Tag: சத்தியமணி கவிதை அவ்வை தில்லி தமிழ்

  • தாய்மையே ! வெண்த்தூய்மையே !!

    (கலி விருத்தம் )

    தாயுமானவள்  தாரமானவள் தங்கையானவள்  அன்பினோடும்

    சேயுமானவள்  சேமமானவள்  சீருமானவள்    பண்பினோடும்

    வாயுமானவள்   வாசியானவள்  வாழ்வுமானவள் பண்ணோடும்

    வேயுமானவள்   பேருமானவள் பெண்மையாமவள்  தாய்மையே  1

     

    ஈரமானவள்     தீரமானவள்   ஆரமானவள்  அரசனாகும்

    வீரமானவள்    விசயமானவள் வித்தையாகி  அகிலமாகும்

    வாரமானவள்   மாதமானவள் வருடமாகியே வயதுமாகும்

    சாரமானவள்   சந்தமானவள் சக்தியாமித் தாய்மையே         2

     

    பெண்மையாக  மென்மையாக தந்திடும்பத்   துமாதமாக‌

    உண்மையாக    இன்மையாகத்     தங்கிடும்கருப்  பையுமாக‌

    தண்மையாக    திண்மையாக    கவனமாகப்  பெற்றெடுக்க‌

    ப‌ண்மையாக     நண்மையாக    பிறப்பளித்த  தாய்மையே                   3

     

    விழிகளாட்டி விரல்களாட்டி வளைகளாட்டி அம்மாயென‌

    மொழிகளுட்டி தமிழனாக்கி வழிகளாற்றிய‌ அன்னையை

    பழிகளாற்றிக் கலைகளென்ற‌ கவர்ச்சிகாம வெறியரை

    அழிப்பதற்குச் சூலமேந்தும் ஆதிகாளியே தாய்மையே        4

     

    கற்பனைக் கலையெழுதக் கன்னியரைப் பயமுறுத்தி

    அற்பனைப் போலசிலர் அறமாற்றி நெறிமாற்றி

    கற்பினைக் களங்கமுற கண்கலங்கச் செய்வதும்

    ஏற்பிலைக் காணாயோ! நீயும் பெண்தானே!!     5

     

    கற்றவை   யாவுமினி    கசடறவே   நெறிமாற‌

    மற்றவை   யேவுமினி  மறைமுக     வெறியேறி

    உற்றவை   யாலினிது  குற்றம்        வளராமல்

    கொற்றவைக் காக்கத் தீயோர்த் தலைவீழ‌ !!     6

     

     

    Share
  • நிறையாய் வளராய்

    இனிய ஆசிரியர் (குரு) தின வாழ்த்துகள்

     

    புவியாய் கதிராய் மதியாய் வெளியாய்
    நிலமாய் நீராய் தீயாய் காற்றாய்
    மலையாய் நதியாய் ஒலியாய் ஒளியாய்
    சகமாய் சுகமாய் மனமாய் வளர்ந்தே!!

    காயாய் கனியாய் கசப்பாய் இனிப்பாய்
    தாயாய் பதியாய் தமிழாய் அணியாய்
    உறவாய் உணர்வாய் உளமாய் இதமாய்
    கறவாய் கவியாய் கனவாய் நனவாய்

    சுரமாய் சுயமாய் சுருதியாய் கிருதியாய்
    தரமாய் சரமாய் வரியாய் சரியாய்
    கரமாய் க்ரமமாய் வரமாய் வருமாய்
    விரியாய் குருவே திரிமேன் ஒளியே!

    மனமாய் குணமாய் இனமாய் மதமாய்
    தனமாய் வளமாய் தினமாய் திறமாய்
    வ‌னமாய் தவமாய் பிறவாய் இறவாய்
    முடிவாய் தருவாய் முதல்வாய் சரணே!!

    சரியாய் உரையாய் விரியாய் வரியாய்
    கரியாய் அரனாய் அரியாய் குகனாய்
    தெரியாய் புரியாய் சுவையாய் அமுதே!
    பெரிதாய் சிறிதாய் கிரியின் அழகே!!

    கருவாய் திருவாய் கனிவாய் மொழியாய்
    தருவாய் தருவாய் ஒருவாய் மொழியாய்
    உருவாய் அறிவாய் அருவாய்த் தெளிவாய்
    குருவாய் வருவாய் விரைவாய் மனதே

    வரவாய் செலவாய் இரவாய் பகலாய்
    முழுதாய் இலதாய் மதியாய் ஒளியாய்
    புதிதாய் முதிதாய் வயதாய் தொடரும்
    விதிதாய் சுழலும் உனதாய் முடியும்

    உருவில் குருவாய் அருளில் தாயாய்
    கருவின் முதலாய் அறிவின் விழுதாய்
    இருளில் ஒளியாய் இறையே அருளாய்
    மறையாய் மலராய் நிறையாய் வளராய்.

    Share
  • என்னதவம் செய்தனையோ!-இரங்கற்பா

    சத்தியமணி

     

    அன்னல் அட்டல் பிஹாரி !!

    சினத்தையும் சிரிப்பால் சொன்னவர் இன்றுயில்லை
    சிரத்தையும் சிரசில் கொண்டவர் இன்றுயில்லை
    சிறப்பிலும் அமைதிக் காத்தவர் இன்றுயில்லை
    இறப்பிலும் எளிமை யேற்றவர் இன்றுயில்லை

    ஆட்சிகள் கவிழும்போதும் கலவரம் எழுப்பவில்லை
    காட்சிகள் கனத்தபோதும் நம்பிக்கை நழுவவில்லை
    கட்சிகள் அத்துணைக்கும் கலங்கரை விளக்கமாக
    மாட்சிமை பெற்றுயர்ந்தார் மதிநலம் பிறழவில்லை

    வன்முறை தூண்டவில்லை வாக்குகள் மாற்றவில்லை
    பன்முறை பரிகசிப்பில் பாரதம் சாய்க்கவில்லை
    மொழிவெறி இனவெறி பேசிடும் தலைவரில்லை
    குலவெறி கொண்டு ஆளும்குண வெறி கொள்ள‌வில்லை.

    ஏளனம் செய்தவர்க்கும் தண்டனை கொடுக்கவில்லை
    நூதனம் மாற்றம்செய்ய என்றுமே தயங்கவில்லை
    அரசாங்க கூட்டம் தன்னில் அவரிடம் கண்டதென்னில்
    அரவணைத்த நகைச்சுவைதான்! ஆணவம் கடுகுமில்லை!!

    எண்ணிய இன்பமெல்லாம் கவிதையாய் விளம்புபோதும்
    கண்ணிய மாககட்சி தலைவர்கள் வாழ்த்தும்போதும்
    விளம்பரம் செய்யவில்லை வெறுப்பினில் பேச்சுமில்லை
    புண்படு ம்படிபேசும் சுயநலக் காரரில்லை.

    இலஞ்சமுடன் இலாவன்ய ஊழல்கள் செய்துவிட்டு
    இலவசம் ஆட்சி கேட்டு ஏந்திடும் தலைவனில்லை.
    சொத்துகள் குவித்தாங்கே சொகுசினில் வாழுமந்த‌
    வித்தையும் அறியவில்லை!! விண்ணேகி சென்றாரே!!

    அட்டலின் கர்ஜனைக்கும் அவரிடும் கட்டளைக்கும்
    அணுகுண்டு போக்ரானில் அந்நியர் அச்சம்கொண்டார்
    சதியினில் வீழவைக்க எத்தனை எதிரியிங்கே
    விதியினில் சென்றபோதும் மீண்டிது ஆளுமென்றார்

    இப்படியோர் தலைவன் இனிமேலும் கிடைப்பாரோ!!
    இப்படியோர் கவிஞன் இனிமேலும்     பிறப்பாரோ!!
    இப்படியோர் மகனை பெற்றவளே ! பாரதமே ! – பெற்று
    இவனுறங்க உன்மடியில் என்னதவம் செய்தனையோ!!

    Share
  • இரங்கற்பா – கலைஞர் கருணாநிதி யெனும்……

    கலைஞர் கருணாநிதி யெனும்……

    உதய சூரியன் மறைந்து விட்டது தமிழ்
    இதய காவியம் இறந்து விட்டது
    பதிய வைத்தவை படர்ந்து வளர்ந்தவை
    விதியெனும் சொலில் நழுவி விட்டது

    சென்னை யென்பதும் கோட்டையின் பலம்
    இன்று நமக்கென கிடைத்ததெப்படி
    செம்மொழி யெனும் சிறப்பு கிட்டிட‌
    தம்மொழிக்குமோர் வாய்ப்பதெப்படி
    சாதியிலை யினும் சாற்றும் பெருந்தகை
    வானப்பாதைக்கு சென்றதெப்படி
    மீதியிலை யெனும் போர்க்களங்களில்
    வாகை சூடியே வாழ்ந்ததெப்படி

    கறுப்பில் தெரிவதை சிகப்பில் தோய்ந்திட‌
    கவிதை வசனமாய் கொடுத்த‌தெப்படி
    வெறுப்பில்லாமல் தமிழ் விரத‌மிருந்தவன்
    விருப்பமுடன் விண்விழைந்ததெப்படி
    புதையலாய் தமிழ் அகத்தின் முளைத்தவன்
    புதைந்து பெட்டியில் போனதெப்படி
    நிலையிலாது இவ்வுலகம் மென்றென‌
    அலைகள் மடியினில் அயர்ந்ததெப்படி

    தலையிலாது வெறும் சிலையிலாது
    கலைஞரெனுமுன் பெயரழியாது!
    சிதையிலாது துயர் வதையிலாது
    சென்ற பின்னுமுன் புகழ் அழியாது! – சீர்
    வினையிலாது பெறும் மதிப்பிலாது
    வாழும் வாழ்வதூஉம் பயனிலாதெனப்
    பிழையிலாது இப்பிறந்தமண்ணிலே
    நிகழ்ந்த சரிதமும் நிலைத்து வாழுமே!!

    Share
  • திருடி விட்டான்

    சத்தியமணி

     

    திருடி விட்டான் ஒருவன் நெஞ்சத்தினை
    திருடும் காதலில் வஞ்சத்தினை
    கேட்டால் தருவேனே உள்ளத்தினை – கண்ணா
    திரும்ப தரவேண்டாம் கள்ளத்தினை

    மருளும் மான் விழிகள் உனைப் பார்த்து
    மயங்கும் போதுனக்கு கலக்கமென்ன‌
    அருளும் தேன் மொழிகள் எனைப் பார்த்து
    அள்ளி பொழிவ‌தற்கு தயக்கமென்ன‌
    விரையும் யமுனை நதி பெருக்கெடுப்பில்
    விழையும் உன்னாட்டம்! அரங்கேற்று !!
    உறையும் வரையில் எனை உறவாடி
    உடைகளாகி யெனை அழகேற்று !!

    விரும்ப விரும்ப குழல் இசைப்பிரித்து
    விருந்து கொடுக்கும் இதழ் மதுகொடுத்து
    திரும்ப திரும்ப மனம் துதிகொடுத்து
    அருந்த விழையும் திறன் துளிர்விடுத்து
    அரும்ப அரும்ப மலர் மணம்பிறந்து
    ஆரமாகும் அவன் மனம்திறந்து
    நிறம்ப வழியும் இன்ப முகில்பொழிந்து
    நீலவான மதில் நினைவிழந்து

    Share
  • நமக்கு நாமே எதிரிகள்

     சத்தியமணி

     

    நமக்கு நாமே எதிரிகள்

    நாம்தான் தேச துரோகிகள்

    உண்மையில் குற்றவாளிகள்

    உணர்ந்தால் இலை பிரதிவாதிகள்

     

    நிறங்களை இனங்களை கலக்க‌விடாது

    பிரித்து கலவரம் காட்டினோம்

    திறங்களை பார்த்து வாய்ப்பளிக்காது

    பள்ளியை சுடுகாட்டாக்கினோம்

    வகுப்பு என்பதன் பொருளதை மாற்றி

    வீதியில் வெறியுடன் ஆடினோம்

    சிறப்பு சொல்லிடும் பல்கலைகழகம்

    சிதைத்து சிறைகளாய் மாற்றினோம்

     

     

    பணமும் பகட்டும் வசதியும்காண‌

    விட்டு அயலகம் ஏகினோம்

    புழுங்கும் மனதை திருந்தவிடாது

    அங்கே குடிமகனாகினோம்

    கலங்கும் தாயகம் வதங்கிட கண்டும்

    காணா திருகுரு டாகினோம்

    கற்க கசடற கற்ற பின்னாலே

    விற்ற கலைபொருளாகினோம்

     

     

    அழுகிய காய்களை கறிகளில் சேர்த்து

    அமுதாய் உண்பவர்  ஆகினோம்

    அழுக்கினில் கிடைத்த அவலங்களோடு

    அணிவகுப்புகளை பாராட்டினோம்

    குலப்பட மெடுத்து கலப்படம் மாட்டி

    கும்பிடும் பக்தரும் ஆக்கினோம்

    செவிப்பட கதறிட செப்புகிறாள் தாய்

    மண்ணுக்கு ஏதுரை செய்யுவீர்

     

     

    லஞ்ச ஒழிப்போம் இன்றெனச் சொல்லி

    அஞ்சலுடன் கை அலம்பினோம்

    வஞ்சகம் அறுப்போம் என்றெனச் சொல்லி

    வயதினர் விடுதிகள்  காட்டினோம்

    தஞ்சம் என்றென வரும் அரவுகளை

    நஞ்சுடன் வாழக் காப்பாற்றினோம்

    மிஞ்சும்படி இனி மிச்சம் வைக்காது

    எல்லாம் கெட கொண்டாடினோம்

     

    தாயைப் பழித்து வாழ்ந்தாரென்ற‌

    சரித்திர முண்டோ சொல்லுவீர்

    தாய்மண் அழிக்க சிறந்தாரென்ற‌

    தகவலும் முண்டோ சொல்லுவீர்

    அடிமை அழித்து குடியரசாகியும்

    அவலப்பெண்ணா ? பாரதம்

    உரிமை கோரி உலையில் போட்டீர்

    பெருந்தகை யாளரே! வாழியே

    Share
  • பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !

    சத்தியமணி

    KKL18PML-horz

    கணபதி நின்பொற் தாளடி சரணம்

    ரிதிசித்தி நிம்மதி தா

     

    ஆழ்வார் அடிபற்றி அருட்பக்தி பெற்றாரும்

    தாழ்வாரோ இவ்வையகத்தே

     

    சக்தியை தந்துநல் சாந்தமும் தந்து

    பக்தியை தந்துதிரு மகளுடன்சேர்

    யுக்தியை தருமுன் அருள்கொண்டபின்

    பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா ! (more…)

    Share
  • கலாம் உனக்கு சலாம்

    சத்தியமணி

    kalam

    கலமென்று விரைந்தாய்

    கலாமென்று உரைத்தாய்
    காலமென்று கரைந்தாய்
    காலார துயின்றாய்

    இருக்கின்ற போதுன்னை
    எத்தனை பேர் அறிந்தார்
    இல்லாதபோதுன்னை
    எத்தனை பேர் சுமந்தார்

    வழித் துணையாய் நிழலாக‌
    எத்தனை பேர் தொடர்ந்தார்
    தன்வழியில் எத்தனையோ
    தட‌மாற்றி மறைந்தார்

    புகைப்படம் உடன் எடுத்தோர்
    முகப்பதிவில் பகிர்ந்தார்
    புரியாமல் உடல் எடுத்தார் (அவர் என)
    புரிந்து நீ நகைத்தாய்

    மதமென்றும் இனமென்றும்
    உறவுரைத்து அணைத்தார்
    மதியாலே அவரெண்ணம்
    அறிந்துநீ அணைந்தாய்

    அடுத்துவரும் தலைமுறையும்
    ஆற்றல்பெற அலைந்தாய்
    அணுயுகமும் (ஏவு) கணைமுகமும்
    அவதியுற பிரிந்தாய்

    திசைகாட்டி உரையாற்றி
    முயற்சிபல புரிந்தாய்
    அசையாத பாரதத்தை
    முன்னேற்ற முனைந்தாய்

    பள்ளியின் வாசல்களை
    பாதங்களில் அடைந்தாய்
    பல்வேறு அறிவுரையால்
    ஆற்றல்மழை பொழிந்தாய்

     

    அரசியலில் கலக்காமல்
    அமுதமெனத் திகழ்ந்தாய்
    அலைகேசம் குலுங்கலுடன்
    அன்புகவி பகிர்ந்தாய்

    தீராதப் பிரிவுதுயர்
    தனைகொடுத்து பிரிந்தாய்
    திருந்தாத பாரதத்தில்
    இருந்து உயிர் துரந்தாய்

    வரலாறு வற்றாது
    உனைக் காட்டி வாழ்ந்தால்
    வரமுண்டு வளமுண்டு
    உனைப் போல வாழ்ந்தால்

    கலாம் உனக்கு சலாம்

    Share
  • ஆடுகிறான் நடராசன் ஆடுகிறான்

    சத்தியமணி
    d0614133
    ஆடுகிறான் நடராசன் ஆடுகிறான்
    அருளுடன் பரவசமாய் ஆடுகிறான்
     
    அம்பலத் திறைவன் ஆடுகிறான்
    அமரர் பதிஈசன்   ஆடுகிறான் – திரு
    ஆதிரை நந்நாளில்  பிறந்ததனால்
    ஐம்பூதத் தன்னோடு ஆடுகிறான்()
     
    கசமுகன் கனிமுருகன் நந்தியுடன் – இடக்
    காலினைத் தூக்கியே பதம் பிடித்தான்
    மாதவன் மேளமும்  நாரத கானமும் ஒருசேர
    மங்கள  நாட்டியம் ஆடுகிறான் ()
     
    சிற்சபை பொற்சபை வெள்ளிசபையோடு
    ரத்தின தாமிரச் சபையாவிலும்
    காளி திரிபுர முனி தாண்டவமே மற்றும்
    சந்த்யா ஆனந்த நடமாடினான் ()
     
    மறையவர் மறைஓத மார்கழி குளிரூத‌
    பறையுடன் பம்மலில் ஆடுகிறான்
    கனலொரு கையினில் மறுகைஉடுக்கையில்
    தனக்கெனும் அபினயத்தில் ஆடுகிறான் ()
     
    களியினிப்பு அட்டகாசக் கறிகூட்டு மற்றும்
    களிப்பான அடியார்கள் துதியேற்று
    ஒளியூற்றும் பிறைசூடன் ஆடுகிறான்
    கலிதீயை க‌ங்கையினால் அணைத்துவிட்டான்()
     
    சிவகாம சுந்தரி அதைரசிக்க – சித்த‌
    ரிஷிமுனி பக்தர்கள் பூசிக்க‌
    கயிலாய தரிசனமும் தருகிறான் ஓம்
    நமசிவாய மெனக்காதில் ஓதுகிறான் ()
     
    ஆடுகிறான் நடராசன் ஆடுகிறான்
    அருளுடன் பரவசமாய் ஆடுகிறான்()
    Share
  • என்றென்றும் புத்தாண்டு

    சத்தியமணி

    images

    பதினாறு பெறுவதற்கு புவியிலே இன்புறவே

    பதினைந்து வருவதற்கு பல்லாண்டும் பாடுகிறார்

    பதினான்கை புதிப்பிக்க‌ பதினைந்து களிப்புறவே

    பதியாதார் பாடாதார் பதம்போட்டு ஆடுகிறார்

     

    வருடம் ஒன்றேற வயதும் ஒன்றேற

    வருடும் முடிகற்றை மெலிதாய் நிறமாற‌

    வருவதும் அறியாமல்  வந்ததை தெரியாமல்

    வருவாய் முழுவதும் செலவாய் ஆக்குவதா?

     

    சாலமுறு  வாகனத்தில் சன்னலில் தெரிவதுபோல்

    காலங்கள் மாறிவரும் காட்சிகளும் மாறிவிடும்

    கோலமதை மாற்றிதம் குணமதனை மாற்றி

    ஏலமென விடுவதுவோ இவ்வாழ்க்கை! கேளிக்கையா?

     

    கிடைக்கின்ற ஒருநொடியும் அமிர்த துளியெனவே

    படைக்கின்ற  ஈசற்கு நன்றியென நவில்வீரே

    அன்போடும் பண்போடும் நட்போடு  வாழ்ந்தாலே

    இன்னும் பல்லாண்டு என்றென்றும் புத்தாண்டு.

    Share
  • கண்ணன் வந்தான்

    கண்ணன் வந்தான் ! இங்கே கண்ணன் வந்தான் !!

    தாய்மை ஏக்கந்தனை தீர்க்கவென கண்ணன் வந்தான்()

    வல்லமையின் மின்வலையில் கண்ணன் வந்தான்
    வாழ்த்துகளை அள்ளிதர கண்ணன் வந்தான்
    கணினியின் மென்பொருளாய் கண்ணன் வந்தான்
    கவிமகளாம் தமிழ்பருக கண்ணன் வந்தான்
    சொல்லமைக்க சொல்லாக கண்ணன் வந்தான்
    சொல்லாத சொல்லாக கண்ணன் வந்தான்
    கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
    கண்ணன் வந்தான்()
    அடிமை யென்னும் சிறைபிளக்க கண்ணன் வந்தான்
    முடியாட்சி முடித்து வைக்க கண்ணன் வந்தான்
    வறுமை யென்னும் பிணிவிலக்க கண்ணன் வந்தான்
    உரிமையாய் உணவாக கண்ணன் வந்தான்
    சமநீதி ஆக்கமெனக் கண்ணன் வந்தான்
    சமதர்மம் வாழவைக்க கண்ணன் வந்தான்
    கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
    கண்ணன் வந்தான்()
    தாயகத்தை தூய்மைசெய கண்ணன் வந்தான்
    நூலகமாய் மாற்றிடவே கண்ணன் வந்தான்
    சேவகனாய் தாய்காக்க கண்ணன் வந்தான்
    காவினங்கள் தான் அழைக்க கண்ணன் வந்தான்
    நட்புரிமைப் பாராட்டி கண்ணன் வந்தான்
    நல்லதொரு மாற்றம்தர கண்ணன் வந்தான்
    கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
    கண்ணன் வந்தான்()

    Share
  • பாரதமாதாவும் கண்ணன் அட்டமியும்

    (கண்ணன் அட்டமியில் பாரதமாதாவின் துதி…மெட்டு உங்களுக்கு தெரியும்)

     

    கண்ணா! கார்முகில்  நிறவண்ணா!

    நீயில்லாமல்  நானில்லையே!

    உன்னை  மறப்பேனில்லை!  மறக்க  நினைப்பேனில்லை

    என்நிலைப்   பார்த்து   ஏன்நீயும்    விரைவாயில்லை ()

     

    மொழி  பார்த்து   நிலமென்னைப்   பிரித்தார்  கண்ணா

    இனம்  பார்த்து  சங்கங்கள்  வளர்ப்பார்  கண்ணா

    முகம்பார்த்து    சண்டைகள்   பிடிப்பார்   கண்ணா

    மதம்  பார்த்து  சமயத்தில்     வதைப்பார்க்  கண்ணா

    பாண்டவராய்  கெளரவராய்  இருந்தார்   கண்ணா – வேடம்

    பூண்டவரும்   அதனாலே  வாழ்வார்   கண்ணா()

     

    பணம்சேர்க்க   பிறதேசம்   செல்வார்   கண்ணா

    பொருளீட்டி    குடியுரிமை  பெறுவார்  கண்ணா

    தாயெனக்கு   அணிசேர்க்க‌  மறந்தார்   கண்ணா

    தன்புகழை   முகப்பதிவில்  பதிப்பார்   கண்ணா

    எதைச்சொல்லி   புரியவைப்பேன்   சொல்வாய்   கண்ணா

    இதற்காக   வாவென்றேன்   வருவாய்   கண்ணா()

     

    படியேறி   முன்னேற   மறுப்பார்   கண்ணா – தள்ளு

    படியென்றால்   பெருங்கூட்டம்  சேர்வார்  கண்ணா

    உழைப்பென்றால்    ஒருஓரம்   அமர்வார்  கண்ணா – பதவி

    உயர்வென்றால்  உரிமைக்கு   நிமிர்வார்    கண்ணா

    தங்கத்தை   உடலெங்கும்   தரிப்பார்   கண்ணா – கடமைத்

    தங்காமல்   செய்நன்றி   மறப்பார்   கண்ணா ()

     

     

    பாஞ்சாலி   துகில்தம்மை    உரிப்பார்க்   கண்ணா

    கர்ப்பத்தில்   பெண்சிசுவை   கலைப்பார்    கண்ணா

    உன்கதையும்   இதுபோல்தான்    அறிவேன்   கண்ணா

    என்மக்கள்   என்னுடனே    சேர்ப்பாய்    கண்ணா

    இத்தனைநாள்    நீகண்கள்    அயர்ந்தாய்   கண்ணா

    இனிப்போதும்   எனக்காக   எழுவாய்    கண்ணா()

    Share
  • கவிஞன் யார்

     

    கவிஞ‌ன் என்பவன் யாரடி?

    காணும்   இலக்கணம் கூறடி !

    கலைஞனும் அவனும் ஒன்றடி

    அலையெனும் படைப்புகள் காணடி

     

    கவிதைப் படைப்பவன் கவிஞன் தான்

    கவிதைப் படிப்பவன் கவிஞன் தான்

    கவிதை கொடுப்பவன்  கவிஞன் தான்

    கவிதை ரசிப்பவன்  கவிஞன் தான்

     

    மொழியை மதிப்பவன் கவிஞன் தான்

    மொழியில் மித‌ப்பவன் கவிஞன் தான்

    கலையைக் களிப்பவன் கவிஞன் தான்

    கலையைக் காப்பவன் கவிஞன் தான்

     

    எளிமைப் படைப்பினில் கவிஞன் தான்

    இனிமைப் படைப்பதும் கவிஞன் தான்

    வலிமை வரிகளும் கவிஞன் தான்

    வாழ்த்தி இசைப்பதும் கவிஞன் தான்

     

    வடிவம்      பலவும் அவனெடுப்பான்

    அதனுள்    இருப்பதை அனுபவிப்பான்

    அனுபவந் தானதில் வரிசமைப்பான்

    வரிகளில் பாடல்கள் பிர‌சவிப்பான்

     

    காலம்  அவனுக்கு கைகூலி

    தனிமை அவனுக்கு பொன்வேலி

    காற்று  அவனுக்கு இசைக்கூடம்

    கற்பனை அவனுக்கு  விசைக்கூடம்

     

    அறிந்தாயானால் அவன் வெளிச்சம்

    அல்லவென்றால் நீயிருட்டு

    பழகப்பழக  அவன் புதையல்

    விலகவிலக  உனக்கிழப்பு

     

    எழிலைப் பார்த்து அவனாக்கம்

    ஏழ்மைப் பார்த்து அவனேக்கம்

    இன்னும் ஐயம் தெளியவில்லை?

    என்றால் நீயும் வளரவில்லை

     

    தொட்டு பார்த்தா தீயென்பாய்

    கட்டிப் பார்த்தா கனலென்பாய்

    குதித்து  பார்த்தா கடலென்பாய்

    கடித்து  பார்த்தா  கல்லென்பாய்

     

    நிமிர்ந்து பார்க்கையில் களிறென்பாய்

    நடந்து   பார்க்கையில் புலியென்பாய்

    கலந்து  பார்க்கையில்  மதுவென்பாய்

    வியந்து பார்க்கையில் விண்னென்பாய்

     

    கோள்கள் ஆயிரம்  இருந்தாலும்

    அதிலே புவிபோல் வாழ்வுண்டோ

    படிப்பும் பதவியும் பெற்றாலும்

    வாழ்த்தாதிருப்பதில் வாழ்வுண்டோ

     

    மொழியை வளர்ப்பவன் நீயாயின்

    மொழியின் படைப்பினை ரசிக்காமல்

    மனிதரை பார்த்து  புகழுரைத்தால்

    மறைமுக மான அசிங்கமிது.

     

    கொடுக்கும் மேகத்தை பழிக்காதே

    ஆடும்மயில் திசை பொழியுமது

    கெடுக்கும் மமதையில் இருக்காதே

    ஆடும்வரையது அழிக்குமது!

     

     

     

     

    Share
  • பெண்ணே பெண்ணே!!

    பெண்ணே பெண்ணே சிரிக்காதடி
    சிரிச்சா நெஞ்சு பொறுக்காதடி
    மானேத் துள்ளி மறையாதடி
    மயிலாய் ஆடியே மயக்காதடி ( )

    சிற்றலையின் பாடலிங்கே சிணுங்காதடி
    நற்றிணையின் கள்ளளித்து நழுவாதடி
    கற்றாழைப் போல்கசந்து வழியாதடி
    வெற்றிலைச் செஞ்சாந்தை உமிழாதடி()

    அம்மா என்றாலும் அலட்டாதடி
    அக்கா என்றாலும் மிரட்டாதடி
    கண்ணே என்றாலும் கசக்காதடி
    முன்னே வந்துசும்மா முணுகாதடி()

    நுங்கப் பாக்கமுன்னு நினைக்காதடி
    இங்கப் பாருங்கன்னு இடிக்காதடி
    தங்கம் வாங்கச்சொல்லி விக்காதடி
    திங்க முடியாமத் திக்காதடி()

     

    உரிமைச் சொல்லிடவே முழங்காதடி

    அடிமை யாக்கிடவோ அலுக்காதடி

    பொறுமை கற்றுயெனை பொசுக்காதடி

    பெருமை சொல்லிசொல்லி அணைக்காதடி()

    Share
  • சீரடி தரிசனம் கேட்டேன்

     

    சீரடி தரிசனம் கேட்டேன் சாயி

    நேரடி தரிசனம் தந்தீரே

    ஓரடி வைத்து வந்தேன் சாயி

    நூறடி முன்னால் நின்றீரே ()

     

    வாடிய பக்தனை கண்டதும் சாயி

    வாயென் பக்கம் என்றீரே

    நாடியக் காரணம் சொல்லும் முன்னாலே

    சேயெனக் கெல்லாம் தந்தீரே

    பாடியப் பாடலை கேட்டதும் சாயி

    பக்தனைப் பார்த்து சிரித்தீரே

    தேடிய தெய்வம் நீயென்றாகி

    தெளிவுடன் மனதில் அமர்ந்தீரே ()

     

     

    பசியென வேளையில் அழுதிடும் போது

    பாலாய் தேனைப் பகிர்ந்தீரே

    வலியென நானும் வாடதிருந்திட‌

    மருந்தாய் அமுதம் பொழிந்தீரே

    கலியினில் வஞ்சகம் கவ்வாதிருக்க‌

    காப்பாய் கவசம் ஆனீரே

    புவியினில் குருவாய் தினமும் எனக்கு

    புதுபுது ஞானம் அளித்தீரே ()

     

    பெற்றோர்  சேவை பெருஞ்சேவையென‌

    பெரு உபதேசம் செய்தீரே

    கற்றோர்  சபையில் கலந்திட எனக்கொரு

    பேரும்புகழும் கொடுத்தீரே

    உற்றோர் உறவினர் விலகியப் போதிலும்

    உறவாய் உறுதி அளித்தீரே

    மற்றோர்  பிறவிகள் எடுத்தாலுமெனை

    சீடனிவனென அருள்வீரே ()

    Share