Tag: நிர்மலா ராகவன்

  • பாட்டி பெயர்

    -நிர்மலா ராகவன்

    முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்ததில் கொள்ளை மகிழ்ச்சி கோபுவுக்கு. ஆண்பிள்ளையானால், பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கொண்டு வயதானகாலத்தில் பெற்றோர்களைத் தனியே தவிக்க விடுவான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவனுக்கு.
    எல்லாரும் தன்னைப்போல் இருக்க முடியுமா? எவ்வளவோ வற்புறுத்தியும், அப்பா தான் வாழ்ந்த வீட்டைவிட்டு இவனுடன் வர மறுத்துவிட்டார். அதனால் என்ன? அவன் மனைவி தன் அம்மாவை மட்டுமின்றி, பாட்டியையும் அவர்களுடனேயே தங்க வைத்திருந்தாள்.

    பெண்களுக்குத்தான் இப்படி அரவணைத்துப் போகும் குணம் என்று யோசித்த கோபு மனைவி கர்ப்பமாக இருந்தபோதே அவள் வயிற்றுக்கருவிற்குப் பெயரும் நிச்சயித்துவிட்டான்.

    “குழந்தைக்கு என்ன பேருடா வைக்கப்போறே?” அப்பா கேட்டார்.

    ”பாட்டி பேருதான்!”

    அப்பாவுக்கு லேசான அதிர்ச்சி. “அந்தப் பேரையா வெக்கப்போறே!”

    “போங்கப்பா. ஒங்களுக்கு எப்பவுமே பாட்டியைக் கண்டா ஆகாது”.

    “அதுக்குச் சொல்லலேடா,” என்று எதுவோ சொல்ல ஆரம்பித்த அப்பாவை மேற்கொண்டு பேச விடவில்லை கோபு. “பாட்டி இத்தனை வயசாகியும் அவங்கம்மாவை தன்கூட வெச்சுப் பாத்துக்கறாங்க. ஏன், அம்மாகூடத்தான்! என் பொண்ணும் நாளைக்கு அப்படி இருப்பா!”
    மகள் வளர, வளர, அவளுக்கு எந்த குறையுமில்லாது பார்த்துக்கொண்டான் கோபு.

    மேல்படிப்புக்கு வெளிநாட்டுக் கல்லூரியில் உபகாரச்சம்பளத்துடன் இடம் கிடைத்தபோது அவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. ஒரே மகளின் நிழலில் எஞ்சியிருக்கும் சொற்ப காலத்தை வசதியாகக் கழிக்கலாம்.

    “ஒன் பொண்ணு எப்போ திரும்பி வராளாம்?”

    சோகமாக கணினியை முதியவர்பக்கம் திருப்பினான் கோபு. “எனக்கு அவ அனுப்பி இருக்கிற ஈ-மெயில். படிச்சுப்பாருங்கப்பா!”
    `எனக்கு இங்கேயே நல்ல வேலை கிடைத்துவிட்டது. இங்கு ரொம்ப குளிர். அம்மாவாலும் உன்னாலும் தாங்க முடியாது. அதனால என்ன! எப்போ வேணுமானாலும் ஸ்கைப்பில பாத்து பேசிட்டாப் போச்சு!

    இங்க என் பேர் ஒருத்தர் வாயிலேயும் நுழையறதில்லே. அதனால சுருக்கி வெச்சுக்கிட்டேன். லவ் யூ.
    ஸாம்’.

    படித்து முடித்த அப்பாவின் முகத்தில் சிறு புன்னகை. மகனைப் பார்த்துப் பரிதாபப்படாமலும் இருக்க முடியவில்லை.

    “ஏம்பா? ரெண்டு மூணு குழந்தை இருந்தா, யாராவது ஒருத்தரோட இருந்திருக்கலாம், இல்லியா? இப்போ அதுக்கும் வழியில்லாம போச்சு. நானும் அவளும் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பாத்துக்கிட்டு..!” பெருமூச்செறிந்தான் கோபு.”

    “அதுக்குத்தான் நான் மோதல்லேயே கேட்டேன், எதுக்கு பாட்டி பேருன்னு”.

    அவனுக்குப் புரியவில்லை.

    “பாட்டி பேரு என்ன, சொல்லு!” அவனை மடக்கிவிட்ட பெருமிதத்துடன் அப்பா கேட்டார்.

    “சம்பூர்ணம். தெரியாத மாதிரி கேக்கறீங்களே!”

    “ஒங்க பாட்டி அவங்க அப்பா அம்மாவுக்கு பதிமூணாவது குழந்தை. அவங்களுக்கு முன்னாடி பிறந்த ஏழெட்டு சின்ன வயசிலேயே செத்துப் போச்சு. குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுக்கவும் அவங்களுக்குத் தோணலே. இனிமே குழந்தையே வேண்டாம்னு சம்பூர்ணம்னு பேரு வெச்சாங்க. அதாவது, முழுமை அடைஞ்சிடுச்சு அப்படின்னு. பாட்டிதான் கடைசி!”

    சம்பூர்ணம் என்ற பெயர் வைத்தால், அதற்குப்பின் குழந்தைகளே பிறக்காதா?

    முதல் குழந்தைக்கே அப்பெயரை வைத்து, வேறு குழந்தைகள் பிறக்கவே வழியில்லாது செய்துவிட்டது தன் தவறோ?

    `நீங்க ஏம்பா மொதல்லேயே என்னை எச்சரிக்கலே?’ என்று அப்பாவைக் கேட்க நினைத்து, பின் வாயை மூடிக்கொண்டான்.

    `நான் சொல்ல வந்ததை நீ எங்கே முழுசா கேட்டே?’ன்னு அவன் மேலேயே பழியைத் திருப்புவார்!

    “ஸாம் என்கிற பேருதான் நாகரீகமா இருக்கு. இல்லேப்பா?” என்றான் கோபு.

    Share
  • தவறிழைப்பது ஆண்களின் பிரத்தியேக உரிமையோ?

    -நிர்மலா ராகவன்

    நலம்… நலமறிய ஆவல் – 148

     

    தவறிழைப்பது ஆண்களின் பிரத்தியேக உரிமையோ?

    `அவர் தானுண்டு, தன் காரியம் உண்டு என்றிருப்பார்!’ என்று சிலரைக் குறிப்பிடுவதுண்டு.

    `நான் செய்வதில் அநாவசியமாகக் குறுக்கிடாமல் இருக்கிறார்!’ என்று பிறரை மெச்சி, அதனால் எழும் நிம்மதி எல்லோருக்கும், எப்போதும் வந்தால் உலகின் கதி என்னவாகும்?

    கணவனோ, மனைவியோ, ஒருவரை ஒருவர் நிந்திக்கும்போது, `இது அவர்கள் குடும்ப விவகாரம்!’ என்று பிறர் ஒதுங்கிப்போவதால் நிலைமை மோசமாகத்தான் ஆகிறது. பிறர் குறுக்கிட்டால், தன்மானம் கருதியாவது ஒற்றுமையாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்களே!

    கதை

    எங்கள் எதிர்வீட்டிலிருந்து பெருங்குரல் எழுந்தது. ஆண்ட்ரூ தன் மனைவியை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டிருந்தான். (நாற்பத்து ஐந்து வயதிருக்கும். ஆனாலும், அவனது நடத்தையால் மரியாதை கொடுக்கத் தோன்றவில்லை). அடக்க ஒடுக்கமான மனைவியைத் தான் பழகும் விலைமாதர்களைப்போல் என்றெல்லாம் பழித்த அவச்சொல்லை என்னால் தாங்க முடியவில்லை.

    ஆக்னஸ் எனக்கு நெருங்கிய சிநேகிதி. `கணவனுக்கு அடங்கியிருப்பதுதான் நல்ல பெண்ணுக்கு அடையாளம்’ என்று பொறுத்துப் போய்க்கொண்டிருந்தாள்.

    அந்த அர்த்த ராத்திரியில் நான் மட்டும் தனியாக அவர்கள் வீட்டுக்குப்போய் தட்டிக் கேட்டால் நன்றாக இராது என்று, என் கணவரையும் எழுப்பி அழைத்துப் போனேன்.

    அவர்கள் வீட்டுக் கதவை நான் தட்டித் தட்டி உடைக்காத குறை. ஒரு வழியாக வந்து கதவைத் திறந்த ஆண்ட்ரூ, “அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் அவரவர் காரியத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் அவர்களைப் பாராட்டுகிறேன்!” என்றான், ஆத்திரத்துடன். `உன்னை யார் அழைத்தது?’ என்று சொல்லாமல் சொல்கிறானாம்!

    நான் அயராது, “என் கணவர் இப்படி என்னை வதைத்தால், அப்போது யாராவது உதவி செய்ய வந்தால், நான் நன்றியோடு இருப்பேன்,” என்றேன்.

    உள்ளேயிருந்து பெரிய விம்மல் கேட்டது.

    இருபது ஆண்டுகளாகத் தான் படும் பாட்டைப் பெற்றோர்களிடம்கூடக் கூறியதில்லை ஆக்னஸ். கணவனிடம் அப்படி ஒரு விசுவாசம். (வதை படுகிறவர்கள் வதைப்பவர்களைத்தான் முதலில் நாடுவார்களாம்). வெளிப்பார்வைக்கு கண்டிப்பும் கறாருமாக இருப்பதைப்போல் பாசாங்கு காட்டுவாள்.

    தவறு தன்மேல் இல்லை, தனக்கும் ஆதரவு காட்ட ஒரு சிலராவது இருக்கிறார்கள் என்று தெளிந்ததும், கணவனுக்கு எதிராக நடக்கும் துணிச்சல் வந்தது அவளுக்கு. விரைவிலேயே, மேற்படிப்பைச் சாக்காக வைத்து வெளிநாடு போனாள் – கணவனை (கயவனை?) தனியே தவிக்க விட்டுவிட்டு.

    பிறரது வாழ்க்கையில் எதற்காக குறுக்கிடுகிறோம்?

    நம் செய்கையால் ஒருவருக்கு நிம்மதியோ, மகிழ்ச்சியோ கிடைத்தால், அதைப் பார்த்து நாமும் எதையோ சாதித்ததுபோல் மகிழ்வு உண்டாகிறதே! இப்படி நடந்தால் இரு தரப்பினருமே பயனடைகிறார்கள்.

    சில சமயம், நாம் நல்லதென்று எதையாவது செய்யப்போய், அது எதிர்பாராத விளைவுகளில் கொண்டுவிடுகிறது. அவர்களுக்கு எழும் அவமானத்தை நம் பக்கம் திருப்ப முனைவார்கள்.

    கதை

    “நாம்ப பெரிய புள்ளை ஆயாச்சு. வகுப்பிலே ஒக்காந்திருக்கையிலே தமிழ் படிச்சுக் குடுக்கற வாத்தியார் என் தோளிலே கை போடறாருங்க, டீச்சர்!” என்று புகார் செய்தாள் அம்மாணவி.

    வாரத்திற்கு ஒரு முறை, சனிக்கிழமைகளில் மட்டும் தமிழ் கற்றுக் கொடுப்பது அந்த மனிதனின் வேலை. பள்ளி விடுமுறையாதலால், அப்போதுதான் அங்கு நிறைய பேர் இருக்க மாட்டார்கள்.

    அந்த நிகழ்வைப் பற்றி ஒரு தமிழ் பத்திரிகையில், என் தனிப்பட்ட பகுதியில், எழுதினேன். ஊர், பெயரெல்லாம் கிடையாது.

    சில நாட்கள் கழித்து, அந்த வாத்தியாரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, தொலைபேசிவழி.

    “இப்போது எல்லாருக்கும் அது நான்தான் என்று தெரிந்துவிட்டது. ஒரே ஷேம்!” என்று ஒரேயடியாகக் கத்தினான்.

    வகுப்பில் மாணவியைக் கட்டியணைத்து, அவளுக்குத் தர்ம சங்கடத்தை உண்டுபண்ணுவது அவனைப் பொறுத்தவரை தவறில்லை.

    நான் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவனோ நிறுத்துவதாகத் தெரியவில்லை.

    பொறுக்க முடியாது போக, “உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது!’ என்று சொல்லிவைத்தேன். (எதிராளியைச் சமாளிக்க, அவர்கள் பக்கம் சாய்ந்துவிட வேண்டும்).

    சட்டென்று அடங்கினான். “அது நானில்லை என்று எழுதிவிடுங்கள்,” என்று உத்தரவு பிறந்தது.

    எப்படி எழுதுவது?

    `தன் மாணவியிடம் வகுப்பில் முறைகேடாக நடந்துகொண்டது இன்னார் இல்லை,’ என்றா? `எங்கப்பா குதிருக்குள்ளே இல்லை!’ என்ற கதைபோல் இருக்கிறதே!

    எதற்காக எழுதுவது?

    வயதில் தன்னைவிட மிகச் சிறியவளான ஒரு பெண்ணிடம் ஒருவர் முறைதவறி நடக்கிறார். அவரை எதிர்க்கும் சக்தியோ, பாதுகாப்போ அற்ற அப்பெண் பயந்து நடப்பதை ஏற்கிறாள். இதைப் பார்த்தும் பார்க்காதது போல், அறிந்தும் எதுவும் செய்யாமல் இருப்பது சுயநலமின்றி வேறென்ன! இந்த நிலை பரவலாக நடக்க வழிவகுப்பதுபோல் ஆகிவிடுமே!

    `நான் சின்னப் பெண்ணாக இருந்தபோது, என்னை அடிக்கடி வெளியே அழைத்துப் போவார் என் உறவினர். வீடு திரும்பியதும் ஏதேதோ செய்வார். அப்போது அது பாலியல் வதை என்று எனக்குப் புரியவில்லை. எல்லாச் சிறுமிகளுக்கும் அப்படித்தான் நடக்கும் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்!’ என்று சமீபத்தில் ஒரு பெண் தினசரியில் எழுதியிருந்தாள்.

    தனக்கு நடந்தது தகாத காரியம் என்று அவளுக்கு ஏன் தோன்றவில்லை?

    யாரும் இந்த அவலங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசி, முன்னெச்சரிக்கை செய்யவில்லை.

    `ஆண்களும், பெரியவர்களும் என்ன செய்தாலும் பெண்ணாய் பிறந்துவிட்டவர்கள் பொறுத்துப் போகவேண்டும்!’ என்று வலியுறுத்தி, நம்பவும் வைத்திருப்பார்கள்.

    இப்படி நம்மில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்!

    இந்த நிலவரம் பொறுக்காது, தீய நடத்தை கொண்ட எவனையோ பற்றிப் பெண்கள் எழுதினால், பல ஆண்கள் ஒன்றுசேர்ந்து, பெண்களைத்தான் சாடுகிறார்கள்.

    `நீங்க ஆண்களைத் தாக்கி எழுதறீங்களே! நாங்க பெண்களைப்பத்தி எழுதினா?” என்று ஒருவர் என்னிடம் சவால் விட்டார்.

    சில ஆண்கள் செய்வது அடாத செயல் என்று அவர்களுக்கும் தெரியும். ஆனால், ஒப்புக்கொள்ளும் நேர்மையோ, தைரியமோ குறைவு.

    “எழுதுங்களேன்! நானா வேண்டாங்கறேன்?” என்றேன். நானே அப்படி எழுதியுமிருக்கிறேனே!

    தவறு என்று தெரிந்தே செய்வது என்ன, ஆண்களின் பிரத்தியேக உரிமையா, அல்லது சாமர்த்தியமா?

    Share
  • பஞ்சரத்னம்

    -நிர்மலா ராகவன்

    பஞ்சரத்ன கீர்த்தனை அஞ்சு இருக்கு. ஆனா, நம்பகூட சேர்ந்து பாட இந்தத் தடவை அஞ்சுபேர்கூட இல்லியே!” என்று அங்கலாய்த்தாள் காமாட்சி மாமி.

    “அதனால என்ன? வீணை வாசிக்க ஒருத்தர் இருக்காங்க, இன்னும் புல்லாங்குழல் வாசிக்க, வயலின் வாசிக்க,” என்று அடுக்கிக்கொண்டே போனாள் பரம் சோதி.

    அந்த இசைக்குழுவில் இருந்தவர்களிடையே இருந்த ஒரே ஒற்றுமை – அந்த சிலரே இந்தியாவில் முறையாக கர்னாடக இசை பயின்றவர்கள் என்பதுதான்.

    அவர்களில் மூவர் திருமணத்திற்குப்பின் கோலாலம்பூர் வந்தவர்கள். கல்லூரிப்படிப்புக்கு நிறைய செலவாகும், போதாத குறைக்கு அதிகம் படித்த மாப்பிள்ளையைத் தேட வேண்டும், அவன் வரதட்சணை நிறைய கேட்பான் என்று ஏதேதோ பயங்கள் எழ, கல்யாணத்துக்கு உரிய காலம் வரும்வரை பாட்டாவது கற்றுக்கொள்ளட்டும், பெண்பார்க்க வரும்போது மதிப்பாக இருக்கும் என்ற பெற்றோரின் திட்டத்தால் பாட்டு கற்றுக்கொண்டவர்கள்.

    பரம் சோதி மட்டும்தான் மலேசிய நாட்டில் பிறந்து வளர்ந்தவள். அதனாலேயே தான் பிறரைவிட உயர்த்தி என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவள்.

    பதினைந்து வயதாக இருக்கையில், மூன்றாம் படிவ அரசாங்கப் பரீட்சையில் நிச்சயம் தேர்ச்சி பெறமுடியாது என்று புரிந்ததும், “நான் `ஊருக்குப்’ போய் பாட்டு கத்துக்கறேன்!” என்று முடிவெடுத்தாள்.

    குண்டும் கறுப்புமாக இருந்த மகளைக் கல்யாணம் செய்துகொள்ள ஒரு லட்சம் வெள்ளி கொடுத்தால்கூட ஒருவனும் வரமாட்டான் என்று தாய்க்குத் தெரிந்துதான் இருந்தது. அப்படி அள்ளிக் கொடுக்க வசதியும் இருக்கவில்லை. மகள் இந்தியா சென்றாவது தனக்கென ஒரு வழி செய்துகொள்ளட்டுமே என்று சம்மதித்தாள்.

    போன இரு வருடங்களுக்குள் ஒரு பட்டத்துடன் திரும்பிவந்தாள் பரம் சோதி.

    `இசை அரசி அப்படின்னு ஊரிலேயே பட்டம் குடுத்திருக்காங்கன்னா சும்மாவா!’ என்று, அவளிடம் வாய்ப்பாட்டும் வாத்தியமும் கற்க வந்தார்கள் பலரும். எந்தப் பரிசோதனையுமின்றி, வானொலி, தொலைகாட்சியில் பக்கவாத்தியம் வாசிக்கவும் அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

    முதலில் பெருமையாக இருந்தது. ஆனால், போகப்போக, இப்படியே இனிய குரலோ, ஞானமோ இல்லாதவர்களுக்குப் பாட்டு படித்துக்கொடுத்துக் கொண்டேதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்ற நிதரிசனம் புரிந்துபோக, விரக்தி எழுந்தது பரம் சோதிக்கு.

    தொலைகாட்சி நிகழ்ச்சியில், நளினி என்ற இளம்பெண் காமராவுக்கு முன்னால் கம்பீரமாக உட்கார, வாத்தியத்துடன் தான் ஒரு பக்கத்தில் அமரவேண்டிய நிலை அவமானகரமாக இருந்தது.

    புதிய மணப்பெண்ணாக இந்தியாவிலிருந்து வந்திருந்தவள்! தன்னைவிட பத்து வயதாவது இளையவளாக இருப்பாள்!

    ஆண்களுக்கு அது என்ன வழக்கம், வெகு தூரத்தில் போய் பெண்களைத் தேடிப் பிடித்து கல்யாணம் பண்ணிக்கொண்டு வருவது? மலேசிய நாட்டில் பெண்களே கிடையாதா?

    பரம் சோதியின் மனப்போராட்டத்தைக் கவனியாது, நளினி இசையிலேயே தன் முழுமையான கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தாள்.

    `இவளை மிஞ்சவேண்டும்!’ என்று வெறியுடன் வாசித்தாள் பரம் சோதி. ஆனால் ஒன்றரை வருட இசைக்கல்வியால் நளினிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

    அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது ஒரு சிறு திருப்தி எழுந்தது சோதிக்குள்.

    `காமராவையே பாத்துக்கிட்டு பாடுங்க,’ என்று இயக்குனர் சொல்லியிருந்ததைத் தப்பாமல் கடைப்பிடித்திருந்தாள் நளினி.

    சீனர்களின் மிகச் சிறிய கண் சற்றுப் பெரியதாகத் தெரிய, வழக்கமாக காமராவை கீழிருந்து மேல் நோக்கித் திருப்புவார்கள். அதேபோல் நளினிக்கும் செய்ததில், ஏற்கெனவே பெரிதாக இருந்த அவளுடைய `இந்திய நயனங்கள்’ அளவுக்கு மீறி பெரியதாக, முறைப்பதுபோல் தோற்றமளித்தன.

    “சகிக்கலே!” என்று சொல்லிக்கொண்ட பரம் சோதி, தான் சற்றுக் கூன்போட்டு அமர்ந்திருந்ததையும் பார்க்காதிருக்க முயன்றாள்.

    `அம்மாவுக்கும் வயசாகிடுச்சு. வீட்டிலே, வெளியிலே எல்லா வேலையும் நான்தான் பாத்துக்கணும். முடியற காரியமா!’ என்று தனக்குத்தானே பரிதாபப்பட்டுக்கொண்டாள்.

    தாய் எவ்வளவு மறுத்தாலும் கேளாது, தான் எங்கு போனாலும் அவளையும் அழைத்துப்போவதை வழக்கமாக வைத்துக்கொண்டாள். அப்போதெல்லாம், `உங்களுக்குத்தான் துணை இருக்கிறதோ?’ என்று பிறரிடம் சவால் விடுவதுபோல் அவள் தலை வழக்கத்திற்கு அதிகமாகவே நிமிர்ந்திருக்கும்.

    ஆனால், அவள் நினைத்தமாதிரி அது ஒரு நல்ல மாற்று மருந்தாக இருக்கவில்லை.

    “ஹலோ, பரம் சோதி! சௌக்கியமா?” என்று முகமெல்லாம் புன்னகையாக நளினியைக் கோயிலில் பார்த்தபோது, பதிலுக்கு அவளை வெறிக்கத்தான் முடிந்தது.

    நளினியின் பக்கத்தில் அழகழகான இரு குழந்தைகள்!

    சுதாரித்துக்கொண்டு, “நீ இப்போ எல்லாம் பாடறதில்லே போல இருக்கு!” என்றாள், உபசாரமாக. மாணவ மாணவிகளின் வெவ்வேறு ஸ்ருதிக்கேற்ப ஓயாமல் கத்திக் கத்தி, தொண்டையில் இரண்டு குரல்கள் பேசின.

    நளினி புன்னகைத்தாள். “வீட்டிலே இதுகள் ரெண்டையும் பாத்துக்க வேண்டியிருக்கு. வேலைக்குவேற போறேன், இல்லையா? சாதகம் பண்ண நேரமே கிடைக்கறதில்லே, போங்கோ!”

    அவள் யதார்த்தமாகக் கூறியது சோதியின் ஆத்திரத்தைக்கிளப்பிவிட்டது. `உனக்கில்லாத குழந்தை பாக்கியம் எனக்குக் கிட்டியிருக்கிறது!’ என்று குத்திக்காட்டுகிறாள்!

    பட்டப்படிப்புப் படித்து வேலைக்குப் போனால்தான் பெருமையோ? தானும்தான் ஓர் ஆசிரியை – இசை ஆசிரியை!

    அதிகம் யோசிக்கவில்லை அவள். நளினியை எப்படி மட்டம் தட்டுவது என்று உடனே புரிந்துபோயிற்று.

    “தியாகராஜ ஆராதனை வருதில்ல? வந்து பாடலாமே!” என்றாள் தேன்சொட்ட. பிறகு, “பஞ்சரத்ன கீர்த்தனை பாடம்தானே?” என்றும் கேட்டுக்கொண்டாள், சந்தேகம் இல்லாவிட்டாலும்.

    ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு, “பத்து வருஷம் கத்துண்டு இருக்கேனே!” என்றாள் நளினி.

    `இரு! அப்போ உனக்கு நல்ல பாடம் கற்பிக்கறேன்,’ என்று கறுவிக்கொண்டாள் சோதி.

    அரங்கத்தில் இசைப்பிரியர்கள் நிரம்பி இருந்தார்கள்.

    சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மேடையில் பாடப்போகும் உற்சாகத்தில் நளினி நடுவில் அமரப்போனாள்.

    “நீ அங்கே போய் உக்காரு!” என்ற ஆணை பிறந்தது. பரம் சோதியின் கட்டளைக்கு மறுபேச்சின்றி கீழ்ப்படிந்தாள் அவள்.

    கடவுளுக்காகப் பாடுகிறோம். எங்கே உட்கார்ந்தால் என்ன! அதுதான் மூன்று ஒலிபெருக்கிகள் வைத்திருக்கிறார்களே என்றுதான் அவள் எண்ணம் ஓடிற்று.

    ஆனால், யாருமே எதிர்பாராவிதமாக அவை மூன்றையும் தன் எதிரில் வைத்துக்கொண்டு, வாத்தியத்துடன் நட்டநடுவில் பரம் சோதி அமர்ந்துகொண்டாள்.

    முதலில் சற்று அயர்ந்தாலும், `இந்த நல்ல நாளில் இவளுடன்போய் சண்டை பிடிப்பதாவது!’ என்று மற்றவர்கள் ஒதுங்கினார்கள். அவர்களுடைய ஆத்திரம் அடுத்து வந்த கானமழையில் வெளியாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

    “நீங்க எல்லாரும் பாடினீங்களா, இல்லே மல்லுக்கு நின்னீங்களா? நல்லவேளை, தியாகராஜர் இந்தக் கண்ராவியைப் பாக்காம சமாதி ஆயிட்டார்!” என்று ஒரு ரசிகர் வெளிப்படையாகவே கூறினார், தலையைப் பக்கவாட்டில் ஆட்டியபடி.

    அடுத்த ஆண்டு குழுவுடன் சேர்ந்து பாட காமாட்சி மாமியிடமிருந்து அழைப்பு வந்தபோது, மெல்ல மறுத்தாள் நளினி.

    “வரலியா?” கேட்டவளுக்கு ஏமாற்றம்.

    “பரம் சோதி, பரம் சோதி, பரம் சோதின்னு மூணு தடவை அழைப்பிலே போட்டு, மூணு மைக்கையும் அவ முன்னால வெச்சுடுங்கோ! நான் வரலே!” என்றாள் நளினி. தீர்மானமாக.

    தொண்டை கட்டிக்கொண்டிருந்தாலும், குரல் கம்மியிருந்தாலும், `நீதானே இப்படிப் பண்ணினே?’ என்று கடவுளிடம் சண்டைபிடித்துவிட்டு, கோயிலில் பாடுவதே மேல் என்று தோன்றிப்போயிருந்தது.

    மேலும் சில ஆண்டுகள் கழிந்தன.

    ஒரு சாயந்திர வேளையில், கோயிலுக்குள் மிகுந்த பிரயாசையுடன் நடந்து வந்துகொண்டிருந்த பரம் சோதி, நளினியைப் பார்த்தும் பாராததுபோல் போக முயற்சித்தாள். அவள் கையைப் பிடித்து நடத்திச்செல்ல ஒரு பணிப்பெண்!

    நளினியின் மனதில் ஏதோ அசைந்தது. `காலமெல்லாம் தனிமையில் வாட வேண்டியிருக்கும் என்ற வருத்தம், பாவம்! அதைத்தான் அதிகாரமாக காட்டிக்கொண்டிருக்கிறாள்!’

    அவளருகே விரைந்து, “சௌக்கியமா, சோதி? அப்பாடி! பாத்து எத்தனை நாளாச்சு!” என்று பரிவுடன் விசாரித்தாள்.

    நீட்டிய அவள் கையைத் தன் இரு கரங்களாலும் பற்றிக்கொண்டாள் பரம் சோதி.

    (குறிப்பு: பதினெட்டாம் நூற்றாண்டில் பிறந்த தியாகப்பிரம்மம் என்ற மகான் தெலுங்கில் அமைத்த எழுநூறு பக்திப்பாடல்கள் பிரசித்தமானவை. நூற்றுக்கணக்கான புதிய ராகங்களைக் கண்டுபிடித்த பெருமை இவரைச்சாரும். இன்றுவரை, கர்னாடக இசைக்கலைஞர்கள் ஒன்றுசேர்ந்து, பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி, அவரது நினைவு நாளைக் கொண்டாடுகிறார்கள் – பல நாடுகளிலும்).

    Share
  • நலம்… நலமறிய ஆவல்…. (147)

    -நிர்மலா ராகவன்

    மதிப்பீடுகள்

    `எதிர்வீட்டில் என்ன, இப்படி கண்ணில் அறைகிறமாதிரி சுவருக்கு வண்ணம் பூசியிருக்கிறார்களே!’

    `இவ்வளவு குண்டாக இருக்கிறாள்! இவள் தினமும் உடுத்துவதோ கெட்டிச்சரிகைபோட்ட பட்டுப்புடவைதான்! நன்றாகவா இருக்கிறது?’

    ஒருவரை அறிமுகப்படுத்தினால், மேலும் கீழுமாகப் பார்த்து அவரை எடைபோடுவர் சிலர் — நம் ஆடையணிகள் நம் குணத்தை அப்படியே பறைசாற்றிவிடுவதுபோல்!

    அவன் என்ன அப்படி, இவள் என்ன இப்படி!

    பிறர் செய்வதில் தனக்கு என்னென்ன பிடிக்கவில்லை என்று ஆராய்ந்து, அதை வெளிப்படையாகக் கூறுவது சராசரி மனிதனின் குணம்.

    ஏன் மனிதனுக்கு இப்படி ஒரு குணம்?

    தன்னைப்பற்றி உயர்வாக எண்ணுகிறான், அல்லது தன் குறைகளைப் பிறர் அறிவதற்குமுன் தான் முந்திக்கொள்ளவேண்டும் என்ற துடிப்பு.

    எப்போதும் பிறரைக் குறைவாக மதிப்பிடுபவர்கள் தம்மையே பிறர் குறைகூறினால் கொதித்து எழுவார்கள்.

    நாம் ஒருவரிடம் என்னென்ன குணங்கள் பிடிக்கவில்லை என்கிறோமோ, அவையே நம்மிடமும் இருக்கிறது என்பதுதான் விந்தை.

    `கண்ணில் அறைகிறமாதிரி’ வீட்டின் வெளியே வண்ணம் பூச அந்த வீட்டுக்காரர் மூன்று இடங்களில் வேலை பார்த்து, நிறையச் செலவழித்து, தன் திருப்திக்கேற்ப அமைத்திருக்கிறார். அதைக் குற்றம் கூறப் பிறருக்கு என்ன தகுதி?

    பட்டுப்புடவைகளையே உடுத்துபவளுக்கு அதை வாங்க வசதி இருக்கிறது. அவளுக்குப் பிடித்ததைச் செய்கிறாள். `உடலை விமானப் பணிப்பெண்போல் ஆக்கிக்கொண்டு பிறகு அம்மாதிரியான புடவைகள் வாங்கலாம் அல்லது, இதற்காகவே இன்னொரு பிறவி எடுக்கலாம்,’ என்ற நியாயமான ஆசைகளைத் தள்ளிப்போட முடியுமா? பிறர் தன்னை ஏற்கும்படி அவள் எதற்காக நடக்க வேண்டும்?

    பிடிக்காதவர்களைப்பற்றியோ அல்லது பொறாமையாலோ, சிலர் அவதூறாகப் பேசுவது முற்றிலும் உண்மையாக இருக்காது.

    `நான் செய்வதுதான் சரி!’ என்று சாதிப்பவர்களால் பிறரைப் புரிந்துகொள்ள முடியாது. இவர்கள் சில வெற்றிகளை அடைந்திருக்கலாம். அதனால் மட்டும் அவர்கள் எண்ணங்கள் எல்லாமே சரியாகிவிடுமா?

    `ஒருவர் தன் மனதைப் பாதித்தவைகளைப்பற்றிக் கூறுவதை எவராலும் புரிந்துகொள்ளமுடியாது – அவர்களும் அதேபோல் ஒன்றை அனுபவித்திருந்தாலே ஒழிய,’ என்பவரின் கதையைக் கேட்போமா?

    கோபாலனின் காதல் திருமணம் சில ஆண்டுகளுக்குள் அவர் விவாகரத்து கேட்கும் அளவுக்கு முறிந்துபோயிற்று. தான் எவ்வளவு அனுசரணையாக இருந்தாலும் அதைப் பெரிதாக நினைக்காது, தனது கடந்தகால வாழ்க்கையை ஓயாது குத்திக்காட்டியவளுடன் வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ்வது இயலாத காரியம் என்று தோன்றிப்போனதுதான் காரணம். பலரிடம் அதுபற்றிச் சொல்லி, தன் மனப்புண்ணுக்கு மருந்து தேடினார்.

    “ஒருத்தருக்குமே புரியவில்லை. `அப்படியா?’ என்று பட்டுக்கொள்ளாது கேட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். இல்லையேல், அறிவுரை கூற ஆரம்பித்துவிடுகிறார்கள்,” என்று அரற்றினார் என்னிடம்.

    ஒருவர் மனம் நொந்து நம்மிடம் பேச ஆரம்பிக்கும்போது, அவருக்கு அந்த சமாசாரம் எவ்வளவு முக்கியம் என்று புரிந்து வாய் திறவாது கேட்டுக்கொள்ள வேண்டும்.

    நம் முகபாவத்திலிருந்தே, `இவளுக்கு நாம் சொல்ல வருவது புரியும்,’ என்ற நம்பிக்கை வர, மேற்கொண்டு பேசுவார்கள். சற்றே அமைதி பெறவும் வழியிருக்கிறது.

    ஆனால், பிறர் பேசிக்கொண்டிருக்கும்போதே, `அடுத்து நாம் என்ன சொல்லலாம்?’ என்றுதானே யோசனை போகிறது!

    கோபாலன் ஆறுதலை நாடினார் – மதுவில்.

    இப்போது உலகம் அவரைப் பழித்தது: `இந்தக் குடிகாரனுடன் எவளால் வாழமுடியும்?’

    அவர் அப்படி நடக்கும் சூழ்நிலை ஏன் அமைந்தது என்று யாருமே யோசிக்கவில்லை.

    பிறரைப் புரிந்துகொண்டு, அவர்களது கண்ணோட்டத்தில் பார்த்தால் எதுவும் தவறாகத் தோன்றாது.

    கதை

    தாய்லாந்தில் ஓர் உணவுக்கடையில் நானும் என் மகளும் உட்கார்ந்திருந்தோம். ஒரு பெண் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் ஒலி கேட்டு, நான் திரும்பிப் பார்த்தேன்.

    சற்றுத் தொலைவில் பதினைந்து வயது மதிக்கத்தக்க அந்நாட்டுப் பெண் ஒருத்தியும், அவளைவிட முதியவர்களான இரு வெள்ளைக்காரர்களும் அமர்ந்திருந்தனர். அவர்கள் என்ன சொன்னாலும் அவள் சிரித்துக்கொண்டிருந்தாள்.

    `இவ்வளவு சிறிய பெண் இத்தொழிலைப்போய் செய்கிறாளே!’ என்ற அதிர்ச்சி எழுந்தது.

    என் கண்களை சந்தித்த அப்பெண்ணின் முகத்தில் சிரிப்பு மறைந்தது. அவமானம் எழ, தலை குனிந்தது.

    இந்தச் சிறுமியை நோகடித்துவிட்டோமே என்று என்னையே நான் கடிந்துகொண்டேன்.

    அதன்பிறகு என் மகள் என்னுடன் சண்டை பிடித்தாள்: “ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்திருப்பாள். விலைமாதுவாக இருப்பது அவள் தேர்ந்தெடுத்த தொழில். அவள் சம்பாதித்து, குடும்பத்தைக் காக்கவேண்டிய நிலை இருக்கலாம். இந்த தொழிலைச் செய்பவர்கள் சில முறையாவது பாலியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாகி இருப்பார்கள். நம் நிலையிலிருந்து அவர்களை எடைபோடக்கூடாது!”

    எவ்வளவு உண்மை!

    அன்று நான் ஒரு நல்ல பாடம் கற்றேன்.

    கதை

    கோலாலம்பூரில் நடந்த ஒரு குறும்பட நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். பெண்ணைப்போல் ஆடையணிகள் அணிந்திருந்த இளைஞன் வரவேற்பாளராக அமர்ந்திருந்தான்.

    முதலில் நான் அவனைச் சரியாகக் கவனிக்கவில்லை. அவன் கொடுத்த காகிதத்தைப் பார்த்ததும் எந்த இடத்திலிருந்து வந்திருக்கிறான் என்று புரிய, சட்டென தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தேன். அடையாளக்கார்டு மறுக்கப்பட்ட நிலையில், வயிறு பிழைக்க வேறு எந்தத் தொழிலுக்கும் போகமுடியாத அவலம். எங்களிருவர் கண்களும் சந்தித்தன. அவனை அங்கீகரிக்கும் விதத்தில் லேசாகப் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து அகன்றேன்.

    நான் என் இருக்கையில் அமர்ந்தபின், யதேச்சையாகத் திரும்ப, “ஹாய்!” என்று முகமெல்லாம் சிரிப்பாக முகமன் கூறினான் அதே இளைஞன்.

    நான் கையை உயர்த்தி, அதையே திரும்பக் கூறினேன்.

    தன் பக்கத்தில் இருந்தவளிடம் (இருந்தவனிடம்?), “என் ஃப்ரெண்ட்!” என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டான்.

    மற்றவன் என்னை ஏக்கத்துடன் பார்க்க, “Hello! How are you?” என்று அவனுக்கும் சற்று உரக்கவே முகமன் கூறினேன்.

    கையை உயர்த்தி, ஆர்ப்பாட்டமாக `ஹலோ’ சொல்வது என் வழக்கமில்லை. இருந்தாலும், இவர்களுக்குப் பிறர் தம்மை ஏற்பது எவ்வளவு முக்கியம் என்று புரிந்திருந்தது. அவனுடைய முகத்தில் அப்போது தோன்றிய மகிழ்ச்சி!

    எவரையும் அவர் இருப்பதுபோலவே ஏற்றால் வாழ்க்கை அமைதியாக இருக்கும்.

    தன்னையே பிடித்துப்போனவர்கள் பிறரைத் தாழ்வாக எடைபோட மாட்டார்கள். நாம் இருப்பதுபோலவே நம்மை நாமே ஏற்க என்ன தடை!

    Share
  • கர்மவீரனுக்குப் பெண்பால் என்ன?

    நிர்மலா ராகவன்

    நலம், நலமறிய ஆவல் – 146

    வாழ்க்கைப் பாதையில் கல்வி, உத்தியோகம், திருமணம், குழந்தைகள் என்று படிப்படியாகக் கடந்தபின், `இனி என்ன இருக்கிறது வாழ்வில்!’ என்ற விரக்தி பிறக்கிறது பலருக்கும். அவர்களின் போக்கிற்கு நிச்சயம் வயது மட்டும் காரணமாக இருக்க முடியாது. உடல் முதுமை அடைவதற்கு முன்பே மனம் தளர்ந்துவிட, நடப்பதே ஒரு பெரிய காரியம் என்பதுபோல் இருப்பவர்களைப் பார்த்தால், `நாமும் ஒரு வயதுக்குமேல் அப்படி ஆகிவிடுவோமோ!’ என்ற அச்சம் ஏற்படுகிறது.

    `அவள் எவ்வளவு தைரியசாலி!’ என்று வெகு சிலரைப் பார்த்து மலைப்பு எழுகிறது. அந்த பெண்மணிக்கு அச்சமே கிடையாது என்று அர்த்தமில்லை. அவ்வப்போது எழுந்த அச்சங்களை எதிர்கொண்டவள் என்றுதான் சொல்லவேண்டும்.

    எந்த வயதிலும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டுமானால், அச்சத்தை விலக்குவது அவசியம். `அனுதினமும் உன்னை அச்சப்படுத்தும் ஒரு காரியத்தைச் செய்!’ என்கிறார் ஓர் அனுபவசாலி.

    ஏன் அச்சம்?

    ஒரு புதிய காரியத்தைத் தொடங்கும்போது மலைப்பு எழலாம் – இதை எப்படித்தான் முடிக்கப் போகிறோமோ என்று. ஓரிடத்திலிருந்து இன்னொன்றுக்குச் செல்வதற்கு ஒரு காலை மற்றொன்றின் முன்னே வைத்து, ஒவ்வோர் அடியாகத்தான் எடுத்து வைக்கிறோம். இதோ, நீங்கள் படிப்பதைக்கூட ஒவ்வோர் எழுத்தாகத்தான் எழுதினேன் — `பிறர் என்ன நினைப்பார்களோ!’ என்ற அச்சத்தை ஒதுக்கிவிட்டு.

    `இந்த காரியத்தைச் செய்தால் பணமோ, புகழோ கிடைக்கப் போகிறதா!’ என்ற அவநம்பிக்கையோடு எதிலும் ஈடுபட்டால் முன்னேறுவது எப்படி? எந்த ஒரு (நல்ல) காரியம் செய்தாலும், அதன்வழி கிடைக்கும் அனுபவத்தால் தன்னம்பிக்கை மட்டுமல்ல, தைரியமும் எழும். இது புரிந்தால், புதியதாக எதிலாவது ஈடுபடத் தயங்கமாட்டோம் – அது எவ்வளவு அற்பமாகத் தோன்றினாலும்.

    பல துறைகளில் ஈடுபாடா?

    ஒரே நேரத்தில் பலவித உணவுகளை அதன்முன் வைத்தால், நாய் எல்லாவற்றையும் நக்கிவிட்டு, எதையும் முழுமையாகச் சாப்பிடாது வீணடித்துவிட்டுப் போய்விடும். அதேபோல், பேராசையாகப் பல காரியங்களைச் செய்ய முயன்றால், எல்லாமே அரைகுறையாகிவிடும். ஒரே சமயத்தில் வெவ்வேறு காரியங்களைச் செய்ய நாம் அனைவரும் அஷ்டாவதானிகளா, என்ன?

    காலையில் படிப்பு, மாலையில் பாட்டு, விளையாட்டு என்ற முறையைப் படிக்கும் வயதில் கடைப்பிடித்திருப்போம். அது போலவே, ஒரு தினத்தை இரண்டு, மூன்று பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் ஒரு காரியத்தைச் செய்யலாம். எடுத்துக்கொண்ட ஒன்றில் முழு மனத்துடன் ஈடுபட்டு, ஓரளவு செய்து முடித்தபின், இன்னொன்றில் கைவைக்கலாமே!

    சிதறாத கவனம்

    பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு எளிதில் கவனம் சிதறும். அதைக் கட்டுப்படுத்த ஓர் ஆசிரியை கண்டிப்புடன் அவர்களிடம் சொன்னது: “உங்கள் பக்கத்தில் டைனசோர் வந்து நின்றாலும், அணுகுண்டு வெடித்தாலும் திரும்பிப் பார்க்கக் கூடாது!”

    அக்குழந்தைகள் அறியவில்லை, அணுகுண்டு வெடித்தால் அதைப் பார்த்து வியக்கவோ, ரசிக்கவோ அவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது. தற்காலத்தில் டைனசோர் ஏது! இருந்தால் மட்டும் வகுப்பறைக்குள் நுழைந்துவிடுமா? ஆனாலும், ஆசிரியையின் திட்டம் பலித்தது. செய்யும் காரியத்தில் முனைப்பாக இருக்கும் பழக்கம் அவர்களுக்கு வந்தது.

    தோல்வி எழுந்தால்

    ஒரு காரியத்தைச் செய்துகொண்டிருக்கும்போது,  எதிர்பாராத விதமாக நமக்குப் பிடிக்காத விளைவுகளும் ஏற்படக்கூடும். தோல்விகளைப் பொறுக்க முடியாது, `இப்படித்தான் நிம்மதியும் இன்பமும் கிடைக்குமோ?’ என்ற அற்ப ஆசையுடன் தீய வழிகளில் ஈடுபட்டால் சலிப்புதான் அதிகரிக்குமே தவிர, நிம்மதி கிடைக்காது. நமக்குப் பிடித்த, பிறருக்கும் உபயோகமானவற்றில் ஈடுபடுவதுதான் புத்துணர்ச்சியைத் திரும்பப் பெறும் வழி.

    இலக்கு வேண்டும்

    `அடுத்து என்ன செய்யலாம்?’ என்ற தூரநோக்கு இருக்கும்வரை வாழ்க்கை பயனுள்ளதாகத்தான் தென்படும். தள்ளாடியபடி நடக்கும் பெண்மணிகள்கூட கூட்டுக் குடும்பத்தில் சமையல் வேலையை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருப்பதன் ரகசியம் இதுதான்.

    “கடைகண்ணிக்குப்போய் சாமான்கள் வாங்கி வருவது என் மாமனார்! சமையல் பூராவும் என் மாமியார்தான். இருவரும், `எங்கள் ஆட்சி இது!’ என்பதுபோல் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்!” நாற்பது வயதை எட்டிக்கொண்டிருந்த ஒரு மருமகளின் புலம்பல் இது.

    தனக்கு எந்தப் பொறுப்பும் இல்லாமல் போய்விட்டதே என்பது அவள் வருத்தம். மூத்தவர்கள் செய்துவந்தது, அதிகாரத்திற்காக மட்டுமில்லை, அவர்களுக்கென்று சில வேலைகள் இல்லாவிட்டால், வாழ்க்கையில் பிடிப்பே இல்லாது போய்விடும் என்பது அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள்.

    எந்த விஷயத்திலும் பற்றும் ஆர்வமும் இருந்தால், வாழ்வில் பிடிப்பு குறையாது – எத்தனை வயதானாலும்.

    கதை

    என் தோழியின் தந்தைக்கு தொண்ணூற்றிரண்டு வயதாக இருந்தபோது, நான் அவ்விருவருடனும் பயணம் செய்தேன்.

    வழியில், ஆறு வயதுக் குழந்தைக்கான விளையாட்டுச் சாமான் ஒன்றை வாங்கினேன். தாத்தா அதை சுவாரசியத்துடன் பார்த்ததைக் கண்டு, அவரிடம் நீட்டினேன்.

    ஆவலுடன் அதைப் பெற்றுக்கொண்டவர், சாவி கொடுத்தால் ஒரு குரங்கு தாவித் தாவி சிறிய பிளாஸ்டிக் மரத்தின்மேல் ஏறுவதைப் பார்த்துக் குதூலித்தார். அவருள் இருந்த குழந்தை, அப்போதும் இருந்தது. கூலியாளாக நாடுவிட்டு நாடு வந்தவர் பெரிய முதலாளியானதன் ரகசியம் புரிந்தது. உடல் வலுவிழந்திருந்தாலும், தன்னைச் சுற்றி நடப்பதில் ஆர்வம் குன்றாமல், ஆரோக்கியமான மனத்துடன் வாழ்ந்தவர்!

    `இனி என்ன இருக்கிறது!’ என்ற விரக்தியே ஒருவரை நடைப்பிணமாக ஆக்கிவிடும்.

    கதை

    “இருபத்து மூன்று வருடங்களாக இந்த வேலையைச் செய்கிறேன்!” என்று அடிக்கடி பெருமையாகச் சொல்லிக்கொண்ட பணிப்பெண் நோர்மாவைப் பார்த்து எனக்கு பிரமிப்பாக இருந்தது. காலை, மத்தியானம் இரு வேளைகளிலும் இரண்டு வீடுகளைச் சுத்தம் செய்வது, அவள் வேலை. ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் கடுமையாக உழைப்பாள்! வாரத்தில் ஐந்து நாட்கள் இப்படித்தான் கழியும். (கர்மவீரனுக்குப் பெண்பால் என்ன?)

    “கடினமாகவோ, அலுப்பாகவோ இல்லையா?” என்று அவளைக் கேட்டேன்.

    “எனக்குப் பள்ளியில் படிக்கும் மகனைத் தவிர, இந்தோனீசியாவில் நூறு வயதான அம்மா இருக்கிறாள். நடக்க முடியாத அக்காவும் இருக்கிறாள். நான் என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டாமா?” என்ற பதில் வந்தது.

    படிப்பறிவில்லாத அப்பெண்மணியிடமிருந்து கற்க வேண்டிய பாடம்: நம் பொறுப்புகளை வேண்டாவெறுப்பாக ஏற்றால் அவை பாரமாகப் படும். மனமுவந்து செய்தால், உடலும் ஒத்துழைக்கும். சலிப்பும் கிடையாது.

    சிலருக்கு மாற்றம் என்றாலே அச்சம்.

    ஒரு முறை கருவேப்பிலையின் அடிப்பாகத்தில் கெட்டியாக ஏதோ இருந்தது கண்டு, அருவருப்பாக இருந்தது. பிறகுதான் புரிந்தது, அது கூட்டுப்புழு என்று. வெகு அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறுமுன், பல மாறுதல்களைக் கடந்து வரவேண்டிய நிலை அதற்கு.

    மாற்றத்தைக் கண்டு அஞ்சாது துணிந்து நடந்தால், நாமும் – அழகாக மாறாவிட்டாலும் — நல்லவிதமாக மாற வாய்ப்பு கிடைக்கலாமே!

    Share
  • நலம்…. நலமறிய ஆவல் (145)

    -நிர்மலா ராகவன்

    எதிர்மறைச் சிந்தனைகள்

    ஒருவர் பல துறைகளிலும் வெற்றி பெற்றிருந்தால், `அவருக்குத்தான் தன்னைப்பற்றிய விழிப்புணர்வு எவ்வளவு துல்லியமாக இருக்கிறது!’ என்று வியந்து பாராட்டத் தோன்றுகிறது.

    அவரைப் போன்றவர்கள் சிறு வயதிலேயே, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் தமக்கு ஏன் ஓர் அசாதாரணமான உணர்வு ஏற்படுகிறது என்று அலசியிருப்பர்.

    மூன்று, நான்கு வயதுக் குழந்தைகள் தாயிடம் பொய்யுரைக்கும்போது கவனித்துப் பாருங்கள். முகம் சுருங்கியிருக்கும். `தர்மசங்கடம்’ என்ற அவர்கள் நினைப்பு புரியும்.

    அப்படி ஒரு முறை, என் மகள் கேட்டாள், “நான் ஏன் மூஞ்சியை இப்படி வெச்சுக்கறேன்?”

    நான் லேசாகச் சிரித்தபடி, “அம்மாகிட்ட பொய் சொல்றோமேன்னு!” என்றேன். எந்த வயதானாலும், குற்ற உணர்ச்சி ஒருவரைப் பாடுபடுத்தும். (குழந்தைகள் பொய் சொல்வது தண்டனையைத் தடுக்கும் வழி. அதைப் பெரிதுபடுத்தாது விட்டுவிட்டால், தானே மாறிவிடுவார்கள்).

    சுயமாகச் சிந்திக்கும் வயதில், எல்லா விஷயங்களிலும் பிறர் எதிர்பார்ப்பின்படி நடப்பது நமக்கே நாம் விலங்கிட்டுக்கொள்வதுபோல்தான். நாம் நினைத்ததை வெளிப்படையாகச் சொல்லவும் முடியாமல் போய்விடும். அப்புறம் சுதந்திரமான எண்ணமும் செயலும் ஏது!

    பிறரிடமிருந்து மாறுபட்டிருக்கிறோமே என்றுதான் பலரும் குழம்புவார்கள்.

    அதிலும், உடற்குறையுடன் இருப்பவர்களோ!

    கதை

    பதின்ம வயதான என் உறவினர் மகள் லல்லியை வெளியில் அழைத்துப் போயிருந்தோம்.

    “எல்லாரும் என்னையே பார்க்கிறார்கள்!” என்றாள் மனத்தாங்கலுடன். பிறவி ஊனத்தால், ஒரு வித கைத்தடியின் உதவியுடன்தான் அவளால் நடக்கமுடியும்.

    “நாமும் அவர்களைப் பார்க்கிறோமே! பிறரைப் பார்ப்பதற்குத்தானே வெளியில் வருகிறோம்!” என்று ஏதோ சமாதானம் சொன்னேன்.

    “இல்லை, எனக்குத் தெரியும். அவர்கள் என்னைத்தான் உற்று உற்றுப் பார்க்கிறார்கள்!” என்றாள். இப்படிப்பட்ட எதிர்மறையான சிந்தனைகளே ஒருவரை மேலும் பலகீனமாக ஆக்குகிறது.

    என்னைப் பார்க்காதீர்கள்!

    நீச்சல் குளத்தில் ஒரு தமிழ் மாது நீச்சலுடை அணிந்து வந்திருந்தாள். `இதென்ன, கால், தொடை, முதுகு எல்லாம் தெரிகிறதே!’ என்று அவளுக்குத் தோன்றிப்போயிருக்க வேண்டும். இல்லை, குடும்பத்தில் யாராவது முகத்தைச் சுளித்திருப்பார்கள். ஆடையை தொடைப்பகுதியிலும், பின்புறத்திலும் அடிக்கடி இழுத்து விட்டுக்கொண்டாள்.

    `இழுத்து இழுத்து விட்டுக்குமே..!’ என்று அவளைக்குறித்துப் பிறர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். சில நாட்களுக்குப்பின் அவள் வருவது நின்றுபோயிற்று.

    தாம் பருமனாகவோ, வழுக்கையாக இருப்பதையோ கேலி செய்துகொள்பவர்கள், `பிறர் சொல்வதற்குமுன் தாமே சொல்லிவிட்டால், அதன் பாதிப்பு குறையும்!’ என்று நினைப்பவர்களாக இருப்பார்கள்.

    `என்ன நினைப்பார்களோ!’ என்று எந்த சந்தர்ப்பத்திலும் பயந்துகொண்டே இருந்தால், முழுமையான மகிழ்ச்சி கிட்டுவதில்லை. `நான் இப்படித்தான்! உங்களுக்கென்ன!’ என்று தன்னையே ஏற்றுக்கொள்பவருக்கு மனக்குறை இருக்காது.

    `ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறாய்?’ என்று ஒரு பெண் தன் நண்பனிடம் கேட்க, `ஆமாம்!’ என்று நொடித்தான் அவன். `இப்போ இதுக்குப்போய் கவலைப்படச் சொல்றியா?’

    எல்லாருக்கும் அவரவர்பற்றிய சிந்தனைதான். நாம் அஞ்சுவதுபோல்தானே அவர்களும் நாம் அவர்களைப்பற்றி என்ன நினைக்கிறோமோ என்று யோசிப்பார்கள்! இது புரிந்தால், அநாவசியமாக குழம்பத் தேவையில்லை.

    தம்மை ஒருவர் வார்த்தைகளால் தாக்குமுன் தாம் முந்திக்கொள்ளலாம் என்று சிலர் பிறரிடம் குற்றம் காண்பார்கள். இவர்கள் தம்மைப்பற்றிச் சிந்திக்க அஞ்சுகிறவர்களாக இருப்பார்கள். அலசினால் மேலே எழும் குறைகளை, அவை உண்டாகக் காரணமாக இருந்த சம்பவங்களை மீண்டும் நினைவுகோர நேருமே! இப்போக்கினால் பலகீனம் அடைவது என்னவோ அவர்கள்தாம்.

    சிறு வயதில் நமக்குப் பிடிக்காதவைகளை நிறைய அனுபவித்திருப்போம். அப்பிராயத்தில் தவறு செய்வதும் இயற்கை. அவைகளையே எண்ணி, எண்ணி மறுகியபடி வாழ்க்கையைக் கழித்தால் நரகம்தான்.

    கதை

    சிவநேசனைப் பொறுத்தவரை, ஆண்குழந்தைகளை அடித்தால்தான் ஒழுங்காக வளர்வார்கள். இந்த நம்பிக்கையுடன், அவரது பிள்ளைகள் வீட்டுக்குள் நடமாடும்போதுகூட, கையில் பிரம்புடன் அவர்களைப் பின்தொடர்வார்.

    இப்படி வளர்ந்த நடராஜனுடன் பயமும் ஆத்திரமும் ஒருங்கே வளர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. வீட்டில் இருக்கவே பிடிக்காத நிலையில், நண்பர்கள் ஆறுதலாக இருந்தார்கள். `என் நண்பர்களுக்காக உயிரைக்கூடக் கொடுப்பேன்!’ என்பார், அடிக்கடி. அவர்கள் கேட்ட, கேட்காத உதவியைக்கூட வலியப்போய் செய்தார்.

    ஆனால், தன் சக்திக்குமீறி பிறருக்காக உழைத்ததில், வீட்டில் தன் மனைவி மக்களிடம் சிடுசிடுப்பாகத்தான் இருக்க முடிந்தது. சிறுவயதில் அடைந்த இனம்புரியாத அச்சம், தனிமை, வருத்தம் எல்லாம் ஆட்டுவிக்க, தன்னைப்போல் துன்பமும் துயரமும் அனுபவிக்காதவர்களிடம் ஆத்திரப்பட்டார்.

    இவரது போக்கைக் கண்டு வீட்டிலும் அலுவலகத்திலும் உள்ளவர்கள் பயந்து ஒதுங்க, `நான் யாருக்குமே ஒரு பொருட்டில்லை!’ என்று தோன்றிப்போயிற்று. ஒரு சிறு பிழை செய்தாலும், தடுமாற்றம், அவமானம்.

    பிறருக்கு ஓயாது உதவுகிறவர்கள் ஏமாளிகளா?!

    பிறர் தன்னைப்பற்றி அப்படி ஓர் எண்ணம் கொண்டிருப்பது நடராஜனுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. அதன்பின், `இப்போது முடியாது!’ என்று பணிவுடன் சொல்லக் கற்றுக்கொண்டார். ஆத்திரம் அவ்வப்போது தலைகாட்டினாலும், வெகுவாகக் குறைந்தது.

    `நான் தவறு செய்தால், இனி யாரும் பரிகசிக்கவோ, தண்டிக்கவோ போவதில்லை. பிறருக்கு உதவி செய்தால் எனக்கு மகிழ்ச்சி என்றாலும், தக்கவர்களுக்கு மட்டும்தான் உதவ வேண்டும்,’ என்று தீர்மானித்து, சிறிது சிறிதாக அதை நடைமுறையில் கொண்டுவந்தால், ஒருவரது ஆத்திரம் மட்டுப்பட வழியிருக்கிறது.

    உணர் திறன் வளர

    தினமும் நம்மைப் பாதித்தவைகளைக் குறித்துவைத்தால், நாளடைவில் நம் உணர்வுகள் புரியவரும். எதையெல்லாம் அடைய விருப்பம் என்பதையும் எழுதலாம். காலப்போக்கில், அப்பட்டியல் மாறிக்கொண்டே போகும்!

    நம்மையே ஆராய்ந்து நமக்குப் பிடித்தபடி மாற்றிக்கொண்டாலோ, அல்லது பிறர் சொல்வதைக் கேட்டாலோ, நன்மை விளையும். எப்படி என்கிறீர்களா? நம் பலம், பலவீனம் ஆகியவைகள் புரிந்துபோக, பலத்தைப் பெருக்கிக்கொள்ள முயற்சிகள் எடுக்கமுடியும்.

    நம்முடன் நன்கு பழகி, புரிந்தவர்களிடம் நம்மை எடைபோடும்படி கேட்கலாம். ஆனால், அவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்க வேண்டியதில்லை. பிறருக்குத் தவறு என்று படுவது நமக்கு ஏற்புடையதாக இருக்கலாமே! `பிறர் இருக்கிறபடி இருக்கட்டும்!’ என்று விட்டால் இரு தரப்பினருக்கும் நிம்மதி.

    நம்மை நாமே புரிந்துகொள்வது நம் தனித்தன்மையை நமக்கு உணர்த்துவதுடன், பிறரையும் புரிந்துகொள்ள வழி வகுக்கிறது. அவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றும் புரியும். அதனால் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி நடக்கலாம்.

    பிறர் நம்மை ஆட்டுவிக்க இடம் கொடுப்பானேன்! நாம் என்ன, பொம்மையா?

    Share
  • நலம்… நலமறிய ஆவல் – 144

    -நிர்மலா ராகவன்

    நேர்மைக்கும் உண்டு எல்லை

    `உங்களுக்குப் பிறகு உங்கள் குழந்தைகளுக்கு என்ன விட்டுப் போகப் போகிறீர்கள்?’

    `வங்கியில் கோடிக்கணக்கான பணம், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பங்களாக்கள், இன்னும்..!’ பெருமை பேசுகிறார்.

    நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. நேர்மை, உண்மை போன்ற குணங்களையும் இவர் தன் பிள்ளைகளுக்கு அளித்திருப்பாரா?

    தந்தை நம் அறியாத்தனத்தைக் கண்டு சிரிக்கிறார். `நேர்மையாக இருந்தால் இவ்வளவு சொத்து சேர்க்க முடியுமா?’

    அவரே மாட்டிக்கொண்டு, `எப்போது சிறைச்சாலையில் குற்றவாளிகளோடு குற்றவாளியாகத் என்னைத் தள்ளிவிடுவார்களோ!’ என்று அஞ்சும்போதும், `வேண்டாதவர்கள் என்மேல் பழி சுமத்துகிறார்கள்!’ என்றெல்லாம் (பொய்யென்று தெரிந்தே) வாதாடுகிறார்.

    நேர்மையின் பலன்

    நேர்மை என்பது கபடமற்ற தன்மையையும், உண்மையை வெளிப்படையாகப் பேசுவதையும் குறிக்கிறது. உண்மை பேசிவந்தால், எப்போது என்ன சொன்னோம் என்று ஞாபகம் வைத்துக்கொண்டிருக்க வேண்டிய தொல்லை கிடையாது. எதையும் மறைக்கவேண்டிய அவசியம் இல்லாததால் ஒருவிதச் சுதந்திர உணர்வு உண்டாகும்.

    தம் குறைநிறைகளுடன் தம்மையே ஏற்க, நேர்மையானவர்கள் பிறரால் பாதிக்கப்படுவதில்லை. `இவரை நம்பலாம்!’ என்ற நம்பிக்கை எழுவதால் தரமான நண்பர்கள் வாய்ப்பார்கள். இவர்கள் எவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. பிறர்தான் பயப்படுவார்கள் — தமது பொய்யான வாழ்க்கையைக் கேலி செய்கிறார்களோ என்று.

    இருப்பினும், சிலர் பிறரது மதிப்பைப் பெற பலரும் கொஞ்சமாவது பொய்யுரைக்கிறார்கள்.

    கதை

    மலேசியக் கல்வி திட்டப்படி, எட்டாவது படிவ அரசாங்கப் பரீட்சையில் மொத்தம் எட்டு பாடங்கள் இருந்தன.

    முடிவு வந்ததும், என் சக ஆசிரியை மிஸஸ் ஃபூங் (Foong), தன் மகள் ஜென்னி ஏழு பாடங்களில் மிகச் சிறப்பான `ஏ’ வாங்கியிருப்பதாகப் பெருமையுடன் அறிவித்தாள். அவள் மறந்தது: அதே பள்ளியில் என் மகளும் அப்பெண்ணுடன் இணைந்து படித்தாள் என்பது.

    குட்டு வெளிப்பட்டது.

    மிஸஸ் ஃபூங் இல்லாதபோது, எல்லாரும் சிரித்தார்கள். ஒருத்தி, “போனால் போகிறாள்! அவள் ஒரு அம்மா! நமக்குப் புரியாதா!’ என்றாள் கேலியுடன்.

    எவரும் அவளிடம் மேற்கொண்டு எதையும் விசாரிக்கவில்லை. அதன்பின், அவள் எது சொன்னாலும் நம்பத் தயாராகவும் இல்லை. அப்போது அடைந்த அவமானத்தில், `நீ ஏன் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெறவில்லை?’ என்று ஜென்னியை வாட்டி வருத்தியிருப்பாளோ? எதனாலோ, அப்பெண்ணின் மனநிலை குன்றி, பதினாறாவது வயதில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

    அவளுடைய கவுன்சிலர் மிஸஸ் ஹோ (Ho), “பெற்றோரது கடுமையான எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாது, அந்த `வார்டு’ பூராவும் சீனப் பெண்கள்தாம்!” என்றாள் கசப்புடன். “இந்தப் பெண்ணோ, வாயே திறக்கமாட்டேன் என்கிறாள்!”

    என் மகள் தன் சிநேகிதியைப் பற்றி உத்தேசமாகக் கூறியது: “ஜென்னி நல்ல பெண். மிக நேர்மையானவள். இப்படிப்பட்ட கீழ்த்தரமான அம்மா இருந்தாலே பிரச்னைதான்!”

    ஆனால், சில சமயங்களில், நேர்மைகூட தண்டனைபோல் ஆகிவிடுகிறது.

    கதை

    பயிற்சியாளராக ஒரு நிறுவனத்தில் சேர்ந்திருந்தான் கந்தன். கணக்காய்வாளராக சில பரீட்சைகளே பாக்கியிருந்தன. அங்குப் பொய்க்கணக்கு எழுதத் தூண்டியபோது, மனம் பொறுக்காமல் வேலையை விட்டான். படிப்பும் பாதியில் நின்றது. `இந்தத் துறையே வேண்டாம்!’ என்று முடிவெடுத்தான். வேறு வேலையும் கிடைக்காத நிலையில், மாமியார் வீட்டு மருமகனாக, மதிப்பு குன்றி இருக்க நேரிட்டது.

    அவனுடைய நிலைமைக்கு பரிதாபப்பட்டு, ஒரு முதியவர் தன் கம்பெனியில் வேலை போட்டுக் கொடுத்தார். முதலில் ஒழுங்காக இருந்தவன், `நேர்மையாக இருந்து என்ன கண்டோம்!’ என்று தோன்றிப் போக, நன்றி மறந்து, அவ்விடத்திலேயே திருட ஆரம்பித்தான். கிடைத்த ஒரு வேலையும் போயிற்று.

    எல்லா கார்களும் தெருவில் தவறான வழியில் செல்லும்போது, ஒருவன் மட்டும், `சரியான வழியில்தான் போவேன்!’ என்றால் என்ன ஆகும்? கந்தனைப் போன்ற சிலர், நேர் எதிரான பாதைக்கு மாறுகிறார்கள். வேறு சிலர் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவதும் உண்டு.

    எப்போது பொய் சொல்லலாம்?

    குழந்தைகளிடம் பொய் சொல்லாத தாய்மார்கள் இருவரை மட்டும்தான் நான் சந்தித்திருக்கிறேன். இருவருக்குமே திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து அருமையாகப் பிறந்த குழந்தை.

    பிற தாய்மார்கள், எந்த சந்தர்ப்பத்தில் பொய்யுரைப்பார்கள்?

    `சீக்கிரம் சாப்பிடு. காக்கா கொத்திண்டு போயிடும்!’

    `நானும் அப்பாவும் டாக்டரைப் பாக்கப் போறோம்!’ நன்கு அலங்கரித்துக்கொண்டு திரைப்படத்திற்குப் புறப்படும் தாய், இளம்பிள்ளையிடம் கூறுகிறாள். ஓரிரு முறை அழைத்துப் போயிருப்பார்கள். அங்கு அவனைச் சமாளிக்க முடியாது போக, வேறு வழி தெரியவில்லை.

    மற்றபடி, நம்மிடம் அபயம் நாடி வந்த ஒருவரைக் காப்பற்றப் பொய் சொல்லலாம். அல்லது, நமக்கு உற்ற நண்பர் ஒருவரைக் காட்டிக் கொடுக்காது இருப்பதற்காக.

    கதை 1

    பதின்ம வயது மாணவர்களின் கை, சும்மா இருக்காது. வகுப்பிலிருக்கும் மேசைமேல் பேனாவினாலோ, ஏதாவது கூரான சாமானாலோ கிறுக்குவார்கள். அதில் கெட்ட வார்த்தைகளே மிகுந்திருக்கும்.

    அப்படி ஒரு முறை நடந்தபோது, நான் அருகிலிருந்த முஸ்தபாவிடம், “யார் கன்னா பின்னாவென்று எழுதியது?” என்று மிரட்டலாகக் கேட்க, “எனக்குத் தெரியாது, டீச்சர்!” என்றான் மெல்லிய குரலில். அவன் முகத்தில் சிறு வேதனை – பொய் சொல்கிறோமே என்று. அவன் முகத்திலிருந்த நேர்மையைக் கண்டு, நான்தான் அவனை மாணவத் தலைவனாகத் தேர்ந்தெடுத்திருந்தேன்.

    முஸ்தபாவின்மேல் எனக்கிருந்த மதிப்பு அதிகரித்தது. நண்பனை ஆசிரியையின் கோபத்திலிருந்து காப்பாற்ற, இவன் உண்மையை மறைக்கிறான்!

    அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில், அந்தப் பையன் பள்ளியில் பல பொறுப்பான பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். பள்ளிப் படிப்பு முடிந்ததும், ஒரு கௌரவமான வேலையில் அமர்ந்தான்.

    கதை 2

    ரத்னாவின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின், திடீரென நின்று போயிற்று – பல முறை. அவள் வீட்டார் காரணத்தைக் கேட்டபோது, ஒரு மொட்டைக் கடிதம் அவர்களிடம் காட்டப்பட்டது. பெண்ணின் சித்தியின் கையெழுத்தில் இருந்ததன் வாசகம்: `இப்பெண் கர்ப்பத்தைக் கலைத்துக்கொண்டவள்!’

    அடுத்த முறை, தாங்களே வலிய மாப்பிள்ளை வீட்டாரிடம் உண்மையைத் தெரிவிக்க, கல்யாணம் நல்லபடியாக நடந்தேறியது. சித்திக்கு அழைப்பில்லை.

    `அநியாயமாக ஒருவரை ஏமாற்றலாமா? அதனால்தான் நடந்த உண்மையை எல்லாருக்கும் தெரிவித்தேன்!’ அரிச்சந்திரனின் வாரிசாகத் தன்னைப் பாவித்துக்கொண்ட சித்தி.

    யார் செய்தது சரி? செய்த தவற்றை ஒத்துக்கொண்ட ரத்னாவும் அவள் பெற்றோருமா, சித்தியா?

    Share
  • நலம்…நலமறிய ஆவல் 143

    -நிர்மலா ராகவன்

    குறையொன்றும் இல்லை

    `நம்மைப் பிறரால்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. நாமாவது புரிந்துகொள்ளப் பார்ப்போமே!’ திருமணத்திற்குப்பின் எனக்கு இந்த ஞானோதயம் பிறந்தது.

    உளவியல் அறிஞர்கள் வகுத்திருந்த கேள்விகளுக்குப் பதில் எழுதி, நானே என்னைப் பரீட்சித்துக்கொண்டேன்.

    விடைகள் எனக்கு அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் ஒருங்கே அளித்தன.

    பின்னே? `முதிர்ச்சி இல்லாதவர் நீங்கள்!’ என்று வந்திருந்தால்?

    எனக்கு ஆத்திரம் வரவில்லை. அயர்ச்சியாக இருந்தது. எனது ஒவ்வொரு எதிர்மறையான பதிலையும் மாற்றும் நடத்தையை முயன்று பயின்றேன்.

    `You are very sane!’ என்று சிலர் வியக்க, அப்பயிற்சிகளை எடுத்துக்கொண்டதை ஒத்துக்கொண்டேன்.

    `உன்னிடம் குறைகள் இருப்பதை நீ ஒத்துக்கொண்டதே உனது நேர்மையைக் காட்டுகிறது!’ என்று ஒரு கவுன்சிலர் பாராட்டினார்.

    நகைச்சுவை அற்ற பெண்கள்

    `பெண்கள் தம்மைத்தாமே பார்த்துச் சிரிக்கமாட்டார்கள். அதனால்தான் வெகு சிலரே நகைச்சுவை நடிகைகளாக இருக்கிறார்கள்!’ என்று அமெரிக்க நடிகைகளைப்பற்றி ஒரு விமர்சகர் எழுதியிருந்தார். அதையே சவாலாக ஏற்று, அதைப் பொய்ப்பிக்கும் முயற்சியிலும் இறங்கினேன்.

    நம்மை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கும் நிகழ்ச்சிகளை பிறருக்குத் தெரியாதிருக்க மறைப்பானேன்! அவர்களுக்கு மட்டும் அப்படி எதுவும் நிகழ்ந்திருக்காதா, என்ன!

    கதை

    நான் இடைநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, தையலும் ஒரு பாடமாக இருந்தது. ஆசிரியை மிஸஸ் ஜோன் வகுப்புக்கு வந்ததுடன் சரி. எதையும் கற்றுக்கொடுக்கவில்லை. நாங்கள்பாட்டில் அரட்டை அடித்துக்கொண்டிருப்போம்.

    முழுப்பரீட்சைக்கு வகுப்பினுள் ஆசிரியை எதிரே ஒரு சட்டை தைக்க வேண்டும் என்று அறிவித்தார் மிஸஸ் ஜோன். பெருமையாக, ஒரு கஜம் வெள்ளைத்துணியை எடுத்துப்போனேன்.

    துணியைப் பாதியாக மடித்து, கைக்கு வேண்டியதை வெட்டினால் ஒரே மாதிரி இருக்கும். இது புரியாது, நான் ஒன்று மாற்றி ஒன்று வெட்ட, பூனை ரொட்டியைப் பங்கிட்டக் கதையாக ஆயிற்று. ஒரு கை இன்னொன்றைவிட மிகச்சிறியதாக இருந்தது!

    எப்போதும்போல், “வீட்டில் தைத்துக்கொண்டு வாருங்கள்!” என்று ஆசிரியை பணித்திருக்கக் கூடாதா! அம்மாவிடம் கெஞ்சி, தைத்து வாங்கிக்கொண்டு போயிருப்பேனே! (அப்படிச் செய்தபோதும் நல்ல மதிப்பெண்களே கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்).

    என் தோழி வீட்டுக்குப் போயிருந்தபோது, அவளுடைய சித்திமார்கள், “இது என்ன, உங்கள் தையல் ஆசிரியை இவ்வளவு மோசமாக இருக்கிறாள்! நாங்கள் எவ்வளவு அழகாக துணியில் பூவேலை செய்துகொடுத்தாலும், நூற்றுக்கு நாற்பதுதான் கொடுக்கிறாள்!” என்று கோபமாகக் கேட்டார்கள்.

    என் சிநேகிதி, `அதையெல்லாம் சொல்லாதீர்கள்!’ என்று பதைப்புடன் சமிக்ஞை செய்ததை அவர்கள் பொருட்படுத்தவேயில்லை.

    நான் அவளிடம் தனிமையில் கூறினேன், “எதற்கு அவ்வளவு பயப்பட்டாய்? எனக்குப் போட்டுக்கொடுப்பதும் என் அம்மாதான்!”

    என் தாயார் தையல் வேலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தேசிய ரீதியில் பரிசு வாங்கியவர். இருந்தாலும், ஆசிரியை மிஸஸ் ஜோனுக்கு எங்கள் லட்சணம் தெரியாதா! அதனால்தான், தானே முயன்று, சற்றுக் கோணல்மாணலாக தைத்த மாணவிக்கு எங்களைவிட மிக அதிகமான மதிப்பெண்கள்!

    இக்கதையை நான் விவரிக்கையில், என் குடும்பத்தினர் சிரிப்பார்கள். (வாசகரே, நீங்கள் சிரித்தீர்களா, இல்லை, `வெட்கமில்லாமல் இதையெல்லாம் சொல்கிறாளே!’ என்று நினைத்தீர்களா? பள்ளி இறுதியாண்டுக்குப்பின் துணியில் பூவேலைப்பாடு செய்வதை அம்மாவிடமே கற்றுத் தேர்ந்தேன்).

    பலத்துடன் பலவீனமும் உண்டு

    நம் பலம், பலவீனம் இரண்டையும் ஒத்துக்கொண்டால், அதற்கு ஏற்றபடி நடக்க முடியும்.

    நம் உணர்ச்சிகள் எதனால் எழுகின்றன என்று புரிந்தால், நம்மை நாமே புரிந்துகொள்ள முடியும். உண்மையை ஒத்துக்கொள்ளும் மனோபலம் சிலருக்கு (பலருக்கு?) இருப்பதில்லை. இப்படிப்பட்டவர்களுக்குப் பொதுவான சில குணங்கள் உண்டு.

    உண்மையை மறுத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். தம்மைப்பற்றிய குறைகளை நினைப்பதற்கே அஞ்சுவதால் இப்படி ஆகிவிடுகிறது.

    அவர்களுடைய குறை என்று நினைக்கும் எதையாவது இன்னொருவர் சுட்டிக்காட்டும்போது, அதைப் பொறுக்காது, பேச்சை மாற்றுவார்கள்; அந்த இடத்தைவிட்டு நழுவுவார்கள், இல்லை, சண்டை பிடிப்பார்கள். (`நீ மட்டும் தவறே செய்வதில்லையோ?’).

    உன்னால் நான் கெட்டேன்

    ஒரு சிலர், `அவனால்தான் நான் இப்படி ஆகிவிட்டேன்!’ என்று எவர்மேலாவது பழி போடுவார்கள். இது சிறுபிள்ளைத்தனம். சிறுகுழந்தைகள்தாம், அம்மாவின் முத்துமாலையை அறுப்பது, குங்குமத்தைக் கொட்டுவது என்று ஏதாவது விஷமம் செய்துவிட்டு, அண்ணன் அல்லது அக்காள்தான் செய்தார்கள் என்று சாதிக்கும். அவர்கள் அப்போது வீட்டிலேயே இருந்திருக்க மாட்டார்கள்!

    குடும்பத்தில் அதிகாரம்

    கூட்டுக்குடும்பங்களில் அனைத்து அதிகாரமும் யாராவது ஒருவர் கையில்தான் இருக்கும். இருக்கவேண்டும்.

    நாடு என்று ஒன்று இருந்தால், எல்லா மக்களும் தம் விருப்பப்படி நடந்தால் என்ன ஆகும்? அதைச் செவ்வனே நிர்வகிக்கத்தான் தலைவர்கள் இருக்கிறார்கள். (அவர்கள் அப்படி நடக்கிறார்களா என்பது வேறு விஷயம்).

    அதேபோல்தான் குடும்பமும். அக்குடையின் கீழிருக்கும் ஒவ்வொருவரும் மனம்போனபடி நடக்க முடியுமா? அப்படிப்பட்ட குடும்பங்களில் ஒற்றுமையும் இருக்காது, தம் திறமையை எவரும் பூரணமாகப் பயன்படுத்தவும் முடியாது.

    குடும்பத்தலைவி பலருடைய நலனையும் மனதில் கொண்டு, அன்பும் கண்டிப்புமாக அவரவர் குணத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்றபடி விதிமுறைகளை அமைத்து, குடும்பத்தை நல்லபடியாக நடத்திக்கொண்டு போனால் அனைவரும் பயனடைவார்கள். அப்படிப்பட்டவருக்கு குடும்பத்தினரின் மரியாதையும் மதிப்பும் கிடைப்பதில் ஆச்சரியம் என்ன?

    பிறரது தன்மை, தேவை எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் உணர்திறன் பெண்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. எதை, எப்படி, எந்த தருணத்தில் கூறுவது என்று முதலிலேயே யோசித்துவைப்பார்கள். இப்போக்கினால் பிறர் மனம் நோகாது.

    சிலர், `நான் சொல்கிறபடி கேளுங்கள்!’ என்று அதிகாரம் செலுத்த முனையலாம். பயந்தோ, அல்லது மரியாதை கருதியோ அப்படி நடந்தால், யார்தான் சுயமாகச் சிந்திக்க முடியும்? (அதிகாரமாக நடக்கும் ஆசிரியர்களும் இதே தவற்றைச் செய்துவிட்டு, `இக்காலத்து மாணவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு!’ என்ற முடிவுக்கு வருகிறார்கள்).

    சிறுவர்கள் அவர்கள் வயதுக்கு ஏற்றபடிதான் எந்தக் காரியத்தையும் செய்வார்கள். ஓயாது நச்சரிக்காமல், `பிறராலும் நாம் செய்வதைச் செய்யமுடியும்,’ என்று நம்பி, அவர்கள் போக்கில் விட்டால் அவர்கள் தன்னம்பிக்கை தகர்க்கப்படாது. மரியாதை குன்றாது நடப்பார்கள்.

    புகழ் மட்டும்தான் வேண்டுமா!

    `நீ நல்ல அம்மா!’ என்று மனமகிழ்ந்து பாராட்டும் சிறுமி, `நீ எப்பவும் திட்டறே! பிடிக்கலே!’ என்று வேறோரு சமயம் கூறுகிறாளா?

    புகழ்ச்சியைக் கேட்க உவப்பாக இருக்கும். அதேபோல், கண்டனத்தையும் கேட்டு, அதில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்தால், அதை எப்படித் திருத்திக்கொள்ளலாம் என்று யோசிக்கலாம்.

    `எனக்குப் பொறுமையே கிடையாது. அதற்கு என்ன செய்வது!’ என்று நம்மை நாமே மன்னித்துக்கொள்வதால் என்ன பயன்?

    நம் குறைகளை உணர்ந்து, கூடியவரை அவற்றை மாற்ற முயற்சி செய்யவேண்டாமா?

    அப்படிச் செய்தால், நமக்கும் பிறருக்கும் பெரும் உதவி செய்வதுபோலாகுமே!

    Share
  • நலம் … நலமறிய ஆவல் (142)

    -நிர்மலா ராகவன்

    குணத்திற்கேற்ற வேலை

    ஒருவர் தாம் அடைந்த சிறப்புகளைப்பற்றிப் பேசினால், `தற்பெருமை!’ என்று முகத்தைச் சுளிப்பார்கள். அதனால், தம் குறைகளை வெளிப்படுத்திக்கொள்வதே அடக்கத்தின் அடையாளம் என்று சிலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால், `எனக்குப் பொறுமையே கிடையாது!’ என்று பேட்டியின்போது பெருமையாக அலுத்துக்கொள்பவர் பாலர் பள்ளிக்கோ, பள்ளிக்கூடங்களுக்கோ ஆசிரியராக முடியுமா?

    `உங்கள் பலவீனம் என்ன?’ என்று கேட்கப்படும்போது, `அப்படி எதுவும் கிடையாது!’ என்பது இன்னொரு ரகம்.

    யாராவது நம்புவார்களா, என்ன! முதலில் அவ்வேலையை எந்த விதத்திலும் பாதிக்காத பலவீனங்களை கோடிகாட்டிவிட்டு, பிறகு நம் நல்ல தன்மைகளை எடுத்துச் சொல்லலாம்.

    சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி உண்மையைச் சொல்லலாம் என்றாலும், நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியாது என்பது வேண்டாமே! ஆக்ககரமாக ஏதாவது இருக்காதா, என்ன!

    `என்னை நம்பி ஒரு வேலையைக் கொடுத்தால், எப்பாடுபட்டாவது அதை நானே முடித்துவிடுவேன்,’ என்பவர் பிறருக்கும் அவ்வேலையைப் பகிர்ந்து கொடுக்க முடியாத குணத்தை, தம்மையும் அறியாது, ஒத்துக்கொள்கிறார். அப்படியானால், பிறரது கூட்டணியில் இணைந்து வேலை செய்ய எப்படி முடியும்?

    மற்றவருடன் இணைந்து செய்யும் ஒரு காரியம் வெற்றி அடையும்போது, `நான்தான் செய்தேன்!’ என்று புகழைத் தட்டிக்கொண்டுபோகப் பார்ப்பவர்களைப்பற்றி என கூறுவது!

    தலைமைப் பதவியில் இருந்தபோது, தன்கீழ் இருப்பவர்களின் முயற்சியைப் பாராட்டாது, தானே முனைந்து செய்ததுபோல் பாசாங்கு செய்தவரின் கதை இதோ!

    கதை

    என் தலைமை ஆசிரியையாக இருந்த திருமதி ராஜன் தன் கீழ் இருப்பவர்கள் – அவர்கள் ஆசிரியர்களோ, அல்லது மாணவியரோ – தவறே செய்யக்கூடாது என்று உறுதியாக நம்பியவள். நடக்கிற காரியமா!

    அவளுடைய வசவுகளைப் பொறுக்க முடியாது தினமும் யாராவது ஒருவர் அழுதுகொண்டிருப்பார். புதிது புதிதாக விதிகள் வகுத்துக்கொண்டே இருப்பாள்.

    `பைத்தியம் பிடித்துவிடும்போல் இருக்கிறது!’ என்று மூத்த ஆசிரியை ஒருவர் பொதுக்கூட்டத்தில் கூற, எல்லாரும், `நாம் மட்டும் தனியாக இல்லை!’ என்ற நிம்மதியுடன் சிரித்தோம்.

    பள்ளி ஆண்டுவிழாவிற்கு நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சீன நடனம் ஆடுகையில் இரு மாணவிகள் அடிக்கடி காலைத் தூக்கவேண்டியிருந்தது. அப்போதெல்லாம், நிதானமின்றி அவர்கள் உடல் தளர்ந்து ஆடியது.

    நான் அதைத் தவிர்க்க, பயிற்சி சமயத்தில் ஒரு வழி கூறினேன்: “உடல் நேராக இருக்கவேண்டும். மூச்சை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு, அதே சமயம் ஒரு காலைத் தரையில் ஓங்கித் தட்டி, மூச்சை வெளிவிடாது இன்னொரு காலைத் தூக்குங்கள்!” (எல்லாவித நாட்டிய நிகழ்ச்சிகளும் என் பொறுப்பில் இருந்தது).

    நிகழ்ச்சியின்போது வந்திருந்த பிரமுகர், `Such perfect balance!” என்று பாராட்டினார், பக்கத்தில் அமர்ந்திருந்த தலைமை ஆசிரியையிடம்.

    ஏதோ தான்தான் அவர்களை பழக்குவித்ததைப்போல், பெருமையுடன் அவரது புகழ்ச்சியை ஏற்றுக்கொண்டு சிரித்தாள் அவள்.

    அவளுக்கு முன்பு இருந்த தலைமை ஆசிரியை, `எங்கள் நல்ல காலம், சிறந்த ஆசிரியை அமைந்திருக்கிறார்!’ என்று என் பெயரை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னாள். மேலும் கடுமையாக உழைக்க எனக்கு உற்சாகம் பிறந்தது. (மாணவ மாணவியரின் பெற்றோருக்கும் அறிவுரை கூறியிருக்கிறேன் – அவர்கள் பிள்ளைகளை வளர்க்கவேண்டிய முறை சம்பந்தமாக).

    எங்களில் பத்து சதவிகித்ததினர்தான் எப்பாடு பட்டாவது நம்மை நம்பி வந்திருக்கும் மாணவிகளை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்று முனைந்திருந்தோம்.

    `பாடம் போதிப்பதுடன் என் கடமை முடிந்துவிட்டது. நான் வாங்கும் சம்பளத்திற்கு இவ்வளவுதான் செய்ய முடியும்!’ என்று ஒதுங்கும் ஆசிரியர்களே மிகுந்து இருந்தார்கள்.

    கதை

    அரசாங்கம் அளித்த சலுகையால் அயல்நாட்டிற்குப் போய் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வந்தவள் அஸ்லீனா. (பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவளாததால் கிடைத்தது அது என்று உணரும் அளவுக்கு அவளுக்கு விவேகம் இருக்கவில்லை). பிற ஆசிரியைகளைவிட தான் உயர்த்தி என்பதுபோல் அலட்டிக்கொண்டாள். பெரிய பதவி என்றால் எதுவும் செய்யாது, சுவற்றை வெறித்துக்கொண்டிருப்பதுதான் என்று நினைத்தவர்களில் அவளும் ஒருத்தி.

    ஒரு முறை, “நீங்கள் எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறீர்களே! என் பரீட்சைத்தாளைத் திருத்துவதுதானே!” என்று, அதிகாரமாக ஒரு கட்டை என்முன் போட்டாள்.

    என்ன திமிர்!

    நான் மிக மிக நிதானமாக, “நான் எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறேன்.  ஏனெனில், என் வேலையை வீட்டிலேயே செய்து முடித்துவிட்டேன். நீயும் உனக்கான வேலையைச் செய் (I suggest you do your own work!)” என்றேன். அடுத்தடுத்து நான்கு வகுப்புகளில் போதித்தபின் நான் சற்று ஓய்வாக இருந்தது அவள் கண்களை உறுத்தியிருக்க வேண்டும்.

    என் கண்டிப்பான பதிலை சற்றும் எதிர்பாராத அவள் அடுத்து என்ன செய்வது என்று புரியாது, என்னையே பார்த்தபடி நின்றாள்.

    “Anything else?” என்று தலையை நிமிர்த்தி மிரட்டலாக நான் கேட்க, விரைந்தோடினாள்.

    இம்மாதிரியாக, `இன்னும் என்ன?’ என்று கேட்பது, `உரையாடல் முடிந்துவிட்டது, நீ தொலை!’ என்பதற்கு ஒரு வழி. எங்கோ படித்தது. நம்மை துச்சமாக நினைப்பவர்களை விரட்ட நல்ல உபாயம்.

    தான் மேலானவள் என்று அஸ்லீனா கருதினாலும், ஒருக்காலும் தலைமைப் பதவிக்கோ, வேறு பொறுப்பான பதவிக்கோ உயரமாட்டாள். ஏனெனில் தன் வேலையைக்கூடச் செய்யப் பிடிக்காத சோம்பேறி அவள். குறித்த காலவரைக்குள் தன் வேலையைச் செய்து முடிக்கும் கட்டொழுங்கும் கிடையாது. தன்னையொத்த பிறரை மதிக்கவும் தெரியவில்லை. அப்படியானால், அவளுக்குக்கீழ் இருப்பவர்களை எப்படி நடத்துவாள்?

    `முடியாது!’ என்று சொன்னால் பிறருக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விடுமே!’ என்று அஞ்சுபவர்கள் ஒரே சமயத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள். எல்லாமே அரைகுறைதான்.

    பொறுமையுடன் பிறர் கஷ்டங்களைக் கேட்பது நல்ல குணமாக இருக்கலாம். ஆனால், அதற்கும் எல்லை கிடையாதா?

    ஒரே வேலைப்பளு!

    வேலைப்பளுவால் மன இறுக்கம் அதிகரிக்க, பலருக்கும் பிள்ளைப்பேறு கிட்டாமல் இருக்கிறது என்று ஒரு மருத்துவர் என்னிடம் கூறினார்.

    நிறைய வேலை காத்திருக்கிறதா? எது முக்கியம் என்று எழுதி வைத்துக்கொண்டு, மிக அவசியமானதிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான். பொழுதுபோக்கிற்காகச் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்தாலும் காத்திருக்கும் வேலைகளை முடிக்க முடியும். மேலதிகாரி தாக்கினால், அது அவருடைய குறைபாடு என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஐயோ பாவம்!

    பலருடன் சேர்ந்து வேலை பார்க்குமிடத்தில் ஒரு சிலர் தம் கஷ்டங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். அவைகளை நாமே அனுபவித்ததுபோல் துயரடைந்தால் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கலாம். ஆனால் நம் நிம்மதிதான் கெடும். அப்படி ஒரு உணர்திறன் (sensitivity) அநாவசியம். எவ்வகையிலாவது உதவ முடிந்தால் போதுமே! அதுவும் முடியவில்லையா? சும்மா கேட்டுவிட்டுப் போகவேண்டியதுதான்.

    வீடா, வேலையா?

    வேலை நேரத்தில் வீட்டு நினைவே இருந்தாலும் வேலையில் சுணக்கம் ஏற்படாதா! இதற்குத்தான் `நிகழ்காலத்தில் இரு!’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    எந்தச் செயலில் ஈடுபடும் முன்னரும், அதிலிருக்கக்கூடிய நன்மை தீமைகளைத் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

    தீவிரமான விளையாட்டா? உடலின் பல பாகங்களில் பலத்த அடி படலாம். சில நாட்களோ, மாதங்களோ வலியைத் தாங்க வேண்டிய துணிவு வேண்டும். உடல்நிலை சரியாகி, மீண்டும் அதே விளையாட்டில் ஈடுபட ஆயத்தமாகும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.

    குணத்திற்கேற்ற உத்தியோகமோ அல்லது பொழுதுபோக்கோ அமைந்தால் வாழ்க்கை இனிக்கும். சலிப்பு ஏன் அண்டுகிறது!

    Share
  • நலம்….நலமறிய ஆவல் 141

    -நிர்மலா ராகவன்

    கனவுகள் நனவாக

    சிலருடைய கனவுகள்தாம் நனவாகின்றன. அவர்களிடம் அப்படி என்ன சிறப்பு என்று ஆராய்ந்தால், அவர்கள் தோல்வியைக் கண்டு அஞ்சுவதில்லை என்பது புலனாகும்.

    “தோல்வி என்பது புத்திசாலித்தனத்தை மீண்டும் முயன்று பெற ஒரு வாய்ப்பு,” என்று கூறுகிறார் அந்த அனுபவமுள்ள ஒரு புத்திசாலி.

    தோல்வி வர தவறுகள் மட்டும் காரணமில்லை. அது நிரந்தரமும் இல்லை. இதனால்தான் முயற்சி திருவினையாக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    எண்ணித் துணிக கருமம்

    ஒரு காரியத்தை ஆரம்பிக்குமுன்னரே, `என்னால் முடியுமோ?’ என்ற சந்தேகம் எழுந்தால் நம்மை நாமே பலவீனப்படுத்திக்கொள்கிறோம்.

    `செய்துதான் பார்ப்போமே! வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையேல், அதிலிருந்து ஏதாவது பாடம் கற்கலாம்!’ என்ற துணிவு இருந்தால் சிறக்கலாம்.

    விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு பயந்தயத்திற்கு முன்பும், `இன்று என் கட்சி ஜெயிக்க முடியுமோ?’ என்று ஐயம் கொள்வது கிடையாது. உடல் வலி இருந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.

    தோல்வியினால் யாராவது இறந்திருக்கிறார்களா? தோல்வியைக் கண்டு அஞ்சி, எடுத்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு, மனச்சோர்வுடன் வாழ்வதே இறப்பிற்குச் சமானம்தான்.

    திறமை, உழைப்பு ஆகியவைகளுடன் விடாமுயற்சியும் இருந்தால், தோல்விகூட படிப்பினை ஆகிவிடுகிறது.

    கர்வமே தோல்விக்கு முதல் படி

    எத்தனையோ வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், `எனக்கு நிகர் யாருமில்லை. எவரால் என்னை வெல்ல முடியும்!’ என்ற திமிரே அவர்களை அடக்கிவிடும் என்று புரிந்துவைத்திருப்பவர்கள்தாம் அடுத்தடுத்து வெற்றி பெறுகிறார்கள். வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாகவே பாவிப்பதால், எப்போதாவது தோல்வி கிடைத்தால் இவர்கள் மனமுடைந்து போய்விடுவதில்லை, வெற்றி கிடைக்கும்போது பிறரை அலட்சியமாகக் கருதுவதும் கிடையாது.

    `வெற்றிதான் கிடைத்துவிட்டதே!’ என்று மெத்தனமாக இருந்தால், தோல்வி அடையும் நாள் நெருங்கிவிட்டது என்று கொள்ளலாம்.

    நடிப்புத் தொழிலையே கனவாகக்கொண்டு, அதில் பெரும் வெற்றியும் பெற்ற ஒரு நடிகரைக் கேட்டார்கள், “நீங்கள்தான் உலகிலேயே தலைசிறந்த நடிகர். ஒப்புக்கொள்வீர்களா?”

    “அப்படி நான் நினைத்தால், அன்றே இறந்துவிடுவது மேல்!”

    நீயே காரணம்

    வெற்றி, தோல்வி இரண்டுமே நம்மால் வருவதுதான். தான் அடைந்த தோல்விக்குப் பிறரைக் குற்றம் சாட்டுபவன் தோல்விமேல் தோல்விதான் அடைய நேரிடும். அவனுடைய எந்தக் கனவும் பலிப்பதில்லை.

    கதை

    “என் மகன் பிரதாப் நீங்கள் கற்பிக்கப்போகும் எல்லாப் பாடங்களிலும் தொண்ணூறுக்குமேல் மதிப்பெண்கள் வாங்குவான் என்று நீங்கள் உறுதி அளிக்க முடியுமா?” அரசாங்கத்தில் உயர்ந்த உத்தியோகத்தில் இருந்த தந்தை என்னிடம் சவால் விட்டார்.

    “உள்ளீடு (input) இருக்கும் வெளியீட்டைப்பற்றி நான் எப்படி உறுதி கூற முடியும்?” என்று நான் எதிர்க்கேள்வி கேட்டபோது, “அவன் என் மகன்! அதே ஜீன்ஸ்!’ என்று பெருமையாகப் பேசினார்.

    அவர் நம்பிக்கை பொய்த்தது.

    நடிகர் ஜாக்கி சான் தன் சுயசரிதையில், `நான் ஒரு தந்தையாகத் தோல்வி அடைந்துவிட்டேன்!’ என்று புலம்பி இருக்கிறார்.

    உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றபின் தம் கடந்தகால வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போது, சில ஆண்களுக்குப் நிறைவைவிட ஏமாற்றமே அதிகமாக இருப்பதைக் காணலாம்.

    ஏதாவது குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் சிறுபிள்ளைகள் அவர்களிடம் வந்தபோது, அவர்களுக்கு அவகாசமோ, `என்ன பிரச்னை?’ என்று கேட்கும் பொறுமையோ இருந்திருக்காது. சிலர் வன்முறையைப் பிரயோகித்திருப்பார்கள். (நாள் தவறாது அடித்தால்தான் ஆண்பிள்ளை உருப்படுவான் என்று எண்ணும் பெற்றோர் அச்செய்கையால் அவர்கள் கெட்டுப்போக வழிவகுக்கிறோம், அல்லது தம்மைவிட்டு விலகிப்போகிறார்கள் என்பதை உணர்வதில்லை).

    நாளடைவில், தந்தையிடமோ, தாயிடமோ தம் அச்சங்களையும் குழப்பங்களையும் பெற்றோருடன் பகிர்ந்துகொள்ள பிள்ளைகள் முன்வர மாட்டார்கள். அவ்வளவு அவநம்பிக்கை! அவர்களைப்போன்றே குழப்பத்தில் இருக்கும் நண்பர்களை நாடுவது இயற்கை.

    அப்பிள்ளைகள் தவறான பாதையில் பயணிக்கும்போது, காலங்கடந்து, `நாம் எங்கு தவறிழைத்தோம்?’ என்று எண்ணம் போகிறது பெற்றோருக்கு. நண்பர்களின் பிள்ளைகள் நல்ல நிலைக்கு உயர்ந்திருப்பதைக் கண்டு ஆற்றாமை ஏற்படுகிறது.

    பிறரது வெற்றி உன் தோல்வியல்ல

    கதை 1

    கணவன், குழந்தைகள் என்று மகிழ்ச்சியாக இருப்பவர்களைப் பார்த்து, என் அயல்நாட்டுத் தோழி ஏஞ்சலா ஆழ்ந்த வருத்தம் கொண்டிருந்தாள். ஏனெனில், அவள் விவாகரத்து ஆனவள்.

    தன் மனநிலையை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள விரும்பாது, அவளது நிலைமையிலிருந்த இன்னொருத்தியைப்பற்றிப் பேசினாள்: “மேரி, பாவம். இல்லை? அவளைவிட இன்னொரு பெண்தான் உயர்த்தி என்று அவள் கணவன் போய்விட்டானே! மேரியின் மனம் எவ்வளவு நொந்துபோயிருக்கும்!”

    மேரி இளம்பெண். அழகாக இருந்தாள். நாட்டியம் போதிப்பவள். (கண்ணையும் கழுத்தையும் எப்படி அசைப்பது என்று ஆர்வத்துடன் என்னிடம் கேட்டுக் கற்றுக்கொண்டாள்). நான் பழகியவரை நல்லவளாகத்தான் தெரிந்தாள்.

    “இவளுடைய அருமை புரியாதவன் மடையன் என்று விட்டுத்கொள்ள வேண்டியதுதான்!” என்று நான் பதிலளித்தபோது, ஏஞ்சலா தன்னைப்பற்றித்தான் கேட்டாள் என்பது எனக்குப் புரியவில்லை.

    இன்னொரு முறை, “வீட்டில் ஆண் ஒருவர் இருந்தால், எல்லா வேலையும் நானே செய்ய வேண்டியிருக்காதே என்றிருக்கும்,” என்றாள்.

    “Relaionships have their own problems!” என்றேன் பெருமூச்சுடன். எந்த நெருக்கமான உறவில்தான் பிரச்னைகள் இல்லை?

    ஏஞ்சலா, மேரி இருவருமே தத்தம் கணவன்மார்களைவிட உயர்ந்த நிலையில் இருந்தார்கள். அதைப் பொறுக்க முடியாது, என்றுமே தம்மை மிஞ்ச முடியாத பெண்ணாகப் பார்த்துத் தேடிப்போயிருக்கிறார்கள் அந்த ஆண்கள். விளைவு: விவாகரத்து.

    திருமணம் செய்துகொள்ளும்போது எல்லாருமே இன்பக்கனவுகளுடன்தான் இல்லறத்தில் காலை வைக்கிறார்கள். நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா?

    மணமுறிவு தோல்வியல்ல. ஒரு பகுதி முடிய, புதியதொரு வாழ்க்கையின் தொடக்கம் என்று எடுத்துக்கொண்டால்தான் மனம் நிம்மதி அடையும்.

    கதை 2

    ஒரு நாட்டிய வகுப்பில் சில ஆண்டுகளே பயிற்சி பெற்ற பெண்கள் இருவர் உயர்கல்விக்கென தாற்காலிகமாக விலகிப்போனார்கள். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தபோது, முன்பு சிறுமிகளாக இருந்தவர்கள் நாட்டியத்தில் இப்போது தம்மைவிட மிகச் சிறந்துவிட்டதைக் கண்டு ஆயாசம் ஏற்பட்டது. தம் தோல்வி என்ற வருத்தம் மிக, வகுப்பிலிருந்து நின்றுகொண்டார்கள்.

    சில காலம் கடுமையாக முயன்றிருந்தால், மீண்டும் நன்கு ஆட முடிந்திருக்கும். ஆனால், பிறருடன் தம்மை ஒப்பிட்டுக்கொண்டு, தாம் தோல்வியுற்றதாக அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டார்கள்.

    தோல்வி அடைந்துவிட்டவர்களை `முட்டாள்,’ `பிழைக்கத் தெரியாதவன்!’ என்றெல்லாம் ஏளனமாகக் கருதுபவர்கள்தாமே இவ்வுலகில் அதிகம்! அதனாலோ என்னவோ, வெற்றி பெற்ற பலர் தம் தோல்விகளைக் குறித்துவைப்பது கிடையாது.

    கனவு ஒரு பக்கமிருந்தாலும், மிகுந்த பிரயாசைக்குப்பின் கிடைக்கும் வெற்றியே இனிமையானது.

    கதை

    1897-இல் பிறந்த எமிலியா இயர்ஹார்ட் (Amelia Earhart) உலகிலேயே தன்னந்தனியாக விமானத்தை ஓட்டிய முதல் அமெரிக்கப் பெண்மணி.

    தான் செய்துவந்தது அபாயகரமானது என்று புரிந்தும் அயராது, வெற்றி பெறும் திறமை தனக்கிருக்கிறது என்ற துணிவுடன் ஈடுபட்டார். கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதன் பலனாக பல வாகைகள் சூடினார். முதன் முறையாக அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடந்தவர் என்ற பெருமைக்குரியவர் எமிலியா. இறுதியில் ஒரு விமானத்தை ஓட்டிப்போகும்போது மரணத்தைத் தழுவினார். அதை யாரும் குறைவாகச் சொல்வதில்லை. அவரது சாதனைகள்தாம் நிலைத்து நிற்கின்றன.
    தோல்வி அடையாதவர் யார்?

    கல்விக்கூடங்களில் பயில்கிறவர்கள் அனைவருமே சிறந்த தேர்ச்சி பெறுகிறார்களா? அவர்களது நாட்டம் வேறு திசையில் இருக்கலாம்.

    பாடுவதிலோ, ஆடுவதிலோ, சித்திரம் வரைவதிலோ நாட்டம் கொண்ட ஆண்குழந்தைகளை பல பெற்றோர் ஏற்காது கடுமையாகத் தண்டிப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை, கல்லூரியில் படித்து, பெரிய உத்தியோகத்திற்குப் போனால்தான் சமூகத்தில் மதிப்பு.

    பெற்றோரின் கணிப்பை ஏற்று, `எனக்கு எல்லாவற்றிலும் தோல்விதான்!’ என்று பிள்ளைகள் தம்மைத்தாமே மட்டமாக எண்ணி, குன்றிப்போவார்கள். தமக்கு வேறு துறைகளில் திறமை இருப்பது அவர்களுக்கே தெரிந்திருந்தாலும், அதை வெளிக்காட்ட வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. கனவுகள் கனவாகவே ஆகிவிடும் கொடுமை இதனால்தான்.

    அவரவருக்குப் பிடித்த துறையில் ஊக்கம் காட்டியிருந்தால், அதில் முழுமனதுடன் ஈடுபட்டு, பெரும் வெற்றி கண்டிருப்பார்களே!

    Share
  • நலம்… நலமறிய ஆவல் – 140

    நிர்மலா ராகவன்

    அனுபவங்கள்

    தான் பட்ட கஷ்டங்களையும், அதனால் அனுபவித்த துயரத்தையும்பற்றிப் பேசினால், பிறர் அனுதாபப்படுவார்கள் என்று எண்ணுகிறவர்கள் நம்மில் பலர். இவர்கள் ஒன்றை மறக்கிறார்கள். `கஷ்டங்கள்’ என்றால் அனுபவம் பெறுவது. இன்னொருமுறை அதே தவற்றைச் செய்யாது, அதே பாதையில் நடக்காமல் இருக்கத் தூண்டும் விவேகத்தை அளிப்பது. இது புரியாது, என்றோ பட்ட அவதிகளால் எந்தப் பாடத்தையும் கற்காமல் இருப்பவன் மீண்டும் மீண்டும் அதே தவற்றைச் செய்கிறான். துன்பங்களையே அடுக்கடுக்காக அனுபவிக்கிறான்.

    நாம் எவ்வளவோ கஷ்டப்பட்டிருப்போம். ஆனால், இன்றைய நிலையை அடைய படிப்படியாக ஒவ்வொன்றையும் தாண்டி வந்திருக்கிறோம். சிறு வயதில் பெற்றோரும், ஆசிரியர்களும் திட்டியபோது அவர்கள்மீது ஆத்திரமும், நம்மீதே பரிதாபமும் கொண்டிருப்போம். தன்னிரக்கம் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைதான். யோசித்தால், நாம் இப்படித்தான் நல்வழிபடுத்தப்பட்டோம் என்று புரியும். கசப்பை மறந்துவிடுவோம்.

    அனுபவம் ஒன்று, பாடம் வெவ்வேறு

    சந்திரா, கலா இருவரும் பதின்ம வயதாக இருந்தபோதும், ஆண்-பெண் உறவைப்பற்றி நினைத்தாலே பாவம் என்பது போல் வளர்க்கப்பட்டிருந்தார்கள். கருத்தரிப்பு போன்ற `கெட்ட’ வார்த்தைகளை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. அதனாலேயே, தகாத நடத்தை கொண்ட உறவினன் ஒருவனால் இருவரும் பாதிப்படைந்தார்கள். சில காலம்தான். ஆனால், அதன் விளைவோ..!

    முதலில் எந்த ஆணைப் பார்த்தும் பயம் எழுந்தாலும், காலப்போக்கில், நடந்ததில் தன் தப்பு ஏதுமில்லை என்று தெளிந்தாள் மூத்தவள் சந்திரா. பத்து சதவிகிதத்திற்கும் குறைந்தவர்கள் செய்யும் அடாத காரியங்களால் மீதி இருப்பவர்களையும் நோவது என்ன நியாயம் என்ற கேள்வி எழ, ஆண்கள் எல்லாருமே தீயவர்கள் இல்லை என்று நிச்சயித்தாள். கேடுகெட்டவர்களைப் பார்த்தவுடனேயே அவர்கள் குணம் புரிந்து, விலகவும், எதிர்க்கவும் முடிந்தது. மோசமான அனுபவம் ஒன்றால் நல்ல பாடம் கிடைத்தது. ஆண்களுடன் சரளமாகப் பழக முடிந்தது.

    தங்கை கலாவோ, நடந்தது வெளியில் தெரிந்தால், தன்மீதுதான் பழி விழும் என்று பயந்தாள். (அவள் பயமும் ஒரு விதத்தில் நியாயமானதுதான். `நீ முதலில் என்ன செய்தாய்?’ என்று வதைப்பட்ட பெண்களைக் கேட்பதுதானே உலக வழக்கு!). `எல்லா ஆண்களுமே மோசக்காரர்கள்!’ என்று உறுதியாக நம்ப ஆரம்பித்தாள்.

    `அழகாக, இளமைத் தோற்றத்துடன் இருந்தால்தானே ஆண்கள் தகாத இச்சையுடன் அருகில் வருவார்கள்!’ என்று யோசனை போக, தன் தோற்றத்தில் அக்கறை செலுத்த மறுத்தாள். உடல் பருமனாகியது. ஓயாத மனக்குழப்பத்தில் என்னென்னவோ நோய்கள் வந்தன. வயது முதிர்ந்த பின்னரும் ஆண்களைப் பற்றிய அவளது அவநம்பிக்கை மாறவில்லை என்பது பரிதாபத்திற்குரிய விஷயம்.

    ஒரே மாதிரியான அனுபவங்கள் இருந்தாலும், வாழ்வில் நிகழும் எதிர்பாராதவைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்தே ஒருவரது குணாதிசயம் அமைகிறது. மனதைச் சஞ்சலப்படுத்திய நிகழ்வுகள் நடந்து முடிந்தபின் சற்று நிம்மதி கிடைக்கும். அந்த நிம்மதியை அனுபவிக்காமல், வருத்தத்தையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பதால் எப்படி!

    நடந்து முடிந்ததை `வேண்டாத அனுபவம்!’ என்று ஒதுக்கி, அதிலிருந்து சரியான பாடத்தைக் கற்றிருந்தால், கலாவும் தைரியசாலியாக ஆகியிருப்பாள். நிம்மதியை இழந்திருக்கமாட்டாள். என்ன செய்வது! மனோதிடம் சொல்லிக்கொடுத்து வருவதில்லையே!

    `தவறு நிகழ்ந்துவிடுமோ!’ என்ற பயத்திலேயே மூழ்கியிருந்தால், புதியதாக எதையும் செய்யத் துணிவில்லாது போகிறது. இன்பத்தை அனுபவிக்க அதற்கு நேர்மாறான நிலையையும் உணர வேண்டாமா? வெயிலில் நிழலின் அருமையை உணர்வதுபோல்தான். சுயமாக அனுபவிக்க விடுங்கள்!

    சில பெற்றோர் குழந்தை கீழே விழுந்தால் துடிதுடித்துப்போவார்கள். அவர்களுடைய பரிதவிப்பில் குழந்தையும் தன்னிரக்கத்துடன் பெரிதாக அழும். இதற்காக குழந்தை நடக்க விடாமலே தடுத்துவிட முடியுமா? மீண்டும் எழுந்து, நடக்கத் துணிந்தால்தானே நடை பழகும்?

    வாழ்க்கையும் இதுபோல்தான். தவறு நிகழ்ந்துவிட்டதே என்று கலங்குவது வீண். கசப்பான அனுபவங்களும், தவறான முடிவுகளும், அவைகளால் ஏற்படும் தோல்வியும்தான் நல்ல பாடங்களைப் புகட்டும். கடந்த காலத்திலேயே வாழ்ந்துகொண்டு, ஓயாது அதைப்பற்றிப் பேசினால்மட்டும் அவை மாறிவிடப்போவதில்லை.

    தவறுகளைத் தவிர், கவனம்!

    செய்யும் காரியத்தால் வரக்கூடிய துன்பங்களை, தவறுகளை, எப்படித் தவிர்ப்பது என்ற கவனம் அவசியம். ஒன்றரை வயதான குழந்தையிடம், `இந்தப் பாத்திரம் சூடு! தொடாதே!’ என்றால் அதற்குப் புரியாது. மிக லேசான சூடாக இருக்கும் ஒன்றில் அதன் கையை வைத்து, “ஊ..!” என்று பயமுறுத்தினால், கையை உடனே பின்னுக்கு இழுத்துக்கொண்டு, தானும் அதே ஓசையை எழுப்பும். அதன்பின், ஊசிமுனை போன்ற அபாயமான எதையும் அப்படியே சொல்லிக்காட்டலாம். இம்முறையால், வலியை அளிப்பவைகளைத் தவிர்க்க வேண்டும் என்று புரிந்துவிடுகிறது. குழந்தையின் அனுபவமும் வளர்கிறது. அனுபவங்கள் என்றால் பிறர் அனுபவித்ததிலிருந்து கற்பதும்தான்.

    நான் அஜந்தா குகைகளைப் பார்க்கப் போனபோது, வெள்ளைக்காரப் பெண்மணிகள் முன்னெச்சரிக்கையாக காலுறை அணிந்து வந்திருந்தார்கள். நானோ, வெறுங்காலுடன்! தரைச் சூட்டில் பாதம் புண்ணாகி, ரத்தம் வடிய ஆரம்பித்தது. சில நாட்கள் அவதி. பாதம் சரியானவுடன், ஆரம்பப் பள்ளிப் பாட புத்தகங்களில் பார்த்தவைகளை நேரில் அனுபவித்த ஆனந்தம் தான் நிலைத்து நிற்கிறது. வலி மறந்துவிட்டது. அங்கு செல்ல விரும்பும் பிற உறவினர்களுக்கு என் அனுபவம் பாடமாக அமைகிறது. இருப்பினும், ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவமும், அதனால் அவர் அடைந்த உணர்ச்சிகளும் பிறருக்கும் அதே விளைவை அளிக்கும் என்று கூறமுடியாது.

    `எதிர்வீட்டு குண்டு மாமி கைத்தடி பிடித்துக்கொண்டு நடந்துதான் வழுக்கி விழுந்துவிட்டாள். அதனால் நான் என்னுடையதை உபயோகிக்கவே இல்லை!’ காலில் அறுவை சிகிச்சை நடந்தபின் மருத்துவமனையில் கொடுத்த கருவியை உறையிலிருந்தே பிரிக்காது வைத்ததை ஒரு மாது என்னிடம் பகிர, எனக்கு வேடிக்கையாக இருந்தது. அவசியம் என்று கருதிதானே கொடுத்திருப்பார்கள்? யாருடைய வேண்டாத அனுபவத்தையோ பின்பற்றினால், கால் குணமாக இன்னும் அதிக நாட்களாகாதா?

    புதிய அனுபவங்களா! எதற்கு?

    நம் வாழ்க்கையை நாமே அமைத்துக்கொள்ளும் துணிவுடன் நடந்துகொண்டால் இப்படி ஆகுமா?

    `புதிய அனுபவங்களால் என்னென்ன வருமோ! நான் இருக்கிறபடியே மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறேன்!’ என்று ஒரே வட்டத்தில் சுழன்றுகொண்டிருந்தால் சலிப்புதான் மிகும்.

    `சிலருக்குத்தான் வாழ்க்கை நன்றாக அமைகிறது!’ என்று பொருமுவதால் என்ன பயன்? நம் வாழ்க்கையைத் நாமே அமைத்துக்கொள்ளும் துணிவுடன் நடந்துகொண்டால் இப்படி ஆகுமா?

    `புதிய இடங்களுக்கு உல்லாசப் பயணம் போவதா! வீண் அலைச்சல்! அங்கு உணவு ஒத்துக்கொள்ளுமோ, என்னவோ! ஏதாவது உடல் உபாதை வந்துவிட்டால்?’ என்ற அச்சமே சிலரைப் பயணங்கள் என்றாலே தயங்க வைக்கிறது. அஜீரணம், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, ஒவ்வாமைக்காக என்று பலவகையான மருந்துகளை முன்னெச்சரிக்கையாக எடுத்துப்போனால் கவலையே இல்லை.

    சீனர்களின் வழக்கு

    `அவள் சொல்வதைக் கேள்! நீ அரிசி சாப்பிட்டதை விட அதிகமாக உப்பு சாப்பிட்டிருக்கிறாள்!’ வயதில் மூத்தவர் சொல்லைக் கேட்கவேண்டும் என்று வலியுறுத்த சீனர்கள் இப்படிச் சொல்கிறார்கள்.

    சில சந்தேகங்கள் எழுகின்றன: வயது முதிர்ந்துவிட்டதால் மட்டும் ஒருவரை அறிவிலும் சிறந்தவர் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? அவரது நேரத்தை, அனுபவங்களை, அவர் எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதும் முக்கியமில்லையா?

    திறமையும் சோதனைகளும்

    திறமையால், அதனால் வரும் வெற்றிகளால் மகிழ்ச்சி, கர்வம் என்று ஏதேதோ கிடைக்கலாம். ஆனால் சோதனையால்தான் சீரிய பாடங்களைக் கற்க முடியும். ஒருவரது குணமும் புடம் போடப்படுகிறது.

    Share
  • நலம்… நலமறிய ஆவல் – 139

    -நிர்மலா ராகவன்

     

    நல்லதொரு முடிவு

    `இன்று என்ன சமையல் செய்யலாம்?’

    `மழை வரும்போல இருக்கிறதே! துணியை வெளியில் உலர்த்தலாமா, வேண்டாமா?’

    அன்றாட வாழ்க்கையில், இப்படி ஏதாவது முடிவு எடுத்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இவைகளால் பெரிய விளைவுகள் எதுவும் ஏற்படப்போவதில்லை. ஆனால், நாம் வருத்தத்திலோ, ஆத்திரத்திலோ மூழ்கி இருக்கையில் எடுக்கும் முடிவுகள் அப்படியில்லை.

    `எனக்கு வந்த கோபத்திலே, என்ன செய்யறோம்னு புரியாம செஞ்சுட்டேன்!’ என்று எத்தனை குற்றவாளிகள் தம் குற்றங்களை நியாயப்படுத்தி இருக்கிறார்கள்!

    காதல் வயப்பட்டு இருக்கும் தருணங்களிலும் முடிவு எடுக்கக்கூடாது என்கிறார், இதோ ஓர் அனுபவசாலி.

    கதை

    தன்னுடன் படித்த மேகலாவை மணக்க விரும்பினான் மதன். அவனுடைய பெற்றோர் சம்மதிக்கவில்லை.

    காரணம்: வெகு காலமாக போரில் ஈடுபட்டிருக்கும் நாட்டிலிருந்து வந்த பெண் அவள்!

    பிடிவாதமாக தன் காதலியையே மணந்தவர், “எதுக்கெடுத்தாலும் சண்டை போடறா. நான் குறுகிப்போகிறமாதிரி பேசறா!” என்று என்னிடம் சலித்துக்கொண்டார்.

    தாய்நாட்டில் வளர்ந்தபோது, அண்டை அயலில் உள்ளவர்களில் யாராவது அடிக்கடி போருக்குப் பலியாகிக்கொண்டு இருந்ததைப் பார்த்தே வளர்ந்தவள் மேகலா. அதனாலோ, என்னவோ, இனம்புரியாத கோபம் அவளை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. முதலில் அதைப் பெரிதாக நினைக்கவில்லை மதன்.

    ஈராண்டுக்குள், “எங்கப்பா, அம்மா சொன்னதைக் கேட்டிருக்க வேண்டும்! கேக்காம போனது என் தப்பு!” என்று பலமுறை புலம்பினார். “எந்த விஷயத்திலும் என் மனம் நோகும்படி பேசிவிடுகிறாள்! நீங்கள் அவளுக்குப் புத்தி சொல்லுங்களேன்!” என்று என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    மதனின் பெற்றோருக்கு எப்படித் தெரியும் இத்தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள் என்று?

    “வாழ்க்கையில் அனுபவப்பட்டவர்கள், இல்லையா?” என்ற பதில் வந்தது. “நான்தான் அவசரப்பட்டுட்டேன்!”

    சரியான முடிவுகள் அனுபவத்திலிருந்து வருகின்றன என்றால், தவறான முடிவுகளிலிருந்து அனுபவம் வருகிறது. மனைவியை அடிக்கடி மாற்ற முடியுமா? எப்படியோ பொறுத்துப்போக வேண்டியதுதான்.

    மதனின் பொறுமையால், மனைவியும் மாறிப்போனாள்.

    நான் அப்போது அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிட விரும்பவில்லை. பத்து ஆண்டுகளுக்குப்பின், மேகலா வெகுவாக மாறியிருந்தாள். “எனக்குச் சண்டையே பிடிக்காது!” என்றாள். அவளை வார்த்தையால் தாக்கியவர்களிடமிருந்து ஒதுங்கிப்போனாள். இதனால் உத்தியோகத்தில் மேலும் பல சங்கடங்கள்.

    “அடுத்த தடவை, எப்படி நன்னா சண்டை போடறதுன்னு நான் சொல்லித்தரேன்!” என்று நான் தொலைபேசியில் எங்கள் உரையாடலை முடிக்கும் தருணத்தில் கூற, பெரிதாகச் சிரித்தாள்.

    சரியான முடிவுகளை எடுப்பவர்கள் வெகு சிலரே. இவர்கள் அவசரப்பட மாட்டார்கள். தம் இலக்கு எது என்ற தெளிவு உண்டு. அதை அடைய வேண்டிய முயற்சிகளை எடுப்பார்கள். வழியில் எந்த இடர் வந்தாலும், துணிந்து நாற்பார்கள்.

    முடிவும் மீடியாவும்

    `நான் திரைத்துறையில் சாதிக்கப்போகிறேன்!’ என்று இங்கு எனக்குத் தெரிந்த ஒருவர் தான் பார்த்த நல்ல உத்தியோகத்திலிருந்து விலகினார். வெளிநாட்டிற்குச் சென்று, திரைப்படக் கல்லூரியில் பயிற்சியும் பெற்றார். ஆனால், அத்துறை அவர் நினைத்தமாதிரி இருக்கவில்லை. நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஏமாற்றத்தில் பிறருடன் சண்டை போட ஆரம்பித்தார். வாழ்க்கையே வெறுத்துப்போயிற்று.

    கதை

    செல்வந்தர் வீட்டில் பிறந்திருந்த அழகி கன்னிகா. பதினைந்து வயதிலேயே `என் துறை இதுதான்!’ என்று `மாடலிங்’ செய்வதைத் தேர்ந்தெடுத்திருந்தாள். பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. படிப்பை அப்போதே அரைகுறையாக நிறுத்தினாள். நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. அவைகளைப் பெற எப்படி நடந்துகொண்டாலும் தவறில்லை என்று முடிவெடுத்தாள்.

    கடினமான, சவாலாக அமையும் ஒன்றைச் செய்வது என்று முடிவெடுத்தால் பல இடர்கள் விளையத்தான் செய்யும். மாற்றத்தால் சிலவற்றை இழக்க நேரலாம். ஆனால், மேலும் சிலவற்றை அடையலாம் என்று சமாதானம் அடைந்தாள்.

    முடிவு சரியோ, தவறோ, தளர்ச்சி அடைவதால் பயன் ஏதுமில்லை. தவறாக இருந்தாலும், அதை எப்படிச் சரியாக்கலாம் என்று யோசித்து நடந்தால் மனம் தெளிவடையும்.

    `பிறர் என்ன சொல்வார்களோ! எல்லாரும் செய்கிறார்களே!’ என்று ஒருவர் எடுக்கும் முடிவு அவருக்கு நன்மையோ, நிம்மதியோ பயப்பதாக இருக்கும் என்று கூற முடியாது.

    கதை

    மலேசியாவுக்குப் போய் வேலை செய்து பிழைக்க வேண்டும் என்ற முடிவெடுத்து வந்தார் மகாலிங்கம். அங்கு கைநிறையப் பொருள் ஈட்டி, தன்னைவிட அதிக அந்தஸ்துள்ள பெண்ணை மணக்கலாம் என்று கனவு கண்டார்.

    தான் நினைத்தபடி புதிய வாழ்க்கை சொர்க்கமில்லை என்று விரைவிலேயே உணர்ந்து, அதிர்ச்சியும் வருத்தமும் ஒருங்கே அடைந்தார். கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக இருந்ததால், எதிர்பார்த்தபடி நிறைய சேமிக்க இயலவில்லை. தன்னையொத்த பலருடன் ஒரே அறையில் படுக்க வேண்டிய சூழ்நிலை. உறவினர்களைப் பிரிந்து தனிமையில் வாடியதுடன், கலாசார வேறுபாடுகள் வேறு!

    எல்லாவற்றையும் ஏற்று, `பிறர் நம்மைப் பலவந்தப்படுத்தவில்லையே! நாமேதானே வந்தோம்!’ என்று தன்னம்பிக்கையுடன் மனதைத் திடப்படுத்திக்கொண்டார்.

    சில வருடங்களுக்குப்பின், அவர் நினைத்தமாதிரியே திருமணமும் அமைந்தது. அவர் எதிர்பாராதது: பிழைப்புக்காக மனைவியை விட்டுப் பிரிய நேர்ந்ததுதான். மூன்று வருடங்களுக்கு ஒருமுறையே அவளுடன் இருக்க முடிந்தது.

    அவசர முடிவு

    மலேசியாவில் ஆண்டுதோறும் நடக்கும் தீபாவளிச் சந்தையைப்பற்றி விசாரித்தார் காஞ்சிபுரத்தில் இருந்த தறிக்காரர்.

    “பட்டுடன் எதையாவது கலந்து, `இது நல்ல பட்டு!’ என்று சாதித்து, அதிக விலையில் விற்கிறார்கள் அந்தச் சமயத்தில். `மாணிக்கக் கற்கள் பதித்தது!’ என்று பிளாஸ்டிக்கில் செய்த மணிகளைப் பதித்த வளையல்களை விற்கிறார்கள்,” என்று நான் ஏமாந்த கதைகளைக் கூற, “நாங்க அப்படியெல்லாம் ஏமாத்திப் பிழைக்க வேண்டாம்!” என்று ஆத்திரத்துடன் கூறி, நல்லதொரு முடிவெடுத்தார் அந்த அபூர்வமான யோக்கியர்.

    சில கடைகளில் தரமான, எந்தக் கலப்புமில்லாத பட்டுப்புடவைகளை விற்றார்கள். அதனால் விலை அதிகமாக இருப்பதைத் தவிர்க்க முடியாது.

    இது புரியாத பாமர மக்கள் ஏமாந்து, `முதல் கடையில் மலிவாக இருக்கிறது!’ என்று வாங்கிப்போக, தரமான பொருளை விற்றவருக்கு வியாபாரம் ஆகவில்லை.

    அடுத்த ஆண்டு, தரமான அந்தக் கடை வராததைக் கவனித்தேன். எதிர்பார்த்தபடி, பிறர் சிலாகித்தபடி, லாபம் கிடைக்காதிருந்திருக்கலாம்.

    இன்னொரு அவசர முடிவு. முதலிலேயே சரியாக விசாரிக்காததால் வந்த வினை.

    மணக்க அவசரம்

    `நான் காதலித்தவளை மணந்திருந்தால், வாழ்க்கை இன்பகரமாக இருந்திருக்கும்!’ பெற்றோரின் மிரட்டலுக்கு அடிபணிந்தோ, அல்லது உயர்ந்த நிலைக்கு ஆசைப்பட்டோ, தன் தகுதிக்கு மீறி மணந்தவரின் புலம்பல் இது.

    இவர் என்ன செய்திருக்க வேண்டும்? முதலிலேயே நன்றாக யோசித்திருக்க வேண்டும்: என்னைவிட அதிகம் படித்தவளை மணந்தால், என் பொருளாதார நிலைமை உயரலாம். ஆனால், மனைவி என்னை மதிப்பாளா?

    அதற்குமுன், நானே அவளை மிரட்டிவிட்டால்? என்று யோசனை போகிறது.

    ஆரம்பத்திலேயே இவ்வளவு குழப்பம் எழுந்தால், இல்லற வாழ்க்கை இனிக்குமா? ஓயாத போட்டியும், பொறாமையும்தான் எழும்.

    எடுப்பார் கைப்பிள்ளை

    `பத்து வருஷங்களுக்கு முன்னாலேயே இப்படிச் செய்திருந்தால், எத்தனையோ பணத்தை மிச்சமாக்கியிருக்கலாம்!’ மது, சிகரெட் பழக்கத்தை விடும் முயற்சியில் இறங்கியிருப்பவர்.

    அதுதான் படத்திற்குப் படம் இவைகளால் ஏற்படும் அபாயங்களைப்பற்றி எச்சரிக்கிறார்களே! விளையாட்டாய், நண்பர்களின் சவாலை ஏற்று ஆழந்தெரியாமல் கால் விட்டுவிட்டு, ஆரோக்கியக்குறைவு, குடும்பத்தில் பூசல் என்று காலங்கடந்து வருந்துவானேன்!

    யார் நம் நலனை விரும்பி, நல்ல யோசனைகளைக் கூறுகிறார்கள் என்று ஆராய்ந்து நடந்தால், இப்படி வருந்த நேரிடுமா?

    Share
  • நலம்.. நலமறிய ஆவல் – 138

     

    திரையால் பாதிப்பு

    இரவெல்லாம் கண்விழித்து கணினி விளையாட்டில் ஈடுபட்டிருப்பவருக்கு நேரத்துடன் அலுவலகத்திற்குச் செல்ல முடியவில்லை. எழுந்தபின்பும், `எப்போதடா மீண்டும் கணினிமுன் உட்காருவோம்!’ என்ற ஏக்கம். கார் ஓட்டிப்போகும்போது ஏதோ நினைவுடன் ஓட்டுவதில் விபத்துகள். மந்தமாகிவிட்டான்.

    பிறரது உணர்வுகளை திரையில் பார்த்து ரசிப்பதும் போதைதான்.

    கவனக்குறைவு, தூக்கமின்மை, ஒரு மந்தமான மனநிலை (mood), அதிகம் யோசியாது ஒரு காரியத்தில் இறங்குவது (impulsive), நடத்தையில் மாற்றம் – எல்லாமே திரை தரும் போதையால்தான்.

    கதை

    அண்மையில் மலேசியாவில் பதினாறு வயதுச் சிறுவன் ஒருவனுக்கு அவனது கைத்தொலைபேசியே யமனாக ஆகியது.

    அக்கருவியை `சார்ஜில்’ போட்டுவிட்டு, அதனுடன் இணைக்கப்பட்ட கம்பிவழி இசையைச் செவிமடுத்தபடி இருந்தவன் பகலிலேயே தூங்கிப்போனான். மதிய உணவிற்கென்று அவனை எழுப்ப வந்த தாய் மகனது உடல் சில்லிட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தாள். காதிலிருந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்தது.

    பிரிட்டனில் வீடியோ விளையாட்டுகளைக் காரணமாகக் காட்டி, இருநூறு தம்பதியர் விவாகரத்து கோரியுள்ளனராம்!

    பன்னிரண்டு மணி நேரத்தைக் கணினியின்முன் கழித்த மாணவன் ஒருவன் வகுப்பில் தூங்கிவிடுகிறானாம். படிப்பிலும் சோடையாகிவிட்டான்.

    `இன்றைய கலாசாரம்!’ என்று அலட்சியமாக விட்டுவிட முடியுமா?

    டோபமீன் (dopamine) என்ற ரசாயனப் பொருள் நம் மூளையிலுள்ள நியூரான்களில் (நரம்புகளில்) சுரக்கின்றன. அது சுகமான உணர்வை எழச் செய்யும். அடிக்கடி இப்படி உணர்ந்தால் ஆனந்தமாக இருக்குமே என்ற கிறக்கம் எழ, அதுவே போதையாகிறது.

    மது, சூதாட்டம், கஞ்சா, ஹெரோயின் போதைப் பொருட்கள் அனைத்துமே ஒருவரை அடிமைப்படுத்துவது இந்த டோபமீனைச் சுரக்க வைப்பதால்தான்.

    குழந்தைகள் இருபது நிமிடங்களுக்குமேல் திரையை உற்றுப் பார்க்கும்போது, கண்கள் கிறங்க, போதை நிலைக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் அந்தச் செயலிலிருந்து விலக எளிதில் சம்மதிக்க மாட்டார்கள். கைகால்களை உதைத்துக்கொண்டு அழும் குழந்தையின் காதைப் பிடித்து அறைக்கு வெளியே கொண்டுவிட நேரிடும். (பெரியவர்களின் எல்லை நாற்பது நிமிடங்கள். இருபது வினாடிகள் கண்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டுத் தொடரலாம்).

    மிகச் சிறு வயதில் திரையையே நோக்குவதால் மூளையின் முன்பகுதி பாதிக்கப்படுகிறது. இதனால் திட்டமிடல், எது முக்கியம் என்று தீர்மானிப்பது குறைந்துவிடுகிறது. பிறரது துயரங்களை உணர்ந்து கருணையுடன் நடப்பது இயலாத காரியமாகிவிடுகிறது. இதனால் உறவுகளின் நெருக்கமும் குறையும். தனிமையும், அதனால் எழக்கூடும்; மன இறுக்கமும் தொடரும்.

    வீடியோ விளையாட்டுகளில் ஜெயிக்கும்போது அளவுக்கு அதிகமாக குதூகலிப்பவன் தோற்கையில் – என்னமோ உலகமே இடிந்துவிட்டதுபோல் – அலறுவான். ஆனால், அவனுடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட தகவலை எப்படிச் செயல்படுத்துவது என்று புரியாது.

    வளர்ந்த பின்னர், ஒரு சிலருக்கு மணிக்கட்டில் பொறுக்க முடியாத வலி. David Price என்ற பந்தாட்டக்காரர் ஒருவருக்கு அப்படி ஏற்பட்ட வலியால், முக்கியமான போட்டி ஒன்றிலிருந்து விலக நேரிட்டது. பல மாணவர்களுக்கு பரீட்சையில் எழுதக்கூட முடியாத நிலை.

    சில கணினி விளையாட்டுகளை இலவசமாகப் பெற முடியும் என்றாலும், அவற்றுக்கான கருவிகளைத் தனித்தனியாக வாங்கிக்கொள்ள வேண்டும். விளையாட்டில் விரைவாக முந்த, பெற்றோரின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி விடுகிறார்கள் மாணவர்கள். சில சமயம், என்ன வாங்குகிறோம் என்றே புரியாது வாங்கிவிடுகிறார்கள்.

    கதை

    மலேசியாவில், வக்கீல் படிப்பு படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவன் இப்படித்தான் தன் பெற்றோருக்குப் பல்லாயிரம் ரிங்கிட் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டான். கடனை அடைக்க அவர்கள் சொத்தை விற்கும்படி நேர்ந்தது. போதாக்குறைக்கு, கல்லூரியிலிருந்தும் விலக்கப்பட்டான். காலங்கடந்து, அழுகிறான். `இந்தக் கொடும் போதைக்கு அடிமை ஆகாதீர்கள்!’ என்று ஊடகங்கள்வழி வேண்டுகோள் விடுக்கிறான்.

    கடந்த காலத்தில் `அடிமைகள்’ தமக்குச் சுதந்திரம் கிடையாது என்ற உண்மை நிலையை உணர்ந்திருந்தார்கள். இன்றோ, கணினிக்கு அடிமையானவர்களுக்குத் தம் நிலை புரிவதில்லை.

    தனிமையில்தான் நம் பிரச்னைகளை அலசி, நம்மைப்பற்றி உணரவும் முடியும். எல்லாவற்றிற்கும் கைத்தொலைபேசியையும், கணினியையும் நாடினால், நமக்கென்று சிறிது நேரத்தைக்கூட ஒதுக்க முடியாது போய்விடுகிறதே!

    போதைப் பழக்கத்தை ஒழிக்க

    மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு இருப்பதுபோல், திரை போதைக்கு அடிமையான மாணவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் சில நாடுகளில் உள்ளன. அங்கே போதைக்குக் காரணமான தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் கிடையாது. சத்து நிறைந்த உணவு, தூக்கம் தவிர குழுக்களில் கலந்துரையாடி (“நான் ஒரு போதைப்பித்தன்!”) சிகிச்சை பெறும் வசதியும் உண்டு.

    பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீடியோ விளையாட்டுகளில் ஈடுபடுவதைப் பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம் என்று பரிந்துரைக்கிறார் இவர்களுக்கு அறிவுரை வழங்கும் ஒருவர்.

    “முன்பெல்லாம் தனிமையில் ஒருவன் சிரித்துபடி இருந்தால், அவனைப் பைத்தியம் என்போம் – கைத்தொலைபேசி கண்டுபிடித்தபின் அந்நிலை மாறிவிட்டது” (ஒரு தத்துவஞானி).

    இந்த ஆண்டுமுதல், கணினி விளையாட்டுகளால் வரும் நோய்களுக்கான சிகிச்சைக்கு காப்பீடு செய்யலாம்!

    “ரோபாட் மனிதனைப்போல் உணர்ச்சிகளுடன் மாறிக்கொண்டிருக்கிறது. மனிதனோ, இயந்திரமாக மாறிக்கொண்டிருக்கிறான்!” என்கிறார் ஒருவர்.

    `பிறர் குழந்தைகள் எப்படியோ தொலையட்டும்! கண்காணிக்க வேண்டியது அவர்கள் பெற்றோரின் பாடு!’ என்று விட்டேற்றியாக, `சிலிகான் பள்ளத்தாக்கின் ஜாம்பவான்கள்’ தாம் கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

    `நம் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்களோ!’ என்ற கவலை அவர்களுக்குக் கிஞ்சித்தும் கிடையாது. அவர்களுடைய குழந்தைகளைத்தாம் தொழில்நுட்பக் கருவிகளே இல்லாத உயர்தர பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகிறார்களே!

    ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பேட்டியில் கூறியது: “குழந்தைகள் தொழில்நுட்பக் கருவிகளுக்காக அதிக நேரத்தைச் செலவிடுவதை எங்கள் வீட்டில் அனுமதிப்பதில்லை!”

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 137

    தொழில் நுட்பமா, உறவினரா?

    பொது இடங்களுக்கு மூன்று வயதுக்குட்பட்ட சிறுவர்களை அழைத்துப்போனாலே திண்டாட்டம்தான்.

    அவர்களை எப்படிச் சமாளிப்பது என்றே புரியாது, அவர்களை கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுக்கும் மிகச்சிலரைவிட, அடியையும், திட்டையும் நம்புகிறவரே அதிகம்.

    பெரியவர்களும் குழந்தைகளுடன் எங்காவது காத்திருக்கையில் இனிமையாகப் பொழுதைக் கழிக்க எத்தனை முறைகள் இல்லை!

    சிறுவனின் விரல்களைப் பிடித்து, `ஒன்று, இரண்டு..,’ என்று எண்களைச் சொல்லிக்கொடுக்கலாம். இல்லாவிட்டால், ஒரு துண்டு காகிதத்தை மடித்து, `படகு’ என்று  அவனிடம் கொடுத்தால், அந்தப் புதிய விளையாட்டுச் சாமான் சிறிது நேரம் ஆர்வமூட்டி அவனை அமைதிப்படுத்தும்.

    கைப்பையில் தயாராக வைத்திருக்கும் துண்டுக் காகிதத்தை எடுத்து, அதில் அவனுக்குப் பிடித்த எதையாவது வரைந்தால், பூரிப்புடன் அமர்வான். அடுத்த முறை, அவனிடமே காகிதத்தையும் பேனாவையும் கொடுத்தால், உருண்டையாக எதையாவது போட்டுவிட்டு, பெருமையுடன் தாயிடம் காட்டுவான். பக்கத்திலிருப்பவர் `என்ன இது?’ என்று கேட்டால், `புலி!’ என்று ஆணித்தரமாக பதில் வரும். அடுத்த முறை, அதுவே கோழியாக மாறினாலும் மாறும்!

    சிறுவர் புத்தகத்திலிருந்து மிருகங்களின் பெயர்களை வாசித்துக் காட்டுவது நல்ல பொழுதுபோக்கு. பல முறை காட்டினாலும் குழந்தைகளுக்கு அலுக்காது. (சற்றுப் பெரியவர்களானதும், அவர்களே படிக்கும் புத்தகங்களை செல்லும் இடத்திற்கெல்லாம் எடுத்துவந்தால் படிப்பில் ஆர்வம் பெருகும். நேரத்தையும் வீணாகக் கழிக்கமாட்டார்கள்).

    இந்த எல்லா வழிகளிலும் தாயின் ஈடுபாடும் இருப்பதால் அவளுக்குக் குழந்தையுடன் அதிக நெருக்கம் ஏற்படும்.

    இந்த முறைகளெல்லாம் பழமையாகிவிட்டன. அதனாலேயே பலருக்கு அலுப்பைத் தருகிறது.

    `ஏனடா விடுமுறை வருகிறது என்றிருக்கிறது! என் மூன்று வயது மகன் ஓயாது கேள்விகள் கேட்கிறான்!’ என்று என் சக ஆசிரியைகள் அலுத்துக்கொள்வார்கள்.

    `அதுதான் மிக சுவாரசியமான பருவம்! அவர்கள் கேட்பது நமக்குச் சிரிப்பை வரவழைக்கும்!’ என்று நான் கூறியபோது, அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். (உதாரணம்: `நான் ஒன் வயத்திலேருந்து வந்தேனா! ஏம்மா என்னை முழுங்கினே?’)

    கதை

    வங்கி ஒன்றில், கனகா மகன் ராஜனையும் உடன் அழைத்து வந்திருந்தாள். அவன் ஓரிடத்தில் அமராது, குறுக்கேயும் நெடுக்கேயும் ஓடிக்கொண்டிருந்தான்.

    தத்தம் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றவர்கள் முகம் சுளித்தார்கள். அவமானம் தாங்காது, தாய் சிறுவன் முதுகில் இரண்டு அறைவிட்டாள். நிலைமை மோசமாகியது. அலறிக்கொண்டே ஓட ஆரம்பித்தான் அவன்.

    வேறு வழி புலப்படாது, தன் கைப்பையைத் திறந்து, ஒரு பொருளைக் காட்டினாள் தாய். ராஜன் ஓடோடி வந்தான்.

    அப்பொருள்: கைத்தொலைபேசி.

    அடுத்த பல நிமிடங்களுக்கு அவன் நகரவேயில்லை. தானே அச்சாதனத்தை இயக்கி, ஏதேதோ விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தான். கண்ணுக்கு மிக அருகில் வைத்துக்கொண்டான், உற்சாகம் அதிகமாக, அதிகமாக.

    தாயும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அவனை அமைதிப்படுத்த வீட்டில் அவள் கையாண்ட வழி அது. முதலிலேயே தோன்றாது போய்விட்டதே என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள்.

    தற்காலத்தில், குழந்தைகளுக்கு விதவிதமான விளையாட்டுச் சாமான்கள்– தொழில் நுட்பத்துடன் கூடியவை – கிடைக்கின்றன. எல்லாவற்றையும் ஒலியுடன் திரையில் பார்க்க முடிவதால் எதையும் விளக்க வேண்டியதில்லை. பெற்றோரின் குரலைக் கேட்கவேண்டிய நேரத்தில் ஒரே தொனியில் ஒலிக்கும் அந்த இயந்திரக்குரல். (பிறந்த குழந்தைக்குக்கூடத் தாயின் குரல் புரியும். இந்த இயங்திரக் குரலைக் கேட்டே வளரும் குழந்தைகளோ குரலில் ஏற்ற இறக்கமில்லாமல் அதுபோலவே பேச முற்படுகிறார்கள்).

    இன்றைய குடும்பங்களில், அப்பா கணினியின் எதிரே காலத்தைக் கழிப்பார். அம்மா – தொலைகாட்சி அல்லது தொலைபேசி. மகனோ..!

    உறவினர் வீட்டுக்குப் போனால், தன் கணினி விளையாட்டு முடியும்வரை பையன் நாம் வந்திருப்பதைக் கண்டுகொள்ள மாட்டான். ஒரே ஊரிலிருக்கும் நெருங்கிய உறவினர்களைவிட கண்காணாத நாட்டில் வசிக்கும் நண்பர்களுடன் அரட்டை (chat) அடிப்பதில்தான் அவனுக்கு ஆர்வம். பரீட்சைக்குப் படிக்கும்போதும் தன் கையிலேயே  தொலைபேசியை வைத்துக்கொண்டிருப்பான், அவனுடைய ஓர் அங்கம்போல. அடிக்கடி அதில் கவனம் போவதில் படிப்பது மனதில் நிலைக்காது.

    உருப்போடுவதும், உருப்படாத பொழுதுபோக்குகளும்

    விஞ்ஞானம் போன்ற சில பாடங்களில் மனனம் செய்வது மாணவர்களுக்கு இயலாத ஒன்றாகிவிடுகிறது என்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். (இரண்டு மூன்று முறை உரக்கப் படித்துவிட்டு, அதையே எழுதிப் பார்ப்பது சரியான முறை. என்றும் மனதைவிட்டு அகலாது).

    கதை

    முன்காலத்தில், `மனக்கணக்கு’ என்று பள்ளிகளில் குழந்தைகளைத் தயார் செய்வார்கள். ஒன்று, இரண்டு என்று வரிசையாகச் சொல்வது, அல்லது கூட்டல், கழித்தல் போன்றவை. எழுதுகோல் உதவியின்றி, மூளை ஒன்றே கருவியாக, இந்தக் கணக்குகளைப் போடவேண்டும்.

    நான் உயர்நிலைப்பள்ளியில் படிக்கையில், எங்கள் ஆசிரியை அல்ஜீப்ராவை நின்ற நிலையில் பதினைந்து, இருபது படிகளை வரிசையாகச் சொல்லிக்கொண்டே போவார். நிறையப் படிக்கும் பழக்கமுள்ள ஓரிரு மாணவிகளுக்கு மட்டும்தான் புரியும்.

    வேறு மாநில ஆரம்பப் பள்ளியில் மனக்கணக்கு போதிக்கப்பட்டிருந்ததால் ஆசிரியை கையாண்ட முறையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மற்றவர்கள் `புரியவில்லை!’ என்று ஓரிரு முறை சொல்லிவிட்டு, திட்டு வாங்கியபின் வாயே திறக்க மாட்டார்கள்.

    வகுப்பு முடிந்து ஆசிரியை வெளியே போனதும், `Take over, Nirmala!’ என்று கத்துவார்கள். நான் கரும்பலகையில் எழுதி விளக்குவேன். அப்போது எனக்குப் பன்னிரண்டு வயது. (அண்மையில், `எந்த வயதில் நீ ஆசிரியையாக ஆனாய்?’ என்று யாரோ கேட்டபோதுதான் இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது).

    ஏன் மனக்கணக்கு?

    மூளையை விரைவாகச் செயல்பட வைக்கும். அடிக்கடி இம்முறையைப் பின்பற்றினால், மூளையிலுள்ள தசைகள் வலுவடைகின்றன.

    அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுகிறது. உதாரணமாக, 30% தள்ளுபடி என்று ஏதாவது கடைவாசலில் அறிவித்திருந்தால், நாம் எவ்வளவு மிச்சப்படுத்த முடியும் என்பதற்கு கால்குலேட்டரையோ, பேனா, காகிதத்தையோ தேடவேண்டியதில்லை. உடனடியாக விடையைக் கண்டுபிடித்துவிட முடியும்.

    இப்போதெல்லாம் கரும்பலகையில் இரண்டு ஆப்பிள் + இரண்டு ஆப்பிள் என்று வரைந்தால்தான் குழந்தைகளுக்குப் புரிகிறது. Abstract thinking குறைந்துவிட்டது – மூளை பாதிக்கப்படுவதால்.

    ஒரு பாலர் பள்ளியில், குழந்தைகளுக்கு மனக்கணக்கு என்பது இயலாத  காரியமாக இருந்தது. பள்ளியிலிருந்து பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்: `உங்கள் குழந்தையை ஒரு நாளைக்கு இருபது நிமிடங்களுக்குமேல் தொலைகாட்சியைப் பார்க்க விடாதீர்கள்!”

    சில மாதங்களிலேயே குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் நல்ல மாற்றம் தெரிந்தது.

    புத்தகங்கள் படிப்பதும் கணினியும்

    படிக்கும்போது மூளைக்கு வேலை கொடுக்கிறோம். அதனால் எத்தனை வயதானாலும் அது நன்கு இயங்குகிறது.

    கதைப்புத்தகங்களைப் படிக்கையில், கதை மாந்தர்களின் பெயர்கள் மட்டுமின்றி, அவர்களிடையே உள்ள தொடர்பு, அவர்களுடைய பின்னணி என்று பல சமாசாரங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமே! அதனால் நினைவாற்றல் பெருகுகிறது. `நீங்க யாரு? எங்கேயோ பாத்தமாதிரி இருக்கே!’ என்று நம் நெருங்கிய உறவினர்களைக் கேட்க வேண்டிய நிலை ஏற்படாது.

    கணினியை இயக்கியபடியே தொலைபேசி, பக்கத்தில் இருப்பவருடன் அரட்டை என்று பொழுதைப் போக்கும்போது கவனம் சிதறிப்போகிறது. ஆனால், ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தால், முழுமையான கவனம் அதிலேயே செலுத்தப்படுவதால் மனம் அமைதி காண்கிறது.

    திரையை வெறிப்பதைவிட நல்ல புத்தகங்களைப் படித்தால் மூளையாவது வளருமே!

     தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 136

    போதுமென்ற மனமே..

    இளம் வயதினர் எதை எதையோ எட்டிப் பிடிக்க விரும்புவர். அந்த முயற்சியில் என்னென்ன அபாயங்கள் காத்திருக்குமோ என்ற அச்சத்தால் மூத்தவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறுவார்கள்: `போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து!’

    இந்த அறிவுரையை ஏற்று நடந்தால், இறுதியில் இளைஞர்களுக்கு ஏமாற்றம்தான் ஏற்படும்.

    விரும்பியதை அடைவது என்றால் பிறருக்குச் சேரவேண்டியதை தட்டிப் பறிப்பதல்ல. இருப்பினும், இன்றைய உலகில் பலரும் பணம், பதவி என்று பேராசையை வளர்த்துகொண்டே போக, எந்தப் பதவியில், ஏதாவது செய்து, அமர்ந்தால் குறுகிய காலத்தில் பெரும் பொருள் திரட்டலாம் என்று மட்டுமே அவர்கள் சிந்தனை போகிறது.

    பணம், புகழ், அல்லது சமூக அந்தஸ்து என்று நாடுபவருக்கு அதெல்லாம் கிடைத்தாலும் நிறைவு கிட்டுமா என்பது சந்தேகம்தான்.

    அளவுக்கு அதிகமான சொத்தால் நிறைவா?

    அரசியல் என்பது மக்களுக்காக என்று யார் கூறினார்கள்? இத்துறையைத் தேர்ந்தெடுப்பவர்களில் பெரும்பான்மையோர் தம் வாழ்நாட்களில் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு சொத்து சேர்க்கின்றனர். கோடி கோடியாகப் பணம், நகை, கார், பங்களா என்று எவ்வளவு சேர்த்தாலும் மனநிறைவு கிட்டுவதில்லை.

    திருப்தி கிடைக்காதபோதுதான் ஆசைகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஒரு பெண்ணுக்கு ஆயிரக்கணக்கான காலணிகள் எதற்கு? நூறு காரட் எடைகொண்ட வைர அட்டிகையை அணியத்தான் முடியுமா? இதையெல்லாம் அவர்கள் யோசிப்பதே கிடையாது.

    “தன் சுகத்தையே பெரிதாக எண்ணி வாழ்பவனுக்கு இறுதியில் ஏமாற்றம்தான்!” (ஐன்ஸ்டீன்).

    அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க, வெறுமைதான் ஏற்படுகிறது. அந்த வெறுமையைப் போக்க, மேலும் கொள்ளையடித்தாக வேண்டும். சட்டத்தின் பிடிகளில் அகப்பட்டுக்கொண்டால், `என்மேல் எந்தத் தவறும் இல்லை, எல்லாம் எதிரிகளின் சதி!’ என்று சாதிப்பார்கள்!

    பாராட்டால் நிறைவா?

    `நாம் மிகுந்த செல்வந்தராக ஆனால் எல்லாரும் மதிப்பார்கள். நம் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும்,’ என்று கணக்குப்போட்டு, திறமை, உழைப்பு, அதிர்ஷ்டம் எல்லாம் சேர, ஒருவர் பணக்காரராக ஆகலாம். ஆனால், பிறர் பாராட்ட வேண்டும் என்ற இலக்கைக் குறி வைத்தால், அதை அடையும்போது நமக்கும் மகிழ்ச்சி கிட்டும் என்பது என்ன நிச்சயம்?

    `பிறர் பாராட்டினால்தான் நம் மனம் குளிரும்’ என்றிருப்பவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் என்றே தோன்றுகிறது. எதிர்பார்த்த பாராட்டு கிடைக்காதபோது மனம் வெம்பிப்போவார்கள். நம் மகிழ்ச்சிக்கு எப்போதும் பிறரை எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

    பிடித்ததைச் செய்

    சிறந்த தேர்ச்சி பெற்றவர்கள் உயர்நிலைப்பள்ளியில் மேலும் படிக்க கணக்கு, விஞ்ஞானம் என்று பாடங்களை பள்ளியே தேர்ந்தெடுத்துவிடும். குறிப்பிட்ட மாணவருக்கோ மொழி, கலை என்று வேறு எதிலாவதுதான் மனம் லயிக்கும்.

    `இதெல்லாமா நாளைக்கு உனக்கு சோறு போடப்போகிறது?’ என்று பெற்றோரும் அவநம்பிக்கை அளிப்பார்கள்.

    ஒரு சிலர் ஓய்வு நேரத்தில் தம் மனம் விரும்பும் பொழுதுபோக்கில் ஈடுபடுவார்கள். அதில் ஈடுபடும்போதே இவ்வளவு மகிழ்வாக இருக்கிறதே என்று எண்ணுபவர்களுக்குத்தான் நிறைவு கிட்டுகிறது. இருப்பினும், தம் மனம் நாடுவதை நோக்கித் துணிச்சலுடன் பயணம் செய்பவர் மிகக் குறைவு.

    தம் இலக்கில் குறியாக இருப்பவர்களுக்குத் தானே சரியான பாதை புலப்படும். அவ்வழியில் ஏற்படக்கூடிய தவறுகள், தோல்விகள் ஆகியவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அவர்கள் அறிவார்கள்.

    எவ்வளவுதான் திறமையும் ஆர்வமும் இருந்தாலும், வெற்றியும், அதனால் கிடைக்கும் நிறைவும் நீடிக்க வழியில் எழக்கூடும் உயர்வு மனப்பான்மையைத் தவிர்க்கக் கற்க வேண்டும்.

    ஆனாலும், பிறருடைய குறைகளில் கவனம் செலுத்தி `நான் அப்படி இல்லை!’ என்ற அற்பதிருப்தி கொள்ளும் மனப்பான்மையை எத்தனை பேரால் தவிர்க்க முடிகிறது!

    கதை

    நடராஜன் வாத்தியக் கலையில் வல்லுனர். வசதிகுறைந்த பல மாணவர்களுக்கு இலவசமாகவே பயிற்சி அளித்தார். அவர்கள் அவரைக் கடவுளாகவே பாவித்ததில் அதிசயமில்லை.

    நடராஜனின் செருக்கு மிகுந்தது. `என்னைவிட சிறப்பாக யாரால் வாசிக்க முடியும்!’ என்று நினைக்க ஆரம்பித்தார். அதன் விளைவாக, தன்னையொத்த, தன்னைவிட பிரபலமான வாத்தியக்காரர்களைப்பற்றி அவதூறாகப் பேச ஆரம்பித்தார். சிஷ்யர்களும் அக்கதைகளைக் கேட்டுச் சிரிப்பார்கள். குருபக்தியைப் பின் எப்படித்தான் வெளிக்காட்டுவது!

    நடராஜன் கூறியதெல்லாம் உண்மையாகவே இருந்தாலும், பிறர் என்ன தவறு செய்கிறார்கள் என்பதிலேயே கவனம் போயிற்று. கச்சேரியை ஆரம்பிக்குமுன், திமிருடன் சக கலைஞர்களை சண்டைக்கு இழுப்பார்.

    நாளடைவில், எவரும் நடராஜனுடன் இணைந்து வாசிக்க முன்வரவில்லை. `எல்லாருடனும் எப்போதும் சண்டை போடுவார்!’ என்று புகார்கள் எழ, அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன.

    ஒருவர் எப்போது நிறைவடைகிறார்?

    பள்ளிச் சிறுவர்களைக் கேட்டால், `பரீட்சை முடிந்து, அதில் திருப்திகரமாக எழுதிவிட்டால்!’ என்பார்கள். மாதக்கணக்கில் உழைத்துப் படித்த களைப்பு அப்போது நினைவில் நிற்காது.

    உடல் நோக பல காலம் பயிற்சி செய்துவிட்டு, பார்வையாளர்கள் பாராட்ட தம் திறமையைக் காட்டும்போது விளையாட்டு வீரர்கள் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். ஆரம்பத்தில், அவர்களுடைய நோக்கம் பிறர் பாராட்ட வேண்டும் என்பதாக இருந்திருக்காது. தமக்குப் பிடித்த விளையாட்டில் முழுமூச்சுடன் ஈடுபட்டிருப்பார்கள். அவ்வளவுதான். அதில் வெற்றியும் கிடைத்தால் கூடுதல் மகிழ்ச்சி.

    சில பிரபலமானவர்கள் இசைக்கச்சேரி செய்யும்போது, அடிக்கடி கைதட்டல் கேட்கும். பாவம் அதிகமிருக்காது. `இவர்கள் ஆத்மார்த்தமாகப் பாடுகிறார்களா, இல்லை, எப்படிப் பாடினால் ரசிகர்களைக் கவரலாம் என்று கணக்குப்போட்டுப் பாடுகிறார்களா?’ என்று இசைஞானம் உள்ளவர்களின் சிந்தனை போகும்.

    ஒருவர் தான் பாடுவதில் மனமும் ஒன்றினால்தான் ரசிக்க முடியும். `என் குரலின் இனிமையை வைத்துக்கொண்டே பிறரைக் கவர்ந்துவிடுவேன்!’ என்ற மனப்பான்மை எழுந்தால், அவர் தன் திறமையை முழுமையாகப் பயன்படுத்த முயற்சிக்க மாட்டார். இதனால் அவருக்கும் நீடித்த நிறைவு கிட்டப்போவதில்லை.

    ஆக்ககரமாக எதைச் செய்ய வேண்டுமானாலும் நம் முழுமையான கவனத்தை அதில் செலுத்தவேண்டும் என்று புரிந்தவர்கள்தாம் நிறைவடைகிறார்கள். எதைத் தேடுகிறோம் என்று புரியாது அலைவது வீண் முயற்சிதான்.

    `வெற்றிமேல் வெற்றி அடைபவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள். ஏனென்றால், அடுத்து எதில் வெற்றி பெறலாம் என்றே அவர்கள் யோசனை போகும்,’ என்று ஒருவர் கேலியாக எழுதியிருந்தார். வெற்றி என்பது ஒரு முடிவு இல்லை, மனநிறைவு தரும் இன்னொரு முயற்சியின் தொடக்கம் என்று அவருக்குப் புரியவில்லை.

    கல்வியால் நிறைவு

    நம் திறமையை முழுமையாக வெளிக்கொணர கல்வி ஒரு சாதனம். திறமையை வெளிப்படுத்த முடியாதபோது மனம் குழம்பிவிடுகிறது.

    கதை

    ரேணுகா அழகிய பெண். அழகிலேயே கவனம் செலுத்தியதில் படிப்பு ஏறவில்லை. அவளுடைய அழகில் மயங்கிய ஒருவனுக்குக் கல்யாணம் செய்துவைத்து விட்டார்கள் — பதின்ம வயதிலேயே.

    தன்னையொத்த பெண்கள் சுதந்திரமாக, வேலைக்குப் போவதைப் பார்த்து தான் எதையோ இழந்துவிட்டதுபோல் நினைக்க ஆரம்பித்தாள். தன் வாழ்க்கை இப்படியேதான் கழிந்துவிடும், பெரிதாக எதிர்பார்க்க எதுவுமில்லை என்று எழுந்த எண்ணம் எல்லார்மேலும் கோபமாக மாறியது.

    “இவளை எப்படிப் பொறுத்துப்போகிறீர்கள்?” என்று ஓர் உறவினர் கேட்டதற்கு, கணவர் பொறுமையாகப் பதிலளித்தார்: “இவளுக்கு வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. புதிதாக எதையும் கற்கும் ஆர்வமும் கிடையாது. எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருப்பதால்தான் அலுப்பு!”

    ஓயாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி, தன்னுடன் பிறரையும் வருத்துவானேன்! கிடைத்ததைக்கொண்டு திருப்தி அடைந்தாலே போதுமே! ஆக்கபூர்வமாக எதையாவது செய்தால் மனம் அமைதி பெறும், நிறைவாகவும் இருக்கும்.

    நன்றியைக்கூட எதிர்பாராது பிறருக்கு உதவுவதே உண்மையான நிறைவை அடையும் வழி.

    தொடருவோம்

    Share