Tag: க.பாலசுப்பிரமணியன்

  • வாழ்ந்து பார்க்கலாமே 36

    க. பாலசுப்பிரமணியன்

    தோல்வி என்பது என்ன ?

    வெற்றிகளை மட்டும் சுவைத்து வாழ்ந்தவர்கள் வாழ்க்கையில் பல நேரங்களில் தோல்விகளைச் சந்திக்க முடியாமல் திணறுகிறார்கள். சிறிய தோல்விகளைக் கூட அவர்களால் சந்திக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடிவதில்லை. அவர்கள் தோல்விகளைத் தங்கள் சுயமரியாதைக்கும் தன்மானத்திற்கும் பங்கமாகக் கருதுகின்றனர். ஆகவே, தோல்விகள் வரும்பொழுது வாழ்க்கையிலிருந்து விலகி, ஒதுங்கி, மறைந்து தங்களைத் தாங்களே சின்னாபின்னமாக்கிக் கொள்கின்றனர். இதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை அவர்களை மேலும் மேலும் பின்னடையச் செய்து உண்மையான  வாழ்க்கையிலிருந்து விரட்டுகின்றது. மன உளைச்சல், மன அமைதியின்மை மற்றும் இருளடைந்த பின்னோக்கான எண்ணங்களுக்கு ஆளாகி ஒரு நோயாளியாக உருவெடுக்கின்றனர். இன்றைய உலகில் இந்தப்போக்கு அதிக அளவில் வளர்ந்து கொண்டிருக்கின்றது.

    இதற்கு ஒரு முக்கிய காரணம் இன்றைய வாழ்க்கை முறைகள்தான். கூட்டுக்குடும்பமாக இருந்து பகிர்ந்து வாழ்ந்த வாழ்க்கையை விரட்டிவிட்டு இப்பொழுது நாம் தனியாக சிறிய குடும்பங்களாக வாழத் தொடங்கிவிட்டோம். இருப்பதை பகிர்தல், விட்டுக்கொடுத்தல், தியாகம், உணர்வுகளைப் போற்றுதல் மற்றும் மதித்தல் போன்ற பல பரந்த பாங்குகள் கூட்டுவாழ்க்கையில் கிடைத்தன, ஆனால், தற்காலத்தில் போட்டி மனப்பான்மைகள் வளர்ந்து, நீயா நானா என்ற வன்மம் வளர்ந்து, தனக்குக் கிடைக்காவிட்டாலும் மற்றவர்களுக்குக் கிடைக்கக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சிகள் தலைதூக்கி நம்முடைய சமுதாயத்தை வதைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலைகளில் எதிலும் எங்கும் எப்படியாவது வென்று விடவேண்டும் என்ற மனைப்பான்மை வளர்ந்து உண்மை நிலைகளை அறிந்தாலும் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்குத் தவறான ஈனமான முறைகளில் ஈடுபட்டாவது நம்மை வெற்றிபெற்றவர்களாக உலகுக்கு காட்ட வேண்டும் என்ற மனப்பான்மை வளர்ந்துள்ளது.

    வயது வந்தவர்களிடம்  இருக்கின்ற இந்த உணர்ச்சிகள் கூட்டாகச் சமுதாயத்தை ஆள்வதால் அதுவே ஒரு இலக்கணமாக மாறி வளரும் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாகக் காட்டப்படுகின்றது. ஆகவே சிறு குழந்தைகளும் இளைஞர்களும் கூட தோல்விகளைச் சாதாரணமாக ஏற்றுக்கொள்வதில்லை. இதன் தாக்கம் அவர்களுடைய மனநிலைகளையும் வளர்ச்சிப்போக்கையும் பாதிப்பதால் சமுதாயத்தில் ஒட்டுமொத்தமாக இந்த பிற்போக்கான எண்ணங்களின் ஆதிக்கம் நிலவி வருகின்றது. பல நேரங்களில் இவற்றைச் சரியான முறையில் அணுக முடியாதவர்கள் இதையே தங்கள் வாழ்வின் முற்றுப்புள்ளியாகக் கருதி தங்கள் இனிய வாழ்வை முடித்துக்கொள்ளத் துணிகின்றார்கள்.

    சற்றே உன்னிப்பாக அலசிப்பார்த்தால் ஒரு உண்மை வெளிப்படும். இவர்கள் தோல்விகளாகக் கருதுவது உண்மையில் தோல்விகளே அல்ல. இவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தங்களுக்குத் தாங்களே கொடுத்துக்கொள்ளும் ஒரு மதிப்பீடுதான் இது. சில நேரங்களில் இந்த மதிப்பீடுகள் பெற்றோர்களாலும் உறவினர்களாலும் கொடுக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒப்பீடுகள் உண்மைக்குப் புறம்பானவை. அறிவியல் நோக்கோடு பார்க்கும்பொழுது ஒவ்வொரு மனிதனின் மூளையும் ஒவ்விதச் சிறப்போடு ஆர்வங்கள், ஈடுபாடுகள், சூழ்நிலைகள் ஆகியவற்றின் உள்ளீடுகளால் தாக்கப்பட்டு வளர்கின்றன. எனவே இரண்டு மனிதர்களை ஒரே நிலையில் வைத்து ஒப்பிடுவது இயற்கைக்குப் புறம்பானது. இதை உணர்ந்து கொண்டால் தோல்வி என்ற வார்தைக்குப் பொருளே இருக்காது. நிலைப்பாடுகள் மாறும் பொழுது அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

    “Every Child is born as a genius” என்று சொல்லுவார்கள். கல்வித் தகுதிகள் மாறுபடலாம், திறன்கள் மாறுபடலாம், பார்வைகள் மாறுபடலாம், ஆர்வங்கள் மாறுபடலாம், முயற்சி செய்யும் வழிகளும் இலக்குகளும் மாறுபடலாம். அவைகள் ஒருவரின் தோல்விக்கு அறிகுறி அல்ல. “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்பது வள்ளுவம். வாழ்க்கையை நாம் எவ்வாறு மகிழ்வோடும் நிறைவோடும் சிறப்போடும் அறத்தோடும் வாழ்கிறோம் என்பதே வாழ்க்கையின் வெற்றிக்கான குறியீடு.

    சற்றே அறத்தோடு வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடரும்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே – 35

    க.பாலசுப்பிரமணியன்

    வெற்றிகள்ஒரு பார்வை 

    ஒரு வெளிநாட்டில் உடல் ஊனமுற்ற சிறுவர்களுக்கான ஒரு நூறு மீட்டர் ஓட்டப் பந்தயப்போட்டி நடந்து கொண்டிருந்தது. அதில் மூன்று இளைஞர்கள் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். இதில் ஒருவர் இளம் வயதில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் தன் கால்களை சற்றே இழுத்து நடந்து கொண்டிருந்தார். மற்றொருவர் நடக்க முடியாத காரணத்தால் ஊன்றுகோல்களை துணையாக்கி நடந்துகொண்டிருந்தார். மூன்றாமவர் ஒரு சக்கர வண்டியில் அமர்ந்து போட்டியில் கலந்து கொண்டிருந்தார். போட்டி துவங்கியதும் எதிர்பார்த்தபடி முதல் நபர் தன்னுடைய கால்களை சற்றே வேகமாக இழுத்துக்கொண்டு முன்னே சென்று கொண்டிருநதார். அவர் முன்னே செல்லும் பாதையில் சற்றே திரும்பி மற்றவர்கள் எந்த வேகத்தில் வந்துகொண்டிருக்கின்றனர்  என்று பார்த்தார். அந்த நேரத்தில் சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்தவரின் சக்கரம் சற்றே பாதை தவறி அருகில் இருந்த வேலியில் சிக்குண்டது. இதனால் அந்த வண்டி அருகே  மெதுவாகக்  கவிழ்ந்து கீழே விழ அந்த நபரும் கீழே விழுந்து விட்டார். உடனே முதலில் சென்று கொண்டிருந்த போட்டியாளர் இலக்கை நோக்கிச் செல்லாமல் திரும்பி அந்த வண்டியை சரியாக நிறுத்தி அந்த மூன்றாம் நபரை எழுப்பி அந்த வண்டியில் சரியாக அமர வைத்து அந்த வண்டியை லேசாக தள்ளிவிட்டார்.அவர் தள்ளிய வேகத்தில் அந்த வண்டி முன்னே சென்று  இலக்கைத் தாண்டியது.

    அந்தப் போட்டியில் பரிசு கொடுக்கும் நேரத்தில் மூன்றாவதாக வந்த முதல் போட்டியாளருக்குக் கிடைத்த வரவேற்பு  பிரமிக்கத் தக்கதாக இருந்தது. அவருடைய நறசெயல் அவருக்கு போட்டியில் இழப்பைத் தந்தாலும் அவருடைய  நற்பண்பு அவருக்குப் புகழையும் பெருமையையும் சேர்த்தது.

    போட்டிகள் வெறும் வெற்றியை நிர்ணப்பதற்காக மட்டும் அல்ல. கூடி ஒரு செயலில் பங்கேற்கும் பொழுது தொய்ந்து போன உள்ளங்களுக்கும் இடரில் தவறிவிட்ட நட்புக்கும் ஆற்றலில் பின்தங்கிய தோழமைக்கும் கைகொடுப்பதற்காக அரங்கேறும் ஒரு செயல். வெற்றிகள் ஒருவரின் பண்பை நிர்ணயிப்பதில்லை.

    வெற்றிகள் ஒரு திறனுக்கு மதிப்பீடு மட்டுமேயன்றி ஒருவரின் முழுத்தகுதிகளுக்குச் சான்றல்ல. வெற்றிகள் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில ஒரு செயலில் ஒருவரின் பங்கிற்குக் கிடைக்கும் ஒரு போற்றல். அதற்கு அப்பால் வெற்றிகள் ஒருவரின் வருங்காலத்தை நிர்ணயிப்பதில்லை. “வெற்றிகள் நம்மை ஊக்குவிக்கும் ஒரு மருந்து” என்பது உண்மைதான். அவை நம்மை மேலும் மேலும் சிறப்பாகச் செயலில் ஈடுபடுவதற்குத் துணை செய்யும் ஊக்கிதான்.

    அதில்   சந்தேகமில்லை. ஆனால் அவைகள் பல நேரங்களில் முடிவுகளாக அமைவதில்லை. அவைகள் முன்னேற்றத்திற்கான ஏணிப்படிகளாக மட்டும் அமைகின்றன. ஆகவே, வெற்றிகளை முடிவுகளாகக் கருதி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளுதல் தவறு. ஆனால் பலருக்கு இது புரிவதில்லை. தங்கள் மிகச்சிறிய   வெற்றிகளைத் தங்கள் வலிமைக்கும் நற்பண்பிற்கும் வாழ்க்கை வளத்திற்கும் முன்னுதாரணமாகக் காட்டி முரசு கொட்டிக்கொண்டு அலைகின்றார்கள். தங்கள் சாதாரணமான வெற்றிகளிக் கூடி மிகப்பெரிய சாதனைகளாகக் காட்டி மற்றவர்களைக் கவரவும் மற்றவர்களை தங்கள் வசம் ஆட்கொள்ளவும்  செய்கின்றார்கள். இதற்கு காரணம் வெற்றியின் மகிழ்ச்சி ஒரு போதையாக மாறி இவர்களை அடிமை கொள்ளுகின்றது. வெற்றியின் போதை ஒரு மனிதனின் அழிவுக்கு அறிகுறி. வெற்றியின் போதை ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்குத் தடைக்கல். வெற்றியின் போதை ஒரு மனிதனை சமுதாயத்திலிருந்து பிரித்து தனிப்படுத்துகின்றது. வெற்றியின் போதையில் அடிமையாகாதவர்கள் விவேகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றார்கள்.

    ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.. “Success is an event and a perception. Excellence is a journey; not a destination.“ வெற்றி என்பது ஒரு நிகழ்வு. அது ஒரு  பார்வை. சிறப்பு என்பது ஒரு பயணம்; அது இலக்கு அல்ல.”  இதை நாம் உணர வேண்டும். ஒரு வெற்றியை ஒரு நிகழ்வின் உரைகல்லில் மட்டும் உரசிப்பார்க்கவேண்டும். அதற்கு மேல் அதன் தாக்கங்களை எடுத்துச் சென்று நம் உள்ளத்தின் செயல்களின் உண்மைகளை மறைக்கவோ மூடவோ கூடாது. நாம் செய்யும் செயல்கள் மேலும் மேலும் சிறப்பிற்கு வழிவகுக்க வேண்டும். இந்தப்பயணத்தில் நமக்குப் பல புதிய உண்மைகள் வெளிப்படும். புதிய திறன்கள் சேரும். புதிய வெளிச்சங்கள் கிடைக்கும். புதிய பாதைகள் தென்படும். போட்டிகள் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை மதிப்பீடு செய்கின்றன.

    வெற்றிகளையும் தோல்விகளையும் நாம் சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் நாம் பலவித மனஅழுத்தங்களுக்கும் மனநோய்களுக்கும் இரையாகக்கூடும். அவைகள் நமக்குத் தாழ்வு மனப்பான்மையையோ அல்லது உண்மையை விலக்கிய அயல்நோக்குகளையோ ஏற்படுத்தக்கூடும்.

    வெற்றிகளையும்  தோல்விகளையும் மனதில் சுமப்பவர்கள் தங்களுக்குத் தாங்களே தண்டனை கொடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் நிகழ்காலத்தை கடந்த காலத்திற்கு அடிமைப்படுத்தி நிகழ்கால சுகங்களை இழந்துவிடுகின்றனர்.. வெற்றிதோல்விகள் நம்மை ஒரு நிகழ்வின் பலன்களுக்கு அடிமைப்படுத்தி விடுகின்றன. இதனால் ஒரு செயலின் பொழுது நாம் நம்முடைய இலக்கின் வெற்றியில் மனத்தை ஈடுபடுத்தி செயலின் சுகத்தையும் திறனின் ஆழத்தையும் அனுபவிக்க மறந்து விடுகின்றனர். அல்லது மறுத்து விடுகின்றனர்.

    கண்ணன் கீதையில் அர்ச்சுனனுக்குச் சொல்கின்றான் “நன் கடமையில் ஈடுபடு. செயலின் பலன்களை என்னிடம் அர்பணித்துவிடு.”

    இதன் உட்கருத்தினை நாம் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.  செயலில் நாம் முழு மனதுடன் ஈடுபட்டு அதில் நம்மை அர்பணித்துக்கொண்டு விட்டால் மகிழ்வும் மன நிறைவும் ஏற்படும்.

    அப்படி நாமும் வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடருவோம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 34

    க. பாலசுப்பிரமணியன்

     

    நாம் யாரோடு போட்டிபோடலாம்?

    கூட்டமைப்புக்களில் நாம் ஒன்றாக இருக்கும் பொழுதும் வேலைபார்க்கும் பொழுதும் நாம் சர்வ சாதாரணமாகப் பார்க்கக்கூடிய காட்சி – ஒருவரை மற்றவரோடு ஒப்பிட்டுப்பார்க்கும் மனப்பான்மை. இந்தச் செயல் ஒருவரை மற்றவரோடு போட்டி போடவும், காரண காரியங்களை அலசாமலும், கால நேரங்களின் மதிப்பீடுகளை மனதில் கொள்ளாமலும், சரி நிகரில்லாத இரு செயல்களையோ அல்லது மனிதர்களையோ ஒப்பிட்டுப் பார்க்கின்ற ஒரு போக்கை வளர்க்கின்றது. இப்படிப்பட்ட ஒப்பீடுகளை மனதில் கொண்டு நாம் சில மனிதர்களையோ அல்லது அவர்களின் செயல்களையோ நியாயப்படுத்துவது மட்டுமின்றி மற்றவரை தாழ்த்தியோ அல்லது குறைத்து மதிப்பீடு செய்தோ ஒரு அசாதாரணமான நிலையை உருவாக்குகின்றோம். அது மட்டுமல்ல அதன் விளைவாக  சிலருக்கு மன அழுத்தம். மன உளைச்சல் மற்றும் தாழ்வு மனப்பான்மையே வளர்க்கின்றோம். இது ஒரு மிகவும் தவறான செயல். எந்த ஒரு குழந்தையையும், மனிதரையும். வேலையாட்களையும் மற்றவர்களோடு ஒப்பிடுவதைத் தவிர்த்தல் மிக அவசியம். இது அந்தத் தனி மனிதரின் மற்றும் நிர்வாகத்தின் வளர்ச்சிக்கும் நலத்திற்கும் உகந்ததல்ல.

    குடும்பங்களும் நிறுவனங்களும் மற்றவர்களை பற்றிய மதிப்பீடுகளைக் கருத்தாக்கி வெளிப்படுத்துமுன் அவர்களின் தனிப்பட்ட சமுதாயப் பொருளாதார மற்றும் மனவளர்ச்சியின் சூழ்நிலைப் பரிமாணங்களை அறிதல் அவசியம். அந்தச் சூழ்நிலைகளின் பின்னணியிவ் தான் அவரை மதிப்பீடு செய்யவேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது மட்டுமே அவர்களின் வளர்ச்சி மற்றும் செயல் பரிமாணங்கள் துல்லியமாக வெளிப்படும். அவ்வாறு இல்லாமல் மற்றவர்களோடு அவர்களை ஒப்பிடும் பொழுது பலவிதமான நிறை குறைகள் நிச்சயமாக இருக்க வாய்ப்புக்கள் உண்டு.

    இப்படிப்பட்ட மதிப்பீடுகளின் காரணமாக அந்தக்கூட்டமைப்பில் உள்ளவர்களிடம் போட்டி மனப்பான்மைகள் எளிதில் உருவாகும். இப்படிப்பட்ட போட்டிகளில் சில நேரங்களில் நல்ல வளர்ச்சிக்கான ஆதாயங்கள் கிடைக்கலாம். அதே நேரத்தில் அது மனநலத்தை பாதிக்கக்கூடிய அளவில் வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, கோபம். பொறாமை, வெறித்தனம் போன்ற பல ஆரோக்கியமில்லாத மன உணர்வுகளை விதைக்கவும், வளர்க்கவும், மற்றும் செயலாக்கம் செய்வதிலும் செய்யும். இது எந்தக் கூட்டமைப்பிற்கும், அது குடும்பமாக இருந்தாலும் சரி, நிறுவனங்களாக இருந்தாலும் சரி காலப்போக்கில் விரும்பத்தகாத சூழ்நிலைகளை உருவாக்கும். பல கூட்டமைப்புக்களில் அதன் தலைவர் அல்லது மற்ற ஒருவரின் ஆதிக்க மனப்பான்மையும் மற்றவர்களுக்கு விருப்பமில்லாத சூழ்நிலைகளை உருவாக்கித் தாழ்வு மனப்பான்மைகளை உருவாக்க காரணமாக அமைகின்றது.

    தற்காலச் சமுதாயத்தில் பல இடங்களில் இது போன்ற விரும்பத்தகாத போட்டிகள் குறைவின்றி காணக்கிடைக்கின்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு அதற்கு பலியானவர்கள் பல நேர்மையற்ற வழிகளையும் பண பலத்தையும் தரமற்ற தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுடைய தனிப்பட்ட மனநலம் கெடுவதுமட்டுமின்றி இது அந்தக் கூட்டமைப்பின் அடிப்படை அஸ்திவாரங்களை அசைக்கின்றது. மேலும் இந்தப் போட்டி மனப்பான்மையினால் நல்லுறவுகள் பாதிக்கப்பட்டு விவாதங்கள், வழக்குகள் மற்றும் சண்டைகள் உருவாகுகின்றன.

    அது மட்டுமல்ல, இந்தப் போட்டிகளில் வெற்றி பெற முடியாதவர்களும், இந்தப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்களும் தாழ்வு மனப்பான்மைக்கு இரையாகி மனநல மருத்துவர்களை சந்திக்கும் நிலைகளுக்கு வந்து விடுகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு ஒரு அமைப்பினால் செய்யப்பட ஆராய்ச்சியில் இந்தத் தாழ்வு மனப்பான்மை தற்கால இளைஞர்களை அதிகம் பாதிப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இது உண்மையிலேயே கவலைக்குரிய செய்தி.

    காரணம்? பல குடும்பங்கள் தங்களுடைய வாரிசுகளுக்கு தேவையற்ற விருப்பமில்லாத மற்றும் உண்மைக்குப் புறம்பான பல இலக்குகளை நிர்ணயித்து விடுகின்றனர். மேலும், அதை அடைவதற்க்க்கான அழுத்தங்களை பல நிலைகளிலும் பல வழிகளிலும் கொடுக்க ஆரம்பிக்கின்றனர். இதனால் அந்த அடையமுடியாத இலக்குகளை நோக்கிப் பயணம் செய்பவர்களில் பலருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தாழ்வு மனப்பான்மைகள் வளர்ந்து அவர்கள் தங்களைத்தாங்களே தோற்கடித்துக் கொள்கின்றனர்.

    ஆகவே ஒருவரை எவ்வாறு ஒப்பிடவேண்டும்? யாரோடு ஒப்பிடவேண்டும்? என்ற வினாக்கள் பல நேரங்களில் எழுந்த பொழுது அதற்குக் கிடைத்த ஒரு சரியான பதில் – ஒரு மனிதனை அவனுடைய வளர்ச்சி மற்றும் கற்றல் பாதையில் முன்னால் எப்படி இருந்தான்? இப்பொழுது எப்படி இருக்கின்றான்? அவன் வளர்ச்சிப்பாதையில் செய்யப்பட சாதனைகளுக்கான குறியீடுகள் என்ன? அவன் உள்ளுணர்வுகள் எந்த நலத்தோடு இருக்கின்றன? – என்பவைகளே குறிப்பீடுகள். ஆகவே, ஒரு மனிதன் தன்னைத் தன்னோடு மட்டும் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

    ஒரு ஆங்கிலப் பேரறிஞர் எழுதுகின்றார் : “ Life is not a competition. Find the stuff that makes your soul sing and be your own uniquely beautiful self.”

    வாழ்க்கை என்பது ஒரு போட்டியல்ல. நீ உன்னுடைய ஆன்மாவின் கீதத்தைக் கேட்கவேண்டும் மேலும் உன்னுடைய அழகான தனித்தன்மையோடு இருக்கவேண்டும்..”

    நாமும் இந்த முயற்சியோடு வாழ்ந்து பார்க்கலாமே !

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 33

    கூட்டமைப்புக்களில் நமது பங்கு

    உலகத்தில் உள்ள அனைத்துத் தொழில் நிறுவனங்களும் ஒரு தனி மனிதனுடைய திறமைகளை அறிந்து, உபயோகித்து மற்றும் பாராட்டுவதில் பின் தங்குவதில்லை. அதே நேரத்தில், அந்தத் தனி மனிதன் ஒரு தீவாக இல்லாமல் மற்றவர்களோடு தோள் சேர்த்து உழைப்பதையே விரும்புவது மட்டுமின்றி அதையே ஒரு சிறப்பாகக் கருதுகின்றன. எவ்வாறு ஒரு இயந்திரத்தின் ஒரு தனிப்பகுதி மட்டும் சிறப்பாக இருந்தாலும் அந்த இயந்திரம் முழுதாகச் செயல்பட்டாலன்றி அதன் உற்பத்தித்திறன் முழுமையாக வெளிப்படாதோ அதேபோல் எந்தத் தொழிலும் அதைச் சார்ந்த அனைவரும் எண்ணத்தால், உணர்வுகளால் மற்றும் செயல்களால் ஒன்றி இணைந்து வேலை பார்க்கும்பொழுதே அதன் சிறப்பும் உற்பத்தித்திறனும் மேன்மையாகி ஒளிர்விடுகின்றன. ஆகவே இந்த கூட்டுச் சிந்தனையையும் இணைந்து வேலைபார்க்கும் திறனையும் எப்படி வளர்ப்பது என்பது பற்றிய பல ஆராய்ச்சிகள்  செய்யப்பட்டுள்ளன. இந்தக் கருத்துக்கள் தொழிற்கூடங்களுக்கு மட்டுமின்றி கூடி வாழும் குடும்பங்களுக்கும் பொதுவாகக் கருதப்படுகின்றன.

    இந்தக் கூட்டு முயற்சிகளுக்கு மிகவும் அத்தியாவசியமாகக் கருதப்படுபவை:

    1. நம்பிக்கை (Trust): நாம் கூட்டாக வேலைபார்க்கும் பொழுது நம்முடன் வேலைபார்ப்பவர்களை நம்முடன் சரி சமமாகக் கருதி நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கை இல்லாமல் சந்தேகக் கண்களுடன் தோள் கொடுக்கும் பொழுது அவர்கள் சரியாக வேலை பார்த்தாலும் நமது சந்தேகங்கள் நம்மை வீழ்த்திவிடும். சந்தேகங்கள் பல நேரங்களில் நம்முடைய இயலாமையின் பிரதிபலிப்புகளாகக் கருதப்படுகின்றன. சந்தேகங்கள் பல நேரங்களில் நம் உள்மனதில் உள்ள பயங்களின் வடிவங்களாகக் கருதப்படுகின்றன. சில நேரங்களில் நம்முடைய சந்தேகங்கள் மற்றவர்களின் தன்னம்பிக்கையின் ஆணிவேர்களைக்கூட அசைத்து அவர்களை பலவீனமாக ஆக்கும் வாய்ப்புக்களை உருவாக்கவும் செய்யும் “மற்றவர்கள் நம்பிக்கைக்குரியவர்களா என்பதை கண்டுபிடிக்க மிகச் சிறந்த வழி அவர்களை நம்புவதுதான் .” என்று நாவலாசிரியர் எர்ன்ஸ்ட் ஹெமிங்ஸ்வே கூறுகின்றார். ஒருவனை நேசிப்பதைவிட அவனை நம்புவது அவனுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என்று மனநல வல்லுநர்கள் கூறுகின்றனர். நாம் கூட இருப்பவர்களை நம்பாவிட்டால் கூட்டுத்தொழிலில் பிணைப்புகள் எளிதாகப் பிரிந்துவிடும்.
    1. அகந்தையின்மை (Absence of Ego): கூட்டுத்தொழில் செய்யும் இடங்களிலும் நேரங்களிலும் நான் என்ற அகந்தையை வெளிப்படுத்துதல் மிகவும் கொடியது மட்டுமின்றி அற்பமானதும் கூட. “தான்” என்ற அகந்தை இல்லாத மனிதனே இல்லை என்பது உண்மைதான். இது ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பரிமாணத்தில் ஒவ்வொரு வகையில் வெளிப்படுகின்றது.  ஆனால் கூட்டுத் தொழில் செய்யும் இடங்களிலும் கூட்டாக வாழும் இடங்களிலும் இந்த உணர்வு மற்ற எல்லாத் திறன்களையும் ஓரங்கட்டி அந்தப் பிணைப்பில் உள்ள அனைவரின் உள்ளத்திலும் வெறுப்பையும் போலித்தனத்தையும் வளர்க்கின்றது. நம்முடைய திறமைகள் முழுமையாக வெளிப்படாவிட்டாலும் மற்றவர்களுடைய திறமைகளையும் ஆக்கத்  திறன்களையும்  உணர்வுகளையும் மதித்து நடத்தல் மிக்க அவசியம். பல நேரங்களில் இந்த அகந்தை நம்மை உயர்வாகக் கருத்துவதற்குப் பதிலாக மற்றவர்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் நினைக்கத் தூண்டுகின்றது.  (Ego is not thinking too high of one’s own self, but too little of others ) ஆகவே தொழிற்கூடங்களில் அகந்தை உடையவர்கள் கூட்டுப் பொறுப்புக்களை நிர்வகிப்பதற்கும் தலைமை ஏற்பதற்கும் உகந்தவர்களாகக் கருதப்படுவதில்லை.. கூட்டுக் குடும்பங்களிலும் அகந்தை உள்ளவர்கள் அந்த அருமையான கூட்டமைப்பின் அழிவிற்கு ஆணிவேராக அமைகின்றார்கள்
    1. பகிர்ந்த பார்வை: (SHARED VISION) கூட்டுக்குடும்பமும் கூட்டுத்தொழில்களும் சிறப்படைய அதில் பங்கேற்கும் அனைவருக்கும் பகிர்ந்த பார்வையும் ஒருமித்த கருத்தும் தேவை. ஒரு அமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பார்த்துக்கொண்டிருந்தால் அந்த வேலையில் சற்றும் முன்னேற்றம் ஏற்படாது என்பது மட்டுமின்றி அதற்க்குச் செலவழித்த பொருள்களும் (Resources) நேரமும் வீணாகிவிடும். அது மட்டுமின்றி அந்த நிலை பல கருத்துவேறுபாடுகளுக்கு வழிவகுத்து அந்த கூட்டமைப்பின் அடித்தளங்களை ஆட்டிவிடும். பகிர்ந்த பார்வை என்பது ஒருமித்த நோக்கமும் கருத்தும். அந்தப் பகிர்ந்த பார்வையின் சில கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் நமக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம். அந்தப் பகிர்ந்த பார்வையை நாம் ஏற்றுக்கொள்ளும் பொழுது தனிப்பட்ட முறையில் நாம் அதை வெறுக்கலாம். ஆனாலும், அது அந்தக் கூட்டுச் செயலுக்கும் கூட்டமைப்பிற்கும் பொதுவானதாக இருப்பதால் நாம் முழுமனதோடு அதில் ஈடுபடுதல் அவசியமாகின்றது. அவ்வாறு முழு மனதோடு நாம் பகிர்ந்த பார்வையை ஏற்றுக்கொள்ளாதபோது அந்தக் கூட்டமைப்பிற்கு நாம் ஒர முட்டுக்கட்டையாகி விடுகின்றோம். பகிர்ந்த பார்வையை ஏற்றுக்கொள்ளுதல் நமது வளர்ச்சியின் பண்பாட்டின் அறிகுறி. அது நம்முடைய வாழ்க்கை வழிகளை எளிதாக்கவும் மகிழ்ச்சியானதாக ஆக்கவும் உதவுகின்றது. ஒரு கூட்டமைப்பில் பகிர்ந்த பார்வையை வளர்ப்பதில் திறனுடையவர்கள் அந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்புக்களுக்குத் தகுதி உடையவர்களாக வளர்கின்றார்கள்.
    1. பங்கு அறிதல் (Role play): கூட்டமைப்பில் பங்கேற்கும் பொழுது அனைவரும் ஒரே விதமான வேலையைச் செய்தல் என்பது மிகவும் அரிது. பல நேரங்களில் ஒரே கூட்டமைப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான செயலைச் செய்ய வேண்டிய கட்டாயங்கள் ஏற்படலாம். அவ்வாறு செய்யும் பொழுது ஒரு வேலையை மேன்மையானதாகவோ அல்லது மற்ற வேலைகளை விடச் சிறந்ததாகவோ அல்லது தரக்குறைவானதாகவோ கருத வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கூட்டுச் செயலில் பல வித பங்குகள் இருக்கும். ஒவ்வொரு பங்கின் பரிமாணங்கள் ஒவ்வொரு விதமாக இருக்கும். எனவே கூட்டுத் தொழிலில் நமது பங்கினை அறிதல் மிக அவசியம். அந்தப் பங்கிற்கு அப்பால் நம்முடைய திறன்களையோ அல்லது கருத்துக்களையோ வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அப்படி நம்முடைய கருத்துக்கள் தேவைப்படும்பொழுது மாட்டும் நாம் ஈடுபட்டால் போதும். பல நேரங்களில் நம்முடைய பங்கை சரியாக அறியாத பொழுதிலும் அல்லது அந்தப் பங்கிற்கு அப்பால் நாம் அவசியமின்றி ஈடுபடும் பொழுது கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. நம்முடைய பங்கிற்கு அப்பால் நாம் தலைநீட்டும் பொழுது நமக்கு அவப்பெயர்களும் தலைகுனிவும் ஏற்பட சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஒரு கூட்டமைப்பின் வெற்றி ஒவ்வொரு பங்குதாரரும் தன்னுடைய பங்குகளை நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் முழுமையாகவும் செய்வதிலேயே அமைந்துள்ளது.

    நம்முடைய கூட்டுப் பொறுப்புக்களில் நாம் இவைகளை பற்றி சற்றே சிந்திக்கலாமே !

    (தொடருவோம்)

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 32

     க.பாலசுப்பிரமணியன்

    கூடி வாழ்ந்தால்

    பல்லாண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சி… ஒரு  நகரத்தின் வெளிப்பகுதியில்  ஒரு  கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில் இருந்த ஒரு தொழிலாளி அங்கிருக்கும் ஒரு மிகப்பளுவான பொருளை த்  தூக்குவதற்காக முயற்சி செய்துகொண்டிருந்தான். அவனால் அந்தப் பளுவை நகர்த்தக்கூட முடியவில்லை. அந்த இடத்தில அவன் வேலையை மேற்பார்த்துக்கொண்டிருந்த  ஒரு மேலாளர்  அவனைப் பார்த்துக் கண்டித்துக்கொண்டிருந்தான். அந்த வழியாக குதிரையில் வந்த  ஒருவர் இந்தக் காட்சியைக் கண்டு அந்த மேலாளரிடம்  கேட்டார்: “அந்தத் தொழிலாளி அந்தப் பளுவை நகர்த்துவதற்கு இவ்வளவு முயற்சி செய்துகொண்டிருக்கிறாரே  நீங்கள் அவருக்கு ஒரு கைகொடுக்கக் கூடாதோ?”

    சற்றே இவரை முறைத்துப் பார்த்த அந்த மேலாளர் “நான் அவனுக்கு கைகொடுப்பதா? அவன் ஒரு தொழிலாளி. நான் மேலாளர். அவனிடம் வேலை வாங்கத்தான் நான் நியமிக்கப் பட்டிருக்கின்றேன்.” என்று சொல்ல  குதிரையில் வந்த அந்த நபர் ஒன்றும் பேசாமல் கீழே இறங்கி அந்தத் தொழிலாளியிடம் சென்று அவருக்குக் கைகொடுக்கின்றார். அந்த வேலை முடிந்தபின் அந்த மேலாளரிடம் எதுவும் கூறாமல் தன்னுடைய குதிரையில் ஏறுகின்றார். அதைக் கண்ட அந்த மேலாளர் “இவனுக்கு உதவி செய்த நீங்கள் யார்?” எனக் கேட்டிடவே, வந்தவரோ “என் பெயர் ஜார்ஜ் வாஷிங்க்டன் . இந்த நாட்டின் அதிபதி.” என்று சொல்லிவிட்டு மேலே செல்கின்றாராம்.

    இந்தக் கதை உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது. ஆனால் இந்தக் கதை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கருத்து என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    பல தொழில் நடக்கும் இடங்களில்  வேலை பார்ப்பவர்கள் கூட்டாகச் சேர்ந்து வேலை பார்க்க்காமல் தங்களுடைய பதவி, தகுதி போன்ற பல காரணங்களுக்குக்காக தங்களுடன் கூட வேலை பார்பவர்களுடன் கூட்டாக வேலை பார்க்காமல் பிரிந்து  நின்று தனியாக வேலை பார்க்கும் காட்சிகளை நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். பதவி என்பது நமக்கு வேலைகளை மேர்பார்ப்பதற்கும் சிறப்பாக ஒழுங்குபடுத்திடுவதற்கும் புதிய உத்திகளால் நம்முடன் வேலை பார்ப்போரை வழிநடத்துவதற்கும் கொடுக்கப்படும் ஒரு தகுதி. அது நம்மை நம்முடன் வேலை பார்ப்பவர்களிடம் பிரித்து நம்மை ஒரு புதிய வர்கத்தினராக ஆக்கும் செயல் அல்ல. எனவே நம்முடன் உழைப்பவர்கள் திறன் மற்றும் உணர்வு நிலைகளை புரிந்து அவர்களுடன் கைகோர்த்துச் செல்வதே சிறந்த தொழில் தர்மமாகும்.

    அது மட்டுமல்ல.. கீழ்காணும் சில காட்சிகளை நாம் பல தொழில்  நடக்கும் இடங்களில் பார்க்கின்றோம்..

    1. “அவனுக்கும் சம்பளம் கிடைக்கின்றது. எனக்கும் சம்பளம் கிடைக்கின்றது. அவன் ஒரு வேலையைத் தவறாகச் செய்தானென்றால் எனக்கென்ன? அவனுடைய தவறுகள் என்னுடைய மேன்மையை வெளிப்படுத்துவதுதானே – என்ற தவறான நோக்கமும் சிந்தனையும்.
    2. “தம்பி, நீ நேற்றுதான் வேளையில் சேர்ந்தவன், நானோ இருப்பது ஆண்டுகளான உழைப்பவன். எனக்கு உன் ஆலோசனை தேவையில்லை. உன் வேலையை மட்டும் நீ பார்.” என்ற ஆணவத்தனம்.
    3. ‘நான் வேலை பார்பதற்குத் தான் சம்பளம் கொடுக்கிறார்கள். அவனுக்கு உதவி செய்வதற்க்கோ அல்லது அவனோடு சேர்ந்து செய்வதற்கோ அல்ல.” என்ற சுயநலச் சிந்தனை
    4. ” நான் அவனுக்கு உதவி செய்து அதனால் அவனுக்குச் சிறப்புக் கிடைத்து விட்டால் எனக்கு என்ன ஆவது?” என்ற கீழ்நோக்குச் சிந்தனை.

    சமுதாயம் என்று ஒன்று உருவானதே எல்லோரும் சேர்ந்து கூடி வாழவும், ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தேவைப்படும் பொழுது கைகொடுக்கவும், நம்மைப் போல் மற்றவர்களின் நலனையும் முன்னேற்றத்தையும் பாதுகாக்கவுமே ! இந்தக் கூடி வாழும் உணர்வு காகம் போன்ற பறவைகளிருந்து எத்தனையோ விதமான விலங்குகளின் சமுதாயங்களில் காணப்படுகிறது. மற்றவர்களை அடித்துத் துன்புறுத்திக் கொன்று தான் உண்ணும் உணர்வுகள் விலங்கினங்களில் காணப்பட்டாலும் பொதுவாக அவைகள் தங்கள் இனங்களை அழிப்பதில்லை. கூடி வாழ்தல் என்பது ஒரு நேயச் செயல். அது மனித இனத்தில் மிகவும் சிறப்பாக விளங்கி வருகின்றது. ஆனால் காலப்போக்கில் தங்களுடைய சுயத்தேவைகளுக்காக இந்த உணர்வுகளை நாம் நழுவ விட்டுக்கொண்டிருக்கின்றோம்.

    கூட்டுக்குடும்பங்கள் இந்த நல்லுறவுகளை வளர்த்துக்கொண்டும் வளப்படுத்திக் கொண்டும் இருந்தன. அவைகள் மறையத் தொடங்கிவிட்டன. தொழில் செய்யும் இடங்களில் கூட்டாக வேலைபார்த்தால் உற்பத்தித்திறனை வளர்ப்பதற்கும் தொழில்  தரத்தை உயர்த்தவும் மிக அவசியமானவை. தற்போதைய நிர்வாகத் திறன்களை வளர்க்கும் பயிற்சிகளில் கூறப்படும் கருத்துக்கள்:

    1. குழுவாகவும் அணியாகவும் வேலைசெய்தல் (Team work)
    2. பகிர்ந்த பார்வைகளை ஏற்றுக்கொள்ளுதல் (Shared vision)
    3. ஒத்துழைப்பு (cooperation)
    4. மோதல்களைத் தவிர்த்தல் (Conflict Resolution)
    5. குழுவைச் சார்ந்த கடமைகள், பொறுப்புக்கள் (Commitment to Team)
    6. கருத்து வேறுபாடுகளை மதித்தல், ஏற்றுக்கொள்ளுதல் (Respecting differences in perception)

    இந்தக் கருத்துக்கள் பொதுவாக எல்லாவிதமான கூட்டுப் பொறுப்புகளுக்கும் உண்மையானவை – அது குடும்பமாக இருந்தாலும் சரி, சமுதாயமாக இருந்தாலும் சரி அல்லது தொழில்கூடங்களாக இருந்தாலும் சரி.

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மைதானே !

    சற்றே நமது வாழ்விலும் இவைகளை பற்றிச் சிந்தினைக்கலாமே !

    தொடருவோம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே-  31

    க. பாலசுப்பிரமணியன்

    முன்னேற்றத்தின் ஏணிப்படிகள்

    ஒரு  கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் அதனுடைய முதலாளி சற்றே மேற்பார்வைக்காக உள்ளே நுழைந்தார். அங்கு அந்த வண்டிகளைப் பழுது பார்க்கும் தொழிலாளி ஒருவர் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த அந்த முதலாளி “தம்பி,  நீ எதற்க்காக இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்கின்றாய்? எதைத் தேடிக்கொண்டிருக்கின்றாய்”  என்று வினவினார். உடனே அந்தத் தொழிலாளி ‘”அய்யா அந்தக் கார் கீழே சென்று உள்ளே சற்றே பழுது பார்க்கவேண்டும்.  கீழே படுத்துக்கொண்டு வேலை பார்க்கும்பொழுது போட்டுக்கொண்டிருக்கும் இந்த உடுப்புகள் அழுக்காகி விடும். எனவே கீழே போட்டுக்கொள்ளுவதற்காக ஏதாவது ஒரு பொருள் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கின்றேன்.” என்று பதிலளித்தார். “அப்படியா, அந்த வேலையை முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?” என மீண்டுக் கேட்க அவரோ “ஒரு பத்து நிமிடங்களில் முடித்து விடலாம்.” என்று பதிலளித்தார். முதலாளி  சிரித்துக்கொண்டே “ஒரு பத்து நிமிட வேலைக்காக நீங்கள் இருபது நிமிடத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு வேலை பார்ப்பதற்காக இந்த நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட் உடுப்புத்தானே.இது.” என்று சிரித்துக்கொண்டே தன்னுடைய கோட் மற்றும் டை ஆகிவைகளைக் கழட்டிவிட்டு அந்தக் காரின் கீழே தானே உள்சென்று பழுது பார்க்க ஆரம்பித்து விட்டார். அதைக்கண்ட அந்தத் தொழிலாளி சற்றே திகைத்து செய்வதறியாமல் நின்றார்.

    பல நேரங்களில் நாம் செய்ய வேண்டிய தொழில்களின் தேவை, தரம், அவசியம், மற்றும் நேரம் ஆகிவற்றைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் நேரங்களை வீணடித்துக்கொண்டிருக்கின்றோம். ஒரு வேலை செய்வது மாட்டும் முக்கியமானதல்ல. அதைத் திறன்படவும் புத்திசாலித்தனமாகவும் செய்தல் அவசியம். தற்காலத்தில் தொழில்களை செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள மூல மந்திரம் ” திறன், அளவு, வேகம்.’ ( SKILL, SCALE AND SPEED)

    எந்த ஒரு வேலையை நாம் செய்யும் பொழுதும் அதைத் திறனுடன்( SKILL)  செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும். திறனில்லாமல் செய்கின்ற வேலைகள் சிறப்பாக இல்லாதது மட்டுமின்றி அவை பல சமயங்களில் எவ்வ்ளவு நேரம் அதற்குத் தேவையோ அதைவிடப் பல மடங்கு நேரத்தை விழுங்கி விடும்.  நாம்  வழக்கத்தில் கேட்ட கதை இதுதானே:

    மரங்களை வெட்டுகின்ற ஒரு தொழிலாளி பல வருடங்களாக ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய ஒரு நாள் வேளையில் அவன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மரங்களை வெட்டிக்கொண்டிருந்தான். நாள்பட, அவன் உற்பத்தித்திறன் குறைந்ததும். அந்தத் தொழிற்கூடத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒருவன் மிகச் சிறப்பிப்பாகவும் அதிக உற்பத்தித்திறனுடனும் வேலை செய்துகொண்டிருந்ததை முதலாளி பாராட்டிய பொழுது அந்தப் பழைய தொழிலாளிக்கு மனவருத்தமும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டது. காரணம்? அந்தப் புதிய தொழிலாளி தினம் வேலைக்கு வரும் பொழுது தன்னுடைய கருவிகளை சீர்படுத்தி வேலைக்கு உகந்ததாக கொண்டுவந்து கொண்டிருந்தான். பழைய தொழிலாளியின் கருவிகள் பல மாதங்கலாகச் சீர்படுத்தப்படவில்லை.

    நாம் வேலைக்குச் செல்லும் பொழுது நமது கருவிகள் வேலைக்கு உகந்ததாக இருக்கின்றனவா என்று நாம் சிந்திக்க வேண்டும் . அந்தக் கருவிகள் – சிந்தனைகளாக இருக்கலாம், வேலையைப் பற்றிய புதிய தேடல்களாக இருக்கலாம், வேலை செய்யும் சூழ்நிலைகள், அதைச் சார்ந்த புதிய கண்டுபிடிப்புக்கள் அல்லது புதிய செயல்முறைகளாக இருக்கலாம். அவைகள் நமக்குத் தெரியுமா? அதை எவ்வாறு கற்றுக்கொள்ளலாம் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

    கற்றல் என்பது  வாழ்க்கையின் ஒரு தொடர் நிகழ்வு. அறிவுசால் சமுதாயத்தில்  அறிவையும் திறன்களையும் வளர்க்கும் உள்ளீட்டுக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டும் மேம்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. ஆகவே அந்த அறிவு நுணுக்கங்களையும் அவைகளின் பரிமாணங்களையும் அவைகளின் தாக்கங்களையும் தொடர்ந்து கண்காணிப்பது மட்டுமின்றி அவைகளைத் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். கற்றல் வெறும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாற்றும் நடப்பதல்ல. அறிவு உள்ளீட்டுக்களின் வேகங்களும் பரிமாணங்களும் மாறிக்கொண்டிருக்கும் நேரத்தில் நாம் அவற்றிக்குத் தகுந்தாற்போல் நம்முடைய தொழில்சார்ந்த கற்றல் திறன்களையம் வளர்த்துக்கொண்டும் மாற்றிக்கொண்டும் இருத்தல் அவசியம். அதற்கு ஈடு கொடுக்காதவர்கள் வேகத்தின் விளையாட்டில் தோற்றுப்போவது மட்டுமின்றி வளர்ச்சிப் பணிகளுக்கு உபயோகமானவர்களாக இருக்கமாட்டார்கள்.

    நம்மில் பல பேர்கள் நம்முடைய படிப்புக்கள் கல்லூரி அல்லது பள்ளியிலேயே முடிந்து விட்டது என்ற தவறான கருத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் .அது நம்முடைய முன்னேற்றத்திற்கு நாமே அடித்துக்கொள்ளும் சாவு மணியாகும். விடுகின்ற ஒவ்வொரு காலையும் ஒரு புதிய சந்திப்பு. அது புதிய கருத்துக்களோடும் புதிய எதிர்பார்ப்புக்களோடும் விடுகின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் நாம் இது வரை கற்காலத்திலேயே இருந்து கொண்டிருப்போம்.

    நான் ஒரு நிறுவனத்தின் தலைவரின் அறையிலே பார்த்த ஒரு சுவரொட்டி என்னை மிகவும் கவர்ந்தது. அதிலிருந்த வாசகம் இதுதான்:

    “ஆப்பிரிக்கக் காடுகளில் இருக்கின்ற ஒவ்வொரு மானும் தினசரி காலையில் கண்விழிக்கும் பொழுது “நேற்றைவிட இன்று வேகமாக ஓடவேண்டும் என்ற  உறுதியோடு எழுந்திருக்கின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் இன்று ஏதாவது ஒரு சிங்கத்திற்குத் தான் இரையாக வேண்டும் என்ற எண்ணமே !

    ஆப்பிரிக்கக் காடுகளில் இருக்கின்ற ஒவ்வொரு சிங்கமும் தினசரி காலையிலே கண்விழிக்கும் பொழுது “நேற்றைவிட இன்று வேகமாக ஓடவேண்டும்” என்ற உறுதியோடு  எழுந்திருக்கின்றது, அவ்வாறு இல்லாவிட்டால் இன்று தனக்கு இரை கிடைக்க வாய்ப்பில்லை என்ற எண்ணமே !

    நீங்கள் மானாக இருந்தாலும் சரி, சிங்கமாக இருந்தாலும் சரி, தினசரி காலையிலே கண்விழிக்கும் பொழுது  நேற்றை விட இன்று சிறப்பாகச் செயல் பட வேண்டும் என்ற எண்ணத்தில் கண்விழிக்க வேண்டும்.:

    என்ன உன்னதமான கருத்து!

    பல நேரங்களில் பல இடங்களில் சிலருக்கு வேலை கிடைத்தவுடன் “இனிமேல் நமக்குக்  கவலையில்லை. நம்முடைய ஓய்வு காலம் வரை நம்மை யாரும் அசைக்க முடியாது ” என்ற தவறான கருத்தோடு தங்கள்  தொழில் சிறப்பை இழந்து நிற்கின்றார்கள். .இன்னும் சிலரோ “நான் என்னதான் சிறப்பாக வேலை பார்த்தாலும்

    எனக்கு இன்னும் பத்து வருடங்களுக்கு வளர்ச்சி இல்லை . செய்தேன்ன பயன்? ” என்று தங்களைத் தாங்களே தோற்கடித்துக்கொண்டு வாழ்கின்றார்கள். .மற்றும் பலர் “எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். நான் மற்றவர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு ஏன் கற்றுக்கொள்ளவேண்டும்.?” என்ற சிந்தனையில் வாழ்கின்றார்கள். இன்னும் சிலர் “என்னுடைய வேலை ஒப்பந்தத்தில் நான் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லையே” என்று விளையாட்டாகப் பேசி வளர்ச்சியைத் தவற விடுகின்றார்கள்.

    வளர்ச்சியும் முன்னேற்றங்களும் காலமும் இவர்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பதில்லை. திறன் – அளவு – வேகம் (SKILL, SCALE AND SPEED): இவைதான் நம்முடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஏணிப்படிகள்.

    சற்றே முயன்று பார்க்கலாமே !

    தொடரும்…

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 29

    க. பாலசுப்பிரமணியன்

    தொழிலின் சிறப்பு

    மாற்றங்களின் தொகுப்புத்தான் வாழ்க்கை என்பதை நாம் புரிந்துகொண்டால் மாற்றங்களைச் சந்திப்பதற்கும் வாழ்வை வளமுடன் வாழ்வதற்கும் தேவையான சக்தியும் எண்ணங்களும் கருத்துப் பரிமாணங்களும் நமக்கு எளிதில் கிடைக்கும். இதற்குத் தகுந்தவாறு நமது அணுகுமுறைகளை ஏற்படுத்திக்கொள்ளவும் வடித்துக்கொள்ளவும் உபயோகித்துக்கொள்ளவும் நாம் தயாராக வேண்டும்.

    எந்த ஒரு பிரச்சனையையும் நமது அணுகுமுறைகளால் சமாளித்து விடலாம். நமது அணுகுமுறைகள் நேர்மையானதாகவும் பரிசுத்தமானதாகவும் ஆக்கபூர்வமாகவும் இருத்தல் அவசியம். இவைகளில் எந்தவிதமான குறைகள் இருந்தாலும் நமக்கு கிடைக்கும் பலன்களில் அவைகளின் தாக்கமும் பாதிப்பும் இருக்கும்.

    உதாரணமாக மாணவப் பருவத்தில் சிலர் தேர்வுகளுக்குத் தங்களைத் தயார் செய்துகொள்ளும் பொழுது ‘இதெல்லாம் தேர்வில் வராது’ என்றோ ‘இந்த மாதிரிக் கேள்விகள் வந்தால் அவைகளை தயாரிப்பின்றியே சமாளித்து விடலாம் ‘ என்ற கருத்தும் அணுகுமுறையும் இருந்தால் நிச்சயமாக அவர்களுக்குத் தேர்வில் பாதிப்புக்கள் ஏற்படும். கற்றலின் சிறப்பே அறிவுத் திறன்களை வளர்த்துக்கொள்வதேயன்றி வெறும் தேர்வில் மதிப்பெண்களுக்காக மட்டும் தயாரிப்பில் ஈடுபடுதல் அல்ல. இது ஒரு கட்டிடத்திற்கு அடிவாரம் இல்லாமல் மேலே கட்டிடங்களைக் கட்டுவது போல.

    இதேபோல எந்த ஒரு தொழிலிலும் நாம் ஈடுபடும் பொழுது அந்தத் தொழிலுக்குத் தேவையான திறனும் கண்ணியமும் ஈடுபாடும் தேவையானது. மேலெழுந்தவாரியாக வெளிப்பூச்சு செய்வதுபோல மற்றவர்களுக்காக ஒரு வேலையைச் செய்யும் பொழுது நமது உள்மனதிற்க்குத் தேவையான நிறைவும் மகிழ்வும் கிடைக்காதது மட்டுமின்றி அந்தத் தொழிலின் மீதே நமக்கு ஒரு வகையான வெறுப்பும் பிடிப்பின்மையும் ஏற்பட்டுவிடும். தொடர்ந்து ‘எப்பொழுது இந்த வேலையை நாம் விட்டுவிடுவோம் என்ற எதிர்பார்ப்புக்களும் அதைச் சார்ந்த மனச் சோர்வும், அதன் பலனாக மன-உடல்நல பாதிப்புக்களும் ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகமாக அமையும்.

    “செய்யும் தொழிலே தெய்வம் என்ற மனப்பான்மை வேண்டும். எந்தத் தொழில் செய்தாலும் அது நாம் இறைவனுக்குச் செய்யும் ஒரு படைப்பாகக் கருதிச் செய்யும் பொழுது அதில் ஒரு நிறைவும் மகிழ்வும் ஏற்படும். நிறவெறியை எதிர்த்துப் போராடிய தலைவர் மார்ட்டின் லூத்தர் கிங் என்பவர் கூறினார்”  ஒரு மனிதன் தெருவைச் சுத்தம் செய்யும் பொழுது, மைக்கெல் அஞ்சேலோ ஒரு சிற்பம் வடித்ததைப் போலவோ அல்லது செகப்பிரியர் ஒரு கவிதை புனைந்தது போலவோ அல்லது பீத்தோவன் ஒரு பாடலுக்கு இசை அமைத்தது போலவோ நினைத்து அந்தத் தொழிலைச் செய்யவேண்டும். அதைச் செய்யும் பொழுது மண்ணிலும் வானிலும் இருக்கும் தேவதைகள் சற்றே நின்று வியந்து ‘இதோ இங்கே தெருக்கூட்டுபவன் தன் தொழிலை எவ்வாறு சிறப்பாகச் செய்கிறான் பாருங்கள் ” என்று தங்களுக்குள் உரையாடிக்கொண்டு செல்ல வேண்டும்.”

    தொழிலைச் செய்யும் பொழுது அது ஒரு உயர்ந்த அல்லது தாழ்ந்த தொழில் அல்ல. எல்லாமே ஒருவர் இந்த மனித இனத்திற்கும் இந்த மண்ணிற்கும் தாங்கள் செய்யும் ஒரு சேவையாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு செய்கின்ற ஒரு மனிதனுக்கு இந்த உலகில் உள்ள அனைவரும் தலை வணங்குவர்.  சில ஆண்டுகளுக்கு முன் மராட்டிய மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு மிகப் பெரிய தொழிலதிபரின் வண்டி ஓட்டுநர் அவரிடம் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வேலை பார்த்தபின் மாரடைப்பால் காலமாகின்றார். அடுத்த நாள் அவர் உடலுக்கு இறுதி மரியாதை அளிக்க பலர் கூடியிருந்த வேளையில் அந்தத் தொழிலதிபர் எந்தக்காரில் அவர் ஓட்டுநராக இருந்தாரோ அதை அலங்கரித்து அவருடைய சவ ஊர்வலத்திற்க்காகக் கொண்டு வந்தது மட்டுமின்றி அதைத்தானே மயானம் வரை ஒட்டிச் சென்றார். பலரின் கேள்விக்கு பதிலளிக்கும் வண்ணம் அந்தத் தொழிலதிபர் கூறியதாவது. “முப்பது ஆண்டுகள் இவர் என்னை பத்திரமாகக் காப்பாத்தி இந்த வண்டியை ஒட்டியிருக்கின்றார். அவருடைய தொழில் திறனுக்கும்கடமை உணர்வுக்கும்  நான் கொடுக்கும் சிறிய மரியாதை அவரைக் கடைசி ஊர்வலத்தில் நானே அழைத்துச் செல்வதுதான்.” பல இடங்களில் தங்கள் தொழிலில் நேர்மையுடனும் கடமையுணர்வுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொண்டவர்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் வரலாற்றுச் சிறப்புப் பெற்றவை.

    சில நேரங்களில் நாம் செய்கின்ற தொழிலுக்கும் அதில் நாம் காட்டும் ஈடுபாட்டிற்க்கும் நம்முடைய சிறப்பான திறன்களுக்கும் சரியான ஊதியம் கிடைப்பதில்லை. அல்லது நாம் சிறப்பாகத் தொழில் செய்தாலும் பல வித காரணங்களால் நமக்கு மற்றவர்களோடு நிகரான அங்கீகரிப்புக் கிடைப்பதில்லை. இவைகள் நம்முடைய தொழில் தர்மத்தையோ`அல்லது ஈடுபாட்டையோ, திறன்களையோ அல்லது கடமை உணர்வினையோ பலி  வாங்க அனுமதிக்கக்கூடாது. நமக்குப் பல நேரங்களில் நிகரான அங்கீகாரங்கள் கிடைப்பதில்லை. அது நம்முடைய திறனுக்கோ  அல்லது தனித்தன்மைக்கோ விமரிசனம் அல்ல. அவைகளுக்கு அப்பாற்பட்டு நாம் செய்கின்ற தொழில் இந்த மனித இனத்திற்கும் இறைவனுக்கும் நாம் செய்கின்ற ஒரு தோத்திரமாக இருந்தால் அதுவே நமது வாழ்க்கையின் பொருளும் வெற்றியும் ஆகும்.

    முயன்று பார்க்கலாமே !

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 27

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களின் வேகங்களும் மனித வாழ்க்கைத் திறன்களும்

    மாற்றங்களின் வேகம் நம்மைத் தடுமாற வைத்துக்கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம். இந்த மாற்றங்கள் நமது வாழ்க்கை முறைகளை மிகவும் பாதிக்கின்றன. மனித மூளையின் சிந்தனைத் திறன்களை போலவே கணினிகள் மூலமாக செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) பதப்படுத்தி அதை எவ்வாறு இயந்திரச் சிந்தனைகளுக்கு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிய உலகளாவிய ஆரய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக பல வித இயந்திரங்களும் கருவிகளும் செயற்கைச் சிந்தனை மூலம் மனித சிந்தனைகளுக்கு ஓய்வு கொடுப்பது மட்டுமின்றி, பல இடங்களிலும் பல திறன்களும் மனித சிந்தனைகளைத் தேவையற்றதாக ஆகிவிடுகின்றன. இதன் தாக்கத்தின் மூலமாக பல மனிதச் சிந்தனைத் தேவைகளும் அவை சார்ந்த திறன்களும் வாழ்க்கை நடைமுறைகளும் அழிந்து விடும் நிலையில் உள்ளன. இது சமுதாயத்திற்கு நல்லதா தீயதா என்ற விவாத மேடைகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த விவாதங்களை அர்த்தமற்றதாக ஆக்கும் வகையில் அந்தக் கருவிகளின் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் தாக்கங்களும் அமைந்து கொண்டிருக்கின்றன.

    உதாரணமாக சில நாட்களுக்கு முன் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் கூறினார் ”  ஒரு காலத்தில் ஒரு நிறுவனத்தின் இயக்குனராக நான் இருந்த பொழுது எனக்கு உதவி செய்ய ஒரு தனிப்பட்ட உதவியாளர் இருந்தார். இன்று அதுபோன்ற ஒரு உதவியாளருக்குத் தேவையே இல்லை. அதற்க்கு பதிலாக எனது அலைபேசியில் உள்ள கூகுள் உதவியாளர் எனக்குத் தேவையான பல வேலைகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றுகின்றது “

    “கூகுள், இன்று எனக்கு என்னென்ன வேலைகள் உள்ளன?”

    “கூகுள், இன்று மாலை எனக்கு எந்த விமானத்தை பிடிக்க வேண்டும். எத்தனை மணிக்கு விமான நிலையத்திற்கு எந்த வழியாகச் செல்லவேண்டும்?”

    “கூகிள், சென்னையிலிருந்து கும்பகோணத்திற்குச் செல்லும் பாதைகள் என்ன? அவைகளின் தூரங்கள் எவ்வளவு? அந்த தூரத்தை இந்தப் போக்குவரத்து நெரிசலில் கடக்க எவ்வளவு நேரம் ஆகும்?

    “கூகுள், இன்று சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா? அப்படிப் பெய்தால் எந்த நேரத்தில் மழை வரலாம் ?

    “கூகிள் அடுத்த ஒரு வாரத்திற்கு மதுரையின் வெப்ப நிலை என்ன?”

    இது போன்ற பல கேள்விகளுக்கு பதிலும் அதைத் தொடர்ந்து தேவைப் பட்ட தகவல்களும் கிடைக்கின்றன.

    அது மட்டுமா… உங்களுடைய மருத்துவரிடம் தொலைபேசியில் சந்திப்பதற்கான நேரத்தை கேட்டுவாங்கி அதை உறுதிப்படுத்தும் நுண்ணறிவும் இந்த அலைபேசிக்குள் அடக்கப்பட்டுவிட்டது.

    ஒரு பெண்மணி விளையாட்டாக தன்னிடம் உள்ள கூகுள், உதவியாளரிடம் “கூகிள், வத்தக்குழம்பு வைப்பதற்கான முறை என்ன?” என்று கேட்க சில நொடிகளில் அதைத் தயாரிக்கும் முறைகளை பதிவு செய்து விடுகின்றது.

    செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் நாம் செய்யும் பல வேலைகள் வழிமாறி முறைமாறி புதிதான பரிமாணங்களில் உருவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    உதாரணமாக, செயற்கை நுண்ணறிவில் இயங்கும் குளிர்சாதனப் பெட்டிகள், அவைகள் உள்ளே வைக்கப்பட்டுள்ள பொருட்களையும் அவர்களின் தரத்தையும், அவர்களின் வாழ்நாளையும் உங்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கும் நிலையில் உள்ளன. நாம் ஒரு கடைக்குச் சென்று “எவ்வளவு பால் வாங்க வேண்டும். எவ்வளவு தக்காளி வாங்க வேண்டும்?’ என்று நினைத்தால் உடனே நமது அலைபேசி மூலமாக அதை அந்தக் குளிர் சாதனப் பெட்டியிலிருந்து தகவலாக மட்டுமின்றி அதை கண்கூடாகவும் பார்த்து முடிவு எடுத்துக்  கொள்ளலாம்.

    காலையில் நாம் பல் துலக்கும் பொழுது நமக்கு உதவி செய்து நமது பற்களில்  உள்ளோ வெளியிலோ கறைகள் உள்ளனவா, நாம் எவ்வாறு பல் துலக்கியுள்ளோம் என்பதைத் தெரிந்து கொள்ளும் கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

    பல விதமான உடல் அறுவை சிகிச்சைகள் மனித இயந்திரங்களின் மூலமாகச் செய்யப்பட்டு வருகின்றன.

    மிசியோ காக்கூ என்ற ஒரு ஆராய்ச்சியாளர் மற்றும் அறிவியல் நிபுணர் தன்னுடைய “மூளையின் சக்தி ” (The Power of Mind) என்ற புத்தகத்தில் மூளையின் வலிமையைப் பற்றியும் செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும் சேர்ந்து செயல்படும் சாத்தியக்கூறுகள் பற்றியும் விளக்கமாக எழுதியுள்ளது வியப்பை மட்டுமின்றி அதிர்ச்சியையும் அளிக்கின்றது. இதனால் நமது வாழ்வு முறைகள் எவ்வாறு மாற்றப்படும் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.

    இத்தனை மாற்றங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா அல்லது மறுக்க முடியுமா? இவைகளின் தாக்கங்கள் எத்தனை வேகமா வரும்? தற்போது நடைமுறையில் இருக்கின்ற வாழ்வாதாரங்கள் இடிக்கப்படும் பொழுது எவ்வளவு சீக்கிரத்தில் நாம் புதிய முறைகளோடு இணைந்து வாழ முடியும்? இவையெல்லாம் கேள்விக்குறிகளே !

    ற்றங்களை நாம் சந்தித்துத் தான் ஆகவேண்டும்.

    இந்த மாற்றங்கள் நன்மை பயக்குமா தீமை பயக்குமா, தேவையா அல்லது தேவையில்லையா என்பதைக் காலம் தான் நிர்ணயிக்க வேண்டும்.

    ற்றங்களுக்குத் தக்க முறையில் நம்மை சிறிய அளவிலாவது மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றோம்.

    மாற்றங்கள் சந்தேகங்களை உண்டுபண்ணலாம் மாற்றங்கள் வியப்பை உண்டுபண்ணலாம். மாற்றங்கள் பயத்தையும் பீதியையும் உண்டுபண்ணலாம். மாற்றங்கள் மகிழ்வை உண்டுபண்ணலாம். மாற்றங்கள் இன்னும் பல புதிய சிந்தனைகளை உண்டுபண்ணலாம். அவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

    நாம் அவைகளோடு இணைந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

    வாழ்ந்து பார்க்கலாமே !

    (தொடரும் )

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 26

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது?

    மாற்றங்கள் எப்படி ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன?  மாற்றங்களின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்ததால் பல உண்மைகள் நமக்கு வெளிப்படுகின்றன.

    கற்காலம் தொட்டே மனிதனின் அறிவு வளர்ச்சிக்குத் தகுந்தவாறு மாற்றங்களும், மாற்றங்களுக்குத் தகுந்தவாறு அறிவின் வளர்ச்சியும் ஏற்பட்டுக்கொண்டேதான் இருந்திருக்கின்றன. முதலில் கற்களை உரசி நெருப்பினைக் கண்ட மனிதன் அந்த நெருப்பைப் பயன்படுத்தி வாழ்வின் முறைகளையும் வளத்தையும் காக பெருக்கக் கற்றுக்கொண்டான். பின்பு உலோகங்களைக் கண்டுபிடித்தபின் அவைகளை ஆயுதங்களுக்கும் மற்றும் மேம்பட்ட வாழ்விற்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்று அறிந்துகொண்டான். பின்பு சக்கரத்தைக் கண்டுபிடித்த மனிதன் தன தொழிலுக்கும் வாழ்க்கைச் சாதனைகளுக்கும் அதன் மூலமாக புதிய சிந்தனைகளை வளர்த்துக்கொண்டான். மேற்கண்ட மாற்றங்கள் மனித இனத்தின் வளர்ச்சிப்பாதைக்கு வித்திட்டது மட்டுமின்றி அதன் வேகத்தையும் சற்றே முடுக்கிவிட்டன.

    சில நூற்றாண்டுகளுக்குப் பின் இயந்திரங்களை படைக்கக் கற்றுக்கொண்டவன் சிந்தனையால் ஒரு தொழில் புரட்சியே நடந்தது.. இயந்திரங்கள் மூலமாக படைப்புத்திறன்களையும் தரத்தையும் வளர்க்கவும் சீர்படுத்தவும் கற்றுக்கொண்டு தரமான பொருட்களைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டான் தொழில்சார் சமுதாயத்தில் படைக்கப்பட்ட அச்சு இயந்திரம் மனிதனுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

    வாய்வழியாகவும் மனிதனின் நினைவுச்சக்தியை மட்டும் சார்ந்து வளர்ந்த அறிவு எழுத்துக்களில் வடிக்கப்பட்டு புத்தகங்களாகி கால நேரங்களுக்கு அப்பாற்பட்டு தேவைக்கேற்றவாறு அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் ஆராய்ச்சி செய்வதற்கும் பயன்பட்டது. தனிப்பட்ட அறிவுசேர்க்கும் நிகழ்விலிருந்து சமுதாயம் கூட்டாக அறிவினைச் சேர்ப்பதற்கும் அலசுவதற்கும் மேம்படுத்திக்கொள்ளவும் இந்த புதிய கண்டுபிடிப்புக்கள் பயன்பட்டன.

    வளர்ச்சிப் பாதையில் ஏற்பட்ட அடுத்த மிகப் பெரிய மாற்றம் கணினி. கணினி முதன்முதலாக ஒரு கணக்கிடப்படும் இயந்திரமாகத் தோன்றினாலும் நாளடைவில் அதன் பரிமாணங்கள் பெருகி வளர்ந்து மலர்ந்து அது ஒரு பல்நோக்கு இயந்திரமாக மட்டுமின்றி மனித சிந்தனைக்குச் சவால் விடும் ஒரு இயந்திரமாக மாறிவிட்டது. இந்தக் கணினியின் மூலமாகவும் அது சார்ந்த மற்ற தொழில்நுட்பங்கள் மூலமாகவும் அறிவையும் கருத்துக்களையும் நிகழ்வுகளையும் மற்றும் பல வித அறிவுசால் முறைகளையும் வகைப்படுத்தி நுட்பப்படுத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் நமக்கு தெரியப்படுத்த ஒரு வாய்ப்புக்க கிடைத்தது. இந்த கணினி சமுதாயத் சிந்தனையிலும் வாழ்க்கை முறைகளிலும், செயல் திறன்களிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் இந்த மனித இணைத்தல் சற்றும் எதிர்பார்க்கப்படாதவை. ஆயினும் மனித இனம், இந்த மாற்றங்களை மகிழ்வுடனும் ஆர்வத்துடனும் முற்போக்குச் சிந்தனையுடனும் ஏற்றுக்கொண்டு தங்கள் வாழ்க்கை முறைகளை தக்கவாறு மாற்றிக்கொண்டு வருகின்றது. இந்த கணினியுகத்தின் மிகப்பெரிய உண்மை: மாற்றங்களின் வேகம். மாற்றங்கள் ஏற்பட்டது மட்டுமின்றி மாற்றங்களின் வேகம் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. கணினிகளின் வளர்ச்சிவேகமும் அவைகளின் ஆதிக்கமும் ஊடுருவலும் மனித இனத்தை வியக்க வைத்தது மட்டுமின்றி அவர்களின் வாழ்க்கைக்கு கோட்பாடுகளின் அடித்தளத்தை ஆசைப்பதற்கும் வித்திட்டன. இந்த மாற்றத்தினால் உலக தூரங்கள் தகவல்களாலும் தொடர்புகளால் கருத்துக் பரிமாற்றங்கள் வளந்தினால் மிக அதிக அளவில் குறைக்கப்பட்டு சிந்தனிக் கூடாரங்கள் இணைத்தளங்களில் அமைக்கப்பட்டன. கருத்தால் ஒன்று பட்ட மனித இனம் வளங்களின் பரிமாற்றங்களால் தங்கள் தேவைகளையும் வியாபார வெறியையும் மிக எளிதில் நிறைவேற்றிக்கொண்டது. ஆனால், சிந்தனைக்கு கூடங்களின் வலிமையையும் ஆதிக்கமும் அடுத்த கட்ட மாற்றத்திற்கும் பரிமாண வளர்ச்சிக்கும் வழிவகுத்தன. நாம் “அறிவுசார்” சமுதாயத்தை  (KNOWLEDGE SOCIETY ) நோக்கி நம்முடை  போக்கை வழிப்படுத்திக்கொண்டோம் இதன் விளைவு? தொழிலைத் தேடி கடல் கடந்த மனித இனம் இப்போது தங்கள் அறிவின் ஆதிக்கத்தினால் இருக்கும் இடத்திலிருந்தே தொழில்களைக் கவர ஆரமிப்பித்தது. மனிதர்கள் இடம் பெயர்வதற்குப் பதிலாக திறன்களைத் தேடி தொழில்கள் இடம்பெயரத் தொடங்கின. இந்த புதிய மாற்றத்தில் ‘திறன்களே” வளத்திற்கும் வளர்ச்சிக்கும் ஆன்மாவாக மாறியது.

    “வருங்காலத்தில் அதிர்ச்சி” (THE FUTURE SHOCK) என்ற புத்தகத்தில் ஆல்வின் டாபிளேர் என்ற ஒரு ஆராய்ச்சியாளர் வெகு அழகாகச் ல்லுகின்றார்: ” நிலத்தை முதலாக வைத்து வாழ்ந்த மனித இனம் பின் இயந்திரங்களை மூலதனமாக வைத்து வாழ ஆரம்பித்தது. பின்பு இயந்திரங்களிலிருந்து விலகி தகவல் சார் சமுதாயமாக மாறி அறிவின் சேர்க்கைக்கும் வளத்திற்கும் மீட்புக்கும் துணையாக வளர்ந்தது. வெறும் தகவல் சார் சமுதாயத்திலிருந்து மனித இனம் “அறிவு சார் சமுதாய”மாக மாறி வந்துள்ளது. இந்தப் பயணத்தில் முதல் மாற்றம் ஏற்பட பல ஆயிரம் ஆண்டுகள் ஆயின. அடுத்த மாற்றம் சில நூற்றாண்டுகளுக்கும் நடந்தது. மூன்றாவது மாற்றம் சில பத்தாண்டுகளுக்குள் நடந்தது. தற்போது இருக்கின்ற அறிவுசார் சமுதாயத்தின் ஆயுட்காலம் மிகக் குறைவு. அறிவும் திறன்களும் மிக விரைவில் மிக எளிதாகவும் தங்கள் வாழ்வின் காலத்தை இழந்துகொண்டு இருக்கின்றன.”

    இந்த மாற்றங்களை நாம் எப்படி எதிகொள்ள வேண்டும்?

    1. இந்த மாற்றங்களை முற்றிலும் நாம் வெறுத்து ஒதுக்கலாம் .
    2. இந்த மாற்றங்களை விரும்பி ஏற்காமல் அவைகளுக்கு வழிவிட்டு நாம் ஒதுங்கி நிற்கலாம்.
    3. இந்த மாற்றங்களுக்கு அடிமையாகி நாம் அவைகள் அடித்துச் செல்லும் வெள்ளத்திற்கு இரையாகலாம்
    4. இந்த மாற்றங்களை அலசி ஆராய்ந்து தேவைக்குத் தக்கவாறு ஏற்றுக்கொள்ளலாம்.

    இந்த மாற்றங்களை முற்றிலும் வெறுத்து ஒதுக்குவது சாத்தியமானதல்ல. அந்த நிலையை நாம் இப்போது கடந்து விட்டோம்.

    அவைகளுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றால், காலமும் வாழ்க்கை நடைமுறைகளும் நம்மை இருக்கும் இடத்திலே விட்டுவிட்டு முன்னே சென்று கொண்டிருக்கும். நாம் தனிமையில் ஏங்கி வேண்டப்படாதவர்களாக நிற்போம்.

    இந்த மாற்றங்களுக்கும் அடிமையாகி அந்தக் காட்டாற்று வெள்ளத்திற்கு இறையானால் இந்தப் பிறவியின் சீரிய பயனை இழந்து நிற்போம். வாழ்க்கை தொழில் நுட்பத்தாலும் அது சார்ந்த இயலிகளாலும் கட்டுப்படுத்தப்பட விடக்கூடாது.  அது நமக்குத் தோல்வியின் அறிகுறி.

    இந்த மாற்றங்களை அலசி ஆராய்ந்து அவற்றை நமக்குத் தேவைக்குத் தகுந்தவாறு ஏற்றுக்கொண்டால் நாம் அவற்றை நமது வாழ்க்கைப் பயணத்திற்கும் முன்னேற்றத்திற்கும் மகிழ்வுக்கும் பயனுள்ளதாக அமைத்துக்கொள்ள முடியும்

    மாற்றங்களை அறிவோடும் தைரியோத்தோடும் எதிர்கொள்ளலாமே !

    மாற்றங்களோடு வாழ்ந்து பார்க்கலாமே !

    (தொடரும் )

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 25

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களை எப்படி சமாளிப்பது?

    மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் நாம் மாற்றங்களைச் சந்திக்க நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும். அது எப்படி முடியும்?

    1. மாற்றங்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
    2. மாற்றங்களை எதிர் கொள்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
    3. மாற்றங்களின் வேகத்திற்கு நம்மை அடிமையாக்கிக் கொள்ளாமல் அவைகளை இடம் மற்றும் காலங்களுக்குத் தகுந்தவாறு ஏற்றுக்கொள்ள அறிந்துகொள்ள வேண்டும்.
    4. மாற்றங்கள் நமக்குத் தேவைதானா என்பதை அறிந்து அதை ஏற்றுக்கொள்ளுதல் அவசியம். மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளுகின்றார்களே என்பதற்காக கண்மூடித்தனமாக அவைகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
    5. மாற்றங்கள் நம்முடைய சமுதாயப் பண்புகள், கலாச்சாரங்கள், மனித நேயம், வாழ்க்கை வளமை மற்றும் நேர்மை, பேராண்மை இவற்றுக்கு அதிக அளவில் தாக்கங்கள் ஏற்படுத்தாதவாறு அவற்றை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.

    மாற்றங்களைக் கண்மூடித்தனமாக நாம் ஏற்றுக்கொள்ளும் பொழுதும், அவைகள் நமக்குத் தேவையற்ற நிலையிலும் அவைகளைத் தவறாக நாம் பயன்படுத்தும் பொழுதும் துயரங்களையும் விரும்பாத தகாத சூழ்நிலைகளையும் அமைதியின்மையையும் நாம் சந்திக்க வேண்டி இருக்கும். உதாரணமாக, தற்போதைய தொழில் மற்றும் கணினி சார் வளர்ச்சியின் தாக்கங்கள் நம்முடைய வாழ்க்கைப் போக்குகளையும் வாழ்க்கை பற்றிய காலந்தொட்டு வளர்ந்துவந்த கோட்பாடுகளையும் அடியோடு சாய்த்து விட்டன. இதனால் தற்போதைய சமூகத்தில் பலர் தேவையற்ற துனபங்களுக்குத் தம்மை அடிமைகளாக்கிக் கொண்டு வருகின்றனர்.

    காலந்தொட்டு நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட ஒரு அறிவுரை.” சிறுகக் கட்டிப் பெருக வாழ்.”  நமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவை மட்டும் வைத்துக்கொண்டு அமைதியுடன் வாழ்தலே உடலுக்கும் மனதிற்கும் நல்லது., இருக்கிறது என்பதற்காக அளவின்றி உணவை உண்ணும் பொழுது அது நமக்கு பல நோய்களுக்கு வித்தாக அமைகின்றது. அதேபோல் நம்முடைய தேவைகளை அதிகரித்துக்கொள்ளும் பொழுது அதனைச் சார்ந்த பலவித மகிழ்வுகளோடு துயரங்களும் நமக்குக் கிடைக்கின்றன.

    ஒரு காலத்தில் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்குவது இழுக்காகக் கருதப்பட்டது. “கடன் வாங்கினார் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற வார்த்தைகளை முன்னுதாரணமாகக் காட்டி அதன் உணர்வுபூர்வ தாக்கங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஒருவனின் வளர்ச்சிக்கும் சில முக்கிய தேவைகளுக்கும் கடன் கொடுப்பதும் கடன் வாங்கிச் செலவு செய்வது பொறுப்பான செயல்களாகக் கருதப்பட்டன. குழந்தைகளின் படிப்பு, மகளின் திருமணம், குடும்பத்தினரின் மருத்துவச் செலவுகள் போன்ற பலவற்றிற்காக கடன் பெறுதலும் அவைகளை அடைத்தாலும் ஒரு பொறுப்புள்ள மனிதனுக்கு அடையாளமாகக் காட்டப்பட்டன. காலப்போக்கில் கடன் வாங்குவதைச் சார்ந்த பொருளாதாரச் சுமைகளைக் குறைப்பதற்காக வங்கிகள் மூலமாக பலருக்கும் இலவசத் தவணைமுறைகளில் கடன்கள் வழங்கப்பட்டன. காலப்போக்கில் கடன் வாங்குதலும், தேவையற்ற நிகழ்வுகளுக்கு கடன்களை அதிகரித்துக்கொள்ளுவதும், அவைகளைத் திருப்பித் தராமல் ஏமாற்றுவதும் வழக்கமாகி விட்டன. மேலும் ஒரு கடனைத் திருப்பித்தர முடியாமல் அதற்காக இன்னொரு கடன் வாங்கி அதை சமாளிப்பதும் வழக்கத்தில் உள்ளன. இதற்காக மக்களின் மனங்களில் மாயைகளை ஏற்படுத்தும் பலவிதமான காணொளிக்  காட்சிகள் ஏராளமாக நடைமுறையில் உள்ளன. “எனக்கு இவ்வளவு கடன் இருக்கிறது ” என்று சொல்லி பெருமைப்படும் பலரையும் பார்த்திருக்கின்றோம்.

    தன் கையில் சல்லிக்காசு இல்லாமல் வாங்கிக்கடன்கள் மூலமாக தொழிலதிபர்களாகி அந்தக் கடன்களைக் கொடுக்காமல் ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. தங்களுடைய பணத்திற்கான வட்டி சீக்கிரத்தில் குட்டி போடவேண்டுமென்று தங்கள் சேமிப்புக்களைத் தகாதவர்கள் கைகளில் கொடுத்து தங்கள் வாழ்வின் சேமிப்புக்களை இழந்தவர்களைக் கண்கூடாக நாம் காண்கின்றோம்.

    இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?

    நாம் நம்முடைய வாழ்வின் சூழ்நிலைகளையும் அடிப்படைகளையும் மறந்து மற்றவர்களுடைய வாழ்க்கை முறைகளை பின்பற்றத் துடித்துக்கொண்டிருப்பதே !’

    நாம் மற்றவர்களுக்காக நம்முடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுவது மட்டுமின்றி இல்லாத ஒரு மாயைக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றோம். நமக்கும் வளர்ச்சி தேவைதான். ஆனால் அது ஆரோக்கியமான அமைதியைக் கெடுக்காத வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

    சமீபத்தில் நான் கண்ட இரண்டு நிகழ்வுகள். ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணி தன்னிடம் வைத்திருந்த எட்டு வங்கிகளின் கடன் அட்டைகள் (Credit Cards) மூலமாக அதிக அளவில் செலவு செய்து விட்டு அந்த எட்டு வங்கிகளிடமும் பணம் செலுத்த முடியாமல் அவதிப் பட்டுக்கொண்டிருந்தார். உண்மையில் அவருக்கு வாழ்க்கைச் சுமைகள் அதிகம் இல்லாமலும் இருப்பதற்கு அழகான ஒரு வீடு இருந்தாலும் தேவைற்ற பல பொருள்களைத் தன்னுடைய வளத்திற்கு மேல்பூச்சுப் பூசுவதற்க்காக வாங்கி வைத்ததே காரணம். பல நண்பர்கள் தங்களுக்குத் தேவையில்லாத பொருட்களையும் சமுதாயத்திலும் நண்பர்களிடமும் உறவுகளிடமும் தங்களுடைய போலி வளமையைக் காட்டிக்கொள்வதற்காக கடன் முறையில் வாங்கி அவதிப்படுவதைப் பார்த்தேன் ;பலபேர் இந்தமாதிரி போலி வாழ்க்கைக்குத் தங்களை அடிமையாக்கி கொள்கின்றார்கள்.   இது ஒரு சிந்திக்க வேண்டிய கருத்து.

    இதே போன்று ஒரு இளம் தம்பதியர் தங்களுக்காக ஒரு பன்மாடிக் கட்டிடத்தில் தவணை முறையில் வீடு வாங்கி அமைதியாக வாழ்ந்து வந்தனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்களிடையே மனக்குமுறல்களும்   அமைதியின்மையும் வந்தன. காரணம்? வங்கிக் கடன் மூலமாக இரண்டாவது வீடு ஒன்று வாங்கி இரண்டு வீடுகளுக்கு கொடுக்க வேண்டிய தவணைகளைச் சரியான முறையில் கொடுக்க முடியாமல் துன்புற்றதே. அது மட்டுமின்றி, அந்த நேரத்தில் அந்த நண்பரின் அலுவலகத்தில் ஆட்குறைப்பு ஏற்பட துயரத்தின் எல்லைகள் வளர்ந்தன. பலரும் தங்களுக்கு தேவைகள் நிறைவேறிவிட்டாலும் ஆசைகளுக்கு இடம் கொடுத்து துயரங்களைச் சமாளிக்கும் நிலைகளைக் காண்கிறோம்.

    எல்லோருக்கும் கடன் அட்டை நிச்சயம் தேவை. மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலையில் இது ஒரு ஆரோக்கியமான சிந்தனையே. ஆனால் அதை நாம் எவ்வாறு எதற்கு எப்போது பயன் படுத்த வேண்டும்?

    மாற்றங்கள் மகிழ்வுக்குத் தென்றலாக வேண்டும். அவைகளே வாழ்க்கையின் அமைதியைக் கெடுக்கும் புயலாக மாறிவிடக்கூடாது.

    கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளப் படும் மாற்றங்களும் தேவையின்றி நாம் ஏற்றுக்கொள்ளும் மாற்றங்களும் நமக்குத் தேவைதானா என்பதை சற்றே சிந்திக்க வேண்டும்.

    புதுமையான வாழ்வை ஏற்றுக்கொள்ளும் பொழுது நாம் அமைதியை இழந்துவிடக்கூடாது. சரிதானே ?

    வாழ்க்கையை இன்னும் சற்று தெளிவோடு வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடரும்..

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 24

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களைக் கண்டு ஏன் பயப்படவேண்டும் ?

    கற்காலம் தொட்டே  மனிதனின் ஆர்வமும் தேடல்களும் அவனுடைய துணிவுக்கு வித்தாக அமைந்திருந்தன. கற்களைத் தட்டி நெருப்புப்பொறியைக் கண்ட மனிதன் நெருப்பின் உபயோகத்தை சிந்தனையின் மூலமாகவும் அனுபவத்தின் மூலமாகவும் உணர்ந்தான். உணவுகளைப் பக்குவப்படுத்தவும் குளிரிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும் நெருப்பை உபயோகித்தான். அவன் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டது. கற்களை செதுக்கி ஆயுதங்களைப் படைத்தான். அவன் வேட்டையாடும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன.. தொடர்ந்து உலோகங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தான். கூட்டாக வாழ ஆரம்பித்தன. விவசாய முறைகளைத் தேர்ந்தெடுத்து உண்பதற்கு பல தானிய வகைகளை வளர்க்க ஆரம்பித்த்தான். மாற்றங்கள் தொடர்ந்தன. பல ஆயிரம் ஆண்டுகள் விவசாயம் சார்ந்த சமூகத்தில் தரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தான். உடுக்கும் முறைகள் வாழும் முறைகள், தொழில் முறைகள், உறவு முறைகள், சிந்தனை முறைகள் மற்றும் திறன்கள் ஆகியவற்றில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வந்தன. இந்த மாற்றங்களின் பின்னால் என்ன நடந்து கொண்டிருந்தது ?

    மாற்றங்களைக் கண்டு வியந்து மனமுவந்து அவற்றை ஏற்றுக்கொண்டது ஒரு சார்பு. மாற்றங்களைக் கண்டு பயந்து அவைகளால் தங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படுமோ என்று அவற்றை மறுத்தது மட்டுமின்றி அவற்றிற்குத் துணையாக இருந்தவர்களை தாக்கவும் அழிக்கவும் முற்பட்டது மற்றொரு சார்பு. மாற்றங்களுக்கு எதிரான போராட்டங்கள் சரித்திரத்தின் போக்கையும் சமுதாயங்களின் முற்போக்கு வளர்ச்சியையும் நிர்ணயித்தன. அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் மாற்றங்களின் வேகத்தையும் திறன்களையும் தேவைகளையும் ஊக்குவித்தது மட்டுமின்றி அவற்றிற்குத் துணையாகவும் இருந்து வந்தன.

    மாற்றங்களை எதிர்த்தவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் உள்ள சில காரணங்கள்:

    1. மாற்றத்தினால் தற்போது இருக்கின்ற பாதுக்காகாப்பான நிலைக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்ற பய உணர்ச்சி.
    2. மாற்றங்கள் நம்மிடம் புதிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்துமே. அவைகளை நாம் எப்படி சமாளிப்பது என்ற தயக்க உணர்ச்சி.
    3. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் படச்சத்தில் புதிய கற்றலும் புதிய திறன்களும் நமக்குத் தேவைப் படுமே. அவைகளை நம்மால் கற்றுக்கொள்ளவோ சாதிக்கவோ முடியுமா என்ற இயலாமை உணர்ச்சி
    4. இருப்பது நன்றாகத்தானே இருக்கின்றது. இருந்துவிட்டுப் போகட்டுமே. மாற்றம் இப்பொழுது எதற்கு என்ற முயற்சியைத் தடுக்கும் துணிவின்மை.
    5. மாற்றங்கள் வரும்பொழுது அவைகளில் திறனுள்ளவர்களால் நாம் பின்தள்ளப்படுவோமே? அது ஏற்புடையதா ? அதை எப்படி சமாளிப்பது என்ற தாழ்வு மனப்பன்மை
    6. எனக்கு வயதாகி விட்டதே. இதற்கு மேல் இவைகளை எல்லாம் என்னால் எப்படிக் கற்க முடியும் ? எனவே மாற்றங்கள் எல்லாம் இளைய சமுதாயத்திற்குத் தான் நமக்குத் தேவையில்லை என்ற வளர்ச்சியை விட்டு விலகி நிற்கும் தட்டிக்கழிக்கும் மனப்பான்மை.

    இன்னும் இது போல பல காரணங்கள் நமது மாற்றங்களைக் கண்டு அஞ்சி நிற்பதற்கும் அதில் பங்குதாரர்களாக இல்லாததற்கு காரணமாக இருந்துள்ளது; இருக்கின்றது.

    மாற்றங்கள் – இயற்கையின் வரப்பிரசாதம்

    மாற்றங்கள் – வாழ்க்கைக்குப் பொருள் கொடுக்கும் விளக்கங்கள்

    மாற்றங்கள் – புதுமையின் சுயசரிதைக்கு முன்னுரை

    மாற்றங்கள் – மற்ற உயிருள்ள உயிரில்லாத வாழ்வினங்களின் கருத்துக்களையும் தேவைகளையும் சாராமல் இயற்கை எழுதும் புதுக்கவிதை.

    விரும்பியோ விரும்பாமலோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். மாற்றங்களைத் தவிர வேறு எதுவும் மாறுவதில்லை !

    மாற்றங்கள் இயற்கையின் இயல்பென்றால் அவைகளை நாம் எப்படித் தடுக்க முடியும்? எனவே துணிவுடன் வாழ்வில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும் அவைகளின் உதவியுடன் வாழ்வில் முன்னேற்றப்பாதையை வழிவகுத்துக்கொள்ளவும் அவைகளைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

    “நாம் எப்படி இருக்கவேண்டும் என்னவாக இருக்கவேண்டும் என்பதை நாம் இருக்கும் இடத்திலிருந்தே முடிவு செய்ய முடியாது. நம்முடைய மாற்றங்களே அவைகளுக்கு வழிவகுக்கும்” என்று பல தத்துவ மேதைகள் கூறியிருக்கின்றனர்.

    மாற்றங்கள் நமக்குத் தயக்கத்தை உருவாக்கலாம். மாற்றங்கள் நமக்கு பய உணர்ச்சியை உருவாக்கலாம். மாற்றங்கள் நமக்கு எதிர்ப்புகளை உருவாக்கலாம். மாற்றங்கள் நம்முடைய தற்போதைய நிகழ்வுகளின் அழிவுக்கு அடிக்கல்லாக அமையலாம். ஆனால் மாற்றங்களை நாம் ஏற்கப் பழகிக் கொள்ளவேண்டும். மாற்றங்களையும் அவற்றின் தேவைகளையும் நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

    மாற்றங்களை ஏற்க மறுக்கின்றவர்கள் இருக்கும் இடத்திலேயே நிலைத்துவிடுகின்றனர். மாற்றங்கள் உயிர்ப்பிற்கும் துடிப்பிற்கும் ஒரு சாட்சி. மாற்றங்களை மறுத்து ஒதுங்குபவர்கள் தங்கள் தேக்கத்திற்கும் வளர்ச்சியின் முடிவிற்கும் ஒப்புதலை அளித்து விடுகின்றனர்.

    நான் படித்த ஒரு புத்தகத்தின் கதை நினைவுக்கு வருகின்றது. (The iceberg is melting  by John Kotter). இது அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளில் நடக்கும் ஒரு நிகழ்வு. அந்தப் பனிப்பாறையில் பென்குவின் பறவையினத்தைச் சார்ந்த பல பறவைக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு பறவையும் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டு வருகின்றது. ஆனால் ஒரே ஒரு பறவை மட்டும் அந்தப் பனிப்பாறையின் முகப்பில் அமர்ந்து அடுத்த பனிப்பாறையில் என்ன நடக்கின்றது என்பதை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கின்றது. அது இரண்டு முக்கியமான நிகழ்வுகளைப் பார்க்கின்றது.

    ஒன்று;  எதிரே உள்ள பனிப்பாறையின் உயரம் குறைந்துகொண்டே வருகின்றது.

    இரண்டு: பனிப்பாறையிலிருந்து உருகும் நீரின் வேகத்தின் சத்தம் அதிகமாகிக் கொண்டே இருக்குகின்றது.

    இந்தப் பார்வை அதனுடைய சிந்தனையைத் தூண்ட அதற்குப் புரிகின்றது – ” எதிரே உள்ள அந்த பனிப்பாறை உருகுகின்றது. அதனால் தான் நீரின் வேகமும் அதிகமாகின்றது. அந்தப் பனிப்பாறையின் உயரமும் குறைகின்றது.

    இந்தக் கருத்து மீண்டும் அதனுடைய சிந்தனையைத் தூண்ட எழுகின்ற சில கேள்விகள் :

    1. அந்த பனிப்பாறை உருகினால் அதில் உள்ள பறவைகளின் கதி என்ன? அவைகள் தங்களைக் காத்துக்கொள்ள வேறு ஏதாவது பனிப்பார்வைக்கு மாறிச் செல்ல வேண்டுமா ?
    2. அவை வேறொரு பனிப்பாறைக்கு மாறினாலும் அந்தப் பனிப்பாறை உருகாது என்பது என்ன நிச்சயம்? அவ்வாறென்றால் அதுவும் உருகினால் அவைகள் அங்கிருந்து இன்னொரு பனிப்பாறைக்கு மாறவேண்டிய நிலை ஏற்படுமா ?
    3. அந்த பனிப்பாறை உருகும்பொழுது நான் இருக்கின்ற பனிப்பாறை உருகாமல் இருக்குமா? நானும் எனது குடும்பமும் இன்னொரு பனிப்பாறைக்குச் செல்ல தயார் நிலையில் இருக்க வேண்டுமா ?
    4. இவ்வாறு பனிப்பாறைகள் உருகிக்கொண்டிருந்தால் நாம் மாற்றங்களை சந்தித்துக் கொண்டே இருக்கவேண்டுமே! மாற்றங்களே வாழ்க்கையின் உண்மை நிலையென்றால் மாற்றங்களுக்கு நாம் எவ்வாறு நம்மைத் தயார் செய்துகொள்வது?

    இந்தக் கதை விடுக்கும் செய்தி: பனிப்பாறைகள் உருகிக்கொண்டுதான் இருக்கும். நாம் மாற்றங்களுக்கு நம்மைத் தயார் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

    நமது அறிவு, திறன்கள், வாழ்வு முறைகள், அறிவியல் கருத்துக்கள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் பனிப்பாறைகளே ! அவைகள் உருகிக் கொண்ட இருக்கும். நாம் மாற்றங்களுக்கு நம்மைத் தயார் செய்து கொண்டே இருத்தல் அவசியம்.

    மாற்றங்கள் புதுமைகளாக இருக்கலாம்; புதிர்களாக இருக்கலாம் ! ஆனால் மாற்றங்கள் இயற்கை அயராது நமது வாழ்விற்கும் சிந்தனைக்கும் கொடுத்துக்கொண்டிருக்கும் சவால்கள் .. அவைகளை நாம் ஏற்றுக்கொள்ளலாமே !

    மாற்றங்களுக்கு ஏற்றபடி வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடரும்..

    Share
  • மண் வாசனை

    க. பாலசுப்பிரமணியன்

     

    சந்தமின்றிப்  பாட்டொன்று வந்திடுமே காற்றோடு

    சேத்துமண்ணு வாசனையைக் கூட்டிவரும் நட்போடு

    சலசலவென்றே தாளங்கள் தந்திடுமே தென்னங்கீற்றோடு

    சருகாகி இலையெல்லாம் சுருதிசேர்க்கும் மண்ணோடு !

     

    குட்டையிலே குளித்திருக்கும் எருமையெல்லாம் சுகத்தோடு

    கும்மாளமிடும் குழந்தைகளே குதித்திடுமே கூட்டத்தோடு

    குறைவில்லா மாக்கோலம் வாசலிலே செம்மண்ணோடு

    குறைவின்றி வந்திடுமே சிற்றெறும்புகள் குலத்தோடு !

     

    குலதேவன் கோயிலிலே விளக்கொன்று ஆற்றோரம்

    கும்மிருட்டில் குவிந்திடுமே மின்மினிகள் தெருவோரம்

    குறைவில்லா வாழ்வுகண்ட கிழமொன்று வாசலிலே

    குழந்தையொன்று அழுகின்ற குரலோ வீட்டினிலே !

     

    கூரையிலே அமர்ந்து கூவுகின்ற சேவலொன்று

    குளிர்காற்று வந்ததுமே தோகைவிரித்த மயிலொன்று

    கூட்டத்தையே சேர்க்கக் காத்திருக்கும் காகமொன்று

    குரைத்து ஓய்ந்து உறங்குகின்ற நாயொன்று !

     

    பசுவொன்று பால்சுரக்கும் பாவையவள் பாத்திரத்தில்

    பசிதீர்க்கப் பதனிவரும் பனங்கள்ளின் தோற்றத்தில்

    பனைவெல்லம் உருகிடும் வாசனையோ பக்கத்துவீட்டில்

    பச்சிலையில் மருந்திடுவார் பாட்டியோ தேள்கொட்டில் !

     

    வீடுதேடி வந்தோருக்கு விருந்துவைக்கும் நெஞ்சுண்டு

    கூழ்குடித்து வாழ்ந்தாலும் குணம்காக்கும் மனிதருண்டு

    குடிசையுள்ளே மண்விளக்கில் முகத்தினிலே சிரிப்புண்டு

    குறையினிலும் நிறைகாணும் குடும்பத்தில் அமைதியுண்டு !

     

    பட்டணத்து வாழ்க்கையிலே பதற்றமே மிஞ்சுதன்றோ

    பாழடைந்த மனத்தினிலே பாசங்கள் மறைந்ததன்றோ

    குதிரைவண்டி குலுங்கையிலே கொட்டுகின்ற பாசமெல்லாம்

    கோடிப்பணம் கொடுத்தாலும் குறையாமல் கிடைத்திடுமோ ?

     

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே  -22

    க. பாலசுப்பிரமணியன்

    செயல்திறன்கள் இருந்தால் மட்டும் போதுமா ?

    “அறிவும் திறனும் உள்ள பலர் வாழ்க்கையில் முன்னேறாமல் எங்கேயோ முடங்கிக்கிடக்கிறார்களே” என்று சிலர் அங்கலாய்ப்பது காதுகளில் விழத்தான் செய்கிறது. அது உண்மையே !  அறிவும் திறனும் இருந்தால் மட்டும் போதாது. வளர்ச்சியும் முன்னேற்றமும் நமது வீடுகளைத் தேடி வந்து வாசல் கதவுகளைத் தட்டுவதில்லை. நாம்தான் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    “முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் ” என்பதுதானே முதுமொழி.

    “முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

    இன்மை புகுத்தி விடும்.”

    என்று திருவள்ளுவர் சொன்னதை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டாமா?

    வாழ்க்கையில் பல பேர் வெற்றிகளை நோக்கிச் செல்ல முடியாமைக்குக் காரணம் அவர்கள் முயற்சிக்கான வழியில் நடைப்பயணத்தைத் துவக்காததுதான்.

    உண்மையின் பொருளை உணர்ந்து கொள்வதற்கான முயற்சிகளை இளைஞர் நரேந்திரன் எடுத்தார் . அவருக்கு வெற்றி கிட்டியது. மெய்யறிவின் தத்துவத்தை ஆழமாக உணர்ந்த அவர் விவேகாநந்தராக மாறினார். மனித நேயத்தை வளர்த்து சமூக சேவைக்குத் தன்னை அர்பணித்துக் கொண்டார்

    எத்தனையோ இன்னல்களுக்கிடையே ஏழ்மையால் வாடும்பொழுதும் தன்னுடைய முயற்சிகளை விடாமல் மேரி கியூரி (Marie Curie) தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அவருக்கு பெயரும் புகழும் மட்டுமின்றி நோபல் பரிசும் கிடைத்தது.

    மிக ஏழ்மையான நிலையிலும் உண்பதற்குக் பொருளாதாரம் இல்லாத நிலையிலும் கணக்கில் தனது ஆர்வத்தையும் முயற்சிகளையும் விடாமல் தொடர்ந்த இராமானுஜம் கணித மேதையாக உலங்கெங்கும் பாராட்டுப் பெற்றார்.

    பல தடங்கல்களும் இன்னல்களுக்குமிடையே தனது மனிதநேய மனப்பான்மையை விட்டுக்கொடுக்காமல் முயற்சி செய்த இளம் பெண்மணி அன்னை தெரேசாவாக உலகெங்கும் போற்றுதலுக்குரியவராக மாறினார்.

    ஒரு சைக்கிளில் துணிகளை ஏற்றி வீடு வீடாக விற்று வந்த திருபாய்  அம்பானி (Dhirubai Ambani) தன்னுடைய விடா முயற்சியால் உலகம் வியக்கும் தொழிலதிபராக மாறினார்.

    இப்படி வாழ்க்கையில் முன்னேறிய பலருடைய வாழ்க்கை வரலாறுகள் நமக்கு வாழ்க்கையின் தத்துவத்திடை முன்மொழிகின்றன முயற்சி செய்து தோற்றவர்கள் மிகக் குறைவு. அவ்வாறு அவர்கள் தோல்வியைத் தழுவினால் அதற்கு அவர்களுடைய செயல்முறைகளில் இருக்கும் குறைபாடுகளே காரணமாக இருக்க வாய்ப்புண்டு.  “முயற்சி எப்பபோழுதும் நீங்கள் அதை விட்டுவிட மறுக்கும்பொழுதுதான் தன் பலனைக் கொடுக்கும் ” என்பது ஒரு மேலைநாட்டுப் பழமொழி. (Effort will release its reward only after you refuse to quit).

    முயற்சிகள் என்றுமே ஆரம்பத்திலேயே தங்கள் பலன்களை அள்ளிக் கொடுப்பதில்லை. முயற்சிகளை எடுக்கும் பொழுது சோதனைகள், தடங்கல்கள், போட்டிகள், தோல்விகள் ஆகியவை வரத்தான் செய்யும். ஆனால் அவைகளைத் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ளுதல் வேண்டும்.  ஆகவே முயற்சிகளின் பலன்களுக்குத் தேவை

    1. தன்னம்பிக்கை
    2. துணிவு

    தன்னம்பிக்கை தான் ஒரு மனிதனை வெற்றிப்படிகளுக்கு அறிமுகம் செய்கின்றது. அது நம்முள் உறைந்துள்ள ஆக்க சக்தியை ஒருவழிப்படுத்தி தலை நிமிர்ந்து நிற்கச் செய்கின்றது. இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகராகக் கருதப்படும் அமிதாப் பச்சன் முதல் முறையாக குரல்வளத்திற்கான சோதனைக்குச் சென்ற பொழுது அவருக்குச் சரியான குரல்வளம் இல்லை என்று நிராகரிக்கப்பட்டார். அவருடைய தன்னம்பிக்கையும் துணிவுமே அவரைத் திரை உலகில் முன்னணியில் நிறுத்தியது.

    “தவறுகளே செய்யாத ஒரு மனிதன் வாழ்க்கையில் எதையுமே முயன்றதாக ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகின்றார். (Anyone who has never made a mistake has never tried anything new) “தன்னம்பிக்கையே ஒரு அழகான மனிதனுக்கு முகவரி.” என்று பல மனநல நிபுணர்கள் எடுத்துக்கூறியிருக்கின்றார்கள்.

    ஒரு ஏழை ஆட்டோ ஓட்டுபவரின் மகளும் ஒரு குடிசையில் போதிய மின் வசதியின்றி இருந்தும் படித்தவரும், கூலியாக இரயில் நிலையத்தில் உழைத்து கிடைத்த நேரத்தில் படித்தவரும் IAS தேர்வுகளில் வெற்றி பெறுவது அவர்களின் தன்னம்பிக்கைக்கும் உழைப்பிற்கும் முயற்சிக்கும் முன்னுதாரணமாக அமைகின்றது.

    தன்னம்பிக்கை இல்லாத முயற்சி தடுமாற்றங்களை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை முயற்சிகளை முடுக்கிவிட்டு அதன் ஓட்டத்திற்கு வலிமையையும் சக்தியையும் கொடுக்கின்றது.

    சிலருக்கு தன்னம்பிக்கை இருந்தாலும் துணிவு இருப்பதில்லை. வாழ்க்கையில் வெற்றிபெற்றோர் சரித்திரங்களை அலசும்பொழுது அவர்களுடைய துணிவு அவர்களின் வெற்றிக்கு எவ்வாறு கைகொடுத்திருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

    “துணிவு என்பது பயமின்மை அல்ல. அது பயத்தை சந்தித்து அதன்மேல் கொள்ளும் ஆளுமையே ” என்று மிகச் சிறந்த மேதை மார்க் ட்வைன் (Mark Twain) என்பவர் கூறுகின்றார்.  (Courage is resistance to fear, mastery over fear and not absence of fear). இதே கருத்தை வலியுறுத்தி நெல்ஸன் மண்டேலா கூறுகின்றார் “நான் துணிவு என்பது பயமின்மை அல்ல, ஆனால் பயத்தின் மேல் கொள்ளும் வெற்றியே என்பதை அறிந்து கொண்டேன்” (I learnt that courage is not absence of fear, but the triumph over it)

    “துணிந்தவனுக்குத் தூக்குமேடை மெத்தை.” என்ற வசனம் உங்களுக்கு நினைவுக்கு வருகின்றதா?

    துணிவோடும் தன்னம்பிக்கையோடும் நமது முயற்சிகளை மேற்கொள்ளலாமே !

    Share
  • சொந்தங்கள் எத்தனையோ !

    பருவத்தில் பட்டாம்பூச்சிக் கனவுகள் சொந்தங்களே

    படுக்கையில் பசிக்கின்ற இன்பங்கள் சொந்தங்களே

    பாசத்தில் கருவாகி உருவாகும் சொந்தங்களே

    பாருள்ள உயிரெல்லாம் பார்வைக்குச் சொந்தங்களே !

     

    தோள்தூக்கி வளர்த்த உறவெல்லாம் சொந்தங்களே

    துயர்நீக்க கைகொடுக்கும் நட்பெல்லாம் சொந்தங்களே

    துள்ளியாடும் நேரத்தில் துணையிருந்தோர் சொந்தங்களே

    துணிவோடு வாழவைத்த துயரங்கள் சொந்தங்களே !

     

    நடுவழியில் நல்வணக்கம் சொல்லுபவர் சொந்தங்களே

    நாற்றோடு ஏர்பிடிக்கும் நல்நெஞ்சங்கள் சொந்தங்களே

    நாம்வாழ உழைக்கின்ற தோழமைகள் சொந்தங்களே

    நாலுபக்கம் தோள்தூக்கிக் கதைமுடிப்பார் சொந்தங்களே.

     

    நீர்வளமும் நிலவளமும் நாம்பெற்ற சொந்தங்களே

    நீலவானில் மின்மினிகள் காட்சிக்குச் சொந்தங்களே

    நிகழ்வோடு நேற்றும் நாளையும் சொந்தங்களே

    நிலையாத வாழ்வும் நித்தியமும் சொந்தங்களே

     

    பூமணமும் புலன்வளர்க்கும் காய்கனிகள் சொந்தங்களே

    புள்ளினமும் புவிவளரும் உயிரினங்கள் சொந்தங்களே

    புரியாத மொழிபேசும் பாரனைத்தும் சொந்தங்களே

    புரிந்துவிட்டால் சுமையில்லை சுகமான சொந்தங்களே !

    Share
  • புதிருக்குப் பதில்தேடி ..,,,

    க. பாலசுப்பிரமணியன்

     

    கல்லுக்குள் சிலையாய் கதிருக்குள் ஒளியாய்

    வில்லுக்குள் விசையாய் வித்துக்குள் சத்தாய்

    காற்றுக்குள் இசையாய் கற்பனையில் புதிராய்

    காலத்தின் அசைவாய் உருக்கொண்ட அருவே !

     

    சொல்லுக்குள் பொருளாய் சுவையெல்லாம் புதிதாய்

    வயிற்றுக்குள் பசியாய் வருகைக்குச் செலவாய்

    விடியலுக்கு முடிவாய் முடிவுக்குப்பின் முதலாய்

    குறைவுக்கு நிறைவாய் குடிகொண்ட திருவே !

     

    கோளெல்லாம் உனதோ கும்மிருட்டே முதலோ

    ஒளியாக வந்தாயோ ஒளிர்விட்டு நின்றாயோ

    வளிதன்னை வளர்த்தாயோ வானகத்தில் நின்றாயோ

    மெய்யென்ன யானறியேன் மேய்ப்பவனே நீதானோ?

     

    கற்பனைக்குள் நின்று கதைகள்பல சொல்லிட்டாய்

    கல்லுளிக்குள் மறைந்து கலைகள்பல படைத்திட்டாய்

    கலையாத மோனத்தில் கடவுளென்றே அமர்ந்திட்டாய்

    சிலையாக நான்நின்று சிந்தனையில் தவிக்கின்றேன் !

     

    ஒன்றோ இரண்டோ உருவங்கள் எத்தனையோ

    தாயோ தந்தையோ தனயனோ தூதுவனோ

    அன்றோ என்றோ எங்கிருந்துவந்த நன்றோ ?

    இன்றே வருவாய்அறிவாய் எனையாளும்புதிரே !

    Share