திரையால் பாதிப்பு

இரவெல்லாம் கண்விழித்து கணினி விளையாட்டில் ஈடுபட்டிருப்பவருக்கு நேரத்துடன் அலுவலகத்திற்குச் செல்ல முடியவில்லை. எழுந்தபின்பும், `எப்போதடா மீண்டும் கணினிமுன் உட்காருவோம்!’ என்ற ஏக்கம். கார் ஓட்டிப்போகும்போது ஏதோ நினைவுடன் ஓட்டுவதில் விபத்துகள். மந்தமாகிவிட்டான்.

பிறரது உணர்வுகளை திரையில் பார்த்து ரசிப்பதும் போதைதான்.

கவனக்குறைவு, தூக்கமின்மை, ஒரு மந்தமான மனநிலை (mood), அதிகம் யோசியாது ஒரு காரியத்தில் இறங்குவது (impulsive), நடத்தையில் மாற்றம் – எல்லாமே திரை தரும் போதையால்தான்.

கதை

அண்மையில் மலேசியாவில் பதினாறு வயதுச் சிறுவன் ஒருவனுக்கு அவனது கைத்தொலைபேசியே யமனாக ஆகியது.

அக்கருவியை `சார்ஜில்’ போட்டுவிட்டு, அதனுடன் இணைக்கப்பட்ட கம்பிவழி இசையைச் செவிமடுத்தபடி இருந்தவன் பகலிலேயே தூங்கிப்போனான். மதிய உணவிற்கென்று அவனை எழுப்ப வந்த தாய் மகனது உடல் சில்லிட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தாள். காதிலிருந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்தது.

பிரிட்டனில் வீடியோ விளையாட்டுகளைக் காரணமாகக் காட்டி, இருநூறு தம்பதியர் விவாகரத்து கோரியுள்ளனராம்!

பன்னிரண்டு மணி நேரத்தைக் கணினியின்முன் கழித்த மாணவன் ஒருவன் வகுப்பில் தூங்கிவிடுகிறானாம். படிப்பிலும் சோடையாகிவிட்டான்.

`இன்றைய கலாசாரம்!’ என்று அலட்சியமாக விட்டுவிட முடியுமா?

டோபமீன் (dopamine) என்ற ரசாயனப் பொருள் நம் மூளையிலுள்ள நியூரான்களில் (நரம்புகளில்) சுரக்கின்றன. அது சுகமான உணர்வை எழச் செய்யும். அடிக்கடி இப்படி உணர்ந்தால் ஆனந்தமாக இருக்குமே என்ற கிறக்கம் எழ, அதுவே போதையாகிறது.

மது, சூதாட்டம், கஞ்சா, ஹெரோயின் போதைப் பொருட்கள் அனைத்துமே ஒருவரை அடிமைப்படுத்துவது இந்த டோபமீனைச் சுரக்க வைப்பதால்தான்.

குழந்தைகள் இருபது நிமிடங்களுக்குமேல் திரையை உற்றுப் பார்க்கும்போது, கண்கள் கிறங்க, போதை நிலைக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் அந்தச் செயலிலிருந்து விலக எளிதில் சம்மதிக்க மாட்டார்கள். கைகால்களை உதைத்துக்கொண்டு அழும் குழந்தையின் காதைப் பிடித்து அறைக்கு வெளியே கொண்டுவிட நேரிடும். (பெரியவர்களின் எல்லை நாற்பது நிமிடங்கள். இருபது வினாடிகள் கண்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டுத் தொடரலாம்).

மிகச் சிறு வயதில் திரையையே நோக்குவதால் மூளையின் முன்பகுதி பாதிக்கப்படுகிறது. இதனால் திட்டமிடல், எது முக்கியம் என்று தீர்மானிப்பது குறைந்துவிடுகிறது. பிறரது துயரங்களை உணர்ந்து கருணையுடன் நடப்பது இயலாத காரியமாகிவிடுகிறது. இதனால் உறவுகளின் நெருக்கமும் குறையும். தனிமையும், அதனால் எழக்கூடும்; மன இறுக்கமும் தொடரும்.

வீடியோ விளையாட்டுகளில் ஜெயிக்கும்போது அளவுக்கு அதிகமாக குதூகலிப்பவன் தோற்கையில் – என்னமோ உலகமே இடிந்துவிட்டதுபோல் – அலறுவான். ஆனால், அவனுடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட தகவலை எப்படிச் செயல்படுத்துவது என்று புரியாது.

வளர்ந்த பின்னர், ஒரு சிலருக்கு மணிக்கட்டில் பொறுக்க முடியாத வலி. David Price என்ற பந்தாட்டக்காரர் ஒருவருக்கு அப்படி ஏற்பட்ட வலியால், முக்கியமான போட்டி ஒன்றிலிருந்து விலக நேரிட்டது. பல மாணவர்களுக்கு பரீட்சையில் எழுதக்கூட முடியாத நிலை.

சில கணினி விளையாட்டுகளை இலவசமாகப் பெற முடியும் என்றாலும், அவற்றுக்கான கருவிகளைத் தனித்தனியாக வாங்கிக்கொள்ள வேண்டும். விளையாட்டில் விரைவாக முந்த, பெற்றோரின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி விடுகிறார்கள் மாணவர்கள். சில சமயம், என்ன வாங்குகிறோம் என்றே புரியாது வாங்கிவிடுகிறார்கள்.

கதை

மலேசியாவில், வக்கீல் படிப்பு படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவன் இப்படித்தான் தன் பெற்றோருக்குப் பல்லாயிரம் ரிங்கிட் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டான். கடனை அடைக்க அவர்கள் சொத்தை விற்கும்படி நேர்ந்தது. போதாக்குறைக்கு, கல்லூரியிலிருந்தும் விலக்கப்பட்டான். காலங்கடந்து, அழுகிறான். `இந்தக் கொடும் போதைக்கு அடிமை ஆகாதீர்கள்!’ என்று ஊடகங்கள்வழி வேண்டுகோள் விடுக்கிறான்.

கடந்த காலத்தில் `அடிமைகள்’ தமக்குச் சுதந்திரம் கிடையாது என்ற உண்மை நிலையை உணர்ந்திருந்தார்கள். இன்றோ, கணினிக்கு அடிமையானவர்களுக்குத் தம் நிலை புரிவதில்லை.

தனிமையில்தான் நம் பிரச்னைகளை அலசி, நம்மைப்பற்றி உணரவும் முடியும். எல்லாவற்றிற்கும் கைத்தொலைபேசியையும், கணினியையும் நாடினால், நமக்கென்று சிறிது நேரத்தைக்கூட ஒதுக்க முடியாது போய்விடுகிறதே!

போதைப் பழக்கத்தை ஒழிக்க

மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு இருப்பதுபோல், திரை போதைக்கு அடிமையான மாணவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் சில நாடுகளில் உள்ளன. அங்கே போதைக்குக் காரணமான தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் கிடையாது. சத்து நிறைந்த உணவு, தூக்கம் தவிர குழுக்களில் கலந்துரையாடி (“நான் ஒரு போதைப்பித்தன்!”) சிகிச்சை பெறும் வசதியும் உண்டு.

பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீடியோ விளையாட்டுகளில் ஈடுபடுவதைப் பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம் என்று பரிந்துரைக்கிறார் இவர்களுக்கு அறிவுரை வழங்கும் ஒருவர்.

“முன்பெல்லாம் தனிமையில் ஒருவன் சிரித்துபடி இருந்தால், அவனைப் பைத்தியம் என்போம் – கைத்தொலைபேசி கண்டுபிடித்தபின் அந்நிலை மாறிவிட்டது” (ஒரு தத்துவஞானி).

இந்த ஆண்டுமுதல், கணினி விளையாட்டுகளால் வரும் நோய்களுக்கான சிகிச்சைக்கு காப்பீடு செய்யலாம்!

“ரோபாட் மனிதனைப்போல் உணர்ச்சிகளுடன் மாறிக்கொண்டிருக்கிறது. மனிதனோ, இயந்திரமாக மாறிக்கொண்டிருக்கிறான்!” என்கிறார் ஒருவர்.

`பிறர் குழந்தைகள் எப்படியோ தொலையட்டும்! கண்காணிக்க வேண்டியது அவர்கள் பெற்றோரின் பாடு!’ என்று விட்டேற்றியாக, `சிலிகான் பள்ளத்தாக்கின் ஜாம்பவான்கள்’ தாம் கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

`நம் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்களோ!’ என்ற கவலை அவர்களுக்குக் கிஞ்சித்தும் கிடையாது. அவர்களுடைய குழந்தைகளைத்தாம் தொழில்நுட்பக் கருவிகளே இல்லாத உயர்தர பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகிறார்களே!

ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பேட்டியில் கூறியது: “குழந்தைகள் தொழில்நுட்பக் கருவிகளுக்காக அதிக நேரத்தைச் செலவிடுவதை எங்கள் வீட்டில் அனுமதிப்பதில்லை!”

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.