மனமிருத்தி வணங்கிடுவோம் !
( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )
முருகனது திருநாமம் மூச்செல்லாம் நிறைந்திருக்கும்
திருநீறு அவரிடத்தில் திகழொளியைத் தந்துநிற்கும்
வருகின்ற பொருளனைத்தும் வழங்கிடுவார் திருப்பணிக்கு
வாழ்நாளில் வாரியார் வாழ்ந்திருந்தார் வையகத்தில் !
இலக்கியங்கள் இலக்கணங்கள் எல்லாமே அறிந்திருந்தார்
தலைக்கனத்தை ஒருநாளும் தானேற்றிக் கொண்டறியார்
நிலத்திலுள்ளார் கடவுள்தமை நினைத்துவிட பேசிநின்றார்
பழுத்தசைவப் பழமாகப் பாரெல்லாம் சென்றுவந்தார் !
அருணகிரி திருப்புகழை அவர்பாடும் விதத்தாலே
அனைவருமே திருப்புகழை ஆசையுடன் படித்தார்கள்
தெருவெங்கும் அவர்பேச்சைக் கேட்டுநின்ற காரணத்தால்
முருகாவென் றழைக்கின்றார் முகிழ்ந்தெழுந்தார் மூலையெலாம் !
சிரிப்பினைக் கையாண்டு சிந்தனையை ஊட்டிநின்றார்
சிரிப்புடனே வாழ்வதற்குச் சிவனருளே தேவையென்றார்
சிரிக்காதார் வாழ்வெல்லாம் சிறக்காது வெனவுரைத்தார்
சிரித்தமுகம் கொண்டுநின்ற சிவப்பழமாம் சுவாமியவர் !
பாமரரரும் பண்டிதரும் பாராட்டப் பலசெய்தார்
பாடல்களை பிரித்ததற்குப் பாங்காக கருத்துரைத்தார்
அடுத்தவரின் முகஞ்சுழிக்க அவர்பேசும் விதமறியார்
அறிஞரெலாம் வாரியாரின் அருகுசெல்ல ஆசைப்பட்டார் !
பல்கலைக் கழகத்தில் பலவுரைகள் அவர்செய்தார்
பல்கலைக் கழகமாய் திகழ்ந்தாரே வாரியாரும்
விடைதெரியா பலவற்றை விளக்கிநின்றார் விரிவுரையால்
விடைசொல்லும் விதத்தாலே வியக்கவைத்தார் வித்தகரை !
உலகமெலாம் சென்றிடினும் ஓம்முருகா மறக்காது
முருகனது திருநாமம் முழுமனதாய் ஓதிநின்றார்
வருகின்ற அடியார்க்கு திருநீறு உவந்தளித்து
மருளகளகற்றி மனம்திருந்த மாமருந்தாய் அவரிருந்தார் !
பேசினார் எழுதினார் பெருத்தவுடல் தான்சுமந்தார்
கூசாமல் குறுகாமல் குணம்சிறக்க வாழ்ந்திருந்தார்
மாசில்லா அவர்வார்த்தை வையகத்தை வாழ்விக்கும்
காசினியில் அவர்வாழ்ந்த காலமதை நாம்நினைப்போம் !
வாரியார் சுவாமிகள் வரலாறாய் ஆகிவிட்டார்
வரலாற்றில் அவர்போல வருவதற்கு யாருள்ளார்
வையகத்தார் மனம்திருந்த மருந்தாக அவரிருந்தார்
வாரியார் சுவாமிகளை மனமிருத்தி வணங்கிடுவோம் !