-முனைவர் நா. தீபா சரவணன்

மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன்
மொழி : மலையாளம்
தமிழில்: முனைவர் நா. தீபா சரவணன்

மகனின் பிம்பம்

தன்னைக் காத்து நிற்கும் மகனுக்கு முன்னால் மிக வேக இரயிலிலிருந்து பாதி பகலிற்கும் ஒரு முழு இரவிற்கும் பின் விடியற்காலையில் பிளாட்ஃபாமில் வந்திறங்கினார் பெரியவர். இரயில்வே அறிவிப்புகளில் கேட்டது போலவே இரயில் சரியான நேரத்திற்கு வந்தது. பையை நானே தூக்கிக் கொள்கிறேன் என்று சொன்ன போதும் மகன் ஒத்துக்கொள்ளவில்லை. அவருடைய இரண்டு ஜோடி துணிகளும் வடுமாங்காய் ஊறுகாயும் பலாக்காய் வறுத்ததும் பையில் இருந்தன. அதிகமான பாரம் ஒன்றுமில்லை.

மகன் அம்மாவின் உடல் நலம் விசாரித்தான். எப்பொழுதும் உள்ள தலைச்சுற்றல் இப்போதும் அடிக்கடி தொந்தரவு செய்கிறது என்பதைத் தவிர அம்மாவுக்கு வேறு பிரச்சனை ஒன்றுமில்லை. ஒரு பசுமாடு இருக்கிறது. அதற்கு உணவு கொடுப்பது, நேரம் தவறாமல் பால் கறப்பது. இரண்டு டம்ளர் பால் பக்கத்து வீட்டுக்கு விலைக்குக் கொடுக்கப்படுகிறது. மாலை கோயிலுக்குப் போகும் பழக்கமும் தொடர்கிறது. மகன் வேறு ஏதாவது விசேஷம் இருக்கிறதா எனக் கேட்கவில்லை. பிளாட்ஃபோமில் நெரிசல் வழியாக அவனும் அப்பாவும் வெளியில் நிற்கும் காருக்கு அருகில் நடந்தனர்.

புதுமை மணம் மாறாத கார். எப்படி இருக்குன்னு மகன் கேட்டான். அப்பாவுக்கு வண்டிகளைப் பற்றி அவ்வளவு தெரியாது இருந்தாலும் முழுவதுமாக ஒருமுறை பார்த்துவிட்டுச் சொன்னார்.

“நல்லா இருக்கு”

“இது புதிய மாடல்…”

டோர் திறப்பதற்கும், கண்ணாடிகளைத் தாழ்த்துவதற்கும் ரிமோட் கன்ட்ரோலில் விரல்அமர்த்தினால் போதும். என்ன வில இருக்குமென்று அவர் கேட்கவில்லை. மகன் காரை ஸ்டார்ட் செய்தான். பார்க் செய்யப்பட்ட பல வண்டிகளிலிருந்து அது பெருமையோடு வெளியிலிறங்கியது.

சிறிய மதில்களும் கம்பீரமான நுழைவு வாயிலும் சல்யூட் செய்கின்ற இளைஞனும் உள்ள வசிப்பிடத்தின் முன்னால் பயணம் முடிவடைந்தது.

இதை விடக் கொஞ்சம் வசதியான ஒரு ஃபிளாட்டிற்கு இருப்பிடத்தை மாற்றப் போகிறேன் என்று மகன் ஃபோனில் கூறியிருந்தான். அப்பாவிற்கு அந்த ஞாபகம் வந்தது. மகன் தனியாக இல்லை. ஒரு நண்பனும் உடன் இருந்தான்.

ஃபிளாட்டில் எயர்கண்டிஷன் இருக்கு. தரை முழுவதும் இத்தாலியன் மார்பிளின் வெண்மை. சாக்லெட் நிறத்தில் உள்ள இருக்கைகள் பெரிய டெலிவிஷன் செட். இலைகள் படர்ந்த இன்டோர் செடிகள். நீல நிறத் திரைச் சீலைகள்.

“வாடகை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் நல்ல கம்ஃபர்ட்டபள். அப்பாவுக்கு என்ன தோணுது!” மகன் கேட்டான்.

அவருக்குக் குளிரத் தொடங்கியிருந்தது.

ஒரு படுக்கையறையின் கதவு சாத்தியிருந்தது. நண்பன் தூங்கிக் கொண்டிருந்தான். அறிமுகப்படுத்துவதை அப்பறம் பாக்கலாம். இனியும் நேரமிருக்கே.

“உனக்கு இன்னக்கி வேலக்குப் போகணுமா?”. கைகால் கழுவி வந்து மகனிடம் கேட்டார்.

“வேண்டாம் லீவு சொல்லிருக்கேன். நாம சிட்டி முழுக்க ஒண்ணு சுத்திப் பாக்கலாம்”

அவர் மகனின் கருத்தை வரவேற்றார். காலை டிபன், பயணம், மதிய உணவு, ஓய்வு.
மாலை இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள பிரசித்தமான பீச்சிற்கு, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காட்சிகளுக்கிடையில் நடைப்பயணம். மணல் வீடுகள் கட்டி விளையாடும் குழந்தைகள். கடற்காற்றின் பயங்கர ஓசை. நெடு நீளமாக பரந்து கிடக்கும் அலைகள். அந்தி மேகங்கள்.

“டின்னர் முடிச்சிட்டுப் போலாம்” மகன் வழியில் வைத்துக் கூறினான். சாதாரணமாக இரவு உணவு, கஞ்சிதான். சேர்த்துச் சாப்பிடப் புதினாவும் மல்லியும் சேர்த்து அரைத்த தேங்காய்த் துவையல். பிரஷருக்குத் தினமும் மாத்திரை சாப்பிடுவதால் குறைந்த அளவு உப்பு போட்ட கூட்டு ஏதாவது இருக்கும்.

அவர் மகனுடன் ஒரு ஸ்டார் ஹோட்டலின் ரெஸ்டாரண்டில் உட்கார்ந்திருந்தார். அம்மாவுக்குத் தெரிய வேண்டாம். மகன் அவனுக்காக விஸ்கி ஆர்டர் செய்திருந்தான். அவனுக்குக் குளிர்ந்த பீரும், மெனுகார்ட் பார்த்து எவையெல்லாம் வேண்டுமென்று வெயிட்டரிடம் அவன் தான் கூறினான்.

“எதுக்கு இதெல்லாம்?” …………….. அவர் சந்தேகப்பட்டார்.

“அப்பாவ கொஞ்சம் கவனிக்க வாய்ப்பு கெடத்ச்சுதே” மகன் பீர் டம்ளரை உயர்த்திக் கொண்டு சொன்னான்.

அனேகம் அனேகம் பெரிய விளக்குகள் எரியும் நகரம். காரில் அவற்றிற்கிடையில் கடந்து போகவே மகனைப் பார்த்தார். காரின் ஸ்டீரியோவிலிருந்து மென்மையாக ஒலிக்கும் பாடலுக்கேற்றவாறு அவனுடைய கைவிரல்கள் ஸ்டியரிங் வீலின் மீது தாளம் போடுவதை அவர் பார்த்தார்.

சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. வந்ததே அதற்குத்தான். இப்போது வேண்டாம் என்று நினைத்தார்.

நாளைக்குப் பேசலாம்.

அவர் காரினுள் நிலவும் மிதமான குளிரை அனுபவித்தார். கண் இமைகள் பாரமாகத் தெரிந்தன.

“அரேயார்…………? அப்பா எதுக்கு வந்திருக்கார்?” மகன் நண்பனின் படுக்கை அறையிலிருந்தான். பக்கத்து அறையில் அவர் தூங்கிக் கொண்டிருந்தார்.

“எம்.பி.ஏ படிச்சது பாங்கிலிருநது மூணு லட்சம் ரூபா லோன் போட்டுத் தானே! மேனேஜர் கேட்டிருப்பாரு. வேல கெடச்சு நாலஞ்சு மாசமாச்சில்லே?”

“அப்புறம்? அப்பா இன்னக்கு அத ஞாபகப்படுத்தினாரா?”

“இல்ல அத நெனக்கவே அப்பாவுக்கு நான் இடந்தரல.”

“நாளைக்கும் இப்படி தானிருக்கும்.”

“திரும்பிப் போகும் போதோ”

“அம்மா கேப்பாங்க. அப்பா அத மறந்திட்டேன்னு சொல்லுவாரு”

“பேங்க் ஜாம்யம் போட்ட வங்ககிட்டருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்காதா?”

“சந்தேகமே இல்லை கண்டிப்பா எடுப்பாங்க”

“யார் அந்த துரதிர்ஷ்டசாலி”

“அப்பாவே தான்”

“பாப்ரே…”

*******

மொழிபெயர்ப்பாளர், பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கொங்குநாடு கலைஅறிவியல் கல்லூரியில் முனைவர் இரா.மணிமேகலை அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். தமிழில் சாகித்ய அகாதமி விருது பெற்ற படைப்பாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் சிறுகதைகள் 100, மலையாளத்தில் கேரள அரசின் சாகித்ய அகாதமி விருதுபெற்ற படைப்பாளர் சி.வி.பாலகிருஷ்ணன் அவர்களின் 100 சிறுகதைகள் ஆகியவற்றை ஆய்வு எல்லையாகக் கொண்டு ஆய்வு செய்தவர்.

“ஒப்பியல் நோக்கில் தமிழ் மலையாள சிறுகதைகள் (நாஞ்சில் நாடன், சி.வி.பாலகிருஷ்ணன்)” என்னும் தலைப்பிலான இவரது ஆய்வின் அறிமுகத்தைக் காண இங்கே சொடுக்குங்கள் – https://www.vallamai.com/?p=89703

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.