Author: உமாஸ்ரீ

  • எதற்காக எழுதுகிறேன்?

    -உமாஸ்ரீ

    எழுத்தாளர் திருமதி ஜெயா சீனிவாசன் எழுதும் கதைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். நகைச்சுவையாய் இருக்கும். கதையை வசனங்கள் நகர்த்திப் போகும். மிகவும் புதுமையாய், நவீனமாய், பாரதியின் புதுமைப் பெண் போல் சிந்திப்பவர். பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். சைனா, மானசரோவர், நாகலாந்து பயணக் கட்டுரைகள் மற்றும் கோவில் கும்பாபிஷேகம் பற்றியும் எழுதியிருக்கிறார். கலைமகளில் அவருடைய கதைகள், கட்டுரைகள் பிரசுரம் ஆகியிருக்கின்றன.

    book_umaபொழுதுபோக்குக் கதைகளில் “ ரா… சா… ர… தா…”  என்பது ஒரு நல்ல நகைச்சுவை கதை. தலைப்பே  வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? . இதன் அர்த்தம் “ராத்திரி சாப்பாடு ரயிலேதான்.“ அவருடைய எல்லாக்  கதைகளிலும் ஹாஸ்யம் மிகுந்து காணப்படுகிறது. திருமதி ஜெயா சீனிவாசனின் கதைகள் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் கதைகள் என்று சொல்லலாம். அவரது கைவிரல்களில் ஸரஸ்வதி தேவி நர்த்தனமாடுகிறாள் என்றும் சொல்லலாம்.

    அவர் நேர்காணலைக் காண்போம்.

    1. உங்களைப் பற்றி சுருக்கமாகச் சொல்லவும்? 

    என் பெயர் ஜெயா சீனிவாசன். நான் திருநெல்வேலியைச் சேர்ந்தவள். வசிப்பது சென்னையிலுள்ள கோபாலபுரத்தில்.  ஒரு பெண், ஒரு பிள்ளை என இரண்டு மணியான ரத்தினங்கள். பேரன் பேத்தி உண்டு. கணவர் டன்லப் கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வுபெற்றவர்.

    2. தாங்கள் எப்பொழுதிலிருந்து எழுதுகிறீர்கள்? 

    1969, 1970இல் இருந்து எழுதுகிறேன். என் முதல் கதை ஆனந்த விகடனில் பிரசுரம் ஆயிற்று. அப்போது நான் வெஸ்ட் பெங்காலில் இருந்தேன். கொல்கத்தாவின் அருகிலிருக்கும் ஒரு கிராமம். அப்போதிலிருந்து அப்பப்போ எழுதிக் கொண்டிருக்கிறேன்.

    3. தாங்கள் ஏன் எழுதுகிறீர்கள்? 

    எனக்கு எழுதுவது என்றால் மிகவும் பிடிக்கும். சுவாரஸ்யமாய் எழுதுவேன். எனக்கு நல்ல கற்பனை சக்தி உண்டு . அதனால் எழுதுகிறேன். பொழுது போக்கிற்காக மட்டுமே நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

    4. தாங்கள் எப்பொழுது எழுதுகிறீர்கள்? (குறிப்பிட்ட நேரத்தில்தான் எழுதுவீர்களா?) 

    நேரம் கிடைக்கும்போது,  பொதுவாகப் பகல் வேளைகளில் எழுதுவேன்.

    5. சிறுகதையில் என்ன அம்சங்கள் இருக்க வேண்டும்?

    கதைக்கரு, பொழுதுபோக்கு அம்சம், விறுவிறுப்பு, நல்ல மெசேஜ் எல்லாம் இருக்க வேண்டும்.

    6. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் நான்கை கூறவும். 

    1. கல்கியின் பொன்னியின் செல்வன் – பலமுறைப் படித்தது. இப்போது கூட சமீபத்தில் படித்தேன்.
    2. நா. பா.வின் குறிஞ்சி மலர்.
    3. சுஜாதாவின் உள்ளம் துறந்தவன்.
    4. லக்ஷ்மியின் மிதிலா விலாஸ்.

    7. படைப்புகளாக மாறிய சில அனுபவங்களைப் பற்றி சொல்லவும். 

    அப்படி எதுவும் கிடையாது. எனக்குத் தெரிந்தவர்களை அறிமுகப் படுத்துவேன்.

    8. நீங்கள் எழுதிய நூல்கள்/கதைகள் வெளிவந்த பத்திரிகைகள் பற்றிய விவரம் கூறவும்.

    சிறுகதைத் தொகுப்பு. 

    1. நான் யார்?
      2. பொழுதுபோக்குக் கதைகள்.

    குறுநாவல் 

    நவீன சுயம்வரம்.

    9. உங்கள் படைப்புகளில் தங்களுக்கு மிகவும் பிடித்தது?

    எல்லாக் கதைகளும் எனக்குப் பிடிக்கும். இருந்தாலும் “நான் யார்?” என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடிக்கும்.

    10. தாங்கள் மறக்க முடியாத சம்பவம் ஏதாவது ஒன்றைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

    நெல்லை சந்திப்பு” என்ற சிறுகதை 2012ஆம் ஆண்டு கலைமகள் தீபாவளி மலரில் பிரசுரமானது. அக்கால எழுத்தாளரும் சிறந்த மொழிபெயர்ப்பாளருமான திரு. கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்களின் மூத்தமகன் திரு. பார்த்தசாரதி (இவரும் பெரிய எழுத்தாளர்) அவர்கள், இக்கதையைப் படித்துவிட்டு, தொலைபேசியில் என்னைக் கூப்பிட்டுப் பேசி, 5.1.2013இல் நடக்க இருக்கும் தங்கள் தகப்பானார் திரு. கா.ஸ்ரீ.ஸ்ரீயின் நூறாவது ஆண்டு நினைவு நாள் விழாவில், என்னைக் கெளரவப்படுத்த விரும்புவதாகச் சொன்னார்கள்.

    அதன்படியே அவர்கள் குடும்பத்தினர்கள் அனைவரும் சேர்ந்து ஏற்பாடு செய்து நடத்திய அந்த பிரம்மாண்டமான நூற்றாண்டு விழாவில், என்னை மேடைக்கு அழைத்து, என்னுடைய கதையைப் பற்றி சிலாக்கியமாகப் பேசி, பெரிய தொகை ஒன்றையும் சன்மானமாகக் கொடுத்து கெளரவப்படுத்தியதை உங்களிடம்  பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    எழுத்தாளர் திருமதி ஜெயா சீனிவாசனிடமிருந்து விடைபெறும்போது அவருடைய எளிமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

    அவர் மேலும் பல சிறுகதைகளையும் நாவல்களையும் படைத்துப் பார்புகழ் அடைய வாழ்த்துகள்.

     

     

    Share
  • தீபம்

    கார்த்திகைத் தீபம் வரபோகிறது. கவிஞர் கவிஞர் எஸ்.ஆர்.ஜி சுந்தரம் எம்.ஏ எட்டு சுடர் விடும் தீபங்களை ஏற்றியிருக்கிறார். படித்து ரசியுங்கள்.

    உமாஸ்ரீ

     

    அன்றைய பாரத விடுதலைக்கே

    அனைத்தியு மிழந்த அமரர்க்கு

    அஞ்சலியா யேற்றுவோம் ஒருதீபம் !

     

    பாரத எல்லைப் பாதகரைப்

    பதராய் விரட்டும் படைகட்குப்

    பணிவா யேற்றுவோம் ஒருதீபம் !

     

    பாரதம் போற்றிய பண்பாட்டில்

    பாதை யமைத்து வாழ்வோர்க்குப்

    பக்தியா யேற்றுவோம் ஒருதீபம் !

     

    இலஞ்ச பொன்னும் இழுக்கினுக்கே

    இலக்கா காநல் தூயோர்க்கு

    இனிதா யேற்றுவோம் ஒருதீபம் !

     

    முதியோர் பணியில் முகஞ்சுளியா

    முதிர்ந்த ஞான முற்றோர்க்கு

    முத்தா யேற்றுவோம் ஒருதீபம் !

     

    ஊன முற்ற உயிர்களெலாம்

    உயர்ந்து வாழ உழைப்போர்க்கு

    உவந்தே யேற்றுவோம் ஒருதீபம் !

     

    மானுட வாழ்வு மாண்புறவே

    முத்தமிழ் இலக்கியம் முனைவோர்க்கு

    மறவா தேற்றுவோம் ஒருதீபம் !

     

    தேச நலமே தம்பணியெனும்

    தேசப் பற்றுடைத் தூயோர்க்கு

    தினமு யேற்றுவோம் ஒருதீபம் !

    Share
  • எதற்காக எழுதுகிறேன்?

    உமாஸ்ரீ

    எழுத்தாளர் ரேவதி பாலுவிடம் நேர்காணல்

    எல்லோரும் சிறுகதை எழுதலாம். ஆனால் ஒரு நல்ல  சிறுகதை எழுதுவது சுலபமல்ல.  எப்படி ஒரு ஜாங்கிரியைச் சிலரால்தான் நன்றாக உருவாக்க முடியுமோ அதுபோல் சிலரால்தான் நல்ல சிறுகதையை எழுத முடியும்.

    revathy-balu-photo-3எழுத்தாளர் ரேவதி பாலு ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர். சிறந்த சிறுகதைகளை எழுதிக் கொண்டிருப்பவர். அவர் கதைகள் பல பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன. இனிமேலும் வந்து கொண்டிருக்கும்.

    திருமதி ரேவதி பாலு பிரபல எழுத்தாளர் ரசவாதியின் மகள்.    ரசவாதியின்  “ ”ஆதார ஸ்ருதி”  மிகவும் சுவாரஸ்யமான  நாவல். தந்தையைப் போலவே மகளும்  நல்ல எழுத்தாளர். கம்பன் வீட்டு அம்மி குழவியும் கவிபாடும் என்பதை நிரூபித்து விட்டார். சுருங்கச் சொல்லவேண்டுமானால்

    புல்லாங்குழல் இன்னிசைக்கு மயங்காதவர் யார்?
    மழலை மிழற்றலுக்கு மகிழ்ச்சியடையாதவர் யார்?
    பூசும் சந்தனம் நறுமத்திற்கு ஆனந்தமடையாதவர் யார்?
    ரேவதி பாலு படைப்புகளைப் படித்து களிப்படையாதவர் யார்?
    நான்குக்கும் வசப்படுவதைத் தடுப்பார் யார்? 

    revathy-baluநவம்பர் 2016 கலைமகள் இதழில் அவர் எழுதிய “சொல்லாமலே“ என்னும் சிறுகதை பிரசுரம் ஆகியிருக்கிறது. மனைவியை இழந்த மாமாவைப் பார்க்கப் போன வாணி, பக்கத்து போர்ஷனில் இருக்கும் பரிமளாவுக்கு அவரிடம்  இருக்கும் தோழைமையைக் கண்டு வியக்கிறாள். விடைபெறும்போது, ”நா ஒங்களை ’மாமீ’  என்று கூப்பிடவா?”என்று கேட்டு அவள் கரங்களைப் பற்றி அழுத்திவிட்டுப் பேருந்து நிலையத்தை நோக்கி மனநிறைவோடு நடக்க ஆரம்பித்தாள். திருமதி ரேவதி பாலு சொல்ல வந்ததைச் ’ சொல்லாமலே’ சொல்லுகிறார்.

    அவருடையை  நேர்காணலைப் பார்ப்போம்.

    1. தங்களைப் பற்றி சுருக்கமாகச் சொல்லவும்.

    நான் சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவள். வசிப்பது சென்னையில். ஒரு மகன், ஒரு மகள். கணவரும் சொந்தத் தொழில் புரிந்து ஓய்வுபெற்றவர்.

    1. தாங்கள் எப்பொழுதிலிருந்து எழுதுகிறீர்கள்? தாங்கள் எழுதுவதற்குப் பிரபல எழுத்தாளரான தங்கள் தந்தை கொடுத்த ஊக்கம்தான் ஒரு காரணமா?

    revathy41974இல் ”ஜூலி” என்கிற இந்திப் படத்துக்கு நான் எழுதிய விமர்சனம் திரு. சாவி அவர்கள் ஆசிரியராக இருந்த திணமணிக்கதிர் பத்திரிகையில் பிரசுரமாயிற்று. அப்போது எனக்கு  21 வயது. அதைப் பிரசுரித்ததோடில்லாமல் என்னைப் பாராட்டி “உங்களுக்கு மிகநன்றாக எழுத வருகிறது தொடர்ந்து எழுதுங்கள்!” என்று திரு. சாவி  அவர்கள் எனக்கு எழுதிய கடிதமே (இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன்), என்னை எழுத்தாளராக மாற்றியது என்று சொல்லலாம். ஆனால் உடனே தொடர்ந்து எழுத ஆரம்பிக்கவில்லை.

    1.  தாங்கள் முதலில் எழுதிய கதை எது?

    1983இல் என்று நினைக்கிறேன். “கொழுக்கவோ இளைக்கவோ!“ என்கிற என் முதல் சிறுகதை “மங்கையர் மலர்“ மாத இதழில் பிரசுரமாயிற்று.

    1. தாங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?

    என்னைப் பாதிக்கும் விஷயங்களை, என் உணர்வுகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள எழுதுகிறேன்.

    1. படைப்புகளாக மாறிய சில அனுபவங்களைப் பற்றி…

    எல்லாப் படைப்புகளிலும் நம் அனுபவங்கள் இருக்கும். முதலாவது நமது நேரடி அனுபவங்கள், இரண்டாவது நாம் கேள்விப்படுவது. இவைகளோடு சரியான விகிதத்தில் கற்பனையும் கலந்து ஒரு ஆரம்பம், ஒரு முடிவு என்று தீர்மானித்து எழுதும்போது அது ஒரு சிறுகதையாக மாறுகிறது.

    1. தங்களுடைய ஆதர்ச எழுத்தாளர் யார்? (தங்களுடைய தந்தையைத் தவிர)

    யாரைச் சொல்வது? யாரைச் சொல்லாமல் விடுவது? தந்தை எழுத்தாளராக இருந்ததால் சிறுவயதிலிருந்தே புத்தகங்களோடேயே வளர்ந்த அனுபவத்தில் நிறைய மூத்த எழுத்தாளர்கள், தி. ஜானகிராமன், லா.ச.ரா., ஜெயகாந்தன், படைப்புகளிலிருந்து, சம காலத்தவர்களான சுஜாதா, பாலகுமாரன், இந்துமதி, மாலன் என்று எல்லோருடைய படைப்புகளையும் ரசித்துப்படித்து உருவானவள்தான் நான்.

    1. தங்களுக்கு மிகவும் பிடித்த கதைப் புத்தகங்கள் நான்கை கூறவும்.
      1. சில நேரங்களில் சில மனிதர்கள் 2. தரையில் இறங்கும் விமானங்கள், 3. அலையோசை 4. பாற்கடல்.தாங்கள் எழுதிய நூல்கள்/கதைகள் வெளிவந்த பத்திரிகைகள் பற்றிக் கூறவும்.

    அநேகமாக எல்லா தமிழ் வார/ மாதப் பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளன. சமீபத்தில் அமுதசுரபி தீபாவளி மலர், லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர், ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலர், கலைமகள் தீபாவளி சிறப்பிதழ் போன்றவற்றில் வெளியாகியுள்ளன.

       8. தங்கள் படைப்புகளில் தங்களுக்கு மிகவும் பிடித்தது?     

       நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சில குறுநாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் (பொதிகை – சென்னைத் தொலைகாட்சியில் – என்னுடைய நாடகங்கள் ஒளிபரப்பாகியுள்ளன.) தொகுப்பு நூல்களாக வெளிவந்துள்ளன. எழுத்துலகத்திலும் எல்லாத் துறைகளிலும் தடம்பதித்துப் பல பரிசுகளைப் பெற்றபோதிலும் நான் மிகவும் விரும்பி எழுதுவது ‘சிறுகதைகள்’ தான். அந்த விதத்தில் எனக்கு  மிகவும் பிடித்த சிறுகதை ‘மெளனமாக ஒரு ராகம்.’

         9. எழுத விரும்புவோருக்குத் தாங்கள் கூற விரும்பும் அறிவுரை/யோசனை ஏதாவது…

    திரு. சுஜாதா அவர்கள் சொல்லுவார்கள்…

    நாம் பார்க்கும் எல்லாவற்றிற்குள்ளும் ஒரு கதை இருக்கிறது” என்று.

    திரு. லா.ச.ரா அவர்கள் சொல்லுவார்கள்…

    எழுதுபவர்களிடம் எப்போதும் ஒரு ‘தேடல்அடங்காத தாகமாக இருக்க வேண்டும் என்று.

    என் தந்தை கூறுவார்…

    “நிறைய வேறுபட்ட எழுத்துக்களை படிக்கவேண்டும் என்று.

    இவர்களையெல்லாம் படித்து வளர்ந்த நானும் இதையே கூற விரும்புகிறேன். இவற்றோடு தொடர்ந்த முயற்சியும் இருந்தால் நிச்சயமாக எல்லோராலும் எழுதமுடியும்.

    நேர்காணலில் அவர் கூறிய அறிவுரைகளைப் பின்பற்றினால் எழுத்தை ஆளுமை செய்து சீரிய கதைகளை ஒருவரால் எழுதமுடியும்.

    திருமதி ரேவதி பாலு சீரடி சாய்பாபாவிடம் அகண்ட பக்தி கொண்டவர். எல்லாம் வல்ல சீரடி சாய்பாபா அவருக்கு நீண்ட ஆயுளையும்,  நல்ல ஆரோக்கியத்தையும், வீட்டில் இல்லை என்ற குறை இல்லாமலேயும் இருக்க அருள்வாராக. திருமதி ரேவதி பாலு சாய்ராம் அருளால் ஓய்வுபெறாமல் மேலும் பல படைப்புகளைப் படைத்துப் புகழ்பெற வாழ்த்துக்கள்!!

     

    Share
  • எதற்காக  எழுதுகிறேன்?

    -உமாஸ்ரீ

    book‘ராகிலா’ பெயர் விசித்திரமாக இருக்கிறதில்லையா? ராகிலா என்ற பெயரை எப்படி வைத்தார்கள் என்று அவரே கீழே கூறுகிறார்.  ராகிலா  ஒரு  கவிதாயினி; மற்றும் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவர் எழுதிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைப் படித்தேன். (”விடியலை நோக்கி…,”  “தெய்வத் தாய்”   இரண்டும்  மிக அற்புதமாக உள்ளன. அவருடன் ஒரு நேர்காணல்.

    1. தங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்…

    rakilaஎன் பெயர் ராகிலா. அப்பா பெயர் ராக்கன் அம்மா பெயர் கமலா . அப்பா அம்மா பெயரில் உள்ள ராக்கன் , கமலா இணைந்து ராகிலா என்றானது.

    இராஜபாளயம் தாலுக்காவிலுள்ள சொக்கலிங்கபுரம் என்னும் கிராமத்தில் வசிக்கிறேன்.

    எம்.ஏ., பி.எட், எம்.எட். படித்திருக்கும் நான் 17 வருடங்கள் ஆங்கிலப் பள்ளி ஆசிரியை. கடந்த ஏழு வருடங்களாக ஆங்கிலப் பள்ளியின் முதல்வராகப் பணியாற்றி உள்ளேன். சமீபத்தில் என் தாயார் தவறி விட்டதால் பள்ளி முதல்வர் வேலையை விட்டுவிட்டேன்.

    10 வருடங்கள் காலையில் பள்ளிக்கூடம், மாலையில் இராஜபாளையத்தில் உள்ள தானியார்த் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பளராக பணியாற்றியுள்ளேன். பட்டிமன்றம், கவியரங்கத்தில் பங்குகொள்கிறேன். தாமரைக்குளம் கவியரங்கத்தில் ‘கவிதாயினி’ என்ற பட்டமும் பெற்றுள்ளேன்.

    2. ’கவிதாயினி’ ராகிலா தாங்கள் எழுதிய கவிதைகளில் ஒன்றைப் பாடுங்கள்.

    நான் எழுதிய ஒரு கவிதை:

    உன்னில் நான் !

    உன்னில் நான் –
    என்னில் நீ!
    ஓருடல் ருயிர்
    ஆனோம் அன்று!
    ஓருடல் ஈருயிர்
    ஆனோம் இன்று!
    ஆம் உன் இதயம்
    எனக்குப் பொருத்தப்பட்டு!
    நீயோ என் நினைவுகளில்…

    3. எப்பொழுதிலிருந்து எழுதுகிறீர்கள்?

    1995-லிருந்து கிட்டத்தட்ட 21 வருடங்களாக எழுதுகிறேன். என்னுடைய துணுக்குகளும், படைப்புகளும் 1995இலிருந்து வந்து கொண்டிருக்கின்றன.

    நான் எழுதிய நூல்களின் எண்ணிக்கை:

    சிறுகதைத் தொகுப்புகள்  – 2
    நாவல்கள் – 7

    கிட்டத்தட்ட 100 சிறுகதைகள் எழுதியுள்ளேன். (40 சிறுகதைகள் புத்தகமாகவும்) மீதிச் சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

    4. படைப்புகளாக மாறிய சில அனுபவங்கள்…

    பெரிய விசயங்களை, எளிய நடையில் எல்லாருக்கும் புரியும் வண்ணம் எழுதுவதுதான் சிறுகதை.

    சிறுகதையில் மக்களை சிந்திக்கத் தூண்டும் வகையில் அதன் கரு இருக்க வேண்டும்.

    ’விடியலை நோக்கி’ என்ற எனது சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் நான் எழுதியுள்ள “குட்டச்சி கிழவி“ என்ற சிறுகதை எனது பாட்டியைப் பற்றிய கதை. சிறுவயதிலிருந்து பாட்டியின் சேவைஉள்ளத்தை பார்த்துப்பார்த்து வளர்ந்த நான், அதை ஒரு சிறுகதையாக எழுதி இருக்கிறேன்.

    ’தெய்வத் தாய்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் “அது உண்மையா?” என்று எழுதியுள்ள கதை – என் தாய்மாமாவுக்கு ஏற்பட்ட அனுபவமே.

    ”கருவேலங்காடு“ என்ற எனது நாவல் எனது அம்மாவின் அப்பா அதாவது என் தாத்தாவுடன் பிறந்த ஐந்து அண்ணன், தம்பி மற்றும் ஒரு தங்கை அவர்களின் அனுபவமே!

    5. எதற்காக எழுதுகிறேன்?

    * எழுதுவதால் எனக்குச் சுற்றுப்புறத்தை ஆழ்ந்துநோக்கும் ஆர்வம் பிறந்துள்ளது.

    ** மனஅமைதி கிடைக்கிறது.

    *** அறிவு விசாலமடைகிறது.

    6. எப்பொழுது எழுதுவீர்கள்?

    எப்போது நேரம் கிடைத்தாலும் எழுத உட்கார்ந்து விடுவேன். பள்ளிசெல்லும் நேரங்களிலும், இரவிலும், விடுமுறை நாட்களிலும் எழுதுவேன்.

    7. தாங்கள் எழுதியவைகளில் தங்களுக்கு மிகவும் பிடித்த படைப்பு எது?

    என் குழந்தைகளில் எந்தக் குழந்தை எனக்குப் பிடிக்கும் என்பதுபோல் உள்ளது இந்தக் கேள்வி. என் படைப்பில் எல்லாமே எனக்குப் பிடிக்கும். அதில் மிகப்பிடித்தது என்று பார்த்தோமானால், ”தெய்வத்தாய் ” என்ற சிறுகதையும், ” கருவேலங்காடு ” என்ற நாவலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    8. தாங்கள் படித்த புத்தகங்களில் மிகவும் பிடித்த புத்தகங்கள் யாவை?

    கவிஞர் வைரமுத்துவின் ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ மற்றும் கல்கியின்     ’சிவகாமியின் சபதம்’ ஆகிய இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த நாவல்கள்.

    9. எழுத விரும்புகிறவர்களுக்குத் தாங்கள் கூறும் யோசனை ஏதாவது…?

    பிறக்கும்போதே யாரும் எழுத்தாளராகப் பிறக்கவில்லை.  முயற்சியும் முறையான பயிற்சியும் இருந்து, நிறைய வாசிக்கும் ஆவலும் இருந்தால் கண்டிப்பாக ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளராக ஆகலாம்.

    ”சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற பழமொழிக்கேற்ப, பழகப்பழக எழுத்து வசப்படும்.”

    10. தாங்கள் கூற விரும்புவது ஏதாவது…

    அம்மா என்னும் கவிதையைச் சொல்ல விரும்புகிறேன்.

    என்னும் உயிர் எழுத்தாகி…
    ம்என்னும்  மெய் எழுத்தாகி…
    மாஎன்னும் உயிர்மெயெழுத்தாகி…
     உயிரும், மெய்யும் தந்தவள் அம்மா!

     

     

    Share
  • எதற்காக எழுதுகிறேன்?

    -உமாஸ்ரீ

     

    writer-mr-sundaramதிரு. எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் குழந்தைகளுக்கு ஏராளமான புத்தகங்களையும் கலை நிகழ்ச்சிகளையும் படைத்திருக்கிறார். இன்னும் எழுதிக்கொண்டே இருக்கிறார். அவர் அலைபேசி எண்: 99529 13872. சென்னை மூவரசன் பேட்டையில் வசிக்கும் அவருடன் ஒரு நேர்காணல்.

    1. தங்களுக்குக் கதை எழுத வேண்டும் – குறிப்பாக சிறுவர்களுக்கு நூல்கள் எழுத வேண்டும் என்னும் ஆர்வம் எப்படி வந்தது?

    நான் 21.8.1940 அன்று பிறந்தேன். . சென்னைத் துறைமுகத்தில் 37 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றேன். மாணவர் பருவம்தொட்டே எனக்குப் பேச்சுக் குறைவு. சிந்தனை அதிகம். கூடவே தமிழ்ப்பற்றும் அதிகம். எனவே இதழ்களைப் படிக்கும் பழக்கம் உண்டு. பள்ளியில் ‘மாணவர் மன்ற‘ அமைப்பு நடத்திய பொது சிறப்புத்தமிழ்ப் போட்டிகளில் முதல் வகுப்புத் தேர்ச்சியும் பெற்றேன். இதனால் தமிழ்ப்பற்று மேலும் தொடர்ந்தது. ’ கல்கண்டு’ துப்பறியும் கதை இதழ்களை மிக்க ஆர்வமுடன் படித்து வந்தேன். துப்புறியும் நிபுணராகிக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்தது. என்வே துப்பறியும் கதைகளை எழுதும் ஆர்வமே முதலில்  துளிர் விட்டது. இதே உணர்வுடன் ’கண்ணன்’ இதழில் நான் எழுதிய கதை பிரசுரமானது.

    என் எழுத்தார்வம் பற்றிக் கஸ்தூரிபா சிறுவர் சங்கம் மூலம் அறிந்த அன்றைய வானொலி அண்ணா, என் வீட்டிற்குக் கடிதம் எழுதி, வானொலி நாடகங்களை எழுதத் தூண்டினார். அப்போது என் வயது இருபது. வாய்ப்பை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டு செயல்பட்டேன். தொடர்ந்து பல சிறுவர் நாடகங்கள் ஒலிபரப்பாகின. தானாக வந்த வாய்ப்பைத் தூணாகப் பயன்படுத்திக் கொண்டேன்..தொடர்ந்து சிறுவர் சங்கம் ஒன்று அமைக்கவும் தூண்டப்பட்டேன். அமைத்துப் பல பல்சுவை நிகழ்ச்சிகளையும் அளிக்கத் துவங்கினேன்.

    உரைச்சித்திர நாடகம், நகர்வலம், கால், அரை, ஒரு மணி நேர நாடகங்கள் எனப் பல பிரிவுகளிலும் என் படைப்புகள் இடம்பெறத் துவங்கின. தொலைக்காட்சியிலும் சிறியவர் பெரியவர்களுக்கான் நாடகங்கள் இடம் பெற்றன. பலப் பல இதழ்களிலும் என் படைப்புகள் இடம்பெறத் துவங்கின.

    book-photoஇவ்வாறு என் நாடகப் படைப்புகளுக்குக் கிடைக்கப்பெற்ற தொடர் அங்கீகாரமும், வளர்ச்சியும் கதைகள் எழுத்த தூண்டின. இதுவே என் சிறுகதைப் படைப்புகளுக்கும், நூல்களின் ஆக்கத்திற்கும் காரணமாகத் திகழ்ந்து, இன்றும் என் படைப்பிலக்கியப் பயணத்தை நிகழ்த்தி வருகின்றன.

    2. தங்கள் இலக்கியப் பணி எப்போது எப்படி வளர்ச்சி பாதையில் பயணிக்கத் தொடங்கியது?

    1957இல் துவங்கிய எழுத்தார்வத்துடன் இருந்த நான் 1958இல் சென்னைத் துறைமுகப் பணியில் சேர்ந்தேன். அங்கே இலக்கிய ஆர்வம் கொண்ட நண்பர்களின் அன்பையும், தொடர்பையும்பெற்று இலக்கிய உணர்வுடன் பழகி வந்தேன். சில ஆண்டுகளில் இலக்கிய மன்றம் ஒன்றும் துவங்கப்பட்டது. அதன்மூலம், பல தமிழறிஞர்களின் அறிமுகமும், அவர்களது சொற்பொழிவும் என் இலக்கிய ஆர்வத்தை ஆழப்படுத்தின. பல இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று, வெற்றியும் பெற்றேன். யாப்பிலக்கணமும் கற்றேன். துறைமுகத்தில் இயல் இசை நாடகமன்றம் நிறுவி, பல கலைநிகழ்ச்சிகளை அளித்தேன்.

    இன்றும் ‘அகில உலக எழுத்தாளர்கள் சங்கம், கவிதை உறவு, பாரதி கலைக்கழகம் தமிழ்ப் படைப்பாளர்கள் குரல், பாரதி வள்ளுவர் மிஷன், கம்பர் கழகம் இவற்றின் நிகழ்ச்சிகளில் அவ்வப்பொழுது கவிதைகள் படிக்கின்றேன். உரைகள் நிகழ்த்துகிறேன். மீண்டும் கவிக்கொண்டல் இதழில் பல ஆண்டுகளாக வெண்பாக்கள் எழுதி வருகிறேன்.

    இலக்கிய ஆர்வம் காரணமாக தமிழ் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளேன்.

    பல தனியார் அமைப்புகள் நடத்தும்  பலவிதப் போட்டிகளுக்கு நடுவராகவும், விழாவிற்கான சிறப்பு விருந்தினராகவும் அவ்வப்போது பங்கேற்று வருகிறேன்.

    3. தாங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?

    ஆம்! எழுதுகிறேன்… இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன்…ஊக்கம் குறையாமல்! அதுவும் 1957ஆம் ஆண்டு முதல்! எனது பதினேழு வயதிலிருந்து (தற்போது என் வயது எழுபத்தி ஏழு) இதற்கான உந்து சக்தி எது?

    பெறுகின்ற காசுக்காகவா? வருகின்ற புகழிற்காகவா? தருகின்ற விளம்பரத்திற்காகவா ? தன்னுணர்ச்சி வெளிப்பாட்டிற்கா ? எதற்கு? ஏன்? என்னை நானே இப்படி ஆய்வுகுட்படுத்திப் பார்ப்பதில் மகிழ்வெய்துகிறேன்.

    பள்ளியில் படிக்கும் காலத்தில் தமிழ்மீது தனிதாகம் ஏற்பட்டது. அதுவே இன்றும் தணியாத தாகமாகத் தொடர்ந்து வருகிறது.

    தமிழ்வாணன் படைத்த சங்கர்லால்போல் துப்பறியும் நிபுணராக வேண்டும் என்ற உள்ளத்துடிப்பு!. இத்துடிப்பும், சமுதாய நலக் கண்ணோட்டமும், தமிழார்வமும் இணைந்து படைப்பார்வத்தை என் உள்ளத்தில் விதைத்தன. இவ்விதையின் வெளிப்பாட்டில் துளிர்விட்டன இரு துப்பறியும் கதைகள். ஒன்று சிறுவர் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டு வெற்றியும் பெற்ற சிறுகதை; மற்றொன்று உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் வாசவன் அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்திவந்த ’துப்பறியும் கதை’ எனும் மாத இதழில் வெளிவந்த ‘காட்டிக் கொடுத்த கடிதங்கள்’ எனும் சிறுகதை. இவை முறையே 1. 01. 1957லும் டிசம்பர் 1957லும் – எனது பதினேழு வயதில் வெற்றிபெற்ற படைப்புகள். தொடர்ந்து ஜனவரி, 1958 ’துப்பறியும் கதை’  இதழிலும் ஒரு தொடர்கதையை முடித்தெழுதும் போட்டியில் எனது கதை முடிவு வெற்றிபெற்றது. இவையே என்னிடம் சிறுவர்களுக்கும்,  பெரியவர்களுக்குமான  இலக்கியங்களைப் படைக்குமாற்றல் இருந்ததை வெளிப்படுத்தி, எழுத்துலகில் என்னைத் தன்னம்பிகையுடன் தடம்பதிக்கச் செய்தது.

    எனது சிறுவர் சிறுகதை ஒன்றைப் படித்த அப்போதைய வானொலி அண்ணா ரா. அய்யாசாமி அவர்களிடமிருந்து ஒரு நாள் அலுவலகக் கடிதமாக எனக்கு ஓர் அழைப்பு வந்தது; சந்தித்தேன். சிறுவர்களுக்கான நல்ல வானொலி நாடகங்களைப் படைத்துத் தரும்படி கூறி அதற்கான வழிகாட்டுதல் உத்திகளையும் கூறி, என்னைச் சிறுவர் இலக்கியத் திசையில் ஆழமாக வேரூன்ற வைத்தார். இது நடந்தது 1960-இல்! நல்ல வாய்ப்பு!

    சிறுவர், சிறுமியர் உலகம் சீர்பட்ட திசையில் நடந்தால் எதிர்காலச் சமுதாயம் சிறந்துவிடும் என்ற சிந்தனை உந்த, இளம் மாணவமணிகளுக்குப் பழக வேண்டியவற்றை எடுத்துக் காட்டியும் பல வானொலி  நாடகங்களை வழங்கினேன். பாற்கடல் சிறுவர் சங்கம் என்ற ஒன்றையும் நிறுவி, நல்ல பல கருத்துகள் கொண்ட நகைச்சுவையுடன் கூடிய நாடகங்களை,  பாடல்களை, உரைச்சித்திரங்களைச் சங்கச் சிறுவர் சிறுமியர் மூலம் வானொலி, தொலைக்காட்சிகளில் அளித்தேன்.

    இத்தைகைய ஆரோக்கியமான பின்னணியில் என் இலக்கியதாகத்தை வளர்த்துக் கொண்டதால் கட்டுரை, கவிதை, நாடகம், வெண்பா, சிறுகதை, மேடை நாடகம் – முதலிய பன் முகப்படைப்புகளில் இன்றளவும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.

    எனவே “குழந்தைகள் சிறந்தால் குவலயம் சிறக்கும்”, “ இலக்கியத்தால் வாழ்க்கைக்கு ஒளிகூட்ட இயலும்” எனும் எனது உறுதியான கொள்கையாலும் மேனாட்டறிஞர் உட்சன்  சுட்டிக்காட்டியுள்ளபடி

    அ) தன் அனுபவத்தைத் தானே வெளியிட வேண்டுமென்ற மனிதனின் விருப்பம்.

    ஆ) ஏனைய மக்களிடத்தும் அவர்தம் செயல்களிடத்தும் மனிதன் கொண்டிருக்கும் ஈடுபாடு.

    இ) மனிதன் தான்வாழும் உண்மையுலகிலும், கற்பனை உலகிலும் அவன் கொண்டிருக்கும் ஈடுபாடு.

    உ) தன் அனுபவத்திற்குக் கலைவடிவம் கொடுக்கவேண்டும் என்ற மனிதனின் ஆர்வம்.

    முதலிய படைப்பதற்குரிய காரணிகளாலும் நான் எழுதுகிறேன். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதுவேன்.

    4. தாங்கள் எப்பொழுது எழுதுவீர்கள்?

    படைப்பிற்குத் தேவை, மனோநிலை. இவற்றிற்கேற்ப நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுவேன். ஒரு நாளைக்குச் சுமார் ஆறு மணி நேரம் எழுதுவேன்.

    5. படைப்புகளாக மாறிய சில அனுபவங்கள்

    (அ) சென்னை லிங்குச்செட்டித் தெரு நடுவில் ஒரு பெரிய பாறாங்கல். அவ்வழியே இருமுறை சைக்கிளில் செல்ல நேரிட்டது . நானும் மற்றவர்களைப் போல் ஒதுங்கி சென்று விடுகிறேன். மீண்டும் மாலை வீடு திரும்பும்போது அக்கல்லை நகர்த்தி அப்புறப்படுத்த வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட, மிகச் சிரமப்பட்டு அக்கல்லை அப்புறப்படுத்தி விடுகிறேன். மனதில் மகிழ்ச்சி! உள்ளத்தில் பதிந்த அந்த அனுபவம் ஒரு சிறுவர் நாடகமாக உருவாகிவிட ’வழிகாட்டி’ எனும் அந்தச் சிறுவர் நாடகம் வானொலியிலும் ஒலிபரப்பாகியது.

    (ஆ) நடைபாதை புத்தகக் கடை . ஒரு நல்ல புத்தகத்தைப் புரட்ட, எட்டாம் வகுப்புச் சிறுவனுக்கு  பரிசாக கிடைத்த லேபிள் அதன் மீது ஒட்டப்பட்டுள்ளதைக் கவனித்தேன். பரிசுப்பொருள் கடைவீதிக்கு வந்ததைக் கண்ட நான் அதை வாங்கிவந்து விடுகிறேன். சிறுவர்கள் தங்கள் பரிசுப் பொருள்களை இப்படி அலட்சியப்படுத்தக் கூடாது என்ற செய்தியைச் சொல்ல, ’பரிசின் பெருமை’ என்ற நாடகம் பிறக்க, அது வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது.

    (இ) பல வருடங்கள் முன் வீதியிலே சில சிறு சீட்டுக் கம்பெனிகள் தோன்றின. சிறுவர்களே அவர்களது இலக்கு. பல சிறுவர்களும் பெரியவர்களும் இது போன்ற சீட்டுக்கடையில் பணம்கட்டி ஏமாந்த செய்தி செய்தித்தாள்களில் வருகிறது. இதன் எதிரொலியாக எழுதப்பட்டு, ஒலிபரப்பாகிய வானொலி நாடகமே ’விழித்திரு!’

    (ஈ).சிறுவர்கள் பிறரைப் பார்த்து எழுதும் தவறான பழக்கம் அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. இப்படிக் ’காப்பி’ அடித்தே பாஸ் செய்யும் மாணவர்கள் சோதனையான சூழ்நிலைகளில் என்ன செய்வார்கள், என்று எண்ணிய போதுதான் ’செல்லாத ரூபாய்’ என்ற நகைச்சுவை நாடகம் பிறந்தது. மேடையில் பல முறை நடிக்கப்பட்டுப் பாராட்டப்பட்ட நாடகம்.

    (உ).சமீபத்தில் எனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள சிறு பூச்செடிக்குள் ஒரு தேன்கூடு. தண்ணீர் விட்டால் தேனீக்கள் கிளம்பும், தண்ணீர் விடாமலும் இருக்க முடியாது . இதைக் கருவாகக் கொண்டு ’பூச்செடித் தேனடை’ என்ற நாடகத்தை எழுதினேன். ’சிறுவர் மணி 14.5.2016’ இதழில் பிரசுரம் ஆகியுள்ளது.

    (ஊ). வீட்டில் ஒரு விருட்சி மரம், வெள்ளை கொத்துப் பூக்களுடன் காட்சியளிக்கும். ஓர் அமாவாசை இருட்டில் இப்பூக்கள்  மரம் தெரியாமல் மறைத்திருந்தன. இப்பூக்களின் காட்சியைக் கவிதையாக்கினேன். கவிதை உறவில் பிரசுரிக்கப்பட்டது.        ( அக்டோபர் 2008 – காரிருள் நேரத்தில்)

    எ. “எது சுதந்திரம் ? “ – இது பற்றிய குழந்தைக் கவிஞரின் பாட்டு ஒன்றைப் படித்தேன். அதை விளக்கும் வகையில் சிறுவர்கான நாடகமாக்கினேன். 13.8.2016 சிறுவர் மணியில் வெளிவந்துள்ளது. வாழ்த்துஎன்ற நாடகமும் 22.10.16 சிறுவர் மணியில் வெளிவந்துள்ளது.

    6.  படைப்புகளின் விவரங்கள்:

    சிறியவர்களுக்கானவை:

    உரைச்சித்திரங்கள்     :  13

    குறு நாடகங்கள்       :  92

    சிறுகதைகள்          :  68

    கவிதைகள்/ பாடல்கள் : 77

    கட்டுரைகள்           :  77

    நடத்திய நிகழ்ச்சிகள்  : 72

    சிறுவர் சங்க வகுப்புகள்     : 500 –க்கும் மேல்

    நூல்கள்                 : 13

    பெரியவர்களுக்கான படைப்புகள் பற்றிய விவரங்கள் :

    வானொலியில்

    35 நாடகங்கள் 50 நகர்வலச் செய்திகள்.

    3 சிறுகதைகள், 3 பாடல்கள், 2 கவிதைகள்.

    தொலைக்காட்சியில்

    2 நாடகங்கள், 3 கவியரங்கள்.

    இதழ்களில்

    82 வெண்பாக்கள், 195 கவிதைகள், 27 கட்டுரைகள், 8 சிறுகதைகள்,            33 ஹைகூக்கள், ஓர் ஆங்கிலச் சிறுகதை.

    கவியரங்களில்

    48 நெடுங்கவிதைகள்

    நடத்திய கலை நிகழ்ச்சிகள் 85

    நூல்கள்

    1. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 2. நவபாரதச் சிற்பி ஜவஹர்லால் நேரு ஆகியோர் பற்றிய இரு வரலாற்று நூல்களின் தயாரிப்பில் ஆசிரியர் குழுவில் பங்கேற்று அவர்களைப் பற்றிய எழுத்தோவியங்களைத் தீட்டியுள்ளேன்.
    2. நக்கீர பூமி 4. தாய் தந்த தீபம் 5. திருவடிமாலை ( 108 வைணவத்தல வெண்பாக்கள்) 6. குணப்படுத்தலாம் ( மொழிமாற்று நூல்)

    ஆராய்ச்சி நூல்

    சமயம் சார்ந்த தமிழ் நூல்களும் தமிழ்நாட்டுக் கோவில்களும்.

    7. எழுத்தாளனாக வாசிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

    வெவ்வேறு வகையான படைப்புகளுக்குண்டான தனிப்பட்ட நடைகளை உணர்ந்து கொள்ளமுடியும் . வாசிப்பினால் விளைந்த மொழியறிவு, நடை, சிந்தனை ஓட்டம், கருக்கள் – பற்றிய உள்வாங்கலினால், ஓர் எழுத்தாளன் ஆளுகின்ற மொழி, நடை முதலியவற்றிலும் ஆக்கபூர்வமாகப் பிரதிபலிக்கும் வண்ணம் அமையக்கூடும். ஆனால் அவற்றை அப்படியே கையாளுவதிலிருந்து படைப்பாளன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். .

    8. நீங்கள் எழுதியதில் மிகவும் பிடித்தப் புத்தகம் எது?

    எல்லா நூல்களையுமே எனக்கு நன்கு பிடித்த பின்புதான், பிறர் படிக்க எழுதுகிறேன். எனினும், ”புத்தகப் பூமாலை” எனும் நூல் இன்றைய  சிறுவர்களுக்கான விழிப்புணர்ச்சிச் சிறுகதைகள் என்பதால் கொஞ்சம் அதிகமாகப் பிடிக்கும்.

    9. உங்களுக்குக் கிடைத்த விருதுகள்

    குழந்தை இலக்கியத்தில் வள்ளியப்பர் இலக்கிய விருது, வானொலிப் பேரவையின் குழந்தை இலக்கிய ரத்னா விருது, என்சிஇஆர்டியின் விருது எனப் பலவும், பெரியவர் இலக்கியத்தில் பாரதி பணிச் செல்வர் விருது, தமிழ் இலக்கிய மாமணி விருது எனப் பலவுமாக இருபது விருதுகளுக்குமேல் பெற்றுள்ளேன். ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவையால் அண்மையில் (23.10.2016 அன்று) ’சாதனைச் செம்மல்’ என்னும் விருதும் பெற்றுள்ளேன்.

    10. சிறுவர்களுக்குக் கதை எழுத நினைப்பவர்களுக்கு நீங்கள் தரும் அறிவுரை?

     ”முதலில் இன்றைய சிறுவர்களே நாளைய  இந்தியா” என்ற எண்ணத்தை மனதில் ஆழப்பதியுங்கள்! சரியான திசையில் வழிகாட்டப்பட்டால், அவர்கள் வாழ்வில் சாதனைபடைத்து, நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்ல மூலதனமாவார்கள் என நம்புங்கள்! இத்தகைய உண்ர்வோடு அவர்களைப் பாருங்கள், அணுகுங்கள்; பழகுங்கள்!  அப்போது அவர்களின் மனநிலை இயக்கத்தைப் புரிந்து கொள்வீர்கள். அதற்கேற்ப அவர்களை உற்சாகப் படுத்தவோ, வேறு ஆக்கத் திசைகளில் வழிநடத்தவோ தகுந்த கருக்களைத் தோற்றுவித்துக் கொள்ளுங்கள். இக்கருக்களை எளிய தமிழில், தாயன்போடு படையுங்கள்! பலன் உண்டு.

     

     

    Share
  • நான் ரசித்த புத்தகம்

    -உமாஸ்ரீ

    மோகனா ஓ மோகனா” – என்னும் கவிதைத் தொகுப்பைப் படித்த கண்ணும் மனசும் களிக்கின்றன.

    mohana-oneதிரு. கே. சிவா ரெட்டியின் தேர்ந்தெடுத்த 35 தெலுங்குக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புதான் “மோகனா ஓ மோகனா”. தமிழில் மொழி பெயர்த்தவர் ஹைதராபாத்தில் வசிக்கும் பிரபல எழுத்தாளர் திருமதி சாந்தா தத். 112 பக்கங்கள் கொண்ட இந்தக் கவிதை தொகுப்பு ஒரு சாகித்திய அகாதமி வெளியிடு.

    பிரஞ்சு இலக்கியத்தின் தலைசிறந்த கவிஞரான விக்தர் ஹீயூகோ எழுதிய நூலை “ஏழை படும்பாடு“ என்ற பெயரில் மொழி பெயர்த்தவர்  யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதி. தமிழாக்கம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு யோகி  சுத்தானந்த பாரதியின் மொழிபெயர்ப்பு பலருக்கு வழிகாட்டி.

    அதுபோல் திருமதி சாந்தா தத்…. அருமையான மொழிபெயர்ப்பு. ஒரு சில கவிதைகளைப் பார்ப்போம். அவற்றில் தேர்ந்தெடுத்த வரிகள் உங்கள் பார்வைக்கு.

    சாமி நீதி – முதல் கவிதை

    செல்வம் அளிக்கட்டும்
    ஆனந்தம் அளிக்கட்டும்

    அலை –  நீண்ட  கவிதை – 7 பக்கங்கள்

    வுகள் நனவாகும்
    வுகள் நனவாகும்

    தரையில் பாதம் ஊன்று

    பொங்கி வரும் ஆவேச முத்திரத்தைப்
    பார்வைகளில் நிரப்புகிறாய். 

    மோகனா ஓ மோகனா – கவிதைப் புத்தகத்தின் தலைப்பு

    என்னுள் எந்நேரமும் அசைந்தபடி நீ
    ஹோட்டல் அறையில் பரம்புரம்
    ஆசை மடியாது, வெப்பம் தணியாது

    வேட்கை

    என் மரணத்தைவிட என் வாழ்க்கை
    பெருமிதமாவதே என் விருப்பம்

    மற்றொரு காலைப் பொழுது

    எவராயினும் சரி கைநிறைய நீரெடுத்து
    வாழ்க்கைக்கு அர்ப்பணித்து
    வாழப் புறப்பட்டாக வேண்டும்.

    குளிர்கால வெயில்

    நான் வலைபின்னி விதைகள் விதைத்துச்
    ற்றுத் தொலைவாய் அமர்ந்திருக்கிறேன்

    வாகன நெரிசல்

    இவ்வாகன நெரிசல் இரக்கமற்றது
    இதயமற்றது

    mohana-2திரு கே. சிவா கவிதைகளைச் செப்பிய விதம் மாறுபட்டது; வேறுபட்டது. மிக யதார்த்தமாய்…

    திருமதி சாந்தா தத்தின் மொழிபெயர்ப்பு அபாரம்.

    பரம்புரம் என்னும் கடுமையான வார்த்தையைப்  பயன்படுத்தியிருக்கிறார்.  வீரமாமுனிவர் காலத்தில் உபயோகப்படுத்திய வார்த்தை என நினைக்கிறேன்.

    அதுபோல் ’வெய்யில்’ என்னும் வார்த்தையும் ’குளிர்கால வெய்யில்’ என்னும் கவிதையில் சர்வ சாதரணமாய் உபயோகப்படுத்தியிருக்கிறார். எழுதும்போது பலர் வெயில் என்னும் வார்த்தையைப் பயன்படுத்துவர். உதாரணத்துக்கு ஒரு குறள்.

    என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்.

    திருமதி சாந்தா தத் மொழிபெயர்ப்புக்கு முன்னோடியாய்க் கொள்ளலாம்.  சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். எல்லாக் கவிதைகளும் நெஞ்சைத் தொடுகின்றன. மனம் சலனமடைந்திருக்கும்போது இந்த கவிதைகளைப் படிக்கலாம்.

    திருமதி சாந்தா தத்திற்கு மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதமி விருதை விட  மிகப்பெரிய விருது வழங்கப் பட வேண்டும்.என்பது என் அவா.

    கடைசியாக ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.

    கவிதைகளைப் படித்துக் கண்ணும் மனமும் களிக்கின்றன.

                          

     

    Share
  • “கரையைத் தேடும் அலைகள்” – நூல் மதிப்புரை

    உமாஸ்ரீ 

    நான் ரசித்த புத்தகம் – லக்ஷ்மி ரமணனின் “கரையைத் தேடும் அலைகள்”

    சிறுகதை எழுதுவது ஒரு கலை. சிறப்பாகச் சிறுகதை எழுதுவது ஒரு தனித்திறமை. எழுத்தாளர் லக்ஷ்மி ரமணனிடம் அது மிகுதியாக இருக்கிறது. லக்ஷ்மி ரமணன் ஒரு அருமையான எழுத்தாளர். குடத்திலிருக்கும் விளக்குப் போல் அடக்கம் மிகுந்தவர். வாசகர்களின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர்.

    book-reviewஅவர் எழுதிய ”கரையைத் தேடும் அலைகள்” என்னும் புத்தகத்தைப் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஒரு நாவலும், ஒரு குறு நாவலும், ஒன்பது சிறுகதைகளும் ஆக மொத்தம் 11 கதைகளைக் கொண்ட ஒரு அருமையான தொகுப்பு. மொத்தம் 224 பக்கங்கள்.  கண்ணில் பட்டால் விட்டுவிடாதீர்கள்.

    கரையைத் தேடும் அலைகள்” அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவாகப் பரிசு பெற்ற நாவல். 15 அத்தியாயங்கள். 105 பக்கங்கள். பிருந்தா, சபேசன் தம்பதிகள் அமெரிக்காவில் டெட்ராயிட் விமான நிலையத்தில் இறங்குகிறார்கள். அமெரிக்காவில் நிகழ்ந்த சம்பவங்கள். மகிழ்ச்சி பொங்க மனநிறைவைத் தந்த சம்பவங்களுடன் அவர்களது அமெரிக்க விஜயம் நிறைவு பெற்றது! என்று  நாவலை முடிக்கிறார் ஆசிரியர்.

    நேற்று இல்லாத மாற்றம்”  சிறுகதையும் அமெரிக்காவில் உள்ள இந்தியக் குடும்பத்தில் ஏற்பட்ட விரிசலைப் பற்றியும் அது எப்படிச் சாதுர்யமாகத் தீர்க்கப்படுகிறது என்பதையும் அழகாக விவரிக்கிறது.

    அமுதசுரபி சிறுகதைப் போட்டியில் பரிசு வாங்கியbook-review-1 கதைகள் “ பத்து பவுன் சங்கலி”  மற்றும் ”அத்தையின் கட்டில். ” லோகநாயகி அத்தை அபூர்வ பிறவி. பத்து வருடமாய்த் தனக்கு அடைக்கலம் தந்த கட்டில், இங்கேயே என் உயிர் பிரியட்டும்னு சந்தோஷமாச் சொன்னா. முடிவு வந்துடுத்தேன்னு கலங்கவே இல்லை. போர் பூமியில் நிற்கிற வீரன் மாதிரி… “

    அவர் பிரிவு கேட்டு அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். கட்டில் மள மளவென்று முறிஞ்சி பீஸ் பீஸாய் விழுந்துடுத்தாம்.

    என் கண்களில் பொங்கிய நீரை அடக்கிக் கொண்டேன். அத்தைக்கு அழுதால் பிடிக்காது“ என்று கதையை முடித்திருப்பார் ஆசிரியர். ஆனால் கதையைப் வாசிக்கும் வாசகரின்  கண்ணில்வரும் நீரை அடக்க முடியாது என்பது உறுதி.

    கலைமகள் அமரர் சூடாமணி நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதைதான் “சொல்லாமலே” .

    இலக்கிய பீடம் இதழில் வெளியான துணை, தேவி வார இதழில் வெளி வந்த  ஒரு கைத்தடியின் பயணம் மற்றும் பந்தம் ஆகிய இரண்டு சிறுகதைகளும் குறுநாவலான லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த காற்று நகரில் ஒரு காதல் கதை என எல்லாமே அருமையான கதைகள்.

    இப்போது தில்லி தூரமில்லை  – இலக்கியப் பீடம் பரிசுபெற்ற கதை –சிவாவின் காதல் நிறைவேறாமல் போய்விடுகிறது. அதற்கு விதிதான் காரணம் என்பது கதையின் கரு.

    ஒரு கதை  – சுதேசமித்திரனில் வெளிவந்த கதை. இது என்னைப் பற்றிய கதையல்ல என்று ஆரம்பிக்கும் ஆசிரியரின் கதை சொல்லும் உத்தி மனதைக் கவருகிறது.

    நல்ல கதை, ஆற்றோட்டமான நடை, ஒரு முறை படித்தால் மறுபடியும் படிக்கத் தூண்டுமளவுக்கு மிகவும் சுவாரஸ்யமான எழுத்து. சிறுகதை எழுத ஆவலாயிருப்பவர்கள் அவர் கதைகளை முன்னோடியாய்க் கொள்ளலாம்.

    எழுத்தாளர் லக்ஷ்மி ரமணன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்!

     

    Share
  • புற்று நோயை ஜெயித்த பெண்மணி

    ஸ்ரீதரன்

    asகாப்பாற்ற முடியாத நோய் புற்று நோய்.. திருமதி வேதவல்லி பார்த்தசாரதி புற்று நோயிலிருந்து ( 3வது ஸ்டேஜ்)  மீண்டு வந்து 15 ஆண்டுகள் ஆகி விட்ட்து.. 32 கீமோதெரபி செய்து தலை மயிர் எல்லாம் போய் மொட்டை அடித்தது போன்ற தலையுடன் இருந்தவர் அவருடைய  பாஸிடிவ் அப்ரோச் மூலம் .  புற்று நோய் பாதிக்கப்  பட்டவர்களுக்கு யோகா மூலம் மனவலிமை கிடைக்க உதவி செய்கிறார்.. புற்று நோயின் பயத்தைப் போக்கவும். நோயை  நீக்கவும் உதவி செய்கிறார்.  அவரிடம் சில கேள்விகள். அதற்கு அவர் கொடுத்த பதில்கள் ;

    1. புற்று நோய் பயமுறுத்தும் நோய் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

    ஆரம்பத்தில் எனக்குப் புற்று நோய் வந்த போது அப்படி நினைத்தேன். இப்போது  இல்லை.

    1. புற்று நோய் வந்து விட்ட்து என்று அறிந்ததும் உங்கள் மனநிலை எப்படி இருந்தது.?

    அதிக  அச்சமாய்  இருந்தது. எனக்குப் போய் புற்று நோய் வந்து விட்டதே என்று கவலைப்பட்டேன்.  அப்போது என்னுடைய குழந்தைகள் முதல் வகுப்பு, மூன்றாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களையெல்லாம் விட்டு விட்டு போக வேண்டுமோ என்று மிகவும் பயமாய் இருந்தது.

    1. அப்போது ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து எப்படி வெளியே வ்ந்தீர்கள் ?

    டாக்டர் மற்றும்  யோகா கொடுத்த தைர்யம், மனபலம் . யோகாவின் மூலம் என்னை நானே செதுக்கிக்கொண்டேன். நீ நல்லாயிடுவே, நீ நல்லாயிடுவே என்று பல முறை என் மனதில் சொல்லிக் கொண்டேன். சுய நம்பிக்கை மூலம் மன அழுத்தத்திலிருந்து வெளியே வந்தேன். யோகா குரு சிவரிஷிக்கு என் நன்றியைச் சொல்ல வேண்டும்.

    4.யோகாவால் புற்றுநோய்  குணப்படுத்தமுடியும் என்று எப்படி தெரிந்தது ?

    யோகா புற்று நோய் குணம் ஆக சப்போர்ட் செய்யும். என்னுடைய ரேடியேஷன் டாக்டர் சுமன்தா பிரேம்குமார் கொடுத்த அறிவுரைப்படி யோகாவைப் பயிற்சி செய்தேன்.

    புற்று நோயைக் குணப்படுத்தத் தேவையானவை

    1. மருந்து
    2. பாசிடிவ் எண்ணம். உடைந்து போக மாட்டோம் என்னும் நம்பிக்கை . இதை யோகா மூலம் பெறமுடியும்..
    3. மற்றவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி தோன்றியது?

    நான் பட்ட வேதனையை மற்றவர்கள் படக்கூடாது என்று நினைத்ததால்  என்னால் முடிந்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். அப்போது ஃபோர்டு   கம்பெனியில் ஏரியா சேல்ஸ் மேனேஜராக இருந்தேன். சேவை செயவதற்காக வேலையை விட்டு விட்டு “வீ கேன் கேர்“ என்னும் அமைப்பை ஆரம்பித்தேன். ஹெல்ப் லைன் நெம்பர் – 9841053435 .

    1. வீ கேன் கேர் அமைப்பின் நோக்கத்தைக் கூறவும்
    2. போன் சப்போர்ட்
    3. மாரல் சப்போர்ட்
    4. யோகிக் சப்போர்ட்
    5. வீ கேன் கேர் இதுவரை செய்த தொண்டைப் பற்றி கூறவும்?

    வீ கேன் கேர் இதுவரை எண்ணற்ற புற்று நோயாளிகளுக்கு கவுன்சலிங், கொடுத்திருக்கிறது. மாரல் சப்போர்ட் கொடுத்திருக்கிறது. புற்று நோயிலிருந்து குணம் அடைந்தவர்களும் இந்த அமைப்பில் வாலண்டியராக சேவை செய்கிறார்கள்.

    1. புற்று நோய் வந்தவர்களுக்கு எவ்வாறு ஆறுதல் சொல்ல வேண்டும்.?
    2. பேசணும்
    3. பேச வைக்கணும்
    4. மனதில் ஏற்பட்ட அழுத்தத்தைக் குறைக்க உதவி செய்ய வேண்டும்.

    1. புற்று நோய் வந்தவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?
    2. தைர்யமாய் இருக்க வேண்டும்,.
    3. துவண்டு போய் விடக் கூடாது.
    4. மன அழுத்தத்திலிருந்து வெளி வர முயல வேண்டும்.

    1. புற்று நோய் வருவதை தடுக்க என்னவிதமான தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.?
    2. நல்ல மனநிலையை மெயிண்டெயின் செய்ய வேண்டும்
    3. மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    4. புற்று நோய் வந்தவர்களுக்கு நீங்கள ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

    அவர்கள் தைர்யமாக இருக்க வேண்டும் . ஒரு கூண்டுக்குள் அடைப்பட்டுக்கிடக்காமல் மேலேறி  வர முடியும்  என்னும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

    பி.கு. உதவி வேண்டியவர்கள் 996 251 7790 என்ற  மொபல் நெம்பருக்கு தொடர்பு கொள்ளவும் .

                                &&&&&&&&&&

    Share
  • படித்தேன், ரசித்தேன் …

    உமாஸ்ரீ.

    shreeja-1சமீபத்தில் எழுத்தாளர் திருமதி. ஸ்ரீஜா வெங்கடேஷ் எழுதி வெளிவந்த ”பாண்டியன் நெடுங்காவியம்“ என்ற சரித்திர நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படித்தவுடன் உண்டான மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கேன்மின் ! கேன்மின் !

    ஸ்ரீஜா வல்லமையில் எழுதிக் கொண்டிருப்பவர்; வல்லமைக்குப் பரிச்சியமான எழுத்தாளர் மட்டுமல்ல ; மிகச் சிறந்த எழுத்தாளரும் கூட . இந்த நாவலின் மூலம் தமிழில் வரலாற்றுப் புதினம் எழுதிய ”முதல் பெண் எழுத்தாளர் ” என்ற சிறப்பையும் பெறுகிறார் ஸ்ரீஜா வெங்கடேஷ். அவர் சாதனைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    ”பாண்டியன் நெடுங்காவியம்“ பாண்டிய மன்னரைப் பற்றியது. ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை.

    புதினம் மூன்று பாகங்களைக் கொண்டது. முதல் பாகம் 240 பக்கங்கள், இரண்டாவது பாகம் 200 பக்கங்கள், மூன்றாவது பாகம் 224 பக்கங்கள் ஆக மொத்தம் 664 பக்கங்களைக் கொண்ட சுவையான புத்தகங்களை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

    வரலாற்று நாவல் எழுதுவது சுலபமல்ல. முதற்கண் மொழி திறம்பட அமைய வேண்டும். ஆராய்ச்சி செய்ய வேண்டும். சம்பவம் நடந்த இடங்களைப் போய் பார்க்க வேண்டும். கல்கி வரலாற்று நாவல் எழுத்தாளர்களுக்கு ஆசான். அவர் எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கு இதுவரை ஈடு இணையில்லை. நா பார்த்தசாரதி, அகிலன், சாண்டில்யன், விக்ரமன் , கௌதம நீலாம்பரன் போன்ற எழுத்தாளர்களின் வரலாற்று நாவல்கள் மிகப் பிரசித்தம். நா. பார்த்தசாரதி “ கபாடபுரம் என்ற நாவலில் பாண்டியர்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.

    shreeja

    கதை முகம்:
    கதை கூடல் மாநகர் படலத்தில் ஆரம்பிக்கிறது. புலவர் கனியன் பூங்குன்றனார் ” யாதும் ஊரே யாவரும் கேளிர் —- என்று தொடங்கும் பாடலை அரங்கேற்றம் செய்கிறார். ஆசிரியரின் கற்பனை வளம் நம்மைத் திகைக்க வைக்கிறது.

    இளவரசன் இளஞ்செழியன் மாங்குடியில் மருதனார் என்னும் புலவரின் கல்விச்சாலையில் பயின்று வருகிறான். புலவரின் மகள் செண்பகக் குழலியும் இளவரசரோடு பயின்று வருகிறாள். அவளுடைய தோழி கயற்கண்ணி. பாண்டிய மன்னனைக் கொல்ல வேண்டும் என்று செயல்படுபவன் குவளை மாறன். அவன் ஒற்றர் தலைவன் என்று தன்னைச் சொல்லிக் கொள்வான். அவனை ஆசான் என்று கயற்கண்ணி அழைப்பாள். சோழ, சேர பாண்டியர்களுடன் சேர்த்து ஏழு அரசர்களைக் குவளை மாறன் ஒன்று சேர்த்து பாண்டிய நாட்டின் மேல் படையெடுக்க முயற்சி செய்கிறான். கண்ணகி, கோவலன் கதை வருகிறது. கண்ணகி மதுரையை எரிக்கிறாள். பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனும் அவனது அரசியும் உயிர் துறக்கிறார்கள்.

    இளவரசன் இளஞ்செழியன் அரசனாகப் பதவியேற்கிறான். அவனுக்கு நெடுஞ்செழியன் என்பது பட்ட பெயர். ஏழு அரசர்களும் பாண்டிய நாட்டின் மீது படையெடுக்கிறார்கள்.

    குவளை மாறன் ஒதுக்கப்பட்டு விடுவான். அவன் சில ஆதரவாளர்களுடன் கொற்கைக்கு வந்து அங்கு பொறுப்பில் இருக்கும் வெற்றிவேற் செழியரை கொல்ல வருவான். செண்பகக்குழலி குவளை மாறனுடன் போராடி தன் உயிரைக் கொடுத்து வெற்றிவேற் செழியரை காப்பாற்றுவாள். மாங்குடியில் அவளுக்கு நடுகல் வைத்துப் போற்றுவார்கள். பாண்டியன் நெடுஞ்செழியனும் எழுவரை வென்று வெற்றி வாகை சூடினான்.

    முக்கிய கதாப்பாத்திரம்:
    கதையின் முக்கிய கதாப்பாத்திரம் இளவரசன் இளஞ்செழியன். அவன் போர் செய்யத் திட்டமிடுதலை மிகவும் அழகாக காட்சிப் படுத்தியிருப்பார் ஆசிரியர். வில்லன் குவளை மாறனுக்கும் அதிக முக்யத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவன்தான் கதையை நகர்த்திச் செல்கிறான் என்று சொன்னால் மிகையாகாது. செண்பகக்குழலியும் கயற்கண்ணியும் வலுவான பாத்திரங்கள்.

    காதற் காவியம்:
    இந்தப் புதினத்தில் இரண்டு காதல் ஜோடிகள் வருகிறார்கள். இளஞ்செழியன், செண்பகக்குழலி காதல் கை கூடவில்லை. கயற்கண்ணி, குவளை மாறன் காதற் சித்திரத்தை மிக மென்மையாக, நளினமாக, அழகாக, அற்புதமாக நயம்பட வரைந்திருக்கிறார்.

    வர்ணனை:
    சாண்டில்யனின் சரித்திர கதைகள் வர்ணனை மிகுந்திருக்கும். கதைக்காக வர்ணனையா அல்லது வர்ணனைக்காக கதையா என்று சொல்ல முடியாது.
    மதுரை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததும் இரண்டு வீரர்கள் கொற்கை காவலரிடம் செய்தி சொல்ல குதிரையில் அமர்ந்து ஓடி வருவார்கள். கொற்கைக் காவலர் வெற்றிச் செல்வர் ஒருவனைப் பார்த்துக் கூறியது.

    “காவலனே தேவையற்ற வர்ணனைகள் இல்லாமல் சொல்ல வந்ததைச் சுருக்கமாகச் சொல். ” ஆசிரியரும் இதைத்தான் இந்த நாவல் முழுவதும் கடைப்பிடித்திருக்கிறார்.

    உவமைகள்:
    ஆங்காங்கே பொருத்தமான உவமைகள் மிளிருகின்றன. ”அரிவாள்மணையின் மீது அவளது விரல்கள் வீணையை மீட்டும் வாணியின் விரல்கள் போல நளினமாக விளையாடி விரைவாக நறுக்கின“ என்று கீரை வகைகளையும் சேனைக் கிழங்கையும் நறுக்குவதை அழகாக உவமிக்கிறார் ஆசிரியர்.

    இனிய பெயர்கள்:
    செண்பகக்குழலி. கயற்கண்ணி, பூதி, குவளை மாறன், வாணன், திதியன், வில்லவன் கோதை, கரியன், கட்டையன் இவையெல்லாம் கதை மாந்தர்களின் பெயர்கள். ஆசிரியர் பொருத்தமான பெயர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

    பொதுவானவை:
    நாவலின் முகப்பு அட்டைப் பட ஓவியம் மிக அழகாக நம்மை அசத்துகிறது. அன்பு, காதல், வீரம், நகைச்சுவை போன்ற எல்லா உணர்வுகளையும் சுவைப்பட கொடுத்திருக்கிறார்.

    ஒரு நாவல் சுவையாக இருக்கிறது என்பதை எப்படி அறிவது ? நாவலை எடுத்தவுடன் கீழே வைக்க மனமில்லாமல் நாவல் முடிந்த பிறகுதான் கீழே வைக்கத் தோன்றினால் நாவல் சுவையாக இருக்கிறது என்று சொல்லலாம். திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்த இந்த நாவலைக் கையில் எடுத்தால் கீழே வைக்க மனம் வரவில்லை.

    மேலோகத்திலிருந்து ஆசான் கல்கி இந்த புதினத்தைப் படித்திருந்தால்
    “ பிரமாதம் ! ரொம்ப நன்னா இருக்கு !” என்று சொல்லியிருப்பார்.

    இந்தப் புதினம் காவிரி நதியின் நீரைப் போல ஆழமும், அகலமும் நீளமும், இனிமையும் கொண்டிருக்கிறது. புதினத்தைப் படிப்பவர் அனுபவித்துக் களிப்புறுவர் என்பது திண்ணம்.

    __________________________________________________________________

    Srija_venkatesh
    இயற்பெயர்: ஸ்ரீஜா வெங்கடேஷ்.
    படிப்பு: MA ஆங்கில இலக்கியம்.
    சொந்த ஊர்: நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி. தற்போது வசிப்பது சென்னையில்.
    கணவர்: திரு.வெங்கடேஷ்.

    தமிழ் நாடகங்கள்:
    1997 முதல் 2007 வரை ஒரிஸ்ஸா புவனேஸ்வரில் வாசம். அந்த வருடங்களில் மொத்தம் ஆறு தமிழ் நாடகங்கள் எழுதி இயக்கிய அனுபவம் உண்டு. அதில் இரு நாடகங்கள் ஒரிஸ்ஸாவின் அப்போதைய ஆளுநர் திரு . . இராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ஒருநாடகம் ஷதாப்தீர கலாகார் என்னும் அமைப்பு நடத்திய அகில இந்தியநாடக விழாவில் அவர்கள் அழைப்பின் பெயரில் போடப் பட்டது.

    கட்டுரைத் தொடர்:
    நிலவொளியில் ஒரு குளியல் என்ற கிராமத்து வாழ்க்கையின் அனுபவக் கட்டுரைத்தொடர் 30 வாரங்கள் வல்லமை மின்னிதழில் இடம் பெற்றிருக்கிறது.

    இதுவரை எழுதிய சிறுகதைகள்:25, நாவல்கள் 12. ஆன்மீகக் கட்டுரைகள் 9.

    சிறந்த சிறுகதை:
    2011ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைகளுள் ஒரு கதையாக பாட்டியின் பெட்டி என்ற சிறுகதை தமிழ் இலக்கிய சிந்தனை அமைப்பால் தேர்தெடுக்கப்பட்டு கோடி என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது.

    நூல் அறிவு நிலையம்:
    ‘ஊரெங்கும் பூவாசம்’ என்ற நூல் அறிவுநிலையம் அருண் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

    __________________________________________________________________

    Share
  • சொந்தங்கள்: நான் ரசித்த புத்தகம்

    — உமாஸ்ரீ.

    சொந்தங்கள்நான் சமீபத்தில் ஹேமா கிருஷ்ணமூர்த்தி எழுதிய “சொந்தங்கள்” என்ற நாவலைப் படித்தேன். நூற்று நாற்பத்து நான்கு பக்கங்கள் கொண்ட அழகான நடையுடன் கூடிய தித்திக்கும் புதினம்.

    கதை ஆந்திர மாநிலத்தில் உள்ள செகந்தாராபாத் நகருக்கு அருகிலுள்ள ஒரு ரயில்வே காலனியில் ஆரம்பிக்கிறது. ரயில்வே காலனியில் உள்ள அனைவரையும் பற்றி சிறப்பான அறிமுகம் கொடுக்கிறார் ஆசிரியர். இதில் நகைச்சுவை பொங்கி வழிகிறது.

    ரயில்வேயில் வேலை செய்யும் ரங்கநாதன், கணேஷ் இருவரும் நல்ல நண்பர்கள். அது போலவே ரங்கநாதன் மகள் சாந்தியும் கணேஷ் மகன் ரமேஷூம் நண்பர்கள். இருவரும் ஒன்றாகவே ரயில்வே ஸ்கூலுக்குப் போய் வந்தார்கள். கால ஒட்டத்தில் ரமேஷ் பி. காம். பாஸ் செய்து மெடிக்கல் ரெப்ரசெண்டேடிவ் வேலையில் சேர்ந்து விட்டான். சாந்தி எம். ஏ. இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தந்தை கல்யாணத்திற்கு வரன் பார்த்தார். ரமேஷ் அவரிடம் பெண்ணிற்கு வரன் பார்க்கிறீங்களா என்று கேட்டான். அதற்கு அவர் “ உனக்கு அவளைக் கல்யாணம் செய்து கொள்ள விருப்பமா? ”என்று கேட்டதும் அதிர்ந்து போனான் ரமேஷ்.

    “அந்த மாதிரி விருப்பமே எனக்கு இருந்ததில்லை. இனியும் இருக்காது. குழந்தைகளாக விளையாடியபோது கூட அப்பா அம்மா விளையாட்டு விளையாடியது இல்லை. அவளை மனைவியாய் நினைத்து கூடப் பார்க்க முடியாது . எப்படி நீங்கள் அப்படிக் கேட்கலாம்,“ என்றான்.

    சாந்தியைப் பெண் பார்க்க வந்தது ஒரு சினிமா டைரக்டர் குடும்பம் . மாப்பிள்ளையும் சினிமா துறையில் உதவி டைரக்டராக இருக்கிறான். அவர்களுக்குப் பெண் பிடித்துப் போய் கல்யாணமும் சென்னையில் நடந்தது. சாந்தி சென்னைக்குப் போய் விட்டாள். காலச் சக்கரம் சுழன்றது. கணேஷ் வானுலகம் சென்று விட ரமேஷ் குவாட்டர்ஸை காலி செய்து விட்டான். அவனுக்குப் பம்பாயில் வேலை கிடைத்து விடவே அவன் தன் தாயாருடன் பம்பாய் சென்று விட்டான். சாந்தியின் கணவன் ரவி குடிகாரன் . படம் எடுப்பதற்காக ஏராளமாய் கடன் வாங்கி தத்தளித்துக் கொண்டிருந்தது அந்தக் குடும்பம்.

    ரமேஷ் பம்பாயில் வசிக்கும் மீரா என்ற மிக அழகிய பெண்ணை மணம் செய்து கொண்டான். அவனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அவள் குழந்தை சுமதி.

    குமுதம் பத்திரிகையில் வந்த அந்தப் பேட்டியை தற்செயலாய் படித்த ரமேஷ், சாந்தி நடிக்க வந்துவிட்டாளே என்று வருந்தினான். மீராவின் மனதில் ரமேஷின் அடிமனதில் சாந்தி இருக்கிறாளோ? நான் ஏமாந்தவளா?……. சந்தேகம் என்னும் இருள் படர்ந்தது. மீராவும் ரமேஷும் ஒரு முறை சென்று சாந்தியைப் பார்த்து விட்டு வந்தார்கள். அங்கு போனதும் சாந்தியிடம் பழகியதும் மீராவுக்கு ரமேஷிடம் ஏற்பட்ட சந்தேகம் அறவே நீங்கி விட்டது. சாந்தியிடமிருந்து முதலில் கடிதம் வந்து கொண்டிருந்தது . பிறகு நின்று விட்டது. ஒரு நாள் சாந்தியிடமிருந்து ”சீக்கிரம் வந்து என்னைப் பார் ”என்று கடிதம் வந்திருந்தது. ரமேஷ் சென்னைக்குப் போய் சாந்தியைப் பார்த்தான். அவள் தனியாகத்தான் தங்கியிருந்தாள். கணவன் ரவி வேறு ஒருத்தியுடன் குடியும் குடித்தனமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான். என்னுடைய பெண்ணை டாக்டர் குல்கர்னிக்கு தத்து கொடுத்துவிட்டேன் என்று கூறி அதற்கான காரணத்தையும் சொன்ன போது அதிர்ந்து போனான் ரமேஷ். அவளுக்கு மாலைக் கண் நோய். அதுமட்டுமில்லாமல் புற்று நோய். ரவி சுமதியை திரைப்படத்தில் நடிக்க வைக்க முயன்றான். அவனிடமிருந்து பாதுகாக்க வேறுவழியில்லாமல் சுமதியைத் தத்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பம்பாய் வந்ததும் ரமேஷ், டாக்டர் குல்கர்னியைத் தேடி கடைசியில் சுமதி குல்கர்னியை கண்டு பிடித்து விட்டான். ஆனால் சுமதி தன் தாயை பார்க்க மறுத்து விட்டாள். ரமேஷ் காரணத்தைச் சொல்லியவுடன் சம்மதித்தாள். தாயும் மகளும் சந்தித்தனர். உருக்குலைந்த அம்மாவை பார்த்துத் திடுக்கிட்டாள் சுமதி. அம்மாவைப் பத்தி என்னவெல்லாம் நினைத்திருக்கிறேன்- சுயநலக்காரி, கல்மனசு கொண்டவள் என்று … நெஞ்சு பொறுக்காமல் அழுதாள்.

    சாந்தி அடுத்த நாள் அங்கிருந்து போக வேண்டும். படுக்கையில் படுத்தவள் நடு இரவில் தூக்கம் கலைந்து விழித்துக் கொண்டாள். ஒரு வண்ணத்துப் பூச்சி, உயர உயரக் கிளம்பி கண் பார்வையிலிருந்து மறைந்தது என்று அவள் மறைவுடன் கதை முடிகிறது. சாந்திக்கும் ரமேஷூக்கும் உள்ள உறவு ஒரு பந்தம் ஒரு விசித்திரம் . பூர்வ ஜென்ம தொடர்பு . இருவரும் நண்பர்களாகவே இருக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். காதல், மகிழ்ச்சி, நட்பு, சோகம் ஆகிய எல்லா ரசங்களும் கலந்த ஆரம்பம் முதல் முடிவு வரை விருவிருப்பான கதை.

    Share
  • அன்பெனும் பிடியுள் …

    — உமாஸ்ரீ.

    கீழ்த்திசையில் மெல்லென எழும் உதயசூரியன் தன் தங்கக்கதிர்களை அழகாகப் பரப்பினான்.

    “மதுரம் அப்பார்ட்மெண்ட்ஸ்” பெயருக்கேற்ற மாதிரி அழகான இருபது வீடுகள் கொண்ட கம்பீரமான அடுக்கு மாடி குடியிருப்பு. ஏ பிளாக், பி பிளாக் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. சென்னைக்கு அருகிலிருக்கும் கோவூரிலுள்ள அந்தக் குடியிருப்பு சமீபத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டது.

    ”வாட்ச்மேன், வாட்ச்மேன்“ பத்மா உரத்த குரலில் அழைத்தாள்.

    ரத்தன் கீழேயிருந்து அண்ணாந்து பார்த்து “இதோ வந்துட்டேம்மா“ என்று குரல் கொடுத்து விட்டு மேலேறிச் சென்றான்.

    பத்மா அவனுக்கு ஒரு தட்டில் நாலு இட்லியும் ஒரு தம்பளிரில் கொஞ்சம் சாம்பரும் சாப்பிட கொடுத்தாள்.

    ”ரொம்ப தேங்ஸ்ம்மா“ அதை வாங்கிக் கொண்டு ரத்தன் தன்னிருப்பிடம் சென்றான்.

    நேபாளி வாட்ச்மேன் ரத்தன் அவன் மனைவி மாயா மற்றும் மகள் மீனுவுடன் தரைத் தளத்திலிருக்கும் ஒரு அறையில் தங்கியிருக்கிறான். கட்டிட வேலை ஆரம்பித்த நாள் முதல் வாட்ச்மேனாக வேலை செய்து கொண்டிருக்கிறான்.

    ரத்தன், மாயா இருவரும் பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் நாட்டில் வசிப்பதால் அவர்களுக்கு தமிழ் பேச வரும் . குழந்தை மீனு தமிழை தாய் மொழி போல் மிக அருமையாகப் பேசுவாள். அவளை நேபாளி குழந்தை என்று யாராலும் நம்ப முடியாது. அவ்வளவு அழகாக தமிழ் உச்சரிப்பு இருக்கும்.

    பத்மா அவள் கணவன் பாலுவுடன் பி பிளாக்கில் முதல் தளத்திலிருக்கும் அவர்கள் வீட்டுக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. அவர்கள்தான் முதன் முதலில் குடி வந்தவர்கள். பாலுவுக்கு ஒரு தனியார் கம்பெனியில் விளம்பரப் பிரிவில் வேலை. பத்மா இல்லத்தரசி. கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிவிட்டது . இன்னும் குழந்தை, குட்டி உண்டாகவில்லை. போகாத கோவிலில்லை. செய்யாத பரிகாரங்களில்லை பார்க்காத மகப் பேறு மருத்துவர் இல்லை. கர்ப்பப் பையில் கட்டியிருப்பதால் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று டாக்டர் சொல்லிவிட்டார். செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றால் செலவு அதிகமாக இருக்கிறது என்று பார்த்தார்கள்.

    “இந்தப் பிளாட் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. பில்டர் ரொம்ப நன்றாக கட்டியிருக்கிறார்“ என்றாள் பத்மா.

    நம்ப இரண்டு பேருக்கு இந்தப் பிளாட் கொஞ்சம் பெரிசுதான், கடவுள் அனுக்கிரகம் இருந்தால் என்று பாலு ஆரம்பித்ததும் “இந்த வீட்டில் நமக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்” என்று முடித்தாள் பத்மா.

    அவள் சொல்லி முடித்தவுடன் பரட்டைத் தலையுடன் ஒரு சிறுமி வீட்டுக்குள் வந்தாள். அழுக்கு கவுன் அணிந்திருந்தாள். முகத்திலே ஒரு குறுகுறுப்பும் கண்களிலே ஒரு துருதுருப்பும் இருந்தன.

    பத்மாவிற்கு அவளைப் பார்த்தவுடனே மிகவும் பிடித்துப் போய்விட்டது.

    ”குட்டி உன் பேர் என்ன?“

    என் பேர் மீனு. நீங்கள் புதுசா குடி வந்திருக்கீங்களா ஆண்ட்டி” ? மழலை குரலில் கேட்டாள்.

    குழந்தையின் மழலைத் தமிழ் பத்மாவை ஈர்த்தது. ”குட்டி நன்னா தமிழ் பேசறியே? எப்படி கத்துண்டே?“ புன்சிரிப்புடன் கேட்டாள்.

    ”எனக்கு எப்படியோ பேச வந்துவிட்டது.“

    பாலுவைப் பார்த்து “பாருங்கோன்னா, ஒரு நேபாளி குழந்தை எவ்வளவு அழகா தமிழ் பேசறது“ என்றாள்.

    ”உன் வயசென்ன? படிக்கிறாயா குட்டி?“

    “எனக்கு ஐந்து வயசு. படிக்கிறதுன்னா என்ன ஆண்ட்டி?”

    மீனு பள்ளிக்கூடம் போக ஆரம்பிக்கவில்லையென்பது பத்மாவுக்குப் புரிந்தது. குழந்தை அவளருகில் வந்தது.

    ” குட்டி இங்கே உட்கார். நான் பூஜை செய்து முடித்ததும் உனக்கு பிரசாதம் கொடுக்கிறேன்” மீனு ஒர் ஓரமாக உட்கார்ந்தாள்.

    பத்மா பூஜை செய்ய ஆரம்பித்தாள். தினமும் அம்பாளை வழிபாடு செய்வது அவள் பழக்கம். அங்கே நிவேதனத்திற்காக வைத்திருந்த திராட்சையைப் பார்த்தவுடனே மீனுவின் கண்கள் பளிச்சிட்டன. குழந்தையால் ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “ஹை” என்று கத்திக் கொண்டே திராட்சையின் அருகில் சென்று தன் சிறிய கையில் கொஞ்சம் திராட்சையை எடுத்து வாயில் போட்டு கொண்டாள்.

    அதை கவனித்த பாலு கோபத்துடன் கைகளை ஆட்டி “ஏய் , ஸ்டாப்“ என்று கத்தினான். மீனு பயத்துடன் பாலுவைப் பார்த்தாள்.

    ”அபசாரம் பண்ணி விட்டாய். சுவாமி நிவேதனத்தை தொடலாமா? நீ எந்த சாதி?” இங்கே வா” கண்களை உருட்டி அதட்டினான்.

    ”நான் குழந்தை சாதி” மீனுவிடமிருந்து பதில் வந்தது.

    ”என்ன, என்ன ? —— “ மீண்டும் உரக்கக் கத்தினான்.

    ” குழந்தை சாதி “ என்றாள் மறுபடியும்.

    ” க்ளுக்” என்று சிரித்தாள் பத்மா. “குட்டி உங்களுக்கு சரியான பதிலை கொடுத்து விட்டாள். கடவுள் பக்தர்களிடம் சாதி பார்ப்பது இல்லை. நாம் மட்டும் ஏன் சாதி பார்க்கவேண்டும். குழந்தைக்கும் தெய்வத்திற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. குழந்தை சாப்பிட்டது, அம்பாளே சாப்பிட்ட மாதிரி. குழந்தையை எதுவும் சொல்லாதீங்க“ என்று சொல்லிவிட்டு, குட்டி பூஜை முடிந்தவுடன் உனக்கு பிரசாதம் கொடுக்கிறேன். நடுவில் சாப்பிடாதே.“ என்றாள் கனிவுடன்.

    பூஜை முடிந்தவுடன் பிரசாதத்துடன் மீனு கீழே போய் விட்டாள்.

    மாலை மயங்கி இரவுப் பொழுது வந்தது. சாப்பிடும்போது பாலு, “மீனுவுக்கு அதிக இடத்தைக் கொடுத்து விடாதே. அந்தக் குழந்தையின் வளர்ப்பு சரியில்லை போல் தெரிகிறது. சாப்பிடற பொருளைப் பார்த்தாலே பறக்கிறது. அதுவுமில்லாமல் அது ஒரு நேபாளி குழந்தை.“

    ”குழந்தை என்றால் அப்படிதானிருக்கும். நேபாளியாகயிருந்தாலென்ன? “யாதும் ஊரே, யாவரும் கேளிர்“ என்று கேட்டதில்லையா?”

    ”அவள் என்ன சாதியோ?”

    குழந்தையிடம் சாதி பார்க்கதீங்க. எல்லோரையும் சரி சமமாக நேசிக்க வேண்டும். என் சிநேகிதி மைதிலி என்பவளின் குடும்பம் சென்னையிலிருக்கிறது. அவர்கள் குடும்பத்திற்கு உதவி செய்து முன்னுக்கு கொண்டு வந்த மாரீஸ் ஃப்ரீட்மன் என்ற போலந்து நாட்டுக்காரருக்கு அவர் செய்த உதவிக்காக ஒவ்வொரு வருடமும் பித்ரு காரியம் செய்து வருகிறார்கள் தெரியுமா? சாதி என்பது நாம் நினைப்பதில்தான் இருக்கிறது. நமக்குத்தான் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தாகிவிட்டது. பலனெதுவுமில்லை. எப்போது விடிவு வருமென்று தெரியவில்லை.”

    ”புது வீட்டுக்கு வந்துவிட்டோமல்லவா? சீக்கிரம் குழந்தை பாக்யம் கிடைக்கும்.”

    ஒரு மாதத்திற்குள்ளேயே அந்தக் குடியிருப்பில் ஒருவர் பின் ஒருவராக எல்லா வீடுகளிலும் குடி வந்து விட்டார்கள். பத்மாவிற்கு இப்போதெல்லாம் பக்கத்து வீடு, எதிர் வீடுகளில் உள்ளவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதிலேயே நேரம் போய் விடுகிறது.

    ரத்தன் எல்லோரிடமும் நட்பாகப் பழகினான். ஆனால் அவன் வீட்டில் மட்டும் முரடனாக நடந்து கொண்டான்.

    வாட்ச்மேன் மனைவி மாயா “பணமில்லாததால்தான் மீனுவை பள்ளிக்கூடம் அனுப்பமுடியவில்லை“ என்றாள். மீனு பள்ளி போகவில்லையேயென்று பத்மா மிகவும் வருந்தினாள். ”சீக்கிரம் அவளைப் பள்ளிக்கூடம் சேருங்க, நான் பண உதவி செய்கிறேன்” என்றாள்.

    மீனு நினைத்தபோதெல்லாம் பிளாட்சிலுள்ள வீடுகளுக்குப் போவாள். பத்மாவிற்கு அவள் வரும்பொழுதெல்லாம் பட்டாம்பூச்சி சிறகடித்து வருவதுபோலிருக்கும். வீட்டுக்குள் இங்கும் அங்கும் அலைவாள். பத்மாவின் புடவை முந்தானையை பிடித்திழுப்பாள். சமையலறையின் மேடைமீது ஏறி அமர்ந்து கொள்வாள். ஏராளமான கேள்விகள் கேட்பாள். அவள் செய்யும் குறும்புகள், கேட்கும் கேள்விகள் தரும் தொல்லைகள் பத்மாவிற்கு இன்பத்தைக் கொடுத்தன. அவளை ஒருபொழுதும் கடிந்து கொள்ள மாட்டாள்.

    பத்மாவிற்கு பாரதியாரின் பாடல்கள் என்றாள் மிகவும் பிரியம். முறையாக பாட்டு கற்றுக் கொண்டவள் அவள். சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் பாரதியார் பாடலை பாடிக் கொண்டிருப்பாள். ஒரு நாள் அவள் அப்படிப் பாடிக் கொண்டிருக்கும் போது மீனு வந்தாள். கண்கள் விரிய பத்மாவைப் பார்த்தாள். “எனக்கு பாட்டு சொல்லிக் கொடுங்கள் ஆண்ட்டி” என்று குழைந்தாள். நான் பாடுவதை நீ திருப்பிப் பாடு என்ற பத்மா பாரதியின் ஒரு பாட்டை பாட மீனுவும் அந்த வரிகளைத் திரும்பி பாடினாள். பத்மாவிற்கு பரம திருப்தி.

    அடுத்த நாள் பத்மா வேலயாயிருக்கும் போது வந்த மீனு முதல் நாள் கற்றுக் கொண்ட பாரதியின் பாடலை பாடிக்கொண்டிருந்தாள். குழலினும் இனிய மழலைக் குரலில் அவள் பாடிய பாரதியின் வரிகள் பத்மாவின் காதுகளில் தேனாக பாய்ந்தது.

    ” வெண்ணிலவு நீயெனக்கு, மேவுகடல் நானுனக்கு
    பண்ணுசுதி நீயெனக்கு, பாட்டினிமை நானுனக்கு “

    அந்த இனிய வரிகளைக் கேட்டு மகிழ்ந்த அவள் உற்சாகத்துடன்

    “கண்ணின் மணி போன்றவளே ! கட்டியமுதே ! கண்ணம்மா “ என்று பாடி மீனுவை கட்டி அணைத்து உச்சி முகந்தாள்.

    “குட்டி ஞாபகம் வைச்சிண்டு ரொம்ப நல்லா பாடறே “ என்று பாராட்டினாள்.

    இரவு கணவனிடம் ”மீனுவுக்கு ஒரு தடவைதான் பாரதியாரின் பாட்டைச் சொல்லிக் கொடுத்தேன். கற்பூர புத்தி குழந்தைக்கு . அப்படியே பிடித்து கொண்டுவிட்டது. ஒரு நேபாளி குழந்தை பாரதியாரின் பாட்டை ரொம்ப நல்லா பாடுகிறது ” சொல்லிச் சொல்லி மாஞ்சி போனாள்.

    பாலு இப்பொழுதெல்லாம் சாதியை பற்றிப் பேசுவதில்லை. எதற்காக வீணாக சாதியைப் பற்றிப் பேச வேண்டும். அப்புறம் பத்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும். அவனுக்கும் மீனுவிடம் பாசப் பிணைப்பு ஏற்பட்டுவிட்டது.

    ”மீனுவின் சூடிக்கை யாருக்கு வரும்? கண் பார்த்ததை கை செய்யுமென்பார்கள். இவளுக்கு காது கேட்பதை வாய் பாடுகிறது. அவள் மாதிரி ஒரு குழந்தை நமக்கு பிறக்க வேண்டும்” என்றான்.

    ஒரு நாள் மீனு வரவில்லை என்றதும் பத்மாவிற்கு கவலையாயிருந்தது. உடம்பு சரியில்லையென்று கேள்விப்பட்டு போய் பார்த்துவிட்டு வந்தாள். அடுத்த நாள் மீனு வந்தவுடன்தான் அவளுக்கு உயிர் வந்த மாதிரியிருந்தது.

    ஒரு நாள் பாலு அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வந்துவிட்டான். பத்மா அவனுக்கு காபி கொண்டு வந்தாள். காபியை பருகிக்கொண்டே பத்மாவின் முகத்தைப் பார்த்தான். அவள் முகம் வாடியிருந்த்து. ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள்

    அவள் தோளை குலுக்கி, “என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?“ என்றான்.

    “நமக்கு பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எந்த குழந்தையைப் பார்த்தாலும் ஏக்கமாகயிருக்கிறது. எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. நான் என் நகையைக் கொடுக்கிறேன். அதை விற்று செயற்கை முறையில் சிகிச்சை செய்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தையின் மழலைச் சொல்லை சீக்கிரம் கேட்க வேண்டுமென்பது என் அவா.“ என்றாள்.

    ”அடுத்த வாரம் லீவு போடுகிறேன். டாக்டரிடம் போகலாம். உன் மனம் கவலையாய் இருப்பதுபோல் தெரிகிறது. இன்று சீக்கிரம் வந்துவிட்டேன் அல்லவா? வா, பீச்சுக்கு போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு வரலாம்.”

    அவர்கள் வீட்டின் கதவை பூட்டிவிட்டு புறப்பட்டார்கள். பீச்சின் மணலில் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசினார்கள். அப்போது யாரோ இரண்டு பேர் ஒரு குழந்தையை முரட்டுத்தனமாக தூக்கிக் கொண்டு போவது பத்மாவின் கண்களில் பட்டது. பத்மா அந்த குழந்தையை ஒரு வினாடி உற்றுப் பார்த்தாள். எங்கேயோ பார்த்த கண்களாக தோன்றின. குழந்தை திமிறிக் கொண்டு கீழேயிறங்க முயற்சித்தது.

    ”நம்ம குட்டி மாதிரியிருக்கிறது. வாங்க அவங்களைப் பிடிக்கலாம்”, மீனு, மீனு என்று கத்திக் கொண்டே வேகமாக அந்த ஆட்களை நோக்கி ஓடினாள். பாலுவும், அங்கிருந்த நான்கைந்து நபர்களும் அவள் பின்னாடி ஓடி வந்தனர்.

    இரண்டு பேரும் குழந்தையைப் போட்டுவிட்டு ஓட்டம் எடுத்தார்கள். பத்மா கூறியது சரியாகத்தான் இருந்தது. அந்தக் குழந்தை வேறு யாருமில்லை, மீனுதான். பொது மக்கள் துரத்திச் சென்று ஓடியவர்களைப் பிடித்து தர்ம அடி போட்டார்கள்.

    மீனு அழுதுக் கொண்டிருந்தாள். பயத்துடன் பத்மாவின் கையை கெட்டியாகப் பிடித்து கொண்டாள்.

    ” குட்டி, அழாதே. இங்கே எப்படி வந்தாய்?“

    ” ஆண்ட்டி, அப்பா என்னை இங்கே விட்டுவிட்டு போய்விட்டார்………….. “, அழுகையை நிறுத்தவில்லை.

    ” குட்டி, அழாதே. வா வீட்டுக்குப் போகலாம் “ என்று கூறியவுடன் குழந்தை அழுகையை நிறுத்தியது. சுண்டல் வாங்கிக் கொடுத்தவுடன் குழந்தை ஆர்வத்துடன் சுண்டலைச் சாப்பிட்டது.

    வீடு திரும்பியவுடன் அவர்களை எதிர்கொண்ட வாட்ச்மேன் கையில் பீடியுடனும் வாயில் புகையுடனுமிருந்தான். மீனுவைப் பார்த்து “பிசாசே வந்துட்டயா? உன்னை தொலைக்கனுமுன்னு பார்த்தால் முடியலியே! உன்னை என்ன செய்வதென்று தெரியல. செலவு அதிகமாக இருக்கு. வர்ற வருமானத்திலே குடும்பம் நடத்த முடியல. என் வீட்டுக்காரிக்கு இப்போது மூணு மாதம். வேறே வழி தெரியாமல் மீனுவை பீச்சில் விட்டு விட்டு வந்தேன். பிசாசு, எப்படியோ உங்க கூட வந்துட்டது” அவள் தலைமயிரைப் பிடித்து இழுத்தான்.

    மீனு வலியால் துடித்தாள். பத்மா அதிர்ச்சி அடைந்தாள்.

    ” உங்களுக்கு குழந்தையின் அருமை தெரியவில்லை. குழந்தையை போய் யாராவது பீச்சில் வேண்டுமென்றே விட்டுவிட்டு வருவார்களா? இனிமேல் இப்படி செய்தால் நான் காவல்துறையிடம் புகார் செய்வேன் “ என்றாள் கோபத்துடன்.

    “நாங்க என்ன செய்யறது. விலைவாசி அதிகமாய் போய்விட்டது. இன்னொரு குழந்தை வேறு மாயாவுக்கு பிறக்கப் போகிறது? எப்படி எங்களால் சாமாளிக்க முடியுமென்று தெரியவில்லை” என்றான் ரத்தன்.

    “குழந்தையை பள்ளிக்கூடம் அனுப்பி படிக்க வையுங்கள். பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்; அடிக்காதீங்க; அவள் தங்கக் கம்பி” என்று சொல்லிவிட்டு பாலுவும் பத்மாவும் அங்கிருந்து நகர்ந்தார்கள்.

    பத்மாவின் முகத்தில் வருத்தம் படர்ந்திருந்தது.

    “கவலைப் படாதே பத்மா, நமக்கு சீக்கிரத்தில் குழந்தை பிறக்கும்.”

    “யாருக்கு ஒரு பொருள் பிரியமாயிருக்கிறதோ அவருக்கு அப்பொருளைக் கடவுள் அளிப்பதில்லை. வேண்டாதவருக்குப் பார்த்துக் கொடுக்கிறார். நாம் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். நமக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் வாட்ச்மேனுக்கு கேட்காமலேயே கடவுள் குழந்தையைக் கொடுக்கிறார் “ அவளால் அழுகையைக் கட்டுப் படுத்தமுடியவில்லை.

    “கடவுள் அருள் இருந்தால் கண்டிப்பாக நமக்கு குழந்தை பாக்யமுண்டு. நீ கவலைப் படாதே” பாலு அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தான்.

    ஒருநாள் காலை கதிரவன் உதித்து கொஞ்ச நேரம் ஆனது. பத்மா குளித்துவிட்டு நெற்றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டு, கூந்தலை அள்ளி முடிந்துகொண்டு வரவேற்பறையிலுள்ள சோபாவில் அமர்ந்திருந்தாள். அன்று டாக்டரிடம் போய் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள சிகிச்சை ஆரம்பிக்க வேண்டுமென்பதால் அவள் மனம் பரபரப்பாகயிருந்தது.

    பாலுவும் தயாராகிவிட்டான். ஒரு தோல் பையை கையில் வைத்திருந்தான். இதில் இரண்டு இலட்ச ரூபாய் இருக்கிறது. சிகிச்சை ஆரம்பிப்பதற்கு இந்தப் பணம் போதுமென்று நினைக்கிறேன். தேவையானல் இன்னும் பணம் புரட்டுகிறேன். இன்றே டாக்டர் விமலாவைப் பார்த்து சிகிச்சை ஆரம்பிக்கலாம். இனிமேல் தள்ளிப்போடவேண்டாம். கிளம்பலாமா?“

    இருவரும் புறப்படும்போது ரத்தன், மாயா, மீனு மூவரும் வந்தார்கள். மாயா சோகமாக தென்பட்டாள். மீனுவின் கையைப் பிடித்திருந்தாள்.

    “அம்மா சமீபத்தில் நேபாளில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் என் அப்பாவும் அண்ணனும் மரணமடைந்து விட்டார்கள் என்ற விசயம் இப்போதுதான் தெரிந்தது. நாங்கள் இபோது நேபாளுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறோம். என் அப்பாவுக்கு அங்கு கிராமத்தில் கொஞ்சம் நிலம் இருக்கிறது. அதனால் அங்கேயே தங்கிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். இனிமேல் சென்னை திரும்பி வர மாட்டோம். இது வரை நீங்கள் செய்த உதவிக்கு நன்றி” என்று சொல்லி விட்டு கிளம்பினார்கள்.

    மீனு திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.

    அவர்கள் ஊரை விட்டு போகப்போகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் பாலு திடுக்கிட்டான். பத்மாவுக்கும் மீனு போயே போய்விட்டாள் என்பதால் துக்கம் அவள் நெஞ்சை அப்பியது. கன்றை பிரிந்த பசுவின் சோகத்திலிருந்த அவள் விம்மி விம்மி அழுதாள்.

    பாலு அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு “அழாதே பத்மா. உன் மனநிலை எனக்குப் புரிகிறது. மீனு போனால் என்ன ? நாம் டாக்டரைப் பார்க்கத்தானே இப்போது புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமக்கு கடவுள் ஒரு குழந்தையை நிச்சயம் கொடுப்பார்.” என்று ஆறுதல் சொன்னான்.

    அப்போது “ஆண்ட்டி” என்று கூவிக் கொண்டே மீண்டும் வந்தாள் மீனு.

    “என் அம்மாவின் கையை உதறிக் கொண்டு நான் வந்து விட்டேன். நான் உங்களுடனே இருக்கிறேன். அம்மா கூட நேபாள் போக மாட்டேன். அம்மா வந்தால் நான் இல்லையென்று சொல்லிவிடுங்கள்” பத்மாவின் பின்னால் ஓளிந்து கொண்டது குழந்தை.

    பாலு தன் மனசுக்குள் ” இதென்ன சினிமா கதை மாதிரி இருக்கிறது. முதலில் குழந்தை வருகிறது. அம்மாவும் அடுத்து வந்து நாங்கள் இந்த ஊரை விட்டு போகப்போவதில்லை என்று சொல்லுவாள் போலிருக்கிறதே?” என்று நினைத்தான்.

    அவன் நினைத்தமாதிரியே மாயா வந்து விட்டாள்.

    “மீனு என் கையை உதறித் தள்ளிவிட்டு வந்துவிட்டாள். அவள் இங்கு வந்தாளா?”

    பத்மா தன் கை விரலை பின் பக்கம் காட்டி அங்கிருக்கிறாள் என்பதை சைகையால் காண்பித்தாள்.

    “மீனு இனிமேல் உங்களுடனேயே இருக்கட்டும். எங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போகும்போது மீனுவை ஏதாவது ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இறக்கிவிட்டு போய்விடலாம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் அப்படி செய்தாலும் செய்வார். கொஞ்சம் கூட கருணையில்லாத மனுசன். எங்கேயோ என் குழந்தை கஷ்டப்படுவதை விட உங்களிடம் வளர்வதுதான் பொருத்தமானது. நான் அவர் கிட்டே சொல்லிக்கிறேன்.”

    பத்மாவிற்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. கனவா அல்லது நிஜமா என்று அறிய கையை கிள்ளிவிட்டுக் கொண்டாள். பாலுவுக்கும் வியப்பு தாங்க முடியவில்லை .

    “உங்கள் விருப்பப்படியே நாங்கள் மீனுவை வளர்க்கிறோம்…………… அவள் எங்களுக்கு சொந்தக் குழந்தை மாதிரி. குழந்தை என்பது கடவுள் கொடுக்கும் வரம். குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர் அமைவது கடவுள் தரும் வரப்பிரசாதம். கடவுள் மீனுவை எங்களுக்கு கொடுத்த வரமாக எடுத்துக் கொண்டு அவளுக்கு நல்ல கல்வி, உணவு, உடையெல்லாம் கொடுப்போம்.மீனு இனிமேல் நன்றாகயிருப்பாள்” என்ற பத்மா கணவனைப் பார்த்து ” கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி நாம் குழந்தைக்காக சிகிச்சை பெற டாக்டரைப் பார்க்க போய்க் கொண்டிருக்கும் போது குழந்தையே நம்ம வீட்டுக்கு வந்துவிட்டாள். இன்னும் என்ன பார்த்துக் கொண்டிருக்கீங்க? பையில் வைத்திருக்கும் பணத்தில் கொஞ்சம் பணத்தை மாயாவிடம் கொடுங்கள். அவர்களுடைய செலவுக்கு உபயோகமாகயிருக்கும் “ என்றாள் .

    பாலு தோல் பையிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாய் கட்டை எடுத்து மாயாவிடம் கொடுத்துவிட்டு தன் தலைமேல் இருகரங்களையும் கூப்பினான்.

    மீனு மாயாவையே பார்த்து கொண்டிருந்தாள்.

    ” மீனு நான் வாரேன். ஆண்ட்டிதான் இனிமேல் உனக்கு அம்மா. அவங்க சொல்ற மாதிரி நடந்து கொள் “ என்று சொல்லி விட்டு விழி நிறைய கண்ணீருடனும், கை நிறைய பணத்துடனும் மனசு நிறைய நிம்மதியுடனும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

    மகிழ்ச்சிப் பரவசத்திலே பத்மா திக்குமுக்காடிவிட்டாள்.

    ” ஏன்னா, மீனு நம்ம வீட்டுக்கு வருவாள் என்று நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. அவளுக்கு நல்ல உணவு, உடை கொடுத்து நன்றாக வளர்ப்போம். நேபாளி குழந்தையாகயிருந்தாலும் தமிழ் நன்றாக பேசுகிறாள். அவளுக்கு தமிழ் கல்வி அளிப்போம். நல்லா வளர்த்து ஆளாக்குவோம்“ குழந்தையின் கனனத்தில் மகிழ்ச்சியுடன் முத்தமிட்டாள். குழந்தையை பாசத்தோடு பார்த்தாள்.

    “சாக்லெட் வேண்டும் அம்மா“ என்று சிணுங்கினாள் மீனு.

    ”அம்மா“ என்ற வார்த்தை காதில் விழுந்ததும் பத்மா மெய்ச்சிலிர்த்து பரவசமடைந்தாள்.

    ”மச மசவென்று நிக்காம கடைக்குப் போய் குழந்தை கேட்டதை வாங்கிட்டு வாங்க “ உரிமையுடன் கணவனை அதட்டினாள்.

    ”நான் கடைக்குப் போய் குட்டிக்குச் சாக்லெட், புத்தாடையெல்லாம் வாங்கி வருகிறேன்” கிளம்பினான் பாலு.

    தாயும் மகளும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். “ அம்மா, நல்ல அம்மா ” என்ற மீனு தன் குட்டிக் கையால் பத்மாவின் இடுப்பை கட்டிப் பிடித்தாள்.

    பத்மா அநத அன்பெனும் பிடியுள் சிக்கினாள்.பின்பு அந்தப் பிடியிலிருந்து மெல்ல விடுபட்டாள்.

    குதுகலத்துடன் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் ! தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் ! முணுமுணுத்துக் கொண்டே நர்த்தனமாட தொடங்கினாள்.

    ***** நிறைவு *****

    Share
  • நான் படித்த புத்தகம்- “ யாதுமாகி நின்றாய் “

    உமாஸ்ரீ

    சமீபத்தில் எழுத்தாளர் பவள சங்கரி எழுதிய “யாதுமாகி நின்றாய் ” என்ற புத்தகத்தைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் படித்து சுவைத்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

    யாதுமாகி

    ”யாதுமாகி நின்றாய்”  பதினெட்டு அழகான சிறுகதைகள் அடங்கிய திரட்டு. எழுத்தாளர் சிவசங்கரி வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.

    முதல் கதை “மோட்டூர்க்காரி “ கடைசி கதை “காக்காய் பொன்”. புத்தகத்தில் உள்ள சித்திரங்கள் கண்ணைக் கவருகின்றன. சிறுகதை திரட்டில் சித்திரங்களை இப்போதுதான் நான் முதல் முதலாகப் பார்க்கிறேன். ஆசிரியரின் சொல்லோவியங்களுக்கு அழகு சித்திரங்கள் மெருகூட்டுகின்றன. “யாதுமாகி நின்றாய்” கதையின் இறுதியில் பாரதியாரின் பாடல் அமைவது  கதைக்கு இசையூட்டுவது போலிருக்கிறது.

    கதையின் எல்லா தலைப்புகளும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. ஒரு கதைக்குத் தலைப்பு தேர்ந்தெடுப்பது அவ்வளவு சுலபமில்லை. கதையின் தலைப்பு நன்றாகயிருந்தாலே கதையைப் படிக்கத் தோன்றும். “பசுமையின் நிறம் சிவப்பு” பார்த்தவுடனே படிக்க மனத்தில் ஆர்வம் உண்டாகிறது. “மெய் கண்டார்” என்பதைப் படித்ததும்  எனக்கு “தோள் கண்டார் தோளே கணடார்” என்ற பாடல் ஞாபகம் வந்தது. எல்லா தலைப்புகளும் அருமை.

    ஆசிரியரின் நடை யதார்த்த நடை. நல்ல நடை . மறைந்த பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் கதைகள் வித்தியாசமான நடையிலிருக்கும். ஒரு கதை மீனவர்கள் மற்றும் கடல் சம்பந்தப்பட்டதாகயிருக்கும். இன்னொரு கதை குடியானவர்களைப் பற்றி இருக்கும். ஒரு கதை விவசாயிகளைப் பற்றி இருக்கும். அது போல் ஆசிரியரின் கதைகள்  ஒவ்வொன்றும் வித்தியாசமான  மொழியுடன்  படிப்பவரை வியப்பில் ஆழ்த்துகின்றன.

    கதைக்கரு எல்லா கதைகளிலும் சிறப்பாக இருந்தது. “ கனிகரம்”  என்ற கதையில் தாய் தன் மகன் என்ன தீங்கு செய்தாலும் அவள் அவனுக்கு நல்லதையே நினைப்பாள்  என்ற உயர்ந்த கருத்தை சொல்கிறது..

    சிறுகதை இலக்கணத்தில் கட்டுக்கோப்பு மிகவும் முக்கியம். பதினெட்டு கதைகளும் கட்டுக்கோப்புடன் இருந்தது. அளவுக்கு அதிகமான வர்ணனை எந்த கதையிலுமில்லை.

    முடிவைப் பொருத்தவரை எப்படி வேண்டுமானலும் இருக்கலாம். சில கதைகளில் முடிவு எதிர்பாராத விதமாக இருந்தது. ”பாசச் சுமைகள்” என்ற கதையில் கதாநாயகன் தியாகராசன் இறந்து விடுவான். அதுபோல் மெய் கண்டார், காக்கை பொன் என்ற கதைகளும் எதிர்பாராத முடிவை உடையன. “சுமைதாங்கி சாய்ந்தால் ?” என்ற கதை,  கடிதங்கள் பரிமாற்றம் என்ற உத்தியை உபயோகப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. மனைவி  ரகசியத்தை சொல்லிவிட்டு கணவனை உலுக்குவாள். அதற்கு முன்பேயே கணவனின் தலை சாய்ந்து விட்டிருக்கும்.

    எல்லா கதைகளையும் படித்து முடித்த பிறகு  மன நிறைவு ஏற்படுகிறது. மொத்தத்தில் சிறப்பாக இருக்கிறது,  குறை ஒன்றுமில்லை என்று சொன்னால்   மட்டும் போதாது . ஒரு நல்ல சமையலை சாப்பிடும்போது திருப்தியுடன் “யார் இவ்வளவு நன்றாக சமையல் செய்தது, அவங்க கைக்கு ஒரு மோதிரம் போடணும் என்று சொல்வதைப் போல் இவ்வளவு நல்லா கதை எழுதிய ஆசிரியரின்  விரலுக்கு தங்க  மோதிரம்  போடணும்  என்றும் சொல்ல தோன்றுகிறது.

                                 **************

    Share
  • எதிர் வீடு

    உமாஸ்ரீ

    அதிகாலை நேரம். இருள் நீங்கி வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக படர்ந்து கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று பார்த்தால் வேத கோஷங்களின் இனிமையான இசை என்னை எழுப்பி விட்டது. என் கணவர் பக்கத்தில் நன்றாக குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தார். இடியே விழுந்தாலும் அவர் தூக்கம் கலையாது. அப்படி ஒரு வரம் வாங்கிக்கொண்டு பிறந்திருக்கிறார். நான் அதற்கு நேர் எதிர். சிறு ஓசை கேட்டாலும் எழுந்து விடுவேன்.

       வாசல் கதவைத் திறந்து பார்த்தேன். எதிர் வீட்டில் நான்கு சாஸ்திரிகள் வேதபாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். வாசலில் செம்மண் இட்டு பெரிய கோலம் கண்ணைக் கவர்ந்தது. வீட்டை புதியதாக வாங்கியவர்கள் அதைப் புதுப்பித்து ஹோமம் செய்கிறார்கள். அன்று எதிர் வீடு கோலாகலமாகயிருந்தது.

    நாங்கள் குடியிருக்கும் ”அபிநயா பிளாட்ஸ் “ கோடம்பாக்கத்திலிருக்கிறது. கீழே இரண்டு வீடுகள். முதல் மாடியில் மூன்று, இரண்டாவது மாடியில் மூன்று  ஆக மொத்தம் எட்டு  வீடுகள் கொண்ட அழகான அடுக்கு மாடி குடியிருப்பு. உள்ளே நுழைந்தவுடன் இடது பக்கம் இரண்டு திண்ணைகள் இருக்கும். காலை பத்து மணிக்கு அந்தத் திண்ணைகளில் வீட்டிலுள்ள வேலைக்குப் போகாத பெண்கள் அமர்ந்து அரட்டைக் கச்சேரி நடத்துவார்கள். மாலைநேரத்தில் முதியவர்கள் அந்தத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.

    நான் கீழேயிருக்கும் வீட்டில் குடியிருக்கிறேன். முதல் மாடியில் பட்டாபி சாஸ்திரிகள் அவர் மனனவி பத்மா, குழந்தை காஞ்சனா இருக்கிறார்கள்.

    என் எதிர் வீடு ரொம்ப நாளாக பூட்டியிருந்தது. போன மாதம் தான் விற்றுப் போனது.

    அபிநயா பிளாட்சில் உள்ளவர்கள் எல்லோரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அன்பும் பண்பும் நிறைந்தவர்கள.  ஒருவருக்கு ஒருவர் வலிய வந்து உதவி செய்வார்கள். ஓரிருவர் மட்டும் அதற்கு விதிவிலக்கு.

    நான் கதவை மூடி விட்டு வீட்டிற்குள் வந்துவிட்டேன். சிறிது நேரத்தில் என் கணவரும் எழுந்து பல் துலக்கி முகம் கழுவி  தேநீர் பருக வந்தார்.

    ” இன்று காலை எதிர் வீட்டில் பூஜை நடந்தது. வீட்டை விலைக்கு வாங்கியவர்கள் வந்து விட்டார்கள். “ என்றேன்.

    ” நல்ல செய்தி. ஆறு மாத மாதத்திற்கு மேல் பூட்டியிருந்த வீட்டில் இனி ஆள் நடமாட்டம் இருக்கும் என்று சொல். வருகிறவர்கள் நல்ல குடும்பமாகயிருக்க வேண்டும்.”

    “ ஆமாம். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளலாம். எனக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.”

    “ இன்று என்ன சமையல்?”

    “ ஞாயிற்றுக்கிழமை என்ன சமையல் செய்வேன் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்குப் பிடித்த வெங்காய சாம்பாரும் உருளைக்கிழங்கு வறுவலும்தான் செய்ய போகிறேன் “ என்று சொல்லி முறுவலித்தேன்.

    அப்போது “  உள்ளே வரலாமா? என்று கேட்டுக் கொண்டே ஒரு நடுத்தர வயது பெண்மணி உள்ளே வந்தார். கண்ணைக் கவரும் சிவப்பு . நல்ல உடல் வாகு. சிவப்பு கலர் பார்டர் வைத்த பச்சைப் புடவையும் அதற்கு மேட்சாக அணிந்திருந்த பச்சைக் கலர் ரவிக்கையும் அவருக்குப் பாந்தமாக பொருந்தி அழகுக்கு அழகு சேர்த்தது. காதிலும், கழுத்திலும் தங்க நகைகள் மின்ன பிரமிக்க வைக்கும் பெண்ணரசியாக தோன்றினார்.

    ” நாங்கள் உங்கள் எதிர் வீட்டை விலைக்கு வாங்கியிருக்கிறோம். இப்போதுதான் பூஜை முடிந்தது. எங்கள் வீட்டில் நீங்கள் எல்லோரும் உணவு உட்கொள்ள வேண்டும். இன்னும் அரை மணியில் இலை போட்டுவிடுவார்கள். வீட்டில் சமையல் செய்யாதீர்கள் “ என்று புன்முறுவலுடன் அன்பு கட்டளையிட்டார். நான் என் கணவரைப் பார்த்தேன். அவர் கண்களில் சம்மதம் தெரிந்தது . அதீத அழகுடன் இருந்த அந்தப் பெண்மணியை எனக்கு முதல் பார்வையிலே பிடித்துப் போய்விட்டது.

    ” கண்டிப்பாக வருகிறோம். நீங்கள் அன்பாக கூப்பிடும்போது மறுக்க முடியுமா?. என் பெயர் ராதா. இவர் பெயர் ராமன். ஒரு தனியார் கம்பெனியில் பணி செய்கிறார். என்னுடைய ஒரே பையன் அமெரிக்காவில் இருக்கிறான். வருடம் ஒரு முறைதான் வருவான். நான் வீட்டிலிருக்கும் இல்லத்தரசி. எப்போதும் கதை புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன். நீங்கள் இப்போதுதான் புது வீடு வாங்கி குடி வந்திருக்கிறீர்கள். ஏதாவது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன். “ என்றேன்.

    ” என் பெயர் சித்ரா. என் கணவர் பெயர் ராஜன். அவர் ஒரு தனியார் வங்கியில் பணி செய்கிறார். எங்களுக்கும் ஒரே பையன். அவன் பெயர் மாதவன். பத்து வயது. கே கே நகரில் ஒரு பள்ளியில் படிக்கிறான். மற்றவற்னற அப்புறம் விரிவாக சொல்கிறேன். என்றார் அந்தப் பெண்மணி.

    “ எதிர் வீட்டில் யாருமில்லை என்று கவலைப்பட்டோம். நீங்கள் வந்து விட்டதில் எங்களுக்கு நிரம்ப மகிழ்ச்சி. ராதா உங்களுக்கு ஏற்ற தோழியாகயிருப்பாள். “ என்றார் என் கணவர் சிரித்துக்கொண்டே.

    “ இலை போட்டாகிவிட்டது. எல்லாரும் சாப்பிட வரலாம் “ என்று எதிர் வீட்டிலிருந்து ஒரு மாமா உரக்க கத்தினார்.

    சித்ரா எங்கள் வீட்டை விட்டு அவசரமாக நகர்ந்தார்.

    அன்று எதிர் வீட்டில்தான் நானும் என் கணவரும் அறுசுவை உணவு உட்கொண்டோம்.

    மாலை நேரத்தில் எதிர் வீட்டில் சாமான்கள் வந்திறங்கின. சித்ராவும் அவள் கணவரும் சாமான்களை எல்லாம் எடுத்து வைக்க வேண்டிய இடத்தில் வைத்து வீட்டை அழகு படுத்தினார்கள்.

    இரண்டு நாட்கள் கழித்து மாடி வீட்டு பத்மா என்னிடம் வலிய வந்து பேசிக் கொண்டிருந்தாள். அவள் சுவாபமே அதுதான். ஏதாவது வேலையிருந்தால், தேவையிருந்தால் தானே வந்து பேசுவாள். இல்லாவிட்டால் கண்டு கொள்ள மாட்டாள். சில சமயம் மற்றவர் புண்படும்படி பேசிவிடுவாள். மற்றபடி அவள் நல்லவள்தான். அப்போது சித்ராவும் அங்கே வந்தாள். நான் பத்மாவை சித்ராவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

    “ இவங்க பெயர் பத்மா . பட்டாபி சாஸ்திரிகள் மனைவி. எம் காம்  படித்திருக்கிறார். திருச்சி சொந்த ஊர்.  முதல் மாடியில் இருக்கிறார்கள். பட்டாபி சாஸ்திரிகள் நன்கு வேதம் படித்தவர், தீட்சிதர். அவர் தங்கக் கம்பி . அந்தச் சமயம்  பட்டாபி சாஸ்திரிகள் வந்தார் . பத்மா தன் கண்வரை சித்ராவிற்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

    கம்பீரமான குரலில் ‘வணக்கம்’ என்று சொன்ன சாஸ்திரிகளைப் பார்த்து சித்ரா இருகரம் கூப்பி வணங்கினாள். சாஸ்திரிகளால் சித்ராவின் குடும்பத்திற்கு பெரும் நன்மை ஏற்படப்போகிறது என்பது அவளுக்கு அப்போது தெரியாது.

    அடுத்த நாள் சித்ராவின் வீட்டிற்குப் போயிருந்தேன். ஜன்னலுக்கு கண்ணைக் கவரும் அழகான திரைச்சீலையெல்லாம் போட்டு வீடு அழகுடன் காட்சியளித்தது.

    அங்கு ஓரு சிறுவன்  கையில் ஒரு புத்தகம் வைத்து புரட்டிக் கொண்டிருந்தான். பால் வடியும் முகம். நான் அவனைப் பார்த்தேன். அவன் முதலில் என்னைப் பார்க்கவில்லை. நான் அவனை உற்றுப் பார்த்தபோது அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான்.

    “உன் பெயர் என்ன? “ என்ன படிக்கிறாய்?”

    அவன் பேசாமல் சிரித்தான். அவன் பெயர் மாதவன். அவன் எதுவும் பேசமாட்டான்.அவனுக்கு காது கேட்கும் . முயற்சி செய்தால் பேசலாம். ஆனால் பேச மாட்டான். அவன் ஆடிசம் என்ற நோயால் சின்ன வயதிலிருந்தே பாதிக்கப் பட்டான். குழந்தையாய் இருந்தபோது தாமாத பேசுவான் என்று பார்த்தோம். டாக்டரிடம் பரிசோதனை செய்தபோதுதான் தெரிந்தது அவனுக்கு  ஆடிசம் நோய் வந்திருக்கிறது என்று. நாம் பேசுவது அவனுக்குக் கேட்கும். என்ன சொல்கிறோம் என்பது புரியும். ஆனால் பதில் பேச மாட்டான். ஏதாவது ஒரு புத்தகத்தை எப்போதும் கையில் வைத்திருப்பான். அவன் உலகமே வேறு. நாங்கள் அவனைப் புரிந்து கொண்டு  அவனுக்கு அன்பை ஊட்டி வளர்க்கிறோம்..” என்றாள் சித்ரா.

    எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.  இந்தச் சிறுவனுக்கா இப்படிப்பட்ட நிலைமை?  என்று வருத்தப்பட்டேன்.

     மாதவன் பேச முடியாமல் இருக்கிறானே என்பது  உங்களுக்கு பெரிய குறையில்லையா?” தழுதழுத்த குரலில் கேட்டேன்.

    என்ன செய்ய முடியும். குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்துதான் எங்களுக்கு  இந்தக் குறை இருக்கிறது என்பது தெரியும். முதலில் வேதனையாகயிருந்தாலும் யோசித்துப்பார்த்ததில்  பிரச்சனையைக் கண்டு வருந்துவதை விட ஏதாவது செய்வதுதான் யதார்த்தம் என்று புரிந்தது. எங்களை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டோம். அவனுடன் வெகுநேரம் செலவழிக்கிறோம். நன்றாக பேசும் குழந்தைகளைப் பார்த்து மனம் சஞ்சலப்படாமல் இருக்க பழகிக் கொண்டோம். எங்களுக்கு கடவுள் கொடுத்ததை ஏற்றுக்  கொண்டுவிட்டோம்.மாதவன் மேல் பிரத்யேகமாக கவனம் செலுத்துகிறோம். கே கே நகரில் இந்த மாதிரி ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு சிறப்பு பள்ளியிருக்கிறது. மாதவன் அங்குதான் படிக்கிறான். காலை எட்டு மணியிலிருந்து பகல் ஒரு மணிவரை பள்ளிக்கூடம் . தினந்தோறும் ஒரு டீச்சர் வந்து மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணிவரை அவனுக்குப் பாடம் கற்றுக்கொடுத்துவிட்டு போகிறார். டீச்சர் என்றால் மாதவனுக்கு ரொம்ப பயம். ஒழுங்காக படிப்பான். டாக்டரிடம் மாதம் ஒருமுறை காண்பிக்கிறோம். அவர் சொன்னபடி மருந்து கொடுக்கிறோம். குழந்தையை பெற்றவர்கள்தானே பாரத்தை சுமக்க வேண்டும். ஆனால் அவனை எங்களுக்குப்  பாரமாக ஒருபோதும் நினைப்பதில்லை. ராஜன் அவருக்குத் தெரிந்த தஞ்சாவூர் ஜோதிடரிடம் மாதவன் ஜாதகத்தைக் காண்பித்துக் கேட்டதில் அவன் இன்னும் ஒரு வருடத்தில் பேசிவிடுவான் என்று சொல்லியிருக்கிறார். எங்களுக்கும் மாதவன் கூடிய விரைவில் பேசி விடுவான் என்ற நம்பிக்கையிருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை” என்றாள் புன்முறுவலுடன்.

    ” காலைக் கடன்களை அவனே கழித்துவிடுவானா? “

    பல் விளக்குவது, காலை கடனை கழிப்பதற்கு உதவி செய்வது , குளிப்பாட்டுவது, உடை அணிவிப்பது, உணவு ஊட்டுவது போன்ற எல்லா வேலைகளையும் நாம்தான் செய்ய வேண்டும். அவன் குழந்தை. அவனுக்கு என்ன தெரியும்? “

    ”உங்களுக்கு வேலை அதிகம். அவனைப் பார்த்து கொள்வதற்கே நேரம் சரியாகயிருக்குமே?

    “என்ன செய்வது? செய்துதானே ஆக வேண்டும்.

    images (3)

    ‘கவலைப் படாதீங்க சித்ரா. மாதவன் சீக்கிரம் பேசி விடுவான். நான் சீரடி பாபாவின் பக்தை. நான் பாபாவிடம் பிரார்த்தனை செய்கிறேன். அவருடைய அருள் அவனுக்குக் கண்டிப்பாகயிருக்கும்’ என்று சொல்லிவிட்டு என் வீட்டுக்கு  வந்து விட்டேன்.

    அபிநயா குடியிருப்பில் தினந்தோறும் நடக்கும் அரட்டைக் குழுவில் நான் வம்பளக்க போக மாட்டேன்.  சித்ராவும் அதில் சேர மாட்டாள்.. சித்ராவிடம் இன்னொரு  நல்ல குணம் உண்டு.  அவள் காலை வேலையில் ஏதாவது ஒரு சுலோகம் சொல்லிக்கொண்டிருப்பாள். ஒரு நாள் அபிராமி அந்தாதி சொல்லிக் கொண்டிருப்பாள். ஒரு நாள் அவள் வாய் கந்த சஷ்டி கவசத்தை முணுமுணுத்துக் கொண்டிருக்கும். இந்த நல்ல குணத்திற்காக அவளை எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. நாளாக ஆக எங்கள் நட்பு வலுபெற்றது. அந்நியர்களாகயிருந்த நாங்கள் மிகவும் அன்யோன்யமாக ஆகிவிட்டோம். அந்தக்  குடியிருப்பில் இருந்தவர்கள் எங்களை உடன் பிறவா சகோதரிகளாக பார்த்தார்கள் . சித்ரா என்னை “ அக்கா” என்று அழைக்க ஆரம்பித்தாள். நானும் எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சித்ரா என் தங்கை போல என்று சொன்னேன். நான் எப்போது வேண்டுமானாலும் அவள் வீட்டிற்குள் நுழைவேன். அவள் எப்போது வேண்டுமானாலும் என் வீட்டிற்குள் வருவாள். எதிர் வீடு என்ற பாகுபாடு எங்களுக்குள் முற்றிலும் போய் விட்ட்து.

    ஒரு நாள் எதிர்  வீட்டிற்குள் போனபோது சித்ரா வீட்டில் இல்லை . மாதவன் மட்டும் தனியாகயிருந்தான். என்னைப் பார்த்ததும் உறுமினான்.  வாயிலிருந்து சப்தம் மட்டும் வந்தது. என் கையைப்பிடித்து சமையலறைக்கு அழைத்துச் சென்றான். சாப்பிடும் தட்டை காண்பித்தான். அவனுக்குப் பசி என்று புரிந்த்து. தட்டில் தயிர் சாதம் பிசைந்து வைத்து அவனுக்கு ஊட்டினேன்.மருந்து வாங்க போயிருந்த சித்ரா வீட்டிற்குள் நுழைந்தபோது மாதவன் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த அவள் முகம் மலர்ந்தது.

    ”மாதவனுக்கு உணவு கொடுக்க வேண்டுமே என்று அவசரமாக வந்தேன். நல்ல வேளை, நீங்கள் அவனுக்கு உணவு கொடுத்துவிட்டீர்கள். அவனுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு எப்படி தோன்றியது” என்றாள்.

    “ அவன் என் கையைப் பிடித்துக் கொண்டு சமையல் அறைக்கு அழைத்துச் சென்று சாப்பிடும் தட்டை காண்பித்தான். அதனால் அவனுக்குப் பசி என்று புரிந்தது.

    சித்ராவின் முகத்தில் பெருமிதம் தெரிந்த்து.

    “ மாதவன் ரொம்ப புத்திசாலி என்று கூறியவள் என் கையைப் பிடித்து கொண்டு “ ரொம்ப நன்றி அக்கா. மாதவன் உங்களிடம் வித்தியாசம் பார்க்காமல் நடந்து கொள்கிறான். அவன் வேறு யாரிடமும் இதுபோல் செய்ததில்லை “ என்று கண் கலங்கினாள்.

    இதெற்கெல்லாம் நன்றி எதற்கு ? மாதவன் என் பிள்ளையைப் போல “ என்று அவள் முதுகில் தட்டிக் கொடுத்தேன்.

    அப்போது பத்மா அங்கே வந்தாள். மொட்டை மாடியில் நிலாச் சோறு சாப்பிட வேண்டும் என்று என் பெண் காஞ்சனா பிடிவாதம் பிடிக்கிறாள் “ என்றாள்.

    ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று மொட்டை மாடியில் குழந்தைகள் விளையடிவிட்டு நிலாச்சோறு சாப்பிடுவார்கள்.

    இன்று பெளர்ணமி. மாதவனை யாரும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். எனவே மாதவன் மொட்டை மாடிக்கு விளையாட போக மாட்டான்.

    மாதவன் ஏக்கத்துடன் தன் அம்மாவைப் பார்த்தான். சித்ரா மாதவனின் கன்னத்தை லேசாக தட்டி விட்டு “ மாதவனுக்குப் படிக்க வேண்டும் மாலை டீச்சர் வநது விடுவார், ” என்றார்.

    என்னுடைய கைபேசி ஒலிக்கவே நான் அவசரமாக என் வீட்டிற்குள் வந்து விட்டேன். பத்மா சித்ராவிடன் பேசிக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் எங்கள் பிளாட்ஸ் வாட்ச்மேன் டேவிட் அங்கே வந்தார். நல்ல மனிதர். வயது அறுபத்தி ஐந்து. பருமனான உருவம். மேலே வானத்தை அன்னாந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிலிருந்து ஓடி வந்த மாதவன் அவருடைய பானையைப் போலிருந்த தொப்பையில் ஓங்கி ஒரு குத்து விட்டான். ” ஐயோ, அம்மா ” என்று டேவிட் வயிற்றைப் பிடித்துக்கொண்டு அலறினார். மாதவன் அப்படி குத்துவான் என்று அவர் எதிர் பார்க்கவேயில்லை. பத்மா விழுந்து விழுந்து சிரித்தாள். சப்தம் கேட்டு நான் வெளியே வந்தேன்.

    ” வாட்ச்மேன் தொப்பையைக் காண்பித்துக்கொண்டு நின்றிருந்திருந்தால் மாதவன் குத்தாமல் என்னப் பன்னுவான் ?” சிரித்தாள் பத்மா  கொஞ்சம் கூட இரக்கமில்லாமல்.

    நான் பத்மாவை பார்த்து முறைத்தேன்.

    சித்ரா “ சாரி வாட்ச்மேன் “ என்றாள்.

    “ பரவாயில்லையம்மா , குழந்தைக்கு என்ன தெரியும் ? ஏதோ தெரியாமல் செய்துவிட்டான் “ என்று பெருந்தன்மையோடு சொன்னார்.

    செய்வதையும் செய்துவிட்டு ஒன்றும் செய்யாதவன் போல் மாதவன், டேவிட் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

    ” மாதவா, வீட்டுக்கு போ “ என்றேன்.

    மன சஞ்சலத்துடன் இருந்த சித்ரா, “ அவன் எப்போதும் அப்படிதான். சில சமயம் என்ன செய்வான் என்பதை அனுமானிக்க முடியாது“என்றாள் வேதனையுடன்.

    இரவு என் கணவரிடம் இந்தச் சம்பவத்தை பற்றிச் சொன்னேன்.

    அவர், ” வாட்ச்மேன் நல்லவர் . அதனால் மாதவன் மேல் கோப்ப்பட வில்லை. அவர் அந்தச் சிறுவனை அடித்தால் என்ன ஆகியிருக்கும் “ என்றார்.

    ” நீங்கள் சொல்வது மிகவும் சரி.”

    இப்பொழுது நானும் மாதவனும் ரொம்ப நட்பாகிவிட்டோம். டீச்சர் வராத நாட்களில் நான் அவனுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பேன்.

    ஒரு முறை நான் திருச்சிக்குப் போயிருந்தேன். மூன்று நாட்கள் ஊரிலில்லை. நான் ஊரிலிருந்து திரும்பி வந்த்தும் சித்ரா என்னிடம் “ ராதா, நீ ஊருக்குப் போயிருந்தபோது மாதவன் உன்னைத் தேடினான். உங்கள் வீட்டு சமையலைறையின் பின் பக்கம் நின்று நீ இருக்கிறாயா என்று சன்னல் வழியாக பார்த்தான் “ என்றாள்.

    நான் மாதவனுக்காக ஊரிலிருந்து வாங்கி வந்த இனிப்பைக் கொடுத்தேன்.

    அடுத்த நாள் காலை சித்ரா மாதவனுடன் வந்தாள். அவள் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டாள். காட்டன்  புடவை கட்டியிருந்தாள். கூந்தலை அள்ளி முடித்து கொண்டைப் போட்டிருந்தாள்.  நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து பார்ப்பதற்கு பவித்தரமாக காட்சி அளித்தாள்.

    ” வா சித்ரா, கோவிலுக்கு போய் கொண்டிருக்கிறாயா?

    ” அம்பாளுக்கு அபிராமி அந்தாதி படித்து பூஜை செய்துவிட்டு வருகிறேன். பட்டாபி சாஸ்த்ரிகள் ஒருத்தர் வீட்டில் அமாவாசை தர்ப்பணம் செய்து வைக்கப் போயிருந்தபோது ஒரு டாக்டரை பார்த்தாராம். அவர் இலண்டினில் ஆடிசம் நோயைப் பற்றி சிறப்பு பயிற்சி பெற்றவர். நிபுணர். அண்ணா நகரில் ஆஸ்பிட்டல் வைத்திருக்கிறார் .அவரிடம் காட்டலாமே என்றூ சாஸ்திரிகள் சொன்னார். அவர் சொன்ன யோசனை எனக்கு சரியாக  பட்டது. நிபுணர் டாக்டரிடம் போனில் பேசினேன். இன்று காலை அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருக்கிறார். மாதவனை அழைத்த்துக் கொண்டு ஆஸ்பிட்டலுக்குப் போகிறேன்.” என்றாள்.

    சிலர் யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன ? தான் உண்டு தன் வீடு என்று சுயநலமாக இருப்பார்கள். ஆனால் பட்டாபி சாஸ்திரிகள் அப்படிப் பட்டவர் இல்லை. பிறருக்கு உதவி செய்வது அவருடைய பிறவி குணம். வள்ளுவர் கூறியதுபோல் காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப்ப்பெரிது. எனவே சாஸ்திரிகள் செய்த உதவி மிகப் பெரிய உதவிதான். அவருடைய உயர்நத குணத்தை பாராட்டத்தான் வேண்டும்.   மாதவன் ஏதாவது சொதப்பிட போகிறான். பத்திரமாக பார்த்துக்கொள் மாதவனுக்கு நல்ல நேரம் பிறந்து விட்டது. உடனே போ. நான் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன், என்றேன்.

    அன்று மாலை சித்ரா ஆஸ்பிட்டலிலே தங்கி விட்டாள். டாக்டர் அறுவை சிகிட்சை செய்திருக்கிறார். மாதவன் ட்ஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் “ என்று வாட்சுமேன் சொன்னார்.

    அவனுக்கு பேச வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

    அடுத்த நாள் பொழுது விடிந்து கதிரவன் தகதகவென்று கீழ்த்திசையில் எழுந்தான். சமையலை முடித்துவிட்டு சீரடி சாய் பாபா படத்தின் முன்  உட்கார்ந்தேன்.

    ” நம்பிக்கை , பொறுமையுடன் உன்னை துதிக்கிறேன் பாபா.

      உன் திருபாதங்களில் சரண் அடைகிறேன் பாபா

     என் தாயும் நீயே, உடல் பிணி தீர்க்கும் தன்வந்தரியும் நீயே பாபா

     உன் சேய் மாதவன் துயர் துடைத்து நிம்மதி அளிப்பாய் சாய்நாதா.”

     

    என்று மனமுருகி பிரார்த்தனை செய்தேன். பாபாவிற்கு ஆரத்தி காண்பித்துக் கொண்டிருக்கும்போது கைபேசி அழைத்தது . சித்ராவின் கணவர் ராஜன் என்னை உடனே ஆஸ்பிட்டலுக்கு வர சொன்னார். அவர் குரலில் கவலை தோய்ந்திருந்தது. மாதவனுக்கு ஏதாவது பிரச்சனையா என்ற கேள்விக்கு சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. அந்தக் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ என்ற கலங்கிய மனத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு ஆட்டோவைப் பிடித்து அண்ணா நகர் வந்தேன். ஆஸ்பிட்டலில் நுழையுமிடத்தில் நான்கு டாக்டர்கள் ஒன்று சேர்ந்து விவாதித்து கொண்டிருந்தார்கள். பட்டாபி சாஸ்திரிகளும் அவர்கள் பக்கத்தில் இருந்தார். நான்  “மாதவன் எங்கிருக்கிறான்? “  என்று  ரிசப்ஷனில் விசாரித்து கொண்டு பரபரப்புடன் மாதவனிருந்த அறைக்கு வந்தேன். எனக்கு மூச்சு வாங்கியது.

    கட்டிலில்  மாதவன் படுத்திருந்தான். பக்கத்தில் சித்ரா தரையில் அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் கண்ணீர். உதட்டில் கையை வைத்து  மாதவனை நோக்கி கையைக் காண்பித்தாள். நான் திடுக்கிட்டேன்.

    ‘சித்ரா மாதவனுக்கு என்ன ஆச்சு ? ’ என்றேன் கலவரத்துடன்.

    அவள் என்னைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. நான் பேசியது எதுவும் அவள் காதில் விழுந்ததாகவும்  தெரியவில்லை.

    “ அற்புதம் நிகழ்ந்து விட்டது. மாதவன் இன்று அம்மா என்றூ பேசத் துவங்கி விட்டான்’ …………… என்றார் ராஜன்.

    “ மிகவும் மகிழ்ச்சிதரும் விசயம்தானே. சித்ரா ஏன் பேசாமலிருக்கிறாள்?. மாதவா உனக்குப் பேச்சு வந்துவிட்டது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. பாபா என் வேண்டுதலை நிறைவேற்றி விட்டார். உனக்கு என்ன வேண்டும் சொல்? ” என்றேன்.

    ”எனக்குப் பேச்சு வந்துவிட்டது. ஆனால் அம்மா ஊமையாயிட்டா . அம்மா பேச வேண்டும். அதுதான் எனக்கு வேண்டும் ……………………….“ விம்மி விம்மி அழுதான் மாதவன்.

    ” பெருமாளே ! இதென்ன கொடுமை. ஒருத்தருக்கு இன்பத்தை கொடுக்கிறே.. இன்னொருத்தருக்கு துன்பத்தை கொடுக்கிறே. உன் மனசென்ன கல்லா. சித்ரா என்ன தப்பு பன்னாள். ஏன் அவளுக்கு இந்தத் தண்டனை ?……………” என்றேன் கரகரத்த குரலில்.

    அதிகமான சோகம் ஒருவரை பாதிப்பது போல் அதீத மகிழ்ச்சியும் ஒருவரை பாதிக்கும் போலிருக்கு. மாதவன் பேசிவிட்டான் என்பதில் ஏற்பட்ட மிதமிஞ்சிய சந்தோஷத்தால் சித்ரா பேச்சையிழந்துவிட்டாள். சைகாலஜி  டாக்டர் வந்து பார்க்க வேண்டும். போகப்போக சரியாகிவிடும்“ என்றார் ராஜன் வேதனையுடன்.

    நான் வருத்தத்துடன் சித்ராவைப் பார்த்தேன்.

    அவள் எதையும் கண்டு கொள்ளாமல் திரும்பத் திரும்ப தன் உதட்டில் கை வைத்து  மாதவனை நோக்கி கையை காண்பித்துக் கொண்டிருந்தாள்.

                             ****** நிறைவு *****

    Share