ஒப்பியல் நோக்கில் தமிழ் – மலையாளச் சிறுகதைகள் (நாஞ்சில்நாடன், சி.வி.பாலகிருஷ்ணன்)

0

– முனைவர் நா. தீபா சரவணன்

ஒப்பீட்டாய்வு, இலக்கியங்களை வளமைப்படுத்தும் என்பதும், தமிழ் இலக்கியத்திற்கு ஒப்பாய்வு இன்றியமையாதது என்பதும் அறிஞர்களின் கருத்து. இக்கருத்திற்கேற்ப எனது ஆய்வேடு ஒப்பீட்டு முறையில் அமைந்துள்ளது. நாஞ்சில்நாடன், சி.வி. பாலகிருஷ்ணன் ஆகிய இரு ஆசிரியர்களும் தமிழ், மலையாளம் எனும் இருவேறு மொழிப் பண்பாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள். இருவரும் மொழியாலும், வாழ்வியல் முறையாலும் மாறுபட்டவர்களாக இருப்பினும் அவரவர் பண்பாட்டுப் பின்புலத்தை நன்கு விளக்குகின்றனர். ஒரு எழுத்தாளனின் வாழ்வியல் சூழலும் அனுபவங்களும் அவருடைய எழுத்துலகப் பாதையில் அடிப்படைப் பங்கு வகிக்கின்றன என்பதை இவர்களின் படைப்புகள் வழி அறிய முடிகிறது. கதையின் பின்புலத்தை வெளிக்கொணரும்போது இருவரும் தான் வாழும் சமுதாயச் சூழலை மையமாக வைத்துப் பெரும்பான்மையான கதைகளையும், பிற சமூகப் பின்னல்களை மையமாக வைத்துச் சில கதைகளையும் படைத்துள்ளனர்.

பண்பாடு சார்ந்த பின்புலங்களால் இரு படைப்பாளர்களையும் இரு வேறுபட்ட மொழிகள் பேசும் மக்களின் பழக்க வழக்கங்களையும் அறிய முடிகிறது. உணவு முறை, தொழில், நம்பிக்கைகள், சடங்குகள், கலைகள், விளையாட்டுகள் போன்றவை பின்புலமாக அமைவதால் மரபு சார்ந்த பண்பாடு அழியாமல் பாதுகாக்கும் விதம் அறிய முடிகிறது. தேர்ந்தெடுத்த கதைக் கருவைக் கதையாக விவரித்துக் கூறும் போது கதையின் நோக்கம் முழுமையடையும் விதமாக ஏராளமான உத்திகளை இரு ஆசிரியர்களும் பயன்படுத்தியுள்ளனர். பண்பாடு, கலாச்சாரம், மொழி, நாடு போன்றவற்றில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளும், சிக்கல்களும் ஒரே போலத்தான் இருக்கின்றன என்பது எனது ஆய்வேட்டில் கண்டறியப்பட்ட முடிவாக உள்ளது. இரு வேறுபட்ட மொழியில் அமைந்த இலக்கிய வகைகளின் அமைப்பும் சிக்கல்களும் பெரும்பாலும் ஒரே போலவே இருக்கின்றன. அவை வெளிக்காட்டும் விதத்தில் சிறுசிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இருவேறு நாட்டைச் சார்ந்த இருவேறு மொழியைச் சார்ந்த படைப்பாளர்களின் படைப்புகளை ஒப்பியல் ஆய்வு செய்வதால் அவரவர் சமூகத்தின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் போன்றவை உணர்த்தப் படுவதோடு அவரவர் நாட்டின் கலைகள் வளர்க்கப்படும் விதம், பாதுகாக்கப்படும் விதம் குறித்தும் அறிய முடிகிறது. அழிவை நோக்கிச் செல்லும் சில கூறுகளின் வரலாற்று ஆவணங்களாகவும், மாற்றத்தை நோக்கிச் செல்லும் சில தூண்டல்களின் விடியலாகவும் ஒப்பாய்வு அமைகிறது.

சி.வி. பாலகிருஷ்ணனின் மலையாளச் சிறுகதை ஒன்றைத் தமிழில் இங்கே மொழிபெயர்த்து வழங்கியுள்ளேன் – https://www.vallamai.com/?p=89725

********

கட்டுரையாளர்

முனைவர்.நா. தீபா சரவணன்
உதவிப் பேராசிரியர்
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
கோவை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.