நிர்மலா ராகவன்

பள்ளியில் BULLY

நலம்-1-1
நான் மலேசியாவிற்கு வந்தபின் ஒரு புதிய ஆங்கில வார்த்தையைக் கற்றேன்: BULLY.
அப்படியென்றால், ஒருவரை மிரட்டியோ, அச்சுறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ அவருக்கு இணக்கமில்லாத காரியத்தைச் செய்யவைப்பது.

இதனால் பாதிக்கப்பட்டவர் மனம் நோகும். பல சந்தர்ப்பங்களில், உடல் நிலையும் நீண்ட காலம் பாதிக்கப்படலாம். ஏன், மரணத்தில்கூட முடியலாம்.

உண்மைக் கதை (ஆதாரம்:THE STAR, ஜூன், 2017)

பதினைந்து வயதாக இருந்தபோது, பினாங்கிலுள்ள பள்ளிக்கூடத்திற்குச் சென்ற மகன், நவீன், அலங்கோலமாக வீடு திரும்பியதைக் கண்டு தாய் திடுக்கிட்டாள்.

விசாரித்தபோது தெரிந்தது, இவனைச் சில மாணவர்கள், ஆண்பிள்ளைத்தனமாக இல்லை, `கோழை’ என்று கேலி செய்தனர் என்று. வன்முறைக்கு ஆளாக்கினால், அவன் மாறிவிடுவான் என்று நினைத்தவராக அடித்துப் போட்டிருக்கிறார்கள். `ஆசிரியர்களிடம் சொன்னால், இன்னும் அடி வாங்குவாய்!’ என்று மிரட்டியிருக்கிறார்கள்.

மறுநாளே தாய் பள்ளிக்கூடத்திற்குச் சென்று அந்தப் பையன்களைக் கண்டித்திருக்கிறாள்.

`இன்னும் இரண்டு வருடங்களில் படிப்பு முடிந்துவிடும்!’ என்று மகனுக்கு ஆறுதல் அளித்தாள்.

நவீனுக்கு இசைதான் உலகமே. பரம சாது. பதினெட்டு வயதில்

பள்ளி வாழ்க்கை முடிந்து, தாற்காலிகமாக உத்தியோகமும் தேடிக்கொண்டான்.

ஆறு மாதங்கள் கழிந்தபின், இவனைக் கொடுமைப்படுத்தியவர்களை மீண்டும் சந்திக்க நேர்ந்தது என்று தாயிடம் தெரிவித்த நவீன், அவர்களிடம் எதுவும் கேட்கவேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறான்.

அப்போது அவளுக்குத் தெரியவில்லை, முதல் முறை அவள் கண்டித்தபோது, மகனுடைய தலையை சுவற்றில் மோதி அவர்கள் பழி தீர்த்துக்கொண்டார்கள் என்று.

இதை அமைப்பதைக் கற்க கோலாலம்பூரில் ஒரு கல்லூரியில் அடுத்த வாரம் சேருவதாக இருந்தான் நவீன். ஆனால் அது நடக்கவில்லை.

அண்மையில், (ஜூன்12) ஏதோ தின்பண்டம் வாங்க கடைக்குச் சென்ற நவீனுடன் அவனுடைய நெருங்கிய நண்பன் ஒருவனும் இருந்தான். அப்போது பள்ளியில் அவர்களுடன் படித்த அந்த ஆறு பேரும் சேர்ந்து இருவரையும் ஹெல்மெட்டால் அடித்திருக்கிறார்கள். நண்பன் தப்பிக்க, நவீனை எரித்து, பாலியல் வதைக்கும் ஆளாக்கிவிட்டார்கள்.

நண்பன் அடையாளம் காட்ட அவர்கள் பிடிபட்டுவிட்டாலும், brain dead என்று முதலில் அறிவிக்கப்பட்ட நவீன் மூன்று நாட்களுக்குப்பின் இறந்துபோனான். (தனித்து வாழும் அவன் தாய்க்கு ஒரு மகள் இருக்கிறாள்).

ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?

பிறரைத் தொடர்ச்சியாக வன்முறைக்கு ஆளாக்குபவர்கள் உண்மையில் பயந்தாங்கொள்ளிகள். (இவர்களேகூட வன்முறைக்கு ஆளாகி இருக்கக்கூடும்).

தம்மைப்போன்ற பிறரைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு, கோழை என்று தாம் நினைப்பவரை, அல்லது உடல்வலிமையிலோ சமூக நிலையிலோ தம்மைவிட குன்றியவரை அடையாளம் கண்டுகொண்டு, பலவிதமாக நோகடிப்பார்கள். அப்படிச் செய்யும்போதெல்லாம் தம் வலிமை கூடுவதுபோன்ற பிரமை உண்டாகும். இதுவும் ஒருவித போதைதான்.

இப்போது கணினிவழி பிறரைத் துன்புறுத்துகிறவர்களும் கிளம்பிவிட்டார்கள். இதை CYBER BULLYING என்கிறார்கள். நீண்ட காலம் இப்படிப்பட்டவர்களுக்கு இலக்காகுபவர்கள் எளிதில் நிம்மதி பெறமுடியாது போகும்.

கதை

ஒரு பெண்ணைப்பற்றி கண்டபடி இணையத்தில் எழுதிப் பரப்பினாள் கூடப் படிக்கும் பெண்ணொருத்தி. அவை உண்மை இல்லையென்றாலும், பாதிக்கப்பட்டவளுக்கு மனம் நொந்தது. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குப் போய்விட்டாள்.

வேறு சிலர் எப்படி இந்தக் கொடுமையைத் தவிர்ப்பது என்று புரியாது, தன்னம்பிக்கை இழந்து, மது, போதைப்பொருள், வன்முறை ஆகியவைகளை நாடுகிறார்கள். அல்லது, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொள்கிறார்கள்.

பள்ளிக்கூடத்தை விட்டுவிட்டாலும், கணினிமூலம் விளையாடுபவர்கள், மின்னஞ்சல் வைத்திருக்கும் இளைஞர்கள் ஆகியோர் பாலியல் வதை (வேண்டாத விவரங்களை அனுப்புவது) உட்பட ஏதோ ஒருவித வதைக்கு ஆளாகிறார்களாம். இதனால், இளைஞர்கள் யாருடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று அவர்களுடைய பெற்றோர் கண்காணிப்பது அவசியமாகிறது.

(வீட்டில் கணினி வசதி இல்லாதவர்கள் கடைக்குப் போய், கண்ட விளையாட்டுகளில் ஈடுபடுவது கூடுதலான அபாயம் விளைவிக்கும்).

தற்போதைய கணினி யுகத்தில் இது உலகளாவிய பிரச்னை ஆகிவிட்டது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று Stop cyerbullying Day அனுசரிக்கப்படுகிறது.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.