உமாஸ்ரீ

அதிகாலை நேரம். இருள் நீங்கி வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக படர்ந்து கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று பார்த்தால் வேத கோஷங்களின் இனிமையான இசை என்னை எழுப்பி விட்டது. என் கணவர் பக்கத்தில் நன்றாக குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தார். இடியே விழுந்தாலும் அவர் தூக்கம் கலையாது. அப்படி ஒரு வரம் வாங்கிக்கொண்டு பிறந்திருக்கிறார். நான் அதற்கு நேர் எதிர். சிறு ஓசை கேட்டாலும் எழுந்து விடுவேன்.

   வாசல் கதவைத் திறந்து பார்த்தேன். எதிர் வீட்டில் நான்கு சாஸ்திரிகள் வேதபாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். வாசலில் செம்மண் இட்டு பெரிய கோலம் கண்ணைக் கவர்ந்தது. வீட்டை புதியதாக வாங்கியவர்கள் அதைப் புதுப்பித்து ஹோமம் செய்கிறார்கள். அன்று எதிர் வீடு கோலாகலமாகயிருந்தது.

நாங்கள் குடியிருக்கும் ”அபிநயா பிளாட்ஸ் “ கோடம்பாக்கத்திலிருக்கிறது. கீழே இரண்டு வீடுகள். முதல் மாடியில் மூன்று, இரண்டாவது மாடியில் மூன்று  ஆக மொத்தம் எட்டு  வீடுகள் கொண்ட அழகான அடுக்கு மாடி குடியிருப்பு. உள்ளே நுழைந்தவுடன் இடது பக்கம் இரண்டு திண்ணைகள் இருக்கும். காலை பத்து மணிக்கு அந்தத் திண்ணைகளில் வீட்டிலுள்ள வேலைக்குப் போகாத பெண்கள் அமர்ந்து அரட்டைக் கச்சேரி நடத்துவார்கள். மாலைநேரத்தில் முதியவர்கள் அந்தத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.

நான் கீழேயிருக்கும் வீட்டில் குடியிருக்கிறேன். முதல் மாடியில் பட்டாபி சாஸ்திரிகள் அவர் மனனவி பத்மா, குழந்தை காஞ்சனா இருக்கிறார்கள்.

என் எதிர் வீடு ரொம்ப நாளாக பூட்டியிருந்தது. போன மாதம் தான் விற்றுப் போனது.

அபிநயா பிளாட்சில் உள்ளவர்கள் எல்லோரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அன்பும் பண்பும் நிறைந்தவர்கள.  ஒருவருக்கு ஒருவர் வலிய வந்து உதவி செய்வார்கள். ஓரிருவர் மட்டும் அதற்கு விதிவிலக்கு.

நான் கதவை மூடி விட்டு வீட்டிற்குள் வந்துவிட்டேன். சிறிது நேரத்தில் என் கணவரும் எழுந்து பல் துலக்கி முகம் கழுவி  தேநீர் பருக வந்தார்.

” இன்று காலை எதிர் வீட்டில் பூஜை நடந்தது. வீட்டை விலைக்கு வாங்கியவர்கள் வந்து விட்டார்கள். “ என்றேன்.

” நல்ல செய்தி. ஆறு மாத மாதத்திற்கு மேல் பூட்டியிருந்த வீட்டில் இனி ஆள் நடமாட்டம் இருக்கும் என்று சொல். வருகிறவர்கள் நல்ல குடும்பமாகயிருக்க வேண்டும்.”

“ ஆமாம். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளலாம். எனக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.”

“ இன்று என்ன சமையல்?”

“ ஞாயிற்றுக்கிழமை என்ன சமையல் செய்வேன் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்குப் பிடித்த வெங்காய சாம்பாரும் உருளைக்கிழங்கு வறுவலும்தான் செய்ய போகிறேன் “ என்று சொல்லி முறுவலித்தேன்.

அப்போது “  உள்ளே வரலாமா? என்று கேட்டுக் கொண்டே ஒரு நடுத்தர வயது பெண்மணி உள்ளே வந்தார். கண்ணைக் கவரும் சிவப்பு . நல்ல உடல் வாகு. சிவப்பு கலர் பார்டர் வைத்த பச்சைப் புடவையும் அதற்கு மேட்சாக அணிந்திருந்த பச்சைக் கலர் ரவிக்கையும் அவருக்குப் பாந்தமாக பொருந்தி அழகுக்கு அழகு சேர்த்தது. காதிலும், கழுத்திலும் தங்க நகைகள் மின்ன பிரமிக்க வைக்கும் பெண்ணரசியாக தோன்றினார்.

” நாங்கள் உங்கள் எதிர் வீட்டை விலைக்கு வாங்கியிருக்கிறோம். இப்போதுதான் பூஜை முடிந்தது. எங்கள் வீட்டில் நீங்கள் எல்லோரும் உணவு உட்கொள்ள வேண்டும். இன்னும் அரை மணியில் இலை போட்டுவிடுவார்கள். வீட்டில் சமையல் செய்யாதீர்கள் “ என்று புன்முறுவலுடன் அன்பு கட்டளையிட்டார். நான் என் கணவரைப் பார்த்தேன். அவர் கண்களில் சம்மதம் தெரிந்தது . அதீத அழகுடன் இருந்த அந்தப் பெண்மணியை எனக்கு முதல் பார்வையிலே பிடித்துப் போய்விட்டது.

” கண்டிப்பாக வருகிறோம். நீங்கள் அன்பாக கூப்பிடும்போது மறுக்க முடியுமா?. என் பெயர் ராதா. இவர் பெயர் ராமன். ஒரு தனியார் கம்பெனியில் பணி செய்கிறார். என்னுடைய ஒரே பையன் அமெரிக்காவில் இருக்கிறான். வருடம் ஒரு முறைதான் வருவான். நான் வீட்டிலிருக்கும் இல்லத்தரசி. எப்போதும் கதை புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன். நீங்கள் இப்போதுதான் புது வீடு வாங்கி குடி வந்திருக்கிறீர்கள். ஏதாவது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன். “ என்றேன்.

” என் பெயர் சித்ரா. என் கணவர் பெயர் ராஜன். அவர் ஒரு தனியார் வங்கியில் பணி செய்கிறார். எங்களுக்கும் ஒரே பையன். அவன் பெயர் மாதவன். பத்து வயது. கே கே நகரில் ஒரு பள்ளியில் படிக்கிறான். மற்றவற்னற அப்புறம் விரிவாக சொல்கிறேன். என்றார் அந்தப் பெண்மணி.

“ எதிர் வீட்டில் யாருமில்லை என்று கவலைப்பட்டோம். நீங்கள் வந்து விட்டதில் எங்களுக்கு நிரம்ப மகிழ்ச்சி. ராதா உங்களுக்கு ஏற்ற தோழியாகயிருப்பாள். “ என்றார் என் கணவர் சிரித்துக்கொண்டே.

“ இலை போட்டாகிவிட்டது. எல்லாரும் சாப்பிட வரலாம் “ என்று எதிர் வீட்டிலிருந்து ஒரு மாமா உரக்க கத்தினார்.

சித்ரா எங்கள் வீட்டை விட்டு அவசரமாக நகர்ந்தார்.

அன்று எதிர் வீட்டில்தான் நானும் என் கணவரும் அறுசுவை உணவு உட்கொண்டோம்.

மாலை நேரத்தில் எதிர் வீட்டில் சாமான்கள் வந்திறங்கின. சித்ராவும் அவள் கணவரும் சாமான்களை எல்லாம் எடுத்து வைக்க வேண்டிய இடத்தில் வைத்து வீட்டை அழகு படுத்தினார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து மாடி வீட்டு பத்மா என்னிடம் வலிய வந்து பேசிக் கொண்டிருந்தாள். அவள் சுவாபமே அதுதான். ஏதாவது வேலையிருந்தால், தேவையிருந்தால் தானே வந்து பேசுவாள். இல்லாவிட்டால் கண்டு கொள்ள மாட்டாள். சில சமயம் மற்றவர் புண்படும்படி பேசிவிடுவாள். மற்றபடி அவள் நல்லவள்தான். அப்போது சித்ராவும் அங்கே வந்தாள். நான் பத்மாவை சித்ராவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

“ இவங்க பெயர் பத்மா . பட்டாபி சாஸ்திரிகள் மனைவி. எம் காம்  படித்திருக்கிறார். திருச்சி சொந்த ஊர்.  முதல் மாடியில் இருக்கிறார்கள். பட்டாபி சாஸ்திரிகள் நன்கு வேதம் படித்தவர், தீட்சிதர். அவர் தங்கக் கம்பி . அந்தச் சமயம்  பட்டாபி சாஸ்திரிகள் வந்தார் . பத்மா தன் கண்வரை சித்ராவிற்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

கம்பீரமான குரலில் ‘வணக்கம்’ என்று சொன்ன சாஸ்திரிகளைப் பார்த்து சித்ரா இருகரம் கூப்பி வணங்கினாள். சாஸ்திரிகளால் சித்ராவின் குடும்பத்திற்கு பெரும் நன்மை ஏற்படப்போகிறது என்பது அவளுக்கு அப்போது தெரியாது.

அடுத்த நாள் சித்ராவின் வீட்டிற்குப் போயிருந்தேன். ஜன்னலுக்கு கண்ணைக் கவரும் அழகான திரைச்சீலையெல்லாம் போட்டு வீடு அழகுடன் காட்சியளித்தது.

அங்கு ஓரு சிறுவன்  கையில் ஒரு புத்தகம் வைத்து புரட்டிக் கொண்டிருந்தான். பால் வடியும் முகம். நான் அவனைப் பார்த்தேன். அவன் முதலில் என்னைப் பார்க்கவில்லை. நான் அவனை உற்றுப் பார்த்தபோது அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான்.

“உன் பெயர் என்ன? “ என்ன படிக்கிறாய்?”

அவன் பேசாமல் சிரித்தான். அவன் பெயர் மாதவன். அவன் எதுவும் பேசமாட்டான்.அவனுக்கு காது கேட்கும் . முயற்சி செய்தால் பேசலாம். ஆனால் பேச மாட்டான். அவன் ஆடிசம் என்ற நோயால் சின்ன வயதிலிருந்தே பாதிக்கப் பட்டான். குழந்தையாய் இருந்தபோது தாமாத பேசுவான் என்று பார்த்தோம். டாக்டரிடம் பரிசோதனை செய்தபோதுதான் தெரிந்தது அவனுக்கு  ஆடிசம் நோய் வந்திருக்கிறது என்று. நாம் பேசுவது அவனுக்குக் கேட்கும். என்ன சொல்கிறோம் என்பது புரியும். ஆனால் பதில் பேச மாட்டான். ஏதாவது ஒரு புத்தகத்தை எப்போதும் கையில் வைத்திருப்பான். அவன் உலகமே வேறு. நாங்கள் அவனைப் புரிந்து கொண்டு  அவனுக்கு அன்பை ஊட்டி வளர்க்கிறோம்..” என்றாள் சித்ரா.

எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.  இந்தச் சிறுவனுக்கா இப்படிப்பட்ட நிலைமை?  என்று வருத்தப்பட்டேன்.

 மாதவன் பேச முடியாமல் இருக்கிறானே என்பது  உங்களுக்கு பெரிய குறையில்லையா?” தழுதழுத்த குரலில் கேட்டேன்.

என்ன செய்ய முடியும். குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்துதான் எங்களுக்கு  இந்தக் குறை இருக்கிறது என்பது தெரியும். முதலில் வேதனையாகயிருந்தாலும் யோசித்துப்பார்த்ததில்  பிரச்சனையைக் கண்டு வருந்துவதை விட ஏதாவது செய்வதுதான் யதார்த்தம் என்று புரிந்தது. எங்களை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டோம். அவனுடன் வெகுநேரம் செலவழிக்கிறோம். நன்றாக பேசும் குழந்தைகளைப் பார்த்து மனம் சஞ்சலப்படாமல் இருக்க பழகிக் கொண்டோம். எங்களுக்கு கடவுள் கொடுத்ததை ஏற்றுக்  கொண்டுவிட்டோம்.மாதவன் மேல் பிரத்யேகமாக கவனம் செலுத்துகிறோம். கே கே நகரில் இந்த மாதிரி ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு சிறப்பு பள்ளியிருக்கிறது. மாதவன் அங்குதான் படிக்கிறான். காலை எட்டு மணியிலிருந்து பகல் ஒரு மணிவரை பள்ளிக்கூடம் . தினந்தோறும் ஒரு டீச்சர் வந்து மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணிவரை அவனுக்குப் பாடம் கற்றுக்கொடுத்துவிட்டு போகிறார். டீச்சர் என்றால் மாதவனுக்கு ரொம்ப பயம். ஒழுங்காக படிப்பான். டாக்டரிடம் மாதம் ஒருமுறை காண்பிக்கிறோம். அவர் சொன்னபடி மருந்து கொடுக்கிறோம். குழந்தையை பெற்றவர்கள்தானே பாரத்தை சுமக்க வேண்டும். ஆனால் அவனை எங்களுக்குப்  பாரமாக ஒருபோதும் நினைப்பதில்லை. ராஜன் அவருக்குத் தெரிந்த தஞ்சாவூர் ஜோதிடரிடம் மாதவன் ஜாதகத்தைக் காண்பித்துக் கேட்டதில் அவன் இன்னும் ஒரு வருடத்தில் பேசிவிடுவான் என்று சொல்லியிருக்கிறார். எங்களுக்கும் மாதவன் கூடிய விரைவில் பேசி விடுவான் என்ற நம்பிக்கையிருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை” என்றாள் புன்முறுவலுடன்.

” காலைக் கடன்களை அவனே கழித்துவிடுவானா? “

பல் விளக்குவது, காலை கடனை கழிப்பதற்கு உதவி செய்வது , குளிப்பாட்டுவது, உடை அணிவிப்பது, உணவு ஊட்டுவது போன்ற எல்லா வேலைகளையும் நாம்தான் செய்ய வேண்டும். அவன் குழந்தை. அவனுக்கு என்ன தெரியும்? “

”உங்களுக்கு வேலை அதிகம். அவனைப் பார்த்து கொள்வதற்கே நேரம் சரியாகயிருக்குமே?

“என்ன செய்வது? செய்துதானே ஆக வேண்டும்.

images (3)

‘கவலைப் படாதீங்க சித்ரா. மாதவன் சீக்கிரம் பேசி விடுவான். நான் சீரடி பாபாவின் பக்தை. நான் பாபாவிடம் பிரார்த்தனை செய்கிறேன். அவருடைய அருள் அவனுக்குக் கண்டிப்பாகயிருக்கும்’ என்று சொல்லிவிட்டு என் வீட்டுக்கு  வந்து விட்டேன்.

அபிநயா குடியிருப்பில் தினந்தோறும் நடக்கும் அரட்டைக் குழுவில் நான் வம்பளக்க போக மாட்டேன்.  சித்ராவும் அதில் சேர மாட்டாள்.. சித்ராவிடம் இன்னொரு  நல்ல குணம் உண்டு.  அவள் காலை வேலையில் ஏதாவது ஒரு சுலோகம் சொல்லிக்கொண்டிருப்பாள். ஒரு நாள் அபிராமி அந்தாதி சொல்லிக் கொண்டிருப்பாள். ஒரு நாள் அவள் வாய் கந்த சஷ்டி கவசத்தை முணுமுணுத்துக் கொண்டிருக்கும். இந்த நல்ல குணத்திற்காக அவளை எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. நாளாக ஆக எங்கள் நட்பு வலுபெற்றது. அந்நியர்களாகயிருந்த நாங்கள் மிகவும் அன்யோன்யமாக ஆகிவிட்டோம். அந்தக்  குடியிருப்பில் இருந்தவர்கள் எங்களை உடன் பிறவா சகோதரிகளாக பார்த்தார்கள் . சித்ரா என்னை “ அக்கா” என்று அழைக்க ஆரம்பித்தாள். நானும் எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சித்ரா என் தங்கை போல என்று சொன்னேன். நான் எப்போது வேண்டுமானாலும் அவள் வீட்டிற்குள் நுழைவேன். அவள் எப்போது வேண்டுமானாலும் என் வீட்டிற்குள் வருவாள். எதிர் வீடு என்ற பாகுபாடு எங்களுக்குள் முற்றிலும் போய் விட்ட்து.

ஒரு நாள் எதிர்  வீட்டிற்குள் போனபோது சித்ரா வீட்டில் இல்லை . மாதவன் மட்டும் தனியாகயிருந்தான். என்னைப் பார்த்ததும் உறுமினான்.  வாயிலிருந்து சப்தம் மட்டும் வந்தது. என் கையைப்பிடித்து சமையலறைக்கு அழைத்துச் சென்றான். சாப்பிடும் தட்டை காண்பித்தான். அவனுக்குப் பசி என்று புரிந்த்து. தட்டில் தயிர் சாதம் பிசைந்து வைத்து அவனுக்கு ஊட்டினேன்.மருந்து வாங்க போயிருந்த சித்ரா வீட்டிற்குள் நுழைந்தபோது மாதவன் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த அவள் முகம் மலர்ந்தது.

”மாதவனுக்கு உணவு கொடுக்க வேண்டுமே என்று அவசரமாக வந்தேன். நல்ல வேளை, நீங்கள் அவனுக்கு உணவு கொடுத்துவிட்டீர்கள். அவனுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு எப்படி தோன்றியது” என்றாள்.

“ அவன் என் கையைப் பிடித்துக் கொண்டு சமையல் அறைக்கு அழைத்துச் சென்று சாப்பிடும் தட்டை காண்பித்தான். அதனால் அவனுக்குப் பசி என்று புரிந்தது.

சித்ராவின் முகத்தில் பெருமிதம் தெரிந்த்து.

“ மாதவன் ரொம்ப புத்திசாலி என்று கூறியவள் என் கையைப் பிடித்து கொண்டு “ ரொம்ப நன்றி அக்கா. மாதவன் உங்களிடம் வித்தியாசம் பார்க்காமல் நடந்து கொள்கிறான். அவன் வேறு யாரிடமும் இதுபோல் செய்ததில்லை “ என்று கண் கலங்கினாள்.

இதெற்கெல்லாம் நன்றி எதற்கு ? மாதவன் என் பிள்ளையைப் போல “ என்று அவள் முதுகில் தட்டிக் கொடுத்தேன்.

அப்போது பத்மா அங்கே வந்தாள். மொட்டை மாடியில் நிலாச் சோறு சாப்பிட வேண்டும் என்று என் பெண் காஞ்சனா பிடிவாதம் பிடிக்கிறாள் “ என்றாள்.

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று மொட்டை மாடியில் குழந்தைகள் விளையடிவிட்டு நிலாச்சோறு சாப்பிடுவார்கள்.

இன்று பெளர்ணமி. மாதவனை யாரும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். எனவே மாதவன் மொட்டை மாடிக்கு விளையாட போக மாட்டான்.

மாதவன் ஏக்கத்துடன் தன் அம்மாவைப் பார்த்தான். சித்ரா மாதவனின் கன்னத்தை லேசாக தட்டி விட்டு “ மாதவனுக்குப் படிக்க வேண்டும் மாலை டீச்சர் வநது விடுவார், ” என்றார்.

என்னுடைய கைபேசி ஒலிக்கவே நான் அவசரமாக என் வீட்டிற்குள் வந்து விட்டேன். பத்மா சித்ராவிடன் பேசிக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் எங்கள் பிளாட்ஸ் வாட்ச்மேன் டேவிட் அங்கே வந்தார். நல்ல மனிதர். வயது அறுபத்தி ஐந்து. பருமனான உருவம். மேலே வானத்தை அன்னாந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிலிருந்து ஓடி வந்த மாதவன் அவருடைய பானையைப் போலிருந்த தொப்பையில் ஓங்கி ஒரு குத்து விட்டான். ” ஐயோ, அம்மா ” என்று டேவிட் வயிற்றைப் பிடித்துக்கொண்டு அலறினார். மாதவன் அப்படி குத்துவான் என்று அவர் எதிர் பார்க்கவேயில்லை. பத்மா விழுந்து விழுந்து சிரித்தாள். சப்தம் கேட்டு நான் வெளியே வந்தேன்.

” வாட்ச்மேன் தொப்பையைக் காண்பித்துக்கொண்டு நின்றிருந்திருந்தால் மாதவன் குத்தாமல் என்னப் பன்னுவான் ?” சிரித்தாள் பத்மா  கொஞ்சம் கூட இரக்கமில்லாமல்.

நான் பத்மாவை பார்த்து முறைத்தேன்.

சித்ரா “ சாரி வாட்ச்மேன் “ என்றாள்.

“ பரவாயில்லையம்மா , குழந்தைக்கு என்ன தெரியும் ? ஏதோ தெரியாமல் செய்துவிட்டான் “ என்று பெருந்தன்மையோடு சொன்னார்.

செய்வதையும் செய்துவிட்டு ஒன்றும் செய்யாதவன் போல் மாதவன், டேவிட் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

” மாதவா, வீட்டுக்கு போ “ என்றேன்.

மன சஞ்சலத்துடன் இருந்த சித்ரா, “ அவன் எப்போதும் அப்படிதான். சில சமயம் என்ன செய்வான் என்பதை அனுமானிக்க முடியாது“என்றாள் வேதனையுடன்.

இரவு என் கணவரிடம் இந்தச் சம்பவத்தை பற்றிச் சொன்னேன்.

அவர், ” வாட்ச்மேன் நல்லவர் . அதனால் மாதவன் மேல் கோப்ப்பட வில்லை. அவர் அந்தச் சிறுவனை அடித்தால் என்ன ஆகியிருக்கும் “ என்றார்.

” நீங்கள் சொல்வது மிகவும் சரி.”

இப்பொழுது நானும் மாதவனும் ரொம்ப நட்பாகிவிட்டோம். டீச்சர் வராத நாட்களில் நான் அவனுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பேன்.

ஒரு முறை நான் திருச்சிக்குப் போயிருந்தேன். மூன்று நாட்கள் ஊரிலில்லை. நான் ஊரிலிருந்து திரும்பி வந்த்தும் சித்ரா என்னிடம் “ ராதா, நீ ஊருக்குப் போயிருந்தபோது மாதவன் உன்னைத் தேடினான். உங்கள் வீட்டு சமையலைறையின் பின் பக்கம் நின்று நீ இருக்கிறாயா என்று சன்னல் வழியாக பார்த்தான் “ என்றாள்.

நான் மாதவனுக்காக ஊரிலிருந்து வாங்கி வந்த இனிப்பைக் கொடுத்தேன்.

அடுத்த நாள் காலை சித்ரா மாதவனுடன் வந்தாள். அவள் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டாள். காட்டன்  புடவை கட்டியிருந்தாள். கூந்தலை அள்ளி முடித்து கொண்டைப் போட்டிருந்தாள்.  நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து பார்ப்பதற்கு பவித்தரமாக காட்சி அளித்தாள்.

” வா சித்ரா, கோவிலுக்கு போய் கொண்டிருக்கிறாயா?

” அம்பாளுக்கு அபிராமி அந்தாதி படித்து பூஜை செய்துவிட்டு வருகிறேன். பட்டாபி சாஸ்த்ரிகள் ஒருத்தர் வீட்டில் அமாவாசை தர்ப்பணம் செய்து வைக்கப் போயிருந்தபோது ஒரு டாக்டரை பார்த்தாராம். அவர் இலண்டினில் ஆடிசம் நோயைப் பற்றி சிறப்பு பயிற்சி பெற்றவர். நிபுணர். அண்ணா நகரில் ஆஸ்பிட்டல் வைத்திருக்கிறார் .அவரிடம் காட்டலாமே என்றூ சாஸ்திரிகள் சொன்னார். அவர் சொன்ன யோசனை எனக்கு சரியாக  பட்டது. நிபுணர் டாக்டரிடம் போனில் பேசினேன். இன்று காலை அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருக்கிறார். மாதவனை அழைத்த்துக் கொண்டு ஆஸ்பிட்டலுக்குப் போகிறேன்.” என்றாள்.

சிலர் யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன ? தான் உண்டு தன் வீடு என்று சுயநலமாக இருப்பார்கள். ஆனால் பட்டாபி சாஸ்திரிகள் அப்படிப் பட்டவர் இல்லை. பிறருக்கு உதவி செய்வது அவருடைய பிறவி குணம். வள்ளுவர் கூறியதுபோல் காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப்ப்பெரிது. எனவே சாஸ்திரிகள் செய்த உதவி மிகப் பெரிய உதவிதான். அவருடைய உயர்நத குணத்தை பாராட்டத்தான் வேண்டும்.   மாதவன் ஏதாவது சொதப்பிட போகிறான். பத்திரமாக பார்த்துக்கொள் மாதவனுக்கு நல்ல நேரம் பிறந்து விட்டது. உடனே போ. நான் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன், என்றேன்.

அன்று மாலை சித்ரா ஆஸ்பிட்டலிலே தங்கி விட்டாள். டாக்டர் அறுவை சிகிட்சை செய்திருக்கிறார். மாதவன் ட்ஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் “ என்று வாட்சுமேன் சொன்னார்.

அவனுக்கு பேச வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அடுத்த நாள் பொழுது விடிந்து கதிரவன் தகதகவென்று கீழ்த்திசையில் எழுந்தான். சமையலை முடித்துவிட்டு சீரடி சாய் பாபா படத்தின் முன்  உட்கார்ந்தேன்.

” நம்பிக்கை , பொறுமையுடன் உன்னை துதிக்கிறேன் பாபா.

  உன் திருபாதங்களில் சரண் அடைகிறேன் பாபா

 என் தாயும் நீயே, உடல் பிணி தீர்க்கும் தன்வந்தரியும் நீயே பாபா

 உன் சேய் மாதவன் துயர் துடைத்து நிம்மதி அளிப்பாய் சாய்நாதா.”

 

என்று மனமுருகி பிரார்த்தனை செய்தேன். பாபாவிற்கு ஆரத்தி காண்பித்துக் கொண்டிருக்கும்போது கைபேசி அழைத்தது . சித்ராவின் கணவர் ராஜன் என்னை உடனே ஆஸ்பிட்டலுக்கு வர சொன்னார். அவர் குரலில் கவலை தோய்ந்திருந்தது. மாதவனுக்கு ஏதாவது பிரச்சனையா என்ற கேள்விக்கு சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. அந்தக் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ என்ற கலங்கிய மனத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு ஆட்டோவைப் பிடித்து அண்ணா நகர் வந்தேன். ஆஸ்பிட்டலில் நுழையுமிடத்தில் நான்கு டாக்டர்கள் ஒன்று சேர்ந்து விவாதித்து கொண்டிருந்தார்கள். பட்டாபி சாஸ்திரிகளும் அவர்கள் பக்கத்தில் இருந்தார். நான்  “மாதவன் எங்கிருக்கிறான்? “  என்று  ரிசப்ஷனில் விசாரித்து கொண்டு பரபரப்புடன் மாதவனிருந்த அறைக்கு வந்தேன். எனக்கு மூச்சு வாங்கியது.

கட்டிலில்  மாதவன் படுத்திருந்தான். பக்கத்தில் சித்ரா தரையில் அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் கண்ணீர். உதட்டில் கையை வைத்து  மாதவனை நோக்கி கையைக் காண்பித்தாள். நான் திடுக்கிட்டேன்.

‘சித்ரா மாதவனுக்கு என்ன ஆச்சு ? ’ என்றேன் கலவரத்துடன்.

அவள் என்னைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. நான் பேசியது எதுவும் அவள் காதில் விழுந்ததாகவும்  தெரியவில்லை.

“ அற்புதம் நிகழ்ந்து விட்டது. மாதவன் இன்று அம்மா என்றூ பேசத் துவங்கி விட்டான்’ …………… என்றார் ராஜன்.

“ மிகவும் மகிழ்ச்சிதரும் விசயம்தானே. சித்ரா ஏன் பேசாமலிருக்கிறாள்?. மாதவா உனக்குப் பேச்சு வந்துவிட்டது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. பாபா என் வேண்டுதலை நிறைவேற்றி விட்டார். உனக்கு என்ன வேண்டும் சொல்? ” என்றேன்.

”எனக்குப் பேச்சு வந்துவிட்டது. ஆனால் அம்மா ஊமையாயிட்டா . அம்மா பேச வேண்டும். அதுதான் எனக்கு வேண்டும் ……………………….“ விம்மி விம்மி அழுதான் மாதவன்.

” பெருமாளே ! இதென்ன கொடுமை. ஒருத்தருக்கு இன்பத்தை கொடுக்கிறே.. இன்னொருத்தருக்கு துன்பத்தை கொடுக்கிறே. உன் மனசென்ன கல்லா. சித்ரா என்ன தப்பு பன்னாள். ஏன் அவளுக்கு இந்தத் தண்டனை ?……………” என்றேன் கரகரத்த குரலில்.

அதிகமான சோகம் ஒருவரை பாதிப்பது போல் அதீத மகிழ்ச்சியும் ஒருவரை பாதிக்கும் போலிருக்கு. மாதவன் பேசிவிட்டான் என்பதில் ஏற்பட்ட மிதமிஞ்சிய சந்தோஷத்தால் சித்ரா பேச்சையிழந்துவிட்டாள். சைகாலஜி  டாக்டர் வந்து பார்க்க வேண்டும். போகப்போக சரியாகிவிடும்“ என்றார் ராஜன் வேதனையுடன்.

நான் வருத்தத்துடன் சித்ராவைப் பார்த்தேன்.

அவள் எதையும் கண்டு கொள்ளாமல் திரும்பத் திரும்ப தன் உதட்டில் கை வைத்து  மாதவனை நோக்கி கையை காண்பித்துக் கொண்டிருந்தாள்.

                         ****** நிறைவு *****

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *