இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(160)

0

–சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

இங்கிலாந்து நாட்டின் சிறப்பம்சங்களில் ஒன்று அந்நாட்டின் கலாச்சார பெருமைகளுக்கு அந்நாட்டின் மக்கள் கொடுக்கும் முக்கியத்துவமே ஆகும்.

ஒரு நாட்டின் பெருமையை அதன் கலாச்சார மகிமைகளை உணர்ந்து கொண்டால்தான் அந்நாட்டைப் பெருமைப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை மக்கள் பெறுகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு மனப்பக்குவத்தைப் பெற்ற ஒரு சமுதாயமே தனது நாட்டின் புனிதத்தன்மையைப் போற்றும் தகமையை அடைகிறது.

தமது நாட்டின் காலாச்சாரப் பெருமைகளை காப்பாற்றுவது மட்டுமல்ல வரும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு அப்பெருமைகளை விளக்கி கூறி தமது நாட்டின் பெயரைப் பெருமைப்படுத்துவதிலும் இங்கிலாந்து நாட்டினர் முன் நிற்கிறார்கள்.

எதைப்பற்றி மடல் வரைய இத்தனை முன் விளக்கம் என்று எண்ணுகிறீர்களா ?

சென்ற வார விடுமுறையில் நானும் எனது மனைவியும் எனது மகனும் இங்கிலாந்து நாட்டின் தொன்மை பொருந்திய தேவாலயமான “கண்டபரி கதீட்ரல்” ( Canterbury Cathedral ) தேவாலயத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தோம்.

கண்டபரி எனும் கெண்ட் பகுதியச் சேர்ந்த அந்நகரமே மிகவும் பரபரப்பாக இருந்தது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆயினும் அந்நகரமே மக்கள் கூட்டத்தினால் அலைமோதிக் கொண்டிருந்தது. சாப்பாட்டு கடைகளெல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அந்நாளுக்கு மெருகூட்டும் வகையில் ஆதவனும் தனது உஷ்ணக்கதிர்களால் வழமையாக குளிரினால் வாடும் மக்களை உஷார் படுத்திக் கொண்டிருந்தான். பல வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அக்காலாச்சரப் பழமையுடன் இணைந்த நகரைப் பார்வையிடுவதற்காக கைகளில் தமது ஸ்மார்ட் தொலைபேசியின் கேமராக்களை வைத்து கிளிக் செய்வதும், தம்மைத் தாமே செல்பிஃ எடுத்துக் கொள்வதுமாக இருந்தார்கள்.

இந்நாட்களில் இங்கிலாந்துக்கு வரும் உல்லாசப் பயணிகளில் அதிகமாக சீன தேசத்து உல்லாசப் பயணிகளாகக் காணப்படுவது சீனாவின் பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டுவதாக அமைகிறது. இங்கிலாந்தின் பழம்பெரும் உடைகள் விற்பனை செய்யும் அங்காடியாக “டெபனாம்ஸ் ( Debenams) எனும் நிலையம் திகழ்கிறது. இந்த கண்டபரி எனும் இடத்திலுள்ள இவ்வங்காடியின் சிறப்பு என்னவென்றால் அதை அப்படியே பழமைப் பாணியில் இன்னமும் பாதுகாத்து வருவதே .

     சக்திதாசன்1     சக்திதாசன்8

இப்படியாக அந்நகரின் பல தெருக்களின் வழியாக நாம் நடந்து அத்தேவாலயத்தை வந்தடைந்தோம். ஞாயிற்றுக்கிழமையாதலால் அத்தேவாலயத்தினுள் இலவசமாக அனுமதிக்கப் பட்டோம். அங்கு வழிபட வந்த கிறிஸ்துவர்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தார்கள். அத்தேவாலயம் அமைந்திருந்த இடமே உள்ளத்தைக் குளிரவைக்கும் வகையில் அமைந்திருந்தது. பச்சைப் பசலேன்ற புற்தரை ஒருபுறமிருக்க, அத்தேவாலாய மணிகளின் ஒருங்கிணைந்த ஓசை உள்ளத்தின் ஆன்மீக உணர்வுகளைத் தாலாட்டிக் கொண்டிருந்தது.

                            சக்திதாசன்2          சக்திதாசன்3

உள்ளே நுழைந்தோம் அப்பப்பா ! அக்கட்டிடத்தின் அழகு எம்மைப் பிரமிக்க வைத்தது. மிகவும் நீண்ட தேவலயத்தினுள் உட்கார்ந்து வழிபட இருக்கைகள் நீண்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்ட விதத்தில் நிறுவப்பட்டிருந்தன. அண்ணாந்து பார்க்கும் போது அக்கட்டிடத்தின் கூரையின் உட்புறத்தில் அழகிய வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டிருந்தன. அத்தேவாலயக் கட்டிடத்தைத் தாங்கி நிற்கும் தூண்களின் அழகிய வேலைப்பாடு கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்திருந்தன.

     சக்திதாசன்4     சக்திதாசன்6

கிறிஸ்துவிக்குப் பின் 590ம் ஆண்டிலிருந்து இன்றுவரை அத்தேவாலயத்தின் பிரதம மதகுரு, அதாவது இங்கிலாந்தின் ஆஸ்தான மதகுருவாக மதிக்கபடும் “ஆர்ச்பிஷப் ஆப் காண்டபரி ( Archbishop of Canterbury)“ ஸ்தானத்தை வகித்த அனைவரது பெயரும் ஆண்டுப் பிரகாரம் வரிசையாக அங்கு எழுதப்பட்டிருந்தது. அதைத் தவிர மரணமடைந்த சில முக்கியமான பிரமுகர்களின் சமாதியும் அமைக்கப்பட்டு அதன்மேல் ஒரு உருவம் படுத்திருப்பது போன்ற ஒரு சிலை அமைக்கப்பட்டிருந்தது.

     சக்திதாசன்5     சக்திதாசன்7

இத்தகைய சரித்திரப் பிரசித்தி பெற்ற தேலயத்தின் பின்னனிதான் என்ன ?

இங்கிலாந்தின் கிறிஸ்துவத்தின் ஆரம்பம் எத்தனையாம் ஆண்டு என்பது சரியாகத் தெரியாமலிருந்தாலும் இரண்டாவது நூற்றாண்டிலே இங்கிலாந்தில் கிறிஸ்துவப் பின்னணி இருந்ததாக நம்பப்படுகிறது. அப்போதைய கிறிஸ்தவர்களுக்கு ரோமானிய பின்னணியும், செல்டிக் எனப்படுவோரின் பின்னணியும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவ்விரண்டு சமுதாயத்தினருக்குமிடையில் முரண்பாடு இருந்ததாகவும் ரோமானியப் பின்னணி கொண்டோர்கள் கிறிஸ்துவுக்குப்பின்னர் 410ம் ஆண்டளவில் இங்கிலாந்தை விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

அப்போதைய காலகட்டத்தில் ஆங்கிலோ சாக்ஸன்ஸ் எனப்படும் கிறிஸ்தவர்கள் முறையற்ற சீரற்ற வாழ்க்கையை மேற்கொண்டு வந்ததால், அப்போதைய போப்பாண்டவராக இருந்த கிரேகரி என்பவர் அகஸ்டீன் எனும் மதகுருவையும் அவரோடு சார்ந்த 40 சிஷ்யர்களையும் கெண்ட் நகரத்துக்கு அவர்களின் வாழ்வை முறையானதாக்க அனுப்பி வைத்தார். அவரை அப்போதைய கெண்ட் நகர அரசரான எதில்பேர்ட் எதிர்கொண்டு அழைத்து கண்டபரி எனும் இடத்தில் தேவாலயத்தை அமைக்க ஏற்பாடு செய்தார். அதன் பின்னால் அகஸ்டீன் இங்கிலாந்தின் முதல் ஆர்ச்பிஷப் ஆஃப் காகண்டபரியாக நியமிக்கப்பட்டார் என்பதுவே சுருக்கமான இத்தேவாலயத்தின் வரலாறு.

இத்தனை வருடங்கள் கடந்தும் இந்நாட்டு மக்கள் தமது நாட்டின் காலாச்சார அடையாளமான இத்தேவாலயத்தை பராமரிப்பது மட்டுமல்ல தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் அனைத்தும் எவ்வித அரசியல் பாகுபாடும் காட்டாது இதற்கான நிதியை ஒதுக்கி வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. எமக்குப் புகலிடம் கொடுத்து நாம் எமது வாழ்க்கையை ஸ்திரப்படுத்த ஓர் சந்தர்ப்பத்தை அளித்த இந்நாட்டின் காலாச்சார அடையாளங்களில் ஒன்றைப் பார்க்க முடிந்தது எனும் நிறைவான மனதுடன் கடந்த வார விடுமுறை எமைக் கடந்து சென்றது.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *