நாளெல்லாம் மகிழ்ந்திருப்போம் !

1

 

   ( எம் .ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

 

 

 

மாநிலத்தில் நாமுயர ஏணியாய் இருந்தார்கள்

மாசகற்றி எம்மனதை மாண்புபெறச் செய்தார்கள்

தாம்படித்து எமக்களித்து தலைநிமிர வைத்தார்கள்

தாமுரமாய் ஆகிநின்றார் தலைசிறந்த ஆசான்கள் !

 

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமானார்

ஆசான்கள் எம்வாழ்வில் அனைத்துக்கும் தெய்வமானார்

ஆன்மாவை தூய்மையாய் ஆக்கிவிடும் அவர்களின்

அடியினைத் தொழுதுநாம் அவராசி பெறுவோமே !

 

வாழ்வெனும் பாதையில் வழுக்கிடா வண்ணம்

தாழ்வெனும் சிக்கலில்  மாட்டிடா வண்ணம்

ஆளுமை எம்மிடம் வளர்ந்திடும் வண்ணம்

ஆற்றலை வளங்குவார் ஆசான்கள் அன்றோ  !

 

நீதிநெறி நடவென்பார் நெஞ்சைதூய்மை ஆக்குவென்பார்

போதனைகள் பலசொல்லி பொறுப்பதனை உணர்த்திடுவார்

பேதமிலா மனம்வளர பெருங்கதைகள் பலவுரைப்பார்

பாதகங்கள் களைந்தெறிவார் பண்புநிறை ஆசான்கள் !

 

பாகற்காய் படிப்பையெலாம் பக்குவமாய் எமக்காக

பதப்படுத்தி சுவையேற்றி பதியவைப்பார் நல்லாசான்

சோதனைகள் வந்தாலும் சுமையின்றி நாம்படிக்க

சாதகமாய் வழிசொல்வார் சரியான ஆசான்கள் !

 

பள்ளிசென்று நாம்படிக்க உள்ளமதில் ஆசைதனை

மெல்ல மெல்ல நுழைப்பதற்கு நல்லவழி கண்டுநிற்பார்

கள்ளமனம் கரைந்தோட கனிவுடனே வகுப்பெடுத்து

உள்ளமதில் அமர்ந்திடுவார் உண்மைநிறை ஆசான்கள் !

 

ஒருநேரம் அடித்தாலும் பலநேரம் அரவணைப்பார்

சிலநேரம் திட்டிடினும் அருள்வாக்காய் அமைந்துவிடும்

குறைகண்டு விட்டாலும் நிறைவாக்க நினைந்திடுவார்

அறிவுடனே அணுகிடுவார் அன்புநிறை ஆசான்கள் !

 

பட்டம்பல பெற்றாலும் பதவிதனில் உயர்ந்தாலும்

படிப்பித்த ஆசான்கள் பக்கத்தில் இருப்பார்கள்

அவர்களது ஆசிகளும் அவர்களது வாழ்த்துகளும்

அனைத்துமே எமையிப்போ அகமகிழ வைக்கிறதே !

 

நல்லாசான் வாய்த்துவிட்டால் நமெக்கென்றும் ஒளிமயமே

நல்லாசன் நம்வாழ்வில் நாழுமே வந்துநிற்பார்

நல்லாசன் கிடைத்தவர்கள் நாளுமே உயர்ந்திடுவார்

நல்லாசான் வாழ்த்துப்பெற்று நாளெல்லாம் மகிழ்ந்திருப்போம் !

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நாளெல்லாம் மகிழ்ந்திருப்போம் !

  1. ஆற்றலை வளங்குவார் ஆசான்கள் – வாழ்வெனும் பாதையில் வழுக்கிடா வண்ணம்

    தாழ்வெனும் சிக்கலில் மாட்டிடா வண்ணம்

    ஆளுமை எம்மிடம் வளர்ந்திடும் வண்ணம்

    ஆற்றலை வளங்குவார் ஆசான்கள் அன்றோ என்ற உன்னதமான வரிகள். அழகுர கவிதை எழுதிய திரு. எம் .ஜெயராமசர்மா எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.