Tag: அண்ணாகண்ணன்

  • திருவள்ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை

    திருவள்ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை

    “தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” என்ற தலைப்பில், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 25.01.2020 அன்று நடைபெற்ற ஒருநாள் பயிலரங்கத் தொடக்க விழாவில், முனைவர் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை.

    ———————————————————————————————-

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்

    குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்

    அண்ணாகண்ணன்

    20.02.2020 அன்று சென்னை வேப்பேரி குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவையில் உரையாற்றுகிறேன். 

    வாய்ப்புள்ளோர் வருக.

    Share
  • பறக்கும் முத்தம்

    பறக்கும் முத்தம்

    அண்ணாகண்ணன்

    தூக்கம் வந்தால் தூங்கிவிடு
    தும்மல் வந்தால் தும்மிவிடு
    அழுகை எழுந்தால் அழுதுவிடு
    சிரிப்பு வந்தால் சிரித்துவிடு
    ஆசைப் பட்டால் அடைந்துவிடு
    அதற்காய் நீயும் உழைத்துவிடு
    உணர்வை அடக்கிக் குறுகாதே
    ஒளித்து வைத்து மருகாதே

    தெரிந்தால் தெரியும் என்றுசொல்
    தெரியாது என்றால் அதையும்சொல்
    புரிந்தால் புரிந்தது என்றுசொல்
    புரியாவிட்டால் அதையும்சொல்
    பிடித்தால் பிடித்தது என்றுசொல்
    பிடிக்காவிட்டால் அதையும்சொல்
    வேண்டாம் என்றால் விட்டுவிடு
    வேண்டும் என்றால் மொட்டுவிடு

    அப்படி நடந்தால் அதுவும்சரி
    இப்படி நடந்தால் இதுவும்சரி
    எப்படி நடந்தாலும் சரியேதான்
    எல்லாம் நமது நன்மைக்கே
    அதிகம் யோசித்துக் குழம்பாதே
    உள்ளம் சொல்வதைக் கேட்டுநட
    திரும்பிப் பார்க்க நேரமில்லை
    ஓடிக் கொண்டே விளையாடு

    காதலில் கற்பனை அதிகமுண்டு
    கனவைக் கலைத்து எழுந்துவா
    நிஜத்தைப் பேசு நேருக்குநேர்
    நிலைப்பது நிலைக்கும் நீயேபார்
    வெற்றிகளாலே நீபேசு
    வேண்டியதெல்லாம் பின்தொடரும்
    ஆக வேண்டிய வேலையைப் பார் – இந்தா
    பறக்கும் முத்தம் பற்றிக்கொள்

    =======================================

    Photo courtesy: Maxpixel.net

    Share
  • “தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்

    “தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்

    அண்ணாகண்ணன்

    பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி நூலகத் துறையும் தமிழ் அநிதமும் (அமெரிக்கா) இணைந்து, 25.01.2020 அன்று, “தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” என்னும் பொருண்மையிலான பன்னாட்டுப் பயிலரங்கை மிகச் சிறப்பாக நடத்தின.

    இதில், பேராசிரியர் அ.காமாட்சி, ஏற்றம் தரும் எழுதுகருவிகள் என்ற தலைப்பில் குரல்வழித் தட்டச்சு, எந்திர மொழிபெயர்ப்பு, பிழை திருத்தும் மென்பொருள் உள்ளிட்டவற்றை அரங்கில் நிகழ்த்திக் காட்டி விளக்கினார்.

    பெய்கான் நிறுவனத்தின் நிறுவனர் செந்தில் முருகன், ஒலி ஒளி உள்ளடக்கம் என்ற தலைப்பில், ஒலி நூல், அதை உருவாக்கும் விதம், அதற்குள்ள சந்தை, யூடியூப் அலைவரிசையைத் தொடங்கும் விதம் உள்ளிட்டவற்றை அழகுற எடுத்துரைத்தார்.

    நான், மையக் கருத்துரை வழங்கியதோடு, வலை ஊடக வாய்ப்புகள் என்ற தலைப்பில், மின்னிதழ்கள், செய்திச் செயலிகள், மீம்ஸ் எனப்படும் பகடிப் படங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் தற்போதைய நிலையைச் சுட்டிக் காட்டி, இவற்றில் உள்ள வானளாவிய வாய்ப்புகளை விரித்துரைத்தேன்.

    செங்கோட்டை ஸ்ரீராம், மின்னூல்கள் என்ற தலைப்பில், மின்னூல்களின் வகைகள், உருவாக்கும் விதம், அதற்கு உதவும் கருவிகள், கிண்டில், ஃபிரீதமிழ்ஈபுக்ஸ் உள்ளிட்டவற்றைக் காட்சியுரையாக வழங்கினார்.

    மாணவர்கள், பங்கேற்பாளர்கள் அத்தனை பேரும் கடைசி வரை இருந்து உற்சாகமாகப் பங்கெடுத்தார்கள். இந்த நல்வாய்ப்பினை நல்கியமைக்காக, கல்லூரி நிர்வாகத்திற்கும் தமிழ் அநிதம் அமைப்பிற்கும் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாலச்சந்திரன் அவர்களுக்கும் எமது நன்றிகள்.

    Share
  • பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு

    பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு

    திருநெல்வேலி அருகில் உள்ள பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 25.01.2020 அன்று நடைபெற உள்ள தமிழிணையப் பயிலரங்கில் பங்கேற்கிறேன். அழைப்பிதழ் காண்க. வாய்ப்புள்ளோர் வருக.

     

    Share
  • ஒரே நாளில் இரு நிகழ்வுகள்

    ஒரே நாளில் இரு நிகழ்வுகள்

    அண்ணாகண்ணன்

    ஒரே நாளில் இரு நிகழ்வுகளில் பங்கேற்றுப் பேசுகிறேன்.

    Share
  • இருபது இருபது

    இருபது இருபது

    அண்ணாகண்ணன்
     
    புதியது மேவும் புவியில் எந்நாளும்
    விதியதை வெல்லும் வினைத்திறம் ஆளும்
    மதியது ஓங்கும் மாற்றம் உண்டாகும்
    இருபது இருபதில் ஏற்றம் உண்டாகும்!
     
    பெறுவதும் உறுவதும் பெருமைகள் ஆகும்
    கனவிலும் நனவிலும் களிநகை ஊறும்
    எழுவதில் எழுவதில் எல்லைகள் விரியும்
    இருபது இருபதில் இனிமைகள் சேரும்!
     
    களைவதும் அணிவதும் நித்திய வேடம்
    விடுவதும் தொடுவதும் பந்தயப் பாடம்
    இருப்பதும் மறைவதும் காட்சியின் மாயம்
    இருபது இருபது வேட்கையின் வேகம்!
     
    அனுதினம் இங்கே அனுபவம் ஏறும்
    நுண்கணம் தோறும் நூதனம் கூடும்
    அடியெது முடியெது அளந்திடலாமே
    இருபதுக்கு இருபது எய்திடலாமே!
     
    வல்லமை அன்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
    Share
  • அஞ்சலி: இராமச்சந்திரன் காளஹஸ்தி

    அஞ்சலி: இராமச்சந்திரன் காளஹஸ்தி

    அண்ணாகண்ணன்

    நோக்கர் என்ற குழுமத்தை 2018 பிப்ரவரி 24 அன்று முகநூலில் (Facebook) தொடங்கினேன். மொழிச் சூழலில் உள்ள பிழைகளைச் சுட்டிக் காட்டித் திருத்துவதும், குறை-நிறைகளை விவாதித்துப் பரிந்துரைகள் வழங்குவதும் இந்தக் குழுமத்தின் முதன்மையான பணிகள். இதில் என்னுடன் இணைந்து பணியாற்றிய இராமச்சந்திரன் காளஹஸ்தி அவர்கள், 27.11.2019 அன்று தமது 57ஆவது வயதில் மறைந்தார். அவருடனான என் அனுபவங்கள் சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்.

    சென்னை, குரோம்பேட்டையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்த நண்பர் இராமச்சந்திரன், இன்னும் சில மாதங்களில் பணி ஓய்வு பெற இருந்தார். அதற்குள் உலகிலிருந்தே ஓய்வு பெற்றது, ஆறாத் துயரளிக்கிறது.

    ஓய்வு பெற்றதும் இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் எனப் பேசிக்கொண்டிருப்பார். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அடிக்கடி சென்று உதவுபவர். பலருக்கும் தேடிச் சென்று உதவியவர். இனிய பண்பாளர். செய்யும் பணியை அக்கறையுடனும் நேசித்தும் செய்தவர்.

    செல்லும் இடங்களில் எல்லாம் எங்கே எந்தப் பலகையில், சுவரில், பதாகையில் பிழை கண்டாலும், உடனே படமெடுத்து, நோக்கரில் பகிர்ந்து வந்தார். அவரது தாய்மொழி தெலுங்கு என்றபோதும், தமிழில் நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றிருந்தார்.

    இராமச்சந்திரன் காளஹஸ்தியிடம் நான் வியந்த இன்னோர் இயல்பு, அவரது அர்ப்பணிப்பு. முகநூலில் ஏழு ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் அவருடன் சற்று நெருங்கிப் பழகினேன்.

    நோக்கரைத் தொடங்கிய பிறகு, எல்லோரையும் அழைப்பது போல் இவரையும் அழைத்தேன். இந்தக் குழுவின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட இவர், தாமாகவே கண்ணில் படும் பிழைகளை எல்லாம் படம் எடுத்துச் சுட்டிக் காட்டினார். நான் பல நேரங்களில் இணையத்தின் வழியாக இ-பேப்பர்களைப் படித்துச் சுட்டிக் காட்டுவேன். இவரோ, தாம் செல்லும் இடங்களில் காணும் பிழைகளை நேரடியாகக் களத்திலிருந்து படம் எடுத்துப் பதிந்தார். நானும் இப்படி எடுத்துப் போடுவது உண்டு என்றாலும், இதில் எல்லோரையும் வென்று இவர் முன்னணியில் நின்றார்.

    இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, ஒரு பிழை தென்பட்டால், வாகனத்தை நிறுத்தி, உரிய கோணம் பார்த்துப் படம் எடுக்க வேண்டும். கடைக்காரர் அல்லது பக்கத்தில் இருப்பவர் எதற்காக எடுக்கிறீர்கள் என்று கேட்பார்கள். அவர்களுக்கும் விளக்கம் சொல்ல வேண்டும். பிறகு உரிய இடத்திற்குச் சென்ற பிறகு, உட்கார்ந்து அதில் உள்ள பிழையைச் சுழிக்க வேண்டும். அதன் பிறகு நோக்கரில் பகிர வேண்டும். இவ்வளவையும் இவர் தானாகவே, யாரும் சொல்லாமலே செய்து வந்தார்.

    அவருடைய பங்களிப்புகளைப் பார்த்த பிறகு, அவரை ஒரு நாள் அழைத்து, நீங்கள் நோக்கரின் நிர்வாகியாக இருந்து செய்யுங்கள் என்றேன். இன்னும், என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள் என்றார். இப்போது செய்வதையே தொடருங்கள் என்றேன்.

    அடுத்து, இதில் உள்ள பெரும்பாலான இடுகைகளுக்கு அவர் விருப்பக் குறி அல்லது இதயக் குறி இடுவார். பதிவுகளுக்கு மட்டுமின்றி, அதில் உள்ள முக்கிய பின்னூட்டங்களுக்கும் இதே போல் சளைக்காமல் விருப்பக் குறி இடுவார்.

    சில நாள்களில் நான் வேலைப் பளு காரணமாக ஏதும் இட முடியாத நிலையில், என்னிடமிருந்து பதிவு ஏதும் வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டு, நான் ஏதும் சொல்லாமலே, தாம் எடுத்து வந்த படங்களைப் பகிர்ந்து, குழுமத்தில் உரையாடலைத் தொடர்ந்து ஊக்குவித்து வந்தார்.

    நோக்கரை இன்ஸ்டாகிராமுக்கு எடுத்துச் செல்ல வேண்டும், யுடியுப் அலைவரிசை தொடங்க வேண்டும், நோக்கர் இணையத்தளத்தை உருவாக்க வேண்டும், சிறந்த விளம்பர வாசகங்களுக்குப் பரிசளிக்க வேண்டும்…. என நான் எதைச் சொன்னாலும் செய்துவிடலாம், நான் ஓய்வு பெற்றதும் எடுத்துச் செய்கிறேன் என்பார். மேலும், எந்தப் புதிய யோசனையை அவரிடம் சொன்னாலும் செய்துவிடலாம் நண்பரே என உற்சாகமாகச் சொல்லுவார். இந்தத் தொண்டுள்ளம் மிக அரியது.

    அவருடைய நண்பர்கள் பலரை எனக்கும் பலருக்கு நோக்கரையும் அறிமுகம் செய்வித்தார். நோக்கரின் தொடக்கக் காலத்தில் அதில் அவரது தொடர்பிலிருந்து 100க்கும் மேலானவர்களை இணைத்தார்.

    பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று நேரடிப் பயிற்சிகள் அளிக்கலாம். போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கலாம் என்றார்.

    ஒரு நல்ல முயற்சிக்குத் தாமாக முன்வந்து தோள்கொடுக்கும் இராமச்சந்திரன் போன்றோர், இன்றைய சுயநலம் மிகுந்த உலகில் மிக அரிதானவர்கள்.

    நோக்கரில் மட்டுமின்றி மத்யமர், சீர், வாசிப்போம் உள்ளிட்ட பல குழுமங்களில் துடிப்பாக இயங்கி வந்தார். அவரது மறைவு, தமிழுக்கும் நண்பர்களுக்கும் பேரிழப்பு. இராமச்சந்திரன், நம் நினைவுகளில் என்றென்றும் வாழ்வார். களப்பணியில் சூரரின் நினைவைப் போற்றுவோம்.

    Share
  • டுண்டிடு  டுண்டிடு  (சிறுவர் பாடல்)

    டுண்டிடு  டுண்டிடு  (சிறுவர் பாடல்)

    அண்ணாகண்ணன்
     
    டுண்டிடு டுண்டிடு டுண்டிடு டுண்டிடு
     
    கண்டிடு கண்டிடு கண்டிடு கண்டிடு
    கொண்டிடு கொண்டிடு கொண்டிடு கொண்டிடு
    விண்டிடு விண்டிடு விண்டிடு விண்டிடு
    உண்டிடு உண்டிடு உண்டிடு உண்டிடு
     
    ஒன்றிடு ஒன்றிடு ஒன்றிடு ஒன்றிடு
    நின்றிடு நின்றிடு நின்றிடு நின்றிடு
    சென்றிடு சென்றிடு சென்றிடு சென்றிடு
    வென்றிடு வென்றிடு வென்றிடு வென்றிடு
     
    முன்னெடு முன்னெடு முன்னெடு முன்னெடு
    பண்ணிடு பண்ணிடு பண்ணிடு பண்ணிடு
    மின்னிடு மின்னிடு மின்னிடு மின்னிடு
    பின்னிடு பின்னிடு பின்னிடு பின்னிடு
    Share
  • புத்தொளி வேண்டும்!

    அண்ணாகண்ணன்

    புத்தொளி வேண்டும் வேண்டும்!
    புழுதியை மேவிச் செல்லும்
    சிற்றொளியேனும் வேண்டும்!
    சிறகுகள் வேண்டும் ஐயா!
    உள்ளொளி பிறக்க வேண்டும்!
    உயிர்க்கூடு சிலிர்க்க வேண்டும்!
    மெய்யொளி காணுதற்கே
    மெய்யறிவு ஓங்க வேண்டும்!

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    Share
  • நெல்லையப்பர் கோவிலிலே!

    நெல்லையப்பர் கோவிலிலே!

    அண்ணாகண்ணன்

    நெல்லையப்பர் கோவிலில் நேற்று (18.10.2019) நெல்லையப்பரைத் தரிசித்து, ஆதி சிவன் அருள் பெற்றேன்.

    ஆலயத்தினுள் இசைத் தூண்களைக் கண்டு பிரமித்தேன். கற்களைக் கொண்டு மாயாஜாலங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்தச் சிற்பிகளை, நாம் தலைமேல் தூக்கிக் கொண்டாட வேண்டும். இந்தக் கலைத்திறன் நம்முள் யாரிடமாவது எஞ்சியிருக்கின்றதா?

    காணும் ஒவ்வோர் இடத்திலும் சிற்ப எழில், உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. பிரகாரத்தில் இருந்த சிலைகளின் தலையலங்காரம் தனித்த அழகுடன் இருந்தது. ஒரு பக்கம் மட்டும் ஓதுக்கிய கிரீடம்போல் அவை இருந்தன. நம் முன்னோர்கள் இப்படியும் இருந்திருப்பார்களோ என்ற எண்ணம் எழுந்தது.

    பற்பல சந்நிதிகளில் அர்ச்சகர் பலரும் தீபாராதனை காட்டி, திருநீறு, குங்குமம் வழங்கினர். ஒரு சந்நிதியில் மட்டும், ஒருவர் குங்குமம் கொடுத்ததோடு, மடித்து வைத்த ஒரு குங்குமப் பொட்டலத்தையும் கொடுத்தார். ஒவ்வொரு சந்நிதியிலும் கொடுத்த திருநீறு, பிரசாதங்களைத் தனித் தனியே மடித்து வைக்கக் காகிதம் இல்லாமல், எல்லாவற்றையும் ஒரே காகிதத்தில் சேர்த்து வைத்திருந்தேன். அப்படி இருக்க, இவர் தனியே பொட்டலமாகவே கொடுத்தது உதவிகரமாக இருந்தது. எனக்குக் கொடுத்ததுடன் நில்லாமல், அடுத்தடுத்து அவர் பொட்டலம் மடித்துக்கொண்டே இருந்தார். சோர்விலாத அந்த அன்பரை வாழ்த்தினேன்.

    எல்லா இடங்களிலும் எண்ணெய் என்பதை எண்ணை என்றே எழுதி வைத்துள்ளார்களே என்ற வருத்தம் எழுந்தது.

    நேற்று கூட்டம் அதிகமில்லை. எளிதில் தரிசிக்க முடிந்தது. நெல்லையப்பரின் பிரகாரத்தைச் சுற்றி வருகையில் கவனித்தேன். அந்த நேரத்தில் நான் மட்டும் தனியாக நடந்துகொண்டிருந்தேன். லேசாகப் பசிப்பது போல் இருக்கிறதே என எண்ணினேன். அடுத்த இரண்டு நிமிடத்திற்குள் இடது பக்கச் சந்நிதியிலிருந்து அம்மாள் ஒருவர் படியிறங்கி வந்தார். என் முன் நின்று, வைத்திருந்த பாத்திரத்திலிருந்து தம் கையால் இரண்டு முறை அள்ளி என் கைநிறைய வைத்தார். ஆஹா, லட்டா என்றேன். பூந்தி என்றார். பேருவகையுடன் வணங்கிப் பெற்றுக்கொண்டு, ஆனந்தக் களிப்புடன் உண்டேன். பல முறைகள் எனக்கு இப்படி நிகழ்ந்திருக்கிறது. எனக்குத் தேவையானதைத் தானே அளிக்கிறது தெய்வம். பிறகு நான் எதற்குத் தனியாக வேண்ட வேண்டும்?

    பிறகு, அன்னை காந்திமதி அம்பாளை வணங்கி, குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு வெளியில் வந்தேன். படியின் அருகில் அம்மாள் ஒருவர், பெரியவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். “நான் புதிதாக ஒரு தொழிலைத் தொடங்கியிருக்கிறேன், நன்றாக நடக்க வேண்டும்” எனக் கூறினார். பெரியவர், “நன்றாக நடக்கும்” என்றார். நானும் மனத்திற்குள் ‘நன்றாக நடக்கும்’ எனக் கூறிக்கொண்டேன்.

    எங்கிருந்தோ தண்ணீர் பிரகாரம் வழியாக, திருக்குளத்திற்குள் ஓடிக்கொண்டிருந்தது. மழைநீரைக் குளத்திற்குள் விடுவதாகச் சொன்னார்கள். மிகுந்த சில்லிப்படன் இருந்தது. அதில் கால் நனைய நின்றுகொண்டேன்.

    படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

    Share
  • கோலாகல கொலு 2019

    கோலாகல கொலு 2019

    அண்ணாகண்ணன்

    சென்னை, புதுப் பெருங்களத்தூர், சுமதி முரளிகிருஷ்ணன் இல்லத்தில் அமோகமான ஒரு கொலுத் திருவிழாவைக் கண்டேன். புதிய புதிய கருப்பொருள்களில் வரிசை வரிசையாய், படிப் படியாய், திரும்பும் திசையெங்கும் பொம்மைகள், நேர்த்தியான கலை வடிவங்கள். பழைமையும் புதுமையும் கைகோக்கும் தருணங்கள். மண்பொம்மைகள் உயிர்த்தெழுந்து, ஒயில்சிறந்து நிற்கும் கோலம் கண்டேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முதுமொழிக்கு இணங்க, இந்தக் கொலுவை உங்கள் முன் படைக்கிறேன்.

    Share
  • மாலன் வாழ்க!

    மாலன் வாழ்க!

    அண்ணாகண்ணன்

    எழுத்தாளராக, இதழாளராக 50 ஆண்டுகளைக் கடந்துள்ள மாலன் நாராயணன், பண்பு மிகுந்த, துணிவு மிகுந்த உரையாடல்களால் என்னைப் பெரிதும் கவர்ந்தவர். சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், அரங்கச் சொற்பொழிவுகள், நேர் உரையாடல்கள் என எந்தக் களத்திலும் இனிமையாகவும் கூர்மையாகவும் பதற்றமின்றியும் கருத்துகளை எடுத்து வைப்பவர்.

    அரசியல் வெம்மையின் அனல் பறக்கும் போர்க்களத்தில், போலிகளையும் பொய்யுரைகளையும் முரண்பாடுகளையும் உள்நோக்கம் உள்ள வதந்திகளையும் சற்றும் சளைக்காமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் சுட்டிக் காட்டிச் செல்கிறார். இதை நான் ஒரு கடமையாகச் செய்கிறேன் என்று அவர் என்னிடம் கூறினார். இதற்காகக் கடுமையான வசைகளையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டபோதும் கர்ம யோகியாய் அவர் முன்னோக்கிச் செல்கிறார். அவரைத் தாக்குவதற்கு வேறு காரணங்கள் கிடைக்காதவர்கள், அவரது சாதியைப் பற்றிக்கொண்டு உலுக்கும்போது, அவர்களின் தோல்வியை அங்கே கண்டேன்.

    இந்தச் சச்சரவுகளுக்கு ஆட்படாமல், சர்ச்சைகளில் சிக்காமல், ஆபத்தில்லாத தலைப்புகளில் எழுதி, பேசி, அனைவருக்கும் இனியராக, நெரிசலில் எதன் மீதும் எவர் மீதும் இடித்துவிடாமல், அவர் கடந்து சென்றிருக்கலாம். ஆனால், உண்மையின் பக்கம் நின்று, அதை உறுதி செய்வதற்காக, தன் நேரத்தை, உழைப்பை, மன அமைதியைப் பணயம் வைத்துக் கேள்வி எழுப்புவதோடு, ஒவ்வொருவர் கேள்விக்கும் பதில் சொல்லுகையில் அவரை ஒரு போராளியாகவே பார்க்கிறேன்.

    பொய்யை அம்பலப்படுத்துவதுடன், நாட்டில், சமுதாயத்தில் ஒரு நற்செயல் நடக்கும்போது, அதை உச்சியில் ஏந்திக் கொண்டாடுபவர், அவர். எப்போதும் எதிர்ச்செய்திகளையே எதிர்பார்த்து, உருவாக்கி, பரப்பி, அதையே பூதாகாரமாக்கி, நாடே அழிவில் சென்றுகொண்டிருப்பதுபோல் நம்ப வைப்போருக்கு மத்தியில், மாலன் ஒரு குறிஞ்சி மலர். அறத்தின் பக்கம் நிற்கும் அண்ணன் மாலன் வாழ்க, அவரால் இந்த மாநிலம் மேலும் மேலும் பயனுறுக.

    ======================================

    அக்டோபர் 8 – மாலனின் பிறந்த நாள்

    Share
  • கொண்டு செலுத்திடுவேன்

    கொண்டு செலுத்திடுவேன்

    அண்ணாகண்ணன்

    கொண்டு செலுத்திடுவேன் அம்மா கொண்டு செலுத்திடுவேன்
    நின்று செலுத்திடுவேன் அம்மா நின்று செலுத்திடுவேன்
    நன்று செலுத்திடுவேன் அம்மா நன்று செலுத்திடுவேன்
    இன்று செலுத்திடுவேன் அம்மா இன்று செலுத்திடுவேன்!

    சென்று முடித்திடுவேன் ஐயா சென்று முடித்திடுவேன்
    குன்று பெயர்த்திடுவேன் ஐயா குன்று பெயர்த்திடுவேன்
    வென்று களித்திடுவேன் ஐயா வென்று களித்திடுவேன்
    ஒன்று நடத்திடுவேன் ஐயா ஒன்று நடத்திடுவேன்!

    உண்டு பெருங்காலம் நமக்கு உண்டு பெருங்காலம்
    உண்டு வருங்காலம் யார்க்கும் உண்டு வருங்காலம்
    கண்டு நிறைந்திருப்போம் அன்பே கண்டு நிறைந்திருப்போம்
    கட்டி அணைத்திருப்போம் அன்பே கட்டி அணைத்திருப்போம்!

    Share
  • அத்தி வரதரைத் தரிசிக்க, இன்னும் மூன்று யோசனைகள்

    அண்ணாகண்ணன்

    அத்தி வரதரைத் தரிசிக்க, இன்னும் மூன்று யோசனைகள். இவற்றை 2059இலாவது நிறைவேற்றப் பரிசீலிக்கலாம்.

    யோசனை 1: அத்தி வரதர் நடுவில் வீற்றிருக்க, அவரைச் சுற்றி, 3 ரெயில் தடங்கள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு ரெயிலும் அத்தி வரதரை ஒரு சுற்றிவிட்டு, திரும்பி வரும். பக்தர்கள் அதில் இருந்தபடியே தரிசிக்கலாம். இதற்கு ஏற்ப, ரெயிலின் உள்ளே, எல்லாம் ஜன்னலோரம் இருப்பது போல் இருக்கைகளை வடிவமைக்க வேண்டும். மூன்று ரெயில்கள் ஓடும்போது, அடுத்த மூன்று ரெயில்களில் பக்தர்களை ஏற்றலாம். இந்த ரெயில் ஓட்டுபவர்களைச் சுழற்சி முறையில் மாற்றலாம். ரெயில்களை நள்ளிரவில் சரிபார்க்கலாம். இதே ரெயில்களை மாடி ரெயில்களாக அமைத்தால், ஒரே நேரத்தில் இரு மடங்கினர் தரிசிக்கலாம். இதற்கு மேல் ரோப்கார் அமைத்தால், அதில் ஓர் அணியினர் சென்று வரலாம்.

    யோசனை 2: நடுவில் அத்தி வரதர் வீற்றிருக்க, எட்டுப் பாதைகள் அமைத்து, ஹைப்பர்லூப் குழாயில் காந்தக் கூடுகளில் பக்தர்களை ஏற்றி, ஒரு கிலோ மீட்டரை அரை நிமிடத்தில் கடந்து, அத்தி வரதரை வலம் வந்து திரும்பலாம். ஒரே நேரத்தில் 4 கூடுகள் வலம் வருமாறு செய்யலாம். இது, ஓட்டுநர் இல்லாமல், தன்னியக்கமாகச் செயல்படுமாறும் செய்யலாம். இதன் மூலம் ஒரே நாளில் இருபது இலட்சம் பேரையும் தரிசிக்கச் செய்யலாம். இதை உலகளாவிய திருவிழாவாக மாற்றி, அயல் நாடுகளிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கலாம்.

    யோசனை 3: அத்தி வரதரை ஒரே இடத்தில் வைக்காமல், திருத்தேரில் ஏற்றி, தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களிலும் பவனி வரச் செய்யலாம். இதன் மூலம், பக்தர்கள் ஒரு நகரத்தில் குவிவதைத் தவிர்க்கலாம்.

    Share