Tag: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (166)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்கள்.

    இவ்வார மடலில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.

    வரலாற்றுத் திருப்புமுனைகள் ஒரு நாட்டின் சரித்திரத்தை மாற்றியமைப்பதற்கு இன்றியமையாத காரணமாகிறது.

    எங்கோ பிறந்தோம், எங்கோ வளர்ந்தோம் இன்று எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் நாட்டில் எமது வாழ்க்கையை அமைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    நமது வாழ்வும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு இன்று இருந்ததற்கும், முந்தைய காலத்தில் அது தன்னுடைய இன்றைய நிலையை அடைவதற்கும் முன்னால் எத்தகைய சரித்திர திருப்புமுனைகளினால் இன்றைய நிலையை அடைந்துள்ளது என்பதைப் படிக்கப் படிக்க, நாம் வாழும் நாட்டு மக்களின் குணாதிசயங்களின் அடிப்படைக் காரணிகள் புலர்கின்றன.

    இங்கிலாந்து நாட்டில் இந்நாட்டு மக்கள் தமது நாட்டின் போர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்நாளை நினைவுகூர்வதன் அடிப்படை புரிகிறது. இன்றைய இங்கிலாந்து என்பது இப்போதிருக்கும் இதே வசதிகளை உள்ளடக்கித்தான் காலமெல்லாம் வாழ்ந்திருக்கிறது என்ற எண்ணம் எமக்கு வருமானால் அவர்களது கடந்தகால சரித்திர திருப்புமுனைகளை பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

    ஒரு நாட்டின் மக்கள் எதற்காக, எப்படி ஒரு நிகழ்வை அல்லது முக்கிய பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள் என்பதற்கான காரணத்தை நாம் அறிந்து கொள்ளும் போதுதான் அவர்களது அபிப்பிராயங்களின் அர்த்தம் புரிகிறது. வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்து வாழ்வை அமைத்துக் கொண்டிருப்போருக்கு இந்நாட்டு மக்களோடு இணைந்து செயற்படுவதற்கு அவர்களது சரித்திரப் பின்னணிகளை அறிந்து கொள்வது இன்றியமையாததாகிறது.

    இங்கிலாந்து நாட்டின் வரலாற்று முக்கிய திருப்பங்களின் வரை கோட்டை பார்க்கும்போது, பல நிகழ்வுகள் பல முக்கிய காலகட்டங்களில் நடந்திருப்பது புலனாகும். இந்நாட்டு மக்கள் பல சக ஐரோப்பிய நாட்டு மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதும், அத்தாக்குதல்களை எதிர்த்துப் போரிட்டு அவர்கள் தம்மை விடுவித்ததும் புலப்படும்.

    இங்கிலாந்து நாட்டு மக்கள் ஒரு தனிப்பட்ட இனமாக தம்மை இனங்காட்டிக் கொண்டவர்களல்ல. அவர்களின் சரித்திரப் பின்னணிகளின்படி பல சமயங்களில் இந்நாட்டை ஊடுருவிய பல கலாச்சாரங்களின் கலப்பாகவே இன்றைய இங்கிலாந்து மக்கள் காணப்படுகிறார்கள். இவர்களுக்கென இருக்கும் தனிப்பட்ட அடையாளங்கள் ஆங்கிலம் எனும் மொழியும், “சர்ச் ஆஃப் இங்கிலாந்து” ( Church of England ) எனும் ரோமன் கத்தோலிக்க சமயத்தில் இருந்து பிரிந்த மதமுமேயாகும்.

    இத்தகைய வரலாற்றுத் திருப்புமுனைகளில் ஒன்றான “ஸ்டாம்ஃபோர்டு பிரிட்ஜ் யுத்தம்” (Battle of Stamford Bridge) என்றழைக்கப்படும் ஒரு முக்கியத்துவமான போரைக் குறிப்பதாகும். இந்த ஸ்டாம்ஃபோர்டு பிரிட்ஜ் யுத்தம் என்பது என்ன ?

    2004_Ente_BritHer02

    1066ம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அரசரான எட்வர்டு என்பவரின் மரணத்தை அடுத்து King Harold Godwinson என்பவர் அரசரானார். இவரின் ஆட்சி பொறுப்பை முற்றாக வெறுத்தவர் இவரது தம்பி Toswig Godwins என்பவராவார். அச்சமயம் இங்கிலாந்தின் மீது “வைக்கிங்ஸ்” என்றழைக்கப்படும் நோர்வே மன்னர்கள் படையெடுத்து நாட்டைக் கைப்பற்ற முனைந்தார்கள்.

    அவர்களில் ஒருவர் Harald Sigurdsson ஆவார். இவரது 7000 முதல் 9000 வரையிலான படையினரும், 1066ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆங்கிலக் கரையை அடைந்தார். ஏற்கனவே தனது அண்ணன் மன்னரானதால் வெறுப்படைந்திருந்த Toswig Godwins இவருடன் இணைந்து தனது சகோதரனுக்கெதிராக யுத்தம் புரிய முனைந்தார்.

    செப்டெம்பர் 1066ம் ஆண்டு சில வட இங்கிலாந்து நகரங்களை வென்ற இப்படையினர் “யார்க்” (York) என்னும் இடத்தைச் சிலகாலம் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அச்சமயம் இங்கிலாந்து மன்னரான Haraold Godwins, இங்கிலாந்தின் தென்பகுதியில் இங்கிலாந்தை ஃபிரான்சு முற்றுகையிடப் போகிறது எனும் எதிர்பார்ப்பில் படைகளுடன் முகாமிட்டிருந்தார்.

    நோர்வே மன்னர் தனது தம்பியுடன் நாட்டினுள் ஊடுருவி யார்க் நகரம் வரை வந்ததை அறிந்து, தனது படைகளுடன் இந்த யார்க் நகரம் நோக்கி விரைந்தார். லண்டனிலிருந்து 185 மைல்களை அந்நாளைய குதிரை வண்டிகளில் நான்கு நாட்களில் கடந்து எதிரிப்படைகள் எதிர்பாராத சமயத்தில் அவர்களை எதிர் கொண்டார். யார்க் நகரத்திற்குச் சற்று வெளியே அமைந்திருந்த ஸ்டாம்ஃபோர்டு பிரிட்ஜ் எனும் இடத்தில் இவர்களின் யுத்தம் நிகழ்ந்தது.

    இது நிகழ்ந்த திகதி 1066ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ம் திகதி. பல வியூகங்களை வகுத்த நோர்வே படையினரை இங்கிலாந்து மன்னரின் படைகள் தோற்கடித்தன. படையெடுத்து வந்த நோர்வே மன்னர் Harald காற்றுக்குழாயைத் தாக்கிய அம்பினால் கொல்லப்பட்டதாகவும், இங்கிலாந்து மன்னரின் தம்பி Toswig வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

         BSB1BSB2BSB3

    பெரும்பான்மையான நார்வே படையினர் கொல்லப்பட்டனர். எஞ்சியிருந்த சிலரையும், காயப்பட்டோரையும் இங்கிலாந்து மன்னர் சமாதான உடன்படிக்கையில் திரும்பிச் செல்ல அனுமதித்தார். அப்படி அனுமதிக்கப்பட்டவர்களில் படையெடுத்து வந்த நார்வே மன்னரின் மைந்தனும் அடங்கினார். இனி ஒருபோதும் இங்கிலாந்தின் மீது படையெடுப்பதில்லை எனும் நிபந்தனையின் பேரிலேயே அவர்கள் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். நோர்வே படையினரின் அழிவு பாரதுரமானது. 300 கப்பல்களில் படையெடுத்து வந்த அவர்களில் திரும்பிச் செல்வோரைக் கொண்டு செல்ல 24 கப்பல்களே தேவைப்பட்டது என்பதே அவர்களது அழிவுக்கு எடுத்துக் காட்டாகிறது.

    இத்தகைய சரித்திர திருப்புமுனைகளே இன்றைய இங்கிலாந்தின் வடிவமைப்புக்குக் காரணம் என்பதும், இத்தகைய சரித்திர நிகழ்வுகளுக்கு இங்கிலாந்து கொடுக்கும் முக்கியத்துவம் நாம் வாழும் நாடுகளின் பெருமையை உணர்ந்து அவற்றின் தனித்தன்மையைப் பாதுகாக்க, வாழும் அனைவரும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்பதுமே எனது இத்தகைய மடலுக்குக் காரணம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    ( நன்றி – விக்கிப்பீடியா )

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (165)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே ,
    இனிய வணக்கங்கள்.
    அடுத்தொரு மடலில் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன். இவ்வாரம் தன்னுள் இரு பெரும் விடயங்களைத் தாங்கியவாறு பூத்திருக்கிறது.

    q2015இங்கிலாந்தின் மகாராணியார் இரண்டாவது எலிஸபெத் மகாராணி 9ம் திகதி ஏறத்தாழ இங்கிலாந்து நேரம் பிற்பகல் 2 மணியளவில் இங்கிலாந்தை ஆண்ட மன்னர், ராணிகளில் அதிக காலம் அதிகாரத்திலிருந்தவர் எனும் மகுடத்தைச் சூடிக் கொள்கிறார்.

    மிகவும் அமைதியாக தான் புரியும் சாதனைகளை மெதுவாக தன்னுள் அடக்கிக் கொண்டு அதனைப் பெரிது படுத்தாமல் நடக்கும் பண்பினைக் கொண்ட மகாராணி இன்றும் இவ்விடயத்தைப் பெரிது படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு தனது அன்றாட ராணியாருக்கென ஒதுக்கப்பட்ட நடவடிக்கைகளில் வழமை போல தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

    இவ்விடயம் ஒருபுறமிருக்க,

    அரசியல் அரங்கம் இருக்கிறதே ! அப்பப்பா ரொம்பவும் விசித்திரமான ஒரு அரங்கம். எந்த இடத்தில் எத்தகைய திருப்பங்கள் வருகின்றன என்பதை எவரும் எப்போதும் அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது.

    முன்னைநாள் இங்கிலாந்தின் லேபர் கட்சியின் பிரதமராக இருந்த அமரர் ஹரால்ட் வில்ஸன் அவர்கள் “அரசியலில் இரண்டு கிழமைகள் என்பது மிகப்பெரிய காலம்” என்று ஒரு சமயம் குறிப்பிட்டிருந்தார்.

    பொதுவாகவே அரசியலில் அவதானிகள் இரண்டு வகையான தீவிர கொள்கைகளைக் குறிப்பிடுவது வழக்கம்.

    அவை முறையே வலது சார்புக் கொள்கைகளும், இடதுசார்புக் கொள்கைகளுமாகும்.

    ஆனால் ஒரு சராசரி மனிதனாக அரசியல் அரங்கத்தை நோக்கும் போது இவ்வரசியல் வேறுபாட்டின் அர்த்தம் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. காரணம் அரசியலின் முக்கிய நோக்கம் மக்களின் நலன் என்பதே ஜனநாயக அரசாங்க அமைப்பையுடைய ஒரு நாட்டின் அடிப்படைக் குறிக்கோளாகும்.

    மக்களைச் சார்ந்த அரசியலில் எப்படி வலது சார்பு அன்றி இடது சார்பு கொள்கைகளை முதன்மைப் படுத்தி அரசியல் நடத்துவார்கள்?

    சரி இது ஒரு புரியாத புதிர் என்றே எடுத்துக் கொள்வோம்.

    இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் கன்சர்வேடிவ் கட்சி வலது சார் கொள்கைகளையும், லேபர் கட்சி இடதுசாரிக் கொள்கைகளையும் முதன்மைப் படுத்திய முக்கியமான இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் எனலாம்.

    சரி… இதற்கும் இவ்வாரம் தன்னுள் அடக்கியுள்ள முக்கியமான விடயம் என்று நான் முன்பு குறிப்பிட்டதிற்கும் என்ன சம்பந்தம் ? கேள்வி எழுகிறது இல்லையா ?

    இவ்வார இறுதியில் அதாவது வருகின்ற சனிக்கிழமை 12ம் திகதி லேபர் கட்சி, யார் தனது புதிய தலைவர் என்பதைத் தெரிவிக்கப் போகிறது .

    ஆமாம், இவ்வருட முற்பகுதியில் நடந்து முடிந்த இங்கிலாந்துப் பொதுத்தேர்தலில் வெற்றியீட்டப் போகும் கட்சி லேபர் கட்சி எனும் பொதுக்கருத்துக் கணிப்புகளுக்கு முரணாக டேவிட் காமரனைத் தலைவராகக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் தனியாக அரசமைத்ததும், பதவி விலகினார் லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட்.

    அதன் காரணமாக முடுக்கி விடப்பட்டது லேபர் கட்சியின் தலைப் பதவிக்கான தேர்தல் இயந்திரம். மூன்று மிதவாத இடதுசாரிக் முன்னணி லேபர் கட்சி அரசியல்வாதிகள் தலைமைப் பதவிக்கு முன்மொழியப்பட்டனர். அனைத்தும் சுமுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று லேபர் கட்சி அசந்திருந்த சமயம் திடீரென கடைசி நிமிடத்தில் முன்மொழியப்பட்டார் ஜெர்மி கோர்பன்!

    யார் இந்த ஜெர்மி கோர்பன் ?

    jermy1லேபர் கட்சியே இடதுசார்புக் கொள்கையுடைய கட்சியென்றால் அதன் அதிதீவிர இடதுபுறத்தின் முடிவில் நிற்பவர் ஜெர்மி கோர்பன்.

    முற்றுமுழுதாக தன்னை சோஸலிஸ்ட் என்று கூறிக் கொள்பவர். இதுவரை லேபர் கட்சியின் தலைமைத்துவம் எடுத்த முடிவுகள் சரியான ஒரு இடதுசார்புக் கொள்கையையுடைய கட்சியின் தலைமைப்பீடம் எடுத்த முடிவுகள் போலல்ல என்று கூறி, எப்போது கட்சிக்குள் ஒரு புரட்சிவாதியாக இனம் காணப்பட்டவர்,

    முந்தைய லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட் லேபர் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலை இன்னும் ஜனநாயகமாக்குகிறேன் என்று கூறி யார் 3 பவுண்ட்ஸ் செலுத்தி லேபர் கட்சியில் இணைகிறார்களோ அவர்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் எனும் சட்டவிதியைத் தனது கட்சிக்குள் கொண்டுவந்தார்.

    போச்சுடா !

                  lleader1lleader

    labourleadership

    ஆமாம் லேபர் கட்சிக்கு எதிரானவர்கள் பலர் இந்த வெறும் 3 பவுண்ட்ஸ் செலுத்தி “ஜெர்மி கோர்பெனுக்கு ” வாக்களிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஏன் லேபர் கட்சிக்கு எதிரானவர்களுக்கு இந்த முயற்சி ?

    நாட்டின் பொதுவான கருத்து “ஜெர்மி கோர்பனை” தலைவராகக் கொண்ட லேபர் கட்சி இனி ஆட்சிக்கு வரக் குறைந்தது இருபது வருடங்களாவது பிடிக்கும். ஏனெனில் ஜெர்மி கோர்பனை எப்போதும் இங்கிலாந்து பிரதமராக ஏற்றுக் கொள்ளாது. அது மட்டுமல்ல அவரது அதிதீவீர இடதுசாரிக் கொள்கைகளினால் லேபர் கட்சி மக்கள் மத்தியில் படுமோசமான வீழ்ச்சியையடையும். அதிலிருந்து வேறொரு தலைவர் லேபர் கட்சியை அரசாங்கம் அமைக்கும் அளவிற்கு வலுப்படுத்தக் குறைந்தது 20 வருடங்களாவது பிடிக்கும்.

    இதுவே பொதுவான அனுபவமிக்க அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.

    ஆகமொத்தம் ஜெர்மி கோர்பன் லேபர் கட்சிக்கு தலைவரானால் இனி ஒரு குறைந்தது இரண்டு தேர்தல்களிலாவது தாம் ஜெயிப்பது மிகவும் சுலபம் என்று கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் எண்ணியதால் அவர்களும் இந்த 3 பவுண்ட்ஸை செலுத்தி வாக்களிக்க முனைவதில் என்ன வியப்பு ?

    சரி, இவ்வளவு சொல்கிறாயே அப்படியாயின் ஜெர்மி கோர்பன் தலைவராவது சாத்தியமா? என்று கேட்கிறீர்கள் இல்லையா ? ஆம், சாத்தியமே ! என்னவென்று புரியாத வகையில் ஜெர்மி கோர்பன் மீது ஒரு ஆதரவு அலை லேபர் கட்சியினுள் எழுந்திருப்பது போல் ஒரு உணர்வேற்படுகிறது. இதுவரை வாக்களிக்காத இளைய தலைமுறைக்கு தேர்தலின் மீது ஒருவிதமான விரக்தி கலந்த வெறுப்பு இருந்தது. அரசியல்வாதிகள் அனைவரும் வாக்கைப் பெறுவதற்காக எதையும் கூறுவார்கள், யார் வந்தாலென்ன நிலைமை மாறப் போகிறதா ? எனும் ஒருவகை விரக்தியே அதற்குக் காரணம்.

    அடுத்ததாக நாட்டின் செலவு வரவை விட அதிகமாக இருந்ததால் ஏற்பட்ட கடனை அடைக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றி கண்ட கன்சர்வேடிவ் கட்சி தொடர்ந்து கடனைக் குறைத்து செலவிற்கு மேலாக வரவினைக் காட்டும் நிதிநிலையை தமது இலக்காகக் கொண்டதினால் பொருளாதாரக் கொள்கைகளை மேலும் இறுக்கி அரசாங்கம் மக்களுக்குக் கொடுக்கும் உதவிப்பணத்தொகைகளை கட்டுப்படுத்தியுள்ளார்கள்.

    ஜெர்மி கோர்பன் இவை அனைத்தையும் மாற்றுவேன். தனியார் மயமாக்கப்பட்ட காஸ், மின்சாரம், குடிநீர் வினியோகம், ரெயில் சேவை அனைத்தையும் மீண்டும் தேசிய மயமாக்குவது தனது திட்டம் என்று மிகவும் அதிதீவிர இடதுசார்பு சோஸலிசக் கொள்கைகளை முழங்குகிறார். உழைப்போர் பக்கமே நான் நிற்பேன், பணமுதலைகளை ஒழிப்பேன் என்று மிகவும் சத்தமாக பிரசாரம் செய்கிறார். லேபர் கட்சி தோல்வியடைந்ததின் காரணம், அது தான் கொண்ட அடிப்படைக் கொள்கைகளின்றும் தடம் புரண்டு விட்டது; அதை மீண்டும் முற்றுமுழுதான சோஸலிஸக் கட்சியாக்குவேன் என்றும் வேறு சவால் விடுகிறார்.

    இது எல்லாம் அரசியல் அரங்கத்தில் ஒரு புது நாடகம் மேடையேற்றப் பட்டது போன்ற பரபரப்பைக் கொடுத்திருக்கிறது. முன்னால் லேபர் கட்சியின் தலைவர்களும், முன்னணி அரசியல்வாதிகளும் ஜெர்மி கோர்பன் தலைவரானால் கட்சி எந்த அளவிற்கு பின் தள்ளப்படும் என்று எச்சரிக்கை வேறு விடுத்தது ஜெர்மி கோர்பனுக்கு எதிர்மறையான அனுதாப அலைகளைக் கிளப்பி விட்டது என்று சில ஊடக முன்னணியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

    அதிமுக்கிய பிரச்சனை வேறொன்று !

    ஜெர்மி கோர்பனுக்கும் உலகில் பயங்கரவாத இயக்கங்கள் என்று கணிக்கப்பட்ட அமைப்புகளுக்கும் உள்ள தொடர்பு பலரை இவருக்குக் கிடைத்த அரசியல் முக்கியத்துவம் அச்சமடைய வைத்திருக்கிறது. இங்கிலாந்தின் பிரதமராகும் வல்லமை படைத்த ஒரு கட்சியின் தலைவராகும் இவருக்குச் சர்வதேச அரங்கில் எடுக்க வேண்டிய நிலைப்பாட்டைப் பற்றிய அளவிற்கு சர்வதேச அரசியல் வியூகம் இருக்கிறதா ? எனும் கேள்வி மிகவும் ஆழமாகப் பல அரசியல் அவதானிகளின் உள்ளத்தில் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.

    அடுத்து பொருளாதாரத்தில் இவர் கொண்டுள்ள நிலைப்பாடு மக்கள் மனதில் பல கேள்விகளைத் தூக்கிப் போட்டுள்ளது.

    இக்காலகட்டம் மிகவும் வித்தியாசமானது. வாழ்க்கையின் சகல மட்டத்தில் இருக்கும் மக்களும் பங்கு சந்தையில் தம்மை ஈடுபடுத்தியுள்ளார்கள். ஜெர்மி கோர்பன் தேசியமயமாக்கப் போகிறேன் என்று கூறும் பல நிறுவனங்களில் செல்வந்தர்கள் இல்லாத பல நடுத்தர வர்க்கத்தினரும் பங்குகளைக் கொண்டுள்ளார்கள். இவரது இந்தத் தேசிய மயமாக்கல் கோஷம் பலருக்குப் பலவகையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆமாம், வருகின்ற சனிக்கிழமை லேபர் கட்சிக்கு ஒரு வரலாற்றுத் திருப்புமுனை என்பதே அரசியல் அவதானிகளின் கருத்து… ஜெர்மி கோர்பன் லேபர் கட்சியின் தலைவரானால் . . . . . . இனி வரும் தேர்தல்களில் லேபர் கட்சி அரசமைப்பது கேள்விக்குறியே !

    ஏன், இது எனக்கு ஒரு ஆச்சரியத்தை எதிர்காலத்தில் கொடுக்கலாம் !

    அரசியல் அரங்கத்தில் எதுவும் சாத்தியமே ! பொறுத்திருந்து பார்ப்போம்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • எவர்தான் கேட்டிடுவார்?

    -சக்தி சக்திதாசன்

    உயிரை இழக்கப் போகிறோம்
    எனும் உணர்வு
    பறித்திடும்
    வாழ்வுதனை எண்ணித்
    தகித்திடும் எதிர்காலக்
    கனவுகளோடு
    கடலேறிப் பயணமொன்று
    துடித்திடும்
    உயிர்கள் பலதை
    அடுக்கிட்ட கட்டைகள்
    போலவே
    நிறுத்திட்ட படகுகள்
    நீந்திடும் மறுகரை நோக்கி
    அடித்திடும் அலைகளின்
    வேகம் அறிந்திடுமா?

    அம்மனிதரின் நெஞ்சங்கூட்டில்
    அரித்திடும் வேதனைகளை
    முடித்திடாப் பயணங்களில்
    சரிந்திடும் படகுகளில்
    மூழ்கிடும் மனிதர்களில் எவர்
    சேர்ந்திடுவர் அக்கரையை?

    கூட்டமாய் அடுத்தொரு
    பயணத்துக்காய்ப்
    போரிடும் அகதிகள் கூட்டம்
    மறுபுறம்
    அகதிகளா இவர்கள்? இல்லை
    ஆசைமிக்க ஜரோப்பிய
    வாழ்வுக்காய் ஓடிடும்
    பேராசை கொண்ட
    மனிதர்கள் கூட்டமா? எனும்
    அறிஞர்கள் மகாநாடு!

    ஜயகோ!
    கடற்கரைதனில் ஒதுங்கிட்ட
    பிஞ்சொன்றின் முடங்கிய
    சடலத்துள் முடிந்துபோன
    ஓலத்தின் ஒலியை
    இவ்வோங்கார உலகில்
    எவர்தான் கேட்டிடுவார்?

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (164)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்கள்.

    இப்பொழுதுதான் 2015 ஆம் ஆண்டு பிறந்தது போலொரு உணர்வு, அதற்குள்ளாக ஒரு குதிரையைத் தட்டி விட்டதும் அது கண்மூடித் திறப்பதற்குள் காததூரம் கடந்து விடுவது போல காலமும் ஓடி செப்டெம்பர் மாதத்தில் வந்து நிற்கிறது. மனிதனின் வாழ்வில் அவன் கடக்கும் ஒவ்வொரு வினாடியும் அவன் தனது முடிவை நோக்கி எடுத்து வைக்கும் வினாடிகள் என்பதே உண்மையாகிறது. ஆனால், அதற்காக எமது வாழ்வை எப்படி வாழ்ந்தாலும் வாழ்ந்து முடித்தால் சரி எனும் வகையில் வாழ்ந்து விடுவது சாத்தியமா? இல்லை, அப்படி வாழ்வதற்காகத்தான் நாம் இப்புவியில் மனிதராக அவதரித்திருக்கிறோமா ?

    வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் அறிந்த நிஜமான உண்மை, பிறந்தவர் அனைவரும் ஓர் நாள் இறப்பர் என்பதே. ஆனால் பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் இவ்வுலகத்தில் எமது வாழ்க்கை எவ்வகையில் அமைந்திருந்தது என்பதே நாம் முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டிய விடயமாகிறது. வாழ்வில் நாம் எண்ணியதெல்லாம் நடப்பதுமில்லை, விரும்பாத நிகழ்வுகள் நடக்காமல் போகப் போவதும் இல்லை. நாம் எண்ணியது நடந்தால் மகிழ்கிறோம், அது நடைபெறாவிட்டாலோ ஏமாற்றமடைகிறோம்.

    வாழ்வில் இத்தகைய அடிப்படைகளின் பின்னணியில் தான் சமூகங்கள் உருவாகின்றன. அவற்றின் இயக்கங்கள் நடைபெறுகின்றன. நான், நீ எனும் உணர்வுகள் நாம் என்று மாறும் போதுதான் அங்குச் சமுதாய உணர்வுகள் துளிர்க்கின்றன. ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம் அச்சமுதாய அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் எவ்வகையில் அச்சமுதாயத்தின் அங்கமாக தம்மைப் பிரதிபலிக்கிறார்கள் என்பதிலேயே தங்கியுள்ளது.

    multicultural-britainஇன்றைய இங்கிலாந்து ” Cosmopolitan “ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் சமூக அமைப்பை அடித்தளமாகக் கொண்டது. இதை ” Multicultural Society” அதாவது பல்லின கலாச்சாரமிக்க மக்களைக் கொண்ட ஒரு சமுதாய அமைப்பாகவே பலரும் கருதுகிறார்கள். இத்தகைய ஒரு சமுதாய அமைப்பு இங்கிலாந்தின் மீது திணிக்கப்பட்டதா அல்லது அது தானாகவே விரும்பி இத்தகைய சமுதாய அமைப்பை ஏற்படுத்திக் கொண்டதா என்பதல்ல தற்போதைய கேள்வி. இச்சமுதாய அமைப்பு இங்கிலாந்தின் ” Indigenous Population “ அதாவது இங்கிலாந்து நாட்டின் பழங்குடி மக்கள் அல்லது இங்கிலாந்து நாட்டின் தொன்மையான மக்கள் என்று கருதப்படும் “ஆங்கிலோ சாக்ஸன்”(Anglo saxon) இன மக்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதே தற்போதைய ஆதங்கமாகும்.

    QHv5fH1இங்கிலாந்து ஒரு ஏகாதிபத்திய வல்லரசாக “பெரிய பிரித்தானியா” எனும் மாபெரும் பலம் பொருந்திய நாடாக விளங்கிய காலங்கள் உண்டு. “Gum Boat Diplomacy” என்றழைக்கப்படும் பீரங்கிப் படகின் அடிப்படையிலமைந்த ராஜதந்திரம் எனும் வகையில் உலகின் பல நாடுகளையும் அப்போதைய பெரிய பிரித்தானியா கைப்பற்றியது உண்மையே. பிரித்தானிய ஏகாதிபத்திய சாம்ராஜ்ஜியத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்று அவர்கள் மார்தட்டிக் கொண்ட காலங்களும் உண்டு. உலகின் பல பாகங்களிலும் தமது வாழ்க்கைமுறையையும் தமது மொழியையும் புகுத்தியதால் அந்நாடுகள் விடுதலையடைந்ததும் அந்நாட்டு மக்கள் தாம் புலம்பெயர எண்ணிய நாடு இங்கிலாந்து என்பதே இங்கிலாந்தைப் பொறுத்தவரை கசப்பான உண்மையாகும்.

    IPA-The-New-Britain-Reportஅது மட்டுமின்றி அந்நாளைய இங்கிலாந்தின் ரெயில்வே கட்டமைப்புக்கும், மற்றைய நாட்டின் கட்டமைப்புக்கும் பணியாட்கள் தேவையென்பதால் அவர்களாகவே தமது நாட்டினுள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தவர்கள் ஏராளம். இப்பின்னணிகளின் காரணமாக பல்வேறு இங்கிலாந்து அரசுகள் “காமன்வெல்த்” என்றழைக்கப்படும் பொதுநலவாய நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் வெளிநாட்டவருக்கு விசேட சலுகைகள் அளித்து அவர்களை வரவேற்றதும் உண்மையே ! ஆனால், இன்றைய இங்கிலாந்தின் பிரச்சனைகள் வேறு. உலகின் பொதுவான பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக இங்கிலாந்திலும் பொருளாதாரம் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

    விளைவு !…12graphicDM0404_468x386

    வாழ்வின் சகல வசதிகளையும் குறைவின்றி அனுபவித்து வந்த இங்கிலாந்து நாட்டு மக்கள், பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிட்டது.  இதற்குப் பின்னணியாக பல காரணங்கள் இருக்கலாம். மாறி மாறி வந்த அரசாங்கங்களின் பிழையான பொருளாதாரக் கொள்கைகள், அவரவர்கள் தமது அரசியல் கொள்கைகளில் கொண்டிருந்த அழுத்தமான பிடிகளினால் எடுத்துக் கொண்ட பிழையான திருப்பங்கள் எனப் பலவற்றை குறிப்பிடலாம். ஆனால், அனைவர் கண்களிலும் தென்பட்ட ஒரு பொதுவான காரணி “வெளிநாட்டவரின் குடியேற்றமே.” போகும் இடங்களில் தொகை தொகையாகக் காணப்படும் ஐரோப்பிய, ஆசிய வெளிநாட்டவர்களின் வருகை இங்கிலாந்து நாட்டு மக்களின் மனதில் தாம் தமது வசதிகளை இழக்கக் காரணம் தமது வளங்களை இத்தகைய வெளிநாட்டவருடன் பகிர்ந்து கொள்ள ஏற்பட்ட நிர்ப்பந்தமே எனும் கருத்து வலுவாக நிலை கொள்ள ஆரம்பித்தது.

    immigration-open-your-eyes_2எதிர்க்கட்சிகளாக இயங்கிக் கொண்டிருந்த பல சிறிய கட்சிகள் தமது பலத்தைப் பெருக்கி தாம் பிரபலமடைய இந்த “வெளிநாட்டவரின் குடியேற்றக் கொள்கையை” முன்வைத்து பிரசாரம் செய்ய ஆரம்பித்ததினால் அவற்றிற்கு ஆதரவு பெருகியது. அச்சமடைந்த பிரதான கட்சிகள் தமது பக்கம் ஆதரவை மீளப்பெற்றுக் கொள்வதற்காக இதே கருத்தினை தமது பிரசாரத்திற்கு அடிப்படையாக்கினார்கள். இதேசமயம் தற்போது மத்தியக்கிழக்கு நாடுகளில் இருந்து படகுகள் மூலம் தப்பியோடி வரும் பலர் ஐரோப்பாவுக்குள் நுழைந்து, அதனூடாக இங்கிலாந்து நாட்டு எல்லையில் முகாமிட்டு இங்கிலாந்துக்குள் கள்ளமாக நுழையும் முயற்சியில் தினமும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலை இங்கிலாந்து நாட்டு மக்களின் மனநிலையில் வெளிநாட்டவர்களை நோக்கிய கருத்தில் மிகவும் அதீத நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டியுள்ளது.
    அதே நேரம் சில பிரித்தானிய இஸ்லாமியர் சிரியா, ஈராக்கில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் “ஐ,எஸ்.ஐ.எஸ்” எனும் அமைப்பில் இணைந்து கொள்ள சட்டவிரோதமாகச் செல்வதும் இந்நாட்டவரின் கருத்தை மேலும் இறுக்கமடையச் செய்கின்றன.

    பலமுனைகளில் கூர்மையடைந்து வரும் இப்பிரச்சனைக்கான தீர்வு எந்தத் திசையில் செல்கின்றன என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

     

     

     

     

    picture sources:
    IPA The New Britain Report
    http://www.barenakedislam.com/2014/11/30/awwww-muslims-face-worst-job-discrimination-of-any-minority-group-in-britainbut-its-their-own-fault/
    http://www.bnp.org.uk/news/it-multiculturalism-which-has-failed
    http:  //imgur.com/gallery/QHv5fH1/
    https://jodylancastle.wordpress.com/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(163)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்கள் !

    இவ்வுலகத்தில் பிறந்த அனைவருக்கும் தம் வாழ்க்கையை தாம் நினைத்த வகையில் வாழும் உரிமை இருக்கிறது. எனது வாழ்க்கையை நான் நினைத்த வகையில் வாழும் உரிமை எனக்கிருக்கிறது என்று கூறிக் கொண்டு மற்றொருவருடைய வாழ்வினைச் சிதைப்பது என்பது ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதொன்றா ?

    இல்லையே !

    ஒவ்வொருவருக்கும் தமது வாழ்வினை அமைத்துக் கொள்ளும் உரிமை இருக்கும் அதேசமயம் அவ்வாழ்க்கையை ஒரு சமூகநீதிக்குட்பட்ட வகையில் வாழ்ந்து முடிக்கவேண்டிய கடப்பாடு உள்ளது. சமூகக் கோட்பாடுகள், சமூக நியதிகள் என்பன என்ன? அவை உலகில் வாழ்க்கை என்னும் இந்தப் பயணம் செல்ல வேண்டிய பாதையின் சாலை விதிகளே ! ஒரு வண்டியை ஓட்டிச்செல்லும் போது அவற்றை சாலை விதிகளுக்கமைய ஓட்டிச் செல்ல வேண்டியதைப் போலவே வாழ்க்கைப் பயணத்தையும் விதிகளுக்கமையவே வாழ வேண்டும்.

    இவ்வுலகில் வசதி படைத்தவர்கள், வசதி இல்லாதவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள் என்று மனிதர்களின் வாழ்க்கைத்தரத்திற்கேற்ப அவர்கள் பிரித்து வைக்கப்படுகிறார்கள். செல்வந்தர்கள் என்று எடுக்கும்போது கூட அதிலே பரம்பரையாக செல்வந்தர்களாக இருந்தவர்கள் ஒருபக்கம், தமது கடின உழைப்பினாலும் சிந்தித்து செயலாற்றும் திறனினாலும் முன்னேறி செல்வந்தர் எனும் பட்டியலில் இடம்பெற்றவர்கள் ஒருபுறம் என வகைப்படுத்தப் படுகிறார்கள்.

    இங்கிலாந்து போன்றதொரு நாட்டிலே அவரவர் செய்யும் பணிகளுக்கேற்ற ஊதியத்தின் பிரகாரம் அவர்கள் செலுத்தும் வரிப்பணம் நாட்டின் சகல மக்களினது நல்வாழ்க்கையை நோக்கி செலவழிக்கப்படுகிறது. ஒவ்வொருவரிடமும் இருக்கும் செல்வத்தின் அடிப்படையிலும், அவர்கள் வசிக்கும் இல்லத்தின் வசதிகளின் அடிப்படையில் அவற்றிற்குரிய வரிகள் கணிக்கப்படுகின்றன.

    எதற்காக இந்த அலசல் ?

    network railசமீபத்தில் நடைபெற்ற புகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்தம் பற்றி உங்களில் பலர் அறிந்திருக்கலாம். இவ்வேலைநிறுத்தத்திற்கான ஆதரவு மக்கள் மத்தியில் எழுப்பிய சில வினாக்கள் பல ஊடகங்களில் பலமான சர்ச்சைகளை கிளப்பி விட்டிருந்ததது. இவ்வேலைநிறுத்தத்திற்கான அடிப்படை என்ன ? லண்டன் சுரங்க புகையிரத சேவையை வாரவிடுமுறை நாட்களில் சில பகுதிகளில் மட்டும் 24 மணி நேரச் சேவையாக செப்டெம்பர் மாதத்தில் இருந்து பரீட்சார்த்தமாக ஆரம்பிக்க எடுத்த முடிவின் எதிரொலிதான் இது.

    இந்த ரெயில் சேவைகள் 24 மணி நேரமாக்கப்படுவதால், தாம் இரவு நேரங்களில் பணிபுரியும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதால், தமது வாழ்க்கை பாதிக்கப்படுகிறது எனவே அதற்கான நஷ்டஈடாக தமக்கு அதற்காக அளிக்கப்படும் ஊதிய உயர்வு அமையவில்லை என்று ரயில் சாரதிகளின் யூனியனும், மற்றைய ஊழியர்களின் யூனியனும் குற்றம் சாட்டி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். லண்டன் சுரங்க ரயிலை ஓட்டும் ஒரு சாரதியின் ஊதியம் வருடமொன்றிற்கு ஏறத்தாழ 50,000 பவுண்ஸ் ஆகும்.

    network rail3லண்டனில் பணிபுரிபவர்களின் சராசரி ஊதியம் வருடமொன்றிற்கு 28,000 பவுண்ஸ் என்பதே பொதுவான கணிப்பு. அது தவிர ரெயில்வே சாரதிகள் ஒரு வாரத்திற்கு ஒரு மணிநேரம் அதிகமாகப் பணிபுரிந்து அவர்களது வருடாந்தர விடுமுறை நாட்கள் 43 என்று கணிக்கப்படுகிறது. இதுவே சர்ச்சைக்குக் காரணமாகிறது.

    அதாவது சராசரியாக வருடமொன்றிற்கு 28,000 பவுண்ஸ் உழைத்துக் கொண்டு 20 நாட்கள் மட்டுமே விடுமுறையாகக் கொண்டவர்கள் மத்தியில் 50,000 பவுண்ஸ் ஊதியத்துடன் 43 நாட்கள் விடுமுறையும் பெறும் இவர்கள் எதற்கிந்த வேலைநிறுத்தம் செய்கிறார்கள் எனும் அபிப்பிராயம் கொண்டவர்கள் பலர். வேலைநிறுத்தம் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையை முற்றாகப் பாதிப்படையச் செய்யும் ஒரு நிகழ்வு. ஒரு ஊழியரின் கடைசி ஆயுதமாகத்தான் இந்த வேலைநிறுத்தம் உபயோகிக்கப்பட வேண்டும் என்பதே பொதுவான கருத்தாகும்.

    network rail2லண்டன் சுரங்க ரெயில் அதிகாரிகளோ ஊழியர்கள் இரவுநேரம் பணிபுரிய நிர்ப்பந்திக்கப்பட மாட்டார்கள் யார் விரும்புகிறார்களோ அவர்கள் பணிபுரிந்தால் மட்டும் போதுமானது. அத்தோடு அவர்களுக்கு அதற்காக மேலதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது என்றும் யூனியனுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக இருக்கும்போது எதற்கிந்த வேலைநிறுத்தம் என்கிறார்கள்.

    இந்த வேலைநிறுத்தம் ஒருமுறை நடந்தால் பரவாயில்லை தொடர்ந்து செய்வதால் அல்லலுறும் மக்கள் மிகவும் அதிருப்தி அடைகிறார்கள். இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசாங்கத்தின் செலவுகளை மட்டுப்படுத்தும் பல நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டிருக்கிறது. இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு 1% சே வழங்கப்படுகிறது. அதே போல மற்றைய அரச ஊழியர்களுக்கும் அதே நிலைதான்.

    வேலையற்றவருக்கான அரச நிதியுதவிகள் அனைத்தும் வெகுவாக மட்டுப்படுத்துள்ளன. அனைத்து மக்களும் இவற்றையெல்லாம் அனுசரித்துப் போக வேண்டி இருக்கும் நிலையில், இந்த ரெயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் எவ்வாறு நியாயப்படுத்தப்படுகிறது எனும் கேள்வி பலரிடமிருந்து எழுகிறது. இது ஊழியர்களின் நன்மைக்கான வேலைநிறுத்தம் அல்ல. கன்சர்வேடிவ் அரசிற்கு நிர்ப்பந்தத்தைக் கொடுத்து அதனைப் பலவீனப்படுத்த யூனியன்களினால் எடுக்கப்படும் அரசியல் பின்னணியைக் கொண்ட வேலைநிறுத்தம் எனும் வாதமும் முன்வைக்கப்படுகிறது.

    வேலைநிறுத்தம் என்பது ஜனநாயகநாட்டில் வாழும் ஒவ்வொரு ஊழியரது அடிப்படை உரிமை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த அடிப்படை உரிமை அரசியல் காரணங்களுக்காக உபயோகப்படுத்தப் படுமானால் அதனுடைய உண்மையான வலிமையை இழந்துவிடும் என்பதையும் மறுக்க முடியாது. அன்றாடம் மிகவும் சிரமங்களுக்கிடையில் தமது வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகப் பலர் பலமைல்கள் பணிக்காகப் பிரயாணிக்க வேண்டி இருக்கும்போது அவர்களது பணிகளுக்கு இடையூறாக இவ்வேலைநிறுத்தம் அமைகிறது.

    அதனைச் சரியான வகையில் நியாயப்படுத்த முடியாவிட்டால் அதனுடைய பிரயோகத்திற்கான பொதுமக்களின் ஆதரவினை இழக்கும் நிலை ஏற்படும் என்பதை இந்த யூனியன் தலைவர்கள் மறந்துவிடக்கூடாது.

    அடுத்த மடலில் சந்திக்கும்வரை
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(162)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்கள்.
    ஒருநாட்டில் நாம் எத்தனைக் காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல. அந்நாட்டின் இயற்கை வளங்களை, அந்நாட்டின் சிறப்புத்தன்மைகளை, அந்நாடு தன்னுள் அடக்கியிருக்கும் வனப்புகளைச் சரியான வகையில் உள்வாங்கியிருக்கிறோமா ? என்பதுவே முக்கியம்.

    அப்படியான சுகிப்புகளின் அடிப்படையில்தான் வாழ்க்கையின் சுவையை எவ்வாறு நாம் நுகர்ந்துள்ளோம் என்பது தெளிவாகும். நான் இங்கிலாந்தில் சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறேன். இங்கிலாந்து நாட்டின் சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்கள் அனைத்தையும் பார்த்து விட்டேனா ? அல்லது, இங்கிலாந்து தன்னுள் அடக்கியிருக்கும் பல பிரமிப்புக்களைச் சரியான வகையில் உள்வாங்கியிருக்கின்றேனா எனும் கேள்வி என்னை நோக்கிக் கேட்கப்பட்டால் அதற்கு உண்மையான பதில் இல்லை என்பதுவேயாகும்.

    அதற்குப் பல காரணங்கள் உண்டு. நான் இங்கு வந்த ஆரம்பக்காலங்களில் மாணவனாக எனது அன்றாட வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருந்தேன். அதன் பின்னால் திருமணமானதும் நாம் எமது வாழ்வைச் சைபர் எனும் இடத்தில் ஆரம்பிக்க வேண்டியதாக இருந்ததினால் முழுக்கவனமும் வாழ்வைக் கட்டியெழுப்புவதிலும் வேறு சில பயனற்ற முயற்சிகளிலும் செலவழித்தது மற்றொரு காரணம். இப்படிப் பல காரணங்களுடன், நான் வாழும் நாட்டின் முழு வளத்தினையும் பார்த்து பரவசிக்க வேண்டும் எனும் நினைவுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது இன்னொரு காரணம்.

    ஆனால் இடையிடையே சுற்றுலா மேற்கொள்ள வரும் நண்பர்கள் எனைத்தேடி வரும்போது அவர்களை அழைத்துச் சென்றதால் சில சில அரிய இடங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டாமல் போகவில்லை.

    சில நாட்களின் முன்னால் என் மனைவி தனது பணி நிமித்தம் இங்கிலாந்தின் வடக்குப் பகுதிக்கு விஜயம் செய்ய வேண்டி வந்தது. விருப்ப ஓய்வு எடுத்து இருப்பதால் நேரம் இருக்கிறதே நீங்களும் வாருங்கள் என்று அழைத்தாள் என் மனைவி. சரி, என்று நானும் புறப்பட்டேன், நான் சென்றது இங்கிலாந்தின் வடபகுதியில் இருக்கும் “செபீல்ட் (Sheffield)” எனும் இடமாகும். இது நான் வாழும் பகுதியில் இருந்து சுமார் 210 மைல்கள் தொலைவிலுள்ளது. மோட்டார்காரில் பயணிக்கும் போது சுமார் நான்குமணி முப்பது நிமிடங்கள் வரை எடுக்கும். அதிகாலை 5.30 மணிக்குப் புறப்பட்ட நாங்கள் சுமார் மூன்று மணித்தியாலங்கள் பிரயாணித்து விட்டு ஒரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உணவுவிடுதியில் சிற்றுண்டி அருந்துவதற்காக நிறுத்தியதனால், சுமார் 10. 30 மணியளவில் நாம் செல்ல வேண்டிய இடத்தைச் சென்றடைந்தோம்.

    hv4எனது மனைவி ஒரு ப்ராஜெக்ட் மீட்டிங்க்கு சென்றதினால் மனைவியை அங்கு இறக்கி விட்டு நான் அவ்விடத்தைச் சற்றுச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டேன். இங்கிலாந்தின் கிராமியச் சூழலின் முழு அழகும் அங்குதான் தெரிந்தது. அழகாக இருமருங்கும் பச்சைப் பசலென அழகிய புதர்களினூடாக அரைமணி நேரம் பயணித்தால் மற்றொரு கிராமம். இங்கிலாந்தின் கிராமங்கள் அநேகமாக சில அடிப்படை வசதிகளைக் கொண்டிருக்கும் அதாவது ஒரு கடைகளடங்கிய பிரதான தெரு, ஒரு பாடசாலை, ஒரு சர்ச், ஒரு மதுபான பார் (பப்), ஒரு தபால் ஆஃபிஸ். அவைகளினூடாக அமைதியாகச் செல்லும் மக்கள், அவர்களின் போக்கில் எந்தவித அவசரமும் காணப்படவில்லை, வாழ்க்கையின் ஒவ்வொரு கணங்களையும் அனுபவித்துக் கொண்டே நடப்பார்கள் போலும் !

    லண்டன் எனும் அந்தப் பெரிய நகரின் அவசரமான வாழ்க்கை முறைக்கும், இக்கிராமங்களின் அமைதியான அந்நடைமுறை வாழ்க்கைக்கும் இடையில் காணப்பட்ட வித்தியாசம் ஏன் பல ஆங்கிலேயர்கள் இக்கிராமிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து லண்டனை விட்டு ஓடுகிறார்கள் என்பதைப் பரிபூரணமாக விளக்கியது. இங்கிலாந்து அரசியல்வாதிகள் அநேகமாக தமது உரைகளில் “வடக்கிற்கும், தெற்கிற்கும் உள்ள பிரிவு” ( The North South divide ) என்று பேசுவார்கள். இவ்விரு வாழ்க்கைமுறைகளையும் நேரில் கண்டவர்களுக்குத்தான் அதன் உண்மையான அர்த்தம் புரியும் போலிருக்கிறது.

    இக்கிராமங்களில் சிறிய வாசகசாலை உண்டு அதனுள் அமைதியாக மக்கள் அமர்ந்து பத்திரிக்கைகள் படித்துக் கொண்டிருந்தார்கள். இக்கிராமம் ஒன்றில் நான் எனது காரை நிறுத்தி விட்டு நடந்தபோது நான் ஒருவன் மட்டுமே அங்கு ஒரு ஆசிய இணத்தவனாக நின்றிருந்தேன். தெருவில் போவோர் வருவோர் என்னை ஏறிட்டுப் பார்த்தார்கள் ஆனால் அவர்கள் தமக்கேயுரிய பண்பாட்டு வழக்கப்படி ஒரு சிறிய புன்முறுவல் பூத்தார்கள்.

    hv5என் மனைவி சென்ற இடத்திற்குப் பெயர் “ஹோப் வெளி” ( Hope Valley ) என்பதாகும். இங்கிலாந்தின் வனப்பு மிகுந்த பகுதிகளில் ஒன்று ” பீக் டிஸ்ரிக்ட்” (Peak District) ஆகும். இந்த ஹோப் வெளி என்னும் இடம் அதன் மத்தியப் பகுதியாகும். இது இயற்கையாகத் தோன்றிய ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இப்பகுதியில் இங்கிலாந்தின் பல சரித்திர முக்கியத்துவம் நிறைந்த இடங்கள் அடங்கியுள்ளன.

    hv6இப்பகுதி இங்கிலாந்துக்கு வரும் பல ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் விரும்பி ரசிக்கும் பகுதியாகும். மெய்மறந்து ரசிக்க வைக்கும் அழகிய இயற்கை வனப்பு நிறைந்த அழகிய பகுதியே இது, இங்கு அமைக்கப்பட்டிருக்கும் தெருப்பகுதி மதில்கள், மற்றும் வீட்டுச் சுவர்கள் ஆகியன இப்பகுதியிலிருந்து எடுக்கும் பழமை வாய்ந்த கற்களினாலேயே அமைக்கப் பட்டிருக்கின்றன.

    இப்பகுதியின் முழுவனப்பினையும் கண்டுகளித்து ரசிக்க ஓர்நாள் போதாது எனும் முடிவுக்கே என்னால் வரமுடிந்தது. இன்னுமொருமுறை வந்து பார்க்க வேண்டிய இடம் என்று என் மனதில் குறித்து வைத்துக் கொண்டு நானும் என் மனைவியும் திரும்ப எமது அவசர வாழ்வினை நோக்கிப் புறப்பட்டோம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இந்திய சுதந்திரதின வாழ்த்துக்கள்

    11855820_501799199984935_738131344682599820_n

    இருளில்
    வந்ததோர் விடியல்
    இந்திய தேசத்தின்
    சுதந்திர விளைச்சல்

    முடிந்ததோர்
    ஆங்கிலேய ஆதிக்கம்
    பிறந்ததோர்
    பாரத விடுதலை

    நடந்ததோர்
    அறப்போர் அன்று
    அண்ணல் காந்தியின்
    அஹிம்சை வழியில்

    துணிந்ததோர்
    சுபாஷ் சந்திரபோஸ்
    புரிந்ததோர்
    வீரமிகு விடுதலைப் போர்

    புனைந்ததோர்
    வீரமிகு கவிதைகள்
    மகாகவி பாரதியின்
    விடுதலைக் கீதங்கள்

    ஓட்டியதோர்
    கப்பல் சுதேசமாய்
    சிங்கத்தோன்
    கப்பலோட்டிய தமிழனாம்

    களைந்ததோர்
    உயிரையாம் இளைஞன்
    வாஞ்சிநாதன் எனும்
    வீரமிகு தமிழன்

    கனவிலோர்
    சுதந்திரம் கண்டவன்
    பாரதியெனும் எம்
    தமிழ் முப்பாட்டன்

    சீறியதோர்
    சிங்கமென பாளையகோட்டையில்
    கட்டபொம்மன் எனும்
    காளையாம் பாரதத்தில்

    கூவியோர்
    அறைகூவ;ல் விடுத்த
    அமரர் கலாம் தனின்
    கனவு நனவாகு,ம்

    புதியதோர்
    உணர்வுடன் வளர்ந்திடும்
    பாரதம் ஆசியாவின் ஒளியாய்
    உயர்த்திடுவீர் பெருமை தனை

    வலியதோர்
    வல்லரசாக மாறிடும்
    வழிதனில் வளரட்டும்
    சுதந்திர இந்தியா

    வளர்ந்ததோர்
    இளைய பாரத இளைஞர்
    பாரின் பல நிறுவனங்களின்
    பாரிய தலைவர்களாய்

    மகிழ்ந்ததோர்
    தமிழன் இவன் இதயமே !
    மகிழ்வுடன் வாழ்த்திடுவேன்
    என் இனிய இந்திய இதயங்களை

    விழித்ததோர்
    சமுதாயம் இதுவென நாட்டில்
    இல்லாமை இல்லாமல் ஆக்கிட
    முனந்தோர் சாதனைகள் புரிந்திடுக

    வாழ்த்துதோர்
    இந்திய சுதந்திரதின
    வாழ்த்துக்கள் கூறி
    வாழிய வாழிய
    காலம் காலமாய் என்றும்
    கலாமின் கனவுகளோடு

    வாழ்த்துக்களோடு
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . ( 161 )

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் இந்தவாரம் உங்களை இம்மடல் மூலம் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.

    தான் பிறந்த நாட்டில் தான் வாழ்வதற்கு பாதுகாப்பின்றி, வாழ்வாதாரத்திற்கு எந்தவித உத்தரவாதமும் கிடைக்காமல் தன்னுடைய நாட்டையும் தனது உற்றார், உறவினர்களையும் பிரிந்து தமது உயிரை கையில் பிடித்துக் கொண்டு மற்றொரு நாடு தமது உயிருக்கும் வாழ்விற்கும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஆதரவளிக்கும் எனும் நம்பிக்கையில் தமது நாட்டை விட்டு வெளியேறுவதே ” அகதிகள் ” எனும் பதத்தின் பொருளாகிறது.

    இன்றைய உலகின் பல மூலைகளில் பலவிதமான வகைகளினால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். உள்நாட்டு யுத்தம், இனப்படுகொலைகள் , வறுமை, பாலியல் கொடுமைகள் என பலவகையான தாக்கங்களுக்கு பல நாடுகளில் பல மக்கள் உள்ளாகிறார்கள்.

    இன்றைய இங்கிலாந்து அரசியல் வானிலே அரசியல்வாதிகளை மிகப்பூதாகரமாக எதிர்நோக்கும் பிரச்சனை “குடிவரவு” (Immigration ) எனும் பிரச்சனையே !

    லிபியா , சிரியா போன்ற நாடுகளிலிருந்து ஜரோப்பாவை நோக்கி வெளியேறும் பலர் இத்தாலி, கிறீஸ் போன்ற நாடுகளை நோக்கி கடல் பயணத்திற்கு ஒவ்வாத படகுகளில் ஆட்கடத்தல் செய்வோரிடம் பணம் கொடுத்து தமது பிரயாணத்தை ஆரம்பிக்கிறார்கள்.

    இப்படி ஆரம்பிப்பவர்கள் பலர் படகுகள் கடலில் கவிழ்ந்து விடுவதால் பரிதாபகரமாக தமது பிரயாணத்தை முடிக்காமல் கடலிலேயே தமது வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள் .

    இத்தகைய வகையில் கடந்த சில மாதங்களில் 2000 பேர் கடலில் உயிர் நீத்ததாக ஒரு அறிக்கை கூறுகிறது.

    இத்தகைய ஆபத்தைக் கடந்து பெரும்பான்மையான திரளில் இத்தாலியக் கரையை வந்தடையும், இவர்கள் ஜரோப்பிய நாடுகளுக்கூடாக இடம் பெயர்கிறார்கள்.

    இப்படி இடம் பெயர்பவர்கள் தமது நிலைப்பாட்டிற்கேற்ப தாம் வாழ்வதற்கு ஒரு ஜரோப்பிய நாட்டை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.

    ஆனால் பலரோ அனைத்து நாடுகளையும் கடந்து தமது இலக்காக இங்கிலாந்தை கொள்கிறார்கள்.

    பிரான்ஸு நாட்டை அடைந்து இங்கிலாந்துக்குச் செல்லும் கரையான “கலே ” எனும் இடத்தை வந்தடைந்து இங்கிலாந்துக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அங்கே தடைச்சுவர்களும், எல்லைகளும் போடப்பட்டு காவலுக்கு பிரெஞ்சு காவல்துறை படை, குடிவரவு அதிகாரிகள் போன்றவர்களால் அவர்கள் தடை செய்யப்படுகிறார்கள்.

    ஆனால் தமது இலக்கான இங்கிலாந்து நாட்டை அடைவதே இலட்சியமாகக் கொண்டுள்ள இவர்கள் அக்கரையிலேயே தங்கி விடுகிறார்கள்.

    இப்படியானவர்கள் சுமார் 5000 பேர் வரையில் தங்கியிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

    ஆனால் சமீபத்தில் இப்பிரச்சனை ஒரு புது வடிவத்தை எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கும் , பிரான்சுக்கும் இடையில் ஆங்கிலக் கால்வாய் என அழைக்கப்படும் சிறிய கடற் பரப்புக்கு அடியினூடாக ” சனல் டனல் ” என்றழைக்கப்படும் இரெயில் சுரங்கப்பாதை உள்ளதை பலரும் அறிந்திருப்பீர்கள்.

    இந்த ரயில் பயணிக்கும் சுரங்கப் பாதையினூடாக ஊடுருவி இங்கிலாந்துக்குள் புகுவதற்கு தினமும் ஒரு 200 பேர் முயற்சிக்கிறார்கள் .

    asak

    அப்படி முயற்சிப்பவர்கள் இரெயில் பாதையில் தமது உயிர்களைப் பலியிடாதிருப்பதற்காக இந்த ரயில் பாதையை மூடி பல பாதுகாப்பு நடவடிக்கைகளில் இங்கிலாந்து எல்லைக் காவல் படையினர் ஈடுபடுகிறார்கள்.

    asak1

    அதனால் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரி வண்டிகளின் பயணம் தடைப்பட்டு அவைகள் சாரி, சாரியாக மோட்டார் வே என்றழைக்கப்படும் நெடுஞ்சாலைகளில் இந்த சுரங்க ரெயில்பாதையை அண்மித்த பகுதிகளில் நிறுத்தப்படுகிறது.

    இத்தகைய நடவடிக்கை அப்பகுதிகளில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது.

    சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் தமது பிரயாணத்தை பாதியிலே நிறுத்தி தாமதப்படுத்துவதனால் அக்கம்பெனிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது.

    அது மட்டுமின்றி “அகதிகள்” எனும் போர்வையில் சில பயங்கரவாதிகள் நாட்டிற்குள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்காக ஊடுருவலாம் எனும் அச்சம் ஒரு பகுதி மக்களிடமிருந்தும், சில அரசியல்வாதிகளிடமிருந்தும் கிளம்புகிறது..

    இங்கிலாந்து இப்போது ஒரு இக்கட்டான சூழலில் உள்ளது. சமீபத்தில் மீண்டும் பிரதமர் பதவியேற்ற டேவிட் கமரன் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ஜரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா அங்கம் வகிப்பதா ? இல்லையா ? எனும் சர்வஜன வாக்கெடுப்பு 2017ம் ஆண்டுக்கு முன்னால் நடத்தப்பட வேண்டும்.

    அதற்கு முன்னதாக ஜரோப்பிய ஒன்றியத்தில் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்தால் ஒழிய ஜரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா அங்கம் வகிப்பது என்பது சந்தேகத்திற்கிடமானதே !

    இம்மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக மற்றைய ஜரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் பலரை சமீபத்தில் அடுக்கடுக்காகச் சந்தித்து தமது நிலைப்பாட்டை எடுத்து விளக்கினார் திரு டேவிட் கமரன்.

    ஆனால் அவரின் இம்முயற்சிகளுக்கு இடையூறாக இந்த “குடிவரவு” பிரச்சனை கிளம்பியுள்ளது

    ஜரோப்பிய ஒன்றியத்தில் ஒன்றான பிரான்சு நாடு இவ்வகதிகளின் வருகையைக் கட்டுப்படுத்தாது தமது நாட்டில் தங்காமல் இங்கிலாந்துக்குள் நுழைவதற்கு ஏதுவாக அவர்களை இங்கிலாந்து கரையோடு தங்க வைத்திருக்கிறார்கள்.

    ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் இதைத் தமது வாதத்திற்கு துணையாகக் கொள்கிறார்கள்.

    ஆயிரக்கணக்கில் இங்கிலாந்துக்குள் நுழைய முயற்சிக்கும் இவ்வகதிகள் இங்கிலாந்து வருவதற்குக் காரணம் இங்கு அகதிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் மற்றைய ஜரோப்பிய நாடுகளை விட அதிகமானது என்பது பல இங்கிலாந்து மக்களின் அபிப்பிராயம்.

    ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதால் தான் இத்தகைய வெளிநாட்டோரின் வருகை இங்கு அதிகரிக்கிறது என்பது மற்றொரு வாதம்.

    லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் இங்கிலாந்து தலையீடு செய்ததால் தான் இன்று பல அகதிகள் குறிப்பாக லிபியா அகதிகள் இங்கிலாந்தை நோக்கி வருகிறார்கள் என்று இங்கிலாந்து வெளிநாட்டுக் கொள்கையைக் காரணம் காட்டுகிறார்கள் ஒரு பகுதியினர்.

    இப்பிரச்சனை எடுத்திருக்கும் முக்கிய பங்கினால் அவசரமாக பிரான்சு நாட்டின் எல்லைப் பாதுகாப்பிற்காக இங்கிலாந்து பல மில்லியன் நிதி அளித்துள்ளது.

    “அகதி” என்பது ஒரு அந்தஸ்து அல்லது அவதியான ஒரு வாழ்நிலை. எதிர்காலம் என்னவென்று புரியாத நிலையில் கடந்தகால பந்தங்களை உதறி விட்டு அந்நியநாட்டின் உதவும் மனப்பான்மையை நம்பி உயிரைப் பணயம் வைத்து எடுக்கும் ஒரு தீர்மானம்.

    ஆனால் அதே சமயம் அடுத்த பக்க வாதத்தைப் பார்த்தால் இங்கிலாந்து போன்ற ஒரு சிறிய தீவினுள் எண்ணிக்கையற்றோரை ஏற்றுக் கொள்ள முடியுமா?

    தன்னுடைய பிரஜைகளின் அடிப்படை தேவைகளையே நிறைவேற்ற அல்லாடிக் கொண்டிருக்கும் இங்கிலாந்து எப்படி லிபியா போன்ற நாடுகளில் இருந்து முற்றாக இடம்பெயரும் அத்தனை பேரையும் தம்முள் உள்வாங்கிக் கொள்ள முடியுமா?

    இத்தகைய பெருமளவிலான வெளிநாட்டவரின் வருகை இனவிரோத சக்திகளின் கரங்களை வலுப்படுத்தி புலம்பெயர்ந்து வாழும் பலரின் வாழ்வில் பல நெருக்கடிகளை ஏற்படுத்துமா? எனும் கேள்வியும் எழுகிறது.

    தம்முடைய நாடுகளில் இருந்து பெருமளவில் இடம்பெயர்கிறார்கள் என்றால் அந்நாடுகளில் இருக்கும் நிலைமைகளைச் சீர் செய்வதற்கு இங்கிலாந்து, மற்றும் ஜரோப்பிய நாடுகள் முன்வரவேண்டும் எனும் கருத்தும் முன்னெடுக்கப்படுகிறது.

    எது எப்படி இருப்பினும் இது பலரின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஒரு பாரதூரமான நிகழ்வாகும்.

    இந்நிலையை இங்கிலாந்து அரசியல்வாதிகள் எப்படி கையாளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(160)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    இங்கிலாந்து நாட்டின் சிறப்பம்சங்களில் ஒன்று அந்நாட்டின் கலாச்சார பெருமைகளுக்கு அந்நாட்டின் மக்கள் கொடுக்கும் முக்கியத்துவமே ஆகும்.

    ஒரு நாட்டின் பெருமையை அதன் கலாச்சார மகிமைகளை உணர்ந்து கொண்டால்தான் அந்நாட்டைப் பெருமைப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை மக்கள் பெறுகிறார்கள்.

    அப்படிப்பட்ட ஒரு மனப்பக்குவத்தைப் பெற்ற ஒரு சமுதாயமே தனது நாட்டின் புனிதத்தன்மையைப் போற்றும் தகமையை அடைகிறது.

    தமது நாட்டின் காலாச்சாரப் பெருமைகளை காப்பாற்றுவது மட்டுமல்ல வரும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு அப்பெருமைகளை விளக்கி கூறி தமது நாட்டின் பெயரைப் பெருமைப்படுத்துவதிலும் இங்கிலாந்து நாட்டினர் முன் நிற்கிறார்கள்.

    எதைப்பற்றி மடல் வரைய இத்தனை முன் விளக்கம் என்று எண்ணுகிறீர்களா ?

    சென்ற வார விடுமுறையில் நானும் எனது மனைவியும் எனது மகனும் இங்கிலாந்து நாட்டின் தொன்மை பொருந்திய தேவாலயமான “கண்டபரி கதீட்ரல்” ( Canterbury Cathedral ) தேவாலயத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தோம்.

    கண்டபரி எனும் கெண்ட் பகுதியச் சேர்ந்த அந்நகரமே மிகவும் பரபரப்பாக இருந்தது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆயினும் அந்நகரமே மக்கள் கூட்டத்தினால் அலைமோதிக் கொண்டிருந்தது. சாப்பாட்டு கடைகளெல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அந்நாளுக்கு மெருகூட்டும் வகையில் ஆதவனும் தனது உஷ்ணக்கதிர்களால் வழமையாக குளிரினால் வாடும் மக்களை உஷார் படுத்திக் கொண்டிருந்தான். பல வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அக்காலாச்சரப் பழமையுடன் இணைந்த நகரைப் பார்வையிடுவதற்காக கைகளில் தமது ஸ்மார்ட் தொலைபேசியின் கேமராக்களை வைத்து கிளிக் செய்வதும், தம்மைத் தாமே செல்பிஃ எடுத்துக் கொள்வதுமாக இருந்தார்கள்.

    இந்நாட்களில் இங்கிலாந்துக்கு வரும் உல்லாசப் பயணிகளில் அதிகமாக சீன தேசத்து உல்லாசப் பயணிகளாகக் காணப்படுவது சீனாவின் பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டுவதாக அமைகிறது. இங்கிலாந்தின் பழம்பெரும் உடைகள் விற்பனை செய்யும் அங்காடியாக “டெபனாம்ஸ் ( Debenams) எனும் நிலையம் திகழ்கிறது. இந்த கண்டபரி எனும் இடத்திலுள்ள இவ்வங்காடியின் சிறப்பு என்னவென்றால் அதை அப்படியே பழமைப் பாணியில் இன்னமும் பாதுகாத்து வருவதே .

         சக்திதாசன்1     சக்திதாசன்8

    இப்படியாக அந்நகரின் பல தெருக்களின் வழியாக நாம் நடந்து அத்தேவாலயத்தை வந்தடைந்தோம். ஞாயிற்றுக்கிழமையாதலால் அத்தேவாலயத்தினுள் இலவசமாக அனுமதிக்கப் பட்டோம். அங்கு வழிபட வந்த கிறிஸ்துவர்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தார்கள். அத்தேவாலயம் அமைந்திருந்த இடமே உள்ளத்தைக் குளிரவைக்கும் வகையில் அமைந்திருந்தது. பச்சைப் பசலேன்ற புற்தரை ஒருபுறமிருக்க, அத்தேவாலாய மணிகளின் ஒருங்கிணைந்த ஓசை உள்ளத்தின் ஆன்மீக உணர்வுகளைத் தாலாட்டிக் கொண்டிருந்தது.

                                சக்திதாசன்2          சக்திதாசன்3

    உள்ளே நுழைந்தோம் அப்பப்பா ! அக்கட்டிடத்தின் அழகு எம்மைப் பிரமிக்க வைத்தது. மிகவும் நீண்ட தேவலயத்தினுள் உட்கார்ந்து வழிபட இருக்கைகள் நீண்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்ட விதத்தில் நிறுவப்பட்டிருந்தன. அண்ணாந்து பார்க்கும் போது அக்கட்டிடத்தின் கூரையின் உட்புறத்தில் அழகிய வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டிருந்தன. அத்தேவாலயக் கட்டிடத்தைத் தாங்கி நிற்கும் தூண்களின் அழகிய வேலைப்பாடு கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்திருந்தன.

         சக்திதாசன்4     சக்திதாசன்6

    கிறிஸ்துவிக்குப் பின் 590ம் ஆண்டிலிருந்து இன்றுவரை அத்தேவாலயத்தின் பிரதம மதகுரு, அதாவது இங்கிலாந்தின் ஆஸ்தான மதகுருவாக மதிக்கபடும் “ஆர்ச்பிஷப் ஆப் காண்டபரி ( Archbishop of Canterbury)“ ஸ்தானத்தை வகித்த அனைவரது பெயரும் ஆண்டுப் பிரகாரம் வரிசையாக அங்கு எழுதப்பட்டிருந்தது. அதைத் தவிர மரணமடைந்த சில முக்கியமான பிரமுகர்களின் சமாதியும் அமைக்கப்பட்டு அதன்மேல் ஒரு உருவம் படுத்திருப்பது போன்ற ஒரு சிலை அமைக்கப்பட்டிருந்தது.

         சக்திதாசன்5     சக்திதாசன்7

    இத்தகைய சரித்திரப் பிரசித்தி பெற்ற தேலயத்தின் பின்னனிதான் என்ன ?

    இங்கிலாந்தின் கிறிஸ்துவத்தின் ஆரம்பம் எத்தனையாம் ஆண்டு என்பது சரியாகத் தெரியாமலிருந்தாலும் இரண்டாவது நூற்றாண்டிலே இங்கிலாந்தில் கிறிஸ்துவப் பின்னணி இருந்ததாக நம்பப்படுகிறது. அப்போதைய கிறிஸ்தவர்களுக்கு ரோமானிய பின்னணியும், செல்டிக் எனப்படுவோரின் பின்னணியும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவ்விரண்டு சமுதாயத்தினருக்குமிடையில் முரண்பாடு இருந்ததாகவும் ரோமானியப் பின்னணி கொண்டோர்கள் கிறிஸ்துவுக்குப்பின்னர் 410ம் ஆண்டளவில் இங்கிலாந்தை விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    அப்போதைய காலகட்டத்தில் ஆங்கிலோ சாக்ஸன்ஸ் எனப்படும் கிறிஸ்தவர்கள் முறையற்ற சீரற்ற வாழ்க்கையை மேற்கொண்டு வந்ததால், அப்போதைய போப்பாண்டவராக இருந்த கிரேகரி என்பவர் அகஸ்டீன் எனும் மதகுருவையும் அவரோடு சார்ந்த 40 சிஷ்யர்களையும் கெண்ட் நகரத்துக்கு அவர்களின் வாழ்வை முறையானதாக்க அனுப்பி வைத்தார். அவரை அப்போதைய கெண்ட் நகர அரசரான எதில்பேர்ட் எதிர்கொண்டு அழைத்து கண்டபரி எனும் இடத்தில் தேவாலயத்தை அமைக்க ஏற்பாடு செய்தார். அதன் பின்னால் அகஸ்டீன் இங்கிலாந்தின் முதல் ஆர்ச்பிஷப் ஆஃப் காகண்டபரியாக நியமிக்கப்பட்டார் என்பதுவே சுருக்கமான இத்தேவாலயத்தின் வரலாறு.

    இத்தனை வருடங்கள் கடந்தும் இந்நாட்டு மக்கள் தமது நாட்டின் காலாச்சார அடையாளமான இத்தேவாலயத்தை பராமரிப்பது மட்டுமல்ல தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் அனைத்தும் எவ்வித அரசியல் பாகுபாடும் காட்டாது இதற்கான நிதியை ஒதுக்கி வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. எமக்குப் புகலிடம் கொடுத்து நாம் எமது வாழ்க்கையை ஸ்திரப்படுத்த ஓர் சந்தர்ப்பத்தை அளித்த இந்நாட்டின் காலாச்சார அடையாளங்களில் ஒன்றைப் பார்க்க முடிந்தது எனும் நிறைவான மனதுடன் கடந்த வார விடுமுறை எமைக் கடந்து சென்றது.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(159)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடனும் துயரம் நிறைந்த மனதுடனும் உங்களிடம் இம்மடல் மூலம் மனம் திறக்கிறேன்.

    இருவாரங்களுக்கு முன்னால் தமிழ்த் திரையுலகின் இசைவேந்தனாக திகழ்ந்த மெல்லிசை மன்னன் எம்.எஸ்.வி அவர்களை இறைவன் தன்னுடன் அழைத்துக் கொண்ட நிகழ்வின் போது என் உள்ளத்து உணர்ச்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

    இதோ இருவாரங்களில் மீண்டும் ஒரு மாமனிதனின் மறைவின் தாக்கங்கள் கொடுத்த உணர்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் வகையில் மீண்டுமொரு நிகழ்வு.

    இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்ட துயரமான செய்தியைத் தாங்கி வந்தது கடந்த செவ்வாய்க்கிழமை.

    இதற்கு முன்னால் இந்திய தேசம் எத்தனையோ ஜனாதிபதிகளைச் சந்தித்துள்ளது. அவர்களும் திறமையில் ஒன்று சளைத்தவர்களல்ல.

    அப்படியாயின் டாக்டர் அப்துல் கலாம் அவர்களில் இருந்து எப்படி வேறுபட்டவர் ?

    மக்களின் ஜனாதிபதி எனும் மாபெரும் மதிப்பை, கெளரவத்தை அவர் நேசித்த மக்களிடமிருந்தே பெற்றுக்கொண்ட ஒரு அரசியல் கலக்காத உன்னதமான “மனிதர்” என்பதே அவருடைய தனிப்பெரும் விசேடத் திறமையாகும்.

    தான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் என்பதை அவர் தான் வாழ்வில் எந்த நிலையை அடைந்த போதும் மறக்கவில்லை.

    தான் தன்னுடைய மதத்தை மதித்த அதே சமயம் தன்னை மதத் தீவிரவாதி எனும் முத்திரை குத்தி என்றுமே அடையாளைப் படுத்தியவரில்லை.

    அதற்கு மேலாக மற்றைய மதங்களின் சிறப்பம்சங்களை அறிந்து அவற்றையும் மதித்தார் என்பதுவே அவரது மனிதத்தன்மை மதங்களைக் கடந்த ஒரு மகத்துவம் வாய்ந்தது என்பதற்கு உதாரணமாகிறது.

    ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி அதன் முதுகெலும்பாகிய மாணவ சமுதாயம் தம்முடைய நாட்டின் முன்னேற்றத்தில் எத்தனை தூரம் ஆர்வம் கொண்டிருக்கிறது என்பதிலேயே தங்கியுள்ளது என்பதில் முழு நம்பிக்கை வைத்திருந்தார்.

    தாம் எத்தனை வறுமை நிலையிலிருந்தாலும் தமது கனவுகளை, லட்சியங்களை இளைஞர்கள் தொலைத்து விடக்கூடாது என்பதில் அவர் முனைப்பாக இருந்தார்.

    இந்தியா 2020இல் வல்லரசாக மாறும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்த அவர், அந்நம்பிக்கை கொண்டதோடு மட்டுமல்லாமல் அந்நம்பிக்கையை நிஜமாக்க இளைய சமுதாயத்தை எழுச்சி மிக்க ஒரு சமுதாயமாக மாற்ற தன்னாலான முழு முயற்சிகளையும் எடுத்து பாரத தேசத்தின் பட்டி தொட்டியெல்லாம் சென்று இளைஞர்களின் உணர்வைச் சரியான பாதையில் கூர்மைப்படுத்தினார்.

    இத்தனைக்கும் மேலாக அவர் தமிழ் மீதும் இலக்கியத்தின் மீதும் கொண்டிருந்த காதல் அளப்பரியது.

    ஒரு மனிதன் வாழ்வில் எத்தனை பெரிய சிகரத்தைத் தொட்டாலும் தான் ஒரு மனிதன் என்பதை எப்போதும் மறந்து விடக்கூடாது என்பதை வாழ்ந்து காட்டிய அவரது எளிமை போற்றத்தக்கது.

    தனது 83வது வயதிலும் தான் கொண்ட நம்பிக்கையை நிஜமாக்க மாணவ சமுதாயத்தின் முன்னே உரையாற்றிக் கொண்டிருந்த போது உயிர்நீத்த அவருக்கு இத்தகைய ஒரு மகத்தான இறுதி நேரத்தை அளித்து இறைவன் தான் அவரது மகத்துவத்தை இரட்சித்தேன் என்று கூறிவிட்டான்.

    இந்த அரும் பெரும் மனிதன் வாழ்ந்த காலத்தில் அவன் உதித்த தமிழகத்தின் மண்ணில் எனது கால்களும் பதிந்தது என்பதே எனது வாழ்வின் பாக்கியமென்பேன்.

    இதோ அம்மாமனிதனுக்கு இச்சிறியேனின் அஞ்சலிக் கவிதை …

    புண்ணியர் பூமி என
    போற்றிப் பாடிடும்
    தென்கோடிக் கரையதுவாம்
    ராமேஸ்வரம் தனிலே
    விழுந்த ஒரு விதை
    வித்தாகிச் செடியாகி
    பொன்னெழில் பொங்கிடும்
    ஆலமரமாக ஓங்கியெழுந்ததுவே !

    ஐயா ! அப்துல் கலாம்
    ஐக்கியமாகியிருக்கலாம் நீ
    ஆண்டவனுடன்
    ஆனால்
    அழியாமல் பதிந்து விட்டாய்
    அகிலத்தோர் நெஞ்சங்களில்

    சிந்தி விளையாடும் சிகையுடன்
    சிரிப்பினை அள்ளி வீசிடும்
    சிங்கார வதனத்துடன்
    சிந்தனைச் சிற்பியாய் நீ
    வலம் வந்தனையே !

    தூக்கத்தில் காணும்
    கனவல்ல கனவு
    இளைஞனே ! உன்னைத்
    தூங்க விடாமல்
    வைத்திருக்கும் இலட்சியக்
    கனவுகளை வளர்த்திடு
    அவற்றை நோக்கி
    அயராமல் உழைத்திடு
    எனும் உனது ஊக்கமிகு
    வார்த்தைகள் எத்தனை
    இளந்தலைமுறையினரை
    எழுச்சி கொள்ள வைத்தது

    இந்திய தேசத்தினை
    உலகின் விஞ்ஞான வரைபடத்தில்
    வரைந்து வைத்த வித்தகனே !
    விரைந்து நீ சென்றாயே !
    வேகுதய்யா எம் மனது

    கல்வியின் மகத்துவத்தை
    பட்டி தொட்டியெலாம்
    எடுத்துச் சென்று
    வள்ளுவன் வகுத்த வகை
    வாழ்ந்து காட்டிய
    வாழ்க்கைச் சிற்பி ஐயா நீ !

    மாணவ சமுதாயமே !
    ஒரு நாட்டின் முதுகெலும்பென
    ஓயாமல் ஓங்கி ஒலித்தது
    உந்தன் ஓங்காரமான குரல்

    ஏழ்மையில் அவதரித்து
    கல்வியெனும் ஏணியில் ஏறி
    விஞ்ஞானத்தின் உச்சியை
    அஞ்சாமல் தொட்டவன் நீ !

    எளிமையின் மறு உருவமாய்
    மனிதாபிமானத்தின் மொத்த வடிவாய்
    பண்பெனும் மகத்துவத்தின்
    மாபெரும் உதாரணம் நீ !

    அன்பு நிறைந்தவனே ஐயா
    அப்துல் கலாம்
    நீ காலமாயிருக்கலாம்
    ஆனால் உன் தாய்த்திருநாட்டின்
    மாற்றத்தைப் பற்றி
    நீ கண்ட கனவுகள்
    கால காலமாய் கலாம்
    எனும் ஓசையோடு பாரத தேசத்து
    இளைய சமுதாயம் மட்டுமின்றி
    பாரெங்கும் வாழும் தமிழர்களின்
    இதயங்களில் வாழ்ந்து கொண்டுதானிருக்கும்

    ஆண்டவனுக்கு உந்தன்
    ஆலோசனை தேவைப்பட்டது போலும்
    அழைத்துக் கொண்டான் உன்னை
    அவசரமாக . . .
    அங்கிருந்து கொண்டே
    உந்தன் மணிச் சிரிப்பின் மூலம்
    மனித நேயத்தை மேலும்
    வளர்த்தெடுக்க ஊக்குவிப்பாய்

    ஐயா உந்தன்
    கடைசி மணித்துளி மூச்சு
    உள்ளவரை
    எந்த மாணவர் சமுதாயத்திற்காக
    உழைத்தாயோ
    அந்த மாணவ சமுதாயத்தின்
    முன்றலில் உந்தன் இறுதி மூச்சி
    விடைபெற்றதய்யா !

    ஆண்டவன் உன்னை
    அந்தரிக்க விடவில்லை
    நோயில் அழுந்தி நீயும்
    கட்டிலில் விழவில்லை
    உழைத்துக் கொண்டே
    உயிர் விட்டாய்
    உயர்த்தி விட்டாய்
    உன் இலட்சியத்தை

    உன் ஆத்ம சாந்திக்காய்
    லட்சோப லட்ச தமிழர்களோடு
    இணைந்து நானும் பிரார்த்திக்கின்றேன்

    அஞ்சலிகளுடன்
    சக்தி சக்திதாசன்

    மீண்டும் அடுத்த மடலில்
    துயரத்துடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(158)

    –சக்தி சக்திதாசன்.

     

    Teach English British Council Sri Lanka

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    வாரங்கள் ஒவ்வொன்றாய் ஓடி மறையுது. காலங்கள் காற்றாய் கனவேகத்தில் பறக்குது. ஜனனங்கள் ஒருபுறம், மரணங்கள் ஒருபுறமென இயற்கை தன் செயற்பாடுகளை கனகச்சிதமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

    வாழ்க்கை நிலைத்திடும் எனும் நினைப்பில் மனிதன் தனது தேவைகளுக்கான தேடல்களில் தன் மகிழ்ச்சியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறான்.

    அன்னையின் பாதுகாப்புக் கவசமான கருப்பையிலிருந்து இந்த பூமாதவின் மடியில் விழும்போது வெற்றுக் காகிதம் போல எமது மனங்கள் பால் போல வெளுத்து இருக்கிறது.

    கூட்டிலிருந்து குஞ்சு இரை தேடைப் போகும் முன்னால் அதற்குத் தேவையான பாதுகாப்பு யுத்திகளை தாய்ப் பறவையும், தந்தைப் பறவையும் கற்றுக் கொடுப்பது போல எமது பெற்றோர் நாம் எமது பாடசாலை வாழ்க்கையைத் தொடங்கும் வரை தம்மாலான வகையில் எமக்கு எவை முக்கியமாகத் தேவைப்படுகிறதோ அதைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

    அதன் பின்னால் ஆசிரியர்கள் எமை இந்த உலகிற்குத் தேவையான வகையில் செதுக்கி எடுக்கிறார்கள். ஆனால் எமது செதுக்கல்களுக்கு முற்று முழுதாக ஆசிரியர்கள்தான் காரணமா?

    எமது இல்லங்களில் நாம் வாழும் சூழல்கள் நாம் எவ்வகையில் எதிர்காலத்தில் உருவாக்கப் படப் போகிறோம் என்பது முக்கியமான பங்கை வகிப்பதை மறுக்க முடியாது.

    முன்னைய காலங்களில் எமது தாய்நாடுகளில் பெற்றோரின் பங்களிப்பு மிகவும் நேர்மறையான, மனித தர்மத்திற்கு உட்பட்ட வகையில் எமை வளர்த்தெடுக்க உதவியது எனும் கருத்து நிலவியது.

    புலம்பெயர்ந்த எம் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகள் வித்தியாசமானவை. ஒரு புதிய நாட்டில் தம்மைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தாமே வேறொரு வகையில் செதுக்கப்படவேண்டியவரானார்கள்.

    அதே சமயம் குடும்ப சமேதரராய் புலம்பெயர்ந்தவர்கள் தமது குழந்தைகளுக்கு வழி காட்ட வேண்டியவர்களாகவும் இருந்தார்கள்.

    விளைவு !

    புலம் பெயர்ந்த ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாம் தமைச் சார்ந்தவர்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கியே புலம் பெயர்ந்தார்கள்.

    இது இயற்கையே! ஒரு புது இடத்திற்கு நாம் செல்லும் போது எமது வாழ்க்கையின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேட விளைவது ஒரு இயற்கையான செய்கையே!

    தாம் தமது வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொண்ட பின்பும் அதே சமூகத்தினுடனேயே தம்மைப் பிணைத்து வைத்திருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். அதனால் பலர் தாம் புலம் பெயர்ந்து வாழும் நாட்டின் மொழியை, கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொள்ளவில்லை.

    எங்கே தாம் தமது கலாச்சார அடையாளங்களை, மொழியின் தனித்தன்மையை இழந்து விடுவோமோ எனும் ஆதங்கத்தினால் அவற்றை இறுகப் பற்றிக் கொள்வதான எண்ணத்தில் அடுத்தவற்றை அறவே ஒதுக்கினார்கள்…

    இதன் தாக்கம் உடனடியாக அவர்களுக்குத் தென்படப்போவதில்லை. தாக்கம் அவர்களின் அடுத்த தலைமுறையைத்தான் தாக்கப் போகிறது, தாக்குக்கிறது.

    எப்படி எனும் கேள்வி எழுகிறது இல்லையா ?

    அவ்வடுத்த தலைமுறை பல சந்தர்ப்பங்களில் தாம் யார்? எனும் குழப்பத்திற்குள்ளாகிறார்கள். இரு தோணியில் கால்வைத்துப் பயணம் செய்யும் வாழ்க்கை எனைப் போன்ற முதலாவது புலம்பெயர் தலைமுறையுடன் முடியாது அடுத்த தலைமுறைக்கும் பரவுகிறது.

    பல்கலாச்சார வாழ்வு முறையைக் கொண்ட இங்கிலாந்து தேசம் எனும் இப்பரந்த பூமியில் நாம் எமது சமூகம் எனும் குறுகிய வலயத்துக்குள் வாழ்ந்து விட்டு பாடசாலையிலும் வேலைத்தளங்களிலும் மற்றைய சமூகத்தினருடன் போட்டி போட வேண்டிய ஒரு இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

    சிறுவயது முதலே அனைத்து சமூகத்தினருடனும் கலந்து வாழப்ப்பழகும் ஒருவருக்கும், குறுகிய வலயத்துக்குள் தமது பிள்ளைப்பராயத்தை முடித்து அதன் பின்னே இப்பல்சமூக வலைப்பின்னலுக்கிடையில் தள்ளப்படும் ஒருவருக்கும் இடையிலுள்ள வாழ்வு மீதான கண்ணோட்டத்தின் வித்தியாசம் பாரியது.

    நாம் வாழும் இந்நாட்டின் சமூகப் பின்னனியை அறிந்து கொள்வதும், இந்நாட்டின் சரித்திர வரலாறுகளை அறிந்து கொள்வதும் எமது அடுத்த தலைமுறைக்கல்ல எமக்கே அத்தியாவசியமானது.

    அவற்றின் தெள்ளிய அறிவின் மூலமே நாமும் எமது அடுத்த தலைமுறையும் இந்நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் எமை இணைத்துக் கொள்ளலாம்.

    அரசியல் நீரோட்டத்தில் ஜனநாயக வழிமுறைகளின் மூலம் எம்மவர்கள் செய்யும் பங்களிப்புகளே வருங்காலச் சந்ததி இந்நாட்டில் ஒரு ஸ்திரமான வாழ்வை வகுத்துக் கொள்வதற்கு உகந்த செயற்பாடாகும். தமிழ், தமிழர் எனும் எமது அடையாளம் என்றுமே அழிக்கப்படமுடியாதது. எமது இனத்தின் திறமையை, எமது சமூகத்தின் ஆற்றலை, எமது மொழியின் ஆளுமையை அடுத்த இனத்தவரும் புரிந்து கொள்ள வேண்டுமானல் நாமும் இச்சமூகத்துடன் கலந்து செயற்படுவதே புத்திசாலித்தனமான செயலாகும்.

    அன்பினிய நெஞ்சங்களே! எனது இந்தக் கருத்து எமது கலாச்சாரத்தை, எமது மொழியை, எமது அடையாளத்தை இழந்து விட வேண்டும் என்று யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

    எமது மொழியின் மீது , எமது கலாச்சாரத்தின் மீது நான் கொண்ட காதல் அளப்பரியது. ஆனால், அதற்காக மற்றைய மொழிகள , மற்றைய கலாச்சாரங்களை நாம் முற்றாக ஒதுக்க வேண்டும் என்று எண்ணுவதே தவறானது.

    மற்றைய மொழிகளை அறிவதன் மூலம் எமது குழந்தைகள் தவறான பாதைக்கு, தவறான வழிக்கு இட்டுச் செல்லப்பட்டு விடுவார்கள் என்று எண்ணுதல் தவறாகும்.

    அப்படியாயின் எமது தாய்நாடுகளிலே வாழும் எவருமே தவறான வழியைப் பின்பற்றக் கூடாதே! அப்படி யாருமே இல்லையா?

    என் இனிய வாசக உள்ளங்களே! அனைத்தையும் அறிவோம், அவற்றை அறிந்ததினால் எமது மொழி உயர்ந்ததென மகிழ்வோம். எமது தமிழ் இனம் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும், அனைவரோடும் ஒத்துப் போகும், ஒரு திறமை மிக்க இனம் என அனைவரும் ஏற்று அதன் மூலம் எமது தமிழன்னைக்குப் புகழ் சேர்ப்போம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    படம் உதவி: English language teaching, teacher training and curriculum development, British Council – http://www.britishcouncil.lk/teach

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(157)

    –சக்தி சக்திதாசன்.

    M. S. Viswanathan

    அன்பினியவர்களே !

    ஒருவாரம் ஓடி விட்டது. அந்த ஒருவாரக் காலத்துக்குள் எத்தனை நிகழ்வுகள்!!!! காலத்தால் அழியாத சாதனைகள் படைக்கப்பட்டதும், அச்சாதனைகளின் படைப்பாளிகள் பறிக்கப்பட்டதும் என பலவகையான நிகழ்வுகள்.

    பிறந்த நாம் எல்லோரும் ஒருநாள் மடிய வேண்டுமென்பது காலத்தின் நியதி. பிறந்தோர் அனைவருமே ஏதாவது ஒருவகையில் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் எனும் இலட்சிய நோக்கிலேயே வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.

    யதார்த்த வாழ்க்கையில் நாம் அழைத்துச் செல்லப்படும் பல்வேறு நெளிவுகளும் சுளிவுகளும் நாம் போக எண்ணிய இடத்தை விட்டு வேறு இடத்திற்கு எம்மை அழைத்துச் சென்று விடுகிறது.

    அப்படியானால் எமது வாழ்க்கை தோற்று விட்டது என்று அர்த்தமா ? இல்லவே இல்லை… நாம் எதிர்பார்த்ததை அடையவில்லையானால் வாழ்க்கை தோற்றது என்று கொள்வதுதான் தோல்வி.

    அடைந்த வாழ்க்கையின் அதி உச்ச நிலையை அடைந்து மகிழ்ச்சியாக வாழ்வதுதான் உண்மையான மனித வாழ்வின் வெற்றி.

    எதற்காக இந்தத் தத்துவ வரிகள் என்று நீங்கள் எண்ணலாம்.

    எம்மிடையே மெல்லிசைத் தென்றலாக எமையெல்லாம் தாலாட்டிக் கொண்டிருந்த “மெல்லிசை மன்னர்” என்று அனைவராலும் கொண்டாடப்பட்ட இசைச்சக்கரவர்த்தியாகக் கொடி கட்டிப் பறந்த எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயா அவர்களைக் கடந்த வாரம் தன்னுள் ஐக்கியப்படுத்தி விட்ட நிகழ்வு அனைத்து நெஞ்சங்களையும் துயரத்தில் ஆழ்த்தி விட்டது.

    மிகச்சிறிய வயதினிலேயே தந்தையைப் பறிகொடுத்து தாயின் பராமரிப்பில் வளர்ந்து பள்ளிப் பக்கமே எட்டிப் பார்க்காமல் இன்று தமிழ்த்திரைவானில் ஒரு இசைச்சக்கரவர்த்தியாக கோலோச்சிய எம்.எஸ்.வி ஐயா அவர்களின் வாழ்க்கை இளைய தலைமுறை அனைத்தினாலும் முன்னுதாரணமாகக் கொள்ளப்படவேண்டும்..

    ஒரு அற்புதமான இசையமைப்பாளர் என்பதை விட ஒரு அதிஉன்னதமான மனிதர் என்பதுவே அவரை அறிந்த ஒவ்வொருவரும் கூறும் ஒரே கருத்து.

    வாழ்க்கை தம்மீது போட்ட சவால்களையெல்லாம் எதிர்த்து நின்று தான் எடுத்துக் கொண்ட துறையின் அதிஉயர் நிலையை அடைந்த அவரின் ஆற்றல் அளப்பரியது.

    அவரை நான் என் வாழ்க்கையில் சந்தித்தது இருமுறைகள்.

    2011ம் ஆண்டு என எண்ணுகிறேன்… எனது சென்னை விஜயத்தின் போது எனது அருமை நண்பர் காந்தி கண்ணதாசனுடன் பேசிக்கொண்டிருந்தேன். எனது மானசீகக் குருவான கவியரசரைப் பற்றிய வியப்பானச் செய்திகளை அறியும் ஆர்வம் எனக்குண்டு.

    அப்போது அவருக்கும் எம்.எஸ்.வி ஐயாவிற்கும் இடையே இருந்த அதிஉன்னத நட்பைப் பற்றிய பேச்சு எழுந்தது.

    எம்.எஸ்.வியுடன் பேசினால் எனக்கு இன்னும் அதிகமான ஆர்வமிக்க செய்திகள் கிடைக்கும் என்று கூறி உடனே நண்பர் காந்தி கண்ணதாசன் அவருக்கு ஃபோன் செய்தார்.

    அன்று மாலையே என்னைச் சந்திப்பதாக கூறிய எம்.எஸ்.வி தான் அதன் பின்பு வெளியே செல்ல இருப்பதால் தவறாமல் 5மணிக்கு முன்னர் வருமாறு கூறினார்.

    துரதிர்ஷ்ட வசமாக நான் சென்ற சமயம் சென்னையின் போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டதால் 4.55க்குத்தான் நான் அவர் இல்லத்திற்குச் சென்றேன்.

    அவர் கால்களில் விழுந்து ஆசிர்வாதத்தைப் பெற்ற போது ஒரு தந்தைக்குரிய அதிகாரத்துடன் “இதெல்லாம் எதுக்கு” என அதட்டினார். நான் கொண்டு சென்ற எனது படைப்பான “கண்ணதாசன் ஒரு காவியம் ” எனும் நூலைப் பெற்றுக் கொண்டு சிறிது நேரமே என்னுடன் அவரால் பேச முடிந்தது.

    கவியரசரைப் பற்றி சொல்வதற்கு இன்னும் நிறைய விடயங்கள் உண்டு அடுத்தமுறை சந்திக்கும் போது நிச்சயம் பேசுவோம் என்றார்.

    காலத்தின் கோலம் அவர் சொன்ன அடுத்த முறை அவரை ஒரு திருமணத்தில் தான் சந்தித்தேன். மிகவும் சுருக்கமாகவே பேச முடிந்தது.

    எனது இந்த இரு சந்திப்புகளிலும் நான் எம்.எஸ்.வி எனும் ஒரு மாபெரும் இசையமைப்பாளரைச் சந்திக்கவில்லை ஒரு இனிமையான மனிதத்துவம் நிறைந்த எளிமையான, ஆரவாரமில்லாத அற்புத மனிதரையே சந்தித்தேன்.

    பாடலாசிரியர்கள் திரைக்கதையின் காட்சிக்கு ஏற்றவாறு பாடல் வரிகளைத் தருகிறார்கள். அவ்வரிகளுக்கு உயிரூட்டுவதில் முன்னணியில் இருப்பது இசையே ! அதைத் தொடர்ந்து அப்பாடலைப் பாடுபவரின் திறமையோடு இணைந்தே அப்பாடல் திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது.

    கவியரசர் கண்ணதாசன் – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இணைந்து வழங்கிய பாடல்களில் பெரும்பான்மையானவை அப்பாடல்களைக் கேட்டவர்கள் மனதில் இன்று நிலைத்திருக்கிறது என்பதுவே உண்மை.

    பாலச்சந்தரின் கைவண்ணத்தில் உருவான படம் “வறுமையின் நிறம் சிவப்பு” அதில் ஒரு பாடல் காட்சி.

    கதாநாயகி சிறீதேவி சந்தங்களை எடுத்துக் கொடுப்பதாகவும் கதாநாயகன் கமல்ஹாசன் அதற்கு வரிகளைக் கொடுப்பதாகவும் அக்காட்சி அமைந்திருக்கும்.

    இக்காட்சியின் அமைப்பின் பின்னணிக்கு ஒரு காரணம் உண்டு. அதாவது டைரக்டர் பாலச்சந்தர் கவியரசருக்கும் மெல்லிசை மன்னருக்குமிடையே இருந்த புரிந்துணர்வை எடுத்துக் காட்ட எண்ணியே அக்காட்சியை அமைத்ததாகச் செய்தி உண்டு.

    உலகெங்கும் வாழும் தமிழர்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்று வாழ்பவர் எம்.எஸ்.வி.

    பல பின்னணிப் பாடகர்கள், பாடகிகளை மிகவும் ஊக்குவித்து அவர்களின் குரல்வகைக்கு ஏற்றவாறு பாடல்களின் இசையமைத்து அவர்களை முன்னணியில் நிறுத்தியவர் எம்.எஸ்.வி என்றால் மிகையாகாது.

    தமிழ்த்திரைப்பட உலகிலே பொற்காலமாகத் திகழ்ந்த ஒரு காலத்தில் தனது திறமையை நிலைநாட்டியவர் எம்.எஸ்.வி.

    இசையமைத்தது மட்டுமின்றி பாடல்கள் பலவற்றைப் பாடியும், சில படங்களில் நடித்தும் தனது சகலதுறைத் திறமைகளையும் வெளிக்காட்டியவர் எம்.எஸ்.வி.

    தனது இசையின் மூலம் தமிழர்களின் மனங்களில் எப்போதும் நிறைந்த எமது மெல்லிசை மன்னர் சுகந்தமான, சுகமான ராகமாக தென்றலோடு கரைந்து விண்ணேகி விட்டார்.

    அவரது ஆன்மா அவரது உடலை விட்டுப் பிரிந்தாலும் அவரது நினைவுகள் எம் அனைவரோடும் காலத்தால் கரையாத இசையாகக் கலந்து நிறைந்து இருக்கிறது.

    எம்.எஸ்.வி ஐயா அவர்களின் ஆத்ம சாந்திக்காய் உங்கள் அனைவரோடு இணைந்து நானும் பிரார்த்திக்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(156)

    –சக்தி சக்திதாசன்.

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    ஒருவார இடைவெளியின் பின்னால் உங்களுடன் இந்த மடல் மூலம் இணைகிறேன். வாழ்க்கை எனும் இந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடும் குதிரைகள்தான் நாம். எம்மைக் காலம் எனும் குதிரை ஓட்டுனர் இயற்கை வகுத்த வழிகளில் இழுத்துக் கொண்டு ஓடுகிறார்.

    நான் செய்ய எத்தனிக்கும் விடயங்கள் நாம் எண்ணும் போது செய்து முடிக்க முடியாமல் போய் விடுகிறது.

    எது இப்போது நடைபெறாது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோமோ அது கண்ணிமைக்கும் பொழுதுக்குள் நிகழ்ந்து விடுகிறது.

    ஆம் எம்மனைவருக்கும் தெரிந்த வாழ்க்கைக் கணக்கைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.

    சீட்டாட்டத்தில் ஒவ்வொருவருக்கும் சீட்டுக்கள் வீசப்படுகின்றன. யாருக்கு என்ன சீட்டு விழப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது கையில் கிடைக்கும் அந்த சீட்டுக்களை வைத்துக் கொண்டு எதிராளியை திணறப்பண்ணுவதே சீட்டாடத்தின் திறமை.

    அதேபோல எமது ஒவ்வொவருக்கும் எவ்வகையான வாழ்க்கை அமையப் போகிறது என்பது எவருக்குமே முன்னால் தெரிவது இல்லை.

    அப்படித் தெரிந்தால் சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதால் தானோ என்னவோ அது மறைத்து வைக்கப்படுகிறது ?

    எமக்கு கிடைப்பவைகளை வைத்து ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வை, தமது எண்ணத்தின் படி, தமக்கு வசதியாக அமைத்துக் கொள்வதற்காகப் போராடுகிறார்கள்.

    சிலர் அதில் வெற்றியடைகிறார்கள். பலர் அதை நோக்கிய தமது போராட்டத்தை முடிக்காமலே தமது வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள்.

    என்னடா இது ? எதற்காக சக்தி இந்தப் பீடிகை போடுகிறான் என்று எண்ணுகிறீர்களா ?

    வேறொன்றுமில்லை பதினெட்டு வருடங்களின் பின்னால் முதன் முதலாக கன்சர்வேடிவ் கட்சி தமது வரவு செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஆமாம், 2015 மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றியீட்டிய டேவிட் கமரன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அநேக எதிர்பார்ப்புகளுடன் கூடிய வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளது.

    என்ன கடந்த முறையும் டேவிட் கமரன் தானே பிரதமராகவிருந்தார். அப்போது சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களுக்கும் இப்போது சமர்ப்பிக்கும் வரவு செலவுத் திட்டத்திற்கும் என்ன வேறுபாடு எனும் எண்ணம் எழுவது இயற்கை… கடந்த டேவிட் கமரன் தலைமையிலான அரசு ஒரு கூட்டரசாங்கம். அப்போது சமர்ப்பிக்கப்பட்ட அத்தனை வரவு செலவுத் திட்டங்களும் லிபரல் கட்சியின் அனுசரணையுடன் சமர்ப்பிக்கப்பட்டதினால் பல கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வரமுடியவில்லை. ஆனால் இப்போது அவர்கள் தனித்துவமாக அரசமைத்திருப்பதால், தமது கொள்கைப் பிரகடனங்களை முன்னிறுத்தி இவ்வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    அரசியல் அவதானிகள் வேறொரு முக்கிய விடயத்தையும் முன்வைக்கிறார்கள். டேவிட் கமரன் அவர்கள் தாம் இம்முறை பிரதமரானால் இதுவே தமது கடைசிமுறை என்றும் தான் அக்கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகி விடுவதாகவும் அறிவித்திருந்தார். விளைவு ! ஐந்து வருடங்களின் பின்னால் அரசமைத்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவி வெற்றிடமாகும். அதற்கு போட்டியிடுவதற்கு இப்போதைய நிதியமைச்சர் ஜார்ஜ் ஒஸ்போன் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார் என்றும், இந்த வரவு செலவுத் திட்டம் அதற்கான முதல் அடி இது என்பதே அக்கருத்தாகும்.

    budget-Osborne 2015

    சரி அப்படி என்ன முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது ?

    # இங்கிலாந்தின் கடன் தொகையைக் குறைத்து 2020ம் ஆண்டு கணக்கில் செலவை விட வரவை அதிகரிக்கப்பண்ணும் கொள்கையில் இவ்வருடத்திற்கு 12 பில்லியன் ஸ்ரெலிங் பவுண்ஸ் இங்கிலாந்து அரசால் மீதப்படுத்தப்பட வேண்டும்.

    # அரச உதவி பெறும் வேலையற்ரொருக்கான உதவிப்பணம் வருடமொன்றுக்கு ஒரு இல்லத்திற்கு 23000 பவுண்ஸ் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    # 18 – 21 வயது கொண்ட இளையோர் மேற்படிப்புக்குச் செல்லாமல் இருந்தால் அவர்களுக்கு உதவிப் பணம் வழங்கப்பட மாட்டாது. அவர்கள் வேலை ஒன்றைத் தேடிக் கொள்ள வேன்டும் இல்லையெனில் ஏதாவது ஒரு துறையில் தமது பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.

    # பலர் பகுதிநேர வேலையில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். இதுவரை வருடத்திற்கு 6500 பவுண்ஸ்க்கு குறைவாக ஊதியம் பெறுவோருக்கு அரச உதவி கிடைத்து வந்தது. அதை இப்போது 3500 பவுண்ஸ் ஆக குறைத்துள்ளார்கள்.

    # தேசிய அளவிலான அதிகுறைந்த ஊதியம் மணியொன்றுக்கு 7 பவுண்ஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது இனி சட்டமூலமாக்கப்ப்படுகிறது.

    இப்படியாக பலவழிகளில் அரசாங்கச் செலவினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார்கள்.

    அதே நேரம் முதல் 12000 பவுண்ஸ் வரை வரி அளவிடப்படமாட்டாது என்று அதன் அளவைக் கூட்டி அடிமட்டத் தொழிலாளர்களுக்கு தாம் உதவி புரிந்துள்ளோம் என்கிறார்கள்.

    இத்திட்டங்களுக்கு சார்பாகவும், எதிராகவும் பலமுனைகளில் இருந்து வாதங்கள் கிளம்புகின்றன. பொதுவாக எடுத்துப்பார்த்தால் ஓய்வூதியம் பெறுவோரும், வாழ்வின் மத்தியதர வர்கத்தினரின் கூடுதலான ஆதரவாகவும்; மாணவர்கள், வேலையற்றோர், இளையோர் எனும் பகுதியினர் எதிராக இருப்பது போலவும் தென்படுகிறது.

    அடுத்த பிரதமராக வேண்டும் எனும் இலட்சியத்தில் முதல் அடி எடுத்து வைத்துள்ள நிதியமைச்சர் ஜோர்ஜ் ஒஸ்போன் அவர்களின் கனவு நனவாகுமா? இல்லையேல் கனவாகவே கலைந்து விடுமா?

    மக்கள் குரலே மகேசன் குரல் !

    மீண்டும் அடுத்தவார மடலுடன்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(155)

    –சக்தி சக்திதாசன்.

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    இனியதோர் வாரத்தில், இதயத்தில் உருளும் இனிமையான உணர்வுகளின் துணையோடு மீண்டும் உங்களோடு உறவாட விழைகிறேன்.

    இந்தவாரம் அதாவது எம் கண் முன்னே கடந்து சென்ற வாரம் தன்னோடு சுமந்து சென்ற பெருமையென்ன ?

    தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கேயுரிய அந்தஸ்தோடு கோலோச்சிய எமது கவியரசர், கவிதைக்கோமகன் கண்ணதாசன் அவர்களின் 89வது பிறந்த தினத்தை தனக்குள் தாங்கிச் சென்ற ஒரு உன்னதமான வாரம்.

    புலம்பெயர்ந்து அந்நியநாடுகளை தமது சொந்தநாடுகளாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர் லட்சோப லட்சம்.

    இவர்கள் புலம்பெயர்ந்ததற்கான காரணங்கள் பல. குறிப்பாக இலங்கைத் திருநாட்டைச் சேர்ந்த எனது ஆயிரமாயிரம் உடன்பிறப்புகள் யுத்த காலங்களில் அங்கு பாதுகாப்பாக வாழமுடியாத சூழலினால் இடம் பெயர்ந்தவர்கள் பலர்.sakthi.sakthithasanஎன்னைப் போன்ற நிலையிலுள்ள பலர் தமது உயர் கல்வியை பல்வேறு காரணங்களினால் தொடரமுடியாமல் வெளிநாடுகளில் தமது உயர் கல்விக்காகப் புலம் பெயர்ந்து பின்னர் அந்நாடுகளின் சூழல்களில் தம்மை ஐக்கியப் படுத்திக் கொண்ட காரணத்தினால் தொடர்ந்தும் தமது வாழ்வை அந்நாடுகளிலே தொடரும் நிலை.

    அப்படிப்பட்ட மக்களின் அடுத்த தலைமுறை அவர்கள் வாழும் அந்தப்புலம் பெயர் மண்ணையே தமது தாய் மண்ணாகக் கருதி வாழும் ஒரு நிலை காணப்படுகிறது.

    இந்தச் சூழலிலே தாய்நாட்டின் ஏக்கங்களையும், தமிழின் மீது கொண்ட காதலின் கனத்தையும் தமது இதயங்களிலே சுமந்து வாழும் அம்மக்களோடு கவியரசர் பின்னிப் பிணைந்திருப்பது காலத்தால் மாற்ற முடியா உண்மை.

    அவரது பாடல்கள், அப்பாடல்களில் புதைந்துள்ள எளிமையான கருத்துக்களின் ஆழம் என்பன தமது தாய்மண்ணைத் தொலைத்து விட்டு நிர்க்கதியாகி நிற்கும் பல உடன்பிறப்புகளின் உள்ளத்தின் ரணங்களுக்கு களிம்பாகிறது என்பது வெள்ளிடை மலை போலத் தெரிகிறது.

    ஒரு திரைப்படப் பாடலாசிரியர் எனும் பணியினால் உயர்ந்து நவீன கால தமிழன்பர்களுக்கு கண்ணதாசன் என்றால் தமிழ் எனும் வகையில் அவரை அவர்களுடன் இணைத்து வைத்துள்ள உண்மை புலனாகிறது.

    அவர் வரைந்த காதல் பாடல்கள் பல, சோகப் பாடல்கள் பல , தத்துவப் பாடல்கள் பல. ஆனால், இவைகள் அனைத்திலும் புதைந்துள்ள சிலவரிகளை எடுத்துப் பார்த்தால் அவை எமது மண்ணைப் பிரிந்த எமது ஏக்கப் பிரதிபலிப்புகளை எடுத்துக்காட்டுபவை போல அமைகிறது.

    அப்போது நான் லண்டன் வந்த ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இருக்கும். தாய்மண்ணைப் பிரிந்த ஏக்கம் தந்த இருள் நெஞ்சைக் கவ்விக் கொண்டிருக்க இலண்டன் நகர பனிக்கால இருளோடு குளிரும் இணைந்து உடலை வாட்டும் ஒரு இரவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன்.

    அப்போது கை எனது கட்டிலருகே தலைமாட்டில் எப்போதும் எனக்குத் துணையிருக்கும் ஒரு டேப்ரிக்கார்டரைத் தட்டி விட்டது.

    காதல் சிறகைக் காற்றில் விரித்து
    வானவீதியில் பறக்கவா ?

    எனும் கவியரசரின் அழகிய வரிகளோடு சுசீலா அம்மாவின் குயில் குரல் ஒலித்தது. மனம் பாட்டின் வரிகளோடு லயித்தது. கவிதைபால் நாட்டம் கொண்டிருந்ததாலோ என்னவோ எப்போதும் மனம் பாட்டின் இசையை ரசித்தாலும் அதன் பொருள் தேடி ஏங்கும்.

    அப்போது ,

    எண்ணங்களாலே பாலம் அமைத்து
    இரவும் பகலும் நடக்கவா
    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
    இரு கை கொண்டு வணங்கவா
    இரு கை கொண்டு வணங்கவா

    kdasan1எனும் வரிகள் ஒலித்தது. என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது. ஆமாம் எனது தாய்மண்ணின் பிரிவோடு நான் அவ்வரிகளை இணைத்துப் பார்த்தேன். பல்லாயிரம் மைல்களுக்கப்பால் தாய்மண்ணை விட்டுப் பிரிந்து இருக்கும் நான் எப்படி என் தாய்நாட்டை அக்கணத்தில் அடைவேன்? எண்ணங்களினாலே பாலம் அமைப்பது ஒன்று மட்டும்தானே பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் ஒரு புலம்பெயர் மாணவனால் இயலும், அதைத் தவிர வேறு மார்க்கம் ஏது?

    எத்தனை காலம் பிரிந்து இருந்தேன் என் தாய்மண்ணை அதை எண்ணிக் கண்ணீர் வடிப்பது ஒன்று தானே அப்போது உணர்வுகளை ஆற்றிக் கொள்ள ஒரே வழியாகிறது. அதுதான் கவியரசரின் மகத்துவம். எளிமையான வரிகள் அதனுள் எத்தனையோ வகைகளில் ஆராய்ந்து பார்க்கக்கூடிய ஆழமான கருத்துக்கள்.

    மற்றுமொரு இனிய பாடல் …

    ஆண் நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
    இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

    ஆமாம் இது போன்ற கவியரசரின் பாடல்கள்தான் என் போன்ற புலம் பெயர்ந்தவர்களை மிகவும் கடினமான தாய்நாட்டு ஏக்க காலங்களில் கரை சேர்க்க உதவியது. காலத்தால் அழியாத கவிஞன், எத்தனையோ நாடுகளில் வாழும் எத்தனையோ நாடுகளைச் சேர்ந்த தமிழர்களால் இன்றும் போற்றிப் பேசப்படும் ஒரு ஈடற்ற படைப்பாளி.

    அவரது இந்தப் பிறந்த தின வாரத்தின் வாயிலாக அவரை நினைவுகூற கிடைத்த சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(154)

    –சக்தி சக்திதாசன்.

    web-human-rights-act

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    புதியதோர் வாரத்தில் புலரும் கருத்துகளுடன் உங்களோடு உறவாட மீண்டும் உங்கள் முன்னே மடல் வாயிலாக விழைகிறேன்.

    அடிப்படை மனிதஉரிமை என்பது மகத்தான பொதுவுடமையாகும். மனிதன் மனிதனாக மதிக்கப்பட்டு அவனுக்கு உலகில் நியாயமான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பது யாவராலும் எதிர்பார்க்கப்படும் ஒரு அத்தியாவசியமானத் தேவையாகும்.

    உலகவரலாற்றில் அதாவது ஐரோப்பியக் கண்டத்தில் இம்மனித உரிமையின் முக்கியத்துவம் மிகவும் அதீத வகையில் உணர்த்தப்பட்டது எனலாம்.

    எப்படி என்கிறீர்களா ?

    1928ஆம் ஆண்டு அமெரிக்க ஸ்டாக் எக்ஸ்ச்சேஞ் வீழ்ச்சியடைந்தது. அது அமெரிக்காவில் ஒரு பாரிய பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

    அமெரிக்கா தான் அந்நியநாடுகளுக்கு அளித்திருந்த கடனுதவியை தனது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மேற்கோள் காட்டித் திரும்பக் கோரியது.

    இந்த நடவடிக்கை ஜெர்மனிய நாட்டை மிகவும் நெருக்கடிக்குள்ளாக்கியது. ஜெர்மனியின் வேலையில்லாதோர் தொகை ஆறு மில்லியனாக உயர்ந்தது.

    ஜெர்மனிய அரசாங்கம் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தது, 1930ம் ஆண்டு ஜெர்மனிய அதிபதி ஹின்டன்பேர்க் ப்ரூனிங் அரசாங்கச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பல செலவுகளைக் குறைத்தார். அதன் நிமித்தம் வேலையற்றோருக்கு கொடுக்கப்படும் உதவிப்பணம் நிறுத்தப்பட்டு பலரின் சம்பளம் குறைக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கை ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருந்த மக்களை வெகுவாக பாதித்தமையால் அவர்கள் வெகுண்டெழ அரசாங்கம் இதை அவசரக்கால திட்டத்தின் மூலம் நடைமுறைப் படுத்தியது.

    ஆத்திரமுற்ற மக்கள் கம்யூனிசத்தின் பால் திரும்புவது கண்டு அச்சமுற்ற தொழிலதிபர்கள் தீவிர வலதுசாரிக் கொள்கை கொண்டவரும், இனவேற்றுமையை தீவிரப்படுத்துபவரும், யூதர்களுக்கு எதிரானவருமான ஹிட்லரை ஆதரிக்கத் தலைப்பட்டார்கள். 1928ஆம் ஆண்டில் 12 இடங்கள் மட்டுமே பெற்றிருந்த ஜெர்மனிய நாஸிக் கட்சி, 1932ம் ஆண்டு 230 இடங்களைக் கைப்பற்றுமளவிற்கு ஆதரவைப் பெற்றது. ஜெர்மனிய அரசாங்கம் நிலைகுலைந்தது. ஜனாதிபதி ஹின்டன்பேர்க் ப்ரூனிங்கை பதவியிறக்கி ஆறுமாதமே தாக்குப்பிடித்த பாப்பன் அவர்களை பிரதமராக்கினர். அவரைத் தொடர்ந்த ஸ்லெய்ச்சர் இரண்டு மாதமே தாக்குப்பிடித்தார். அந்நிலையில் அவர்கள் இருவரும் இணைந்து ஹிட்லருக்கு உதவிப்பிரதமர் பதவி கொடுக்கத் தீர்மானித்தார்கள். ஆனால், ஹிட்லரோ பிரதமர் பதவியை மட்டுமே எதிர்பார்த்தார்.

    விளைவு !

    1933ஆம் ஆண்டு ஹிட்லர் ஜெர்மனிய நாட்டு அதிபதியானார். அதைத் தொடர்ந்து நடந்த உலக அநியாயங்களில் முதலிடம் வகிப்பதான ஹிட்லரின் யூதப்படுகொலைகள் அரங்கேறியதும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் நாமனைவரும் அறிந்ததே !

    சரி எதற்கு இந்த சரித்திர அலசல், இதற்கும் மனித உரிமைகள் பற்றி ஆரம்பத்தில் கூறியவற்றிற்கும் என்ன தொடர்பு என்றுதானே எண்ணுகிறீர்கள். இதோ வருகிறேன் …

    இங்கிலாந்தின் புதிய அரசாங்கத்தின் பழைய பிரதமர் டேவிட் காமரன் அவர்கள் 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது செய்த கொள்கைப் பிரகடனங்களில் ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் நிறைவேற்றப்பட்ட மனிதஉரிமைச் சட்டத்தில் இடம்பெறும் நாடுகளில் ஒன்றாக அதைக் கடைப்பிடிப்பதை நிறுத்தி இங்கிலாந்து நாட்டிற்கான தனியான மனிதஉரிமைச் சட்டம் ஒன்றை தாம் பதவிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்பதே. இவருடைய இந்தக் கொள்கைப் பிரகடனத்திற்குக் கணிசமான அளவில் மக்கள் ஆதரவும் உண்டு.

    அட, தமது உரிமைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் பாதுகாக்கும் உரிமைகளை இவ்வளவு இலகுவாக விட்டுக்கொடுக்கச் சம்மதிக்கிறார்களே என்று வியப்பதற்கு இடமுண்டு. சமீபகாலமாக உலகில் பலபாகங்களிலும் மதங்களின் பெயரால் இடம்பெற்று வரும் பயங்கரவாதச் செயல்களைப் பற்றி நாம் நன்கறிவோம். அத்தகைய பயங்கரவாதச் செயல்கள் புரிவோரை பகிரங்கமாக ஆதரிக்கும் வெளிநாட்டினரை இங்கிலாந்தில் இருந்து அப்புறப்படுத்த இங்கிலாந்து நீதிமன்றங்கள் உத்தரவிட்ட போதும் அவர்கள் இம்மனித உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய நீதிமன்றத்தின் மூலம் தொடர்ந்தும் இங்கிலாந்தில் தங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    இதி இங்கிலாந்து மக்கள் பலரை மிகவும் ஆத்திரமூட்டியுள்ளது. எப்போது இந்த மனிதஉரிமைச் சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டது ?

    MAIN-Magna-Cameronஹிட்லர் யூத மக்களுக்குச் செய்த அகோரச் செயல்களின் பின்னர், ஹிட்லர் தோற்கடிக்கப்பட்ட பின்னால் இனிமேல் உலகில் குறிப்பாக ஐரோப்பாவில் இத்தகைய கொடிய செயல்கள் இடம்பெற இடமளிக்கக் கூடாது எனும் காரணத்திற்காக அப்போதைய ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து இந்த மனிதஉரிமைச் சட்டத்தை அமுலாக்கின. ஆயிரக்கணக்கில் மனித உயிர்கள் ஒரு தனிமனிதனின் கொள்கைக்காகப் பறிக்கப்பட்டதினால் உருவாக்கப்பட்ட பாதுகாப்புச் சட்டம், மதத்தின் பெயரால் காவு கொள்ளப்படும் உயிர்களினால் மீண்டும் எதிர்க்கப்படும் ஒரு துயரமான சந்தியில் நிற்கிறோம்.

    இச்சட்டத்தை இங்கிலாந்தில் நிறுத்தக்கூடாது எனும் குரல்கள் பலபாகங்களிலும் ஒலிக்கத்தான் செய்கிறது. 800 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட உரிமைகளுக்கான சட்டம் “மக்னா காட்டர்” என்பதே முதன்முதாலக ஐரோப்பிய பகுதியில் ஏற்படுத்தப்பட்ட மனித உரிமைச் சட்டம். இச்சட்டத்தின் 800ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்படும் வேளையில், இத்தகைய சட்டத்தை ஐரோப்பாவில் அனைவர்க்கும் முதலாக ஏற்படுத்திய எமக்கு, எமது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை எம்மால் ஏற்படுத்த முடியாதா ? என்று வாதிடுகிறார் பிரதமர் டேவிட் காமரன்.

    ஏதோ ஒருசில பயங்கரவாதிகளுக்காக வேறுபல நன்மைகளைத் தரும் ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைச் சட்டத்திலிருந்து நாம் விலகுவது ஒரு மூடத்தனமான காரியம் என வாதிடுகிறார்கள் பல முன்னணி அரசியல்வாதிகள். மனிதனை மனிதனாக வாழவிடுவதற்கு ஒரு சட்டமூலம் அவசியம் எனும் நிலை வந்த பின்பு . . . .

    ம் . . . பொறுத்திருந்து பார்ப்போம் …

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share