Tag: க.பாலசுப்பிரமணியன்

  • பிருந்தாவனத்தில் ராசலீலை ………  

     க. பாலசுப்பிரமணியன்

     

    யமுனை நதிக்கரையோரம் இன்று

    யதுகுல மன்னனைக் கண்டேன்!!

     

    கதம்ப மரத்தில் கால்நீட்டி வீற்றிருந்தான்

    காரிகையர் சேலைகள் கடத்தியிருந்தான் !

     

    கற்பனை உலகினில்தன்னை மறந்திருந்தான்

    காதலுக்குப் பொருள்தேடிக் கண்ணயர்ந்தான் !

     

    தோழிகள் அணிசேர்த்து ராதை குறையிட்டாள்

    கோபாலனோ குறுஞ்சிரிப்பில் குழலூதி மகிழ்ந்திட்டான் !!

     

    நந்தவனத்தில் அவன் கால்சுவடுகள்,

    நர்த்தனத்தில் நாலாயிரம் கீதங்கள்  பாடும்!!

     

    நாரணன் கைகோர்த்துக் கோபியர் ஆடும்

    நாட்டியத்தைப் பார்க்க அவனியெல்லாம் ஏங்கும்!!

     

    காரிருளில் பிறந்த கார்மேகத்தான்

    கதிரவன் முகம்மறையக் காத்திருந்தான்!!

     

    மேலங்கி காற்றினிலே உயர மெதுவாக ராதையங்கே அசைய

    மின்னோளியாய் கண்ணனும் அவளோடு சுழல

     

    மேலுலகும் கீழுலகும் கண்சிமிட்டி நிற்க

    முன்னசைந்து பின்னசைந்து மோகமின்றி ஆடுகின்றார் !

     

    கம்சனை அழித்த கால்கள் இங்கே

    காதல் நாட்டியம் ஆடுதம்மா!

     

    கருநாகன் காளிங்கனை அழித்த களிப்பினிலே

    கால்கள் இங்கே களைப்பின்றி ஆடுதம்மா   !!

     

    காசினியே கைதட்டித் தாளம் போட

    கலையாத அழகோடு கண்ணன் இங்கே ஆடுகின்றான்!

     

    கோலாட்சி செய்யும் மன்னனிங்கே

    கோலாட்டம் செய்வதன் மாயையென்ன!

     

    கோதையர்தம் உள்ளங்கவர்ந்து

    ராசத்திலே பாசத்தை வடிப்பதென்ன!

     

    ராதையுடன் காதல் போதையிலே

    காமமில்லாக் காவியம் படைப்பதென்ன!

    Share
  • ஒரு இனிய பயணம் !..

    க.பாலசுப்ரமணியன் 

     

    ஈரம் கசிந்த என் கைகளைப் பிடித்துக்கொண்டு

    என் கால்சுவடுகளுக்கு இணையாகக்

    கால் பதித்து …..

    நாள்தோறும்..

    வாரம்தோறும்…

    மாதங்கள் தோறும்..

    ஆண்டுகள் தோறும்..

    கைகோர்த்துச்  செல்லும் நண்பா !

    என் காலச் சுவடே!

     

    உன் பாதங்கள் ..

    இலைச்சருகுகளை மிதிக்கும்போது..

    அவைகள் நொறுங்கும் சப்தத்தில் ..

    இடிமுழக்கங்கள்… கேட்கும்..

     

    நிலத்தில் உயிர்கொண்ட..

    நீர்த்துவலைகளில் ..

    உன் பாதங்கள் படும்பொழுது..

    தீப்பொறிகள்  தெறித்து

    பாதைகளுக்குக்

    கருவண்ணம் தீட்டும் !

     

    உன் பார்வையில் மலர்ந்த பூக்கள் ..

    கருணை வெள்ளத்தில் கனிந்து

    புதுமணத்தை காற்றில் பூசி

    நாசியின் நரம்புகளுக்கு

    நம்பிக்கை ஊட்டும் !

     

    உன்னிடம் கேட்கக் கேள்விகள் இல்லை !

    என்னிடம் சொல்லிட பதில்கள் இல்லை !

     

    உன் அமைதியின் ஆழத்தில் ..

    நான் முழுகிக் கொண்டிருக்கின்றேன்..

    உன் புன்சிரிப்பில் ..

    நான் புதிய மொழிகளை ..

    கற்றுக்கொண்டிருக்கின்றேன் !

     

    உனக்குக் கடவுள் என்ற பெயர் உண்டென்று

    யாரோ சொன்னார்கள்…

    பஞ்சபூதங்களைப் பெற்றெடுத்த

    உனக்குப் பெயர் எதற்கு?

     

    கடந்தவன் என்றால் ..

    காலனுக்கும் உருக்கொடுத்தாயோ?

    புரியாத தத்துவமே!

    புரிந்துகொள்ளக் காலமில்லை !

     

    என்  கண்களில்..

    கடவுள்களுக்குக் கலைகொடுத்த..

    காலன் அன்றோ நீ..!

     

    இந்த அமைதியான பயணத்தில்..

    உன்னோடு நானும்..

    என்னோடு நீயும்..

    எங்கே செல்கிறோம்..?

    யாருக்காக..??

    உன்னிடம் பதில்கள் இல்லை !

    என்னிடம் கேள்விகளுக்குக் குறைவில்லை..!!

     

    கையோடு கைகோர்த்து….

    காலம் காலமாய்..

    நீயும் நானும்..

    ஒரு இனிய பயணம் !

    Share
  • இன்றும் ஒரு சுகப் பிரசவம் ..!! .. 

    க. பாலசுப்பிரமணியன்

     

    காலை நான்கு மணி முப்பது நிமிடம்

    ஒரு சுகப் பிரசவம்!

    கடிகாரக் கூரையிலிருந்து கோழிகள்

    தாதியராய் கண்விழித்துக் கை கொடுக்க…….

    இன்றும் எனக்கு ஒரு சுகப் பிரசவம் !

     

    எண்ணக் குழந்தைகள்.. ..

    கால்களால் உதைத்து தலையால் முட்டி ..

    என் கற்பனைக் .கருவில்..

    இன்றும் எனக்கு ஒரு சுகப் பிரசவம்!

     

    “அம்மா” …….

    குழந்தைகளின் குரல் இல்லை.. இது..

    காலையில் பசுக்களின் குரல்கள் இல்லை .

    பால்  பொடிகளை நீரில் பதப்படுத்தி

    பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி

    நித்தம் பகிர்ந்திவிடும் தேவன்.குரல்….

    பெயர்… பால்காரன்!

     

    எண்ணக் குழந்தைகளுக்குத் தலைவாரி

    சீருடையில் சிங்காரித்து

    வாழ்க்கை பள்ளிக்கு நித்தம் அனுப்பும்

    நான்… ஒரு நம்பிக்கையுள்ள அன்புத் தாய் .!..

     

    பாவச்சுமைகளாய் நேற்றைய நினைவுகளைச் சுமந்து

    நித்தம் பள்ளியிலே கனவுகளை விற்கச் செல்லும்

    என் எண்ணக் குழந்தைகள் ..

     

    கற்றல் வியாபாரத்தில்

    சில விலைபோகாத கனவுகளை

    உணர்வுகளில் நனைத்து ..

    வயற்றுச் சோற்றிற்காக

    அடிமட்ட விலையில் ..

    மதிப்பெண்களாய் மாற்றி ..

     

    மாலையிலே நிலைதடுமாறி ..

    கனவுகள் விலைபோகாமல்…

    மறப்பதா இல்லை மடிவதாவென……

    எண்ணக் குழந்தைகள் துயரத்தில்…

     

    மங்கிய நிலவோ..

    மனநல மருத்துவராய்..

    “இன்று போய் நாளை வா..” வென

    நம்பிக்கை கொடுக்க..

     

    மீண்டும்..

    இன்றைய பாவச் சுமைகளுடன்..

    காந்தக் கண்களுக்குள்ளே ..

    எண்ணக் குழந்தைகள் கட்டிலுட்டு ..

    புதியதாய் ஜெனிக்க..

     

    பத்து மணி நேரக் கர்பத்தில்

    எட்டு மணியில் ..

    குறைப் பிரசவமாய் ..

     

    மீண்டும் பிறக்கும் வரை…

    நம்பிக்கையுடன்..

    உறங்கு … மகனே.. உறங்கு…!!

    Share
  • கற்றல் -ஒரு ஆற்றல் (14 ) 

    க. பாலசுப்பிரமணியன்

    பள்ளியின் முதல் படிகள்

    education112

    மழலைகள் தங்கள் பள்ளி வாழ்க்கையை எப்போது ஆரம்பிக்கவேண்டும்? எத்தனை ஆண்டுகள் தங்கள் வீட்டில் அம்மா, அப்பாவுடனோ அல்லது தாத்தா பாட்டிகளுடனோ இருந்து வாழ்க்கை முறைகளை கற்றுக்கொள்ளவேண்டும்?

    உலகமே தாயையே முதல் ஆசானாகக் கருதுகிறது. அது முற்றிலும் உண்மை. வீடுதான் குழந்தையின் முதல் பள்ளிக்கூடம். ஒரு நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே குழந்தைகள் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் வரை வீட்டிலேயே இருந்து தங்கள் கற்றலை மறைமுகமாகவும் பழக்கங்கள் மூலமாகவும்  (  Indirect & Informal  Learning ) கற்றுக் கொண்டு வந்தனர். பள்ளிகளுக்குச் செல்லும் முன் வாழ்க்கை முறைகளைப் பற்றிய சிறிதளவு அறிவு அவர்களுக்கு இருந்தது. அவர்களின் அறிவு மட்டுமின்றி அவர்களுடைய உணர்வு நிலையம் (Emotional Status) ஓரளவு பக்குவப் பட்டிருந்தது.

    காலங்களின் தேவைகளுக்கும் சமூகச் சிந்தனைகளின் மாற்றங்களாலும் இன்று குழந்தைகள் மழலையர் பள்ளிகளில்   இரண்டாவது ஆண்டு முடிவடைந்த உடனே சேர்க்கப்பட்டு விடுகின்றனர். . இந்தத் தருணத்தில் குழந்தைகள் உடலாலும் உள்ளத்தாலும் உணர்வுகளாலும் முழுமையான நேரடிக் கற்றலுக்குத் தயாரான நிலையில் இல்லை. கற்றல் என்ற செயல் இயற்கையாக இல்லாமல் குழந்தையின் மூளையில் திணிக்கப் படுகின்றது .

    எவ்வாறு திருமணமான ஒரு பெண்ணுக்கு  தன்னுடைய கணவன் வீட்டிற்குச் செல்லும் பொழுது ஒரு தவிப்பான மனநிலை இருக்கின்றதோ அதே போன்று தான் புதிதாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தையின்  மனநிலையும் !

    புதிதாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்? எந்த மாதிரியான உணர்வுகள் இருக்கும்? பொதுவாகக் கீழ்கண்ட உணர்வுகளை சொல்லலாம்.

    1.அச்சம் 2. தயக்கம் 3. பாதுகாப்பின்மை    4. ஆச்சரியம்    5. புதுமை

    6, சந்தேகம் ‘ 7. நம்பிக்கையின்மை 8. திருப்தியின்மை  9. உடல்சோர்வு 10.  ஆர்வம்

    எல்லாக் குழந்தைகளுக்கும் மேற்கண்ட எல்லா உணர்வுகளும் இருப்பதில்லை. ஆனால் எல்லாக் குழந்தைகளுக்கும் இவற்றில் சில  உணர்வுகள் நிச்சயமாக இருக்க வாய்ப்புண்டு. அது குழந்தைகளின் வீட்டுச் சூழ்நிலை, சமூகச் சூழ்நிலை, பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் பெற்றோர் அல்லது குடும்பத்தினரின் அன்பு மற்றும் ஈடுபாடு ஆகியவற்றால் உருவாக்கப்படுகின்றது.

    குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் போது மேற்கண்ட உணர்வுகள் ஏற்படக் காரணம் என்ன? அவற்றின் தாக்கம் எப்படிக் குழந்தையை பாதிக்கின்றது?

    முதலாவதாக இடமாற்றம். (Change of Place) அறிந்த, பழகிய இடத்தை விட்டுத்  தெரியாத, புதிய, பழக்கமில்லாத இடத்திற்குச் செல்லும் பொழுது அது அச்சத்தையும் ஒரு பாதுகாப்பில்லாத உணர்வையும் ஏற்படுத்துகின்றது. (Moving from known to the unknown)

    இரண்டாவது காரணம் – ஒரு கட்டுப்பாடு இல்லாத சூழ்நிலையிலிருந்து கட்டுப்பாடு உள்ள சூழ்நிலைக்கு  ( from freedom to order ) குழந்தைகள் செல்கின்றன. இது ஒரு வரவேற்கத்தக்க கருத்து இல்லை. வீட்டில் இருக்கும் பொழுது அந்தக் குழந்தை எந்த விதமான உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். எங்கு வேண்டுமானாலும் படுத்துப் புரளலாம். என்ன விதமான ஒலியோ அல்லது சப்தமோ செய்யலாம். அதன் நகர்வுகளுக்கு பூரண சுதந்திரம் உண்டு.. ஆனால் பள்ளிக்குச் சென்றவுடன் இந்த சுதந்திரம் அனைத்தும் பறிபோகின்றது.

    ஆகவே குழந்தைகளுக்கு ஒருவிதமான தயக்கம் மற்றும் திருப்தியின்மையும் ஏற்படுத்துகின்றது. இந்த நிலைமையை சமாளிப்பது எப்படி? இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எப்படி வெளி வரலாம் என்ற எண்ணங்கள் அந்தக் குழந்தையின் மனத்தில் உருவாகின்றன.

    மூன்றாவது காரணம்  ( A sense of suspicion )- பார்க்கின்ற மனிதர்களும் சூழ்நிலையும் புதிதானது. இங்கு நான் பார்க்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்? அன்புடன் இருப்பார்களா ? இவர்களால் எனக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? என் வயதில் இங்கே இருக்கின்ற எல்லோரும் என்னைப் போன்றவர்கள்தானா? அவர்களால் என்னுடைய தனித்துவத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? இவர்களோடு நான் சரிசமமமாக விளையாடலாமா? என்னைப் பற்றி இவர்கள் என்ன நினைப்பார்கள்? – என்ற பல ஐயப்பாடுகள் அந்தக் குழந்தைகளின் மனதில் ஏற்படுகின்றன..

    மேலும் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

    தொடரும். …….

    Share
  • மகாத்மாவின் குரல் (ஒரு நினைவாஞ்சலி)

    1. ஒரு மனிதனின் சிந்தனை ,சொல் மற்றும் செயல் ஆகியவற்றில் ஒருமைப்பாடு இருக்கும்பொழுதுதான் அவனுக்கு முழுமையான மகிழ்ச்சி கிடைக்கிறது.

    2. கோழைகளால் மன்னிக்க முடியாது. மன்னிப்பதற்கு ஒரு உறுதியான நெஞ்சம் தேவை.

    3. அகிம்சை மனிதனின் மிக சக்திவாய்ந்த ஆயுதம். உலகத்தில் புத்திகூர்மை கொண்டு தயாரிக்கப்பட்ட மிக வலுவான ஆயுதங்களை விட அகிம்சை வலுவானது.

    4. உலகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கு நீங்கள் .முன்னோடியாக இருக்கவேண்டும்.

    5. நாளையே உங்கள் இறுதிநாள் என நினைத்துக்கொண்டு வாழவேண்டும். காலம்காலமாக நீங்கள் வாழப்போவதாக நினைத்து கற்றுக்கொள்ள வேண்டும்.

    Share
  • கற்றல் -ஒரு ஆற்றல் (13)                                  

     க. பாலசுபிரமணியன்

    ஒரு குழந்தையின் நடைப்பயணம்

    education11

     தவழுகின்ற குழந்தை ஓரிரு மாதங்களிலேயே உட்காரவும், பின்பு சுவர்களையோ அல்லது மற்ற பொருள்களையோ பிடித்துக் கொண்டு நிற்கவோ ஆரம்பிக்கிறது. இந்தச் செயல்கள் குழந்தையின் மூளை வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்கின்றன.. உடல் உறுப்புக்களின் அசைவிற்கும் (Motor Movements) அவற்றின் ஒருங்கிணைப்பிற்க்கும் இவை ஆதாரமாக அமைகின்றன. இப்படிப்பட்ட அசைவுகளின் தாக்கங்களைப் பற்றிய  கருத்துக்களை Kinesology என்ற தலைப்பின் கீழ் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

    ஏதாவது ஒன்றைப்பிடித்துக்கொண்டு நிற்க முயற்சிக்கும் பொழுது அந்தக் குழந்தை மற்றவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும் முயற்சிக்கு ஒரு முன்னுதாரணமாகத் தெரிகின்றது. உள்ளத்தில் ஏற்படும் உந்துதல் அந்தச் செயலுக்குத் தேவையான சக்தியையும் தன்னுணர்வையும் அள்ளித் தருகின்றது. ஆகவே குழந்தைகள் இந்த முயற்சியில் ஈடுபடும் பொழுது பெற்றோர்கள் அருகில் இருந்து இந்த முயற்சிகளைப் பாராட்டவும் ஊக்குவிக்கவும் வேண்டும், அது குழந்தையின் தன்னம்பிக்கையையும் துணிச்சலான போக்கையும் வளர்க்கும்.

    பொதுவாக குழந்தைகள் நிற்கும்பொழுதோ அல்லது நடக்கும் பொழுதோ பெற்றோர்கள் தங்கள் பயத்தையோ அல்லது அச்சத்தையோ வெளிப்படுத்தக் கூடாது. அது குழந்தையின் முயற்சிகளுக்கும் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும். மாறாக அருகில் இருந்து அவர்களுடைய   செயல்களுக்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும்.

    மனிதர்களைத் தவிர மற்ற இனங்களில் ஒரு கன்று பிறந்தவுடன் சில நிமிடங்களிலேயே தங்கள் கால்களில் நிற்கவும் நடக்கவும் ஆரம்பித்து விடுகின்றது. மனித இனத்தில் குழந்தை பிறந்து கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு[ பின் தான் நடைபயணம் தொடங்குகின்றது. மேலும் ஒரு குழந்தையை நாம் கைகளால் பிடித்தோ அல்லது கூட நடத்தி வந்தோ  நடப்பதற்க்கான பயிற்சியை அளிக்கின்றோம்.

    ஆகவே பயிற்சி(Training) என்பது மனித இனத்தின் வளர்ச்சியிலும் கற்றலிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. கற்றலில் பயிற்சியினால் சில நன்மைகளும் உண்டு சில கெடுதல்களும் உண்டு. இவற்றை நாம் பின் கண்டு அறியலாம்.

    அமெரிக்காவிலுள்ள குழந்தை மனநல ஆராய்ச்சியாளர்கள் இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் நடை வண்டிகளை பற்றி மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இவை குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்குத் தடையாக இருக்கும் என்றும், பிற்காலங்களில் தங்களுடைய எல்லா விதமான முயற்சிகளுக்கும் ஒரு உதவியையும் எதிர்பார்ப்பையும் உண்டுபண்ணும் என்றும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். ஆகவே, ஒரு குழந்தை நடைப்பயணத்தை ஆரம்பிக்கும் பொழுது பெற்றோர்கள் அந்தக் கற்றலை தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் பயமின்மையும் வளர்க்கின்ற  செயலாகக் கருதி துணை புரிதல் அவசியம்.

    நடைப் பயிற்சி ஆராம்பிக்கும் தருவாயில் குழந்தையின் மூளை வளர்ச்சியின் வேகம் அதிகமாக இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். இதனால் இரத்த ஓட்டம், தசைகளின் வளர்ச்சி மற்றும் அறிதல், புரிதல் வேட்டைகளுக்கான உந்துதல் ஆகியவை  அதிகரிக்கின்றன. குழந்தை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் சென்று பொருள்களைத்  தேடவும் அதனால் ஏற்படும் மகிழ்வையும் துயரத்தையும் வெளிப்படுத்த ஆரம்பிக்கின்றது. மூளையின் ஒரு பகுதியில் இருக்கின்ற மகிழ்வு நிலையமும்( Pleasure Center) மற்றும் துயர நிலையமும் ( Pain Center)தங்களுடைய உணர்வுகளை சற்றே துரிதமாக வெளிப்படுத்தத் துவங்குகின்றன. இந்த நிலையில் பெற்றோர்கள் குழநதைகளின் நகர்வுகள், நடைப் பயிற்சியின் தாக்கங்கள், மற்றும் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் ஆகியவற்றை உன்னிப்பாக கவனித்து பேணுதல் அவசியமாகிறது.

    குழந்தைகள் நடைப்பயணத்தை ஆரம்பிக்கும் நேரங்களில் அவர்களை வெறும் கால்களில் நடக்கச் செய்தல் அவசியம். குழந்தைகளுக்கு காலணிகளை (shoes) அணிவித்தலை நிபுணர்கள் எதிர்க்கின்றனர். அவர்களுடைய கால்கள் தரையில் படும் பொழுது ஏற்படுகின்ற அழுத்தங்களால் இரத்த ஓட்டம் சிறப்பாக இருப்பதற்கும் மற்றும் இரண்டு கால்களுக்கும் இடையில் நகர்வின் சமன்பாடுகள் ஏற்படுவதற்கும், இரு கால்களில் நின்று சமநிலையான தன்மையைப் பெறுவதற்கும் அது தேவைப்படுகின்றது. சில நேரங்களில் காலணிகளை அழுத்தமாக அணிவிக்கும் பொழுது கால் வளர்ச்சிக்கு மட்டுமின்றி அதன் தாக்கம் மூளையின் வளர்ச்சிக்கும் ஏற்படுவதாகக் கருதுகின்றனர்.

    நடக்க ஆரம்பித்து விட்ட குழந்தை இனி பள்ளிக்குப் போகவேண்டாமா?

    அடுத்த இதழில் பள்ளிக்கு குழந்தையை வரவேற்போம் !

    தொடரும் ..

    Share
  •   கற்றல் -ஒரு ஆற்றல் (12)

    க. பாலசுப்பிரமணியன்

    கண்ணோடு கண் நோக்கின்…

    education11

    குழந்தையின் வளர்ச்சியின் படிக்கட்டுக்களில் ஒரு முக்கியமான நிகழ்வு “கண்ணோடு கண் நோக்குதல் “. இதைப் பற்றி நாம் குழந்தை பிறந்த சில வாரங்களில் ஏற்படும் வளர்ச்சியின் போது அறிந்தோம்..ஆனால் ஒரு குழந்தை ஐந்து அல்லது ஆறு மாதங்கள் ஆகிய பின் இதே நிகழ்வினால்  வேறு பல தாக்கங்கள்  ஏற்படுகின்றன.

    தன் தாயின் கண்களோடு உறவாடும் குழந்தை அந்தத் தாயின் உணர்வு நிலைகளை எளிதாகப் புரிந்துகொள்கின்றது. அதே போல் மற்றவர்கள் நோக்கும் பொழுதும் அவர்களின் கண்பார்வையின் பொருளை அறிந்து கொள்ள முற்படுகின்றது. சில நேரங்களில் மற்றவர்களின் பார்வை பயத்தை தூண்டுவதாகவோ அல்லது ஏதாவது அச்சத்தை எற்படுத்துவதையோ குழந்தை உணர்கின்றது. உடனே அதன் கண் விழிகள் தாமாகவே கீழ்நோக்கிச் செல்கின்றன. அதே போல் மற்றவர்களுடைய பார்வை ஒரு ஐயப்பாட்டை ஏற்படுத்துவதாக இருந்தால் விழிகள் மேல்நோக்கியோ அல்லது சுழன்றோ தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.  “கண்ணோடு கண்” நோக்கும் பொழுது மற்றவர்களிடமிருந்து தமக்கு பாதுகாப்புக்கான உத்திரவாதம் கிடைக்கிறதா என்று உணருகின்றது.  அந்த நேரங்களில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அழுதோ அல்லது மறுப்பைத் தெரிவித்தோ உணர்வுகளை வெளிப்படுத்துகின்றது.

    மற்றவர்களுடைய கண்களைப் படிக்கும் குழந்தை – கோபமுள்ள முகங்கள், மலர்ந்த முகங்கள், துயரமான முகங்கள் மற்றும் ஏளனம், வீராப்பு போன்ற உணர்வுகளைக் காட்டும்  முகங்களை அடையாளம் கண்டு கொள்கின்றது. அந்தக் குழந்தைக்கு இந்த உணர்வுகளைப் பற்றி ஏதும் தெரியாமலிருந்தாலும் அந்த உணர்வுகள் தனக்கு ஒரு  சாதகமான சூழ்நிலையை  (Comfort  zone )உருவாக்கவில்லை என்பதை மட்டும் புரிந்துகொள்கின்றது.

    கண்ணோடு கண் நோக்கும் இந்தச் செயல் மூளையில்  அறிதல், புரிதல் ஆகிய நிகழ்வுகளுக்கு அடிவாரமாக அமைகின்றன. மற்றும் ஒரு குழந்தையின் உணர்வு நிலைகளை (emotional status) பாதுகாக்கவும் உறுதிப்படுத்தவும் உதவுகின்றன. ஆகவே பெற்றோர்கள் குழந்தைகள் தங்களோடும் மற்றவர்களோடும் உறவாடும் பொழுது அவற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

    மேலும் மொழி வளர்ச்சிக்கும், உச்சரிப்புகளின் மேன்மைக்கும், உடல் மொழிகளை பக்குவப்படுத்துவதற்க்கும் இந்த கண்ணோடு-கண் நோக்கும் (eye-eye coordination) செயல் மிக்க பயனுள்ளதாக அமைகின்றது. குழந்தை பருவத்தில் இதை நாம் முகம் படித்தல் (face reading ) என்று சொல்லலாம் .

    “கண்ணோடு கண் நோக்குதல்” உளவியல் கருத்துகளின்படி ஒருவருடய கவனம் (attention) மற்றும் ஈடுபாடுகளை (Focus) வளர்க்க உதவுகின்றது., மேலும் மற்றவர்களுடைய  கருத்துக்களை ஊர்ந்து ஆழமமாக கேட்பதற்கும் (Listening Skills ) அறிவதற்கும் (cognition) இந்த நிகழ்வு  முதல் படியாக இருக்கின்றது.

    பின் காலங்களில் வளர்ச்சியின் மேல்படிகளில் நிற்கும்பொழுது இந்தக் கற்றல் மற்றவர்களை புரிந்து கொள்ளவும், (understanding behaviours) எடை போடவும், (evaluate) மற்றவர்களோடு தக்க முறையில் உறவாடவும் ( Relationship management ) உதவுகின்றது.

    மூளை வளர்ச்சி பற்றி ஆராயும் வல்லுனர்கள் எவ்வாறு இந்த நிகழ்வின் தாக்கம் கண்ணாடி  நியூரான்களின் மேல் (Mirror Neurons ) ஏற்படுகின்றது என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர். மூளை வளர்ச்சியில் சில குறைபாடுகள்  ஏற்படும் பொழுது இந்த “கண்ணோடு கண் நோக்கும் செயல் ” பாதிக்கப் படுகின்றது, அதன் காரணமாக வளர்ச்சியின் சில வடிவங்கள் அதிகமாக பாதிக்கப் படுகின்றன.

    டேனியல் கோல்மான் என்ற அறிஞர் தன்னுடைய “Social intelligence” என்ற புத்தகத்தில் ஒரு மனிதனுடைய சமூக புத்திகூர்மைக்கு “கண்ணோடு கண் நோக்கும் ” செயலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றார். ஒரு சமூகத்தில் நாம் வாழும் பொழுதும் மற்றவர்களோடு பேசும் பொழுதும் நாம் அவர்களுடைய கண்களிலிருந்து பலவற்றைப் புரிந்து கொள்கின்றோம். “வாய் பேசாததையெல்லாம் கண் பேசியது ” என்று சொல்கின்றோம். ஆகவே குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில்  “கண்ணோடு கண் நோக்கும்” செயலை நாம் “கண்ணாக” கவனிப்போம்.

    தொடரும்…..

    Share
  • நானும் சங்கரன் தான்..  சிறுகதை .. க. பாலசுப்ரமணியன்

    “மகாலிங்கம் .. மகாலிங்கம்…”

    அந்த திருவிடைமருதூர் கோவில் பிரகாரம் முழுதும் அந்த ஒலி எதிரொலித்தது. காலை ஐந்தரை மணிக்கு அந்தக் குளத்திலே  நீராடி விட்டு, குளிர் காற்று  சில்லென்று உடம்பைத் தழுவ, திருநீறின் மணம் பக்தி பரவசத்தை உண்டாக்க அந்தக் கோவில் பிரகாரத்தை சுற்றி வருவது மனதுக்கு இனம் புரியாத மகிழ்ச்சியை த்  தந்தது. .

    மீண்டும் யாரோ அங்கே  “மகாலிங்கம், மகாலிங்கம்” என்று குரல் எழுப்பியதும் என் சுயனைவுக்குத் திரும்பினேன்.

    ” இந்தக் கோவில் ரொம்ப பெரிசு. இங்க வந்து தரிசனம் பண்ணினா ” பிரம்மஹத்தி தோஷம்” விலகிடுமாம். நிறையப் பேர் சொல்லுவா.” முன்னாலே போன பெரியவர் நான் இந்தக் கோவிலுக்கு முதல் முறையாக வருவதைப் புரிந்து கொண்டார் போலும்.., எனக்கு விளக்கிவிட்டுச் சென்றார்.

    பிரம்மஹத்தி தோஷம்னா  என்ன? என் மனதில் ஒரு கேள்வி. சான்றோரைக் கொன்றதாலா, இல்லை, கர்ப்பிணிப் பெண்களைக் கொன்றதாலா, இல்லை முதியோரையோக்  கொன்றதாலா .. சந்தேகத்திற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

    ‘”ஓம் நமச்சிவாய,  ஓம் நமச்சிவாய”  என்று சொல்லிக்கொண்டே முன் நகர்ந்தேன்.

    ” காலையிலே நீங்கள் தான் முதல் தரிசனம். விஸ்வரூப தரிசனம் மாதிரி.. பசிக்கறது.. ஏதாவது கொடுங்கோ..”

    ஒரு நாலு முழம் வேட்டியைக் கட்டிக்கொண்டு இடுப்பில் ஒரு துண்டை இருக்கிகொண்டு  திருநீறு அணிந்து முன்னே நின்ற உருவத்தைப் பார்த்ததும் பகீரென்றது.! இவரை எங்கேயோ பார்த்திருக்கேனே.. மனம் ஆழ்ந்த சிந்தனயில் ஈடுபட்டது..

    ” சார்,உங்களைத்தானே  ஹெல்ப் பண்ணுங்கோ..””

    இந்தக் குரலும் சற்று பழகிய குரலாகத் தெரிகிறதே..”

    ” ..நீங்க. “… கொஞ்சம் தயங்கிக் கேட்டேன் “அனந்து சார் இல்லே”

    ” அனந்து .. அனந்தன்.. ஆனந்தன்.. ஆனந்தம்  எல்லாம் என் பெயர் தான். கோவிலுக்கு உள்ளே இருக்கானே, அவனுக்கும் இந்தப் பெயரெல்லாம்  உண்டு., ..பசிக்கிறது.. ஏதாவது குடுங்கோ..”

    “நீங்க நாகர்கோயில் கணபதி கோயில் தெருவிலே இருந்தேளோ?”

    “பிள்ளையார்.. எல்லாக் கஷ்டத்தையும் நிவர்த்தி செய்வார். நோ டவுட். எதாவது தருவேளா..”

    மனம் வலித்தது.. இவருக்கு எதாவது மன நோயோ? ஏன் இங்கே வந்து பிச்சை கேட்டுக்கொண்டு இருக்கிறார்?  இவர் குடும்பம் முழுவதும் எனக்குத் தெரியுமே..”

    “சார், உங்கள் குழந்தைகளெல்லாம்..?”

    “குழந்தைகளா?…..” ஏதோ பெரிய ஜோக் சொல்லிவிட்டதைப் போல் சிரித்தார்… ” சின்ன வயசிலேதான் அவர்கள் குழந்தைகள்… அதுக்கப்பறம் படிச்சு வேலைக்குப் போயாச்சுனா அவா எல்லாம் ஆபீசர்கள் .. என் வாரிசுகளெல்லாம் பெரிய ஆபீசர்கள். …”

    அவர் சூசகமாகச சொன்னதிலிருந்து அவர் வாழ்வின் உண்மை தெரிய வந்தது..

    “‘ஜெர்மனி தெரியுமா, ஜெர்மனி அங்கதான் என் ஆபீசர் மகன். ..” அந்த வார்த்தைகளில் தொனித்தது பெருமையா ஏளனமா என்று தெரியவில்லை.

    ” உங்க மனைவி… ? ”  மீண்டும் வாய் விட்டுச் சிரிப்பு..

    பெண்டாட்டி ரொம்பப்  படுத்தினா, அவ்வை என்ன சொன்னா தெரியுமா “கூறாமல் சன்யாசம் கொள்”  .. சொல்லிவிட்டு மீண்டும் ஒரு சிரிப்பு..

    ” நீங்க ஒரு கம்பெனியிலே மக்கள் தொடர்பு  அதிகாரியாக இருந்தேளில்லையோ ..”

    “அன்னிக்கும் மக்கள் தொடர்பு .. இன்னிக்கும் மக்கள் தொடர்பு.. அன்னிக்கு நான் பேசினதுக்கு காசு கொடுத்தா .. இன்னிக்கு நான் பேசாம இருக்கறதுக்கு காசு கொடுக்கறா.. நீங்க எப்படி?  பசிக்கறது.. ஏதாவது தருவேளா…”

    வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்ற ஒரு அனுபவம். ,.” நிச்சயமா தரேன்.. ஆனா ஒரு கேள்வி.. உங்களுக்கு அந்த தெருவிலே ஒரு வீடு இருந்ததில்லையோ? ”

    “வீடு.. அந்த வீடு வேற.. நான் இனிமே போகப்போற வீடு வேற.. அந்த வீட்டை விலைக்கு விக்கலாம்.. எல்லாரும் ஷேர் பண்ணிக்கலாம் .. இந்த வீட்டுக்கு விலையே கிடையாது.. யாரும் ஷேர் பண்ணிக்கவும் மாட்டா ..”

    “வீடு வரை உறவு..: கண்ணதாசன் பாடல் கேட்டிருக்கேளோ? அதெல்லாம் கேட்ட பின்னும்  ஜனங்களுக்கு புத்தி வர மாட்டேங்கறது… சரிதானே?

    “மகாலிங்கம்  மகாலிங்கம்” .. கோவில் முழுதும் எதிரொலித்துக்கொண்டிருந்தது .. அந்த சிவன் அங்கே அமர்ந்து கொண்டு ஏன் இப்படி நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்  என்று  புரியவில்லை.

    “ஹலோ ..” அவர் குரல் மீண்டும் என்னை ஈர்த்தது. .”உங்களுக்கு ஆதி சங்கரரைத் தெரியுமோ…?:

    நான் தலையை அசைத்தேன் .. “அவர் எங்கே பிறந்தார்?”  ஏதோ விநாடி வினாவில் கேள்விகள் கேட்பது போல் கேட்டார்.

    :”காலடி” மெதுவாகச் சொன்னேன்.. “கரெக்ட்.  அவர் எப்படி சாப்பிட்டார் தெரியுமா?”

    நான் மௌனமாக இருந்தேன். அவர் தொடர்ந்தார்.

    ” பவதி பிக்ஷான் தேஹி.”.. தினசரி வீடு வீடாகப் போய்  “பவதி பிக்ஷான் தேஹி”  என்று பிக்ஷாவந்தனம்  செய்து தானியங்கள் பெற்று உணவு சமைத்து சாப்பிட்டார்.”

    எதோ ஒரு பெரிய உண்மையை  கண்டறிந்தது போல் நான் பேசாமல் இருந்தேன்.

    ” இப்போ நானும் “பவதி பிக்ஷான் தேஹி”  வீடு வீடாகப் போகலை. இங்கேயே இப்படியே கோவில் வாசலிலே நின்று கொண்டு :பவதி பிக்ஷான் தேஹி.,”

    “:சொல்லுங்கோ.. எனக்கும் சங்கரனுக்கும் என்ன வித்யாசம்? நானும் சங்கரன் தானே..”  சிரித்துக்கொண்டே  “அவர் ஆதி சங்கரர்.. நான் ஆதி அனந்தர்..”.. ஓ வெனக் கைகொட்டிச் சிரித்தார்.

    மெதுவாக அவர் கைகளைப் பிடுத்து அருகிலுள்ள உணவகத்திற்கு அழைத்துச் சென்றேன். அவருக்கு வேண்டிய காலை  டிபன் கொடுக்கச் சொன்னேன்.. அவர் கைகளில் ஒரு நூறு ரூபாய் நோட்டைத் திணித்தேன்.

    அவரைப் பார்த்த அந்த ஹோட்டல் முதலாளி “யாரு? பவதி பிக்ஷான் தேஹி சாரா?” புன்னகை அவர் முகத்தில்.

    அருகில் இருந்த சிவபிரானின் படத்தை ஒருமுறை பார்த்து “மகாலிங்கம்” என்றார்.

    கடைசியாக அவரிடம் நான் “சார், நான் யார் என்று தெரிகிறதா?” எனக்கேட்டேன்.

    என்னை ஒருமுறை தீர்க்கமாகப் பார்த்துவிட்டு  “ஆதி அனந்தருக்கு இன்னிக்கு பிக்ஷா வந்தனம் செய்த ஒரு நல்லவர்.. ராஜாராமன் என்ற நாமதேயம்.” இட்டிலியை சாம்பாரில் தோய்த்து வாய்க்குள் திணித்தார்

    என் சப்த நாடிகளும் அடங்கி நின்றன!!

     

    Share
  • மார்கழி மணாளன் 29 – ஸ்ரீ வைகுண்டம் – கள்ளபிரான்  

     க. பாலசுப்பிரமணியன்

    631591bb-352f-47f8-b69b-757f4f92dc99

    வேதங்களைக் காத்திடவே வேண்டி நின்றான் நான்முகனும்

    வைகுண்டம் விட்டுவந்த மாதவனும் மனமிரங்கிக் காத்தான்

    வானில் மட்டுமின்றி  மண்ணிலோர் வைகுண்டம் படைத்தான்

    வந்தவர்கள் நலம் காத்து வாழ்க்கைக்குப் பொருள் கொடுத்தான் !

     

    கல்லுக்கும்  பால் பொழிந்து கருணைகண்ட பசுவிடம்

    குறை கண்ட மன்னவனும் பசுவைப் பழித்தே தொடர

    குறைவில்லா கோபாலனை மண்ணுக்குள் கண்டான்

    குலம் வாழ நல்லதோர் கோவில் கட்டி மகிழ்ந்தான் !

     

    கள்ளனும்  கொண்டான் கண்ணனிடம் காதல் நெஞ்சம்

    காத்திட வேண்டியே  நின்றான் கோகுலன் முன்னம்

    கண்ணனே கள்வனாய்ச் சென்றான் காவலில் தஞ்சம்

    கருணையின் வடிவே என்றும்  கள்ளபிரான் மஞ்சம் !

     

    கொஞ்சுபவர்க்குக் குழந்தையாய் வரும் கண்ணன்

    கோலாகல வாழ்க்கைக்கு  குழலூதும் அன்பன்

    கோடித்துயர் வந்தாலும் கூட நிற்கும் நண்பன்

    கோசங்கள் அழிந்ததுமே அணைக்கும் வைகுந்தன் !

     

    வேண்டியவர்க்கு வேண்டியதைத் தந்துவிடும் வைகுண்டம்

    வேண்டாதவர்க்கும் உடல் வினை முடிய வீடு தரும் !

    வீதியில் வாழ்ந்தாலும் வீடு பணம் சேர்த்து உயர்ந்தாலும்

    விதி முடிவில் விரும்பிச் செல்லும் வாசல் வைகுண்டம் !

     

    மனம்விரும்பி மாதவனைத் தேடும் நேரம்

    மாதங்கள் பன்னிரண்டில் மார்கழியைச் சேரும் !

    மங்கலங்கள் பொங்கிவர வழிவிடும் மார்கழி

    மாதவன்  அருளோடு வருவாய் மீண்டும் வீடுதேடி !

    Share
  • மார்கழி மணாளன் – 28 திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப் பெருமாள்

    க. பாலசுப்பிரமணியன்

     8a79f235-b849-4a74-9630-8b24b0d4ae02

    புல்லருடன் கன்வரும் வளர்த்திட்டார் வேள்வித்தீ

    புவியினிலே என்றும் பரந்தாமன் அருள் வேண்டி !

    அரசமரமாய் உருவெடுத்து அவன் அருள்தந்தான்

    அன்புடனே உருமாறி ஆனான் ஆதி ஜெகந்நாதன் !

     

    ஊழ்வினையில் உருண்டுவந்த பாவம் நீக்கி

    ஊர்போற்றும் வம்சத்தை வளர்த்திட வேண்டி

    தலைநாகர் சிலையொன்று முன் நிறுத்தி

    தவமிருக்க தயரதனும் வந்தான் திருப்புல்லாணி !

     

    ஊர்போற்றும் பிள்ளைகள் பெற்றான் தயரதனும்

    வான்போற்றும் வண்ணம் அருளியதே புல்லாணி !

    நாள்தோறும் தேடிவரும் நன் மக்கள் குறைதீர்க்கும்

    அற்புதமே ! ஆழ்வார்கள் போற்றிய திருத்தலமே !

     

    சூதுகொண்டு பண்பிழந்த சூர்ப்பனகையின் தமையன்

    சாதுவாக உருக்கொண்டு சத்தியத்தின் வேரழித்தான் !

    குலமகளைக் கடத்திச் சென்று கொக்கரித்த இராவணனின்

    குலமழிக்கக் கடலோரம் புடைசூழ வந்தான் காகுந்தனும் !

     

    தவத்தோர் விழைகின்ற தயரதனின் மைந்தனும்

    தர்பையிலே உடல் கிடத்தித் தவமிருந்தான் !

    குரங்கோடு அணிலும் கூடியொரு பாலமமைக்க

    குவலயமே வியந்திட்ட கோவில் புல்லாணி !

     

    ஆணவம் அழித்தே வருணனை வென்றான்

    அரங்கனின் அருளுடன் வில்லும் பெற்றான்

    அரக்கனின்  தம்பிக்கு அடைக்கலம் தந்தான்

    அன்புடை நெஞ்சுக்கு அருள்தரும் புல்லாணி !

     

    கண்மூடும் சொல்லிரண்டில் உனைச் சேர்க்க,

    கண்ணிரண்டில் நீ நிற்கச்  சொல் உறங்கும் !

    காட்சிக்கும் சொல்லுக்கும் ஏன் கண்ணாமூச்சி?

    காதலுற்றேன் ! கருணை செய்வாய்!  கற்பகமே!

     

    மண்ணுலகில் உன்னழகு மனம் கவரும்

    விண்ணுலகில் உன்னழகு என்ன சொல்லும் ?

    மண்ணுலகும் விண்ணுலகும் மயங்கிவிடும்

    மாதவனே! மலைத்தேனே ! மனம் நிறைவாய் !

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் – 27  திருக்கண்ணபுரம் – சௌரிராஜப் பெருமாள்

     க. பாலசுப்பிரமணியன்

    a0c91dd0-6b87-4e67-b173-c7053220b073

    கண்ணனின் கண்ணசைவில் கனிந்துவரும் பூபாளம்

    குழலூதும் கையசைவில் காற்றிசைக்கும் மோகனமே

    காலிரண்டும் தாளமிட கண்சிமிட்டும் கல்யாணி

    கார்மேகன் கண்ணபுரம் காலமெல்லாம் ஆனந்தபைரவி !

     

    கண்ணனின் கோவிலுக்கு மன்னவனும் மலரனுப்ப

    கள்ளமாய் பட்டரும் அதை காசுக்கு விற்றார் !

    கண்டறிந்த மன்னனுக்கு அளித்த மாலையிலே

    கரியதோர் மயிர் கண்டு கலக்கமுற்றான் வேந்தனுமே !

     

    கள்வனுக்குத் துணைவந்தான் கள்வன் கண்ணனுமே

    கரியதோர் சிகை கண்டு கண்டோரும் வியந்தனரே

    கண்ணனும் பெயர் கொண்டான் சௌரிராஜன்

    கணநேரம் நினைத்தாலும் காத்திடும் கண்ணபுரமே !

     

    மனமுடைந்து நின்றான் பக்தியுடன் முனயோதரன்

    மங்கலமாய் பொங்கலிட காலம் கடந்ததேன்றே !

    மனம்கசிந்து மாதவனும் மணியோசை ஒலித்திடவே

    பொங்கல்மணம்  பொங்கிடவே அருள் செய்தான் !

     

    கண்ணபுரத்தான் கைப்பிடித்தான் மீனவப் பெண்ணை

    காசினியில் சாதி பேதம் நீக்கி சமத்துவம் படைத்திடவே !

    பாருள்ள படைப்பெல்லாம் பரந்தாமன் பார்வையில் ஒன்றே

    பாதைகள் வேறானாலும் போகுமிடம் பரமபதம் ஒன்றே !

     

     

    Share
  • மார்கழி மணாளன் – 26 – திருக்கோஷ்டியூர் -ஸ்ரீ சௌம்ய நாராயணப் பெருமாள்

    க. பாலசுப்பிரமணியன்

    3b7d82e4-d54c-4465-be64-8d85f073c33b

    நல்லோரும் வல்லோரும் நான் முகனும்

    நமச்சிவாயத்தொடு கூடிய  திருத்தலமே !

    ஊர்வாழ உலகம்வாழ கைகோர்த்து வாழ

    உள்ளங்கள் ஒன்றாக்கி காட்டிய தத்துவமே !

     

    பூவலகில் கண்ணனின் கால் வண்ணம்

    பாற்கடலில் கிடக்கும் உடல் வண்ணம்

    வைகுந்தத்தில் அவன் முழுவண்ணம்

    மூவுலகும் ஒன்றாக்கும் எழில் வண்ணம் !

     

    நானென்று வந்தான் நல்லதோர் மாணவன்

    நாரணன் மந்திரம் நம்பியிடம் கற்றிட

    வாவென்று சொல்ல மறுத்து வருத்தியே

    வந்தானைத் திருப்பினார் ஆசானும் நம்பியே !

     

    நானழிந்து வந்தவன் நற்கதி பெற்றிட

    நாரணன் அட்சர மந்திரம் அறிந்தான் !

    நானிலம் அனைத்துமே நற்கதி பெற்றிட

    நற்கோவில் மேல்நின்றே  ஒதிட்டான் !

     

    நரகத்தின் பயமில்லை நல்லதோர் நெஞ்சுக்கு

    நானிலம் வாழ்ந்திட்டால் நலமே உலகுக்கு

    சாதியும் மதமும் சந்நிதியில் ஒன்றுதான்

    சமத்துவப் பார்வை கண்ணனின் கீதைதான் !

     

    பெருமாளின் அருள்பெற்ற அந்தணன் ராமனுஜன்

    பெருந்தகை நம்பியின் ஆசியால் எம்பெருமான் !

    ஊரினைக்கூட்டி   திருவடி மந்திரம் தந்தவன்

    திருவருள் பெருக்கிட்ட திருமாலின் திருத்தலம் !

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் – 25  கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள்  

     க. பாலசுப்பிரமணியன்

    2df0377e-26f3-47a1-8153-db2f1bdcacc0

    சிரஞ்சீவியானாலும் சிரம் தாழ்த்தி வாழ்ந்தான்

    சிந்தையிலே நின்றான் அனுமனுக்கு ஸ்ரீராமன்

    சிதறாத அறிவுடனே சீதையைக் கண்டவன்

    சிலையாகிக் காலடியில் அன்போடு அமர்ந்தான் !

     

    வானுயரப் பறந்தாலும் பணிவுக்கு இலக்கணமே

    வில்லோனின் உள்ளமதை வென்றிட்ட வித்தகனே

    வைதேகி ராமனின் அருள்பெற்றது  கபிஸ்தலமே

    வருகின்ற துயர்நீக்கும் வள்ளல்களின் மன்னவனே  !

     

    மாமுனியே மனம்நொந்து மதக்களிராகச் சாபமிட

    மன்னவன் மண்டியிட மாமுனி செப்பிட்டான்

    “மாதவனை மனம்நிறுத்தி மலர்கள் தூவிடுவாய்

    மாமன்னா! மாலனால் பெற்றுவிடுவாய் சிறப்பு !”

     

    பூபாள நேரத்தில் பூப்பறிக்க  வந்தது யானை

    புலனறியா வலியினிலே நோக்கியது மண்ணை

    காலிழுத்து உயிர்பறிக்க முனைந்தது முதலை

    காத்திடக்  கண்ணனை அழைத்தது நல்வினை !

     

    அடியவர் குரலுக்கு அடியவன் ஆண்டவன்

    அன்பினில் அடங்கிய ஆதவன் மாதவன்

    கருடனில் ஏறினான் கருணையைப் பகிர்ந்திட

    கால்களுக்கு கருணை கஜேந்திரனுக்கு மோட்சம் !

     

    ஆனைக்கும் கபிக்கும் கிடைத்தது ஆண்டவன் காட்சி

    அருந்தவ முனிவர்க்கும் கிடைக்காத அருளின் மாட்சி

    அன்பினால் இணைந்திடும் உறவுகளுக்கு அவன் சாட்சி

    அன்னையாய் தந்தையாய் நண்பனாய் நாரணன் ஆட்சி !

     

    சூதில்லா மனமும் சுவை ஞானப்பொருளும்

    மாசில்லாக் காற்றும் மங்களமும் வாழ்மரபும்

    மந்தாரப் புன்னகையும் மடியாத ஈகையும்

    மங்காமல் தந்தருள்வாய் மார்கழி மணாளனே !

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் – 24 -திருமோகூர் காளமேகப் பெருமாள்  

    க. பாலசுப்பிரமணியன்

    f813a8d7-64fa-458b-807e-19d7b5dca31b

    வைகுந்தத்திற்கு வழிகாட்டிய தலமன்றோ !

    விடியாத துயர் தீர்க்கும் சங்கு சக்கரமன்றோ !

    விழி வைத்தவர் கலி தீர்க்கும்  வழிகாட்டி

    வைகைக்கூடலிலே குடிகொண்ட காளமேகன் !

     

    அசுர மனமும் தேவ குணமும் அலைபாய்ந்தது

    அமுதத்தை அருந்திடவே கடல் கடைந்தது

    அழிவின்றி வாழ்ந்திடவே ஆணவமே துடித்தது

    அண்டங்கள் காத்திடவே அரங்கமே வந்தது !

     

    மோகிக்கும் அவதாரம் பத்தெடுத்தாலும் மோகனனே !

    மோகினியாய் மோகூரில் அழகை வளர்த்தவனே

    மோகத்தில் வீழ்ந்த அசுரர்களை மோதவிட்டு

    மோனத்தில் அமுதத்தை தேவருக்குத் தந்தவனே !

     

    காலத்தால் அழியாத வரமொன்று பெற்றான்

    கைவைத்த இடமெல்லாம் கனலாக்கப் பெற்றான்

    போகத்தில் மோகத்தில் சிறையான பதுமன்

    யோகத்தில் மோகினியின் தாகத்தில் எரிந்தான் !

     

    தன்தலையில் தானே கைவைத்து அழிந்தான்

    தரணியில் ஆணவத்திற்கு பாடம் அளித்தான்

    தான்மட்டும் வாழ நினைத்தவர் வாழ்ந்ததில்லை

    தருமம் காத்து நின்றவரேன்றும் தாழ்ந்ததில்லை !

     

    மோகத்தில் மூப்படையும் முடியாத தாகம்

    மோகூரான் போற்றிடவே மூவுலகும் தாண்டும் !

    மோனத்தில் மனம் நிற்க  மூலவனே காளமேகா

    மோகூரில் மோகினியாய் அருள்வாயே நீர்வண்ணா!!

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் – 23 திருச்சேறை – சாரநாதன்

     க. பாலசுப்பிரமணியன்

    2c0497a7-ff38-4cce-bc27-809ac8cf4fa3

    ஊழியிலிருந்து வேதங்கள் காத்திட வந்த மண்ணன்றோ

    உலகத்தை மீண்டும் உய்வித்தது திருச்சேறை நிலமன்றோ !

    பிரளயமும் கடந்திட புதுயுகமொன்று பிரம்மனும் படைத்திட

    பரந்தாமன் அருளாலே வந்த திருச்சேறை திருவருளே !

     

    புள்ளினமும் பூவினமும் காயோடு கனியினமும்

    புல்லினமும் கொடியினமும் மண்ணூறும் உயிரினமும்

    புவிசார்ந்த கோளினமும் புரியாத அசைவினமும்

    புன்னைமர மாலனின் புல்லாங்குழல் இசைவந்தது !

     

    யோகத்தில் உறங்கியும் கோளங்கள் காத்து

    உறவுக்குப் பாலங்கள் உணர்வாலே வைத்து

    உயிருக்கு உடலும் உடலுக்கு உணர்வும்

    உறவாடும் கலைகொடுத்த உத்தமன் நீயன்றோ !

     

    கங்கையோ உன் கால்கழுவி களிப்புற்றாள்

    காவிரியோ கருணை வேண்டித் தவமிருந்தாள்

    தவழ்கின்ற குழந்தையாய் தாய்பாசம் பெற்றே

    தந்தாய் அவதாரத்தின் அருள் தரிசனமே !

     

    கல்லொன்று வண்டியில் நித்தம் பூபாலன் களவாட

    காரிருளில் ஓரிரவில் கோயில் கொண்டோய் !

    காத்திடும் அபயக்கரத்தில் தாமரை எடுத்தாய்

    காத்திடுவாய் கண்ணா ! மலர் போலக் காசினியை !

     

    அஞ்சுகின்ற உள்ளமெல்லாம் காக்கும் அருளாளா !

    ஐந்துதேவியர் கூடநின்று அருள்கின்ற பெருமாளே  !

    அண்டங்களின்  சாரமான சத்வமே  சாரநாதா !

    அகிலமெல்லாம் அமைதியை அருள்வாயே ஆதிமூலா !

    Share