Tag: க.பாலசுப்பிரமணியன்

  • தேய்மானங்கள்

    க. பாலசுப்பிரமணியன்

    அந்தத் தங்கச் சங்கிலியை பொற்கொல்லர் தன்னிடமிருந்த கல்லில் தேய்த்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

    “கொஞ்சம் மெதுவாக.. …நீங்க தேய்க்கிற வேகத்திலே தங்கமெல்லாம் அப்படியே உதிர்ந்து விழுந்திடும் போல இருக்கு” என்று சிரித்துக்கொண்டே பைரவி அவரிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்

    “சரிபாக்கறப்போ கொஞ்சம் தேய்மானம் இருக்கத்தாம்மா இருக்கும்” என்று அவரும் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்.  “நிறைய அழுக்கு ஏறியிருக்கு,,”

    “பின்னே என்ன. மூன்று தலைமுறையாக இவங்க வீட்டிலே ஒவ்வொருவர் கழுத்திலேயும் தொங்கிக்கொண்டிருக்கேனே.. ” என்று அந்த தங்கச் சங்கிலி தனது மனதிற்குள் முணுமுணுத்தது.

    “இது எங்க பாட்டி போட்டுக்கொண்டிருந்தது. அப்பொறம் எங்க அம்மா போட்டுண்டா. பின்னாலே என் கல்யாணத்தின் போது அம்மா என் கழுத்திலே போட்டுவிட்டா…” பைரவி பக்கத்திலுள்ளவர்கள் காதிலே விழும்படி பெருமையாகச் சொன்னாள்.

    “இது ரொம்ப ராசியான சங்கிலி ” பைரவி முகத்தில் ஒரு பெருமிதம் வெளிப்பட்டது.

    “ஆமா.. ஆமா .. அதனால் தான் ஊரிலே கல்யாணம் எங்கே நடந்தாலும் பைரவியோட சங்கிலி என்று என்னை கழுத்தில் போட்டு அல்லாட விட்டவர்கள் எத்தனை பேர்…” அந்தச் சங்கிலி அலுத்துக்கொண்டது .

    “இது நாலரைப் பவுன் இருக்கும்மா.. ” பொற்கொல்லர் தொடர்ந்தார்.

    “அய்யயோ… இது மொத்தம் அஞ்சு பவுனாச்சே.. ” பைரவி அலறினாள்.

    “அம்மா.. எத்தனை வருஷமா உபயோகிச்சிருக்கீங்க.. தேய்மானம் இருக்காதா… அதுக்கும் வயசாகறதில்லே.. “

    “அதுக்காக.. அதன் எடை இவ்வளவா குறையும்…” இது பைரவி.

    ‘அதான் சொன்னேனேம்மா.. நாளாக நாளாகத் தேய்மானம் அதிகமாகும் ” அவர் சமாதானப் படுத்தினார்

    “எவ்வளவு நாள் வெயில், மழை, வியர்வை என்று எதிலெல்லாம் குளிச்சிருக்கேன். உழைச்சு உழைச்சு உடம்பு குறுகிப்போச்சு.. ” என்று அந்தச் சங்கிலியும் அலுத்துக்கொண்டது.

    “என்னவோ.. இதை போட்டுட்டு புதிதாகத் தான் வாங்கணும் .” பைரவியின் ஆசைக்கு அடுத்த பரிமாணம்.

    “கொஞ்சங்கூட நன்றி இல்லை பாருங்க.. எவ்வளவு உழைச்சிருக்கேன்.. எத்தனை முறை இவளுக்காக நான்  சேட் கடையிலே துணிப்பைக்குள்ள வாயைமூடிக்கொண்டு படுத்துக்கொண்டிருக்கேன். இவள் மானத்தை காப்பாத்தியிருக்கேன்.  பையனை படிக்க வைக்கப் பணம்.. …அவ புருஷனோட தங்கச்சி கல்யாணத்துக்குப் பணம்.. வீடுகட்ட பணம்…. அவளோட பணத்துக்காக என்னை அடகு வெச்சு வாழ்க்கை நடத்தினவ.. இன்னிக்கு கையிலே காசு வந்துட்டதுன்னு, நன்றி கெட்டு என்னைத் தூக்கி எறியறாளே. ” அந்தத் தங்க சங்கிலியின் மனக்குறை யாருடைய காதிலும் விழவில்லை. ..

    “அப்போ உறுக்கிடட்டுங்களா” பொற்கொல்லர் கேட்டார்.

    “உருக்கணுமா என்ன?..” பைரவி.

    “ஆமாங்க.. அப்போதான் அழுக்கெல்லாம் போனவிட்டு என்ன சரியான எடை இருக்குன்னு கண்டுபிடிக்க முடியும் “

    தன்னுடைய உருவத்தின் கடைசி காலத்தில்  அந்தத் தங்கச் சங்கிலி தன்னுடைய பழைய நாட்களை நினைத்து பெருமை பட்டுக்கொண்டிருந்தது..

    “உருக்க எவ்வளவு நேரம் ஆகும்? எனக்கு கொஞ்சம் வெளியிலே போகணும்.. ” பைரவி தன்னுடைய அவசரத்தை வெளிப்படுத்த்தினாள்

    ” ஒரு மணி நேரம் ஆகும்.. மத்த வேலையெல்லாம் இருக்குல்ல.. நீங்க எங்கேயாவது வெளியிலே போயிட்டு வருதுன்னா வாங்க.. “

    பைரவியின் மனதில் உலவும் சந்தேகத்தை உணர்ந்துகொண்ட சங்கிலி சொன்னது.. “ஏன் பயப்படறே.. இவர் ஒன்னும் செய்ய மாட்டார்.. நீ எத்தனை தடவை நம்ப முடியாதவங்களுக்கெல்லாம் என்னை தாரை வார்த்திருக்க.. ..தைரியமாய் போ.. ” காதில் ஏதோ அடைப்பது போலிருந்ததால் பைரவி தன் காதுகளை தேய்த்துக் கொண்டாள்

    “ஏம்மா.. ரொம்ப தூரம் போணுமா…?” பொற்கொல்லர் கேட்டார்.

    ” இல்ல.. இல்ல.. இங்கே பக்கத்திலேதான்.. அந்த ரெசிடென்சி  வரைக்கும்.. “

    பொற்கொல்லர் புரியாமல் கண்களை உயர்த்திப் பார்த்தார்.

    “அதாங்க.. அந்த முதியோர் இல்லம் வரைக்கும். அங்கேதான் எங்க மாமியார் இருக்காங்க. மாசத்துக்கு ரெண்டுதடவை நானும் அவரும் போய் பார்த்திட்டு வருவோம்.. அதான்.. இவ்வளவு தூரம் வந்துட்டோமே.. அது பக்கத்திலே தானே இருக்கு .. இங்கே பாருங்க.. அந்த சன்னலிலிருந்து பார்த்தா தெரியும்.. “

    அந்த தங்கச் சங்கிலி சிரித்தது..

    அந்த மூதாட்டியின் தேய்மானத்தைவிட தன்னுடைய தேய்மானம் மிகக்குறைவுதான் என்று உணர்ந்தது.

    “என்ன. வரீங்களா .. அம்மாவைப் பார்க்கப்போலாமா? ” என்று சற்றுத் தள்ளி நாற்காலியில் அமர்ந்து அமைதியாக பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டிருந்த தன் கணவனிடம் அவள் கேட்டாள்

    அவன் தலையசைத்தான்.

    அந்தத் தங்கச் சங்கிலி உருகுவதற்குத் தன்னை தயார் செய்துகொண்டது.

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (4)

    க. பாலசுப்பிரமணியன்

    இறைவனிடம் நாம் என்ன கேட்கவேண்டும்?

    திருமூலர்-1

    ஒரு கோவிலில் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பி வரும் இரு நண்பர்களில் ஒருவன் மற்றவனிடம் கேட்டான் “நீ இறைவனிடம் என்ன வேண்டிக்கொண்டாய்?”

    இதுபோன்ற கேள்விகள் நம் வீடுகளிலும் உறவு மற்றும் சுற்றத்திலும் அடிக்கடி கேட்கப்படுகின்றது.

    “செல்வம் வேண்டும், பதவி வேண்டும், புகழ் வேண்டும், வீடு மனை வேண்டும், நல்ல குடும்பம் வேண்டும்” என்று பலவிதமான வேண்டுதல்களை நாம் மீண்டும் மீண்டும் இறைவன் முன்னே வைக்கின்றோம்., நம்முடைய வேண்டுதல்களுக்குப் பலன் கிடைக்காதபோது இறைவன் காதுகளில் நம் வேண்டுதல் விழவில்லை என்றும், இறைவன் சிலபேருக்கு மட்டும் தான்  கருணை காட்டுகிறான் என்றும், அல்லது இது நம் விதி, இதை இறைவனால் கூட மாற்ற முடியாது என்றும் சமாதானாப் படுத்திக்கொள்ளுகின்றோம். ஆனால் இறைவனோ கருணைக்கடல்! தன்னுடைய குழந்தைகளுக்கும் பக்தர்களுக்கும் ஒரு குறை அல்லது துயரம் என்றால் அவன் அதை நீக்க வழி வகுக்காமல் இருப்பானா ?

    இறைவன் கருணைக்கடல் என்றால் அதிலிருந்து உருவாகிப் பெய்கின்ற  கருணை மழை நம் மீதும் பெய்யுமா என்ற சந்தேகம் எப்பொழுதும் உள் மனத்தில் ஏற்படுகின்றது. அழைத்தால் வருவானா இறைவன்? அழைத்துத்தான் பார்த்துவிடலாமே!

    நம்முடைய பல சந்தேகங்களுக்கும் தரமற்ற விருப்பங்களுக்கு பதில் கொடுப்பதுபோலவும் வழிகாட்டுதல் போலவும் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்:

    வானின் றழைக்கும் மழைபோல் இறைவனுந்த்

    தானின்  றழைக்குங்கொல் என்று தயங்குவார்

    ஆனின்   றழைக்கும் மதுபோல்என் நந்தியை

    நானின்  றழைப்பது  ஞானங் கருதியே !

    இறைவன் நம் மீது கருணை காட்டுவானோ என்ற சந்தேகம் சிறிதளவும் வேண்டாம். எவ்வாறு ஒரு கன்று தன் தாயை நோக்கிச் செல்கின்றதோ அதுபோல நமது மனமும் அந்த இறைவனை நோக்கிச் செல்கின்றது என திருமூலர் விளக்கம் அளிக்கின்றார்.

    ஆனால், திருமூலரின் வேண்டுதல் என்ன?

    “அழைப்பது ஞானங்கருதியே ” என்று விளக்கித் தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். மாயையின் பிடியிலிருந்து விலகி அரனின் தாள்களில் ஒன்றிட விழைந்ததுதானே அவர் மனம்?

    இறைவனிடம் அளவில்லாக்  காதல் கொண்ட வள்ளலாரோ “எனக்கு அருள் செய்யாவிட்டால் அந்தப் பழி உனக்குத்தான் வரும். நீ ஏன் தாய் தந்தையன்றோ?” என்று உரிமையோடு வழக்காடுகின்றார்.

    “பழியெனக் கல்லவே தாய் தந்தைக் கல்லவோ

    பார்த்தவர்கள் ஏசார்களோ

    பாரறிய மனைவிக்கு பாதியுட லீந்தநீ

    பாலகனைக் காக்கொணாதோ

    யெழில் பெரிய அண்டங்க ளடுக்கா யமைத்த நீ

    யென் குறைகள் தீர்த்தல் பெரிதோ “

    இதற்கும் ஒரு படி மேலே சென்று மாணிக்கவாசகரோ “எல்லாவற்றையும் அன்றே உனக்குத் தந்துவிட்டேன். நீயும் ஆட்கொண்டுவிட்டாய். இப்பொழுது எனக்குத் துயரம் வந்தால் அது உனக்கு வந்தது அல்லவோ! ” என விளிக்கின்றார்

    அன்றே என்றன் ஆவியும்

    உடலும் உடமை எல்லாமும்

    குன்றே அனையாய் என்னை

    ஆட்கொண்டபோதே கொண்டிலையோ !

    இன்று ஒரு இடையூறு எனக்கு உண்டோ

    எண்தோள் முக்கண் எம்மானே

    நன்றே செய்வாய் பிழை செய்வாய்

    நானோ இதற்கு நாயகமே !

    ஆகவே, இறைவனிடம் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பதை விட, எனக்கு எது கிடைத்தால் நல்லதோ அதைக் கொடு என்று வினவுவதே உகந்தது. ஞானத்தை விட உயர்ந்த பரிசு நமக்கு கிடைப்பது அரிது!

    இறைவனின் “அருள் ஒளி”யே கிடைத்தற்கரிய மிகப்பெரிய பரிசு என்பதை உணர்ந்த வள்ளலாரோ இறைவனோடு வாதாடுகின்றார்:

    வாழையடி வாழைஎன வந்த திருக்கூட்ட

    மரபினில் யான் ஒருவன் அன்றோ வகையறிவேன் இந்த

    ஏழை படும்பாடு உனக்குத் திருவுளச் சம்மதமோ

    இது தகுமோ இது முறையோ இது தருமந்தானோ

    மாழைமணிப் பொது நடஞ்செய் வள்ளல்யான்  உனக்கு

    மகன் அல்லனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ

    கோழைஉலகு உயிர்த்துயரம் இனிப் பொறுக்க மாட்டேன்

    கொடுத்தருள் நின் அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்போதே !

    இறைவன்பால் கொண்ட அன்பால் அடியார்கள் ஒவ்வொருவரும் உளமுருகி அவன் அருளைத்தேட, அவன் கருணையை  நாட அவனோடும்  அவன் நினைவோடும்  இரண்டறக் கலந்த நிலையை நாம் காண்கின்றோம். ஆனால் திருநாவுக்கரசரோ இந்தப் பிறப்பு மட்டுமல்ல எப்படிப்பட்ட பிறப்பு எடுத்தாலும் இறைவனின் தாள்களையே நாடும் உன்னத உணர்வுநிலைக்கு நம்மை எடுத்துச் செல்லுகின்றார்.

    புழுவாய் பிறக்கினும் புண்ணியா !

    உன்அடி என்மனத்தே

    வழுவாதிருக்க வரந்தர வேண்டும் !

    இறைவனின் கருணையை நாடும் உள்ளங்களுக்கு திருமூலரின் இந்தப்பாடல் ஒரு வழிகாட்டுதலாக அமைந்துள்ளது..

    தொடருவோம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 73

    க. பாலசுப்பிரமணியன்

    அறிவுசால் சமுதாயமும் கற்றலும்

    education-1-1

    அறிவுசால் சமுதாயத்தைப் பற்றியும், அதன் வளர்ச்சி, நோக்கங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் பற்றியும் உலகளாவிய கருத்துக்கள விவாத மேடைகளிலும் அரங்கங்களிலும் மற்றும் அறிவியல், தொழில் வளர்ச்சி கருத்துக்கணிப்புக்களிலும் இடம் பெற்று வருகின்றன. கணினியின் வளர்ச்சியாலும் மற்றும் தொலைபேசித் தொழில் நுட்பங்களின் எதிர்பாராத உலகளாவிய வளர்ச்சிகளாலும் தகவல் பரிமாற்றங்களும் அதன் வாயிலாக கற்றலில் தாக்கங்களாலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அதிசயத்தக்கவையாக அமைந்துள்ளன. இந்தத் தாக்கங்கள் இன்றய காலத்தில் ஒரு குழந்தையின் பள்ளிவருகைக்கு முன்னமேயே அவர்களின் கற்றலின் போக்கை நிர்ணயித்து விடுகின்றன. பல வீடுகளில் இரண்டு மூன்று ஆண்டுகளே அடைந்துள்ள குழந்தைகள் கணினியிலும் அலைபேசிகளிலும் தன்னம்பிக்கையுடனும், திறனுடனும் உறவாடுவதைப் பார்க்கும் பொழுது மாற்றங்களின் தாக்கங்களின் வேகங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.

    இதை பற்றி தனது கருத்தை பீட்டர் டிரக்கர் என்ற ஒரு உலக பேராண்மைத்திறன் அறிவியல் மேதை இவ்வாறு கூறுகின்றார் :

    “இனி வரும் நாட்களில் “ஏழை நாடுகள்” என்பவை அவைகளுடைய பொருளாதார இயலாமையையும் வறட்சியையும் வைத்து நிர்ணயிக்கப் படாது. ஒரு நாட்டின் “அறிவுத்திறன்களையும்’ அறிவுசால் சமுதாயத்தில் ‘அவர்களின் பேராண்மையை வைத்து மட்டுமே நிர்ணயிக்கப்படும்.” (The knowledge society will inevitably become far more competitive than any society we have yet known for the simple reason that with knowledge being universally accessible there are no excuses for nonperformance. There will be no poor countries. There will only be ignorant countries. Peter Drucker)

    இந்தக் கருத்து எவ்வாறு ஒவ்வொரு நாடும் தன்னுடைய இளைய சமுதாயத்தை வரும் காலத்திற்குத் தேவையான நாட்டு வளர்ச்சிக்குத் தயாராக்க வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

    இந்த அறிவுசால் சமுதாயத்தின் குணாதிசயங்கள் என்ன? அது எவ்வாறு கற்றலையும் அதன் தலைவிதியையும் நிர்ணயிக்க உள்ளது?

    யுனெஸ்கோ என்ற உலக அமைப்பின் பல கருத்துக் கணிப்புக்களில் மற்றும் ஆய்வு வெளிச்சங்களில் காணப்பட்ட கருத்துக்கள் இவை :

    1. எல்லையின்மை (Borderlessness)
    2. வேகமான முன்னேற்றமும் ஆதிக்கமும் (Speed of change and its universality)
    3. வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்ட ஆளுமை (Access beyond success and failure)
    4. சமுதாய தொழில் ஆதிக்கங்களில் எதிர்பாராத மாற்றங்கள் (unforeseen changes in social and industrial architecture) 

    இதனால் “அறிவு” செல்வப்பெருக்கிற்க்கான மூலதனமாகவும் இயந்திரமாகவும் ஆகிவிட்டதாக உலக பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். “சிஸ்கோ” என்ற ஒரு பெரிய நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒரு மேடையில் பேசுகையில் “அறிவுசால் சமுதாயத்தில் பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை வீழ்த்தாது. வேகமாக கற்கும் நிறுவனங்கள் மெதுவாகக் கற்கும் நிறுவனங்களை வீழ்த்தும்” என்று கூறினார். (In the Knowledge society, the big will not beat the small, the faster will beat the slower John Chambers-  Former CEO, Cisco) 

    இந்த அறிவு மற்றும் தகவல்களின் வேகங்கள் பல புராதனமான மற்றும் நிரந்தரமற்ற அறிவு மாடங்களைத் தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கின்றன. பழைய தகவல்கள், அவற்றின் மூலம் வளர்க்கப்பட்ட நுண்ணறிவுகள், அவற்றின் திறன்கள் தேவையற்றனவாகவும் காலத்திற்கு உகந்ததாக இன்றியும் அமைந்து கொண்டிருக்கின்றன. இதனால் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றுக்கொள்ளப்படும் பாடத்திட்டங்களில் உடனடி மாற்றங்களும் அடிக்கடி மாற்றங்களும் தேவையாக அமைகின்றன. தற்போது அறிவின் வாழ்க்கைக் காலம் ஒரு சில வாரங்களே என உலக சமுதாய இயல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள்.

    இதன் காரணமாக “கற்றல்” என்பது பள்ளி மற்றும் கல்லூரி வரையமைப்புக்குள் மட்டுமின்றி அதற்க்கு வெளியேயும் நேரங்களையும் காலங்களையும் கடந்ததாக அமைகின்றது. எனவே தற்கால சமுதாயத் தேவைகளுக்கும் தொழில் மற்றும் அறிவுசால் தொழில்களின் தேவைகளுக்கும் உகந்தவாறு நம்முடைய கற்றலை பதப்படுத்திக்கொண்டும் வளமைப்படுத்திக்கொண்டும் இருக்கவேண்டிய நிர்பந்தத்தில் சமுதாயமே இருக்கின்றது. இதனால் தான் உலக அளவில் “கற்கும் சமுதாயங்கள்” (Learning communities) என்று வளரும் சமுதாயங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.

    ஆகவே, கற்றலும் கற்றலைச் சிறப்பிக்கின்ற ஆற்றல்களும் ஒரு பள்ளி மாணவனுக்கோ அல்லது ஒரு தனிமனிதனுக்கு மட்டுமோ அன்றி ஒரு சமுதாயத்திற்க்கே அடிப்படைத் தேவையாகக் கருதப்படுகின்றது. எனவே தான் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடத்  திட்டங்களும் கற்பிக்கும் முறைகளும் நிகழ்காலத்தை மனதில் கொண்டு மட்டுமின்றி வருங்காலத்துத் திறன்களை நினைவில் வைத்துக்கொண்டும் அமைக்கப்படுகின்றது. ஆயின் இந்தியாவைப் பொறுத்தவரை இந்த விழிப்புணர்வு மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்தப் பயணத்தில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. ஏனெனில் இந்தக் கற்றல் பயணத்தில் ஆசிரியர்கள் முன்னோடிகளாக இருந்து வழிகாட்டாவிட்டால் அதன்பலன்கள் மாணவர்களைச் சென்று அடைவதில்லை. ஆகவே பல நாடுகளில் ஆசிரியர்களை கற்றலில் “பங்குதாரர்களாக”  (Co-learners) கருதுகின்றனர்

    ஆகவே ஆசிரியர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய முந்திய படிப்புகளும் பட்டங்களும் தொழிலுக்கு ஒரு முகாந்திரமாக அமைந்தாலும் “தொடர் கற்றல்”  தொழில் தர்மத்திற்கு அடிப்படையானதாகத் தென்படுகின்றது. இந்தத் “தொடர் கற்றலுக்கு ” எவ்வளவுக்கெவ்வளவு அரசும் நிறுவனங்களும் உதவ வேண்டுமோ அதை விட கற்றலுக்கான ஆர்வமும் வேட்கையும் ஆசிரியர்களிடம் அதிகமாகத் தென்படவேண்டும்.

    (தொடரும்)

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (3)

    க. பாலசுப்பிரமணியன்

    இறைவன் எவ்வாறு நமக்கு அருளுகின்றான் ?

    திருமூலர்-1

    மாயையால் பின்னப்பட்ட இந்த உலகில்,  மாயையை உண்மை என மனம் நம்பி அதன் பின்னே செல்கின்றது.  நிலையற்ற பலவற்றை உண்மை என்று எண்ணி அதைப் பாதுகாக்கவும் பேணிப்போற்றவும் நினைக்கின்றது. “நான், எனது, தனது” என்ற உரிமைப்போராட்டத்தில் தன் மதியை இழந்து தவிக்கின்றது.

    “கயிற்றைப் பார்த்து பாம்பாக நினைத்து” பயத்தில் வாழ்கின்றது!  பயம் வரும்பொழுது மட்டும் இறைவனை நாடித் துணை சேர்க்கின்றது. எல்லாநேரத்திலும் எந்தவிதச்சூழ்நிலையிலும் இறைவன் தன்னோடு இருக்கின்றான் என்று நம்ப மறுக்கும் நெஞ்சம் “இறைவா. இப்பொழுது மட்டுமாவது என்னோடு கூட வா” என்று  அரற்றுகின்றது.

    நாம் பிழைகளை உணர்ந்து வருந்தி அழுதாலும் அவன் வருவானோ என்று ஏங்கும் பட்டினத்தார் தன்னுடைய ஐயத்தை எவ்வாறு வெளிப்படுத்துகின்றார் ? :

    கையொன்று செய்ய, விழியொன்று நாடக்

    கருத்தொன்று எண்ணப்

    பொய்யொன்று வஞ்சக  நாவொன்று

    பேசப் புலால் கமழும்

    மெய்யொன்று சாரச், செவியொன்று கேட்க,

    விரும்பிடும் யான்

    செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய்

    வினை தீர்த்தவனே  !

    இறைவன் நம்மை விட்டு எப்பொழுதாவது பிரிகின்றனா? இல்லை, நாம் தான்  நம் அறியாமையால் மாயையில் வீழ்ந்து இறைவனைத் தனிப்படுத்தி பிரிந்து நிற்கின்றோம். இறைவனின் பேராண்மையை எப்படி நம்மால் அறியவோ  வர்ணிக்கவோ கற்பனை செய்யவோ முடியும் ?

    இறைவன் நம்மை எப்படி ஆட்கொள்ளுகின்றான்? மாயையை விலக்கி எப்படி அவனோடு ஒன்றுபடுவது? நமது முயற்சியின்றியே நம்மை ஆட்கொள்ளும் இறைவனின் அளவற்ற கருணையை கண்டறிந்த மாணிக்க வாசகரோ இவ்வாறு பாடுகின்றார்.

    கறந்தபால் கன்னலொடு, நெய்கலந்தாற்போலச்

    சிறந்து , அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று,

    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்!

    இவ்வளவு நல்ல குணங்களுடன் ஒளிப்பிழம்பாக நம்மை காக்கும் இறைவனைத் திருமூலர்  எவ்வாறு காண்கின்றார்?

    இணங்கி நின்றான் எங்குமாகி நின்றான்

    பிணங்கி நின்றான் பின் முன்னாகி நின்றானும்

    உணங்கி நின்றான் அமராபதி நாதன்

    வணங்கி நின்றார்க்கே வழித்துணையாமே!

    நம்முடைய கற்பனைக்கும், எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் இடம் கொடுத்து கூப்பிட்ட குரலுக்கு நினைத்த உருவத்தில் இணங்கி வருபவனன்றோ அவன்! நாம் அவனை அழைக்காமலே தான் படைத்த உயிரினங்களைக் காக்க இசைந்து வருபவனன்றோ! அவன் நம்மைக் காக்க வரும்போது நமக்கு முன்னும் பின்னும் சுற்றியும் நின்று ஒரு அரண்போல் அமைந்து காக்கின்றான்

    இதனால் தானோ வள்ளலார் அவன் கருணையை இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் காண்கின்றார்?

    கோடையில் விளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த

    குளிர்தருவே தருநிழலே நிழல் கனிந்த கனியே

    ஓடையில் ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே

    உகந்த தண்ணீரிடை மலர்ந்த சுகந்த மண  மலரே”

    ஐம்பொறிகளின் உணர்வுகளிலும் உள்ளுணர்வாய் அவன் பரவிநிற்க ஐம்பொறிகள் படைத்தவனை வள்ளலார் எப்படியெல்லாம் ஆராதிக்கின்றார்!

    “எங்குமாகி நின்றான்” என்ற வார்த்தைகள் உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு அணுவிலும் அவன் பிரதிபலிப்பைக் காட்டுகின்றது. உயிர், உயிரில்லாப் பொருட்கள், ஐம்பொறிகள், இயற்கையின் எல்லா வடிவங்களிலும் அவன் படர்ந்து நிற்பவன்.

    இறைவனுடைய இந்த இணையற்ற நிலையை உள்ளுணர்த்த காரைக்காலம்மையாரின் பாடல் நம் அறிவுக்கு நல்லதோர் விருந்து

    அறிவானுந்  தானே  அறிவிப்பான் தானே

    அறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்ற

    மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்

    அப்பொருளுந்தானே அவன்.

    “வணங்கி நின்றார்க்கு வழித்துணையாமே” என்று உறுதிப்பட திருமூலர் சொல்லும்போழுதில் இறைவன் நம் வாழ்வில் நமக்கு ஒரு வழிகாட்டியாக மட்டுமின்றி, ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பதை நம்மால் உணரமுடிகின்றது. பெரிய புராணத்தில் சேக்கிழாரோ “வல்லை வந்தருளி என்னை வழித்தொண்ட கொண்டாய் போற்றி” என இறைவனின் கருணையைப் பார்த்து வியந்து போற்றுகின்றார் !

    அப்படியானால், வணங்காதவர்க்கு அவன் வழித்துணையாயில்லையா என்ற   நம் மனதில் தோன்ற வாய்ப்புண்டு. இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் திருமூலர் இன்னொரு பாடலில் பதிலளிக்கிறார்.

    எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்

    பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே

     

    எனக்கு இறைவன் அன்பு காட்டுவதில்லை எனறு ஒதுங்கி  நின்றோர்களும் பிழைக்க வேண்டும் என்று வேண்டும்போதெல்லாம் அவன் அவர்களுக்கு வழிகாட்டியாக மட்டுமின்றி நண்பனாகவும் உறுதுணையாகவும் இருக்கின்றான்.

    என்னே இறையின் கருணை !

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 72

    க. பாலசுப்பிரமணியன்

    சுய-அடையாளங்களின் மாறும் பரிமாணங்கள்

    education-1-1

    உலகின் மிகச் சிறந்த அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்வியைப் பற்றி தன் கருத்துக்களை வெளியிடும்பொழுது மிக அழகாகக் கூறினார்:

    ” ஒருவன் தனது பள்ளிக்காலத்தில் கற்றவைகள் அனைத்தும் மறந்த பின் எது மீதி இருக்கின்றதோ அதுவே கல்வியாகும்.” (Education is what remains after one has forgotten what one has learned in the school)

    மேற்படிக் கூற்று மிகவும் சிந்திக்கவேண்டிய ஒன்று. வார்த்தைகள், கருத்துக்கள், சிந்தனைகள் இவற்றையெல்லாம் கடந்து அவற்றை அலசி ஆராயக்கூடிய  திறன் மிகவும் இன்றியமையாதது. மாறிவரும் உலகத்தில் பல கருத்துக்கள், செயல்முறைகள், திறன்கள், சமுதாய நோக்கங்கள், அரசியல் பார்வைகள் மற்றும் அறிவியல், தொழில் சார் நுட்பங்கள் அதிவேகத்தில் மாறிக்கொண்டும் தங்கள் ஆதிக்கங்களை வளர்த்துக்கொண்டும் மாற்றிக்கொண்டும் வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் பள்ளிகளில் நாம் கற்றுக்கொண்ட பல உண்மைகள் கருத்துக்கள் கேள்விக்குறியாகவும் தவறாகவும் வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் நடைமுறைக்கும் பயனற்றதாகவும் மாறிவிடுகின்றன. ஆகவே, ஒருவருடைய கற்றலில் நிலைபெற்ற உண்மைகள், அறிவுத்துகள்கள் ஓதுக்கப்பட்டு புதிய தேடல்களும், புதிய அறிவியல் நோக்கங்களும், புதிய செயல்பாட்டுத் திறன்களும் தேவைப்படுகின்றன. மனித மனமும் மூளையும் இவைகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் மட்டுமின்றி அவற்றால் நடைமுறையில் பயன்படுத்தக் கூடிய நிர்பந்தத்தில் இருக்கின்றன. ஆகவே புதிய கற்றல்களும் புதிய திறன்களில் பயிற்சியும் முதிர்ச்சியும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் இந்த மாற்றங்களை   ஏற்றுக்கொள்ளுவதுமட்டுமின்றி அதற்கான புதிய கற்றலுக்குத் தங்களைத் தயார்செய்து கொள்ளவேண்டிய நிலை ஏற்படுகின்றது.  இந்த மாற்றங்கள் தொடர்ச்சியானவை. எனவே இதைச்சார்ந்த கற்றலும் தொடர்ச்சியானதாக அமைகின்றது. இந்தக் கற்றல் எப்பொழுது நிறைவு பெரும் என்று அடிக்கடி கேள்வி எழுப்பப்படுகின்றது. சற்றே கூர்ந்து நோக்கினால் இந்தக் கற்றல் நமது கடைசி மூச்சு உள்ளவரை விரும்பியோ விரும்பாமலோ நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆகவே தான் தற்காலக் கல்வி வல்லுனர்களும், சமுதாயச் சிந்தனையாளர்களும், மூளைநரம்பியல் ஆராய்ச்சியாளர்களும் கற்றலை  ஒரு “வாழ்நாள் தொடர் செயலாகக்” (LIfe Long Learning) கருதுகின்றனர்.

    “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்று போற்றிய நாம் இன்று இவைகளுக்கு அப்பாலும் தேவைப்படுகின்ற பல திறன்களை கற்றலின் முக்கிய மிகத்தேவையான குறியீட்டுக்களாகக் கருதி போற்றிக்கொண்டும் வளர்த்துக்கொண்டும் இருக்கின்றோம். “வருங்காலத்தின் தாக்கங்கள்” ( The Future Shock ) என்ற ஒரு அரிய சிந்தனையைத் தூண்டும் புத்தகத்தை எழுதிய ஆல்வின் டாப்ளர் (Alvin Toffler) என்ற மேதை தன்னுடைய புத்தகத்தில் சமூக மாற்றங்களையும் அதற்குத்தக்கவாறு எவ்வாறு கற்றலும் செயல்திறன்களும் மாறிவருகின்ற என்பதை அலசும்பொழுது கூறும் ஒரு சீரிய கருத்து: “கற்றலின் மாற்றங்களின் தாக்கத்தைவிட, இந்த மாற்றங்களின் வேகத்தின் தாக்கங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை”. அறிவியல், தொழில்நுட்ப மாற்றங்களின் வேகங்கள் நம்மை பிரம்மிக்கவைக்கக் கூடியதாக அமைந்துள்ளன. இந்த வேகங்களின் மாற்றங்கள் நாளொரு பொழுதும் பொழுதொரு வண்ணமும் நம்மை பின்னடையச் செய்துகொண்டிருக்கின்றன. இந்த வேகங்களின் தாக்கல் கற்றலின் அடிப்படைக் கருத்துக்களையும் சிந்தனைப் பின்னல்களையம் மாற்றுவதுமட்டுமின்றி பலவற்றை தற்கால வாழ்க்கைக்குத் தேவையற்றதாகவும் மாற்றிக்கொண்டிருக்கின்றன.

    சமுதாய மாற்றங்களை மிகப்பெரிய அளவில் நான்கு பருவங்களாக அவர் நோக்குகின்றார்:

    1. விவசாயம் சார்ந்த காலம் (Agricultural Society)
    2. தொழில்வளர்ச்சி சார் காலம் (Industrial ‘society)
    3. தகவலியல் சமூகக் காலம் (Informatics Society)
    4. அறிவுசால் சமூகக் காலம் (Knowledge Society)

    இந்த நான்கு காலங்களிலும் கருத்துக்களின் வாழ்வுக்காலத்தை ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது, முதலாக வரும் விவசாயம் சார்ந்த காலத்தில் கருத்துக்கள் பல நூற்றாண்டுகளுக்கு தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்த தொழில் சார் சமுதாயத்தில் இந்தக் கருத்துக்களின் வாழ்வுக்காலம் குறைந்து சில நூற்றாண்டுகளாக மட்டும் ஆனது. மூன்றாவதாக வரும் தகவலியல் காலத்தில் கருத்துக்களின் வாழ்வுக் காலம் சில பத்தாண்டுகளாகக் குறைந்து விட்டது. தற்போதைய அறிவுசால் சமுதாயக் காலத்தில் கருத்துக்களின் வாழ்வுக்காலங்கள் மிகக்குறைந்து சில ஆண்டுகளாக மட்டும் மாறிவிட்டன. இதன் தாக்கங்கள் கற்றலின் அடிப்படைத்தளங்களை ஆட்டிவிட்டது மட்டுமின்றி, கற்றலின் நோக்கம், முறைகள், எதிர்பார்ப்புக்கள் மற்றும் வேகத்தை அதிக அளவில் பாதித்து வருகின்றன. இதனால்தான் தற்போதைய மாணவர்களின் கற்றல் வகைகளும், போக்குகளும் சில பத்தாண்டுகளுக்குமுன் இருந்ததைவிட முற்றிலும் மாறுபட்டு இருக்கின்றன. இதைக்கருத்தில் கொண்டே ஆல்வின் டாப்ளர் கூறுகின்றார் “இருபத்தியொன்றாம் ஆண்டின் அறிவிலி எழுதப் படிக்கத் தெரியாதவன் அல்ல; ஆனால் எவனொருவன் கற்கவும், கற்றலை மறக்கவும் மற்றும் புதிய கற்றலுக்கு மாறவும் தயங்குகிறானோ அவனே அறிவிலி” (The Illiterate of the 21st century is not one be those who cannot read and write, but those who cannot learn, unlearn and relearn)

    கற்றலின் இந்த அதிவேக மாற்றங்கள் ஒரு தனிமனிதனின் சுய அடையாளங்களின் வடிவங்களையும் தன்மைகளையும் நோக்கங்களையும் வெகுவாக மாற்றிவருகின்றன. ஆகவே தற்கால மாணவர்களிடம் இந்த வேகத்தின் பாதிப்பால் ஏற்படுகின்ற சுயஅடையாள நெருக்கடிகள் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. இவற்றை சமாளிப்பதும் இதற்குத் தேவையான தீர்வுகள் ஏற்படுவதற்க்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதும் கல்வியாளர்களுக்கும் கல்விநிலையங்களுக்கும் பெற்றோர்களுக்கும் சமுதாயங்களுக்கும் ஒரு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

    (தொடரும்)

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் .. (2)

    க. பாலசுப்பிரமணியன்

    இறைவன் எங்கே இருக்கின்றான்?

    திருமூலர்-1

    “தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் ” என்று இறைவனின் பெருமையை தந்தைக்கு மட்டுமின்றி, இந்த உலகுக் காட்டியவன்  பிரகலாதன்.  ஆனால் மனித மனத்தில் அடிக்கடி எழும் சந்தேகம் “ இறைவன் எந்த வடிவத்தில் இருக்கின்றான்?, .எந்த இடத்தில் இருக்கின்றான்? அவனை எந்த வடிவத்தில் வழிபட்டால் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு நமக்கு அருள் புரிவான்? -சந்தேகத்தில் அலைகின்ற மனம் நிலைப்பட மறுக்கின்றது.

    “தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா  நந்தலாலா” என இறையுணர்வை பாரதி வெளிப்படுத்தினான்.  “காணும் இடமெல்லாம் உந்தன் வண்ணம் கண்டேன், அந்த வண்ணத்தை என்னுள்ளும் கண்டேன்” என்று கபீர்தாஸ் இறையோடு ஒன்றிய நிலையை ஆனந்தப் பரவசத்தில் அருளினார். அதே ஆனந்தப் பரவசத்தில் திளைக்கும் மாணிக்க வாசகரோ இறைவன் தரும் காட்சியை இவ்வாறு வருணிக்கிறார்:

    பத்தி வலையிற் படுவோன் காண்க ‘

    ஒருவ னென்னு மொருவன் காண்க

    விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க

    அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க

    இணைப்பரும் பெருமையி லீசன் காண்க

    அரியதில் அரிய அரியோன் காண்க

    மருவியெப்  பொருளும் வளர்ப்போன் காண்க.

    திருமூலரிடம் இவையெல்லாம் கடந்த ஆன்மீக நிலையைப் பார்க்கின்றோம்.

    அமைதியான ஆழ் சிந்தனையில் இறையின் பேராண்மையையும் ஒளிப்பரவாகத்தையும் உணர்ந்தவராக நாம் திருமூலரைக் காண்கின்றோம்.

    “ஆதியு மாய் அரனாய் உடலுள் நின்ற

    வேதியுமாய் விரிந்தார்த் திருந்தான் அருட்

    சோதியுமாய்ச் சுருங்காதா தோர் தன்மையுள்

    நீதியுமாய்  நித்தமாகி நின்றானே.”                         (15)

    “ஆதியுமாய்” என்ற அவர் கூற்றில்  இறைவனுடைய முழுமுதல் நிலையை எந்த சந்தேகமுமின்றி ஆணித்தரமாக விளக்குகின்றார். “ஆதிபகவன் முதற்றே உலகு” என்று வள்ளுவன் கூறியதுபோல் எல்லாப் பிறப்பிற்கும் படைப்பிற்கும்   பிரபஞ்சத்திற்கும் அவனே முழுபொறுப்பேற்று முன் நிற்கின்றான். ஒன்றாய், ஒருவனாய் ஒளிமயமான அவன் எல்லா உலகங்களுக்கும் வழிகாட்டி நிற்கின்றான் . . இந்த நிலையில் “ஆதியாய்” இருப்பவன் யார் என்ற ஐயம் எழுந்திடா வண்ணம் “அரனாய்” என்று சிவனிடம் தான் கொண்டுள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையை முன்னிறுத்துகின்றார்.

    “உடலுள் நின்ற வேதியுமாய்”- என்ற விளக்கத்தின் மூலம் இறைவனை எங்கும் தேடித் செல்லவேண்டிய அவசியம் இல்லை; அவன் ஒவ்வொரு உடலுக்குள்ளும் உறைந்திருக்கின்றான் என்ற பொருள் கொடுத்து சீவனுக்கும் சிவனுக்கும்  இருக்கும் நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்துகின்றார். இறைவனை உள்நிறுத்தி அலங்கரிப்பதால் உடலும் கோவில் போன்ற ஒரு புனிதத் தலமாகின்றது.. கஸ்தூரியின் மணத்தை நுகர்ந்த மான் எவ்வாறு அந்த வாசத்தில் மதியிழந்து, அது தன் நாபியின் உள்ளிருந்து வருகின்றது என்று அறியாமல் அதைத்தேடி இங்குமங்கும் அலைகின்றதோ, அதேபோல் என்னுள்ளேயே நீ இருக்கின்றாய் என்பதை மறந்து நான் எங்கெங்கோ அலைந்தேன்  என்று துயரப்படும் கபீரின் கூற்று இந்த இடத்தில நினைவுக்கு வருகின்றது, “சிந்தையெல்லாம் சிவனே: : மனத்துள் மகேசன்” என்று உணராமல் அலைகின்ற மாந்தருக்கு “உடலுள் நின்ற” என்ற கருத்து சிந்தனையைத் தூண்டுவதாக அமைகின்றது.

    “விரிந்தார்த்திருந்தான்” – என திருமூலர் சொல்லும் பொழுது இறைவனின் உலகளாவிய தன்மையும், இருக்கின்ற உயிர்களிளெல்லாம் அவன் அமைதியின் வடிவாய் அமைந்துள்ள தன்மையையும் உணர முடிகின்றது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாபெரும் மேதை வால்டைர் கூறுகின்றார் “இறைவன் எல்லாஇடத்திலும்  மையம் கொண்ட ஒரு வட்டம்; அந்த வட்டத்திற்கு சுற்றளவு கிடையாது”– “God is like a circle whose center is everywhere and circumference nowhere.” திருமூலரின் “விரிந்தார்ந்திருந்தான்” என்ற சொல்லாடல் இந்த உலகளாவிய பரந்த தன்மையை அழகாகக் காட்டுகின்றது.

    அவன் எப்படி இவ்வாறு இருக்க முடியும் என்று நமது மனதில் எழுகின்ற வினாவிற்கு பதில் தரும் வகையில் முனிவர்  “அருட்சோதியுமாய் ” என்று சொல்லி நம்மைக் குழப்பங்களிளிருது விடுவிக்கின்றார். ஒளி மயமாக அவன் இருக்கும் பொழுதில் அந்த ஒளி எல்லா அசையும் அசையாப் பொருட்களிலும் ஊடுருவி நிற்கின்ற நிலை வெளிப்படுகிறது. “ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்” என்று வள்ளலார் “அருட்பெரும் சோதியை” கண்டவுடன் அடைந்த பரவசத்தில் இறையருளின் தன்மையை விளக்கியது முன் நிற்கின்றது.

    மாணிக்கவாசகரின் கீழ்கண்ட பாடல் “விரிந்தார்த்திருந்தான்” என்ற சொல்லாடலுக்குப் பொருள் போல அமைந்துள்ளது :

    வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

    ஊனாகி உயிராகி உண்மையாய் இன்மையாய்க்

    கோனாகி யான்எனதென் றவரைக் கூத்தாட்டு

    வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.!

    “சுருங்காததோர் தன்மை “என மீண்டும் கூறி, ஒரு முறை அந்த ஒளி நம்மை ஆட்கொண்டால் அது சுருங்காது, குறையாது, மாறாது நிலைத்திருக்கும் நிலையைக் காட்டுகின்றார்.

    “நீதியுமாய்” – எனச் சொல்லுகையில் அந்தப் பேரொளியின் பாரபட்சமற்ற குணத்தை வெளிப்படுத்தி நடுநிலைமைப் போக்கை எடுத்துரைக்கின்றார். அறத்தை முன்னிறுத்தி ஆள்பவன். அந்த அறத்துக்குத் தன்னையும் கட்டுபடுத்திக்கொண்டவன். அனைத்து உயிர்களுக்கும் சரி சமானமாய் அருள்பவன்.அரன்!

    “நித்தமாகி நின்றானே”  – என்ற சொல்லாடல் தன்  விளக்கங்களுக்கு அவர் முற்றுப் புள்ளி வைப்பதைப் போல், இறைவனின் பேராண்மையையும் இணையற்ற நிலையையும் விளக்குகின்றது.

    இன்னொரு பாடலில் “கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே.” (14) எனத் திருமூலர் சொல்லும் பொழுது இறையாட்சியின் முழுநிலைக்கு ஒரு முகவுரை கிடைக்கின்றது.

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 71

    க. பாலசுப்பிரமணியன்

    சுய அடையாளங்களின் வல்லமைகள்

    education-1
    எப்படி ஒரு மனிதனின் உடல் அமைப்புக்கள் அவனுக்கு ஒரு உடல் பரிமாணத்தையும், உடல் அழகு மற்றும் திறன் என்ற வார்த்தைகளுக்கு ஒரு பொருளையும் கொடுக்கின்றனவோ, அதே போல் சுய அடையாளம் என்பது ஒரு மனிதனின் சிந்தனைக்கும், எண்ணங்களுக்கும், செயல்முறைகளுக்கும், வாழ்க்கைப் பாதைக்கும் ஒரு பொருளைக் கொடுக்கின்றது. ஆகவே, இளம் பருவத்திலிருந்தே கற்றலின் மூலமாகவும் அதைச் சார்ந்த பல இணைச் செயல்கள் மூலமாகவும் சுய அடையாளத்திற்கு ஒரு ஆரோக்கியமான பரிமாணத்தையும் பொருளையும் கொடுத்தல் மிக்க அவசியம். சிதைக்கப்பட்ட, கூறுபோடப்பட்ட அடையாளங்கள் ஒரு தனி மனிதனின் முழு வாழ்க்கையை பாதிப்பது மட்டுமின்றி சமூகத் தளங்களில் விபரீதமான சிந்தனைகளையும் செயல்களையும் உருவாக்க காரணமாக இருக்கின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடுதல், வன்முறைப் போக்குகளைக் கடைப்பிடித்தல், மற்றவர்களுடைய நலனைக் கண்டு அதைக் கெடுத்தல், வீணான வாக்குவாதங்களில் ஈடுபட்டு தன்மானப் பிரச்சனைகளை உருவாக்குதல் போன்ற பல நிகழ்வுகளுக்கு இந்த சிதைக்கப்பட்ட அல்லது கூறுபடப்பட்ட சுய அடையாளங்களே காரணமாக அமைகின்றன.

    “அவையத்து முந்தியிருப்பச் செயல்” என்று வள்ளுவம் கூறுவது மிக முக்கியமான மனநலம் பாராட்டத் தேவையான கருத்து. பெற்றோர்களும், பெற்றோர்களுக்கு இணையாக குழந்தைகளின் வளர்ப்பில் பங்கு பெரும் ஆசிரியர்களும் ஒவ்வொரு குழந்தையையும், மாணவனையும் “அவையத்து முந்தியிருக்க” உதவ வேண்டும். பொதுவாக “இது உன்னால் முடியாது”, “இது உனக்கு வராது” என்ற கருத்துக்களை முற்றிலும் நீக்கி :”உன்னால் முடியும் தம்பி ” என்ற நம்பிக்கை வித்தை வேரூன்ற உதவ வேண்டும். இந்த நம்பிக்கை தான் சுய-அடையாளங்களை வளர்ப்பதற்கான ஒரு வித்து. தன்னம்பிக்கை உள்ள குழந்தைகள் தங்கள் அடையாளங்களைத் தாங்களே தேடுவது மட்டுமின்றி அதற்க்கான மானசீக உருவகங்களைத் தயார் செய்யத் தயங்குவதில்லை. இந்த உருவகங்களே கனவுகளாக மாறி, உள்ளுணர்வுகளை உந்தி, முதல் அடியை எடுத்துவைக்க உதவுகின்றன.

    பிற்காலத்தில் பல திறன்களைத் தங்களிடம் தேக்கி வைத்துக்கொண்டு, இவைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அறியாத பல பேருக்கு இந்த சுய அடையாளங்களின் வளர்ச்சியில் பல தேக்கங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. நல்ல ஆரோக்கியமான சுய அடையாளங்களை வளர்த்துக்கொண்டவர்கள் பல துறைகளிலும் “தொழில்-முனைவோர்”களாகவும் தொழில் முன்னோடிகளாகவும் வளர்ச்சியுற்றுள்ளனர்.

    பள்ளிகளில் இந்த சுய-அடையாளங்களை வளர்ப்பதற்கு புத்தகங்களோ வகுப்பறைகளோ போதுமானவை அல்ல. கல்விசார் பாடத்திட்டங்களைத் தவிர, இணை மற்றும் கூடுதல் கல்விசார் முறைகள் இந்த அடையாளங்களை வளர்ப்பதற்கு பெரிதும் உதவுகின்றன. பேச்சுத்திறன்கள், ஆளுமை, தலைமை, மேலாண்மை, கூட்டுறவு சமூக விழிப்புணர்வு, முயற்சி, தோல்வி கண்டு துவளாமை,பணிவு, முடிவெடுத்தல் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான செயல்களில் தங்களுடைய சுய-அடையாளங்களின் முத்திரைகளை பதிப்பதற்கு இணை மற்றும் கூடுதல் கல்விசார் முறைகள் மிகவும் அவசியமானவை. ஆகவேதான் பள்ளிகளில் சிறு வகுப்புகள் முதற்கொண்டே பாடங்களுடன் இந்தத் திட்டங்களுக்குத் தேவையான நேரமும் முக்கியத்துவமும் கொடுக்கப்படுகின்றன. ஆனால், தற்காலத்தில் குழந்தைப் பருவம் முதலே வருங்கால வாழ்க்கைத் தொழிலுக்குத் தேவையான படிப்பை மட்டும் கொடுப்பதில் பெற்றோர்களும் பள்ளிகளும் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர் என்பது ஒரு வேதனையான நிலை. இது மாறவேண்டும்.

    சுய-அடையாளங்கள் தன்னம்பிக்கையை வளர்ப்பது மட்டுமின்றி முயற்சிக்கும் தேடலுக்கும், படைப்பாற்றலுக்கும் தேவையான சக்தியைக் கொடுக்கின்றன. அதே நேரத்தில் இந்த அடையாளங்களின் வளர்ச்சி முறைப்படுத்தப்பட வேண்டும். இது நிலைகளுக்கு அப்பாற்பட்ட அதீத நம்பிக்கைகளை உருவாக்கக் கூடாது. அதீதமான நம்பிக்கைகள் உருவாகும்பொழுது கற்றலிலும் மற்ற செயல்களிலும் தடுமாற்றங்க நிலைத்தவறுதலும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே பள்ளிகளிலும் வீடுகளிலும் குழந்தை வளர்ச்சியில் கவனம் வைத்து தன்னம்பிக்கையை வளர்க்கும் பொழுது அதை முறைப்படுத்தலும் தேவையாகின்றது.

    பொதுவாக பள்ளிகளிலும் வீடுகளிலும் கற்றலிலும் செயல்களிலும் குழந்தைகள் தவறுகள் செய்யும் பொழுது அதை சுட்டிக்காட்டுதல் ஒரு வழக்கமான செயல். ஆனால் அந்தத் தவறு ஏன் ஏற்பட்டது அதற்கான காரணங்கள் என்ன என்ற அலசலை விட்டுவிட்டு அதை அந்த குழந்தையின் அல்லது மாணவனின் தனிப்பட்ட தவறாக முன்னிறுத்தி குறை கூறும்பொழுது அது அவர்களின் சுய அடையாளத்தை பாதிக்கின்றது. “தோல்விகளின் காரணங்களை ஆராய்தல்” ஒரு பாரபட்சமில்லாத குறிக்கோள் வாய்ந்த செயலாக இருக்க வேண்டும். குறைகூறப்படும் சூழ்நிலைகளில் மாட்டும் வளர்கின்ற குழந்தைகள் நாளடைவில் அடையாளங்கள் சிதறுபட்டு தாழ்வுமனப்பான்மையுடன் சமூகத்தில் நடமாடுகின்றனர். அதே செயல் பாரபட்சமில்லா சூழ்நிலைகளில் செய்யப்பட்டால் அது அடையாளத்தின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் நல்ல அடிப்படையாக அமைகின்றது.

    (தொடரும்)

    Share
  • கவிதை

    க.பாலசுப்பிரமணியன்

     

    உலகே ….

    நீயே ஒரு கவிதை…

     

    பகலென்றும் இரவென்றும்

    வண்ணங்கள் தீட்டி ..

    மகிழ்வினிலும் துயரத்திலும்

    கடல் நீரை விழியோரத்தில்

    வடிகட்டி..

     

    வார்த்தைகளில்லா வானவில்லாய் .

    நான் மௌனத்தில்..

    உலவிவர..

     

    உள்ளத்தில்..

    உன் மாயைகள்

    எனக்கு மட்டும்

    அரங்கேற்றம் !

     

    மொழிகள் மனதினில்

    வார்த்தைகளைத்  தேடி ..

    விதையில்லா மலராய் ..

    வாசங்கள் பெருக்கிட….

     

    ஒளியில்லா இதயத்தின்

    மூலைகளில் ஒளிந்திருக்கும் அன்பே.

     

    உனக்கு …. “கவிதை”

    நல்ல புனைப்பெயர்தான்

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்… (1)

    க. பாலசுப்பிரமணியன்

    இறைவன் எப்படிப்பட்டவன்?

    திருமூலர்-1

    திருமந்திரத்தைப் படித்து அதன் உட்பொருளை அறிந்து உள்வாங்கி வாழ்தல் என்பது வாழ்க்கையில் ஒருவருக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.  வாழ்வின் மிகப் பெரிய தத்துவங்களை அவ்வளவு அழகாக சிறிய பாடல்கள் மூலம் நமக்கு தெள்ளத்தெளிவுற அளித்திருப்பது  நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒரு அறிய செயல்.!!

    நமக்கு சில எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும்போதும், நமக்கு விருப்பத்திற்கு மாறான செயல்கள் நடக்கும் போதும், துயரத்தில் சிக்கி நாம் வாடும் போதும் நாம் நம்முடைய விதியை மட்டும் நொந்துகொள்வதில்லை; கூடவே இறைவனையும் சேர்த்துச் சாடுகின்றோம்.

     “ஏன், எனக்கும் மட்டும் இப்படி ஏற்பட்டது? இறைவன் மற்றவர்களுக்கெல்லாம் நன்மையைச் செய்துவிட்டு எனக்கு மட்டும் ஏன் துயரத்தைத் தருகின்றான்? உண்மையிலே அவன் இருக்கின்றானா? அவன் நியாயமானவன் தானா? – என்றெல்லாம் மனத்துள் கேள்விகள் எழுகின்றன.

    மோனத்தில் உள்நின்று தன் தவச்சிறப்பால் இறைநிலையை உணர்ந்து அடைந்த திருமூலர், அந்த இறைவனின் கருணை வடிவத்தை  அழகாக எடுத்துரைக்கின்றார்.

    “தீயினும் வெய்யன், புனலினுந் தண்ணியன்

    ஆயினும் ஈசன் அருளறிவார் இல்லை

    சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்

    தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.”

    இறைவனின் கருணையை எடுத்துரைக்கும் திருமூலர், ஈசனை “சேயினும் நல்லன்” என்பது ஒரு மிகச்சிறப்பான வெளிப்பாடு. குழந்தைகளை  வெகுளித்தனத்திற்க்கும், உண்மைக்கும், நேர்மைக்கும் பிரதிபலிப்பாக நாம் பார்க்கிறோம். ஆனால் அந்தக் குழந்தைகளைவிட நல்லவன் என்று உணர்த்தும்போது இறையின் உண்மைநிலை வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றது.

    “அணியன் நல் அன்பர்க்கு” என்று சொல்லும்போழுதில், தன்பால் அன்பு செய்வோருக்கு அவர்களுடைய உள்ளத்திற்கு அணிகலனாகவும், அவர்கள் செய்யும் அன்பை அழகுபடுத்துவனாகவும் இறைவன் காட்டப்படுகின்றான்.

    “தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை” என்று எடுத்துறைக்கும் உலகில் இறைவனைத் “தாயினும் நல்லன்” என்று சொல்லி அவனைத் தாயுமானவனாக மட்டுமின்றி அதனிலும் சிறந்ததோர் நிலையில் நமக்கு முன் காட்டுகின்றார்.

    இவ்வளவு நல்ல குணங்களின் உறைவிடமாக இருக்கும் ஈசனை, நிலையற்ற மனம் கொண்ட மனித மனம் நம்பாமல் தன்னை மட்டும் நம்பி, இந்தப்  புவியில் இருக்கும் நிலையற்ற ஆசாபாசங்களளையும் செல்வத்தையும் நம்பி   கை விட்டு விடுகின்றது.!

    “ஈசன் அருளறிவாரில்லை”என்று வருந்தும் திருமூலர், நம் மனம் நிலைப்பெற கொடுத்த இந்த  நம் நல்வாழ்விற்கு ஒரு வழிகாட்டி.

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -70

    க. பாலசுப்பிரமணியன்

    சுய அடையாளத்தின் நெருக்கடிகளும் கற்றலும்

    education

    சுய அடையாளத்திற்கு ஏற்படும் நெருக்கடிகள் கற்றலை வெகுவாக பாதிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த நெருக்கடிகள் ஏற்படுவதற்கு ஒரு குழந்தையின் அல்லது மாணவனின் வீட்டு, குடும்பச் சூழ்நிலைகள், வாழ்க்கைப் பரிமாணங்கள் மற்றும் பள்ளி, சமுதாயத் தாக்கங்கள் காரணமாக அமையலாம். ஆகவே, இந்த மாதிரியான நெருக்கடிகள் எந்த ஒரு குழந்தைக்கும் மாணவனுக்கும் வராத சூழ்நிலைகள் உருவாக்குதல் அவர்களுடைய மனநலத்திக்ற்கும் அறிவின் வளர்ச்சிக்கும் ஏதுவாக அமையும்.

    இந்த நெருக்கடிகளை உருவாக்குவதில் “பயம்” என்ற உணர்வு முதலாவது இடத்தைப் பிடித்துக் கொள்கின்றது. பிறந்தது முதற் கொண்டே “பயம்” என்ற உணர்வு  தெரிந்தோ தெரியாமலோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வீட்டில் உருவாக்கப்படுகின்றது. காலப் போக்கில் இந்த பய உணர்வு மனதில் வேர்விட்டு சுயஅடையாளத்தின் அடித்தளங்களை ஆட்டுவிக்கின்றது.

    இந்த பய உணர்வு வருவதற்கு பல காரணங்களும் பரிமாணங்களும் உண்டு.  உதாரணமாக அன்பு, மரியாதை என்று இரண்டு முக்கிய உறவின் அடிப்படைகளை சரியாகப் பரிமாணிக்க விடாமல் பயம் என்ற முகமூடிக்குள் மறைத்து விடுகின்றோம். ஆகவே பெற்றோர்களிடம் அன்பு, மரியாதை, ஆசிரியர்களிடம் அன்பு, மரியாதை, மற்றும் இறைவனிடம் அன்பு மரியாதை என்ற உறவுப் பரிமாணங்களை விலக்கி இவை அனைத்துடன் ஒரு பய உணர்ச்சியை வளர்த்துவிடுகின்றோம். இதனால் வளரும் குழந்தைகள் தங்கள் உண்மையான நிலையை இவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டி “பயத்தில்” ஒதுங்கி விடுகின்றனர். இதனால் உறவுகளின் அடிப்படைத் தளங்களில் உண்மையின் வண்ணங்கள் இருப்பதில்லை. .

    அதே போல் பொருளாதார நிலைகளில் இருக்கின்ற வேறுபாடுகளை முன்னிறுத்தி ஏற்படுத்தப்படும் பய உணர்வுகள் ஒரு தனி மனிதனுடைய வளர்ச்சியில் வெறுப்புணர்ச்சிகளையும் கோபத்தையும் பழி மனப்பான்மைகளையும் வளர்க்கின்றன. இந்த வேறுபாடுகளை எவ்வாறு அறிவுபூர்வமாக ஏற்று இதில் உள்ள மேடு-பள்ளங்களை எவ்வாறு சரி செய்யலாம் என்ற மனப்பாங்கை உருவாக்குதல் அவசியம். “பணத்தைக்” கண்டோ “பணக்காரர்களைக்” கண்டோ பயம் கொண்டு ஒதுங்கி வாழ்தல் வளர்ச்சிப்பாதையில் ஒரு சாபக்கேடு.  கற்றலின் சில பாங்குகள் பணக்காரர்களுக்கே உகந்தவை என்ற பரவலான கருத்து மிகவும் தவறானது. எந்த ஒரு கற்றலுக்கு ஆர்வமும் தேடலும் ஈடுபாடும் மட்டும் தேவை. உதாரணமாக பணம் அதிகமாக செலவழித்து படிக்கும் பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் வாழ்க்கையில் சிறப்பாக முன்னேறுவார்கள் எனப்து ஒரு தவறான கருத்து. ஆனால், மாணவர்கள் எந்தப்பள்ளிகளில் படித்தாலும் கற்றலுக்கு ஏதுவானான மனநலம் மற்றும் சமுதாய விழிப்புணர்ச்சிகளைத் தூண்டிவிடக்கூடிய சூழ்நிலைகள் பள்ளிகளில் இருத்தல் அவசியம்.

    இதே போல் சாதி மத கோட்பாடுகளில் தனி ஒருவரை உயர்வாகவோ தாழ்வாகவோ நினைத்து அதனால் ஏற்படுகின்ற பய உணர்வுகளால் சுய-அடையாளங்களை இழக்கின்றவர்கள் பலர். சாதி மதம் மற்றும் பிறப்பு வேறுபாடுகள் கல்வியின். கற்றலின் போக்கையோ தரத்தையோ அல்லது வெற்றியையோ நிர்ணயித்ததாக சரித்திரமே இல்லை. ஒரு தனி மனிதனின் மூளையின் வளர்ச்சி, செயல்பாடுகள் மற்றும் ஈடுபாடுகள் மட்டுமே அவர்களுடைய கற்றலின் மேம்பாட்டுக்கும் வெற்றிக்கும் அடிப்படை. ஆனால் உலகளாவிய பல சமூகங்களின் சிந்தனைப் போக்குகள் மற்றும் நெறிமுறைகள் அந்த சமூகத்தின் மாணவர்களின் கற்றலின் வழித்தடங்களை நிர்ணயித்ததற்கும் மாற்றியமைத்ததற்கும் சான்றுகள் உள்ளன.

    “அப்பா” என்ற படத்திலே ஒரு மாணவனை அவன் தந்தை அடிக்கடி “இதெல்லாம் நமக்கு வேண்டாண்டா ..ஒதுங்கிப் போயிடுவோம் ” என்றும் ” அடக்கி வாசிக்கணும்” என்ற அறிவுரை வழங்கி அவன் அடையாளத்திக்கு நெருக்கடிகள் உண்டாக்கியதைப் பார்க்கலாம் “

    மேற்கூறியது போன்ற பல காரணங்களால் ஒருவருக்கு பயம் கலந்த உணர்ச்சி வருவதற்கு முன்பு அவர்கள் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை வருவதற்கான வாய்ப்பு உண்டு. உதாரணமாக, பள்ளிகளில் சில மாணவர்கள் விலை உயர்ந்த வாகனங்களில் வரும் மாணவர்களைக் கண்டோ அல்லது தினம் அதிகப்படியான பணம்  கொண்டுவந்து செலவழிக்கின்ற சக மாணவர்களைக் கண்டு தங்களைத் தாழ்த்திக்கொண்டு தங்கள் சுய அடையாளங்களை வெளிப்படாமல் ஓரம்கட்டிவைப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதுண்டு.

    வறுமையும் ஏழ்மையும் இளமையில் சுயஅடையாளங்களை வளர்ப்பதற்கு  ஒரு பெரிய முட்டுக்கல்லாக அமைகின்றன. இதனால் கற்றலில் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.  ஆனால், மேற்கூறிய எந்த காரணமும் ஒரு மாணவனின், ஒரு தனி மனிதனின் அறிவுத்திறனையோ, சிந்திக்கும் திறனையோ, வல்லமைகளையோ  அவற்றின் தரத்தில் குறைப்பதில்லை. சரியான சந்தர்ப்பங்களும், சரியான சூழ்நிலைகளும் , சரியான பாதுகாப்பும் கொடுக்கப்பட்டால் எல்லாக் குழந்தைகளும் எல்லா மாணவர்களும் கற்றலில் சிறப்பாக வளர முடியும். சாதனைகள் படைக்க முடியும்.

    சுய அடையாளங்களுக்கு நெருக்கடி விளைவிக்கும் மற்றொரு காரணம் – ஒரு மாணவனை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுதல் . வீடுகளில் பொதுவாக “உன் அண்ணனைப் பார்த்தாயா எப்படி படிக்கிறான்..” “பக்கத்து வீட்டுப் பையனை பார்த்தாயா ..” என்றெல்லாம் பேசும் பொழுது, அது இளைஞர்களின் தன்னம்பிக்கையைத் தோற்கடித்து அவர்களது மனதில் தங்களுடைய ‘திறனைப்” பற்றியே சந்தேகிக்கின்ற நிலைக்கு கொண்டு வந்து சேர்க்க்கின்றது. அவர்கள் தொடர் முயற்சிகள் வீணாகி வாழ்க்கையில் தோல்வியைத் தழுவும் நிலைக்குக் கொண்டு வருகின்றது. வாழ்க்கையில் இதுபோன்ற பல நிகழ்வுகளையும்  அதனால் பாதிக்கப் பட்ட மாணவச் செல்வங்களையும் நான் அறிவேன்.

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தன்மை உள்ளது. அதை அறிந்து அதை மேம்படுத்த உறவும் ஆசிரியர்களும் முன்வர வேண்டும்.

    நான் படித்த ஒரு கதை :

    காட்டில் வாழுகின்ற விலங்குகளெல்லாம் ஒரு முறை ஒன்றுகூடி தங்களுடைய திறன்களுக்கும் கற்றலுக்கும் ஒரு கல்விமுறையும் பாடத்திட்டமும் வகுக்கவேண்டும் என்று கருதி, இந்த அமைப்புக்கு சிங்கத்தை தலைவராக ஏற்றதாம். அந்தக்குழுவில் இருந்தவர்கள் கர்ஜனை, ஊளையிடுதல், மரம் ஏறுதல், பாய்தல், குழிதோண்டுதல் மற்றும் நீந்துதல் போன்ற பல திறன்களை பாடத்திட்டத்தில் வகுத்து அதற்க்கு ஒரு தேர்வுமுறையும் பரிந்துரைக்கப்பட்டதாம்.

    தேர்வில் நாய்களைத் தவிர மற்ற விலங்குகள் பங்கேற்றன. நாய்கள் “குறைத்தல்” பாடத்திட்டத்தில் இல்லாததால் தேர்வை நிராகரித்தன. தேர்வின் முடிவில் சிங்கம் ‘கர்ஜனை”யில் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றாலும் மரம் ஏறுதல் நீந்துதல் போன்றவற்றில் தோல்வியுற்றன. குரங்குகள் மரம் ஏறுதலில் 100 விழுக்காடு பெற்றும் நீந்துதல் கர்ஜனை போன்றவற்றில் தோல்வியுற்றன. மீன்கள் நீந்துவதில் 100 விழுக்காடு எடுத்தும் மரம் ஏறமுடியாமல் தோல்வியுற்றன. இது போல் ஒவ்வொரு விலங்கும் ஒரு திறனில் முழு மதிப்பெண்கள் பெற்றும் மற்றவற்றில் தோல்வியுற்றதால் தேர்வில் வெற்றிபெறமுடியவில்லை. ஒரே ஒரு நீர் வாழ் விலங்கு மட்டும் எல்லாவற்றையும் சிறுதளவு செய்ய முடிந்ததால் அனைத்திலும் 35 விழுக்காடுகள் பெற்று தேர்வுற்றது.

    இந்தக்கதை தற்போதைய கல்விமுறையின் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் எழுதப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறன் இருந்தாலும் ஒரு பொது பரிமாணத்தில் நம்முடைய சுய அடையாளங்கள் காயப்பட்டும் மறைக்கப்பட்டும் போகும் நிலை பற்றி இன்று சிந்திக்க வேண்டிய நேரம்.

    (தொடரும் )

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 68

    education-1-1-1

    உணர்வு சார் நுண்ணறிவும் சுய அடையாளமும்

    தேடலின் பாதையில் கிடைக்கக்கூடிய அறிவு மற்றும் உணர்வுகள் விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான அடித்தளத்தை உண்டாக்குகின்றன. தன்னைப்பற்றிய விழிப்புணர்வுகள் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள், பொருட்கள், மனிதர்கள் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வுகள் என்ற இரண்டுக்கும் உள்ள உறவு நிலைகளைப் பற்றிய கற்றலையும் அறிவையும் அளிக்கின்றன. இந்த உறவு நிலையை பயம், விந்தை, அன்பு, ஆச்சரியம் போன்ற உணர்வுகள் மேம்படுத்தவோ அல்லது விலக்கிவிடவோ செய்ய வாய்ப்புள்ளது. ஆகவே வளரும் பருவத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் இந்தத் தேடல் நிலைகளைப் புரிந்துகொண்ட சரியான தர்க்கரீதியான அறிவுபூர்வமான உணர்வுகளைப் பெறவும் வலுப்படுத்தவும் உதவ வேண்டும். பல நேரங்களில் இந்த உறவுகளைப் பற்றிய தவறான அனுபவங்களையோ உணர்வுகளையோ கொடுத்தால் வாழ்க்கை முழுவதும் உணர்வுகளின் தேக்கமும் அதைத் தொடர்ந்த விபரீத மனநிலைகளும் மனப்பக்குவமும் ஏற்பட வாய்ப்புண்டு.

    உதாரணமாக நிழல்களைக் கண்டு பயப்படுதல், ஒருவரின் உடல் பாங்குகளைக் கண்டு அச்சுறுதல், சில பறவைகள் பூச்சிகளைக் கண்டு அச்சுறுதல், சில உறவுகளுடன் அதிக அளவில் சார்புநிலைகளை ஏற்படுத்தல், விருப்பு -வெறுப்பு நிலைகளை வளர்த்தல் போன்ற பல மன நிலைகளை இந்த வளர்ச்சிநிலையில் பெற வாய்ப்புக்கள் உண்டு. இவை அனைத்தும் விழிப்புணர்வை வளர்க்கும் பாதையில் கிடைக்கும் மலர்களும் முட்களும் ஆகும். இவைகளின் உண்மையான நிலையினை அறிவுபூர்வமாக உட்கொள்ளுவதே கற்றலின் வெற்றி.

    இந்தத் தேடலின் பயிற்சியும் விளைவுகளும் தன்னைப் பற்றிய ஒரு அடையாளத்தை மனதிலும் அறிவிலும் ஏற்படுத்த, வளர்க்க மற்றும் போற்ற உதவுகின்றன. தன்னைப் பற்றிய ‘சுய அடையாளம் ‘ (Self- identity) மனவளர்ச்சிக்கும்  வாழ்க்கைப் பாதையை உறுதி செய்வதற்கும் இன்றியமையாதது. வளரும் குழந்தைகளிடம் இந்த “சுய-அடையாளத்தை’ வளர்ப்பதில் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. இந்த ‘சுய- அடையாளமே’ கற்றலின் போக்கு, திசை, விளைவுகள், முயற்சியின் வடிவங்கள், வளமை, வளர்ச்சி நிலைகள் ஆகியவற்றை வடிவமைப்பதற்கும் உரமிடுவதற்கும் துணையாக அமைகின்றது.

    சுய-அடையாளத்தைப் பெறுவதற்கு முதல் படியாக தங்களைத் தாங்களே மதிக்கக் (Respecting the self) கற்றுக்கொள்ள பழக்கவேண்டும். தங்களைத் தாங்களே மதிக்காதவர்கள் மற்றவர்களிடமிருந்து சரியான தரமான மதிப்பை பெறுதல் மிகவும் கடினம். இந்தக் கற்றலுக்கான அடையாளங்கள் என்ன என்பது பற்றிய உலகளாவிய ஆரய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக தன்னுடைய உடலைப் பேணுதல் இதன் முதல் படி. தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்தல், தங்கள் மனநிலைகளைப் பேணிக்காத்தல், உடமைகளை சீராக வைத்தல்,  நல்ல உடைகளை அணிதல், நல்ல உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளுதல், நல்ல சிந்தனை, நல்ல பேச்சு வார்த்தைகள், ஆரோக்கியமான சூழ்நிலைகள், சுற்றுப்புறச்சுத்தங்கள் இவை அனைத்தும் நம்மையும் நம்முடைய சூழ்நிலைகளையும் நாமே போற்றுவதற்கான அறிகுறிகள்.

    ஒருவகையில் பார்க்கப்போனால் “சுய அடையாளம் ” என்பது நமக்கு நாமே விதித்துக்கொள்ளும் ஒரு கட்டுப்பாடு. உதாரணமாக நேரம் தவறாமை, கால நிர்வாகம், ஒழுக்கமான நாணயமான வாழ்க்கை, வார்த்தை நாணயம் போன்ற பல சிறப்பான வாழ்க்கை முறைகள், குணாதிசயங்கள் சுய அடையாளத்துக்கு முன்னுரையாக அமைகின்றன.

    பிற்கால வாழ்க்கைப் பயணத்திற்கு சுய -அடையாளங்கள் பாதுகாப்பான சாலைகள். நல்ல சுய-அடையாளங்களைப் பெற்றவர்கள் பல துறைகளிலும் தலைவர்களாகவும் முன்னோடிகளாகவும் ஒளிர வாய்ப்புக்கள் அதிகமாக அமைகின்றன. இதைக் கற்றுக்கொள்வதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் முன்மாதிரியாக இருத்தல் அவசியம்.

    சரியான சுய-அடையாளங்களை இளம் வயதில் பெற முடியாத பலரும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இதே தேடலில் முயன்று இயலாமையில் தோல்வி மனப்பான்மைக்கு இரையான பல கதைகள் உண்டு. மற்றும் பிற்காலத் தேடலில் அவர்கள் பெரும்பாலும் சரியான முன் மாதிரிகள் கிடைக்காமல், தங்களுடைய அடையாளங்களை மற்றவர்களோடு ஒரே மாதிரியாக வைக்க முயற்சி செய்தும் மற்றவர்களோடு ஒப்பிட்டு தாழ்வு  மனப்பான்மைகளை வளர்த்துக்கொள்வதும் இந்த சமுதாயம் அறிந்ததே.

    ஆகவே பள்ளிகளில் கிட்டத்தட்ட ஐந்து- ஆறு வயதுதொட்டே இந்த வாழ்க்கைக்கல்விக்கான கருத்துக்களை மறைமுகமாகவும் அனுபவபூர்வமாகவும் கற்பதற்க்கான  சூழ்நிலைகளை ஏற்படுத்துதல் அவசியமானதாகத்  தெரிகின்றது.

    (தொடரும் )

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் (67)

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலும் உணர்வுசார் நுண்ணறிவும் (Learning and Emotional intelligence )

    education-1-1 

    கற்றல் ஒரு மனிதனை தொழிலுக்காக மட்டுமின்றி நல்வாழ்க்கைக்காகவும் தயார்  செய்கின்றது. பல நூறாண்டு காலங்களாக இந்திய துணைக்கண்டத்தின் கற்றல் சார்ந்த கொள்கைகள் இந்த நோக்கையே அடிப்படியாகக் கொண்டிருந்தன. வள்ளுவமும் மிகத் தெளிவாக கற்றலின் நோக்கை விளக்கும் வகையில்

    கற்க கசடறக்  கற்பவை கற்றபின்

    நிற்க அதற்குத் தக.

    எனத் தெளிவாகக் கூறியுள்ளது. காலப்போக்கில் இந்த நோக்கைக் கைவிட்டு கற்றலை வாழ்வாதாரங்களுக்குப் பயன்படுவதற்காக மட்டும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இந்தத் தவறுக்கான பலன்களை தனி மனிதனும் சமுதாயமும் இன்று சந்தித்ததுக்கொண்டிருக்கின்றது. நாளையும் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதன் விளைவுகள் சமுதாய நல்லிணக்கங்களையும் கூடிவாழும் கோட்பாடுகளையும் அதிக அளவில் பாதிக்க ஆரம்பித்துவிட்டது.

    மேலை நாடுகளில் தற்போதைய கல்வி முறையில் “வாழ்க்கை கல்வி க்கான” அடிப்படைகளின்  தேவையை அதிக அளவில் வற்புறுத்த ஆரம்பித்திருக்கின்றனர். இந்த வாழ்க்கைக் கல்வியின் முக்கிய முதலீட்டாக ஒரு தனி மனிதனின் உணர்வுசார் நுண்ணறிவு, அதன் வளம், அதன் செழுமை, ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகின்றது.  உணர்வுசார் நுண்ணறிவைப் பற்றிய ஆராய்ச்சியில்  மனநல இயல் ஆராய்ச்சியாளரும் மேதையுமான முனைவர் டேனியல் கோல்டுமேன் (Dr.Daniel Goldmaan) அவர்களின் கோட்பாடுகள் பல நாடுகளில் வழிகாட்டுதலாக கருதப்படுகின்றது.

    உணர்வுசார் நுண்ணறிவு (Emotional Intelligence) ஒரு மனிதனை தன்னோடும் தன் சூழலில் மற்றும் சமுதாய, உலக அளவிலும் இருக்கின்ற உயிரூட்டங்களோடும் (Bio-environment) அமைதியுடனும் மாண்புடனும் பங்கீட்டு மனப்பான்மையுடனும் வாழ்வதற்கு உதவுகின்றது. தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ்விக்கும் வளம் கொண்ட சிந்தனையை வளர்க்கும் இந்த அறிவுச்சுடர் சீரான வாழ்க்கைக்கு (balanced life) முதல்படியாக அமைகின்றது.

    உணர்வுசார் நுண்ணறிவு ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள்ளோ புத்தகப்  பெட்டகங்களுக்குள்ளோ கிடைப்பதில்லை.. மேலும் இதன் வளர்ச்சிப்பாங்கு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வேறுபடுகின்றது. இருப்பினும் இதன் வளர்ச்சிப்படிகள் பொதுவாக எல்லா மனிதருக்கும் ஒரு குறிப்பிட்ட பாதையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிப்படிகள் “மன நலத்திற்கும்” (Mental Health) “முதிர்ச்சிக்கும்” (Maturity) அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

    இதன் முதல் படியாக “விழிப்புணர்வு” (Self-Awareness) கருதப்படுகின்றது. கற்றலில் விழிப்புணர்வு தேடலின் முக்கிய அறிகுறி. ஆகவே வளரும் பருவத்தில், கற்றலின் முதல் பருவத்தில், விழிப்புணர்வுக்காக உணர்வுகளை வளர்ப்பது மட்டுமின்றி வளப்படுத்துதலும் அவசியம். பள்ளியில் முதல் வகுப்பில் மாணவர்கள் கற்றலை ஆரம்பிக்கும் பொழுதே விழிப்புணர்வைத் சார்ந்த அறிவுத்திறன்களை போதித்தல் அவசியம். இந்த விழிப்புணர்வுக்காக நுண்ணறிவுகள் அனுபவ பூர்வமாகக்  கற்பது அதன் திறனை வலுப்படுத்துகின்றது. இந்த அறிவினை சக-மாணவர்களுடன் சேர்ந்து உறவாடுதல் (peer learning) மூலமும், வீட்டில் உறவினர்களோடும் நண்பர்களோடு உறவாடுதல் மூலமும் மறைமுகமாக (informal learning) கற்பிக்கச் செய்தால் அது எளிதாகவும் மன- அழுத்தங்கள் இன்றியும் கற்றுக்கொள்ள ஏதுவாகின்றது..

    விழிப்புணர்வு தேடலின் மூலமாக படிப்படியாக தன்னுடைய வலிமையையும் வளத்தையும் உறுதிசெய்துகொள்கின்றது. குழந்தைப்பருவத்தில் இந்தத் தேடலின் முதல் கேள்வி -“நான் யார்?”என்பதே.

    இந்தக்கேள்வி வாழ்வின் பல காலக்கட்டங்களில் பல அர்த்தங்களையும் பல பதில்களையும் கொடுப்பதாக இருந்தாலும் இதன் முதல் சுற்று இளம் வயதிலேயே ஆரம்பமாகின்றது.

    நான், எனது பெயர், எனது உடல், எனது தேவைகள், எனது சூழ்நிலைகள் .. என்று தன்னைப் பற்றிய பல ஆர்வப் புதிர்களுக்கு விடைகாணும் கற்றலாக இது அமைகின்றது. இந்த விழிப்புணர்வு குழந்தைகளிடம் முதல் முறையாக தன்னையும் தன்னைத் தவிர்த்த மற்றவரையும் அவர்களுடய தனிப்பட்ட தேவைகளையும் பிரித்துப் பார்க்க வழி வகுக்கின்றது. (From Recgonition to Differentiation and analysis)

    இதனைத் தொடர்வது “எனது குடும்பம்” என்ற நுண்ணறிவு. எனக்கும் என்னைச் சார்ந்தவருக்கும் என்ன உறவு? –(Relating and Responding)  என்ற தேடல் “சொந்தங்கள் – உறவுகள் -சுற்றங்கள் ” பற்றிய அடுத்த நிலை அறிவுக்கு எடுத்துச் செல்கின்றது. இந்த நிலையில் தனக்கும் இந்த உறவுகளுக்கும் உள்ள உடன்பாடுகள், வேறுபாடுகள், கட்டுப்பாடுகள் ஆகியவை உறவுகளின் உணர்வு நிலையின் வெவ்வேறு மாற்றங்களை பற்றிய கற்றலுக்கு வழிகாட்டுகின்றன. இது குழந்தைகளின் மனநலத்திற்கும் உணர்வுகளின் மேன்மையான வளர்ச்சிக்கும் முக்கிய கட்டம். பெற்றோர்களும், உறவினரும் மற்றும் ஆசிரியர்களும் இதன் வளர்ச்சிக்குத் தங்களாலான பங்கை சிறப்புடன் ஆற்றுதல் அவசியம்.

    இந்த வளர்ச்சிப்பருவத்தில் உறவுகளையும் சுற்றங்களையும் பற்றிய தவறான கருத்துக்களை விதைத்தலும், தரக்குறைவான வார்த்தைகளையோ அல்லது பழக்கங்களையோ குழந்தைகளுக்கு முன்மாதிரியாக வைத்தலும் அவர்களுடைய நினைவுகளில் தவறான பதிவுகளை ஏற்படுத்துகின்றது. இது அவர்களுடைய தனிவாழ்க்கைப் பாதையை பிற்காலத்தில் பாதிக்க வாய்ப்புக்கள் உண்டு.

    சில நேரங்களில் தொலைக்காட்சிகளில் விளையாட்டுப் போக்காக குழந்தைகளிடம் பெற்றோர்களைப் பற்றியும் பெரியோர்களைப் பற்றியும் விபரீதமான கருத்துக்களைக் கேட்டுவாங்கும் பொழுது பலருக்கு அந்த நேரத்தில் சிரிப்பூட்டுவதாக இருந்தாலும் அதன்  தாக்கங்கள் தனிப்பட்ட அளவில் அதைப்  பார்க்கின்ற கேட்கின்ற குழந்தைகளின் மனநலத்தில் பாதிப்புக்கள் ஏற்படுத்த வாய்ப்புக்கள் உண்டு.. சிந்திக்கவேண்டிய விஷயம் .

    (தொடரும்)

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 66

    க. பாலசுப்பிரமணியன்

    வளரும் பருவத்தில் கற்றல் சூழ்நிலைகள்

    education-1

    பொதுவாக மழலைகளின் கற்றல் சூழ்நிலைகள் இயற்கையோடு இணைந்ததாக இருக்கவேண்டும். அவர்கள் கற்கும் இடம், கற்கும் பாடங்கள், கற்கும் முறைகள் அனைத்தும் இயற்கைக்கு உகந்ததாகவும் அதோடு ஒருங்கிணைந்ததாகவும் இருத்தல் அவசியம். இந்த வயதினிலே மூளையின் வளர்ச்சியைப் பற்றிய ஆரய்ச்சிகள் இந்தக்கருத்தை வலுப்படுத்துகின்றன.

    இதனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக பள்ளியில் ஒதுக்கப்படும் பள்ளி அறைகள்- மரங்கள், செடிகொடிகள், நீரோட்டங்கள், மற்றும் ஒளி காற்று ஆகியவற்றின் சரியான பங்கீட்டைக் கொண்டதாக அமைக்கப்படுகின்றது. பள்ளிக்கட்டிடங்களைக் காட்டும் பொழுதே இந்தக் கருத்தை நிலைப்படுத்தி அதற்கான வடிவமைப்புக்கள் செய்தல் மேன்மையானது.

    இதேபோல் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் இயற்கையைச் சார்ந்ததாகவும் இயற்கையின் பல்வேறு வெளிப்பாடுகளை அறிந்துகொள்வதற்கு ஏதுவாகவும் இருத்தல் அவசியம். தற்போதைய பாடத்திட்டங்களில் இந்தக் கருத்து வலுப்படுத்தப்பட்டிருந்தாலும் அது சரியாக பின்பற்றப்படுவதில்லை. இயற்கையை பற்றிய கருத்துக்களை கரும்பலகையிலோ அல்லது வெறும் ஒளி-ஒலி காட்சிகளாக மட்டும் காட்டாமல் அதற்கான நேரிடையான உண்மையான அனுபவங்களை குழந்தைகளுக்கு கொடுத்தால் அந்தக்  கற்றல் மேன்மையானதாகவும் அனுபவபூர்வமானதாகவும் இருக்கும்.

    ஒரு மரத்தையோ அல்லது செடியையோ அல்லது இலை/பூ/ காய்களைப்பற்றியோ கரும்பலகையில் அல்லது படங்கள் மூலமாகக் காட்டப்படுவதைவிட அதன் உண்மையான நேரிடையான அனுபவம் கொடுக்கும் பொழுது கற்றல் உணர்வுபூர்வமாக நிலைப்படுகின்றது. பூக்களின் அசைவுகள், பழங்களின் மணம், காய்-கீரை வகைகளின் உண்மைநிலைகள் வாழ்க்கை கல்விக்கு அடிப்படையாக அமைகின்றன.

    சுவாமி அரவிந்தர் கற்றலின் நோக்கங்களை விளக்கும் பொழுது “கற்றல் எப்பொழுதும் அருகாமையிலிருந்து தொலை தூரத்தை நோக்கிச் செல்லவேண்டும்” என்கிறார். (Learning always happens from Near to Far) ஆகவே லண்டனில் இருக்கின்ற ஒரு மணிக்கூண்டின் பெருமையை அறிந்துகொள்வதைவிட வீட்டிற்கு அருகாமையில் உள்ள மணிக்கூண்டைப் பற்றி தெரிந்துகொள்ளுதல் சாலச் சிறந்தது. இந்தத் தேடுதல் கற்றலின் ஆக்கத்தையும் வேகத்தையும் அதிகரிப்பதுமட்டுமின்றி அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு ஒரு எளிதான வழியாக அறியப்பட்டுள்ளது.

    தற்போதைய சூழ்நிலையில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக இந்தமாதிரியான கற்றலின் போக்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கணினிகள், வலைத்தளங்கள் மற்றும் இதர அலைசார் கற்றல் மரபுகள் கற்றலின் போக்கையும் சூழ்நிலைகளையும் வெகுவாக மாற்றியுள்ளன. இந்த மாற்றங்கள் நன்மை பயக்கக்கூசுடியனவா இல்லையா என்பது பற்றிய உலகளாவிய விவாதங்கள் ஆரய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால் இந்த மாற்றங்கள் நம்முடைய தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கை அடிப்படைகளை வெகுவாக பாதித்தும்  மாற்றியும் விட்டதால் இனி நாம் பின்னோக்கி செல்ல சிறிதளவும் வாய்ப்பில்லை. ஆகவே இந்த மாற்றங்களையும் தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் முறைகளையும் எவ்வாறு காலந்தொட்டு வருகின்ற கற்றல் முறைகளின் நல்லகோட்பாடுகளோடு இணைத்து செயல்பட முடியும் என்பதை பற்றிய சிந்தனைகள் வளம்பெற வேண்டும்.

    கணினி மற்றும் வலைத்தளங்களை சார்ந்த தேடுதல்கள் இப்பொழுது ஐந்து ஆறு வயதிலே ஆரம்பித்தது விட்டன. இந்தத் திறன்கள் குழந்தைகளிடம் இருப்பதைக் கண்டு பெருமிதம் அடைகின்ற பெற்றோர்களின் எண்ணிக்கை சிகரங்களை வீழ்த்திக்கொண்டிருக்கின்றது. உண்மையில் இது இந்த வயதிற்குத் தேவையா, அப்படியானால் எவ்வளவு தேவை என்பதை பற்றி சிந்திப்பதற்கு அஞ்சுகின்றோம். இந்த மரபுசாராக் கல்வி முறைகளும் தேடுதல்கள் மூலம் கிடைக்கும் சில அறிவுத்துணுக்குகளும் குழந்தைகளின் உணர்வு நிலைகளில் பெரிதளவு மாற்றங்கள் ஏற்படுவதை ஆராய்ச்சி மூலமாக உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

    இந்த மாற்றங்கள் அறிவு மற்றும் உணர்வுகளின் திசைகளையும் போக்கையும் வேகத்தையும் தாக்குவதால் பல குழந்தைகளுக்கு இதனால் வயதுக்கு முந்திய முதிர்ச்சி நிலைகள் (Pre-maturation) வருவதை கண்டுபிடித்துள்ளனர். உதாரணமாக வளரிளம் பருவம் (adolescence) கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகளிலிருந்து இருப்பதாக கணிக்கப்பட்டது, தற்போது ஒன்பது வயதிலேயே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வயதுக்கு முந்திய முதிர்ச்சிநிலைகள் இப்பொழுது இன்னும் சிறிய வயதிலேயே இருப்பதாக ஆரய்ச்சிகள் தெறிவிக்கின்றன.

    ஆனால் இந்த மாறிய கல்விமுறையால்தான் ஒருவர் சிறப்பான கல்விகற்க முடியுமென்றோ அல்லது அவர்கள் புத்தி கூர்மை சிறைப்படையுமென்றோ வாதிடுதல் சரியானதல்ல. இந்தக் கருவிகள் நிச்சயமாக தேடலின் வளத்தையும் நேரத்தையும் நுணுக்கங்களும் வளமைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதை நாம் எவ்வாறு பயனுள்ளதாக ஆக்கிக்கொள்கிறோம் எவ்வாறு இவைகளுக்கு நாம் அடிமையாகாமல் இருக்கின்றோம் என்பதையும் கண்காணித்தல் அவசியம். இந்தக் கருவிகளின் பயன்பாட்டால் நம்முடைய மூளையின் சில அற்புதத் திறன்களும் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தை மூளைநரம்பியல் வல்லுநர்கள்  உணர்த்தி வருகின்றார்கள்

    (தொடரும் )

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 65

    க. பாலசுப்பிரமணியன்

    மழலையர்களின் கற்றல் நிலைகள்

    education

    மழலைப் பருவத்தில் கற்றல் என்பது ஒரு தொடரான செயல்; ஆனால் அது நேரடியாக மட்டும் நடக்கும் செயலல்ல. கற்றலின் 95 விழுக்காடுகள் மறைமுகமாகவோ அல்லது கோர்வையின்றியோ நடக்கக் கூடிய செயல். ஐம்புலன்களாலும் கற்றலுக்கான உள்ளீடுகள் கிடைக்கின்றன. அவைகளைத் தனித்தனியாகவோ அல்லது ஒருங்கிணைத்தோ மூளை ஒரு கருத்தாக உருவாக்குகின்றது.

    பொதுவாக கற்றலின் உள்ளீட்டுப் பரிமாணங்களை கீழ்கண்டவாறு பிரிக்கின்றனர்.

    1. பார்த்தல் (Seeing)
    2. கவனித்தல் (Observation )

    3 உணருதல் (Feeling)

    4 அறிதல் (knowing )

    1. புரிதல் (understanding)

    அறிதலைப் பற்றிய ஆராய்ச்சி வல்லுனர்களின் கருத்துப்படி “பார்த்தல் அனைத்தும் அறிதலோ அல்லது புரிதலோ அல்ல”. (Seeing is not knowing) ஆனால் பார்த்தல் அறிதலுக்கும் புரிதலுக்கும் அடிகோலாக இருக்கின்றது. ஆகவே மழலையர்களுடன் பழகும் பொழுது அவர்கள் எதை பார்க்கின்றார்கள் எங்கே பார்க்கின்றார்கள் எப்படிப் பார்க்கின்றார்கள் என்பதையெல்லாம் கூர்ந்து கவனித்தல் அவசியம். இது அவர்களுடைய கற்றலின் பரிமாணங்களை மட்டுமின்றி அவர்களின் கற்றலின் போக்கு திறன் ஆகையவற்றைப் பற்றிய ஒரு பொதுவான கருத்தை மதிப்பீடு செய்ய உதவும்

    பார்த்தல் ( Seeing) என்ற நிகழ்வு குறைந்த காலகட்டத்திலே திசைமாற வாய்ப்புக்கள் அதிகம். ஆகவே மழலையர்களின் பார்வையை வைத்து அதைப்பற்றிய அறிவு வந்துவிட்டதாகக் கருதுதல் தவறாகும். பார்த்தலிலிருந்து மழலைகள் அடுத்த நிலையான கவனித்தலுக்குச் செல்கின்றன. (Observation) இந்த நிலையில் பார்க்கின்ற இடம், பொருள் மற்றும் செயல்களை உன்னிப்பாக நோக்குதலால் அதைப்பற்றிய ஒரு கோர்வையான கருத்துக்கு வித்திடப்படுகிறது. ஆனால் இந்த முயற்சி எந்தவிதமான கருத்துக்கு வித்திடுகிறது என்பதை முடிவு செய்யமுடியாது. உதாரணமாக வீட்டில் தன்னுடைய தாயார் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்புவதையோ அல்லது அடுப்பில் தோசை வார்ப்பதையோ சிறிது தூரத்திலிருந்து கவனிக்கும் பொழுது அந்தக் கோர்வையான செயல்கள் அந்த மழலையின் மூளைக்கு எட்டுகின்றது. ஆனால் அதற்கான காரணங்களோ அல்லது அதன் விளைவுகளோ மழலைக்குத் தெரிவதில்லை. ஆனால் இந்த நிகழ்வு அது என்ன என்று உணரவேண்டும் என்ற உள்ளுணர்வுக்கு வித்திடுகின்றது.

    இந்த உள்ளுணர்வால் உந்தப்பட்ட மழலை அதை உணர்வுபூர்வமாக அறிய முற்படுகின்றது, உடனே தன்னுடைய பயணத்தை அந்த நீரை நோக்கியோ அல்லது அடுப்பை நோக்கியோ ஆரம்பிக்கின்றது. அப்போது அந்த மழலைக்கு நீரின் குணங்களைப் பற்றியோ அந்த அடுப்பின் சூடான நிலை பற்றியோ எந்த நுண்ணறிவும் இருப்பதில்லை. இந்த உணர்வு சார்ந்த அனுபவம் மழலைக்கு புதுமையாக இருப்பது மட்டுமின்றி அது மகிழ்சசியையோ அல்லது துயரத்தையோ அளிப்பதாக அமைகின்றது. இந்த உணர்வு கற்றலுக்கு முக்கிய ஆதாரமாகும்.

    உணர்வுகளால் கிடைத்த அனுபவமே அந்தக் குழந்தைக்கு ஒரு நேர்முகமான அல்லது மறைமுகமான கற்றலாக மாறுகின்றது. இது அறிதல் புரிதலின் ஆரமப நிலையாக அமைகின்றது. கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில்  “இது நீர்” என்றும் குளிர்ந்தோ அல்லது சூடாகவோ இருக்கின்றது என்ற உணர்வுசார்ந்த கற்றலும் மழலைக்குக் கிடைக்கின்றது.

    இந்த விதமான கற்றல் நாள் முழுதும் பெரியவர்களின் மேற்பார்வையிலோ அல்லது மேற்பார்வையின்றியோ தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கின்றது. பொதுவாக்ச மழலைப் பருவத்தில் விளையாட்டுப் பொருள்களின் மூலமாக இந்த அறிதல் மகிழ்வை ஊட்டுவதாகவும் ஒரு நிர்பந்தத்திற்கு கட்டுப்படாததாகவும் அமைகின்றது

    மழலையர்களின் கற்றலில் ஒரு முக்கிய நிலை “மழலைப் பேச்சு.” இது கேட்பதற்கும் உறவாடுவதற்கும் ஒரு இனிமையான அனுபவம் தரக்கூடியது.

    இதனால் தான் வள்ளுவரும்

    யாழினிது குழலினிது என்பர்தம் மக்கள்.

    மழலைச்சொல் கேளாதவர்.

    என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறார்.

    இந்த மழலைப் பேச்சின் உருவகம், வளர்ச்சி, முறைகள் பற்றிய பலவித ஆராய்ச்சிகள் உலக அளவில் நடந்துள்ளன. இந்த மழலை மொழிகள் வெவ்வேறு கலாச்சாரங்களுக்கும் சமுதாய நடைமுறைகளுக்கும் தகுந்தவாறு வடிவெடுத்துள்ளன. ஆனால் மொழிகளுக்கு அப்பாற்பட்டு இது மனித மூளையின் வளர்ச்சிப்பாதையில் ஒரு இன்றியமையாத மற்றும் முக்கியமான படிக்கல்லாகக் கருதப்படுகின்றது..

    (தொடரும்)

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -64

    க. பாலசுப்பிரமணியன்

    மழலையர்களும் கற்றலும்

    education

    மழலையர்கள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் என்பது பற்றிய விரிவான ஆராய்ச்சிகள் உலகின் பல நாடுகளில் செய்யப்பட்டுள்ளன. இதைப் பற்றிய ஆராய்ச்சிகளின் ஒட்டுமொத்தமான கருத்து என்னவெனில் –

    1.மழலையர்களின் கற்றல் ஒருமுகமானதாகவோ அல்லது ஒருமுனைப்பட்டதாகவோ இருப்பதில்லை.

    1. மழலையர்களின் கவனயீர்ப்புக்களின் நேரம் மிகக்குறைவு.
    2. மழலையர்களின் அறிவுத்தேடல் அபரிமிதமானது.
    3. சுற்றுச்சூழலின் பல்முனை ஈர்ப்புக்கள் தேடலையும் கற்றலையும் அதிகமாக பாதிக்கின்றது.
    4. வண்ணங்கள், ஒலிகள், ஒளிப்பரிமாணங்கள், அளவுப்பரிமாணங்கள் ஆகியவை கவனத்தையும் தேடலையும் அதிகப்படுத்துவது மட்டுமின்றி ஆர்வப்படுத்துகின்றன.
    5. தேடலிலும், கற்றலிலும் உணர்வுபூர்வமான, செயல்சார்ந்த கற்றல் வகைகள் அதிகம் ஈர்க்கப்படுகின்றன.
    6. மாறும் வெப்பச்சூழ்நிலைகள், பசி, தாகம், தூக்கம், உறவுகளின் தாக்கங்கள் ஆகியவை கற்றலின் நேரத்தையும், தாக்கத்தையும் பாதிக்கின்றன.
    7. பயமான, மனஅழுத்தங்களை உடைய சூழ்நிலைகளில் கற்றல் மிகக் குறைவாகவோ அல்லது இல்லாமல் போகவோ வாய்ப்புக்கள் அதிகம்.
    8. விளையாட்டான போக்கில் கற்றலின் ஆர்வமும் தாக்கமும் அதிகமாக இருப்பது மட்டுமின்றி, வளர்கின்றது.
    9. கற்றலின் பரிமாணங்கள் சிறிய அளவிலும் கால அவகாசங்களுக்கு இடையிலும் மாறவும் மற்றும் தொடரவும் வாய்ப்புக்கள் உள்ளன.

    இந்த கருத்துக்களை வலுப்படுத்தும் வகையிலும் அதனை முன்னிறுத்தியும் கல்வி முறைகள் வழிவகுக்கப்பட்டு கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் பல சிறிய வியாபார நோக்கத்தில் நடத்தப்படும் பள்ளிகளில் மேற்கொண்ட எந்தக்கருத்தும் முன்னிலை படுத்தப்படுவதில்லை. அவை குழந்தைகளின் காப்பகங்களாக மட்டும் இருப்பது மட்டுமின்றி, உடல்- மன நலன்களை பேணும் கல்வியாக இருப்பதில்லை. பல இடங்களில் வேலைகளில் அமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு இதை பற்றிய போதுமான அறிவோ அல்லது இதனைச் சார்ந்த கற்பித்தல் திறனோ இருப்பதில்லை.

    பொதுவாக மழலைகளின் கற்றலில் ஒளி. ஒலி மற்றும் செயல்களின் தாக்கங்கள் அதிகமாக இருப்பதால் – பார்வைகள், கேட்டல் மற்றும் உணர்வு சார்ந்த செயல்களால் கற்றல் அதிகமாக நிகழ்வது மட்டுமின்றி உணர்வு சார்ந்த கற்றலாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

    வண்ணங்கள், பெரியது- சிறியது போன்ற மாற்றத் தோற்றங்கள், நீண்டது – குறுகியது போன்ற அமைப்புக்கள், வளைவுகள், வட்டம்-சதுரம் போன்ற பரிமாண மாற்றங்கள் பார்வைகளால் ஈர்க்கப்பட்டு தேடலை ஊக்குவிக்கின்றது.

    அதேபோல் இசை, அதிர்வுகள், ஒலிகளின் மாறும் போக்குகள், ஒலிப்படுத்தும் பொருள்கள், இசைக்கருவிகள், பேசும் முறைகள் ஆகியவை கற்றலை வளர்ப்பதுமட்டுமின்றி அதன் பரிமாணங்களை பாதிக்கின்றன.

    அதேபோல் விளையாட்டுப் பொருள்கள், விளையாட்டு முறைகள், ஆட்டங்கள், உடலின் செயல் சார்ந்த ஈடுப்பாடுகள் ஆகியவை கற்றலை பாதிக்கின்றன.

    ஒரு தவழும் குழந்தை விளையாடும் போக்கை சற்றே உன்னிப்பாகவும கவனமாகவும் பார்த்தால் முதலில் குழந்தை அருகிலுள்ள ஒரு விளையாட்டு பொருளைத்  தேடும் பொழுது வண்ணங்கள் மிக்க பொருளைத் தேடுவதோ அல்லது, பெரிய பொருட்களால் ஈர்க்கப்படுவதோ சாதாரண நிகழ்வு. அந்தப்பொருளை நோக்கி நகரும் அந்தக் குழந்தை அடுத்து அதனை நகர்த்தியோ அல்லது அசைத்தோ வரும் ஒலிகளில் கவனம் செலுத்துகின்றது. சிறிது நேரத்தில் அந்தப்பொருளை வாயினில் வைத்து விளையாடுகின்றது. இத்தனை போக்குகளும் அதன் மூளையினாலும் உள்மனதினாலும் உந்தப்பட்டு நடக்கும் செயல்களே.

    ஆகவேதான்,மழலையர் பள்ளிகளில் இந்த மூன்றையும் இணைப்படுத்தியோ தேவைக்கும் நேரத்திற்கும் உகந்தாற்போல் முன்னிலைப்படுத்தியோ கற்றல்களுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தல் அவசியமாகின்றது.

    கற்றலின் முக்கியமான அம்சம் – புரிதல். கற்றுக்கொள்கின்ற மாணவனுக்கு சொல்லப்படுகின்ற, பார்க்கப்படுகின்ற அல்லது செயல்படுத்தப்படுகின்ற கற்றலின் பொருள் புரியாதவரை கற்றல் நிறைவுபடுவதில்லை. இது சிறப்பாவதற்கு மொழி மிகத்தேவையானது. இதனால்தான் கற்றலின் முதல் தேடல்கள் தாய்மொழியில் மட்டும் இருக்கவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. பொதுவாக, ஆராய்ச்சியின்படி மனித மூளையின் வளர்ச்சியின் முதல் சில ஆண்டுகளில் மூன்று அல்லது நான்கு மொழிகள் கற்றுக்கொள்வதற்கான வாப்புக்கள் அதிகம் இருந்தாலும், தாய்மொழியில் கற்றல் ஏற்படும்பொழுது அதன் தரமும் வலுவும் சிறப்பாக உள்ளதாக ஆரய்ச்சிகள் கூறுகின்றன. மற்றும் கற்றலின் பொது மூளையுடன் உடலின் பல உறுப்புக்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இந்த ஒருங்கிணைப்பின் தாக்கத்தினால் கற்றலின் பரிமாணங்களும், திசைகளும் வழிகளும் அவ்வப்போது மாறுபடுகின்றன. பொதுவாக மழலைப் பருவத்தில் இப்படிப்பட்ட ஒருங்கிணைப்பை கீழ்கண்டவாறு வகைப்படுத்துவர்:

    1. கண் – மனம் ஒருங்கிணைப்பு (eye-mind coordination)
    2. செவி- மனம் ஒருங்கிணைப்பு (Ear-mind coordination)
    3. செயல்(கை) -மனம் ஒருங்கிணைப்பு (Hand- mind coordination)
    4. கண்-செவி ஒருங்கிணைப்பு’ (Eye-Ear coordination)
    5. கண் -செயல் (கை) ஒருங்கிணைப்பு (Eye-hand coordination)
    6. செவி-செயல் ஒருங்கிணைப்பு (Ear-hand coordination)
    7. கண்-கண் ஒருங்கிணைப்பு (Eye-Eye coordination)

    இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த கற்றலினால் வாழ்க்கைமுறையில் செயல்களும் திறன்களும் ஒருங்கிணைந்ததாகவும், திறன்படைத்ததாகவும் நேர-கால பரிமாணங்களை மேன்மைப்படுத்துவதாகவும் அமைகின்றன..

    (தொடரும் )

    Share