Tag: நிர்மலா ராகவன்

  • நலம் .. நலமறிய ஆவல் (68)

    நிர்மலா ராகவன்

    இருவரும் வெற்றி காண..

    நலம்-4

    ஆணோ, பெண்ணோ, எந்த நாட்டுக்காரர்கள் ஆனாலும், அவர்கள் படும் அவதிகள் பொதுவானவைதாம். இருபாலருக்குமே சரியான முறையில் ஒருவரையொருவர் நடத்துவது எப்படி என்று தெரிவதில்லை. ஒருவருடைய சுயமரியாதையை, தன்னம்பிக்கையை, இன்னொருவர் பறிக்காமல் இருந்தால்தான் உறவு நீடிக்கும்.

    கதை

    டாங் (TONG) கோலாலம்பூரிலுள்ள ஒரு கல்லூரி மாணவன். பணக்காரப் பெற்றோருக்கு ஒரே மகன். பெண்களுடன் நெருங்கிப் பழகியது கிடையாது. அவன் அறிந்ததெல்லாம் படிப்பும், பாட்டும்தான்.

    இவனிடம் வலுவில் வந்து உறவாடி, பலவாறாக அவன் திறமைகளைப் பாராட்டி, நெருங்கிப் பழகலானாள் ரோஸ். இவனுடைய மென்மையான குணம் அவளுடையதைவிட நேர்மாறாக இருந்ததே முதலில் இருவருக்குள்ளும் ஈர்ப்பு ஏற்படக் காரணமாக இருந்தது.

    ஈராண்டுகள் இன்பமாகக் கழிந்தன. பல இடங்களிலும் ஒன்றாகச் சுற்றினார்கள். அதன்பின், காதலன் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும், தனக்காகவே செலவு செய்யவேண்டும் என்பதுபோல் ரோஸ் எந்நேரமும் உரிமை கொண்டாட ஆரம்பிக்க, ஏதோ தன்னை நெருக்குவதுபோல் உணர்ந்தான் டாங். `நம்மிருவருக்கும் ஒத்துவராது,’ என்று கழன்றுகொண்டான்.

    அவளுக்கு ஒரே ஆத்திரம், நல்ல பொருள் கைவிட்டுப்போகிறதே என்று. அவனைப்பற்றித் தாறுமாறாக அவனுடைய நண்பர்களிடம் சொல்லிப் பொருமினாள்.

    “ஆனால் எங்களுக்கு அவன் குணம் நன்றாகத் தெரியும். அவள் சொல்லியதை யாரும் நம்பவில்லை,” என்று என்னிடம் கூறினான் இக்கதையை என்னுடன் பகிர்ந்துகொண்ட டாங்கின் நண்பன்.

    பெண்களுக்கு மரியாதையா!

    பெண்களுடைய எல்லாப் பிரச்னைகளுக்கும் ஆரம்பம் பெண்களை மதித்து நடக்க வேண்டும் என்று ஆண்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படவில்லை என்பதுதான். இளம் வயதிலேயே பெற்றோரும், ஆசிரியர்களும் செய்ய வேண்டிய கடமை அது.

    சில ஆசிரியர்களுக்கே அந்த அறிவு இருப்பதில்லையே, என்ன செய்வது?

    கதை

    என் பள்ளி மாணவர்கள் கால்பந்து விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் வேறு ஏதோ வேலையாக சற்றுத் தொலைவில் நின்றுகொண்டிருந்தேன்.

    பந்து என்னருகே விழ, அவர்களுடைய ஆசிரியர் ஃபாதில் (FADHIL) “ஏய்! பந்தை எடுத்துப்போடு!” என்று என்னை விரட்டினார். அவர் கட்டொழுங்கு ஆசிரியர் ஆனதால், `நான் மிகப் பெரியவன்!’ என்ற எண்ணம். மாணவர்கள் மட்டுமின்றி, எல்லாரையும் விரட்டலாம் என்ற மமதை.

    அவரது கூப்பாடு காதில் விழாதமாதிரி நின்றேன்.`தான் சொல்ல, மாணவர்களுக்கு எதிரே இவள் – ஒரு பெண் — தன்னை மதிக்காமல் நடந்துகொள்வதா!’ என்ற ஆத்திரத்துடன் “உன்னைத்தான்! பந்தை எடுத்துப்போடச் சொன்னேனே!” என்று அவர் மீண்டும் மலாய் மொழியில் கத்த, நான் நிதானமாக அவர் பக்கம் திரும்பினேன்.

    “Who do you think you are? No one talks to Mrs. Raghavan like that, Mister. Speak with respect,” (உங்களை நீங்கள் யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? என்னிடம் யாரும் அப்படிப் பேசிவிட முடியாது. மரியாதையாகப் பேசுங்கள்!” கண்களைச் சுருக்கிக்கொண்டு, ஆள்காட்டி விரலை நீட்டியபடி மிரட்டினேன்.

    மெதுவாக ஆரம்பித்து, ஒவ்வொரு வாக்கியத்திலும் சூடு ஏறிக்கொண்டே போக, மாணவர்களுடன் சேர்ந்து அவரும் அரண்டு போய்விட்டார். புரியாதவர்போல நடித்து, “ஓ, அப்படியா?” என்று சமாளிக்கப் பார்த்தார்.

    நான் பந்தை எடுக்கவில்லை.

    இம்மாதிரியான ஆசிரியரை முன்னோடியாகக் கொண்ட மாணவர்களும், அவருடைய மகன்களும் அவரைப்போலத்தானே ஆவார்கள்?

    இன்னொரு முறை, வேறு பள்ளிக்கூடத்தில் கால்பந்து என்னருகே விழ, `”டீச்சர், டீச்சர்! பந்து!” என்று மாணவர்கள் கெஞ்சலாகக் கூவினார்கள்.

    `இருங்கள்!’ என்று நான் சைகை காட்டிவிட்டு, சில அடிகள் பின்னோக்கி நடந்து, பந்தை உதைத்தேன். அது வெகு தூரம் பறக்க, மாணவர்களுக்கு ஒரே அதிர்ச்சியும், ஆச்சரியமும். பிறகு, ஒரே குரலில் சிரித்தார்கள்.

    மரியாதை கொடுத்தால்தான் மரியாதையை எதிர்பார்க்க முடியும்.

    அன்று பிற வகுப்புகளைச் சேர்ந்த சில மாணவர்கள் என்னிடம் வந்து, “டீச்சர் கால்பந்து விளையாடி இருக்கிறீர்களா?” என்று மிக மரியாதையாக விசாரித்தார்கள்!

    பள்ளிக்கூடத்தில் எல்லாவித விளையாட்டுகளையும் தினமும் முக்கால் மணி கற்றிருக்கிறேன். குறிப்பிடும்படியாக எதிலும் சிறக்காவிட்டாலும், இளமையில் முடிந்தவரை எல்லாவற்றையும் கற்பது எக்காலத்திலாவது உதவுகிறது.

    அச்சுறுத்திப் பெறுவது மரியாதை இல்லை. அது வெறும் கட்டுப்பாடுதான். நாளடைவில் இரு தரப்பினருக்குமே வெறுமை ஏற்பட்டுவிடும்.

    யாரையெல்லாம் கட்டுப்படுத்துகிறார்கள்?

    1. பதின்ம வயதுப்பெண்கள்தாம் பலவிதமாகப் பழிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுக்கு ஆளாகிறார்கள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இந்த வயதில், தம்மைப்பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்களோ, அழகாக இருக்கிறோமா, எல்லாருக்கும் நம்மைப் பிடிக்குமா என்று ஏதேதோ குழப்பங்கள் எழும். `நீ குண்டு!’ `முட்டாள்!’ என்று பிறர் பழிக்கும்போது, மனமுடைந்து போய்விடுவார்கள்.

    2. பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, பணத்தை நிர்வகிக்கத் தெரியாது வளர்ந்திருக்கும் பெண்ணைக் கட்டுப்படுத்துவது எளிது. இவளைப் போன்றவர்களுக்குப் பணத்தின் அருமை தெரியாது. சம்பாதிப்பது எல்லாவற்றையும் கணவனிடம் கொடுத்துவிட்டு, அத்துடன் தன் சுதந்திரத்தையும் இழந்து, தன்னைக் கட்டுப்படுத்தும் உரிமையை அவனுக்கு அளித்துவிடுபவள்.

    3. ஆண்களுடனும் அதிகம் பழகியிராது, மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் வளர்ந்திருக்கும் பெண். `கணவன் சொற்படி நடந்தால்தான் பிறந்த வீட்டுக்கு மரியாதை!’ என்பதுபோல் வளர்க்கப்பட்டிருப்பாள். இவள் திருமணத்துக்கு முன்னரோ, பின்னரோ வதைக்கு ஆளாகிறாள். அவளுடைய திறமைகள் ஒடுக்கப்படுகின்றன. `ஏன் முன்போல் எல்லாவற்றிலும் வெற்றி பெற முடியவில்லை?’ என்ற குழப்பத்திற்கு அவளால் விடை காண முடிவதில்லை.

    உடல் ரீதியிலோ, உணர்ச்சிபூர்வமாகவோ வதைக்கு உள்ளாகுபவர்கள் தன்னம்பிக்கை குன்றிப், மன இறுக்கத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள். சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் உண்டு.

    அடுத்த தலைமுறையினரும் இப்படி ஆகாமலிருக்க என்ன வழி?

    பெற்றோர் சொல்வதையெல்லாம் மறுபேச்சு பேசாது ஏற்று நடப்பவர்கள்தாம் நல்ல பிள்ளைகள் என்பதில்லை. ஆணோ, பெண்ணோ, சுயமாகச் சிந்தித்து நடக்கும் உரிமையை, திறமையை, பெற்றோர் அவர்களிடம் வளர்க்க வேண்டும். ஆனால், தமது கருத்திலிருந்து மாறுபட்டிருந்தாலும், அது நன்மைதானா என்று அறியும் பக்குவம் பலருக்கு இருப்பதில்லையே!

    மகனுக்கு வழிகாட்ட, `உன் மனைவியை மதித்து நட. உன் தந்தையைப்போல் மனைவியைத் தூக்கி எறிந்து நடத்தினால், இந்தக் காலத்துப் பெண் ஒரே மாதத்தில் உன்னை விவாகரத்து செய்துவிடுவாள்!’ என்று பேச்சுவாக்கில் கூற, பெண்களை எப்படி நடத்துவது என்று புரிந்துகொள்வான்.

    கதை

    அன்று காலைதான் அவனுக்குக் கல்யாணம் நடந்து முடிந்திருந்தது. ஆனால் மணமகனின் முகத்தில் கலக்கம்.

    “எல்லாரும் Happy married life! என்று வாழ்த்துகிறார்கள். அது எப்படி என்றுதான் யாருக்கும் தெரியவில்லை!’ என்று அயர்ந்தான்.

    “பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதைப் புரிந்து, மதித்து நட. அவளுடைய பொழுதுபோக்குகளில் ஊக்கமளிப்பதுடன், முடிந்தால், நீயும் உதவி செய். ஆனால், ரொம்பத் தழைந்துபோய், மனைவி உன்னை மட்டமாக நினைத்து நடத்த இடம் கொடுக்காதே!” என்று அறிவுரை கூறினேன்.

    (பணியில் சேர்ந்த முதல் ஆண்டு மாணவர்களுடன் மிகுந்த நட்புடன், சிரித்த முகத்துடன் பழகும் ஆசிரியர்களுக்கு பிறகு எப்போதுமே அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது போய்விடும். இது என் அனுபவம். ஆரம்பத்தில் கெடுபிடியாக இருந்தால், பிறகு அதிகாரத்தைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ளலாம். இதைத்தான் மணமகனுக்கு மாற்றிச் சொன்னேன்).

    அவன் மணந்த பெண் பணக்காரி, கர்வி. கல்யாணம் முடிந்து, ஒரு வாரத்திலேயே அவளுடைய சுபாவம் புரிந்தது. பெற்றோர்களிடமே மரியாதைக்குறைவாகத்தான் நடந்துகொண்டாள். ஆனால் அவளுடைய அதிகாரம் அவனிடம் செல்லவில்லை. தான் மிரண்டால் கணவருடைய அதிகாரம் இன்னும் அதிகரித்துவிடும் என்று பயந்தோ, என்னவோ, மரியாதையாக இருக்கிறாள். இல்லறம் நல்லபடியாக நடக்கிறது.

    சில பெண்கள், `நாங்கள் நீண்ட காலம் ஆண்களைவிடக் கீழான நிலையிலே இருந்துவிட்டோம். இப்போது, ஒரு மாறுதலுக்காக, நீங்கள்தாம் எங்களைவிடத் தாழ்ந்த நிலையில் இருந்து பாருங்களேன்!’ என்பதுபோல் மிரட்டலாக நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது பிரச்னைகளைப் பெரிதாக்கும் வீண்முயற்சிதான்.

    தாழ்ந்தே இருக்க நேரிட்டால், எவருக்குமே ஆத்திரம்தான் வரும். ஒருவர்க்கொருவர் ஊக்கமளித்து உதவினால், இருவருமே முன்னேறலாமே!

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (67)

    நிர்மலா ராகவன்

    காலம் மாறிப்போச்சு

    நலம்-4
    ஒரு தலைமுறைக்குமுன் இருந்ததைவிட தற்போது குடும்பச்சண்டை, விவாகரத்து இதெல்லாம் அதிகரித்துவிட்டது என்று சமூக நல இயக்கத்தைச் சார்ந்த பெண்மணி ஒருவர் மேடையில் முழங்கினார். முன்பெல்லாம் பெண்கள் `கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று அமைதியாக இருந்தார்கள், இப்போது அவர்களுக்குப் பொறுமையும், விட்டுக்கொடுக்கும் குணமும் போய்விட்டன என்று காரணம் காட்டிப் பழித்தார்.

    பெண்கள் மோசமாகிவிட்டார்களா, அல்லது ஆண்கள்தாம் கடவுளைப்போல் இல்லையா? ஆராய்வோமா?

    அன்பு என்பது..

    காதலியோ, மனைவியோ, தன்னைத்தவிர வேறு எந்த ஆணுடனும் பழகக்கூடாது என்று மறைமுகமாகவோ, நேரிடையாகவோ தடைவிதிக்கும் ஆண் அவள் தனது உடைமை என்று எண்ணுகிறான். தான் சொல்வதையெல்லாம் கேட்டு அதன்படி நடந்தால்தான் அவளுக்குத் தன்மேல் அன்பு இருக்கிறதென்று அர்த்தம் என்று தவறாக நினைக்கிறான். அவனை மீறினால், உணர்ச்சிபூர்வமாகவோ, உடலாலோ வதைப்பதும் அவனுக்குச் சரியென்றே படுகிறது.

    பெண்களுக்கு உணர்ச்சிகளா? சேச்சே!

    சமீபத்தில் மலேசிய சட்டசபையில் ஓர் அரசியல்வாதி கூறியிருந்தார், கணவன் இன்னுமொரு பெண்ணை மணக்க ஒப்புதல் தராத மனைவி அவனை உணர்ச்சிபூர்வமாக வதை செய்கிறாள் என்று!

    இவரைப் போன்றவர்களுக்கு ஆண் என்ன செய்தாலும், `சரி’ என்று சொல்கிற பெண்கள்தாம் நல்லவர்கள். அதாவது, பெண்கள் சுயமாகச் சிந்திக்கக்கூடாது, அவர்களுக்கு உணர்ச்சிகள் என்று இருக்குமாயின், அவைகளை மறைத்துக்கொள்ள வேண்டும், அல்லது குழிதோண்டிப் புதைத்துவிட வேண்டும். அப்போதுதானே ஆண்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே அவர்களை வைத்திருக்க முடியும்!

    பெண் வெறும் போகப்பொருளாக இருந்த காலம் போய்விட்டது. தம் தாய்மார்களும், அத்தை, பெரியம்மாக்களும் வாழ்ந்து காட்டியதைப்போல் இன்றைய இளம்பெண்களுக்கு வாழ விருப்பமில்லை. இருப்பினும், கட்டுப்படுத்தும் ஒருவரை – காதலனாகவோ, கணவனாகவோ — தம்மையறியாது தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.
    நாமிருவர், எப்போதும்!

    காதலர்களோ, புதிதாக மணம் புரிந்துகொண்டவர்களோ, எப்போதும் ஒன்றாக இருப்பதுதான் அன்பின் வெளிப்பாடு என்று நினைக்கிறார்கள். `இவருக்குத்தான் தான் எவ்வளவு தேவைப்படுகிறோம்!’ என்று ஆரம்பத்தில் பெண்ணுக்கு ஏற்படும் பெருமை நாளடைவில் பொறுக்க முடியாத பாரமாகிவிடுகிறது.

    ஒன்றாகப் போகும்போது செல்ல வேண்டிய இடத்தையும், செய்ய வேண்டிய காரியத்தையும் ஒருவரே முடிவு செய்யும்போது, நாளடைவில் அடுத்தவருக்கு அதிருப்தி பிறக்கிறது.

    `நீ எங்கே போயிருந்தாய்?’

    `நான் உன்னுடன் இல்லாதபோது என்ன செய்கிறாய்?’

    இப்படி அடிக்கடி நேரிலோ, தொலைபேசிவழியோ ஒருவர் விசாரிப்பது அவர்களது பாதுகாப்பின்மையைத்தான் குறிக்கும். தன் காதலுக்கு உரியவர் தன்னைவிட்டுப் போய்விடுவாரோ என்ற பயம்தான் இப்படியெல்லாம் ஒருவரை அலைக்கழிக்கிறது. இது கண்டிப்பாக அன்போ, பரிவோ இல்லை. கட்டுப்பாடுதான்.

    கதை

    எப்போதும் காதலி தன்னுடனேயே இருக்கவேண்டும் என்று நினைத்தான் நாதன். அதனால் அவளுக்கு நெருக்கமானவர்களுடன் இருக்கும் தொடர்பை முறித்துவிடுகிறான். அப்படியே அவள் பிறருடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தாலும், அவனுக்குப் பிடிப்பதில்லை. `நாமிருவர் மட்டும் தனியாகப் போகலாமே! எதற்குப் பிறரை இழுக்கிறாய்?’ என்று நைச்சியமாகப் பேசுகிறான். தகராறு செய்கிறான்.

    பிறரிடமிருந்து ஒருவரைத் தனிமைப்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் வதையின் ஆரம்பம். வதைப்பவனுக்கு அதிகாரம் கூடுகிறது.

    `இவர் சொல்வதும் நியாயம்தானே!’ என்றெண்ணியோ, இல்லை, `எதற்கு வீண் சண்டை!’ என்று நினைத்தோ, அவளும் விட்டுக்கொடுக்கிறாள்.

    அவனுடைய ஆக்கிரமிப்பால் விளையும் சுதந்திரமின்மை பொறுக்க முடியாது போகிறது. ஆனால், யாரிடம் போய்ச் சொல்வது என்று புரியாது, மேலும் ஒடுங்கிப்போகிறாள்.

    எப்போதாவது தோழிகளுடன் வெளியே போகையில், பழைய கலகலப்பு குறைந்திருக்கிறது. அவர்களிடம் அவனைப்பற்றித் தரக்குறைவாகப் பேசவும் முடிவதில்லை.

    எந்தவித வதையை அனுபவிப்பவர்களும் தம்மை வதைப்பவர்களிடம் விசுவாசமாக இருப்பார்கள்.

    `என்னிடம் சொல்லாது, உன் ஃப்ரெண்ட்ஸோட ஊர் சுத்தினியா? என்னைப்பத்திதானே பேசினீர்கள்?’ என்று நாதன் அடித்தபோது கலக்கம் வந்தது.
    உடனே அவன் மன்னிப்பு கேட்டு, கொஞ்ச ஆரம்பித்தான். அவள் மனம் சமாதானப்பட்டது. அதுதான் அவள் செய்த தவறு.

    வதை ஆரம்பிக்கையிலேயே அதைத் தடுக்க முயல வேண்டும். இல்லாவிட்டால், அது தொடரும். முற்றிவிடும்.

    `உங்களுக்கும் மகிழ்ச்சியும் பாதுகாப்புமாக வாழ உரிமை இருக்கிறது என்று பெண்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பெண்களுக்குப் பிடித்தம் இல்லாததைச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்த எவருக்கும் உரிமை கிடையாது,’ என்று அறிவுரை வழங்குகிறார் பெண்கள் ஆதரவு இல்லத்தை நிர்வகிக்கும் ஒரு பெண்மணி.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (66)

    நிர்மலா ராகவன்

    பயணம் செய்யலாமா?

    நலம்

    ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஆசிய எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி ஒன்றை வைத்திருந்தனர். நீதிபதிகள் ஒரு கண்டுபிடிப்பைத் தெரிவித்திருந்தனர்: அந்த இருபது எழுத்தாளர்களும் ஒரு நாட்டிற்குமேல் வசித்திருப்பவர்கள். (அவைகளில் என்னுடையதும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது).

    வேலை நிமித்தம் வெளிநாடு செல்பவர்களைத் தவிர, வெகு சிலருக்குத்தான் பயணம் செய்யப் பிடிக்கிறது. சிலர் உள்நாட்டில்கூடப் பிரயாணம் செய்யத் தயங்குவார்கள்.

    கதை

    “விடுமுறை வரப்போகிறதே! எங்கே போகப்போகிறாய்?” என்று என்னுடன் வேலை பார்த்த மிஸஸ் சின்னைக் கேட்டேன்.

    அந்த இளம் சீனப்பெண், “எனக்கு வெளியூர்களுக்குப் போகவே பிடிக்காது. திரும்பி வந்ததும் குப்பை மாதிரி சாமான்கள் கிடக்கும்! அவைகளை ஒழித்துவைக்க எனக்குப் பொறுமை கிடையாது,” என்று முகத்தைச் சுளித்தாள்.

    அவளுடைய போலிச்சிரிப்பும், நயந்து பேசி, பிறரை உபயோகப்படுத்தும் தன்மையும் அவளைப் பிறருக்குப் பிடிக்காமல் செய்திருந்தது.

    நிறையப் பயணம் செய்பவளாக இருந்திருந்தால், பலதரமான மக்களை அறிந்திருக்க முடியும். பார்ப்பவர்களெல்லாம் தனக்கே உதவ வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை அகன்றிருக்குமோ?

    அனுபவம் புதுமை

    `வாழ்க்கை ஒரு நீண்ட பயணம்!’ என்கிறார்கள். நம் வாழ்வில் அடுத்து என்ன நிகழப்போகிறது என்று தெரியாது. அதுதான் சுவாரசியமே.

    வீட்டைவிட்டு வெளியே செல்லும் பயணமும் அப்படித்தான். நல்லதும் நடக்கலாம், நமக்குப் பிடிக்காததும் நடக்கக்கூடும். அனுபவங்கள் என்று எடுத்துக்கொண்டால், நமக்கு வேண்டாதவற்றை மறுமுறை தவிர்க்கலாம்.

    விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு என்று சொல்லி வைத்திருக்கிறார்களே! பிறர் வீட்டில் தங்கினால் நாம் அடுத்தவருக்குச் செலவு வைக்கிறோம் என்பது ஒருபுறமிருக்க, அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகளை நம் சௌகரியத்துக்காக மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். புதிய இடத்தில் வசதி, பிறருடைய பழக்கவழக்கங்களைப் புரிந்து நடப்பது — இதெல்லாம் நமக்கும் கடினம்தான்.

    நாட்டின் அருகாமையிலுள்ள பிற நாடுகளைச் சுற்றிப் பார்க்கவோ சில தினங்களே போதும். வீடு திரும்புகையில், எல்லாமே புதியதாகத் தோற்றமளிக்கும். புத்துணர்ச்சி பெருகுவது இதனால்தான். எவ்வளவுதான் புதிய அனுபவங்களைப் பெற்று வந்தாலும், வெளியில் அலைந்து திரிந்து, ஓய்ந்துபோய் வந்தால், `நம் வீடு, நம் அறை!’ என்று நிம்மதியாக, மிதப்பாக இருக்கும்.

    வியட்நாமில் ஒரு கோயிலில் ஷேக்ஸ்பியரைக் கடவுளாகக் கும்பிடுகிறர்கள்! புதிதாக ஓரிடத்திற்குச் செல்கையில், அங்கு எதை எதிர்பார்க்க முடியும் என்பதை அறியாததே உற்சாகத்தை அளிக்கவல்லது. எதையும் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க முடிவதால், அங்கு பெறும் அனுபவங்களே சிறந்த கல்வி.

    வித்தியாசமான பிறரை ஏற்று, விசாலமான மனப்பான்மையை அடைய ஒருவருக்கு தூரப்பயணத்தைப்போன்று வேறில்லை. ஆனால், அவை மட்டமானவை என்ற எண்ணம் கொண்டால் நம் வளர்ச்சியில் ஒரு மாற்றமும் இருக்காது.

    இருபது ஆண்டுகளுக்குமுன், இந்தோனீசியாவிலுள்ள பாலித் தீவில் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இடுப்பில் சாரோங் மட்டும் உடுத்துப் போவதைக் கண்டிருக்கிறேன். மார்பு திறந்திருக்கும். அது அவர்கள் கலாசாரம். மலேசியாவிலும், பூர்வ குடியினப் பெண்கள் அப்படித்தான். வெளிநாட்டுக்காரர்கள் இவர்களை புகைப்படம் எடுத்ததைப் பார்த்து எனக்கு ஒரே ஆத்திரமாக இருந்தது. பெண்மையை மதிக்கத் தெரியாதவர்கள்!

    ஆனால், இப்போது இப்பெண்களெல்லாம் சட்டை அணிகிறார்கள். அவர்களது நாகரீகத்தை மதிக்காது, உல்லாசப்பயணிகள் விரிந்த கண்களுடன் புகைப்படம் எடுத்ததன் விளைவோ?

    புதிய இடங்களில், நமக்குச் சிறுவயதில் சொல்லிக் கொடுக்கப்பட்டவைகளை வேறு கோணத்திலிருந்து பார்க்கவும் கற்கிறோம். அவைகளை மாற்றுவதிலேயே ஒரு மகிழ்ச்சி.

    கதை

    மழை நாட்களில் என் தாய் என்னை பள்ளிக்கூடம் அனுப்பமாட்டாள், `மழையில் நனைந்தால் ஜூரம் வரும்!’ என்று.

    மறுநாள் ஆசிரியரிடம் திட்டு வாங்குவேன், `நீ என்ன வெல்லக்கட்டியா? கரைஞ்சு போயிடுவியா?’ என்று.

    சில ஆண்டுகளுக்குமுன், பாலியில் நானும் என் பேத்தியும் ஒரு சாயங்கால வேளையில் உலவச் சென்றோம். எங்களுடன் அருகில் தங்கியிருந்த செல்லம்மாள் என்ற ஒரு மூதாட்டியும் வந்திருந்தாள்.

    வழியில் மழை வரும்போல் இருந்தது. அந்த அம்மாள் பயந்து, திரும்பிப் போய்விட்டாள்.

    நாங்கள் தங்குமிடம் பதினைந்து நிமிடத் தொலைவில் இருக்க, “இன்னும் சில நிமிடங்களில் மழை வரப்போகிறது. எப்படியும் நனையப்போகிறோம். எதற்காக ஓடவேண்டும்?” என்றேன். என் பேத்திக்குப் பரம சந்தோஷம். (எந்தச் சிறுமியைத்தான் நனைய விட்டார்கள் பெற்றோர்!)

    மழை கொட்ட, இருவரும் கைகளைக் கோர்த்து, வீசிக்கொண்டு, பாடியபடி மெதுவாக நடந்தோம். பார்ப்பவர்களெல்லாம் சிரித்து, “குடை கொண்டுவரவில்லையா?” என்று (அநாவசியமாக) விசாரித்தார்கள்.

    நாங்களும் சிரித்தபடி கையை ஆட்டினோம்.

    அறைக்குத் திரும்பியதும், குளிர்ந்த நீரில் தலைக்குக் குளித்தோம். அப்போதுதான் மழைநீர் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    மறுநாள் காலை. செல்லம்மாள், “நல்ல வேளை, நான் ஓட்டமும் நடையுமா மழைக்குமுந்தி வந்துட்டேன்!” என, நான், “நாங்க ஜாலியா மழையிலே நனைஞ்சுண்டே வந்தோம்!” என்றேன், அந்த நினைவு எழுப்பிய பூரிப்புடன்.

    “ஜாலியா?” என்று விழித்தாள் அம்மாது.

    எங்களுக்குக் காய்ச்சல் வரவில்லை என்பதுடன், சில வருடங்களுக்குப் பின்னரும் அந்த நிகழ்ச்சி பசுமையாக மனதில் பதிந்திருக்கிறது என்றால், அது அந்த வித்தியாசமான அனுபவம் அளித்த மகிழ்ச்சியால்.

    எல்லாம் மனதில்தான்

    கானடா நாட்டிலுள்ள விக்டோரியா தீவில் (அது ஆர்க்டிக் பகுதியாம்) நான் சந்தித்த ஒரு ஐரோப்பிய மாது மிக மெல்லிய சட்டை மட்டும் அணிந்திருந்தாள். நானோ, சட்டைக்குமேல் ஸ்வெட்டர், கோட்டு இத்தியாதிகளோடு நடுங்கிக்கொண்டிருந்தேன்.

    “உங்களுக்குக் குளிரவில்லையா?” என்று அதிசயப்பட்டுக் கேட்டேன்.

    “நான் சின்னப்பெண்ணாக இருந்தபோது, என் பாட்டி, “குழந்தே! ரொம்பக் குளிர்கிறது. வாசலில் நிற்காதே!’ என்று பொத்திப் பொத்தி வளர்த்தார்கள். இப்போது இந்தக் குளிர் என்னை எதுவும் செய்வதில்லை. எல்லாம் நம் மனதில்தான் இருக்கிறது,” என்று சிரித்தாள்.

    அவள் வீட்டில் பல பூனைகள் இருந்தன. சாய்பாபா பஜன் கேட்கும்போதெல்லாம் அவை ஒரே இடத்தில் அமைதியாக அமர்ந்திருக்கும் என்று கூற ஆச்சரியமாக இருந்தது.

    எந்தப் பயணமும் எளிதாக அமைந்து விடுவதில்லை. காய்ச்சல், தலைவலி, அஜீரணம் (அல்ட்ரா கார்பன்தான் (ULTRA CARBON) மிகச் சிறந்தது என்று விமானதளத்தில் உள்ள கடையில் சிபாரிசு செய்ய, உடனுக்குடன் குணப்படுத்தும் அது இல்லாமல் நான் எங்கும் செல்வதில்லை), வயிற்றுப்போக்கு என்று பலவித உபாதைகளுக்கும் மருந்துகளை எடுத்துப்போவது நல்லது. புதிய இடத்தில் மருந்துக்கடையைத் தேடி அலைய வேண்டியதில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக நிறைய இடங்களைச் சுற்றிப்பார்க்கலாம்.

    எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட்டாலும், எப்படியோ குளறுபடி ஆகிவிடும். அதற்குப் பயந்து, நமக்குப் பழக்கமான சொகுசான இடத்திலேயே இருந்தால், புதிய அனுபவங்கள் எப்படிக் கிடைக்கும்? என்னதான் படித்தாலும், தொலைகாட்சியில் பார்த்தாலும் நேரில் பார்ப்பதுபோல் ஆகுமா?

    தென்கிழக்கு ஆசியாவிலிருக்கும் அங்கோர் வாட்டைக் கண்டு களிக்க கம்போடியா சென்றிருந்தபோது, போரில் கால்களை இழந்தவர்கள் உட்கார்ந்த நிலையில் பாடிப் பிழைப்பதையும், அங்கிருந்த KILLING FIELDS என்னுமிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்டையோட்டையும் கண்டு மிகுந்த அதிர்ச்சி உண்டாயிற்று.
    அதேபோன்ற பாதிப்பைத்தான் வியட்நாமிலிருந்த யுத்த கால அருங்காட்சியகமும் உண்டாக்கியது.

    “இனிமேல் இங்கெல்லாம் வரவே கூடாது,” என்றேன், அந்த வேதனை அளித்த அலுப்புடன்.

    என் மகள், “இங்குள்ள மக்களின் பிழைப்புக்கு நம்மைப்போன்ற உல்லாசப் பயணிகள் பெருமளவு உதவுகிறார்கள். யாருமே வராவிட்டால் என்ன ஆகும்?” என்றாள்.

    உண்மைதான். பயணங்கள் மேற்கொள்வதால், நமது அறிவும் விசாலமாகிறது, அந்நியர்களும் பலனடைகிறார்கள்.

    `எப்போதும் மகிழ்ச்சி குன்றாத நிலையில்தான் இருப்பேன்!’ என்றால் நடக்கிற காரியமா? துன்பம் அனுபவித்தால்தானே இன்பத்தின் அருமை புரியும்?

    தொடருவோம்

    Share
  • புக்கெட் (Phuket) (பயணக் கட்டுரை)

    நிர்மலா ராகவன்

    தாய்லாந்தில் உள்ள புக்கெட் சுற்றுச்சூழலால் பாதிக்கப்படாத வெகு சுத்தமான, ஆகவே அரிதான, கடற்கரைப் பகுதி. அந்தமான் கடலால் சூழப்பட்டிருக்கும் இத்தீவிற்கு உலகெங்கும் உள்ள உல்லாசப்பயணிகள், குறிப்பாக குளிர் பிரதேசங்களில் வசிப்பவர்கள், வருகிறார்கள்.

    IMG_20170716_123346

    சுமார் இருபது வருடங்களுக்குமுன் மீனவர் கிராமமாக இருந்தது புக்கெட். இப்போதோ, அகில உலக விமான நிலையம். தாய்லாந்தின் தென்கோடியில் இருப்பதால், கோலாலம்பூரிலிருந்து விமானப்பயணம் ஒன்றேகால் மணிதான். Air Asia -வில் போனால்அவ்வளவாகக் கையைக் கடிக்காது.

    பொதுவாக, நீல வண்ணம் என்றுதானே கடல் வர்ணிக்கப்படுகிறது? இங்கிருக்கும் அந்தமான் கடல் se green என்ற வகை. வெளிர் பச்சைநிறக் கடல் கொள்ளை அழகு.

    கடை வெளியே அழகுப் பதுமை

    நாங்கள் தங்கியிருந்த கரோன் கடற்கரையை ஒட்டி தென்னை மரமும் சவுக்கு மரமும் அடர்ந்திருந்தன. எதிர்ப்புறம் தெருக்கள். தெருக்களுக்குப் பின்னால் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள்.

    அண்மையில் டெங்கிக் காய்ச்சல் கண்டு, பலவீனமாக இருந்த என் உடல் தேறுவதற்காக என்னுடன் வந்திருந்தாள் என் இளைய மகள் சித்ரா. கடலைப் பார்த்தாலே எனக்கு உற்சாகமாகி விடும் என்று புரிந்தவள்.

    ஆங்காங்கே, `இங்கு குளிக்கக் கூடாது!’ என்று அபாய அறிவிப்பு செய்யும் சிவப்புக் கொடிகள். `குளிக்கப் போவதில்லை. சும்மா காலை நனைத்துக் கொண்டால் என்ன!’ என்று நான் துணிந்து (அசட்டுத்தனமாக?) போக, ஒரு பேரலை எதிர்பாராவிதமாக என்னை வீழ்த்திவிட்டது. கையை ஊன்றி, ஒரு காலை மடித்து உட்கார்ந்து, சிரிக்க ஆரம்பித்தேன்.

    “இந்த இடத்தில் காலைக்கூட நனைக்க முடியாது. அப்படியே வீழ்த்திவிடும்!” என்று உள்ளூர்க்காரி ஒருத்தி என்னிடம் எச்சரிக்கையாகக் கூறினாள். நான் ஏன் வாயைத் திறக்கிறேன்!

    விடுமுறைக்காலம் முடிந்துவிட்டதால், கைத்தடியை ஊன்றி நடந்த, வயது முதிர்ந்த வெள்ளைக்காரர்கள்தாம் அவ்விடத்தில் அதிகம் காணப்பட்டனர். வாழ்க்கை என்றால் ஒரே இடத்தில் இருப்பதில்லை, எத்தனை வயதானாலும், உயிர் உடலில் ஒட்டிக்கொண்டிருந்தால் இயன்றவரை வாழ்ந்து பார்க்கவேண்டும் என்ற பாராட்டத்தக்க குறிக்கோள் உடையவர்கள் அவர்கள்.

    `வயசாயிடுத்து. ஒண்ணுமே முடியலே!’ என்று சுயபரிதாபத்துடன், இருந்த இடத்திலேயே இருப்பது அறிவீனம் என்பது நல்ல பாடமாக அமைந்தது. மனம் இன்னும் தளர வழி செய்வதுபோல்தானே அது?

    தாய்லாந்தில் பெரும்பாலான மக்கள் புத்த மதத்தினர். (ஆங்காங்கே மசூதிகளும் காணப்பட்டன). இங்கு எக்காலத்திலும் காலனித்துவம் இருக்கவில்லை. அதனாலோ என்னவோ, உயர்வு, மட்டம் என்று (பிறர் ஏற்படுத்திவிட்டுப் போகும்) வித்தியாசமும் கிடையாது. எல்லாரையும் அணைத்துப்போகும் குணம். `அலி’ என்று நாம் குறிப்பிடுபவர்கள் சமூகத்தில் பிறரைப்போல சமமாகக் கருதப்படுகின்றனர்.

    எந்தவித கண்டிப்பும் கிடையாது என்பதால் வீதிகளில் ஒரு சாண் அகல பிகினி அணிந்துபோகும் ஆண்களும் பெண்களும் சர்வ சாதாரணமான காட்சி. (முன்பு நிர்வாணக் குளியல் இருந்தது). குளிரால் பாதிப்பு அடையாதிருக்க விட்டமின் D உட்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தவர்களுக்கு எவ்வித பிரயத்தனமும் இல்லாது சூரியனே அதை அளிக்கும்போது, மூடி மறைத்துக்கொள்வானேன்! உச்சி வெயிலில், மூன்று மணி நேரம் நீச்சல் குளத்துள் காய்ந்தவர்களைப் பார்த்து எனக்கு ஒரே வியப்பு.

    உல்லாசப்பயணிகளை நம்பித்தான் வாழ வேண்டியிருக்கிறது என்ற நிலையில், பல இடங்களில் சர்வசாதாரணமாகக் காணப்பட்டபோலித்தனம் எனக்கு எரிச்சலை மூட்டியிருக்கிறது. புக்கெட் தீவில் உள்ளவர்களின் சிரிப்பில் எவரையும் ஏற்கும் நல்ல குணம்தான் தெரிந்தது.

    ஒரு கடை சாப்பாட்டுக்கடை என்றால், அடுத்தது மசாஜ் பார்லர். `உடலை இளைக்க வைக்கும் மசாஜ்’ என்று ஒரு வகை! பலருக்கும் அவசியம்தான் என்று தோன்ற, சிரிப்பு வந்தது. பின்னே? மலிவாகக் கிடைக்கிறதே என்று, வேளை பொழுது பாராது வகைவகையாக உள்ளே தள்ளினால்?

    IMG_20170717_171737

    “தேங்காய் எண்ணை மசாஜ் செய்து, உடலை பழுப்பு நிறமாக்குகிறோம்!” என்று ஒரு பலகை அறிவித்தது. நாமோ, முகத்தை வெண்மையாக்கும் கிரீம்களை நாடுகிறோம்! கருப்பாக இருக்கும் பெண்களுக்குக் கல்யாணம் ஆவதுகூட கடினம் என்ற நிலை! நல்ல உலகம்!

    தாய்லாந்தில் செய்யும் மசாஜ் உலகப் பிரசித்தமானதாகையால், தினமும் போனோம். எண்ணையைத் தடவி கையால் உடம்பை நீவிப் பிடித்துவிடுதல் ஒருவிதம். மூலிகைகளைத் துணியில் சுற்றி, சூடு காட்டி ஒத்தடம் கொடுப்பதுபோல் இன்னொன்று. இம்முறையைச் செய்பவர்கள் விசேடப் பயிற்சி பெற்றவர்கள். முதலில் கைகளையும் கால்களையும் முறுக்கினாள் எனக்கு மசாஜ் செய்தவள், கடினமான யோகப்பயிற்சியை ஒரே நாளில் கற்றுக்கொடுக்க விழைவதுபோல். வலி உயிர் போவதுபோல் இருந்தாலும், அதன்பின் புத்துணர்வு பிறந்தது. கண்கள் தெளிவாகின. குறித்த நேரத்துக்குமேல், நமக்குத் தேவையானவரை செய்கிறார்கள்.

    தீவானதால், இங்கு கடல்வாழ் இனங்களைக்கொண்டு ஆக்கப்பட்ட உணவுவகைகள் மலிவு. அதற்காகவே அண்டைநாடுகளிலிருந்து பயணிகள் வருகிறார்கள். காய் கனிகளும் மலிவு. ஒரு சாமானை விலை கேட்டு, வாங்காவிட்டால் கடைக்கார்கள் கோபிப்பதில்லை. புன்சிரிப்புடன், கைகூப்பி நமஸ்காரம் செய்கிறார்கள், `காபுன்கா’ (kapunka) என்று. (பெண்களுக்கு முகமன் கூறுவது, விடைபெறுவது இரண்டிற்கும் அதே வார்த்தைதான்).

    ஒரே மாதிரியான அக்கம்பக்கத்துக் கடைச் சிப்பந்திகளுக்குள் போட்டி இல்லை, நட்புடன் பழகுகிறார்கள் என்பது என்னை ஆச்சரியப்படுத்திய மற்றொரு சமாசாரம்.

    புக்கெட் தீவிலுள்ள எல்லாக் கடைகளிலும் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கோ, வாகன வசதிக்கோ ஒரே விலைதான். (இரண்டுமே அதிக விலை). அதனால் பேரம் என்பதே இல்லை.

    சைவ உணவில், மீனுக்குப் பதில் (fish stock) தேங்காய்ப்பால் சேர்த்துச் சமைத்துக் கொடுக்கிறார்கள். வருகிறவர்கள் திருப்தியாக உணவருந்தி மகிழ வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் ஆக்குவதாலோ, என்னவோ, எல்லா இடங்களிலும் நல்ல ருசி. பெரிய அளவில் கொடுக்கிறார்கள்.

    ஒரு நாள், நான் நிறைய நடந்துவிட்டு, களைப்புடன் ஒரு சாப்பாட்டுக்கடையில் நுழையுமுன்னர், வாசலிலிருந்த இளைஞன் அருமையாக, “Mamma! Come!” என்று என் தோளைப்பற்றி, சற்று உயரமாக இருந்த வாசற்படியைக் கடக்கவைத்து, உள்ளே அழைத்துச் சென்றான். என்னைப் பிரத்தியேகமாகக் கவனித்தான்.

    திரும்பிப் போகையில், “உன் தாய் உன்னுடன் இல்லையா?” என்று விசாரித்தேன்.

    “வெகு தூரத்தில், பாங்காக்கில் இருக்கிறார்கள்!” என்று வருத்தத்துடன் கூறிவிட்டு, “எனக்கு நீங்கள்தான் அம்மா,’ என்றான்.

    ஆதரவுடன் அவன் தோளைத் தட்டிக்கொடுத்தேன். அவனுக்குப் பரம சந்தோஷம். “Take care of Mamma!” என்று என் மகளுக்கு அறிவுரை வழங்கினான்!

    காற்றோட்டமாக இருந்ததால், நிறைய நடக்க முடிந்தது. எந்த வேலையும் கிடையாது. வெயில் வேளையில் உறக்கம். உடலும் மனமும் ஒருங்கே லேசானதில், கற்பனையில் ஒரு நாட்டியப் பாடலும் எழுந்தது. போனதற்கு ஒரு நற்பயன்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (65)

    நிர்மலா ராகவன்

    பணக்கார வீட்டுக் குழந்தையா! ஐயோ, பாவம்!

    நலம்

    எங்கள் தெருவில் நாலைந்து வீடுகள் தள்ளி இருக்கிறாள் மிஸஸ் வாங். பெரிய படிப்பு, அதற்கேற்ற உத்தியோகம். கணவன், மனைவி இருவரும் கைநிறைய சம்பாதித்தார்கள். பெரிய வீடு இல்லாமலா! ஆனால், தம்பதியர் வீட்டிலிருப்பதே அபூர்வம்.

    அவர்களுடைய மூன்று குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது?

    வெளிநாட்டுப் பணிப்பெண்கள் எதற்காக இருக்கிறார்கள்!

    “எங்கள் வீட்டில் மூன்றுபேர் வேலை செய்கிறார்கள்,” என்று என்னிடம் சாதாரணமாகத் தெரிவித்தாள். பெருமை என்றில்லை. வேறு என்ன செய்வது என்ற தொனி. “மாடியைச் சுத்தப்படுத்த ஒருத்தி, கீழே ஒருத்தி. இவர்களிருவரும் இந்தோனீசியர்கள். குழந்தைகளைக் கவனித்து, அவர்களுக்குப் பிடித்ததை சமைத்துப்போட ஃபிலிப்பீனோ!” என்றாள்.

    ஃபிலிப்பீன் நாட்டைச் சேர்ந்த பெண்கள் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருப்பதால், மலேசியாவில் அவர்களுக்குச் சம்பளம் அதிகம். எனக்குத் தெரிந்த ஒரு பணிப்பெண் கணக்காய்வாளராக இருந்தவள்!

    `வீடு என்றால் ஓய்வெடுக்கத்தான்!’ என்பதுபோன்ற மனப்பான்மை கொண்ட மிஸஸ் வாங் பருமனாக இருந்ததில் ஆச்சரியமில்லை.

    சுமாரான வருமானம் உடையவர்கள்கூட வீட்டிலேயே விளையும் மரவள்ளிக்கிழங்கையும், உருளைக்கிழங்கையும் சாப்பிட்டு குண்டாக இருக்கையில், தானும் அவர்களைப்போல் இருப்பதா என்று அவள் நினைத்திருக்க வேண்டும். பொழுதைக் கழிக்க கோல்ஃப் ஆடும் பழக்கத்தை மேற்கொண்டாள். அதோடு, லைன் டான்ஸ் என்ற நாட்டியப்பயிற்சி வேறு.

    “மிகவும் ஷேப்லியாக (shapely) ஆகிவிட்டீர்களே!” என்று நான் பாராட்டியபோது, மகிழ்ந்துவிட்டாள். உடனே அவள் முகம் மாறியது. “என் மகள் யென் யென்னையும் (Yen Yen) இதையெல்லாம் கற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறேன். ஆனால் அவளுக்கு எதுவுமே வணங்குவதில்லை,” என்றுவிட்டு, “எப்போதும் சாப்பாட்டில்தான் கவனம்!” என்று பிரலாபித்தாள்.

    எனக்கு ஆச்சரியம் எழவில்லை.

    சமைப்பதற்கென்றே அமர்த்தப்பட்ட ஒரு பணிப்பெண். சிறுமிகள் தம் காலைச் சுற்றி வராமலிருக்க தின்பண்டங்கள் ஓயாது கொடுத்துக் கொண்டிருப்பவள்.

    தாய், தந்தை இருவருடைய கவனிப்பும் இல்லாது, என்ன செய்வது என்று புரியாது, தொலைகாட்சி பார்த்தபடி எதையாவது கொறிக்கும் பழக்கம் அவளுடைய மூன்று குழந்தைகளுக்கும்.

    அது மட்டுமா? ஏதாவது ஒரு விளையாட்டிலோ, படிப்பிலோ சற்றே தோல்வியுற்றால் அதிர்ந்து போகும் பெற்றோர். தம்மைப்போன்று தாம் பெற்ற குழந்தைகளும் வாழ்க்கையில் பெருவெற்றி அடையவேண்டும் என்ற `நல்லெண்ணத்துடன்’ அவர்களை அளவுக்கு மீறிக் கண்டிப்பவர்கள்.

    இதனால், தான் எதையாவது செய்யப்போய், அதில் தோல்வி அடைந்து எப்போதோ பார்க்கும் பெற்றோரிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியிருக்குமே என்று பயந்து புதிதான எதிலுமே ஆர்வமில்லாமல் போயிருக்கிறாள் அப்பெண், பாவம்! குமுறி எழும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாது, உணவால் அதை மறக்க முயற்சிக்கிறாள். விலையுயர்ந்த ஆடைகளும், ஆளுக்கொரு கணினியும் இருந்தாலும் யென் யென் ஏழைதான் என்றே தோன்றியது.

    வாழ்க்கையில் பிடிப்போ இலக்கோ இல்லாது, சாப்பிடுவதில் மட்டும் ஆர்வம் காட்டிக்கொண்டு, எப்படியோ பொழுது போனால் சரி என்று காலத்தை ஓட்டுகிறவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்தானே?

    என்னிடம் படிக்க வந்த ஒரு மலாய் பையனும் இப்படித்தான்.

    “இந்தக் கணக்கைப் போடு,” என்று நான் சொல்ல வேண்டியதுதான், நாற்காலியில் சரிந்து உட்கார்ந்துவிடுவான். நாம் இவனுடன்தான் பேசுகிறோமா என்ற சந்தேகம் நமக்கே வந்துவிடும். அப்படி இருக்கும் அவனுடைய தோரணை.

    `என்ன சொன்னால் சுறுசுறுப்பாக மாறுவான்?’ என்ற குழப்பத்துடன் தாய் ஓயாமல் விரட்ட, மேலும் அடங்கிப்போயிருந்தான்.

    `திட்டினால், குழந்தைக்கு அவமானம் அளிப்பதுபோல!’ என்று சிறு வயதில் எந்த தவறு செய்தாலும் கண்டிக்காது விட்டதில், பதின்ம வயதில் மனம் போனபடி நடக்கும் இப்படிப்பட்ட சிறுவர்கள் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பாரமாகி விடுகிறார்கள்.

    நான் இப்படி ஒரு பையனைப்பற்றி அவனுடைய தாயிடம் புகார் செய்தபோது, “வீட்டிலும் இப்படித்தான்! எதிர்த்து எதிர்த்துப்பேசுவான். என்ன செய்வதென்றே புரியவில்லை,” என்றாள் வருத்தத்துடன். உரிய காலத்தில் கண்டிக்காது விட்டது யார் தப்பு?

    கதை

    அது கூட்டுக்குடும்பம். ஆனாலும், ஒருவர் விஷயத்தில் இன்னொருவர் அநாவசியமாகத் தலையிடாது சுமுகமாக இருந்ததால், வீட்டில் அமைதியும், சிரிப்பும் நிலவின.

    தாய் வேலைக்குப் போனால், பார்த்துக்கொள்ள தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள். தனிமை தெரியாது குழந்தைகள் வளர்ந்தார்கள்.

    மூன்று வயதாக இருந்த ராணியை ஒரு நாற்காலியின்மேல் ஏறவைத்து, அவளுடைய தோய்த்த துணிகளை உலர்த்தச் செய்தார் தந்தை. அன்று பூராவும், `நானே செய்தேன்!’ என்று பெருமையாக எல்லாரிடமும் சொல்லி மகிழ்ந்தாள். எவ்வளவு சிறிய குழந்தையானாலும், ஒரு காரியத்தை அதன் வயதுக்கேற்ப செய்து முடித்தால், தன்னம்பிக்கை வளருமே!

    அடுத்த ஆண்டு பாலர் பள்ளியில் விளையாட்டு விழா. ராணிக்கு எல்லாவற்றிலும் முதல் பரிசு.

    ஒரு விளையாட்டில், சிறிது தொலைவு ஓடி அருகிலிருந்த வாளியிலிருந்து துணியை எடுத்து உலர்த்துவது.

    மற்ற குழந்தைகளெல்லாம், `இது நம் வீட்டு வேலைக்காரியின் வேலை அல்லவா?’ என்று திகைத்து நின்றார்கள்.

    `இதற்கெல்லாமா போட்டி வைப்பார்கள்!’ என்று பெற்றோர் அதிருப்தியுடன் முணுமுணுத்தார்கள்.

    `போகட்டும், சிறு குழந்தைகள்தானே!’ என்கிறீர்களா?

    தமிழ்நாட்டில் எங்கள் உறவினர் வீட்டுப்பையன். இருபது வயது.

    “இன்னிக்கு ரெண்டு வேலைக்காரியும் மட்டம் போட்டுட்டா. கொஞ்சம் துணியை உலர்த்துப்பா,” என்று நான் கெஞ்சலாகக் கூற, “எப்படின்னே தெரியாது,” என்று அலட்சியமாகக் கூறியபடி அப்பால் போய்விட்டான். அவன் ஒரு குறிப்பிட்ட துறையில் மேதாவி. ஆனால், அதுமட்டும் போதுமா?

    `களவும் கற்று மற’ என்று எதற்காகச் சொல்லி வைத்தார்களோ! வாழ்க்கைக்குத் தேவையான பலவற்றையும் அரைகுறையாகவாவது கற்றிருந்தால் எங்கு சென்றாலும், எப்படியாவது பிழைக்கலாம். எல்லாவற்றிற்கும் பிறர் கையை நாட வேண்டியதில்லை.

    கடந்த நூற்றாண்டின் பிரபல அமெரிக்க வயலின் விற்பன்னர் யஹூதி மெனுஹின் ஒரு முறை கூறியிருந்தார், “நான் என் மாணவர்களுக்கு வயலின் வாசிக்க மட்டும் கற்றுக் கொடுப்பதில்லை. தம் விரல்களை இழந்தாலும், அவர்களால் பிழைத்துக்கொள்ள முடியும்!”

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (64)

    நிர்மலா ராகவன்

    விழு-அழு-எழு

    நலம்

    முன்பு, என் பக்கத்து வீட்டு மலாய்க்காரப் பெண் சாயங்கால வேளைகளில் எங்கள் வீட்டுக்கு அவளுடைய கைக்குழந்தையுடன் வந்து, என்னுடன் பேசிக்கொண்டிருப்பாள்.

    “எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது,” என்று ஆரம்பித்தவள், “குழந்தையின் குரல் ஆண்பிள்ளைகளுடையதுபோல் கட்டையாக இல்லையே!” என்றாள். அவளுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள்.

    “மூன்று மாதம்தானே ஆகிறது! பையனோ, பெண்ணோ, எல்லாக் குழந்தைகளுக்கும் குரல் கீச்சு மூச்சென்றுதான் இருக்கும். தானே பதினான்கு வயதானால் ஆண்பிள்ளைகளின் குரல் உடைந்துவிடும்,” என்று சமாதானப்படுத்தினேன்.

    ““நிஜமாகத்தானே சொல்கிறீர்கள்? நான் ரொம்ப பயந்துவிட்டேன்!” என்று, திரும்பத் திரும்ப அதையே நான் சொல்லும்படி கேட்டுக்கொண்டாள்!

    ஆண்பிள்ளை என்றால் கட்டைக்குரலுடன், யாருக்கும் படியாத முரடனாக இருக்க வேண்டுமா, என்ன?

    `வீரம்’ என்றால் மீசையை முறுக்குவது, சிறு காரணத்திற்கெல்லாம் பிறரை அடித்து உதைப்பது, சட்டையின் பின்புறத்திலிருந்து அரிவாளை உருவுவது என்பதெல்லாம் தமிழ்ப்படங்கள் நமக்கு உணர்த்தும் பாடம். அதிகாரத்தால் பிறரை பயப்பட வைக்கலாம். ஆனால் அப்படிச் செய்வதால் உண்மையான அன்போ, மரியாதையோ கிடைக்குமா?

    மூன்று, நான்கு வயதுக் குழந்தை அழுதால்கூட, “ஐயையே! வெக்கமேயில்லே. ஆம்பளை அழலாமா?” என்று கேலி செய்து, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்வதுதான் ஆண்மையின் லட்சணம் என்று சிறு வயதிலேயே உணர்த்திவிடுகிறார்கள்.

    அதனால், கீழே விழுந்து அடிபட்டுக்கொள்ளும்போது, `அழுதால் பிறர் கேலி செய்வார்களே!’ என்று பயந்து, அதை அடக்கிக்கொள்வார்கள். எதையும் பொறுத்துப்போவதும் உண்டு. அது தவறு.

    கதை

    ஐந்து வயதுக்குள் இருக்கும் அவனுக்கு. எப்போதும் அழுவான். அப்படி என்ன வருத்தம் அவனுக்கு?

    தாத்தா காரணமில்லாமல் அவனைத் திட்டிக்கொண்டே இருப்பார். மரியாதை கருதி, அவனைப் பெற்றவர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனெனில், அந்த வீட்டில் தாத்தா வைத்ததுதான் சட்டம். அப்படி ஒரு சர்வாதிகாரம்.

    உறவினர்கள் அச்சிறுவனுக்குக் கொண்டுகொடுக்கும் விளையாட்டுச் சாமான்களை உடனே பிடுங்கி, அவனுக்கு எட்டாத தூரத்தில் வைத்துவிடுவார்கள். உடனே உடைத்துவிடுவானே! `என்ன கொண்டு வந்தார்கள்?’ என்று வம்படிக்க வரும் அக்கம்பக்கத்தினருக்கு உடைந்த சாமான்களையா காட்டுவது?

    தான் யாருக்குமே ஒரு பொருட்டாக இல்லையே என்ற ஏமாற்றத்துடன், வாயைத் திறந்தாலே மிக உரக்கத்தான் பேசுவான் சிறுவன். இல்லாவிடில், அழுதுகொண்டே இருப்பான். நல்ல வேளை, எல்லா விளையாட்டுகளிலும் ஈடுபாடு இருந்ததால், நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.

    இப்போது, உலகப் பிரசித்தி பெற்ற நிறுவனம் ஒன்றில் தலைமைப் பதவியில் இருக்கிறான். சிறு வயதில் அவனை அறிந்தவர்கள், `இவன் எப்படி இவ்வளவு தூரம் முன்னுக்கு வந்தான்!’ என்று வியப்படையும் அளவுக்கு ஒரு வளர்ச்சி. பொறுமையும் நிதானமும் அவன் குணமாகிவிட்டது.

    இளமையில் எவ்வளவோ கஷ்டப்பட்டபோதும், அவ்வப்போது அழுது அவைகள் தன்னைப் பாதிக்க விடவில்லை அவன். அத்துடன், பிற மனிதர்களின் குணமும் புரிந்துபோயிற்று.

    ஆண் என்றால் அதிகாரம்

    ஆண் என்பவன் எந்த நிலையிலும் உறுதி படைத்தவனாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியால் ஒருவரின் மன அழுத்தம்தான் அதிகரிக்கிறது. வளர்ந்த பின்னரும், முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாது இருப்பவர் ஆண்மை மிகுந்தவராக இருக்கிறார் என்று பிறரை நினைக்க வைக்க முயலுகிறார்கள். தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்களோ?

    அலுவலகங்களில் அதிகாரிகளுக்கு அடங்கி நடப்பவர்கள் வீட்டில் தம் அதிகாரத்தைக் காட்டி ஆறுதல் தேடிக்கொள்வார்கள். இவர்களைப் போன்றவர்கள் பெண்கள் தம்மைவிட உயர்ந்த நிலையில் இருந்தால் பலவீனமாக உணர்வார்கள். தம் அதிகாரத்தை மறைமுகமாக அவர்கள்மேல் செலுத்துவார்கள். மட்டம் தட்டவும் தயங்குவதில்லை.

    `ஆண்’ என்றாலே அதிகாரம் என்று எளியவர்களை ஆட்டிப்படைக்கும் குணம் எப்படி வருகிறது?

    முன்காலத்தில், ஒருவயதுக்குட்பட்ட பெண்களைவிட ஆண்குழந்தைகளே அதிகமாக இறக்க, அவர்களது உடல் நிலையில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருந்ததாம். `பெற்றோரும் உற்றாரும் தம்மீது பாசத்தைப் பொழிகிறார்களே, தாம் உயர்த்தி என்பதால்தானே!’ என்ற எண்ணம் ஆண்களுக்கு அப்படி ஏற்பட்டிருக்கலாம். ஹார்மோனால் கூடுதலான உடல் வலிமைவேறு!

    (இப்போதும், முதுமையில் பெண்களைவிட ஆண்கள்தாம் சில வருடங்கள் முன்னரே இறக்கிறார்கள். பெண்கள் அவ்வப்போது அழுது தம் மனக்கவலைகளைத் தீர்த்துக்கொள்வதும் ஒரு காரணம்).

    `தவறு செய்துவிடுவோமோ!’ என்று பயந்து எதுவுமே செய்யாதிருப்பவரும் இல்லாமலில்லை.

    ஒரு வேலைக்கான பேட்டிக்கு வந்த பட்டதாரியிடம் கேட்கப்பட்ட கேள்வி: “சம்பளம் கிடைத்தால், என்ன செய்வாய்?”

    “வங்கியில் போடுவேன்!”

    அந்த இளைஞனுக்கு வேலை கிடைக்கவில்லை. புதிதாக எதையாவது கற்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமோ, தைரியமோ இல்லையே!

    பிறர் எந்த அளவுக்கு உதவுவார்கள் என்று எதிர்பாராது, `என்னால் முடியும்!’ என்ற நம்பிக்கையுடன் ஒரு காரியத்தில் பொறுப்பாக இறங்குபவர்கள்தாம் முன்னேறுகிறார்கள்.

    சோம்பலுக்கு இடங்கொடேல்

    மிகுந்த பிரயாசையுடன் மலையேறுகிறார்களே சிலர், ஏன்? கடினமாக உழைப்பதே நாம் எதிலும் தோல்வி அடையாது இருக்கும் வழி என்று உணர்ந்தவர்கள் அவர்கள்.

    ஒரு கடினமான முயற்சியில் ஈடுபடும்போது எவ்வளவோ வேண்டாத விமரிசனங்கள், இன்னல்கள் எழலாம். சில சமயங்களில், அபாயங்களும் இருக்கக்கூடும். அவை நிகழும்போது சற்று மனம் தளர்ந்தாலும், கீழே விழுந்து மீண்டும் எழுந்திருப்பதுபோல், விடாமுயற்சியுடன் தொடர்ந்தால், முன்பு இருந்ததைவிட உயரத்தில் இருப்பதைக் காண்போம். மனமும் உறுதி பெற்றிருக்கும்.

    “ஆண்மை என்றால் தனிமையை விரும்புவது, அலட்டலாக நடந்துகொள்வது என்பதில்லை. சரியென்று நமக்குப்பட்டதை, விளைவு என்ன ஆகுமோ என்று யோசிக்காது, துணிச்சலுடன் செய்வது”. (மகாத்மா காந்தி)

    உடல் வன்மை இருக்கிறதோ, இல்லையோ, அறிவு, ஒழுக்கம், கடமை உணர்ச்சி எல்லாவற்றிலும் சிறந்திருப்பவர்களே மரியாதைக்கு ஏற்றவராகக் ஏற்கப்படுகிறார்கள்.

    கதை

    தமிழ்நாட்டில் ஓரிடத்தில் பெண்பார்க்க என்னையும் அழைத்துப்போனார்கள் உறவினர்கள், என் மறுப்பை லட்சியம் செய்யாது.

    `நான் மூன்று தங்கைகளுக்குக் கல்யாணம் செய்து வைத்தேன்!’ என்று திரும்பத் திரும்ப என்னிடம் கூறினார் பெண்ணின் தந்தை.

    அவர் வீட்டில் அவ்வளவாக வசதி இருக்கவில்லை. ஆனால் தன் சுகத்துக்காக பொறுப்புகளைத் தட்டிக்கழிக்காது இருந்த தந்தை! கணவரின் போக்கில் குறுக்கிடாது, அவருக்குப் பக்கபலமாக இருந்த தாய். இவர்களிடம் வளர்ந்த பெண்ணும் அப்படித்தானே இருப்பாள் என்று நாங்கள் நினைத்தது வீண்போகவில்லை. எங்கள் குடும்பத்தில் ஓரங்கமாகி, எல்லாருடைய பாராட்டையும் பெற்றுவிட்டாள் அப்பெண்.

    சிறு பிராயத்தில் உலகமே தன்னைச் சுற்றித்தான் இயங்குகிறது என்ற எண்ணம் இயற்கையாக எழுவது. வளர்ந்தபின்னும் அப்படியே இருந்தால் அது அழகல்ல. எப்போது, எதிலும், தான்தான் முன்னிலையில் இருக்க வேண்டும் என்றால் நடக்கிற காரியமா!

    பிறரை அடித்துப்பிடித்துக்கொண்டு முந்தாமல், விட்டுக்கொடுத்து, வெற்றியடைந்தால் அதற்காக தோல்வி அடைந்தவரை ஏளனமாகக் கருதாது இருப்பவர்களை ஜெண்டில்மேன் (gentleman) என்று குறிப்பிடுகிறோம். இவர்களே மாறுபட்டவர்களையும் புரிந்துகொள்ளும் சூட்சுமம் நிறைந்தவர்கள்.

    பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுவிட்ட நடிகரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது: “நீங்கள் தலைசிறந்த நடிகர். ஒப்புக்கொள்வீர்களா?”

    தொண்ணூறு வயதான அவரது பதில்: அப்படி நினைத்தால், அன்றே நான் இறந்துவிடுவது நல்லது!”

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (63)

    நிர்மலா ராகவன்

    அழுமூஞ்சியும் சிரித்த முகமும்

    நலம்

    புதிது புதிதாக எதையாவது செய்ய முற்படும்போது ஆர்வமும் பயமும் ஒருங்கே எழலாம். எதையும் புரிந்துகொண்டால் பயம் போய்விடும். எளிதான காரியம் ஒன்றை எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.

    பிறர் செய்யத் தயங்கும் காரியத்தில் துணிச்சலுடன், ஆனால் தகுந்த பாதுகாப்புடன், இறங்குவதுதான் மகிழ்ச்சியைத் தரும். தன்னம்பிக்கையையும் வளர்க்கும்.

    யாரோ துணிச்சலாக எதையோ செய்வதைப் பார்த்து, `எனக்கு எதற்கும் பயம் கிடையாது!’ என்று அபாயகரமான ஒரு காரியத்தில் ஈடுபடுவது மடத்தனம்.

    நான்தான் தெனாலி — எல்லாவற்றிற்கும் பயம்

    “நான் பெரிய பயந்தாங்கொள்ளி! கல்லூரியில் கடலுக்கு அடியில் நீச்சலடிக்கும் பாடத்தை (Ocean Archaeology) எடுத்துக்கொண்டேன். அதற்கு முன்னர் சுமாராக நீச்சல் தெரியும். அவ்வளவுதான். இரண்டு பயிற்சியாளர்களுடன் நள்ளிரவில் பயிற்சி எடுக்க வேண்டும். முதலில் நடுக்கமாக இருந்தாலும், போகப் போக பயம் போய்விட்டது. உற்சாகமாக அப்பயிற்சியை எதிர்நோக்க ஆரம்பித்தேன்!”

    இப்போது, குடும்பத்துடன் படகில் போகும்போது, கடலில் குதிக்கிறாள் இப்பெண். பிறருக்கு மூச்சு நின்றுவிடுவது போலிருந்தாலும், இவள் முகத்தில் என்னவோ பூரிப்புதான்.

    மேலே இருக்கும் கதையில், `இரண்டு பயிற்சியாளர்கள்’ என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். தனியாகப் போயிருந்தால், இன்று தன் வெற்றிக்கதையைச் சொல்லிச் சிரிக்க அவள் இருக்கமாட்டாள்.

    எப்போதும் சிரித்த முகம்

    `நீ நிறையப்பேரை பகைத்துக்கொள்கிறாய்!’

    ஒரு முறை இப்படிக் கண்டனம் செய்யப்பட்டவர்கள் மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டு, பிறரை மகிழ்விக்க முயலுவார்கள். அப்படிச் செய்வதால் அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதோ, இல்லையோ, எப்போதும் சிரித்த முகத்துடனே வளைய வருவார்கள்.

    பிறருக்காக ஒருவர் நடிக்கும்போது, தன் இயல்பான குணங்களை விட்டுக்கொடுக்கிறார். அதனால்தான் அவருக்கே புரியாத ஏதோ வெறுமை.

    மற்றவர்கள் எப்படியோ போகட்டும். வெளிப்படையாகப் பகைத்துக்கொள்ள வேண்டாம். ஆனால், அவர்கள் சொல்வதில் உண்மை இருக்குமோ என்ற குழப்பம் அநாவசியம். அவர்களை மாற்ற முயல்வதும் வீண் முயற்சி. நம்மை நல்ல விதத்தில் மாற்றிக் கொண்டாலாவது நன்மை பிறக்கும்.

    போடு பழியை, பிறர்மேல்

    பலருக்கும் மாற்றம் என்றால் பயம். `நம்மை அறியாமலேயே ஏதேதோ நிகழ்கிறதே, நாம் வேறு வாழ்க்கையை இன்னும் குழப்பிக்கொள்ள வேண்டுமா?’ என்று ஒரே நிலையில் இருப்பார்கள்.

    `விதி!’ `ஜோசியர் சொல்லி இருக்கிறார், எனக்கு இப்போது போதாத காலமாம்!’ என்று எவர் மேலாவது பழி போட்டு, தம் வாழ்வில் நடப்பது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், உற்சாகம் என்னவோ கிடையாது.

    நம் வாழ்க்கையில் எதிர்ப்படும் சம்பவங்களால் நாம் மாறலாம். ஆனால் அவை நம்மைத் தாழ்த்த விடக்கூடாது.

    நண்பர்கள்போல் நடித்துக் குழி பறிப்பவர்களிடமிருந்து பயந்து ஓடினால், ஓடிக்கொண்டேதான் இருக்க வேண்டும். அவர்களைச் சொல்லாலோ, செயலாலோ அடிப்பதால் நம் பலம் பெருகிவிடப் போவதுமில்லை.

    தனிமை எப்போதும் இனிமையா?

    எப்போதும் பிறருடன் சேர்ந்தே இருந்தால், ஒருவர் மற்றொருவரைக் கட்டுப்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. நாளடைவில் எரிச்சல்தான் உண்டாகும். அவ்வப்போது பிரிந்திருப்பதே நல்லது. (மனைவி அவ்வப்போது தன் பிறந்தகத்துக்குப் போய்விட்டுத் திரும்பும்போது, கணவனின் அன்பு கூடியிருக்கும்போலத் தோன்றுவது இதனால்தான்!)

    தனியாக, ஆனால் ஆக்ககரமான சிந்தனைகளுடன் இருப்பவர்களே சாதிக்க முடியும்.

    `நான் எப்போதும் தனிமையை விரும்புகிறவன்!’ என்று தன் நேரத்தை குருட்டுத்தனமான யோசனைகளிலும், எதிர்காலத்தைப்பற்றிய கனவுகளிலும் நிறைத்துக்கொள்பவர்கள் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறார்கள். இவர்களது அன்றாட வாழ்க்கையில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் மனமுடைந்து போய்விடுவார்கள். ஒன்றுமில்லாத விஷயத்துக்காக ஒரேயடியாகப் பூரித்து, அதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பின், வாழ்க்கையில் சாதிப்பது எப்படி?

    “வேகமாகச் செல்ல தனியாகப் போ. நெடுந்தொலைவு செல்ல பிறருடன் சேர்ந்துகொள்!” (ஆப்பிரிக்கப் பழமொழி)

    அக்கண்டத்தில் கொடிய மிருகங்கள் உண்டு. பாலைவனங்களில் தண்ணீர் கிடைப்பது அரிது. அதனால், பிறருடன் சேர்ந்து போவது அபாயங்களைத் தவிர்க்க உதவலாம்.

    அதற்காக, மாராதான் (Marathon) ஓட்டப்பந்தயத்தில் பிறருடன் இணைந்து செல்லவா முடியும்?

    நீதி: சிலருக்குச் சரியென்று படுவது எல்லாருக்கும் ஏற்றதாகாது.

    அழுமூஞ்சிகள்

    கதை

    “நான் பட்டப் படிப்பு படித்துத்தான் தீர்வேன் என்று வீட்டில் சண்டைபோட்டு, கல்லூரியில் சேர்ந்தேன். இப்போது ஏன்தான் இவ்வளவு படிக்க வேண்டுமோ என்று எரிச்சலாக இருக்கிறது. எப்படி பாஸ் பண்ணப்போகிறோம் என்று பயமாக இருக்கிறது!” என்று ஓயாமல் அரற்றுவாள் என்னுடன் படித்த ஒருத்தி.

    எட்டாம் வகுப்புவரை பாடங்கள் தமிழில் இருந்தபோது, எல்லாவற்றிலும் பரிசுகள் வாங்கியவளுக்கு அதற்கடுத்த ஆண்டிலிருந்து ஆங்கிலத்தில் படிக்க நேரிட்டபோது சிறப்பான தேர்ச்சி அடைய முடியவில்லை.

    கடுமையாக உழைப்பதைவிட புலம்புவது எளிது. இத்தகையவர்களின் `அழுகை’யைக் காதில் வாங்காமல் இருந்தால் பிழைத்தோம். இல்லாவிட்டால், நமக்கும் `இவள் சொல்வது சரிதான்!’ என்று தோன்ற, தளர்ச்சி அடைந்துவிடுவோம்.

    இத்தகையவர்கள் சுமாரான வெற்றி அடைந்துவிட்டு, அதன்பின் தோல்வி அடைபவர்களாக இருக்கக்கூடும். தம்மைப்போல் இல்லாது, வெற்றிமேல் வெற்றி பெறுபவர்களை வீழ்த்த நினைப்பார்கள், தம்மையும் அறியாது.

    சவாலா? ஹையா!

    நமக்காகவே யார் நம்மை ஏற்கிறார்களோ, அவர்கள்தாம் உண்மையான நண்பர்கள். இவர்களே நம் திறமைகளை வெளிக்கொணர உதவுபவர்கள்.

    `எல்லாவற்றையும் யார் யாரோ செய்துவிட்டார்களே! இனி என்ன இருக்கிறது!’ என்ற நம்பிக்கையின்மையை ஒழித்துக் கட்டிவிட்டு, இப்போது இருக்கும் சவால்களை, சந்தர்ப்பங்களை, நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டால் புதிய விஷயங்களில் நம் கவனம் செல்லும். விடாமுயற்சியால் எதையாவது செய்யலாம்.

    நான் இணையத்தில் இணைந்த கதை

    சில வருடங்களுக்குமுன் பெட்டி பெட்டியாக இருந்த எனது கதைகளையும், புதினங்களையும் பார்த்தபோது, வருத்தமாக இருந்தது. எல்லாமே ஒருமுறை பிரசுரம் கண்டவை. தோள் வலிக்க, இரவு பகலாக பேனாவால் காகிதத்தில் எழுதியவை. அடித்துத் திருத்தியதால், பல தடவை எழுத வேண்டியிருந்தது. ஆதாயம் இல்லாவிட்டாலும், எழுதும்போதே புத்துணர்வு எழ, விடாது எழுதினேன். ஆனால் எனக்குப்பின் அனைத்துமே உபயோகமற்றுப்போய்விடுமே!

    அப்போது N. கண்ணன் என்ற அன்பர் நல்லதொரு வழியைக் காட்டினார்: `இணையதளத்தில் எழுதுங்களேன்!’

    ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் மிரண்டு போனேன்.

    ஓருங்குறியா? அப்படியென்றால்?

    தட்டச்சு என்றால் டைப் செய்வதா!

    பலர் உதவிக்கரம் நீட்டினார்கள். குறிப்பாக, தேமொழி. வெவ்வேறு தளங்களையும் அறிமுகப்படுத்தியவர்.

    கணினி அரிச்சுவடிகூட அறியாதிருந்த நான் இப்போது, “இண்டர்நெட்டில் எழுதுகிறேன்!” என்று சொல்லிக்கொள்ள முடிகிறது. பெருமையாக, எல்லாரிடமும் அல்ல — `உங்கள் எழுத்துக்களை பத்திரிகைகளில் பார்க்கவே முடிவதில்லையே!” என்பவர்களிடம் மட்டும்.

    இப்போது உலகெங்கும் வாழும் தமிழர்களில் 13,500 வாசகர்கள் “பள்ளியினூடே ஒரு பயணம்” என்ற என் ஒரு நாவலைப் பதிவிறக்கம் செய்துள்ளார்கள், நகைச்சுவை புதினமாகிய “பெண்களோ பெண்கள்” பத்தாயிரம் வாசகர்களுக்குமேல் எட்டியுள்ளது என்றெல்லாம் அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    வாழ்க்கையில் நாம் சந்திக்கும், நமக்கு அறிமுகம் ஆகும் எல்லாருமே பொறாமை பிடித்து, நம்மை வீழ்த்தும் எண்ணம் கொண்டவர்களாக இல்லை என்ற உண்மை பெருமகிழ்ச்சியுடன் நிறைவையும் அளிக்கிறது.

    தொடருவோம்

    Share
  • நலம் நலமறிய ஆவல் .. (62)

    நிர்மலா ராகவன்

    இனி இல்லை தோல்வி

    நலம்

    வெகு சிலரே வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். அவர்களுக்கு மட்டும்தான் அறிவோ, திறமையோ இருக்கிறதென்று அர்த்தமில்லை. எல்லாம் இருந்தும், வெற்றி பெறுவதை எண்ணிக்கூடப் பார்க்க முடியாதபடி ஒருவித பயம் பலருக்கும்.

    யார் யாருக்கு இந்தப் பயம்?

    1 தந்தை, `எதையும் ஒழுங்காச் செய்யத் தெரியாது! நீ உருப்பட மாட்டே!’ என்று மகனைப் பழிப்பதைக் கேட்டிருப்பீர்கள். இப்படி மட்டம்தட்டிப் பேசுவதுதான் ஊக்குவிப்பது என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்தார்கள், கடந்த தலைமுறையில். இன்றும் சில பழமைவாதிகள் இதே முறையைத்தான் கையாள்கிறார்கள்.

    சிறுவயதில் பழிக்கப்பட்டவர்கள் முன்னுக்கு வரமுடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பெரியவர்கள் சொல்வதை அப்படியே நம்பிவிடுவார்கள். தாழ்வு மனப்பான்மையும் அதனால் விளையும் அச்சமும் மட்டும் நிரந்தரமாக அவர்களுடன் தங்கிவிடுகிறது என்பதுதான் பரிதாபம். அப்புறம் முன்னுக்கு வருவது ஏது!

    2 இயற்கையாகவே கூச்ச சுபாவம் உடைய குழந்தைகள்.

    கதை

    சிறுவயதில் கிராமத்தில் பாட்டி, தாத்தாவுடன் மிகவும் அருமையாக வளர்ந்தவன் சோமு. பள்ளிப்படிப்புக்கு பெரிய நகரத்தில் பெற்றோர் வீட்டுக்கே வந்துவிட, தந்தையின் முரட்டுத்தனமான கண்டிப்பு அவனை மிரளச் செய்தது. தமிழ்ப்படங்களில் வருவதுபோல், தாய் மகனுக்குப் பரிய, தந்தை இன்னும் மூர்க்கமாக வாயாலேயே அவனை வதைத்தார். பரீட்சையில் தோல்வி அடைந்தால் அடி.

    ஆண் பிள்ளைக்கோ தந்தைதான் முன்னோடி. அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று சோமு தன் தந்தை பழித்ததுபோலவே நடக்கத் தொடங்கினான்.

    வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்க்கப்பட்டதால் உண்டான கூச்ச சுபாவம், தோல்வி அடைந்தால் இன்னும் பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டுமே என்ற பயம் எல்லாம் சேர்ந்து கொண்டன. பிறருடன் கலகலப்பாகப் பேசக்கூடப் பயந்து, புதிதாக எக்காரியத்தைச் செய்யவும் தைரியமின்றி, எதிலும் தோல்வி காண்பவனாக ஆகிப்போனான் சோமு.

    சில பெற்றோர்கள் தம் பெண் குழந்தைகளுக்கு நல்லது செய்கிறோம் என்றெண்ணி, `நீ கடுமையாக உழைத்து, சிறந்த தேர்ச்சி பெற வேண்டும் என்கிற அவசியமில்லை. எப்படியும் கல்யாணம் செய்துகொள்ளத்தானே போகிறாய்! இளமைக்காலம் ஒருமுறைதான் வரும். இப்போதே நன்றாக அனுபவித்துவிடு!’ என்று சொல்வார்கள்.

    இதை அப்படியே ஏற்று நடக்கும் பெண்களில் சிலர் `அப்பா மிக நல்ல அறிவுரை கூறினார்! அதற்குப்பின் அப்படி மகிழ்ச்சியாகவே இல்லை!’ என்பார்கள்.

    வேறு சிலர், `நான் நிறையப் படித்து, நாலுபேர் மெச்ச வாழவேண்டும்!’ என்றெல்லாம் ஆசைப்பட்டாலும், அப்பாவுக்கு எதிராக நடப்பது சரிதானா என்ற குழப்பம் உண்டாக, வெற்றியைக்கண்டு அஞ்சுபவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

    அளவுக்கு மீறிய பொறுமை

    பிடிக்காத உத்தியோகத்திலிருந்து மாறப் பயந்து, அதைப்பற்றிப் புலம்பிக்கொண்டு, அதிலேயே நிலைத்திருப்பவர்கள் பொறுமைசாலிகள்தானா? வேறு வேலை கிடைக்கும் என்றாலும், புதிய ஒன்று எப்படி இருக்குமோ என்ற பயமே அவர்களை அப்படி இருக்கச் செய்கிறது.

    அதேபோல்தான் கணவன் என்ன வதைத்தாலும் அதைத் தாங்கிப்போகும் பெண்களும். `பிறர் என்ன சொல்வார்களோ?’ என்ற அச்சம் எழ, பொறுக்க முடியாத வாழ்க்கையையும் எப்படியோ சமாளித்து வாழ்ந்தார்கள் இவர்கள், அண்மைக்காலம்வரை.

    பெண்களுக்கு கல்வியும், சொந்தக்காலில் நிற்கும் திறனும் இருப்பதால், இப்போது நிலைமை சற்றே மாறியிருக்கிறது.

    வெற்றியே பாரம்

    ஏன் வெற்றி பெறுவதை ஒரு பாரமாக நினைக்கிறார்கள்?

    கதை

    `இவளைப்போன்ற அறிவாளியை நான் இதுவரை பார்த்ததே கிடையாது. வகுப்பில் முதலாவதாக ஏன் வருவதில்லை?’ என்று பூர்ணிமாவின் ஆசிரியை குழப்பத்துடன் அவள் தாயைக் கேட்டாள்.

    தாய்க்கு என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிந்தது. வீட்டுக்குப் போனதும், மகளைக் கோபிக்காது, `நான் பாடம் சொல்லிக் கொடுத்தபோது, எல்லாவற்றிற்கும் சரியாகப் பதில் சொன்னாயே! வேண்டும் என்றே தப்பும் தவறுமாக எழுதியிருக்கிறாய். இல்லையா?’ என்று கேட்டாள் புன்சிரிப்புடன்.

    அந்தப் பத்துவயதுச் சிறுமி ஒப்புக்கொண்டாள். முதலாவதாக வரும் பெண்ணைப்போல் கர்வியாக, தான் எது சொன்னாலும், செய்தாலும் சரிதான் என்று அடம்பிடிப்பவளாக ஆகப் பிடிக்கவில்லை என்று. அதனாலேயே அப்பெண்ணுக்கு நெருங்கிய தோழிகளே கிடையாது, தானும் அப்படித் தனித்து இருக்க விரும்பவில்லை என்றாள்!

    `எனக்கு எவருடனும் ஒத்துப்போக முடியும்,’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்பவர் தன் முழுத்திறமையை வெளிப்படையாகக் காட்டமாட்டார். வெற்றி, அதனால் கிடைக்கும் பதவி என்றால் பொறுப்புகளும் அதிகரித்துவிடும் என்பது ஒருபுறமிருக்க, பலருக்கும் தன்னைப் பிடிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று, ஒரே நிலையில் இருப்பார்கள்.

    ஆனால், இவர்களைப் போன்றவர்கள் நிம்மதியாகவோ, மகிழ்ச்சியாகவோ இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. வெற்றியை நினைத்துப்பார்க்கவும் அஞ்சுபவர்களுக்கு இலக்கே கிடையாது. மாற்றமில்லாத வாழ்க்கையே பாரமாகி விடுகிறது.

    தம்மையும் தம் குறைகளையும் மறக்க சிலர் தம்மைத் தாமே குலைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். மது, மாது, போதைப்பழக்கம் என்று ஏற்படுத்திக்கொள்வார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தம் திறமைக்கு மீறிய காரியங்களில் ஈடுபட்டு (உதாரணம்: வியாபாரம்) தோல்வி அடைவார்கள்.

    எப்படி இந்த நிலையை மாற்றுவது?

    தன் குறை என்ன என்று புரிந்து, அதை நிவர்த்தி செய்துகொள்ள முயலுவது.

    பூர்ணிமாவுக்குச் சற்று விவரம் புரிந்ததும், அவள் தாய் கூறியது: `கடவுள் உனக்கு நல்ல அறிவைக் கொடுத்திருக்கிறார். அதை முழுமையாகப் பயன்படுத்தாது விடலாமா?’

    அதன்பின் அப்பெண் தன் புத்திசாலித்தனத்தை மறைத்துக்கொள்ள முயலவில்லை. அவளைப்போலவே இருந்த சிலருடன் நட்புடன் பழக, வாழ்க்கையில் பிடிப்பும், மகிழ்ச்சியும் உண்டாயின.

    சிறு பிராயத்தில் கேட்ட வசவுகளால் தான் குறைபாடு உள்ளவனாக ஆகிவிடமாட்டோம் என்ற உறுதியுடன் செயல்படுவது.

    தன்னைத் தாழ்த்த முயல்கிறவர்களின் தொடர்பைக் குறைத்துக்கொண்டு, அவர்கள் முயற்சியைத் தோற்கடிப்பது. வெற்றி பெற்றால், பலருடைய வாய்க்கு அவலாக ஆகிவிடுவோம், அதனால் பாதிப்படையக்கூடாது என்று தெளிவடைவது.

    பிறர் நம்மைத் தாழ்த்தவோ, காயப்படுத்தவோ முயன்றால், அதனால் நாம் இழிந்தவர்களாக ஆகிவிடப்போவதில்லை. அவர்கள் சொல்வதில் உண்மை இருக்குமோ என்று நினைத்துக் குழம்புவது அநாவசியம். அவர்கள் எப்படியோ போகட்டும், விடுங்கள்!

    உடலாலோ, மனதாலோ, உணர்ச்சிகளாலோ நாம் அவர்களை எதிர்க்காது இருப்பதே சிறந்தது.

    இதைப் புரிந்துகொண்டால், தோல்வியைப் புறந்தள்ளலாம். வெற்றிக்கு அஞ்ச வேண்டியதில்லை.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (61)

    நிர்மலா ராகவன்

    நீங்கள் குதர்க்கவாதியா?

    நலம்-1-1-1

    `குதர்க்கம்!’

    யாராவது உங்களை இப்படிப் ழித்திருக்கிறார்களா?

    பெருமைப்படுங்கள்! நீங்கள் சுயமாகச் சிந்திக்கிறீர்கள். உங்களுக்குக் கற்பனைத்திறன் அதிகம் என்பதைப் பிறர் புரிந்து கொள்ளவில்லை.

    உங்கள் தனித்திறமையைக் காட்ட வரைவது, எழுதுவது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட ஆரம்பிக்கவில்லையா இன்னும்?

    ஒருவர் எப்போது எழுத்தாளனாக ஆசைப்படுகிறார் என்றால், பிறரது எழுத்தை நிறையப் படித்தபின், `இதைவிட நன்றாக என்னால் எழுதமுடியுமே!’ என்ற எண்ணம் எழும்போது.

    `என்ன எழுதுவது?’ என்ற குழப்பமானால், ஒரு நோட்டுப் புத்தகத்தில் உங்களைப் பாதித்த ஏதாவது ஒன்றைப்பற்றி கொஞ்சம் எழுதுங்கள். முடிவைப்பற்றி யோசிக்காது, தினமும் தூங்குமுன் இருபது நிமிடங்களாவது அதற்காகச் செலவிடுங்கள். நாளடைவில், எழுதுவது எளிதாகும். பிரபலமான ஆங்கில எழுத்தாளர்கள் பலரும் இம்முறையைப் பரிந்துரைக்கிறார்களே என்று நானும் முயன்று பார்த்தேன். நல்ல பலன் கிடைத்தது.

    ஒரு சிறு புத்தகத்தை எப்போதும் உங்களுடன் வைத்துக்கொண்டிருந்தால், வெளியில் போகும்போது வித்தியாசமாகக் காணப்படும் எதையாவது உடனடியாகக் குறித்துக்கொள்ள முடியும்.

    திரைப்படங்கள், நல்ல எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஆகியவையும் கற்பனையைத் தூண்ட வல்லவை. உதாரணமாக, ஒருவன் காதலியுடன் வந்த பெண்ணைப் பார்க்கிறான். அவன் மனம் சலனமடைகிறது என்று குதர்க்கமாக யோசியுங்கள். `இவள்தான் எனக்கு ஏற்றவள்!’ என்று அத்தோழியை மணந்துகொள்கிறான். அப்போது காதலியின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்தால், ஒரு கதை கிடைக்கும்.

    ஒவ்வொரு நாளையும் ஒரேமாதிரி கழிக்காது, அதாவது வீட்டு வேலை முடிந்து புத்தகத்தைக் கையில் எடுத்தபடியே தூக்கம் அல்லது தொலைகாட்சி பார்ப்பது என்று நேரத்தைச் செலவிடாது, அசாதாரணமாக எதையாவது செய்வது மூளைக்குப் பயிற்சி கொடுப்பதுபோல். உதாரணம்: இயற்கைக் காட்சிகளை ரசித்துப் பார்த்தபடி சாயந்திர வேளையில் உலவுவது. வெவ்வேறு திசைகளில், வேடிக்கை பார்த்துக்கொண்டே நடப்பது (பார்ப்போர் நம்மைப் பைத்தியம் என்று நினைத்தாலும்) வித்தியாசமாகச் சிந்திக்க வைக்கும். நடைப்பயிற்சியால் மன இறுக்கம் குறைய, கற்பனைக் குதிரை விரைந்து ஓட ஆரம்பிக்கும்.

    வளரும்போதே தாழ்வு மனப்பான்மை

    “ஒன் தங்கையைப் பார்! எப்படி கலகலன்னு இருக்கா! நீயும் இருக்கியே, உம்மணாமூஞ்சி!”

    “என்ன இருந்தாலும் நீ பொம்பளைப்பிள்ளை!”

    இம்மாதிரியெல்லாம் பெரியவர்களால் சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகள் தாழ்மை உணர்ச்சியுடன் வளர்கிறார்கள். துணிந்து எதையும் சாதிக்கப் பயம் எழுகிறது. தம்மைப்போல் இல்லாத பிறரைப் பார்த்து ஆச்சரியமோ, பொறாமையோ எழுகிறது.

    இப்படிப்பட்டவர்கள் எந்த வயதானாலும், `நான் ஒரு தனிப்பிறவி. பிறர்போல் இருக்க வேண்டிய அவசியமில்லை,’ என்று தமக்குத்தாமே வலியுறுத்திக்கொண்டால் தன்னம்பிக்கை வளரும்.

    எத்தனை வயதானாலும், பிறர் கூறுவதையெல்லாம் ஆமோதித்து, அதன்படியே இம்மி பிசகாது நடக்க ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மூளை எதற்கு? அரைத்த மாவே அரைபடுவது இதனால்தான். `ஊருடன் ஒத்து வாழ்!’ என்று என்றால், ஒருவருக்குத் தனித்தன்மை இருக்கக்கூடாது என்று அர்த்தமா?

    எழுத்தால் புரட்சி

    பேனாவால் கத்தியைவிட அதிகம் சாதிக்க முடியும். பிறர் எழுதியதைப் படித்தே தம் வாழ்வின் போக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் பலர். ஆனால் எத்தனைபேர் துணிந்து, பேனா (இப்போது கணினி) பிடிக்கிறார்கள்?

    `புரட்சி எழுத்தாளர்!’

    நூதனமான, ஆனால் சமூகத்தை நல்விதமாக மாற்றக்கூடிய கருத்துக்களை எழுதுபவரை பலவீனமாக்க சிலர் கையாளும் உத்தி இது. தமக்குச் சாதகமாக இருக்கும் நடைமுறையை இவள் ஏன் மாற்ற முயற்சிக்கிறாள் என்ற அச்சத்தில் அவளைப் பழிக்கிறார்கள்.

    எப்போதும் பிறரால் பாராட்டப்பட வேண்டும் என்று நினைத்து வாழ்பவர்களால் எதையும் சாதிக்க இயலாது. எந்தவித எதிர்ப்பையும் சமாளித்து, துணிந்து எதிர்க்கும் தைரியம் இருப்பவர்களால்தான் எத்துறையிலும் நிலைத்து நிற்க முடிகிறது.

    கரு எப்படிக் கிடைக்கும்?

    பரிச்சயமில்லாதவர்களுடன் பேசினால், புதிய விஷயங்களை அறியமுடியும்.
    ஒரு முறை தைப்பூசத்திற்கு முதலிரவு நான் மலேசியாவில் பிரசித்தமான பத்து மலைக்குச் சென்று தங்கினேன். தனியாக. பையில் பேனா, காகிதத்துடன். லட்சக்கணக்கான பக்தர்களும், காவல் துறை அதிகாரிகளும் அங்கிருந்ததனால் பயமில்லை.

    நள்ளிரவில் மழை பிடித்துக்கொண்டது. ஒரு கட்டடத்தின்கீழ் தங்கியபோது, அருகிலிருந்த முதியவர் தாமாகப் பேசினார்: “கட்டையன் உசிருள்ள பாம்பை கத்தியால ரெண்டா வெட்டி, சீனியில தோய்ச்சு சாப்பிடுவாம்மா!”

    அவர் குறிப்பிட்டது ஜப்பான்காரனை என்று புரிந்து, “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று சந்தேகத்துடன் வினவினேன்.

    புதிய விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள நிறைய கேள்விகள் கேட்க நேரிடும். சிலர், `நம்மைச் சோதிக்கிறாளோ?’ என்று ஆத்திரப்படவும் செய்வார்கள்.

    அனைவருக்குள்ளும் பல விஷயங்கள், அந்தரங்கம் இருக்கின்றன. அதை யாரிடம் சொல்லி நிம்மதி அடையலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். உண்மையாகவே தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறோம், நமக்கு அவர் கூறப்போவதில் ஆர்வம் என்பதைப் புரியவைத்தால், தயக்கமின்றி பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.

    1942 -ல், அன்றைய சயாமிலிருந்து பர்மாவரை ஒரு ரயில் பாதையை அமைக்க பல்லாயிரக்கணக்கான மலாயாக்கார்கள், பிணைக்கைதிகளாக இருந்த ஆங்கிலேயர்கள் ஆகியோரை ஜப்பானியர்கள் பிடித்துப்போனார்கள். என் பக்கத்தில் அமர்ந்திருந்தவரும் ஒருத்தராம். (மதுக்கடையிலிருந்தபோது, அங்கிருந்த அனைவரையும் துப்பாக்கி முனையில் ஒரு லாரியில் கடத்திக்கொண்டு போய்விட்டனர், வீட்டுக்கே தெரியாது).

    நான் பேராவலுடன் பல கேள்விகள் கேட்டேன் அதைப்பற்றி. வாய்வழி சரித்திரம் போல் ஆகுமா?

    எங்களைச் சுற்றி பத்து இளைஞர்களும் சுவாரசியமாக அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நிறையப் பேசிவிட்டு, பழைய நினைவுகளின் தாக்கத்தைத் தாங்கமுடியாது, “போகணும்!” என்று எழுந்து, வேகமாக அப்பால் சென்றார்.

    கும்பலோடு கும்பலாக இருக்க வேண்டும், தனித்துத் தெரியக்கூடாது என்று பழைய புடவை ஒன்றைக் கட்டிக்கொண்டு போயிருந்தேன் அன்று. நட்புடன் பழகி, தன் விரிப்பில் என்னைப் படுத்துக்கொள்ள உபசாரம் செய்த வெள்ளையம்மா என்ற மாது, `டீச்சருங்களுக்கு சம்பளம் கம்மியா?’ என்று விசாரித்தாள்!

    அவளுடைய கணவனையும் ஜப்பானியர்கள் பிடித்துப்போக இருந்தபோது, எதிர்வீட்டு இளைஞனின் குடும்பத்துக்கு முன்னூறு வெள்ளி கொடுத்து, கணவனுக்குப் பதிலாக அவனை அனுப்பினார்களாம். போன இடத்தில் இறந்த 60,000 தமிழர்களில் அவனும் ஒருத்தனாகிப்போனான். அதனால்தான் அரைகுறையாக நின்றுபோன பலரின் முயற்சி இன்று “மரண ரயில்வே” என்று அழைக்கப்படுகிறது.

    “நாங்க முன்னூறு வெள்ளி குடுத்தோம்!” என்று திரும்பத் திரும்ப அழுத்திச்சொன்னாள் வெள்ளையம்மா, தனது குற்ற உணர்ச்சியைக் குறைத்துக்கொள்ள முயற்சிப்பவளாக.

    (அந்தக் காலத்தில் ஒரு சவரன் தங்கம் பத்து அல்லது இருபது வெள்ளியாக இருந்திருக்கும். ஐம்பது வருடங்களுக்குமுன்னரே முப்பது வெள்ளிதான். அப்போதெல்லாம், `பணத்தட்டுப்பாடு வந்தால், அடகு வைத்துக்கொள்ளலாம். தங்கம் வாங்குங்கள்,’ என்று வானொலியில் தமிழில் அறிவுரை கூறுவார்கள். தொடுத்து வைத்த மல்லிகைச்சரம்போல், தங்கச்சங்கிலியை கடை வாசலில் தொங்க விட்டிருப்பார்கள். காவலுக்கு யாரும் கிடையாது என்பது என்னைப் பெரிதும் அதிசயப்படுத்தியது. வாடிக்கையாளர் தமக்கு வேண்டிய நீளத்தில் வெட்டச் செய்து வாங்கிப் போவார்!)

    பூரி, அது, இது என்று தைப்பூசத்திற்கு முதல் நள்ளிரவில் சாப்பிடக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலை, சக்கரங்களில் அமைக்கப்பட்ட, தாற்காலிகமான கழிப்பறைகளுக்கு வெளியே பெரிய வரிசை. `ஒண்ணுக்குப் போறதுக்கெல்லாம் காசு கேக்கறான்!’ என்று ஒரு பெண்மணி கத்திக்கொண்டிருந்தாள். ஓர் உபகாரி எல்லாருக்கும் வாளியில் தண்ணீர் கொண்டு வந்தபடி இருந்தாள்.

    புதிய அனுபவங்களைத் தேடிப்போனால், அசௌகரியங்கள் ஏற்படத்தான் செய்யும். அவைகளைப் பெரிது பண்ணாமல் ரசிக்கத் தெரிந்தால், எல்லாமே அனுபவங்கள்தாம். உடனுக்குடன் எழுதுகிறோமோ, இல்லையோ, மூளை சுறுசுறுப்பு குன்றாமல், எப்போதுமே நம்மை உற்சாகமாக வைக்கும்.

    தொடருவோம்

    Share
  • பந்தயம்

    நிர்மலா ராகவன்

    அந்தப் பெரிய மண்டபத்துக்குள் நுழையும்போதே செல்லப்பா பாகவதருக்கு நா உலர்ந்துபோயிற்று. ஓரடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. கால்கள் பின்னுக்கு இழுத்தன.

    தோரணங்கள் என்ன, மேடையைச் சுற்றி வண்ண வண்ண விளக்குகள் என்ன என்று, கல்யாணக்கோலத்தில் இருந்தது மண்டபம். இருபதுக்குக் குறையாத வாத்தியங்கள் அன்று நிகழப்போகும் பாடல் போட்டியின் இறுதிச் சுற்றுக்குக் கட்டியம் கூறிக்கொண்டிருந்தன.

    அந்த மேடைமேல் தானும் இருக்கப்போகிறோம்!

    கடந்த வாரம்வரை ஓர் இன்பக் கனவென அதை ஆவலுடன் எதிர்பார்த்து வந்தவருக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. அருகிலிருந்த இருக்கையைப் பிடித்துக்கொண்டு சுதாரித்துக்கொண்டார்.

    பூமி பிளந்து பாவிகளை உள்வாங்கிக் கொள்வதெல்லாம் இதிகாச புராணங்களில்தான் நடக்குமோ?

    இந்தக் கலிகாலத்தில் ஜக்கு போன்ற அயோக்கியர்கள்தாம் தரைக்க முடியுமோ?

    `நீ மட்டும் பெரிய யோக்கியனா?’ என்று அவரது அந்தராத்மா இடித்துரைத்தது.

    `எங்காவது ஓடிவிட மாட்டோமா!’ என்ற ஏக்கம் பிறக்க, `கொன்று போட்டுவிட மாட்டார்கள்?’ என்று எதிரெண்ணம் ஒன்று எழுந்து பயமுறுத்தியது.

    அதுதான் வெளிப்படையாகவே சொல்லிப் போனாரே அந்த மனிதர், `நாங்க நல்லவங்களுக்கு நல்லவங்க. பொல்லாதவங்களுக்கு யமன்!’ என்று!

    செல்லப்பாவின் வீட்டுக்கு முதல்நாள் வந்திருந்திருந்தார் அவர். “என் பெயர் ஜக்கு — ஜகன்னாதன்! ஒங்களால எனக்கு ஒரு காரியம் ஆகணுமே!” மிகப் பணிவாகப் பேசினார். வீட்டுச் சுற்றுச்சூழலைப் பார்த்தபோதே ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவர்.

    ஒரு சிறு கிராமத்தில் எக்காலத்திலோ கும்பாபிஷேகம் பண்ணப்பட்ட கோயிலில் வாத்தியம் வாசிக்கும் பரம்பரையில் வந்தவர் என்று செல்லப்பாவின் முன்னோர்களுக்கு அந்த வீடு கொடுக்கப்பட்டிருந்தது. கோயிலே சிதிலம் என்றால் வீட்டைப்பற்றிக் கேட்கவா வேண்டும்!

    இந்த மனிதரையா தன் கைக்குள் போட்டுக்கொள்ள முடியாது!

    ஆனால், அவர் எதிர்பார்த்தபடி செல்லப்பா அவ்வளவு எளிதாக மசியவில்லை. ஜக்கு சொல்வதைக் கேட்டுவிட்டு, “அது இசைக்குச் செய்யற துரோகமில்லே,” என்று மறுத்தார்.

    “ஒங்க மனைவிக்குப் புத்துநோயாமே! நீங்க எவ்வளவு உழைச்சாலும், இந்த ஜன்மத்தில அஞ்சு லட்சத்தைப் பாக்க முடியுமா? இதை வெச்சுக்கிட்டு நல்லா வைத்தியம் பாக்கலாமில்ல? பிடிங்க!” ஒரு பெட்டியை அருகிலிருந்த முக்காலிமேல் வைத்தார் அந்த விடாக்கண்டர். பெட்டியைத் திறந்து காட்டியபோது செல்லப்பாவின் கண்கள் அகன்றதைக் கவனிக்கத் தவறவில்லை அவர்.

    “நீங்களும் எத்தனையோ வருஷமா, `சாமி காரியம்’னு செஞ்சுக்கிட்டிருக்கீங்கல்ல? அந்தக் கடவுளே என் ரூபத்திலே வந்திருக்குன்னு நினைச்சுக்குங்க,” என்று நைச்சியமாகப் பேசியவர், “இதிலே ஒரு லட்சம் இருக்கு. வெச்சுக்குங்க. மீதியை விழா முடிஞ்சதும், நானே ஒங்ககிட்டே மண்டபத்திலேயே குடுத்துடறேன். என்ன?”

    “ஐயோ!” பதறினார் செல்லப்பா.

    “சரி, வேண்டாம். யாராவது பாத்துட்டா வம்பு! அடுத்த நாள் காலையிலே இங்கேயே வந்து குடுத்தாப்போச்சு!” வந்த காரியம் நல்லவிதமாக முடிந்தது என்ற திருப்தியுடன் எழுந்துகொண்டார். “கைநீட்டி காசு வாங்கியிருக்கீங்க. கல்யாணிக்குப் பரிசு கிடைக்கக் கூடாது. அவ்வளவுதான். அது ஒங்க கையிலதான் இருக்கு”.

    கல்யாணியின் விதவைத் தாய் ஓர் இசை ஆசிரியை. கருவிலிருந்தே பாட்டைக் கேட்டு வளர்ந்த பெண்! சோடையாக இருக்குமா?

    உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஜக்குவைப்போன்ற பலர் ஒன்று சேர்ந்து, போட்டி முடிவைக் குறித்து பொதுமக்களைப் பந்தயம் கட்ட வைத்திருந்தார்கள். மக்களின் கணிப்புப்படி கல்யாணிக்குத்தான் முதல் இடம்.

    அப்படி ஏடாகூடமாக ஏதாவது நடந்துவிட்டால், பந்தயம் கட்டியவர்களுக்கு வாரிக் கொடுத்து, நஷ்டப்பட வேண்டியிருக்குமே என்று ஜக்கு போன்றவர்கள் முன்ஜாக்கிரதையாக இருந்தார்கள்.

    ஜக்கு போனதும், “யாருங்க?” என்று மெல்லிய குரலில் விசாரித்தாள் மனைவி.

    “ஒனக்கு வைத்தியம் செய்ய சாமி அனுப்பினவரு!” என்று கூறினாலும், செல்லப்பாவின் மனதில் நிம்மதி இல்லை. குறுக்கு வழியில் சம்பாதித்தாவது மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமா?

    நிகழ்ச்சி ஆரம்பிக்க சில நிமிடங்களே இருந்தன.

    “வந்துட்டீங்களா, மாமா? இந்தப் பக்கமா நில்லுங்க. நமஸ்காரம் பண்ணறேன்!”

    ஒரு வருடத்துக்கு முன்னால் அவர் யாரோ, அவள் யாரோ! ஆனால், இந்தச் சில மாதங்களாக, அவள் பாடிய ஒவ்வொரு வரிக்குப் பிறகும் அவர் தன் வாத்தியத்தில் அதையே திரும்ப வாசிக்க வேண்டிய நிலையில், இசைத்துறையில் தனக்கிருந்த நீண்டகால அனுபவத்தால் அவளுக்கு நிறைய கற்றுக் கொடுத்திருந்தார்.

    குருவென மதித்தவரின் காலில் விழுந்து கும்பிட்டாள் கல்யாணி.

    செல்லப்பா காலைப் பின்னால் இழுத்துக் கொள்ளாதிருக்க அரும்பாடு பட்டார்.

    “ஏன் மாமா, முகம் வெளுத்தாப்போல இருக்கு? ராத்திரி எல்லாம் தூங்கலியா? படபடப்பா இருந்திச்சோ?”

    “அ.. ஆமா. இல்ல. லேசா காய்ச்சல்!”

    “அதெல்லாம் சரியாப் போயிடும். ஒங்களுக்குத்தான் வாத்தியத்தைக் கையில எடுத்தா, ஒலகமே மறந்துடுமே!” உற்சாகமூட்ட நினைப்பதுபோல கலீரென்று சிரித்தாள்.

    `ஐயோ! சிரிக்காதேயேன்!’ என்று அலற வேண்டும்போல இருந்தது செல்லப்பாவுக்கு.

    வாத்தியத்தைக் கையில் எடுத்தால் தனக்கு உலகமே மறந்துவிடுமாம்! அதுதான் ஜக்கு கூறிப்போனதை மறக்காமல், கல்யாணியின் ஐந்து கட்டை ஸ்ருதிக்குச் சற்றே குறைவாக வாத்தியத்தில் வைத்துக்கொண்டு வந்தோமா?

    இசை கற்றிருந்தாலும் சரி, இல்லை, அதுபற்றி எதுவும் தெரிந்திராவிட்டாலும்கூட, இரண்டையும் ஒரே சமயத்தில் கேட்பவருக்கு நாராசமாக ஆகிவிடுமே! அவர்களல்லவா வாக்களிக்கப்போகிற நீதிபதிகள்!

    பலத்த கரகோஷத்துக்கு நடுவே, தொலைகாட்சி நிலையத்தாரின் உபயமான புதிய ஆடையை அணிந்து, வாய்கொள்ளாத சிரிப்புடன் கல்யாணி மேடைக்கு வந்தாள்.

    பாட்டின் முதல் வரியைப் பாடினாள். அடுத்து, செல்லப்பாவின் முறை. அவரைத் திரும்பிப் பார்த்து, மென்மையாகச் சிரித்தாள்.

    அடுத்த வரி. அதற்கடுத்த வரி. கல்யாணி பாடிக்கொண்டே போனாள்.

    நீதிபதிகள் முகத்தைச் சுருக்கினார்கள். சபையிலிருந்தவர்களிடமும் `கசமுசா’ என்று பேச்செழுந்தது.

    கல்யாணி அவர் பக்கம் திரும்பினாள். முகத்தில் கேள்விக்குறி. எங்கே தவறு நிகழ்ந்தது என்று யோசிக்கவெல்லாம் அது நேரமல்ல. வலக்கை மைக்கைப் பிடித்திருக்க, இடது ஆள்காட்டி விரல் ஒரு காதுக்குள் நுழைந்து, வாத்திய இசையை மறைக்கப் பார்த்தது.

    தானும் புதிய புடவை அணிந்து, பெருமையுடன் சபையில் அமர்ந்திருந்த தாயின் கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடுவதை அவள் கவனிக்கவில்லை. கண்ணை மூடிக்கொண்டு, தன் குரலிலேயே கவனம் செலுத்தினாள்.

    பாட்டு முடிந்ததும், நீதிபதி, “இந்தச் சூழ்நிலையிலும் நீங்க ஸ்ருதி தவறாம பாடினதைப் பாராட்டித்தான் ஆகணும்!” என்று தவறு எங்கு, எப்படி நிகழ்ந்தது என்று சூசகமாகச் சுட்டிக் காட்டியபோதும், அவளால் செல்லப்பாவைத் தப்பாக நினைக்க முடியவில்லை.

    “பாவம் மாமா நீங்க! காய்ச்சலோட வாசிக்க முடியல,” என்று அனுதாபம் காட்டினாள், தனக்குப் பரிசு கிடைக்காததைப் பெரிதாக எண்ணாது.

    செல்லப்பாவுக்கு வார்த்தைகளே வரவில்லை. நெற்றியில் அடித்துக்கொண்டார்.

    மறுநாள் ஜக்கு வரவில்லை. அவர் மனைவிதான் நிரந்தரமாக அவரைப் பிரிந்து போனாள் — பிறரை ஏமாற்றிச் சேர்த்த பணம் தனக்கு வேண்டாம் என்பதைப்போல்.

    ஒரு நாள் அவரைத் தேடி வந்தாள் கல்யாணி. அவளுடன் நாகரிகமான இளைஞன் ஒருவன்.

    “மாமா! போட்டி அன்னிக்கு ஒங்களுக்கு ஒடம்பு முடியாம போனதும் நல்லதுக்குத்தான். ஜெயிச்சிருந்தா, ஊர் ஊராப் போய் பாடியிருக்கணும். இப்ப வெளிநாட்டுக்கே போகப்போறேன்!”

    வந்திருந்தவன் பேசினான்: “கல்யாணியை டி.வியில பாத்ததுமே, `எனக்கு இவதான்!’னு முடிவு செஞ்சுட்டேன். போட்டியில பரிசு கிடைக்கலியேன்னு இவளுக்கு வருத்தமா இருந்திருக்கும். ஆனா, நான் சந்தோஷமா ஒடனே பறந்து வந்து, பெண் கேட்டுட்டேன்!”

    “மொதல் பத்திரிகை ஒங்களுக்குத்தான் குடுக்கணும்னு வந்தோம், மாமா!”

    இருவரும் மாறி மாறி, ஸ்ருதி பேதமில்லாத இரட்டை நாயனங்கள்போல் பேசினார்கள். சேர்ந்து அவர் காலில் விழுந்தார்கள்.

    ஆசி கூறக்கூட அவர் நாக்கு புரளவில்லை. சற்று யோசித்துவிட்டு, ஏதோ முடிவுக்கு வந்தவராக, “இரும்மா!” என்று உள்ளே போனவர், ஒரு சிறு பெட்டியைக் கொண்டுவந்தார். “இதிலே லட்ச ரூபா இருக்கு. என்னோட கல்யாணப் பரிசா இருக்கட்டும்”.

    அதைப் பார்க்காமலேயே, “இப்போ எதுக்கு, மாமா? கல்யாணத்துக்கு வர்றப்போ குடுங்க”. ஒரு சிறிய மிரட்டலுடன், குழந்தைமாதிரி பிடிவாதம் பிடித்தாள் கல்யாணி.

    “ஒங்க மாமி செத்துப்போய் இன்னும் ஒரு மாசம்கூட ஆகலே, குழந்தே. நான் வரதுக்கில்ல!”

    “எத்தனை பணம்னு சொன்னீங்க?” அப்போதுதான் அவளுக்கு உறைத்தாற்போல் கேட்டாள். “ஒரு லட்சமா! அப்படியோவ்!” சிரித்தாள். “என்ன மாமா? லாட்டரி ஏதும் அடிச்சீங்களா?”

    தளர்ந்த குரலில் ஒப்புக்கொண்டார்: “இல்லேம்மா. ஒரு பந்தயத்திலே கிடைச்சது!”

    அவ்வார்த்தையைக் கேட்டதும், அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தாள் கல்யாணி.

    மகளுக்குப் பரிசு கிடைக்காத ஆத்திரத்தில் அம்மா கூறியது இப்போது கேட்டது: `மனுசன் எவங்கிட்டேயோ பணம் வாங்கிக்கிட்டு, வேணுமின்னே ஸ்ருதியைக் குறைச்சு வாசிச்சிருக்கான். அப்போதானே ஒனக்குப் பரிசு கிடைக்காம பண்ணமுடியும்?’

    `சேச்சே! மாமா என்னை அவர் பெறாத மகளாத்தான் நினைச்சுக்கிட்டிருக்காரும்மா. அப்படியெல்லாம் தப்புத்தண்டாவுக்குப் போகமாட்டார். தினமும் சாமி காரியம் பண்றவரு!’ என்றெல்லாம் இந்த மனிதரையா விட்டுக்கொடுக்காமல் பேசினோம்!

    கல்யாணி செல்லப்பாவைப் பார்த்த பார்வையில் ஒரு வெறுப்பு. அப்பார்வையில், `ஒங்களை எவ்வளவு ஒசத்தியா நினைச்சிருந்தேன்!’ என்ற வேதனைதான் அதிகமிருந்ததோ?

    அதைத் தாளமாட்டாது தலைகுனிந்தார் செல்லப்பா.

    “வாங்க, போகலாம்!”

    அவரிடம் சொல்லிக்கொள்ளாமலேயே வெளியே விரைந்தாள் கல்யாணி.

    பணப்பெட்டி அங்கேயே இருந்தது. உள்ளே புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், கத்தை கத்தையாய்!

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (60)

    நிர்மலா ராகவன்

    பள்ளியில் BULLY

    நலம்-1-1
    நான் மலேசியாவிற்கு வந்தபின் ஒரு புதிய ஆங்கில வார்த்தையைக் கற்றேன்: BULLY.
    அப்படியென்றால், ஒருவரை மிரட்டியோ, அச்சுறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ அவருக்கு இணக்கமில்லாத காரியத்தைச் செய்யவைப்பது.

    இதனால் பாதிக்கப்பட்டவர் மனம் நோகும். பல சந்தர்ப்பங்களில், உடல் நிலையும் நீண்ட காலம் பாதிக்கப்படலாம். ஏன், மரணத்தில்கூட முடியலாம்.

    உண்மைக் கதை (ஆதாரம்:THE STAR, ஜூன், 2017)

    பதினைந்து வயதாக இருந்தபோது, பினாங்கிலுள்ள பள்ளிக்கூடத்திற்குச் சென்ற மகன், நவீன், அலங்கோலமாக வீடு திரும்பியதைக் கண்டு தாய் திடுக்கிட்டாள்.

    விசாரித்தபோது தெரிந்தது, இவனைச் சில மாணவர்கள், ஆண்பிள்ளைத்தனமாக இல்லை, `கோழை’ என்று கேலி செய்தனர் என்று. வன்முறைக்கு ஆளாக்கினால், அவன் மாறிவிடுவான் என்று நினைத்தவராக அடித்துப் போட்டிருக்கிறார்கள். `ஆசிரியர்களிடம் சொன்னால், இன்னும் அடி வாங்குவாய்!’ என்று மிரட்டியிருக்கிறார்கள்.

    மறுநாளே தாய் பள்ளிக்கூடத்திற்குச் சென்று அந்தப் பையன்களைக் கண்டித்திருக்கிறாள்.

    `இன்னும் இரண்டு வருடங்களில் படிப்பு முடிந்துவிடும்!’ என்று மகனுக்கு ஆறுதல் அளித்தாள்.

    நவீனுக்கு இசைதான் உலகமே. பரம சாது. பதினெட்டு வயதில்

    பள்ளி வாழ்க்கை முடிந்து, தாற்காலிகமாக உத்தியோகமும் தேடிக்கொண்டான்.

    ஆறு மாதங்கள் கழிந்தபின், இவனைக் கொடுமைப்படுத்தியவர்களை மீண்டும் சந்திக்க நேர்ந்தது என்று தாயிடம் தெரிவித்த நவீன், அவர்களிடம் எதுவும் கேட்கவேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறான்.

    அப்போது அவளுக்குத் தெரியவில்லை, முதல் முறை அவள் கண்டித்தபோது, மகனுடைய தலையை சுவற்றில் மோதி அவர்கள் பழி தீர்த்துக்கொண்டார்கள் என்று.

    இதை அமைப்பதைக் கற்க கோலாலம்பூரில் ஒரு கல்லூரியில் அடுத்த வாரம் சேருவதாக இருந்தான் நவீன். ஆனால் அது நடக்கவில்லை.

    அண்மையில், (ஜூன்12) ஏதோ தின்பண்டம் வாங்க கடைக்குச் சென்ற நவீனுடன் அவனுடைய நெருங்கிய நண்பன் ஒருவனும் இருந்தான். அப்போது பள்ளியில் அவர்களுடன் படித்த அந்த ஆறு பேரும் சேர்ந்து இருவரையும் ஹெல்மெட்டால் அடித்திருக்கிறார்கள். நண்பன் தப்பிக்க, நவீனை எரித்து, பாலியல் வதைக்கும் ஆளாக்கிவிட்டார்கள்.

    நண்பன் அடையாளம் காட்ட அவர்கள் பிடிபட்டுவிட்டாலும், brain dead என்று முதலில் அறிவிக்கப்பட்ட நவீன் மூன்று நாட்களுக்குப்பின் இறந்துபோனான். (தனித்து வாழும் அவன் தாய்க்கு ஒரு மகள் இருக்கிறாள்).

    ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?

    பிறரைத் தொடர்ச்சியாக வன்முறைக்கு ஆளாக்குபவர்கள் உண்மையில் பயந்தாங்கொள்ளிகள். (இவர்களேகூட வன்முறைக்கு ஆளாகி இருக்கக்கூடும்).

    தம்மைப்போன்ற பிறரைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு, கோழை என்று தாம் நினைப்பவரை, அல்லது உடல்வலிமையிலோ சமூக நிலையிலோ தம்மைவிட குன்றியவரை அடையாளம் கண்டுகொண்டு, பலவிதமாக நோகடிப்பார்கள். அப்படிச் செய்யும்போதெல்லாம் தம் வலிமை கூடுவதுபோன்ற பிரமை உண்டாகும். இதுவும் ஒருவித போதைதான்.

    இப்போது கணினிவழி பிறரைத் துன்புறுத்துகிறவர்களும் கிளம்பிவிட்டார்கள். இதை CYBER BULLYING என்கிறார்கள். நீண்ட காலம் இப்படிப்பட்டவர்களுக்கு இலக்காகுபவர்கள் எளிதில் நிம்மதி பெறமுடியாது போகும்.

    கதை

    ஒரு பெண்ணைப்பற்றி கண்டபடி இணையத்தில் எழுதிப் பரப்பினாள் கூடப் படிக்கும் பெண்ணொருத்தி. அவை உண்மை இல்லையென்றாலும், பாதிக்கப்பட்டவளுக்கு மனம் நொந்தது. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குப் போய்விட்டாள்.

    வேறு சிலர் எப்படி இந்தக் கொடுமையைத் தவிர்ப்பது என்று புரியாது, தன்னம்பிக்கை இழந்து, மது, போதைப்பொருள், வன்முறை ஆகியவைகளை நாடுகிறார்கள். அல்லது, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொள்கிறார்கள்.

    பள்ளிக்கூடத்தை விட்டுவிட்டாலும், கணினிமூலம் விளையாடுபவர்கள், மின்னஞ்சல் வைத்திருக்கும் இளைஞர்கள் ஆகியோர் பாலியல் வதை (வேண்டாத விவரங்களை அனுப்புவது) உட்பட ஏதோ ஒருவித வதைக்கு ஆளாகிறார்களாம். இதனால், இளைஞர்கள் யாருடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று அவர்களுடைய பெற்றோர் கண்காணிப்பது அவசியமாகிறது.

    (வீட்டில் கணினி வசதி இல்லாதவர்கள் கடைக்குப் போய், கண்ட விளையாட்டுகளில் ஈடுபடுவது கூடுதலான அபாயம் விளைவிக்கும்).

    தற்போதைய கணினி யுகத்தில் இது உலகளாவிய பிரச்னை ஆகிவிட்டது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று Stop cyerbullying Day அனுசரிக்கப்படுகிறது.

    தொடருவோம்

    Share
  • நிம்மதியை நாடி

    நிர்மலா ராகவன்

    ஃபெர்ரி படகு தன் சக்திக்கு மீறிய கனத்தைச் சுமந்து, மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது. உள்ளே ஒரே துர்வாடை. அதெல்லாம் ரம்லிக்குத் தெரியவில்லை. அவன் மனம் கனவுகளால் நிறைந்திருந்தது.

    பெயருக்கு வீடு என்றிருந்த ஒன்றை எரிமலைக்கு — மீண்டும் — பறிகொடுத்துவிட்டு, இனி என்ன செய்வது என்று புரியாது நின்றிருந்தபோதுதான் ஆதான் கூறினான்: “என்னோட மலேசியா வந்துடேன். போன தடவைதான் ஒங்கப்பா, அம்மா ரெண்டு பேரையும் பலிகுடுத்தாச்சு. நீயும் இங்கேயே கிடந்து சாகப்போறியா?”

    சுமத்ராவில் இருந்த ஸினபோங் மலை நானுறு ஆண்டுகளாக, `இதுவும் எரிமலைதானா!’ என்று வியக்கத்தக்கதாக இருந்தது. அதற்கே அந்த அமைதி அலுத்துவிட்டது போலும்! கடந்த நான்கு வருடங்களாக, 2013-யிலிருந்து, இடைவிடாது நெருப்புக்குழம்பைக் கக்கிக்கொண்டிருந்தது. எப்போதும் வானத்திலிருந்து சாம்பல் கொட்ட, `இதெல்லாம் சாதாரணமாக நடப்பதுதானே!’ என்பதுபோல, முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டு, விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர் ரம்லியைப்போன்ற ஒரு சிலர்.

    பிறந்ததிலிருந்து பழக்கமாகிவிட்ட இடத்தைவிட்டுப் போவதா! ரம்லி தயங்கினான்.
    “பாத்திமாவையும் கூட்டிட்டு வா,” என்று ஆசைகாட்டினான் நண்பன்.

    பாத்திமாவா?! டச்சுக்காரர்களின் வழிவந்திருந்த சிவந்த நிறத்துடன், உயரமும் பருமனாகவும் இருந்த அவள் எங்கே, கடும் வெயிலில் ஓடாய் உழைத்து சோனியாகப்போன தான் எங்கே!

    “அதோட அய்த்தையும் செத்துட்டாங்க. ஒண்ணும் புரியாம நிக்குது! கூப்பிட்டா வரும்”.

    எப்போது எரிமலைக் குழம்பு தன் தலையில் விழும் என்று பயந்துகொண்டு இருக்க வேண்டியதில்லை. அந்த நினைப்பே சற்று நிம்மதியாக இருந்தது.

    பாத்திமாவை உடன் அழைத்துக்கொண்டு ஃபெர்ரியில் ஏறியிருந்தான் ரம்லி. “உங்களுக்கெல்லாம் அங்கே வேலை செய்ய அனுமதி இல்லே. சும்மா டூரிஸ்டு விசாவில வர்றீங்க. ஆனா, அங்கே வேலை கிடைக்க நான் ஏற்பாடு பண்ணறேன்! நல்லா சாப்பிடலாம். தங்க எடமும் குடுப்பாங்க,” அவர்களுடன் பயணித்த ஏஜண்டு கூறினார். “ஆனா ஒண்ணு. இமிகிரேஷனிலிருந்து யாராவது வந்தா மட்டும் ஓடி ஒளிஞ்சுக்கணும்!”

    “ஏன் ஒளிஞ்சுக்கணும்?” யாரோ கேட்டார்கள்.

    “சட்ட பூர்வமா வேலை செய்யற ஆளுங்களுக்கு முதலாளிங்க மலேசிய கவர்மெண்டுக்கு ஆயிரக்கணக்கில பணம் கட்டணுமில்ல? அதோட, ஒங்களை வேலைக்கு வெச்சா, குறைச்சலா சம்பளம் குடுக்கலாம்,” என்ற ஏஜண்டு, “இந்த ஒலகத்திலே எல்லாரும் போக்கிரிப் பசங்க!” என்றான், பெரிய சிரிப்புடன்.

    சில மாதங்கள் இன்பமாக கழிந்தன. கட்டட வேலை இடுப்பை ஒடித்தது என்றாலும், பாத்திமாவின் அணைப்பில், அவள் ஒவ்வொன்றையும் அவனைக் கேட்டுச் செய்த மரியாதையில் சொர்க்கத்தையே உணர்ந்தான் ரம்லி.

    அன்று காலையிலிருந்தே வாந்தி எடுத்துக்கொண்டிருந்தாள் பாத்திமா. பெருமையுடன் அவளைப் பார்த்தான் ரம்லி. இனியும் ஒற்றை மரமில்லை. தன் குடும்பம் தழைக்கப்போகிறது!

    “வாந்தி நிக்கவே இல்லியே! எத்தனை நாள்தான் விடுப்பு எடுக்கிறது!” என்று பாத்திமாவே முனகியபோதுதான், `இது கர்ப்பமாக இருக்காதோ?’ என்ற சந்தேகம் முதன்முறையாக உறைத்தது ரம்லிக்கு.

    “அஞ்சு நாளா இப்படியே வாந்தியும் பேதியுமா இருக்குன்னு சொல்றீங்களே! காய்ச்சல் வேற அதிகமாக இருக்கு. இது டெங்கிதான்!” என்றார் டாக்டர்.

    பக்கத்தில் நின்றிருந்த நர்ஸ், “ஒங்க வீட்டுக்கிட்டே கொசுத்தொல்லை அதிகமோ?” என்று மெள்ள விசாரித்தாள்.

    ரம்லி உதடுகளை இறுக்கிக்கொண்டான்.

    மெல்லிய மரப்பலகைகளால் ஆன சுவர். தரைக்கு கனமான அட்டை, கோணல்மாணலான உலோகத்தகடுகளே கூரை. உள்ளே தடுப்புக்கு கிழிந்த ஸாரோங். அதற்கு வீடு என்று பெயர். குளிப்பதிலிருந்து குடிப்பதுவரை அருகிலிருந்த குளத்து நீர்தான். இந்த லட்சணத்தில், கொசு இருக்கிறதா என்று கேட்கிறாள்! கொசுக்களின் இருப்பிடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள். அவ்வளவுதான்.

    “மொதல்லேயே வந்திருக்கணும்!” என்று அதிருப்தி தெரிவித்தார் டாக்டர்.

    மருத்துவச் செலவுக்குக்கூட காசில்லை, அதனால்தான் அவள் உடல்நிலையைப் பெரிதாக எண்ணவில்லை என்று ரம்லியால் சொல்ல முடியவில்லை. அவனைப் போன்றவர்களின் துன்பம் வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் இந்த டாக்டரைப்போன்ற பெரிய மனிதர்களுக்குப் புரியுமா? அசட்டுச் சிரிப்புடன் பரிதாபமாக விழித்தான்.

    பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பாத்திமாவின் உடல் பூராவும் பல குழாய்கள். அவளுடைய கைகால்கள் எல்லாம் பருத்திருந்தமாதிரி தோன்றியது ரம்லிக்கு. கைகளோ தன்னிச்சையாக ஆடி, பக்கவாட்டிலிருந்த கட்டிலின் உலோகச் சட்டத்தில் தாளம் போட்டன.

    `காலில் வலி,’ என்று உதைக்க ஆரம்பித்தாள். ரம்லி அவள் காலை நீவிக்கொடுக்க ஆரம்பித்தான்.

    எத்தனை இரவுகள் அவள் தன் காலைப் பிடித்துவிட்டிருப்பாள், `பாவிங்க, என்னமா வேலை வாங்கறாங்க!’ என்று திட்டியபடி!

    `நாம்ப ஏழைங்க, பாத்தி! எல்லாத்தையும் பொறுத்துப்போனாதான் பணம் கிடைக்கும்! வயிறுன்னு ஒண்ணு இருக்கே!’ என்று அவளைச் சமாதானம் செய்தது நினைவில் கசப்பாக எழுந்தது.

    “ம்மே..” அடிவயிற்றிலிருந்து பாத்திமாவின் வேதனைக்குரல் எழும்பியது. இருமுறை. வலி பொறுக்காத மாடு ஒன்று கத்துவது போலிருந்தது. எப்போதும் இனிமையாகப் பேசுபவளா இவள்!

    ரம்லிக்கு அலுப்பாக இருந்தது. இவளுக்கு சிசுருஷை செய்துகொண்டிருந்தால், இருக்கும் வேலையும் போய்விடும். பசியையும் பட்டினியையும் தாங்க முடியாதுதானே அந்த பணக்கார, அண்டை நாட்டுக்கு வந்திருந்தான்!

    “வேலைக்குப் போகணும், பாத்தி!” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு, தளர்ந்த நடையுடன் வெளியே நடந்தான்.

    “ரம்லி! ராத்திரியிலேருந்து யாரோ ஒன்னை கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க! ரொம்ப அவசரமாம்!” மேஸ்திரியின் தொலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தான் மருத்துவமனையில். வாங்கியவனின் முகத்தில் கலக்கம்.

    “உங்கள் மனைவியின் உடல் ரொம்ப மோசமாக இருக்கிறது. உடனே வாருங்கள்!”

    நரம்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் அவனுக்காகவே காத்திருந்ததுபோல் இருந்தது. நேரிடையாக விஷயத்துக்கு வந்தார். “மூளையில ரத்தம் கசியறதால, இவங்க தலை பெரிசாகிக்கிட்டே வருது. உடனடியா ஆபரேஷன் பண்ணணும்”.

    ஆபரேஷனா!

    அஞ்சு, பத்துக்கே இங்கே வழியைக் காணோம்! ஆயிரக்கணக்கான ரிங்கிட்டுக்கு எங்கே போவது!

    டாக்டர் தாழ்ந்த குரலில், தன்பாட்டில் பேசிக்கொண்டு போனார்: “ஒரு வேளை, ஆபரேஷன் பண்றப்போ அவங்க உயிர் போயிட்டா, தலையைத் தனியா எடுத்து, ஆராய்ச்சிக்கு வெச்சுக்குவோம். ஆறுமாசம் கழிச்சு, திரும்பவும் உடலோடு சேர்த்துத் தைச்சு ஒங்ககிட்ட குடுத்துடுவோம்! ஆபரேஷன் பண்ணாட்டி, எப்படியும் உயிர் போயிடும்!”

    டாக்டர் ஏதேதோ கூறினார், `ஸப்ஸிடி’ (subsidy), உதவி என்று. இந்தப் படித்தவர்கள் பேச ஆரம்பித்தாலே அவனுக்குக் குழப்பம்தான் எழுகிறது. காது அடைத்துப் போகிறது.

    மலேசிய அரசாங்கம் மருத்துவச்செலவில் பெரும்பகுதியைக் கொடுத்துவிடும், சில நூறுகளே அவன் கொடுக்க வேண்டியிருக்கும் என்றவரின் விளக்கம் ரம்லிக்குப் புரியத்தானில்லை.

    ஒன்று மட்டும் புரிந்தது அவனுக்கு.

    தன்னை இறுக அணைத்த பாத்திமாவின் கைகள்! அவை இனி எழாது!

    `ஆபாங்! ஆபாங்!’ என்று நொடிக்கு நொடி அழைத்த இதழ்கள் இனி பேசாது!

    வெகு மோசமான நிலையில் இருப்பதாகச் சொல்கிறார்களே! பிழைத்தெழுந்து, பழையபடி வேலைக்குப் போய் காசு சம்பாதித்துக்கொண்டு வர முடியுமா அவளால்?
    அதுதான் டாக்டர் சொன்னாரே, `தலையில் ஓட்டை போடுவோம். பிழைத்தாலும், கைகால் விளங்காமல் போகலாம். பேச முடியாமல் போகலாம்,’ என்று!

    அவளைப் படுக்க வைத்து, இறுதிக் காலம்வரை ஒரு கைக்குழந்தைபோல் பார்த்துக்கொள்ளவேண்டி இருக்கும்.

    நடக்கிற காரியமா!

    “என்ன முடிவு எடுத்திருக்கீங்க? படிச்சுப் பாத்துட்டு கையெழுத்துப் போடுங்க!” ஏதோ காகிதத்தை நீட்டினாள் தாதி.

    “வேணாம்,” என்றான் தயங்கியபடி.

    “ஆபரேஷன் வேண்டாமா?”

    “எனக்கு.. எனக்கு.. படிக்கத் தெரியாது!” அத்தனை துயரத்திலும் தன் இயலாமை அவனை அவமானத்தில் ஆழ்த்தியது. குரல் வெளியே வரவில்லை.

    இன்னும் சில நிமிடங்கள்தாம். சுயநினைவுடன், ஆனால் அசைவின்றி, படுத்திருந்த அன்பு மனைவியின் கன்னங்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, அவள் நெற்றி முழுவதும் முத்தமிட்டுக்கொண்டே இருந்தான் ரம்லி. நடுநடுவில், தன் கண்ணீரையும் துடைக்க வேண்டியிருந்தது.

    “பாத்திமா! ஸாயாங்!” என்று வாய் முணுமுணுத்தபடி இருந்தது.

    அடுத்து நடந்ததெல்லாம் ஏதோ கனவுபோல் இருந்தது. ஆறு பேர் பாத்திமாவைத் தூக்கி சக்கரம் பொருத்தியிருந்த கட்டிலில் கிடத்தி, எங்கோ அழைத்துப் போனார்கள்.

    இரண்டு மணி நேரம் கழிந்தன.

    டிராலியில் நோயாளிகளுக்கான ஆகாரம் வெங்காயத்தழையின் வாசனையுடன் வந்தது. தான் நேற்று இரவிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை என்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது ரம்லிக்கு.

    இங்கேயே இருந்தால், பணத்துக்காக நெரிப்பார்களே! பயம் பிடித்துக்கொண்டது.

    காம்பவுண்டை விட்டு வெளியே விரைந்தான். கால்சட்டைப் பையில் பாஸ்போர்ட் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டான். இனியும் அதே இடத்துக்கு வேலை பார்க்கச் செல்ல முடியாது.

    இந்த வேலை இல்லாவிட்டால், இன்னொன்று!

    `குடுக்கறதைக் குடுங்க!’ என்று பவ்யமாகக் கைகட்டி நின்றால், எந்த செம்பனைத் தோட்டத்திலும், கட்டுமானத் தொழிலிலும் வேலைக்கு வைத்துக்கொள்வார்கள். எங்காவது தொலைதூரத்தில் புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டியதுதான்!

    அதற்கென்ன! ஆஸ்பத்திரியில் அவனைக் கூப்பிட்டுப் பார்ப்பார்கள். அவன் கிடைக்கமாட்டான் என்பது உறுதியானதும் பாத்திமாவின் உடலை எப்படியோ உபயோகித்துக்கொள்வார்கள். இனி அவர்கள் பாடு!

    கடந்த நாட்களின் துன்பமும் துயரமும் மறைய, ரம்லி நடையை வீசிப்போட்டான். சற்றே நிம்மதியாக உணர்ந்தான்.

    ஓரிரு நிமிடங்கள்தாம். நின்ற இடத்திலேயே நின்று, கழுத்தை வளைத்து, சற்று தூரத்தில் தெரிந்த பெரிய, வெள்ளைநிறக் கட்டடத்தைப் பார்த்தான்.

    “பாத்தீ! அடுத்த பிறவியிலேயாவது பணக்கார வீட்டிலே பிறம்மா!”

    விம்மி விம்மி அழும் அந்த இருபது வயது இளைஞனை வேடிக்கை பார்த்தபடி நகர்ந்தார்கள் தெருவில் போனவர்கள்.

    குறிப்பு: ஆபாங் (abang) என்று வார்த்தை அண்ணனைக் குறித்தாலும், கணவனையும் விளிக்கும் வார்த்தை.

    ஸாயாங் = அன்பே

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (59)

    நிர்மலா ராகவன்

    ஆண்-பெண்-பள்ளி

    நலம்-1-1

    பெண்களும் பையன்களும் சேர்ந்து படிக்கும் இடைநிலைப்பள்ளி அது. ஆரம்பப் பள்ளியிலிருந்தே அப்படித்தான் என்றாலும், இந்த வயதிலேயே அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற துடிப்பு உயர்பதவியிலிருந்த சில ஆசிரியைகளுக்கு வந்தது.

    அதன் பலனாக, கோலாலம்பூருக்கு அருகிலிருந்த அப்பள்ளியில் ஒரு புதிய விதி அமலுக்கு வந்தது. எல்லா வகுப்பறைகளிலும் ஆண்கள்தாம் முதல் வரிசைகளில் அமர வேண்டும். காரணம்: பெண்கள் முன்னிருக்கைகளில் உட்கார்ந்தால், அவர்களுடைய பின்னழகைப் பார்க்கும் விடலைப் பையன்களின் மனம் சலனப்பட்டுவிடும். பிறகு, பாடங்களில் மனம் செலுத்துவது எப்படி?

    ஆசிரியர்களின் பொதுக்கூட்டத்தில் இந்த விதி தெரிவிக்கப்பட்டபோது, `பெண்கள் மட்டும் பையன்களைப் பார்க்கலாமா?’ என்று யாரோ முணுமுணுத்தார்கள். (சத்தியமாக நானில்லை). நான் முணுமுணுப்பதெல்லாம் கிடையாது. போட்டால் சண்டைதான்).

    மேலதிகாரிகள் என்ன சொன்னாலும், (பிதற்றினாலும்), ஆமோதிக்கும் வண்ணம் தலையாட்டி வைக்கவேண்டும் என்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை, பாவம்!
    நான் புருவத்தை மட்டும் உயர்த்தினேன், `இது என்ன முட்டாள்தனம்?’ என்பதுபோல்.
    மாணவர்களுக்கோ பெருமை தாங்கவில்லை. அவர்களிடம் உண்மைக் காரணம் சொல்லப்படாததால், இருபாலரில் தாங்களே உயர்ந்தவர்கள், அதனாலேயே அப்படி ஒரு சிறப்பு என்று எண்ணினார்கள்.

    நான் போதித்த பரிசோதனைக்கூடத்துக்கு வந்தபோது, வழக்கமாக பெண்கள் உட்காரும் இடத்துக்குப் பையன்கள் வந்தார்கள். நடையிலேயே ஒரு துள்ளல். பெண்களைக் கேலியாகப் பார்த்தார்கள்.

    ஒரு மாதம் ஆகியது. ஆண்களுக்குப் பெருமை அடங்கவில்லை. தாங்கள் அவ்வளவு உயர்வானால், உழைத்துப் படிப்பானேன் என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும். வாய் ஓயாமல் பேசினார்கள். நான் கற்பித்தது பின்னாலிருந்த பெண்களுக்குக் கேட்கவில்லை. அவ்வளவு இரைச்சல். அவர்களை நான் திட்டப்போனால், `Racist’, எங்கள் இனத்திற்கு இவள் எதிரி!’ என்ற பழி வரும். எதற்கு வம்பு!

    மாணவிகள் ஒன்று திரண்டு வந்து, `பையன்கள் உயரமாக இருக்கிறார்கள். எங்களுக்குக் கரும்பலகை தெரிவதில்லை!’ என்று என்னிடம் முறையிட்டார்கள்.

    சிறிது யோசித்துவிட்டு, “அடுத்த முறை நீங்கள் சற்று சீக்கிரம் வந்து, முன்னால் உட்கார்ந்துகொள்ளுங்கள்!” என்றேன்.

    வழக்கம்போல், வெகு நிதானமாக வந்த மாணவர்கள் கோபமாக, “ஏய்! இது எங்கள் இடம்! பெண்கள் எல்லாரும் எழுந்திருங்கள்!” என்று விரட்ட, “டீச்சர்தான் சொன்னார்கள்!” என்று பதிலளித்தார்கள், பிடிவாதத்துடன் இறுகிய உதட்டுடன்.
    “டீச்சர்! உங்களுக்குப் பள்ளிக்கூட விதி தெரியாதா?” என்று ஒரு மாணவன் சவாலாகக் கேட்க, “இது உங்கள் வகுப்பறை இல்லை. என் இடம்! இங்கு நான் வைத்ததுதான் சட்டம். உங்களுக்குத்தான் படிப்பில் அக்கறை இல்லையே! பின்னால் உட்கார்ந்து, தாராளமாகப் பேசுங்கள்!” என்றேன்.

    அதிர்ந்தவர்களாக பின்னால் நகர்ந்தவர்கள், `எல்லாம் உன்னால்தான்!’ என்று ஒருவரையொருவர் திட்டிக்கொண்டார்கள்.
    ஆனால், அவர்கள் மனம் படிப்பில் லயிக்கவில்லை. அவமானம் தாங்காது, குனிந்த தலையுடன் இருந்தார்கள்.

    அவர்களைக் கவனிக்காததுபோல் நான் பாடத்தை நடத்த, பெண்கள் உற்சாகமாகக் கற்றார்கள். (மலாய் பெண்கள் ஆண்களைவிட கல்வியில் அதிக கவனம் செலுத்தி, உயர்கல்விக்குப் போகிறார்கள் என்ற தகவல் தினசரிகளில் வந்திருக்கிறது. ஏதாவது தடங்கல் இருக்கும்போதுதான் அதைத் தாண்டிக்கொண்டு, முன்னேற வேண்டும் என்ற உந்துதல் பிறக்கிறதுபோலும்!ஒரு மாதம் கழிந்தது. மாணவர்களின் உற்சாகம் அறவே வடிந்தது. தங்கள் நிலையை ஏற்றுக்கொண்டார்கள். எப்போதும்போல் பேச ஆரம்பித்தார்கள்.

    நான் பெண்களுடன் கலந்தாலோசித்துவிட்டு, பழையபடி, மாணவர்களை முன்னால் உட்காரச் சொன்னேன். “தாங்க்யூ டீச்சர்!” என்றார்கள், மலர்ந்த முகத்துடன்.
    இப்போது அவர்கள் பேசத் துணியவில்லை. `மீண்டும் பெண்களுக்குப் பின்னால் தள்ளப்படும் இழிநிலைக்கு ஆளாகிவிடுவோமோ?’ என்ற பயத்தால் படிப்பில் கவனம் போயிற்று.

    பதின்மூன்று வயதில், `நீங்கள் பெண்களைவிட உயர்ந்தவர்கள்!’ என்று இந்த ஆண்பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கப்படுவதால், பெற்ற தாயாக இருந்தாலும், அவளுக்கு அடங்குவதில்லை. தாய் மரியாதையாக அவர்களை நடத்த வேண்டும்.

    என் சக ஆசிரியை ஒருத்தி தன் மகனை அதட்டியபோது, `நீ பெண்! எனக்குப் புத்தி சொல்லும் தகுதி உனக்கில்லை!’ என்றானாம். ஆசிரியர்களின் பொதுஅறையில் புலம்புவாள்.

    அவளுக்கு அப்போது எழுந்த வருத்தம் பிறர்மேல் ஆத்திரமாக மாறியது. தனக்குக் கீழே வேலை பார்த்தவர்களை படாதபாடு படுத்தினாள்.

    தனியார் பள்ளிகளில் மாணவ மாணவிகளை பால் ரீதியாக வித்தியாசப்படுத்துவதில்லை. அதனால் ஒன்றாகப் பேசிப் பழகுவார்கள்.

    `இதெல்லாம் பெண்கள் சமாசாரம்!’ என்ற பாகுபாடு இல்லாததால், பதின்ம வயது ஆண்கள் மாதவிடாய்பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். உடல் வலியுடன் பெண்கள் இருக்கும் அச்சமயத்தில் கனமான பொருள் எதையாவது தூக்க பெண்களுக்கு உதவி செய்கிறார்கள்.

    `இது பெண்கள் வேலை!’ என்று எதையும் இழிவாகக் கருதாது, சமையலிலும், வீட்டைச் சுத்தப்படுத்துவதிலும் ஈடுபாடு செலுத்துகிறார்கள்.

    அப்படி ஒரு பையன், `எனக்குப் புத்தகத்தை எடுத்துப் படிக்கப் பிடிக்காது. அதனால் படிப்பதே கிடையாது,’ என்றபோது, `பின்னே எப்படி நல்ல தேர்ச்சி பெறுகிறாய்?’ என்று கேட்டேன்.

    `பெண்கள் ஓயாமல் பாடங்களை விவாதிப்பார்கள். அதைக் கேட்டாலே போதுமே!’ என்றான், அலட்சியமாக.

    ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒருவிதமான உறவுதான் இருக்கமுடியும், அவர்கள் கலந்து பேசினால், நிச்சயம் நடக்கக்கூடாதது நடக்கும் என்ற மனப்பான்மை இன்றும் நம்மில் பலருக்கு இருக்கிறது. இதன் விளைவாக, யாரைப் பார்த்தாலும் வேண்டாத ஈர்ப்புதான் ஏற்படும்.

    திருமணம் ஆனபின்னர், மனைவி கணவனைப் பார்த்துப் பயப்படுவதும், `இவளைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையே!’ என்று கணவனுக்கு ஆயாசம் ஏற்படுவதும் இயல்பு. இதனால் இவர்களுடைய தாம்பத்திய உறவு நெருக்கமானதாக இருக்க முடியுமா?

    அந்த உணர்ச்சிகளுக்கு வடிகாலாக, தம்மைப் போன்றில்லாது, இன்னொரு பாலருடன் சகஜமாகப் பேசுபவர்களைப் பழிக்கிறார்கள் நான் பார்த்த பெண்கள். (ஆண்களும் இப்படி வம்பு பேசுகிறார்களா என்று தெரியவில்லை).

    நான் ஆரம்பக்கல்வி பயின்றபோது, கூடப்படித்த பையன்களுடன் பேசிப் பழகினால் காது அறுந்துவிடும் என்று ஆசிரியர்கள் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். அதனால், சொந்த அண்ணனைக்கூடத் தெரியாததுபோல் நடந்துகொள்ள வேண்டிய நிலை. இப்படிப் பயமுறுத்தி வைத்தால், பதின்ம வயதில் வேண்டாத கற்பனைகளும் நடத்தையும்தான் வரும்.

    நம் குழந்தைகள் தம்முடன் படிப்பவர்களையோ, உத்தியோகம் பார்ப்பவர்களையோ வீட்டுக்கு அழைத்துவந்தால், அவர்களுடன் நாமும் கலந்து பேசினால், அவர்களுக்கு நம் மீது மரியாதையும், தம்மீதே நம்பிக்கையும் ஏற்படாதா! அந்த நம்பிக்கையைக் காப்பாற்றிக்கொள்ள முனைவார்கள்.

    படித்து முடித்து பதினைந்து வருடங்கள் ஆனபின்னர் எங்கள் வீட்டுக்கு வந்தான் என் மகளுடன் பள்ளியில் படித்த ஒருவன். அப்போது இரவு பத்து மணி இருக்கும். எங்கோ இருந்தவன் அந்தப் பக்கமாக வந்தவன், முன்பு எங்கள் வீட்டுக்குத் தீபாவளி சமயத்தில் நினைவு வைத்துக்கொண்டு, மீண்டும் வந்திருந்தான்.

    “அம்மா! ங் வந்திருக்கான்!” என்று என் மகள் அழைக்க, “சரி,” என்று மட்டும் சொன்னேன். இரண்டு, மூன்று முறை அவள் கூப்பிட, புரிந்து, “ஓ! என்னைப் பாக்கணும்கிறானா?” என்று அறைக்கு வெளியே வந்தேன்.

    மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தோம்.

    “ஆன்ட்டி! நான் ரவை உருண்டை சாப்பிடுவதையே விட்டுவிட்டேன்,” என்று அவன் கேலியாகச் சொல்ல, சிரிப்பு பலத்தது.

    அவனுக்குப் பதினேழு வயதாக இருந்தபோது, `எங்கள் சம்பிரதாயம்! உருண்டையை முழுவதாகத்தான் வாயில் போட்டுக்கொள்ள வேண்டும்,’ என்று நான் அளக்க, அந்த சீனப்பையனும் அதை நம்பி, அப்படியே செய்து, விழி பிதுங்க திண்டாடினதை மறக்க முடியுமா?!

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (58)

    நிர்மலா ராகவன்

    வெற்றியால்தான் மகிழ்ச்சியா?

    நலம்-1
    “எனக்கு வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை. எதிலும் வெற்றி பெற முடியவில்லை!”
    இப்படிக் கூறுபவருக்கு முக்கியமான ஒன்று புரியவில்லை. மகிழ்ச்சி என்பது வெற்றியால் வருவதில்லை. நமக்குப் பிடித்ததை செய்தாலே போதும். பிடித்த காரியத்தை நாம் எதிர்பார்த்ததைவிடச் செம்மையாகச் செய்தால் கிடைப்பது மகிழ்ச்சி.

    தோல்வி ஏன்?

    `தோல்விக்குமேல் தோல்வி வருகிறதே!’ என்று மனமுடைபவர்கள் தங்கள் ஆற்றலுக்குட்பட்ட செயல்களைச் செய்யாமலிருக்கலாம். அல்லது, தவறுகளை மறக்கமுடியாது, அவைகளிலிருந்தும் பாடம் கற்காமல், திரும்பத் திரும்ப அதே தவறுகளைச் செய்பவர்களாக இருக்கலாம்.

    பணம், புகழ், வெற்றி — இதெல்லாம் குறுகிய காலத்தில் வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கலாம். இவையெல்லாமே போதை தருவன. எவ்வளவு கிடைத்தாலும், இன்னும் அதிகமாக வேண்டும் என்ற பேராசைக்கு நம்மை உட்படுத்திவிடும். இவற்றைத் தட்டிப் பறிக்க யாராவது வந்துவிடுவார்களோ என்ற கவலை வேறு உடன் வரும்.

    சில குழந்தைகள் சிரித்தபடி இருக்கும். இன்னும் சில குழந்தைகள் `உர்’ரென்று இருக்கும். ஏன் அப்படி?

    குழந்தை சிரித்தபடி இருக்க

    இரண்டு அல்லது மூன்று மாதங்களே ஆன குழந்தை விழிக்குமுன் தயாராக அதன் எதிரில் நின்றுகொண்டு, முகத்தில் சிரிப்பைத் தவழ விட்டுக்கொண்டால், நம்மையே உற்றுப் பார்க்கும். சில நாட்களில், அதன் இதழ்களும் சிரிப்பால் விரியும்.

    அழும் குழந்தையை கண்ணாடியில் காட்டி, “அசிங்கமா அழறது பாரு, இந்த அசட்டுப் பாப்பா! எங்கே, நீ சிரி!” என்றால் சிரிக்கும். (இதெல்லாம் எனது `பைத்தியக்காரத்தனமான’ கண்டுபிடிப்புகள்).

    இயல்பாகவே சிரிக்கக் கற்றால், என்ன நடந்தாலும் அதிகம் கலங்காது இருக்கமுடியும். தவற்றுக்குப் பயப்படாது இருக்கும் துணிச்சல் வரும். `நம்மால் முடியும்!’ என்ற நம்பிக்கையுடன், நிறைய சாதிக்க முடியும்.

    ஆரோக்கியம்

    ஆரோக்கியம் முக்கியம்தான். ஆனாலும், நமக்கோ, நம்மைச் சார்ந்தவர்களுக்கோ உடலில் ஏதாவது குறைபாடு இருந்து, அதைத் தவிர்க்க முடியாது என்ற நிலை வருமாயின், பொறுமையுடன் ஏற்பது அமைதியைக் கெடுக்காது.

    சிலருக்கு மன ஆரோக்கியம் கிடையாது. எந்த சந்தர்ப்பத்திலும் பிறரைக் குறை கூறிக் கொண்டிருப்பார்கள்.

    ஒரு பத்திரிகை விழாவில் நடந்த விருந்தில் பலவகை உணவு இருந்தது. சுவை எப்படி இருந்தது என்றெல்லாம் கேட்கக்கூடாது.

    ஒரு பெண், “வீட்டிலே தயிர் சாதம், ஊறுகாய் சாப்பிடறது இன்னும் நன்றாக இருக்கும், இல்லையா?” என்று என்னைக் கேட்டாள்.

    நான் பதில் சொல்லவில்லை.

    பிறரிடம் என்ன குறை என்று ஆராய்ந்தபடி நம் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தால், நம் மகிழ்ச்சிதான் கெடும். நமக்குப் பிடிக்காததை, ஏற்க முடியாததை விடலாமே! ஏதோ, அவர்கள் வசதிக்கு ஏற்றபடி ஏற்பாடு செய்திருந்தார்கள் என்று அனுசரித்துப் போகவேண்டியதுதான்.

    எதிர்ப்பைச் சமாளி

    நம்மைப் பழித்துக் கீழே தள்ள முயற்சிப்பவர்களை, அல்லது `உலகை ஒட்டித்தான் வாழவேண்டும்!’ என்று நிர்ப்பந்தம் செய்பவர்களை எப்படிச் சமாளிப்பது?

    வாய் வார்த்தைகளாலோ, உணர்ச்சிபூர்வமாகவோ அவர்களுக்கு எதிராக எதுவும் செய்தால் அவர்கள் நினைத்ததுபோல், அவர்கள் வெல்ல விடுகிறோம். கூடியவரை, அமைதியாக இருக்க முயலவேண்டும்.

    கதை

    சிறு வயதில் பெற்றோரும் ஆசிரியர்களும் திட்டி, அடித்து, `படி, படி’ என்று மிரட்டியதைக் கடைப்பிடித்து, கல்வியிலும் உத்தியோகத்திலும் உயர்ந்தாள் அமிர்தா. முப்பது வயதுக்குமேல், எதற்காக ஓர் ஆணுக்கு அடங்கி நடப்பது என்ற மனோபாவம் எழுந்தது. திருமணத்தில் ஆர்வம் காட்டாது இருந்தாள்.

    ஆனால் பார்ப்பவரெல்லாம், `ஏன் இன்னும் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கிறாய்?’ என்று துளைத்தார்கள். அவளைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள். இதை மற்றவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்களே என்று எரிச்சல்தான் ஏற்பட்டது.

    ஒப்பிடாதே!

    நாம் எவ்வளவுதான் முயன்றாலும், நம்மைவிடச் சிறப்பாக யாராவது இருப்பார். அவருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டு, வேண்டாத எண்ணங்களுக்கு இடங்கொடுத்தால் மகிழ்ச்சி ஏது! நாம் நாமாகத்தான் இருக்க முடியும். நமக்கு இருக்கும் நிறைகளை — பார்வை, நடக்கும் திறன் போன்றவைகளை — நினைத்துப் பார்த்தாலே போதுமே! உற்சாகம் எழும்.

    கதை

    நல்ல அழகியான பூர்ணிமா இளம் விதவை. குடித்துவிட்டு, அவளை உடல் ரீதியாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் வதைத்த கணவன் இறந்தபோது, அதை பெரிய இழப்பாக அவள் கருதவில்லை. பிடிக்காத ஒன்றை இழப்பது இழப்பா, என்ன!

    `எல்லா ஆண்களும் இப்படித்தான் இருப்பார்களோ?’ என்று சந்தேகப்படாது, அவளை விரும்பிய ஒருவரை மறுமணம் செய்தாள். மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழிக்க முடிந்தது.

    `நம் சமூகம் என்ன சொல்லிவிடுமோ!’ என்று எண்ணி அஞ்சாது, தனக்குப் பிடித்த காரியத்தைத் துணிச்சலுடன் செய்தது அவளுடைய மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது.

    நமக்கு உகந்த காரியத்தைச் செய்ய நாமே ஏன் தடை விதித்துக்கொள்ள வேண்டும்? ஆனால் அது பிறருக்குத் தீங்கு விளைவிக்காததாக இருத்தல் அவசியம்.

    சுயக் கட்டுப்பாடு

    மனம் போனபடி நடந்தால்தான் மகிழ்ந்திருக்க முடியும் என்பதுபோல் சிலர் நடப்பார்கள். ஆனால், அந்த மகிழ்ச்சி நிலைக்காது.

    கதை

    கல்வியால்தான் உயரலாம் என்று புரிந்து, மிகுந்த பிரயாசையுடன் படித்து, பெரிய உத்தியோகத்திலும் அமர்ந்திருந்தான் சுப்ரா. ஆனால் பதின்ம வயதிலிருந்தே பெண்களிடம் முறைகேடாக நடந்துகொண்டான். புத்திசாலி ஆகையால், ரகசியமாகத் தொடர்ந்தது அவனது லீலைகள்.

    திருமணம் ஆனதும், மனைவி லட்சுமி அவனைத் தெய்வமாகவே தொழுதாள். அவளைப் புகழ்ந்து, `நீ இல்லாமல் நானில்லை!’ என்று பசப்பி அவளை நம்ப வைத்திருந்தான். பெண்களின் மனப்போக்கு புரிந்தவன் ஆயிற்றே!

    “உங்களைப் பிள்ளையாகப் பெற உங்கள் அம்மா ரொம்ப புண்ணியம் செய்திருக்க வேண்டும்!” என்று அடிக்கடி தான் கணவரிடம் கூறுவதாக லட்சுமி என்னிடம் தெரிவித்தபோது, எனக்குப் பரிதாபம் மேலிட்டது. அப்போது எனக்கு அவன் குணம் தெரியும்.

    முப்பது வருடங்கள் கழித்து, அவனுடைய உண்மையான சுபாவம் லட்சுமிக்குப் புரியவந்தது. `எவ்வளவு ஏமாளியாக இருந்திருக்கிறோம்!’ என்று தன்மேலேயே வெறுப்பு வந்தது.

    இப்போது அவள் கை ஓங்கியது. அவன் நடுநடுங்கிப்போனான்.

    பெரிய உத்தியோகமும், யோசிக்காது செலவழிக்கும்படி வருமானமும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி; அதனால் மகிழ்ச்சி என்று நினைத்தவன் சுயக் கட்டுப்பாடு இல்லாததால் மகிழ்ச்சியை இழந்தான். தன்னைச் சுற்றி இருந்தவர்களின் மகிழ்ச்சியையும் பறித்தான்.

    நம்மையே நாம் விரும்பி, பிறர்மேலும் அன்பு செலுத்துவது மகிழ்ச்சியை அளிக்கும் வழி.

    “ஒங்ககிட்ட சொன்னேனா? எனக்குப் பேரன் பிறந்திருக்கான்! இப்பவே முழிச்சு முழிச்சுப் பாக்கறான்!” என்று மூன்று மாதக் குழந்தையைக் கண்டு மகிழ்ந்து, பெருமை பேசும் தாத்தா இதைப் புரிந்துகொண்டிருப்பவர்.

    கடுமையான உழைப்பு, எளிமை, கருணை ஆகிய குணங்கள் பொருந்தியவர்களே தாமும் மகிழ்ந்து, பிறரையும் மகிழவைப்பவர்கள்.

    ஒரு சிறுமி தன்னிடம் அன்பாக இருந்த சித்தியைப் பார்த்து மகிழ்ந்து கூறிய வார்த்தைகள்: “நீதான் ஒலகத்திலேயே அழகானவ!”

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (57)

    நிர்மலா ராகவன்

    விடு, விட்டுத்தள்ளு!

    நலம்
    ஒரு குழந்தை பலூனைப் பிடித்திருந்தது. கையை லேசாகத் திறக்க, பலூன் பறந்தே போய்விட்டது. பறிபோன பலூனையே நினைத்து அக்குழந்தை கதறிக்கொண்டிருந்தது — இன்னொன்று கையில் கிடைக்கும்வரை.

    அந்த நிலையில்தான் நம்மில் பலரும் இருக்கிறோம், வளர்ந்தபின்னரும். பலூனுக்குப் பதில் நினைவுகள். அவை இன்பம் அளிப்பனவாக இல்லாவிட்டாலும், கைவிட்டுப் போகாமல் அவைகளை கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஒன்று போனால், இன்னொன்று.

    அடுத்து என்ன செய்வது என்று புரியாததால் இந்தக் குழப்பம். சில சமயம், மீளாத்துயர். பொதுவாகவே, நாம் அனுபவித்த துன்பம் சம்பந்தமான எதையோ கேள்விப்படும்போதோ, படிக்கும்போதோ பழைய நினைவுகள் வந்து அலைக்கழிக்கும்.

    விவாகரத்துபற்றி நான் எழுத, என்னைத் தொடர்புகொண்டு, தன் அவல வாழ்க்கையை நெடுநேரம் பகிர்ந்துகொண்டாள் ஒரு பெண்மணி.

    கதை

    கணவனது நீண்ட காலக் கொடுமையைத் தாங்கமுடியாது போனாலும், தன் குழந்தைகள் சற்று பெரியவர்களானதும் விலகலாம் என்று நிச்சயித்திருந்தாள் யமுனா. இறுதியில் விவாகரத்து பெற்றாள். ஆனாலும், அவர்பால் எழுந்த வெறுப்பை மறக்க முடியவில்லை.

    பிறரது செயல்களையோ, சொற்களையோ நாம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், நம்மையே கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். அப்படிச் செய்தால்தான் நிம்மதி கிட்டும்.
    `இத்தனை காலமாக எதற்காக இப்படி ஒருவரைப் பொறுத்திருந்தோம்! எவ்வளவு மடத்தனம்!’ என்று மனதிற்குப் பட்டாலும், நம்மையே மன்னித்துக்கொண்டால்தான் அமைதி கிட்டும்.

    பிறரை வெறுப்பதால் எந்தப் பலனுமில்லை. அவர் நம் எண்ணத்தால் மாறப்போவதுமில்லை.

    `கணவன் எப்படி இருந்தால் என்ன, இனி அவன் என்றும் நம்மைப் பாதிக்க முடியாது!’ என்று விட வேண்டியதுதான்.

    “இப்போது என்ன செய்கிறீர்கள்?” என்று யமுனாவை நிகழ்காலத்திற்கு இழுத்துவந்தேன்.

    நல்லவேளை, அவள் மாற்றத்துக்கு அஞ்சி ஒடுங்கவில்லை. தன் புதிய தொழிலைப்பற்றி, குழந்தைகளைப்பற்றி உற்சாகமாகப் பேசினாள்.

    நாம் கடந்தகால நினைவுகளையே அசைபோட்டுக்கொண்டிருந்தால், நிகழ்காலம் நரகமாகிவிடாதா! அத்துடன், எதிர்காலத்திற்கான ஆயத்தங்களையும் செய்ய முடியாது போகிறது.

    இருப்பினும், சில நிகழ்வுகளை, `விட்டுத்தள்ளு!’ என்று ஒதுக்க முடிவதில்லையே!

    கதை

    என் ஒரே மகன் சசி நீரில் மூழ்கி இறந்தபின், குடும்பத்தாருடன் நான் அவனைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் நான்கு வயதே ஆன சசி எங்களுடனேயே இருப்பதுபோன்ற ஒரு திருப்தி, மகிழ்ச்சி, உற்சாகம் — எல்லாருக்குமே.

    பிறகு கவுன்சிலர்போன்ற ஒரு தோழி எனக்காக நேரத்தை ஒதுக்கினாள். எதிர்பாராத சம்பவம் என்பதால் அதன் பாதிப்பு மிகுந்த அதிர்ச்சியை அளித்திருந்திருந்தது.

    ஏழு மாதங்களுக்குப்பின், `நீங்கள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள். இவையெல்லாம் அற்புதமான நினைவுகள். காலப்போக்கில் மறந்துவிடுமே! அவைகளை எழுதிவைங்கள்!” என்றபோது, அயர்ச்சியாக இருந்தது.

    மறக்கக்கூடியவையா அவை!

    “ஆங்கிலத்திலா! எப்படி எழுதுவது?”

    “என்னிடம் சொல்வதுபோலவே!”

    குழந்தை என் பக்கத்தில் இல்லாவிட்டால் என்ன! எவ்வளவோ மகிழ்ச்சியான தருணங்களை அவனுடன் கழித்திருந்தேனே!

    அப்படி ஆரம்பித்தது இருநூறு பக்கங்களில் நிறைவடைந்தது. Through My Heart என்ற தலைப்பில், nirurag@wordpress.com என்ற தளத்தில் முப்பது ஆண்டுகளுக்குப்பின் வெளியிட்டேன்.

    உலகின் பல பாகங்களிலிருந்தும் கடிதங்கள் வந்தன. பிறரும் என்னுடன் சேர்ந்து கலங்குகிறார்கள் என்பது சொல்லமுடியாத ஆறுதலை அளித்தது. என் துக்கம் சற்றே குறைந்தது.

    பெற்ற குழந்தையை இழந்த சில தாய்மார்களைப்போல் நான் பூஜை அறையைவிட்டே வெளியே வராது, நிம்மதி தேட முயற்சிக்கவில்லை. அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தேன். அதனால் எதிர்காலத்தைப்பற்றியும் யோசிக்க முடிந்தது.

    காதல் தோல்வியா? விடு!

    காதல், திருமணம் ஆகியவைகளில் தோல்வி அடைந்தவர்கள், `விடு!’ என்ற மனப்பான்மை இருந்தால்தான் முன்னேற முடியும். ஒரு பெண்ணால் விரக்தி அடைபவர்களில் பலருக்கு எல்லாப் பெண்களுமே நம்பத் தகாதவர்கள் என்ற அச்சம் ஏற்பட்டுவிடுகிறது.

    இப்படிப்பட்ட இருவர் தம் கதையை என்னுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள், வெவ்வேறு தருணங்களில்.

    “சில பெண்களுக்கு எவ்வளவுதான் சுதந்திரம் கொடுத்தாலும், கணவனை ஏசிப் பேசுகிறார்களே!” என்று ஆரம்பித்திருந்தார் ஒருவர்.

    குறுக்கே சில கேள்விகள் கேட்டு, சரியாகப் புரிந்துகொள்ள முயற்சித்தேன். (சிலர் வாய்மூடி, தலையாட்டியபடி கேட்டுக்கொள்வார்கள். அம்முறை ஆறுதல் தருவதில்லை என்று கூறினார் அவர்). அதன்பின், “உங்களிடம் என் கதையைச் சொல்ல வேண்டுமே!” என்றார், கெஞ்சலாக.

    அவர் கதையை முழுமையாகக் கேட்டுவிட்டு, “நடந்ததையே நினைத்து வருத்தப்படாதீர்கள். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ளுங்கள்!” என்று சமாதானப்படுத்தினேன்.

    ஒரேமாதிரி இருவரும் பதிலளித்தார்கள்: “ஐயோ, வேண்டாம்பா!”

    ஒருவரை அவர் இருப்பதுபோலவே ஏற்காதவர்களைப்பற்றி எண்ணிக் குழம்பி, நேரத்தை வீண்டிப்பானேன்! நம் அருகில் இல்லாவிட்டாலும், அப்படிப்பட்டவர் நம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டேதான் இருப்பார். நமக்குப் பிடிக்காத ஒருவருக்கு எதற்காக அந்த உரிமையைக் கொடுக்க வேண்டும்?

    கதை

    எனக்கு ஒரு அமெரிக்க தம்பதிகள் நண்பர்களாக இருந்தார்கள். எங்கள் வீட்டு விருந்துக்கு அழைத்தபோது, அவர்களுடைய நெருக்கத்தைக் கண்டு வியந்திருக்கிறேன்.

    லூசி தன் நாட்டுக்குத் திரும்பிய பின்னரும், எங்கள் நட்பு தொடர்ந்தது. கோலாலம்பூரில் இரவு நேரங்களில் கோல்ஃப் ஆடப்போவதாகச் சொல்லி, கிளப்பில் வேலைபார்த்த ஒரு சீனப்பெண்ணுடன் கணவர் உறவு வைத்துக் கொண்டிருந்ததை அறிந்து விவாகரத்து செய்துவிட்டதாக எழுதியிருந்தாள். அதன்பின், ஒரு வயோதிகரை மணம் செய்துகொண்டாள். இருந்தும், `தன்னை நம்பச்செய்து ஒருவன் ஏமாற்றிவிட்டானே!’ என்று முதல் கணவர்மீது கொண்ட ஆத்திரம் அடங்கவில்லை.

    என் அமெரிக்கப் பயணத்தின்போது, நான் லூசியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். திக்கித் திக்கிப் பேசினாள். `உன்னை யார் அழைக்கச் சொன்னது?’ என்பதுபோலிருந்தது அவள் பேசிய முறை. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
    விவாகரத்து ஆன இன்னொரு பெண்மணி சமாதானமாகக் கூறினாள்: “அவள் பேசிய விதத்திற்கும் உனக்கும் சம்பந்தமில்லை. `மலேசியா’ என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே அவளுக்கு கடந்தகாலக் கசப்புகள் மேலெழுந்துவிட்டன!”

    பழையன கழிதலும் புதியன புகுதலும்தான் வாழ்க்கைத் தத்துவம். அதனால்தான் இந்துக்களின் போகி பண்டிகையின்போது, பழைய சாமான்களை எரிப்பதைப் பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

    சீனர்களும் அப்படித்தான்.

    “துடைப்பம், முறம், பழைய தினசரி எல்லாவற்றையும் ஏன் குப்பைமாதிரி வீட்டின் முன்வாசலிலேயே ஒரு ஓரமாகக் குவித்து வைத்திருக்கிறார்கள்?” என்று நான் உறவினர் ஒருவரைக் கேட்டபோது, “பண்டிகைக்குமுன் எரிப்பார்கள்,” என்று பதில் வந்தது.

    பழங்குப்பைகளோடு நம்மை வாட்டும் நினைவுகளையும் ஒதுக்கினால், `உரக்கச் சிரித்தால்தான் மகிழ்ச்சி!’ என்ற பொய்யான நிலைமை மாறும்.

    தொடருவோம்

    Share