நான் ரசித்த புத்தகம்
-உமாஸ்ரீ
“மோகனா ஓ மோகனா” – என்னும் கவிதைத் தொகுப்பைப் படித்த கண்ணும் மனசும் களிக்கின்றன.
திரு. கே. சிவா ரெட்டியின் தேர்ந்தெடுத்த 35 தெலுங்குக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புதான் “மோகனா ஓ மோகனா”. தமிழில் மொழி பெயர்த்தவர் ஹைதராபாத்தில் வசிக்கும் பிரபல எழுத்தாளர் திருமதி சாந்தா தத். 112 பக்கங்கள் கொண்ட இந்தக் கவிதை தொகுப்பு ஒரு சாகித்திய அகாதமி வெளியிடு.
பிரஞ்சு இலக்கியத்தின் தலைசிறந்த கவிஞரான விக்தர் ஹீயூகோ எழுதிய நூலை “ஏழை படும்பாடு“ என்ற பெயரில் மொழி பெயர்த்தவர் யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதி. தமிழாக்கம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு யோகி சுத்தானந்த பாரதியின் மொழிபெயர்ப்பு பலருக்கு வழிகாட்டி.
அதுபோல் திருமதி சாந்தா தத்…. அருமையான மொழிபெயர்ப்பு. ஒரு சில கவிதைகளைப் பார்ப்போம். அவற்றில் தேர்ந்தெடுத்த வரிகள் உங்கள் பார்வைக்கு.
சாமி நீதி – முதல் கவிதை
செல்வம் அளிக்கட்டும்
ஆனந்தம் அளிக்கட்டும்
அலை – நீண்ட கவிதை – 7 பக்கங்கள்
கனவுகள் நனவாகும்
கனவுகள் நனவாகும்
தரையில் பாதம் ஊன்று …
பொங்கி வரும் ஆவேச சமுத்திரத்தைப்
பார்வைகளில் நிரப்புகிறாய்.
மோகனா ஓ மோகனா – கவிதைப் புத்தகத்தின் தலைப்பு
என்னுள் எந்நேரமும் அசைந்தபடி நீ
ஹோட்டல் அறையில் பரம்புரம்
ஆசை மடியாது, வெப்பம் தணியாது
வேட்கை
என் மரணத்தைவிட என் வாழ்க்கை
பெருமிதமாவதே என் விருப்பம்
மற்றொரு காலைப் பொழுது
எவராயினும் சரி கைநிறைய நீரெடுத்து
வாழ்க்கைக்கு அர்ப்பணித்து
வாழப் புறப்பட்டாக வேண்டும்.
குளிர்கால வெயில்
நான் வலைபின்னி விதைகள் விதைத்துச்
சற்றுத் தொலைவாய் அமர்ந்திருக்கிறேன்
வாகன நெரிசல்
இவ்வாகன நெரிசல் இரக்கமற்றது
இதயமற்றது
திரு கே. சிவா கவிதைகளைச் செப்பிய விதம் மாறுபட்டது; வேறுபட்டது. மிக யதார்த்தமாய்…
திருமதி சாந்தா தத்தின் மொழிபெயர்ப்பு அபாரம்.
பரம்புரம் என்னும் கடுமையான வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். வீரமாமுனிவர் காலத்தில் உபயோகப்படுத்திய வார்த்தை என நினைக்கிறேன்.
அதுபோல் ’வெய்யில்’ என்னும் வார்த்தையும் ’குளிர்கால வெய்யில்’ என்னும் கவிதையில் சர்வ சாதரணமாய் உபயோகப்படுத்தியிருக்கிறார். எழுதும்போது பலர் வெயில் என்னும் வார்த்தையைப் பயன்படுத்துவர். உதாரணத்துக்கு ஒரு குறள்.
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
திருமதி சாந்தா தத் மொழிபெயர்ப்புக்கு முன்னோடியாய்க் கொள்ளலாம். சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். எல்லாக் கவிதைகளும் நெஞ்சைத் தொடுகின்றன. மனம் சலனமடைந்திருக்கும்போது இந்த கவிதைகளைப் படிக்கலாம்.
திருமதி சாந்தா தத்திற்கு மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதமி விருதை விட மிகப்பெரிய விருது வழங்கப் பட வேண்டும்.என்பது என் அவா.
கடைசியாக ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.
கவிதைகளைப் படித்துக் கண்ணும் மனமும் களிக்கின்றன.