கற்றல் ஒரு ஆற்றல் 68
உணர்வு சார் நுண்ணறிவும் சுய அடையாளமும்
தேடலின் பாதையில் கிடைக்கக்கூடிய அறிவு மற்றும் உணர்வுகள் விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான அடித்தளத்தை உண்டாக்குகின்றன. தன்னைப்பற்றிய விழிப்புணர்வுகள் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள், பொருட்கள், மனிதர்கள் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வுகள் என்ற இரண்டுக்கும் உள்ள உறவு நிலைகளைப் பற்றிய கற்றலையும் அறிவையும் அளிக்கின்றன. இந்த உறவு நிலையை பயம், விந்தை, அன்பு, ஆச்சரியம் போன்ற உணர்வுகள் மேம்படுத்தவோ அல்லது விலக்கிவிடவோ செய்ய வாய்ப்புள்ளது. ஆகவே வளரும் பருவத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் இந்தத் தேடல் நிலைகளைப் புரிந்துகொண்ட சரியான தர்க்கரீதியான அறிவுபூர்வமான உணர்வுகளைப் பெறவும் வலுப்படுத்தவும் உதவ வேண்டும். பல நேரங்களில் இந்த உறவுகளைப் பற்றிய தவறான அனுபவங்களையோ உணர்வுகளையோ கொடுத்தால் வாழ்க்கை முழுவதும் உணர்வுகளின் தேக்கமும் அதைத் தொடர்ந்த விபரீத மனநிலைகளும் மனப்பக்குவமும் ஏற்பட வாய்ப்புண்டு.
உதாரணமாக நிழல்களைக் கண்டு பயப்படுதல், ஒருவரின் உடல் பாங்குகளைக் கண்டு அச்சுறுதல், சில பறவைகள் பூச்சிகளைக் கண்டு அச்சுறுதல், சில உறவுகளுடன் அதிக அளவில் சார்புநிலைகளை ஏற்படுத்தல், விருப்பு -வெறுப்பு நிலைகளை வளர்த்தல் போன்ற பல மன நிலைகளை இந்த வளர்ச்சிநிலையில் பெற வாய்ப்புக்கள் உண்டு. இவை அனைத்தும் விழிப்புணர்வை வளர்க்கும் பாதையில் கிடைக்கும் மலர்களும் முட்களும் ஆகும். இவைகளின் உண்மையான நிலையினை அறிவுபூர்வமாக உட்கொள்ளுவதே கற்றலின் வெற்றி.
இந்தத் தேடலின் பயிற்சியும் விளைவுகளும் தன்னைப் பற்றிய ஒரு அடையாளத்தை மனதிலும் அறிவிலும் ஏற்படுத்த, வளர்க்க மற்றும் போற்ற உதவுகின்றன. தன்னைப் பற்றிய ‘சுய அடையாளம் ‘ (Self- identity) மனவளர்ச்சிக்கும் வாழ்க்கைப் பாதையை உறுதி செய்வதற்கும் இன்றியமையாதது. வளரும் குழந்தைகளிடம் இந்த “சுய-அடையாளத்தை’ வளர்ப்பதில் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. இந்த ‘சுய- அடையாளமே’ கற்றலின் போக்கு, திசை, விளைவுகள், முயற்சியின் வடிவங்கள், வளமை, வளர்ச்சி நிலைகள் ஆகியவற்றை வடிவமைப்பதற்கும் உரமிடுவதற்கும் துணையாக அமைகின்றது.
சுய-அடையாளத்தைப் பெறுவதற்கு முதல் படியாக தங்களைத் தாங்களே மதிக்கக் (Respecting the self) கற்றுக்கொள்ள பழக்கவேண்டும். தங்களைத் தாங்களே மதிக்காதவர்கள் மற்றவர்களிடமிருந்து சரியான தரமான மதிப்பை பெறுதல் மிகவும் கடினம். இந்தக் கற்றலுக்கான அடையாளங்கள் என்ன என்பது பற்றிய உலகளாவிய ஆரய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக தன்னுடைய உடலைப் பேணுதல் இதன் முதல் படி. தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்தல், தங்கள் மனநிலைகளைப் பேணிக்காத்தல், உடமைகளை சீராக வைத்தல், நல்ல உடைகளை அணிதல், நல்ல உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளுதல், நல்ல சிந்தனை, நல்ல பேச்சு வார்த்தைகள், ஆரோக்கியமான சூழ்நிலைகள், சுற்றுப்புறச்சுத்தங்கள் இவை அனைத்தும் நம்மையும் நம்முடைய சூழ்நிலைகளையும் நாமே போற்றுவதற்கான அறிகுறிகள்.
ஒருவகையில் பார்க்கப்போனால் “சுய அடையாளம் ” என்பது நமக்கு நாமே விதித்துக்கொள்ளும் ஒரு கட்டுப்பாடு. உதாரணமாக நேரம் தவறாமை, கால நிர்வாகம், ஒழுக்கமான நாணயமான வாழ்க்கை, வார்த்தை நாணயம் போன்ற பல சிறப்பான வாழ்க்கை முறைகள், குணாதிசயங்கள் சுய அடையாளத்துக்கு முன்னுரையாக அமைகின்றன.
பிற்கால வாழ்க்கைப் பயணத்திற்கு சுய -அடையாளங்கள் பாதுகாப்பான சாலைகள். நல்ல சுய-அடையாளங்களைப் பெற்றவர்கள் பல துறைகளிலும் தலைவர்களாகவும் முன்னோடிகளாகவும் ஒளிர வாய்ப்புக்கள் அதிகமாக அமைகின்றன. இதைக் கற்றுக்கொள்வதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் முன்மாதிரியாக இருத்தல் அவசியம்.
சரியான சுய-அடையாளங்களை இளம் வயதில் பெற முடியாத பலரும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இதே தேடலில் முயன்று இயலாமையில் தோல்வி மனப்பான்மைக்கு இரையான பல கதைகள் உண்டு. மற்றும் பிற்காலத் தேடலில் அவர்கள் பெரும்பாலும் சரியான முன் மாதிரிகள் கிடைக்காமல், தங்களுடைய அடையாளங்களை மற்றவர்களோடு ஒரே மாதிரியாக வைக்க முயற்சி செய்தும் மற்றவர்களோடு ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மைகளை வளர்த்துக்கொள்வதும் இந்த சமுதாயம் அறிந்ததே.
ஆகவே பள்ளிகளில் கிட்டத்தட்ட ஐந்து- ஆறு வயதுதொட்டே இந்த வாழ்க்கைக்கல்விக்கான கருத்துக்களை மறைமுகமாகவும் அனுபவபூர்வமாகவும் கற்பதற்க்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துதல் அவசியமானதாகத் தெரிகின்றது.
(தொடரும் )
“சுய அடையாளம் ” என்பது நமக்கு நாமே விதித்துக்கொள்ளும் ஒரு கட்டுப்பாடு. உதாரணமாக நேரம் தவறாமை, கால நிர்வாகம், ஒழுக்கமான நாணயமான வாழ்க்கை, வார்த்தை நாணயம் போன்ற பல சிறப்பான வாழ்க்கை முறைகள், குணாதிசயங்கள் சுய அடையாளத்துக்கு முன்னுதாரணமாக அமைகின்றன. நண்பர் திரு. க. பாலசுப்ரமணியனின் அரிய கருத்துக்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி வணக்கம் நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்
நண்பர் திரு நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன் அவர்களின் அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி.