மார்கழி மணாளன் – 24 -திருமோகூர் காளமேகப் பெருமாள்
க. பாலசுப்பிரமணியன்
வைகுந்தத்திற்கு வழிகாட்டிய தலமன்றோ !
விடியாத துயர் தீர்க்கும் சங்கு சக்கரமன்றோ !
விழி வைத்தவர் கலி தீர்க்கும் வழிகாட்டி
வைகைக்கூடலிலே குடிகொண்ட காளமேகன் !
அசுர மனமும் தேவ குணமும் அலைபாய்ந்தது
அமுதத்தை அருந்திடவே கடல் கடைந்தது
அழிவின்றி வாழ்ந்திடவே ஆணவமே துடித்தது
அண்டங்கள் காத்திடவே அரங்கமே வந்தது !
மோகிக்கும் அவதாரம் பத்தெடுத்தாலும் மோகனனே !
மோகினியாய் மோகூரில் அழகை வளர்த்தவனே
மோகத்தில் வீழ்ந்த அசுரர்களை மோதவிட்டு
மோனத்தில் அமுதத்தை தேவருக்குத் தந்தவனே !
காலத்தால் அழியாத வரமொன்று பெற்றான்
கைவைத்த இடமெல்லாம் கனலாக்கப் பெற்றான்
போகத்தில் மோகத்தில் சிறையான பதுமன்
யோகத்தில் மோகினியின் தாகத்தில் எரிந்தான் !
தன்தலையில் தானே கைவைத்து அழிந்தான்
தரணியில் ஆணவத்திற்கு பாடம் அளித்தான்
தான்மட்டும் வாழ நினைத்தவர் வாழ்ந்ததில்லை
தருமம் காத்து நின்றவரேன்றும் தாழ்ந்ததில்லை !
மோகத்தில் மூப்படையும் முடியாத தாகம்
மோகூரான் போற்றிடவே மூவுலகும் தாண்டும் !
மோனத்தில் மனம் நிற்க மூலவனே காளமேகா
மோகூரில் மோகினியாய் அருள்வாயே நீர்வண்ணா!!