அனைவருக்கும் வேண்டுமையா !
( எம் .ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்த்திரேலியா )
நூல்கள்பல கற்றாலும்
நுண்ணறிவைக் காணவில்லை
மால்மருகா வேல்முருகா
மனமெல்லாம் குழப்பமையா
நால்வேதப் பொருளோனே
நம்பியவர்க் கருள்பவனே
நாளுமுனைத் துதிபாட
நற்கருணை தாருமையா !
சூரர்தமை அழிப்பதற்கு
சுடராக வந்தவனே
பாரினிலே பலசூரர்
பாதகங்கள் செய்கின்றார்
யாருமே அவர்பக்கம்
பார்ப்பதற்கு அஞ்சுகிறார்
வேலவனே உன்வேலை
விட்டுவிடு விரைவுடனே !
ஆணவத்தை அழிப்பதற்கு
அரனுன்னை அனுப்பிவைத்தார்
ஆணவமோ இவ்வுலகில்
அரியணையில் இருக்கிறதே
ஆண்டவனை இப்போது
வேண்டாது எனக்கூறும்
ஆணவத்தை அழிப்பதற்கு
ஐயாநீ வேலைவிடு !
சஷ்டிவிரதம் இருப்பார்க்கு
சங்கடங்கள் போகுமென்பார்
கஷ்டம்பல இருந்தாலும்
சஷ்டியை நாம்விடுவதில்லை
துஷ்டர்பலர் வந்திங்கு
கஷ்டம்பல கொடுக்கின்றார்
இஷ்டமுடன் நீயிரங்கி
எமக்கருள்வாய் கந்தவேளே !
முருகாவுன் திருநாமம் முழுவுலகம் ஒலிக்கிறது
தெருவெங்கும் உன்கோவில் சிறந்தோங்கி இருக்கிறது
அருளான உன்னாட்சி அகிலமதைக் காப்பதற்கு
ஐயாவுன் அருள்நோக்கே அனைவருக்கும் வேண்டுமையா !
விழுந்தாலும் உன்நாமம் எழுந்தாலும் உன்நாமம்
விருப்பமுடன் எம்மனதில் வீறுகொண்டு வருகிறது
விண்ணவரைக் காப்பதற்காய் வேலுடனே வந்தவனே
மண்ணுலகில் உள்ளார்கள் மனம்திருந்த வரம்தருவாய் !