இன்றும் ஒரு சுகப் பிரசவம் ..!! .. 

க. பாலசுப்பிரமணியன்

 

காலை நான்கு மணி முப்பது நிமிடம்

ஒரு சுகப் பிரசவம்!

கடிகாரக் கூரையிலிருந்து கோழிகள்

தாதியராய் கண்விழித்துக் கை கொடுக்க…….

இன்றும் எனக்கு ஒரு சுகப் பிரசவம் !

 

எண்ணக் குழந்தைகள்.. ..

கால்களால் உதைத்து தலையால் முட்டி ..

என் கற்பனைக் .கருவில்..

இன்றும் எனக்கு ஒரு சுகப் பிரசவம்!

 

“அம்மா” …….

குழந்தைகளின் குரல் இல்லை.. இது..

காலையில் பசுக்களின் குரல்கள் இல்லை .

பால்  பொடிகளை நீரில் பதப்படுத்தி

பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி

நித்தம் பகிர்ந்திவிடும் தேவன்.குரல்….

பெயர்… பால்காரன்!

 

எண்ணக் குழந்தைகளுக்குத் தலைவாரி

சீருடையில் சிங்காரித்து

வாழ்க்கை பள்ளிக்கு நித்தம் அனுப்பும்

நான்… ஒரு நம்பிக்கையுள்ள அன்புத் தாய் .!..

 

பாவச்சுமைகளாய் நேற்றைய நினைவுகளைச் சுமந்து

நித்தம் பள்ளியிலே கனவுகளை விற்கச் செல்லும்

என் எண்ணக் குழந்தைகள் ..

 

கற்றல் வியாபாரத்தில்

சில விலைபோகாத கனவுகளை

உணர்வுகளில் நனைத்து ..

வயற்றுச் சோற்றிற்காக

அடிமட்ட விலையில் ..

மதிப்பெண்களாய் மாற்றி ..

 

மாலையிலே நிலைதடுமாறி ..

கனவுகள் விலைபோகாமல்…

மறப்பதா இல்லை மடிவதாவென……

எண்ணக் குழந்தைகள் துயரத்தில்…

 

மங்கிய நிலவோ..

மனநல மருத்துவராய்..

“இன்று போய் நாளை வா..” வென

நம்பிக்கை கொடுக்க..

 

மீண்டும்..

இன்றைய பாவச் சுமைகளுடன்..

காந்தக் கண்களுக்குள்ளே ..

எண்ணக் குழந்தைகள் கட்டிலுட்டு ..

புதியதாய் ஜெனிக்க..

 

பத்து மணி நேரக் கர்பத்தில்

எட்டு மணியில் ..

குறைப் பிரசவமாய் ..

 

மீண்டும் பிறக்கும் வரை…

நம்பிக்கையுடன்..

உறங்கு … மகனே.. உறங்கு…!!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *