Tag: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(113)

    –சக்தி சக்திதாசன்.

    bertrand-russell-on-religion

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்களுடன் அடுத்தொரு மடலிலே உங்களுடன் கலப்பதில் மிகுந்த மகிழ்வடைகிறேன்.

    வாழ்க்கை எம்மீது பல சமயங்களில் விளக்கமில்லா நிகழ்வுகளை சராமாரியாகப் பொழிகின்றது. இது ஏன் நடந்தது ? எப்படி நடந்தது என்னும் விளக்கம் தெரியாமல் திண்டாடிப் போகும் நிலையில் பலர் பல சமயங்களில் அல்லாடுகிறோம்.

    இன்றைய இந்த காலக்கட்டமானது விஞ்ஞானயுகம் எனும் அடிப்படையோடு தான் வந்த வழியறியாது வெகு வேகமாக முன்னேறிச் செல்லும் சமூகங்களை உள்ளடக்கிய ஒரு கால கட்டமாகிறது.

    காலமாற்றத்தை உள்வாங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். காலத்துக்குக் காலம் மனிதனும் அவன் சார்ந்த சமூகமும் வாழ்வின் மாறுதல்களுக்கு தம்மை உட்படுத்திக் கொண்டிருக்கா விட்டால் மனிதன் இன்னும் கற்காலத்திலேயே உழன்று கொண்டிருந்திருப்பான்.

    மனித வாழ்க்கையை வளம்படுத்துவதற்கு ஆத்திகவாதம் எத்தனைதூரம் உதவியிருக்கிறதோ அதே போல நாத்திகவாதமும் தனது பங்களிப்பைச் செய்திருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

    இப்படிக் கூறும் நான் ….முழு ஆத்திக நம்பிக்கை கொண்டவன். பின் ஏனிந்தக் கூற்றை முன்வைக்கிறேன்.

    இந்த உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது என்பதை முழுமையாக நம்புக்கிறவன் நான். அப்படியாயின் நாத்திகவாதம் பேசும் ஒருவரால் இவ்வுலத்திற்கு நன்மை பயக்கக்கூடிய அதிவிசேட கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளும் நாம் ஏன் ஒருவருக்கு இருக்கும் நம்பிக்கையை தனிமனித சுதந்திரத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாது ?

    நாம் எவ்வளவுதான் விஞ்ஞானமயப்படுத்த பட்டாலும், மாறுதலை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டாலும், சில அடிப்படை யதார்த்தங்கள் என்றுமே மாறா நிலை கொண்டவை.

    குறிப்பாக ஒரு மனிதனின் வாழ்க்கை உறவுமுறைகள் , ஆன்மீக நம்பிக்கைகள் என்பவை மனிதனின் அடிப்படை மன ஓட்டங்களோடு பின்னிப் பிணைந்தவை. அவற்றை மாற்ற முற்படும் போது சமுதாயத்தின் ஆணிவேர்களே அசைத்துப் பார்க்கப்படுகின்றன.

    நான் இங்கிலாந்து எனும் இந்த மேலைத்தேச நாட்டினுள் முதன் முதலாகக் கால் வைத்த நாளுக்கும் ஏறத்தாழ நாற்பாதவது வருடத்தினுள் காலடி வைத்திருக்கும் இந்த நாளுக்கிடையே உள்ள இடைக்கால  வேறுபாட்டை என் மனத்தாராசினில் நிறுத்துப் பார்க்க விழைகிறேன்.

    இவை ஏதோ சரித்திர உண்மைகளோ அன்றி விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் பட்ட ஆதாரங்களோ அல்ல. வெறும் ஒரு சராசரி புலம்பெயர்த் தமிழன் பார்வையில் விழுந்த வித்தியாசமான கோணமே !

    அன்று எவையெல்லாம் பேசப்படுவது சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப்படமுடியாது என்று தள்ளி வைக்கப்பட்டனவோ, அவை எல்லாம் இன்று பகிரங்கமாக ஊடகங்களில் விவாதிக்கப்படும் ஒரு நிலை உள்ளது.

    இவற்றில் சில, காலமாற்றத்தின் காரணத்தால் விவாதிக்கப்படவேண்டிய அவசியம் கொண்டவையாக இருப்பினும், வேறு சில மக்களின் அடிமனதில் இழைந்தோடிய ஆன்மீக பலம் குன்றியமையால் ஏற்பட்டதுவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    காலம்காலமாக இங்கிலாந்து நாட்டில் வாழ்வோரில் பெரும்பான்மையினர் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்களே ! ஏன், இங்கிலாந்து நாடு ஒரு கிரிஸ்துவ நாடென்னும் நம்பிக்கையுடனேயே நான் இந்நாட்டினுள் நுழைந்தேன் ஆனால் இன்றோ இந்நாட்டின் அடிப்படை மதத்தின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை வலுவிழந்து போய்விட்டது போன்றதோர் நிலைமை என்றே எண்ணத் தோன்றுகிறது.

    இந்நிலை ஏன் ஏற்பட்டது ?

    இந்நாட்டினுள் வந்து குடியேறிய ஆசிய ஆப்பிரிக்க மக்களின் தொகை பெருகியதோடு, அவர்கள் தம்மதங்களின் மீதும் தம்முடைய கலாச்சார விழுமியங்களின் மீதும் கொண்ட ஆழ்ந்த பிடிப்பின் அழுத்தம் கூடிக் கொண்டு போவதை அண்மைக் காலங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.

    உதாரணமாக இங்கிலாந்தின் ஒவ்வொரு முக்கிய நகரங்களில் ஒன்றல்ல, இரண்டு மூன்று இந்துக் கோவில்கள் இயங்குகின்றன. அவை மக்கள் சென்று வணங்குவதற்குரிய வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. தம்முடைய உற்சவகாலங்களில் தேரிழுப்பது போன்ற திருவிழா வைபவங்களையும் அங்கு கடைப்பிடிக்கிறார்கள்.

    அதே போல இஸ்லாமிய மதத்தவரும் தமது மத அடையாளங்களையும் தமது மத நம்பிக்கைகளையும் மிகவும் அழுத்தமாக இம்மண்ணில் பதித்து வருகிறார்கள். அதே சமயம் இங்கிலாந்தின் சொந்தப் பிரஜைகளான ஆங்கிலேய மக்களோ தமது மத அடையாளங்களாகிய சர்ச்சுகளுக்கு செல்லும் வழக்கம் குன்றிக் கொண்டே போகிறது.

    அவர்களது ஆன்மீக உணர்வுகள் மங்கிக் கொண்டே போகிறது. அளவுக்கதிகமான மற்றைய மத அடையாளங்கள் காலாச்சார விழுமியங்கள் என்பனவற்றின் அதிக விகிதாசாராத்திலான ஆக்கிரமிப்புகள் தான் இவ்வீழ்ச்சிக்குக் காரணமா? எனும் எண்ணம் மேலோங்குவது தவிர்க்கப்படமுடியாத ஒன்று.

    எது எப்படி இருப்பினும் இத்தகைய ஆன்மீக உணர்வுகளின் அடிப்பட வீழ்ச்சி ஒழுங்கான கட்டமைப்புக் கொண்ட சமுதாய உருவாக்கத்தை தடுக்கும் வகையிலமைந்துள்ளது.

    மதம், நிறம் என்ற  வேற்றுமைகள் அதிகமாக மக்கள் மனங்களிடையே துளிர் விடத் தொடங்கியுள்ளது போல் தோன்றுகிறது.

    நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எமது அடையாளத்தை, எமது கலாச்சாரப் பின்னனியை இழந்து விடக்கூடது என்பது முக்கியம்.

    ஆனால் அதற்காக நாம் எம்மை அடையாளப்படுத்தும் முகவரியை நாம் வாழும் நாட்டு மக்களின் மீது திணிக்கும் வகையில் நடந்து கொள்வது எந்தவொரு மாற்றத்திற்குமான முன்னேற்றத்திற்குரிய  அறிகுறியாகாது.

    நாம் எமது ஆன்மீக உணர்வுகளில் கொண்டிருக்கும் வலிமை எமது மதத்திற்குள் எம்மை நல்வழிப்படுத்தும் மார்க்கத்திற்காகவேயன்றி மற்றொருவர் மனதிலிருக்கும் நம்பிக்கையைக் குன்றச் செய்வதற்காக இருக்கக் கூடாது.

    கவியரசரின் வரிகளிலே.

    “பழகும் வகையில் பழகிப் பார்த்தால்
    பகைவன் கூட நண்பனே
    பாசம் காட்டி ஆசை வைத்தால்
    மிருகம் கூட நண்பனே “

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:
    http://zerobs.net/bertrand-russell-on-religion
    [http://zerobs.net/media/bertrand-russell-on-religion.jpeg]

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (112)

    –சக்தி சக்திதாசன்.

    kaviyarasuஅன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள். கவியரசர் கண்ணதாசன் பிறந்த மாதத்தின் கடைசி வாரத்தில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    கவியரசர் கண்ணதாசன் என்னுள்ளத்திலே ஏற்படுத்திய தாக்கங்கள் போன்று வேறு எவருமே ஏற்படுத்தியது கிடையாது என்று சொன்னால் மிகையாகாது.

    பதின்ம வயதுகளின் இறுதியில் லண்டனில் காலடி வைத்த எனக்கு ஆன்மீகம், தத்துவம் என்பனவற்றில் அந்தக் காலக்கட்டத்தில் எவ்வித ஈடுபாடுமே கிடையாது.

    காதல் எனும் அந்த மூன்றெழுத்தின் அர்த்தம் புரியாமல் வனப்புள்ள வனிதையரின் பால் மனம் செல்வதும், அவ்வுணர்வுகளுக்குகந்த கவியரசர் பாடல்களை மனம் முணுமுணுப்பதுமே அப்போதைய கவியரசரைப் பற்றிய எனது புரிந்துணர்வாக இருந்தது.

    காலம் கரையக் கரைய, வாழ்வின் வளைவு சுளிவுகளுக்குள்ளாக  நுழைந்து வெளியே வரும் போது அடைந்த வேதனைகள், மகிழ்ச்சிகளினால் விளைந்த இன்ப, துன்ப வலிகள், அவை விட்டுச் சென்ற அனுபவ வரிகள் இவைகளுக்கெல்லாம் காரணங்களைத் தேடி மனம் ஓலமிடும் போது, அங்கே அப்போது ஒவ்வொரு நிகழ்விற்கும் அவர் தீட்டிய ஒவ்வொர் பாடல் மருந்தாகியது.

    கவியரசரின் அனுபவ ஞானம், அந்த ஞானத்தின் ஆழம் என்பன அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்கியது..

    வாழ்வின் உறவுகள் கொடுத்த அடிகளின் வலி தாங்காமல் எனதுயிர் நண்பனோடு நான் நிகழ்த்திய மன உணர்வுப் பரிமாற்றங்களின் பின்னே அவன் எனக்கு ஒவ்வொன்றாய் கவியரசரின் அர்த்தமுள்ள இந்துமதம் நூல்களை ஒவ்வொரு பாகத்தையும் அனுப்பினான்.

    படிக்கப் படிக்க நெஞ்சம் ஆனந்தக் கண்ணீர் வடித்தது. ஆமாம் எங்கெங்கு அவரின் இதயந் தொட்ட உணர்விகளின் வரிகள் அவருக்கு ஏற்பட்ட வலிகளை விளக்கினவோ, அவைகளில் பல எனது வலிகளின் காரணங்களையும் தொட்டுக் காட்டி நின்றன.

    அவரது பாடல்கள், அவற்றில் துள்ளி விழும் வரிகளவை ஒவ்வொன்றும் வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான விளக்கங்களைக் கொடுத்தன. ஆம், கவியரசரின் பாடல்களுக்குள் புகுந்து அவற்றின் பின்னே புதைந்திருக்கும் அர்த்தங்களைத் தேடினால் அவை எமது மனநிலைக்கேற்ப வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு அனுபவங்களுக்குத் துணை வரும்.

    எதோ ஒரு இடத்தில் படித்ததாக ஞாபகம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த “தெய்வத்தாய்” எனும் படத்திற்காக டி.எம்.எஸ்சும் பி.சுசீலாவும் பாடும் பாடலான “பேசுவது கிளியா ? இல்லை பெண்ணரசி மொழியா” எனும் பாடலை யாத்தவர் கவியரசர். அப்பாடலைப் பற்றி மக்கள் திலகமும் அவருடைய அபிமானி ஒருவரும் மக்கள் திலகத்தின் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, வந்தவர் மக்கள் திலகத்திடம் கவியரசரின் திறமைதான் என்ன, உங்கள் வாழ்க்கைச் சரிதத்தை இரண்டே இரண்டு வரிகளில் இயம்பி விட்டாரே என்று கூறும் போது, அப்படியா அது என்ன என்று மக்கள் திலகம் கேட்க;

    “சேரனுக்கு உறவா ? செந்தமிழர் நிலவா ?” எனும் வரிகளில் கேரளத்தில் பிறந்து இன்று தமிழர் மனங்களிளெல்லாம் நிலவாக ஒளிவீசிக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டுள்ளார் என்று சொன்னதும் மக்கள் திலகமே ஒரு கணம் திகைத்து விட்டாராம்.

    என் வாழ்க்கையிலே நான் சந்தித்தோர் அநேகம் பேர் எனக்கு உதவியாக உந்து சக்தியாக இருந்தவர்கள், இருப்பவர்கள் பலர். ஆனால் என்ன ஏமாற்றி விட்டுச் சென்றவர்கள் சிலர்.

    அப்படியான ஏமாற்றங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைக் கொடுத்தது கவியரசர் அவர்களின் பாடல்களும் அவரது படைப்புக்களுமே.

    “வனவாசம்” பின்பு “மனவாசம்” என்று தனது வாழ்க்கைச் சரிதத்தை திறந்து வைத்த போது, ஏதோ அவர் ஒரு நூலை ஆக்கினார் என்று எண்ணுவோர்கள் பலரிருக்கிறார்கள். ஆனால் அவராக்கிய அந்த நூல்கள் எத்தனை பேரின் விடையறியா வினாக்களுக்கு விடையளித்து மனதில் ஒரு ஆறுதலைக் கொடுத்துள்ளது என்பதை உணர்தோர்கள் சிலரே.

    கவியரசரின் எழுத்துகள் , படைப்புகள் இன்றும் நிலைத்திருப்பது அவைகள் பட்டி தொட்டிகளெல்லாம் சென்றடைந்த காரணத்தினாலேயே.

    அப்படி பட்டி தொட்டிகளெல்லாம் சென்றடையக் காரணமாகவிருந்தது … அவருடைய எளிமையான  எழுத்துக்களே. அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அவரது பாடல்களும் எழுத்துக்களும் இருந்தமையாலேயே…

    வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது நிலையானதல்ல. இன்று வெற்றி பெற்றோர் நாளை தோல்வியடையலாம், நாளை தோற்போர் அடுத்த நாளே ஜெயிக்கலாம் இதை,

    “புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை”

    என்று எத்தனை எளிமையாக தத்ரூபமாகச் சொல்லியிருக்கிறார். இவையெல்லாம்தான் இன்றுவரை அவரது பெயரை  உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களிலெல்லாம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    எழுதும் என் விரல்களுக்கு உத்வேகத்தையும், எழுத வேண்டும் அது பலரையும் சென்றடைய வேண்டும் எனும் ஆவலை எனக்கு அளிப்பதுவும் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் எண்ணங்களே !

    இன்று புலம்பெயர் நாடுகளிலெல்லாம் பல படைப்பாளிகளை உருவாக்கித் தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று கவியரசரின் ஆற்றல் என்று சொன்னாலது மிகையாகாது.

    கம்பர், வள்ளுவர் என்போர் போன்ற அறிஞர்களின் ஆக்கங்களை அனைவரும் புரியும் படியாக எளிய நடையில் நமக்களித்தவர் கவியரசரே !

    என் மானசீகக்குருவைப் பற்றிய எனது சில கருத்துகளை அவர் பிறந்த இம்மாதத்திலே என் அன்பு வாசகர்களுடன் இம்மடல் மூலமாகப் பகிர்ந்து கொள்வது என் நெஞ்சத்தை நிறைக்கிறது

    “நீ நிரந்தரமானவன் அழிவதில்லை
    எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை”

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 111

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் மற்றொரு வாரத்தில் உங்களுடன் உறவாட மகிழ்வுடன் வருகிறேன்.

    உடலுக்கும், உள்ளத்திற்கும் உயிருக்கும் உள்ள சம்மந்தம் தான் என்ன ? ஆழமான கேள்வி இல்லையா ?

    எமது உயிரைக் காவிச் செல்லும் கருவியாக உடல் செயற்படுகிறது அந்த உடலின் செயற்பாடுகளுக்கு காரணமாக நமது உள்ளம் விளங்குகிறது.

    இதுவே பொதுப்படையான எளிமையான விளக்கமாகத் தென்படுகிறது.

    என்னடா இது ! இந்த சக்தி மருத்துவரா அன்றித் தத்துவாசிரியனா ?

    பயப்படாதீர்கள் நான் சொல்ல வரும் விஷயத்திற்கான அடிப்படைக்காகவே இந்த அலசல்.

    simvastatin1சில ஆங்கிலேயர்களோடு பேசும் போது “My body is a temple” என்பார்கள். அதாவது தமது உடம்பை ஒரு ஆலயம் போலப் பேணிப் பாது காக்கிறார்கள் எனும் பொருள்படக் கூறுவார்கள்.

    எம்மில் எத்தனை பேர் எமது உடலை அதற்குரிய கெளரவமளித்துப் பேணுகிறோம் ?

    எமது உடலின் பருமனைக் கூட்டும் உணவுகளை உட்கொள்கிறோம், இரத்த அழுத்தம், நீரிழிவு(சர்க்கரை வியாதி), கொலஸ்ட்ரால் என்பன போன்ற உயிருக்கு ஆபத்தான வியாதிகளை தருவித்துக் கொள்ளும் உணவு வகைகளை கட்டுப்பாடின்றி உட்கொள்கிறோம்.

    பின்னால் அதனால் ஏற்படும் உடல் உபாதைகளினால் அல்லல் பட்டு டாக்டர்களிடம் அலைந்து பல மருந்து மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

    ஆனால் இத்தனைக்கும் நாம் ஆறறிவு படைத்த ஜீவராசிகள். அனைத்தையும் உணர்ந்து பகுத்து அறிந்து கொள்ளக்கூடிய வல்லமை கொண்டவர்கள்.

    இருப்பினும் எமது சுவையின் தேடலைத் தவிர்க்க முடியாதவர்களாக, கட்டுப்பாடில்லாமல் வாழுகிறோம்.

    தயவு செய்து நான் அனைவரையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எனும் பாணியில் உள்ளடக்குவதாக எண்ண வேண்டாம்.

    விதிவிலக்காக பலர் மிகுந்த கட்டுப்பாடுடன் தமது உடலைப் பேணி வருகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

    ஆனால் இங்கே நான் கூறவிழைவது எனது புலம்பெயர் வாழ்க்கையில் நான் சந்திக்கும் பெரும்பான்மையினரைப் பற்றியே ஆகும்..

    இதை எதற்காக கூற வந்தேன் என்றால் தான்தோன்றித்தனமான வாழ்க்கையினால் அல்லல் படுவோருக்கு மேலும் அல்லல்களை அள்ளி வழ்ங்கியிருக்கிறது இன்றைய பிரித்தானிய செய்தித்தாள்களிலும், மற்றைய ஊடகங்களிலும் வெளி வந்த ஒரு செய்தி.

    simvastatinசிலகாலங்களுக்கு முன்னால் “கொலஸ்ட்ரால் (Cholostral)” எனும் இரத்த சம்பந்தமான வியாதி இருதயநோய்களுக்கு வழி வகுக்கிறது என்பதால் அதற்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் “ஸ்டட்டின் (Statin)” எனப்படும் மாத்திரை பொதுவாகவே உட்கொள்ளப்பட்டால் இருதயம் சம்பந்தமான வியாதிகளைத் தடைசெய்யும் என்றொரு அறிக்கை வந்தது.

    அதைத் தொடர்ந்து அம்மாத்திரை பலருக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

    ஓ ! அது நல்லதொரு செயல் தானே அதற்கென்ன வந்தது இப்போது ?

    போச்சுடா !

    இன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் முன்பு வெளிவந்த அறிக்கை அம்மாத்திரையைத் தயாரிக்கும் கம்பெனிகளுக்காக நிகழ்த்தப்பட்ட ஆய்வு என்றும் வைத்தியர்களின் சங்கம் அவ்வறிக்கையின் உண்மைத்தன்மையில் சந்தேகம் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வியாதி ஏற்படும்போதுதான் அதற்கு மருந்து தேவைப்படுக்கிறது. ஒவ்வொரு மருந்தோ அன்றி மாத்திரையோ எந்த வியாதியைக் குணப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறதோ அதைக் குணமாக்குவதோடு வேறு சில தேவையற்ற பக்க விளைவுகளையும் உருவாக்குகிறது என்பது உண்மையே.

    இன்றைய அறிக்கையின்படி ஒவ்வொருவருக்கும் இச் “ஸ்டட்டின்” எனும் மாத்திரையை பரிந்துரைக்கும் போதும் மருத்துவர்கள் அதனால் ஏற்படும் நன்மையையும், ஏற்படப்போகும் பக்க விளைவுகளையும் சீர்தூக்கிப் பார்த்த பின்பே அம்மாத்திரையை பரிந்துரைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    “சொன்னாலும் வெட்கமடா ! சொல்லா விட்டால் துக்கமடா ! ” எனும் பாடல் வரிகளின் வழியில் இம்மாத்திரையை

    “எடுத்தாலும் துன்பமடா ! எடுக்கா விட்டாலும் துன்பமடா !”

    விஞ்ஞானம் கணவேகத்தில் வளர்ச்சி அடைந்து கொண்டு போகிறது.

    ஒரு பக்கம் ஒவ்வொரு நோய்களுக்குமான அறிகுறிகளும் அதற்கான நிவாரணங்களும் இணையத்தளங்களில் குவிந்து கொண்டிருக்கின்றன.

    மற்றொரு பக்கம் டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட நிவாரணங்களே சர்ச்சைகளுக்குள்ளாகின்றன.

    வைத்தியர் சொல்லே வேதம் என்று இம்மாத்திரையை உட்கொண்டுவரும் என்போன்றோரின் நிலை ?

    அந்தோ பரிதாபம் !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (110)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்களுடன் இம்மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    இங்கிலாந்து அரசியல் ஆழியில் அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறது கடந்த வாரம் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலும், ஜரோப்பிய பாராளுமன்றத்திற்கான தேர்தலும்.

    அப்படி என்ன அதிர்வலைகள் என்று கேட்கிறீர்களா?

    இதுவரை காலமும் இங்கிலாந்து அரசியலில் முத்திரை குத்திவந்த மூன்று அரசியல் கட்சிகளுக்கும் பேரதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில் நான்காவது கட்சி ஒன்று இத்தேர்தல்களில் தனது முத்திரையை ஆணித்தரமாகப் பதித்துள்ளது.

    ஆமாம், இதுவரை காலமும் கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சி எனும் மூன்று கட்சிகளே இங்கிலாந்து அரசியல் உலகில் கோலோச்சி வந்தன ஆனால் இத்தேர்தலின் மூலம் யூகிப் (UKIP) – ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி எனும் கட்சி தனது ஆளுமையை நிலைநாட்டியுள்ளது எனலாம்.

    நைஜல் போல் ஃப்ராஜ் (Nigel Paul Farage) என்பவரின் தலைமையின் கீழியங்கும் யூகிப் எனும் கட்சியே இப்போது இங்கிலாந்து அரசியல் வானில் நான்காவது நட்சத்திரமாக உதித்துள்ளது.

    sakthidasan1 ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய இராச்சியம்          வெளியேற வேண்டும் என்பதை முக்கியக் கொள்கையாக வைத்து இங்கிலாந்தினுள் வரும் வெளிநாட்டவரின் குடியேற்றக் கொள்கையை மறுதலிக்கும் கொள்கையையும் பிரதிபலிக்கும் இவரது கட்சி, வரலாற்று முக்கியத்துவம் பெறக்கூடிய வெற்றியடைந்துள்ளது எனலாம்.

    sakthidasan2

    இவரது கொள்கைகள் வலதுசார் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இவரது கருத்துக்கள் சிலசமயங்களில் நிறவேற்றுமை, இனவேற்றுமை கருத்துக்களுக்கு வலுச்சேர்ப்பவையாக இருக்கிறது எனும் குற்றச்சாட்டு இவர்மீது பலமுனைகளில் இருந்து எழுவதுண்டு.

    ஆயினும் தான் ஒரு இனவாதி அல்ல என்று மிகவும் ஆணித்தரமாக அடித்துரைக்கும் இவர் மிகவும் வெளிப்படையாகத் தனது கருத்துகளைக் கூறும் துணிச்சலுடையவர்.

    சமுதாயத்தின் அடித்தளத்தில் நிலவிவரும் முரணான கருத்துக்களை விவாதிக்க முன்னணி அரசியல் தலைவர்கள் தயங்கும் சமயத்தில் அதன் விவாதங்களை வெளிக்கொணர்ந்து அதற்கான மேடையமைத்துக் கொடுத்தவர் இவர் என்று கூறுவதில் தவறேதுமில்லை.

    வெளிநாட்டவர் குடியேற்றக் கொள்கை எனும்போது இவரது ஆதங்கம் ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகள் அதுவும் குறிப்பாகச் சமீபத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த ரொமேனியா, பல்கேரியா போன்ற நாடுகளின் பிரஜைகள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி ஜக்கிய இராச்சியத்தினுள் நுழையும் உரிமை பெற்றிருப்பதுவே.

    இவர் குறிப்பிடும் மற்றொரு கருத்தானது நன்கு கல்வித்தேர்ச்சி பெற்று இங்கிலாந்தின் முன்னேற்றத்துக்கு உதவக்கூடிய இந்தியர்களைத் தடுத்து எவ்விதக் கல்வித் தகைமையும் இல்லாத, இங்கிலாந்து அரசாங்க உதவியில் தங்கியிருக்கக்கூடியவர்களைக் கட்டுப்பாடின்றி உள்ளே விடுவது எவ்வகையில் நியாயம் என்பதே.

    நடந்து முடிந்த இந்தத் தேர்தலானது ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மத்தியில் பலவித சர்ச்சைகளைக் கிளப்பி பலமுனை விவாதங்களை முடுக்கி விட்டுள்ளது.

    கட்சிகள் ஒவ்வொன்றும் தத்தமது தலைமைகளை மீண்டும் பரிசீலிக்கத் தொடங்கி உள்ளன. அடுத்த வருடம் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் வெற்றியடைய வேண்டுமானால் எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்பதில் தீவிரமாகக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்கள்.

    தேர்தலில் இங்கிலாந்தில் மட்டுமல்ல, முக்கியமான ஜரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, கிறீஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் ஜரோப்பிய ஒன்றியத்தின் தற்கால நடைமுறைகளில் அதிருப்தி தெரிவிக்கும் வகையிலேயே மக்களின் தீர்ப்பு அமைந்துள்ளது.

    இத்தேர்தல்களைத் தொடர்ந்து நடந்த ஜரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் கலந்தாலோசிப்புக் கூட்டத்தில் பேசிய இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரன் மக்களின் அபிலாஷைகளை உள்வாங்க வேண்டிய தேவை ஜரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ளது எனவும், ஜரோப்பிய ஒன்றியத்தின் கட்டமைப்பில் நிச்சயம் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.

    இதனை ஆதரித்து பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியும் பேசியது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்து அரசியல் அரங்கத்தில் எழுந்த ஆர்ப்பரிப்பு அலைகள் தொடர்ந்து இங்கிலாந்துப் பொதுத்தேர்தல் வரை போகுமா? இல்லையானால் இது வெறும் ஜரோப்பிய எதிர்ப்பு அலைதானா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்,
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • என் பார்வையில் கவியரசர் கண்ணதாசன்

    — சக்தி சக்திதாசன்

    என் பார்வையில் கவியரசர் கண்ணதாசன்

     

     

    Kannadasan

    எழுபதுகளில் புலம்பெயர்ந்த ஒரு புலம்பெயர் தமிழனின் பார்வையில் கவியரசர் கண்ணதாசன் எவ்வகையில் விழுந்தார் எனும் கோணத்திலே எனது இந்த சிறிய பதிவு அமைகிறது.

    நாம் பிறந்த மண்னை விட்டு வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு காலகட்டங்களில் வெளியேறி தமது வாழ்வை வெவ்வேறு இடங்களில் அமைத்துள்ளோம்.

    அவ்வகையில் எழுபதுகளின் நடுப்பகுதியில் மேற்படிப்புக்காக நான் பிறந்த என் தாய்மண்ணாம் ஈழத்தை விட்டு புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் எனது வாழ்வினை அமைத்துக் கொண்டவன் .

    என்னைப் போன்ற எனது நிலையில் உள்ள அநேகம் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

    எனது வாழ்க்கையில் எனது தாய்மண் நினைவுகளோடு என்னை பிணைத்து வைத்துப் பார்க்கும் கவியரசரின் பாடல் ஒன்றை இங்கு எடுத்துப் பார்க்க விழைகிறேன்.

    கவியரசர் தானே தனது வார்த்தைகளில் ” நான் கவியத்தாயின் இளைய மகன், காதல் பெண்களின் பெருந்தலைவன் ” என்று தன்னைப்பற்றிய விளக்கத்தை அழகாக அளித்துள்ளார்.

    ஒரு நாயகி தன் நாயகனின் பிரிவை எண்ணிப் பாடும் இந்தப் பாடலை நான் எனது தாய்மண்ணைப் பற்றிய பிரிவுத்தூயர் வாட்டும் போதெல்லாம் எண்ணிப்பார்த்து எனது மனதைத் தேற்றுவதுண்டு.

    கவியரசரின் தனித்துவமே அதுதான். எந்தவொரு சூழலில் நாம் எம்மைக் கண்டாலும், எத்தகையதோர் உணர்வுத் தாக்குதலுக்கு நாம் உள்ளாகினாலும் அங்கெல்லாம் அந்த ரணத்திற்குக் களிம்பாக அவரது ஏதாவது ஒரு பாடல் எமக்குக் கை கொடுக்கிறது.

    பாலும் பழமும் எனும் படத்தில் பீ.சுசிலாவின் இன்னிசைக்குரலும், விஸ்வநாதன் -ராமமூர்த்தி அவர்களின் இனிமையான இசையும் கவியரசரின் வரிகளுக்கு உயிரூட்டிய பாடலொன்றிலிருக்கும் இரு பத்திகள் எனது தாய் நாட்டோடு எனைப் பிணைக்கும் வரிகளாய் அமைந்திருக்கிறது.

    எண்ணங்களாலே பாலம் அமைத்து
    இரவும் பகலும் நடக்கவா…

    ஆமாம் புலம் பெயர்ந்தோர் வாழ்விலே தாய்நாட்டின் எண்ணங்கள் தானே மிகுந்திருக்கின்றன. அவ்வெண்ணங்களின் துணையாலே பாலம் அமைத்து எனது தாய்நாட்டை நோக்கி நான் இரவும் பகலும் நடப்பதைப் போன்ற ஒரு இனிமையான உணர்வை எனக்கு கவியரசரின் வரிகள் ஈந்திருக்கின்றன.

    தாய்மண்ணை விட்டு இற்றைக்கு சுமார் நாற்பது வருடங்களாய் பிரிந்திருக்கும் என் மன உணர்வுக்கு,

    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி,
    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
    இரு கை கொண்டு வணங்கவா.. ,
    இரு கை கொண்டு வணங்கவா..

    எனும் வரிகள் எத்தனை இதமாய் இருக்கிறது என்பது என்னைப்போலுள்ளவர்களின் உணர்வுகளாலேயே புரிந்து கொள்ள முடியும்.

    35 வருடங்களின் பின்னால் 2013ம் ஆண்டு எனது தாய்மண்ணில் மீண்டும் நான் கால்பதித்தபோது மீண்டும் என் மானசீகக் குரு கவியரசரின் வரிகள் உணர்வோடு உள்ளத்தில் சதிராடின

    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..
    அழுதால் கொஞ்சம் நிம்மதி
    பேசமறந்து சிலையாய் இருந்தால்….
    பேசமறந்து சிலையாய் இருந்தால்…
    அதுதான் தெய்வத்தின் சந்நிதி…..
    அதுதான் காதல் சந்நிதி

    ஆமாம் அத்தனை காலம் பிரிந்து இருந்த எனது தாய்மண்ணின் மீது கால்கள் பதித்தபோது வார்த்தைகளுக்கு அங்கே என்ன வேலை பேச மறந்து சிலையாக இருந்து எனது தாய்மண்ணை தெய்வசந்நிதியாக எண்ணி வணங்கத்தானே முடியும் !

    தாய்மண்ணின் மீதுள்ள காதலுக்கு அதுதானே சங்கமாகின்றது.

    புலம்பெயர்ந்தவன் எனும் வகையிலே எனது மொழியயும் எனது தாய்மண்ணின் மீதான பாசத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கு என் மனதில் மானசீகக் குருவாக இருந்து என்னை வழிநடத்தும் கவியரசரின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துக்களாகத் திகழ்கின்றன.

    அத்தனை முத்துக்களையும் உள்ளடக்கிய முத்துமாலையென கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் ஒரு புலம்பெயர் தமிழனாக என்னுள்ளத்தில் கொலுவிற்றிருக்கிறது.

    ஒரு இளைஞனாக புலம் பெயர்ந்த என் வாழ்க்கைப் பயணத்தில் அகவைகள் நாற்பது அவசரமாக ஓடியே போய்விட்டது. இந்த காலங்களில் எத்தனையோவிதமான இன்ப துன்ப நிகழ்வுகளுக்குள்ளால் நான் உருண்டோடிப் போயிருக்கிறேன்.

    அந்தச் சமயங்களிலெல்லாம் கவியரசரின் அற்புதமான இலக்கியங்கள் தான் எனக்கு கைகொடுத்து எனது உணர்வுகளைச் சீராக்கியிருக்கின்றன.

    வாழ்வு என்மீது தொடுக்கும் அம்புகளின் வலிகளைத் தாங்கும் கேடயங்களாக அர்த்தமுள்ள இந்துமதம் முதற்கொண்டு அவரது பல படைப்புக்கள் என்னை இக்கட்டான சூழல்களில் வழிநடத்தியிருக்கின்றன.

    எப்படி அவரது எழுத்துக்கள் மட்டும் இத்தகையதோர் பாதிப்பை ஏற்படுத்தின ?

    அவர் தனது வாழ்க்கைச் சம்பவங்களோடு, அதாவது ஒரு சாதாரண இளைஞனாக ஒரு குடும்பத்தலைவனாக, நட்புக்களை நம்பி பின் வஞ்சிக்கப்பட்டவராக, நல்ல மனிதர்களின் உதவியால் உயர்ந்தவராக தனது எழுத்துக்களை பிணைத்து அதனை எமக்கு அனுபவ அறிவாக ஊட்டியதால் தான்.

    அவர் நடந்த பாதைகளில் ஏற்பட்ட சறுக்கல்கள் போல் எனது வாழ்வில் எனக்கு ஏற்பட்ட சறுக்கல்களைப் புரிந்து கொள்ள அவரது எழுத்துக்கள் உதவின.

    என் பார்வையில் கண்ணதாசன் ஒரு குன்றின் முன்னே வீற்ரிருக்கும் மாமலை போல் தென்படுகிறார்.

    எனது எழுத்துக்களுக்கு ஒரு உந்துசக்தியைத் தருகிறார். எனது கவிதைகளுக்குள் அவரின் நினைவுகள் வாழ்கின்றன.

    ஆக மொத்தம் அவரை எண்ணும் போதெல்லாம் என் விரல்களில் எழுத வேண்டுமென்ற துடிப்பெழுகின்றது.

    அவர் காவியத்தாயின் இளையமகன் மட்டுமல்ல தனித்துவமிக்க ஒரு தமிழ்மகன்.

     

     
     

     
    சக்தி சக்திதாசன்
    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (109)

     

    – சக்தி சக்திதாசன்
    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    அதற்குள் மற்றொரு வாரம் வந்து விட்டதா? கால ஓட்டத்தின் வேகம் கணிக்க முடியாதபடி இருக்கிறது. இயந்திர வாழ்க்கை போல எமது வாழ்க்கை எந்த வித காரணங்களுக்கும் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது..

    உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனக் கணிக்கப்படும் பாரத தேசத்தின் தேர்தல் மிகவும் ஒழுங்கான முறையில் நடந்து முடிந்திருக்கிறது.

    தேர்தல் முடிவுகள் இந்திய மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியதற்கான சான்றாகத் தென்படுகிறது.

    நான் எந்தவொரு அரசியல் சாயமும் அற்றவன். யார் பதவிக்கு வந்தாலும் நாட்டின் அடிப்படை ஜனநாயக உரிமைகளும், சராசரி மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கான விழுமியங்களும் பாதுக்காக்கப்பட வேண்டும் என்று விரும்புபவன்.

    உலகில் மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்பதே யாதார்த்தமான கருத்து. ஒரு நாட்டில் சமத்துவமான ஆட்சி நிலவ வேண்டுமெனில் அந்நாட்டின் அரசாட்சியில் மாற்றங்கள் ஏற்படுவது அவசியம்.

    ஓரே கட்சி பலவருடங்கள் ஆட்சியில் நீடித்திருப்பது ஜனநாயகத்திற்கு உகந்த செயலாக இருக்காது.

    இக்காலகட்டத்தில் இந்திய மக்கள் முற்றுமுழுதாக தேசியரீதியில் ஒரு மாற்றத்தை வேண்டி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

    அரசியல் கட்சிகள் அதுவும் தேசியரீதியிலான அரசாங்கத்தில் பிரதமராக அல்லது நாட்டின் தலைவராக வருபவர்கள் அத்தகையதோர் குடும்பத்தில் பிறந்தவர்களாகவோ அன்றி வாழ்க்கை வசதியில் மேல்நிலையில் உள்ளவர்களாகவோ இருக்கும் நிலையைத்தான் காணக்கூடியதாக இருக்கிறது.

    ஆனால் நடந்து முடிந்த இந்தியத் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் வாழ்வின் அடிமட்டத்திலிருந்து உழைப்பினால் உயர்ந்து வந்தவர் என்பதனால் நாட்டின் அடிமட்ட மக்களின் வாழ்வின் சுபீட்சத்திற்கு வழிவகுப்பார் எனும் நம்பிக்கை ஒளி சிறுகீறலாக உள்ளத்தின் ஓரத்தில் எழத்தான் செய்கிறது.

    இன்றைய இங்கிலாந்து நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைவர்களை உற்று நோக்கினால் அவர்கள் அனைவரும் வாழ்வில் மேல்நிலையிருப்பவர்களே.

    இங்கிலாந்தின் முக்கியமான கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சி எனும் மூன்று கட்சிகளின் தலைவர்களான பிரதமர் டேவிட் கமரன், எட் மில்லிபாண்ட், நிக் கிளேஹ் என்பவர்களின் வாழ்வாதாரங்களைப் பார்க்கும் போது அவர்கள் வாழ்க்கை வசதிகளின் அளவுக்கோட்டில் மேல்நிலையிலேயே உள்ளார்கள்.

    ஊடகங்களில் இத்தலைவர்கள் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களுக்கு விடிவு காணப்போகிறோம் என்று கூறி அதற்கான வழிமுறைகளைக் கொள்கைப்பிரகடனங்களாக வெளியிடும் போது இவர்களுக்கு எப்படி நமது வாழ்வின் தேவைகளின் அவசியம் புரியப் போகிறது என்று சாதாரண மக்கள் அங்கலாய்ப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

    கடந்தவாரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த லேபர் கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட் இரண்டு இடங்களில் சரியான வகையில் மட்டிக் கொண்டார். வானொலிப் பெட்டியில் நீங்கள் சாதாரண மக்களின் அன்றாடச் சிக்கல்களை நன்கு அறிந்ததாகச் சொல்கிறீர்களே உங்களுடைய குடும்பத்தின் வாராந்த செலவு என்ன என்று கேட்கப்பட்டபோது 80 ஸ்ரேலிங் பவுண்ஸ் என்று குறிப்பிட்டு விட்டார் போங்கள் !

    போச்சுடா ? கணவன், மனைவி இரண்டு குழந்தைகள் எப்படி வாராந்த 80 பவுண்ஸ் செலவில் வாழ்லாம் என்று நாலா திக்குகளிலும் இருந்து கருத்துக்கள் எகிறிப் பாய்கின்றன.

    அது மட்டுமின்றி அடுத்த தேர்தலில் தாம் அரசமைக்க வேண்டுமானல் கன்சர்வேடிவ் கட்சி வசமிருக்கும் தொகுதிகளில் 58 ஜக் கைப்பற்ற வேண்டிய லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட் 58 தொகுதிகளில் ஒன்றுக்கு விஜயம் செய்திருந்தார்.

    அவ்விஜயத்தின் போது அவரைப் பேட்டி கண்ட ஊடகவியலாளர் அப்பகுதியின் லேபர் கட்சியின் அமைப்பாளரின் செயற்பாடுகளைப் பற்றி வினவும் போது, எட் மில்லிபாண்ட் அவ்வமைப்பாளரின் பெயரைக் கூறி அவர் நகராட்ச்சியின் தலைவராக நன்றாகச் செயற்படுவதாகக் கூறினார். அங்கேதான் மற்றொரு சர்ச்சை லேபர் கட்சியின் தலைவருக்கு எழுந்தது,

    ஆமாம், அவ்வூடகவியளாளர் என்ன அப்படிக் கூறிவிட்டீர்கள் இப்பகுதி நகராட்ச்சியில் அதிகாரத்திலிருப்பது கன்சர்வேடிவ் கட்சி, பின் எப்படி உங்கள் கட்சி அமைப்பாளர் நகராட்ச்சிச் சபையில் தலைவராகச் செயற்பட முடியும் ? என்றாரே பார்க்கலாம்!

    நாட்டின் எதிர்க்கட்சியின் தலைவர், நாட்டின் அடுத்த பிரதமர் என்று தன்னை எண்ணிக் கொண்டிருப்பவர் தமது கட்சி வெற்றியடைய வேண்டிய ஒரு தொகுதியின் பிரச்சாரத்திற்காக வரும்போது அத்தொகுதியின் நகரசபை ஆட்சி அதிகாரம் யார் கையிலிடுக்கிறது என்பது கூடத் தெரியாமல் வருவதா?

    இவரா எமது நாட்டை வழிநடத்தப் போகிறார்? எனும் கேள்வி மிகவும் பலத்த சத்தத்துடன் பல ஊடகங்களில் குறிப்பாக கன்சர்வேடிவ் கட்சிக்குச் சார்பான ஊடகங்களில் ஒலிக்கத் தொடங்கி உள்ளது.

    பன்னாட்டு அரசியல் இன்று பல மாற்றங்களுக்குள்ளாகி மீண்டும் ஒரு அடிப்படை வாதத்தில் வந்து நிற்கிறது என்றே சொல்ல வேண்டும்.

    மக்களுக்காக அரசியல்வாதிகளா? இல்லை அரசியல்வாதிகளுக்காக மக்களா? எனும் கேள்வி இன்னமும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டே இருக்கிறது.

    modi_emoஆனால் இந்தியாவின் இன்றைய பிரதமர் தெரிவு மிகவும் நெஞ்சை நெகிழ்வூட்டும் விதமாக அமைந்துள்ளது. முதற்தடவையாக ஒரு பிரதமர் நாடளுமன்றத்தினுள் காலடி வைக்கும் போது தலை வணங்கி விட்டுச் சென்றதைப் பார்க்கும் போது பாராளுமன்ற அரசியலில் அவர் வைத்திருக்கும் அலாதியான மரியாதை மனதுக்குத் தெம்பூட்டுகிறது.

    அவர் பேசும்போது மிகவும் உணர்ச்சிபூர்வமாகப் பேசிக் கண்ணீருடன் இந்திய தேசத்தைத் தன் தாயாகவும் இந்திய மக்களைத் தன் சகோதரர்களாகவும் கருதிப் பேசியது மிகவும் உற்சாகமூட்டுவதாகவும் உலகெங்கும் உள்ள ஜனநாயக அரசியல் தலைவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாகவும் அமைந்திருந்தது.

    மிகவும் எதிர்பார்ப்புக்களுடன் பதவியேற்கும் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, அவரது திணிக்கப்பட்ட எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதன் மூலம் மற்றைய நாட்டு அரசியல் தலைவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைவார் என எதிர்பார்க்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

     

     

    படம் உதவி: http://amritasabat.blogspot.com/   –    http://www.coastaldigest.com/images/stories/pictures/May2014/May15/modi_emo.jpg

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (108)

     

    — சக்தி சக்திதாசன்

     

     
    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன். இம்மடலை வரையும் போது சாரளத்தின் வழியாக வெளியே தெரியும் காட்சியைப் பார்க்கிறேன்.

    ஆதவன் தன் ஒளிக்கதிர்களால் பகலுக்கு பளிச்சென்ற வெளிச்சத்தை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறான்.

    பச்சைப் பசேலென்ற இலைகள் வசந்தகாலத் தென்றலினால் தாலாட்டப்படுகின்றன.

    ஆனால் இதே போலத்தான் இயற்கை எப்போதும் அமைதியாக அழகாகக் கதிரவன் கதிர்களை அள்ளிப்பருகிக் கொண்டிருக்கப் போகிறதா ?

    இல்லை வானம் கறுக்கத்தான் போகின்றது கதிரவனைக் கருமேகங்கள் மறைக்கத்தான் போகின்றன இதே சாரளத்தினூடாக கறுத்துப் போன பகலையும் பார்க்க வேண்டித்தான் இருக்கப் போகிறது.

    ஆனால் நாம் நாமாகத்தான் இருக்கப் போகிறோம் எமது விழிகளின் பார்வைகள் அதே கோணத்தினூடாக காணத்தான் போகின்றன.

    எதற்காக இந்தத் தத்துவப் பீடிகை என்று எண்ணாதீர்கள். சீட்டாட்டத்தில் எம் கைகளில் தவழப் போகும் சீட்டு எது என்று முன்கூட்டியே தெரிந்திருக்காவிட்டாலும் தரப்படும் சீட்டுக்களை வைத்து அச்சீட்டாட்டத்தில் நாம் ஜெயிக்க எத்தனையோ வழிகளில் முயல்கிறோம்.

    அதே போல வாழ்க்கையில் எத்தகைய நிலைமைகள் எம்மீது எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் திணிக்கப்படுகிறதோ நாமறியோம் ஆனால் நாமனைவரும் தரப்பட்ட நிலைமைகளில் எமது வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்குவதற்கு முடிந்தளவு முயற்சிக்கிறோமா ?

    மிகவும் சிக்கலானதொரு கேள்வி இல்லையா?

    இங்கேதான் நான் உங்களுக்கு ஒரு இளைஞனைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவனுடைய வாழ்க்கை நம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக் காட்டாக ஏன் சிலசமயங்களில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டது.

    அவ்விளைஞன் யார் என்று அறிய ஆவலாயிருப்பீர்கள் இல்லையா? இன்றைய ஊடகத்துறையின் கணிசமான வளர்ச்சியினால் இவ்விளைஞனைப் பற்றி நீங்கள் கூட அறிந்திருக்க வாய்ப்புண்டு.

    ss1இங்கிலாந்தின் வடபகுதியில் இருக்கும் ஸ்ரட்வேட்ஷ்யர் (Stratfordshire) எனும் இடத்திலுள்ள பேர்ன்ட்வூட் (Burntwood) எனும் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சட்டன் ( Stephen Sutton ) எனும் வாலிபனைப் பற்றியே குறிப்பிடுகிறேன்.

    அப்படி அவனின் பெருமைதான் என்ன ?

    19 வயதே நிரம்பிய இவ்விளஞன் தனது 15வது வயதில் தான் ஒரு வகை புற்றுநோயால் பீடிக்கப்ப்ட்டிருப்பதை அறிந்தான்.

    அதைத்தொடர்ந்து பல விதமான வைத்தியங்களைக் கைக்கொள்டாலும் தன் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.

    கடந்த வருடம் முற்பகுதியில் அவனுடைய புற்றுநோய் குணமாக்கப்படமுடியாத ஒன்று இன்னும் அதிக காலத்திற்கு அவன் உயிர்வாழ்ப் போவதில்லை எனும் உண்மையை அவன் அறிந்தான்.ss2

    அவன் உலகம் இடிந்து போகவில்லை , அவன் வாழ்க்கை ஒடிந்து போகவில்லை. மாறாகத் தனது இந்த நிலையைத் தனக்கு நேர்மறையான சாதகமாக்கிக் கொண்டான்.

    புது வைராக்கியத்தோடு வாழ்க்கையை எதிர்கொண்டான் சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகநூலில் “ஸ்டீபனின் கதை (Stephen`s storey) எனும் பக்கத்தை உருவாக்கினான்.

    தான் மரணிக்கும் முன்பாக சாதிக்க விரும்பும் 46 விடயங்களை தனக்குத்தேவையான படி வரிசைப்படுத்தி அதனை முகநூலின் மூலம் பகிர்ந்து கொண்டான்.

    அவற்றில் விமானத்திலிருந்து பாரசூட் வழியாக குதிப்பது, மற்றும் வெம்பிளி உதைபந்தாட்ட மைதானத்தில் 90000 ரசிகர்களுக்கு முன்பாக ட்ரம் வாசிப்பது போன்றவற்றோடு தனக்கு உறுதுணையாக இருந்த ” டீனேஜ் கான்சர் ட்ரஸ்ட்” எனும் தொண்டு ஸ்தாபனத்திற்கு 10000 ஸ்ரெலிங் பவுண்ஸ் வரை சேகரித்துக் கொடுப்பது என்பன அடங்கின.

    சாதாரணமாக இப்படியான நோயினால் மரணிக்க இருப்போரின் மனநிலை பொதுவாக சமுதாயத்தின் மீதும் உலகின் மீதும் ஆத்திரம் கொள்வதாக இருக்கும் ஆனால் இந்த 19 வயது இளைஞனோ சமுதாயத்தையும் உலகையும் நேசித்தான். தன்னைப் போல வேறு பலர் மரணிக்கக் கூடாது என்று புற்றுநோய்க்கு மருந்து தேடும் தொண்டு ஸ்தாபனத்திற்கு நிதி சேகரிக்க முயற்சித்தான்.

    எத்தனை உயர்குணம் ! எத்தகையதோர் அர்ப்பணிப்பு !

    அவனுடைய இந்த உயர்குணத்தின் தாக்கம் சமூகவலைத்தளங்கள் எல்லாம் குபீரெனப் பற்றிக் கொண்டது. பல முன்னனி தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அவனுக்கு உதவி செய்ய முன்வந்து பல நிதிசேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

    விளைவு !

    10000 பவுண்ஸ் மட்டுமே சேர்க்க எண்ணிய அவனது நிதிக்கு இதுவரை சுமார் 3 மில்லியன் 30000 வரையிலான ஸ்ரேலிங் பவுண்ஸ் சேர்ந்துள்ளன.

    இங்கிலாந்தின் பிரதமர் தொடங்கி இங்கிலாந்தின் கடைசிக் குடிமகன் வரை அனைவரும் இவ்விளஞனின் தன்னலமில்லா சேவையையும், மனதின் உறுதியயும் கண்டு பிரமித்துப் போயிருக்கிறார்கள்.

    இத்தகையதோர் நல்ல இதயம் கொண்ட இளஞனை காலனும் அதிகமாக நேசித்தான் போலிருக்கிறது இன்று காலை (14/05/2014) சுமார் 11 மணியளவில் ஸ்டீபன் சட்டன் என்னும் உன்னதமான இளைஞனை மனிதாபிமானம் மிக்க ஒரு வீரனைக் காலன் கவர்ந்து சென்று விட்டான்.

    அவ்வீரப்புதல்வனை ஈன்ற அன்னையின் வசனங்கள் மனதைத் தொட்டு நிற்கின்றன …

    “என் மைந்தனின் செய்கையினால் இதயம் பூரிக்கிறது
    என் மைந்தனின் பிரிவின் வலியினால் இதயம் துடிக்கிறது”

    காற்றோடு காற்றாக அவனது மூச்சு மறைந்தாலும் நேற்றோடு நேற்றாக அவன் நினைவுகள் மறையாது.

     
    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ….. (107)

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    உள்ளத்தினுள்ளே ஆயிரம் கேள்விகள், அவையனைத்தும் உதட்டின் வழியே வெளியே வந்தால் உறவின் அர்த்தங்களே மாறிப் போய்விடும்.

    நாளை என்றொருநாள் இல்லாமல் போய்விடுமோ எனும் ஆதங்கத்தில் ஒவ்வொரு நாளையையும் முழுதாக வாழ்ந்து அனுபவித்து விட வேண்டும் எனும் அவாவின் உந்தலினால் வாழ்வது போன்று கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம்.

    மனிதனை மனிதனாகப் பார்க்காமல் இலாப நட்ட கணக்கோடு அளந்து பார்க்கும் ஒரு அவலநிலைக்கு இன்றைய மக்கள் சிலரின் பேராசைகள் அல்லாடிக் கொண்டிருக்கின்றன.

    ஒரு மனிதன் உயிரோடிருப்பதால் என்ன இலாபம்? இறப்பதால் என்ன இலாபம் என்னும் அளவிற்கு வரவு செலவுக் கணக்குகள் பரிசீலிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    தொலைநோக்குப் பார்வையுடன் எடுக்கப்படும் கொள்கைகளும் அதன் வழி தீட்டப்படும் திட்டங்களுமே சுபிட்சமான நாட்டின் எதிர்காலத்திற்கு வித்திடும் எனும் வாதத்தோடு அரசியல் கட்சிகள் அதுவும் குறிப்பாக அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் தமது விளக்கங்களை முன் வைக்கின்றன.

    தொலைநோக்கான பார்வை இருக்க வேண்டியது அவசியமே ! அதன் வழி தீர்க்கமான திட்டங்களும் தீட்டப்பட வேண்டியதும் அவசியமே! ஆனால் அவைகளை நிறைவேற்ற தற்போதைய வாழ்க்கை வசதிகளில் எவற்றைத் தியாகிக்க வேண்டியுள்ளது என்பதே முக்கியமான விடயமாகிறது.

    வாழ்க்கை வசதிகள் என்று நான் குறிப்பிடும் போது ஆடம்பரமான வசதிகளைக் குறிப்பிடவில்லை, அத்தியாவசியமான தேவைகளையே குறிப்பிடுகிறேன்.

    இங்கிலாந்தின் தேசிய சுகாதர சேவையின் நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன.

    உலகிற்கே எடுத்துக்காட்டாக உள்ள இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை இத்தகைய நிலை அடையக் காரணம் யாதென்ற கேள்வி அனைத்து மக்களின் மனதிலும் முன்னனி அரசியல் அவதானிகளின் மத்தியிலும் எழுந்த வண்ணமே உள்ளது.

    வைத்திய சேவையைப் பெறுமிடத்தில் மக்களுக்கு அச்சேவை இலவசமாக இருக்க வேண்டும் எனும் அடிப்படை தத்துவத்தை மையமாக வைத்தே சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் முன்னதாக இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை ஆரம்பிக்கப் பட்டது.

    அது ஆரம்பிக்கப்பட்ட காலத்திற்கும், இன்றைய காலக்கட்டத்திற்கும் பெரிய வித்தியாசமுண்டு. அன்றைய சமூக கட்டமைப்பும், இன்றைய சமூக கட்டமைப்பும் முற்றிலும் வேறுபட்டதாக அமைந்துள்ளது.

    அன்றைய சராசரி மனிதனின் வாழ்வு 60 ஆகக் கணிக்கப்பட்டது. ஆனால், இன்றைய இங்கிலாந்திலோ 90 வயது வரை வாழும் மனிதர்களின் தொகை அதிகரித்துள்ளது.

    வருமானவரி செலுத்துபவர்களும், தேசிய சுகாதர சேவைக்கான நியமனக் கட்டணத்தை வரிமூலம் செலுத்துவோர்களும், அவற்றை செலுத்தாத வேலைஅற்றோர் பட்டியலில் இருப்பவர்களை பராமரிக்கும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

    அத்தோடு இன்றைய அதிகரிக்கப்பட்ட ஜரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்குள் நுழையும் மக்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரமற்ற நிலையில் அவர்களுக்கான் வைத்திய சேவையை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இங்கிலாந்து தள்ளப்பட்டிருக்கிறது.

    சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பார்கள். அதுபோல பொருளாதார நிலை இடம்கொடுக்காத நிலையில் இதே சேவையை இலவசமாக இன்னும் எத்தனை காலத்திற்கு அரசாங்கத்தினால் வழங்க முடியும் எனும் கேள்வியே இன்றைய காலக்கட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

    தேவைகள் பெருகப் பெருக அப்பெருக்கத்திற்கு நிகராக அச்சேவைய வழங்கக்கூடிய பொருளாதாரம் இல்லாவிட்டால் வழங்கப்படும் சேவைகளின் தரம் குன்றிப் போகிறது.

    இதுவே இன்று நாம் கண்கூடாகப் பார்க்கும் யதார்த்த நிலையாகிறது.

    மிகவும் அத்தியாவசியமான இக்கேள்விகளுக்கு மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் எந்தக் கட்சி தமது திட்டங்களை தகுந்தவாறு முன்வைக்கிறதோ அக்கட்சியே அடுத்த வருடம் நடக்கும் பொதுத்தேர்தலில் அரசமைக்கும் அங்கீகாரத்தைப் பெறும் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்து.

    இவ்வொரு வருட காலத்தில் ஏற்படும் பல மாற்றங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

     

     

    படம் உதவி: http://www3.gehealthcare.com/en/Services/Equipment_Financing – http://www3.gehealthcare.com/en/Services/~/media/Images/Services/Equipment%20Financing/Servcices-HFS-Equipment-Financing.jpg?mw=482

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (106)

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் கூடிய மடலுடன் உங்கள் முன்னே மற்றொரு வாரத்தில் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன். நான் இந்த மடலை எழுதிக் கொண்டிருக்கும் இன்று மே மாதம் முதலாம் திகதி. உழைப்பவர்களின் மகத்துவத்தைப் போற்றும் உன்னதமான தினம். வாழ்க்கை முழுவதும் உழைத்து உருக்குலைவோருக்காய் உலகம் முழுவதும் அவர்களை உயர்த்திப் பிடிக்கும் ஒரு தினம்.

    உழைப்பு என்பது எத்தனை மகத்தானதோ உழைப்பதற்காய் எமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களும் அத்தனை மகத்தானவையே. தொழிலாளி எனும் திரைப்படத்தில் கவிஞர் ஆலங்குடி சோமு அவர்களின் வரிகளில் டி.எம்,எஸ் இன் கணீர் குரலில் மக்கள் திலகம் நடித்திருந்த பாடல்,

    ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
    அன்னை உலகின் மடியின் மேலே
    அனைவரும் எனது கூட்டாளி

    எனும் பாடல் மிகவும் அர்த்தம் வாய்ந்த பாடலாகும். உழைப்பு எனும் பதம் என் வாழ்வில் எடுத்த பங்குகளை நான் ஒரு கணம் திரும்பிப் பார்க்கிறேன். எனது 18வது வயது வரை நான்கு பிள்ளைகள் உள்ள ஒரு குடும்பத்தில் கடைசிச் செல்லப்பிள்ளையாக வளர்ந்த நான் ஈழத்திலிருந்து இங்கிலாந்து மண்ணிலே போடப்பட்ட போது எனக்கு வயதோ வெறும் 181/2 யே. மாணவனாக இங்கிலாந்துக்குள் காலடி வைத்த நான் அந்நாளைய வழக்கப்படி பகுதிநேர வேலையோடு கூடிய முழுநேர மாணவனாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகினேன். உழைப்பின் மகத்துவம் அப்போதுதான் எனக்கு மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. வாழ்க்கையின் புதிர்களும் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கியது உழைப்பு என்பது வெறும் உதியத்திற்காக செய்வது மட்டுமல்ல ஒரு மாணவனாக நான் வந்த லட்ச்சியத்தை நிறைவேற்றுவதற்காக அஏஏஇய மொழியில் கல்வி கற்பது கூட ஒருவகை உழைப்பே என்பது புரிய ஆரம்பித்தது. உழைப்பின் பலனின் ஆனந்தமும் அப்போதுதான் விளங்க ஆரம்பித்தது. வார விடுமுறைகளில் கட்டிடங்களில் காவல்காரனாகப் பணிபுரிந்து கொண்டு வார நாட்களில் முழுநேர மாண்வனாக வாழ்ந்து கொண்டிருக்கும் போதுதான் என் ஒருவனின் வாழ்ப்வாத்ரத்திற்காகவே இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டுமானல் நான்கு பிளளைகளை வளர்த்தெடுக்க என் பெற்றோர் செய்திருக்கக்கூடிய உழைப்பின் கடினம் புரிய ஆரம்பித்தது. எனது பெர்றோர் எனக்காக செய்தவைகள் ஏதோ அவர்களது கடமை என்ற வகையில் அதுவரைகாலமும் வாழ்ந்து முடித்த என் வாழ்க்கையின் தன்னலத்தை எண்ணியபோது என்மீது எனக்கே வெறுப்பு ஏற்பட்ட கணங்கள் எண்ணிலடங்காதவை.

    மாணவனாக இருக்கும் போதே மணமுடித்துக் கொண்ட எனது கல்வியை முடித்துக் கொள்வதற்காக என் அன்புக்குரிய என் மனைவி செய்த கடுமையான உழைப்பு , ஒரு மகனை ஈன்ற பின்னும் கூட முழுநேர பணியுடன் இரவு நேர கல்லூரிப் படிப்பின் மூலம் தனது கல்வித்தகமைகளைப் பெற்றுப் பட்டம் வாங்கிய என் மனைவியின் கடின உழைப்பு எனக்கு மேலும் பல பாடங்களைப் புகட்டியது.

    இந்த உழைப்பாளர் தினம் என்பதெல்லாம் எதற்காக என்று எண்ணும் பலர் இருக்கிறார்கள். இதை எமது வாழ்நாளில் நாம் செய்த உழைப்பினை அல்லது செய்திருக்கக்கூடிய செய்யாமல் விட்டுப்போன உழைப்பினை மீள்பரீசீலிப்பதற்கான ஒருநாளாகக் கூட எடுத்துக் கொள்ளலாம் தானே !

    இன்று என் கண்முன்னே நான் காணும் பலவகை மனிதர்கள். தமக்குக் கொடுக்கப்பட்ட நேரம் அனைத்தையும் கடும் உழைப்பில் பயன்படுத்தித் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவைத்துக் கொண்டிருப்போர் ஒருபுறம், தாம் உழைக்காமல் இருப்பதனை நியாயப்படுத்தப் பலவிதமான காரணங்களைக் கண்டுபிடித்துச் சோம்பலில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒருபுறம், உழைக்க வேண்டும் எனும் அவா இருந்து உழைக்க முடியமால் வேதனையுறும் உடல் ஊனமுற்றோர் ஒருபுறம் என எத்தனையோ வகையினர்.

    இவ்வாழ்க்கை எமக்குக் கிடைத்த மகத்தான வரப்பிரசாதம். எமக்குக் கிடைக்கும் தருணங்களைப் பயன்படுத்தி எமது உழைப்பின் மூலம் எமது நிலையை உயர்த்துவதோடு எம்மால் உதவக்கூடியவர்களுக்கு உதவும் மனப்பான்மையோடு வாழ்வதே இவ்வாழ்க்கையை எமக்குக் கொடுத்த அந்த அனைவருக்கும் பொதுவான சக்திக்கு நாம் செய்யும் கைமாறாகும்.

    எனது அன்பினிய உறவுகள் அனைத்திற்கும் எனது அன்பான உழைப்பளர் தின வாழ்த்துகள்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (105)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பு கலந்த வணக்கங்களுடன் அடுத்தொரு மடலுடன் உங்கள் முன்னே அடுத்தொரு வார முடிவில் மகிழ்வுடன் வந்திருக்கிறேன்.

    ஜனநாயகம் , தேர்தல் , வாக்கெடுப்பு என உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் எனக் கருதப்படும் இந்திய மண்ணின் தேர்தல் திருவிழா அரங்கேறும் வேளையிது.

    எனது தமிழக உறவுகள் யாரைத் தொடர்பு கொண்டாலும் அனைவரும் வாக்களிப்பதைத் தமது முதற்கடமையாகக் கொண்டுள்ளார்கள் எனும் செய்தி மனதுக்கு மிகவும் மகிழ்வூட்டுவதாக இருக்கிறது.

    ஈழத்திருமண்ணை பிறந்த மண்ணாகவும், இங்கிலாந்து நாட்டின் வாழ்விடப் பிரஜையாகவும் இருக்கும் எனக்கு ஏன் இந்தியத் தேர்தலில் இத்தனை அக்கறை எனக் கேள்வி எழுவது சகஜமே !

    இந்திய அரசியலின் தாக்கம் எனது தாய்மண்ணின் சகோதரர்களின் வாழ்வுடன் சம்மந்தப்பட்டது என்பது முதற்காரணம்.

    இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையில் இன்று முன்னனி வகிக்கும் நாடுகளில் மிகவும் முக்கியமான நாடாக இந்தியத் திருநாடு திகழ்வது அடுத்தொரு காரணமாகிறது.

    ஈழத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகளின் பின்னர் இன்றைய நிலையில் அந்நாட்டு மக்களுக்கு ஒரு நிம்மதியான, நிரந்தரமான, கெளரவமான, தமது வாழ்வாதரங்களை தாமே நிர்ணயிக்கும் அதிகாரம் கொண்ட ஒரு தீர்வு கிடைக்க வேண்டும்.

    அதற்கு ஒரு திடமான, நிலையான மக்களின் அனுமதி கொண்ட அதிகாரமிக்க இந்திய அரசு அவசியம்.

    நான் அரசியல் பாகுபாடற்றவன்.

    இந்திய அரசியலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தலைவர்களும் ஏதோ ஒரு வகையில் ஈழத்தமிழர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை உண்மையாகவே விரும்புகிறார்கள்.

    அவர்களின் அணுகுமுறைகளில் வேண்டுமானால் வேறுபாடுகள் காணப்படலாம். ஆனால் அனைவரின் இறுதி நோக்கமும் ஒரு நிரந்தர அரசியல் தீர்வே.

    இதுவே யதார்த்தமாகும்..

    தத்தமது அரசியல் காரணங்களுக்காக, தமது கட்சிகளின் வெற்றிக்காக ஒவ்வொருவரும் மற்றவர் மீது வீசும் சரமாரியான குற்றச்சாட்டுகளும் ஏனைய கொள்கை வேறுபாடுகளும் அவர்களின் காலத்தின் கட்டாயம்.

    வித்தியாசங்களில் விளைவதுதான் மனித வாழ்க்கை. மனதுக்கு மனம், மனிதனுக்கு மனிதன் வேறுபடுவது இயற்கை நியதி. ஆனால் சத்திய உண்மைகள் நிரந்தரமானவை அவை காலத்தால் அழியாதவை.

    தேர்தல் காலங்களில் தேவைகளின் நிமித்தம் காலக்கட்டாயத்தின் பணிப்பில் வேறுபாடுகள் விளக்கேற்றி வெளிச்சமூட்டப்படுகின்றன.

    ஆனால் இந்தியத் தேர்தலின் வெற்றியில் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் ஏன் மொத்த இலங்கையின் எதிர்கால சுபீட்சமுமே தங்கியுள்ளது. எனலாம்.

    அடுத்ததாக இன்றைய உலகப்பொருளாதாரக் கண்ணோட்டத்தில் கடந்த சில வருடங்களாக உலகின் முன்னனி நாடுகள் கண்ட பொருளாதார வீழ்ச்சியிலும் கூட இந்திய பொருளாதார வளர்ச்சியையே கண்டது.

    இன்றைய உலக்ப்பொருளாதாரச் சந்தையில் முன்னனி நாடாக இந்தியப்பெருந்தேசம் விளங்குவது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மையாகும்..

    இந்தியா காணும் பொருளாதார வளர்ச்சி சமுதாயத்தின் அடிமட்ட மக்களைச் சென்றடைகிறதா இல்லையா என்பதைப் பற்றி அலசும் வகையான ஆற்றலும், இத்தகையதோர் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை போட்டியிடும் எந்தக் கட்சிகளிடமும் உள்ளதா என்பதைப் பற்றிக் குறிப்பிடுவதற்கான அரசியல் முதிர்ச்சியும், இந்திய அரசியல் வரலாற்றுப் பின்னனி பற்றிய பூரண அறிவு இல்லாத என்னிடம் இல்லை என்பதுவே உண்மை.

    இருப்பினும் மத்தியில் ஒரு உறுதியான அரசாங்கம் அமைந்திருப்பதால் மட்டுமே இந்தியாவின் இந்த முன்னனி நிலை உலகப்பொருளாரச் சந்தையில் நீடித்திருக்கும் என்பதைத் நான் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.

    இந்திய உபகண்டத்தின் அரசியலும் இவ்வுபகண்டத்தைச் சேர்ந்த நாடுகளின் ஜனநாயக அரசியல் கட்டமைப்புகளும் ஒரு சுதந்திரமான , உறுதியான இந்திய அரசாங்கத்தின் துணையுடன் தான் முன்னெடுத்துச் செல்லப்படமுடியும் என்பதும் அரசியல் அவதானிகள் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகிறது.

    இத்தகைய வலுவான காரணங்களின் அடிப்படையில் இந்தியத் தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருவனாகிறேன்.

    இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல அவர்கள் பெறும் வெற்றி ஜனநாயக வரம்புகளுக்குட்பட்டதாக சுதந்திரமான இந்திய அரசியல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்பதே முக்கியமானது.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (104)

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள் !

    உலகம் உருண்டு கொண்டிருக்கிறது. உருளும் இந்த உலகின் ஒவ்வொரு பாகத்திலும் வெவ்வேறு சமுதாய அமைப்புகள் வெவ்வேறு அங்கங்களாக வெவ்வேறு வகைகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன..

    வித்தியாசமான வாழ்க்கைமுறைகளைக் கொண்டிருந்தாலும் அனைவருடைய அடிப்படைத் தேவைகளும் ஒரே இலக்கையே கொண்டிருக்கின்றன.

    உண்பதற்கு உணவு, உடுத்திக் கொள்வதற்கு உடை, பதுகாப்பாக வாழ்வதற்கு மனை இந்த அடிப்படை வாழ்வை நோக்கி முன்னேறிய மனிதவர்க்கம் தமது பாதுக்காப்பான வாழ்வை விடுத்து தமக்கு அடுத்த சந்ததியும் பாதுகாப்பாக வாழவேண்டும் எனும் எண்ணத்தில் தமது தேவைக்கு மேலாகச் சேமிக்கத் தலைப்பட்டார்கள்.

    இதுவே இன்றைய வாழ்க்கை முறையின் அத்தியாவசிய தேவைகளுக்கு வழிகோலி நிற்கிறது

    இத்தகைய சேமிப்பும் அச்சேமிப்புக்காக ஓயாது உழைக்கும் தன்மையும் வசையம் தானா ? எனும் கேள்வி எழும்போது இத்தேவைகளுக்கான தேடல்கள் இல்லையெனில் இன்று இவ்வுலக்கம் இத்தகைய விஞ்ஜான முன்னேற்றங்களை அடைந்திருக்குமா ? எனும் கேள்வியும் எழாமலில்லை.

    இங்கேதான் நியாயத்திற்கு அந்நியாய வரம்பினைக் கடக்கும் மனப்பான்மைக்குமான வேறுபாடு தலைதூக்குகிறது.

    தனக்கும் தனது தலைமுறைக்குமான தேடல்களை நியாய வரம்பினிற்குள் தேடும் மனிதனின் நியாயமான் ஆசைகள் அதன் எல்லையைக் கடக்கும் போது அங்கு அடுத்தவரின் தெவைகளை மதிக்காது தமக்க்கே அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் மனப்பான்மை மெதுவாக உள்லே நுழைகிறது.

    என்னடா இது ? சக்தி இம்மடலில் வேத வியாக்கினகங்களை அள்ளி வீசுகிறானே என்று அங்கலாய்ப்பது புரிகிறது..

    மனைதனுடைய நியாயமான தேடல்களின் வரம்பு மீறல்களைக் கட்டுப்படுத்தி வாழ்க்கையின் அடிமட்டத்தில் சந்தர்ப்பம் இல்லாமையாலோ அன்றிக் காலத்தின் செயற்பாட்டினாலோ அல்லாடிக் கொண்டிருப்போருக்கான பாதுகாப்பை உத்தர்வாதப்படுத்துவதே உண்மையான மக்கள் அரசாங்கத்தின் கடமையாக இருக்கிறது.

    இன்றைய இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைவருக்கும் கிடைப்பது அவசியம் எனும் பாணியில் வேலையில்லாதோர், உடல் ஊனமுற்றோர், குழந்தைகள் இவர்களின் பராமரிப்புக்காக உதவிகள் அரசாங்கக் கொள்கைகள் வாயிலாக அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த அடிப்படைத் தத்துவங்கள் அனைத்து கட்சிகளினாலும் அபிப்பிராய பேதமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.

    சரி அப்படியானல் எவ்விடத்தில் கட்சிகள் இக்கொள்கையில் வேறுபடுகின்றன என்ற கேள்வி எழுவது இயற்கையே !

    மக்களின் அடிப்படைத் தேவைகள் எவை ? அவை எத்தகைய மக்களின் பாவனைக்கு அளிக்கப்படுக்கின்றன? இவ்வரசாங்க உதவிகளைப் பெற்றுக் கொள்பவர்கள் உண்மையாகவே அதற்குரிய தகுதிகளைக் கொண்டவர்கள் தானா? எனும் கேள்விகளுக்கு எந்த அள்வில் உளரீதியான மனசாட்சிக்கு விரோதமில்லாத விடைகளைத் தேட்டுவதிலேயே இக்கட்சிகளின் நிலைப்பாடுகளில் வேறுபாடுகள் தென்படுகின்றன.

    வேலையிலாதோருக்கு உதவிப்பணம் கொடுப்பதென்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உதவிப்பணத்தைப் பெற்று இலகுவாக பணி எதுவும் புரியாமலே வாழப்பழகிக் கொண்டவர்கள் தாம் வேலை தேடுவட்ய்ஹர்க்லு எதுவித முயற்சியும் எடுக்காமல் வாழ்வது என்பதும் எமக்குக் கண்கூடாகவே தெரிகிறது.

    இரண்டு உதாரணக்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் மிகவும் கடுமையாக உழைத்து கிடைக்கும் பணத்துக்குள் தனது குடும்பத்தைப் பராமரித்து வருகிறார். மற்றொருவரே பல வருடங்கள் எதுவுதப் பணியுமே புரியாமல் அராசங்கம் கொடுக்கும் உதவிகளைக் கொண்டு தனது குடும்பத்தைப் பராமரித்துக் கொண்டு தனது வாழ்வை விடுமுறையில் வாழ்வது போலக் கழிக்கிறார்.

    வேலையிலாதவருக்கு அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணம் எங்கிருந்து வருகிறது கடுமையாக உழைக்கும் மற்றையவரின் வரிப்பணத்திலிருந்தே !

    இங்கேதான் பல கேள்விகள் எழுகின்றன. மனிதனின் அடிப்படை வசதிகள் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன ?

    மூன்று வேளை உண்ண உணவும், கெளரவமாக உடுத்திக் கொள்ள உடையும், வசிக்க வீடுமா இல்லை கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, பயணிக்க மோட்டார் வாகனம் இவையும் சேர்ந்ததா ?

    இன்றைய இங்கிலாந்தில் இக்கேள்வி மிகப்பிரதானமாக பலரின் மத்தியில் எழுந்துள்ளது.

    அதேவேளை எத்தனையோ முயற்சித்தும் எந்த வேலையும் கிடைக்காமல் அல்லல்படும் மனிதர்களும் இல்லாமல் இல்லை.

    2015ம் ஆண்டு மேமாதம் இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் வரவிருக்கிறது. இப்பொதுத் தேர்தலில் என்றுமில்லாதவாறு கட்சிகளுக்கிடையில் கடும் போட்டிற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

    எந்தக் கட்சி ஆட்சியமைக்கப்போகிறது என்பது எந்தக் கட்சி அதிகாரக் கதிரையில் அமரப்போகிறது என்பது இந்தப் பிரச்சனையில் எந்தக் கட்சி மிகவும் அதிரடியான ஆனால் மக்களின் வரவேற்புப் பெறும் பிரகடனங்களில்  மிகவும் துணிச்சலாக முன்வைக்கப் போகிறது என்பதிலேயே தங்கியுள்ளது..

    இனிவரும் வாரங்களில் மேலும் பல சுவாரசியமான விடயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…103

    சக்தி சக்திதாசன்

     

    europe2 eurpe1

     

    அன்பினியவர்களே !

    கனிவான வணக்கங்கள்

    இங்கிலாந்திலே நடக்கவிருக்கும் ஜரோப்பிய தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஓ , சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்றதும் ஏதோ பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்று எண்ணி விடாதீர்கள்.

    சூடு அரசியல்வாதிகள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் தான் படுவேகமாக முக்கியத்துவம் பெற்று வருகிறது.

    பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில் தேர்தல்கள் அனைவற்றிலும் மக்களின் ஆர்வம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. காரணம் அரசியல்வாதிகள் மீது மக்கள் கொண்ட அதிருப்தியே காரணம்.

    அரசியல் என்பது மக்களின் நலத்திற்காக மக்கள் நலன் விரும்பிகளினால் தன்னல நோக்கமின்றி இடம்பெறும் ஒரு நடைமுறை என்பது மாறி அரசியல்வாதிகள் இதன்மூலம் தாங்கள் தமக்கு அனுகூலங்களை பெருக்கிக் கொள்ள பயன்படுத்தும் ஒரு ஆயுதமாக்கிக் கொண்டார்கள் என்பது மக்களின் பொதுவான அபிப்பிராயமாகி விட்டது போலவே தென்படுகிறது..

    ஆமாம் சில வருடங்களுக்கு முன்னால் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்ட பராளுமன்ற உறுப்பினர்கள் தமது பாராளுமன்றச் செலவீனத்தை அரசாங்கத்திடமிருந்து கோரும் வழிமுறைகளில் இருந்த தில்லுமுல்லுகளே மக்களின் இத்தகைய ஒரு அபிப்பிராய வளர்ச்சிக்கு காரணமானது.

    இனி இந்த ஜரோப்பிய பாராளுமன்றத் தேர்தலுக்கு வருவோம். இந்த ஜாரோப்பிய யூனியனும் அதனுடனான ஜக்கிய இராச்சியத்தின் உறவும் தற்போது இங்கிலாந்தில் மிகவும் அதிக அளவில் பேசப்பட்டு வரும் ஒரு விடயமாகும்.

    இதற்குக் காரணங்கள் பலவுண்டு அவற்றில் முக்கியமானவை,

    ஜரோப்பிய நாடுகள் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடு ஒன்றில் வதிவுரிமை பெற்றவர்கள் எதுவிதக் கட்டுப்பாடுமின்றி மற்றைய ஜரோப்பிய நாடுகளில் வசிக்கலாம் எனும் விதியும் அவ்விதியின் துணையோடு இங்கிலாந்துக்குள் நுழைந்து வேலயற்றோர் பட்டியலில் தம்மை இணைத்துக் கொண்டு அரசாங்க உதவிப்பணத்தைப் பெற்று வாழும் ஜரோப்பிய மக்களின் அதுவும் குறிப்பாக கிழக்கு ஜரோப்பிய நாடுகளின் எண்னிக்கைப் பெருக்கமும்.

    இங்கிலாந்து நாட்டுச் சட்ட திட்டங்களின் மீது ஜரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டு விதிகள் இங்கிலாந்தின் இறைமைக்கு விடுக்கப்படும் சவால் என பல மக்களின் மனதில் ஒரு பொது அபிப்பிராயம் ஏற்பட்டிருப்பது.வும்

    இவற்றில் நான் முதலாவதாக குறிப்பிட்டிருந்த பிரச்சனையின் அழுத்தமே தற்போது மக்கள் மனங்களில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

    ஜரோப்பிய ஒன்றியத்தில் புதிதாக அனுமதிக்கப்பட்ட ரொமேனியா, பல்கேரியா போன்ற முந்தைய ரஷ்ய ஆதிக்கத்திலிருந்த நாடுகள் ஜரோப்பிய யூனியனில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் இணைந்ததன் பலனாக இவ்வாண்டு ஜனவரி மாதம் அமுலுக்கு வந்த ஜரோப்பிய சட்டத்தின் பிரகாரம் அந்நாட்டுப் பிரஜைகள் எதுவித கட்டுப்பாடுகள் இன்றி இங்கிலாந்துக்குள் நுழையும் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள்.

    ஒவ்வொரு நாளும் விக்டோரியா பேரூந்து நிறுத்தத்தில் பல பேரூந்துகளில் இவ்விரண்டு நாட்டைச் சேர்ந்த பலர் இங்கிலாந்துக்கு வந்த வண்ணம் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டு இருப்பதுவும், பொருளாதாரச் சீர்படுத்தலுக்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் கடுமையான பொருளாதாரக் கொள்கைக் கட்டுப்பாட்டின் விளைவாக மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் வாழ்க்கைப் பிரச்சனைகளும் இம்மேலதிக மக்களின் வருகையால் மேலும் அதிகரிப்பதான எண்ணம் அனைத்து மக்கள் மனங்களையும் ஆட்டிப் படைக்கின்றது.

    இதுவே தற்போதைய இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா? அன்றி வெளியேறுவதா? எனும் ஒரு விவாதத்தைப் பல அரசியல் கட்சிகள் மத்தியில் ஆரம்பித்து வைத்துள்ளது.

    இங்கிலாந்திலேயே முதல் தடவையாக் இரு கட்சித் தலைவர்களிடையே பகிரங்க விவாதம் இவ்விவகாரத்தில் சமீபத்தில் நடைபெற்றிருக்கிறது,

    இதுவரை நடந்த கருத்துக் கணிப்புகளின்படி ஜரோப்பிய ஒன்றியத்திற்கெதிரான வாதத்திற்கே மக்களின் ஆதரவு அதிக அளவில் இருப்பதாகத் தென்படுகிறது.

    ஜரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து அங்கம் வகிப்பதன் அவசியத்தை வலியுறுத்துவோர் இவ்வொன்றியத்திலிருந்து வெளியேறுவது பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சியை மிகப்பெரிய அள்வில் பாதிக்கும் எனும் வாதத்தை முன்வைக்கிறார்கள்.

    ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதன் மூலம் ஜக்கிய இராச்சியத்தின் ஏற்றுமதி வியாபாரத்தில் நேரடியாகவும், மறைமுகவும் எத்தனையோ ஆயிரம் ஜக்கிய இராச்சிய மக்களின் வாழ்வாதாரம் தங்கியுள்ளது என்கிறார்கள்.

    தற்போதைய பிரதமர் தமது கட்சி பெரும்பான்மை பலத்துடன் அடுத்த வருடம் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் ஆட்சி அமைக்குமானல் 2017ம் ஆண்டு ஜக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்தின் உள் இருக்க வேண்டுமா இல்லையா என்று பொது மக்களிடையே ஒரு கருத்துக் கணிப்பு நடத்துவேன் என்று உறுதியளித்திருக்கிறார்.

    இருப்பினும் தனது கருத்தாக தான் ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை விரும்பவில்லை என்றும் தற்போது இருக்கும் உடன்படிக்கைய மாற்றியமைத்து ஜரோப்பிய ஒன்றியத்தின் கட்டமைப்பையும் விதிகளையும் மீள்பரிசோதனை செய்வதே தனது நோக்கம் என்றும் டேவிட் கமரன் அவர்கள் கூறுகிறார்.

    எதிர்க்கட்சித் தலைவரும் ஏறக்குறைய இதே நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளார். அவரது கொள்கையின் படி தமது கட்சி ஜரோப்பிய ஒன்றியத்தில் சில நடைமுறை மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதோடு இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் சட்டங்கள் ஏதாவது ஜரோப்பிய ஒன்றியத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனும் பட்சத்தில் அதை ஒரு பொது கருத்து வாகெடுப்பின் முடிவின்படியே அமுல் படுத்தாலாம் எனும் சட்டத்தைக் கொண்டு வருவது என்கிறார்.

    கூட்டரசாங்கத்தின் மற்றைய பங்காளிக் கட்சியான லிபரல் கட்சியோ முழுவதுமாக தன்னை ஜரோப்பிய ஒன்றியத்துள் புதைத்துக் கொண்டுள்ளது. எனலாம்.

    ஆனால் இன்றைய மக்களின் மனவோட்டத்தைப் பிரதிபலிப்பவராக கோலோச்சும் தலைவர் ” ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி” இன் தலைவர் நைஜல் வெராக் என்பரே !

    இவரோ இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியே வருவது ஒன்றுதான் இங்கிலாந்தின் மீட்சிக்கு வழி என்கிறார்.

    புதிதாக ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்துக்குள் நுழையும் உரிமை அவர்களுக்கு இருக்கும் வரை இங்கிலாந்தின் வெளிநாட்டுக்காரரின் குடியேற்றக் கட்டுப்பாட்டை அமுலாக்க முடியாது என்கிறார்.

    அதுமட்டுமல்ல அவரது மற்றுமொரு வாதம் சிந்திக்க வைக்கிறது.

    ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருவோர் எத்துறையிலும் திறமை மிக்கவர்களாக இருக்க வேண்டியதில்லை ஆனால் ஜரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறி வெளிநாட்டவரின் வருகையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஜரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியேயுள்ள அதாவது கிழக்காசிய நாடுகளில் உள்ள திறமை மிக்கவர்கள் இந்நாட்டிற்கு வருவதன் மூலம் இந்நாடு வளமிக்கதாக முடியும் என்கிறார்.

    இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள படித்த , திறமை மிக்கவர்களை உள்ளே அனுமதிக்காமல், ஜரோப்பாவில் உள்ள கல்வியறிவில்லாதவர்களை வரவிடுவதில் என்ன இலாபம் என்கிறார்.

    ஆனால் இவரது கட்சி ஏனைய விடயங்களில் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பது பலருக்கு புரியாமல் இருப்பதே இவருக்கும் இவரது கட்சிக்கும் உள்ள ஒரு பின்னடைவு.

    அத்தோடு வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு வருவோரைக் கட்டுப்படுத்த வேண்டும் எனும் இவரது ஆக்ரோஷமான் வாதம் இவரது கட்சிக்குள் பல இனத்துவேஷிகளை உள்ளடங்கியுள்ளார்கள் போலவும் தெரிகிறது.

    எது எப்படி இருப்பினும் இன்றைய இங்கிலாந்து ஒரு புதுச் சந்திப்பில் நிற்கிறது இதன் பயணம் எந்தத் திசையை எடுக்கப் போகிறது என்பதே எம்முன்னே தொங்கும் கேள்விக்குறி !

    இதற்கான விடை காலதேவனின் கரங்களிலோ ?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (102)

    சக்தி சக்திதாசன்

    1780843_587204171369869_249422305_n
    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்களுடன் கனத்த இதயத்துடன் என் விரல்கள் இவ்வார மடலை வரைகின்றன.

    இன்று காலை இங்கிலாந்து நேரப்படி காலை ஏழு மணியளவில் என் அண்ணனின் தொலைபேசி அழைப்பு இதயத்தை அழுத்தும் துயரச் செய்தியைக் கொண்டு வந்தது.

    ஆம் 32 அகவைகளே நிறைந்த எனது மூத்த சகோதரனின் மூத்த மைந்தன் நேற்று மாலை அகால மரணமடைந்த துயரச் செய்தி உள்ளத்தை வருத்தியது.

    வாராவாரம் உங்களுடன் இம்மடலுடன் உரையாடும் எனக்கு இவ்வாரம் உரையாட முடியுமா? எனும் எண்ணம் எழுந்தாலும் இதயத்தின் உணர்ச்சிகளுக்கு வடிகாலாக அமையும் இவ்வெழுத்து ஒன்றே அதிர்ந்த மனதுக்கு அமைதியளிக்கும் அருமருந்தாகிறது.

    வாழ்க்கை விசித்திரமானது, வியக்க வைப்பது, புரிய முடியாதது என்று வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு மடல்களில் நான் குறிப்பிட்டதுண்டு.

    ஆனால் சமயங்களில் வாழ்க்கை கொடுமையானது கூட என்பது இப்போது தெள்ளிடைத் தெளிவாகத் தெரிகிறது.

    உள்ளத்தின் உறைந்து கிடக்கும் உணர்வுகள் நிலநடுக்கம் வந்தால் கிளர்ந்தெழும் சில உறைநிலங்களைப் போல அதிர்வடையச் செய்யும் செய்திகளைக் கேட்டதும் ஒரு கிளர்ச்சி அடைந்து விழித்து உருக்கொண்டு எம்மை ஆட்டிப்படைக்கின்றன.

    விளங்க முடியா நிகழ்வுகள், விளக்க முடியா வகையில் விசித்திரமான வடிவங்களில் வெவ்வேறு திசைகளில் இருந்து எம்மைத் தாக்கும் போது உள்ளம் சிறிது உருகத்தான் செய்கிறது.

    ஆத்திகர் நாத்திகர் யாராக இருந்தாலும் இயற்கையின் நிகழ்வுகள் யாருக்காகவும் எப்போதும் நின்று போய் விடுவதில்லை பிறப்புக்களும், இறப்புக்களும் யாருடைய விருப்பு வெறுப்புகளுக்கும் உள்ளாகி நடந்து விடாமல் இருந்து விடுவதில்லை.

    மனித வாழ்க்கையில் நெடுங்கதைகளும் உண்டு குறுங்கதைகளும் உண்டு. தமது காரியங்களைச் செய்ய தமக்கு வாரிசுகள் வேண்டும் என விரும்பி தமது வாரிசுகளைப் பேணும் பெற்றோரே அவர்களுக்கு காரியம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவது துர்பாக்கியமே !

    ஆனால் துர்பாக்கியம் என்பதற்காக நிகழ்வுகள் நின்று போய்விடுவதில்லை. பிள்ளைகளைக் கண்முன்னாலே பறிகொடுத்துத் தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதல் கூறும் தைரியம் படைத்தவர்கள் சிலரே.

    என்னைவிட வயதில் பத்து வயது மூத்தவர் என் சகோதரர் . இருவரும் வாழ்வது பல்லாயிரம் மைல்களுக்கப்பால். ஈழத்தை விட்டு ஏறத்தாழ ஒரே சமயத்தில் வெளியேறியவர்கள் நாம். அது இற்றைக்குச் சுமார் 40 வருடங்களின் முன்னால். இதுவரை சுமார் நான்கு தடவைகள் சந்தித்திருப்போம்.

    சுமார் ஆறு மாதங்களின் முன்னால் என் சகோதரரின் இளைய மைந்தனின் திருமணத்திற்குச் சென்றபோது மறைந்த இளவலை கடைசியாகச் சந்தித்தேன்.

    இன்று அவனது மறைவால் தவித்துக் கொண்டே என் சகோதரரைத் தேற்றுவதற்கு வார்த்தைகளின்றி தவிக்கிறேன்.

    வார்த்தையின்றிப் போகும்போது கண்ணீர் தான் கைகொடுக்குமோ !

    என் மனதின் தவிப்புக்கு வடிகாலாக மனதின் உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்திற்காக நான் ஆண்டவன், வல்லமை, அனைத்திற்கும் மேலாக என் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும்வரை

    துயரத்துடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…101

    சக்தி சக்திதாசன்

    LBCBD2 LBCBD4

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    புதியதோர் வாரத்திலே புதியதோர் மடலுடன் உங்களுடன் உறவாட வந்துள்ளேன்.

    அவசரமான உலகம், அவசரமான வாழ்க்கை . இந்த வாழ்க்கையை மிகவும் அவசரமாகவே வாழ்ந்து முடித்துவிட காலத்தோடு போட்டி போட்டுக் கொண்டு முண்டியடித்துக் கொண்டு ஓடும் சமுதாயங்கள்.

    இன்றைய காலகட்டத்திலே சமுதாயங்களுக்கிடையில் பல்வேறு பிரச்சனைகள் தலைதூக்குகின்றன. அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களுக்கு விடையை எம்மை அரசாளும் அரசியல்வாதிகள் தருவார்கள் எனும் நம்பிக்கையோடு வாழும் மக்கள் கூட்டம்.

    ஆனால் பல்வேறு முக்கியமான் மக்கள் பிரச்சனைகள் வாதிடுவதற்கு சிக்கலாக இருப்பதனால் பல்வேறு அரசியல்வாதிகளால் ஒரு மூலையில் ஒதுக்கி வைக்கப்படுகின்றன. அவை ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டன என்பதற்காக அவைகள் அப்படியே மக்கள் மனங்களில் இருந்து மறைந்து போய்விடுவதில்லை.

    மாறாக நீறுபூத்த நெருப்புப் போல மக்கள் மனங்களில் புகைந்து கொண்டுதானிருக்கின்றன. மிகவும் சர்ச்சைக்குரிய விடயம் என்பதற்காக முக்கியமான விடயங்கள் பகிரங்கமாக விவாதிக்கப்படாமல் விடுபட்டு போவது கவலைக்குரிய விடயமே !

    ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்கு இத்தகைய விவாதத் தவிர்ப்பு ஓர் இழப்பு என்றே கூற வேண்டும்.

    எங்கே இந்த ஆரம்பம் எம்மை அழைத்துச் செல்கிறது என்று நீங்கள் ஆரய முற்பட வேண்டியதில்லை இதோ விடயத்திற்கு வந்து விடுகிறேன்.

    இங்கிலாந்திலுள்ள மக்களின் வாழ்க்கை வசதிகளில் ஏற்பட்ட தாக்கங்கள். நிலைகுலைந்த பொருளாதாரத்தைச் சீராக்க கூட்டரசாங்கம் எடுத்த மிகக்கடுமையான பொதுச்சேவைக்கான செலவீனக்குறைப்பு என்பனவற்றின் அதீத தக்கங்கள்,

    வேலையில்லாத் திண்டாட்டத்தின் எதிரொலிப்பு, வாழ்க்கையின் அடிமட்டத்தில் வாழும் மக்களுக்காக வழங்கப்படும் உதவிகளில் ஏற்படுத்தப்பட்ட கடும் போக்குகளின் தாக்கங்கள் என்பன இங்கிலாந்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுவோர் மீதான இந்நாட்டு மக்களின் அதிருப்தியின் அளவை அதிகரித்திருக்கிறது என்பது கசப்பான உண்மை.

    அன்றாடம் ஊடகங்களில் இதைப்பற்றிய கருத்தாடல்க அதிக அளவில் இடம்பெறுவதே இதற்குரிய சான்றாகிறது.

    இதை இங்கிலாந்து இனத்தவரின் இனவிரோதப் பார்வை என்று ஒதுக்கி வைத்து விட முடியாது. ஏனெனில் இங்கு வந்து வாழும் ஆசிய ஆபிரிக்க மக்களின் பார்வையும் இத்தகைய வெளிநாட்டவரின் வருகையை நோக்கி அதிருப்தியானதாகவே தென்படுகிறது.

    ஆனால் இதைப்பற்றிய பகிங்கரமான சர்ச்சைகளை முக்கிய அரசியல் கட்சிகளின் தலலவர்களால் எங்கே தாம் இனவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ எனும் அச்சத்தினால் தவிர்க்கப்பட்டே வந்திருக்கிறது.

    இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்திலிருந்து தம்மை அகற்றிக் கொள்ள வேண்டும் எனும் வாதத்தை முன்வைத்து ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி (UKIP) என்று ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து நடத்தி வருபவர் நைஜல் ப்றாஜ் (Nigel Farage) என்பவர்.

    இங்கிலாந்தின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றும் தற்போதைய கூட்டரசாங்கத்தின் பங்காளிக் கட்சியுமான லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் தலைவர் நிக் கிளேஹ் (Nick Cleg). இவர் தனது கட்சியின் அழுத்தமான கொள்கையான இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் முக்கியமான பங்கு வகிக்க வேண்டியது தவிர்க்க முடியாது என்பதில் மிகுந்த அழுத்தமாக இருப்பவர்.

    நிக் கிளேக் ஒவ்வொருவாரமும் லண்டனின் பிரசித்தி பெற்ற எல்.பி.சி (LBC) எனும் வானொலியில் அதன் பிரசித்தி பெற்ற காலைநேர ஒலிபரப்பாளரான நிக் வெராரி (Nick Ferrari) என்பவர் நடத்தும் காலைநேர ஒலிபரப்பில் வியாழக்கிழமைகளில் பங்குபற்றி நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது வழக்கம்.

    சமீபத்தில் அப்படியான ஒரு நிகழ்வின் போது நிக் கிளேஹ் , நைஜல் ப்ராக் என்பவருக்கு பகிரங்கமாக இவ்வானோலியில் நிக் வெராரி தலைமையில் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் பங்கு பற்ற வேண்டுமா? வேண்டாமா? என்று விவாதிக்க வரும்படி அறைகூவல் விடுத்தார்.

    விடுவாரா ? நைஜல் ப்ராக் ஏற்றுக் கொண்டார். இலவசமாக தனக்கும் தனது கட்சிக்கும் கிடைக்கும் வானொலி விளம்பரத்தை ஏன் தவிர்க்கப் போகிறார் ?

    விளைவு !

    நேற்று மாலை அதாவது மார்ச் 26ம் திகதி 7 மணிக்கு நிக் வெராரி தலைமையில் லிபரல் கட்சித் தலைவர் நிக் கிளேஹும் , ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் தலைவர் நைஜல் ப்ராக்கும் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் பங்கு பற்றுவதின் சாதகங்களையும், பாதகங்களையும் பற்றிய பகிரங்க விவாதத்தில் ஈடுபட்டார்கள்.

    இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதன் அவசியத்திற்காக நிக் கிளேஹ் உம் , இங்கிலாந்து ஏன் ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கக்கூடாது என்பதன் காரணத்தை நைஜல் ப்ராக் உம் விவாதித்தார்கள்.

    இவ்விவாதத்திலே யார் சரி, யார் பிழை என்பதல்ல எனது இம்மடலுக்கான காரணம். இத்தகைய விவாதம் ஜனநாயகத்திற்குக் கிடைத்த ஒரு பெரும் வெற்றி எனும் எனது தாழ்மையான கருத்தை எனது இனிய வாசகர்களான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இம்மடலின் நோக்கம்.

    மிகவும் சிக்கலான விடயம் என்பதற்காக மக்களின் மனதில் முக்கியமாகக் கருதப்படும் ஒரு விடயத்தை ஓரங்கட்டி விடுவது என்றுமே ஆராக்கியமான ஜனநாயகத்திற்கு வழிவகுக்காது.

    மாறாக இத்தகைய பகிரங்க விவாதங்களின் மூலம் தலைவர்கள் தாங்கள் கொண்டுள்ள கொள்கைகளின் மீது தங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மக்களுக்கு வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் வாய்க்கிறது..

    நேற்றைய விவாதத்தில் ஒருவர் வெற்றி பெற்றவரல்ல அங்கே மூன்று வெற்றியாளர்கள் இருக்கிறார்கள் .

    அவர்கள் . . . .

    பங்குபற்றிய இரு தலைவர்கள், மூன்றாமவர் “மக்கள்”

    பசும்புல்லின் மீது எப்போதும் நடப்பதல்ல உண்மையான பயணம் புற்தரை கற்தரையாக மாறும் போதும் நடையின் வேகம் தணியாமல் நடப்பதே பயணத்தின் வெற்றியைக் குறிக்கிறது.

    இதை மற்றைய பெரும் கட்சிகளின் தலைவர்களும் உணர்ந்து கொள்வார்களா ?

    பொறுத்திருந்து பார்ப்போம் !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…100

    சக்தி சக்திதாசன்

     

    Sakthy

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் உங்களோடு உறவாட வந்திருக்கும் எனது இந்த மடல் உங்களுக்கு வரையும் நூறாவது மடல் எனும் நினைப்பே தித்திக்கிறது.

    இனிய அன்பான வாசக உள்ளங்களுடன் நூறு வாரங்களாக வாரம் ஒருமுறை என் மனக்கருத்தினைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளம் அமைத்துக் கொடுத்த “வல்லமை” இதழின் வல்லமையாளர்களுக்கும், எனது மடலினை அன்பு கூர்ந்து ஆதரிக்கும் அன்பு வாசக நெஞ்சங்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒரு காலத்தின் எழுத்துக்கள், பதிவுகள் அக்காலத்தின் கண்ணாடியாக அக்காலத்தின் நடப்புகளை எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் ஒரு கருவியாகச் செயற்படுகிறது..

    காலம் எனும் காற்றில் அடிபட்டுச் செல்லும் சருகாக புலம் பெயர்ந்து வாழும் என் போன்ற சாதாரணமானவர்களின் மனதில் நாம் வாழும் எம்மை அண்டியுள்ள சமுதாயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் அந்நிகழ்வுகள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்பன எத்தகையதோர் பார்வையைக் கொடுக்கிறதோ அதையே உங்களுடன் இம்மடல் வழியாகப் பகிர்ந்து கொள்கிறேன்.

    இது ஒரு கோணப் பார்வையே ! இதே நிகழ்வினை மற்றொரு கோணத்தில் பார்க்கும் பலர் இருப்பார்கள். எது சரி, எது பிழை என்று வாதிடுவதல்ல எனது நோக்கம். நடக்கும் நிகழ்வு என் பார்வையில் எத்தகையதோர் நிலையை எடுத்தது என்பதை எடுத்துக் காட்டுவதே நோக்கமாகும்.

    sakஉலகத்தில் என்னை என் அன்னை விழுத்திய 57 வருட காலத்திலே கடந்த சுமார் 40ன் வருடங்களை இங்கிலாந்திலே புலம்பெயர் வாழ்க்கையிலே கழித்து விட்ட எனக்கு வாழ்க்கையின் பல நிகழ்வுகள் கொடுக்கும் அர்த்தங்கள் எனது தாய்நாட்டு குறுகிய கால வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய அரிய சந்தர்ப்பத்தை வழங்கியது.

    அது மட்டுமின்றி கடந்த பத்து வருடங்களாக ஒவ்வொரு வருடமும் சென்னை வந்து செல்லுவதோடு 35 வருடங்களின் பின்னர் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் என் தாய் மண்ணாம் யாழ்நகரின் மண்ணை மிதித்தது என்பது பல நினைவு அசைவுகளுக்கு ஒரு பின்னோட்டத்தைக் கொடுத்தது.

    ஒரு சிறு ஊற்றாக யாழ்நகரில் முகிழ்த்த என் வாழ்க்கைப் பாதையை வகுத்துத் தந்த அந்த யாருக்கும் புரியாத மாபெரும் சக்தி இன்னும் அவிழ்க்காத முடிச்சுக்களாய் என்னென்ன அதிசயங்களை வைத்திருக்கிறதோ யானறியேன்.

    இன்று நான் வாழும் இந்த இங்கிலாந்துத் தமிழ் சமூகத்திலே எனது முகவரியைத் தொலைத்துத் திரிந்த காலம் சில முகவரியைத் தேடி ஓடிய காலங்கள் சில இன்று கண்டெடுத்த முகவரியோடு மோதி நிற்கும் காலம்.

    கலாச்சாரம் எமக்குக் கொடுத்த அடையாளங்கள் எம்மைப் பாதுகாக்கும் கவசங்களா இல்லை எமது முன்னேற்றத்திற்குத் தடைபோடும் கால் விலங்குகளா? என்பது இன்றைய எமது புலம்பெயர் சமூகத்தினிடையே நிலவி வரும் மாபெரும் கேள்வியாகி நிற்கிறது..

    சந்ததி இடைவெளி அன்றி generation gap எனும் பதத்தின் அர்த்தம் இன்று பலமாக பலரின் காதுகளிலும் ஒலிக்கிறது. எனது சமகால புலம்பெயர்ந்தோர் தமது கலாச்சார அடையாளங்களை வெள்ளத்தோடு அடிபட்டுச்செல்லும் ஒருவன் தனது ஆடைகளைக் காப்பாற்ற போராடுவது போல பலமான போராட்டத்தின் வாயிலாக சிறிது தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள்.

    ஆனால் எமது அடுத்த சந்ததி தமது பெற்றோரின் வற்புறுத்தலுக்கிணங்கி கலாச்சாரத்தைப் பேணுவதற்கு முயற்சிப்பது போலக் காட்டினாலும் பெரும்பான்மையோர் தாம் தமது சொந்தக்காலில் நிற்கும் நிலை வந்ததும் அதனை அப்படியே காற்றில் பறக்க விட்டு விடுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    ஆனால் இவற்றில் எவை சரி அல்லது எவை பிழை என்று எவரால் வரையறுத்துக் கூறமுடிகிறது ?

    அடுத்த சந்ததியினரின் நிலை கையொன்றைப் பின்னால் இழுத்துக் கட்டி விட்டு போருக்கு அனுப்புவதைப் போலவே தென்படுகிறது.

    இன்றைய இங்கிலாந்தில் வாழ்க்கைப் போராட்டத்தின் முனைப்பு படுபயங்கரமான தீவிர நிலையை அடைந்து இருக்கிறது. நிறவேற்றுமை எனும் எல்லைகளைக் கடந்து எமது அடுத்த சந்ததி வெள்ளை இனத்தவருடன் சமதளத்தில் தமது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராட வேண்டிய தேவையுள்ளது.

    இங்கேதான் கலாச்சாரம், பண்பு எனும் இரண்டுக்கிடையிலே உள்ள மெல்லிய எல்லைக்கோடு காணாமல் போவதன் சங்கடம் தெரிகிறது.

    நாம் புலம்பெயர் தேசத்தில் அந்நாட்டு மக்களுக்கு இணையாக வாழ்ப்போகிறோம் எனும் போர்வையில் மது, மாது, போதைப்பொருட்கள் பாவனை எனும் சீரழிவிற்குள் தம்மை உட்படுத்திக் கொள்ளும் ஒரு நிலை ஏற்பட்டு விடுமோ எனும் அச்சமும் மேலோங்கத்தான் செய்கிறது.

    இருப்பினும் மேற்கூறிய இத்தீவினைப் பழக்கங்களுக்கு கலாச்சார அடையாளங்களுக்கும் தொடர்புகளை ஏற்படுத்துவது உசிதமாகாது.

    பண்பான வாழ்க்கையில் தம்மை உட்படுத்திக் கொள்வோர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவர்களாயிருந்தாலும் எவ்வகையான கலாச்சார அடையாளங்களால் தம்மை அடையாளப்படுத்தினாலும் மேற்கூறிய தீயபழக்கங்களுக்கு தம்மை அடிமையாக்க மாட்டார்கள் என்பதை நன் பல இடங்களில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

    நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டம் மிகவும் வித்தியாசமானது. நாடுகளுக்கு இடையில் உள்ள தூரம் நவீன போக்குவரத்து முறைகளினால் மிகவும் சிறிதாகியுள்ளது.

    உலமயமாக்கல் அதாவது globalization எனும் அதிவேக சர்வதேச முன்னெடுப்புகளால் மக்கள் நாடு விட்டு நாடு பெயர்ந்து வாழ்வது மிகவும் சுலபமாகி விட்டது.

    மேலைநாடுகளின் முற்போக்கான வாழ்க்கை முறைகளைத் தவறாக நாகரீகம் எனும் பார்க்கும் மனோபாவம் எமது பின்புல நாடுகளில் நிலவி வந்த காரணத்தினால் எதைக் கலாச்சார சீரழிவு அல்லது பண்பற்ற வாழ்க்கை என்று விபரிக்கின்றோமோ அது எமது பின்புலநாடுகளில் அதாவது கலாச்சாரங்களை வலிமையாக கடைப்பிடித்து வரும் சமுதாயத்தில் வெகுவேகமாக உள்வாங்கப்பட்டு வருவதைப் பார்க்கும் போதுதான் உண்மையிலே கலாச்சாரத்திற்கும், பண்பிற்குமுள்ள வித்தியாசம் விளங்குகிறது..

    ஒரு மனிதனுடைய அடையாளம், அவனின் கலாச்சாரச் செறிவு அவன் மற்றவர்களுடன் பழகும் பண்பிலும், அடுத்தவரிடத்தில் காட்டும் அன்பிலும் அவனிடம் குடிகொண்டிருக்கும் மனிதாபிமானத்திலுமே தங்கியுள்ளது.

    கலாச்சாரத்தை பாதுகாப்பதில் முன்னனியில் இருக்கிறோம் என்று கூறிக் கொண்டு அடையாள ஆடைகளை அணிந்து கொண்டு இனவிரோதத்தையும் இனக் குரோதத்தையும் வளர்த்து குழுநிலை மனப்பான்மையில் வாழ்வதென்பது ஒரு பண்பான சமூகத்தின் நாகரீகமாகாது.

    அதேபோல அரைகுறை ஆடையணிந்து மனம்போன போக்கிலே வாழ்வதுதான் நாம் வாழும் புலம்பெயர் நாடுகளின் சமுதாயத்தோடு ஒன்றிணைந்து வாழ்வதற்கு எடுத்துக்காட்டு என்று எண்ணிக் கொள்வதும் தவறாகும்.

    நாம் வாழும் இடங்களில், பணிபுரியும் தளங்களில் மற்றவர்களோடு பழகும் வகையிலும், நாம் பண்பாக நடந்து கொள்ளும் முறையிலும் “: அடடா , இவர்தான் ஒரு தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்” என மற்றவர்கள் கெளரவத்துடன் பார்ப்பது ஒன்றே நாம் பிறந்த மண்ணுக்கும் எமது தொப்புள்கொடி உறவுகளுக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய சேவையாகும்..

    என் இனிய அன்பு உள்ளங்களே ! இன்னும் ஒரு நூறுவாரம் உங்களுடன் இம்மடல் வழியாகத் தொடர்பு கொள்ளும் அளவிற்கு என் விரல்களில் வலிமையையும், இச்சிறிய சாதாரணமான ஒரு புலம்பெயர் தமிழனின் மடலைப் பிரசுரிக்கும் அன்பு மனதை வல்லமையினருக்கும் கொடுக்க அந்த எல்லாம் வல்ல என் மனம் வாழும் அண்ணாமலையான் துணை வேண்டி இம்மடலில் விடைபெறுகிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்பான வணக்கத்துடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share