Tag: இசைக்கவி ரமணன்

  • அவன்தான் பாபு

    இசைக்கவி ரமணன்

    அன்புடைய நண்பர்களே!

    எனது இனிய நண்பன் ஒருவனைப் பற்றி உங்களுடன் கொஞ்சம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். யாருக்குத்தான் நண்பர்களில்லை? நண்பர்களில்லாத வாழ்வும் ஒருவாழ்வா? எனவே, நான் என் நண்பனைப் பற்றி எழுதுவது உங்கள் அனைவருக்கும் பிடித்தமாக இருக்கும் என்ற எண்ணத்தில் ஓர் அந்தரங்கச் சித்திரத்தை அம்பலமாக்குகிறேன்.

    அன்புடன்,

    ரமணன்

    Rama1968 ஆம் வருடம். நாங்கள் பாண்டிபஜார் பகுதியிலிருந்து வீடுமாறி நங்கைநல்லூர் வந்துசேர்ந்தோம். அப்பா மட்டுமே பார்த்து வைத்திருந்த அந்த வீட்டை, நாங்கள் குடிபுகுந்த அன்றுதான் கண்டோம். அப்போது எனக்கு வயது 14. அருமையான என் கிரிக்கெட் நண்பர்களை விட்டுவிட்டு, ஏதோ ஒரு பெயர் தெரியாத தொலைதூர கிராமத்திற்கு ஏன் செல்கிறோம் என்று என் மனது நொந்து கொண்டிருந்தது. வந்த சிலநாட்களிலேயே எல்லாம் மாறிவிட்டது. சீக்கிரமே வீட்டின் பின்புறமே கிரிக்கெட் நண்பர்கள் கிடைத்தனர். கிணற்றில் நீரிறைத்துக் குளிக்கும் சுகம், நாமே போட்ட தோட்டம் என்று நங்கைநல்லூர் வாழ்க்கை படிப்படியாக வளர்ந்தது.

    அங்கு வந்த வெகுவிரைவிலேயே ஒரு கலை நிகழ்ச்சியைக் காணவருமாறு புதிய நண்பர்கள் அழைத்தனர். இப்போது குருவாயூரப்பன் குடிகொண்டுள்ள நிலத்தில் அந்த நாளில் ஒரு சிமெண்டு மேடை இருந்தது. அங்கேதான் அந்த ‘நல்லூர் என்டர்டெய்னர்ஸ்’ குழுவின் நிகழ்ச்சி. எனக்கு அங்கே யாரையும் தெரியாது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் என்னைக் கவர்ந்த மூன்று பேர்கள் எனக்கு நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள்.

    ஒருவர், வடக்கத்திக்காரர்போல் இருந்தார். அலைபுரளும் தலைமுடியைத் தள்ளிவிட்டுக் கொண்டு, ஹார்மோனியத்தை வைத்துக்கொண்டு, ‘வரப்போகும் திரைப்படத்திலிருந்து ஒருபாடல்’ என்று அறிவிப்புச் செய்து, ‘உன்னோடு வந்தாலோ உறவாடச் சொல்லும்,’ என்று இனிமையாகப் பாடினார். ஒரு கோமாளியாக வேடமிட்டு பிரமிக்க வைத்தார். தொடர்ந்த நாடகத்தில் பட்டாணிக்காரன் போலத் தமிழ்பேசி நடித்தார். இன்றும் எனக்கு நண்பராக, மூத்த சகோதரராக விளங்கும் அவர்தான் மணிசார்..

    இன்னொருவர், நங்கைநல்லூர் ‘சோ’ என்றழைக்கப்பட்ட வீரராகவன். குரலும், முழியும், மூக்குக் கண்ணாடியும் அப்படிச் சொல்லவைத்தன போலும். அத்தோடு முடிந்தன ஒற்றுமைகள். வீரராகவன், தனது வாழ்க்கையின் அல்லல்களை அடுத்தவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் கவிதைகளாய்ப் பாடும் கவிஞன். நேர்மையாளன். நேசமே நெஞ்சாகக் கிடப்பவன். இதோ இன்றுகூட அவனிடம் நான் பேசினேன்.

    மணிசார் மேடையில் நிற்கிறார். அவர்தான் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரியாம். இரண்டு கைகளையும் போரில் இழந்துவிட்டாராம். ஒப்பனை தத்ரூபமாகவே இருந்தது. ‘அதனாலென்ன? அதோ நிற்கிறாரே என் செகரட்ரி! அவர்தான் எனக்குக் கைகள்,’ என்றார். அருகே, அவரைவிடக் குள்ளமாக ஒரு பையன், கண்கள் பளபளக்க நின்றுகொண்டிருந்தான். அவர் அழைத்ததும், மணிசாரின் பின்னால் வந்து நின்று, தனது கரங்களை அவரது கரங்கள் இருக்க வேண்டிய இடத்தில் கொண்டுவந்து, அவர் பேசப் பேசக் கைகளாலேயே அற்புத பாவனைகள் காட்டினான். ஒரு கட்டத்தில் மணிசார் சிகரெட் பிடிக்கவேண்டும். இந்தப் பையன் சாரின் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்தாயிற்று. ஆனால் தீப்பெட்டியை எடுக்கும்போது அது விழுந்து விட்டது! இருவரும் அனாயசமாகக் குனிய, அந்தப் பையன் தீப்பெட்டியை எடுத்து, சிகரெட்டைப் பற்றவைத்து, மணிசாரின் முகவாயைச் சொறிந்தபோது, இதெல்லாம் ஏற்கனவே திட்டமிட்டுச் செய்தார்கள் என்றெண்ணிய அரங்கத்தார் எழுப்பிய கரவொலி அடங்க வெகுநேரமாயிற்று.

    அதே பையன் மீண்டும் மேடைக்கு வந்து பாலையா, அசோகன் (“எனக்குத் தொப்பை இல்லெ, இருக்கறதா நெனச்சுக்குங்க”) மற்றும் சிவாஜியைப் போலும் பேசி எல்லோரையும் அசரவைத்தான்.

    இத்துடன் நிற்காமல் நாடகத்தில் டாக்சி டிரைவராக வந்து, சென்னைத் தமிழில் வெளுத்துக்கட்டி, உள்ள வசனத்தை மறந்து, அப்போது மனதில் தோன்றியதைப் பேசிக் கலக்கிவிட்டான்.

    அவனைச் சந்திக்க ஆவல் கொண்டேன். அவன் மூலம்தான் மணிசாரையும், வீரராகவனையும்
    சந்தித்தேன்.

    இவன் முதலில் நம்மோடு பழகிவிட்டு அப்புறம் நம்மைச் சந்திக்கிறானோ என்று வியக்கவைக்கும்படி ஒரு நேசம். எல்லோரிடமும் எளிதில் ஒட்டிக் கொள்வான். அவர்களுக்குத் தெரிந்தவற்றில் ஏதேனும் தனக்குத் தெரிந்தவொன்றைப் பேசத் தலைப்படுவான்.

    அவனுக்குத் தொடர்புகள் பிடிக்கும். வரம்புகள் தெரியாது! அதனால்தானோ என்னமோ பலரை ஒரே சமயத்தில் காதலிப்பது அவனுக்கு சாத்தியமாகவே இருந்தது. ஒரே நேரத்தில் ஒரு பெண்மணியும், அவள் மகளும் கூட அவனிடம் மயங்கிக் கிடந்தார்கள்! அதில் ஏதும் தவறிருப்பதாக அவன் நினைத்ததே இல்லை! அதேபோல், காதல் வேறு கல்யாணம் வேறு என்பதுபோல் ஒரு மனோபாவம் அவனுக்கிருந்தது. அவனுக்குக் கொள்கைகள் கிடையாது. பாவனைகள் மட்டுமே உண்டு. காதலியிடம் உண்மையிலேயே குழைவான்; மனைவியிடம் மிகுந்த பிரேமையுடனும், மரியாதையுடனும் இருப்பான்! தாய்மீது மட்டற்ற பாசம். அவள் மிகவும் வெகுளி. தந்தையோ அதற்கும் மேல். அவர் புகையிலையைத் துப்பிவிட்டுப் பேச ஆரம்பித்தால்தான் அவரும் எவ்வளவு வெகுளி என்பது புரியும். பாபுவின் பாச வெள்ளமே அவர்களை அப்படி ஆக்கிவிட்டதோ என்றுகூடத் தோன்றியது. அவனுக்கு அத்தை ஒருத்தி இருந்தாள். அவள்தான் அவனது ‘வெளி’ நடவடிக்கைகளை சதா சாடிக்கொண்டே இருப்பாள்.

    ஒருமுறை, அவனை நான் ‘உரிய இடத்தில்’ கண்டுபிடித்து அவனோடு அவன் வீட்டுக்குச் சென்றேன். உடனே அவன் அம்மா அவனுக்குச் சாப்பாடு போட்டாள். அத்தையோ அவனை விடாமல் சாடி “நீ எங்கேர்ந்து வரேன்னு தெரியும். டே ரமணா நீ சொல்லுடா, அங்கேர்ந்துதானே வரான் அவன்?” என்று கேட்டவுடனேயே பாபு கையிலெடுத்த சோற்றுருண்டையை (மிகப் பெரிதாய்த்தானிருந்தது!) விசிறியடிக்க, பருக்கைகள் தரையெங்கும் சிதற, அவன் ருத்திர தாண்டவமாட, அத்தை விடாமல் கத்த, வைணவத் தமிழில் நமக்குத் தெரியாத கெட்ட வார்த்தைகள் இத்தனை இருக்குமோ என்று நான் வியக்க, அவன் என்னை இழுத்துக்கொண்டே வெளியே வர, ‘ஐயோ! சாப்பிடாம போறியேடா!’ என்று அவன் அம்மா அழுது அரற்றியது இன்னும் என் காதில் ஒலிக்கிறது.

    பாபுவின் குணசித்திரத்தில் மூன்று அம்சங்கள் பிரதானமாக இருந்தன. ஒன்று காதல், இன்னொன்று கோபம். மூன்றாவது கோமாளித்தனம். ஏதோவொரு விசித்திரமான தைரியம்தான் அவனை நிர்வகித்தது. காரணமில்லாமலேயே பொத்துக்கொண்டுவரும் கோபமும், எடைதூக்கி
    உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய உடம்பின் மதர்ப்பும் அவனுக்கு அடிதடியில் ஒரு ருசியை ஏற்படுத்தியிருந்தன. தேவையின்றிப் பலவிதமான சண்டைகளில் ஈடுபடுவான். அடித்திருக்கிறான்; அடிவாங்கியுமிருக்கிறான். இந்த விவகாரத்தில்தான் அவனுக்குப் பிச்சை எனப்படும் கிருஷ்ணன் நண்பனானான். பாபு-பிச்சை என்று இவர்கள் இரட்டையர்களாகவே தென்பட்டார்கள். ஏதாவது ஒரு தகராறுக்கு எப்போதும் தயாராகவே இருந்தார்கள். பிச்சைக்கு நவரசமும் சினத்தின் வெளிப்பாடுதான்! பாபுவோ உணர்ச்சிகளின் கிலுகிலுப்பை. இவர்களிருவரும் பிராமணர்கள் என்பது உள்ளூர் ரவுடிகளுக்கு இன்னும் கோபத்தை வரவழைத்தது. ஒரு முறை, நான் அவன் வீட்டுக்குச் சென்றபோது, பாபுவை அடித்துப்போட ஏழெட்டு பேர் சைக்கிள் செயின் போன்ற போர்க்கருவிகளோடு வந்திருந்தார்கள். அவனை வெளியே கூப்பிட்டார்கள். உள்ளிருந்து அவனது அம்மாவும், அப்பாவும் ஓவென்று புலம்பத் துவங்கினார்கள். பாபு அடிவாங்கவே இல்லை! ஏன் தெரியுமா? ஒரு நீண்டவுரையாற்றினான் பாருங்கள்! “என்ன அடிச்சுப்போட ஒங்களுக்கு ரெண்டு நிமிஷம் போதும்! எங்க அப்பா அம்மா காலடியிலெ ரத்த வெள்ளத்திலெ என்னெ நீங்க தூக்கிப்போடலாம். ஆனா..” என்று ஆரம்பித்து சிவாஜி கணேசனும், சைகாலஜிஸ்டும் சேர்ந்து கும்மியடித்தான். அம்மாடி! அடிக்க வந்தவர்கள் அழாத குறையாகத் திரும்பிப் போனார்கள்!

    அவனுக்கு ‘தாடி’ பாபு என்று பெயர். எப்போதோ ஒருநாள் முழுச்சவரம் பண்ணிக்கொண்டு வந்து, கொஞ்சம் வெட்கமுடன் நிற்பான். மற்றபடி, தாடி வளர்த்து அதைப் படாதபாடு படுத்திக்கொண்டிருப்பான். தாடியும், லுங்கியுமாய் சைக்கிளில் திரிந்ததாலேயே அவனுக்கு ஒரு ரெளடித் தோற்றம் வந்துவிட்டது.

    ஒருமுறை ராஜராஜேஸ்வரி கோவிலில் திருமதி மணி கிருஷ்ணசாமியின் கச்சேரி நடக்கிறது. அம்மையார் அருமையாகப் பாடினார்கள். அது தோடிராகம் என்று சொன்னவுடன் பாபுவுக்கும், பிச்சைக்கும் உற்சாகம் ஏறிவிட்டது. நாங்கள் ஒரு பத்து பேர் ஏரியிலிருந்த குருவாயூரப்பன் மேட்டில் அமர்ந்து கொண்டு உச்ச ஸ்தாயியில் ‘ஜகதோ தாரணா’ பாடுவோம், அல்லது கூப்பாடு போடுவோம். ஆளரவம் இல்லாத இடமாதலால் பிழைத்தோம். இல்லையென்றால் ஏதோ கொலை நடக்கிறது என்று போலீஸ் பிடித்துக் கொண்டு போயிருப்பார்கள். அந்த ஞாபகம் வந்துவிடவே, பாபு (பிச்சை சகிதம்) மேடைக்குச் சென்று அம்மையாரை ‘ஜகதோத்தாரண’ பாடும்படிக் கேட்டுக்கொண்டான். அதை அங்கிருந்த பிரமுகர்கள் ரசிக்கவில்லை. மேலும், விசிலடிக்காமல் எதையும் ரசிக்கத் தெரியாது அவனுக்கு! அப்படியொரு பாராட்டை மணிகிருஷ்ணசாமி அவர்கள் வாழ்க்கையில் பெற்றிருக்கவே மாட்டார்கள்!! அன்று, கச்சேரியில் மிருதங்கமும் களை கட்டி விட்டது. அல்லது அப்படித் தோன்றியது எங்களுக்கு. பாபுவால் தாங்க முடியவில்லை. உடனே ஒரு மாலையை வாங்கிக்கொண்டு மேடைக்கு (ஆமாமாம், பிச்சையோடுதான்!) விரைந்து, படபடக்க மைக்கைப் பிடித்து நாலுவார்த்தை சொல்லிக் கண்ணீர் மல்கி, மாலையையும் மிருதங்கக்காரர் கழுத்தில் போட்டுவிட்டான்! அவர், இப்படி, தாடி, லுங்கி சகிதம் கோவில் கச்சேரியில் இதுவரை யாரும் பாராட்டியிராததால், இந்தவூரில் ‘இவர்களுக்’கெல்லாம் கூடப் பாட்டு ரசிக்கத்தெரிகிறதே என்ற வியப்போடும், மாலையைப் போட்டுக்கொள்ளவில்லையென்றால் இவன் நம்மை ஒருபோடு போட்டுவிடுவானோ என்று சற்றே அச்சத்தோடும் வாங்கிக்கொண்டு கொஞ்சம் முழித்தார். பிரமுகர்களின் முகச்சுளிப்பைச் சட்டை செய்யாமல், பாபுவும், பிச்சையும் ரொம்பப் பரவசமாகி நாங்கள் அமர்ந்திருந்த மணற்பரப்புக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போதுதான் அது நடந்தது.

    “டேய் நில்லு!” என்றது ஒரு குரல்.

    குரலுக்கு சொந்தக்காரர் அந்த ஊரில் சித்தராக வலுக்கட்டாயமாக மதிக்கப் பட்ட ராஜகோபாலன் என்பவர்.

    இங்கே சிவாஜியைப்போல் புருவம் உயர்ந்து திரும்பினான் பாபு.

    “என்னடா, கச்சேரி நடுவிலெ கலாட்டா பண்றீங்களா?”

    ‘கலாட்டாவா? நாங்க ரசிச்சோம்; பாராட்டினோம் அவ்வளவுதான்,’ என்றான். பிச்சை, எதுவாயிருந்தாலும் நாலு தட்டு தட்டிவிட்டு அப்புறமாய்ப் பேசிக்கொள்ளலாமே என்று பரபரத்தான்.

    “எதுக்கு மாலயப் போட்டீங்க?”

    ‘ரசிச்சோம் போட்டோம். ஏற்கனவே சொல்லிட்டேனில்லே?’

    “நீங்க எப்டீடா மாலயப் போட்லாம் நாங்க இருக்கும்போது?”

    ‘யோவ்! கச்சேரி ஜனங்களுக்குத்தானேயா? நீங்க போடற மாலெ வெறும் சம்பிரதாயம். நாங்க போடறதுதான் உண்மையான ரசனை’ என்றானே பார்க்கலாம்!

    ராஜகோபாலன் விடுவதாயில்லை. ஒருபடி மேலேபோய், “நான் யார் தெரியுமா? உங்களெ அப்படியே நிக்கவச்சுடுவேன்!” என்று மிரட்டினார். உடனே பிச்சை லுங்கியை மடித்துக் கட்டினான்; பாபுவுக்குக் கோபம் வந்ததில் வார்த்தைகள் வரவில்லை. இருவரும், ‘யோவ்! எங்கெ, நிக்கவை பாக்கலாம்! யாரெ மெரட்றே?’ என்க, அப்புறம் தொடர்ந்த சம்பாஷணையை இங்கே பிரசுரிப்பதற்கில்லை!

    ஒருவழியாக நாங்கள் இருவரையும் மீட்டுக்கொண்டு வந்தோம். துடிப்பான, நல்ல மனம் கொண்ட இளைஞர்களை ரவுடிகளாக மாற்றுவது இதுபோன்ற பிரமுகர்களின் அறியாமையும், அட்டகாசமும்தான். தோற்றம் என்பது எந்த அளவுக்கு மாயையைத் தோற்றுவிக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. அற்புதமான உடையில்தான் எத்தனைக் களவாணிகளை நாம் சந்திக்கிறோம்! எத்தனை நல்லவர்கள் ஏனோ தாடியிலும் லுங்கியிலும் தொலைந்து போகிறார்கள்!

    என்னிடம் ஒருமுறை கூட அவன் கோபப்பட்டதே இல்லை.. நான் அவனைப் பலமுறை கடிந்துகொண்டதுண்டு. ஒருமுறை — இதுவும் கச்சேரியில்தான்! வீணை காயத்ரி — சந்தானம் என்ற ஒரு எளிய மனிதரிடம் தேவையில்லாமல் கோபப்பட்டுக் கண்ணெல்லாம் சிவந்து அடிக்கத் தயாராகிவிட்டான். நான் அவனை அங்கேயே கடுமையாகச் சாடி அவரிடம் மன்னிப்புக்கேள் என்றேன். கேட்டானே!! அவரும் உடனே அவன் கோபத்தை மறந்து கைகுலுக்கினாரே! அதுதான் பாபு!

    அவன் பழகாத ஆளே ஊரில் கிடையாது. அவனும், பிச்சையும் கோவிலில் சாமி தூக்கச் செல்வார்கள். விநாயகர் கோவிலில் சதுர்த்தியன்று இரவு முழுக்க ஊர்வலம். இருவரும் யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தோள்கொடுப்பார்கள். மறுநாள் யாரையோ காதலித்துக் கொண்டிருப்பான். அதற்குப் பிறகு, ஏதாவது அடிதடியில் காயப்பட்டுக்கொண்டு வருவான். அடுத்தநாள் காலையில் நான் வெளியே வந்தால், இவன் ஈரத் துண்டைக் கட்டிக்கொண்டு ஒரு மணிப்பிரம்பைக் கையிலேந்திக் கொண்டு, என்னமோ மந்திரம் ஜபித்துக் கொண்டு ஒரு பாழடைந்த சிவன் கோவிலுக்கு வெறுங்காலோடு சென்றுகொண்டிருந்தான்! அவனும், பிச்சையுமாய்ப் புதைந்து கிடந்த பழங்காலத் தூணை வெகுபிரயாசையுடன் வெளியே கொணர்ந்து நிறுத்தினார்கள். பாம்பு மண்டிய புதர்களைக் களைந்தார்கள். இன்று அந்தக் கோவில் நங்கைநல்லூரை அடுத்த எம்.எம்.டி.சி. காலனியில் பெரிய சிவன்கோவிலாய்ப் புகழுடன் விளங்குகிறது.

    நங்கைநல்லூர் குளத்தங்கரை சிவன் கோவிலுக்கும் இவர்களிருவரும் நிறையவே உழைத்தார்கள். இவர்கள் உழைத்த இடம் புகழ்பெறும்போது, இருவரும் அங்கிருக்க மாட்டார்கள். அது அவர்கள் ராசியோ, குணமோ, இரண்டுமோ?

    குருவாயூரப்பன் கோவில் கட்டப்படுவதற்கு முன்னால், தொடர்ந்து பலநாட்கள் பஜனைகள் நடைபெற்றன. நான் தினமும் அங்கு சென்று தபலா வாசிப்பேன். (அடிப்பான் என்பார் அப்பா) எனக்குத் தபலா கற்றுக் கொடுத்த — கொடுத்த என்றால் தபலாவும் கொடுத்த ! — மணிசார் மெட்டுப்போட, நான் பாடல்களெழுத, முறையான சம்பிரதாயத்தில் நாங்களே எங்கள் நிகழ்ச்சியை வழங்குவதாக ஏற்பாடாயிற்று. ‘கந்தப்பா .. கந்தப்பா..கந்தப்பா..’ என்ற பாட்டை நான் இயற்ற, சார் மெட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறார். பாபு வந்து சேர்ந்துகொண்டான். சாரிடம் ரொம்ப மரியாதையாக இருப்பான். நான் ஒருவரி பாடினால் அடுத்தவரியை அவன் அனாயசமாக இட்டுக்கட்டிவிட்டான்! அது ஐயப்பன் மேலே அமைந்தது. இப்படி நானும் அவனும் கந்தப்பா ஐயப்பா என்று மாறிமாறி இயற்றிய பாட்டை மணிசார் அந்தக் கூரைக்கொட்டகையில் பாடும்போது குழந்தைகளின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது! கூட இருந்து கண்பனித்தவன், அதற்குப் பிறகு பஜனைக்கு வரவே இல்லை! அதுதான் பாபு!

    ஐயப்பன் மலைக்குப் போக ஆரம்பித்தான். கடுமையாக விரதமும் இருப்பான். அப்படி இருக்க வேண்டியதில்லை என்று பேசத்துவங்கி வாங்கிக் கட்டிக் கொள்வான். ஐயப்ப பஜனைக்கு என்னை அழைப்பான். நானும் அவனுக்காகப் பலவிடங்களுக்குச் சென்று தபலா தட்டுவேன்; பாடுவேன்; பிரசாதம் உண்டு திரும்புவேன்.

    ஒருமுறை ஒரு பெரிய ஐயப்பன் ஊர்வலம் ஏற்பாடானது. யானையின்மீது ஐயப்பன் படத்தை வைத்து அர்ச்சகரை அமர்த்தி, ஒருவர் பெருங்குடை பிடிக்கவேண்டும் என்று தீர்மானமாயிற்று. நான்தான் குடைபிடிப்பேன் என்று பாபு சொன்னபிறகு அதற்குமேல் யாரும் ஒன்றும் சொல்ல முடியவில்லை! சைதாப்பேட்டையில் ஊர்வலம். மிருகக்காட்சி சாலையிலிருந்து யானையைக் கொண்டுவந்திருந்தார்கள். அதற்கு என்ன நோயோ, வாயில் நுரைதள்ளிக் கொண்டிருந்தது. இருந்தாலும் கொஞ்ச நேரந்தானே என்று சமாதானப் படுத்திக்கொண்டு ஐயப்பனும், அர்ச்சகரும் யானை மீது அமர்ந்தாயிற்று. பாபு யானைமீது நின்றுகொண்டு குடையைத் தூக்கினான். அவனுக்குத் தானே அரசனானதுபோல் பெருமை! ஒரு சிவாஜி கம்பீரம்! நுரையானை கொஞ்ச தூரம்தான் போயிருக்கும். இவன் தூக்கிவந்த குடை மேலே இருந்த மின்சாரக் கம்பியைத் தொட, அர்ச்சகர் “ஐயப்பா!” என்று படத்தோடு குதிக்க, குடை கீழே விழுந்துவிட, பார்த்தால் மறைமலை அடிகள் பாலத்தில் யானை பந்தயக் குதிரையாய்ப் பறக்க, அதன்மேல் நம் பாபு யானையின் கழுத்தை இறுகத் தழுவிக்கொண்டு கிடக்கிறான்!

    அவனுக்குப் பரபரப்பு பிடிக்கும்; பயம் கிடையாது. அதே ஊர்வலம் நங்கைநல்லூரில் நடந்தது. இந்தமுறை கோவில் யானை வந்தது. குடைக்குப் பதில், பாபு கவரி வீசினான். மேலே திறந்த உடம்போடு அவன் ஐயப்பன்மேல் பக்தியோடும், சாலையின் இருமருங்கிலும் இருந்த பெண்கள்மேல் காதலோடும், தனது புயங்களில் தானே மயங்கியபடி, நிதானமாய்த் தாளம் பிசகாமல் கவரி வீசிய காட்சி இன்னும் கண்முன்னே நிற்கிறது.

    அவனுக்கு எல்லாம் சுலபமாகவே வந்தது, படிப்பைத்தவிர. முறையான கல்விக்கும் அவனது மனப்போக்குக்கும் சமாதானம் காணமுடியாத முரண்பாடுகள் இருந்தன. அவன் பச்சையப்பன் கல்லூரியில் படித்தான். சென்று வந்தான் என்பதே பொருத்தம். படிப்பு அவனுக்குப் பிடிக்கவே இல்லை. யாருக்குத்தான் பிடிக்கும் சொல்லுங்கள்? ஹரிகிருஷ்ணன், வீரராகவன், வர்த்தமானன், சுகுமார் என்று நாங்களெல்லாம் நல்லூர் இலக்கிய வட்டம் என்ற அமைப்பை நிறுவினோம். மாதாமாதம் கவியரங்கம் நடத்துவோம். நான்தான் தலைப்புக் கொடுப்பேன். ‘நானும் எழுதறேண்டா’ என்றான். “காவிரியில் நான்” என்றேன். அழகான கவிதை எழுதிக்கொண்டு வந்து அதை உணர்ச்சியோடு படித்துக் கைதட்டலும், கொஞ்சம் காதலும் வாங்கிக் கொண்டானே! நான் கொடுத்த உற்சாகத்தில் ஒரு நோட்டுப் புத்தகம் நிறையக் கவிதைகள் எழுதிக் காண்பித்தான். அப்புறம் நிறுத்திவிட்டான். அதுதானே பாபு!

    பாபுவுக்குக் கனவுகள் அதிகம். அதிகமென்ன, அவன் கனவுகளில்தான் வாழ்வான். கனவுகள் அவசியம் என்பதை யார்தான் மறுக்க முடியும்? நேற்றுவரை நேசமுடன் பாதுகாக்கப்பட்ட கனவைத்தானே இன்று நினைவென்று கொண்டாடுகிறோம்? கனவுகள், அடிக்கடி உதிர்ந்துபோகும் நம்மை மறுபடி மறுபடி நிறுவிக்கொள்ளத் துணைபுரிகின்றன. நாம் எப்படி இருக்கிறோம், எப்படி இருக்கவேண்டும், இவையிரண்டுக்கும் இடைவெளி இருப்பின் அதைச் சரிப்படுத்த என்னசெய்வது? இந்த எல்லாத் தளங்களும், நமது கனவுகளால் ஊடுருவப்பட்டுத்தான் இருக்கின்றன. கனவின் ஸ்பரிசம் இல்லாத இதயமே இல்லை. மனித மனத்தில் மனிதத்தன்மை இன்னும் இருப்பதற்குக் கனவுகளே காரணம்.

    ஆனால், பாபுவின் கனவுகள், அவனது கண்களுக்கு வெளியே இருந்தன. அதனால்தான் அவனுக்கு நினவு என்கிற நிதர்சனம் கண்ணில் தட்டுப்பட்டதே இல்லை. சந்தித்த எல்லோரையும் ஏதொவொரு விதத்தில் தொடக்கூடிய அவன் வாழ்க்கை சோபிக்காமல் போனதன் காரணம் இதுதான். அவனது கவிதைக் கனவு, ஒரு நோட்டுப் புத்தகத்தோடு முடிந்துவிட்டது. சினிமாக்கனவு, ஒரு ஷூட்டிங்கைப் பார்த்ததோடு நின்றுவிட்டது. காதற்கனவு, கடைசிவரை அவன் மனத்தையும், உடலையும் அரித்தது.

    ஆயினும், அவனது கனவுகளுக்குச் சிறப்பான அந்தஸ்து உண்டு. அதற்குக் காரணம், அவனுக்கு மற்றவர்களைப் பற்றிய கனவுகள் நிறையவே இருந்தன. உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்கிறேன். பூஞ்சையான நான் வலுமுறுக்கேறிய உடலோடு திகழவேண்டும் என்பது அவன் கனவு. அதற்காகக் காலை 4.30 மணிக்கு என் வீட்டுக் கதவைத்தட்டி, வா, ஓடலாம் என்பான்! நான் தூக்கம் கலைந்து வருவதற்குள், திண்ணையில் சற்றே கிறங்கியிருப்பான். காலில் கட்டாயம் தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்ளவேண்டும்! ஏனென்றெல்லாம் கேட்கக் கூடாது! முக்கால்வாசி நேரம், முக்கால்வாசி இடம் உலர்ந்திருந்த அந்த ஏரியில், நாங்கள் ஓடுவோம்! நின்றால், ஆயிரம் ஈக்கள் காலைப் பிடுங்கும். தேங்காய் எண்ணெய்! ஊஹும்! ஒத்துக்கொள்ள மாட்டான். பிறகு அவன் மிகவும் ரசித்த என் அம்மாவின் காப்பியை அருந்திவிட்டுச் செல்வான்.

    என் கவிதைகளும், பாடல்களும் பிரபலமடைய வேண்டும் என்று ரொம்பக் கனவு காணுவான்.

    ‘டேய்! நீ ஃபேமஸ் ஆகும்போது நான்தாண்டா ஒன் செக்ரட்டரி,’ என்பான். நல்லூர் இலக்கிய வட்டத்தின் ஆண்டுவிழா சிறப்பாக நடந்தது. முத்துமுத்தான கையெழுத்தில் அவன் பரிசுப் புத்தகங்களில், என் கவிதைகளை எழுதிக்கொடுத்தான். விழா முடிந்து எல்லோருக்கும் எங்கள் வீட்டில் சாப்பாடு. கிட்டத்தட்ட 75 பேருக்கு அம்மாவும், என் அக்கா மாலாவும் அற்புதமான விருந்தைச் சமைத்துப்போட்டார்கள். அது பரவாயில்லை. ஏரிக்குள்ளிருந்த எங்கள் வீட்டைச் சுற்றியும் மழையால் தண்ணீர் சூழ்ந்திருந்தது. நாங்கள் பின்வீட்டுச் சுவரை ஒரு ஸ்டூல் உதவியால் தாவி அப்புறம் செல்வோம். விருந்தினர்களை எப்படிக் கொண்டுவருவது? பாபுவின் தலைமையில் பாறாங்கற்களைக் கீழே போட்டு அதன்மேல் சாரப்பலகைகள் வைத்து ஒரு பாலமே கட்டினோம்! இருபுறமும் நண்பர்கள் தோள்கொடுக்க, அந்தப் பாலத்தில் கவிஞர் சுரதா உயிரைக் கையில் பிடித்தபடி நடந்து வந்தார்.

    ஏரித்தண்ணீர் காம்பவுண்டு சுவர், பெரிய இரும்பு கேட் எல்லாவற்றையும் தாண்டி, வாசற்படியைக் கடந்து எப்படி வசதி என்று ததும்பிக் கொண்டிருந்தது. விதம்விதமான வண்ணங்களில் பாம்புகள் விளையாடிக் கொண்டிருந்தன. சில, கேட்டில் பின்னிக் கிடக்கும். சில நமக்கு மிக அருகே, தண்ணீரிலிருந்து திடீரென்று தலையைத் தூக்கிக் கொட்டாவி விடும். ஆனால் உள்ளே வரா. சடைப்பூரான்கள் அப்படியில்லை. அவை கரையைத் தேடின. எங்கள் வீடுதான் ஒரே கரை! பார்க்கப் பயங்கரமாக இருக்கும் அவை வீட்டு வராண்டாவில் நுழையும்போது, அவற்றைப் பார்த்துப் பேசிக்கொண்டே அவற்றை அடித்துத் தண்ணீரில் எறிவான் பாபு. என் தங்கை புவனா சின்னக் குழந்தை. அப்போது அவளுக்கு ஆறுவயது. அவளை அப்படியே தூக்கிக் கொண்டு, கோமாளித்தனம் செய்து அவளைச் சிரிக்க வைத்துப் பயத்தைப் போக்கி அந்தப் பாம்பு, பூரான், அட்டைக் கூட்டத்தை மெல்லக் கடப்பான்.

    ஒவ்வொரு நாளும் இந்தக் காரியத்தைச் செய்வதற்கென்றே வருவான். தண்ணீர் வடிந்த பிறகு, அவன் தென்பட மாட்டான்.

    அதுதான் பாபு!

    பாபுவுக்குக் கோபம் எப்படிப் பொத்துக் கொண்டு வந்துவிடுமோ, கண்ணீரும் அப்படியேதான்! தன்னை நண்பர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாத போது, அல்லது அப்படி அவன் நினைக்கும்போது அவன் கண்கள் கண்ணீர் பூத்துப் பளபளக்கும். அதேபோல், யாரோ ஒருவரது துயரம் பற்றி நான் விவரிக்கும்போதும், அவனுக்குக் கண்ணீர் வந்துவிடும்.

    “புதிய பறவை” திரைப்படத்துக்கு என்னைக் அழைத்துக்கொண்டு சென்றான். ‘எங்கே நிம்மதி?’ என்று சிவாஜி, பெருந்திரையில் பிரும்மாண்டமாக எழுந்து நிற்கும்போது, பாபு சில்லரையை வாரியிறைத்து, விசிலடித்துக் கண்ணீர் விட்டான். இந்தக் கூத்தைப் பார்க்கும்போது எனக்குத் தமாஷாக இருந்தது. ஆனால், அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், அவனது இயல்பில், சோகம் கிடையாது! பிச்சையோடு சேர்ந்து ‘கடாமார்க்’ சாராயம் அடித்திருக்கிறான். ஆனால் உண்மையில் அதில் அவனுக்கு ருசியில்லை. அவனுக்கு எதிலாவது உண்மையிலேயே ருசியிருந்ததாவென்பதில் எனக்குச் சந்தேகம்தான். எதிலும், யோசிக்காமல் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் விசித்திர மனப்பாங்கு அவனுக்கிருந்தது.

    கவிதை எழுதினானா? பாலங்கட்டினானா? காதல் செய்தானா? ‘கடாமார்க்’ அடித்தானா? சாமி தூக்கினானா? சைக்கிள்செயின் சுற்றினானா? கச்சேரி கேட்டானா? அதேபோல் ஒருநாள் எங்கள் வீட்டெதிரே பெரிய இடத்துப் பிள்ளைகள் முறையாகக் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களோடிருந்தேன். இவன் வந்து நின்றான் குள்ளமாக, தாடி லுங்கி சகிதம்!

    “டேய்! நானும் ஆடறேன்”, என்றான். அவர்கள் அவனைப் பொறுக்கியாகவே பார்த்தார்கள். அதை அவன் ரசித்தபடியே, லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு மட்டையைப் பிடித்தான். அவனை மட்டந்தட்டச் சரியான சந்தர்ப்பம் கிடைத்தது என்று அவர்களில் மிக வேகமாகப் பந்துவீசக் கூடியவனிடம் பந்தைக் கொடுத்தார்கள். இவனா, விடாமல் கோமாளி சேஷ்டைகள் செய்தபடி, என்னிடம் பேசிக்கொண்டே, ஒவ்வொரு பந்துக்கும் அவனது சென்னைத் தமிழில் காமென்டரி கொடுத்தபடி, ஆறும் நாலுமாக விளாசித் தள்ளினான். ஸ்பின்னரைக் கூப்பிட்டு எல்லா ஃபீல்டர்களையும் எல்லைக் காவல் மாதிரி நிற்கவைத்தார்கள். “…த்தோடா!” என்று இன்னும் சில பொன்மொழிகளைச் சொல்லிப் பந்தை வயற்காட்டை நோக்கியடித்து, “டேய்! போய் சைக்கிள்ள எடுத்துட்டு வாங்கடா!” என்று அவர்களைச் சீண்டினான்.

    “ஒங்களுக்கு இது போதும்னு நெனக்கறேன்”, என்றபடி மட்டையைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் பந்தை எடுத்துக்கொண்டான். அவனவன் அங்கே காலுக்கும், கைக்கும் கவசம் அணிந்து புத்தம்புதிய ஷூவோடு இருந்தபோது, இவன் லுங்கியை அனாயசமாக முக்கால் மடிப்பு மடித்து, வெறுங்காலுடன் நாலெட்டு அடிகள் எடுத்துவைத்துப் பந்துவீசி, விடாமல் பேசி, நான்கைந்து பேரை அவுட்டாக்கி, சிலருக்குப் பலான இடத்தில் முத்திரை போட்டுப் பந்தைத் திருப்பிக் கொடுத்தான். வெலவெலத்துப் போன அந்தக் கேப்டனிடம், “தாங்க்ஸ்ப்பா! என் தம்பிய அனுப்பறேன், அவன் வந்து ஃபீல்டிங் பண்ணுவான், ” என்று நக்கல் பண்ணிவிட்டு, என்னைப் பார்த்து, “வாடா ரமணா! என்னாடா இந்தக் கத்துக்குட்டிங்க கூட ஆடிக்கிட்டு,” என்று ஞாபகமாய் அவர்கள் காதில் விழும்படிச் சொல்லிவிட்டு சைக்கிள் ஏறினான்!

    மறுநாள் வந்தானோ? அல்லது மறுவாரம்? ஊஹும்! அவன்தான் பாபுவாயிற்றே!

    பாபு-பிச்சை இரட்டையர்கள் போதாதென்று சேகர் வந்துசேர்ந்தான். சேகர், குடிசையிலிருந்து வந்தவன். எம்.ஜி.ஆர். ரசிகனாகத் துவங்கி, வறுமையில் அல்லலுற்று, தற்போது முக்கியமான கம்யூனிஸ்டாக ஆகிவிட்டான். பளுதூக்கி உடற்பயிற்சி செய்வான். மேலுடம்பு அற்புதமாக இருக்கும். கால்மட்டும் சூம்பியிருக்கும். ஒருநிமிடம் கூட இடைவெளி விடாமல் தமாஷ் பண்ணி விலா நொறுங்கச் சிரிக்கவைப்பான். இவன்வந்து சேர்ந்துகொண்டான் பாபுவோடு! என்வீட்டில் ஒரே கும்மாளம், கொண்டாட்டம். மொட்டை மாடியில் வெயிட் லிஃப்டிங்! கூட்டம் பெருகியது. அப்பா இதை அவ்வளவாக ரசிக்கவில்லை. அம்மா எல்லோருக்கும் விதவிதமாகச் சமைத்துப்போடுவாள். அதனால், அவளது பல அம்சங்களை அவர்கள் பொருட்படுத்தவில்லை. மொட்டை மாடியில் நாங்கள் குளிப்போம், ‘டேங்க்’ குழாயைத் திருப்பிவிட்டு! அப்பா கீழே விசனமாக இருப்பார்.

    நாலணா பந்தயத்திற்காக பாபு மொட்டை மாடியிலிருந்து குதித்தான். சிராய்ப்போடு தப்பினான். என்னை அப்படியும் வீரனாக்கி விடுவதென்று ‘போர்டிகோ’ மேலிருந்து என்னைக் குதிக்கச் சொன்னான். சுகுமாரும் அவனோடு சேர்ந்துகொண்டான். அவர்கள் பிடிவாதம் பிடித்து, மாடிக்கதவையும் சாத்தி……. எனக்கு வேறு வழியில்லை. குதித்து, இதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்!

    பெருமழை பெய்து ஏரி நிரம்பிவிட்டது. ‘சைக்கிள்கடை தாஸ்’ குடிசையைப் பெயர்த்துக் கொண்டு வந்த தண்ணீர், பழைய கண்மாய் வழியே பாயத் துவங்கியது. நாவிதரும், உள்ளூர் மேளக்காரரும், அனைவருக்கும் நண்பரான நடராஜன், அந்தக் கதையை அங்கு வந்த பாபுவிடம் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் பாணியில் சொல்லிக் கொண்டிருந்தார். அதை இன்னும் கொஞ்சம் மெருகேற்றிச் சொல்ல, பாபு தயாராயிருந்ததை நான் கவனித்துக் கொண்டேன்! அவனும், சேகரும் ஒரு டயரை எடுத்துக்கொண்டு, அந்த ஏரி வெள்ளத்தில் “முல்லை மலர்மேலே” என்றுபாடிக்கொண்டு படகு விட்டார்கள்! ஏறக்குறைய, வெள்ளத்தில் மூழ்கவிருந்த ஒரு கிணற்றின் சுவற்றில் இளைப்பாறி, அதில் இறங்கி ஆழம் பார்த்தார்கள். சேகரும் கிளம்பிவிட்டான். பாபு, என் அம்மா கூப்பாடு போட்டதில் வீட்டுக்கு வந்து கையில் ஒரு காப்பி டம்ளருடன் மாடிக்குத்தாவி, அங்கிருந்து ‘ஆஸ்பெஸ்டாஸ்’ கூரைச் சரிவில் பாடிக்கொண்டு ஓடிவந்து, எங்கள் வீட்டுக் கிணற்றின் மேல் தாவி, ராட்டினம் தொங்குமே அந்த இரும்புக் கழியின்மீது — சலங்கையொலி கமலஹாசனெல்லாம் பிச்சைவாங்கும்படி, தகிடதகதிமி தந்தானா செய்து, இரண்டு மூன்றுமுறை நாங்கள் அலற அலற ஓடி……. எல்லாம் மழையில்! பிறகு பூப்போல இறங்கிவந்து, சாதுவாகக் காப்பி குடித்தான்!

    அவனை விட்டுவிட்டு நான் எதுவும் சாப்பிடவோ, அருந்தவோ கூடாது! ஒருமுறை ‘போர்ன்வீட்டா’ குடித்துக் கொண்டிருந்தேன், வந்துவிட்டான்! அவன் அடித்த லூட்டியில், நான் குளியலறைக்குள்ளே சென்று அங்கு குடிக்க முயன்று, அவன் கதவுக்கு அந்தப் புறத்திலிருந்து செய்த கோமாளித்தனத்தில் துப்பிவிட்டேன்!

    அவன் சந்தோஷப்பட்டான்!

    எங்கள் வீட்டில் கிணறு வற்றிவிட்டது. ஆழமாய்த் தோண்டினால்தான் நீர் சுரக்கக்கூடும் என்றார்கள். பாபு, பிச்சை, சேகர் மூவரும் வந்துவிட்டார்கள்! நானும் கிணற்றுக்குள் இறங்கினேன், அல்லது இரக்கமின்றி இறக்கப்பட்டேன்! மிகக் கடுமையான பணியைத் தனது நகைச்சுவையால் ஒரு விளையாட்டு மாதிரி செய்துவிட்டான் பாபு. ஆங்கிலம் பேசியே தீருவது, அதுவும் என் அப்பாவிடம் என்று ஒரு முடிவுக்கு வந்து, கிணற்றுக்குள்ளிருந்து அவன் படுத்திய பாட்டில், அப்பா கிணற்றுக்குள் குதிக்கத் தயாராய் விட்டார்! தண்ணீர்தான் இல்லை! ராட்டினத்தை மெல்ல அசைத்து வாளியில் டீ வரும்! கிணற்றுக்குள்ளேயே குடித்துவிட்டு பீடி பிடிக்கவேண்டும் என்பான். அது நல்லது என்று ஆயுர்வேதத்தில் சொல்லியிருப்பதாகக் கதை விடுவான். அன்று மாலைப் பொழுதில் பாபுவின் முயற்சியால் புதிய ஊற்றுக்கள் திறந்தன. நாங்கள் அந்த வீட்டில் இருந்தவரை எங்களுக்குப் பஞ்சமின்றித் தண்ணீர் கிடைத்தது. ஆனால் நான் சம்மட்டி அடிக்கும்போது பிசகி அவன் நெற்றியை உராய்ந்து ரத்தம் கொட்டியது. எல்லோரும் துடித்துப் போனோம். அவன் தலையில் துணியைக் கட்டிக்கொண்டு சிவாஜி பார்வை பார்த்தான்! இந்தப் பணியில் அவன் உடம்பில் காயங்கள் ஏற்பட்டன. என் வீட்டார் கவனித்து மருத்துவ சிகிச்சை அளித்திருக்க வேண்டும்..

    பாபுவின் வீட்டார் அனைவரையும் எனக்குத் தெரியும். அண்ணன் வெங்கடேஷ் அற்புதமான கிரிக்கெட் வீரன். பந்து இரண்டு பக்கமும் நாகம்போல் சீறும்படிப் போடுவான். தம்பிகள் வாசு, ராஜன், தங்கைகள் ஹேமா, ஜெயந்தி எல்லோரும் என்னிடம் மிகவும் அன்புடனிருப்பார்கள். அவனும் அனைவரிடமும் மிகுந்த பாசத்துடனிருப்பான். பாபுவும், வாசுவும் திருமணத்திற்குப் பிறகும் சேர்ந்தே இருந்தார்கள். பாபு, தன் மனைவி உமாவைப் பலர் முன்னிலையில் கொஞ்சித் தமாஷ் பண்ணிப் பாடாய்ப் படுத்துவான். அவளுக்கோ ஒருபுறம் வெட்கம் பிடுங்கித் தின்னும், மறுபுறம் பெருமை தாளாது. நவீனும், வினோத்தும் சுட்டிப் பயல்கள். வாசுவின் மனைவி உஷா. மகள் ஸ்வப்னா. மகன்பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. இவர்கள் எல்லோரும் மைசூரிலிருந்தார்கள்.

    நான் 1983 லிருந்து 1986 வரை பெங்களூரில் இருந்தேன். அப்போது அலுவல் நிமித்தம் அடிக்கடி மைசூர் செல்வேன். இந்தச் சகோதரர்களோடுதான் தங்குவேன். வேறிடத்தில் தங்க நினைக்கவும் முடியாது. பாபு தலைமையில், அவர்கள் ஒவ்வொருவரும் என்மீது காட்டிவரும் அன்பு விலைமதிக்கவொண்ணாதது. தன் சக்திக்கு மீறிக் கடன்வாங்கி விருந்தினர்களை உபசரிக்கத் துடிப்பான் பாபு. கெளரவத்திற்காக இல்லை. கொள்ளை அன்பு அவனுக்கு.

    மைசூரில் அவன்வீட்டில், எல்லோரும் உட்கார்ந்து அரட்டை அடிப்போம். என் பாடல்களையும், கவிதைகளையும் விரும்பிக் கேட்பார்கள். எப்போதும் விருந்துதான். பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொள்வார்கள். ஒருநாள் பெஞ்சில் பாபு படுத்துக் கொண்டிருக்கிறான். அவன் தலைக்குமேலே ராமர் படமிருந்தது. மத்தியான நேரம். நான் தூக்கம் வராமல் உட்கார்ந்திருந்தேன். அவனுக்கு அசதி. பலமாகக் குறட்டை விட்டான். அடுத்தடுத்து ‘இந்த பாலன் உள்ளே வரலாமா?’, ‘என்மனம் நீ வாழ்ந்திடும் மந்த்ராலயம்’ என்ற இரண்டு பாடல்களைப் புனைந்தேன். இந்த பாடல்கள் எப்போது பாடினாலும் ரசிக்கப் படுவன.

    பாபு எழுந்த பிறகு எல்லோரையும் அழைத்துப் பாடல்களைப் பாடிக் காட்டினேன். ‘ஐயோ! பாவிடா நான்! நீ பாட்டுப்போடும்போது மடையனாட்டம் கொறட்டை விட்டுத் தூங்கிண்டிருந்தேனே.’ என்று அனாவசியமாக ரொம்ப வருத்தப்பட்டான். நான் மேஜையில் தாளம்போட அவன் தலையில் ரவுடிக்கட்டுக் கட்டிக்கொண்டு கூத்தடிப்பான்!

    நல்லூர் இலக்கிய வட்ட ஆண்டு விழாவுக்கு நன்கொடை வாங்க வீடுவீடாகப் போனோம். அதிகம் பிராமணர்களிருந்த இடமது. பாபு, அவர்களிடம் பிராமண பாஷையிலேயே பேசச் சித்தமானான். நான் எவ்வளவோ தடுத்தும் ‘நீ சும்மா இருடா’ என்று என்னைத் தள்ளிவிட்டு, ஒரு பெரியவரிடம் ரொம்ப பவ்யமாகச் சென்று, ‘எங்களுக்கு வருஷாப்தீகம், நீங்க ஒத்தாசை பண்ணணும்,’ என்க, அவர் முழிபிதுங்க, அவனைப்
    பரபரவென்று தள்ளிக்கொண்டு வந்து, ‘அடேய்! அதற்கு அர்த்தம் திவசம்டா,’ என்று சொல்ல அவன் பலமாக ரசித்தான்!

    பாபுவும், வாசுவும், “அப்படி நீ என்னதாண்டா வேலை செய்கிறாய்?” என்று கேட்டார்கள். ஒரே நாள் என்னோடு அதிகாலையில் சைக்கிளில் வந்து நான் செய்யும் வேலையை அல்லது படும்பாட்டைப் பார்த்து மிகவும் வருந்தினார்கள். ‘மவனே, என்கிட்ட மட்டும் காசிருந்தா ஒன்னெ இப்படிக் கஷ்டப்பட விடுவேனா?’ என்பான் பாபு. எனக்கு பெங்களூரிலிருந்து சென்னைக்கு மாற்றலாகிவிட்டது. கடைசியாக ஒருமுறை அனுவோடு மைசூருக்குச் சென்றேன். அவன் சின்னக் குழந்தையைப்போல் அழுதான். ‘இதுக்குத்தாண்டா யார்கிட்டயும் பாசம்வக்கக் கூடாதுன்றது,’ என்று பொருமினான்.

    பாசத்தைத்தவிர அவனுக்கு வேறொன்றும் தெரியாது. எல்லாரிடமும் அப்படியேதானிருந்தான்!

    நானும் பாபுவும் சேர்ந்து தண்ணி அடித்திருக்கிறோம். அதில் அவனுக்குப் பிரத்யேகப் பெருமை உண்டு. அப்புறம் நான் விட்டுவிட்டேன். அவன் தொடாததில்லை! தொட்ட எதையும் விட்டதுமில்லை! நான் மதுரையில் இருந்தபோது கூட, என்னை வந்து பார்த்திருக்கிறான். அது மட்டுமல்ல, என்னுடனிருந்த நண்பர்களைக் கவர்ந்துமிருக்கிறான். என் நண்பர்களெல்லாம் அவனுக்கும் நண்பர்களானார்கள். அதில் சுப்புவும் உண்டு. ஒருவழியாய் சுப்புவுக்குக் கல்யாணம் ஆனதும் தேனிலவுக்கு அவன் மைசூர்தான் வரவேண்டும் என்று பாபு ஆணையிட்டான். நாங்கள் ஒரு
    படையோடு போனோம்! பாபு என்ன செய்தான் தெரியுமா? தன் வீட்டைக் காலிசெய்துவிட்டு, அதைப் புதுமணத் தம்பதிக்கு விட்டுவிட்டு, வாசு வீட்டுக்குத் தன் குடும்பத்தோடு சென்றுவிட்டான்!

    அதுதான் பாபு என்று நீங்களே சொல்லத் துவங்கி விட்டீர்களல்லவா? அதுதான் பாபு!

    ஒத்தாசை செய்வது அவனுக்கு இயல்பு. மணிசார் 1973 -ல் நங்கைநல்லூரிலிருந்து மாம்பலத்துக்கு வீடு மாறினார். அப்போதும் அவன் அங்கிருந்தான்! முன்பு, கோவையில் என் மாமியார் மாமனார் வீடு மாறும்போது அவன்தான் வந்து ஒத்தாசை செய்தான். என் வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அவனிருப்பான் துணையாக. யார்யாரோ உறவினர்களின் கல்யாணத்துக்கெல்லாம் வந்து கடுமையாக உழைத்துவிட்டுக் காணாமல் போய்விடுவான் பாபு. என் வாழ்க்கையின் பல முக்கியமான கட்டங்களிலும் அவன் உடனிருப்பான். நடுவிலே கொஞ்சநாள் ஏதோ அரபுநாட்டுக்குச் சென்றிருந்துவிட்டுத் திரும்பி வந்துவிட்டான். அவனால் தனியாக இருக்க முடியாது. எவ்வளவு கூத்தடித்தாலும், அவன் இயல்பில் குடும்பஸ்தன். அவனுக்கு மனைவி, மக்கள், வாசு, உஷா, அவர்களது குழந்தைகள் எல்லோரும் வேண்டும். மறைமலை நகரில் டி.வி.எஸ். கம்பெனியில் வேலையாக இருக்கிறேன் என்று தொலைபேசியில்
    சொன்னான். ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

    2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் கனடாவுக்குப் பயணம் செய்தபோது, அவன், தன்
    மகனுடன் விமான நிலையத்திற்கு ஓடிவந்துவிட்டானே! அவன்தான் டிராலியைத் தள்ளினான்! அப்போதும் ஏதோ தமாஷ்தான். 2006 ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி, என் கவிதைத் தொகுப்புகள் வெளியீட்டு விழாவுக்கு டாக்சி வைத்துக்கொண்டு குடும்பத்தோடு வந்து கடைசிவரை இருந்து, ரகளை பண்ணி, விசிலடித்து, எல்லோரும் சென்றபிறகு என்னோடு தோசை தின்று, என் மனைவி அனுவுடன் என்னைப் பற்றி உருகிக்கொண்டிருந்தான். ‘அனேகமாக மஸ்கட் போய்டுவேண்டா, விழாவுக்கு வரமுடியும்னு தோணலெ,’ என்றவன் அனைவரோடும் வந்திருந்து நங்கைநல்லூர் நண்பர்களோடு போட்டோ எடுத்துக்கொள்ளத் தோதாயிருந்தது. மணிசார்தான் அப்போது இல்லை என்று நாங்கள் நினைவுகூர்ந்தோம்.

    எனக்காக, நானும் என் பாடல்களும் பிரபலமாக வேண்டும் என்று கனவு காணும் நண்பர்களில் பாபு முக்கியமானவன். என் வாழ்வில் 1968 முக்கியமான வருடம். அதற்குச் சற்று முன்பு ஹரிகிருஷ்ணன் பரிச்சயமானான், பள்ளித்தோழனாக. பிறகு, பாபு, அவன் மூலம் வீரராகவன், மற்றும் மணிசார்.

    சரி, பாபுவைப் பற்றிச் சொல்ல இப்போது என்ன அவசியம்?

    நாளை அவன் பிறந்த நாளல்லவா?

    இன்றிரவுக்கும், நாளைக் காலைக்கும் ஒரு சுமையான இடைவெளி இருக்கிறது. இதற்கிடையே, பாபுவைப் பற்றிய இன்னொரு சுவையான தகவல் நினைவுக்கு வருகிறது.

    என் உறவினர் ஒருவர் சுந்தரம் ஃபேசனர்ஸ் கம்பெனியில் உயர்பதவி வகித்தார். (சமீபத்தில் புற்றுநோயால் இறந்துபோனார் அந்த மிக நல்ல மனிதர்) அவர்களது தொழிற்சாலையில் ஆயுத பூஜை விழாவுக்காக எங்களை ஒரு நிகழ்ச்சி நடத்தித்தரச் சொன்னார். நான் வழக்கம்போல், மணிசார் வீட்டுக்கு ஓடினேன். படபடப்பாய் நான் பேசியதை, வழக்கம்போல் நிதானமாகக் கேட்டுக்கொண்டார் அவர். பிறகு, அவர், நான், வீரரகவன், பாபு, வெங்கடேஷ் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியைச் செய்வோம் என்று முடிவானது.

    வசனமில்லாமல் ஒரு குட்டி நகைச்சுவை நாடகம் தயாரித்தார் மணிசார். எனக்கு நகைச்சுவை வரும் என்று கண்டுபிடித்தவர் அவர்தான்! அதில், பாபு ஒரு பெண்ணாக வருவான். ஒப்பனை எதுவும் கிடையாது! மீசை, தாடியோடு! ஆனால், அவன் காட்டிய பாவனை, செய்த சேட்டை எல்லோரையும் வயிறு குலுங்கிச் சிரிக்க வைத்தது. அவன் தேங்காய் சீனிவாசனாக, நான் சுருளி ராஜனாக ஒரு துணுக்குப் போட்டோம். மணிசாரின் மருந்து வியாபாரித் துணுக்கு எல்லோரையும் கவர்ந்தது.. ஆயிரம் பேர் நிரம்பிய அந்த அரங்கில் எங்கள் நிகழ்ச்சிதான் முதன்மையாய் விளங்கியது என்று அனைவரும் பாராட்டினார்களாம். நாங்கள் மணிசாரின் பின்னால் சின்னக் குழ்ந்தைகள்போல் குதூகலமாய் வந்தோம். எழும்பூர் இம்பாலா ஓட்டலில் மசாலாபால் அருந்திவிட்டு பான்பீடா போட்டுக்கொண்டு, அவரைப் பாடச்சொல்லிக் கேட்டுக்கொண்டு,
    நங்கைநல்லூருக்கு ரயிலில் ரொம்பச் சந்தோஷமாக வந்துசேர்ந்தோம்.

    அவையெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்!

    இன்று பாபுவின் பிறந்தநாள்! இதோ, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ‘மஸ்கட்’ டிலிருந்து கிளம்பிய விமானம் வந்திறங்கிவிட்டது. என்ன வயதிருக்கும்? என்னைவிட ஓரிரண்டு வயதுகள் பெரியவன். பயணிகளெல்லாம் ஒவ்வொருவராய் இறங்குகிறார்கள். பணம் சம்பாதிக்க வெளிநாட்டுக்குப்போய், அங்கே படாதபாடுபட்டு, விடுமுறையிலோ, அல்லது ஒரேயடியாகவோ சொந்தவூர் திரும்பும் பயணிகளின் முகமெல்லாம் நிம்மதியின் ஆயாசம்! தாய்நாட்டை விடவும் சிறந்தவூர் இருக்க முடியாது. என்ன ஏழ்மையோ, ஒண்டுக் குடித்தனமோ, நம்வீட்டில் நம் குடும்பத்தோடு கூடத்தில் உட்கார்ந்து சாப்பிடுவது, லுங்கி, கிழிந்த பனியன், கழுத்தில் ஒரு துண்டு என்று டி.வி.யில் இந்தியா, கிரிக்கெட் மாட்ச்சில் வெற்றி பெறுவதைப் பார்த்துக் குழந்தைகளோடு கும்மாளம் போடுவது, அவர்கள் அறியாதபோது மனைவியைக் கொஞ்சுவது என்று எத்தனை எத்தனையோ சின்னச் சின்ன சந்தோஷங்கள் நமது தரித்திர வாயிலில் தங்கத் தோரணம் கட்டுகின்றன!

    என்ன இன்னும் இவன் இறங்கவில்லை? நங்கைநல்லூரில் சொந்த வீடு வாங்கியாயிற்று. அதற்கு கிருஹப் பிரவேசம் செய்யவேண்டும் என்பதற்குத்தானே வருவதாகச் சொன்னான்?
    கண்பொங்கக் கட்டிக் கொள்ளத் துடிப்பவன் என்ன தூங்கிவிட்டானா?

    அந்தோ!

    பாபு, இறங்கி வரவில்லை. இறந்து வருகிறான். பெட்டி பெட்டியாய்ப் பரிசுப் பொருள்களைக் கொண்டுவந்து கொடுத்து மகிழ்ந்தவன், பெட்டிக்குள் பரிசுப்பொருளாக வருகிறான். விதியின் சதிக்கு அக்கினிக்குப் பரிசாக வருகிறான். இரக்கமே இயல்பான என் நண்பனின் உடலைச் சுமந்த பெட்டி, இறக்கப் படுகிறது…செத்த பிணமும் துள்ளும்படிச் சிரிக்கச் சிரிக்கப் பேசியவன், இனி பேசுவதில்லை என்று முடிவெடுத்து விட்டான். நாலு காசு சேர்த்துப் பெட்டியில் பத்திரமாக வைக்கத் தெரியாதவன், இதோ பெட்டியில் பத்திரமாக வருகிறான்.

    சென்னைக்குக் கிளம்ப நாள் பார்த்துக் கொண்டிருந்த பாபுவுக்கு மார்வலி வந்துவிட்டது. மருத்துவரிடம் சென்றிருக்கிறான். ஈ.சி.ஜி. எடுத்து அதில் ஒன்றுமில்லை என்று திருப்பி அனுப்பிவிட்டார். மாரடைப்பு நடக்கும் போதல்லவா அந்த வரைபடம் எதையாவது காட்டும்? அதிகம் பயனற்ற அந்தப் பரிசோதனையின் தரத்தை மருத்துவம், ஏனோ இன்னும் உயர்த்தவில்லை. அறைக்கு வந்து சேர்ந்தவுடன், நெஞ்சுவலி அதிகமாகி இறந்துவிட்டான் பாபு. மருத்துவ மனையில் அங்குமிங்கும் அலைக்கழிக்கப் பட்டிருக்கிறான். தனிமையே விரும்பாதவன், இப்படித் தனியாய் விடப்பட்டு என்னபாடு பட்டானோ!

    வாசுவுக்கு இனிமேல் வயது கிடுகிடுவென்று கூடிவிடும். பாபுவின்றி வாசுவைக் கற்பனை செய்யக்கூட முடிவதில்லை. பிச்சை, தன் ஒரே தோழனை இழந்துவிட்டான். தனது அத்தனை கோபதாபங்களையும் தாங்கி அவனைப் பிரியாமல் நேசித்த நண்பன் போய்விட்டான் என்பதைப் புரிந்துகொள்ள பிச்சைக்கு நேரமாகாது; தாங்கிக் கொள்ள வலுபோதாது. உமா, இனி எப்படி வாழ்வைக் கழிப்பாளோ? இதுவரை நடந்த வாழ்க்கையை இனிமேல் கழிக்க வேண்டும் என்பதுதான் கொடுமையானது. குழந்தைகள்தான் அவளைத் தேற்றவேண்டும்..

    வீரராகவன் நெஞ்சம் சூடுபட்டாற்போலத் துடிக்கும். அது சீக்கிரமே கவிதையாக வெடிக்கும்.

    என் வாழ்க்கையின், என் வீட்டின் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவன்கலந்து கொண்டு உழைப்பாலும், அன்பாலும் மனதிற்கு எவ்வளவோ மகிழ்ச்சி கொடுத்திருக்கிறான். நானோ, அவன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில்கூடக் கலந்துகொண்டதில்லை. அதற்காக அவன் வருத்தப்படவில்லை. ‘வர முடிஞ்சா வந்திருக்க மாட்டானா?’ என்று அவனே சமாதானம் சொல்லிவிடுவான்.

    ஆம், அவனது கல்யாணத்திற்கும் நான் செல்லவில்லை. இன்று அவன் கருமாதிக்கும் நான் செல்லவில்லை. சில சாதாரணக் கடமைகள், சில முக்கியமான கடமைகளைச் செய்யவிடாத துயரம், என்வாழ்வில் இயல்பாகிவிட்டது.

    ஒவ்வொரு மனிதனும் தன்னை மேம்படுத்திக்கொள்ள சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு அப்படிப்பட்ட விஷயங்களைச் சாத்திரங்களோ, பேராசிரியர்களோ, அறிஞர்களோ கற்றுத் தரவில்லை. தாடியும், லுங்கியுமாயத் திரிந்த என் நண்பன் பாபுவைப் போன்றோரிடமிருந்தே நான் மிக மேன்மையானவற்றைத் தெரிந்துகொண்டேன். மேன்மை, பட்டுத்துணி அணிந்து மினுக்குவதில்லை. தன்னிடமிருக்கும் நேயத்தைப் பகிர்ந்துகொள்ளத் துடிக்கும் இயல்பில், அடுத்தவர் நெஞ்சைச் சுலபமாகத் தொட்டுவிடுவதே மேன்மை.

    யோகீச்வரர் மாவுமில் என்று ஒன்றிருந்தது நங்கைநல்லூரில். அதன் வாசலில் அவ்வப்போது வந்தமரும் ஓர் அரவாணிப் பிறவியிடம் பாபுவுக்குப் பழக்கமுண்டு. சைக்கிளை நிறுத்தி அந்தத் திருநங்கையோடு அவன் பேசுவது எனக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது. ‘இன்னா ஒம்பேர என்னாண்டையே சொல்லமாட்டியா?’ என்று வாஞ்சையோடு கேட்கும்போது, அது தனது காவிப்பல் தெரிய வெட்கமுடன் சிரித்து, ‘என்னெ ரோசான்னு கூப்டுவாங்க. சரோசான்னும் கூப்டுவாங்க,’ என்று பதில்சொல்லும். பாபு, அதை அப்படியே சொல்லிக் காண்பித்து அசத்துவான்.

    எனக்கு நாயென்றால் குலைநடுக்கம். அவனுக்குத் தெருநாயெல்லாம் பழக்கம்! ஒருநாள் நான் பார்த்த காட்சியை என்னால் மறக்கவே முடியாது. மணல்மேட்டை நோக்கி அவன் நடக்கிறான். அங்குமிங்கும் நின்றுகொண்டிருந்த தெருநாய்கள் அவனை ஆர்வத்தோடு பார்த்தன. பொதுவாக, தாடி, லுங்கி இப்படிப் பார்த்தால் நாய்கள் குரைக்கும். இங்கே அப்படியில்லை. ‘எல்லாம் வாங்கடியம்மா,’ என்றான். உடனே ஒரு நான்கைந்து நாய்கள் அவனிடம் ஓடிவந்து வாலை ஆட்டுவதும், கொஞ்சித் தீர்ப்பதுமாய்…என்னால் நம்பவே முடியவில்லை. அதிலும் ஒரு பெண் நாயிடம் அவன் நடத்திய உரையாடல்! ‘இன்னா, எங்கெ ஊர் மேஞ்சிட்டு வர்றே? எத்தினி லெட்டர் போட்டாலும் ஒருதபா கூட பதிலே போடறதில்ல, ஓடுகாலி,’ என்று அதன் மோவாயை இடித்தான். அது முக்கிய முனகலும், சிணுங்கிய சிணுங்கலும் இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது!

    ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு மோட்டுவளையைப் பார்க்கிறேன். எத்தனை எத்தனையோ காட்சிகள் சித்திரங்களாக விரிகின்றன. மனத்திரையில் ஊர்வலமாக வருகின்றன. பாபு, என் வாழ்க்கையின் ஒரு சுவாரசியமான அங்கம். அதை முழுவதுமாய் வார்த்தையில் வடித்துவிட முடியாது. சரி, எதைத்தான் வார்த்தை சரியாகச் சொல்லியது? நான் அவனருகே இல்லாத ஆதங்கத்தில், துயரத்தின் ஆற்றாமையைத் தாங்கமுடியாமல், நான் நினைவுகூர்ந்தபடி நிறுத்தாமல் எழுதிவைத்தேன். இதுதான் சரி. ஏனென்றால் அவன் அப்படித்தான் வாழ்ந்தான். நிதானித்து எழுத இது இலக்கியக் கட்டுரை அல்லவே! என்னிதய அஞ்சலி இது! அது, மலர்வளையச் சம்பிரதாயம். இது மொத்தத் துக்கத்தையும் கீழே பொத்திவைத்திருக்கும் மெளன விம்மல்….

    இறந்து மூன்று நாட்களுக்குப் பிறகு சவமாய்ப் பிறந்த நாளன்று வந்துசேர்ந்து அதோ சிதையில் தகனமாகின்றான். அதோ! பாம்புகள்போல் நடனமிடும் அந்த ஒளிக்கொழுந்துகளுக்குப் பின்னே, அவனது நிழலையே காண்கின்றேன். அந்த நிழலுருவத்திலும், அவன் விழிகள் பனித்திருந்து ஜ்வாலையில் மின்னுகின்றன.. வருந்தாதே பாபு! வாழ்க்கையை வீணாக்கிவிட்டதாக நினைக்காதே! உன் நேசத்தால் பயன்பெற்ற என்னைப் போன்றோர் எத்தனைபேர் தெரியுமா? ஒரு கவிதையைக் கவிஞன் நிச்சயிக்க முடியுமா? கோடுபோட்டு வெள்ளத்தைப் போகச் சொல்ல முடியுமா? கவிதை என்னும் அதிசயமும், வெள்ளம் என்னும் விபத்தும், இயற்கையின் இயல்புதானே!

    நீயும் அப்படித்தான்.

    நேற்றிரவும் நீ வந்து நின்றாய். “நீ இன்னும் உணர்ச்சிவசப்படுவது வேண்டாம்” என்று என் குருவின் உபதேசத்தை உனக்குத் தந்தேன். நீ அதைப்பற்றிக்கொண்டாய். உன்குரலில் அதைக்கேட்டபோது எனக்கு நிறைவாயிருந்தது. நீ எதையும் எளிதாகப் பற்றிக்கொண்டு அதைவிட எளிதாக விட்டுவிடுவாய். ஆனால் அதுபற்றி இன்றெனக்குக் கவலையில்லை. ஏனென்றால், என்மூலம் வந்தவொன்று உன் அந்தராத்மாவைப் பற்றிக்கொண்டுவிட்டது. இதை நீ விடமுடியாது!

    உன் பயணம் தொடரும் பாபு! உன்னுயிர் ஒழுங்குபெறும். உன்னால் நன்மைகள் விளையும்.

    பாபு மறைந்துவிட்டான். அதோ, என் முடிவுக்கு, முதல்மணி கேட்கிறது…..

    Share
  • மறக்க முடியாத மதுரை – 2

    இசைக்கவி ரமணன்

    மதுரையில், ராஜா முத்தையா மன்றத்திற்கு அருகே கற்பகம் உணவு விடுதி ஒன்றிருந்தது. அதுதான் எங்கள் அலுவலகத்திற்கு அருகில் இருந்த ஒரே ஓட்டல் என்பதால் நாங்கள் கற்பகமே கதியாகக் கிடந்தோம். சாப்பாடு நன்றாகத்தானிருந்தது; சிற்றுண்டி இன்னும் நன்றாக இருந்தது. இருந்தாலும், தினமும் ஓட்டலில் தின்னுவது சரிப்படவில்லை. எங்களுக்கோ வேறு வழியும் இல்லை. அங்கிருந்த அத்தனைச் சிப்பந்திகளும் நண்பர்களாகி விட்டார்கள். வெளிச்சாப்பாடு, மாதாமாதம் அலுவற் பயணங்கள் இவற்றால், எப்போதும் கெட்டே இருந்த வயிறு இன்னும் கெட்டுப் போனது. வீட்டில் வளரும்போது, இட்டிலியை இளக்காரமாகப் பார்த்த நான் இப்போது ஏறக்குறைய இட்டிலிக்குத் தாலியே கட்டிவிட்டேன்! இட்டிலியைத் தின்றபிறகு வேறெதைத் தின்றாலும் ஒன்றும் செய்யாது என்பதாக ஒரு சித்தாந்தம் எங்களிடையே இருந்தது!

     raman

    ஒருநாள், வழக்கம்போல் காலைச் சிற்றுண்டிக்காகச் சென்று, ‘என்ன இருக்குண்ணே?’ என்று கேட்டேன். சர்வர் பட்டியல் பலகையில் இருந்ததை — நான் நடுவில் தடுத்தபோதும் — ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தார். ‘போதுங்க! போட்டுக் கொழப்பாதீங்க!’ என்றேன் நான். அவரோ, ‘எது? நானா கொழப்பறேன்?! நீங்க திங்கப் போறது ரெண்டு இட்லி, ஒரு வடை, அதிகம் போனா ஒரு பொங்க. நானும் பாத்துக்கிட்டுத்தானே இருக்கேன்! இதுக்கு நெதமும் ‘என்ன இருக்கு’ன்னு ஒரு கேள்வியை எதுக்குத்தான் கேக்குறீய்ங்களோ?!’ என்று ஒரே போடாய்ப் போட்டார்! பக்கத்தில், டபரா, டம்ளர் தட்டுக்களை எடுத்து வாளியில் போட்டுக் கொண்டிருந்த சிறுவன் கரணமலை, ரசித்துச் சிரித்தான். நான் பார்த்ததும், ‘ஒண்ணும் தப்பா எடுத்துக்கிட வேணாம்,’ என்றான். ‘இதுல தப்பா நெனக்கிறதுக்கு என்ன இருக்கு? நல்லா இருக்கியா?’ என்றேன். பதில்பேசத் தயங்காத மதுரையில்தான் எனக்கு எத்தனை விதமான நண்பர்கள்! சின்ன வாழை மட்டையால் டேபிளை நேர்த்தியாகச் சுத்தம் செய்தான் கரணமலை. இவர்களுக்குத்தான் சிரிப்பு எத்தனை இயல்பாகவும், முழுமையாகவும் இருக்கிறது!

    ramana

    ram

    காப்பி முடிந்து வெளியே வந்தால், பெட்டிக் கடையில் பாலகிருஷ்ணன் தயாராக வெற்றிலை, பாக்குப் புகையிலையை நீட்டினார். பளிச்சென்று இருக்கும் அந்தக் கடைக்காரரோடு பேச்சுக் கொடுப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. சிரிப்பும், வம்புமாக இருக்கும் அவர் பேச்சு. அப்போது நடந்த ஓர் உரையாடலை என்னால் இன்றைக்கும் மறக்க முடியாது. வெற்றிலை வாங்கிக் கொண்டார் ஒருவர். பார்க்க மிகவும் சாதாரணமாக இருந்தார்.

    ‘சுண்ணாம்பு எங்க?’

    – அந்தாத் தூணுலெ கட்டித் தொங்க விட்டிருக்கு, பாக்க மாட்டியளோ? புதுசாக் கேக்கீக?’

    ‘சரித்தான்; வெத்தலைய மருதயில வாங்க்கிக்கிட்டுச் சுண்ணாம்புக்குத் திண்டுக்க போக வேண்டி இருக்கு!’

    நான் ரசித்துச் சிரித்தேன், பாலகிருஷ்ணனுக்கு முகம் தொங்கிவிட்டது. சுண்ணாம்பை எடுத்துக் கொண்டவர் அப்படியே போகாமல், கடையருகே வந்து நின்று வெற்றிலையில் பரபரப்பாகத் தடவிக்கொண்டிருந்தார். பாலகிருஷ்ணன் கடகடவென்று சிரித்தார்.

    ‘எதுக்கு இப்பம் சிரிக்கிறீய?’

    – இல்ல, வெத்தலக்குத்தான் சுண்ணாம்பு தடவறீயளா, வீட்டுக்குத்தான் வெள்ளையடிக்கீகளான்னு பாக்கேன்

    இவர் முகம் இறுகிப்போய்விட்டது. ஒன்றும் பதிலே சொல்லவில்லை. வெற்றிலையைச் சுருட்டி வாயில் திணித்துக்கொண்டு, மிஞ்சிய சுண்ணாம்பை, கடைப்பலகை அடியில் நாசூக்காகத் தேய்த்தபடிக் கேட்டார்:

    ‘பளம் எம்புட்டு?’

    கழுத்தை வலதுபுறமாகச் சாய்த்தபடிப் பாலகிருஷ்ணன் சொன்னார்,

    – எப்பமும் போல அம்பது காசுதான்

    ‘பளுத்திருக்கோ?’

    குலையில் கைவைத்திருந்த பாலுவுக்குக் கொலைவெறி வந்துவிட்டது. தன்கடைப் பழத்தை யாரும் சந்தேகிப்பதைச் சகிக்கமாட்டார் அவர்!

    – எல்லாம் வெளஞ்ச பழம்தான் நாங்க வியாவாரம் பண்ணுவம் பாத்துகிடுங்க!

    ‘அது பளம்கிறீய்ங்க; கையி பிடிச்சபடி இருக்கு; காலுரெண்டும் ஆகாசத்துல தொங்கிக்கிட்டிருக்கே அதான் கேட்டேன்!’ என்று ஓசைப்படாமல் இரண்டு பழங்களுக்கான காசை மிட்டாய் டப்பா மேல் வைத்துவிட்டு அப்பாவியாக நின்றார்!

    பாலகிருஷ்ணனின் பரிதாபம், நான் பார்த்தால் அதிகமாகும் என்று நாலெட்டு வைத்தேன். அருகே, என் தோழியான இளநீர்ப்பாட்டி, கடை பரப்பியிருந்தாள். சின்னக் கோணிச்சாக்குப் படுதாவின் கீழ்தான் அவள் இந்தக் கடுமையான வெயில் மாதங்களைக் கழிக்க வேண்டும்.

    கடந்த காலக் கதைகளை முகத்தின் ரேகைகளே

    படம்போட்டுக் காட்டுகின்ற பாட்டி

    படுதாவே கூரையாக, பாயுமாக, பரப்பிவைத்த கடையுமாக…

     

    இவள் விதவையாகி எத்தனை நூற்றாண்டுகள் ஆகியிருக்குமோ? வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களால் விளைந்த அசதி அவளைக் கப்பிக் கிடந்தது. ஆனால், எதற்கும் யாரையும் குறைகூறாத ஒரு மனோபாவம் அவள் மனதில் அமைதியாய் நிறைந்திருந்தது. அவள் முகத்தின் விரிவற்ற இனிமைக்கு அதுதான் காரணம்.

    ‘என்ன பாட்டி செளரியந்தானே?’

    – வாப்பு! வந்துக்க

    என்று கழுத்திலிருந்து கையிடுக்கில் வழிந்தோடும் வியர்வையை, எத்தனை லாகவமாய்த் துடைத்துக் கொண்டாள்! ரவிக்கை போடாத அந்தப் பெண்மணியின் சேலை ஒருபோதும் விலகியதில்லை! அவள் துடைத்துக்கொண்ட பாங்கில், எனக்கும் களைப்பு நீங்கியது.

    ‘எளநி குடிப்பமா?’

    – நான் எம்புட்டுத்தரம்தான் சொல்லுறதோ! அங்ஙன ஓட்டல் உள்ளறபோயிக் காப்பியக் குடிச்சிட்டு வந்து ஒடனே இங்க எளநி குடிக்க வேணாம்னு!

    ‘ஐயோ! மறந்துபோச்சு ஆத்தா!’

    -எப்படித்தா மறப்பீயளோ? என்ன எளவட்டோ?

    அந்த அக்கறை மிகுந்த கோபத்தால் குளிர்ந்துபோய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளோ, காய்களைச் சுற்றுமுற்றும் பார்த்துக் கண்ணால் ஊடுருவி, ஒன்றை எடுத்துச் சீவித்தந்தாள். எனக்கு ஸ்டிரா போட்டு உறிஞ்சுவது பிடிக்காது. வாயை வாயில் பதித்து, சொட்டு கீழே விழாமல் வானத்தைப் பார்த்துக் கொண்டே தொண்டையில் கவிழ்க்க வேண்டும். அந்தக் குளுமை, இனிமை இவை கலந்த சுகம் நெஞ்சில் இறங்க, கண், அதுபாட்டுக்கு மூடிக்கொள்ளும்! கடைசியில் கொஞ்சம் கவனம் பிசகி, நீர் சட்டையை நனைக்கும்! அப்படிக் குடித்தால்தான் இளநீர் குடித்தது போலிருக்கும். பாட்டி, அதற்கேற்ப, வாயை நறுவிசாக அகலப்படுத்தித் தருவாள்.

    – அங்கிட்டு ஒக்காரு

    இன்னும் கோபம் குறையவில்லை! அவள் சொன்ன பெட்டி மீது உட்கார்ந்து கொண்டு, இளநீரைக் கையில் வாங்கிக் கொண்டு (இல்லையென்றால் தரமாட்டாள்!) பேச்சைத் திருப்புவோமென்று கேட்டேன்:

    ‘சரி, வியாவாரமெல்லாம் எப்படி இருக்கு?’

    அவளா? சொல்ல நினைத்ததைச் சொல்லாமல் விடுவாளா?

    – இந்தா! இன்னும் ஒருக்கா இப்படிக் கண்ட மேனிக்கு எளநி கேட்டாத் தரமாட்டேன், சொல்லிப்புட்டேன் ஆமா!

    ‘சரி தாயி! அதான் சொல்லிட்டிங்கள்ளே! இனிமே கவனமா இருந்துக்குவேன்’

    – அதுக்குத்தாஞ் சொல்லுறது; காப்பியக் குடிச்சுப்போட்டு எளநியையுங் குடிச்சென்னு வய்யி; அப்பொறம் கல்லுக்கொடலாயிப் பீச்சும். எல்லாம் நல்லதுக்குத்தாஞ் சொல்லுறது

    என்று பெருமூச்சு விட்டுக்கொண்டாள். நான் அவள் தந்த இளநீரை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த போது ஒரு க்ளாசில் டீயுடன் உட்கார்ந்து கொண்டு மெல்ல உறிஞ்சத் துவங்கினாள்.

    ‘ஏம் பாட்டி! இந்த வெய்யில்ல எதுக்கு டீயைப் போயி குடிக்கறீங்க? ஒரு எளநியைக் குடிக்க வேண்டியதுதானே?’

    – தே! பேச்சப் பாரு! நான் வாழற பவுசுக்கு எளநி கட்டுப் படியாவுமோ? டீ தான் தேறும்

    என்று, இன்னொரு மடக்கு விழுங்கினாள். தாழ்ந்திருந்த அவள் பார்வையில், நினைவுகளின் ஆரவாரம் தெரிந்தது. டீயிலிருந்து எழுந்த ஆவி, அதற்குத் தூபம் போட்டுக் கொண்டிருந்தது. எத்தனை அல்லல்களோ! என்னென்ன பின்னல்களோ! இத்தனைக்ககும் மத்தியில், வியாபாரம் செய்து வயிறு கழுவ வேண்டிய கட்டாயம். அதிலும், எந்த உறவுமில்லாத என்மீது வாஞ்சை. தாய்மனம், ஆள்பார்க்குமா அன்பு காட்ட? மனது பாரமாகி, பாதி இளநீரை நான் கீழே வைத்துவிட்டுக் கிளம்பியதைக் கவனிக்காமல் சிலையாக அமர்ந்திருந்தாள் பாட்டி.

    பாட்டியும் டீயும்

     

    கிழிந்த கோணிக் கூரையின்

    ஓவியம் : ஜெயராஜ்
    ஓவியம் : ஜெயராஜ்

    கீழே இளநீர்ப் பாட்டி

    தாகத்திற்கு டீ தான்

    தருவித்து உறிஞ்சுகிறாள்

     

    விறகு சுமந்து

    வீதியில் கூவுகிறோம்

    விற்கவந்த விறகே

    விசித்திர ஆடையாகி

    வீதி வளைவில்

    வெந்து போகிறோம்

     

    விற்க வந்தது

    விற்று முடியாது

    வாங்கவும் முடியாது

     

    வேளாண்மை பொய்த்தாலும்

    விதைநெல் மிஞ்சும்

    மாளவிடாமல் வாழ்வை இழுக்கும்

    மர்ம வினைபோல

     

    மிஞ்சிய டீயிலும்

    மினுக்கு கொஞ்சம் மிச்சம்

    எடுத்துச் செல்லும் பையன்

    எச்சிலைப் பார்ப்பதில்லை

    களையான கருப்பு முகத்தில்

    கசப்பின் குரூரம்

     

     புகைப்படங்களுக்கு நன்றி: இசைக்கவி ரமணன்

    Share
  • காலம் என்பது

    இசைக்கவி ரமணன்

    isai

    காலம் என்பது காளி நடத்தும்
    கண்கட்டு வித்தை அல்லவா? அது
    கனவில் ஒருவிதம் நினைவில் பலவிதம்
    மாறும் விந்தை அல்லவா?
    தூலம் உறங்கும் வேளை, காலம்
    தொலைந்தே போகும் அல்லவா?
    தொட்ட பூமியை விட்ட போததன்
    தூரிகை மாறும் அல்லவா?

    கடிகாரத்தால் காலம் என்றும்
    கட்டுப் படுவதே இல்லை
    கடமையைச் செய்து பயன்கருதார்க்கோ
    மட்டுப் படுவதே இல்லை
    இடையில் நெளியும் நாகம் போலே
    இதனை அணிந்தவர் முனிவர்
    இன்றில் வாழ்ந்து நேற்றையும் நாளையும்
    இழந்தவர் அவரே தலைவர்!

    காலம் என்பது கடவுளுடையது
    வளர்வதும் தேய்வதும் இல்லை
    நேரம் என்பதோ மனிதனுடையது
    கரைவது தானதன் எல்லை
    காலம் என்பது எதையும் என்றோ
    கவளம் விழுங்கி விட்டது! அதன்
    கவனம் சற்றே தளர்ந்த போது
    கவிதை அதனைத் தொட்டது!!

    Share
  • அழைக்கும் தொலைவில் ஆண்டவன்

    இசைக்கவி ரமணன்

    நீ வேண்டும்! எனக்கு
    நீதான் வேண்டும்!!

    அம்மா, வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் மகனை அவசரமாக அழைக்கிறாள். `வருகிறேன்,` `வந்துகொண்டிருக்கிறேன்` என்றா சொல்கிறான்? `இதோ வந்துட்டேம்மா!` என்றல்லவா கூவி, தனது கூவல் முடியுமுன்னே மூச்சிரைக்க அம்மாவின் முன்னே வந்து நிற்கிறான்? உலகத்தில் அன்றாட நடப்பே இப்படி இருக்க, எல்லோர்க்கும் தந்தையான இறைவன் அழைத்தால் வரமாட்டானா என்ன?

    siva (4)இறைவன் யார்? எங்கும் இருப்பவன். எப்போதும் இருப்பவன். எல்லாமாகவும் இருப்பவன். எல்லோருக்கும் சம அளவில் இருப்பவன். மனிதர்கள், தேவர்கள், ஏன், அரக்கர்கள், விலங்கினங்கள் போன்ற எல்லா உயிர்களுக்கும் சம தொலைவில் இருப்பவன். எல்லோர்க்கும் தந்தை இறைவன்! அவன் நல்லோர்க்கும் தீயோர்க்கும் தலைவன்! ஆம், கடவுள் அனைவருக்காகவும் இருக்கிறான் என்பது மட்டுமல்ல. ஒவ்வொருவருக்கும் அவன் முழுமையாக இருக்கிறான்! `அவன் எனக்கே எனக்கு!` என்று ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடும் வண்ணம் இருக்கிறான். (‘’Not only God is available for all, all of God is available for everyone!’’) அப்படி இருப்பவனை அழைப்பதென்ன, அவன் அதன் பிறகு வருவதென்ன?

    இதயக் கமலத்தில் அவன் இருக்கிறான் என்பதை உணர்வதே அழைத்தல்! உணர்ந்த அந்தக் கணத்தில், அவன் உள்ளில் தெரிவான். வெளியில் விரிவான். உள், வெளி என்னும் கோடழிந்து, ஒன்று பலவாக நின்று விளங்குவதை உணர்த்துவான். திருவள்ளுவர், `மலர்மிசை ஏகினான்,` என்று கடந்த காலமாகச் சொல்கிறார். காலம் என்கின்ற கட்டுப்பாடு கடவுளுக்கு ஏது? எல்லாவற்றையும் ஏற்கனவே ஆண்டு முடித்துவிட்டவன் என்பதால்தானே அவனை ஆண்டவன் என்கிறோம்? உள்ளே இருக்கிறான் என்று உணர்ந்த கணம், உள்ளக் கமலம் விரியும். அங்கே இறை, ஒளிமயமாக வீற்றிருப்பது தெரியும்! ஆக, ஏற்கனவே அங்கே அவன் இருப்பதனால்தான் `ஏகினான்`என்றார் வள்ளுவர்.

    மாணிக்க வாசகப் பெருமான், `அவனருளாலே அவன்தாள் வணங்கி,` என்னும் அமர வாசகத்தைச் சொல்வதற்கு முன்னால், அந்த அற்புத நிலைக்கான காரணத்தைப் பொன்னில் பொறிக்க வேண்டிய தேன்தமிழ்ச் சொற்களிலே சொல்கிறார், `சிவனவன் என்றன் சிந்தையுள் நின்ற அதனால்,` என்று. இந்த உணர்வுதான், சிவனையே நேரில் வரவழைத்தது. பரியை நரியாக்கி, அவருடைய உலகாய குற்றத்திற்காக அவருக்கு சிறைவாசத்தைத் தந்து, நரியைப் பரியாக்கி, அவருடைய மட்டற்ற சிவநேயத்திற்காக அவருக்கு சிவலோகமும் தரவைத்தது.

    அவன், இருக்கிறான். அவன், என் உள்ளத்தில் நன்றாக வீற்றிருக்கிறான் என்னும் நம்பிக்கையோடு, முழு உணர்வோடு, அவனே கதியென அழைத்தவர்களுக்கு அவன், `நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய்,` வந்து பணிவிடை செய்தான்! இன்றும் செய்து வருகிறான்!

    எல்லாம் அவனுடையதே என்பதனால் எதையும் அவனிடம் கேட்கலாம்தான். ஆனால், இரண்டு முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்:

    கேட்டதைக் கொடுத்துவிடுவான்
    கொடுத்தவுடன் மறைந்துவிடுவான்

    உலக வாழ்க்கையில் கூட, நாம் எவரிடம் என்ன கேட்கவேண்டும் என்று சிந்தித்துத்தானே கேட்கிறோம்? சச்சின் டெண்டுல்கரிடம் சங்கீதம் கற்றுக்கொள்ளப் போகிறோமா? பூக்கடையில் நெய்வாங்கப் போகிறோமா? எங்கே என்ன கிடைக்கும், எவரிடம் எதைக் கேட்கலாம் என்ற அறிவும் இங்கிதமும் நமக்கு இல்லாமலில்லை. ஆனால், அருகம் புல்லிலிருந்து ஆன்ம விடுதலை வரை, எதையும் வழங்கவல்ல இறைவனின் முன்னிலையில் இந்த அறிவும் இங்கிதமும் நம்மில் பெரும்பாலானவருக்கு இல்லை என்பதே உண்மை. உலக வாழ்வில் மண்டிக் கிடக்கும் கவலைகளும் கலகங்களுமே இதற்கு நிரூபணம்.

    ஒரு ஞானி சொல்கிறார், ‘The problem with desires is that they get fulfilled; if not today, tomorrow. So, one should be careful in desiring only desirable things!’ என்ன ஆழமான வாசகம்! ஆம், ஆசைகளில் இருக்கும் ஆபத்து, இன்றில்லையானால் அவை நாளையேனும் நிறைவேறிவிடும் என்பதுதான்! பல ஆசைகள் நம்மை பந்தத்தில் இறுக்கும். சில ஆசைகள் நம்மை விடுதலையில் உய்க்கும். `எனது தேசம் மேன்மை அடையவேண்டும், நான் வாழும் சமுதாயம் நலிவுகள் நீங்கி நலம்பெறவேண்டும்,` என்பன போன்ற ஆசைகள் ஒருவனை ஒருபோதும் கட்டுப்படுத்தாது. அல்லாமல், அதுவேண்டும் இதுவேண்டும் என்று வேண்டும்போது அவற்றைத் தந்துவிட்டு, அக்கணமே மறைந்துவிடுகிறான் ஆண்டவன் என்பதே சான்றோர்கள் நமக்குக் கூறியுள்ள எச்சரிக்கை.

    அவனிடம் அதையும் இதையும் கேட்காமல், அவன்தான் வேண்டும் என்று உறுதியாக நின்றால், அவன் வராமலிருக்க முடியுமா? தன்னைத் தராமல்தான் இருக்க முடியுமா?

    ஒரு பொருட்காட்சி. அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு உற்சாகமாகச் செல்கிறான் பையன். எதைப்பார்த்தாலும் வேண்டும்போல் தோன்றுகிறது. குடைராட்டினம், பஞ்சுமிட்டாய், பரிசல் போன்ற பொரித்த அப்பளம், இன்னும் என்னென்னவோ! பார்த்ததையெல்லாம் கேட்கிறான் குழந்தை. அம்மாவும் சலிக்காமல் வாங்கித் தருகிறாள்.

    திடீரென்று, கூட்டத்தில் பையன் அம்மாவின் பிடியிலிருந்து நழுவி, தொலைந்துபோய்விடுகிறான். அனைத்தாலும் கவரப்பட்ட அந்த அரங்கத்தில், எதுவுமே கண்ணில் படாமல் அவன் அம்போவென்று நிற்கிறான். அடிமனத்திலிருந்து துயரம் பொங்க ஓவென்று அழுகிறான். காவல் துறையினர் பார்க்கிறார்கள். இது அம்மாவின் பிடியைவிட்டுத் தொலைந்த குழந்தை என்பதை உடனேயே புரிந்துகொண்டு அதைச் சமாதானம் செய்ய முயல்கிறார்கள். `பையா, அம்மாவைக் கண்டுபிடிக்கலாம், இந்தா அப்பளம்.`

    — வேண்டாம், எனக்கு அம்மாதான் வேண்டும்

    `அம்மாவிடம் போகலாம் தம்பி, அழாதே, இந்தா பஞ்சு மிட்டாய்.`

    — வேண்டவே வேண்டாம் எனக்கு அம்மாதான் வேண்டும்

    `வா, குடைராட்டினத்தில் மூன்று சுற்று சுற்றலாம்.`

    — ஒண்ணுமே வேணாம், அம்மாதான் எனக்கு வேணும்….`

    இலவசமாகவும், நிறையவும் எதைக் கொடுத்தாலும் எதிலும் விருப்பமின்றி கண்ணில் தெரியாத அம்மா ஒன்றே குறியாகி அழுகிறது குழந்தை. இதைத்தான் ரவீந்திரநாத் தாகூர்,

    நீ வேண்டும்! எனக்கு
    நீதான் வேண்டும்!!

    என்று கீதாஞ்சலியில் இறைவனிடம் பாடுகிறார்.

    அவனிடமிருந்து பெறும் வேறு எதனாலும் நீடித்த இன்பமோ, நிலையான நிம்மதியோ கிடைக்கப்போவதில்லை. இதை நாம் உணரும் வரையில், கோரிக்கைகள் நம் உள்ளத்தில் அலையலையாகப் பெருகிக்கொண்டுதான் இருக்கும். கேட்டுக் கேட்டுப் பெற்றுப் பெற்று, எதிலும் திருப்தி வராமல், எதிலும் சலிப்பே நேரும்போதுதான் நாம் உள்ளே திரும்ப எத்தனிக்கிறோம். அதற்காகவே உள்ளே அவன் காத்திருக்கிறான்.

    நாம் என்ன கேட்டாலும் அளிக்கவல்லவன், எல்லாவற்றுக்கும் மேலான ஒன்றை நமக்கு வழங்குவதற்காகக் காத்திருக்கிறான், நாம் கேட்டால்! விழைந்தால்! அதுதான் வேண்டும் என்று அடம்பிடித்தால்! அதுதான் அவன்! எனவே, தாகூரின் பல்லவியை வாங்கிக்கொண்டு, நாம் இன்னும் இரண்டு வரிகளைச் சேர்த்துக் கொண்டு இப்படிப் பாடலாம்:

    வேறு
    நினைவறியாத
    நிலை விரும்பாத
    மனம் முழுதாக
    மலர்ந்திருக்கும், அந்த

    நீ வேண்டும்! எனக்கு
    நீதான் வேண்டும்!!

    அந்தக் குருட்டு தர்பாரில், அனைவரின் முன்னே அவமானப் படுத்தப்பட்டபோது, பாஞ்சாலி என்ன செய்தாள்? மந்திரங்களை ஜெபித்தாளா? தோத்திரங்களைச் சொன்னாளா? அரற்றினாளா? `கண்ணா! இது உனக்கு நியாயமென்று தோன்றுமானால், எனக்கும் இது சம்மதமே!` என்ற தெளிவில் சரணடைந்தாள். அந்தக் கணமே, ’ தம்பி கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய், அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே!` “நான் கடலில் எறியப்பட்டு, சுறாக்கள் என்னைக் கடித்துக் குதறவேண்டும் என்பதுதான் உன் விருப்பமென்றால் எனக்கது சம்மதமே,` என்னும் மனநிலைதான் சரணாகதி.

    `எது நடந்தாலும், நடக்காது போனாலும், அது இறைவா உன் சித்தம். அது என் நலன் கருதியே, என் நன்மைக்காகவே!` என்றிருப்பதே பக்தன், யோகி, ஞானி அனைவருக்கும் பொதுவான நிலை. அந்த நிலையில் இருந்து அழைத்தவர்களுக்குக் கடவுள் எப்போது கூப்பிடும் தொலைவில் பணிசெய்யக் காத்திருந்தான்!

    `அழைத்தால் வருபவனே ஆண்டவன்,` என்ற ஆந்திர வசனம்தான் எத்தனை உண்மை!

    Share
  • மறக்க முடியாத மதுரை – 1

    இசைக்கவி ரமணன்

    மறக்க முடியாத மதுரை – 1

     1284024732863_f

    மதுரைப் பேருந்து நிலையம். அப்போது மாட்டுத் தாவணிக்கு மாறவில்லை. (ஓ! விளக்கவில்லையென்றால் விபரீதமாகிவிடும். மாட்டுத் தாவணி என்பது மேலூர்ச் சாலையில் உள்ள ஓர் இடம். மற்றபடி, விசித்திரங்கள் நிறைந்த மதுரையில் கூட மாடு, தாவணி எல்லாம் போட்டுக் கொள்ளாது. எங்கேயும் எதைப் போடுமோ அதைத்தான் இங்கேயும் போடும்!) சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் என்று சொன்னால்தான் புரியும். நெரிசலின் தலைநகரம் மதுரை என்றால், அந்த பஸ் ஸ்டாண்டு அதை இயக்கும் இதயம். பாம்பு கூட நுழைய முடியாத அந்த நெருக்கடியில், பஸ்ஸெல்லாம் எப்படித்தான் வருமோ செல்லுமோ மீனாட்சிக்கே வெளிச்சம். அதை விளக்க நமக்கு மதுரை மொழியைத்தான் நாட வேண்டும், ‘ஒரே கரச்சல்!’ அதுதான் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட். வேறு விதமாக அதை விளக்கவே முடியாது.

    புகைப்படம் : ரமணன்
    புகைப்படம் : ரமணன்

    கண்ணகி எரித்த கந்தக பூமியின் தாக்கமோ, வருடத்திற்குப் பதின்மூன்று மாதங்கள் துரத்தித் துரத்திக் கொளுத்தும் வெய்யிலின் தாக்குதலோ, பாண்டி நாட்டின் பழைய போர்களின் ஞாபக மிச்சமோ தெரியாது சாமி, மதுரையில் கோபத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இல்லை. எந்தக் காரணமும் இல்லாமல் கோபப்படுவார்கள். கே.பி.சுந்தராம்பாள் எடுத்த எடுப்பிலேயே எட்டுக்கட்டையை எட்டுவதுபோல், முதலிலேயே உச்சத்திற்குப் போய், அப்புறம் தேவைப்பட்டால், கொஞ்சம் இறங்குவார்கள். அப்படி இறங்குவதற்காய் வருத்தப்பட்டு, கோபத்தைப் பெருமூச்சில் விசிறிப் பாதுகாத்து வைத்துக் கொள்வார்கள்.

    ஒரு பேருந்தில் கொத்துக்கொத்தாய் மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். புழுக்கத்தில், வியர்வை உறைந்து ஒட்டிக்கொண்டு நகர முடியாமல் நிற்கிறார்கள். துளிகூடச் சத்தமே இல்லை. திடீரென்று, ஒருவன் கூச்சலிட்டது கேட்கிறது. அவன் யாரையோ எதற்கோ தாக்கித் திட்டுகிறான். ஒன்றும் புரியவில்லை. ஒருவன், குடும்பத்தோடு இறங்கினான். மூச்சு விட்டுக் கொண்டார்கள். அவன், குடும்பத்தாரைக் கொஞ்சம் தொலைவில் நிற்குமாறு சொல்லி அவர்கள் கூடவும் வந்தான். அந்தக் கருப்பு முகத்தில் கோபத்தின் சிவப்பை நான் காணவில்லை. அமைதியாகத்தான் தெரிந்தான். அந்தக் குடும்பத்தில் யாரோ ஒரு நபர், ‘வேணாம்ப்பு! வந்த சோலியப் பாத்துகிட்டுப் போயிருவமே,’ என்றார். பதிலுக்கு அவன் முறைத்த முறைப்பில், அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். அந்தக் குடும்பத்தில் பல பெண்கள் இருந்தார்கள். யாரும் அவனைத் தடுக்கவில்லை! அவன், சுறுசுறுப்பாக வந்து, அந்தப் பேருந்தருகே நின்று, ‘எங்கடா அவன்?’ என்றான். அவன் கையில் உள்ளே நடந்த கலாட்டாவில் அடிபட்டிருந்ததால் எண்ணெய் பூசிக்கொண்டு வந்திருந்தான். யாரும் பதில் சொல்லவில்லை. இவன் உள்ளே ஏறினான். இவன் யாரைத் தேடினானோ அவனை கீழே இருந்து நான் பார்க்க முடிந்தது. முகமெல்லாம் பீதி; உள்ளே நுழைந்து அவன் வர வர, மற்றவர்களோடு கலந்து தப்பிவிடலாம் என்ற இவன் நம்பிக்கை கரையக் கரைய, ‘நான் ஒண்ணும் வேணுமின்னு..’ என்று சொல்லி முடிக்குமுன் அவன் அப்படியே இழுக்கப்பட்டு வண்டியை விட்டு வெளியே எறியப்பட்டு, அப்புறம், கொத்துப் பரோட்டாதான்.. கதறல்கள் சினத்தீக்கு நெய்போலும்! ஏதோ ஒரு கணக்கு வைத்திருக்கிறார்கள், அது முடியும் வரை அடிக்கிறார்கள். அடிவாங்குபவன் காயத்துக்கும், இவர்கள் நிறுத்துவதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை! மஞ்சவேட்டி அணிந்து, ஜிப்பாவில், விரல்நுனியில் அருவாளைத் தாங்கி வீதிக்கு வந்துவிட்டால், ‘சோலிய முடிக்காம திரும்பக் கூடாது!’ ஆமா!

    ramananகோபம் போலவே கொண்டாட்டமும் உச்சம்தான் மதுரையில். ஏதோ சின்னப் பண்டிகை என்றால் ஊர்கொள்ளாத கூட்டம் வந்துவிடும். உலகத் தமிழ் மாநாட்டை (1981) வேறெங்கேனும் நடத்தியிருந்தால் அத்தனைக் கூட்டம் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். சித்திரைத் திருவிழா போன்ற ஒரு மக்கள் திருவிழாவைத் தமிழ்நாட்டில் வேறெங்கும் நான் கண்டதில்லை. கள்ளர்கள் தோல் பையிலிருந்து நீர் பாய்ச்சும்போது கூடக் கோபமாகத்தான் சிரிக்கிறார்கள்! எப்போதும் ஒரு வீச்சரிவா விளிம்பில்தான் இருக்கிறார்கள்! கூடவே ஒரு கத்தி போன்ற நியாய உணர்வும் இருக்கிறது. அதுவும் கூடக் கோபமாகவே வெளிப்படுகிறது.

    தோழர் கண்ணன், நரசிம்மர், இரணியனை நாராய்க் கிழித்துவிட்டு, ‘தம்பி, ஏதோ நடந்தது நடந்திருச்சு; ஒண்ணும் மனசுல வச்சுக்க வேணாம்,’ என்று சொல்வதைப்போல, ‘அதான் மன்னிச்சக்குன்னு சொன்னேன்ல?’ என்று முகமெல்லாம் கண்கொப்பளிக்க, இடி முழுங்க மன்னிப்புக் கேட்பார்.

    இன்னும் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்தான் இருக்கிறோம்!

    ஒரு சின்னக் கடை. அதிலே ஒரு வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஒருவர் ஏதோ துவாலையோ சோப்போ வாங்க வந்திருக்கிறார். கடைக்காரர் விலையைச் சொன்னதும் கூச்சல் போட ஆரம்பித்து விட்டார். வெளியூர்க்காரர்.

    ‘நான் கேட்டது ஒரு துண்டு எவ்வளவுன்னு? நீ என்ன மூணுக்கு வெல சொல்றியா?’

    – அட, ஒண்ணுதாங்க நான் சொன்னது!

    ‘யோவ்! எல்லாம் எனக்குத் தெரியும்யா! நான் கேட்ட வெலக்குக் குடு!’

    – கட்டுப்படி ஆகாதுங்களே! நீங்க சொல்றது அஞ்சு வருசத்துக்கு முன்ன இருந்த வெல! இப்ப ஏறிப் போச்சுதுங்களே!

    ‘யோவ்! எல்லாம் எனக்குத் தெரியும்யா’ என்று வாக்கியத்தை முடிப்பதற்குள், கடைக்காரர், கடையை விட்டு வெளியே வந்தார். ஆஹா! ஒரே நாளில் இரண்டு கொத்துப்பரோட்டா தரிசனமா என்று யோசிக்கலானார்கள் சுற்றி இருந்தோர். அவரோ, ஒரு ஸ்டூலைப் போட்டு, வாங்க வந்தவரை,

    – வாங்க! இதில உக்காருங்க!’ என்றார்.

    வாங்க வந்தவரோ குழப்பமாகி, ஆனால் உட்கார்ந்து கொண்டு,

    ‘இப்போ எதுக்கு என்ன ஒக்காரச் சொன்னெ?’ என்று கேட்டார்.

    கடைக்காரர், கைகளைக் குறுக்கே கட்டிக் கொண்டு,

    – ஒண்ணுமில்லீங்க! எ..ல்..லா..ம்.. தெரிஞ்ச ஒருத்தர நாங்க இப்பத்தான் மொதமொத பாக்குறோம், அதான்!’ என்றார்.

    மதுரைச் சொல்லுக்கு நிகராகுமா வீச்சரிவாள்?!

    Share
  • வாணியைச் சரண்புகுந்தேன்

    இசைக்கவி ரமணன்

     goddess_saraswati_seated_on_her_mount_or98

    கற்பூர மேனி இவள் கற்பனை வேணி
    கல்விக்குத் தோணி இவள் கவிதைக்குள் தேனீ
    ஒவ்வொரு சொல்லையும் ஆள்கின்ற ராணி
    உள்ளத்தில் பொங்கிடும் பேரின்பக் கேணி
    ஏழைக்கு ஏணி எங்கள் செந்தமிழ் வாணி!

    உள்ளக் கமலத்தை ஊடுருவி, அங்கு02
    ஊசி முனையொளி யாய்ச் சிரிப்பாள்
    மெள்ள மிக மெள்ள இதழ்கள் விரித்தே
    பேதையை மேதையாய்ச் செய்திடுவாள்
    பள்ளத்தில் வீழ்ந்து தவித்தவனை, வண்ணப்
    பல்லக்கில் ஏற்றி அமர்த்திடுவாள்
    சற்று மிகச் சற்று கர்வங்கொண்டால், அவள்
    சாவற்ற சகதியில் தள்ளிடுவாள்!

    முத்து மழைத்துளி வீழ்கையிலும், நடு
    முற்றத்தில் நிலவொளி சூழ்கையிலும்
    சின்ன ரொம்பச் சின்னச் சத்தத்திலும், அவள்
    வன்னச் சிரிப்பொலி கேட்டிருக்கும்
    கத்துங் கடலினில் காற்றுவந்து, அந்த
    ககனம் நடுங்கிட ஓங்குகையில், அவள்
    காலின் சதங்கைகள் கேட்டிருக்கும், அதில்
    கவிதையின் கர்ச்சனை போட்டியிடும்!

    வாழ்வு தருவது வாணியின் பாதம்
    வந்து பணிந்திடு வாழ்வெலாம் கீதம்
    ஆழ்மனத் துள்ளே அவளடி நாதம்
    அன்பில் விளைவது தானவள் வேதம்
    தோழமை யாய்வரும் தோள்களினை, நம்
    தொல்லைகள் தீர்க்கின்ற தாயிவளை
    பாழில் நன்செய்தரும் பாதத்தினை, நாம்
    பற்றிடுவோம் அருள் பெற்றிடுவோம்! (நவ.11,2012)

    – ரமணன்

     

    `விடையற்ற கேள்விகளின் வெளிச்சப் புள்ளி`
    –கவிஞர் ஹரிகிருஷ்ணன்

    கால மயக்கம்

     

    எது வேத காலம் என்னும் ஏகோபித்த முடிவு இன்னும் ஏற்படவில்லை. பண்டிதர்கள் ஒருவர்க்கொருவர் மாறுபடுவது ஒருபுறம் இருக்கட்டும். ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆராய்ச்சியை அரசியலும், மதங்களும் ஆளும்படி விட்டுவிட்டார்கள். அதனால் அவர்களில் ஒருவர் கூறுவதை இன்னொருவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து நிலவும் இந்தப் பெருங்கூச்சலின் நடுவே, நமக்குச் சற்றேனும் தெளிவாகத் தெரியும் தகவல்கள் இருக்கத்தான் செய்கின்றன:

    1. ரிக்வேதம் கி.மு. 1600 ஐச் சேர்ந்தது என்றார்கள். துவாரகையில் மேல்மட்டத்தில் நடந்த ஆராய்ச்சியே அந்தக் கண்டுபிடிப்புகளை கி.மு. 1200 என்று தேதியிட்டது. மொத்தம் ஏழு மட்டங்கள் உள்ளன. அதில், இந்தக் கூற்று, மேல்மட்ட ஆராய்ச்சியால் வந்த கண்டுபிடிப்பு! அப்படியானால், ரிக் வேதத்திற்கும் துவாரகைக்கும் இடைப்பட்ட காலம் 400 ஆண்டுகள்தானா? என்ன பிதற்றல் இது?

    2. மஹாபாரதத்தின் காலம் கி.மு. 2550 லிருந்து கி.மு. 3212 வரை என்று கொள்வதற்கான ஆரய்ச்சி பூர்வமான தகவல்கள் இருக்கின்றன. அப்படியானால், ராமாயணக் காலம்? 3000 ஆண்டுகளேனும் முந்தியிருக்காதா? ராமன், இக்‌ஷுவாகு குலத்தில் 92 ஆவது அரசன் என்று ஒரு கணிப்பும் 62 ஆவது அரசன் என்று ஒரு கணிப்பும் இருக்கிறதென்று கேள்விப்படுகிறோம். அவனுக்குப் பல தலைமுறைகள் முன்பு ஹரிச்சந்திரன் ஆண்டான் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். ஹரிச்சந்திரன் காலத்திலேயே, காசி, உலகத்திலேயே மிகப் பழமையான நகரமாகக் கருதப்பட்டிருக்கிறது. எனில் திலீபன் காலம் எது?

    3. ரிஷிகள் சரஸ்வதி நதியின் கரையில்தான் வாழ்ந்தார்கள் என்றும், புவியியல் மாற்றங்களால் அந்த நதி புதையுண்டு போன பிறகு, அவர்கள் சிந்து நதிக்கரைக்குப் புலம் பெயர்ந்தார்கள் என்றும், அதன்பின் கங்கைக் கரைக்கு வந்தார்கள் என்றும் கேள்விப்படுகிறோம். இதில் சிந்து சமவெளி நாகரிகத்தின் காலமெது? உயர்ந்த நாகரிகத்தைக் கடைபிடித்த அந்த மனிதர்கள் என்ன மொழி பேசினார்கள்? தெரியவில்லை. பாண்டங்களில் கிடைத்த சித்திரச் சின்னங்கள் இன்னும் புதிராகவே தொடர்கின்றன.

    4. ஒரு சமூகம், ஒரு குறிப்பிடத்தக்க நாகரிக நிலையை எய்துவதற்கு எத்தனை நூற்றாண்டுகள் பிடித்திருக்க வேண்டும்?

    இவற்றையெல்லாம் மனதில் வைத்துப் பார்க்கும்போது, வேத காலம் என்பது குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று நாம் கொள்ளலாம்.

    சரஸ்வதி யார் அல்லது என்ன?

    அவள் நதியா? இல்லை, அறிவின் தாயா? என்ற சர்ச்சையில் இன்னும் பண்டிதர்கள் ஈடுபட்டிருக்க, `அவள் இரண்டும்தான்` என்று என் குருநாதர் சொன்னதால் என்னைப் பொறுத்தமட்டில், அவர் வாக்கே இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி, அல்லது, ஹரி சொன்ன `வெளிச்சப் புள்ளி.`

    ரிக்வேதம் சரஸ்வதியைப் பற்றிப் பாடும் ஸுக்தங்களை மேலோட்டமாகப் பார்த்தால் அவை ஒரு நதியை வர்ணிப்பது போலவும், உள்ளாழ்ந்து பார்த்தால் அவை ஒரு தெய்வ சக்தியைக் குறித்துப் புகழ்வது போலவும் தோன்றுகிறது என்கிறார்கள் பெரியோர்.

    நதியை ஒரு பக்கத்தில் விட்டுவிட்டு, தேவியைப் பார்ப்போம்!

    சரஸ்வதி என்பது சத்தியம் என்னும் செம்பொருளிலிருந்து இறங்கிவரும் ஓர் ஊக்கத்தின் சக்தி. அது மாமுனிகளின் சித்தத்தில் தெளிவான ஞானமாக தரிசனமாகிறது. அந்தத் சித்தத்திலிருந்துதான் வேதக் கவிதைகள் வெளிப்பட்டன. சத்திய தரிசனம் கண்டவனே ரிஷி. ரிஷி என்றாலே காண்பவன் என்று பொருள். ரிஷியே கவி. சத்தியத்தின் வெளிப்பாடே கவிதை. அறியாமையே அனைத்துப் பாவங்களுக்கும் காரணம். ரிஷிகளின் கவிதையே அந்த அறியாமையைக் களையும் மருந்து. ஆம், சத்தியமே, அவித்தைக்கு முறிவு.

    சரஸ்வதி ஆனந்தமான உண்மைகளைத் தூண்டுபவள். (ஸுன்ருதானாம் சோடயித்ரி) சித்தத்தில், சத்தியத்த்தின் முறையான மனனங்களை விழிக்கச் செய்பவள். (சேதந்தி சுமதினாம்) அனைத்து எண்ணங்களையும் அல்லது புத்தியை (திய) ஒளிதிகழச் செய்கிறாள். (விராஜதே)

    ஸுக்தம் குறிப்பிடும் ஸமுத்ரம் கடல் அல்ல, அது இதயத்தில் கொழிக்கும் இறைவெள்ளம். ஆம், ஸமுத்ரத்திற்கு முன் ஹ்ருத வருகிறது. பின்பு, க்ருத அதாவது தெளிவு வருகிறது.

    குறைந்தது இரண்டு விதமாகப் பொருள்கொள்ளும்படி விளங்குகிறது வேதத்தின் பாஷை.

    வாக் தேவி:

    சத்தியத்தைக் கேட்கச் செய்யும் சக்தி சரஸ்வதி. சத்திய ரீங்காரமே ஸ்ருதி எனப்படுகிறது. வாக் என்பது பேச்சல்ல!

    தீயென்றால் காடெரியத் தேனென்றால் பூமகிழ
    வாய்நின்ற பேரருளே வாக்கு

    நாம் பேசுவது பேச்சு. ரிஷிகளின் பேச்சு வாக்கு. `மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்,` என்றான் பாரதி. அது வாக்கு. ஏன்? அது உச்சத்தில் இருக்கும் சத்தியம் என்னும் பிரக்ஞையிலிருந்து வருவது. மாமுனிகளின் மூலம் மந்திரங்களாக வெளிப்படுவது. மகத்தான செயல்களை நொடியில் செய்வது.

    பவபூதி சொல்வதைக் கேட்போம்:

    `எத்தனை நல்ல மனிதர்கள் என்றாலும், அவர்களுடைய பேச்சு என்பது, அவர்கள் மனதில் ஏற்கனவே இருக்கும் எண்ணங்களுக்கு ஏற்பவேதான் இருக்கும். ஆனால், ஒரு முனிவரின் வாக்கு என்பது அவருடைய மனதிலிருந்து வருவதில்லை. அது எல்லாவற்றுக்கும் மேலான சத்திய சித்தம் என்னும் தளத்திலிருந்து நேரடியாக வருவது. அப்படி அது வெளிப்படும்போது, அந்த முனிவரைச் சுற்றியுள்ள சூழல் அல்லது உலகத்தையே மாற்றவல்ல ஆக்கசக்தி வாய்ந்ததாக அது விளங்குகிறது. அது அறியாமையை அழிக்கவல்லது.“

    இதையே ஸ்ரீ அரவிந்தர் வாயிலாகக் கேட்போம்:

    `சத்தியம் என்பது நம்மை ஒளியாய், அல்லது ஒளியின் குரலாய் வந்தடைகிறது. அது நம் புத்தியில் ஒரு மாறுதலை நிகழ்த்துகிறது. நம்மிலும் நம்மைச் சுற்றிலும் ஒரு தெளிவை வலிந்து வழங்குகிறது. எண்ணத்தில் நின்ற சத்தியம், காட்சியாய் விரிகிறது. அந்த சத்திய தரிசனம் ஆன்ம சத்தியமாய் நிலைபெறுகிறது. அதுவே உணர்ச்சி, புத்தி, செயல் யாவற்றையும் சத்தியத்தின் புறப்பாடாகவே ஆக்கிவிடுகிறது. இதுவே வேதத்தின் ஜீவக் கோட்பாடு.“

    சரஸ்வதீ ஸுக்தம் (இலா, சரஸ்வதி, பாரதி:)

    சரஸ்வதி என்னும்போது, ரிக்வேதம் இலா, சரஸ்வதி, பாரதி என்னும் மூன்று தெய்வங்களைச் சேர்த்தே கொண்டாடிப் போற்றுகிறது. மஹி என்னும் பெயரும் உண்டு. மஹியும் பாரதியும் ஒன்று என்பர் பெரியோர். மனுவின் பிள்ளை இல பெண்ணாகி இலாவானான் என்று புராணக் கதை ஒன்று உண்டு. ஆனால், இந்த மூன்று தெய்வங்கள், சத்திய வேள்வியில் ஈடுபட்டிருப்பவனுக்கு பார்வை, கேட்டல், மற்றும் விரிவு மூன்றையும் வழங்குகின்றனர். பாரதி என்பவள் அகண்ட பிரகாசம். இலா, அவ்வொளியின் அகண்டத்திற்கு ஏற்பவே, அதைச் சித்தத்தில் ஒளியாக்கித் தருபவள். ஊக்கத்தைத் தரித்தவளான சரஸ்வதி, அந்த ஒளியை, அதாவது சத்தியத்தைக் கேட்கச் செய்கிறாள்! இந்த சக்திகளெல்லாம் பார்க்கக் கூடிய வடிவில் தெரிபவை!

    0001Saraswathi_maa_Godess (1)

    மங்கலமான சத்தியங்கள் மண்டிக் கிடப்பவள்
    மனதில் ஆனந்த எண்ணங்களை விழிப்புறச் செய்பவள்
    அந்த சரஸ்வதி இந்த வேள்வியை ஏற்கட்டும்!

    (சோதயித்ரி ஸுந்ருதானாம் சேதந்தி ஸுமதீநாம்
    யக்ஞம் ததே ஸரஸ்வதீ! 1:3:11)

    சித்தத்தில் தரிசனத்தைச் சிந்திக்கும் வண்ணம் நிகழவைத்து
    சத்தியமாம் பெருவெள்ளத்தை விழிப்புறச் செய்பவள் சரஸ்வதி
    அத்தனை எண்ணங்களையும் ஒளியுறச் செய்கிறாள்1

    (மஹோஅர்ண: ஸரஸ்வதீ ப்ரசேத்யதி கேதுனா
    தியோ விஸ்வா விராஜதி 1:3:12)

    தூய்மை நல்குபவள் சரஸ்வதி. நிறைவால் நிறைந்திருப்பவள். சித்தத்தில் ஞானமாய்ச் செழித்திருப்பவள். நம் வேள்வியை ஏற்பளாக!

    (பாவகா ந: ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜினீவதீ
    யக்ஞம் வஷ்டு தியாவசு: 1;3:10)

    நிறைவால் நிறைந்திருப்பவள். செழுமையின் ஆற்றல் மிகுந்தவள், சித்தத்தில் ஞானத்தைப் பாதுகாப்பவள், எங்களைக் காப்பாற்றட்டும்!

    (ப்ரணோ தேவீ ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜினீவதீ
    தீனாம் அவித்ரி அவது 6:61:4)
    வாக் ஸுக்தம் : ரிக்வேதம் 10:125

    இந்த ஸுக்தம், வாக் என்னும் பெண் ரிஷியின் மூலம் வெளிப்பட்டது. வேதத்தில் குறைந்தது 25 பெண் ரிஷிகளைக் காணலாம். அவர்களுள், வாக் என்னும் ரிஷி சிறப்புக்குரியவர். ஸ்ரீ ஸுக்தம் அவர்மூலம்தான் வெளிப்பட்டிருக்கிறது. அதில் அவரே பராசக்தியாக வெளிப்பட்ட அபூர்வ இடம் உண்டு. `ஷுத்பிபாசா மலாம்ஜ்யேஷ்டாம் அலக்‌ஷ்மி நாசயாமி அஹம். `பசி தாகம் போன்ற முன்னர் தோன்றிய அசுத்தங்களை, துர்பாக்கியங்களை நான் விரட்டியடிக்கிறேன்` என்று அம்பிகையே மொழிகிறாள்! அதே ரிக்கின் அடுத்த வரி அம்பிகையை இறைஞ்சுவதாக அமைந்திருக்கிறது!

    அந்த வாக் ரிஷியின் மூலம்தான் இந்த வாக் ஸுக்தமும் வெளிப்பட்டது.

    வாக் என்பது பேச்சல்ல என்று ஏற்கனவே பார்த்தோம். அது சத்தியத்தின் இதயத்திலிருந்து வருகின்ற ஊக்கம். அண்டம் முழுதும் படைப்பில் நீக்கமற நிறைந்திருக்கும் ஆர்வம். அறிவின் ஆக்கத்தின் ஊற்று.

    எனவே. ஸுக்தம், `நான் ருத்திரர்கள், வசுக்கள், ஆதித்யர்கள், மித்ரன், வருணன், இந்திரன், அக்னி, அஸ்வினி தேவர்கள் இவர்களுடன் நடக்கிறேன், தாங்குகிறேன்,` என்னும் போது வாக் என்பதன் பொருள், பெரும் பிரமிப்பில் நம்மை ஆழ்த்துகிறது.

    `உயிர்கள் உண்பதும், காண்பதும், கேட்பதும், ஏன், சுவாசிப்பதும் என்னுடைய சக்தியால். சித்தத்தை என்பால் வைக்காதவர்கள் சிதைவுறுகிறார்கள். யாரை விரும்புகிறேனோ, அவனை வலிவுடையோன் ஆக்குகிறேன். அவனை ரிஷியாய் ஆக்கி, ஞானத்தைத் தந்து, பிரம்மத்தில் நிலைபெறச் செய்கிறேன்.

    ஒரு பெண்மூலம், இந்த மகாசக்தி பேச்சாகவும் வெளிப்பட்டிருக்கிறது என்பது நம்மை வாய்புதைக்க வைக்கிறது.

    மேதா ஸுக்தம்

    `நீ வருவதற்கு முன்னர், வருத்தம் தரும் பேச்சுக்களில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். எங்களை மகிழ்ச்சியுடன் அணுகும் அறிவின் தேவியே வருக! மங்கலமானவளே, மென்மனம் கொண்டவளே, எங்கும் நிறைந்திருப்பவளே வருக! நின் வருகையால், நாங்கள் ஒளி பெற்று, பரம சத்தியத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தும் வல்லமை பெறுவோமாக!` என்றே துவங்கும் இந்த ஸுக்தம் எதைப்பற்றிப் பேசுகிறது என்பதை விளங்கிக் கொள்வது சிரமமாக இல்லை. அறிவார்ந்த உணர்வே மேதா. Conscious awareness! Conscious intelligence!

    `தேவியே! நின்னருள் பெற்றோர் ரிஷியாகலாம். செல்வங்கள் யாவும் பெறலாம். பிரம்ம ஞானம் எய்தலாம். பலவிதமாய்ப் பல்கும் ஐஸ்வரியங்களைப் பெறலாம். எம்மீது மகிழ்ச்சி கொண்டு, அறிவோடு கூடிய செல்வங்களையே அளிப்பாயாக! சரஸ்வதி தேவியின் அறிவு, என்னுள் அருளப்படட்டும்!`

    இவள்தான் வாணி!

    இவள் அறிவுத் தெய்வமல்ல, அறிவின் தெய்வம்! இவளுடைய நாதத்திலிருந்தே படைப்பு. சொல்லப்போனால், இவளுடைய வாக்கே இந்த சிருஷ்டி. எனவே, இவள் தேவதையல்ல, இவளுக்கு மேல் இன்னொரு சக்தி இல்லையென்னும்படி இருக்கின்ற பராசக்தியே இவள்.

    இந்த வாணியைத்தான் பாரதி சரண்புகுந்தான். அதனாலேயே அவனில் பாரதி பூரணமாய்க் குடிகொண்டாள். வேதங்களை நேரடியாகப் பயின்றவன் பாரதி. எனவே, அவன், ஒரு தெய்வத்தைப் பற்றிப் பாடினால் அதில் வேதத்தின் சொற்கள், வேதத்தின் பொருள், வேதத்தின் கொள்கை இவை காணப்படுவதில் வியப்பில்லை. சரஸ்வதியைப் பற்றிய, மேற்குறிப்பிட்ட விளக்கங்களை மனதில் வைத்துக்கொண்டு, பாரதியின்,

    ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் – அதை
    அன்னை எனப்பணிதல் ஆக்கம்!

    என்னும் வரிகளை நோக்கும்போது நமக்கு மெய் சிலிர்க்கிறது!

    ..நாதமோ டெப்பொழுதும் –என்றன்
    நாவினிலே பொழிந்திட வேண்டும்…

    கண்மணி போன்றவரே
    அண்மையில் இருந்திடுவீர் – இனி
    அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ!

    என்று அவன் பாடிய பாடல் ஸரஸ்வதி ஸ்தோத்திரம் எனப்படுகிறது. ஆனால் இது வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பாரதி, ஸரஸ்வதி, மஹி, வாக் எல்லோரையும் ஒருங்கே சேர்த்துத் துதிப்பது போலவே இருக்கிறது.

    உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே
    ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்
    கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
    கருணை வாசகத் துட்பொருளாவாள்

    என்னும் வரிகள் ரிக் வேத விளக்கமாகவே தெரிகின்றன.

    வஞ்சமற்ற தொழில்புரிந்துண்டு
    வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்
    வெஞ்சமர்க் குயிராகிய கொல்லர்
    வித்தை யோர்ந்திரு சிற்பியர் தச்சர்
    மிஞ்சநற்பொருள் வாணிகஞ் செய்வோர்
    வீர மன்னர், பின் வேதியர் யாரும்
    தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம்
    தரணி மீதறி வாகிய தெய்வம்..

    இதுவும் வேதக் கொள்கையே! ஸரஸ்வதியைத் தொழில்களோடு இணைத்துப் பார்க்கும் தரிசனம் ஸ்ரீ அரவிந்தருடையது. அவர்தான் பாரதியின் நண்பராயிற்றே! அவர்கள் இதைப் பற்றி விவாதித்திருக்கலாம்.

    வாணி யார்? இதோ பதில்:

    வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
    ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
    காணுகின்ற காட்சியதாய்க் காண்பதெல்லாங் காட்டுவதாய்
    மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே தொழுவோமே!

    அறிவுமுத்து மாலையினாள் என்னும் சொற்றொடர் சிந்திக்கத் தக்கது. சனாதன தர்மத்தில் அறிவைப் பேணும் வழக்கம் உண்டே தவிர, அறிவைத் தொழும் வழக்கம் இல்லை. அப்படிச் செய்தல் அறியாமை என்று நம் முன்னோர்களின் முடிவு. ஓர் உபநிடதம் சற்றுக் கடுமையாகவே சொல்கிறது, `அறிவை மதியாதவன் முட்டாள். அறிவை வணங்குபவன் அடிமுட்டாள்,` என்று. ஏன்? அறிவு, ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டும். அதை நாம் ஆள வேண்டும். கருவியை எஜமானனாக்கித்தான் வேதத் திருவிழியாளுக்கு, மிக்க பல்லுரையெனும் கருமை யிட்டார்கள் பண்டிதர்கள். அது நம்மை ஆண்டால், நாம் ஆணவத்தின் வசம் இருக்கிறோம் என்றே பொருள். எனில், நம் அறிவு கனியாது, தெளிவடையாது. வேதத்தின் உட்பொருள் காணாது. பேச்சோடு நின்றுவிடும். வாக்கு வராது. இதைத்தான், என்னென்னவெல்லாம் அறிவுகளோ அதை முத்துமாலைகளாக்கி அணிந்திருக்கிறாள் வாணி என்கிறான் பாரதி. பாரதியின் இந்தப் பார்வை அவன் எவ்வளவு உயரமானவன் என்று நமக்குக் காட்டுகிறது.

    அந்த தேவியைச் சிறுவயதில் நேரிலும் கண்டவனாதலின் அவன் அவள் மேல் காதலே கொண்டு `பகற் பேச்சும் இரவிற் கனவும் அவளிடை வைத்த நினைவையல்லால் பிற வாஞ்சையுண்டோ?` என்று கலைமகளிடம் காதல் வயப்பட்டதை வர்ணிக்கிறான்.

    மஹா காளியின் புகழ் பாடப் புகுந்தவன்,

    வேதமாய் அதன்முன்னுள்ள நாதமாய் விளங்குமிந்த
    வீரசக்தி வெள்ளம் விழும் பள்ளம் – ஆக
    வேண்டுநித்தம் என்றன் ஏழை உள்ளம்

    என்று வாணியைத்தானே பார்த்துப் பாடுகிறான்!

    ஒரு கணம்கூட, தான் பேசக் கூடாது. தனது எண்ணம் என்ற ஒன்றிருந்து அது எத்தனை சிறப்பானதாக இருந்தாலும் அது சொல்லாக வெளிப்படுவதில் பாரதிக்கு சம்மதமில்லை. அவளுடைய வாக்கே இவனது நாவினின்று வெளிப்பட வேண்டும் என்பதே அவன் தவம்:

    வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு ளாக விளங்கிடுவாள்
    தெள்ளுகலைத்தமிழ் வாணி நினக்கொருவிண்ணப்பஞ் செய்திடுவேன்
    எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராதென்றன் நாவினிலே
    வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்திவேல் சக்திவேல்!

    அவள் வெளிப்பட்டால்தான், வேதக்கருப்பொருள் தன்னைப் புறந்தள்ளி வெளிப்பட்டால்தான் அது கவிதை, மந்திரச் சொல், வாழ்ந்த பயன். அல்லவெனில், `நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில்` எறிந்த கதைதான்.

    ஓர் அரிய அக அனுபவத்தை வைக்கிறான், பராசக்தி என்ற கவிதையில். எல்லாமாகி இருப்பவள் பராசக்தி. அவளே கதையும் கவிதையும் சித்திரமும் சிற்பமும் நாடகமுமாய்ப் பல்கும்போது வாணியாகிறாள். காவியம் பாடென்கிறாள் வாணி. தன் கால்களைத் தவிர வேறெதையும் நினைக்காதே என்கிறாள் பராசக்தி. அல்லாடுகிறது மன்றாடும் கவிஞனின் மனம். (கவிதை..)

    இந்த அற்புதக் கவிதையில்,

    சொல்லினுக் கெளிதாக நின்றிடாள்
    சொல்லை வேறிடம் சொல்ல வழிவிடாள்

    என்னும் வரிகள் பராசக்தி, வாணி இருவருக்குமே கச்சிதமாகப் பொருந்தும்! அவர் இருவரல்லவே!

    சரி, வாணியைப் பற்றி இவ்வளவு சேதிகளைத் தெரிந்துகொண்டோம். பாரதிக்கும் பாரதிக்கும் உள்ள பரவசமான பந்தத்தைக் கண்டோம். நமக்கும் வாணியருள் வேண்டுமென்று தோன்றுகிறது. அவளிடம் எதை எப்படிக் கேட்க? கவலையே வேண்டாம், பாரதியின் இந்தப் பாடலைச் சொன்னால் போதும்:

    தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல்
    சிந்திப்பார்க்கே
    களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்
    கண்ணீர்த்
    துளிவர உள்ளுருக்குதல், இங்கிவையெல்லாம் நீயருளும்
    தொழில்களன்றோ!
    ஒளிவளரும் தமிழ்வாணி அடியனேற் கிவையனைத்தும்
    உதவுவாயே!

    இந்தப் பாட்டை, பாஞ்சாலி சபதத்தில் சூதாட்டச் சருக்கத்திற்குக் கடவுள் வாழ்த்தாக வைத்தான்! அறியாமையின் சூதிலிருந்து நம் ஆன்மா தப்பி, அகண்டப் பிரகாசமாகத் திகழவேண்டுமானால், அவளே கதி!

    இறுதியாக, தன்னுடைய ஸரஸ்வதி வணக்கம் என்னும் பாட்டில், வாணிக்கு அழகான வடிவம் தந்து அவளைச் சரணெய்துகிறான்:

    வெள்ளைக் கமலத்திலே – அவள்saraswati-goddess-of-music-CJ28_l
    வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்
    கொள்ளைக் கனியிசைதான் – நன்கு
    கொட்டுநல் யாழிசை கொண்டிருப்பாள்
    கள்ளைக் கடலமுதை – நிகர்
    கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
    பிள்ளைப் பருவத்திலே – எனைப்
    பேணவந்தாள் அருள் பூணவந்தாள்!

    அவள் வீற்ற இடம், உள்ளமாகிய வெள்ளைக் கமலம். வெள்ளை என்னும் சொல்லுக்குத் தூய்மை என்பது மட்டும் பொருளல்ல. அறிவின்மை என்றும் பொருளுண்டு! வெள்ளந்தி என்று சொல்வதில்லையா, அதுதான்! மேலு, எந்த நிறத்தின் சாயலையும் ஏற்காத தன்மை என்றும் பொருளுண்டு. அறிவை வைத்துக்கொண்டு அவளை அணுக முடியாது! நான் ஒன்றுமே இல்லை, எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது பணிவு. தெரியும், தெரியாது என்னும் சிந்தனைகளே இல்லாமல், ஒரு சின்னக் குழந்தையின் வெகுளித் தன்மையோடு வளையவருவதுதான் கள்ளமற்ற உள்ளமாகிய வெள்ளைக் கமலம்! தஞ்சம் விழைகிறேன், சரணம் எய்தவேண்டும் என்னும் நினைப்பும் இல்லாமல் தாயென்னும் கடலைச் சேரத் தாவிவரும் நதியைப்போல் இருப்பதுதான் அவன் சொல்லும் பிள்ளைப் பருவம்!

    அப்படிப்பட்ட உள்ளத்தில்தான் அவள், அவளாகவே வந்து வீற்றிருப்பாள். அதுதான் அவளுக்கு உகந்த இடம். அதுதான் அவளுக்குத் தக்க ஆசனம். எனவே, தனது தகுதிக்கேற்ற இடத்தில் தான் அமர்ந்திருக்கும்போது இசைக்கப்படும் புகழை அவள் ஏற்றிருப்பாள்!

    கனி என்பது, கொள்ளையடிக்கத் தூண்டுவது. அவளுடைய கனியிசையோ நம் இதயங்களைக் கொள்ளையடிப்பது!

    அவளுக்கு இந்தப் பிள்ளையின் வெள்ளை உள்ளத்தில் என்ன வேலை? இப்படிப்பட்ட பிள்ளையைத்தான் அவள் தேடிக்கொண்டிருந்தாள்.

    எதற்கு? கவிதை என்னும் வரத்தை அருளுவதற்கு!

    ஏன்? எனக்கு இது தெரியும், அதுதான் தெரியாது என்னும் நினைப்புக்கள், பேதங்கள் இல்லாத பிள்ளை உள்ளம்தான் தான் வழங்கும் கவிதைக்கு ஏற்ற உள்ளம்.

    எப்படிப்பட்ட கவிதையாம்? கள்ளை நிகர்த்தது – மயக்கமே வடிவாய் இருப்பது, மையலைத் தருவது, பழகப் பழகப் பெருமை கூடுவது! கடல் அமுதை நிகர்த்தது – சாகரத்தின் சாறு! உயிரின் இதயம்! அடர்த்தி, திரட்சி!

    கவிதை அமரவிதை. அதைப் பயில்வதற்குத் தேவை அசுர சாதகம்! எனவே, ஏற்ற இடத்தில் வீற்றிருந்து, புகழை ஏற்றபடி இசைத்துக்கொண்டிருக்கிறாள் வாணி.

    வேதத் திருவிழியாள் – அதில்goddess-saraswati-ma-big
    மிக்கபல்லுரை யெனும் கருமையிட்டாள்
    சீதக் கதிர்மதியே – நுதல்
    சிந்தனையே குழலென்றுடையாள்
    வாதத் தருக்கமெனும் – செவி
    வாய்ந்த நற்றுணிவெனும் தோடணிந்தாள்
    போதமென் நாசியினள் – நலம்
    பொங்குபல் சாத்திர வாயுடையாள்

    வியாக்கியானங்களால் தொலைந்து போனது வீதியில் வளையவந்த சத்தியம். ஆயிரம் ஆண்டுகளாக எத்தனை புத்தகங்கள், கட்சிகள், பிரிவுகள், சண்டைகள்! ’இதோ சத்தியம்!’ என்ற பரவச அனுபவத்தின் வெளிப்பாடு வேதம். அனுபவம் இல்லாதது வியாக்கியானம். “Experience has no language and language has no experience,” என்பார் என் குருநாதர். விளக்கம் என்பது விகாரப்படுத்தும் அபாயம் உள்ளது; மேலும் தோதாய் இருப்பதற்குப் பதிலாக ஊறு விளைவிக்கும் தன்மையுடையது என்று பாரதியே குறிப்பு எழுதுகிறான்.

    எனவே வேதங்களே விழிகள். அதுவும் கருவிழிகள். விழிகள் கருமை. வேதம் என்னும் அறிவு தரும் வெளிச்சம் வெண்மை!

    நெற்றி எப்போதும் குளிர்ச்சியாக இருக்குமாம் வாணிக்கு. கவலைச் சூடு ஞானத்தின் தாய்க்கு ஏது?! எந்த இரவானாலும் தனது தண்மை மாறாத சந்திரனே நெற்றி – சீதக் கதிர்மதி – என்கிறான். அதென்ன கதிர் மதி? நிலவின் அமுதக் கிரணங்கள் என்று பொருள் கொள்ளலாம். அதைவிடவும் சிறப்பாக இன்னொன்று சொல்லலாம். கதிரவனின் கொடைதானே மதியின் ஒளி? எப்போதும் வெப்பமாக இருக்கும் கதிரவனின் கொடை, எப்போதும் குளுமையாகவே இருக்கும் சந்திரன்! ஆஹா! சிந்தனைமயமானது அறிவு. தெளிவுமயமானது ஞானம்! கேள்விகள் ஓய்வைத் தராது என்றாலும் கேள்விகள் இல்லாமல் உள்ளேயே வீற்றிருக்கும் ஒய்யாரமான ஓய்வை நாடுகின்ற நாட்டம் எப்படி வரும்?

    ஞானம் ஞானமாய், வளர்ச்சியும், மாறுதலும், தேய்தலும் இல்லாமல் தானாய்த் தானிருக்க, மானுடர்க்கும், மற்றைய உயிரினங்களுக்கும் அவரவர் நிலைக்கு ஏற்பப் புரியும்படி அதை இறக்கி வழங்க வேண்டுமே! அதுதான் சிந்தனைக் கூந்தல்! நேர்த்தியான கூந்தல் எப்படி இருக்கும்? கரிய அருவியாய், கற்றை கற்றையாய் இருக்கிறது அவள் கூந்தல். ஒவ்வோர் இழையும் தனித்தனியாய், ஒட்டுமொத்தமான சேர்க்கையாய், உறுதியாய், நெகிழ்வாய், இன்பமே இயல்பாய், சுவாரசியமான சுருள்கள் கொண்டதாய்! சிந்தனையும் அப்படி இருக்கவேண்டும்.

    அனுபவத்தை நோக்கிய பிரயத்தனம் நமது சிந்தனை. அனுபூதியாக இறங்கி வருவது அவளுடைய சிந்தனை!

    வாதம், தருக்கம் என்னும் இரண்டு செவிகள். அதில் நல்ல துணிவென்னும் தோடு! வாதம் என்பது உரையாடல், discussion. தருக்கம் என்பது நியாயமாகப் படிப்படியாகப் பேசுதல், logic. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா? என்பார் கண்ணதாசன். இரண்டு செவிகள் இரண்டு விதமாய்க் கேட்கக் கூடாது! உரையாடல், அதாவது வாதம் என்பது உண்மையை அறியவே! எனவே அது நியாயமாக இருக்கவேண்டும். பாரபட்சமின்றி இருப்பதே நியாயம்! வாதம் உண்மையை அறிவதற்காக! தருக்கம், தாவி ஒரு முடிவுக்குப் பிடிவாதமாக வராமல், அந்த உண்மையைப் படிப்படியாக அறிவதற்காக!

    சரி, வாதமும் தருக்கமும் வாயால் நிகழும் செயல்கள். அவற்றை ஏன் வாணியின் செவிகளாக்கினான்? வாதிப்பதிலும் தருக்கிப்பதிலும் இருக்கும் ஆர்வத்தைக் காட்டிலும், உண்மையைக் கேட்பதில்தான் கூடுதல் ஆர்வம் இருக்கவேண்டும்! அவளுடைய செவிகளே அழகான செவிகள். கச்சிதமான இணை பொருந்திய செவிகள். ஏனென்றால், அவளே வாதம், தருக்கம் இவற்றின் இலக்கான உண்மை. அதுவே அவளுடைய ஞானமாகிய வீணையின் இசை. அதை அவளே கேட்டுக்கொண்டிருக்கிறாள்! எப்படி, படைப்பின் கதையை, கணபதியின் பரந்த காதுகள் கேட்டுக்கொண்டிருக்குமோ அப்படி!

    அறிவாய் விரிந்த விழிகள் வேதம்; தெளிவாய்க் குளிர்ந்த மதியே நெற்றி; மற்றவர் தழைத்து ஓங்க, தான் தழைத்து இறங்கும் சிந்தனையே கூந்தல்; ஞானமென்னும் கொள்ளைக் கனியிசை; வீற்றிருக்க வெள்ளை உள்ளம்; அந்த இசையைக் கேட்டுக்கொண்டிருக்க சீரான இரு செவிகள்!

    துணிவென்னும் தோடு? சிந்திக்கவும், பேசவும் துணிவு வேண்டும்! அந்தத் துணிவைப் படிப்போ, பணமோ, பதவியோ, அழகோ, திறமைகளோ தராது! உண்மைதான் தரும்! உண்மையை அறிவது முடிவு. உண்மையை அறிந்தே தீருவேன் என்னும் ஆர்வமே துணிவு! இது ஆயுதத் துணிவு அல்ல! அழகான அணிகலத் துணிவு!

    வாணிக்கு, நமது கல்வியைக் காட்டிலும், உண்மையை அறியவேண்டும் என்னும் ஆர்வமே இன்பம் தரும். எனவே, உண்மையைத் துணியத் துணிவோமாக!

    வாயால் வெளிப்படுவதல்லவா போதம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்! இவன், நாசி என்கிறானே! போதம் என்பது வார்த்தையில் வருவதில்லை. அதற்கு அப்பாற்பட்டது. மெளனத்தின் முரசு அது. உயிருக்கு உயிரானது அது. எனவெ அது சுவாசத்தின் வழியே வருவது! ஞானம் என்பது சுவாசமாக வேண்டும்! அப்படிச் செய்வதுதான் போதம்! அது பேச்சில் வராது. சர்ச்சைக்குரிய, பாரதி ”சங்கையில்லாதன சங்கையாம்” என்று குறிப்பிடும் சாத்திரங்களே வாய் மூலம் வெளிப்படுவன என்பதனால் சாத்திர வாயுடையாள்!

    கற்பனைத் தேனிதழாள் – சுவைக்aras1
    காவிய மெனுமணிக் கொங்கையினாள்
    சிற்பமுதற் கலைகள் – பல
    தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப்பாள்
    சொற்படு நயமறிவார் – இசை
    தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிவார்
    விற்பனத் தமிழ்ப்புலவோர் – அந்த
    மேலவர் நாவெனும் மலர்ப்பதத்தாள்!

    இதழில் தேன் என்பது பருகுவோரின் கற்பனைதானே! ”பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்” என்பாரே திருவள்ளுவர்! காதலில் கற்பனை அனுபவம்; அனுபவம் கற்பனை அன்று! இதழில் தேன் என்னும் கற்பனை, பருகப் பருகப் பெருகும் அனுபவம்!

    இங்கே வாணியே அனுபவங்களுக்கெல்லாம் அனுபவம். அறியாமையில் உழலும் நமக்கோ அது வெறும் கற்பனைதான். ஆனால், அந்தக் கற்பனையும் அவளுடைய கொடைதான் அல்லவா? அவள்தான் தன்னைப் பற்றிய கற்பனையை நமக்குத் தருகிறாள்! தேனொழுக்காக!

    ”ஏந்திள முலை” என்பார் இளங்கோ. மணிக்கொங்கை என்கிறான் பாரதி. முத்திரை போன்ற மகுடம் தரித்த கொங்கை. வனப்பு, திரட்சி, உறுதி, மிருதுத்தன்மை எல்லாம் சேர்ந்தது! காவியம் என்றால் அப்படி இருக்க வேண்டும்!

    கலைகளே அவளது கரங்கள்! கலைகள் என்னும் கரங்கள் மூலம் அவள் நம்மை அள்ளிக்கொள்கிறாள்; ஆதரிக்கிறாள்! கடுந்தவம் புரிந்து அடைவதைக் காட்டிலும் கலைகள் மூலம் இறையை அடைதல் எளிதென்பதைக் காட்டுகிறாள். அவள், கலை வாணியன்றோ!

    வெள்ளையான உள்ளக் கமலம் அவளுடைய உறைவிடம்; வேதமே விழிகள்; தண்மை மதியமே நெற்றி; வாதமும் தருக்கமுமே செவிகள்; துணிவே தோடு; போத நாசி; சாத்திர வாய்; கற்பனைத் தேனின் ஊற்றே இதழ்; காவியக் கொங்கை; கலைகள் கரங்கள்.

    சரி, பாதம்? அது எதுவாம்? எங்காம்?

    சொல்லின் நயமறிந்தவர்கள்; அது இசையோடு தோய்வதால் வரும் சுவையறிந்தவர்கள்; கற்பனைக்கு அப்பாலிருக்கும் ஓர் உந்துசக்தியின் விவரங்கள் அறிந்த விற்பன்னர்கள்; சுருங்கச் சொன்னால் தமிழ்க் கவிஞர்கள். அவர்களுடைய நாவிலே இவள் பாதமாம்! இல்லை இல்லை, அவர்களுடைய நாவே இவள் பாதமாம்!

    வாணியைச் சரண்புகுந்தேன் – அருள்
    வாக்களிப் பாளெனத் திடம்மிகுந்தேன்
    பேணிய பெருந்தவத்தாள் – நிலம்
    பெயரளவும் பெயர் பெயராதாள்!

    அப்படிப்பட்ட வாணியை நான் சரணடைகிறேன்! தீயென்றால் காடெரிய, தேனென்றால் பூமகிழ, வாய்நின்ற பேரருளே வாக்கு என்பேன் யான். அந்த வார்த்தைக்கு அப்பாலிருக்கும் மந்திரச் சொல்லின் மூலமான அருள் வாக்கை அவள் எனக்குக் கட்டாயம் அளித்தே தீருவாள் என்று நம்புகிறேன்.

    10177944_10152066284717919_2650350124425779658_nநம்புகிறவனுக்கு ஐயங்கள் இருக்கக் கூடாது. சரணம் எய்திய பிறகு கவலை இருக்கவே கூடாது. நான் கேட்பேன் அவள் தருவாள். இது நம்பிக்கை. எனக்குத் தரவே அவள் என்னைப் பணியவைத்தாள். இது சரணாகதி. “In faith there is distance; in surrenderthere is none. In faith, there is you and Him; in surrender, you jump into Him,” என்பார் குருநாதர்.

    உலகம் இருக்கும் வரைக்கும் அவளுடைய பெயர் இருக்கும். அவளுடைய பெயரே அவளுடைய உருவம். அது கல்லாலோ, பொன்னாலோ செய்ததல்ல. ஞானம் விழைவாரின் மோனத் தவத்தால் எழுந்தது! மோனக் கவிஞர்களின் கானப் பெருக்கால் விளைந்தது!

    தவத்தால், கவிதையால் பேணி வளரும் பெரும் தெய்வம் வாணி. அவள், அந்தத் தவத்தின், அந்தக் கவிதையின் முடிவாம் ஞானத்தால் நம்மைப் பேணுவாள்.

    திருஞான சம்பந்தரோடு அடியார்கள் ஜோதியில் கலந்ததுபோல்
    பாரதியோடு நாமும் வாணியைச் சரண்புகுவோம்!

    Share
  • வீதியில் கிடைத்த ஞானம்

    இசைக்கவி ரமணன்

     

    வார்ப்பிலேயே நான் ஊர் சுற்றி. புதிது புதிதாய் மனிதர்களைத் தெரிந்து கொள்வதில் எனக்குக் கொள்ளை மகிழ்ச்சி. கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால், மனம்திறந்து பேசத் தயாராக இருக்கிறார்கள் பலர். வெகு சிலரோ, கை குலுக்கினால், மறைவாக விரல்களை எண்ணிப் பார்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான இந்தியர்கள் ‘ஹலோ’ சொன்னதுமே நம் வேலை, சம்பளம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்! சிலருக்கு இந்த மாதிரிக் கேள்விகள் மிகவும் எரிச்சல் மூட்டுவதால், அவர்கள் பிரேதத்தை எழுப்பினாற்போல் முகத்தை வைத்துக் கொள்கிறார்கள். அட, அதுதான் அவர்களுக்கு எத்தனை இயல்பாக வருகிறது! என்னைப் பலமுறை, பலரும் இந்தக் கேள்விகள் கேட்டதுண்டு. சொல்லத் தயங்கக் கூடிய அளவுக்குச் சம்பளம் நான் ஒரு போதும் வாங்கியதில்லை என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்! ஒருமுறை சென்னை மின்சார ரயிலில்:

    “ஓஹோ! அது பெரிய பத்திரிகையாச்சே! நல்ல சம்பளம் இருக்குமே!”

    – ம்

    “ என்ன ஒரு அம்பதாயிரம் இருக்குமா?”

    ஆஹா! இவர்களுக்குத்தான் என்ன நம்பிக்கை! அதற்கு எத்தனை பூஜ்ஜியங்களோ? ஐந்தாம் தேதி சம்பளம். ஆறு, ஏழு, எட்டு வரை தேதிகள் சரியாகவே இருக்கின்றன. அப்புறம் உடனே 28, 29, 30 என்று வந்துவிடுமே! முதல் வாரமே முப்பதாம் தேதி வருகிற கதையை இவருக்கு எப்படித் தெரிவிக்க!

    “அட, ஒரு அஞ்சு பத்து முன்ன பின்ன இருக்குமோ என்னமோ?” விடுவதாயில்லை அவர்.

    உடனே, பக்கத்தில் இருப்பவர், “அட் என்னங்க நீங்க இதெல்லாம் போயி அவருகிட்ட கேட்டுகிட்டு? அவருதான் பத்திரிகைப் பேரைச் சொல்லிப் பதவியையும் சொல்லிட்டரில்லெ? அப்புறம் நாமாத் தெரிஞ்சுக்க வேண்டியதுதானே? இதெல்லாம் கேக்கணுமாக்கும்? என்னங்க தம்பி நாஞ் ஜொல்றது? என்ன ஒரு அறுபது எழுபது இருக்கத்தானே செய்யும்!,” என்று என்னையும், அவரையும் மாறி மாறிப் பார்த்தபடிச் சொன்னார்.

    அறுபது எழுபதா?? குபீரென்று சிரித்து விட்டேன். அவர்கள் ரசிக்கவில்லை. நிலைமையைச் சமாளிக்க அவர்களிடம் சொன்னேன். “ஒண்ணுமில்லைங்க; ஒரு ஜோக் நெனவுக்கு வந்துது. ரெண்டு பேர் பேசிக்கறாங்க. ஒருத்தர் இன்னொருத்தரைக் கேக்குறாரு : ‘ஏங்க எங்க வேலை செய்யறீங்க?’ அவரு, ‘நான் …பத்திரிகையிலெ மேனேஜரா இருக்கேன்.’ கேட்டவரு உடனே, ‘பேஷ் பேஷ்! அப்ப சாப்பாட்டுக்கு என்ன செய்யறீங்க?’ ன்னாரு.

    நம் சக பயணிகளுக்கு இதெல்லாம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. சம்பளம் என்னன்னு கேட்டா நேராச் சொல்ல வேண்டியதுதானே என்பது போல் முறைத்துக் கொண்டார்கள். முதலில் கேட்டவரைக் கேட்காதே என்று சொன்னவர், முணுமுணுத்தார்: ‘ஆமா, பத்திரிகைக் காரங்க சம்பளத்தத்தான் ரொம்ப நம்பி இருக்காங்களாக்கும்.’ சரி, இனிமேல் எங்கே போனாலும் சம்பளச் சீட்டைக் கொண்டு போக வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டேன். அவர், தமிழ்ப் பத்திரிகையை ஒரு உதறு உதறிப் பிரித்து அதில் முகத்தை மறைத்துக் கொண்டார்.

    ரயில் ஒரு நிலையத்தில் நிற்கும் முன்னே இளைஞனொருவன் இறங்க முயன்று அசிங்கமாக விழுந்தான். நிறையச் சிராய்த்திருக்கும். கண்ணாடி போட்டிருந்த அந்தக் கறுத்த மனிதர் சொன்னார், “ பாத்தீங்களா! பெத்தவங்க எவ்வளவு பாடுபட்டுப் பணத்தச் செலவழிச்சி படிக்க வச்சி அனுப்பறாங்க. இங்கெ என்னடான்னா பொறுக்கி மாதிரி விளுந்து கெடக்குறானே!” பக்கத்தில் இருந்தவரோ, “இதுக்குத்தாங்க சொல்றேன். புருசன் பொண்டாட்டி சேரும்போது பாத்துச் சேரணும்,” என்றார்! கறுத்த முகம் ரொம்பக் கருத்துப் போயிற்று!

    ‘சூடா கட்லேஸ்’ என்று வந்தான் வேர்க்கடலைப் பையன். தூரத்திலிருந்து ஒரு குரல், ‘ஏய் கடல! இங்கிட்டு வா!’ நம்ம பயல் அதைக் கவனித்தது மாதிரித் தெரியவில்லை! உடனே மறுபடியும், ‘ஏய்! என்ன கூப்டேனில்லா? வா இங்கிட்டு!’ உடனே இவன், ‘யோவ் சொம்மா அலியாதெ! அல்லாம் வர்றாங்க இரு.’ என்றான். இந்த இருதுருவத் தமிழ் உரையாடலை ரசித்துக் கொண்டிருந்த (கேட்டபடியே எழுத சிஃபியில் சம்மதிக்க மாட்டார்கள்!!!) நான் பயலைப் பார்த்து லேசாய்ச் சிரித்தேன். அவனும், தனக்குத் தோழமை கிடைத்தது போல், அழகாய்ச் சிரித்தான். நான் வாங்குவேன் என்று தெரியும் போல! அவனே வந்து கையில் கடலையைக் கவிழ்த்தான், கொஞ்சம் கூடுதலாக! ‘துன்னு, நல்லாருக்கும்,’ என்ற பாவனையில் புருவத்தை உயர்த்தினான்.

    காரணமே இல்லாமல் என்னிடம் இனிமையாக இருக்கிறார்கள். அதேபோல் காரணமே இல்லாமல் மற்றவர்களிடம் கடுமையாக இருக்கிறார்கள். எங்கள் அலுவலக காண்டீனில் ஒருவர் காப்பி கலந்து தருவார். நாங்கள் வரிசையாக நின்று டபரா டம்ளரை எடுத்துக் கொண்டு போகவேண்டும். ஒவ்வொருவரையும், தேவையே இல்லாமல் பல்லைக் கடித்துக்கொண்டு திட்டுவார். என் முறை வரும்போது, திடீரென்று அவர் முகத்தில் புன்னகையும், அந்த உணர்ச்சி மாற்றத்தில் நெற்றியில் வியர்வையும் அரும்பும்.

    யோசித்துப் பார்க்கிறேன். நான் எங்கே போனாலும் எல்லோரும் என்னிடம் சரளமாகவும், ரொம்பவும் பேசுகிறார்கள். ஆட்டோவில் போனால் அவ்வளவுதான்! முக்கால் மணி நேரம், ஓட்டுனர் தன் கதையை ஒரு காட்சி மிச்சம் வைக்காமல் சொல்லி விடுவார்! ஒருமுறை ஓர் ஆட்டோக்காரர் பர்ஸிலிருந்து அவரது வைப்பாட்டிப் புகைப்படத்தை கனமுடையாக எனக்குக் காண்பித்து வெட்கம் வேறு பட்டுக்கொண்டார். அதெல்லாம் பரவாயில்லை. பேச்சு சுவாரசியத்தில் அவர்கள் என்பக்கமே திரும்பிக் கொண்டு பேசிக்கொண்டே ஓட்டுவார்கள்; அதுதான் வயிற்றில் புளியைக் கரைக்கும்!

    நெடுந்தொலைவு பேருந்தில் பயணம் செய்யும்போது, ஓட்டுனரும், கண்டக்டரும் நல்ல நண்பர்களாகி விடுவார்கள். அதற்கு ஒரு காரணமும் உண்டென்று வைத்துக் கொள்ளலாம். நிறுத்தும் இடத்திலெல்லாம், அவர்களது வால்போலவே இருப்பேன். விட்டுவிட்டுப் போகமாட்டார்கள் என்ற தைரியத்தில் நிதானமாகச் சாப்பிடலாம்! அப்படியும் ஒருமுறை, மைசூருக்கும், பெங்களூருக்கும் நடுவில், இயற்கை அன்னை ஒரேயடியாக அழைக்க, கண்டக்டரிடம் சொல்லிவிட்டுத்தான் இறங்கினேன். மறந்துபோய் அவர் விசில் ஊதிவிட்டார். இங்கேயோ, பாசனத்திட்டம் கட்டுக்கடங்காமல் இறங்கிக்கொண்டிருக்க, திடீரென்று பேருந்து கிளம்பிவிட, நான் திரும்பவௌம் முடியாமல், நிறுத்தவும் முடியாமல் பட்ட அவஸ்தை! அப்புறம், ஜேம்ஸ் பாண்ட் மாதிரி ஓர் ஆட்டோவில் பாய்ந்து, ஓட்டுனர் முன் பத்து ரூபாய்த் தாளை நீட்டவும், அவர் பேருந்தைத் துரத்தினார். ஒரு சிறு தெருவைத் தாண்டி மெயின் ரோட்டில் நுழையப் போகிறது பேருந்து. அதற்கப்புறம் அதைப் பிடிக்க வாய்ப்பேயில்லை. இரு வண்டிகளும், பக்கம் பக்கமாகச் சென்ற தருணம், நான் பேருந்தின் ஓட்டுனரைப் பார்த்துக் கையசைத்துக் கத்தினேன்! அவரோ, நான் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன் என்று நினைத்து, பலமாகக் கையாட்டி கியரை மாற்றினார். ஆட்டோக்காரர் கிட்டத்தட்டத் தற்கொலை ரீதியில் குறுக்கே பாய்ந்து நிறுத்த, நான் தாவி ஏறினேன். நடந்ததைப் புரிந்துகொண்ட கண்டக்டர், தலையைச் சொறிந்தபடியே ‘த்சொச்சொச்சோ’ என்றார். கன்னட மொழியில், அதைவிடவும் பெரிதாய் மன்னிப்புக் கேட்டிருக்க முடியாது! பேருந்து ஓட்டுனர்களுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். நான் தூங்க மாட்டேன். வேடிக்கை பார்ப்பேன். அதற்கு அவர்கள் விளக்கம் சொல்லத் துவங்கி தங்கள் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டிக் கவிழ்ப்பார்கள். நான் ஆர்வத்தோடு கேட்பேன்!

    மனிதர்கள், கேட்பதே பேசுவதற்காகத்தான்! என்ன, கேட்கிறீர்களா?!

    Share
  • பெண் பார்த்த படலம்

    இசைக்கவி ரமணன்

    (இன்று எங்கள் 34 ஆவது திருமண நாள். 26 ஆம் திருமண நாளில் எழுதிய ஒரு சிறு குறிப்பை இங்கே இடுகிறேன்)

    என் மனைவியும் நானும், யார் திருமணத்திற்குச் சென்றாலும் ஒரே வாழ்த்துத்தான் சொல்வோம்: ‘நீங்கள் இருவரும் எங்களைப்போல் இருக்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறோம்.’

    எனக்குத் திருமணம் செய்யவேண்டும் என்று என் தாயார் அழகான கடிதமொன்றை எழுதினார்கள். நான் ஒரே வரியில் பதில் எழுதினேன்: ‘சரி; ஆனால் பெண்பெண்ணாய்ப் பார்க்கின்ற பேதைமையிலிருந்து என்னைக் காப்பாற்று.’ எனவே, நான் பெண்பார்க்கப் போவதில்லை என்று நிச்சயமாயிற்று. சில நாட்கள் கழித்து, என் தாயார், ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி, ‘இவளைத்தான் உனக்குப் பார்த்திருக்கிறோம். உன்முடிவு என்ன?’ என்று கேட்டிருந்தார்கள். கொஞ்சம் க்லாக்சோ பேபி போல், சேலையில் சிரமப்பட்டுத் தோற்றமளித்த அவளைப் பற்றி என்ன அபிப்பிராயம் சொல்லமுடியும்? வாழ்ந்து பார்த்தே புரிந்துகொள்ள முடியாதவர்கள்; அதிலும் பெண்கள்!

    மதுரையிலிருந்த நான், நேரே மீனாட்சி கோவிலுக்குச் சென்றேன். ஒரே சினிமாக்
    காட்சிதான் போங்க!

    காலை வைத்தவுடனேயே எல்லா மணிகளும் சேர்ந்தொலிக்க அடுக்கடுக்காய் தீபாராதனை. நான் கையில் ஒரு கவரோடு நின்றுகொண்டிருக்கிறேன். விறுவிறுவென்று வந்த அர்ச்சகர், வெடுக்கென்று கவரைப் பறித்துச் சென்று, அம்மனின் காலடியில் கிடத்தி, கற்பூரம் காட்டி, பெரிய மாலையைக் கழற்றி என்கழுத்தில் போட்டு, இலையில் ஏகப்பட்ட குங்குமத்தைக் கொடுத்து, கவரைத் திருப்பித்தந்து, ‘எல்லாம் நல்லது போடா,’ என்றாரே பர்க்கலாம்!!

    பிரமித்துப்போன நான், வெளியே வந்தபோது புரிந்துகொண்டேன். தாயாருக்குக் கடிதம் போட்டேன். ‘இவள்தான் என்மனைவி. நான் அவளைப் பார்க்கத் தேவையில்லை. அவள் பார்க்க விருப்பப்பட்டால் நடக்கட்டும்.’ அதன்படி, பிள்ளை பார்க்கும் படலம் (!) பெசண்ட் நகரில் அவள் பெரியம்மா வீட்டில் நடந்தது. பத்மா சுப்ரமண்யம் அவர்களும், அவர்களது அண்ணியாரும் வந்திருந்தார்கள். ( “நீ யாரையாவது பண்ணிண்டுடாதேடா! நாங்க வந்து பாக்கறோம்.”)

    அகன்ற நெற்றி; கொடுவாள் மீசை; பூஞ்சை உடம்பு; விலாவெலும்புகள் தெரிய ஒரு ஆரஞ்சு ஜிப்பா; பெரிய நெற்றியில் கூராகக் குங்குமம். ஏறத்தாழச் சம்பல் கொள்ளைக்காரன் போல் அந்த நாளில் (அந்த நாளிலும் என்கிறார் அப்பா!) தோற்றமளித்த நான் அவர்கள் வீட்டில் நுழையும்போது, ‘என்னடி இது! பொட்டெல்லாம் இட்டிண்டிருக்கான்!’ என்ற பலத்த முணுமுணுப்பும், ‘குங்குமப் பொட்டுக்காரா கோணக் கிராப்புக்காரா’ பாட்டும் என்காதில் விழத்தான் செய்தன!

    ஏதோ ஒரு பந்து பொத்தென்று காலில் விழுந்து தாவியது. அதுதான் பெண்ணென்றார்கள். பெண்வீட்டுக்காரர்கள் ‘ஓ! ஹிந்துஸ்தானியெல்லாம் பாடுவாளே!’ என்று கேட்காத கேள்விக்குப் பலத்த குரலில் பதில் சொல்லிவிட்டுப் பாடச் சொன்னார்கள். அவள் பாடினாள்.. கதவிடுக்கில்
    சிக்கிக்கொண்ட எலியும், கல்லறையிலிருந்து அப்போதுதான் எழுந்த அன்றலர்ந்த பேயுமான குரலைக் கேட்டுப் பீதியுற்று, நாற்காலியைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு நானும் என் நண்பன் சுப்புவும் ஒருவரையொருவர் முழிபிதுங்கப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒருவாறாய் விபரீதம்
    முடிந்ததும், அருமையான அல்வாவும், போண்டாவும் தந்தார்கள். இன்னொரு ரவுண்டுகூடப் பெண்பார்க்கலாமோ என்று தோன்றியது.

    ‘அவளோடு பேசவேண்டுமே’ என்றேன். ‘இங்கேயே பேசலாமே’ என்றார்கள் பெரியம்மா.
    ’என்னங்க இது, சினிமா ஷூட்டிங் மாதிரி ஆயிருமே’ என்றேன். என் தமிழ் அவர்களுக்குப் பிடிக்கவில்லையோ?! பத்மா சுப்ரமண்யம் அவர்கள், ‘நான் எங்காத்துக்குக் கூட்டிண்டு போறேனே,’ என்க அவர்களால் மறுக்க முடியவில்லை. காரில்தான் அவளுக்கு இந்தக் கவிதையைச் சொன்னேன்:

    பாதையிலே தொலைவில் கிடந்தேன்நான் பார்வை படாதபடி – ஒரு
    போதையிலே உடல்நெய்துவந்தாள் அவள் புன்னகை செய்தபடி – இன்ப
    வேதனையில் மனம் விம்மிநின்றேன் நான் வார்த்தை இழந்தபடி – ஒரு
    சாதனை செய்தது போல்பறந்தா ளவள் காற்றில் சிரித்தபடி..

    அவள் இவள்தானா? மனமே மனமே அவள் இவள்தானா?

    மல்லிகைப் பந்தல் சிலிர்த்தது போலென் மனத்தில் பனித்துளிகள் – நான்
    சொல்லெடுக்க அவள் ஸ்ருதியெடுக்க அங்கு சொர்க்கங்கள் தவமிருக்க
    தெள்ளிய நீர்மடுவே ஒரு தேமலர் வீழ்ந்து தெளும்புதல்போல் – என்
    உள்ளுணர்வூறிய கள்ளுறைக் கவிதையில் உண்மையெனத் தெரிந்தாள்

    அவள் இவள்தானா? மனமே மனமே அவள் இவள்தானா?

    அவளுக்குப் பிடித்தது உடனே தெரிந்தது.

    பத்தூக்காவின் நடன அரங்கு. மாடியில். பெரிய நிலைக் கண்ணாடி. என்னையும், அவளையும் விட்டுவிட்டு, ‘டேய்! உன்ன நம்பி விட்டுட்டுப் போறேண்டா!’ என்று கண்சிமிட்டிச் சென்றார்கள்.

    அவள்தான் அனுராதா. என் காதற் கண்ணம்மா. கவிதைக்குக் கிரியா ஊக்கி. கடுமையான விமரிசகர். ‘இல்லற வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளம் பரஸ்பர மரியாதைதான். ஒருவரையொருவர் அவரவர் வார்ப்பு எப்படியோ அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும். அதன்பின், பதியம்போடப்படும் நேசக்கொடிதான், நாளெல்லாம் நன்மலர்களாய்ப் பூத்துக் குலுங்கும்,’ என்பாள். இந்தக் காவல் தெய்வத்தோடு நான் கழித்த இந்த 26 ஆண்டுகளும் இனிமையானவை. பரிசாய் விளைந்தனர் இரட்டை மகன்கள்.

    இன்றுதான் திருமணமானதுபோல் இன்றும் இருக்கிறோம்.

    காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
    கடவுள்நிலை அவளாலே எய்தல் வேண்டும்

    என்ற பாரதி வாக்கின் பொருளை எனக்கு வாழ்வின் அனுபவமாய்த் தந்த என் மனையாளுக்கு வாழ்த்துச் சொல்லி, இதோ உங்களுக்கு அறிமுகம் செய்தேன்!

    (இதோ! இந்த மணநாளுக்கு அனுவுக்கு எழுதிய கவிதை!)

    ஆல வாயனின் கோயிலிலே

    அன்னை மீனாட்சி சந்நிதியில், ஒரு

    மாலை நேர மணியொலியில், உன்னை

    மனைவியாக்கினாள் மாதங்கி

    காலச் சக்கரச் சுழற்சியிலே

    கடந்தோம் பற்பல காதங்கள்

    சோலையும் பாலையும் சேர்ந்ததுதான்

    சுந்தர வாழ்க்கை ஆகியது!

     

    அருகே இருந்து விமர்சித்தாய்

    அருமைக் குழந்தைக ளைத்தந்தாய்

    கரிய பொழுதுகள் சூழ்கையிலும்

    கலங்கா தென்னோ டுடனிருந்தாய்

    குருவை உணர்ந்து கும்பிட்டாய்

    கூட்டுக்குள்ளே குடில்வளர்த்தாய்

    சிறிதும் பெரிதும் பார்த்துவிட்டாய்

    நிறைவை நெஞ்சில் சேர்த்துவிட்டாய்!

     

    பூவில் புயல்கள் சுழியோடும்

    புனலில் எரிமலை பொங்கிவரும்

    பாவனைகள் பல பந்தாடும்

    பாவலனை நீ கைபிடித்தாய், உன்

    தேவைகள் தீராதிருந்தாலும், நான்

    தெருவில் பாடித் திரிந்தாலும்

    ஆவலோ அன்போ எதனாலோ

    அகலா தென்னுடன் வாழ்கின்றாய்!!

     

    மனதில் குறைகள் எனக்கில்லை

    மறிக்கும் சிறைகள் உனக்கில்லை

    கனவாய் விரையும் வாழ்வினிலே, நாம்

    கவலைப் படவே வாய்ப்பில்லை

    இனிமேல் உன்திசை உனதெனவே

    இதயம் திறந்து சொல்கின்றேன்

    மனதுக் குகந்த வழியினிலே, நீ

    மலர்கள் கொய்து மகிழ்ந்திருப்பாய்!

     

    வாழ்வு முடிந்தது என் முன்னே, புது

    வாசல் திறந்தது கண்முன்னே

    ஊழ்வினை உடம்பைத் தொட்டாலும், உயிர்

    உயரே உயரே பறக்கிறது!

    தாழ்வும் உயர்வும் இல்லாமல், பரா

    சக்தியின் இச்சையில் தொடர்கின்றேன்

    சூழ்வன யாவும் அவள்விருப்பம், என நீ

    கொண்டால் வணங்கி மகிழ்கின்றேன்!

     

    ஆயிரம் பிறைகள் நீ காண்க!

    ஆரோக் கியமாய் நீ வாழ்க!

    வாயினில் இன்சொல் வளர்ந்திடுக!

    வழியில் வாய்மை துணைவருக!

    காயாய்ப் புளித்த கதையெல்லாம், உள்ளக்

    கனிவில் கனியாய் இனித்திடுக!

    போயுன் இலக்கில் பொருந்திக்கொள்! என்

    புண்ணியத்தையும் அருந்திக்கொள்!

    ரமணன்

    Share
  • நம்பிக்கை தரும் நாயகன்

    இசைக்கவி ரமணன்

    கதிரவனுக்குக் கற்பூரம் காட்டுவதுபோலத்தான், கங்கையில் ஒரு குவளை நீரை விடுவதுபோலத்தான், பகவான் ரமணரைப் பற்றி இந்தச் சிறுவன் பேச முயல்வதும்! மீன் நீந்துவது நதியை அளப்பதற்காகவா? சிறுகுருவி பறந்து திரிவது வானை அளக்கவா? இல்லை! பெற்ற பெருங்கருணையைக் கொண்டாட!

    ramana2

    அசையாத மாமலையாய், வடுவேதும் சுமக்காத வானமாய், இன்றும் வாழ்ந்து நம்மை வாழ்விக்கும் ரமணமுனியின் ஆழம் காண முடியாத மெளனத்தை, விளிம்பில் நின்று வியந்து பார்த்தும், மருண்டும் நிற்கின்றேன். புரியவில்லை; அறவே புரியாமலும் இல்லை. எது எப்படியோ, விலக முடியவில்லை! ஏதோ ஒன்று உயிரின் பிடரியைக் கவ்விக்கொண்டுவிட்டதாக உணர்கிறேன். நம்மை முற்றும் முடிக்கும்வரை அது ஓயாது என்றே நம்புகிறேன். அந்த நம்பிக்கையால் எழுந்தது ஒரு சிறுபிள்ளைத்தனமான ஆனந்தம். அது, உள்ளே மெளனமாகவும் வெளியே வார்த்தைகளாகவும் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.

    இதுதான் என் ரமண அனுபவம்! எது தொடர்ந்து இருக்குமோ அதைத்தான் அனுபவம் என்று கொள்ளவேண்டும் என்பது நமக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அறிவுரை. எனவேதான், இதை என் அனுபவம் என்கிறேன். முதலில்,

    1. நாம் எதற்காக ரமணரைப் பற்றிப் பேசவேண்டும்? அதனால் நமக்கு என்ன பயன்?

    நாம் மனிதர்கள். அவர் மாமனிதர். ஒவ்வொரு மனிதனும் மாமனிதனாகலாம். ஆனால், அதற்கு முன்பு, அவன் முழுமையான மனிதனாக ஆகவேண்டும். மகான்களைப் பற்றிப் படிப்பது, பேசுவது, கேட்பது இவற்றின் மூலம், அவர்கள் அடைந்த நிலை நமக்குத் தெரியவரும். நாம் அடையாத நிலை நமக்குப் புரியவரும். அதை எப்படி அடைவது என்ற கேள்வி தோன்றி அதுவே பாதையை வகுக்கும்.

    பொதுவாக மகான்களின் நிலை என்பது என்ன? அமைதி, ஆனந்தம், அன்பு, அறிவு, எளிமை, ஒழுக்கம், நிறைவு, தெளிவு, இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அறிய அறிய நெடுகத் தொடர்ந்து வளர்வதே பெரியோர் பெருமை. சொல்லிச் சொல்லித் தீர்வதில்லை சோதியின் பெருமை. சொல்லாமல் மெளனத்திலே காண்பதே அருமை.

    அறியாமை என்னும் இருட்டிலிருந்து, மலினக் குப்பைக் கூளத்திலிருந்து நம்மை மீட்டு நாம் மேன்மையுற வழிவகுப்பதே மகான்களைப் பற்றி நாம் பேசுவதாலும், கேட்பதாலும், படிப்பதாலும் விளையும் பயன்.

    ஓர் ஊரைப்பற்றிய விவரங்களைக் கேட்டால் நமக்கும் அந்த ஊரைச் சென்றுபார்க்கவேண்டும் என்று தோன்றுகின்றதல்லவா? அப்படித்தான் இதுவும்!

    2. ரமணர் மகான். நாம் சாதாரண மனிதர்கள். அவர் ஞானி. நாம் அஞ்ஞானிகள். அவர் எங்கே நாம் எங்கே?

    ரமணர் மகான் என்பதிலும் நாம் சாதாரண மனிதர்கள் என்பதிலும் அவர் ஞானி என்பதிலும் நாம் அஞ்ஞானிகள் என்பதிலும்images (1) ஐயமில்லை. உண்மைதான். ஆனால், அவர் எங்கே நாம் எங்கே என்ற கேள்விக்கு என்ன பதில் தெரியுமா? நாம் எங்கே அவர் அங்கே என்பதுதான்! நோயுற்று, உடல் இற்று, உயிர்மட்டும் மிஞ்சியிருந்த வேளையில் அவர்முன்பு நின்று, `ஐயா! எங்களை விட்டுவிட்டுச் சென்றுவிடாதீர்கள்!,` என்று அடியார்கள் விம்மி அழுது நின்றார்கள். அப்போது ஒரே வாக்கியத்தைத்தானே திரும்பத் திரும்பச் சொன்னார்? `நான் எங்கே போகமுடியும்?`

    இங்கிருக்கும்போதே அங்குமிருக்க அறிந்தவர்கள் இங்கு, அங்கு என்னும் பேதங்கள் தீர்ந்து எங்குமுள்ள பரம்பொருளாகவே திகழ்கிறார்கள். நாம் எங்கும் இல்லை. அவர்கள் எங்கே இல்லை? ரமணர் இன்றும் இருப்பதால்தான் நாம் அவரைப் பற்றிப் பேசுகிறோம். நாம் அவரை நினைவுகூரவில்லை! அவர் சன்னிதியில்தான் நின்று நெகிழ்ந்துகொண்டிருக்கிறோம்!

    ஆம், நாம் எங்கிருந்தாலும் நாம் அணுகி அருளைப் பெற்றுக்கொள்ளும் வண்ணம், அவர் எங்குமிருக்கிறார். நாம் எப்படி இருந்தாலும் நமக்குப் பொருந்தும் வண்ணம் எல்லாமாகவும் இருக்கிறார். தொடர்ந்து துணையாக வரும்விதம், அவர் நம் உயிரின் உறவாக இருக்கிறார்.

    ரமணர் தனது தந்தையைப் பத்து வயதில் இழக்கிறார். அந்த மரணமோ, தாய், சகோதரர்கள் இவர்களுடைய அழுகையோ அவரிடம் அச்சத்தை ஏற்படுத்தவில்லை; ஆலோசனையைத்தான் தூண்டிவிட்டது. சிதையில் தந்தை எரிந்து சாம்பலானபின், `என்னில் இருக்கும் `நான்` அப்படியே இருக்கிறது; என் தந்தையில் இருந்த `நான்` உடலை நீங்கிவிட்டது,` என்றொரு முடிவுக்கு வருகிறார். தனது 16 ஆவது வயதில் மதுரையில், அந்தத் தெற்கு வாசல் அருகிலுள்ள வீட்டின் மாடியில் தன்னை முடித்துக்கொண்டார். மரண பயத்தை முகமனாக வைத்துக்கொண்டு, அவர் அகண்ட பரிபூரண நிலை எய்தியது ஒப்பற்ற ஆச்சரியம்தான். அதன்பிறகு, அவர் அறியவேண்டிய சேதியோ, பெறவேண்டிய அனுபவமோ எதுவும் இல்லை. இதற்குப் பிறகுதான் அவர் திருவண்ணாமலை செல்கிறார். 1896 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி மதுரையில் மரண அனுபவம். வீட்டை விட்டு வெளியேறியது ஆகஸ்டு 29. அவர் திருவண்ணாமலையில் கால்வைத்தது செப்டம்பர் 1. இடையில் கடந்தது 48 நாட்கள். ஆனால், அவர் பெற்ற மகத்தான அனுபவம், யாருக்கும் தெரியவில்லை! இது ரகசியமில்லை; பணிவு! நாகரிகத்தின் உச்சம்!

    இனி அடையவேண்டியது ஒன்றுமே இல்லை என்னும் பெருநிலையை அடைந்த ரமணரை, 53 வருடங்கள் திருவண்ணாமலையில் நீங்காமல் இருக்கவைத்தது, அவருடைய தேகத்திற்கான பிராரப்தமா? நாம் அனுபவிக்கும் விதியா? இல்லை! இறையின் திருவுள்ளம்! தெய்விகக் கருணையின் நிச்சயம்! எதற்கு? அவர் அடைந்த நிலையை நாமும் அடைவதன் மூலமே நமது துன்பங்கள் தீரும் என்று காட்ட. அதற்கான எளிய, நேரடியான, நாமே பயின்றுகொள்ளக் கூடிய வழிமுறையை நமக்குக் காட்ட. எல்லாம் அடைந்த பிறகும், எளியார்க்கு எளியராய், மிக மேன்மையான வாழ்வை வாழ்ந்துகாட்ட!

    இது நமக்குச் சாத்தியமில்லை என்றால் ரமணரின் தேகம் மதுரையில் அவருடைய 17 ஆம் வயதிலேயே விழுந்திருக்கும். இன்று அவரைப்பற்றிப் பேச நமக்கு எந்தக் குறிப்பும் இருந்திருக்காது. தான் அடைந்த உன்னதமான நிலையை அனைவரும் அடைய முடியும் என்று முழுக்க முழுக்க நம்புவதும், அடையவேண்டும் என்று விரும்புவதும், அடைய வழிசொல்வதுமே மகானின் தலையாய குணங்களாகும்.

    3. ஒரு மகான் எதை விட்டுச் செல்கிறார்?

    நடக்கப் பாதை (நான் யார் விசாரணை, சரணாகதி)
    நல்லுரைகள் (கதைகள், உதாரணங்கள், விளக்கங்கள், அவரவர்க்கேற்ற அறிவுரைகள்)
    தவம்
    தன்னுதாரணம் (எளிமை, எதற்கும் கிளர்ச்சியுறாதிருத்தல், இறுதிவரை அனைவரும் சந்திக்க ஏதுவாய் இருந்தது, ஒவ்வொரு நொடியும் ஊராரின் கண்முன்னே கழிந்தது)

    4. ரமணர் யோகியா, ஞானியா, பக்தரா?

    எப்படிச் சொல்ல? எல்லாம்தான். எதுவுமில்லைதான். இரண்டும் உண்மைதான்! வெட்டவெளியை வானமெனலாம், இடமெனலாம், பரப்பு எனலாம், ஆதாரம் எனலாம். வண்ணம் மேற்கொண்டால் வானம். பூமி சுழலவும் அதில் நாம் நிற்கவும் அனுமதித்தால் இடம், எங்கும் இருப்பதால் பரப்பு. சொல்லிக்கொண்டே போகலாம்; அதுவும் விரிந்துகொண்டே போகும்!

    அவர் ஞானிதான். எதனால்?rama

    எதையும் தனக்கு அயலாக அவர் காணவில்லை
    எவரிடத்திலும், எதனிடத்திலும் எந்த எதிர்பார்ப்பும் அவருக்கு இருந்ததில்லை
    ஏற்ற இறக்கங்களோ, மாற்றங்கள் வளர்ச்சிகளோ அவரிடம் காணப்படவில்லை
    அத்யாச்ரமி என்னும் துறவின் பரிபூரண நிலையை ஊரறிய அடைந்தவர் அவர்

    எல்லாவற்றுக்கும் மேலாக, ஞானிக்கு, தான் ஞானி என்னும் அபிப்பிராயம் கிடையாது.

    அகண்டமான பேருணர்வே தன்னுடைய இயல்பாக இருந்தார். அதே சமயம், நடைபெறுவன அனைத்தையும் அறிந்தே இருந்தார்.

    பாதாள லிங்க அறையில் தேகத்தைப் பூச்சிகள் அரித்தபடி இருக்கத் தான் அசையாமல் இருந்தது
    இரண்டரை வருட காலம் அசையாமல் இருந்தது
    தன்னை அடித்த திருடர்களை உணவருந்திவிட்டுச் செல்லுங்கள், இன்னும் என்ன வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள் என்றது
    தானாய் எந்தப் பிரசங்கமும் செய்ததில்லை. ஆனால் 30,000 ஐயப்பாடுகளுக்கு அவர் விடை பகர்ந்திருக்கிறார்
    இறுதிவரை அவருடைய மெளனம் சற்றும் கலையாமலேயே எல்லாம் செய்திருக்கிறார்

    அவர் யோகிதான். எதனால்?

    அவருடைய மரண அனுபவமும் ஞானம் சார்ந்த யோக அனுபவம்தான். யோகம்தான் ஞானத்தைத் தொடரவேண்டும் என்னும் வாசகத்திற்கு அவர் நிதர்சனமான நிரூபணம்
    திருவண்ணாமலைக்கு வந்த புதிதில், அவர் உட்கார்ந்தது ஓரிடம், எழுந்தது ஓரிடம் என்றிருந்திருக்கிறார். அது மிக நுண்மையான யோக அனுபவம்
    ஆமைப்பாறையில் நடந்த இரண்டாவது மரண அனுபவமும் யோகம்தான்
    நட்ட நடுப்பகல். மொட்டைப் பாறை. உச்சிக் கதிரவனைக் கண்ணிமைக்காமல் உற்றுப் பார்த்தபடி அவர் இருந்திருக்கிறார்

    அவர் பக்தர்தான். எதனால்?

    திருவண்ணாமலைப் பரதேசிகள் கடைசிப் பந்தியில் உணவருந்தவும் என்றதும், பிச்சைக்காரர்களோடு அமர்ந்துகொண்டது
    கோயில் பிரசாதங்களைப் பணிவோடு ஏற்றுக்கொண்டது
    சில நேரங்களில் கண் கலங்கியதும் உண்டு
    அக்‌ஷரமணமாலை போன்ற இறையருள் இறைஞ்சும் பாடல்கள் புனைந்தார்

    பக்தி இன்றேல் ஞானம் கனிவதில்லை, யோகம் வசமாவதில்லை என்று சுட்டிக்காட்டினார். அவருடைய பக்தி என்பது பரிபூரண சரணாகதியே என்பதை நாம் என்றும் நினைவில் கொள்ளவேண்டும்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் எளிய மனிதராக, ஏழைப் பங்காளனாகத்தான் விளங்கினார். கீரைப்பாட்டி, எச்சம்மாள், மாடுமேய்க்கும் பூவன், கோலி விளையாடும் சின்னக் குழந்தைகள் என்று அவருக்குத்தான் எத்தனை நண்பர்கள்!

    அதுபோல், எல்லா உயிர்களிடத்தும் ஒரேபோல் அன்பு செலுத்தியவர். எனக்குத் தெரிந்து குரங்குக்குப் பிரசவம் பார்த்தவரை நான் கேள்விப்பட்டதில்லை! பெற்ற குட்டியைத் தாய்க்குரங்கு வந்து காண்பித்துப் போன கதையையும் நான் வேறெங்கும் கேள்விப்பட்டதில்லை!

    5. எல்லாம் சரி. ஆனால், ரமணர் நமக்கு விடையைச் சொல்லவில்லையே! கேள்வியைத்தானே நமக்கு விட்டுச்சென்றிருக்கிறார்?

    நாம் வினாக்களால் அல்லற்படுகிறோம். அவை நம்மைத் துளைத்தெடுக்கின்றன — சின்னக் குழந்தைகளின் சள்ளையைப்போல், மேலதிகாரிகளின் துரத்தல்போல், காவற்துறை விசாரணைபோல்! அந்த வினாக்களை நாம் சுமக்கிறோம். நமக்கு விடைகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன. கிடைக்கின்றன. அவற்றின்மூலம் புதிய வினாக்கள் கிளைக்கின்றன. இறுதியில், வினாக்களைப் போலவே விடைகளும் சுமைகளாகின்றன. அனுபவங்கள் அயர்ச்சியைத் தருகின்றனவேயன்றி, ஆனந்தம் தருவதில்லை. அறிவுரைகள் எரிச்சலூட்டுகின்றன. நெறிமுறைகளில் பிடிப்பில்லை. வழிமுறைகள் சலிப்பூட்டுகின்றன. எதிலும் ஐயங்கள் எழுகின்றன.

    ஆனால், ரமணர் ஒற்றைக் கேள்வியை எழுப்பி, இதுவரை கற்றை விரித்து நம்மைக் களைப்படைய வைத்த அத்தனைக் கேள்விகளையும் அதனுள் அடக்குகிறார். அதை நம்மை, நாமே, நமக்குள் எழுப்பச் சொல்கிறார். செய்கிறார். இதுதான் அவர் நமக்குச் செய்யும் சேவை.

    நான் யார் என்பதோ விடையற்ற கேள்வி. எந்த விடைகளாலும் அடங்காத கேள்வி. எந்தத் திசைதிருப்பும் முயற்சிகளுக்கும் மசியாத கேள்வி. எந்த மிரட்டல்களுக்கும் பணியாத கேள்வி. இதை நாம்தான் எழுப்புகிறோம். இது வெளியே கேட்கப்படுவதில்லை. இது மனம் என்னும் தளத்தில்தான் எழுகிறது. இந்தக் கேள்விக்கு எந்த பதிலையும் ஏற்க மறுக்கும் மனம், இறுதியில் இந்தக் கேள்வியில் ஒடுங்குகிறது. கேள்வி நம்மில் ஒடுங்குகிறது. மனமும் இன்றி, கேள்வியும் இன்றி நாம் மட்டும் மிஞ்சுகிறோம்.

    இதுவே முடிவு. இதுவே இதற்குமேல் இன்னொன்றில்லாத அனுபவம். இதை நாம் பெறவேண்டும் என்னும் கருணையால்தான், எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அதை இந்தக் கேள்வியாக்கி அதை நம்மை நோக்கித் திருப்பிவிடுகிறார் ரமணமுனி. பண்டிதரிலிருந்து பாமரர்வரை, வெளிநாட்டவரிலிருந்து உள்நாட்டு கிராமவாசிவரை, பெரும் செல்வந்தரிலிருந்து பரம ஏழைவரை, எல்லோர்க்கும் அவர் இதையேதான் இன்றைக்கும் செய்து வருகிறார்.

    அதுதான் `நான் யார்?` என்னும் கேள்வி. கேள்வி என்று சொல்வதைவிட, விசாரணை என்று சொல்வதே பொருந்தும். பதிலைத் தேடுவது கேள்வி. உண்மையைத் தேடுவது விசாரணை. வினா, விடைகளால் திசைதவறும், விசாரணையோ, நூல்பிடித்தாற்போல் விழைகின்ற உண்மையைவிட்டுக் கண்ணை எடுக்காது!

    6. சரி, நான் யார் என்னும் விசாரணை எதற்கு?

    `தன்னை அறியாமல் அனைத்தையும் அறியத் தலைப்படுதல் அறியாமையன்றோ! தானன்றோ (ஆன்மா) அனைத்தறிவின் மூலம்!` என்பார் ரமணர்.

    துன்பம் வந்து குறுக்கிடாத இன்பத்தை, தொடர்ந்த இன்பத்தை, நிரந்தரமான இன்பத்தைத்தான் ஒவ்வொரு ஜீவராசியும் விழைகிறது. உயிரினங்கள் இன்பத்தை, அறியாமலேயே விழைகின்றன. மனிதன், அறிந்தே விரும்புகின்றான். விலங்குக்குத் தான் விலங்கு என்று தெரியாது. மனிதனுக்கு, தான் மனிதன் என்பதும், அது விலங்கு என்பதும் தெரியும். எனவேதான் அவன் மற்ற உயிரினங்களை வகைப்படுத்தியதுபோல, அனுபவங்களையும் இது இன்பம் அது துன்பம் என்று வகைபிரித்து வாழுகிறான், இன்பம் ஒன்றையே நாடுகிறான்.

    எந்தச் செயலும் புரியாமல், தொடர்ந்து இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமுமாகும்.

    7. மனிதன் ஏன் இன்பத்தை விழைகிறான்?

    ஒவ்வொரு மனிதனும் தன்னை மிகவும் நேசிக்கிறான், அதனால்தான்!

    8. மனிதன் ஏன் தன்னை மிகவும் நேசிக்கிறான்?

    இன்பமே ஒவ்வொரு மனிதனின் இயல்பு. அதனால்தான் மனிதன் தன்னை நேசிக்கிறான்! அந்த இன்பம் அவனுள்ளேயே இருக்கிறது. அது தெரியாததால்தான் அவன் அதை வெளியே தேடுகிறான், பொருள்களில் நாடுகிறான். அனுபவங்களை வேண்டுகிறான். அந்த இன்பத்தைத் தன்னுள் தேடுபவன் தன்னில் ஒடுங்கித் தணிகிறான். வெளியே தேடுபவன் தடுமாறி விழிக்கிறான்.

    “திருடனும் அரகரா சிவசிவா என்றுதான் திருநீறு பூசுகின்றான்

    சீட்டாடும் மனிதனும் தெய்வத்தின் பேர்சொல்லி சீட்டைப் புரட்டுகின்றான்
    முரடனும் அரிவாளில் காரியம் பார்த்தபின் முதல்வனை வணங்குகின்றான்
    முச்சந்தி மங்கையும் முக்காடு நீக்கையில் முதல்வனைக் கூவுகின்றாள்
    வருடுவார் கைக்கெலாம் வளைகின்ற தெய்வம்-என் வாழ்க்கையைக் காக்கவிலையே
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தாலாட்டிடும் மதுரைமீனாட்சி உமையே”

    என்னும் கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இதை மிகச் சரியாகச் சித்திரிக்கின்றன.

    தேடுவது இன்பம். நாடுவது வெளியே. கூடுவது துன்பம். குறையெங்கே?

    9. இன்பம் என் இயல்பென்றால், அது என் உள்ளேயே இருக்கிறது என்றால், அது எனக்கெப்படித் தெரியாமல் போகும்?

    தெரியாமலில்லை; புரியாமலிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னியல்பான இந்த இன்பத்தை ஒவ்வொரு நாளும் உறக்கத்தில் அனுபவிக்கிறான். சுகமான தூக்கத்தை விரும்பாதவர்கள் உண்டா? அதற்குத்தான் எத்தனை ஏற்பாடு என்பார் ரமணர். அதை அவர் குறையாகக் கருதவில்லை. தானறியாமலேயே தன்னுடைய சுயமான இயல்பை ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்க விரும்புவது தூக்கத்தில்தான். ஆனால் `தூங்கியது` `விழித்தால்தான்` புரிகிறது. ஏதோ ஒன்று, தூக்கத்தில் நாம் அறியாமல் அனுபவித்த இன்பத்தைப் பதிவுசெய்து வைக்கிறது. அதுதான், காலை எழுந்தவுடன், `சுகமாகத் தூங்கினேன்` என்று நம்மைச் சொல்லவைக்கிறது. விழித்தவுடன் அந்த சுகம் விலகிவிடுகிறது. தூக்கத்தில் ஆளைக் காணோம்; காலையில் அமைதியைக் காணோம்!

    தூக்கத்தில் தான் அனுபவித்த இனம்புரியாத இன்பம், விழித்தவுடன், நினைவுறுத்திக்கொள்ள முடியாத ஞாபகமாகிறது. அதனால்தான் மனிதன், உள்ளே இருக்கும் இன்பத்தை வெளியே தேடத் தலைப்படுகிறான். ஆனால், விழிப்புற்றவர்கள், உறக்கத்தில் துலங்கும் இன்பத்தின் மர்மத்தை விழிப்பிலேயே தேடுகிறார்கள்:

    ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்images

    தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவதெக்காலம்?

    வேடிக்கையும் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்

    வாடிக்கை எல்லாம் மறந்திருப்பதெக்காலம்?

    நான் அவனாய்க் காண்பதெல்லாம் ஞானவிழியால் அறிந்து

    தான் அவனாய் நின்று சரணடைவதெக்காலம்?

    நான்நின்ற பாசமதில் நான் இருந்து மாளாமல்

    நீநின்ற கோலமதில் நிரவிநிற்பதெக்காலம்?

    உதயச் சுடர் மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி

    இதயத் திருநடனம் இனிக் காண்பதெக்காலம்?

    பற்றற்று நீரில் படர்தாமரை இலைபோல்

    சுற்றத்தை நீக்கி மனம் தூரநிற்பதெக்காலம்?

    என்று பாடுகிறார் பர்த்திரகிரியார்.

    இந்த இன்பமானது, நமக்குள்ளேயே இருப்பதால், இதை எப்போது வேண்டுமானாலும் நாம் அனுபவிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த உண்மை நிலை, அதற்காக ஏங்கும் ஏக்கம் இரண்டையும் சேர்த்து,

    இன்றுவருமோ நாளைக் கேவருமோ அல்லதுமற்vallalar

    றென்றுவருமோஅறியேன் எங்கோவே-துன்றுமல

    வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து

    சும்மா இருக்கும் சுகம்.

    என்று பாடுகிறார் வள்ளலார்.

    கதவைத் தட்டிப் பலபேர் உரக்க அழைத்தாலும், கட்டோடு தூக்கிக்கொண்டுபோய் நையப் புடைத்தாலும், கலையாத தூக்கம் ரமணருடையது என்று அவர் வாயிலாகவே அறிகிறோம். உறக்கத்தின் சுகம், மரண பயத்தில் எழுந்த நான் யார் என்னும் விசாரணையால், விழிப்பு நிலையிலும் வியாபித்து நிலைத்துவிட்டதே ரமணரின் அனுபவம்.

    10. உறக்கத்தில் இருக்கும் நிம்மதி, சுகம், அமைதி ஆகிய என்னியல்பு விழித்தவுடன் ஏன் மறைந்துபோகிறது?

    தேகாத்ம பாவனையால் விளைந்த தேகாபிமானம்தான். ஆன்மா, உடலெடுக்கும்போது அங்கே அகங்காரம், அல்லது ஆணவம் என்னும் தன்னுணர்வு தோன்றி அது தேகமெங்கும் வியாபித்து, தானே தேகம் என்று கருதிக்கொள்கிறது. இதுவே அனைத்துக் குழப்பங்களுக்கும் ஆதி.

    `வடிவத்தைப் (தேகம்) பற்றிக்கொண்டே வடிவமில்லாத ஆணவம் என்னும் பேய் வந்துசேர்கிறது. Spurious offshoot. வடிவத்தைப் பற்றிக்கொண்டே தொடர்கிறது. வடிவத்தைப் பற்றிக்கொண்டே அனைத்தையும் அனுபவிக்கிறது. ஒரு வடிவத்தை விட்டால் இன்னொரு வடிவத்தைப் பற்றிக்கொள்கிறது. அதை யாரென்று விசாரித்தால் ஓட்டமெடுக்கிறது,` என்று ரமணரின் உள்ளது நாற்பது சொல்லும்.

    உறக்கத்தில் இருந்து விழித்தவுடன், சுகம் மறைந்து உலகமும், பொருள்களும், நினைவுத் தொடர்புகளும் அலையலையாகத் தோன்றுவதற்குக் காரணம் இந்த அகங்காரம், அதாவது நான் அல்லது நான் தேகம் என்னும் உணர்வுதான். `ஆணவம் இருந்தால் எல்லாம் இருக்கும். ஆணவம் அகன்றால் எதுவும் இருக்காது. அதை விசாரிக்க, தோற்றங்கள் நீங்கும்.` என்கிறார் பகவான்.

    எனவே, உறக்கத்தில் அறியாமல் அனுபவித்த இன்பத்தை, விழிப்பில் அறிந்து அனுபவிக்கத்தானே நாம் அனைவரும் விழைகிறோம்? அது, தான் யார் என்று தெரிந்துகொள்வதன் மூலமே சாத்தியமாகும். அதற்கு, `நான் யார்?` என்னும் விசாரணையே சிறந்த வழி.

    11. இந்த விசாரணையை யார் நடத்துவது, தேகமா, மனமா?

    தேகத்திற்குத் தான் தேகம் என்ற உணர்வில்லை. தேகாபிமானம் என்பது மனத்தின் வேலைதான். மனம்தான், அறிவு, செயல்கள் இவற்றுக்கு அடிப்படை. மனம்தான் நாம் உலகைக் காண்பதற்கு, அதாவது எதையும் நமக்கு அயலாகப் பார்ப்பதற்குக் காரணம். மனம் தணிந்தால்தான், புற உலகம் என்று ஒன்று தனியே இயங்குகின்றது என்னும் கருத்து நீங்கும். அது விலகாமல் ஆன்மா விளங்காது. ஆன்மாவின் உண்மை விளங்கினால், உலகம் என்ற தனியான தோற்றம் நேராது.

    மனம் என்பது ஆன்மாவில் விளங்கும் ஓர் அதிசய சக்தி. அதன்மூலம்தான் நமக்கு எண்ணங்கள் தோன்றுகின்றன. எண்ணங்கள் அனைத்தையும் விலக்கிப்பார்த்தால், எண்ணமல்லால் மனம் என்று ஒன்று தனியாக இல்லை என்பது தெரியவரும்.

    `நான் யார்?` விசாரணை மூலமே மனம் தணிந்து ஆன்மாவில் ஒடுங்குகிறது.

    12. நான் யார் என்பது என்ன?

    மந்திரமில்லை. தந்திரமில்லை. சூத்திரமில்லை. சாத்திரமில்லை. அடிப்படைக் கேள்வி! ஒருவர் நம்மிடம் வந்து நீ யார் என்று கேட்டால் பெயரைச் சொல்கிறோம்; பெற்ற பட்டத்தைச் சொல்கிறோம்; வேலையில் இருக்கும் பதவியைச் சொல்கிறோம். இந்த அடையாளங்களா நாம்? இதில் எதுவுமே நாம் பிறப்பதற்கு முன்னே இருக்கவில்லை. பிறந்த உடனேயும் தோன்றவில்லை. ஆனால் அப்போதும் நாம் இருந்தோம் அல்லவா? எனில் நாம் யார் என்பதே ரமணரின் கேள்வி.

    எங்கிருந்து வந்தேன்? எங்கே செல்லப் போகிறேன்? இந்தப் படைப்பு ஏன்? இந்தப் பிறவி எதற்கு? என்பன போன்ற வினாக்களை அடிப்படைக் கேள்விகள் என்கிறார்கள். ஆனால் இந்தக் கேள்விகளெல்லாம் எழுவது யாருக்கு? நமக்கு! எனில் நாம் யார்? அதைத் தெரிந்துகொள்ளாமல், இந்தக் கேள்விகளுக்கு எப்படி விடைகாண முடியும்? ஆனால், நாம் யார் என்று தெரிந்துகொண்டால் இந்தக் கேள்விகளே எழாது, அதாவது அவற்றுக்குத் தேவையே இருக்காது என்பதே பகவானின் உபதேசம்.

    பண்டிதர்களானாலும், பணம்படைத்தோரானாலும், பலமுள்ளோரானாலும், பதவிகள் பல வகிப்போரானாலும், பற்பல திறமைகள் கொண்டோரானாலும், பார்ப்பதற்குப் பேரழகு வாய்த்தவர்களானாலும், பண்பாளர்களேயானாலும், இந்தக் கேள்வி யாருக்கு எழவில்லையோ அவர்கள் பாமரர்களே.

    இந்த அடிப்படைக் கேள்வி யாருக்கு எழுகிறதோ அவர்களே ஆன்மிக ஆர்வலர்கள். அவர்களே பாதையைக் கண்டுகொண்டவர்கள்.

    இந்தக் கேள்வி யாருக்கு முழுதுமாய் எழுந்து முற்றாகத் தீர்ந்ததோ அவர்களே இறுதி இலக்கை அடைந்த ஞானிகள்.

    இந்தக் கேள்வி பாமரருக்கும் கிடையாது, பகவானுக்கும் கிடையாது என்பது அவர்களிடையே இருக்கும் சம்பந்தமில்லாத ஒற்றுமை. Irrelevant similarity. நின்றுபோன கடிகாரம்கூட ஒரு நாளைக்கு இருமுறை சரியான நேரம் காட்டும் என்பது போலத்தான்!

    13. சரி, ஆனால் மனமே தேகாபிமானத்திற்கும், எல்லாத் தோற்றங்களுக்கும் காரணம் என்றால், இந்த மனமும் பொய்யென்றால் இந்தப் பொய்யான மனதில் எழும் நான் யார் விசாரணை எப்படி மெய்யுணர்வில் கொண்டு சேர்க்கும்?

    வினையழியத் தேவை வினை; அதுபோல் பொய்மை

    மனமழியத் தேவை மனம்.

    தீயணைக்கத் தீவைப்பார் திக்கறிந்த நுண்ணியர்

    மாயைக்கு மாயை மருந்து.

    விசாரணை, மனத்தில்தான் துவங்குகிறது என்பது உண்மை. மனதின் ஒருபகுதிதான் அதற்குப் பயன்படுகிறது என்பது உண்மை. ஒரு வகுப்பறையில் பல மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவனை `லீடர்` என்று தேர்ந்தெடுக்கிறார்கள், அது போல. மரத்தில் ஆடும் ஊஞ்சல் மரப்பலகையில் ஆனதே! உரத்தில் வளர்ந்த செடியில் பூத்த மலர் உதிர்ந்து உரமாகிறதே!

    எண்ணங்கள் என்பவை இடையறாது முளைத்துக்கொண்டே இருப்பவைதான். தியானம் என்று உட்கார்ந்தால் எப்படி ஊரிலிருக்கும் கொசுக்கள் யாவும் நம் மூக்கு நுனியை நோக்கிப் படையெடுக்குமோ, அப்படித்தான் எண்ணங்களும்! தேனடையில் கல்லெறிந்ததுபோல, புற்று அதிர்ந்து புறப்படும் ஈசற் படைகள்போல எண்ணங்கள் நில்லாமல் வந்தவண்ணம்தான் இருக்கின்றன. இந்த சஞ்சலத்தைத்தான், சலிப்பைத்தான், ஓயாத சலனத்தைத்தான் மனம் என்கிறோம்.

    ஆன்மா, வீடு. மனம், கதவு. கதவு வீடில்லை; வீட்டிற்கு அந்நியமுமில்லை. ஆழக் கடலில் அமைதி. மேலே அலைகளின் சலனம். அலைவேறு கடல்வேறு என்று தோன்றினாலும் அலைகள் எழுவதும் விழுவதும் கடலில்தானே? விளக்கும் வெளிச்சமும் ஒன்றா வேறா? திருக்கோயிற் கதவுகள் நேர்க்கோட்டில்தான் இருக்கின்றன. எங்கிருந்தும் சன்னிதியை தரிசிக்கலாம். திரும்பவேண்டும். இதுவே பதஞ்சலி பேசும் சித்த விருத்தி நிரோதம். அதை அடையும் மார்க்கமே ரமணரின் நான் யார் விசாரணை.

    எனவே, எண்ணங்களை இடையூறாகக் கருதாமல் நல்வாய்ப்பாகக் கொள்ளலாம். எப்படி? இடையின்றி எண்ணங்களால் பந்தாடப்படுகிறவர்கள்தானே நாம்? இன்றுதானே அவற்றைக் கவனிக்கத் துவங்கியுள்ளோம்? கவனிக்க கவனிக்க அவை வெளியே வரும். ஆம், பகவான் சொல்கிறார்: `உள்ளிருப்பதுதானே வெளியே வரும்? வெளியே வராமல் எப்படி வெட்டுவது? எண்ணங்கள் தன்னிச்சையாய் எழுவது, அவை தீர்வதற்கே! எனவே, விசாரிக்கும் மனத்திற்கு அவை வலிமையே சேர்க்கும்.`

    பகவான் இதனை வெகு எளிமையாகவே சொல்லியிருக்கிறார்: `துவக்கத்தில் அறிவு என்பது புத்திபூர்வமானதே. ஆனால், இடைவிடாத தியானத்தின் மூலம், ஒருவன், தனது புத்தி என்பது ஒரு மகத்தான சக்தியால் வழிநடத்தப்படுகிறது என்று உணர்ந்துகொள்கிறான். ஆசைகள் எதுவும் இல்லாதிருப்பதே மோக்‌ஷம். பின்பு இருமை என்பது கிடையாது.`

    14. நான் யார் விசாரணையின் சுருக்கம் என்ன?

    முதலில் எண்ணம் தோன்றும்
    அது எப்படிப்பட்டதாக இருந்தாலும், அதைப்பற்றி அபிப்பிராயமோ அக்கறையோ கொள்ளாமல், அது எழுந்தது யாருக்கு என்று விசாரிக்க வேண்டும்
    எனக்கு என்று பதில்வரும்
    எனக்கு என்றால் நான் யார் என்று விசாரிக்கவேண்டும்
    இந்த வழிமுறையை ஒவ்வோர் எண்ணம் தோன்றும்போதும் கடைபிடிக்கவேண்டும்

    இது எண்ணங்களை திசைதிருப்பாது. மனதை உள்முகப்படுத்தும்.

    இடைவிடாமல் அப்பியசித்தால், எல்லா எண்ணங்களுக்கும் மூலம், நான் என்னும் உணர்வே என்பது தெரியவரும். அந்த உணர்வில் நீங்காமல் நின்றால், அது நீங்கி நான் தானாகி, தானே அனைத்துமாகி விகசிக்கும். அதுவே முடிவு.

    15. ஆனால், நான் யார் என்னும் விசாரணையிலும் நான் என்னும் உணர்வுதானே இருக்கிறது?

    மனத்தைப் பற்றிச் சொன்னது இதற்கு முற்றும் பொருந்தும். ஏனெனில், மனம்தான் அந்த அகங்காரமாகிய நான். தன்மை இருந்தால், முன்னிலை, படர்க்கைகள் தோன்றத்தான் செய்யும். நான் என்று ஒன்றிருந்தால், நீ, நீங்கள், அவன், அவள், அவர்கள், அவை என்று தொடரத்தான் செய்யும். தன்மையின் (நான்) நிஜம் என்னவென்று பார்த்தால், அது தீரும். அத்துடனே முன்னிலை, படர்க்கைகள் தீரும். யாவும் ஒன்றாகச் சுடரும் என்பது பகவானின் விளக்கம். (பக்தராஜ் மஹராஜ்: து ஹைனா பகவான் இஸ்லியே மே ஹூம்!)

    நான் யார் என்று விசாரிக்கும் மனம் இதயத்தை அடைகிறது. (இதயம் என்பது இடப்புறம் இருக்கும் உறுப்பு அல்ல, மனதின் மூலஸ்தானம்) மனம், தன் மூலத்தை அடையும்போது, மனம் தீர்கிறது. அதே கணம், ஆணவம் நொறுங்கிப்போகிறது. நான் – நான் என்று மனம் சொல்லிக்கொண்டிருந்த காலம் போய், ஆன்மாவே நான் – நான் என்று சுடர்கிறது.

    ஆகவே, அடிப்படை நான் என்னும் உணர்வுதான். அதன்மீதுதான் எண்ணங்களாலான மனம் எழுகிறது. அந்த மனதை வைத்துக்கொண்டே நான் யார் என்ற விசாரணையை ஏற்படுத்தி, அதில் உறுதியாக ஈடுபட்டால், மனம் ஞானத் தீயில் வெந்து சாம்பலாகிறது, `பிணம் சுடு தடி போல்.`

    16. இதுதான் எய்த வேண்டிய ஞானமா?

    ஆம். எது அறிவுமில்லையோ, அறியாமையுமில்லையோ அதுவே ஞானம். பொருளறிவு உண்மையான அறிவாகாது. அறிவதற்கு வேறொன்றும் இல்லை என்பதாகவே ஆன்மா ஒளிவிடுகிறது. அங்கே அறிவு என்று அறியப்படவும் ஒன்றுமில்லை. அது சூனியமும் இல்லை என்று தெள்ளத் தெளிவாக விளக்குகிறார் மாமுனி.

    17. எனில், தவம் என்பது என்ன?

    நாயனா என்று வாஞ்சையோடும் அன்போடும் அழைக்கப்பட்ட காவ்யகண்ட கணபதி, பகவானுடைய கால்களைப் பற்றி, `படித்தும் நான் அறியாமையில் இருக்கிறேன், பலகோடிமுறை மந்திரங்களை ஜெபித்தும் அமைதியின் அனுபவமின்றி இருக்கிறேன், காத்தருள வேண்டும்,` என்று மனமுருகிக் கேட்டுக்கொண்டார். பதினொரு வருடங்களாகப் பேசாதிருந்த ரமணர் வாய்திறந்து சொன்ன வாசகம்:

    நான் எனும் உணர்வு எங்கிருந்து எழுகிறது என்று மனது விசாரித்து அங்கேயே அதன் உற்பத்தி ஸ்தானத்திலேயே ஒடுங்கினால் அது தவம்
    மந்திரத்தின் ஒலி எங்கிருந்து துவங்குகிறது என்று விசாரித்தால், மனது உற்பத்தி ஸ்தானத்தில் ஒடுங்கிவிடும். அது தவம்

    இந்த உரையாடலிலிருந்து நாம் புரிந்துகொள்ளக் கூடிய சில நுண்மையான சேதிகள் உள்ளன:

    தன்னை அறியத் தலைப்படாமல், வேறெதனையோ நாடி, அது நிறைவேறுவதற்காக மேற்கொள்ளும் வழிகள் மனிதனை முடிவு தெரியாத நெடும்பயணத்தில் ஆழ்த்திவிடும்
    எதற்கு இதை மேற்கொண்டோம் என்ற நோக்கத்தின் நினைவு பிசகிவிடுவதாலும் முடிவு தெரியாமல் போக வாய்ப்பிருக்கிறது
    மனம், முற்றும் ஒடுங்குவதே தவம்
    வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் அங்ஙனம் இருப்பதே தவம்
    விசாரணையின் விளைவே தவம். அல்லாமல், தவத்தில் விளைவு கிடையாது. அது நட்ட விதையைச் சுட்ட தெளிவில் நிலைத்திருப்பது

    `செய்கதவம் செய்கதவம் நெஞ்சே தவம்செய்தால் எய்த முடியாதன எய்தலாம்,` என்பார் பாரதியார். கூர்ந்து நோக்கினால், எய்த முடியாதது தவம். ஏனென்றால் தவம் என்பது செய்யப்படுவதில்லை. அது மனம்தாண்டிய நிலை என்னும் நிகழ்வு. தவத்தில் நிலைகள் உண்டுதான்.

    ஒன்றை விழைந்து செய்யப்படுவது ஆரம்பநிலைத் தவம். தேவர்களும் அசுரர்களும் செய்த தவம் இது. ஒன்றில் இடையின்றி ஒன்றிக் கிடப்பது ஆன்ற தவம். இதுவே ரமணருக்கு இயல்பானது.

    திருவள்ளுவரின் வாக்கும் ரமணரின் அனுபவமும் கச்சிதமாகப் பொருந்துகின்றன

    உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

    அற்றே தவத்தின் உரு.

    தமக்குற்ற துன்பத்தைப் பொறுத்துக்கொள்வதும், பிற உயிருக்குத் தீங்கு செய்யாமையும் ஆகிய அவ்வளவினதே தவத்தின் வடிவாகும்.

    ரமணர், தனக்குற்ற நோயை எப்படிப் பொறுத்துக்கொண்டார், எவ்விதமெல்லாம் எவ்வுயிரிடத்தும் கருணையோடு இருந்தார் என்பதை நினைவு கூர்ந்தால் இந்தக் குறளின் பொருள் விளங்கும்.

    தவஞ்செய்வார் தங்கருமம் செய்வார்மற் றல்லார்

    அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

    தனது தொழிலைச் செய்வார் என்று எவரைச் சொல்லலாம்? துறந்து தவத்தில் இருப்பவரையே! மற்றவர்கள் ஆசையில் அகப்பட்டு, கேடு வரவழைத்துக்கொள்கிறார்கள்.

    ரமணர், தவமன்றி வேறேதும் செய்யவில்லை. சொல்லப்போனால் அதைக்கூட அவர் செய்யவில்லை. அது அவருடைய இயல்பு. அது இன்னும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது!

    தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய

    மன்னுயிர் எல்லாம் தொழும்

    தன்னுயிர், தான் என்னும் முனைப்பற்றானை, மற்ற உயிர்கள் எல்லாம் தொழும்.

    ஒருமையில் உயிருண்டு ஆளில்லை. அந்த ஒருவனை வணங்காத கோளில்லை.

    துறவைப் பற்றிப் பேசும் குறட்பாக்களும் ரமணரைப் பார்த்து எழுதியது போலவே இருக்கின்றன:

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

    அதனின் அதனின் இலன்

    இந்தக் குறளின் விளக்கம்தான் ரமணரின் நான் யார் விசாரணை!

    மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்? பிறப்பறுக்கல்

    உற்றார்க்கு உடம்பும் மிகை

     

    யான் எனது என்னும் செறுக்கறுப்பான் வானோர்க்கு

    உயர்ந்த உலகம் புகும்

    18. நன்று; மீண்டும் 1907, நவம்பர் 18க்குச் செல்வோம். நாயனாவுக்காக ரமணர் மெளனத்தைக் கலைத்தாரா?

    இல்லவே இல்லை! நிதம்நூறு விதமாக ஒலிமேவும்போதும் பதறாது வானம் கலையாது மெளனம். வானில்லை வண்ணம் நானில்லை எண்ணம்…

    ரமணரைப் பொறுத்தமட்டில், மெளனத்தில் திளைத்திருப்பதே தவம். தவத்தில் ஆழ்ந்திருப்பதே மெளனம். பேசுவதால் அந்த மெளனம் முறிவதுமில்லை எழுந்து நடப்பதால் அந்தத் தவம் கலைவதுமில்லை. சமாதி நிலைகளைக் கடந்த சகஜமே அவருடைய இயல்பு.

    ஒன்றை அடைவதற்காகச் செய்யப்படுவதில்லை தவம். அனைத்துமான ஒன்றில் ஆழ்ந்திருப்பதே தவம்.

    `மெளனம் என்பது ஒலியற்ற நிலையல்ல. மனமற்ற நிலை.` பேசாதிருப்பது மெளனம் அல்ல. எனினும், ஆரம்ப நிலையில் இருக்கும் நமக்கு, குறைவாகப் பேசுவது நல்லதே.

    மெளனம் பருகவொரு முன்மோனம் வேண்டுவதால்

    மெளனம் பழகல் முறை.

    ஒரு சில நிமிடங்களே நடந்த மரண அனுபவத்தில் ஒரேயடியாக விரிந்துகொண்டது ரமணரின் அகண்ட மெளனம். எந்தப் பேச்சாலும், எதைக் கேட்பதாலும், எந்த நடவடிக்கையாலும் அது எள்ளளவும் பாதிக்கப்படாமல் தொடர்ந்தது. சற்றே நாம் சும்மா இருந்தால், இன்றும் நம் இதயத்தின் அடித்தளத்தைத் தொட்டு உயர்த்துகிறது. எனவே, அவர், `மெளனம் என்பது உரத்த பேச்சு,` என்றது எண்ண எண்ண இனிக்கிறது.

    19. இந்த விசாரணையை எல்லோரும் கடைபிடிக்கலாமா?

    நிச்சயமாக! உயிரும் உணர்வும் உடையோர் எவரும், அமைதி விழையும் எவரும். அகலாத ஆனந்தம் வேண்டும் எவரும் இதைக் கடைபிடிக்கலாம். இதில் ஆண் – பெண், ஏழை – பணக்காரன், படித்தவன் – படிக்காதவன் என்ற பேதங்கள் எதுவும் இல்லை.

    நீரில் விழுந்த பொருளை எடுக்க ஒருவன் நீரில் குதிப்பதுபோல, மூச்சையும் பேச்சையும் அடக்கித் தன்னுள் மூழ்கி நான் என்பது எங்கிருந்து துவங்குகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

    எந்த எண்ணத்திற்கும் இடம்கொடாமல், ஆன்மா என்றால் என்ன என்னும் விசாரணை தவிர வேறு எண்ணம் இல்லாதிருத்தலே பேரிறைவனிடம் சரணாகதி அடைவதாகும். அதைப்பணிந்து தஞ்சமடைய வேண்டும். எதைப்பற்றியும் எண்ணாதிருக்க வேண்டும். சுமையை இறக்கிவைத்துவிட்டு நிம்மதியாய்ப் பயணம் செய்யவேண்டும்.

    20. அவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்?

    அது கைம்மாறு வேண்டா கடப்பாட்டு மாரி! அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? அதற்கு எந்தத் தேவையும் கிடையாது. ஆனால், அதுவே திருவாய் திறந்து சொன்னது: `எனக்கென்ன வேண்டும்? ஏது தேவை? வாழ்க்கையின் இலக்கு என்ன என்பதை உணர்ந்து ஆன்மாவில் நிலைபெறுவதற்கு நீங்கள் இடைவிடாமல் முயற்சி செய்தால், நான் மிகவும் திருப்தியடைவேன்.`

    அதைச்செய்யத் தோதான எல்லாவற்றையும்தான் அவர் வழங்கியிருக்கிறாரே!

    ஆக, ரமணர் நமக்கு வழங்கியிருப்பவை:

    நான் யார் என்னும் விசாரணை
    ஒலி எங்கிருந்து எழுகிறது என்று கவனித்தல்
    தவத்திற்கு விளக்கம்
    பரிபூரண சரணாகதி

    21. சரி, இந்த வழியில் சென்றால், எப்போது முடிவு கிடைக்கும்?

    அது நம் முயற்சியின் தீவிரத்தைப் பொறுத்தது! `விடுதலை என்பது ஒரு கணத்தில் எய்தப்படுவது. அந்தக் கணத்தில் நிகழ்முறைகள் எதுவும் இல்லை. ஆனால், அந்தக் கணத்தை எய்துவதற்கு வழிமுறைகள், நிகழ்முறைகள் தேவைப்படுகின்றன.`

    ரமணர் கேட்கிறார்: `ஆனந்தம் வேண்டும், நிரந்தரமான மகிழ்ச்சி வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால், ஆணவத்தை விடமாட்டேன் என்று விடாப்பிடியாகப் பற்றிக்கொள்கிறார்கள். அப்புறம் எவ்விதம் இது சாத்தியம்? இரண்டும் ஒரே சமயத்தில் இருக்க முடியாது. ஆசையற்ற நிலையில் ஆழ்ந்திருப்பதில்தான் ஆனந்தம் இருக்கிறது. ஆணவமோ, ஆசைகளால் போஷிக்கப்படுகிறது. எனவே, ஆணவம் என்பது அறவே தலைதூக்காதபோதுதான் ஆன்ம விடுதலை என்பது சாத்தியமாகும். இதை அடைய சுய விசாரணையே சிறந்த வழி.`

    ஆம், ஆனந்தமும் ஆணவமும் சேர்ந்திருக்க முடியாது. `ராம் இருந்தால் கபீர் இல்லை. கபீர் இருந்தால் ராம் இல்லை,` என்பார் கபீர் தாசர். மனம்தான் நான் என்னும் ஆணவம். மனமிருந்தால் ஆன்ம நிலை தெரியாது. ஆன்மா விழிப்புற்றால் மனம் இருக்காது.

    ஆன்மநிலை அசையாத நிலை. அதாவது எந்தவிதமான சலனமும் அற்ற நிலை. `மேகங்கள் நகர்கின்றன. நிலவு நகர்வதுபோல் தோன்றுகிறது. புலன்களின் சலனம் ஆன்மாவின் சலனமாகத் தெரிவது அறியாமையே,` என்று பகவான் விளக்குகிறார். எனவே, `முயற்சி என்பது மனத்தை ஒரேயடியாகத் தீர்க்கவே.`

    22. எதுவரை இந்தப் பயணம்?

    முன்பே சொன்னதுபோல் அது முயற்சியைப் பொறுத்தது. இதில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன:

    சுய முயற்சி
    இறையருள்
    அருள் இறங்கும் தருணம்

    முயற்சியில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மனம், தனது மரணத்திற்கு அஞ்சி குறுக்கே வந்து நிற்கும்! வேடங்கள் புனைந்து நம்மைத் திசைதிருப்பும்! ஆனால், முயற்சி என்பது விடாமுயற்சி ஆகிவிட்டால் பிறகு அதில் மாற்றமிருக்காது.

    இறையருள் என்பது எப்போதும் இருக்கிறது. முயற்சியும் அருள்தான் என்பதை அப்பியாசி பிற்பாடு புரிந்துகொண்டு நெகிழ்கிறான். அவனருளாலே அவன் தாள்வணங்கி. அருள் என்பது எப்போதும் இருக்கிறது என்பார் பகவான். பின்பு நாம் அதை உணர்வதில்லை? ஆசைகளிலிருந்து விலக விலக, புறவுலகில் நம் பற்று நீங்க நீங்க, அருள் விகசிக்கும்.

    ஆனால், முடிவு எப்போது என்ற கேள்விக்கு விடை கிடையாது. அது முழுக்க முழுக்க அந்த இறையின் சித்தமே ஆதலாம், அந்தக் கேள்வியையே எழுப்பாமல், தொடர்ந்து முயன்றிருத்தலே நமது கடமையாகிறது. `பிறகு, ஒருகரம் நீண்டு, நம் கரத்தைப் பற்றி, அப்புறத்திற்கு இழுத்துக்கொள்ளும்,` என்பார் பகவான். கண்ணை அகலத் திறந்துகொண்டு காத்திருப்பதே கடுந்தவம்! `இந்தஜார் மே மஜா ஹை!

    ரமணரின் சிறப்பு அவர் அடைந்த ஒப்பற்ற நிலை மட்டுமல்ல. அந்த நிலையை நாமும் பெறலாம் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தி நம்மை அவருடைய பாதையில் இன்றும் நடத்திச் செல்வதே அவருடைய சிறப்பு. அதற்கு இன்னொரு பெயர், காரணமற்ற கருணை. அதுவே கடவுளின் இயல்பு.

    Share
  • உன்னருளாலே உன்னடி பணிந்து… (இறைக்கவிதைகள்)

     

    இசைக்கவி ரமணன்

     

    இந்தக் கவிதைகளில் இலக்கியம் விழையாதீர்கள்! இலக்கணமும் தேடாதீர்கள்! எனது தேடலில் நேர்ந்த மனவிம்மல்கள், மின்னல் வீச்சுக்கள், எதிர்பாராத அமைதிக் கணங்கள் இவையே இந்தக் கவிதைகளில் வெளிப்பட்டிருக்கும். ஒத்த மனமுள்ளோர் உடன்கண்டு கொள்ளலாம்.

    நான் இறைவன் முன்னால் இருகரம் கூப்பி, எப்போதும் நன்றியுடன் நின்றுகொண்டிருக்கிறேன். அதற்கு ஒரே காரணம்தான் உண்டு. தன்னை நினைக்க வைத்தானே, அந்த தயைதாங்க முடியாமல் தழுதழுத்து நிற்கிறேன்! அவ்வளவுதான்!

    anju3

    எனவே, சான்றோர் வாக்கையே சற்றே மாற்றி உன்னருளாலே உன்னடி பணிந்து என்று தலைப்பிட்டிருக்கிறேன்.

     

    காப்பு

    முந்தி வினாயகனை மூலத்தின் நாதனை hanuman-vadai-maalai
    வந்தித்தேன்! வாழ்வாம் வரம்பெற்றேன்! உந்தி
    அருவியெனப் பொங்கும் அருந்தமிழைச் சின்னக்
    குருவி அருந்துவதே கூத்து!

     

    என்னிறைக்கு

    உன்னரு ளாலே உன்னடி பணிந்து
    பொன்னடி நிழலில் பூவென நிற்கிறேன்
    புன்னகை என்னும் தென்றலில் சிலிர்க்கிறேன்
    என்றும் நீ என்னவன் என்றும் நான் உன்னவன்
    என்ற நினைப்பிலே எல்லாம் இழக்கிறேன்
    நன்று காதலென் நம்பியே! இனிநான்
    சென்றெதும் காணேன் சேவடி போதுமே!

     

    அனுமனுக்குப் பஞ்சகம்

    1

    ஆகாசம் பூமி அண்டபகி ரண்டம்DSC07426-765973

    அனைத்தும் அதிர்ந்தாடவும்
    அதிர அதிர உதிரும் அழகுமலர் போல்மனதில்
    அகலாத மணமாகவும்
    வாகான சாமரம் ரகுராம நாமமதில்
    வந்துலவும் பூந்தென்றலே!
    வந்துவிளை யாடும்வினை பந்துவிளை யாடும்
    வசந்தக்க ரம்மின்ன லே!
    சோகத் திலங்கையினைச் சுட்டுப் பொசுக்கிவரும்
    சூடா மணிக்கொளியிவன்!
    சுந்தரன்! நிரந்தரன்! சுழன்றிடு மனத்தினில்
    சுகம்தர வரும்சுடரிவன்!
    ஏகாந்த மாய்நெஞ்சில் எங்கோ துளிர்க்கின்ற
    எல்லையில்லா அமுதமே!
    என்றெனது ஜென்மமெனும் குன்றுமனதில் நின்
    றெழுந்தாடும் உன்பாதமே?

     

    2

    உருகிவரும் கரியமனம் கருவிழியின் ஒருவழியில் ssss
    ஒருதுளியில் ஊசலாடும்!
    உதிருமுனம் உனதுமுகம் உளமெங்கும் மிகவந்து
    ஒருவார்த்தை பேசும்! பாடும்!
    பெருகுமுகில் திரைவிலகப் பிறைநிலவு நுதல்பெருகப்
    பீறிட்டெழும் சூறையே!
    பின்னங்க ளாய்ச்சிதறும் பிள்ளை மனத்தோரம்
    பிறழா ஒளிப்புள்ளியே!
    அருளுனது! அன்புனது! அச்சங்க ளேயெனது!
    அறியவைத் தாய்தேவனே!
    ஆடுகட லோடுவிளை யாடுமதி காலையென
    அருகில்வந்தாய் நாதனே!
    பெருகுமொரு நீலப் பிரகாசம் பதங்கொண்டு
    பிரளயம் நடிக்கவேண்டும்! ஒரு
    பெயரற்ற மருவாகப் பித்தன் திரிந்தாலும்
    திருவடி நினைக்கவேண்டும்!

     

    3

    பகலிரவு பகையுறவு பழையகன வென்றுநிதம் anju
    படியுருளும் நினைவுமாயம்! அதில்
    பலகோடி காலப் பனிமலர்கள் பாதப்
    பரல்வீசும் ஞ்சநேயம்!
    சுகம்ராம நாமம்! ரோமாஞ்சனம்! தேகம்
    ரகுராம னின்யெளவனம்!
    சொல்லி முடியாதவொரு சோதியருஞ்சோதிநீ!
    தோள்களோ ரமணமெளனம்!
    அகமென்றும் புறமென்றும் அறியாத ராகப்
    பிரவாகம்! அகண்ட நாமம்!
    அழகுதொழு தேபழகும் மழலையுரு வம்தோளில்
    காய நீலம் குலவும்!
    புகைசுருளும் நெஞ்சில் பொருந்தாம லேகுமுறும்
    பொல்லாத தீக்குழம்பே!
    போதுமினி! மீதமெது? போதவிழும் நேரமிது!
    பாதைமனம் பாதமயமே!

     

    நீளநீ ளப்பெருகும் நிமலமே! நிர்மலம் ANJU DARPANA ALNKM DPBLR B
    நீந்திவிளை யாடுங்கடலே! ஒரு
    நிமிநேர மின்னலில் நித்தமெனைக் கொண்றயிருள்
    நிழலையு மொழித்த அருளே!
    மாளமா ளப்பெருகும் மாயக்க ரங்களில்
    மழலைத விக்கலாமா?
    மன்னனுன் சன்னிதியில் மண்டைசித றும்போதும்
    மெளனித்தி ருக்கலாமா?
    வாளே இருக்கையாய் வாகா யமர்ந்தாலும்
    வாயுந்தன் பெயர்சொல்லுமே!
    வானத்து மீனெலாம் வந்துபொடி யும்போதும்
    வசந்தப்ப தம்பாடுமே!
    கேளாத தேபோலக் கீழ்வானமே இன்னும்
    கிளம்பாதிருக்கலாமா?
    கீற்றான உன்பாதம் ஏற்கத் துடிக்குமனக்
    கடலை மறக்கலாமா? (4)

     

    கஞ்சமலர் போலவரும் பஞ்சமுகம் நெஞ்சிலெழக்Sri Panchamukha Anjaneyar - Gowrivakkam- Chennai
    கலிதொலைந் தேபோகுமே!
    காலவெளி என்ற இரு கண்ணிமை நிலைக்கவொரு
    காந்திமீ றிப்பெருகுமே!
    செஞ்சுடர்க ளத்தனையும் நின்றுபெரு கித்திலக
    மென்றுநித் தம்சுடருமே!
    சேவடி நினைத்தகணம் காவடி எனக்ககனம்
    திசைவிண் டதிர்ந்தாடுமே!
    அஞ்சனையின் நெஞ்சமோர் அழகுவடி வங்கொண்டு
    அண்டமெல் லாம்பெருகுமே!
    ஐயனே! என்றுவிழி மெய்யாய்ப் பனிக்கும்கணம்
    அள்ளவரும் வாயுமுகமே!
    தஞ்சம் தஞ்சம் என்று தாளம்போடும் நெஞ்சம்
    தரையாய்க் கிடக்கவேண்டும்
    சிரஞ்சீவி யாயுந்தன் சிங்காரப் பாதங்கள்
    சுகமாய் நடக்கவேண்டும்! (5)

    Share
  • ஒரு மனம் பல முகங்கள்

    இசைக்கவி ரமணன் 

    எத்தனை முகமடியோ?French_mask

    எத்தனை முகமூடியோ??

    அத்தனையும் பாக்கணும்னா

    ஆத்தாடி ஆகாதே!

    பாக்காம விட்டுப்புட்டா

    பானை நல்லா வேகாதே!!

    பாண்டியன் எக்ஸ்பிரஸில் ஏறியாயிற்று. நீங்கள் என்னதான் முன்கூட்டியே ‘ரிசர்வ்’ செய்திருந்தாலும், செங்கல்பட்டு வரை, சீசன் டிக்கெட்டுக்காரர்கள் காட்டுகிற தயவில்தான் நீங்கள் பிழைக்கவேண்டும். அவர்களுடைய வண்டியில் நாம் ஒண்டிக்கொண்டதுபோல இருக்கும் அவர்கள் பார்வை. ‘ரிசர்வ்’ செய்து பயணம் மேற்கொள்பவர்கள் மிகவும் கீழானவர்கள் என்ற நிச்சயம் அவர்கள் பார்வையின் வெப்பத்தில் உணர முடியும். நாம் எட்டுப்பேர் என்றால் அவர்கள் பத்துப்பேர்கள் இருப்பார்கள். எப்போதும் அப்படியில்லை; சில நேரம் பன்னிரெண்டாகவும் இருக்கும்! அடுத்த குடாவில் இடமிருந்தாலும், அலுவலகத்தில் பாதியில் நின்றுபோன பேச்சைத் தொடரும் சாக்கில் சிலர் இங்கு வந்து தொத்திக் கொள்வார்கள். மதுரைவரை செல்பவர்கள் மெளனமாக இருப்பார்கள். எண்ணிக்கைதான் வலு! ஆனால், உள்ளே எள்ளும், கொள்ளும் வெடித்துக்கொண்டிருக்கும். அநத்ச் சினம், குழந்தைகள் மீது அடியாக விழும். பெட்டிகள் தேவையில்லாமல் இரைச்சலோடு இழுக்கப்பட்டு மறுபடியும் தள்ளப்படும். டிக்கெட் பரிசோதகர் வந்தால் இவர்களை ஒரு வழி செய்துவிடலாம் என்று கறுவிக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். செங்கல்பட்டுக்காரர்களோ கண்டுகொள்ளவே மாட்டார்கள். ‘டிக்கெட்ஸ் ப்ளீஸ்’ என்று வருபவரை இவர்கள் பார்க்கின்ற தோரணை இருக்கிறதே! அவர், தான் ஏதோ தவறுசெய்து விட்டதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டு, மதுரைப் பயணிகள் பக்கம் திரும்பி, அவர்களிடம் சற்றுச் சிடுசிடுப்போடு கேள்விகள் கேட்பாரே பார்க்கலாம்! அவர் ரொம்பத் தயங்கி மிகவும் மன்றாடினால், செங்கல்பட்டார் லேசாகச் சட்டைப் பையைத் தொட்டுக்கொள்வார்கள்; அவரைப் பார்க்கவே மாட்டார்கள்; பேச்சை விடவே மாட்டார்கள்.

    செங்கல்பட்டுக்காரர் மதுரைக்குச் செல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் போக்கு, மொத்தமாக மாறிவிடும்! “குடும்பத்தோடு பயணம் செய்யவந்தால் இத்தனை இடைஞ்சலா? நாங்கள் நேரத்துக்குச் சாப்பிட்டுப் படுக்க வேண்டாம்?” என்றெல்லாம் நிறையைக் கேள்விகள் சூடாக எழும்!

    இடம்மாறினாலே தடம்மாறி விடுகிறானே மனிதன்! மனிதன் மாறமாட்டானா என்று சிலர் ஏக்கமாய்க் கேட்கிறார்கள். அவன் மாறாதிருக்க மாட்டானா என்றல்லவா கேட்கவேண்டும்!!

    அரசியல், விலைவாசி, சினிமா, வானிலை, வம்பு, அட எதைப்பற்றி வேண்டுமானாலும், பேப்பர் படிக்காமல், டி.வி. பார்க்காமல், ஓடுகின்ற ரயிலில் உட்கார்ந்தபடியே அக்கு வேறு ஆணி வேறாகத் தெரிந்துகொள்ள வேண்டுமா? செங்கல்பட்டுக்காரர்களிடம் ‘மணி என்ன?’ என்று கேளுங்கள், போதும்! ஆமாம், சீசன் டிக்கெட்காரர்கள் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தாலே நண்பர்களாகி விடுவார்கள். காலையில் வீட்டை விட்டவர்கள், இரவில் திரும்பும்போதுதான் எத்தனை உற்சாகம்! பறவைகள் கூடுதிரும்பும் பரபரப்பு! சண்டை ஏதுமில்லை, சந்தடிதான், சற்றே சச்சரவோடு! கவனமாகக் கேட்ட எனக்கு வேர்க்கடலை, டீ எல்லாம் உண்டு!! நம்மைக் கொடுக்கவிட்டால்தானே! மதுரைப் பயணிகள் பக்கம் நான் திரும்பவே இல்லை!!!

    ஒருமுறை…

    அதிகக் கூட்டமில்லை. எனக்கு அடுத்தபடியாக ஒருமனிதர். ஆறடிக்குக் கொஞ்சம் குறைவு; கோதுமை நிறம்; முன்வழுக்கை; நீலச்சட்டை அவருக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது; இரண்டு கைகளையும் கோத்துக்கொண்டு மடியில் வைத்துக்கொண்டிருக்கிறார்; பார்க்க இனியவராகத் தெரிகிறார். திடீரென்று, நறநறவென்று பல்லைக் கடித்துக்கொண்டு கடுமையாகத் திட்டுகிறார்:

    “அறிவிருக்கறவன் செய்ற வேலயாடா இது? ஒனக்கு அவ்ளவு ஆங்காரம் இருந்தா எனக்கு எவ்ளவு இருக்கணும். ஹூம்..” என்றார்.

    யாரைத் திட்டுகிறார்? யாரையோ! ஆம், எதிரே இல்லாத யாரையோ!! இதைக்கொஞ்சம் துறுவினால் என்னவென்று அவரை, ‘சார், வண்டி இன்னும் கெளம்பலியே..’ என்று முடிப்பதற்குள், என் பக்கம் திரும்பி, மிருதுவான குரலில், மிகப் பணிவாக, “தூத்துக்குடி வண்டி இன்னும் உள்ள வரல. வந்ததும் சிக்னல் கெடச்சிடும்,. ஒரு பத்து நிமிஷம்தான்,’ என்று ரயில்வே சார்பில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுபோல் பதில் சொன்னார். நான், ‘தேங்க்ஸ்’ என்றேன்.

    அடுத்த கணமே, மோட்டு வளைப் பார்வையோடு, “ஏன்? இன்னிக்கு ஏங்கிட்ட ஆட்டற வாலெ அவங்கிட்ட ஆட்டிப் பாரேன்! அறுத்துச் சாக்கடெலெ எறிஞ்சிட மாட்டான்?”

    கூட வந்தவர்களெல்லாம் உறைந்துபோயிருந்தார்கள். எதிரே இருந்தவர், ஒரு தைரியத்திற்காக, ‘மாம்பலத்தில் என்ன அஞ்சு நிமிஷம் நிக்குமா?’ என்று யார்மீதும் குறிவைக்காமல் கேட்டதும், நம் ஆசாமி உடனே அவர்பக்கம் திரும்பி, மிகுந்த நாகரிகமான முறையில், ‘இல்லங்க. இப்பல்லாம் மாம்பலத்தில நிக்கறதில்ல. எக்மோர் விட்டா தாம்பரம்தான். திரும்பி வரப்போ மாம்பலத்லயும் நிக்கும். சும்மாச் சும்மா மாத்தறதுனால ஜனங்களுக்கெல்லாம் பாவம் கஷ்டம்தான்,” என்றார். கேள்வி கேட்டவர் பீதியும், பிரமிப்பும் கலந்து பரிதாபமாகப் புன்னகைக்கத் துவங்கும் போது, அவர், விட்ட இடத்துக்கு அதிவிரைவில் சென்று,

    “டேய்..டேய்..டேய்..எவன்கிட்டடா இதெல்லாம்? ஆங்..எத்தனை நாள் செல்லுண்டா? கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும்னு கேள்விப்பட்டிருக்கியாடா?” என்று உடம்பைக் குலுக்கிக் கத்தி விட்டு, மறுபடி கைகளைக் கோத்துக்கொண்டு அடுத்த கேள்விக்குப் பதில்சொல்லத் தயாராகி விட்டார்!

    செங்கல்பட்டு வரை நிற்கவே இல்லை! இறங்கும்போது மிக அமைதியாகப் பையை எடுத்துக் கொண்டார். தான் இதுவரை தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தோமே, அதுவும் பலர் முன்னிலையில், அதிலும் ஆத்திரமாக என்பதான எண்ணங்களின் சாயை கூட அவர் முகத்தில் இல்லை! சாந்தமாக இறங்கிச் சாவகாசமாக நடந்து போனார்!

    இன்னொரு முறை…

    எதிரே ஒரு தந்தையும், மகளும். மகள், நல்ல உயரம். கஞ்சிபோட்டுத் தேய்த்த பளிச்சென்ற ரோஜா நிறப் புடவையில், அந்தப் பெண், அழகாய், அமைதியாய் இருந்தாள். அவள் பார்வையில் சலனமில்லை. தந்தையோ ஏதோ தத்தளிப்பில் இங்குமங்கும் பார்த்த வண்ணமிருந்தார். கண்ணாடி வழியே, அவரது திராட்சைக் கண்கள் துறுதுறுவென்று துள்ளிக்கொண்டிருந்தன. அழகான மகளுடன் பயணம்செல்லும் தந்தையின் மனநிலை எனக்குப் புரியும். ஊரெங்கும் கொள்ளிக் கண்கள்; தந்தையோ, பற்றத் தயாராயிருக்கும், ஆனால் வெடிக்க முடியாத மருந்து. நேரெதிரே இருந்த என்னைப் பார்த்துச் சிரிக்க முயன்று உதடோரம் கோணிக்கொண்ட போது நான் அவரைப் புரிந்துகொண்டதாக எண்ணி அவரை சமாதானப்படுத்துவோம் என்று லேசாகப் புன்னகைத்தேன். அவரால் சிரிக்க முடியவில்லை. அவரது நெற்றியில் சூடு முத்தாய்த் துளிர்த்தது. சரி, இதைப்போய் யோசிப்பானேன் என்று ஒரு புத்தகத்தைப் பிரிக்க முயன்றேன். அப்போதுதான் அது நடந்தது.

    பொம்மை மாதிரி அசையாமல் உட்கார்ந்திருந்த அந்த அழகுப் பெண் திடீரென்று அட்டகாசமாகச் சிரிக்க ஆரம்பித்தாள். அவளது பற்களின் விகாரமும், காரணமற்ற அந்தச் சத்தமான சிரிப்பும் எங்களைப் பீதியில் ஆழ்த்தியது. கிளம்பத் தயாராயிருந்த வண்டியில் ஒரு மயான ரத்திரிச் சூழல் கப்பிக்கொண்டது. தந்தையோ, அவளது கையைப் பற்றிக்கொண்டு, “வேண்டாம்மா, வேண்டாம்மா, இங்கெல்லாம் சிரிக்கக் கூடாது, சத்தமே போடக் கூடாது,” என்று கெஞ்சிக்கொண்டிருந்தார். உடைத்த எலும்புகளை உண்டியல் குலுக்கிக் கூளி சிரித்தது போலிருந்தது. பேய்ச்சிரிப்புக்கும் ஓர் அளவை உண்டு போலும்! எப்படி திடீரென்று தொடங்கியதோ, அதேபோல் எதிர்பாராமல் தடாலென்று நின்றுவிட்டது அந்தச் சிரிப்பு. எதுவுமே நடக்காததுபோல அந்த முகம் முன்பிருந்த மாதிரியே அமைதியாகி விட்டது. இந்த அழகை வியப்பதா? அந்த விகாரத்தை நினைத்து அதிர்ச்சியுறுவதா? ஒன்றும் புரியவில்லை.

    அந்தத் தந்தை பட்ட பாட்டை எப்படிச் சொல்ல? மீண்டும் திடீரென அவள் சிரிக்கத் துவங்கும்போது அவர் மறுபடியும் அவள் கரத்தைப் பற்றிக் கெஞ்சுவார். நம் முகத்தைப் பரிதாபமாகப் பார்ப்பார். அவளுக்கு உணவு புரிந்தது, ருசி தெரியவில்லை; வாயில் போட்டது போட்டபடியே இருந்தது. மீண்டும் தந்தையின் கெஞ்சல். அவளுக்கு பாத்ரூம் போகவேண்டும். அதற்கும் இவர்தான் துணைசெல்ல வேண்டும். அவளுக்குப் படுக்கை போடவேண்டுமென்றால், பலகையைப் பிரிக்கவேண்டுமல்லவா? அவள் எழுந்தால்தானே? இருந்தது புரிந்தால்தானே எழுவதும் படுப்பதும்? அவளை எப்படியெல்லாமோ கெஞ்சி எதிர்ப்பக்கம் உட்காரவைத்ததும், எங்கள் உதவியுடன் அவசர அவசரமாக அவளுக்குப் படுக்கையை ஏற்பாடு செய்தார். ஏதோவொரு கனவுத் தாயின் மடியில் மிதப்பதுபோல, ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்.’ தந்தை விட்ட பெருமூச்சில் ஒரு சாம்ராஜ்ஜியத்தின் சோகம் இருந்தது. அவரிடம் பேச்சுக்கொடுக்க யாரும் விரும்பவில்லை. அந்த அளவுக்கு எல்லோருமே இங்கிதமாக இருந்தார்கள். அவர் கழுத்தைச் சாய்த்தபடி ஒருமுறை என்னைத் துயரத்தோடு பார்த்தார். அவரைக் கடந்துசெல்லும் சாக்கில், அவரது தோளை என் இதயத்திலிருந்து அழுத்தினேன்.

    அவர், வாளி வாளியாய்க் கண்ணீரை விழுங்கினார்..

    விதி இரக்கமின்றிக் கிழித்த ஒரு தேவதையின் கவிதையைப்போல் கிடந்தாள் அவள். சித்தம் என்பது நினைவுகளின் தொகுதி. ஒரு கிராமபோன் ரிகார்டு. அதில் கீறல் விழுந்திருக்கிறது. அவளது வாழ்வில் நடந்த ஏதோவொரு சம்பவத்தை அவளால் தாண்ட முடியவில்லை. அவளுக்கு லேசில் முதுமை வராது. மனம் நின்ற தருணம் ஒரு வட்டம். அதை உடல் சுலபத்தில் மீறாது. மிகக் கொடுமையான இளமை, மிகக் கசப்பான அழகு, இருக்க முடியும் என்பதை விக்கித்த தொண்டையில் புரிந்து கொண்டேன்.

    அவளது சித்தத்தின் அமைப்பு ஒருபுறம் இருக்கட்டும். அவளது தந்தையின் மனநிலை? அதில் எங்கோ ஒரு குற்ற உணர்வு அவரது நிம்மதியைப் பருந்தாய்க் கொத்திக் கிழித்துக் கொண்டிருந்திருக்கும். இவர் தந்தை, அவள் மகள், இது உறவு. அட, உறவு இதுதானா? உறவாடல்? அதற்கு வாய்ப்பே இல்லாமல் உறவா?

    மலரைப் பறிக்கும்போது ரத்தம் கசிவதாய், மனிதனின் மனத்தில் எத்தனை முகங்கள்! அதில் எத்தனை பாவங்கள்! அவற்றில் வெளிப்படுபவை எத்தனையோ? இருட்டுத் திருட்டு முகங்கள் எத்தனையோ? தானும் காணாமல், தன்னையும் காணவிடாத குருட்டு முகங்கள் எத்தனையோ?

    கண்ட பின்னும்

    கண்டும் காணாதிருக்க முடியாது!

    (காண்போம்)

    குண(வி)சித்திரங்கள் (2)

    அவரை ஊதுவத்தி மாமா என்றுதான் அழைப்போம். அவருடைய இயற்பெயர் என்னவோ தெரியாது. மாம்பலம் சிவா-விஷ்ணு கோவிலுக்கு வெளியே பிளாட்பாரத்தில் பஞ்சாங்கம், தோத்திரப் புத்தகங்கள் இவற்றை விற்றுக்கொண்டிருந்தாலும், அவருக்கு ஊதுவத்திதான் அடையாளம். அவர் உடலும் கூட அப்படித்தான் இருக்கும். நங்கைநல்லூரில் எங்கள் வீட்டுக்கு அருகில்தான் இருந்தார். அவர் யார், என்ன செய்கிறார் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நான் அவரை எதேச்சையாக வியாபாரக் கோலத்தில் கண்ட பிறகுதான் அவருக்கு மேற்படிப் பெயர் நிலைத்துவிட்டது. அவருக்கு ‘ஹிண்டு பேப்பர்’ படித்தே ஆகவேண்டும். வாங்கமுடியாது. அதனால், தினமும், காலையில் எங்கள் வீட்டுக்கு வந்து எல்லாப் பக்கங்களையும் அவசரமாக ஒரு புரட்டுப் புரட்டி விட்டுத்தான் செல்வார். அப்பாவுக்கு, அவர் படிப்பதற்கு முன் யாரேனும் பேப்பரைத் தொட்டால் தாங்காது. சம்மதிக்க மாட்டார். நேராகச் சொல்லியும் விடுவார். ஆனால், இவரை ஒன்றும் சொல்வதற்கில்லை.

    ஏனாம்?

    ஊதுவத்தி எப்போதும் அதிவேகமாகத்தான் வருவார். அந்த நாலுமுழ வேட்டியில் எப்படித் தடுக்காமல், அது கிழியாமல் அவர் இப்படிப் பறக்கிறார் என்பது வியப்பாகத்தான் இருக்கும். நாம் நடந்துவர ஏழு நிமிடங்கள் ஆகுமென்றால், அந்தத் தொலைவை இவர் நான்கு நிமிடங்களிலேயே கடந்துவிடுவார்! அதெல்லாம் சரிதான். ஆனால், அப்படி அவசரமாய் நடந்து வரும்போது, விடாமல் பேசிக்கொண்டே வருவார். தனக்குத்தானே என்று சொல்வதற்கில்லை; ஏனென்றால், அவரைப் பொறுத்தமட்டில், எதிரே யாரோ ஆளிருந்ததாகத்தான் தோன்றியது. அந்த ஆள்மீது அவருக்கெதனால் கோபம் என்பது தெரியாது. ஆனால், கொலைவெறி! கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தவர் திடீரென்று, “நா..நா..நா.ய்..ய்..யே..யே” என்று இடது கையை நீட்டிக்கொண்டு, திக்கினாலும் பெருங்குரலில் அவனைத் திட்டி, வலது கையால் எம்பி எம்பி அவன் கன்னத்தில் பளார் பளாரென்று அறைவார்! எதிரே வரும் சிறுமி பதறிக்கொண்டு காவாயைத் தாண்டி ஓடுவது இன்னும் கண்முன் நிற்கிறது! “ஏ..ஏ..ஏன்கிட்டயா? பல்லப் பேத்துடுவேன், ஓடிப் பூடு,” என்று சொல்லிக் கொண்டே, எங்கள் கேட்டைச் சத்தமாகத் திறந்து உள்ளே நுழைந்து பேப்பரை ஏறத்தாழப் பிடுங்கும் அவரிடம் என் தந்தை என்ன சொல்லத் துணிவார் பாவம்!! பதறி எழுந்தவர், பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு ஜபமாலையை உருட்டிக்கொண்டிருப்பார். ஊதுவத்தி வெளியே சென்றபிறகு, கண்கள் அனிச்சையாகத் திறக்கும்! சுவாசம் சீராகும்! பேப்பர் படித்து முடித்த கணமே அம்புபோல் விருட்டென்று கிளம்பி விடுவார். சிலசமயம், அம்மாவிடம் காப்பி கேட்பார். கேட்டு முடிப்பதற்குள் சூடான காப்பி வந்துவிடும். அவள் காப்பிக்கு உலக அளவில் ரசிகர் மன்றம் இருக்கிறது. சமையலோ சொல்லவே வேண்டாம், சத்திரக் கரங்கள் வேறு! (அம்மாவுடைய சாப்பாட்டுக்கும், காப்பிக்காகவும்தான் இவனுடைய கவிதையையெல்லாம் கேட்டாக வேண்டியிருக்கிறது என்ற என் நண்பர்களின் முணுமுணுப்புகளைப் பலவருடங்களுக்குப் பிறகுதான் கேட்டேன்!) எனவே, அம்மாவின் காப்பி, ஊதுவத்தியின் நாக்கையும் தொட்டிருக்கிறது! பட்டென்று டபராவைக் கீழே வைத்துவிட்டுப் புயல்வேகத்தில் கேட்டைத் திறந்து வெளியேறி, தெருவில் கால்வைத்த மறுகணமே, ‘அந்த’ ஆளைச் சாடி அறையத் துவங்கிவிடுவார்! ஆனால், பிளாட்பாரக் கடையில் ஊதுவத்தி விற்கும்போது மட்டும் ரொம்பக் கறார்! சல்லிக் காசு குறைக்க மாட்டார். அதே சமயம், அவர் சரக்கு எவ்வளவு அற்புதமானது என்று பெருமையுடன் சொல்வார்!

    ***********

    இன்னொருவர் இளைஞர். பெயரை மாற்றி ரகு என்று வைத்துக் கொள்வோம்! நல்ல படிப்பு; கட்டான உடல்வாகு; கராத்தே பயிற்சி: கண்ணியமான பேச்சு; புதிது புதிதாய்ப் படித்துத் தெரிந்துகொள்ள ஆவல். இதெல்லாம் சரிதான். ஆனால், ஜெயலஷ்மி தியேட்டரைத் தாண்டி, குடிசைகள் நடுவே புகுந்து, ஏரிக்கரை வழியே இறங்கி, வறண்டிருக்கும் ஏரியில் தன் வீடு நோக்கி நடக்கத் துவங்கும்போது குடையைப் பிரிப்பாரையா! அவ்வளவுதான்! அப்போதிலிருந்து, ஏரி முடிந்து, அவர் தெருவிளிம்பில் கால்வைக்கும் வரை ஓயாத பேச்சடா சாமி! கைமாற்றிக் குடையைப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையை ஓர் அதிகாரிபோல் அசைத்து அசைத்து, அவர் அப்படி என்னதான் விசாரிப்பாரோ, யாரிடம்தான் வாதம் புரிவாரோ! ஊதுவத்தி மாதிரிப் பறக்கமாட்டார். ஏதோ, பழைய ஜமீன் பட்டணப் பிரவேசம் செல்வதுபோல்தான் இருக்கும் தோரணை. இடையிடையே நின்றுவிடுவார்; ஆமாம், நின்று ‘எதிரி’ என்ன சொல்கிறான் என்பதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு, ‘ஓ! இவ்வளவுதானா!,’ என்று ஒரு மமதைச் சிரிப்பை விடுத்து, அவனுக்குப் பதில்சொல்லிவிட்டுத்தான் மீண்டும் நடக்கத் துவங்குவார்! வெள்ளமாய் வெய்யில் கொளுத்திக் கொட்டுகிற அந்த மத்தியான நேரத்தில், தன் கண்ணுக்கு மட்டுமே தெரியும் ஒருவரோடு ரகு நடந்தபடி நடத்தும் வாதங்களைக் கண்ணிமைக்காமல் கேட்பேன்.

    ******

    எனக்குப் பதினொரு வயதிருக்கும். அப்போது நடந்த சம்பவம் இன்றும் நினைவிருக்கிறது. எங்கள் தெருவில் ராமு என்றொருவன் இருந்தான். அந்த வயதில் இன்னொருவர் வயதை அறிவதற்கில்லை! ‘ராமு பெ..ரீ..ய்..ய ஆள்.’ அவ்வளவுதான்! ரொம்ப உயரம்; பாறையைப் பிளக்கக் கூடிய திடகாத்திரமான உடம்பு; உறுதியான கரங்கள். ஆனால், ராமு அதிர்ந்து பேசவே மாட்டான். மிகப்பெரிய பூனைக்குட்டி போலிருக்கும் அவன் பாவனை! அந்த உடம்புக்குப் பொருந்தாத மழலைச் சிரிப்பு; பணிவு. மிகுந்த கூச்ச சுபாவமுள்ளவன். ஒரு கண், ஏதோ பழுதுபட்டிருக்கும். சிறுவயதில், வில்லம்பு விளையாடும்போது அடிபட்டு அப்படி ஆனதாகப் பாண்டிபஜார் தலபுராணத்தில் காணலாம்!

    ராத்திரி ஒன்பது மணியிருக்கும். வானொலியில் ஆங்கிலச் சேதி முடிந்திருக்கும். திடீரென்று தெருவில் ஒரே அமளிதுமளி. வெளியே வந்து பார்த்தால்:

    “டா..ய்..இன்னா நென்ச்சுக்னுக்றீங்கோ?” என்று ஒரு பெரிய குரல்.

    ‘ஏய், வேணாம்பா, ராமு அல்லாம் பாக்குறாங்கப்பா,” என்று ஒரு பதில் குரல். அட! நம்ம ராமுவா!

    “யார்றாவன் ராமு? நான் செண்டர் மணிடா டே.ய்..” என்று நடுத்தெருவில் தொப்பென்று விழுந்தான் ராமு. கூட இருந்தோர் உறவினர்கள் போலும்; அவர்கள் அவனைப் பலவாறாகக் கெஞ்சிக்கொண்டிருந்தார்கள், “உனுக்கு இன்னா கொறப்பா? இன்னாத்துக்குத்தான் இப்டி கோராமை பண்றெ?’

    “டா….ய்..மூண் ரூபா எட்தாந்து வந்தனா? கருவாட்டுக் கொளம்பு வக்கச் சொன்னனா? வச்சாளாடா அவ? வச்சாளாடா?” என்று ராமு தெருவில் புரண்டு, தார் ரோட்டை அடித்து நொறுக்க முற்பட்டான்.

    மறுபடியும் அவர்கள், ‘ஏய் இன்னாப்பா, கலாட்டா பண்ணாம வூட்டுக்கு வா ராமு,’ என்றதும், மீண்டும், “டேய்! ராமு எவண்டா ராமு? எங்க்குற ஆளு அவன்? நான் செண்டர் மணிடா! செண்டர்!” என்று மார்பில் அடித்துக் கொண்டான்.

    மறுநாள் காலையில் ஒன்றுமே நடக்காதது போல், ‘இன்னா ரம்ணு?’ என்று பணிவாகச் சிரித்தபடிச் செல்வான். ஆனால், வாரத்தில் மூணு ராத்திரியாவது ‘செண்ட’ராகிவிடுவான்!

    இப்படிப் பலரை சந்தித்திருக்கிறேன்; தொடர்ந்து சந்தித்தும் வருகிறேன்! இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று யாரயாவது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்ற ஆசையில், என் நண்பன் விச்சுவைக் கேட்டேன். ‘அதெல்லாம் நூல் கேசுடா,’ என்றான். அதென்னடா நூல் என்றேன். சிகரெட்டை முழுதாக இழுத்துக்கொண்டு, மேல்வானத்தைப் பார்த்தபடியே பொறுமையாக மூச்சுவிட்டு, குதர்க்கமான சிரிப்புடன் விச்சு சொன்னான்: ‘ஒருநாள் இதே ரெஸ்டாரண்டு. எதிரே நாற்காலி காலி. ‘எக்ஸ்க்யூஸ் மி,’ என்றபடி ஓர் இளைஞன் வந்தான். ‘யாராவது வர்றாங்களா? இங்க ஒக்காரலாமா?’ என்று கேட்டான். ‘ஓ! தாராளமா,’ என்றேன். ‘லைட்டா டீ,’ என்று டேபிளைத் தட்டிச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, ‘நூல்,’ என்றான். எனக்குப் புரியவில்லை; என்னது? என்றேன். ஒருமாதிரிச் சிரித்தபடி டேபிளுக்குக் கீழே பார்வையைச் செலுத்தி, மறுபடி உயர்த்தி ‘நூல்’ என்றான். இதென்னடா விபரீதமாகப் போகிறதே என்று நினைத்துக்கொண்டே, என்ன வேணும்? என்று கேட்டேன். இப்போது அவன் விழியும், சிரிப்பும் சற்று விகாரமாகி கொஞ்சம் சிலிர்த்துக் கொண்டே குரலை உயர்த்தி மீண்டும் ‘நூ..ல்..’ என்றான். நான் எழுந்து விட்டேன். அவன் பேண்டில், தொடைப்பகுதியிலிருந்து ஒரு நூலை நீளமாகப் பிய்த்துக் கொண்டிருந்தான். ஆஹா! இன்று நமக்கு நேரம் சரியில்லையே என்று நான் எழுந்து நழுவப்பார்த்தால், அவன் ‘நூல்..நூல்.’ என்று தலையை ஆட்டிக்கொண்டே பெரிதாய்க் கூச்சல் போட்டான். நான் தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓட்டமாக ஓடி எங்கோ ஓரத்திலிருந்து பார்க்கும்போது அவன் சட்டை கிழிந்து போயிருந்தது. ஓட்டல் சிப்பந்திகள் அவனைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.”

    எனக்குக் கதிகலங்கியது. அதேசமயம், விச்சுவைப் பொறுத்தமட்டில், கண்டதும் காணவிரும்புவதும் ஒன்றுதான் என்றும் பட்டது. உடனே என் எண்ணத்தை மோப்பம் பிடித்த அவன், ‘என்ன நம்பலியா?’ என்று புருவத்தைச் சுருக்கிக் கேட்டான். ஒருமாதிரியாக சமாளித்துக்கொண்டு அவன் ‘நூலாகி’ விடும்முன் எழுந்து வந்தேன்.

    அப்பாவைக் கேட்டாலோ, வழக்கமான கிண்டல்தான் பதில், “இனம், இனத்தோடுதானேடா சேரும்?!” என்றார். முறைத்தேன்; காரணம் புரிந்து, தலையசைத்துச் சிரித்தார்.

    எதையும் பற்றி எவரையும் கேட்பதைக் காட்டிலும், கவனமாகப் பார்ப்பதே நன்று. இல்லையெனில், வெகுநாட்கள் இன்னொருவரின் அனுபவத்தில் சவாரி செய்ய வேண்டியதாய்ப்போகிறது. சவாரி இலவசம்தான் என்றாலும், கால விரயம் என்பது கடுமையான விலைதானே! அதுபோல, வெளியே பார்ப்பதோடு நிறுத்தாமல், உள்ளேயும் கொஞ்சம் எட்டிப் பார்த்தால், ஆ! எல்லாம் துல்லியமாகவே தெரிகிறது!

    உள்ளே பார்த்ததை ஊருக்குச் சொல்லப் புகுவதும் ‘நூல்’தானோ? பிரித்துப் பார்ப்போம்!

    குண(வி)சித்திரங்கள் (3)

    ஒன்றையே பற்றி ஊசலாடுவாய்

    ஒன்றில் நில்லாமல் அடுத்தடுத்துலாவுவாய்

    (பாரதியார்)

    ஓயாமல் சஞ்சலத்தில் இருப்பதே மனதின் இயல்பு. அசைவு, மனதின் தன்மை. எனவேதான், அதை நிறுத்த முனையும் முயற்சிகள் எல்லாம் தோற்றுப் போகின்றன. சற்றே யோசித்தால், மனம் என்பது எண்ணங்களே! வேறொன்றுமில்லை. ஆயின், எண்ணம் ஏன் நம்மை இந்தப் பாடு படுத்துகிறது? காரணங்களும் தெளிவாகத்தான் இருக்கின்றன! ஒன்று, எண்ணம் நம்வசத்தில் இல்லை. காலையில் நாயுடன் சாலையில் நடைபழகுவோரைக் கவனித்திருப்பீர்கள். வீட்டிலிருந்து இறங்கும் போது, கிரமமாய், செல்ல நாயை அழைத்துக்கொண்டுதான் இறங்குகிறார்கள். தெருவுக்கு வந்ததுமே, அது இவர்களை அங்குமிங்கும் இழுத்துக்கொண்டு போகிறது. கம்ப உந்துதல்கள், தெருக்காதல் இவை வேறு! நாய்படாத பாடு படுகிறார்கள்! நாம் எல்லோருமே இப்படித்தான். உறக்கத்திலிருந்து விழிக்கும் கணத்தில் எல்லாம் நன்றாய்த்தானிருக்கிறது. அடுத்தகணம், யாரோ தேனடையில் கல்லெறிந்தது போல, எண்ணங்களின் களேபரம். பிறகென்ன, நாய் வாக்கிங்தான்!

    எனவே, எண்ணங்களின் பின்னே கதியற்று நாம் செல்வது ஒரு காரணம். எண்ணங்களின் தொகை இன்னொரு காரணம்.

    மாணவ, மாணவியர் சீருடை தரித்து, அப்போதுதான் பூத்த மலர்களைப் போல, இளங்காலை ஒளியில் மின்னிக்கொண்டு, இளஞ்சிரிப்புடன், அணிவகுத்து வரிசையாக நின்றுகொண்டிருக்கிறார்கள்; ஆசிரியரின் கட்டளைகளுக்கு ஏற்ப அசைய, இயங்கக் காத்திருக்கிறார்கள். இது ஞானியின் மனம்.

    ஒரு படை திரண்டு வருகிறது; அது கோட்டையைப் பிடிக்க வேண்டுமானால் ஒரே வழிதான்; அதுவோ ஓர் ஒற்றைப்பாலம்; அங்கே ஒரு மாவீரன் நின்றுகொண்டு வெட்டிச் சாய்க்கிறான்; படை பின் வாங்குகிறது. இது யோகியின் மனம்.

    ஒரு திருமண வரவேற்பு. உற்றார், உறவினர், நண்பர்கள், பிரமுகர்கள், செல்வந்தர்கள், வேலையாட்கள், எளியவர்கள் எல்லோரும் வருகிறார்கள். நல்லவரும் தீயவரும் கூட நன்கு அலங்கரித்துக்கொண்டு வருகிறார்கள். வரவேற்பு வாசலில் நின்றுகொண்டிருக்கும் இளம்பெண், யார் வந்தாலும், அவர்கள் தெரியாதவர்களானாலும், அவர்கள் கவனித்தாலும் கவனிக்காமல் போனாலும், புன்னகை மாறாமல் பன்னீர் தெளிக்கிறாள்; கற்கண்டுத் தட்டுடன் காத்திருக்கிறாள். இது, பக்தனின் மனம்.

    இவையல்லாத எதுவுமே நம்ம மனம்தான்!

    புற்றீசல் போலப் புறப்பட்டு வந்துயிரைப்

    பற்றி வதைக்கின்ற பாழ்மனமே! வெற்றி

    உனக்கென்றால் வெட்கம்! எனக்கென்றால் சொர்க்கம்!

    மனமே! உனக்குண்டோ மாற்று?

    மனம் என்றால் எண்ணம்தான் என்பது புரியாத வரையிலும், எண்ணம் எங்கிருந்து வருகிறது என்று ஆராயாத வரையிலும், இப்படி வெண்பா எழுதிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! நாம் சோரச் சோர, தன்வலிமை அதிகரிக்கும் விபரீதம்தான் மனம். ‘மனமே தளை, மனமே விடுதலை,’ என்று கண்ணன் பார்த்தனுக்குச் சொல்கிறான். எனில் என்ன பொருள்?

    ஃ மனம் என்பது ஒரு சக்தியின் களம், அது ஒரு பொருள் அல்ல

    ஃ எண்ணமே மனம்; இடைவிடாத எண்ணங்களல்லாமல், மனம் என்று ஒன்று தனியாக இல்லை

    ஃ இயற்கையிலேயே புலன்களெல்லாம் புறம்நோக்கி அமைக்கப்பட்டிருக்கின்றன. புலன்வழியே மனம் சென்று, பொருள்மீது நின்று, அதன்பின்னே நாமும் அலைந்து, போதுமடா சாமி!

    ஃ மனம் அப்படியே இருக்க, நாம் சுதந்திரமாய் இருக்க முடியும். அந்த நிலை, நம் அன்றாட வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காது

    எனவே,

    எண்ணமல்லால் ஏதுமனம்? ஏறி அடக்கவோர்

    திண்ணமல்லார்க் கென்றும் திரை

    சரி, எங்கிருந்து வருகின்றன எண்ணங்கள்?

    புறத்திலிருந்துதான்! ஆமாம், எல்லா எண்ணங்களும் பொருள்சார்ந்தவையே. பொருளே புறம். புலனே அதைத்தொடும் கரம். தொட்டதும் எழுவதே எண்ணம். அதன்பிறகு நாம் இயங்குவதில்லை, எண்ணங்கள் ஓர் இயந்திரத்திலிருந்து வந்துகொண்டே இருக்கின்றன. எனவேதான், மனம் என்பது நுண்மையான பொருளே என்றும் சொல்கிறார்கள். நாம் பொருளன்று! பொருளை ஆண்டு இயக்கும் வல்லமை பெற்றதே மானிடத்தின் சிறப்பு.

    எண்ணம் வெளியிலிருந்து வந்தாலென்ன, வெளியூரிலிருந்து வந்தாலென்ன, நாம் புலிவாலைப் பற்றி மரத்தைச் சுற்றிக்கொண்டே வருகிறோமே அதற்கென்ன செய்ய என்று கேட்கிறீர்களா! எழுந்த எண்ணத்தின் பின்னே எதனால் கதியற்று அலைகிறோம்?

    ஃ எண்ணங்களின் வேகம்

    ஃ எண்ணங்களின் தொகை

    ஃ எண்ணங்களைப் பிடித்துக்கொள்ளுதல்

    ஃ வாசனை

    இவற்றைப் புரிந்துகொள்வது அப்படியொன்றும் கடினமில்லை; வருக!

    அனுமனைப் பற்றிச் சொல்லும்போது, வாயு வேகத்தைவிட மனத்தின் வேகம் பெரிது. அனுமன் அதைவிட வேகமானவன் என்கிறார்கள். என்ன பொருள்? வேகத்தை விவேகம்தான் வெல்லும் என்பதே! ஒன்று, பிள்ளையாராய் உட்கார்ந்துவிட வேண்டும். இல்லையா, ஓடுவதைத் தாண்டி எதிர்நின்று வசக்க வேண்டும். சாலையில், ஒரு மோட்டார் சைக்கிள் போகிறது; இளைஞன்; கொஞ்சம் போதையில் இருக்கிறான்; அவன் அன்றாடம் இரண்டு கைகளையும் விட்டுத் தலைகோதிக் கொண்டு கறுப்புக் கண்ணாடி வழியே காதல் வீசும் மகளிர் பேருந்து போய்விட்டது; அதைப் பிடிக்க வேகமாய்ச் செல்கிறான்; அங்கே 40 கி.மீ. வேகம்தான் அனுமதி; இவன் 70 கி.மீ. வேகத்தில் பறக்கிறான்; இவனைப் போக்குவரத்துப் போலீஸ்காரர் எப்படிப் பிடிப்பார்? விசில் ஊதி நிறுத்த முடியுமா? அவர் ஒரு 80 அல்லது 90 ல் பறந்து, ஒரு வளைவில் பயலை மடக்குகிறார். அனுமனுக்கு, ராமநாமம்தான் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள்.

    இது சரிப்படாது என்கிறீர்களா? அப்படியானால் பிள்ளையார் வழிக்கு வாருங்கள். ஆற்றங்கரை; அரசமரம்; எதிரே ஓயாத சலனம்; மேலே ஒழிவற்ற சலசலப்பு; வெய்யில், மழை, புழுதிக்காற்று; பக்தர்களின் இடைவிடாத கோரிக்கைகள்; திருட்டு; ஆனால், ஐயா அசைவதே இல்லையே! அதுபோல், எண்ணங்களின் தொகை, அவற்றின் வேகம் எப்படி இருந்தால் நமக்கென்ன, நாம் நாமாய் இருப்போமே, என்று இருக்கலாம்.

    இதுவும் ஒத்துவராது என்கிறீர்களா? என்னதான் உங்கள் பிரச்சினை? ‘எண்ணம் தோன்றுவது ஒரு புறம் இருக்கட்டும்; ஏன் விருப்பம், வெறுப்பு, ஆசை, பற்று இவையெல்லாம் தோன்றுகின்றன? இவற்றால்தானே கூச்சலும், குழப்பமும்?’ இருங்கள்! இதற்குமேல் எதுவும் நீங்கள் சொல்லவேண்டியதில்லை. எல்லாவற்றுக்கும் சேர்த்து பதிலைக் காண்போம்!

    விருப்பு என்பது என்ன? ஒரு பொருள், அல்லது ஆள், அல்லது ஒரு சூழ்நிலை மேல் நமக்கு ஏற்படுவது; அது நமக்கு வேண்டும் என்று தோன்றுவது. அவ்வளவுதானே? சாதாரணமாகத் தோன்றி மறையும் எண்ணத்திற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? இது, திரும்பத் திரும்பத் தோன்றும் எண்ணம்; ஒரே எண்ணம். திரைப்படத்தின் ஃப்ரேம்களைப் போல! பல ஃப்ரேம்கள் சேர்ந்ததுதானே ஒரு சின்னக் காட்சி? ஒரு பொருளின் மீது ‘தங்கி’ விடுவதால் எண்ணம் விருப்பமாகிறது. அது நமக்கு வேண்டும் என்னும்போது ஆசையாகிறது. அது நமக்கே வேண்டும் என்னும்போது பற்றாகி விடுகிறது. அதனால் அச்சமுண்டாகிறது. அதிலிருந்து இருமை என்கின்ற கவலை நேர்கிறது. ‘சொந்தம்’ என்கின்ற உணர்வு ‘பந்தம்’ என்கின்ற விளைவை ஏற்படுத்திவிடுகிறது. எதை நாம் பற்றிப் பயன்படுத்திப் பிறகு அதனிடத்தில் மீண்டும் வைத்துவிடவேண்டுமோ, அது நம் பிடரியைப் பற்றிக் கொள்கிறது. ஆழ்ந்து கவனித்தால், விருப்பே வெறுப்புக்குத் தளமாகிறது. அதன்பிறகு, சீற்றம், குழப்பம், புத்தி பேதலித்தல், பிறகு ஆளே தொலைந்து போதல் என்று தொடர்கின்றன தொல்லைகள்.

    நம் எல்லோருக்கும் இதுதான் பழக்கப்பட்டுப் போய்விட்டது. ஒவ்வொரு மனிதனும் ஊமைக் கவிஞனே என்றொரு பழமொழியுண்டு. இங்கே, எந்த மனிதனும், கொஞ்சம் ‘நூல்’ கேசுதான் என்று சேர்க்க வேண்டியிருக்கிறது. எண்ணத்தின் தீவிரம், அது தோன்றும் அந்த மனிதனின் வலுவின் அளவு, இதைப் பொறுத்தே ஒருவன் தெளிவானவனா இல்லை பைத்தியக்காரனா என்பது தீர்மானமாகிறது. கண்ணாடி முன்பு நின்றுகொண்டு நாம்செய்யும் கொனஷ்டைகள், யாருமில்லாதபோது செய்யும் குரங்குச் சேட்டைகள், குளியலறையில் நமது ஆள்மாறாட்டம், படுக்கையில் நாம் தழுவுபவர் – தழுவ விரும்புபவர், அங்குள்ள ரகசிய வித்தியாசம், நடக்கும்போது ஒரு குறிப்பிட்ட சிறுகல்லை விடாப்பிடியாய்க் கடைசிவரைக் காலால் எத்திக்கொண்டே செல்லுதல், பூட்டைப் பிடித்துத் தொங்கிப்பார்த்துத் தெருவைக் கடக்குமுன் எம்பியெம்பிப் பார்த்தல், ஒரு பாட்டைக் கேட்கும்போது நாமே அந்தக் கதாநாயகனாக பாவித்தல், சாதாரணமாய் இருக்கும்நாம் காரில் ஏறியவுடனேயே தோரணை மாறுதல், கையில் சரியான டிக்கெட்டு வைத்திருந்தும் பரிசோதகர் வரும்போது பயந்து முகம்வெளிறிப்போதல் — இப்படி எத்தனை எத்தனை நம்மில் இல்லை? இவையெல்லாம் அந்த ‘நூல்’ கேசுக்கு ஆதாரமேயல்லவா?

    இப்போது பாண்டியன் எக்ஸ்பிரசுக்கு வாருங்கள். அந்தப் பெரியவர் தன்னுடனும் பேசிக்கொண்டு, நமக்கும் முறையாகப் பதில்சொல்லிக்கொண்டு வந்தாரே! அவர் மனத்தில் ஒருவரால் ஏற்பட்ட காயம்; அதை அவர் ஆறவிட்டிருந்தால் அத்தோடு போயிருக்கும். ஈயைப்போல் காயத்தின்மேல் உட்கார்ந்து உட்கார்ந்து அது கசிந்துகொண்டே இருக்கிறது. விபரீதமாகச் சிரிக்கும் அந்தப் பெண்ணை நினைவிருக்கிறதா? அவளுக்கென்ன ஆயிற்று? ஏதோவொரு சம்பவம் உள்ளே ஆழமாகப் பதிந்துவிட்டது. அவளைப் பொறுத்தமட்டில், காலம் அந்தக் கட்டத்தைத் தாண்டிச் செல்லவில்லை. ஏனென்றால், அவள் அந்த சம்பவத்தைக் கடக்கவே இல்லை! அந்த நிகழ்ச்சி அதிர்ச்சிமயமானதாக இருக்கலாம். அதன் விளைவு, சிரிப்பாக இருக்கலாம். நெல், நாற்றாகப் படாதபாடு படுகிறது. வரும்போதே முழுதாக வந்துவிடுகிறது காளான். என்ன சொல்ல? ரகு, நம்மைப் போலத்தான். யாருமில்லாத போது, நம்மில் பலர் எப்படி இருப்போமோ அப்படித்தான் அவனும் இருந்தான். அவன், யாருமில்லை என்ற தைரியத்தில்தானே வறண்ட ஏரியில் பேசிக்கொண்டே வந்தான்? ஊதுவத்தி மாமா? அவர், சரியான ஊசிப் பட்டாசு. யாரும் அவரை எதுவும்சொல்லக் கூடாது. எளியாரை வலியார் மிதிப்பர் என்பது உலக நியதியன்றோ? அலுவலகத்தில் மேலதிகாரி இருக்கிறார். அவர்மேல் பலருக்கும் கோபம் இருக்கிறது. அது மதிய உணவு நேரத்தில் அக்கப்போராகத் துவங்கி வம்பளப்பில் முடிகிறது; வீட்டில் நம்மைத் தழுவவரும் குழந்தை மீது வெடிக்கிறது. அலுவலகத்திற்கு வெளியேயும் பல மேலதிகாரிகள் இருக்கிறார்கள். தபால்காரர், காய்கறி வியாபாரி, பூக்காரம்மா, பால்பையன், பஸ் கண்டக்டர், ஆட்டோக்காரர், சினிமா க்யூவில் முரட்டு ஆசாமிகள், இவர்கள் எல்லோருமே மேலதிகாரிகள்தான்! இவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். இவர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், நினைப்பை நிறுத்த முடியவில்லை. அழுத்தி வைக்கப்பட்ட கோபம், ஆளை லேசில் விடுவதில்லை. அதிகாரி, மறுபடி அழைக்கும்போது, நாம் சிரித்தபடிக் குழைவதும், அந்தக் கோபத்தின் விகாரமான, பரிதாபமான தோற்றமே! ஊதுவத்தி மாமாவுக்கு எப்போதும் கோபம்! தனிமையில் அவர்தானே ராஜா?! அதனால், தன்னைக் காயப்படுத்தியவர்களை வாய்க்கு வந்தபடி வைது, பளார் பளார் என்று கன்னத்தில் அறைகிறார். அதீதமான சினம், அவர் தோலில் வெள்ளைத் திட்டுகளாய்ப் பூத்திருக்கிறது. ரயிலில், நாம் முதலில் சந்தித்த பெரியவரும் அது போலவேதான்! என்ன, ஊதுவத்தி மாமா வெடி; இவர் மத்தாப்பு; ஆனால், பகிரங்கப்படுவதில் இருவரும் ஒன்றுதான். ராத்திரி ராத்திரி செண்டர் மணியாகிவிடும் ராமு? இயல்பில், அவன் மிகவும் கூச்சமுள்ளவன் என்று பார்த்தோம்; அவன் மனது மென்மையானது எனினும் தன்னைப் பற்றிய உயர்வான மதிப்பீடுகள் யாருக்குத்தான் இருக்காது? மது உள்ளே போனதும் அது வெளிப்படுகிறது!

    இந்தக் குண(வி)சித்திரங்களில் ரகு ஆரம்பம்; ‘நூல்’ உச்சம். இதில் இன்னும் எத்தனை எத்தனையோ வகைகள் இருக்கின்றன. அவ்வப்போது அவர்கள் இங்கே தென்படக்கூடும்!

    ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்பதை இன்னும் நுணுக்கமாகப் பார்த்துவைத்துக்கொள்வோம்..

    மனிதனின் அமைப்பில் ஒரு கிரமமான வரிசை உள்ளது. மிகச் சுருக்கமாகவேனும் அதை இங்கே தெரிந்து கொள்வது, அல்லது நின¨வுபடுத்திக்கொள்வது நம் அனைவருக்கும் நன்மை பயக்கும். வாருங்கள்!

    1. தூல உடம்பு

    அதற்கென்று ஓர் அறிவு இருக்கிறது. அது சிந்திக்கும் அறிவில்லை. ஆயினும், சிந்தனையில் வியப்பை ஏற்படுத்தக் கூடிய அறிவு. உதாரணமாக, பசிக்கிறது. பெரும்பாலும், அது உடலிலிருந்து வரும் சிக்னல். சில நேரம், அது வெறும் நினைப்பே! எப்படியோ, பசிக்கிறது. என்ன சாப்பிட வேண்டும் என்பதைச் சிந்தனைதான் நிச்சயிக்கிறது. எதை, எப்படி, எதனுடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பதை நாம் நிச்சயிக்கிறோம். கை, (சிலருக்குக் கைகள்!) சோற்றை வாய்க்குள் சேர்க்கிறது. ருசிபற்றி உள்ளே ஒரு விமர்சனம் நடக்கிறது. சாப்பாடு தொடர்கிறது. இதுவரை நம்செய்கை. பிறகு, உணவு செரிப்பது? சத்து உறிஞ்சப்பட்டு சேருமிடம் சேர்வது? வெளியேற வேண்டியவை பிரிக்கப் படுவது? இவைபோன்ற கணக்கற்ற செயல்கள் நமக்குள்ளே நடக்கின்றன. நாம் செய்வதில்லை. இதை body intelligence உடம்பின் அறிவு எனலாம்.

    2. புலன்கள்

    முன்பே கண்டதுபோல், புலன்கள் வெளிப்புறமாய்ப் பொருத்தப்பட்டிருக்கின்றன. புறம் என்பது, பொருள்மயமான உலகம். புலன்கள் மூலமே உலகத்தின் அனுபவம் ஆதாரப்பட்டிருக்கிறது.

    3. மனம்

    மனம் என்றால் எண்ணங்களே என்று பார்த்துவிட்டோம். புலன்களின் தொடர்பு மனமெனும் தளத்திற்குத் தெரியப்படுத்தப்படுகிறது. இந்தத் தொடர்பும், தெரிவித்தலும், இடைவிடாமல் நடக்கிறது; இரண்டுக்கும் இடையே கால இடைவெளியும் இல்லை. எனவேதான் எண்ணங்கள் ஓய்வதில்லை. கனவும் உறக்கத்தில் எழும் எண்ணக் குமிழ்களே!

    4. புத்தி

    மேல்மனம் எனலாம். முடிவுகள் எடுக்கப்படும் அலுவலகம். பட்டிமன்றம், விவாதம், மனசாட்சி, ரவுடிக் கட்டு உருவத்தின் ‘நல்லவனா வாய்ந்து இன்னாத்தக் கண்ட? வா ஒரு க்வாட்டரு ஏத்திகினு வெளாவரியா பேசிக்கலாம்,’ போன்ற அதிரடி ‘அறிவுரை’களை, தூய வேட்டி, துண்டு அணிந்து இன்னோர் உருவம் நீதி போதனை சொல்லி மாற்றுவது, நாம் சற்று வருத்தத்துடனே அதன்படி நடப்பது, இவையெல்லாம் புத்தி என்னும் மேடையில்தான்.

    கதவு திறந்திருக்கிறது. உள்ளே ஒரு தேள் கொடுக்கைத் தூக்கியபடி நல்ல காலாகப் பார்த்துப் போடலாம் என்று வருகிறது. கண் பார்க்கிறது; மனம், காட்சியைப் பதிந்து கொள்கிறது; இது தேள்; விஷமுள்ளது; விட்டால் கொட்டிவிடும்; அகிம்சையைக் காந்திக்கு விட்டுவிட்டு ஒரேபோடாய்ப் போடு என்ற முடிவை எடுப்பது புத்தி.

    குறுக்கீடு, அலசல், ஆராய்ச்சி எல்லாம் நடந்து முடிவும் எடுக்கப்படும் தளம் புத்தி. அதற்கு ஆதாரம் எது?

    5. சித்தம்

    மனச வாட்டுறது ரோசனதானே?

    மனுசன ஓட்டுறது வாசனதானே?

    விருப்பும் வெறுப்பும் வெறும் ஞாபகம்தானே?

    வேசம் மறந்துபோன வேதனதானே??

    சித்தம் ஞாபகங்களின் நூலகம். அங்கே இல்லாததே கிடையாது. நாம் தொட்டதும் நம்மைத் தொட்டதும், இப்பிறப்பும், முற்பிறப்பும். நம் தொடர்பான நமது அனுபவங்கள் அனைத்தின் பாதிப்பும் பத்திரமாகப் பாதுகாக்கப்படிருக்கும் தளம். காக்காக்கடி மிட்டாயிலிருந்து கடவுள் வரை, எல்லாம், ஓஹோஹோ எல்லாம் பதிவாகி இருக்கின்றன. அந்தப் பதிவுகளுக்கு சம்ஸ்காரங்கள் என்று பெயர்; அவையே குணங்களுக்கு ஊன்றுகோல். பதிவுகளுக்கு ஒரு போக்கு நேர்கிறது; அதை நிர்ணயிப்பதே வாசனைகள்; எளிதாய்ச் சொன்னால் நினைவுகள்.

    பொதுவாக, நம் அன்றாட வாழ்வில் நடக்கும் ஆயிரக் கணக்கான அனுபவங்கள் சித்தத்தை ஊடுருவுவதில்லை. கடவுள் என்று ஒத்துக் கொள்வீர்களோ, இயற்கை என்று வாதாடுவீர்களோ, எதுவானாலும் இங்கே இதற்கு ஒரு கும்பிடு போடுங்கள்! ஏதோ கொஞ்சநஞ்சம் உள்ளே போவதற்கே இந்தப்பாடு படுகிறோமே, எல்லாம் உள்ளே தங்கிவிட்டால்? நிலைத்த நரகமாகிவிடாதோ வாழ்க்கை?

    ஆனால், மிகவும் தீவிரமான ஆசைகள் சித்தத்தில் வேர்பிடித்துத் தங்கிவிடுகின்றன. கொலையுணர்வு, வெறித்தனமான ஆசைகள் இவை உள்ளே நுழைந்துவிட்டால் அவை வெளியே போவது மெத்தக் கடினம். அவை வேரூன்றிக் கொள்வதோடு, மற்ற எண்ணங்களை மங்கச் செய்து, தாமே பிடிவாதமாக நின்று பேயாடும். சென்ற வாரங்களில் நாம் சந்தித்தவர்கள் இந்த ரகம் இல்லை. பெரும்பாலும், அதிர்ச்சி, இயலாமை இவையே அவர்களது விசித்திரமான நடத்தைக்குக் காரணம். ஆனால், சித்த்த்தின் உள்ளே பேராசை, வெறி இவை நுழைந்துவிட்டால், அவர்கள் வெறியர்களாகி விடுகிறார்கள். அவர்களில் எல்லோருமே வெளியே அம்பலப்பட்டுவிடுவதில்லை. பலர், கைதேர்ந்த கிராதகர்களாக இருக்கிறார்கள். இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்பதுபோலிருக்கும் முகபாவம், பேச்சு. நடத்தை மட்டும் நரபலி கேட்கும் விதமாயிருக்கும்! மொழி, சாதி, பணம், பதவி என்று பலமுகம் பூணும் இந்த வெறியின் ஒரே நோக்கம் அழிப்பதே ஆளுமை என்பதே!

    சித்தம் என்று ஒன்று கிடையாது என்று சொல்வோரும் உண்டு. ஆனால், கடவுளைப் பற்றிப் பேசாத சமயங்கள் கூடச் சித்த சுத்தியே முதன்மையான தேவை என்கின்றன. விளக்கங்களில் சிக்காமல் நேரே வருவோம். சித்தம் என்பது கண்ணாடி மாதிரி. தூசு படியாத கண்ணாடி கிடையாது. துணிபோட்டு மூடிவைத்திருந்தாலும், திறந்தவுடனேயே துடைக்க வேண்டியதாயிருக்கிறது!. சலித்துப்போய் விட்டுவிட்டோமென்றால் அப்புறம் கண்ணாடி பார்க்கவே முடியாது. கண்ணாடி பொய்சொல்லாது. அப்படியே உள்ளது உள்ளபடிக் காட்டிவிடும். கொஞ்சம், கருணை காட்டக் கூடாதோ?! புத்தி எடுத்த முடிவு, உபசாரத்திற்கு ஜனாதிபதி உத்தரவுக்குச் செல்வதுபோல், சித்தத்திடம் காட்டப்பட்டு, செயல் நடந்து விடுகிறது.

    செயலின் விளைவு, தேகம், புலன்கள், மனம், புத்தி இவற்றுகில்லை! சித்தத்திற்கே!! எப்படி இருக்கிறது கூத்து! எனவேதான், சித்தத்தைச் சுத்தமாக வைத்திருப்பது மெத்த அவசியம்; சற்றுக் கடினமும் கூட. முன்பெல்லாம், பண்டாரம், காலையில் அன்னக் காவடி தூக்கிவருவார். கழியில் குலுங்கும் மணியொலி கேட்டு வீட்டிலுள்ளோர் வெளியே வருவார்கள். கழியின் இருபுறத்திலும் செம்புப் பாத்திரங்கள் இருக்கும். அரிசி, அச்சு வெல்லம் போன்றவை அவற்றில் போடப்படும். அந்தச் செம்புப் பாத்திரங்கள் தங்கத்தை மிஞ்சும்படியாக மின்னும்! அத்தனைப் பளபளப்பு! அப்படி, தினந்தோறும் அதைத் தேய்த்துத் தேய்த்துப் பளபளக்க வைத்திருப்பதுதான் பண்டாரத்தின் உழைப்பு! அதுதான் சித்த சுத்தி.

    சித்தமும் ஆன்மாவும் ஒன்றா, வெவ்வேறா என்ற கேள்வி இருக்கிறது. சித்தம், ஆன்மாவின் சூழல்; விளக்கைச் சுற்றியிருக்கும் வெளிச்சம் போல! எனவே, அவை இரண்டுபோல் தோன்றும் ஒன்று.

    தேகம், புலன்கள், மனம், புத்தி இவை நமது. சித்தம், ஆன்மா நாம்!

    நாம் பார்க்கும் பொருட்களின் வடிவத்தை மேற்கொள்கிறது சித்தம். அதன்மூலம்தான் நாம், இது நாற்காலி, அது ஆட்டுக்கல் என்றெல்லாம் தெரிந்து கொள்கிறோம். எதை, ஊன்றிப் பதியம் போடுகிறோமோ அதன் தோட்டமாகவே மாறிவிடும் தன்மை வாய்ந்தது சித்தம். அவரை நட்டால் துவரை முளைக்காது. உண்மையை ஊன்றுவோம்; அது ஓங்கி வளர, அதன் நிழலில் அமர்ந்து குழலூதுவோம்! மனித நேயத்தை ஊன்றுவோம்; அதன் மகத்துவத்தில் மனத் தூய்மை பெறுவோம்! சமூக நலனே வாழ்க்கை என்ற கொள்கையை ஊன்றுவோம்; அதுவே கோட்பாடாக விரிந்து நம் அனைத்துச் சிந்தனைகளையும் கொள்ளட்டும்!

    சித்தன் போக்கு சிவன் போக்கு என்கிறார்களே ஏன்? சித்தத்தில் எது தீவிரமாகச் சிந்திக்கப்படுகிறதோ, சித்தம் அதன்மயம் ஆகிவிடுகிறது என்பதைக் காட்டவே!

    அவனிவன் மற்றும் அவையிவை என்னும்

    கவனமே சோற்றினில் கல்

    அவனே இவனே என்னாமல் சிவனே என்றிருந்தால் சித்தமெல்லாம் சிவமயமே! அதன்பிறகே எல்லாம் அவன்செயல் என்று சொல்வது பொருந்தும்!

    அந்தக்கரணம் என்று சொல்லப்படும் இந்த வரிசைக்கிரமம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. நம்மையும் பிறரையும் புரிந்துகொள்ளத் தேவையான அடிப்படைப் பாடமிது. இதைப் புரிந்து கொள்ளாமல், மனித நேயம், உலக சமாதானம் என்பதெல்லாம் வெறும் முழக்கங்களாய் முடிந்துபோகும். விரித்தால் விகாரப்படும் என்பதாலேயே மிகச் சுருக்கமாக இங்கே சொல்லப்பட்டது. இன்னும் சுருக்கமாகச் சொல்வதானால்,

    சித்தரும் பித்தரே பித்தரும் சித்தரே

    தத்தம் குரலளவே தாம்.

     படத்திற்கு நன்றி:

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF

    Share
  • மதுரையில் நடந்தது (35 ஆண்டுகளுக்கு முன்பு)

    இசைக்கவி ரமணன்

    meenadsi-suntharar

    ( பல வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த ஒரு சம்பவம். இதைப்பற்றி, என் கருத்துக்களோ, விமர்சனங்களோ எதுவும் இடவில்லை. நேரடிப்பதிவு போதும் என்பது என் நம்பிக்கை!)

    மீனாட்சி அம்மன் கோவில். ஆடிவெள்ளிக் கிழமை. அதற்குமேல் வார்த்தைகள் அனாவசியம்!

    நெரிசலில் சிக்கி, எட்டிப்பார்த்து, அத்தனைக் கூச்சல், வியர்வை, அவசரத்தின் நடுவிலும், அந்த இடையொசிந்த அழகியையும், அவள் காலடியில் கிடக்கும் மலரையும், அதில் என்னையும் கண்டு, ஒரு துளி விம்மி, விழிகளின் விளிம்புகள் சூடாகி, காக்கித் தொண்டர்களால் கெளரவமாக விரட்டப்பட்டு, குங்குமத்தை வியர்வை கரைக்க, பிராகாரக் காற்றின் அணைப்பில் வெளிவந்தோம் நானும் நண்பர்களும். ஆசுவாசத்தில்தான் ஆயாசம் தெரிகிறது!

    பொற்றாமரைக் குளத்தின் கரையில் உட்கார்ந்து தேங்காய் மூடியை உடைத்தோம். எதிர்க்கரையில் ஒரு சின்ன கலாட்டா. அத்தனைக் கூட்டத்திலும் தெளிவாய் கவனத்தை ஈர்க்கின்ற அமளி. உடம்பு முழுக்க இறுகிய கோட்டுடன் ஒரு குட்டையான மொட்டை ஆசாமி. பக்கத்தில் ஒரு கிழவி; பல்லில்லை; பிரார்த்தனை மொட்டை. அருகில், சீக்கிரத்தில் இளைஞனாகிவிடப் போகிற ஒரு பயல்.

    கிழவன், தலையிலும் வயிற்றிலும் மாறி மாறி அடித்துக் கொள்கிறான். கிழவி ஓவென்று கத்திக்கத்தி ஒய்கிறாள். பயல் வியர்வையில் விறைத்திருந்தான். அவசரமாய்க் கரையைச் சுற்றிவந்தோம். அதற்குள், அந்த மூவரைச் சுற்றி முளைத்திருந்தது ஒரு சிறு கும்பல். அதையடுத்த விபூதிப் பிள்ளியாரின் மேல், வாரிவாரித் திருநீறைப் போட்டபடிச் சுற்றிவந்த மனிதர்களும், கொஞ்சம் திரும்பிப் பார்த்துக் கொண்டு, தடுமாறிச் சுற்றினார்கள்.

    அந்த மூவரும் ஆந்திராவோ, வங்காளமோ, அசாமோ? இருக்கலாம். பொதுவான பழுப்பேறிய இந்தியக் கருப்பு. போதுமான விவரங்கள் சேகரிக்க முடியாதபடி பாஷை குறுக்கிட்டது. நாட்டில், பசிதான் தேசிய மொழி. அப்படி இப்படி அரைகுறை துபாஜிகளிடம் துருவினால், கொஞ்சம் விவரம் தெரிந்தது.

    images (1)

    மூட்டை முடிச்சுடன் வந்தவர்கள், பயலைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுக் குளத்தில் இறங்கியிருக்கிறார்கள். பயல், பராக்கு மட்டும் பார்த்துக்கொண்டிருந்த போது, மூட்டையிலிருந்த ஆயிரம் ரூபாயையும், ரெயில்வே பாசையும் எந்தக் களவாணியோ தட்டிக்கொண்டு போய் விட்டான். பிரித்த மூட்டையில், பிழிந்து, உலர்த்தாமல் காய்ந்த துணி விறகுகள்; ஊர் ஊராய்ச் சேர்த்த பிரசாத முடிச்சுக்கள்.

    பொங்கிப் பொங்கி அழுதான் கிழவன். கிழவி, திருடனைப் பார்த்ததாக எண்ணிக்கொண்டு, அவன் வேட்டி, அடையாளங்களை அபிநயித்துக்காட்டி, ‘இதோ, இங்குதான் அவன் சாய்ந்திருந்தான்,’ என்று சுவற்றைக் காட்டினாள். அதன் மேலே, ‘தனம் தரும் கல்வி தரும்’ என்று பட்டர் பாடிப் பக்தர் பதித்திருந்தார்கள். ‘உடனே கோவில் அலுவலகத்தில் முறையிட்டுப் போலீசுக்குச் சொல்லவில்லையா?’ என்று கேட்டது ஒரு காவிப்பல். ‘போலீஸ்’ என்பது கிழவனுக்குப் புரிந்தது. கோட்டை விட்ட பயலை அடிக்க முயன்று தோற்று அவனைத் தள்ளிவிட்டு, ஒரு மூட்டை போலத் துவண்டு துவண்டு ஓடினான். கிழவியின் அபிநயம் ஓய்ந்தபாடில்லை. அவளைப் பார்த்தால் அவன் அவ்வளவு கிழவன் போலத் தெரியவில்லை. சம்பாதித்தே தீரவேண்டிய அத்தியாவசியத்தின் திடம், அவன் வயதின்மீது போர்வை போர்த்தியிருந்தது. பயல், மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான். பணம் பறிபோனதைக் காட்டிலும் அது எப்படிப் போனது என்பதை விளக்குவதிலேயே விடாப்பிடியாய் இருந்தாள் கிழவி. மாறி மாறி அதே காட்சிகள்.

    போனவேகத்தில் திரும்பி வந்துவிட்டான் கிழவன். அதிகாரிகள் கைவிரித்துவிட்டார்கள். லயம் மாறாமல் அவன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ள, ஸ்ருதி மாறாமல் கிழவி புலம்ப, எதுவும் செய்யாமல் சிலையாயிருந்தான் பயல். ஆயிற்று, கும்பலில் ஆளுக்காள் ஏதேதோ சொல்லத் துவங்கினர். யாரும், பாதிக்கப் பட்டவர்களோடு பேசவில்லை.

    “பாவம் விதி!,” என்றார் ஒரு பெரியவர். அவரிடம் ஒரு தற்காலச் சாமியார்ப் பார்வை இருந்தது.

    “இல்லை ஐயா, இது தெய்வத்தின் சதி!.” என்று குறுக்கிட்டது இன்னொரு குரல். ஓர் அற்பனைப் பார்ப்பதுபோல் திரும்பினார் பெரியவர். அங்கே கைகளைப் பின்னுக்குக் கட்டிக்கொண்டு, மடித்த வேட்டியில், ஒருவர். உள்ளே, துவண்ட கருப்பு மேனி; கத்திக் கண்கள்.

    “தம்பி! கொடுப்பதும் எடுப்பதும் தெய்வத்தின் வேலை!,” என்றார் பெரியவர்.

    “ஆமாம்யா! கூரெயப் பிச்சிகிட்டுத் தெய்வம் கொடுத்ததெப் பாத்தவன் இல்லெ. கோவில்லியே புடுங்கிக்கற தெய்வத்தத்தான் பாக்கோம்,” என்றான் தம்பி.

    இடையே ஒரு பாம்படப் பாட்டி, “ஐயோ! மீனாச்சி! ஒன்னயப் பாக்க வந்தவளுக்கு இந்தக்கதி வேணுமா?” என்று துக்கத்தைப் பங்கிட்டுப் புலம்பினாள். பறிகொடுத்த கிழவி, இவளை அதிசயத்துடன் பார்த்தாள். மொழி புரியாவிட்டாலும், எண்ணம் புரிந்து விட்டது.

    “கர்ம வெனெயப் பத்திப் புரிஞ்சுக்கற அறிவு ஒனக்குக் கெடெயாது தம்பி!,” என்றார் பெரியவர்.

    “என்ன சாமி கெடந்து இளுத்துகிட்டே போறீவ? ஓடா ஒழச்சி வாயக்கட்டி வயித்தக்கட்டி ஒருத்தன் சம்பாதிக்கான். அத ஒரு களவாணிப்பய லவட்டிக்கிட்டுப் போராண். இதென்ன கர்மமா வெனயா?” என்றான் ஆத்திரமாக.

    “கர்மம்,” என்றார் பெரியவர் கம்பீரமாக. தம்பி, தலையில் அடித்துக் கொண்டான். சிலர் இதை ரசித்தனர்; சிலர் முணுமுணுத்தனர். ஆனால், இதில் அடுத்த கட்டம் என்னவென்று பார்ப்பதில் ஆர்வம் மேலிட்டு, நகராமல் நின்றனர்.

    அங்கே கிழவன், “மாயீ! துர்க்கே!” என்று புலம்பியபடி விமானத்தைப் பார்த்துப் பார்த்துக் கும்பிடு போட்டான்; குமுறி அழுதான்; பயலைக் கட்டிகொண்டு தூணோரம் சரிந்தான்.

    இங்கே, பெரியவருக்கு ரத்த அழுத்தம் அவ்வளவு சீராக இல்லை போலும், “ஒனக்கென்னடா தெரியும் தெய்வக் குத்தத்தப் பத்தி,” என்று சீறினார். பதிலுக்குத் தம்பி சொன்ன வார்த்தைகளை இணையத்தில் இடுவதற்கில்லை! கும்பல் மேலும் வம்புக்காகக் காத்திருந்தபோது, அந்தப் பாம்படப் பாட்டி, குரலைத் தூக்கினாள்:

    “என்ன ஆளய்யா நீங்க? ஒடயவன் பறிகொடுத்து நிக்கான்! ஆளுக்காளு ஒங்களுக்குள்ள என்ன அக்கப்போரு? என்ன பஞ்சாயத்து? அஞ்சோ பத்தோ அம்புட்டுப் பேருமாச் சேந்து மனசாரக் கொடுத்தமின்னா அவிக ஊருபோயாச்சம் சேருவாங்க இல்ல? அத விட்டுப்போட்டு இங்கிட்டு என்ன கரச்சல் வேண்டிக் கெடக்கு? இந்தா நான் தாரேன் ரெண்டு ரூவா! ஏதோ அந்தப் பயபுள்ளக்கு மிச்சருக்காவது ஆகும். வெட்டிப் பேச்சுப் பேசாமெ வேட்டியப் பிரிச்சுக் கொடுப்பீயளா..?” என்று பாம்படப் பாட்டி வெற்றிலைச் சுருக்கைப் பிரித்து ரூபாய்த் தாளை எடுத்தாள்.

    “ஈஸ்வரா,” என்று நகர்ந்தார் பெரியவர். பாட்டியை முறைத்தபடிப் பெரியவரை முந்தினான் தம்பி. தோசைக் கல்லில் விழுந்த வெண்ணைத் துளி போலக் கும்பல் பரவி மறைந்தது. பாட்டி எல்லோரையும் பார்வையால் எரித்தாள்.

    சரிந்த கிழவன் திடீரென்று அலையலையாய் அழ, கிழவிக்கு மூச்சுமுட்ட, பயல்முகம் பயங்கரமாகக் கறுக்க, பாம்படப் பாட்டி தழுதழுக்க எல்லாம் ஏதோ கண்ணாடி அறைக்குள் நிகழும் சத்தமற்ற சலனங்களாகத் தொய்ந்துகொண்டே போக..

    ஒரு சின்னக் குழந்தை கை நிறையத் திருநீற்றை வாரி அந்த விபூதிப் பிள்ளையார் மீது போட்டது.

    திறந்திருந்த அவர் கண்கள் முழுதும் திருநீறு மறைத்திருந்தது..

    ரமணன்

     

    Share
  • வாழ்க்கையெனும் பள்ளியிலே

    இசைக்கவி ரமணன்

    1, கண்விழிப்பு

    இயற்கை சேதி சொல்லும்

    வாழ்க்கை பாடம் புகட்டும்..

    10312554_10152094623552919_2699388480590915909_n

    உலகம் ஓயாமல் சுழன்றுகொண்டே இருக்கிறது; ஒழியாமல் சுற்றிக் கொண்டே இருக்கிறது. வீதிகளற்ற வானத்தில்தான் எதற்கு இத்தனை இயக்கங்கள்! வெட்டவெளிப் பொட்டலிலே கொட்டிக்கிடக்கும் வைரக்குவைகள்! ஆ! வெட்டவெளி¢, பொட்டலில்லை! ஒரு மகாகவியின் கற்பனைபோல், கணந்தோறும் விரிந்துகொண்டே இருக்கும் அண்டத்தில், வாழ்க்கை என்னும் வீம்பின் முரசம், பொட்டலைப் பூஞ்சோலையாக்கியிருக்கிறது. அதோ, முந்திவந்துவிட்ட அந்தக் குளிர்வீசும் முழுநிலவிலிருந்து, இந்த விரலளவுப் பறவைவரை ஒரே கரம்தான் ஆக்கியிருக்கிறது. இந்த முழுவானத்தின் மூச்சிலிருந்து, அந்தச் சின்னஞ்சிறு பூச்சியின் இதயத் துடிப்பு வரை ஒரே நோக்கம்தான் தொனித்துக் கொண்டிருக்கிறது.

    மொட்டை மாடியில் உள்ளங்கைகளைச் சேர்த்துத் தலையணையாக்கி நீல விதானத்தை மூலைக்கு மூலை பார்த்தாலும் வாழத்தலைப்படும் விசைப்புத்தான் வாசகமாகப் பதிந்திருக்கிறது. ‘சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு குமிழ்,’ என்பான் பாரதி. பிரபஞ்சத்தின் விரிவைக் கற்பனையில் சுருக்கப் பார்த்தாலும் உலகம் தூசளவு கூட இல்லை. இதில் எத்தனை நான்கள் நீக்கள் அவர்கள் அவைகள்! அண்டத்தின் விரிவும், ‘முடிந்தால் என்னைப் புரிந்துகொள்’ என்ற பாவனையில் ஒரு முழுநேரச் சவாலாய் அது இறைந்து கிடப்பதும் என்னை நிர்மூலமாக்கி விட்டது. இத்தனைப் பெரிய இருப்பில், நான் பரிகசிக்கத்தக்க இன்மையா? இல்லை; அப்படி இருந்தால், இந்தச் சித்தம் போதாத நிம்மதி எனக்கு வாய்த்திருக்குமா? அறிவென்று கொண்ட கயிறுகள் அறுந்தன; கண்ணாடி காட்டும் அம்மணம் போலத் தெரிந்த அறியாமையின் நிதர்சனத்தில் ‘இன்று புதிதாய்ப் பிறந்தேன்.’

    அறிவே சிம்மசொப்பனம்

    அறியாமை சிம்மாசனம்!

    சோறுதின்ன அடம்பிடித்த வேளையில், அம்மா என்னெல்லாம் கதைசொன்னாள்! ‘அதோ பார்! நிலா அந்தத் தென்னங் கீற்றில் வந்து உட்கார்ந்துகொண்டு உன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறது!.’ அட ஆமாம்! அப்படித்தானே இருந்தது, இந்த அறிவு என்னும் காற்றுவந்து அசைக்கும் வரை!

    மறுபடி மறுபடி ஒரே காட்சிதான். பாசையால் கட்டுண்டு அசையாமல் கிடக்கும் குளம். அதன் அடர்த்தியும், நிலைப்பும் ஈர்க்கின்றன. அதில், முகம் தெரிவதற்கில்லை. அதுவே முகமாகத் தெரிகிறது. என் முகம் கரைந்து அதனோடு கலக்கும் தருணம், எங்கிருந்தோ ஒரு கல் வந்து அதன் மையத்தில் விழுந்தது.

    அப்போது துவங்கிய அலைகள் இன்னமும் நிற்கவில்லை. சுருள்சுருளாக, வளையம் வளையமாக அவை தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

    ஆடாத கொளத்துத் தண்ணி

    அறியாம எறிஞ்சகல்லு

    ஆளெத் தொரத்துதம்மா அலையலையாக…

    பூமியில் புதைந்து கிடக்கிறது வித்து. உயிர், அதிலே உறங்கிக்கொண்டிருக்கிறதா, அல்லது ஏதேனும் ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதா என்று நிர்ணயிக்க முடியாது. விண்ணிலிருந்து வருகிறது மழை. ஏதோ ஒரு துளி உள்ளே நுழைந்து உயிர் விழிக்கிறது, அல்லது சிலிர்க்கிறது.

    வினாக்குறியோடுதான் விதை முளைக்கிறது. ஒரு சித்திரச் சோலையையே உள்ளடக்கி இருக்கும் சிறுவிதையை எப்படிப் புதைத்தாலும், அது விழிப்புற்றதும் தலைதூக்கிப் பார்ப்பது பிரபஞ்சத்தைத்தான். அதன் கேள்வி, வையத்தைக் கண்டபின் எழுந்ததா, இல்லை அதன் விழிப்பு வினாவுக்குப் பின்பே ஏற்பட்டதா தெரியவில்லை. ஆனால், முரட்டு மண் சற்றே வெடிக்குமளவுக்கு ஒரு மூர்க்கம் இந்தச் சின்ன விதையில் எப்படி நேர்ந்தது? இன்று, கேள்வியே தன் வடிவாக அது நிற்பதன் தத்துவம்தான் என்ன? தொடரும் இலைகளும், கிளைகளும், அட ரகசிய வேர்களும் கூட அந்தக் கேள்வியின் விரிவுதானா?

    பல்வேறு கேள்விகள் போல் தோன்றுகிறதேயொழிய, கேள்வி என்பது ஒன்றுதான். அதனால்தான், அது ஆயிரக்கணக்கான பதில்களாலும் திருப்தியுறுவதில்லை. கேள்வி, ஒருபோதும் பதில்களால் தீராது. ஒரு நட்சத்திரம் போலவே, கேள்வியும் வெடித்துத் தோன்றி வெடித்துத்தான் மறையவேண்டும். என்றோ வாழ்ந்து முடிந்துவிட்ட விண்மீனின் ஒளி இன்றும் காணப்படுகிறதல்லவா? கேள்விக்கு இப்படியும் ஒரு பரிமாணம் இருக்கிறது. உள்ளே எழுந்த கேள்விக்கு விடை, வெளியே இருக்க முடியாது. அறவே விடை தெரியாமல் எழுவதில்லை வினா.

    விடை என்பது, வினாவுக்கு வெளியே இருப்பதற்கில்லை.

    இதைத்தான் வாழ்க்கையென்னும் பள்ளியில் கற்க வேண்டும். வாழ்க்கை, விபத்தன்று, ஒப்பற்ற வாய்ப்பு. அதற்கு முன்னும், பின்னும் என்ன என்பது நமக்கு அனுபவத்தில் வரவில்லை, கேள்விப்பட்டதுதான். எனவே, எந்தத் தகவலும் நெய்யாகி கேள்வியென்பது வேள்வித் தீயாய் வளர்கிறது! வாய்விட்டுக் கேட்பதற்கும் கேள்வி என்றுதான் பெயர். காதாரக் கேட்பதற்கும் கேள்வி என்றுதான் பெயர். இதற்கிடையே நெஞ்சில் நிரந்தரமாய் நின்றுவிட்ட நெருடலுக்கும் கூடக் கேள்வியென்றுதான் பெயர்!

    புறவாழ்க்கை என்கின்ற பொன்னான வாய்ப்பு, அகத்தின் கேள்வியைத் தகர்க்கக் கற்றுத் தருகிறது. இந்த வாழ்க்கை என்னும் பள்ளியில் எதை வேண்டுமானாலும் கேட்கலாம்! எந்தப் புறமும், எந்தக் கணமும் சேதிகளும், பாடங்களும் — விழைவுள்ள இதயம் தேடித் ததும்பிக் கொண்டிருக்கும் இந்த அழகான, விசாலமான — வகுப்பு, மதிப்பெண் போன்ற வம்பில்லாத பள்ளியில் நுழைந்து பார்க்கத்தான், இல்லையில்லை, கேட்கத்தான், தடையேது?!

    ***

    2. புலரிச் சேதிகள்

    ஓ! தெய்வீகக் காலையே!

    பறவைகள் கூடுவிட்டுப்

    பறக்கின்ற நேரம்

    உழைக்க விழிக்க வேண்டும் மனிதர்கள்!

    உயிரின் தேவைகள் நிறையவேண்டும்!!

    (ரிக்வேதம்:06:64:06)

    உஷையே! நீ புலர்கின்ற கணத்தை வசப்படுத்த முடியாமல் எங்கள் கவிதைகள் தோற்றன என்று கைவிரிக்கின்றன மறைகள். மையிருட்டிலே நீலச் சாம்பல் பூப்பது எந்தக் கணப்பின் சூட்டினால்? புலர்வு என்பது எந்தக் கணத்தின் நிகழ்வு? வெளியில் மட்டுமல்ல, நம்மிலும்தான் துயில் நீங்கி விழிப்பு நேரும் கணத்தை வகுக்க முடியுமா? வெளியே பூட்டு; உள்ளே சாவி; இதுதானே வைகறையின் நித்தியப் பரிகாசம்?! விழித்தால்தானே உறங்கியது புரிகிறது? அம்பலத்தில் ரகசியத்தை வைத்து வேடிக்கை பார்க்கிறது படைப்பு!

    ஆக, அதிகாலை, எந்தக் கேள்விக்கும் பதிலல்ல, புதிருமல்ல. அது விடிவு. அதைத்தான் தரிசனம் என்று கொண்டாடுகின்றன வையத்து வாழும் உயிர்கள்.

    காலை புலரும் கணம் நமக்குத் தெரியாதுதான். உறங்காமல் விழித்திருந்து பார்த்தாலும் அந்தக் கணம் கண்ணுக்குத் தென்படாதுதான். ஆனால், பறவைகளுக்கு இந்த ரகசியம் தெரிந்திருக்கிறது. கூடுகளில் துவங்கும் சலசலப்பும், புலரியின் முதற்கணமும் பொருந்துகின்றன. ஆனால், காடுகளில் ஒரு பொய்ப்புலரி உண்டு. விடியல் நேராமலேயே வானில் வெளிச்சம்போல் ஒன்று தோன்றுவதைக் கண்டு பறவைகள் குரல்தூக்கும். மீண்டும் இருள் வந்துவிடும். வெட்கிய புள்ளினம் மார்பின் இறகுகளுக்குள் முகத்தை இறுகப் புதைத்துக் கொள்ளும். எது எப்படி இருந்தாலும், பறவைகளுக்குப் பகலவன் வரவு முன்கூட்டியே தெரியும். தங்கள் சின்னஞ்சிறு நெஞ்சங்களிலிருந்து உயிரைக் கானமாய்க் கரைத்துப் பாடும் பறவைகளின் குரல்கேட்கவே கதிரவன் எழுந்து வருகிறான் என்றே சொல்லத் தோன்றும்.

    கதிரவனின் முதற்கிரணங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவை, முதலில் உயிரை வருடிப் பிறகே உடலைத் தொடுகின்றன, மழை போல! கட்டிடங்களும் தூங்குகின்றன என்பது அந்தத் தருணத்தில்தான் தெரிகிறது! மரங்கள், இமையுயர்த்திக் கிழக்கைப் பார்க்கின்றன. மொட்டு, முகையவிழ்ந்த உல்லாசத்திற்குப் பனிமுத்தம் பெற்று, அழகில் ஆயாசம் சேர்த்துக்கொள்கிறது. குடிசையிலிருந்து எழுந்து நிற்கும் புகை, கொடியசைப்பாய்ப் படுகிறது. சேவலின் கூவலில் சேதி தெரிந்த கர்வம் இருக்கிறது. வைகைறை மர்மம் எனக்குத் தெரியும் என்றுதான் அது மார்புயர்த்திச் சிறகுகளை அடித்துக்கொண்டு, சிவந்த கண்களால் பார்க்கிறது. களைத்த அலைகள் கரையில் தொப்பென்று விழுகின்றன. கடலின் நட்ட நடுவில் தங்கப் பாதை தோன்றுகிறது; அது வெள்ளிச் சரிகையாவதற்குள் கட்டு மரங்கள் நெடுந்தூரம் சென்றுவிடுகின்றன. சில, திரும்பி வருகின்றன. மண், சற்றே வியர்த்ததுபோலிருக்கிறது. எருமைகள் வால் விசிறிக் கொண்டிருக்கின்றன. கொசுக்கள் தூங்கப் போயின. ஏதோவொரு சேதியுடன், வீதியில் நுழைகிறது காற்று. நோயாளிக்கு ஒவ்வொரு நாளும் இதுதான் உயிருக்கு ஒத்தடம் தரும் மருந்துக் கணம். இரைதேடப் பறக்கும் முன், எல்லாப் பறவைகளும் உற்றுப் பார்க்கின்றன கிழக்கை. பிறகு, நேற்று மாலை விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடங்குகின்றன. வயசாளி, திண்ணையில் அமர்ந்து வாழ்க்கையைப் பார்க்கிறார். ஓ! நினைவில் நீந்தவும் வெளிச்சம் தேவைப்படுகிறது!

    மேலுலகிற் தான்பிறந்த

    வானுலகின் வண்ணமகள்

    வரும்போதே இருள்விரட்டி

    வருகின்றாள்!

    ஆழ்துயிலில் புதைந்திருக்கும்

    மானுடரை எழுப்புகிறாள்!

    தேசு மிகுந்த தன்

    தெளிவழகால் இவள்

    துன்ப இருளைத்

    தொலைக்கக் காணுகின்றோம்

    உறுத்தும் இருளை

    ஊடுருவி ஊடுருவி..

    (ரிக்வேதம்:07:41:07)

    காலை வரும்போதே, துயிற்சுருளில் தொலைந்துபோன மனம், மறுபடி மேலே வருகிறது. காலை என்ற ஒன்று இல்லையென்றால், உலகத்தில் வேலை இல்லை. ஏன், வாழ்க்கையே இல்லை. உடம்பில் உயிரும், சித்தத்தில் பிரக்ஞையும் காலையின் கொடைகள். அறிவு, கதிரவனின் ஈகை. காலை இல்லாமல் காட்சி எங்கே? காட்சி இல்லாத ஓர் உலகத்தைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. உயிரின் நடப்பே உலகத்தின் நடப்பு. அந்த உயிரின் ஒளி, காலையிலிருந்தே பெறப்படுகிறது.

    நிதானமாய் விரைக! இந்த மர்மம் பொலிந்த திறமை, விடியலுக்கு இயல்பு. அதோ, அந்தப் பட்டிக்காட்டுக் குரலைக் கேளுங்கள்:

    ஓர முள்ளுக் காட்டுக்குள்ள

    ஒத்தக் குயில் கூவையிலே

    நெட்டுக்குக் கெழக்குப்பக்கம் செவக்கும்! பொழுது

    நிமிசம் நிமிசமா விடியும்..

    ஆம், ஒவ்வொரு நிமிடமும் தலைப்பு மாற்றிக் கொள்கிறது வானப் புடவை. மஞ்சள், வெண்மையாய் மாறுவதற்குள் முடிந்து விடுகிறது சூக்குமம். அதன்பிறகு தொடர்ந்த வெள்ளோட்டமே! ஒவ்வொரு நாளும் புதிதாய்த் தெரிவதற்கும், ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையின் வாசகமாய் மானுடம் எதிர்நோக்குவதற்கும், காலையின் உயிரொளியே காரணம். நேற்றைய பிரச்சினைகள் இன்று இல்லாமற் போவதில்லை. ஆனால், நேற்று தோன்றாத தீர்வுகள் இன்று துளிர்க்குமென்ற நம்பிக்கையைக் காலைதானே தருகிறது! நிகழ்ந்த துயரம் அப்படியே இருக்க, நேர்ந்த சுமைமட்டும் விலகிவிடக் காரணம், வைகறையின் ஆதுரக் கரங்கள்தான்! இன்றிலிருந்து எல்லாம் சரியாகி விடும் என்று தினமும் நமக்குத் தோன்றுவது, அறிவாலோ, ஆருடத்தாலோ அல்ல, அனைவருக்கும் பொதுவாய், அனைத்துக்கும் ஏதுவாய், நடுவானில் சுழலும் ஒளித்திகிரியன்றோ காரணம்! புதிய துவக்கம் என்ற எதிர்பார்ப்பை, சாத்தியத்தை ஏற்படுத்துவது கண்வழியே நுழைந்து உயிரில் விளக்கேற்றும் சூரியனின் அருளன்றோ! எத்தனை யுகங்களாய் இந்தக் கதிரவன் கணம்பிசகாமல் கீழைத் திசையிலிருந்து கிரணங்களை விரித்தபடி எழுகிறானே! இது, புதுமையா, பழமையா?

    எது உயிருக்கு விசைப்புத் தருகிறதோ, எது உள்ளத்திற்கு ஊக்கம் வழங்குகிறதோ. எது கண்களுக்கு வெளிச்சம் இடுகிறதோ, எது நம்பிக்கைக்கு ஆதாரமாய் விளங்குகிறதோ அந்தப் பழமைதான் புதுமை! நம்மை எதெல்லாம் பலவீனப்படுத்துமோ, அவையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டிய பழமை.

    இப்படிப்பட்ட அற்புதக் காலையை, இன்பச் சேதிகளாக அள்ளித்தரும் கோலவெழிலைக் காணாமல் அனாதைப் பிணம்போல் துப்பட்டியில் தலைமூடிக்கொண்டு படுத்திருக்கலாமா? பறவைகளும், பாமரரும் காலை என்னும் எழிலோவியத்தின் அங்கங்களாகவே திகழ்கிறார்கள். இந்த அறைகூவலெல்லாம் ‘அனைத்தும் அறிந்த’ நமக்கே!

    காலைக் கவிதையை

    காக்கை ரசிக்கிறது

    என்று ஊசிகுத்துகிறார் கவிஞர் இலந்தை ராமசாமி.

    எழுக மன்னுலகே! எழுக மானிடமே! கடலில் குளித்தெழுந்த உஷையின் ஒப்பற்ற பேரெழிலைக் காணுமினோ! கண்ணில் தென்பட்ட கிரணங்கள், காலைப் பனியைக் கவர்ந்துகொள்ளும். உயிரில் நுழைந்த கதிர்கள், உள்ளத்தின் இருளை விலக்கும்.

    வாழ்க்கையென்னும் பள்ளியிலே காலைதான் முதல்மணி!

    *************************

    3. காக்கை குருவி

    காவென்று கத்திடுங் காக்கை – எந்தன்

    கண்ணுக் கினிய கருநிறக் காக்கை

    (பாரதியார்)

    கருப்பு கண்ணுக்கினிமையானதற்குக் காரணம் காக்கைதான். கண்ணன் நினைவு பிற்பாடு வந்ததுதான்! ‘காக்கை குருவி எங்கள் சாதி,’ என்று கவிஞர் மார்தட்டுவது சரிதான். இவையிரண்டும்தான் வீட்டுப் பறவைகள். என்றால், இவற்றை நாம் வளர்ப்பதில்லை. மாறாக, நம் வாழ்க்கைக்கு அவை எழில் சேர்க்கின்றன. கோழி, தின்பதற்காகத் தீனிபோட்டு வளர்க்கப் படுவது; மைனாவுக்கோ நமக்கு நாகரிகம் போதாது என்பதாக ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. அது பலகுரல்களில் நம்மைப் பற்றி வம்பளப்பதை நான் கேட்டிருக்கிறேன். எப்போதோ குறுக்கே கிரீச்சிட்டுப் பறக்கின்ற கிளிகளோ நம்மை ஒரு ஜந்துவாகக் கூட மதிப்பதில்லை. இரட்டைவால் கருங்குருவி மின்சாரக் கம்பத்தை விட்டு இறங்கினால் அது விட்டில் பூச்சியைப் பிடிப்பதற்காகத்தான். எழுத்து மறையும் அந்தி நேரத்தில் வானில் இங்குமங்கும் அது பாய்ந்து பாய்ந்து பறப்பதைப் பார்த்திருக்கிறீர்களோ? நம் கண்ணுக்குப் பறவையே தெரியாது, அது கொத்திக்கொள்ளும் பூச்சியா தென்படப் போகிறது?! இவற்றில் எந்தப் பறவையும் வீட்டுக்குள் நுழைவதில்லை.

    காக்கையும், குருவியும்தான் நம்மோடு வாழ்பவை. காவல் நாயும் சரி, தெருநாயும் சரி, யார் வந்தாலும் குரைப்பது போல், இந்த இரண்டு பறவைகளும் அப்படித்தான். நகரங்களில், நம்மை எழுப்புவது சேவலல்ல, காக்கைதான். எழுந்தவுடனேயே அது காட்டும் பரபரப்பைப் பார்த்தால் இது எப்படித் தூங்கும் என்றே கேள்வி எழுகிறது. எஃகு அலகு; எண்ணெய்ப் பளபளப்பு. நான்கு வயதில், காக்கை-வடைக் கதையை எனக்கும் சொன்னார்கள். வீட்டிலே வடைபோட்டிருந்தார்கள். ஒருகையால் எப்போதும் முரண்டுபிடிக்கும் அரைநிஜாரைப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையில் வடையை ஏந்தி ‘கா..கா..’ என்று கூவியதும் அலகால் அது தோள்பட்டையில் ஒரு கொத்துக் கொத்தி வடையைக் கவ்விக்கொண்டு பறந்தது. வெகுநாட்களுக்கு அந்த விழுப்புண் தோளில் இருந்தது. ஆனால், எனக்குக் காக்கை மீது எந்தக் கோபமும் கிடையாது.

    ஏதாவது கொடுப்பதாயிருந்தால் அதை விட்டுவிட வேண்டும்; கையில் வைத்துக்கொண்டு கூவுவது கொடுத்ததாகாது, அது அநாகரிகம் என்பதுதான் வாழ்க்கை என்னும் பள்ளியில் நான் கற்ற முதற்பாடம். அதைக் காக்காய்தானே சொல்லித் தந்தது!

    இப்போதெல்லாம் அதற்கு வீட்டில் விசேடமான ஏற்பாடு. எவர்சில்வர் தட்டொன்றை இரும்பு வளையத்தில் இறுகச் செருகி வைத்திருக்கிறது; அடுத்தொரு சின்ன வளையம். அதில் ஓர் அகலக் கிண்ணத்தில் தண்ணீர் வைத்திருக்கிறது. கூவவெல்லாம் வேண்டியதில்லை. நாம் தட்டின் அருகே வருவதை ஆயிரம் கண்கள் பார்க்கின்றன. காக்காய்க்கு அரைப்பார்வையா, யார் சொன்னது? ராமாயணத்தில் வரும் அசுரனுக்கும், எம்மோடிருக்கும் வன்னக் காக்கைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. நேரம் தாமதமானால், நேரே வந்து தட்டைத்தட்டும். காலைப் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தோமானால், நம்மை ‘என்ன இன்னும் ஒண்ணும் காணும்? காப்பி மட்டும் சரியாய் நடக்கிறதோ?’ என்பதுபோல் பார்க்கும். உடனே உள்ளே சென்று அதற்கென்றே தினந்தினமும் வாங்கிவைக்கும் ரொட்டியைத் துண்டுதுண்டுகளாகச் செய்து போடுவோம். ஒவ்வொரு காக்கையாய்த்தான் தின்கிறது, நான்கைந்து சேர்ந்து வந்தாலும். இடநெருக்கடி மட்டுமன்று, இதில் அழகான முறைமை ஒன்றிருக்கிறது. சில, ஒரு துண்டோடு ஓடிவிடும். இன்னும் சில, ஒவ்வொன்றாய்ப் பல துண்டுகளை அடுக்கிக்கொள்ளும்! ஆனால், ஒவ்வொரு காக்கையும் ரொட்டித் துண்டை, பக்கத்திலிருக்கும் கிண்ணத்துத் தண்ணீரில் நனைத்து மென்மைப்படுத்திக்கொண்டுதான் பறக்கும்! அவ்வப்போது, தட்டையும், கிண்ணத்தையும் கழுவிப் பளபளவென்று வைத்தால், காக்கைக்கு மகிழ்ச்சியுண்டு.

    மாடத்தில் உட்கார்ந்தபடி, ஏதேனும் கொஞ்சம் கொறித்தபடிக் காப்பி அருந்தும்போது, வந்து கிராதியில் உட்கார்ந்து, கழுத்தைச் சாய்த்து ஏக்கமாய்ப் பார்க்கும். அப்புறம் என்ன? 60% அதற்கு, மிச்சம் நமக்கு! பின்புறச் சுவர் அவை வரிசையாய் உட்கார வாகாயிருக்கிறது. அங்கே சிறப்பு என்னவென்றால், என் மனைவியின் கையிலிருந்து நேரே வாங்கித் தின்னும். அவளிழுக்க, அதுவிழுக்க பார்க்கவே சுவாரசியமாக இருக்கும். சிலநேரம், வெறும் ரொட்டிதானா என்று போராட்டம் நடத்தும். வேறெதாவது கொண்டுவந்தபின்தான், மறுபடி ரொட்டியைத் தொடும். சாதமும், பருப்பும், நெய்யும் கலந்துவைத்தால் காக்கைக்குப் பிடிக்கும். நெய் ரொம்பப் பிடிக்கும். ஆளில்லாத நேரத்தில், உணவு மேசை மீது வைக்கப்பட்டிருக்கும் நெய்ப் பாத்திரத்தை லாகவமாகத் திறந்து நெய்யுண்டு மகிழும்!

    ரொம்ப நாளாக ஒரு நொண்டிக் காகம் வீட்டுக்கு வந்துபோகும். அதற்கு மற்ற காகங்கள் சிரத்தையோடு பணிவிடை செய்வதைப் பலமுறை கண்டு அதிசயித்து நின்றிருக்கிறேன். என்னால் மறக்க முடியாத காட்சியது.

    கூடுகட்டிவிட்டால், காக்கைக்குக் குணம்மாறிவிடுகிறது. நம்மைக் கண்டாலே பிடிக்காமல் போகிறது. உணவெடுக்கும் போதும் முரட்டுத்தனமாகவே இருக்கிறது. நாம் வெளியே வந்தாலே, கூட்டைக் கலைத்து விடுவோம், குஞ்சுகளைக் கொன்றுவிடுவோம் என்று சந்தேகம் கொண்டு, பயங்கரமாகக் கூச்சலிடுகிறது. அலகால், இப்படியும் அப்படியும் மரத்தைக் கொத்திக் கோபத்தை வெளிப்படுத்துகிறது. தாயின் உணர்ச்சிகளை, பரிதவிப்பைக் காக்கை மூலம்தான் புரிந்துகொண்டேன். அந்த நேரங்களில் மொட்டை மாடிக்குப் போவதானால் ஹெல்மெட் அணிந்துகொண்டு செல்வதே நலம்! பருந்துக்கும் பேறுக்காலம் அதுதான் போலும்; அதுவும் தலையில் கொத்தத் தயங்குவதேயில்லை!

    ‘ஏன் இந்தப் பறவைகள் எல்லாம் அழகில்லாமல் இருக்கின்றன?’ என்பது காக்கையிடம் பொதுவாயிருக்கும் கேள்வி. அது எந்தப் பறவையையும் விரட்டுவது, பேட்டைத் தகராற்றினால் இல்லை. அழகுணர்ச்சிப் பிரச்சினைதான்! சும்மா இல்லாமல் கழுகை விரட்டக் கிளம்பிவிடும். கழுகு, உருவத்திலும், வலுவிலும் பெரியது என்றாலும், காக்காயைத் திருப்பித் தாக்காது. ஏனென்றால், காக்கை, கூட்டத்தோடு வரும். ஒரு பெரிய ரெளடிக் கும்பலைச் சமாளிக்கும் வலிமையெல்லாம் கழுகுக்குக் கிடையாது. காகமோ விடாமல் துரத்தும். கழுகென்ன செய்யும்? வட்டமிட்டு வட்டமிட்டுப் பறந்து மெல்ல மெல்ல, ஒவ்வொரு வட்டத்திற்கும் கொஞ்சம் உயரத்தை ஏற்றிக்கொண்டே செல்லும். அவ்வளவுதான்! ஒரு கட்டத்தில், தலைசுற்றிப்போய், உயரத்திலிருந்து காக்கை பறக்க முடியாமல் அந்தரத்தில் பல்டியடித்துக்கொண்டு விழும். கிட்டத்தட்ட மோதிச் சுக்குநூறாகிவிடும் தருணத்தில் எப்படியோ சமாளித்துக்கொண்டு, ஏதாவதொரு மரக்கிளையில் உட்கார்ந்துகொண்டு, மலங்க மலங்க முழித்தபடிக் கொஞ்சநேரம் இருக்கும். இதேபோல், அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு நடுவில், காற்றழுத்த மாற்றங்கள் உள்ள இடங்கள் உள்ளன. பறந்துவரும் காக்கை அங்கே சிக்கிக்கொண்டு தலைகுப்புற விழும்! எப்படியோ சமாளித்து விடுவதுதான் காக்கை கற்றுக் கொடுக்கும் சாமர்த்தியம்.

    காக்கைக்கு இயற்கையில் மரணமில்லை, விபத்தால்தான் சாகும் என்பார்கள். மூக்குச் சளியிலிருந்து முந்திரிப்பருப்புவரை எதையும் தின்னமுடிகிற காக்கை எப்படிச் செத்துப்போகும் என்று யோசனை நமக்கும் வருவதுண்டு. அண்டங் காக்கையைக் காட்டி அதுதான் கிருதயுகத்துக் காக்கை என்பாள் பாட்டி. கதைதான், ஒத்துக்கொள்கிறேன். ஆனால், இந்த வாழ்க்கையில் கதைதானே நம்பும்படியாக இருக்கிறது! பத்ரிநாத் 10,000 அடிவுயுரத்தில் இருக்கிறது. அங்கே காக்கைக்குக் காலும் அலகும் மஞ்சளாக இருக்கிறது. ஏன், கயிலை மலையருகே 16,000 அடிவுயரத்தில், அண்டங்காக்கைகளைக் கண்டிருக்கிறேன். சற்றே குரல் கம்மியிருக்கும் அவற்றின் இறக்கைகள் விசேடமாக இருக்கின்றன.

    ‘கொர்ர்ர்ர்’ என்றவொலி குறட்டைச் சத்தத்திற்கு மட்டுமல்ல, காக்கைக்கும் உண்டு. பள்ளியில் படிக்கும்போது இதை அறிந்தேன். ஓடுபோட்ட வகுப்பு; அதை ஊடுருவித் தாக்கும் உச்சி வெய்யில்; அப்போதுதான் உண்டு முடித்த புளிப்பான மோர்சாதம்; வகுப்போ தமிழிலக்கணம். வாத்தியார் வினையாலணையும் பெயர் என்னும்போது பக்கத்து மரத்திலிருந்து காக்காய் ‘கொர்ர்ர்ர்’ என்று ஒலியெழுப்ப, பெஞ்சே அணையாய் உறக்கம் நம்மை அணைக்கும். தாய்க்காகம் எத்தனை ஊட்டினாலும், போதாது குஞ்சுகளுக்கு. அவை இரைவேண்டிக் கத்தும்போது ஒரு சத்தம்; தாய், இரையை மசித்து வாய்க்குள் திணிக்கும்போது வேறொரு விதமான சத்தம். சில காகங்கள், நாயனக்காரர் சீவாளியைப் பரிசோதிப்பது போலும் சத்தம் எழுப்புவதுண்டு.

    மண்ணகலில் நல்லெண்ணெய் விட்டுத் தீபமேற்றியிருப்பார்கள். திருட்டுக் காக்காய், நனைந்த திரியைத் தூக்கிக்கொண்டு போய்விடும்! அதேபோல் பெரிய வாணலியில், கொதிக்கும் எண்ணெயில் முறுக்கு பொள்ளும்போது கொத்திச் சென்ற அதிசூரக் காக்காய்களையும் கண்டிருக்கிறேன்.

    காக்காய் இருந்தால் என்னைத் தனிமை கொல்லாது. அதற்குத் துக்கம் கிடையாது. எனவேதான் அதன் அணுக்கம் என் அமைதிக்குத் தோதாக இருக்கும். ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்,’ என்னும் தத்துவத்தைக் காகமல்லவா சொல்லித் தருகிறது! காக்காய்ப் பள்ளிக்கூடம் எல்லா ஊரிலும் பார்க்கும் காட்சிதான். ஆனால், பாடம் நமக்குத்தான். ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதுதான் பிரபஞ்சத்தின் பெரிய சேதி என்றாலும் நாம் கூடி வாழ்வதில்லை. காக்கைகளிடம், சின்னச் சச்சரவுகள் உண்டு, சண்டை கிடையாது. அவர்களில் ஒன்றிறந்தால், அவை கூடி எழுப்புகின்ற ஓலம், நம் கண்ணைத் திறக்கவேண்டும். எப்படிப் பதறுகின்றன தெரியுமா?

    தினந்தினமும் எனக்குப் பாடம்சொல்லி என்னைப் பக்குவப்படுத்தும் காகங்களில் ஒன்று மின்சாரம் தாக்கிக் கம்பியில் சிக்குண்டு கிடப்பதுதான் கோரமான காட்சி.

    சிட்டுக் குருவிகளை இப்போது காணவே முடிகிறதில்லை. அடுக்குமாடி, கேபிள் டி.வி. என்று அவை காணாமல் போனதற்குக் காரணங்கள் பல சொல்கிறார்கள். ‘சின்னத் தோகை, துளிக்கால்கள்,’ என்று பரவசம் கொள்ளும் பாரதி, சிட்டுக்குருவிதான் விடுதலையின் சின்னம் என்று கண்டு பாடியிருக்கிறார்.

    சின்ன வயது ஞாபகமொன்று. கிணற்றுச் சுவரில் ஒரு கணம் அமர்ந்திருக்கும்; மறுகணம் ஜிவ்வென்று கிணற்றுக்குள் குதித்துவிடும்; ஐயோ என்று பதறிக் குனிந்து பார்த்தால், தண்ணீரைத் தொடும் கணத்தில் விசுக்கென்று சிறகுகளை விரித்து, பூச்சியைக் கவ்விக்கொண்டு, கணப்பொழுதில் மேலே வந்துவிடும்! காக்கைக் கூட்டில் முள்ளிலிருந்து, சட்டை மாட்டும் ஹேங்கர் வரை எல்லாவற்றையும் பார்க்கலாம். குருவிக்கூடு சொகுசு மெத்தை! வைக்கோல், புல், பஞ்சு என்று ஏதெல்லாம் மென்மையோ அவற்றைக் கொணர்ந்து வனையும். இல்லையில்லை, அது எதைக்கொண்டு வந்தாலும், அதன் அலகு பட்டு மிருதுவாகிவிடும்! ஆண்குருவிக்குக் கண்ணில் மையிட்டது போலிருக்கும். பெண்குருவியின் இறகுகளில் புள்ளிக்கோலமிருக்கும். முன்பெல்லாம் அரிசிமாவால், வாசலில் கோலம் போடுவார்கள். குருவிகள் கூடிவந்து அதைத்தின்னுவதே அழகுக் கோலம்! அரிசி பிடிக்கும்; நெல்பிடிக்கும்; வெந்த சோற்றை விரும்பித் தின்னும். அதன்பின் இருக்கவே இருக்கின்றன புழுக்கள், பூச்சிகள்.

    மின்சார மீட்டருக்கு மேல் செருப்போடு வரும் அட்டைப் பெட்டியில் கதவு செய்து, உள்ளே துணி, பஞ்சு எல்லாம் சேர்த்து அதற்கு வீடு செய்திருப்போம். அதுவும் கச்சிதமாய் வாழும். அது மின்விசிறிக்கு மேலுள்ள கிண்ணத்தில் கூடுகட்டி, விசிறியில் அடிபட்டுச் சாவதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு. குருவிக் குஞ்சை மட்டும் பார்க்கவே சிரமமாக இருக்கும். இந்த ஜீவன் எப்படிப் பிழைக்கும் என்பது போல் தள்ளாடும் சின்னச் சதைத்துண்டாயிருக்கும். கொஞ்சநாள்தான்! பிறகு திடீரென்று பெரிதாகிவிடும். அம்மா, பறக்கக் கற்றுத்தரும் அழகே அழகு. வார்த்தையால் சொல்லும். நாலெட்டு முன்னும் பின்னும் நடந்து காட்டும். சற்றே பறந்து வந்து, இவ்வளவுதான் என்கும். அப்படியும் தயங்கும் குஞ்சைத் தள்ளிவிட்டுவிடும்!

    எனக்கு அணிலிடம் பிடிக்காத ஒரே விஷயம், அது குருவிக் கூட்டுக்குள் புகுந்து முட்டையைத் திருடிக்கொண்டு போய்விடுவதுதான். குருவிகள் பாவம், குய்யோ முறையோ என்று கத்தும். ஆனால், குஞ்சைக் கவ்விக் கொண்டு பறக்கின்ற காக்கையைத் தாயும் தந்தையும் ஆத்திரத்தோடு துரத்துவதைக் கண்டு மலைத்துப் போயிருக்கிறேன். உயரமும் எடையுமா வலிமை? வீரமும், வலிமையும் நெஞ்சில் இருப்பன, எதிர்க்கத் தயங்கவே கூடாது என்பதை எனக்குக் குருவிகளே சொல்லித் தந்தன. நமக்கென்ன ஆகிவிடுமோ என்ற எண்ணம் வந்துவிட்டால், பிறர்க்குத் துணைக்குப் போவது என்பது நடக்கவே நடக்காது.

    பிறக்கும் முன்னிலிருந்தே ஒவ்வொரு கணமும் ஆபத்து மயமாயிருக்கும் அவற்றின் வாழ்க்கை. ஆனால், ‘தின்று விளையாடி இன்புற் றிருந்து வாழ்வீர்,’ என்பதை எனக்குக் காக்கையும் குருவியுமே சொல்லித் தந்தன.

     

    Share
  • பரமகுரு பஞ்சகம்

    இசைக்கவி ரமணன்

     

    600_77363862

     

    சற்றுமெனை விலகாத வெட்டவெளியே! துளியும்
    தன்மை மாறாத களியே!images (2)
    சந்தடிமி குந்தவிடர் த்வந்தமெனும் சந்தையினில்
    தந்தையென வந்த தயவே!
    முற்றுமெனைப் பற்றும்வினைக் கற்றையினை ஒற்றைவிரல்
    இற்றுவிழச் செய்த விடிவே!
    மூலையி லிருந்தவனைச் சாலையினில் நடமாட
    முத்துரதம் தந்த நிதியே!
    அற்றுவிழும் அத்தனையும் வெர்றியெனச் சொல்லிவிழும்
    அற்புதம்நி கழ்த்தும் அருளே!
    அறிவுமறி யாமையென அலைபுரளும் அனுபவத்
    தடிநாத மான அழகே!
    உற்றுற்று நோக்கியே உயிர்மாற்றி உன்னையே
    உயிராக வார்த்த திருவே!
    ஒருநொடியும் உனதுதிரு வடிவழகை மறவாமல்
    உருகமனம் அருள்க குருவே!

    கத்துகட லாம்மனது கைகட்டி வாய்பொத்திக்Tamil-Daily-News-Paper_10747492314
    கண்களால் கவிபாடுதே!
    கசடுமிக வேமண்டி வசைகொண்ட என்சித்தம்
    காளாவி ளக்கானதே!
    புத்திதடு மாறிமலை யேறிமடு வீழ்ந்தகதை
    பொத்திச் சிரிக்கின்றதே
    புனைவான ஆணவமுன் புன்னகையின் சன்னலில்
    புகைந்துமணம் நீள்கின்றதே!
    மத்துகடைந் தேவெண்ணை தத்திவர மறவாமல்
    மொத்தமுமெ டுத்தகரமே!
    மணிவாயில் கொஞ்சமதை அணிபுரள வைத்துப்பின்
    மாந்தாமல் பார்க்குமழகே!
    பித்துக்கும் பக்திக்கும் சித்துக்கும் பேதைக்கும்
    பிரிவின்றிச் செய்தகுறும்பே!
    பின்னல் களைந்துபுதுப் பின்னலிடும் பம்மாத்தில்
    என்னசுகம் என்றன்குருவே!

    ஒருதுளியில் உயிராகி உருவாகி உடலாகிSO_155244000000
    ஓயாத துயரானதே
    ஒளியாகி இருளாகி மருளாகி உயிரெங்கும்
    ஒழியா அயர்வானதே
    கருவிலுயிர் நுழையுமுனர் இருந்தகதை காட்டினாய்
    கண்முன்பு படம்காட்டினாய்
    கதிகலங் கிச்சிதறி சிதிலமென நின்றவனைப்
    பற்றாமல் காத்தருளினாய்
    ஒருவாறு திருவிடியல் ஒழிவற்ற கடல்மீதில்
    புலர்வாகிப் பொழுதானதே
    ஒற்றையிழை யில்மொத்தம் பற்றியொளி யாய்மாறிக்
    கற்றைவி ரிக்கின்றதே
    அருளாளனே அன்பின் திருவாளனே! வேடம்
    அத்தனையும் புனையும் வேளே!
    அடியேனை ஆட்கொள்ளப் படியற்ற மலைநீங்கிப்
    படியேறி வந்தகுருவே!

    ஒருபோதும் மறவாத மனதும், அதன் மலைமடுவில்Om_-_Tamil
    ஒருசிறிதும் குறையாத நினைவும்
    ஒருதுளியும் மிஞ்சாமல் உருகுமுயிரும், கொஞ்சம்
    உருகும்நினை வான உணர்வும்
    இரவுபகல் அல்லாத இகபரமும் இல்லாத
    இடையில்நிலை யான நிலையும்
    இதயமலர் விளிம்பிலெழும் உதயத்தின் தறுவாயில்
    இசையாகும் மெளன நிலையும்
    ஒருநினைவு மறுநினைவு எனும்ஸ்ருதி விகாரங்கள்
    ஒட்டா தொழிந்த பேறும்
    ஒன்றுமே இல்லை நான் ஒன்றுமே இல்லையெனும்
    ஒருவிடிவின் கொடியேற்றமும்
    கருவபங்கங்களின் தலைநகர மானவுன்
    திருவடியில் கூடுமென்றே
    கணநேரம் கொண்டதாய் யுகநேரம் விண்டதாய்க்
    கண்ணீரில் நாணி நின்றேன்…

    தொலைவுநீ என்றெண்ணித் துயர்கொள்ள, தோள்தொட்டுத்
    தூவானத் தென்றலாவாய்
    தொட்டகரம் பற்றத் தொடுங்காலை ஏனோநீphoto
    தொடுவான மாய்ச்சிரிப்பாய்
    அலைகள்நீ என்றெண்ணி அயர்கையில் கால்களை
    அழகாய்ந னைக்கவருவாய்
    அந்தசுகம் மிஞ்சாமல் ஆழத்தைக் காட்டாமல்
    காட்டியெனை அயரவைப்பாய்
    சிலையில்நீ எங்கென்று கல்லாக நான்நிற்கச்
    சித்திரக் கண்சிமிட்டி
    சித்தத்தைச் சிலையாக்கி மொத்தத்தைக் கலையாக்கி
    சிங்கார மாக்கிவிடு வாய்
    மலையாவும் மலராகி மனம்யாவும் புலர்வாகி
    மல்லாந்தி ருக்கிறேன் நான்
    மறுபடியும் வீழுமொரு மழைத்துளியில் சிலிர்க்கவே
    மெளனத்தில் யுகங்கடந் தே!

    கண்டனன் என்றுவாய் கத்தவும் முடியாது
    கண்டிலன் என்பதும் பொய்
    கடல்தாண்டக்கடல்தாண்டக் கடல்மண்டும்பயணத்தில் கலமாக வந்தநீ மெய்
    விண்டனன் என்பதும் வீழ்ந்தனன் என்பதும்16702nk5_med-2
    விண்ணில்நி றம்போலப் பொய்
    வேதனையும்சாதனையும் போதனையும் இன்றியொரு
    வேடிக்கை பார்த்ததே மெய்
    கொண்டவித மறியாமல் கொள்ளைபோ குங்கதையில்
    கொண்டாட்டம் மிகவினிய பொய்
    கோயிலிலும் என்வீட்டுக் கொல்லைப் புறத்தும்நீ
    கூத்தாடி நிற்பதே மெய்
    உண்டவிதம் தெரியாமல் உண்டாலும் அமிழ்தாக
    உயிர்காக்கும் ஒற்றை மெய்யே!
    உண்மையெது பொய்மையெது ஒருசிறிதும் புரியாமல்
    உன்முன்பு நிற்கிறேனே!

    படங்களுக்கு நன்றி

    Share
  • மழை

    இசைக்கவி இரமணன்

    animation
    சிலநேரம் மழைவலுக்கும்
    சிலநேரம் கவிபொழியும்
    சிலநேரம் வலுவிழக்கும்
    சிலநேரம் களையிழக்கும்

    செப்பாமல் வருவதில்லை
    என்றாலும், ஆச்சரியம்
    தப்பாமல் பெய்வதில்லை
    தமிழ்போலத் தான்மழையும்!

    செல்லுங்கால் செப்பாமல்
    செல்கிறதே! விதியிலே
    நின்றேங்க வைக்கிறதே!
    நீளவிழி வழிகிறதே!

    வெட்டவெளியை ஒரு
    வேல்கடைந்து போட்டதுபோல்
    திரள்திரளாய்க் கருமேகம்
    வையத்தைச் சூழ்ந்துகொள்ளும்
    விழியிமைக்காதுற்று நிற்கும்
    தாங்கவொண்ணா அமைதியிலே
    தாரணி ஸ்தம்பிக்கும்
    தேவலோக மேகத்தைத்
    தென்னைமரப் பறவையொன்று
    சாவகாசமாய்ப் பார்த்தபடி
    சாம்பலற்ற வெண்சிறகால்
    சற்றே கிசுகிசுத்துச்
    சடுதியில் மறையுங்கால்
    மூடிவைத்த சங்கீதம்
    மொத்தமும் கவிழ்ந்துகொள்ளும்

    ஆயிரம்பல்லாயிரம்
    ஆனந்தப் பதங்கள்
    அத்தனையும் ஒவ்வொன்றாய்
    ஆச்சரியக் குறிகளாய்
    மண்தொட்டுச் சற்றே
    விண்ணெழுந்து மண்கலந்து
    விதியென்னும் மடைமாறி
    விரைந்து செல்லும்..

    கவிதையோ
    மண்ணிருந்து விண்சென்று
    மண்ணுக்கே திரும்பிவரும்

    சித்தக் கடலையாரோ
    சிலுப்பியது மூண்டெழும்
    சிறுபுத்தி தூளாகும்
    சிறுமனம் அல்லாடும்
    மொத்த உடலுமொரு
    மூர்க்கப்பேய் வசமாகும்
    விவரிக்க முடியாத
    வினோதத் தருணத்தில்
    உயிரைப் பலியாக்கி
    உலகின்பால் சென்றுவிழும்
    உதிர்ந்த உயிர் மீண்டும்
    உடலுக்குள் சென்று நெகிழ்ந்து
    அடுத்து பலியாக
    அண்ணாந்து காத்திருக்கும்

    மழையும் கவிதையும்
    மகாசக்தி அருட்கொடை
    மழையிலே மண்மகிழும்
    கவியிலே விண் நெகிழும்
    இரண்டுமே மானிடத்தில்
    இறைமையைக் காட்டிநிற்கும்

    மழைவந்து சென்றது

    கவிமுத்தம் பெறவேண்டி
    மனம் திறந்து கிடக்கிறது….

    02.06.2013/ஞாயிறு/21.00

    படத்திற்கு நன்றி:

    http://www.todanceintherain.com/about-the-author/

    Share