும்!

    பன்மொழிகள் அறிவிருந்தும் பசுந்தமிழைப் பற்றிநின்றார்
    சொன்னயமும் பொருணயமும் சுவையாக எழுதிநின்றார்
    நன்னயமாய்ப் பலவற்றை நாளுமே கொடுத்துநின்றார்
    நாட்டிலுள்ளார் நற்றமிழை நாடிநிற்ற வழிசமைத்தார்
    சங்கத்தமிழ் பின்னாலே தமிழ்குறையைக் கண்டறிந்தார்
    சங்கத்தமிழ் தூய்மையினைத் தமிழ்பெறுதல் வேண்டுமென்றார்
    இங்கிதமாய் யாவருக்கும் எடுத்துரைத்தார் தனித்தமிழை
    இதனாலே மறைமலையார் இருக்கின்றார் தமிழுலகில்!

    தமிழ்நாட்டில் இப்பொழுது தமிழைநாம் தேடுகிறோம்
    தமிழ்பிறந்த மண்ணிலிப்போ தமிழ்தயங்கி வருகிறது
    அமுதான தமிழ்மொழியில் அன்னியமே செறிந்திருக்கு
    அதைஅணைத்து நிற்பதிலே அகமகிழ்ந்து நிற்கின்றார்
    நல்லதமிழ் பேசிவிட்டால்  நாகரிகம் குலையுதென்பார்
    தொல்லைத் தமிழ்பேச்சினையே சுவையெனவே எண்ணுகிறார்
    நல்லதமிழ் நாடிநின்ற நம்மடிகள் இருந்திருப்பின்
    எல்லையிலாத் துன்பமதை ஏற்றிருப்பார் உள்ளமதில்!

    அடிகளார் செய்தபணி அன்னைத் தமிழ்ப்பணியே
    அதைமனதில் கொள்ளாமல் அனைவருமே இருக்கின்றோம்
    ஆங்கிலத்தைக் கற்றிடுவோம் அனைத்துமொழி கற்றிடுவோம்
    ஆனாலும் அருந்தமிழை அகமதிலே இருத்திவைப்போம்
    பாங்கான இலக்கியங்கள் பசுந்தமிழில் இருக்கிறது
    பாருங்கள் எனும்பாங்கில் பலசொன்னார் மறைமலையார்
    தூயதமிழ் எழுதிடுவோம் துடிப்புடனே பேசிடுவோம்
    வாருங்கள் தனித்தமிழை வளர்த்திடுவோம் எனவழைத்தார்!

    மறைமலையார் தமிழ்ப்பணியை மறந்துவிடல் முறையன்று
    மாமொழியாம் தமிழதனை மணிமகுடம் ஏற்றிநிற்போம்
    தமிழ்வளர்ச்சிப் பாதையிலே தடைவந்தால் தகர்த்தெறிவோம்
    தமிழ்வாழ உழைத்துநின்ற தமிழடிகள் மனம்மகிழ்வார்
    அடிகளார் எடுத்தபணி ஆல்போன்று பெருக்கமுற்றால்
    அன்னைத் தமிழ்மொழியும் அதியுயர்வு அடையுமன்றோ?
    ஆதலால் யாவருமே அடிகளார் எண்ணமதைக்
    காதலுடன் மனமிருத்திக் கண்டிடுவோம் தமிழ்ப்பணியை!

     

     

    Share
  • எல்லோரும் விரும்பிடுவோம்!

    – எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா 

    மழையின் பொறுமையினால்
    மாவெள்ளம் தான்குறையும்
    மாபூமி  பொறுமையினால்
    மக்களெலாம் வாழுகிறார்
    இரவின் பொறுமையினால்
    இன்பமெலாம் விளைகிறது
    இறைவனது பொறுமையினால்  jeya
    இயக்கமே நடக்கிறதே!

    தாயின் பொறுமையினால்
    தான்குழந்தை வளர்கிறது
    தந்தையின் பொறுமையினால்
    தான்நிமிர்ந்து நிற்கிறது
    குருவின் பொறுமையினால்
    குணம்பெற்று உயர்கிறது
    குவலயத்தில் பொறுமையது
    கொடையாக விளங்குதன்றோ!

    தருமனது பொறுமையினால்
    சன்மார்க்கம் உயர்ந்ததுவே
    சகுனியது பொறையின்மை
    சதியாகக் குவிந்ததுவே
    இமயமாய்ப் பாண்டவரை
    எல்லோரும் மதிப்பதற்கு
    ஏற்றதொரு வலிமைதந்த
    இலக்கணமே பொறுமையன்றோ!

    காந்தியது பொறுமையினால்
    கண்டுநின்றார் சுதந்திரத்தை
    சாந்தியுடன் வாழ்வதற்கும்
    தத்துவமே பொறுமையன்றோ?
    நீதிநேர்மை அத்தனையும்
    நெறிதவறிப் போவற்குப்
    பொறுமைபற்றி உணராதார்
    பொறுப்புதான்  காரணமே!

    தலைவர்க்கும் பொறுமையில்லை
    தொண்டர்க்கும் பொறுமையில்லை
    தலைநிமிர்ந்த  ஆணவத்தின்
    தாள்பணிந்தே நிற்கின்றார்
    நிலைகுலைந்து பலபோயும்
    நினைத்துமே பார்க்காமல்
    நிற்பதற்குப் பொறுமையிலா
    நிற்பதுவே காரணமே!

    புத்தபிரான் பொறுமையும்
    புனிதநபி பொறுமையும்
    உத்தமராம் யேசுபிரான்
    உயர்ந்துநின்ற பொறுமையும்
    சத்தியத்தாய் ஈன்றெடுத்த
    வள்ளுவரின் பொறுமையும்
    இத்தரைக்கு வந்திருந்தும்
    ஏன்பொறுமை வரவில்லையோ!

    பொறுத்தாரே அரசாள்வார்
    பொங்கினார்க் காடுறைவர்
    புவிதனிலே சிறந்தசெல்வம்
    பொறுமையே எனவறிவோம்
    நினைத்துமே எண்ணிவிட்டால்
    நெஞ்சமதில் பொறுமையினை
    இருத்தியே வைத்துவிட
    எல்லோரும் விரும்பிடுவோம்!

     

     

    Share
  • வாழ்வாங்கு வாழ்ந்திடலாம்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    மனிதனது மனமெல்லாம் மதம்நிறைந்தே இருக்கிறது
    மதமகன்று போவதற்கு மதமொன்றே உரமாகும்
    மதமதனை மனிதவினம் மயக்கமுடன் நோக்குவதால்
    மதவாதம் மனிதனையே மாண்டுவிடச் செய்கிறது!

    யானைக்கு மதமேறின் பாகனையே கொன்றுவிடும்
    ஞானமின்றி இருப்பாரின் மதவெறியோஅழித்துவிடும்
    நானென்னும் ஆணவத்தால் நல்மதமும் கெடுகிறது
    நம்பினார்க் கெடுவதில்லை நால்வேதம் சொல்கிறது!

    பலமதங்கள் பலகருத்தைப் பலவழியில் பகன்றாலும்
    பாரிலுள்ள மதமனைத்தும் பாதகத்தைப் பகரவில்லை
    பண்புநிறை உள்ளமொடு பலருமே வாழ்கவென்று
    பக்குவமாய்ச் சொல்லுவதைப் பலருமே கேட்பதில்லை!

    எந்த மதமானாலும் சொந்தம் கொண்டாடிடுங்கள்
    பந்தமுடன் மதம்சொல்லும் வழியினிலும் சென்றிடுங்கள்
    வெந்தழலில் வீழ்த்துகின்ற வேதனைகள் தவிர்த்துவிடின்
    எந்தமதம் ஆனாலும் எல்லோரும் போற்றிடுவார்!

    நதிகள் பலவிருந்தாலும் கலக்குமிடம் கடலன்றோ?
    நம்மதங்கள் பலவிருந்தும் உணர்த்துமிடம் இறையன்றோ?
    நாமதனை உணராமல் நாளுமே மதம்கொண்டால்
    நம்மனத்தில் மதமின்னும் நாளுமே வளருமன்றோ!

    விலங்கினுக்கும் மதமில்லை பறவைக்கும்
    மதமில்லை
    விளக்கதனில் விழுகின்ற விட்டிலுக்கும் மதமில்லை
    விவேகநிறை மனிதனுக்கோ மதம்நிறைய இருந்தாலும்
    விவேகமதைக் கைவிட்டு வேற்றுமையே காணுகிறான்!

    மதங்கள் பலவிருந்தாலும் மனம்சிறக்க வேண்டாமா?
    மதவெறியை ஊட்டுவதால் மானிடமே மாண்டிடுமே!மதமென்னும் கருவதனைப் புனிதமாய்க் கொண்டுவிடின்மதம்பிடிப்பார் நிலைமாறி
    வாழ்வாங்கு வாழ்ந்திடலாம்!

     

     

    Share