Tag: வல்லமையாளர்

  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    ஸ்ரீரங்கம் அல்லது திருவரங்கம் என்னும் புகழ்பெற்ற நகரைப் பற்றிய சரித்திரங்கள் சுவாரசியமானவை. அதுவும் ரங்கநாதனைப் பற்றிய வரலாறுகள் ஒவ்வொன்றும் ஒருவிதமானவையாக இருந்தாலும் எல்லா விஷயங்களுமே சுவையானவைதான். அரங்கமாநகரை தன்னுள்ளே வைத்திருக்கும் பாசுரங்கள் எல்லாமே அழகான தமிழால் அரங்கனுக்கு சாத்தப்பட்ட பூமாலைதான். தமிழ் இலக்கிய, பக்திப் பாடல்களில் மிக அதிக அளவில் இடம்பெற்ற நகரம் கூட அரங்கமாநகரம்தான். இந்த நகரைப் பற்றியும் நகரத்தில் கோயில் கொண்ட அரங்கத்தான் பற்றியும் புத்தகங்கள் நிறைய உள்ளன. அதிக அளவில் வைணவ ஆச்சாரியர்களின் ஈடுகள் பேசுகின்றன.

    திருமங்கை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் காலத்தில் இந்த நகரம் மிகப் பெரிதாக விரிவுபடுத்தியிருக்க வேண்டும் என நாம் தோராயமாகச் சொல்லலாம். ஆழ்வார் பாடல்களில் பல இடங்களில் திருவரங்கத்தின் சுற்றுப்புறப் பெருமைகள் பேசப்படுகின்றன. இத்தகைய உயர்ந்த தலத்தின் கோயில் கொண்டுள்ள பெருமாள் அரங்கநாதனுக்கும் மிகப் பெரிய ஒரு சோதனையான கட்டமாக பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விளைந்த மாலிக்காபூர் படையெடுப்பைச் சொல்வார்கள். அந்தச் சமயத்தில் வைணவ ஆச்சாரியராக இருந்த மன்னுபுகழ் வேதாந்த தேசிகர் அரங்கனின் உற்சவமூர்த்தியை எடுத்துச் சென்று திருப்பதியில் வைத்ததாக இன்றைக்கும் திருமலை கோயிலில் ஒரு அறிக்கை மாட்டி வைத்திருப்பதைப் பார்க்கலாம். அரங்கன் உற்சவத் திருமேனி திருமலை ஏறிவிட்டாலும், ஸ்ரீராமனின் குலதெய்வமான மூலவநாதன் திருவரங்கன் அங்கே பள்ளி கொண்டிருந்தானே அவன் என்ன ஆனான்..

    இதோ கோவையைச் சேர்ந்த திரு கிருஷ்ணமூர்த்தி தரும் சுவையான தகவல்கள் அவர் எழுத்திலேயே பார்க்கலாமா

    பரிதாபி ஆண்டு, வைகாசி திங்கள் 17ம் நாள். ரங்க நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. நாற்பத்தியெட்டு வருடங்களுக்கு முன்னால் தன் இருப்பிடத்திலிருந்து அவசரஅவசரமாய் வெளியேறிய அழகிய மணவாளன் காவிரியின் தென்கரையை அடைந்து, பின் தொண்டைமான் காட்டிற்குள் புகுந்து, திருக்கோஷ்டியூர், திருமால் இருஞ்சோலை, யானைமலை, மதுரை, திருக்குருகூர், நாகர்கோவில், திருஅனந்தன்புரம், கோழிக்கூடு, திருநாராயணபுரம், திருமலைக் காடுகள், திருமலை, செஞ்சி, அழகிய மணவாளம் வழியாக தென் தேசங்களை பிரதக்ஷணம் செய்து இப்போது காவிரியின் வடகரை கடந்து ரங்கத்திற்குள் மீண்டும் பிரவேசிக்கிறார். கேட்க வேண்டுமா ரங்கத்தினர் உற்சாகத்திற்கு? வீட்டு வாசல்கள் தெளிக்கப்பட்டு மாக்கோலங்கள். வாழைகள். மாவிலைத் தோரணங்கள். பூ மாலைகள். மேள தாளத்துடன் மங்கல இசை. விண்ணைப் பிளக்கும் வேத கோஷங்கள். தமிழ் மறை பிரபந்தங்கள். போரில் வெற்றி கண்ட கம்பண, கோபணருக்கு ஜய கோஷங்கள். வீதியெங்கும் மகிழ்ச்சி கூத்தாடல்கள். பல்லக்கில் நெஞ்சு நிறைந்து பவனி வரும் ரங்கனுக்கும், அதை சுமக்கும் விஜய நகர அரசன், படைத் தளபதிகளுக்கு ஆரத்திகள், அவர்கள் அனைவரின் மீதும் வாரி இறைக்கப் படும் பூக்கள், கொட்டும் முரசுகளின் பேரொலிகள் என திருவரங்கம் அதிர்ந்து கொண்டிருந்தது.

    இக்கொண்டாட்டங்களை எல்லாம் பார்த்துக் கொண்டும், குழுமி இருந்த ஜன சமுத்திரத்தின் ‘ரங்கா, ரங்கா’ (அரை நூற்றாண்டுகளுக்கு முன்னால் இதே ரங்கா, ரங்கா முழக்கத்தோடு அவனுக்காக உயிர் துறந்த ரங்க வீரர்களின் வம்சா வழி வந்தவர்களே இவர்கள்) எனும் சந்தோஷ கூச்சல்களை கேட்டுக் கொண்டும், அவர்களின் ஊடே புன்னகை தவழும் முகத்துடன் ஊர்வலமாய் சென்று தன் சாம்ராஜ்ஜிய பீடத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக புளகாங்கிதமாய் எழுந்தருளினார் அரங்கன். (காணாமல் போன நாச்சியார் உற்சவ பேரங்கள் இப்போது எப்படி வந்தன? இவ்விக்ரஹங்கள் வேறு. இவை, அழகிய மணவாளர் திருமலையில் தங்கி இருந்த போது சந்திரகிரி அரசர் யாதவராயரால் செய்து வைக்கப் பட்டவை).

    ஆனால், இங்கென்ன கூட்டத்தினரிடையே சலசலப்பு? ஆ இதென்ன இன்னொரு ரங்கர்? ஆமாம், பல வருடங்களுக்கு முன்னால், ரங்கம் சற்று அமைதியானவுடன், அரங்கன் ஆலயத்தில் மாற்று மூலவர்களுக்கு பூஜைகள் பிறர் அறியா வண்ணம் நடக்க ஆரம்பித்தது. அக்காலத்தில், இவர்தான் அவர் என்று வேறொரு அரங்க உற்சவர் வந்து சேர்ந்தார். இப்போது புதிதாய் ஒருவர். இதில் யார் உண்மையான பழைய உற்சவர் என்று எப்படி தீர்மானிப்பது? இது நாள் வரை தாங்கள் புஜித்தவரை ஒதுக்குவதா? இதுதான் முனுமுனுப்புகளுக்கும், சர்ச்சைக்கும் காரணம்.

    இச்சமயத்தில்தான் விஜய நகரத்தார் போரில் வெற்றி பெற்றதை ஸ்வாமி வேதாந்த தேசிகரிடம் நேரில் கூறி அவரை திருவரங்கம் அழைத்து வந்திருந்தனர். எவர் முன்னிலையில் நாற்பத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் மூலவரை மறைக்கும் வகையில் குலசேகரன் வாயிலில் சுவர் எழுப்பப்பட்டதோ, நூறு பிராயத்தை கடந்திருந்த அவரே இப்போது முன் நின்று அக்கற்தடுப்பை தகர்த்து ரங்கனை மீண்டும் உலகத்தாருக்கு வெளிப்படுத்தினார். அரங்கனை முதன் முறையாய் தரிசித்தவர்கள் பரவசமாகி ‘ரங்கா, ரங்கா’ என கூக்குரலிட்டனர். பலரின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர். பிறகு, ரங்கனுக்கு முறைப்படி வெகு விமர்சையாக பூஜைகள் நடந்தது. ஸ்வாமி தேசிகர், சுல்தானுக்கு எதிரான போரில் விஜய நகர படைகளுக்கு தலைமை வகித்து வெற்றி கண்ட கோபணரை போற்றி ஒரு ஸ்லோகம் எழுதினர். அது கல்லில் பொறிக்கப்பட்டு இன்றும் காணக் கிடைக்கிறது.

    சரி, நாம் தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம். யார் பழைய உற்சவ அழகிய மணவாளன்? தேசிகர் முன்னிலையில் விவாதம் நடந்தது. ஐம்பது வருடங்களுக்கு முன்னால் அவரை வெகு அருகாமையில் தரிசித்தவர் எவரேனும் இப்போது ரங்கத்தில் இருந்தால் அவர் வந்து அடையாளம் காட்ட வேண்டும் என்று முடிவாயிற்று. ஆனால், ஒருவரேனும் முன் வரவில்லை. இந்நிலையில்தான், இரு கண்களிலும் பார்வை இழந்த அந்த ஈரங்கொல்லி (வண்ணான்) ‘நான் அடையாளம் காட்ட முயற்சிக்கலாமா? என்று கேட்டபடி வந்தான்.

    பெருமாள் திருமஞ்சன நீராடும் போது அணியும் வஸ்திரங்களை நான் துவைத்து தருவது வழக்கம். அப்போது, அத்துணியை பிழிந்து அந்நீரை தீர்த்தமாகப் பருகுவேன். அதற்கென ஒரு சுவை உண்டு. இப்போது, இரு மூர்த்தங்களையும் நீராட்டி வஸ்திரங்களைக் கொடுத்தால் நான் அவற்றின் சுவை கொண்டு எதை அணிந்தவர் பழைய உற்சவர் என்று சொல்ல முடியும் எனக் கூறினான். அனைவரும் அவன் சொன்னதை ஏற்றனர். அவன் தீர்த்தங்களை பருகி, கோபணர் கொண்டு வந்த அரங்கனின் வஸ்திரத்தை கையில் வைத்துக் கொண்டு இதை அணிந்தவரே ‘நம் பெருமாள்’ என்றான். அதன் பின்னர் ரங்க உற்சவருக்கு ‘நம் பெருமாள்’ என்பதே பெயராயிற்று.

    மேலும் படிக்க திரு கிருஷ்ணமூர்த்தியின் ஃபேஸ் புக்’ விலாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
    https://www.facebook.com/krishnamurthy.krishnaiyer

    அரங்கன் தகவல்கள் என்றாலே இனிப்பவை என்று முதலிலேயே குறிப்பிட்டேன். இப்படி இனிக்க இனிக்க தகவல்களை அள்ளித் தரும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களை இந்த வார வல்லமையாளராக அறிவிக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: மேகலா ராமமூர்த்தி அவர்களின் ’சிலம்பு காட்டும் கோவலனின் மறுபக்கம்’ – வல்லமையில்.

    மற்ற காப்பியங்கள் எல்லாம் அரசர்களையோ, குறுநில மன்னர்களையோ, அல்லது வள்ளல்களையோ பெரிதும் போற்றுவதாகவும், அவர்தம் கொடைச் சிறப்பினையும், போர் வெற்றிகளையும் வானளாவப் புகழ்வதாகவுமே இயற்றப்பட்டிருக்க, அவற்றினின்று முற்றிலும் மாறுபட்டுச் சாதாரணக் குடிமக்களைக் காப்பியத் தலைவனாகவும், தலைவியாகவும் தேர்ந்தெடுத்து அவர்தம் வாழ்வையே காப்பியக் களனாக்கிய ’புரட்சிச் சிந்தனையாளர்’ இளங்கோவடிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    பழந்தமிழர் உணவுகளில் கிழங்கு வகைகள் அதிகம் உண்டு. அப்படிப்பட்ட கிழங்குவகைகளில் பனங்கிழங்கு வகைகள் சிறப்பு வாய்ந்ததாகும். அதிலும் முற்றிய பனங்கிழங்கு என்பது வாய்பிளந்து வரும்போது அதன் சுவை மிக அருமையாக இருக்குமாம். அப்படிப்பட்ட முற்றிய வாய் பிளந்த பனங்கிழங்குகளை விவசாயி ஒருவன் தன் அரசனுக்குக்கொடுப்பதற்காக அரச சபைக்கு வருகிறான். சரி, ஏதோ சுவையாக பனங்கிழங்கு வருகிறது.. வாங்கிப் போட்டுக்கொண்டு நேரம் கிடைக்கும்போது சாப்பிட்டுப் போகவேண்டியதுதானே..ஆனால் இந்த ராஜாதான் தமிழ் விரும்பும் ராஜா ஆயிற்றே.. விட்டு விடுவானா அப்படியே.. உடனே தன் கவிஞர் பெருமக்களைக் கூப்பிட்டு அந்த வாய் பிளந்த பனங்கிழங்குக்கு உவமையாக ஒரு தமிழ்க் கவிதை பாடச் சொல்லிக் கேட்டுள்ளான்.

    இந்த புலவர் பெருமக்களே ஒரு மாதிரியானவர்கள் போலும். நக்கீரன் வழி வந்தவர்கள்.. அதுவும் தமிழ்ப் புலவர்களல்லவா. இவர்களுக்கென கற்பனை வந்து. இவர்களாக பாடினால்தான் உண்டு. ஒருவேளை சந்திரனை, சூரியனை, அரசிளங்குமரியின் கண்களை உவமையாகப் பாடு என்றால் சபை களை கட்டியிருக்குமோ என்னவோ.. . போயும் போயும் ஒரு விவசாயி கொண்டு வந்த வாயைப் பிளந்த பனங்கிழங்குக்கு உவமை வேண்டுமாம்…தம்மால் முடியாது என்பதை சொல்லாமல் சொல்லி அந்த சபையில் மௌனம் காத்தனர். மன்னனுக்கும் கோபம் வந்தது.. தனக்கென ஒரு கவிதை கேட்டால் பாடமாட்டாத இவர்களெல்லாம் என்ன புலவர்களோ.

    சத்திமுத்திப் புலவர் என்பவர் சோழநாட்டைச் சேர்ந்தவர். பாவம் வறுமையில் வாழும் இந்த புலவர் தன் புலமைக்கு யாராவது பரிசு தரமாட்டார்களாவென ஊர் ஊராக திரிந்து களைப்பால் இந்த அரசன் ஆளும் நாட்டுக்கு வருகிறார். இரவு வேளை.. ஒரு வீட்டின் முற்றத்தில் படுக்க இடம் கிடைக்க அங்கே படுத்துக்கொண்டு இரவைக் கழிக்க நினைப்பவர் கண்களுக்குப் பக்கத்தில் ஒரு நாரைப் பறவையும் இவருக்கு துணையாக அந்த முற்றத்தில் இருப்பது தெரிகிறது. அந்த பறவையை தன் மனைவிக்கு தூது செல்லப் பணிக்கிறார். தன் வீட்டில் தனக்காகவும் தான் கொண்டுவருவதாக சொல்லியிருக்கும் செல்வத்துக்காகவும் காத்துக் கொண்டிருக்கும் மனைவியிடம் தன் நிலையை எடுத்துச் சொல்லச் சொல்லிப் பாடுகிறார்.

    ’நாராய் நாராய் செங்கால் நாராய்;
    பழம்படுபனையின் கிழங்கு பிளந்தென்னப்
    பவளக் கூர்வாய் செங்கால் நாராய்’ என்று ஆரம்பித்து கவிதை படிக்கிறார்.

    அவரது அதிர்ஷ்டம் அன்று இரவு சோதனைக்காக மாறு வேடத்தில் வந்திருந்த அந்த நாட்டு அரசனின் காதுகளிலேயே இந்தப் பாடல் ஒலிக்க.. (இனிமேல் கதை புரிந்திருக்குமே)

    அது சரிதான், இந்தக் கதையை ஏன் சொல்லுகிறேன் என்றால் இந்த வார வல்லமையில் ஒரு அழகான நாரையைப் பற்றிய பாடல் கண்டேன். திரு சச்சிதானந்தம் அவர்கள் தன் குறவன் பாட்டுப் பகுதியில் இந்தப் பாடலை வேறு விதமாக எழுதியிருந்ததும் அந்தப் பழைய நாரைப்பாடல் நினைவுக்கு வந்தது, குறவன் பாட்டு நான் ரசித்துப் படித்து வரும் பாடல்.

    வேகவைத்துத் தோலுரித்து, நுனிதொடங்கிப் பாதிவரை

    பிளந்தபின்பு, நடுத்தண்டை நீட்டி நிற்கும்,

    பனைங் கிழங்காய் நாரை தன்,

    பேரலகைப் பிளந்து நாநீட்டி நிற்கும்!

    இந்தப் பாடல்கள் முழுவதையும் படித்த பிறகு அவரைப் பாராட்டுவது நல்லது என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் நடுவில் இந்த நாரை வந்து ‘காலத்தை ஏன் வீணடிக்கிறாய் என்று கேட்பது போல பட்டது. அதுவும் மிகவும் பிடித்த சத்திமுத்திப் புலவர் பாடிய பாடல் போல பட்டதால் அவரை மிகவும் பாராட்டி இந்த வார வல்லமையாளர் விருது வழங்குகிறோம். திரு சச்சிதானந்தம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    கடைசி பாரா: திரு வெ. கோபாலனின் பட்டினத்தார் பாடல்களிலிருந்து

    மாதா உடல் சலித்தாள், வல்வினையேன் கால் சலித்தேன்
    வேதாவும் கைசலித்து விட்டானே – நாதா
    இருப்பையூர் வாழ் சிவனே, இன்னுமோர் அன்னை
    கருப்பையூர் வாராமற் கா.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    நாடகம் என்பது நிச்சயமாக கேளிக்கைக்காகவோ பொழுதுபோக்குக்காகவோ நடத்தப்படுவதில்லை என்பதை ஆதிகாலம் முதலே நம் முன்னோர்கள் தெரியப்படுத்தி வந்தார்கள். ஏழாம் நூற்றாண்டு மகேந்திரவர்மன் தன் நாடகங்கள் மூலம் சமூகத்தின், மதங்களின் சீர்கேட்டை விமர்சித்து எழுதி அந்த நாடகங்கள் இன்றளவும் புகழ்பெற்று விளங்குகின்றன. முத்தமிழின் முக்கியமான பகுதி கூட நாடகத்தமிழ்தான். தேசங்களில் அநீதியான ஆட்சியாளர்களை விமர்சிக்கவும் அவர்களின் நீசத்தனத்தை மக்கள் மத்தியில் பரப்பி அவர்களின் போக்கை நீக்கவும் வீதி நாடகங்கள் பெரிதும் பயன்பட்டுவந்தன என்பதை எத்தனையோ இலக்கிய சரித்திர ஆதாரங்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

    காலப்போக்கில் நாடகம் நடத்தும் முறையிலும் அதை அரங்கேற்றும் முறையிலும் எத்தனையோ புதுமைகள் ஏற்பட்டாலும் அதன் அடிப்படைக் கருத்தானது அதாவது பாமரமக்களுக்கு எடுத்துச் செல்லும் நல்ல கருத்துகள் எந்நாளும் மாறப்போவதில்லைதான். மிக நாகரீகமாகவும் மிக நவீன வசதியிலும் வாழும் இந்தக் கால கட்டத்திலும், எத்தனைதான் தொலைக்காட்சியும், திரைப்படமும் நம் வாழும் முனறையிலேயே வந்து நம் பொழுதைப் போக்கினாலும் நாடகத்துக்கென ஒரு பங்கு நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது.

    நாடகநடிகர்களின் வாழ்க்கை முழுவதையும் நாம் சாதாரணமாக அலசிப்பார்த்தால் மேடைதான் அவர்கள் உலகம். மேடையில் அவர்கள் அன்றைக்குத் தோன்றும் கதாபாத்திரங்கள்தான் அவர்கள் வாழ்க்கை, மேடையில் நேரடியாகக் கிடைக்கும் ரசிகர்களின் பெருத்த கரகோஷம்தான் அவர்கள் மூச்சுக்காற்றுக்குத் தேவைப்படும் பிராணவாயு. இவர்களுக்கு குடும்பம், வயிற்றுக்கு சாப்பாடு இவையெல்லாம் கூட இரண்டாம்பட்சம்தான். மேடை வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாக உணர்கிறார்கள், இவர்கள்.

    y. g. Mahendranராஜபார்ட் ரங்கதுரை என்றொரு திரைப்படம் பார்த்திருப்பீர்கள். ஒரு கூத்தாடியின் கதை அது. சிவாஜி கூத்தாடியாக நடித்து கலக்கியிருப்பார். அதைப் போலவே நாடகமேடையில் இன்றைய வாரம் ஒரு நாடகத்தினைக் காண நேர்ந்தது. நாடகத்தையே லட்சியமாகக் கொண்டு தன் வாழ்க்கையை வழிநடத்திச் செல்லும் நாடக நடிகனின் கதை. நாடகத்தின் பெயரே ‘நாடகம்’ என்று வைத்திருக்கிறார் திரு ஒய்.ஜி.மகேந்திரா. நாடகம் முன்னேறவும் இடர் வந்தபோதும் கைவிடாமல் நாடகத்தை நடத்திக் காட்டும் நாடகக் கலைஞராக வந்து அந்த நாடக நடிகனின் பாத்திரத்திலேயே வாழ்ந்து காட்டியிருக்கிறார் திரு ஒய்.ஜி. மகேந்திரா. அவருக்கு நாடகத் திலகம் என்று பட்டம் உண்டு. அந்தப் பட்டத்தின் பெயருக்கு ஏற்றவாறு நாடகத்தைப் போற்றிப் பாதுகாக்கவேண்டிய அவசியத்தை சமூகத்துக்கு உணர்த்துகிறார்.

    நாடகங்கள் பாதுகாக்கப்படவேண்டும். எதிர்காலத்திலும் வளம்பெற வேண்டிய அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை நம் சமுதாயத்துக்கு இருக்கிறது. நாளைய தலைமுறை அப்படியே ரோபோ’வுக்கு மாறினாலும் கூட அந்தப் புதுமைக்கேற்ப நாடகங்கள் சமூகத்துக்கு நல்ல கருத்துகள் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். தமிழுக்கு அழிவில்லை என்பது உண்மையானால் அந்தத் தமிழின் ஒரு அங்கமான நாடகத்துக்கும் அழிவில்லைதானே.

    ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாடகத்துறையில் இருந்து, ஒன்றாய்க் கலந்து, அதனோடே வாழ்ந்துகொண்டிருக்கும் நாடகத் திலகம் திரு ஒய்.ஜி.மகேந்திராவை வல்லமை இந்த வார வல்லமையாளராகக் கௌரவிப்பதில் மகிழ்ச்சியோடு பெருமையும் கொள்கிறது. நாடகங்களை நாம் எல்லோரும் போற்றவேண்டும்,என்ற கோரிக்கையோடு, எங்கள் வாழ்த்துகளையும் திரு ஒய்.ஜி.எம் க்கு வழங்கி மகிழ்கிறோம்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    வெ.திவாகர் 

    ஆதி காலத்திலிருந்து பார்க்கிறோம்.. பெண்கள் என்றால் பொதுவாக போகப் பொருளாகத்தான் சமூகத்தில் சிற்சில ஆண்களின் கண்களுக்குத் தெரிகின்றார்களோ என்னவோ,. பெண்களின் அழகை வர்ணிப்பதென்றால் போதும்.. இந்தக் கவிஞர்களுக்குக் கற்பனா சக்தி விண்ணைத் தொடும் அளவுக்கு பறக்கும். பூ என்பார்கள், பூவினும் மெல்லிய இதழென்பார்கள்.. மென்மைக்கு மறுபெயரே பெண்மை என்பார்கள்.. ஆனால் பெண்கள் வன்கொடுமை என வரும்போது இவர்கள் வர்ணனைக்கு நேர்மாறாக நடக்கும்போது நல்நெஞ்சம் கொண்டோர் அவர் ஆணாயினும் பெண்ணாயினும் நெஞ்சம் பதறத்தானே செய்வர்.

    பெண்கள் வன்கொடுமை இந்தியாவில் இப்போது அதிகம் நடப்பதாகச் செய்திகள், தொலைக்காட்சிகள் தெரிவித்தாலும் இது உலகம் முழுமைக்கும் ஒரே கதைதான் என்பது நம் பார்வையைச் சற்று அகல விரித்தால் புரியும்.. இதற்கான சமுதாயக் காரணங்களாக ஆண்களின் ஆதிக்கத் தன்மையை அதிகமாகக் காண்பித்தாலும், மனோதத்துவ ரீதியாகப் பார்க்கையில் ஆண்களின் தாழ்வு மனப்பான்மையும் அந்தத் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக அவர்கள் மனத்தில் தோன்றும் வெறித்தனமும், அந்த வெறித்தனத்தின் பயனாக அது பெண்ணின் மீது உடல்ரீதியாகத் துன்புறுத்தும்போது அது வன்கொடுமையாக மாறுகிறது. இயற்கையாகவே பெண்களின் மன உறுதி, ஆண்களை விடச் சற்று பலமானதுதான். ஆனால் வன்கொடுமை என வரும்போது பெண்ணின் மன உறுதி குலைக்கப்படுகிறது என்பது வாஸ்தவம்தானே..

    இந்த வாரம் வல்லமையில் ஒரு கதை படித்தேன். ‘நிமிர்ந்த நினைவு’ (http://www.vallamai.com/?p=39956) கதை இந்த வன்கொடுமையினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டமும்,  பலம் உடைய அவள் எப்படியெல்லாம் மனோரீதியாக உடல்நீதியாக பாதிக்கப்படுகிறாள் என்பதையும் விவரிப்பது.

    பெண்கள் ஆண்களோடு பிறந்தவர்கள். தாயாய், சகோதரியாய் பிறவியிலிருந்து ஆண்களோடு வாழ்பவர்கள். பின்னர் மகளாக வருபவள். இத்தனை உறவும் ஆண் ஒரு பெண்ணோடு இணைந்துதான் பெறுகிறான் என்றாலும் இந்த தாய் சகோதரி, மகள்,உறவுமுறைகள் அவனுக்கு நேர்மையாகப் புரியவேண்டும். சமுதாயம் சில நல்ல குறிக்கோள்களை ஆண்வர்க்கத்துக்கு அழுத்தமாகத் தெரியப்படுத்தவேண்டும். இதில் முக்கியமானது பெண்ணை வன்கொடுமைக்கு பலியாக்குவதை அடியோடு ஒழித்துத் தடுப்பதே.

    இந்த வகையில் திருமதி நிர்மலா ராகவன் எழுதிய நிமிர்ந்த நினைவு சிறுகதை என்பது, சமுதாயம் மூலமாக உலகுக்குத் தரும் நல்ல குறிக்கோளின் ஒரு பகுதியாகத்தான் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். பெண் மதிக்கப்படுவதை விட முதலில் அவளுக்கு இழைக்கப்படும் உடல்ரீதியான, மனரீதியான கொடுமைகளைத் தடுக்க முன் வரவேண்டும். இந்தக் கொடுமைகள் தடுக்கப்பட்டாலே பெண் தானாகவே மதிக்கப்படும் நிலை உருவாகிவிடும்.

    நல்லதொரு கதையை வழங்கிய திருமதி நிர்மலா ராகவனை இந்த வார வல்லமையாளராக விருது கொடுத்துக் கௌரவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசிபாரா: குறட்டையைப் பற்றி திரு. சம்பத் (’வளையம்’ பின்னூட்டம்)

    ஒரு முறை ஹவ்ரா மெயிலில் விசாகப்பட்டிணம் செல்லும் போது சக பயணி ஒருவர் பயங்கரமாகக் குறட்டை விட்டு அடியேனின் தூக்கத்தைக் கலைத்து விட்டார். அடுத்த நாள் காலையில் வண்டி விஜயவாடா சேர்ந்தது. இருவரும் காபியை சுவைத்தவாறு பேச ஆரம்பித்தோம்.

    மெள்ள நான் அவரது முன்னிரவு குறட்டையைப் பற்றி பிரஸ்தாபித்தேன். பொறுமையாக என் புகாரைக் கேட்டபின், “ஐயா, நீங்கள் சொல்கிறீர்கள், நான் சொல்லவில்லை. அதுதான் வித்தியாசம்” என்று ஒரு போடு போட்டார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    நமது பாரதம் வாத விவாதங்களுக்குப் பெயர் போனது. அந்தக் காலங்களில் செய்யப்பட்ட விவாதங்கள் அனைத்துமே நல்ல நெறிக்கே இறுதியில் அழைத்துச் சென்றன என்பதை சமயம் சம்பந்தப்பட்ட வரலாறு படித்தோருக்கு நிச்சயமாகப் புரியும். மாணிக்கவாசகரின் புத்தபிட்சுக்களுடனான வாதம் அப்படியே எழுத்து வடிவில் நமக்குக் கிடைத்துள்ளது. ஆதி சங்கரராகட்டும் ராமானுஜராகட்டும், விவாதங்களில் மிகப் பெரிய அளவில் பங்கு கொண்டிருந்தனர். பண்டிதர்கள், ஆழ்ந்த அறிவுடையவர்கள், வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது மட்டுமல்லாமல் வெற்றி பெற்றவரின் சீடர்களாகவும் ஆனது பற்றிய செய்தியும் அவர்களது வரலாற்றிலிருந்து தெரிய வரும்.

    இந்த விவாதங்கள் எல்லாமே ஒரு சில வரம்புகளுக்குக் கட்டுப்பட்டவை. ஆத்திகரானாலும் நாத்திகரானாலும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவராக இருந்தாலும் இந்த வரம்பு மீறாதநிலையில்தான் வாதப்பிரதிவாதம் செய்தனர் என்பதை பெரும்பாலான நிகழ்ச்சிகளில் அறிகின்றோம். இவை பற்றிய இன்று கிடைக்கும் செய்திகள் கூட இருபக்கங்களையும் நியாயமானவர்களாகவே வர்ணித்து எழுதியுள்ளார்கள் என்பதையும் இங்கே கவனிக்கவேண்டும். வாதத்துக்கும் விவாதத்துக்குமே இடம் உண்டே தவிர குதர்க்க வாதத்துக்கோ பிடிவாதத்துக்கோ அங்கு இடம் இல்லை. நவீன காலத்தில் பட்டி மன்றங்களாக இவை உருவெடுத்தன என்றாலும், பட்டி மன்றங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக மட்டுமே மாறிவிட்டதாகத்தான் இன்றைய நிலையில் அவைகளைக் கவனிக்கையில் இப்படி நினைக்க வேண்டியுள்ளது.

    ஒருகாலத்தில் நேருக்கு நேர் நின்று முகம் பார்த்துச் செய்யும் விவாதங்கள், இணையம் உலகத்தைச் சுருக்கிவிட்ட இன்றைய காலகட்டத்தில் முகமறியாத விதத்தில் விவாதங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இணையம் கொடுத்திருக்கிற வசதிகள் மூலம் படித்தவர்கள் பலர் பங்கு பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர். யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் இந்த இணைய விதத்தில் கலந்துகொள்ளும்போது பேசலாம் என்பத்யால் பல விவாதங்கள் குதர்க்க திசையில் போனாலும் நிறைய பயனுள்ள செய்திகள் அவைகள் மூலம் கிடைக்கின்றன (அதாவது நல்லவை தீயவை அறியப்படுகின்றன) என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அப்படிப்பார்க்கையில் இந்த விவாதங்களில் பங்கு பெறுகின்ற பண்டிதரான திரு தேவராஜ் அவர்கள் அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்கும் விவரங்களும் செய்திகளும் நமக்கு, நமது எண்ணங்களுக்கு விருந்தாக அமைகின்றன என்பதை நிச்சயம் சொல்லலாம்.

    சமீபத்தில் ஒரு விவாதம் – படிப்பதால் உண்மையான ராஜயோகம் கிட்டும் என்கிற விஷயம்தான். இந்த வாரம் இந்த விவாதத்தினைக் கூர்ந்து கவனித்ததில் திரு தேவ் அவர்கள் சொல்லும் செய்திகள் எல்லாமே அவரது அறிவின் முதிர்ச்சியையும், ஆழ்ந்த ஞானத்தையும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. இவரது பாண்டித்யம் பற்றிப் பல இடங்களில் பார்த்ததுண்டு.

    எங்கு சமூகத்துக்கென எதிர்மறையான விஷயங்கள் பேசப்படுகின்றதோ அது தவறு என்பதையும் நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் நம் சமூகத்தை சீர்திருத்த முயற்சி எடுத்தார்கள் என்பதையும் மிகத் தெளிவான ஆதார விவரங்களோடு எடுத்து வைப்பதில் திரு தேவ் அவர்களுக்கு நிகர் தேவ் மட்டுமே. சமூகம் அதுவும் கற்றவர் சமூகம் என்பது மிகவும் பண்பட்டதாக மாறவேண்டும் என்ற இவரது எண்ணம் இவரது எழுத்தில் வெளிப்படுவதாகத்தான் உணர்கின்றேன்.

    சமீபத்தில் இவர் சிந்தனை ஒன்று ஒரு விவாத களத்தில் வந்து விழுந்ததை கையில் எடுத்து அவர் மொழியில் உங்களுக்காக முன் வைக்கிறேன். படிப்பின் பயன்பாடு எப்படி இருக்கவேண்டும் என்பதை இங்கு உணர்த்துகிறார்.

    “இதே வழியில்தான் என் சிந்தனையும் சென்றது. Dev2

    நூற்கல்வி விவேக மலர்ச்சிக்கு உறுதுணையாக

    அமைதல் வேண்டும்; அந்த விவேகம் மலர்ச்சி பெற்று

    ஞானமாகப் பரிணமிக்கும். விவேகத்தை ஊக்குவிக்காத

    எவ்விதக் கல்வியும் ஆன்மிகப் புலத்துக்கு ஒவ்வாதது,

    அது பெரும்பாலும் செருக்குக்கே அடிகோலும் என்பதே

    நான் புரிந்து கொண்டிருப்பது. கல்வியும், செல்வமும்

    மேலும் மேலும் சேகரிப்பைத் தூண்டுவன. ”உத்தவரின்

    கல்வி உதவாமற் போனது”. ஒப்புக்கொள்வோர்

    ஒப்புக்கொள்ளட்டும்,”

    பல விஷயங்கள், பல மேற்கோள்கள் மூலமாக பல இடங்களில் இவர் மூலம் எனக்குக் கிடைக்கின்றன. இவர் தெளிந்த ஞானம் பலருக்கு செல்கிறது என்பதே ஒரு பெரும் பயன் தானே.. இந்த வாரம் வல்லமையாளராக திரு தேவ் அவர்களைத் தேர்ந்தெடுப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது? பண்டிதர் தேவ் அவர்கள் ஞானச் செல்வம் பற்பலருக்கும் இன்னும் நீண்டகாலம் மென்மேலும் சென்றடையவேண்டும் என்பது என் ஆசை. வல்லமையாளரான் திரு தேவ் அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் வல்லமைக் குழுவினர் சார்பிலும் என் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: திரு சத்திய மணி’யின் தீபாவளிப் பட்டாசு

    வெடி வெடி வெடியென இடபுறம்

    வெடியால் செவிடர்கள் வலபுறம்

    புகைந்திடும் சூழல் இடபுறம்

    இருமலில் இரைப்பவர் வலபுறம்

    கலகலச் சக்கரம் இடபுறம்

    கடனுக்கு கஞ்சி வலபுறம்

    இளைஞராய் குதிப்பவர் ஒருபுறம்

    இயலாமையில் சிலர் மறுபுறம்

    ந‌ரகாசுரர்க‌ள் எதிர் புற‌ம்

    நார‌ணண் ந‌ம்பி ந‌ம்புற‌ம்

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    வெ. திவாகர்

    ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை
    ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
    வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
    மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

    இது தமிழின் தோற்றத்தைப் பற்றிய பாரதியின் பாட்டு. மகாகவி சுப்பிரமணிய பாரதி முக்காலமும் உணர்ந்த ஒரு சித்தன் என்பதில் அடியேனுக்கு அழிக்கவொண்ணாத எண்ணம் உண்டு. அவன் சொல்படிதான் இப்போதும் தமிழ் எனும் மொழியை உணர்கிறேன். எதிர்காலத்திலும் இந்த எண்ணம் மாறாது. இந்த எண்ணத்துக்கு பாரதிக்கு முன்னமேயே இன்னொன்று ஒரு விதையை என் மூளைக்குள் போட்டுவிட்டது.

    சின்ன வயதில் அகத்தியர் என்றொரு படம் பார்த்தேன். அப்போது எனக்கு அது நல்லதொரு படமாகவும் சில நல்ல பாடங்களும் கற்றுத் தந்தது என்பதையும் நான் சொல்லித்தான் ஆகவேண்டும். அகத்தியரின் புராணக் கதையை விடுங்கள். அவர்தான் தமிழைச் செம்மைப்படுத்தியவர் என்பதை அப்படம், சில காட்சிகள் மூலம் நமக்கு உணர்த்தும். அப்போது அந்தப் படத்தில் அகத்தியருக்குத் தொல்காப்பியர் என்றொரு சீடர் இருந்ததாகவும் அவர் மூலம் தமிழில் இலக்கணம் வகுத்ததாகவும் கூறுவர்.

    இந்தத் தொல்காப்பியம் பற்றிப் பள்ளியில் சரிவரப் படிக்க முடியாத சூழ்நிலை. இதனால் பள்ளியில் தமிழ் சரியாக எனக்குக் கற்பிக்கப்படவில்லை என்று நான் சொல்ல முடியாவிட்டாலும் அந்தக் காலக் கட்டத்தில் தமிழ் இலக்கணம் சரியாக எனக்கு ஏறவில்லை என்று சொல்லலாம். தொல்காப்பியம் மட்டுமல்ல, சங்கப் பாடல்கள், காப்பியங்கள் இவை எல்லாமே காலத்தின் போக்கில் கற்றுக் கொண்டவை. இதை ஏன் சொல்கின்றேன் என்றால் இந்தக் காலத்தில் தமிழ்ப் பள்ளியளவில் கூட கற்றுத் தரமுடியாத சூழ்நிலையில் நம் மொழி இருக்க, அந்த மொழியைச் சான்றோர்கள் மூலம் எப்படிக் கற்றுத் தெளிவது என மாபெரும் கேள்வி நம் முன் எழுவது கூட இயற்கைதான். இதனால் மொழியளவில் நம் பிள்ளைகள் வாழ்க்கை போகிற போக்கிலேயே சந்தர்ப்பம் நேரிடும்போதெல்லாம் அதைப் பயன்படுத்திக் கற்றுத் தெளிய வேண்டிய கட்டாய நிலை உள்ளது. ஆனால் இவர்களுக்கு நல்லாசிரியர் வேண்டும், விவரமான தெளிவான தமிழில் அதே சமயம் எளிமையாகக் கற்றுத் தர முடிகின்ற தமிழாசிரியர்கள் வேண்டும். பள்ளி – கல்லூரி நிலை வேறு, பள்ளி நிலையைத் தாண்டிய வாழ்க்கை நிலை வேறல்லவா?

    இது போன்ற சமயங்களில்தான் பேராசிரியர் பாண்டியராஜன் போன்றோரின் உதவி கிடைக்கின்றது என்பது மிக மகிழ்ச்சியான செய்தியாகும். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணிபுரிந்தவர், தற்சமயம் எளிய விதத்தில் சங்கத் தமிழுக்கும் தொல்காப்பியத்துக்கும் விரிவுரையாகத் தந்து உதவி வருகிறார். இரண்டு நாட்கள் முன்பு தொல்காப்பியத்துக்கான விரிவுரையைத் தந்துள்ளார். படித்துப் பயனுற வேண்டியதாகும். https://www.dropbox.com/s/ve5q488dy5yaizx/THOLCON-1B.doc இதோ ஒரு சின்ன தொல்காப்பிய விளக்கம் – உங்களுக்காக அவர் தொகுப்பிலிருந்து யூனிகோட்’இல் மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

    வழக்காறு-1
    ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடித்து அந்த அடி இடம்பெறும் அதிகாரம் (எழுத். (எழுத்து), சொல், பொருள்) கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அதிகாரத்தில் அச் சொல் இடம்பெறும் இயலின் சுருக்கப்பெயர் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த இயலில் அச் சொல் இடம்பெறும் நூற்பா எண் கொடுக்கப்படும்.

    வழக்காறு-2
    ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு நூற்பாவின் இறுதி அடியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.
    எ.காட்டு
    எச்சத்து (3)
    சாவ என்னும் செய என் எச்சத்து – எழுத். உயி.மயங்:7/1
    இறுதி வகரம் கெடுதலும் உரித்தே – எழுத் 7/2
    செய்து என் எச்சத்து இறந்த காலம் – சொல். வினை:42/1
    பிரிவின் எச்சத்து புலம்பிய இருவரை – பொருள். கற்:5/37
    எச்சத்து என்ற சொல் அடி இறுதியில் வந்துள்ளதால், அடுத்த அடியும் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண்க.
    கிழவோள் செப்பல் கிளவது என்ப – பொருள். கற்:6/43
    இதில் ‘என்ப’ எனும் சொல் அடியின் இறுதிச் சொல்லாயினும், அது அந்த நூற்பாவின் இறுதி அடியாக இருப்பதால் அடுத்த அடி கொடுக்கப்படவில்லை.

    இலக்கணம் படிப்பது என்பது (என்னைப் போல உள்ள) சாதாரணமானவர்களுக்குக் கஷ்டம்தான். ஆனால் சரியான வகையில் சொல்லிக் கொடுக்கும் படிப்பு கிடைப்பது அரிது. அப்படி கிடைக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்வோம். பேராசிரியர் பாண்டியராஜா அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து மகிழ்கிறோம். அவருடைய தமிழ்ச் சேவைகளுக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    கடைசி பாரா: ஶ்ரீரங்கம் மோகனரங்கனின் தீபாவளி ‘சரவெடி’

    என்ன தேடுகிறாய்?
    பட்டாசுப் பொட்டலமா? பைத்தியமே!
    புத்தகத்தைத் தேடிப் படி.
    படித்ததை நட்புடனே சொல்.
    ஆகாத அஞ்ஞான கொல்லிருளுக்கே
    அது ஒன்றே அணுகுண்டாகும்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    திருவேங்கடவனை சிலப்பதிகாரம் சங்கு சக்கரதாரியாகவும் மேலே வானமே கூரையாகவும், அந்த திறந்த வான் வெளியில் இரண்டு பக்கத்திலும் சூரியனும் சந்திரனும் தரிசனம் செய்து கொண்டிருக்க, தன்னந்தனியாளாக வேங்கடமலையில் நின்ற நெடுமாலாக வர்ணிக்கிறது. ஐந்தாம்/ஆறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாக சொல்லப்பட்ட முதல் மூன்று ஆழ்வார்கள் திருவேங்கடவனை சிவகேசவனாக தரிசித்துப் பாடி மகிழ்ந்தார்கள். பின்பு வந்த குலசேகர ஆழ்வாரும், நம்மாழ்வாரும், திருமங்கை மன்னனும், திருவேங்கடவனை திருமாலாக பாவித்து பாடல் அருளினார்கள். தமிழ்த்தாயின் தவச் செல்வி ஆண்டாளோ சாட்சாத கண்ணனாக, தன் மணாளனாக திருவேங்கடவனை தரிசித்து, அவனிடம் தன் காதலை எடுத்துச் சொல்லுமாறு மேகசந்தேசம் அனுப்பி வைத்தாள். அடுத்து வந்த அருணகிரியாரோ மாமன் மருகனான முருகனே எம் திருவேங்கடவன் என இரண்டு முத்தான தமிழ்பாடலால் புகழ்ந்தருளினார். தேவி பக்தர்களுக்கு அவன் ’அவளாய்’ மாறியதில் ஆச்சரியமே இல்லைதான். புத்தபிரானின் சீடர்களுக்கு எட்டடி உயர புத்தபிரானாய் காட்சி அளித்ததில் கூட வியப்பு இல்லைதான்.

    ’எவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்’ எனும் நம்மாழ்வார் வார்த்தைகள் பொய்த்துப் போகக்கூடாதே என்று அந்த சத்திய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு யார் மனதில் எப்படி தான் இருக்கவேண்டும் என நினைக்கிறார்களோ அப்படியே தன் உருவத்தை அவர்களுக்கு காண்பித்துக் கொண்டிருக்கும் மாயன் அவன் என்கிற உண்மை அறிந்தோர்களுக்கு அவன் என்றும் திருவேங்கடமுடையான். இன்னும் சொல்லப் போனால்.படித்த அறிஞர்களுக்குதான் இந்த வேற்றுமையே தவிர பாமரரான பக்தர்களுக்கு அவன் என்றென்றும் திருவேங்கடத்தான் மட்டுமே.

    இதை மனதில் வைத்துதான் என்னுடைய ‘திருமலைத் திருடன்’ புதினத்தில் நாயகிகளில் ஒருத்தியை சைவப்பித்தாக வர்ணித்து அவள் திருவேங்கடவனை சிவனாகப் பாவித்து தரிசனம் செய்ததாகச் சொல்லியிருந்தேன். திருவேங்கடவன் ஒவ்வொருவருக்கும் பிரத்யட்ச தெய்வம். உண்மையில் அவனுக்கு மதமோ பிரிவினையோ ஒத்து வராது என்பதும், இவன் நம்மவன் என்ற உரிமையும் அவனைத் தரிசித்த அத்தனை பேரின் மனசாட்சியும் சொல்லத்தான் செய்யும்.

    இது இப்படி இருக்க, இப்பேர்பட்ட இஷ்ட தெய்வமான இந்த திருவேங்கடவனுக்கு தமிழில் திவ்வியப்பிரபந்தம் தவிர்த்து அதிகம் பாடல்கள் இல்லையே என்று வருத்தப்பட்டதுண்டு. திவ்விய கவி என்பார் அழகான பாடல்கள் சில நூறு தீந்தமிழில் பாடியுள்ளார் என்பது ஒரு ஆறுதலான விஷயம். இதுகூட ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு என்பது குறிப்பிடத்தக்கது. அதே காலத்தில் அன்னமய்யா தெலுங்கில் பாடிய எத்தனையோ ஆயிரம் பாடல்களில் சில ஆயிரம் பாடல்கள் கிடைத்துள்ளது. ஆனாலும் தமிழ் என்றும் இனிமையான மொழியாயிற்றே.. செந்தமிழில் இறைவனைப் பாடும்போது அவன் அதிகம் மகிழ்வதாக எனக்கு ஏதோ ஒரு மயக்கமான நம்பிக்கை எப்போதும் உண்டு. (இந்த மயக்கம் தெளியக்கூடாது என்று அஞ்சுபவன் கூட.)

    photoஅந்த நம்பிக்கையின் உருவகமாக காப்பியக் கலைஞர் மீனவன் அவர்கள் திருவேங்கடத்தான் அந்தாதி பாடல்களை பதிவு செய்து வருவது என் மனதுக்கு ஒரு நிறைவைக் கொடுத்தது என்றே சொல்வேன். இந்த வாரத்தில் அவர் பதிப்பித்த சில பாடல்கள் திருமலைத் தேன் போல இனித்தது. ஒரு சில தேன் துளிகைளை நீங்கள் பருக, படிக்கக் கீழே காணலாம்.

    தலைஆ யிரம்கொண்டான் தன்மேல் துயிலும்
    நிலையான் தனையே நினையாய் – மலையப்பன்
    காலைப் பணிந்தால் கர்மம் தொலைந்தங்கே
    ஆலாய்ப் பரவும் அருள்.

    அருளாளன் மாமலையான் ஆயிரமாம் சென்னிக்(கு)
    உரியவன் தன்மேல் உறஙகும் – பெருமான்
    பரந்தாமன் காலைப் பிடித்தார்தம் வாழ்வு
    நிரந்தரமாய் வாழும் நிலைத்து.

    நிலையாய்த் திருப்பதியான் நெஞ்சிற்குள் நின்ற
    சிலையாளன் சீதரன் செல்வப் – பொலிவாளன்
    மங்கை அலர்மேலு மார்பிருக்கத் தான்மகிழ்வான்
    எங்குமிருப் பானென்(று) இயம்பு.

    இயம்புதமிழ்ப் பாசுரங்கள் எல்லாம் அறிந்தே
    வயங்குதிரு மாலவனை வாழ்த்தி – மயலகற்றும்
    ஏழு மலையானை எங்கள் பெருமானை
    வாழியவே என்றுநீ வாழ்த்து.

    இதே போல திருச்சானூரில் குடியிருக்கும் இதய தெய்வம் அலர்மேல் மங்கையின் மீதும் இவர் அந்தாதி பாடியுள்ளார். திருவேங்கடத்தானின் புகழ் பரப்பும் காப்பியக் கவிஞர் மீனவன் அவர்களை இந்த வார வல்லமையாளராக கௌரவம் செய்வதில் பெருமை கொள்கிறோம். வாழ்க அவர் தமிழ்த் தொண்டு. திருவேங்கடத்தானின் அருள் கவிஞருக்கு பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுதல்கள்.

    கடைசி பாரா: ‘தமிழ்த்தேனி’ யின் ‘மனக்குரங்கு’ கதையிலிருந்து:

    எப்பவுமே எந்த ஒரு பொருளையும் எவ்வளவு ப்ரச்சனை இருந்தாலும் எவ்ளோ ஓய்ந்து போயிருந்தாலும் இரவு எவ்வளவு நேரமானாலும் அது அதுக்குரிய இடத்திலே வைக்கணும் னு எல்லாருக்கும் உபதேசம் செய்வார் சபேசன், அவரும் அப்படியே வைப்பார்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    ‘பாரதநாடு பழம்பெரும் நாடு, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்’ என்று பாரதி எழுதியது எதற்காக என்று நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

    பாரதநாட்டை சுமார் இருநூறு வருடம் சுல்தான்கள், இருநூறு வருடம் மொகலாயர்கள், பின்னர் வந்த ஐரோப்பியர், பிரிட்டிஷ்காரர்கள் முன்னூறு வருடங்கள் ஆண்டனர். ஔரங்கசீப் காலத்தில் முக்கால்வாசி பாரதம் மொகலாயர் கைக்குப் போனது என்றால் இங்கிலீஷ்காரர்கள் கையில் அகண்டபாரதம் முழுவதுமே சென்றுவிட்டது. ஆட்சியாளர் அனைவருமே பாரத பண்பாட்டை முற்றிலும் நிராகரித்தவர் (ஒரு அக்பர் தவிர) என்று கூடச் சொல்லலாம். இத்தனை பரதேசத்தவர் ஆண்டாலும் உள்ளூற நிரவிக்கிடந்த பாரதத்தின் ஆன்மீக நம்பிக்கையையோ பண்பாட்டு விதானங்களையோ இவர்களால் மாற்றமுடியவில்லைதான்.

    பாரத ஆன்மீகப் பண்பாடு, கலாசாரங்கள் இவையாவும் தர்மத்தின் அடிப்படையில் ஏற்பட்டவை. ஆரம்பத்திலிருந்தே அதர்மத்தைக் கண்டு அஞ்சுபவர்களாக நம் முன்னோர்களை சித்தரித்திருந்தார்கள். அதர்மம் துளிர்த்து வன்முறையாட்டம் ஆடும்போதெல்லாம் தெய்வம் தோன்றி அந்த அதர்மத்தை அழித்தது என்பதை பரிபூர்ணமாக நம்புபவர்கள். அப்படி அதர்மத்தை அழிக்கும் தெய்வங்களுக்கு நன்றி பாராட்டி விழா எடுத்து மகிழ்பவர்கள். வேலனுக்கும் துர்க்கைக்கும் திருமாலுக்கும் கண்ணனுக்கும் ராமனுக்கும் என்றில்லாமல் தம் ஊர்மக்கள் நன்மைக்காக உயிர்த்தியாகம் செய்து தெய்வமாகிவிட்டவர்களுக்கும் அவர்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் விழா கொண்டாடி வருபவர்கள். இதை நம் பாரதம் முழுமைக்கும் வெவ்வேறு விதமாக காணலாம்.

    ஆனாலும் அங்கே குறிக்கோள் ஒன்றே.. ‘தர்மம் வெல்லவேண்டும் – அதர்மம் அழியவேண்டும், ஊர் செழிக்கவேண்டும், நல்லதோர் சமுதாயம் உருவாகவேண்டும்.. இதுதான் குறிக்கோள். இந்த குறிக்கோள் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் விதமாக அமையவேண்டும் என்பதற்காக அதற்கான புராணக் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. அக்கருத்துகள் பொதுவாக மெய்ஞ்ஞானமாகவே இருந்தாலும் அது விஞ்ஞானத்தோடு பொருந்தும் வகையிலும் இருந்தது. இந்த புராணக்கருத்துகள் நாளடைவில் பாமரருக்கு எளிதாகப் புரியவைக்கும்படியாக புராணக்கதைகளாக மாறின. இக் கதைகளை மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஊர் மக்கள் ஒற்றுமையாக இருந்து எல்லோரும் சேர்ந்து பண்டிகையாகக் கொண்டாடினர். அப்படிப்பட்ட ஒரு பண்டிகையைப் பற்றிய பதிவு ஒன்றினைப் பற்றியதுதான் இந்த வார வல்லமையாளர் எழுதியது.

    http://aalosanai.blogspot.in/search?updated-min=2013-01-01T00:00:00%2B05:30&updated-max=2014-01-01T00:00:00%2B05:30&max-results=40

    சரதபௌர்ணிமை என அழைக்கப்படும் ஐப்பசி மாத முழுநிலவு நாளன்று கொண்டாடப்படும் கஜகிரி லக்ஷ்மி பூஜையைப் பற்றிய பதிவாகும். இந்த பூஜைக்கான ஆதி காரணங்கள், விஞ்ஞானத்துடன் சம்பந்தப்பட்டதாக எப்படி அமைகிறது, பாரதத்தின் எந்தந்தப் பகுதியில் கொண்டாடப்படுகிறது, விரதம், அதன் பலன்கள் போன்றவைகளை விவரமாகக் கொடுத்துள்ளார் பதிவர் திருமதி பார்வதி ராமச்சந்திரன்.

    நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் உருவான இவை போன்ற விரதகால பூஜைகள் பண்டைய காலத்திலிருந்தே மக்கள் அனுசரித்து வந்திருக்கின்றனர் என்பதனை விவரமாக தெரிவித்திருக்கிறார்.

    புராணக் கதை எதுவானால் என்ன, அதனால் தீங்கு நெருங்காத அளவுக்கும் மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவும், அவர்களின் மன வளமும், செல்வ வளமும் பெருகும் விதமாகவும் அமைந்தால் சமுதாயம் வளரும் இல்லையா.. வளரும் சமுதாயம் நல்ல சமுதாயமாகவும் தர்மம் குன்றாத சமுதாயமாகவும் இருந்துவிட்டால் உலகில் ஏது பிரச்னை.. இப்படியெல்லாம் நம் மனதில் கேள்வி எழும்பும் அளவுக்கு சிந்தனைகள் உருவாக்கிய திருமதி பார்வதி ராமச்சந்திரனை இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு நம் பிரத்தியேக வாழ்த்துகள்.

    கடைசி பாரா: கவியரசைப் பற்றிய சக்திதாசன் கவிதை

    பூஜ்ஜியத்துக்குள் ஒரு ராஜ்ஜியத்​தை

    பூட்டி ​வைத்த பரம் ​பொருளின்

    தத்துவத்​தை எளி​மையாக்கி எமக்க​தை

    தீந்தமிழ்ப் பாடலாக்கிய கவி​வேந்த​னே!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    நவராத்திரி முடிந்து விஜயதசமியாக மலரும் இந்தப் பொன்னாளில் இந்த வார வல்லமையாளராக வலம் வரப்போவது ராஜராஜேஸ்வரி அவர்கள்.

    ஆசிரியர் பவளசங்கரி அவர்கள் அனுப்பிய இந்த சுட்டியை http://jaghamani.blogspot.com/ பார்த்து அகமகிழ்ந்து போனதால் உடனடியாக வந்த விளைவுதான் அவருக்கு இந்த வல்லமையாளர் விருது.

    படங்கள் கதை பேசவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கருத்துக்களைக் குறைத்து ஏராளமான படங்கள் மூலம் எளிய தகவல்கள் வழங்கி வரும் இவரது வலைப்பூ ஒரு படப்பெட்டகம்.

    பெண்மையின் சக்தியைப் போற்றிப் புகழும் நாட்கள் நவராத்திரி நாட்கள். பெண்மையை தெய்வீகமாக்கும் நாட்கள் கூட இவைதான். பெண்மையை மதிப்போர்க்கு அவர் பெண்ணானாலும் ஆணானாலும் பெண்களால் தீங்கு நேரிடவே முடியாது.

    தேவி மஹாத்யத்தில் மகாசக்தியானவள் தன் அத்தனை பெண் சமூகத்தையும் (துணைச் சக்திகள்) தன்னுள் அடக்கிக் கொண்டு மது-கைடபன், மகிஷாசுரன், கம்பன் முதலான அசுரரகளை வதைத்ததாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக பெண்ணுக்குப் பெண் அவ்வளவு எளிதாக உடன்படமாட்டாள் என்று உலக வழக்கு சொல்லும். ஆனால் பெண்கள் மட்டும் மகாசக்தியைப் போல ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டால் உலகத்தில் உள்ள அத்தனை அசுரசக்திகளையும் அவர்களால் ஒழித்துக்கட்டி நல்லதொரு வாழ்வாங்கு உலகை மக்கள் சமுதாயம் வாழ்வதற்காக உருவாக்கம் செய்ய முடியும். இதுதான் நவராத்திரி எனும் அற்புதப் பண்டிகையின் மூலக் கரு கூட. இதையேதான் ராஜராஜேஸ்வரியும் தன் வலைப்பூவொன்றில் எழுதியிருப்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    ”நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனிச்சக்தியாக விளங்கும் ஜகன்மாதா பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி ‘சிவசக்தியாக, ஐக்கிய ரூபிணியாக, அர்த்தநாரீசுவரராக” மாறுகிறாள்.http://jaghamani.blogspot.com/2013/10/blog-post_11.html#links

    நீண்ட சிந்தனையுடன் நினைத்துப் பார்த்தால் இதுதான் நிதர்சனம் என்று தோன்றுகிறது. இத்தகு வலைப்பூக்களை தொடர்ந்து கொடுத்து வரும் இராஜ ராஜேஸ்வரி  அவர்களை இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: கவிதாயினி மதுமிதா:

    சிறுவயதில் சொல்லப்பட்ட கதைகள், வாசித்த கதைகள் இவையெல்லாம் ஒரு குழந்தையின் எதிர்கால வாழ்க்கையில் உளவியல் ரீதியாக செயல்பட்டு அதன் விளைவு குழந்தையினிடத்தில் பல்வேறுபட்ட ஆளுமையை வளர்க்க பலவழிகளில் உதவுபவையாக அமையும்.

    மிக முக்கிய உதாரணமாக, அரிச்சந்திரனின் கதையினை முழுமையாக விரும்பி உள்வாங்கிக் கொண்டதாலேயே காந்தி வாழ்நாள் முழுக்க உண்மையே கடவுள் என்று உணர்ந்து இந்திய விடுதலைக்கு தனது வாழ்நாள் பங்கினை அளித்து மகாத்மாவாக உயர்ந்து உலகம் முழுக்க நூற்றாண்டு மனிதராகப் போற்றப்படுகிறார்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    வண்ண வண்ணப்பூவினில் காயை வைத்தவன்
    சிப்பி ஒன்றின் நடுவிலே முத்தை வைத்தவன்
    சின்னச் சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தவன்
    நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தவன்

    இது கண்ணதாசன் கடவுளைப் பற்றி எழுதும் பாடல். கண்ணதாசன் என்றில்லை எந்தக் கவிஞர்களுமே சின்னஞ்சிறிய விஷயத்தைப் பற்றி ஆராய்ந்து எழுதும்போதும் அங்கு கடவுளைக் காண்பதும் அந்தக் கடவுளை நினைத்து எழுதும்போதெல்லாம் அவன் இருப்பையும் செய்கையையும் அப்படியே ரசிக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ‘பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்தவன் அவன்’ என்று ஒரு கவிஞர் பாடுகிறார் என்றால் இன்னொருவர் ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்கிறார். பார்வை சற்று வித்தியாசப்படுகிறது பார்க்கும் காரணம் என்றென்றும் ஒரே விதமாக இருக்கிறது.

    இதோ இந்த வார வல்லமையில் இப்படிப்பட்ட ஒரு பாடலில் ‘உழைப்பாளியின் வியர்வை உலர்த்தும் காற்றில் தெய்வம்’ காண்பதாக எழுதியிருக்கிறார். வியர்வை விட்டு உழைக்கும்போது உடல் ஓயத்தான் செய்யும் அப்போது தென்றல் காற்றாய் அந்த உழைப்பாளியின் மீது வீசி அவனுக்கு உடலுக்கும் மனதுக்கும் இதத்தைக் கொடுக்கும் சுகமான காற்றுக்கு ஈடு இணை கிடையாதுதான்.. இதோ அந்த கவிதை..

    உழைப்பாளியின் வியர்வை உலர்த்தும் ,photo

    காற்றில் தெய்வம் உண்டென்பேன் ,

    உயிர் வழ நீர் சுரக்கும் ,கரும் முகிலில் தெய்வம் கண்டேன்

    இருள் கிழித்து ஒளி வீசும் கதிரவனை தெய்வம் என்றே

    கைகூப்பி

    வணங்கிடுவேன் ,

    நெற்கதிரை வளரச் செய்த நல் பூமிதனில் தெய்வம் கண்டேன் ,,

    பனி படர்ந்த சோலையில் ,சுவையான கனி தந்து பசிதீர்த்த,

    இயற்கை வளத்தில் இறைவன் கண்டேன் ,அழுகின்ற

    மழலைக்கு பாலூட்டும் ,தாயவளின் பாசத்தில் உணர்ந்தேன்

    தெய்வத்தை,,

    பொருள் இல்லா ஏழைகளுக்கு பொருள் தந்து உதவுகின்ற அன்பு

    கரங்களில் தெய்வம் கண்டேன்

    தனக்கென்று வாழாத பிறருக்காக வாழுகின்ற ,

    களங்கம் இல்லாத ,உள்ளம் அதை தெய்வம் வாழுகின்ற

    ஆலயம் என்றே ,வணங்கிடுவேன் ,,, ( http://www.vallamai.com/?p=39088)

    இந்த கவிதையை எழுதியவர் தீனா வேணு.. மிகவும் ரசித்து எழுதியதோடு மட்டுமல்லாமல் சின்னஞ்சிறு விஷயத்திலும் கடவுளைக் காணும் அந்த கவிதை மனது நமக்கு ஆனந்தத்தினைத் தருகிறது. தீனா வேணு அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ வின் கட்டுரை:

    சைவ சமயமும் அறிவியலும் இரு பெருங் கடல்கள். இவற்றுள் மூழ்கி முத்தெடுப்பது எளிதன்று. நம் ஆய்வைக் குறுகிய வட்டத்துக்குள் கொண்டுவந்தால் ஒழிய இது சாத்தியம் ஆகாது. எனவே நம் ஆய்வுப் பொருளாக அண்டம், பிண்டம் என்ற இரு பிரிவுகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். அண்டத்துள் பிண்டம் அடங்கும் ; பிண்டத்துள் அண்டம் அடங்கும். இதனை, சட்டமுனிஞானம் என்னும் சித்தர்

    “அண்டத்தி லுள்ளதே பிண்டம்
    பிண்டத்தி லுள்ளதே அண்டம்
    அண்டமும் பிண்டமும் ஒன்றே
    அறிந்துதான் பார்க்கும் போதே” என்பார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    இந்த வார செய்தி முழுவதும் விக்கிபீடியா – தமிழ் பற்றியதுதான். பயனுள்ள கட்டற்ற கலைக் களஞ்சியமாக வளர்ந்து வரும் தமிழ் விக்கிப்பீடியா, பலருக்கும் அடிப்படை அறிவை ஊட்டுகின்ற பணியைச் சிறப்பாகச் செய்து வருகின்றது.

    இருந்தாலும் இன்று நம் தாய்மொழியாம் தங்கத் தமிழில் ஏறத்தாழ 55000 கட்டுரைகள் படைக்கப்பட்டுள்ளன என்பதும் சுமார் 900 படைப்பாளிகள் இதற்கு பங்களிக்கிறார்கள் என்பதும் நாம் பெருமைப்படவேண்டிய விஷயம்தான். ஆங்கிலத்துக்கு நிகராக நம் தமிழைக் கொண்டு செல்ல நாம் அதிகம் உழைக்கவேண்டும் என்ற உண்மையை உணர்ந்தாலும் அந்தப் பயணத்திலே நாம் முன்னேறி வருகிறோம் என்ற விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    இப்படி நினைக்கையில்தான் சமீபத்தில் ஹிந்து நாளிதழில் தமிழ் விக்கிபீடியாவில் பத்தாம் ஆண்டு நிகழ்வைப் பற்றிய ஒரு செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தியில்
    http://www.thehindu.com/sci-tech/technology/internet/tamil-wikipedia-to-celebrate-10-years/article5176688.ece?homepage=true

    செங்கை பொதுவன்

    ஒரு இடத்தில் 77 வயது செங்கை பொதுவன் என்பார் 2580 கட்டுரைகள் விக்கி தமிழில் எழுதியிருப்பதாகவும் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் தமிழ் விக்கியில் இடம்பெற முயற்சிப்பதாகவும் செய்தி வந்துள்ளது. இந்த 77 வயது செங்கை பொதுவன் அவர்களது தமிழ்ச் சேவை பாராட்டுக்குரியது.. அவர் முயற்சி மென்மேலும் பெருகவேண்டும் என்பது எம் அவா. இந்த முகமறியா விக்கி முகவர்தான் இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: திரு சு. ரவியின் கைவண்ணத்து ஓவியமும் பாடலும்:

    தங்கச் சூரியன் தகதக வென்றுSwamiji 30 july09 2
    கீழை வானில் கிளர்ந்து எழுந்தது!
    வேத மதத்தை மூடியிருந்த
    தூசினை எல்லாம் துலக்கி அழித்து
    இந்த மதத்துக் கீடிலை என்றது.

    சோம்பிக் கிடந்த இந்திய இளைஞரைத்
    தட்டி எழுப்பித் தன்னிலை உணர்த்தி
    “எழுமின், விழிமின், இலக்கினை முயன்று
    தொடுமின்” என்று தோள்தட்டிச் சொன்னது!

    படம் உதவி: விக்கிமீடியா – https://ta.wikipedia.org/s/weg

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    சமூக அக்கறை என்பது நம் மக்களிடம் மிகவும் குறைந்து போய்விட்டது என்பது கவலையான செய்திதான்.. நாம் வாழும் இக்காலம்தான் இப்படியா.. அல்லது வருங்காலம் இன்னமும் மோசமாக இருக்குமா என்பது இன்னமும் கவலையாக உள்ளது.

    ஆந்திராவில் கடந்த பத்து வருடங்களாக நான் கவனித்து வரும் விஷயம் இந்த ஆரம்ப நிலைக் கல்விக்கூடங்கள் எப்படியெல்லாம் குழந்தைகளைக் கஷ்டத்தில் உள்ளாக்குகின்றன என்பதைத்தான். காலை 8 மணிக்கு ஆரம்பிக்கும் கல்வி அந்தக் குழந்தையை இரவு 8 மணி வரை அங்கேயே உட்கார வைத்து பாடங்களை மனப்பாடம் செய்ய வைக்கிறார்கள் (லீவு நாட்கள் கூட). இது ஒரு விதத்தில் அந்தப் பிள்ளைக்கு பாடத்திலே மட்டும் கவனம் செய்ய உதவுகிறது என்றாலும் அந்தக் குழந்தைக்கு வெளி உலக அனுபவம் இல்லாமலே செய்கின்றன என்ற மாபெரும் உண்மையை பெற்றவர்களும் மறந்துவிடுகிறார்கள்.

    gurujiஇன்றைக்கு ஐ.ஐ.டி போன்ற வெகு கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஆந்திர மாணவர்கள்தான் அதிகம் தேர்ச்சி பெற்று தகுதி பெறுகிறார்கள் என்பதற்கு இந்த கடினமான படிப்பு முறை ஒன்றே முறையானது என்று கல்வி கற்பிப்பவர்கள் இங்கே அறைகூவலிட்டு பெற்றோர்களையும் ‘கன்வின்ஸ்’ செய்து விடுகிறார்கள். ஐ.ஐ.டி யில் படிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இளமையில் வாழ்க்கையின் பல சுவையான கட்டங்களை இழந்த மாணவனுக்கு எதிர்காலம் என்பது எப்படிப்பட்ட சுவையான வாழ்வைக் காண்பிக்கும்? எப்படி அவன் வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ளப் போகிறான். ஐ ஐ டி படிப்பு ஒன்றே அவன் வாழ்வில் எல்லா நிறைவுகளையும் கொடுத்து விடுமா? கேள்விக்கு யார் விடை சொல்வது என்று புரியவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் வல்லமையில் ஒரு அழகான கட்டுரை ஒன்று வந்துள்ளது!! இக் கட்டுரையை எழுதியவர் திரு. குரு பிரசாத்.

    ஆறரை மணி பஸ்ஸை பிடிக்க ஒவ்வொரு குழந்தையும் காலை நாலரை மணிக்கு எழுந்து டாய்லெட் போயி, குளித்து ஏதோ ஒன்றை வயிற்றில் அந்த விடியற்காலையில் அடைத்து, யூனிபார்ம், ஷூ, சாக்ஸ் என்று அடித்து பிடித்து பஸ்ஸை பிடிக்கிறது. ஒவ்வொரு குழந்தையாக ஏற்றி அந்த பஸ் எட்டரை மணிக்கு பள்ளி சேர்கிறது. ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் பணி மூன்றரை நாலு மணிக்கு முடிகிறது. அதன்பின் மீண்டும் ஒரு மணிநேர பேருந்து பயணம். ஆறு மணிக்கு அந்த குழந்தை மீண்டு ஹோம்-ஒர்க், ப்ராஜெக்ட் ஒர்க், அசைன்மென்ட் ஒர்க் என்று எல்லா வேலைகளையும் முடிக்கும்போதே மணி நிச்சயம் பத்தை நெருங்கும். தூக்கம் சொக்கும். எப்போது படிக்கும்? இதில் சனிக்கிழமை வேறு பாதி நாள் பள்ளிக்கூடம் சிலர் முழு நாள் வேறு!

    ஸ்ட்ரெஸ், ஹைபர்டென்ஷன், ப்ரெஷர் எல்லாம் ஏதோ ஐ.டி. ஃபீல்ட் சமாச்சாரம் என்று நினைத்திருப்பவர்களே. அதெல்லாம் இப்போ​தே எத்தனை மடங்கு அனுபவிக்கிறார்கள் இந்த குழந்தைகள் என்று தெரியுமா?

    எவ்வளவுக்கு எவ்வளவு இத்தனை அதிக சுமை/துக்கம்/டார்ச்சர் எல்லாம் இருக்கிற​தோ அந்த அளவு சிறப்பான பள்ளி/உயர்ந்த பள்ளி என பெற்றோர்கள் நினைப்பது தான் இந்த குழந்தைகளை மேலும் வதைக்க உதவுகிறது.

    நாமக்கல் புகழ் ப்ராய்லர் கோழி மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களை முன்மாதிரியாக வைத்து தமிழகம் முழுவதும் வளர்கின்ற மாணவர்கள் வெறும் மதிப்பெண் சார்ந்த கல்வியை பெற்று மனப்பாடம் செய்து வாங்கும் மார்க் மூலம் கவுன்ஸ்லிங்கிலோ அல்லது தந்தை தரும் காசிலோ பொறியியல் (பி.ஈ) சேர்ந்த பின் தான், தான் எவ்வளவு பின்தங்கி உள்ளோம் என்பதையே உணர்கிறான். ஆனால் அப்போதும் இதை அவன் தந்தை உணர்வதில்லை. மீண்டும் அதே பாணி படிப்பில் (வேறு வழி…பாதி புரியாதபோது!…) எப்படியோ டிகிரி முடித்து கரூர் வைசியா பேங்க், ஆக்சிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் என வங்கி குமாஸ்தாவாகிறான்.

    கணக்குப் பிள்ளையாகவா தன் இளமையை தொலைத்து கனவை விற்று இத்தனை சித்ரவதை, வசை எல்லாம் அனுபவிக்கணும்?

    ஒரு காலத்தில் “ப்ரஃபஷனல்” கோர்ஸில் சேர்வது பெருமை. ஏனென்றால் அவர்கள் வேலைக்குத்தான் போக வேண்டும் என்ற கட்டாயமில்லை. தனியாக ஆலோசனை (கன்சல்டிங்) வழங்கும் விதம் சம்பாதிக்கலாம். டாக்டர், வக்கீல், ஆடிட்டர் மற்றும் எஞ்சினியர்.

    இப்போது எஞ்சினியர் பெரும்பாலும் ஏதாவது ஒரு வேலைக்கு போவதால் பி.ஈ படிப்பு “ப்ரஃபஷனல் கோர்ஸ்” என்னும் தகுதியை இழந்துவிட்டது.

    சயின்டிஸ்ட் சிதம்பரம், சிவதாணுப்பிள்ளை, அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை எல்லாம் கிராம பள்ளிகளில் தரையில் அமர்ந்து படித்த சாதாரணக் கல்வியில் அதுவும் தமிழ் மீடியத்தில் படித்து அணுவிஞ்ஞானி ஆனார்கள். ஆனால் இன்றைய இந்த போந்தாகோழி படிப்பில் எத்தனை சயின்டிஸ்ட் உருவாகி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

    சுற்றித் திரியும் பட்டாம்பூச்சிகள், துள்ளித் திரியும் பள்ளி பருவங்கள் எல்லாம் ஏட்டில் படிக்கும் வரிகள் ஆகிவிட்டன. சிறு வயதில் நானெல்லாம் காலை 9.30 மணி பிரேயருக்கு தான் செல்வேன். நாலு மணிக்கு வீட்டில் இருப்பேன். ஆறரை மணி வரை கபடி, கில்லிதாண்டு, கொ-கொ என சவுகிரியத்துக்கு ஆட்டம் போட்டு விட்டு ஏழு மணிக்கு கை கால் கழுவிக்கொண்டு படிக்க உட்காருவேன்.நன்றாகத்தான் படித்தோம். நன்றாகத்தான் வாழ்கிறோம்.

    வாழ்க்கை என்றால் அது விலை உயர்ந்த ஆடம்பரப்பொருட்கள், சந்தோஷம் என்றால் விலை உயர்ந்த கைப்பேசி, செக்யூரிட்டி என்றால் கடனோ உடனோ வாங்கி கட்டும் அபார்ட்மென்ட் வீடு என்று எப்போது ஆக்கிக்கொண்டோமோ அப்போதே நம் குழந்தையின் சுதந்திரத்தை, சந்தோஷத்தை அடமானம் வைத்துவிட்டோம்!

    வாழும் கலாச்சாரம் என்பது ஈ.எம்.ஐ. கலாச்சாரம் ஆகி விட்டது. நம் குழந்தைகளுக்கு மெத்தையை வாங்கிக் கொடுத்துவிட்டோம்! அவை தமது தூக்கத்தை தொலைத்து விட்டன!

    சிந்திக்கவைக்கும் அர்த்தமுள்ள கட்டுரையை எழுதிய திரு குரு பிரசாத் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். வல்லமையாளர் குரு பிரசாத்திற்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: திரு. சு. கோதண்டராமன் எழுதி வரும் மாணிக்கவாசகர் பாடல்:

    குதுகுதுப் பின்றிநின் றென்குறிப் பேசெய்து நின்குறிப்பில்

    விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்

    “உன்னோடு ஒன்றுபடும் வழியும் எனக்குத் தெரியவில்லை. உன்னைப் பாடவில்லை. உனக்குப் பணி செய்யவில்லை. சிவன் யார் எங்குளான் என்று தேடவில்லை. ஓடிப் பார்க்கவில்லை. ஸ்தம்பித்து மனம் உருகவில்லை. அது மட்டுமல்ல, உன்னைப் பழிக்கவும் துணிந்தேன்.”

     Dhivakar
    www.vamsadhara.blogspot.com
    www.aduththaveedu.blogspot.com

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    kamaladevi_aravindan_silk_sபொதுவாக பூக்கள் கொடுத்து வரவேற்பது என்பது தமிழரின் பண்பாடு. பூக்களின் விதம்விதமான பலன்களை நன்றாக அறிந்தவர்கள் சங்ககால தமிழர்கள். காதலியை வர்ணிப்பதில் என்றில்லாமல், வாசனைக்காகவும், பெண்களின் கூந்தலின் அலங்கரிப்பதும், இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுவதற்காகவும் மட்டுமல்லாமல் ஆண்களின் கழுத்துக்கும் மரியாதைக்குரியதாய் அலங்கரிக்க பூக்கள் பயன்பட்டது. ( கூந்தல் மணத்துக்குக் காரணம் ஒரு வாசனைப்பூவாக இருக்குமா என்பதாக இறைவனுக்கும் மனிதனுக்கும் மிகப்பெரிய வாக்குவாதமே நடந்தது தமிழகத்தில் மட்டும்தான்) இப்படித்தான் என்னுடைய வம்சதாரா கதையில் சபையில் ஒரு பூச்செண்டு ஒன்று ஒரு நாட்டின் மன்னரின் முடிசூட்டுவிழாவின் போது கொடுத்ததாக எழுதியதை மிகவும் சிலாகித்து எழுதினார் டாக்டர் முனைவர் பிரேமா நந்தகுமார். பூவோடு இறைவனை அர்ச்சிக்கப்படுவது பூஜை என்பது தமிழிலிருந்துதான் ‘பூ-செய்’ என்பதாக வடமொழிக்கே சென்றிருக்கவேண்டும் என்று ஆங்கிலேயர் ஜி.ஸ்வெல், குறிப்பிட்டிருப்பதை ஆந்திர பல்கலைக்கழக தெலுங்கரான பேராசிரியர் சுந்தரம் அவர்கள் தனது ‘சிம்மாசலம்’ புத்தகத்தில் எழுதியுள்ளதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இப்படியாகப் புகழ்பெற்ற இந்த வண்ண வண்ணப் பூக்கள் நிரப்பப்பட்ட பூங்கொத்தை அவ்வப்போது ’விசுவலாக’ இணையத்தில் கொடுத்து ஊக்குவித்துவந்த திருமதி கமலாதேவி அரவிந்தன் அவர்களைப் பற்றிதான் இந்தப் பதிவு.

    வல்லமையில் வாரம் ஒரு வல்லமையாளர் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டபோது இதற்கு முன்னோடியாக கமலம் எழுதிய கட்டுரைகள்தான் நினைவுக்கு வந்தன என்பதையும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். கமலம் இரண்டு திராவிட பாஷைகளில் சிறந்து விளங்கும் மிகச் சிறந்த இலக்கியவாதி என்பது இங்கே நினைவில் கொள்ளவேண்டும். இரண்டு பாஷைகளில் இலக்கிய திறமை என்பது இரண்டு விதமாக நோக்கவேண்டும். சான்றோர் பலர் வடமொழி-தமிழ் என்பதிலும், ஆங்கிலம்-தமிழ் என்பதிலும் இலக்கியத் திறமை உள்ளவர்களாக இருந்தார்கள். இவர்கள் எண்ணிக்கையில் மிக அதிகம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இரண்டு திராவிட பாஷை இலக்கியங்களில் சமமாக திறமை பெற்று விளங்குவோர் வெகு சிலரே.. அந்த வெகு சிலரில் ஒருவர் கமலம் என்பது அவரது இலக்கிய திறமைக்கு முக்கியமான சான்றுதான். ஏனெனில் கமலம் இந்த இரு மொழிகள் (தமிழ், மலையாளம்) தோன்றிய இடத்திலிருந்து பிறந்து வளர்ந்தவர் இல்லை. மலேஷிய நாட்டில் வளர்ந்து கல்வி பயின்று சிங்கையில் குடியேறியவர் என்று பார்க்கும்போது இவர் திறமையின் ஒளி இன்னும் அதிகமாகப் பளிச்சிடுவதைக் காணலாம்

    எண்பதுகளில் விஸ்கி பாட்டிலைப் பேயாகப் பாவித்து சுவாரஸியமான ஆங்கிலத் திரைப்படம் ஒன்றை எடுத்திருந்தார்கள். பல நாள் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவன் நான். அதே போல கமலம் சமீபத்தில் எழுதிய கதை ஒன்று இன்னமும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு கண்ணாடி (டிரெஸ்ஸிங் டேபிள்) பேய் ஒன்றைப் பற்றிய வித்தியாசமான கற்பனைக் கதை. . இந்த வித்தியாசமான கற்பனைகள்தான் ஒவ்வொரு எழுத்தாளரையும் காலம் கடந்து வாழச் செய்கிறது.

    இன்று (15 செப்டெம்பர்) கமலம் அவர்கள் சிங்கையில் தமிழ் இலக்கியச் சேவைக்காக பாரதியார்-பாரதிதாசன் விருது பெறுகிறார்கள். இதே முகூர்த்தத்தில் நம் ‘இந்த வார வல்லமையாளராக’வும் அவருக்கு கௌரவம் செய்து பெருமை கொள்கிறோம். சிங்கை சென்றபோது ஒரு மதிய விருந்தில் மிக எளிமையான, கள்ளங்கபடமற்ற, படபடப்பான கமலத்தைக் கண்டு மகிழ்ந்தவன்.. பூச்செண்டு கொடுக்கும் மனது பூவைப் போன்று மென்மையானதாகத்தான் இருக்கும் என்றும் நினைத்தவன். இப்படிப்பட்ட சாகித்ய வல்லுநர்கள் உலகெங்கிலும் கவனிக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தையும் தெரிவித்தவன். இவரைப் பற்றியும் இவரது சாகித்யத்தைப் பற்றியும் நிறைய எழுதலாம், காலம் மறுபடி வரும்போது எழுதுவோம். கமலத்துக்கு அன்பான வாழ்த்துகள்..

    கடைசி பாரா: திரு ஆர்.எஸ். மணி அவர்களின் பாடலிலிருந்து

    சுற்றம் என்ன, சூழல் என்ன,

    நிலையானதாகுமோ?

    சொந்தம் என்ன, பந்தம் என்ன

    செல்லாமலே நில்லுமோ?

    ஒருநாள் இன்பம், ஒருநாள் துன்பம்,

    மாறாதே இக்கோலம்

     www.vamsadhara.blogspot.com
    www.aduththaveedu.blogspot.com

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

     

    திவாகர்

    meditating buddhaஎன்னை எப்போதும் அதிசயித்து வைத்துக் கொண்டிருக்கும் மனிதர் ஒருவர் உண்டென்றால் அது இவர்தாம். எத்தனைக் கட்டுரைகள்.. எத்தனை விஷயங்கள், ஒவ்வொரு விஷயத்திலும் ஆத்மார்த்தமாகத் தொக்கிக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி, தமிழ் இணைய உலகத்தின் மகாமனிதர் இவர் என்றால் அதை மறுப்பதற்கு யாரும் முன்வரமாட்டார்.

    தமிழன்னைக்கு தினம் மாலை சூடும் தமிழன்னையின் மகாரசிகர் அதுவும் வெளிநாட்டிலிருந்து கொண்டு தமிழ்நாட்டு விஷயங்களையும் தமிழ்ச் சொல்லையும் ஆராய்ந்து நமக்கு விளக்கம் தந்துகொண்டிருக்கும் ஆராயும் அறிஞர்.. சரித்திர சம்பந்தமானாலும், விஞ்ஞானப் பூர்வ விளக்கமானாலும் இவரிடம் நிச்சயமான பதில் கிடைக்கும். ஆமாம். டாக்டர் எஸ். ஜெயபாரதிதான் அந்த பேரறிஞர்..மலேசியாவின் கெடா மாநிலத்தில் இருந்து கொண்டு உலகத் தமிழரையே அதிசயித்து வைத்துக் கொண்டிருக்கும் இந்த அறிஞரை நான் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

    இந்த வாரத்தில் இவர் எழுதிய ஒரு கட்டுரை ஒன்றை உங்கள் முன்னே வைக்கிறேன். முற்றூட்டு, மகமை போன்ற தமிழ்ச் சொல்லுக்கான விளக்கம். .

    அன்பர்களே,

    கூட்டிக்கழிச்சுப் பார்த்தோம். ஏராளமான நூல்களைப் புலவர்கள் சேகரம் பண்ணி, படித்து ஆராய்ச்சியும் பண்ணவேண்டியிருந்தது.
    ஏதாவது புதிதாகத் தோன்றினால் அப்படியே பாய்ந்து கபாலென்று பிடித்துக் கொள்ளவேண்டும். அந்த அலை வரிசையை அப்படியே ஸ்தூல வைகரீ வாக்காக மாற்றி, எண்ணங்களாகவும் கருத்துக்களாகவும் மாற்றி, வாக்கியங்களாகப் படைத்து, எழுத்துருக் கொடுத்து, ஓலையில் பதிவும் செய்ய வேண்டும். இந்த மாதிரி சூழ்நிலைகள்தாம் நிலவின.

    இருப்பினும் ஏராளமான உரை நூல்கள், பாஷ்யங்கள், துணை நூல்கள், வழிநூல்கள், மொழி பெயர்ப்புக்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஏதோ சில supportive systemகள் இருந்திருக்கத்தான் வேண்டும். இருந்தன. ஓரளவுக்கு இருந்திருக்கின்றன. ஓரளவுத்தான்.

    பழங்காலத்தில் புலவர்களுக்காக வரியில்லாத நிலங்களைக் கொடுத்திருக்கிறார்கள். இதற்குப் பெயர் ‘முற்றூட்டு’ என்பது. முழு முழு கிராமங்கள்கூட கொடுக்கப்பட்டுள்ளன. அழகிய சிற்றம்பலக் கவிராயர் அவ்வாறு முற்றூட்டுப் பெற்றவர். அவருக்கு ராமநாதபுரம் சேதுபதி முற்றூட்டாகக் கிராமங்களைக் கொடுத்தார். பாடம் கேட்க வருவோருக்கு – உடன் வைத்திருந்து – கவிராயர்களே பாடமும் சொல்லிக்கொடுத்தால் கவிராயர்களுக்கு ‘ஆசிரியக் காணி’, ‘ஆசிரிய விருத்தி’, ‘ஆசிரிய போகம்’ என்ற நன்கொடை கிடைத்தது. முற்றூற்றெல்லாம் பேர் போட்ட கவிராயர்களுக்குத்தான். எல்லாருக்கும் கிடைக்காது.

    யார் பேர் போட்ட கவிராயர் என்பதில்கூட இப்போது போலவே அந்தக் காலத்திலும் ரொம்பக் கசகல் இருந்தது. (இந்த ‘வாச்சான் போச்சான்’, ‘கசகல்’ போன்ற சொற்களுக்குப் பொருள் வேண்டுமானால் இராம கிரு, இரா முருகன் போன்றோரிடம் கேட்டுக்கொள்ளலாம். அதெல்லாம் வட்டார வழக்கு).

    பேர் போட்ட புலவருக்கு உரிய லட்சணங்களாக அந்தக் காலத்தில் எந்த மாதிரியான க்ரைட்டீரியாக்களை வைத்திருந்தார்கள் என்பதற்கு அவ்வையார் பாடல் ஒன்று இருக்கிறது.

    (இப்போதெல்லாம் ‘ஔ’ எழுத்தைத் தவிர்ப்பது உண்டு. ஏனெனில் அதை ‘Ola’ ‘ஒ-ள என்று வாசித்துவிடுகிறார்கள். அதற்குப் பதில் ‘அவ்’ என்று
    எழுதினால் வம்பத்த பாடு. ‘ஔ’வுக்கு ‘அவ்’ போலியல்லவா? இந்தக் காலத்தில் அவ்வையாரை யெல்லாம் நம்ம பசங்க தெரிந்துவைத்திருப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்கமுடியவில்லை. எதைச் சொல்வதானாலும் சாங்கோபாங்கமாகச் சொல்ல
    வேண்டியுள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ·பூட்நோட் – அடிக்குறிப்புக் கொடுக்கவேண்டியுள்ளது.)

    விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்
    விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் – அரையதனில்
    பஞ்சேனும் பட்டேனும் வேண்டும்; அவர் கவிதை
    நஞ்சேனும் வேம்பேனும் நன்று

    Sycophant எனப்படும் துதிபாடிகள், ஆமாஞ்சாமிகள் இரண்டு பேராவது கூடவே இருக்கவேண்டும். விரல் நிறைய மோதிரங்கள் போட்டிருக்கவேண்டும்.
    இடையில் உயர் ரக பருத்தி ஆடை அல்லது பட்டாடை அணிந்திருக்கவேண்டும். பருத்தி ஆடையை உயர்வாகச் சொல்கிறார். எனெனில் பழங்காலத்தில் மரவுரி,
    லினன் போன்றவையும் இருந்தன. பன்னாடை என்னும் தென்னை மர உரியிலிருந்தும் இடுப்புத் துணி செய்யப்பட்டது. காடாத் துணி எனப்படும்
    கனமான துணியும் இருந்தது.

    ஹைக்கிலாஸ் காட்டன் என்பதைத்தான் பஞ்சு என்று குறிக்கிறார். இப்படிப்பட்டவர்கள் சொல்லும் கவிதை நஞ்சாக இருந்தாலும் சரி, வேப்பிலை போல கசந்தாலும் சரி, அதை ‘நன்று’ என்றே பாராட்டுவார்கள்

    முற்றூட்டு, ஆசிரிய விருத்தி, ஆசிரியக் காணி, ஆசிரிய போகம் தவிர இன்னொரு முறையும் இருந்தது. இதற்கு ‘மகமை’ என்று பெயர். இதிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் இருந்திருக்கின்றன. வேறு வகையான மகமைகளும் இருந்தன.. உள்ளபடிக்குப் பலவகைகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

    தமிழ்த்தாத்தா உவெசாமிநாதய்யர் தம்முடைய இளமைக்காலத்தில் அரியிலூர் சடகோபய்யங்கார் என்னும் கல்விமானிடத்தில் கல்வி கற்றார். இங்கே தமிழ்த் தாத்தாவைப் பற்றி ஒரு விஷயத்தைச் சொல்லத்தான் வேண்டும்.

    மலேசிய இளைஞர்கள் 22 பேரைப் பரீட்சார்த்தமாக சில கேள்விகள் கேட்டேன். அந்தக் கேள்விகளில் ஒன்று – “உ.வே.சாமிநாதய்யர் பற்றி என்ன தெரியும்?”
    தமிழ்ப் பள்ளிகளில் ஆறாம் வகுப்புவரை படித்தவர்கள். 22 பேருக்கும் அவரைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. இவ்வளவுக்கும் மலேசியத் தமிழர்களுக்காக ‘தமிழ்த் தாத்தா’ என்னும் தலைப்பில் ஒரு நீள்கட்டுரையை எழுதியிருக்கிறேன். ‘மயில்’ என்னும் இலக்கிய இதழில் பத்து வாரங்கள் வெளிவந்தது. நல்ல பாராட்டைப் பெற்ற தொடர் அது. ஆனால் அதெல்லாம் இந்த இளைஞர்களின் தலைமுறைக்கும் முந்திய தலைமுறையினர் காலத்து விஷயம். 1992-இல் எழுதினேன். இப்போது இருபத்தோரு ஆண்டுகள் ஆகின்றன. ஐயரவர்கள் சடகோபைய்யங்காரைப் பற்றி எழுதியவற்றின் பகுதிகளைத் தருகிறேன். அவர் எப்படி மகமையை வசூலித்தார் என்பது பற்றி……

    “கல்வியின்பம் ஒன்றையே பெரிதாகக் கருதி வாழ்ந்த அவர், வறுமை நிலையில்தான் இருந்தார். அதனால் அவர் மனம் சலிக்கவில்லை. (அவரை ஆதரித்து வந்த) அரியிலூர் சமஸ்தானத்தின் நிலை வரவர க்ஷீணமடைந்தமையால் அவருக்கு ஆதரவு குறைந்து போயிற்று..மாலைவேளையில் அவர் கடைவீதி வழியே செல்வார். என் வஸ்திரத்தை வாங்கி மேலே போட்டுக்கொண்டு போய்விடுவார். அதுதான் அவருடய திருவுலாவிலே அங்கவஸ்திரமாக உதவும்.அவர் செல்லும்போது ஒவ்வொரு கடைக்காரரும் எழுந்து மரியாதை செய்வார். அவரை அழைத்து ஆசனத்தில் அமரச் செய்து மரத்தட்டில் நான்கு வெற்றிலையும் இரண்டு பாக்கும் வைத்துக் கொடுப்பார். அந்த அன்பு காணிக்கையை அப்படியே வீட்டுக்குக் கொண்டுவருவார். எல்லாவற்றையும் சேர்த்து விற்று வேறு ஏதாவது வாங்கிக்கொள்வார். அதனால் வருவது பெரிய தொகையாக இராது. இராவிட்டால் என்ன? உப்புக்காவது ஆகாதா? இந்த நிலைக்கும் அவருடைய தமிழ் இன்பத்துக்கும் சம்பந்தமேயில்லை. அந்த உலகமே வேறு. அதில் அவர்தாம் சக்கரவர்த்தி. அங்கே பசியில்லை, வறுமையில்லை, இளைப்பில்லை.”

    இப்படியும் ஒரு மகமை நடந்தது.

    எத்தனை விவரங்கள் பார்த்தீர்களா? மருத்துவரான டாக்டர் ஜேபி யின் இன்னொரு கட்டுரை ஒன்று ‘சும்மா’ எனும் வார்த்தை எப்படி வந்தது என்பது பற்றி விவரமாகத் தெரிவிக்கும் .எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று .http://www.visvacomplex.com/summa_1.html.. அவருடைய எல்லாக் கட்டுரைகளையும் அவர் விஸ்வா காம்ப்ளெக்ஸ் தளத்தில் படிக்கலாம். சாக்தத்திலும் சைவத்திலும் வித்தகரான மலேஷிய பேரறிஞர் டாக்டர் ஜேபியை வல்லமை இந்த வார வல்லமையாளராகப் போற்றி அவரை கௌரவம் செய்து அதனால் பெருமை பெறுகிறது, டாக்டர் ஜேபி அவர்கள் நீண்டகாலம் உடல்நலத்தோடு இருந்து எங்களுக்கு மேலும் மேலும் புதிய விஷயங்களையும் படைத்து பழைய விஷயங்களையும் தெளிவித்துக் கொண்டே இருக்க இறைவனை பரிபூரணமாக வேண்டுகிறேன்.

    கடைசி பாரா:வல்லமையில் திரு ஆவுடை நாயகம் அவர்கள் கட்டுரையிலிருந்து
    “சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்”
    1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    இந்திய சுதந்திர சரித்திரம் என்பது இன்றைய தலைமுறையினருக்கு எப்படி புரியவைக்கப்படுகின்றது என்பதில் ஏகப்பட்ட கேள்விக்குறி உள்ளது. பொதுவாக இந்திய சுதந்திரம் எனும்போது காந்தியடிகள் முதலான தேசத்தலைவர்களே அதிகம் பேசப்படுவதும் தேசத்துக்கான சுதந்திரம் ஏதோ சுலபமாக அஹிம்சை முறையில் பெற்றதுமாகவும் கத்தியின்றி ரத்தமின்றி பெற்றதுமாகவும் அதிகம் புரியப்படுகின்றது. தேசம் சுதந்திரம் ஆன கால கட்டத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மதக் கலவரங்களும், பாரதமக்களின் ரத்தமானது ஆறு போல புரண்டு ஓடியதையும் நாம் மறந்து விடுகிறோம்.

    இது இப்படியே இருக்க, தேசச் சுதந்திரப் போராட்டமானது ஏதோ 1857 ஆம் ஆண்டில் முதல் இந்திய சுதந்திரப் போராக தேசத்து வடபுலத்தில்தான் ஆரம்பமாகி பிறகு காங்கிரஸ் தோன்றி அதைப் பெரிதாக்கியது என்று இப்போது அரசாங்க ஆதரவுடன் எழுதி வருகிறார்கள். ஆனால் உண்மையில் தென்னகத்தில்தான் மிகப் பெரிய விதத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் 1725 ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பித்தது, இவ்வரலாற்றை பழனியப்பா பிரதர்ஸ் ஆங்கிலத்தில் புத்தகமாகக் கூட கொண்டு வந்துள்ளார்கள்.

    இதுவும் இருக்கட்டும், ஏற்கனவே சொன்னது போல இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட தமிழர்களின் வரலாறு மிக விஸ்தாரமாக சொல்லப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. சுப்ரமணிய பாரதியார், வ.உ.சி போன்றோர் (உபயம் தமிழ் சினிமா) போன்றோர் பற்றி ஏதோ சுமாராகத் தெரிந்தாலும் முக்கியமாக தேசத்துக்காக உயிர் நீத்த திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் பற்றி கூட நம் இளைஞர்களுக்கு இன்னமும் சரியாகத் தெரிவிக்கப்படவில்லை.

    இப்படி இருக்கையில் சுவாமி ஓம்கார் எனும் நீலகண்ட பிரம்மச்சாரியைப் பற்றி ஒரு பதிவு கண்டேன். அதை அப்படியே கீழே தருகிறேன்.இது நீலகண்ட பிரும்மச்சாரியின் சுயசரிதம்

    சென்னையில் 566, பைக்கிராப்ட்ஸ் ரோடில் ஒரு வாடகை இடத்தில் தங்கிக் கொண்டு வாயப்பிள்ளைத் தெருவில் 8ஆம் நம்பரில் உள்ள காசி அய்யர் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். 1921-22ஆம் ஆண்டில் நான் உண்ண உணவின்றியும், கையில் காசு இல்லாமலும் கஷ்டப்பட்ட நாட்கள் பல உண்டு. சில சமயம் ஒருவரும் அறியாமல் இரவில் பிச்சை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டு பகலில் சுதேசிப் பிரச்சாரமும் செய்து கொண்டு வந்திருக்கிறேன்.

    ஒரு நாள் கையில் காசும் இல்லை, அதனால் சாப்பிடவும் இல்லை. பிறரிடம் கையேந்த மனமும் வரவில்லை. பசியின் கொடுமையைத் தாளமுடியாமல் சோர்வுற்றிருந்த சமயம் மகாகவி பாரதியின் ஞாபகம் வந்தது. மெதுவாக அவர் இருப்பிடம் சென்றேன். அவர் என்னை குதூகலமாக வரவேற்று அளவளாவினார். இந்த அன்புப் பிடியில் சிக்கிய நான் அவரிடம் என் நிலையைக் கூற மனம் துணியவில்லை. ஆனால் பசியோ வயிற்றைக் கிள்ளுகிறது. எப்படியோ தட்டுத் தடுமாறி, “ஒரு நாலணா இருக்குமோ?” என்று கேட்டு விட்டேன். அவர் “திடுக்கிட்டு, ஏன்? ஏன்?” என்றார். நான் அன்று பூராவும் சாப்பாட்டைப் பாராதது பற்றிக் கூறவே அவர் பதறிப்போய் நாலணா கொண்டு வந்து கொடுத்து, “பாண்டியா! உடனே போய் சாப்பிட்டு வாரும்” என்று கூறினார். அப்போது அவர் பாடிய பாட்டுதான் “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்பது. என்னால், என் நிலைக்காக கவியின் உள்ளத்தில் சுரந்த ஊற்றுதான், அந்த ஆவேசம் நிறைந்த பாட்டு. அகாகா! எவ்வளவு அன்பு! எவ்வளவு பாசம்! அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்! இந்த ஏழையால் அவருக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? அந்தப் புரட்சிக் கவிஞர் அகால மரணமெய்திய போது உடனிருந்து, அவரது மயான யாத்திரைக்குத் தோள் கொடுத்த நால்வரில் நானும் ஒருவன். அவரது உயிரற்ற உடலை சுமக்கும் பாக்கியமாவது என் தோளுக்குக் கிடைத்ததே என்று நான் பெருமைப்படுவது உண்டு.

    இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட்.

    இவ்வளவு கஷ்டப்பட்டும் “புரட்சி புரட்சி” என்ற ஒரு குரல் என் உள்ளத்தின் அடியில் சதா ஒலித்துக் கொண்டே இருந்தது. என்னால் சும்மா இருக்கவே முடியவில்லை, என்ன செய்வேன்.

    நாட்டின் உயர்விற்கும், ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்கும், கம்யூனிசத்தை நாட்டில் பரப்புவது ஒன்றே வழி எனத் தேர்ந்தேன். சென்னையில் சிங்காரவேலருடன் தங்கிக் கொண்டு, கம்யூனிசம் பற்றி ஒரு சிறு நூல் வெளியிட்டேன். அன்றைய முதலாளித்துவ சமுதாய அமைப்பைக் கண்டித்ததுடன், அன்றைய சட்ட திட்டங்களும், நீதிமன்றங்களும், நீதிபதிகளும், முதலாளித்துவ அமைப்புகளுக்கு அனுசரணையாகவே இருப்பதால் இவற்றையும் அடியுடன் தகர்த்தெரிய வேண்டுமென்று அதில் தெரிவித்திருந்தேன்.

    என் கம்யூனிச நடவடிக்கைகாகவும் வர்க்கப் போராட்டத்தைத் தூண்டியதற்காகவும், நீதிமன்றங்களைத் தாக்கியதற்காகவும் 1922ஆம் ஆண்டில் திரும்பவும் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டேன். இந்தியாவிலேயே முதல் கம்யூனிஸ்ட் நான் தான். இந்தத் தடவை தென்னாட்டில் என்னை எங்கும் வைக்காமல் வட நாட்டுச் சிறைகளுக்குக் கொண்டு சென்றனர். ஏனெனில் அப்போது நான் ஒரு கருப்புக் குல்லாய்! அதாவது முன்னமே சிறை தண்டனை பெற்றவன். அதனால் அதற்குத் தகுந்த மரியாதையை அரசாங்கம் எனக்குக் காட்டாமல் இருக்க முடியுமா?

    இப்போது பாகிஸ்தானில் உள்ள மாண்ட்கோமரி ஜெயிலிலும், மூல்தான் சிறையிலும் 5, 6 ஆண்டுகள் இருந்தேன். இறுதியாக மீதி காலத்தை ரங்கூன் சிறையில் கழித்துவிட்டு 1930ஆம் ஆண்டு விடுதலை பெற்று வெளிவந்தேன். எனது சிறைக் காலங்களில் யாரும் என்னிடம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. எந்தவிதமான துன்புறுத்தலும், பயமுறுத்தலும் என்னை பணிய வைக்காது என்பதை சிறை அதிகாரிகள் உணர்ந்திருந்ததுதான் அதற்குக் காரணம். அதனால் சிறை வாழ்க்கையில் நான் துன்புறுத்தப்பட்டேன் என்றோ, என் சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்படும் காரியங்களை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டேன் என்றோ கூறமுடியாது. எல்லாச் சிறை அதிகாரிகளும், எல்லா இடத்திலும் என்னை கெளரவமாகவே நடத்தினார்கள் என்றுதான் கூறவேண்டும். நான் தேசத்தின் வடகோடி சிறையில் இருக்கும்போது நான் தமிழகத்தைச் சார்ந்தவன் என்பதை உணர்ந்து, என் சமையலுக்குத் தென்னாட்டிலிருந்து புளி வரவழைத்துக் கொடுத்தார்கள் என்றால், அதிகாரிகள் என்பால் எவ்வளவு சிரத்தையுடன் நடந்து கொண்டார்கள் என்று நான் கூறத் தேவையில்லை.

    ஓம்கார் ஆஸ்ரமம்.

    என் தாய்மாமன் வெங்கட்டராம சாஸ்திரி பி.ஏ.,எல்.டி. மாயவரம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அவரிடம் நான் அடிக்கடி வேதாந்த விசாரம் செய்வதுண்டு. சிறையில் தனிமையாகப் பல வருஷங்களைக் கழித்ததால், அவ்வப்போது வேதாந்த கருத்துக்களும் என் மனதில் உதிப்பதுண்டு. சிறுகச் சிறுக அது என்ன, நான் அறியாமலேயே கைப்பற்றி கொண்டு வந்திருக்கிறது.

    விடுதலை அடைந்து வெளி வந்தபோது பல வழிகளில் நான் மாறியிருப்பதை உணர்ந்தேன். இரண்டு ஆண்டு காலம் கால்நடையாகப் பல இடங்களுக்கும் அலைந்து திரிந்தேன். தி இந்து, சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளுக்கு எழுதி, என் எழுத்தை விற்று காலக்ஷேபம் செய்து வந்தேன்.

    பின் சாது, துறவியாக மாறினேன். விஜயநகர ராஜ்யத்திற்குட்பட்டிருந்த ஆனைக்குன்று மலையில் சிறு ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு சில காலம் வாழ்ந்தேன். 90 வயது நிரம்பிய விஜயநகர ராஜ்ய ராணி ஒருவர் என்னிடம் மிகுந்த அன்பு பாராட்டி உதவினார். அந்த அன்புப் பிடியில் சிக்க மனமில்லாததால் யாருக்கும் தெரிவிக்காமல் திடீரென ஒரு நாள் புறப்பட்டு பத்து மைல் தூரம் நடந்து ஹோஸ்பெட் எனும் ஊரை அடைந்தேன். கையில் இரண்டு ரூபாய் மட்டுமே இருந்தது. எனது கலெக்டர் சீடர் தம்பிதுரைக்குத் தந்தி கொடுத்துப் பணம் பெற்று, திரும்பவும் பல இடங்களைச் சுற்றி முடிவாக நந்தி மலை (Nandi Hilla)வந்து அடைந்தேன்.

    கர்நாடகத்தின் வனப்புமிக்க கோடை வாசஸ்தலம் நந்தி மலை. அதற்கு வடக்கே அதனை ஒட்டினாற்போல அமைந்திருப்பது சென்னகிரிமலை. பெங்களூரிலிருந்து முப்பது மைல் தொலைவில் நந்தி கிராமத்திலிருந்து இரண்டு மைல் தூரத்திலும், சுல்தான்பேட்டையிலிருந்து அரை மைல் வலப்புறமும் ஒரு மலைச்சரிவில் அமைந்திருப்பதுதான் ஓம்காரேச்வரருடைய (சென்னகேஸ்வரர்) திருக்கோயில். இதற்கு நேர் எதிரில் சில அடி தூரத்தில் சென்னகிரி குன்றின் ஓர் பாறையைப் பிளந்துகொண்டு அதன் கீழாக ஓடி வருவதுதான் தென்பெண்ணை (தக்ஷிணபினாகினி) ஆற்றின் உற்பத்தி ஸ்தானம். எக்காலத்தும் அதன் வழியாக நல்ல தெளிவான ஊற்று நீர் சதா வந்து கொண்டிருக்கும்.

    இந்த இடத்திற்கு நான் வந்தபோது அங்கிருக்கும் லிங்கம் ஒரு புற்றால் மறைக்கப்பட்டிருந்தது. அதனை அகற்றிப் பார்த்தபோது அங்கு சிவலிங்கம் இருப்பது தெரிந்தது. அதற்கு ஓர் சிறு கோயிலும் கட்டினேன். அது அமைதி நிறைந்த இடமாக இருந்ததால் அதனையே என் வாசஸ்தலமாக ஆக்கிக் கொண்டேன். என் பெயரிலுள்ள நீலகண்டன், பிரம்மச்சாரி எல்லாம் மறைந்து சாது ஓம்கார் ஆனேன்.

    காந்திஜியுடன் சந்திப்பு.

    அங்கு சென்றபோது சென்னகிரி மலையின் உச்சியில் காய் கனிகளைப் புசித்துக் கொண்டு சில வருஷங்கள் தவமிருந்தேன். அப்போது ஒரு நாள் 1936ஆம் ஆண்டு மே மாதம் ஜே.சி.குமரப்பா அங்கு என்னைத் தற்செயலாக சந்தித்தார். மகாத்மாஜி ஓய்வு எடுப்பதற்காக தனது கோஷ்டியுடன் நந்திமலையில் வந்து தங்கியிருப்பதாகவும் கூறினார். மறுநாள் சர்தார் வல்லபாய் படேல், மகாதேவ தேசாய் இவர்களை அழைத்துக் கொண்டு திரு குமரப்பா அவர்கள் திரும்ப வந்தார். என்னுடன் நெடுநேரம் அவர்கள் ஆன்ம விசாரணை செய்துவிட்டு திரும்பினார். அடுத்து மகாதேவ தேசாயிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில் மகாத்மாஜி என்னைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக கண்டிருந்தது. 1936ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி மாலை 7 மணிக்கு நந்திமலை சென்று மகாத்மா காந்தியடிகளுடன் இரண்டு மணி நேரம் தங்கி ஆன்ம விசாரணை செய்துவிட்டுப் பூரணத்திருப்தியுடனும், மனச்சாந்தியுடனும் திரும்பினேன். அது சமயம் வடநாடு யாத்திரை வரும்போது, சேவாகிராமம் வருமாறு காந்திஜி எனக்கு அழைப்பு விடுத்தார்.

    தற்போதுள்ள ஓம்கார் ஆஸ்ரமத்தில், சாது ஓம்காராக கடந்த 42 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். 3 ஆண்டுகள் புரட்சியாளனாக இருந்தேன். மூன்று ஆண்டுகள் கம்யூனிஸ்டாக இருந்தேன். பதினேழரை ஆண்டுகள் சிறைக் கைதியாக இருந்தேன். இந்த நீண்ட எனது 85 ஆண்டு கால வாழ்க்கையில் சிறப்பான பகுதி எது?

    VGopalan (1)என் வாழ்க்கைப் படிக்கட்டுகளில் பெருமைக்குரிய படிக்கட்டு எது? இளைஞர்கள் நன்கு சிந்தித்து ஒரு முடிவிற்கு வரவேண்டுமென்பது என் ஆசை. வாசகர்கள் அனைவருக்கும் என் நல்லாசிகள். ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

    (நந்தி மலையில் சாது ஓம்காரைச் சந்தித்து உரையாடி அவர் சொல்லியதை கட்டுரையாக்கியவர் தியாகி அரியலூர் L. சபாபதி அவர்கள். 1976இல் தியாகி அரியலூர் சபாபதி “இந்திய சுதந்திரப் போர்” எனும் பெயரில் திருச்சி ஜில்லா சுதந்திரப் போராட்ட வீரர்கள் காங்கிரஸ் கமிட்டி, குளித்தலை எனும் முகவரியில் இருந்து வெளியிட்ட நூலில் இந்த கட்டுரை வெளிவந்திருக்கிறது. அரியலூர் L.சபாபதி அவர்கள், ஆசிரியராகவும், திருச்சி மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் காங்கிரசில் பொதுச் செயலாளராகவும் இருந்தவர்.)

    இதை இந்த வாரத்தில் நமக்குத் தந்தவர் தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர். அற்புதமான ஒரு வரலாற்றில் எத்தனை புதிய செய்திகள் அடங்கியிருக்கின்றன பார்த்தீர்களா.. இந்த சரித்திரத்தை நமக்குத் தந்து பல நல்ல விஷயங்களை வெளிக்கொணர்ந்த தஞ்சை திரு கோபாலன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: ’ரசனையின் சிலிர்ப்பு’ திருமதி தி.சுபாஷிணி:
    சென்ற திங்கட்கிழமை கண்ணன் பிறந்த நாள். அந்தத் திங்கட்கிழமையே தமிழ்க் கவிதை தரும் மகிழ்ச்சியின் ரகசியம். தமிழ் வசன நடை முன்னேற்றத்தின் ரகசியம். தாளமும் ராகமும் சேர்ந்த நல்லிசையின் ரகசியம். தெய்வ பக்தி தரும் நிம்மதியின் ரகசியம். அன்பின் பரம மகிழ்ச்சி, வேஷங்களின் பொய்ம்மை, அனைத்தும் நன்றாகக் கண்ட பூரண ரசிகமணி டி.கே.சி. பிறந்த நாளும்,

    Share