ஆடுகிறான் நடராசன் ஆடுகிறான்
சத்தியமணி
ஆடுகிறான் நடராசன் ஆடுகிறான்
அருளுடன் பரவசமாய் ஆடுகிறான்
அம்பலத் திறைவன் ஆடுகிறான்
அமரர் பதிஈசன் ஆடுகிறான் – திரு
ஆதிரை நந்நாளில் பிறந்ததனால்
ஐம்பூதத் தன்னோடு ஆடுகிறான்()
கசமுகன் கனிமுருகன் நந்தியுடன் – இடக்
காலினைத் தூக்கியே பதம் பிடித்தான்
மாதவன் மேளமும் நாரத கானமும் ஒருசேர
மங்கள நாட்டியம் ஆடுகிறான் ()
சிற்சபை பொற்சபை வெள்ளிசபையோடு
ரத்தின தாமிரச் சபையாவிலும்
காளி திரிபுர முனி தாண்டவமே மற்றும்
சந்த்யா ஆனந்த நடமாடினான் ()
மறையவர் மறைஓத மார்கழி குளிரூத
பறையுடன் பம்மலில் ஆடுகிறான்
கனலொரு கையினில் மறுகைஉடுக்கையில்
தனக்கெனும் அபினயத்தில் ஆடுகிறான் ()
களியினிப்பு அட்டகாசக் கறிகூட்டு மற்றும்
களிப்பான அடியார்கள் துதியேற்று
ஒளியூற்றும் பிறைசூடன் ஆடுகிறான்
கலிதீயை கங்கையினால் அணைத்துவிட்டான்()
களிப்பான அடியார்கள் துதியேற்று
ஒளியூற்றும் பிறைசூடன் ஆடுகிறான்
கலிதீயை கங்கையினால் அணைத்துவிட்டான்()
சிவகாம சுந்தரி அதைரசிக்க – சித்த
ரிஷிமுனி பக்தர்கள் பூசிக்க
கயிலாய தரிசனமும் தருகிறான் ஓம்
நமசிவாய மெனக்காதில் ஓதுகிறான் ()
ஆடுகிறான் நடராசன் ஆடுகிறான்
அருளுடன் பரவசமாய் ஆடுகிறான்()