மார்கழி மணாளன் – 28 திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப் பெருமாள்
க. பாலசுப்பிரமணியன்
புல்லருடன் கன்வரும் வளர்த்திட்டார் வேள்வித்தீ
புவியினிலே என்றும் பரந்தாமன் அருள் வேண்டி !
அரசமரமாய் உருவெடுத்து அவன் அருள்தந்தான்
அன்புடனே உருமாறி ஆனான் ஆதி ஜெகந்நாதன் !
ஊழ்வினையில் உருண்டுவந்த பாவம் நீக்கி
ஊர்போற்றும் வம்சத்தை வளர்த்திட வேண்டி
தலைநாகர் சிலையொன்று முன் நிறுத்தி
தவமிருக்க தயரதனும் வந்தான் திருப்புல்லாணி !
ஊர்போற்றும் பிள்ளைகள் பெற்றான் தயரதனும்
வான்போற்றும் வண்ணம் அருளியதே புல்லாணி !
நாள்தோறும் தேடிவரும் நன் மக்கள் குறைதீர்க்கும்
அற்புதமே ! ஆழ்வார்கள் போற்றிய திருத்தலமே !
சூதுகொண்டு பண்பிழந்த சூர்ப்பனகையின் தமையன்
சாதுவாக உருக்கொண்டு சத்தியத்தின் வேரழித்தான் !
குலமகளைக் கடத்திச் சென்று கொக்கரித்த இராவணனின்
குலமழிக்கக் கடலோரம் புடைசூழ வந்தான் காகுந்தனும் !
தவத்தோர் விழைகின்ற தயரதனின் மைந்தனும்
தர்பையிலே உடல் கிடத்தித் தவமிருந்தான் !
குரங்கோடு அணிலும் கூடியொரு பாலமமைக்க
குவலயமே வியந்திட்ட கோவில் புல்லாணி !
ஆணவம் அழித்தே வருணனை வென்றான்
அரங்கனின் அருளுடன் வில்லும் பெற்றான்
அரக்கனின் தம்பிக்கு அடைக்கலம் தந்தான்
அன்புடை நெஞ்சுக்கு அருள்தரும் புல்லாணி !
கண்மூடும் சொல்லிரண்டில் உனைச் சேர்க்க,
கண்ணிரண்டில் நீ நிற்கச் சொல் உறங்கும் !
காட்சிக்கும் சொல்லுக்கும் ஏன் கண்ணாமூச்சி?
காதலுற்றேன் ! கருணை செய்வாய்! கற்பகமே!
மண்ணுலகில் உன்னழகு மனம் கவரும்
விண்ணுலகில் உன்னழகு என்ன சொல்லும் ?
மண்ணுலகும் விண்ணுலகும் மயங்கிவிடும்
மாதவனே! மலைத்தேனே ! மனம் நிறைவாய் !