Tag: நிர்மலா ராகவன்

  • உன்னையறிந்தால் …. (40)

    நிர்மலா ராகவன்

    முடியாது, மாட்டேன்! 

    உனையறிந்தால்11

    கேள்வி:
    சுயநலம் தகாது என்ற முறையில் என்னை வளர்த்தார்கள். பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு, மிக மரியாதையாகத்தான் நடந்து வந்திருக்கிறேன். இப்போது, நாற்பத்தைந்து வயதில் எதையோ இழந்துவிட்டதைப்போன்ற ஏக்கம் ஏற்படுகிறதே, ஏன்?

    விளக்கம்:
    பிறர் சொல்வதை அப்படியே கடைப்பிடிக்க வேண்டுமென்றால், நமக்கு எதற்கு தனித்தனியாக மூளை? நம் நலனைப் பேணினால்தான் பிறர் நலனில் அக்கறை செலுத்த முடியும். இதை ஏனோ பலரும் மறந்துவிடுகிறார்கள்.

    தன் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்த தாத்தா ஒருவர், போகிற போக்கில், `அம்மா சொல்றதைக் கேளு!’ என்று தன் பேத்திக்கு அறிவுரை கூறிப்போனார். பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதும், அவர்கள் கூறுவதை இம்மிபிசகாது கடைப்பிடிப்பதும் ஒன்றல்ல. அவர்களது கூற்றை ஏற்க முடியாவிட்டால், மரியாதையுடன் மறுக்கலாம். அந்தச் சுதந்தரம் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும். தலைமுறைக்குத் தலைமுறை வாழ்க்கைமுறை மாறிக்கொண்டே இருக்கிறதே!

    சிறுவர்களுக்குப் பேச்சு சுதந்திரம் கொடுத்து, அவர்களது எண்ணங்கள் சரிதானா என்று அவர்களுடன் அலசுவதே நல்ல முறை. அப்படி இல்லாவிட்டால், ஏனென்று விளக்கினால், ஏற்பார்கள். சில இல்லங்களில், யோசிக்கத் தெரிந்த சிறுமிகள் வாயைத் திறந்து ஏதாவது பேசினாலே, `வாயாடாதே! ராங்கி!’ என்று பெற்றோர் அடிப்பதுண்டு.

    இவர்களைப் போன்றவர்கள், தம்மையுமறியாது, குழந்தைகளின் தனித்தன்மையை ஒடுக்கிவிடுகிறார்கள்.

    இரண்டு வயதான குழந்தைகளை `TERRIBLE TWOS” என்று வர்ணிக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் எளிதில் பிறருக்கு அடங்க மாட்டார்கள். எது சொன்னாலும், `மாத்தேன், போ!’ என்ற பதில்தான் வரும். இதுதான் மனிதனின் பிறவிக்குணம். ஆனால், சுயமாக எது செய்தாலும் கூடாது என்ற நிலை. நமக்கு இயற்கை அளித்திருக்கும் வரப்பிரசாதமான கற்பனைத்திறன், சிந்திக்கும் ஆற்றல் பலருக்கும் சிறு வயதிலேயே ஒடுக்கப்பட்டு விடுகிறது பெரியவர்கள் சொற்படி மட்டுமே நடப்பதால்தான்.

    குழந்தைகள் சுவரில் கிறுக்குவது எல்லார் வீட்டிலும் நடக்கும் ஒன்று. வரையப் பிடித்த குழந்தைகள் தம்மைத் தாமே திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்றெல்லாம் பகுத்தறியத் தெரியாத வயது அது. அச்செயல் வீட்டின் அழகைக் குலைப்பது என்று நாம் எடுத்துக்கொண்டால், அது யார் தவறு?

    `சுவற்றில் கிறுக்காதே!’ என்று ஒரு சிறுமி ஓயாது கண்டிக்கப்பட்டால், தன் காலில் வரைந்துகொள்ள ஆரம்பிப்பாள். அப்படி ஒரு அடக்க முடியாத எழுச்சி கிளம்பும் அந்த வயதில். அவளுடைய ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, காகிதத்தைக் கொடுக்க வேண்டும். எதையாவது உருண்டையாகப் போட்டுவிட்டு, `கோழி’ அல்லது `புலி’ என்று பெருமையுடன் காட்டும்போது, `புத்திசாலி என்று சொல்லிவைக்க வேண்டியதுதான். நாம் சொல்வதை நம்பி, தன்னம்பிக்கை வளர, திறமைசாலியாக ஆகிவிடுவாள்.

    இப்படி வளர்க்கப்பட்ட ஒரு சிறுமி எட்டு வயதிலேயே சித்திரத்திற்கு வண்ணம் பூசும் (பெரியவர்களுக்கான) போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றாள். நீதிபதி, `இவளுடைய வண்ணச் சேர்க்கை எனக்கே தோன்றாத ஒன்று!’ என்று புகழ்ந்திருக்கிறார்.

    இரண்டிலிருந்து நான்கு வயதுவரை சில குழந்தைகள் தனிமையை நாடி, தாமே பேசிக்கொண்டு இருப்பார்கள். `என்ன பேசறே?’ என்று கேட்டால், `கதை சொல்கிறேன்!’ என்ற விளக்கமும் கிடைக்கும்! யாரிடம் என்றெல்லாம் கேட்கக்கூடாது. அவர்கள் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கோர்வையாகப் பிறரிடம் வெளிப்படுத்தத் தெரியாத வயதல்லவா! அப்போது காற்றோ, சுவரோதான் உற்ற நண்பன். அவர்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு அது. `இதுக்குப் பைத்தியமா!’ என்று அயராது, குழந்தையைத் தன்போக்கில் விட்டுவிட்டால், கற்பனைத்திறன் மேன்மேலும் பெருகும்.

    தனிமையை நாடுவது என்பது குழந்தைகள் தங்களைப் புரிந்துகொள்ள எடுக்கும் முயற்சி. அவர்களுக்குப் பிறரைப் பிடிக்காது என்றில்லை. பெரியவர்கள் அப்படித் தவறாக எடுத்துக்கொண்டு, `ஏன் பிறருடன் ஒத்துப்போவதில்லை?’ என்று பலவாறாக அவர்களை மாற்ற முயற்சித்தால், குழந்தைகளுக்குக் குழப்பம்தான் எழும்.

    `உனக்குப் பிடித்ததைச் சொல்வதோ, செய்வதோ சுயநலம். அது கெடுதல்!’ என்று வளர்ப்பதும் இயற்கைக்கு விரோதமானதுதானே!

    நமக்குப் பிடித்தது, வேண்டியது என்னவென்று நம்மைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?

    எந்தக் குழந்தையும், உலகம் தன்னைச் சுற்றித்தான் இயங்குகிறது என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கும். தனக்குப் பிடித்த தின்பண்டம் ஒன்றைத் தானே தின்று தீர்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தையிடம் பிறருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று போதிக்கலாம். அதைவிட்டு, `சுயநலம் பிடித்தது!’ என்று திட்டுவதோ, பழிப்பதோ நாம் எதிர்பார்க்கும் பலனைத் தராது.

    எல்லாக் குழந்தைகளும் ஒரேமாதிரி இருப்பதில்லை. சில குழந்தைகளுக்குப் பலர் பேசும் இடத்தில் தானும் உட்கார்ந்திருக்கப் பிடிக்கும். எவர் சொல்வதையும் கேட்டு நடந்து, நல்ல பெயர் எடுக்க முனையும்.

    இப்படி வளர்க்கப்படுகிறவர்கள் பெரியவர்களானதும், பிறரும் தாம் சொல்வதையெல்லாம் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி நினைத்தது நடக்காவிட்டால், ஆத்திரமடைகிறார்கள்.

    வேறு சிலரோ, எந்த வயதிலும் பிறர் சொல்வதைக் கேட்டுத்தான் நடக்க முடியும் என்ற நிலைக்கு உள்ளாகி, அதனால் விரக்தி அடைகிறார்கள். இவர்கள், `என்னால் முடியாது!’ என்று சொல்லிப் பழகாதவர்கள். உலகில் இத்தகையவர்கள் பலர் இருக்கிறார்கள் போலும்! `SAY NO‘ என்று புத்தகங்களே போடுகிறார்கள்!

    சர்வாதிகாரம் மிகப் பெரிய குடும்பங்களில் வேண்டுமானால் அவசியமாக இருந்திருக்கலாம். ஆனால், ஒரு குடும்பத்திலுள்ள ஒவ்வொரு குழந்தையும் தன் தனித்தன்மையை இழக்காது வாழ்வில் சிறக்க, கடமை உணர்ச்சி, பொறுப்பு, சுயநலம் எல்லாம் சரியான விகிதங்களில் இருத்தல் அவசியம்.

    இக்குணங்களில் ஏதாவது ஒன்று மட்டும் மிகையாக இருக்கும்போது ஒரு மனிதனுக்குப் பிறரிடம் அவன் எதிர்பார்க்கும் மரியாதையோ, பாராட்டோ கிடைக்காது. தாழ்மை உணர்ச்சி மிக, `என்னிடம் என்ன குறை?’ என்றெல்லாம் எண்ணம் போவதால், நிம்மதியும் போய்விடுகிறது.

    தீர்வு:
    `முடியாது!’ `மாட்டேன்!’ என்று சொல்லிப் பழகுங்கள். ஆனால் மரியாதை குன்றாது. வேண்டுமானால், சற்றுப் பொறுத்து, ஏன் என்று விளக்கலாம்.

    உங்களை உங்களுக்கே பிடிக்க வேண்டும். அப்போதுதான் உலகத்தினர்மேல் அன்பு செலுத்த முடியும்.

    Share
  • உன்னையறிந்தால் …. (39)

    நிர்மலா ராகவன்

    படிப்பும் சுதந்திரமும்

    உனையறிந்தால்1
    கேள்வி: பதினைந்து வயதாகியும் என்னை இன்னும் சிறுபையனைப்போலவே நடத்துகிறார்கள் என் அம்மாவும், தாத்தாவும். `படி, படி’ என்று உயிரை வாங்குகிறார்கள். ஏன்தான் பள்ளிக்கூடம் போகவேண்டுமோ என்று இருக்கிறது. எப்போதுதான் நான் சுதந்திரம் பெறுவது?

    விளக்கம்:

    சுதந்திரம் என்றால் மனம்போனபடி நடத்தல் என்பதல்ல.

    பெற்றோர் அனுமதிப்பதும், ஏதாவது ஒன்றைச் செய்யச்சொல்வதும் வயதைப் பொறுத்தது. நடக்க ஆரம்பித்த ஒன்றரை வயதுக் குழந்தைகூட தான் தனியாக நடக்க வேண்டும் என்று விரும்பி, நெரிசலான தெருக்களில் தாயின் கையை விட்டுவிட்டு ஓடப்பார்க்கும். இது சுதந்திரம் வேண்டும் ஒவ்வொரு மனிதனின் இயற்கையான தன்மை. அதற்காக, குழந்தையை அதன் விருப்பப்படி விடமுடியுமா?

    படிக்கும் வயதில், சிறுவர்கள் தமது எல்லாத் தேவைகளுக்கும் பெற்றோர் கையைத்தான் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. கூட்டுக் குடும்பங்களாக இருந்தால், தாத்தா பாட்டி சொல்படியும் நடக்க வேண்டும். இரு தலைமுறைகளுக்குமுன் இவர்கள் மட்டுமின்றி, அத்தை, மாமா, பெரியம்மா என்று இன்னும் பலரையும் திருப்திப்படுத்த வேண்டியிருந்தது.

    வயதில் மூத்தவர்கள் அனுபவம் மிகுந்தவர்கள், அவர்களுக்கு மரியாதை கொடுத்து, நல்லவை, தீயவைகளை அவர்களிடமிருந்து கற்க வேண்டும் என்ற நிலை. அனுபவிக்கும்போது சற்றுக் கடினமாக இருந்தாலும், பலதரப்பட்ட மனிதர்களின் குணாதிசயங்களைப் புரிந்துகொள்ள இம்முறை வழிவகுத்தது.

    நான் பார்த்தவரை, பதினெட்டு வந்துவரை ஆண்பிள்ளைகளுக்குச் சிறுபிள்ளைத்தனம் மாறுவதில்லை. நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதையோ, அல்லது கடிகாரம், ரேடியோ போன்ற ஏதாவது சாமானைப் பிரித்துப்போட்டு, பின் அதைப் பொருத்துவதையோதான் பெரும்பான்மையான பையன்கள் விரும்புவர். படிக்கவோ பிடிக்காது. (ஓயாது மனப்பாடம் செய்பவன் சகநண்பர்களின் கேலிக்கு உள்ளாகிறான் என்பதும் காரணமாக இருக்கலாம்).

    விவரம் புரியாத அந்தவயதில், பெற்றோரின் கண்காணிப்பு தேவைப்படுகிறது. நல்ல பழக்கங்கள்கொண்ட நண்பர்களை நாடவேண்டுவது அவசியம். நம்மைக் காரணமின்றி ஓயாமல் புகழும் நண்பர்களும், அல்லது நம்மைவிடக் கீழான நிலையில் இருப்பவர்களும் நம்மையும் கீழே இறக்கிவிடக்கூடும்.

    நண்பர்களுடன் சேர்ந்து புகைபிடிப்பது அந்தத் தருணத்தில் இன்பகரமாகத் தோன்றலாம். பிரபலமான நடிகர்கள் படங்களில் புகை பிடித்தால், கம்பெனிக்கு வியாபாரம். நடிகர்களுக்கும் கொள்ளைப்பணம். ஆனால், கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றும் இளைஞர்களின் ஆரோக்கியத்துடன், பணமும், நேரமும் அல்லவா வீணாகிறது!

    எனக்குத் தெரிந்த பல ஆண்கள் (வயது: 14 – 50) `நல்லவேளை, நான் பள்ளி இறுதியாண்டுப் பரீட்சையில் நல்லபடியாக பாஸ் பண்ணவில்லை. இல்லாவிட்டால், காலேஜிலே படிச்சுத் தொலைச்சிருக்கணும். `படி, படி’ என்று அம்மா, பாட்டி எல்லாரும் உயிரை வாங்குவார்கள்!’ என்று என்னிடம் தங்கள் அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொண்டபோது, எனக்கு அவர்களைப் பார்த்துப் பரிதாபம்தான் ஏற்பட்டது. வாழ்வில் நன்றாக முன்னுக்கு வந்திருக்கக் கூடியவர்கள்! பெரியவர்களின் தொணதொணப்பு பொறுக்க முடியாது, தம் முன்னேற்றத்துக்குத் தாமே முட்டுக்கட்டு போட்டுக்கொண்டவர்கள்!

    இந்தக் கோணத்தில் அணுகினால், பிள்ளைகளுக்குப் படிக்கப் பிடிக்காததற்கு பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணமாகிறார்கள்.

    பிள்ளைகள் நன்றாகப் படித்து, பெரிய உத்தியோகத்தில் அமரவேண்டும் என்றெல்லாம் கனவு கண்டால் மட்டும் போதுமா? சிறுவர்களின் மனநிலையை உணரவேண்டாமா! திட்டுவதாலோ, அடிப்பதாலோ சிறுவர்களை மாற்றிவிட முடியாது. சற்று பயந்து, கொஞ்சகாலம் அடங்கியிருந்தாலும், ஊக்குவிப்பு என்பது உள்ளார்ந்ததாக இருந்தால்தான் எடுத்துக்கொண்ட எந்தக் காரியத்தையும் சிறப்பாகச் செய்யும் உந்துதல் ஏற்படும்.

    `நான் நன்றாகப் படித்து, வாழ்வில் உயருவேன். எல்லாவற்றிலும் வெற்றி பெற முயற்சி செய்வேன்!’ என்று தீர்மானம் செய்துகொள்ளும் சிறுவர்கள் எந்தவித ஏளனப் பேச்சையும் அலட்சியம் செய்ய முடிகிறது.

    கதை: `எனக்குக் கதைப்புத்தகம் படிக்கவே பிடிப்பதில்லை!’ தயக்கத்துடன் என்னிடம் தெரிவித்தவன் உறவுக்கார, பதின்ம வயதுப் பையன்.

    `கதைதான் என்று என்ன! புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறு, கார், ஆகாய விமானம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் என்று எதையாவது படியேன்!” என்றுவிட்டு, “ எல்லா விளையாட்டும் விளையாடு! அம்மாவுக்குத் தேங்காய் துருவிக்கொடுப்பதைவிட நண்பர்களுடன் விளையாடுவது முக்கியம்!’ என்று அழுத்தமாகக் கூறினேன். (அவன் தாய் சிரித்தபடி கேட்டுக்கொண்டிருந்தாள்).

    அவனும் மகிழ்ச்சியுடன் அந்த அறிவுரையைக் கடைப்பிடித்து, I.I.T கல்லூரியிலேயே இரண்டாவது மாணவனாக வந்தான். உயர்ந்த உத்தியோகமும் கிடைத்தது.

    `நாம் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறோம். நீ பெரியவன் ஆனதும், இதேபோன்ற வாழ்க்கைத்தரம் அமைய வேண்டுமானால், அது உன் கையில்தான் இருக்கிறது. அதற்கு நீ இப்போதிலிருந்தே பாடுபட வேண்டும்!’ என்று ஒரு தாய் நல்லவிதமாக எடுத்துச் சொன்னால், பதின்ம வயதுப் பையன்கள் புரிந்துகொள்வார்கள்.

    தாத்தா பாட்டியாக இருந்தால், `நீ நன்றாகப் படித்தால்தான் வாழ்க்கையில் நல்ல நிலை அடையமுடியும். நாங்கள் புத்தி சொல்வது உன் நன்மைக்காகத்தான்! நாளைக்கு உன் குடும்பம்தானே மகிழ்ச்சியாக இருக்கும்! நாங்களா அனுபவிக்கப்போகிறோம்! என்று கூறினால் பலனிருக்கும். ஆனால், ஓரிரு தடவை மட்டுமே சொன்னால் போதும்!

    அதைவிட்டு, ஓயாது தொணதொணத்தால், அவர்களை மீறத்தான் தோன்றும் எவ்வயதினருக்கும். அவர்கள் சொல்வதை அப்படியே பின்பற்றி, படிப்பு, படிப்பு என்று உயிரை விட்டுக்கொண்டால், அலுப்புடன், அச்சமும் விளையாதா! அதைச் சீராக்க, விளையாட்டும், மற்ற பொழுதுபோக்கும் அவசியம். அவைகளை விடக்கூடாது.

    சமீபத்தில் நான் படித்த தகவல்: தற்கால சீனாவில் பல்கலைக்கழகத்தில் நுழைவது மிகக் கடினம். கல்லூரிப்படிப்பு மட்டுமே பெரிய உத்தியோகத்துக்கு வழிவகுக்கும். இல்லாவிட்டால், அவர்களுடைய பெற்றோர்கள்போல், கட்டட வேலைக்கோ, தோட்டத் தொழிலாளியாகவோதான் போக முடியும்.

    பல்கலைக்கழகத்தில் நுழைய மிகக் கடினமான பரீட்சை நடத்தப்படுகிறது. இப்பாடங்களைப் பயில சீனாவின் கிழக்குப்பகுதியில் ஒரு விசேடமான (ரகசியப்) பள்ளி இருக்கிறது. இங்கு 20,000 பேர் பயில்கிறார்கள். இல்லை, இல்லை, உருப்போடுகிறார்கள். காலை 6.20 – இரவு 10.50 வரை பாடங்கள். (ஐயோ!)

    தங்கும் விடுதியில் எல்லா மாணவர்களும் நுழைந்து விட்டார்களோ என்று உறுதி செய்துகொள்ளும் வகையில், அவர்கள் கைரேகையைப் பதித்தால்தான் அறைக்குள் புகமுடியும். பள்ளியிலும், ஊரிலும் மாணவ மாணவிகளின் எல்லாவித நடத்தையும் கேமராமூலம் கண்காணிக்கப்படுகின்றன. அவர்கள் கவனத்தைக் கலைத்துவிடக்கூடிய கணினி, தொலைபேசி, வீடியோ `ஆர்கேட்’ போன்ற எதுவும் அந்த ஊரிலேயே கிடையாது. ஆணும், பெண்ணும் கூடிப்பேசுதல், காதல் — மூச்!

    தாம் பெற்ற ஒரே செல்வங்களும் தம்மைப்போன்றே வறுமையில் வாடக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன், பெற்றோர் இரவு பகலாக இரண்டு வேலை பார்த்து, (குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் மாணவனுக்காக நிறையச் சம்பளம் கட்டி), இதில் சேர்க்கிறார்கள்.

    விடுதியில் அம்மாவோ, தாத்தாவோ மாணவனுடன் தங்கலாம். ஆனால், அவர்களுடைய பதட்டமும் மாணவர்களப் பற்றிக்கொள்ள, சிலர் தற்கொலை செய்துகொண்டதில் ஆச்சரியமென்ன!

    நல்லவேளை, நமக்கு இந்தக் கெடுபிடிகள் எல்லாம் கிடையாதே என்று நாம் திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

    பொதுவாக, பரீட்சைக்கு முதல் நாள் இரவு கண்விழித்துப் படிக்காது, வார இறுதிகளில் அந்தந்த வாரப் பாடத்தை படித்து வருவது நன்று. ஒரு முறை வகுப்பில் கேட்டது அல்லது படித்தது இருபத்து நான்கு மணி நேரம்தான் நம் நினைவில் இருக்குமாம்.

    திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைப் படித்தால், அதற்காக எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் குறுகிவிடும். பரீட்சைக்கு முன்னால் ஒரு பார்வை பார்த்துக்கொண்டாலே போதும்.

    பரீட்சைகளைத் திருப்திகரமாக எழுதி முடித்ததும், விடுதலை உணர்வுடன் நண்பர்களுடன் திரைப்படம் பார்க்கப்போகலாமே!

    Share
  • உன்னையறிந்தால் (38)

    நிர்மலா ராகவன்

    முதுமையில் இளமை

    உனையறிந்தால்
    கேள்வி: என் சொற்ப சம்பாத்தியத்தில் நான் நல்ல புடவை வாங்கிக்கொண்டால், பட்டப்படிப்பு படித்த என் மகள், `45 வயதில் உனக்கு இதெல்லாம் தேவையா?’ என்று பழிக்கிறாள். மகனும், `என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் உன்னை என் அக்காளா என்று கேட்கிறார்கள். மானம் போகிறது!’ என்று கடிந்துகொள்கிறான். என்ன செய்வது?

    விளக்கம்: நீங்கள் செய்வதுதான் சரி. மூப்பு வரும்போது வரட்டுமே! நாமாக அதைத் தேடிப் போவானேன்!
    `உங்களுக்கு முதுமையே வேண்டாமா?’ என்று யாராவது கேட்டால், `அது வருகிறபோது வரட்டும். நாமாக வரவழைத்துக் கொள்வானேன்! என்ன அவசரம்!’ என்று சொல்லிவிட்டுப் போங்களேன்!

    உங்கள் மகனும், மகளும் பெருமைப்பட வேண்டிய விஷயம் உங்கள் இளமைத் தோற்றம். மாறாக, பொறாமையும், அவமானமும் அடைகிறார்கள்!

    என் மகள் தமிழ்நாட்டில் ஒரு புடவைக்கடைக்குப் போய், `எங்கம்மாவுக்கு ஒரு புடவை காட்டுங்க,’ என்று கேட்க, அறுபது வயதுக்குமேல் ஆனவர்கள் என்று உத்தேசித்து, பழுப்பு நிறமாகக் காட்டினாராம் கடைச் சிப்பந்தி. இவள் அயர்ந்துபோனாள்.
    ஏன், வயதானவர்கள் வண்ண வண்ணமாக உடுத்தக்கூடாதா?

    இளமையில், பிறரைக் கவரத்தான் அழகாக உடுத்தினோமா, என்ன! எல்லார்போலவும் இருக்கவேண்டும் என நம் சொந்த விருப்புவெறுப்புகளை அலட்சியம் செய்வது கொடுமை.

    ஐம்பது வயதில் திடீரென குண்டாகிவிட்ட நெருங்கிய சொந்தக்காரியிடம், `உடம்பைப் பாத்துக்கோ. ஏதாவது உடற்பயிற்சி செய்யக்கூடாதா!’ என்று ஆதங்கத்துடன் கேட்டேன்.

    `ம்? B.P, ஷுகர் எல்லாம் வரவேண்டாமா?’ என்றாள் பதிலுக்கு. கிண்டலாகப் பேசுவதாக நினைப்பு.

    சில வருடங்களிலேயே, அவளுக்கு மூட்டு வலி. இன்னும் மிக வயதானவர்களைத் தாக்கும் ஏதேதோ உபாதைகள். மன அழுத்தம் என்று மருந்துகள் வேறு. எப்போது வயதாகும், வியாதிகள் வரும் என்று எதிர்பார்த்து, `அது இயற்கை!’ என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தால், வேறு எப்படி நடக்கும்?

    இந்தியாவில், சில உறவினர் பெண்கள் என்னைக் கேட்டார்கள், `நீங்கள் என்னென்ன மருந்து சாப்பிடுகிறீர்கள்?’

    வயதாகிவிட்டால், மருந்துகள் உட்கொண்டுதான் ஆகவேண்டும் என்று தீர்மானித்துவிட்டவர்களைப் பார்த்து எனக்கு வியப்பும், பரிதாபமும்தான் எழுந்தன. ஆரோக்கியமாக இருக்க வழிகளா இல்லை?

    எனக்குத் தெரிந்த ஒரு 65 வயது சீனப் பெண்மணி, அவ்வப்போது முடிவெட்டிக்கொள்ள சலூனுக்குப் போவார். போய்வந்ததும், `இளமையாகக் காட்சி அளிக்கிறோமே!’ என்ற உற்சாகம் பெருக, ‘எங்காவது வெளியே போகலாமா?’ என்று சிறுபெண்போலத் துள்ளுவார்.

    இளமைக்காலத்தில் வசதி குறைவாக இருந்ததால் எதையும் அனுபவிக்க முடியாது போய்விடுகிறது சிலருக்கு. நாற்பது வயதானபிறகு, வசதி வருகிறதென்று வைத்துக்கொள்வோம். ஆசைப்பட்டதை அப்போது அனுபவிக்க என்ன தடை? அதற்கென இன்னொரு பிறவி எடுத்தா வரமுடியும்? விருப்பப்படி கௌரவமான உடை அணியலாம். அது ஒரு பொருட்டேயில்லை. நமக்கு நம் மகிழ்ச்சி முக்கியம்தானே?

    சுய நிம்மதியைவிட, `பிறர் என்ன சொல்லிவிடுவார்களோ!’ என்றே தமது ஒவ்வொரு சொல்லையும், செயலையும் அளப்பவர்கள், `சமூகம் விதித்தபடிதான் நாம் வாழ வேண்டும்!’ என்று வாதிடலாம். இப்படிப்பட்டவர்கள் சொல்வதை — நாம் பெற்ற குழந்தைகளே ஆனாலும் — பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

    சமூகம் என்பது என்ன?
    நானும், நீங்களும்!
    நாம் மாறினால், தானே சமூகமும் மாறிவிட்டுப்போகிறது!

    `எனக்கு வயதாகிவிட்டது! இனி என்ன இருக்கிறது. என் வாழ்க்கை அவ்வளவுதான்!’ என்று விரக்தியுடன் பேசி நடந்துகொள்பவர்கள் வாழ்வில் ஒரு பிடிப்புமின்றி, இயந்திரத்தனமாக காலத்தை ஓட்ட வேண்டியிருக்கும். அவர்களுக்கும் மகிழ்ச்சி கிடையாது, அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்களால் நிம்மதி கிடையாது.

    இவர்களுக்கு மாற்றத்தை நாடும் துணிச்சல் இல்லை. மாறாக, தம் வித்தியாசத்தாலேயே வெற்றியைப் பிடித்திருக்கும் பிறரைப் பழிப்பதில் நிறைவு அடையும் கோழைகள். போதாத குறைக்கு, கூட இருப்பவர்களைச் சதா தொணதொணத்துக் கொண்டிருப்பதிலும், மட்டம் தட்டுவதிலும் அற்ப திருப்தி அடைவார்கள். (அதனால்தான், கிழப்பாட்டிமாதிரி தொணதொணக்காதே!’ என்று இளையவர்களைத் திட்டுகிறோம்).

    இன்னதென்று புரியாத சூனியத்தை மறக்க இன்னொரு வழி அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுதல். இப்பழக்கத்தால் ஆரோக்கியம் மேலும் கெடும் என்பதை எவரும் நினைத்துப் பார்க்க விரும்புவதில்லை. சாப்பிடும் நேரத்தில் மட்டும் மகிழ்ச்சியாக உணர்வார்கள்.

    தம்மை மாற்றிக்கொள்ள விரும்பாது, வெற்றியும், மகிழ்ச்சியுமாகக் காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து, `என்னால் மட்டும் ஏனோ எதிலுமே பெயர் போட முடியவில்லையே!’ என்று ஏக்கப் பெருமூச்சு விடுவதால் என்ன பயன்!
    நாம் ஒவ்வொருவரும் இறுதி மூச்சு விடும்வரை நமக்குப் பிடித்த ஏதாவது ஒரு நல்ல வழியில் வாழ்ந்தால்தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். இல்லாவிட்டால் சுமைதான் –நமக்கும், பிறருக்கும்.

    `நாற்பது வயதுக்குமேல் அழகாக அலங்கரித்துக்கொள்வதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறர்கள்?’ என்று 65 வயது ஜெர்மனி நாட்டுப் பெண்மணி ஒருவரைக் கேட்டேன், முன்பு ஒரு முறை. உலகளாவிய நிலையில், மிகப் பெரிய உத்தியோகம் வகித்து வந்தவர் அவர்.

    யோசிக்காமல் பதிலளித்தார்: `காலையில் என்னையே கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும்போது, ஒரு அழகான, இளமையான முகத்தைப் பார்க்கத்தான் விரும்புகிறேன்!’

    சிலரின் வெற்றியின் ரகசியம் இதுதான் — தன்னம்பிக்கை, சுயமரியாதை மற்றும் பிறரது ஏச்சுப்பேச்சை அலட்சியம் செய்தல்.

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் …. (37)

     நிர்மலா ராகவன்

    நாட்டியத்தால் நாமடையும் நன்மைகள்

    உனையறிந்தால்

    கேள்வி: என் மகள் (30 வயது) கணவனின் கொடுமை தாங்காது, தன் ஐந்து வயதுப் பெண்குழந்தையுடன் சட்டபூர்வமாகப் பிரிந்துவிட்டாள். குழந்தைக்கு எதைக்கண்டாலும் பயம், கூச்சம். அவளை (உளவியல் நிபுணர்களின் துணையின்றி) சரிப்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா?

    இருவருமே முறைப்படி நாட்டியம் கற்பதால் பலன் அடையலாம். நாட்டியம் ஒருவித யோகம். உடலையும், மனதையும் ஒருமைப்படுத்துவது. அதனால் அதை பக்தி மார்க்கம் என்றும் கூறலாம்.

    நாட்டியத்தில் தா-தா-தை என்றெல்லாம் காலைத் தரையில் ஓங்கியடிப்பார்கள் இல்லையா? அது அக்குப்ரெஷர். மூளையில் இருக்கும் நியூரான்களை இயக்கும். கணக்குப் பாடம் எளிதாகும்.

    ஆடும் சமயத்தில் வேறு எந்த நினைவும் எழாது. இதனால் ஞாபகசக்தி பெருகும். நாட்டியத்துடன் இசையும் சேர்ந்திருப்பதால், தாழ்மை உணர்ச்சி மற்றும் மன அழுத்தத்திலிருந்து நாளடைவில் விடைபெறலாம்.

    சிறுமிகள் பலர் நாட்டிய வகுப்பில் இருப்பார்களே! எல்லாரும் ஒரே வகுப்பில், ஒரே விஷயத்தைக் கற்கும்போது, தானாகவே நெருக்கம் உண்டாகும். சிறுகச் சிறுக கூச்ச சுபாவம் மறைந்து, பிறருடன் கலந்து பழக முடியும். எவருக்குமே தன்னம்பிக்கை அதிகரிக்க, எந்த இடர்ப்பாட்டையும் தாங்கும் சக்தி வருவதோடு, புதிய சவால்களை ஏற்கவும் தயாராக முடியும்.

    நாட்டியம் ஆடுவதால் உடலுக்குப் பயிற்சி என்பதால், உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் தனக்குத் தேவையான அளவு மட்டுமே எடுத்துக்கொள்வதால்,. அளவுக்கு அதிகமாகச் சாப்பிடத் தோன்றாது. ஆதலால், பருமனாகும் அபாயமும் இல்லை!

    குழந்தைகளுக்கு அபாரமான கற்பனைத்திறன் உண்டு. நாட்டிய நாடகம் போன்றவற்றில் பங்கு ஏற்பதால், அத்திறன் மேலும் சிறக்க வழியிருக்கிறது. ஒரு சிறிய பாட்டில், `அரக்கன்’ என்று வரும் இடத்தில் கண்ணைப் பயங்கரமாக உருட்டிய ஒரு சிறு பெண் பலராலும் பாராட்டப்பட்டாள். அதன்பின், அந்த இடம் வருமுன்னரே மேடையில் அவள் உற்சாகமடைந்ததைக் கண்டிருக்கிறேன். (அதற்குமுன் அவளை யாரும் எதற்கும் புகழ்ந்ததில்லை).`என்னிடம் இவ்வளவு திறமை இருக்கிறதா!’ என்று வியந்ததுபோல், அவளது தன்னம்பிக்கை கூடியது.

    ஆனால் ஒன்று. பாடுவது பாட்டுக்காக இருக்கவேண்டும். இல்லாவிட்டால், ஒருவரின் இசையில் பாவம், பக்தி இராது. அதேபோல், நாட்டியமாடுவதால் நடனமணி எவ்வளவு சிறப்புப் பெறுகிறாள் என்பது முக்கியமில்லை. (குழந்தைகளை மன்னிக்கலாம்). அவர்களிடமும், `நீ நன்றாக ஆடுகிறாய். அழகாய் இருக்கிறாய். இது தெரிந்த விஷயம்தானே! பிறர் இதையெல்லாம் புகழ்ந்தால், ரொம்ப மகிழ்ந்துவிடாதே. `நன்றி’ என்று சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இரு! இல்லாவிட்டால், கலை உன்னை விட்டுப்போய்விடும்,’ என்று அறிவுரை கூறி வளர்த்தால், கர்வம் இல்லாமல் வளர்வார்கள். இந்த ஒழுக்கத்தினால், அவர்களால் பல விஷயங்களிலும் வெற்றி பெற முடியும்.

    சரியான முறையில் கையாண்டால், நாட்டியம் மன அமைதியை அளிக்க வல்லது. தன்னையே உணரச் செய்யும் ஆற்றலும் இதற்கு உண்டு. ஆனால், போட்டி மனப்பான்மை இருந்தால், அமைதி எப்படிக் கிடைக்கும்? The emphasis should be on the dance, not the dancer.பலரும் தம் தனிப்பட்ட புகழுக்கும், பொருளுக்கும் நாட்டியத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது போட்டி, பொறாமை, அதனால் விளையும் சச்சரவுகளையே எழுப்பாது?

    ஏதாவது ஒரு காரணத்துக்காக (பேச்சு, பாட்டு, நாட்டியம்) மேடை ஏறுபவர்கள் முதலில் அச்சத்துக்கு உள்ளாவார்கள். உலகப் புகழ் பெற்ற இசை வல்லுனர்களும், நாட்டியமணிகளும்கூட, `மேடை ஏறுமுன் எனக்குள் அட்ரினலின் (adrenaline) ஏகமாகச் சுரந்துவிடும். அதனால் படபடப்பாக இருக்கும். அப்போதுதான் என்னால் நன்றாகச் செயல்பட முடியும்!’ என்று கூறியதாக நீங்கள் படித்திருக்கலாம். இது stage fright அல்லாமல் வேறென்ன! பயம் இல்லாவிட்டால், நிகழ்ச்சி இன்னுமே சிறப்பாக இருக்கும். தன்னை முன்னிறுத்தி, கலையை இரண்டாம்பட்சமாகக் கருதுவதால் வந்த வினை இது.

    யோகாசனம் அமைதியை அளிப்பது, ஆரோக்கியத்தை அளிப்பது, பயில்பவர்கள் விரைவாக மூப்பு அடைய மாட்டார்கள் (retards the decay of cells) என்றெல்லாம் என் சொந்த அனுபவத்தில் கண்டிருக்கிறேன். (விளையாட்டாகத்தான் செய்ய ஆரம்பித்தேன். உடனே, மூளை நன்றாக செயல்பட்டது கண்டு, `கல்லூரி நாட்களிலேயே ஆரம்பித்திருக்காமல் போய்விட்டோமே!’ என்ற ஏக்கம் பிறந்தது. நாற்பது வயதுக்குமேல்தான் மூப்பைப்பற்றி அறிந்தேன்).

    விளையாட்டு வீரர்கள் முதலில் குனிந்து, நிமிர்ந்து என்று பல்விதப் பயிற்சிகள் செய்வதைப்போல், வகுப்பிலும் நாட்டியம் ஆடுமுன் செய்தால், உடலில் எந்த வலியும் ஏற்படாது. முதலில் சிறிது உடற்பயிற்சி (stretching exercises), பிறகு சூரிய நமஸ்காரம் என்று ஆரம்பித்தால், களைப்பின்றி வெகு நேரம் ஆட முடியும்.

    மாறாக, ஆரம்பித்தவுடனேயே ஒரு பாடலுக்கு குதித்து ஆடத் துவங்குவதால், காலில் சுளுக்கு, தோள்வலி என்று ஏடாகூடமாக ஏதாவது ஆகும். தவறான `போஸ்’களாலும் இதே விளைவுதான்.

    நாட்டியம் என்றால், கை முத்திரைகளும் அதில் அடங்கும் அல்லவா? ஒவ்வொன்றுக்கும் தனிப் பலன்கள் உண்டு. உதாரணமாக, ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் நீட்டி, மற்ற இரண்டையும் கட்டை விரலுடன் சேர்த்துப் பிடித்தால், கண்ணுக்கு நல்லது. ஒவ்வாமைக்கும், அசுரனுக்கும் ஒரே முத்திரைதான்!

    இப்போதெல்லாம், நவீன யுகம், எங்கும் பரபரப்பு என்றெல்லாம் கூறி, ஒரு பாடலின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை அதிவேகமாக ஆடுவது வழக்கமாகிவிட்டது. இது நல்லதல்ல. மூச்சிறைக்கும் என்பதோடு, அது இருதயத்துக்கும் ஊறு விளைவிக்கும். (unnatural bio-rhythm).

    எந்த வயதினரும் நாட்டியம் பயிலலாம். மேடையேறுவதே குறிக்கோளாக இல்லாதவரை, நாட்டியத்தால் ஒருவர் பயனடைவது உறுதி. அப்படி மேடையேற வாய்ப்பு இருக்கிறவர்களும், தம் சுயமதிப்பையே பெரிதாக எண்ணாமல், நாட்டியத்துக்கு முக்கியத்துவம் அளித்தால், பார்ப்பவர்களையும் அந்த அமைதியும், ஆனந்தமும் சென்றடையும்.

    பி. கு. அக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் (பஞ்சாபி) பெண்ணும், அவள் மகளும் என் பெண்ணின் இலவச நாட்டிய வகுப்பில் சேர்ந்து, பெரிதும் பலன் பெற்றிருக்கிறார்கள். சிறுமி கலகலப்பாக ஆகிவிட்டாள். தமிழில் கூடவே பாடுகிறாள்! 35-வயதான மாது மிகுந்த தயக்கத்துடன் சேர்ந்தாள். இப்பவும் ஒரே negative. ரொம்ப கஷ்டப்பட்டிருப்பதால், சுயபச்சாதாபம், பயம். வயதில் சிறியவர்களை மாற்றுவது எளிது.

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் … (36)

    நிர்மலா ராகவன்

    வதையைத் தடுக்க சில வழிகள்

    உனையறிந்தால்1

    கேள்வி: ஒருவரை அவருக்கு அச்சமூட்டும், அல்லது பிடிக்காத விதத்தில் நடத்துபவர்கள் எதில் சேர்த்தி?

    விளக்கம்: பிறரை வதைப்பவர்கள் சிறு வயதில் வதைக்கு ஆளானவர்களாக இருப்பார்கள். வளர்ந்தபின்னர், தம்மை எதிர்க்க உடலிலோ, மனத்திலோ சக்தி இல்லாதவர்கள்மேல் ஆதிக்கம் செலுத்துவதால், தமது சக்தி பெருகிவிட்டதாக நினைப்பார்கள்.

    சரி எது, தவறு எது என்று தெரியாத பிராயத்தில், குழந்தைகளுக்கு. எது ஒன்றையும் தமக்குத் தோன்றிய முறையில் செய்து பார்க்க சுதந்திர உணர்வு எழும். `இது குழந்தைகளின் இயல்பு!’ என்று புரிந்து விடமாட்டார்கள் சிலர். அவர்களை வன்முறையால் தண்டித்து, சிறுமைப்படுத்துவார்கள், அல்லது `சாமி கண்ணைக் குத்துவார்!’ என்று பயமுறுத்துவார்கள்.

    `குழந்தைகள் தப்பே செய்யாமலிருக்கத்தான் அப்படிச் செய்கிறோம்!’ என்று இவர்கள் தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஓயாது பயமுறுத்தலுடன் வளர்க்கப்படும் குழந்தை இயற்கையாக எழும் உணர்ச்சிகளையும், ஆசைகளையும் எதிர்நோக்கும்போது அச்சமும், `பெற்றோர் சொல்வதை எல்லாம் கேட்டு நடந்தோமே, ஏன் எதிலும் வெற்றி பெற முடியவில்லை?’ என்ற குழப்பமும் அடைகிறான்.

    உடல் வதை, பாலியல் வதை, உணர்ச்சிபூர்வமான வதை என்று பலவிதமான வதைகள் இருக்கின்றன.

    சில ஆண்டுகளுக்குமுன், கோலாலம்பூர் பெரிய ஆஸ்பத்திரியிலும், யூனிவர்சிடி ஆஸ்பத்திரியிலும் ஏதாவதொரு வதைக்கு உள்ளாகி சேர்க்கப்பட்ட சிறுவர்களின் அடிப்படையில், ஓராண்டில் பெரும்பாலும் தந்தைமார்கள் (30), அடுத்து குழந்தையைப் பார்த்துக் கொள்பவர்கள் (22), தாய்மார்கள் (14), தாயின் காதலன் (7) ஆகியோர் உடல் ரீதியாக (ஆயுதங்களால் அடிப்பது, சிகரெட்டால் சுடுவது) போன்ற உடல் வதைகளைச் செய்பவர்கள் என்ற தெரிய வந்தது.

    குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைகூடக் கவனிக்காது நடக்கும் பெற்றோர் குழந்தைகளை உணர்ச்சிபூர்வமாக வதைக்கிறார்கள். இன்னும் பிறர் தாம் செய்வது வதை என்றே புரியாது நடக்கிறார்கள்.

    என்னிடம் ஒருவர் கேட்டார்: `என் மகளை என் விருப்பப்படி நடத்த எனக்கு உரிமை கிடையாதா? அவளுக்கு வேண்டியதை எல்லாம் நான்தானே கொடுக்கிறேன்!’

    பெற்ற மகளையே பாலியல் வதைக்கு உள்ளாக்கிய தந்தை ஒருவரும் இதே விவாதத்தைத்தான் எழுப்பினார் என்று என் நெருங்கிய தோழி (சமூக நல இலாகாவில் உயர்பதவி வகித்தவள்) என்னிடம் கோபமும், ஆச்சரியமும் கலந்த தொனியில் தெரிவித்திருக்கிறாள்.

    தாம் பெற்ற குழந்தைகளுக்குத் தேவையானதைச் செய்ய வேண்டியது ஒரு பெற்றோரின் கடமை. அதற்குப் பிரதிபலனாக தாம் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது விதண்டாவாதம்.

    தனது மூன்று வயதுக் குழந்தையை இரும்புச் சங்கிலியால் — பலரும் பார்க்க, வீட்டு வளாகத்தில் — அடித்த என் எதிர்வீட்டுக்காரி, `உன்னிடம்தான் தப்பு இருக்கிறது. அதற்கு நான் தண்டனை கொடுத்தே ஆகவேண்டும். எல்லாம் உன் நன்மைக்காகத்தான்!’ என்று ஒவ்வொரு முறை அடித்த பின்னரும் தான் மகளிடம் சொல்வதாக என்னிடம் பெருமையாகச் சொன்னாள்.

    எனக்கு வாயடைத்துப் போயிற்று. அந்தக் குழந்தை தன் வயதொத்த பிற குழந்தைகளை அடிக்கும்.

    மகள் செய்த சிறு விஷமத்தைக்கூட (தானே கத்திரிக்கோலால் முடி வெட்டிக்கொண்டதை) பிறரிடம் கூறிச் சிரிப்பாள் அத்தாய். சிறுமி அவமானப்பட்டு அழுவாள்.

    பெண் குழந்தைக்கு ஒரு முறை முடியை வெட்டிவிட்டு, `அழகாக இருக்கிறாய்! என்று யாராவது பாராட்டினால், தினமும் தானே வெட்டிக் கொள்வாள்! அழகாக இருக்க வேண்டாமா! கத்தரிக்கோலை ஒளித்து வைப்பதுதான் ஒரே வழி. ஐந்து வயதானால், சற்று விவரம் புரியும்.

    நம் குழந்தைகள் செய்த `குற்றங்களை’ மிகைப்படுத்தி, பிறருடன் பகிர்ந்துகொள்வது சொல்பவர்களுக்கு வேண்டுமானால் வேடிக்கையாகப் படலாம். ஆனால், இம்முறையால் தன்னம்பிக்கை குன்றி வளரும் குழந்தைகள், தம்மையும் அறியாமல், வதை செய்யும் ஒருவரையே காதலனாகவோ, கணவனாகவோ வரிக்கிறார்கள். காதலன் தன்னைப் புகழ்வதால், மதிமயங்கி, அவனுடனேயே இருக்கிறார்கள், வதையைப்பற்றி எவரிடமும் கூறாது.

    முதல் முறை அடித்து, உதைத்ததும், பெண்கள் பயந்து விலகுகிறார்கள். ஆனால் இவர்கள் விடுவதில்லை. `தயவு செய்து என்னை விட்டுப் போய்விடாதே! நீதான் என் உயிர்! என்னை மன்னிப்பாயா?’ என்று கடிதம் எழுதுவார்களாம். இதையே தினசரியில் விளம்பரமாகக் கொடுத்தவனும் உண்டு!

    திரும்பத் திரும்ப அவர்கள் கெஞ்சும்போது, மனமிரங்கி, உறவைப் புதுப்பித்துக்கொள்ள நம்பிக்கையுடன் வருவார்கள். அதன்பின், வதை அதிகரிக்கும். பெண்களுடைய பலமும் குன்றிக்கொண்டே வரும். தப்பு தன்மேல்தான் என்று எல்லாவற்றையும் பொறுத்துப் போவார்கள்.

    தினசரியில் கடிதம் எழுதினவன், ஐந்தே வாரங்களுக்குப்பின், காதலியை அடித்தே கொன்றானாம். இந்தச் சம்பவம் நடந்தது தென் அமெரிக்காவில், பெரு என்ற நாட்டில். உலகிலேயே பெண்கள் அதிகமாக கொடும் வதைபடும் நாடு (61%) இது.

    குடும்பத்தில் நடப்பது நான்கு சுவற்றுக்குள்ளேயே இருக்கவேண்டும் என்பது காலத்துக்கு ஒவ்வாதது. இதனால் குற்றம் புரிபவர்களின் துணிச்சல்தான் அதிகரிக்கிறது.

    சில ஆண்கள் `பெண்’ என்றாலே இளக்காரம் என்றெண்ணி, முரட்டுத்தனமாக வளர்கிறார்கள்.

    `என் மேல் சாமி வந்துவிட்டது,’ `குடித்திருந்தேன்,’ என்பதெல்லாம் பொய்ச்சாக்கு. தாம் செய்வது பிறருக்கு என்ன துன்பம் விளைவிக்கும் என்பது தெரிந்தே செய்பவர்கள் இவர்கள். திருந்தவே மாட்டார்கள். சட்டம் தண்டித்தால்தான் உண்டு.

    ஒரு குழந்தையைப் பிறர் வதைக்காமலிருக்க தாய் செய்ய வேண்டிய கடமைகள் சில உண்டு. குழந்தை ஆணோ, பெண்ணோ, அவர்களது உடலைப் பிறர் எப்படித் தொடலாம் , எப்படித் தொடக்கூடாது என்பதைப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

    நான்கு வயதுக் குழந்தையின் கன்னத்தைத் தடவுவது சரிதான். ஆனால் வயதுக்கு வந்த பெண் உடலுறவைப்பற்றி புரிந்துகொள்ளாமல் இருப்பாளாகில், அவளுக்கு நன்கு பரிச்சயமான ஒரு ஆண் — நண்பன், உறவினர், அண்டை வீட்டுக்காரர் — அப்படித் தொடுவது தவறு என்று புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறாள். தந்தை இல்லாத பெண்ணோ, தாய் அருகில் இல்லாது, அல்லது உடல் நலக் குறைவாக இருந்தாலோ ஒரு பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவது எளிது.

    வதைக்கு உள்ளாகும் சிறுமிகளிடையே திடீரென சில மாற்றங்கள் தென்படும். ஓயாமல் அழுவது, சோம்பி இருப்பது, ஓயாது தொணதொணப்பது அல்லது அதிகாரமாக நடப்பது, மிகுந்த ஆத்திரத்துடன் நடப்பது, காரணமில்லாமல் திருடுவது, சாமான்களை உடைப்பது, அடிக்கடி ஐஸ் கட்டிகளைச் சாப்பிடுவது — இதில் ஏதாவது இருந்தால், வீட்டிலோ, பள்ளியிலோ ஏதாவது ஒரு வகையில் வதைக்கப்படுகிறார்கள் என்று கொள்ளலாம்.

    சில சமயம், அக்குழந்தைகளிடம் நிறையப் பணம் புழங்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பாலியல் வதை செய்துவிட்டு, ஐந்தோ, பத்தோ கொடுத்து, அவர்கள் வாயை அடைக்கிறார்கள். இதுவும் கவனிக்க வேண்டிய சமாசாரம்.

    இம்மாதிரியான குழந்தைகளை ஏதாவது கதை எழுதச்சொன்னாலோ, அல்லது படம் வரையச் சொன்னாலோ, அவர்கள் மனதின் வேதனை வெளிப்படும். வாய்ச்சொல்லாக வர்ணிக்கத் தெரியாதவர்கள் படம் மற்றும் எழுத்து வடிவில் தங்களை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.

    அன்பான குடும்பத்திலிருந்து வரும் குழந்தைகள் வதைப்பட்டாலும், பெற்றோரின் ஆதரவால் நீண்ட காலப் பாதிப்பு இல்லாமல் தப்புகிறார்கள். சில சமயம், உளவியல் நிபுணர்களின் உதவியும் தேவைப்படலாம்.

    பிள்ளைகள் மனக்குழப்பத்துடன் காணப்பட்டால், அவர்களுடைய நல்ல குணங்களைப் பாராட்டுங்கள்.

    `யார்கிட்டேயும் சொல்லக்கூடாது என்று, யாராவது எதையாவது செய்தார்களா?’ என்று அனுதாபத்துடன் விசாரித்து, அவர்கள் மனந்திறந்து பேசும்போது, ஆதரவு கொடுக்க வேண்டும். `பிறருக்குத் தெரிந்தால் என்ன ஆகும்?’ என்று அஞ்சாது, `இதில் உன் தப்பு எதுவுமில்லை!’ என்று பலமுறை அழுத்திக் கூறுங்கள். வதைத்தவர்தான் குற்றவாளி என்று புரிந்து போனால், அவர்களுடைய சோகம், குற்ற உணர்வு, அவமானம் எல்லாவற்றிலிருந்தும் நிரந்தர விடுதலை கிட்டும்.

    Share
  • உன்னையறிந்தால் ………. (35)

    நிர்மலா ராகவன்

    குடும்பத்துள் ஏன் போட்டி?

    உனையறிந்தால்

    கேள்வி: `நீ அப்பா பிள்ளையா, அம்மா பிள்ளையா?’ என்று யார் கேட்டாலும், என் இரண்டு வயது மகள், `அப்பா பிள்ளை!’ என்று பளிச்சென்று சொல்கிறாள். அப்படியானால், அம்மா முக்கியமில்லையா?

    விளக்கம்: அப்பாவுக்கும், அம்மாவுக்கும் குழந்தையின் அன்பில் போட்டியா, இப்படி ஒரு கேள்வி எழ! இருவருடைய பராமரிப்பு, அன்பு, அறிவுரை — இவை எல்லாமே குழந்தைகளுக்கு அவசியம்தானே!

    சிறு வயதிலேயே குழந்தை புரிந்து கொள்கிறது, அப்பா தூக்கிக் கொண்டிருந்தால், `அப்பா பிள்ளை,’ என்றும், அம்மா வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தால், `அம்மா பிள்ளை,’ என்றும் சொல்ல வேண்டும் என்று. (அப்போதுதானே தன்னையும் வெளியே அழைத்துச் செல்வார்கள்!)

    அம்மா வேலையாக இருக்கும்போது விஷமம் செய்தால், திட்டுகிறாள். அதனால், அப்பாவின் பக்கம் சாய்கிறது. தானே இன்னும் இரண்டு வயது போனால், அம்மாவைப்போல் தானும் ஒரு பெண்தான் என்று புரிய, அவளைப்போல் நடக்க முயலும். விடுங்கள். குழந்தைகள் செய்வது, சொல்வது எல்லாவற்றையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் சுயமாகவா சிந்திக்கிறார்கள்!

    சிறு வயதில், உடன்பிறந்தாருடன் போட்டி போடுவது பிறவிக்குணம். அது வேறு விஷயம். ஆனால், போட்டி மனப்பான்மை இருந்தால்தான் வாழ்வில் முன்னேற முடியும் என்ற எண்ணத்துடன், தம்மையுமறியாது, சிறு வயதிலிருந்தே அக்குணத்தை வளர்க்க முற்படுகிறார்கள் பலரும்.

    `தம்பி பாத்தியா, எவ்வளவு சமர்த்தா சாப்பிடறான்! இத்தனைக்கும் ஒன்னைவிடச் சின்னவன்!’ என்று நான்கு வயதான பையனிடம் சொல்லிப் பாருங்கள்.

    அவனால் தன் போக்கை மாற்றிக்கொள்ள முடியாது. பதிலுக்கு, தம்பியின் முதுகில் ஒன்று வைக்கிறான், `நீ ஏன் சமத்தா இருக்கே? என்னை மாதிரி இரேன்!’ என்று!

    போட்டி மனப்பான்மையால் விளையும் தீமை — பொறாமை. எல்லாக் குழந்தைகளையும் சமமாகப் பாவிக்காது, பாரபட்சத்துடன் நடத்துவதால் வரும் வினை இது.

    தான் எப்படியாவது எல்லாரையும்விட, எப்போதும், உயர்த்தியாகவே இருக்க வேண்டும் என்ற வெறியாலும் போட்டி வருகிறது.

    இதுவே பழக்கமாகப் போய்விட, பெரியவர்களான பின்பும், பார்ப்பவர்களிடத்தில் எல்லாம் பொறாமை கொண்டு, அவர்களை வார்த்தைகளால் தாக்குவதிலேயே குறியாக இருப்பார்கள் இப்படிப்பட்டவர்கள். இவர்களுக்குத் தங்களுடைய வெற்றிகளால் திருப்தி அடைந்துவிட முடிவதில்லை. பிறரைத் தாழ்த்தினால்தான் சிறுபிள்ளைத்தனமான மகிழ்ச்சி.

    ஒரு குடும்பத் தலைவன் இப்படி போட்டி மனப்பான்மையோடு வளர்ந்திருந்தால், தன் மனைவி, குழந்தைகளுடன் எப்போதும் போட்டி. சிலர் அவனது குணம் புரிந்து விட்டுக்கொடுக்கலாம். அனேகமாக, குடும்பத்தில் பிளவுதான் வரும்.

    எனக்குத் தெரிந்த ஒருவர் அரசாங்கத்தில் குறிப்பிடத்தக்க உத்தியோகத்தில் இருந்தார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் மனைவியை, `முட்டாள்’ என்று பழிப்பார். அவள் பட்டதாரி. முதல் வகுப்பில் தேறியவள். ஆனால், அவரைப்போன்று மூன்று பட்டங்கள் பெற்றிருக்கவில்லை. தான் அவரைவிடத் தாழ்ந்தவள்தான் என்று அவர் எவ்வளவு மட்டம் தட்டியபோதும் பொறுத்துப்போனாள். இம்மாதிரியானவர்களின் தாம்பத்திய உறவு எவ்வளவு லட்சணமாக இருக்கும்!

    இன்னொரு குடும்பத்தில் மனைவி ஏதோ சிறப்புப் பெற்றிருக்கிறாள். `இவன் நம்மைவிட மேலானவன் என்று நினைத்துவிடப் போகிறானே!’ என்று கணவனின் நண்பர்கள் அச்சம் கொண்டு, காரியத்தில் இறங்குவர்:

    `இனிமேல், நீதான் அவள் பெயரை உன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ள வேண்டும்!’

    `எப்படித்தான் இப்படி ஒரு மனைவியை பொறுத்துப் போகிறாயோ! இப்படியே விட்டால், உன்னை மதிக்க மாட்டாள், பார்!’
    `நம் மனைவியைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்ள முடியவில்லையே!’ என்ற பொறாமையால் அப்படிப் பேசுகிறார்கள் என்று அவன் புரிந்துகொண்டால் போயிற்று. இல்லையேல், தாழ்வு மனப்பான்மையுடன் மனைவியை எதிர்த்துக்கொண்டே இருப்பான்.

    கணவனது பக்கபலம் இல்லாது, அவனுடைய எதிர்ப்பையும், ஏளனத்தையும் தாங்க வேண்டியிருந்தால், ஒரு பெண் ஆக்ககரமாக ஏதாவது செய்யவே துணியாது, யோசிக்கும் நிலை வந்துவிடக்கூடும். பல பெண்கள், `கல்யாணத்துக்குமுன் நிறைய பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது நேரமில்லை,’ என்று சொன்னாலும், உண்மைக் காரணம் அதுவாக இருக்காது. உள்ளுக்குள் புழுங்குவாள்.

    ஆக, கணவன் தான் மனைவியைவிட உயர்வு, அல்லது தாழ்வு என்று நினைப்பதால் குடும்பத்தில் கண்ணுக்குப் புலனாகாத விரிசல்தான் உண்டாகும்.

    பேரும், புகழும் கொண்ட ஒருவனிடம், `உங்கள் மனைவியின் ஊக்குவிப்பால்தான் நீங்கள் முன்னுக்கு வந்தீர்களா?’ என்று யாரும் கேட்பதில்லை. ஏனெனில், அவன் ஆண். அவனுடைய திறமை, உழைப்பு போன்றவை இயல்பானது என்று கருதப்படுகிறது.

    என்னை ஒரு வானொலி பேட்டியின்போது, `உங்கள் கணவரின் ஒத்துழைப்பால்தான் நீங்கள் முன்னுக்கு வந்தீர்களா?’ என்று கேட்டபோது, `நான் இதற்குப் பதில் சொல்ல மாட்டேன். எந்த ஆணையாவது நீங்கள் இப்படிக் கேட்டிருக்கிறீர்களா?’ என்று திருப்பிக் கேட்டேன்.

    `யாருமே ஊக்குவிக்காம நீங்க இந்த அளவுக்கு மேலே வந்தீங்களா?’ என்று இரைந்தார் பேட்டி எடுத்தவர். (ஒரு பெண்ணின் வெற்றியைக் கண்டு அச்சம் அடைகிறவரோ? )

    `உங்கள் கேள்வியைச் சற்று மாற்றி,` யார் உங்களை ஊக்குவித்தது?’ என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்,’ என்றேன்.

    பிறர் மகிழ்ச்சியடைவார், பாராட்டுவார் என்று ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்கினால், தொடர்ந்து அதைச் செய்யும் ஆர்வம் குன்றிவிடும். நம் திருப்திக்காக, மனநிறைவுக்காகச் செய்யும்போதுதான் முழுப்பலன் கிடைக்கிறது.

    `என் மனைவி வாழ்வில் உயர்ந்தால், அது எனக்கும் பெருமைதானே! இதில் என்ன போட்டி!’ என்று ஒருவர் எண்ணி நடந்தால், அக்குடும்பத்தில் பரஸ்பர அன்பும், மரியாதையும் நிலவும். அவர்களது குழந்தைகள் பெற்றோரைவிட இன்னும் மேலான நிலைக்குப் போவார்கள். இவர்களுக்கு, `அம்மாவா, அப்பாவா?’ என்ற பாகுபாடு, அதனால் விளையும் குழப்பங்கள் இராது.

    மனித உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் அதற்கே உரிய பயன்பாடு உண்டு.
    கண் முக்கியமா, கால் முக்கியமா?
    எது உயர்வு, எது மட்டம்?

    இதேபோல், தாய், தந்தை, மகன், மகள் எல்லாரும் குடும்பத்தின் வெவ்வேறு அங்கங்கள். அனைவரும் இணைந்து செயல்பட்டால், ஒவ்வொருவரின் தனித்தன்மையும், பலமும் மற்றவருடையதுடன் இணைந்து, மேலும் வலுப்படும்.

    சில குடும்பங்களில் எல்லா உறுப்பினர்களுமே பல்வேறு துறைகளில் சிறப்புப் பெற்று விளங்குவதன் ரகசியம்: போட்டியின்மை, ஒத்துழைப்பு.

    தொடருவோம்

    Share
  • ஆத்மநாதம்

     — நிர்மலா ராகவன்.

    “பின்னிட்டீங்க!”

    “ஒங்களாலேயே இன்னொரு தடவை இவ்வளவு அருமையா பாட முடியுமாங்கறது சந்தேகம்தான்!”  மேடையைவிட்டு இறங்கிய காமவர்த்தனியின் கையை இழுக்காத குறையாகப்  பிடித்துக் குலுக்கினார்கள் பலரும். அந்த ரசிகர்களின் முகத்திலிருந்தபரவசம் அவளையும் தொற்றிக்கொண்டது.

    “போதும். போதை தலைக்கேறிடப்போகுது”. யாரும் கவனிக்காத நிலையில் பக்கத்தில் நின்றிருந்த   கணவன் அடிக்குரலில் சீறினான். “வீடுன்னு ஒண்ணு இருக்கிறது நெனப்பிருக்கா, இல்லியா?”

    அவள் தடுமாறிப்போனாள். அவன் பேசியது யார் காதிலாவது விழுந்திருக்கப்போகிறதே என்ற பதைப்பு உண்டாயிற்று. அங்கிருந்து எங்காவது ஓடிவிட வேண்டும்போல உத்வேகம் எழ, “பாத்ரூம் எங்க இருக்கு?” என்று கேட்டு வைத்தாள்.

    உள்ளே இருட்டாக இருந்தது.

    “இதோ ஸ்விட்ச்!” என்றது ஒரு குரல். ஆண் குரல்.

    பகீரென்றது அப்பாடகிக்கு. “தாங்க்ஸ்” என்றபடி கையைச் சுவற்றின் மேல் நீட்ட, அவளுடைய கரத்தைப் பற்றியது அந்த ஆணின் வலுவான கை. அக்கையை  உதறிவிட்டு வெளியே ஓடினாள்.

    “போகலாங்க,” என்று படபடத்த மனைவியை அதிசயமாகப் பார்த்தான் கணவன். “சீக்கிரமா வந்துட்டே!” என்றான் போகிற வழியில.

    அப்போதுதான் அவள் அந்தத் தவறு செய்தாள்: “அதை ஏன் கேக்கறீங்க!” என்று அப்பாவித்தனமாக ஆரம்பித்து, எவனோ அந்த இருட்டறையில் தன் கையைப் பிடித்த பயங்கர அனுபவத்தைப் படபடப்புடன் விவரித்தாள். தனது கசப்பான அனுபவத்தை அவன்எப்படி எதிர்கொள்வான் என்று அவள் யோசிக்கவில்லை.  ஆனால், கண்டிப்பாக பழியை அவள்மேலேயே திருப்புவான் என்றுமட்டும் அவள் நினைத்தும் பார்க்கவில்லை.

    “அவன்மேல என்னடி தப்பு? நாலு பேர் பாக்கணும்னுதானே இப்படிப் பளபளன்னு டிரெஸ் செய்துக்கிட்டு, மேடை ஏறிப் பாடறீங்க ஒன்மாதிரி பொம்பளைங்க எல்லாம்!”  கணவனது ஒவ்வொரு வார்த்தையிலும் வன்மம் தொக்கி நின்றது. இந்தஅயோக்கியன்களின் பேச்சில் மயங்கி, எவனையாவது இழுத்துக்கொண்டு ஓடிவிட்டால் என்னாவது என்ற இனம்புரியாத அச்சம் அவனை அப்படிப் பேசவைத்தது. அவனுடைய தங்கை இப்படித்தானே கண்டவனோடு ஓடிப்போய், குடும்பத்துக்கு மாறாதஅவமானத்தை உண்டாக்கி இருந்தாள்! அது இந்த ஜன்மத்தில் மறக்கக்கூடியதா!

    இவளை இன்றோடு அடக்கி வைத்துவிட வேண்டும் என்று உறுதி செய்துகொண்டவனைப்போல், “நீ ஆசைப்பட்ட மாதிரியே, அதான் பத்து ஆம்பளைங்க பல்லை இளிச்சுக்கிட்டு ஒன் பின்னாலேயே வந்தாங்களே! பின்னே எதுக்கு என் முன்னாலபயந்தவமாதிரி நடிக்கிறே?” என்று தாக்கினான். தொடர்ந்து,  “ஆரம்பத்தில இப்படித்தான் கையைப் பிடிப்பான், அப்புறம், புடவைத் தலைப்பைப் பிடிச்சு இழுத்து.. !” என்று அடுக்கிக்கொண்டே போனான்.

    அவளுக்குப் பயம் வந்தது — தன்மேலேயே.

    குழப்பம் ஏற்பட்டது — கணவனது போக்கால்.

    ஏன் இவர் அப்பாமாதிரி இல்லை?

    அவளுடைய தந்தைக்குப் பாட்டுதான் உயிர். முப்பது மைல் சுற்றுவட்டாரத்தில் எங்கு சங்கீதக் கச்சேரி நடந்தாலும் தப்பாமல் போய்க் கேட்டு, ரசித்துவிட்டு வருவார். அருகிலிருக்கும் இடங்களுக்கு நான்கு வயதுக் குழந்தையாக இருந்த மகளையும்தோள்மீது படுக்கவைத்து ‘ஆட்டுக்குட்டி’ தூக்கிப்போவார்.

    அதனால்தானே, “நானும் பாட்டு கத்துக்கறேம்பா!” என்று அவள் கொஞ்சலாகக் கேட்டபோது, அவளை இசையில் ஈடுபடுத்தினார், “இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப்போற பொண்ணுக்கு எதுக்கு பாட்டும், கூத்தும்?” என்று அம்மா ஆட்சேபித்ததையும்பொருட்படுத்தாது!

    அப்போது குழந்தைத்தனமாக அம்மாமேல் ஆத்திரப்பட்டோமே, தன் ஆசைக்கு முட்டுக்கட்டை போடப்பார்க்கிறார்களே என்று!

    இவளது குற்றச்சாட்டைக் கவனமாகக் கேட்ட அம்மா,  “இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்!” என்று நொடித்தாள். “என்னதான் இருந்தாலும், தான் தொட்டுத் தாலிகட்டின பொண்டாட்டியை நாலு ஆம்பளைங்க தொட்டா, சூடு சொரணை இருக்கற எவன்சும்மா இருப்பான்?” என்று மாப்பிள்ளைக்கு வக்காலத்து வாங்கினாள்.

    ஏதோ கீழ்த்தரமான இச்சையுடன் தொட்டுப் பார்க்கவா எல்லாரும் கைகுலுக்கினார்கள்? அவளால் அதை ஏற்க முடியவில்லை. ஆனால், யாரும் அறியாது, அவள் கரத்தைப் பற்ற இருளில் ஒளிந்திருக்கவில்லை ஒரு கயவன்? குழப்பம் அதிகரித்தது.

    அப்பாவாவது தன் பக்கம் பேசுவார் என்ற நம்பிக்கையுடன், பெண் அவர்  முகத்தைப் பார்த்தாள். அவரோ,  தான் ஏதோ தவறு செய்துவிட்ட பாவனையில் குனிந்த தலையை நிமிர்த்தாது அமர்ந்திருந்தார்.

    வெகுநேரம் அங்கு கனத்த  மௌனம் நிலவியது.

    சாப்பிட ஆரம்பிக்கையில், ஒரு கவளம் சோற்றைக் கையில் எடுத்தவர், “இப்படியெல்லாம் கஷ்டப்படறதுக்கு, பாடாமலேயே இருக்கலாம்,” என்றார் ஆழ்ந்த வருத்தத்துடன்.

    “ஒனக்குப் பாட்டே கத்துக் குடுத்திருக்க வேண்டாம்!” என்று ஒத்துப் பாடினாள் அம்மா.

    பெற்றோர் இருவரும் ஒருசேரக் கூறியதை அப்படியே ஏற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு.

    அப்போது அவளுக்குப் புரியவில்லை, இசை அவளுடைய உயிர்மூச்சிலேயே கலந்திருந்தது என்பது.

    பாட்டு கற்றுக்கொள்ள ஆரம்பித்து இரண்டு, மூன்று வருடங்களில் கீர்த்தனை பயில ஆரம்பித்தபோது, “உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்மா!” என்று புல்லரித்துப்போய் ஆசி கூறினார் அவளுடைய ஆசிரியர்.

    அவர் சொற்படி,  தினமும் விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து, முந்தைய நாளிரவு தாமிரக் குவளையில் பிடித்து வைத்திருந்த நீரைக் குடித்து குரல் தெளிவாக,  ஸ-ரி-க-ம-ப-த-நி-ஸ என்று சரளி வரிசையில் தொடங்கி, ஜண்டை வரிசை, அலங்காரம்முதலான ஆரம்பப் பாடங்களில் இருபது நிமிடங்களுக்குக் குறையாமல் அகார சாதகம் பண்ணிவிட்டு, ஆதி தாளம் அல்லது அட தாளத்தில் அமைந்த ஏதாவது ஒரு வர்ணத்தை மூன்று காலங்களில் பாடி குரல் வளத்தைப் பெருக்கிக்கொள்ள என்னபாடுபட்டிருப்பாள்!

    அந்த நிசப்தமான வேளையில், தான் மட்டும் விழித்துக்கொண்டு அதிசயமாக ஏதேதோ செய்வது பயமாக இருக்க, ஒவ்வொரு மூச்சு எடுத்து விடும்போதும், தன்னெதிரில் உள்ள பிள்ளையாருக்கு வாசமிகுந்த மல்லிகை மலரொன்றினைச் சாற்றுவதுபோல்கற்பனை செய்துகொள்ள, அதுவே தியானமாகி, மனத்திற்குப் பெரும் இதத்தைக் கொடுக்கவில்லை?

    கச்சேரி இருக்கும் நாட்களில் வேறு விதமான கட்டுப்பாடு! இரண்டு நாட்களுக்கு முன்னரே மௌன விரதம்தான், பாடும்போது எங்காவது தொண்டை கரகரப்பாக இருந்துவிடப் போகிறதே என்று. எண்ணையில் பொரித்த எதையும் சாப்பிட மாட்டாள். சுடுநீரில்ஒரு சொட்டு நெய்யைக் கலந்து அடிக்கடி குடிப்பாள், குரல் பிசிறில்லாமல், இனிமையாக இருக்க வேண்டுமென்று. தினமும் இரவில் சுண்டக் காய்ச்சிய பால் — ஒரு ஸ்பூன் தேன் கலந்து.

    “கச்சேரிக்கு போறதுக்கு முன்னால, வயிறு நிரம்ப சாப்பிடாதே. நான் ஒரு தடவை அப்படிப்போய், மூச்சுப்பிடிச்சுப் பாட முடியாம  திணறிட்டேன். அதுவே, வயிறு காலியா இருந்தாலும் கஷ்டம்தான்! குரலே எழும்பாது! கருமிளகு, ஜீரகம், பனங்கல்கண்டு –இதையெல்லாம் பொடிச்சுப்போட்டு, ரெண்டு லோட்டா ஜலத்தைக் காய்ச்சி, ஃபிளாஸ்கிலே மேடைக்கு எடுத்துண்டு போக மறந்துடாதே!”

    குருவின் பற்பல அறிவுரைகளையும்  தெய்வ வாக்காக ஏற்று, அப்படியே கடைப்பிடித்துதான் இவ்வளவு தூரம் முன்னுக்கு வந்திருக்கிறாள். அதுவே வாழ்க்கை முறையாகிவிட்டிருந்தது. கணவருக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காகஎல்லாவற்றையும் தொலைத்துவிட்டு நிற்பது பெரிய வேதனையாக இருந்தது.

    ‘வெளியில்தானே பாடக்கூடாது? சாமிக்கு முன்னால நாலு பாட்டு பாடினா என்ன!’ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு, ஒரு நாள் சந்தியா காலத்தில், குத்துவிளக்கு ஏற்றிவிட்டுப் பாடத் தொடங்கினாள். போதிய பயிற்சி இல்லாததாலோ, மனம் ஒரு நிலைப்படாததாலோ, குரல் ஒத்துழைக்க மறுத்தது. ‘பாடப் பாட ராகம், மூட மூட ரோகம்!’ என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்! துக்கமாக இருந்தது.

    இவள் குரல் கேட்டதுமே பூஜை அறைக்குள் எட்டிப் பார்த்த கணவன் கனகோபத்துடன், “ஆரம்பிச்சுட்டியா?” என்று இரைந்தபடி   வெளிநடப்பு செய்தபோது, பயம் அதிகரித்தது. அவன் வீடு திரும்பாமல், அப்படியே எங்காவது போய்விட்டால்?

    சுருதிப்பெட்டியை ‘கண்டா முண்டா’ சாமான்களுடன், ஸ்டோர் அறையின் ஒரு மூலையில் கொண்டு வைத்தாள். அடிக்கடி கண்ணில் பட்டால்தானே துயரம்!

    சொல்லி வைத்தாற்போல், மறுநாள் ஒருவர் அவளைத் தேடி வந்தார்.

    “எங்க சபாவிலே மும்மூர்த்தி விழா நடத்தறோம்மா. நீங்க வந்து தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி — இவங்க பாடின பாட்டை ஒரு  மணி நேரம் பாடணும். ஒங்களுக்கு நல்ல சிட்சை, பாடாந்திரம் எல்லாம் இருக்கு. சின்ன வயசு வேறயா!நல்லா மூச்சுப்பிடிச்சுப் பாடறீங்க. ஒங்க குரல்  இருக்கே– என்னத்தைச் சொல்றது, போங்க! போன ஜன்மத்தில சுவாமிக்குத் தேன் அபிஷேகம் பண்ணி இருப்பீங்க!” அவர் புகழப் புகழ, அவளுக்குப் பயம் வந்தது.

    கச்சேரிக்குமுன் ஒருவர். முடிந்தவுடன் ஐம்பது பேரா!

    ஒரு பெரிய மூச்சை உள்ளுக்கிழுத்துக்கொண்டு, “இப்போ சௌகரியப்படாதுங்க,” என்று அந்த சமாசாரத்துக்கு ஒரு முடிவு கட்டினாள்.

    சௌகரியமோ, இல்லையோ, பாடவேண்டிய அவசியம் வந்தது.

    இசைவழி தான் தெய்வங்களை ஆராதிப்பதைத் தடுத்த கணவர்மீது கோபங்கொண்டே அவர்கள் அவரைத் தன்னிடமிருந்து விலக்கி எடுத்துக்கொண்டுவிட்டார்கள் என்று தோன்றியது அவளுக்கு. அவளுடைய பெயரைக்கூட அல்லவா பழித்தான்!

    “இது என்ன இப்படி ஒரு பேரு வெச்சிருக்காங்க ஒங்க வீட்டிலே? காமவர்த்தனியாம் காமவர்த்தனி!”

    பள்ளிக்கூடத்தில் அவள் படித்தபோது, தேவி, மாலா, மகேஸ் என்று எல்லாப் பெயர்களிலும் மூன்று, நான்குபேர் இருந்தார்கள். ஆனால், இவள் பெயர் மட்டும் யாரும் கேள்விப்படாததாக இருந்தது. இப்போது கணவனும் அதைப்பற்றிக் கேட்கிறார்! உற்சாகமாக, “அது ஒரு ராகத்தோட பேருங்க! பந்துவராளின்னுகூட சொல்வாங்களே!” என்றாள்.

    ‘காமவர்த்தனி ராகம் இருக்கே, இது ஆயிரத்து இருநூறு வருஷங்களுக்கு முன்னேயே இருந்திருக்கு, ‘ராமக்ரிய’ங்கிற பேரில.  தாய் ராகமானதால, ஏழு ஸ்வரங்களும் இதில இருக்கு! கச்சேரி ஆரம்பத்தில பாடினா, கச்சேரி களை கட்டும்’. என்றோ தந்தைதன்னிடம் கூறியதை அட்சரம் பிசகாது கணவரிடம் தெரிவித்தாள். ஆனால் அவளுடைய பெருமையில் பங்குகொள்ளும் மனநிலையில் அவன் இருக்கவில்லை.

    “ஒன்னோட புத்திசாலித்தனத்தை எங்கிட்டயே காட்டறியா! நீ காமத்தில எப்படிங்கறது என் ஒருத்தனுக்கு மட்டும் தெரிஞ்சாப்போதும்,” என்று அவன் விகாரமாகச் சிரித்தபோது அவளுக்கு உடலெல்லாம் பற்றி எரிவது போலிருந்தது.

    பதினைந்து வயதாக இருந்தபோது, “காமம்னா என்ன அர்த்தம்பா?” என்று கேட்டதற்கு, “காமம்னா ஆசை. அது எந்த ஆசையா இருந்தாலும் சரி. ஆனா,  ஆண்-பெண் உடல் கவர்ச்சிக்கு மட்டும்னு பயன்படுத்தி, அதைக் கெட்ட  வார்த்தைமாதிரி ஆக்கிட்டாங்கஇந்தக் கதை,  கிதை எல்லாம் எழுதறவங்க!” என்று சொன்னார்.  குரல் அடித்தொண்டையிலிருந்து வர, அவரது முகம் இறுகி இருந்தது.

    அவளுக்கும் கோபம் வந்தது — தன்னுடைய அழகான பெயரை அசிங்கப்படுத்தியவர்கள்மேல்.

     singer2

    வாழ்க்கையே அலங்கோலமாக ஆகி விட்டபோதும் விதவைக்கோலம் பூணாது, எப்போதும்போல அலங்கரித்துக்கொண்டு, மீண்டும் கச்சேரி செய்யப்போனாள் காமவர்த்தனி.  தன்னை மறந்து பாடும்போது, அந்தந்த பாடல்களின் பொருளான தெய்வங்களேதனக்குள் ஐக்கியமாகிப் பாடுவதுபோல் நிறைவாக இருந்தது. கூடுமானவரை, ‘நான் ஒங்க ரசிகன்’ என்று சொல்லிக்கொண்டு அருகில் வந்து, தொட்டுத் தொட்டுப் பேசியவர்களைத் தவிர்த்தாள்.

    “வணக்கங்க! எனக்கு ஒங்க பாட்டு ரொம்பப் பிடிக்கும். அதுவும் இன்னிக்கு கரஹரப்ரியாவில ‘சக்கனிராஜ’ பாடினீங்களே! ஆகா! ‘ராஜ பாட்டை இருக்கும்போது, குறுக்குச் சந்திலே போவாங்களா?’ — இது பல்லவி. அனுபல்லவியிலே.. ‘பால் இருக்கையில்,யாராவது மதுவை நாடிப் போவாங்களா?’ அப்படின்னு தியாகராஜர் கேக்கறாரு. அற்புதங்க! என்னையே மறந்துட்டேன். விட்டிருந்தா, ரெகார்ட் பண்ணி, தினமும் கேட்டு ரசிச்சிருப்பேன்!”

    வழக்கமான ரசிகர் கும்பலில் அந்த இளைஞன் வித்தியாசமாக இருந்தான். அவள் வயதுதான் இருக்கும் அவனுக்கும்.

    பக்கத்திலிருப்பவரிடம், ‘இது என்ன ராகம்?’ என்று விசாரித்துத் தெரிந்துகொண்டுவிட்டு, ஒரு பாட்டுக்கும், இன்னொன்றுக்கும் இடையே கிடைத்த அவகாசத்தில், ‘காம்போதி என்னமா இருந்திச்சு!’ என்று முன்னாலிருப்பவரிடம் அளக்கும் சிலரின் பிரதிநிதிஇல்லை இவன். விஷயம் புரிந்து பேசுகிறான்.

    அவள் ஒருவித சுவாரசியத்துடன் அவனைப் பார்த்தாள். “பாடுவீங்களா?” என்று விசாரித்தாள்.

    “அதுக்கெல்லாம் குடுத்து வெச்சிருக்கணுங்க. நான் வெறும் பாத்ரூம் பாடகன்தான்”. அவன் உண்மையான வருத்தத்துடன் பேசுவதாகத்தான் தோன்றியது. “ஒங்களைமாதிரி யாராவது  தாளமும், சுருதியும்  இழைய, அர்த்தம் புரிஞ்சு, பாவத்தோட பாடினாரசிப்பேன்!”

    அடுத்தடுத்து அவளுடைய கச்சேரி எங்கு நடந்தாலும், முரளியும் தப்பாமல் வந்து கேட்டு, அக்குவேறு, ஆணிவேறாகப் பிரித்து விமரிசனம் செய்ய ஆரம்பித்தபோது, ‘இப்படி நமக்குப் பிடித்ததை இன்னொருவர் புரிந்துகொண்டு பேசினால், மனசுக்கு எவ்வளவுரம்மியமாக இருக்கிறது!’ என்று எண்ண ஆரம்பித்தாள்.

    ‘நமக்கு வாய்த்தவர் ஏன் இப்படி இல்லாமல் போனார்?’ என்ற ஏக்கம் காலங்கடந்து எழுந்தது.

    ‘எத்தனை நாளைக்கும்மா நீ இப்படி தனியாவே இருப்பே? எங்களுக்கு அப்புறம் ஒனக்குத் துணை வேண்டாமா?’ தந்தை அடிக்கடி அவள் மறுமணம் செய்துகொள்ளவேண்டிய அவசியத்தைப்பற்றி நாசூக்காகக் கேட்டது நினைவில் எழுந்து கிளர்ச்சியைஉண்டுபண்ணியது..

    இந்த முரளியைக் கல்யாணம் செய்துகொண்டால் என்ன? இருவருக்கும் இடையே பாலமாகப் பாட்டு இருக்கும், என்றென்றும்.

    ராகங்களின் அழகையும், பாடல்களின் அர்த்தங்களையும், அவைகளை இயற்றியவர்களின் பக்தியையும்  ஒத்த மனத்தோடு அசைபோடமுடிவது பெரும்பாக்கியம் என்று தோன்றியது. பரவசத்துடன் கண்ணை மூடிக்கொண்டாள். முரளியினுடைய பெண்மைகலந்த முகச்சாயலோ, ஆஜானுபாகுவான தோற்றமோ அதில் பிரதானமாகத் தெரியவில்லை.

    அவளுடைய எண்ணங்கள் அவன் மனத்திலும் எதிரொலித்து இருக்கவேண்டும்.  அடுத்துவந்த சந்திப்பில்,  “எனக்கு ஒங்ககிட்ட பிடிச்சது ஒங்க பாட்டு மட்டும் இல்லீங்க!” என்று அவசர அவசரமாகச் சொல்லிவிட்டு, ‘கோபித்துக்கொண்டுவிட்டாளோ!’ என்றபதைப்புடன் அவள் முகத்தைப் பார்த்தான் முரளி.

    அவள் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டாள்.

    “ஒங்க குரல், சங்கீத ஞானம், அடக்கம், பக்தி எல்லாமே பிடிச்சிருக்கு. ஒங்களைமாதிரி ஒரு பொண்ணுதான் என்னோட மனைவியா வரணும்னு எனக்கு ஆசை!” என்றான்.

    “என்னை மாதிரியா, இல்லே நானேவா?” என்று கேட்டாள் காமவர்த்தனி. பொங்கியெழுந்த உணர்ச்சிகளை அடக்க முயற்சித்ததில், குரல் பிசிறடித்தது.

    அவன் பூரிப்புடன் சிரித்தான். “நீங்க எப்படி எடுத்துக்குவீங்களோன்னுதான் சுத்தி வளைச்சுப் பேசினேன்!”

    “நான் பாடுவேன்கிறது மட்டும்தான் ஒங்களுக்குத் தெரியும். மத்த விஷயமெல்லாம்..!”

    “தேவை இல்லீங்க!” வன்மையாக மறுத்தான் முரளி. “இப்ப ஒங்க குரலைக் கேக்கறதுக்காக நாப்பது, அம்பது மைல் வரேன். ராத்திரி பகலா, எப்போ வேணுமானாலும் அதைக் கேட்டுக்கிட்டே இருக்கலாம்னு ஒரு நிலை வருமானா.., வாழ்க்கையில வேற என்னசுகம் வேணும், சொல்லுங்க!”

    அவளுக்கு அழுகை வந்தது. இவ்வளவு மனம்திறந்து பேசுகிறானே! தனக்குக் கொடுத்து வைக்கவில்லையோ!

    “என்னோட பூவையும், பொட்டையும் பார்த்து நீங்க ஏதோ தப்பா நினைச்சுட்டீங்க.  நான் விதவைன்னு தெரிஞ்சா, நாலுபேரு சுத்திச் சுத்தி வருவாங்கன்னு பயந்து, நான் போடற வேஷம் இது”.

    அவன் திகைப்பிலிருந்து மீளுமுன் அவள் அப்பால் அகன்றாள். கச்சேரியில் சிறப்பாகப் பாடிவிட்டோமென்ற பூரிப்பு இருந்த இடம் தெரியாது மறைய, அவள் மனம் கனத்திருந்தது.

    ஆனால், அடுத்த கச்சேரிக்கும் முரளி வந்தான்.

    அவளைப் பார்த்துச் சிரித்தான்.

    “ஒங்களுக்கு நல்ல துணையா இருப்பேன்னு நம்பறேன்,” என்றான். வாழ்க்கைத்துணையாக ஆனான்.

    அடுத்தடுத்து வந்த கச்சேரிகள் முடிந்ததுமே அவளுடைய இடுப்பைச்சுற்றித் தன் கரத்தை வளைத்துக்கொண்டு, உரிமையாக முரளி நடந்தது எந்த ஆணையும் மிரளவைக்கப் போதுமானதாக இருந்தது.

    அதையும் மீறி, “இன்னிக்கு ஒங்க பாட்டு அற்புதங்க, காமவர்த்தனி அம்மா. ஷண்முகப்ரியாவிலே, “சரவணபவ எனும் திருமந்திரம்தனை”ன்னு பாபநாசம் சிவனோட உருப்படி ஒண்ணு பாடினீங்களே, அப்படியே முருகன் சந்நிதியையே கண்ணு முன்னாலகொண்டு வந்துட்டீங்க!” என்று ஒரு முதியவர் பாராட்டியபோது, அவள் முகமெல்லாம் விகசித்துப்போயிற்று. தான் எதை எண்ணிப் பாடுகிறோமோ, அது கேட்பவரையும் போய் அடைவது என்ன பாக்கியம்!

    ஆனால், வீடு திரும்பியதும், சாப்பிட்டபடியே,  அவள் பாடிய ஒவ்வொரு ராகத்தையும், பாட்டையும் விரிவாக விமர்சித்து, விளையாட்டாக மதிப்பெண்களும் போடும் வழக்கத்தைக் கொண்டிருந்த முரளி அன்று எதுவும் பேசாது,  நேராகப் படுக்கப்போனபோது குழப்பம்தான் எழுந்தது.

    “ஒடம்புக்கு முடியலியா?” நெற்றியில் வைக்கப்பட்ட அவளது கையை முரட்டுத்தனமாக விலக்கினான் கணவன். படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, அவளை முறைத்தான். “நீ இனிமே எந்தக் கச்சேரியும் ஒத்துக்க வேணாம்!”

    யாரோ மென்னியைப் பிடிப்பதுபோல் இருந்தது அவளுக்கு. “ஏங்க? முந்தியெல்லாம் நீங்க..?” என்று குழறினாள்.

    “அது அப்போ. மத்தவங்க ஒன் கிட்ட, கிட்ட வந்து சிரிச்சுப் பேசறது எனக்குப் பிடிக்கல!” மறைந்த கணவனே வேறு உருவத்தில் வந்து மிரட்டியதுபோல் இருந்தது.

    ஒருமுறை இசையைப் பறிகொடுத்துவிட்டு, தனது ஆத்மாவின் நாதத்தைத் தொலைத்து நின்ற வேதனை போதாதா? அந்தக் கொடுமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், பூவையும், பொட்டையும் தொலைத்ததுகூடப் பெரிதாகத் தோன்றவில்லையே!

    காமவர்த்தனி அதிநிதானமாகத் தலையை நிமிர்த்தினாள். அவனுடைய கண்களை உற்றுப் பார்த்தாள்.  “ஒங்களுக்கும், என்னோட இசைக்கும் ஒரு போட்டி வெச்சா, நான் பாட்டைத்தான் தேர்ந்தெடுப்பேன். இனிமே இந்தப் பேச்சு வேணாம்!” தெளிவானகுரலில் அவளுடைய பதில் ஒலித்தது.

    இப்போதெல்லாம் தனியாகவே கச்சேரிகளுக்குப் போய்வருகிறாள் காமவர்த்தனி.

    யாராவது தெரிந்தவர்கள், “அவர் எங்கே, கண்ணிலேயே படறதில்லியே?” என்று  விஷமத்தனமாகவோ, வாய் உபசாரமாகவோ விசாரித்தால், “வீட்டில பிள்ளைங்களைப் பாத்துக்க ஆள் வேண்டாமா!” என்று அசட்டுச் சிரிப்புடன் சமாளிக்கிறாள்.

    தான் நினைத்ததில் உறுதியாக இருந்து சாதித்துவிட்டதில் அவளுக்கு நிறைவு ஏற்படவில்லை. மாறாக, வேதனைதான் எழுகிறது, ஒரு நல்ல ரசிகனை இழந்ததற்காக.

    நன்றி: சிறுகதைகள் டாட் காம்

    Share
  • உன்னையறிந்தால் ….. (34)

    நிர்மலா ராகவன்

    முழுமையான கல்வி

    உனையறிந்தால்
    கேள்வி: பதின்ம வயதினருக்கு இயற்கையாகவே ஆண்-பெண் உறவு, கர்ப்பம், குழந்தைப்பேறு இவைகளைப்பற்றி இயல்பாகவே தெரியவேண்டுமே! தெரியாததுபோல் ஏதாவது கேட்டு, பெரியவர்களை ஆழம்பார்க்கிறார்களா?

    விளக்கம்: சிலருக்குத் தெரிந்திருக்கலாம். நண்பர்களிடமிருந்து அரைகுறையாக அறிவார்கள். ஆனால் அது பெற்றோரோ, ஆசிரியரோ தகுந்த முறையில் சொல்லிக்கொடுப்பதுபோல் ஆகாது.

    விஞ்ஞான பாடத்தை ஒட்டி, தொலைகாட்சியில் கர்ப்பத்தைப்பற்றிய ஒரு வீடியோ காண்பித்தேன் என் மாணவிகளுக்கு. அவர்கள் குழம்பிப்போனார்கள்.

    `கருவின் தலை மேலே இருக்கிறது. ஆனால், பிறக்கும்போது எப்படி தலை கீழே வருகிறது?’ என்று ஒருத்தி கேட்டாள். எனக்கு அவளைவிட ஆச்சரியம்.

    `உனக்குத் தம்பி, தங்கைகள் இருக்கிறார்களா?’ என்று கேட்டேன்.
    `ஆம்,’ என்றாள்.
    `அம்மா வயிற்றில் அவர்கள் இருந்தபோது, நீ தொட்டுப் பார்த்ததில்லை?’

    `அம்மா விடமாட்டார்கள். ஏன் தலை வேறு விதமாக வெளிவருகிறது என்று அவர்களுக்கே தெரியாது!’

    கரு வயிற்றில் உருளும், தாயின் தொப்புளுடன் அதன் தொப்புள் கொடி இணைந்திருக்கிறது, அதன்வழிதான் ஆகாரத்தின் சத்து கருவுக்குள் சென்று அது பெரிதாக வளரச் செய்கிறது என்றெல்லாம் விளக்கினேன்.

    எனக்கு இன்னொரு சந்தேகம் முளைத்தது. மாத விலக்குபற்றிதான். தவறான உணவை உட்கொள்ளுவதால், அல்லது பாவம் செய்ததால் என்று சிலர் நினைத்திருக்க, பிறர் அதைப்பற்றி எதுவும் தெரியாதென்றார்கள்.

    ஆண்களுடன் கைகுலுக்கினால் கர்ப்பம் அடைவோமா என்ற சந்தேகம் சிலருக்கு. ரகசியமாகக் கேட்டார்கள். மாணவர்களோ, பெண்களுடன் எப்படிப் பேச ஆரம்பிப்பது என்று கேட்டார்கள்.

    `கூடாது’ என்ற விஷயத்தில்தான் இளைஞர்களின் ஆர்வம் அதிகரிக்கும். உலகில் பாதி பேர் இன்னொரு பாலர் என்றிருக்க, ஒரு பெண் ஆண்களைப் பார்த்தாலே ஓடி ஒளிந்துகொள்ள முடியுமா, என்ன?

    என் வகுப்பறையில் பையன்கள் ஒரு புறமும், பெண்கள் இன்னொரு புறமும் உட்கார்ந்திருந்தார்கள். வகுப்பில் இருப்பவர்களுடன் மட்டும் பேசுவார்கள். `பிறரைப் பார்த்தால், ஹலோ என்று சொல்லுங்கள். மரியாதையாகப் பழகுங்கள். விசில் எல்லாம் அடிக்கக்கூடாது,’ என்றேன். அவரவர் மேசைக்கு ஏதாவது கனமான சாமானைத் தூக்கிப்போக வேண்டியிருந்தபோது, `டீச்சர்! பெண்களுக்கு உதவலாமா?’ என்று அனுமதி வேண்டுவார்கள் சில துணிச்சலான பையன்கள். புன்சிரிப்புடன் அனுமதி கொடுப்பேன்.

    `அனேகமாக எல்லாருக்கும் கல்யாணம் ஆகிறது. இப்போதே பெண்களைப்பற்றிப் பேசி ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்? முன்னுக்கு வருகிற வழியைப் பாருங்கள்!’ வளரும் பருவத்திலிருப்பவர்களுக்கு என் அறிவுரை.

    ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒருவரைப்பற்றி ஒருவர் அறிய இயற்கையான ஆர்வம் இருக்கிறது. அதைச் சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும். பெண்களுடன் பேசுவதே தவறு, வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்று வளர்த்தால், நாற்பது வயதுக்கு மேலாகியும், பெண்களைப் பார்த்தால் விடலைப் பையன் மாதிரிதான் நடந்துகொள்வார்கள்.

    கதை: எனக்குப் பத்து வயதானபோது, எங்கள் வீட்டு மாடியில் சேஷாத்ரி என்று ஒரு பையன். என்னைவிட இரண்டு வயது பெரியவன். என் அண்ணனுடன் அவன் விளையாட வரும்போது, நானும் கலந்துகொள்வேன். (அவர்களுடன் மோதி, எந்த விளையாட்டிலும் நான் ஜெயித்ததில்லை. முதலில் தோற்பது நானாகத்தான் இருக்கும். இதனாலேயே பையன்களுக்கு என்னை விளையாட்டில் சேர்த்துக்கொள்ளப் பிடிக்கும்! `அழுகுண்ணி ஆட்டம்!’ என்று அழுதபடியே நானும் நாள்தவறாது விளையாடுவேன்).

    `இனிமே சேஷாத்ரியோட விளையாடாதே. பாவம், அவனோட அப்பா அடிக்கிறார், பொண்களோட என்ன விளையாட்டுன்னு!’ என்ற என் தாயார் கூறியபோது, எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏன் என்னுடன் விளையாடக் கூடாது?

    நான் வீட்டு வாசலில் நின்றிருந்தால், சேஷாத்ரி தலையைச் சற்று அதிகமாகவே குனிந்துகொண்டு விரைந்துவிடுவான். எனக்கு ரோஷமாக இருக்கும். அவன் பெயரைச் சொல்லிச் சொல்லிக் கூப்பிடுவேன். அவன் தலை இன்னும் அதிகமாகக் குனியும்.

    இப்போது நினைத்துப் பார்க்கிறேன்: விவரமறியாப் பருவத்திலேயே பெண்களைப் பார்ப்பதுகூட இழுக்கு என்பதுபோல் வளர்க்கப்பட்ட ஒருவன் பெண்களுடைய குணாதிசயங்களைப்பற்றி எதுவுமே அறிந்துகொள்ள முடியாதே! மனைவியுடன் நட்புடன் பழக முடியுமா? இதேபோல்தான் பல இல்லங்களில் பெண்களும் வளர்க்கப்படுகிறார்கள் — ஆண் என்றாலே பயந்து ஒதுங்க வேண்டும் என்பதுபோல். இப்படிப்பட்ட இருவர் திருமணத்தால் இணைந்தால், அறியாமையே அச்சத்தையோ, அதிகாரத்தையோ விதைக்கும்.

    பழகத் தெரியாததால்தான், `நான் ஆண்!’ என்று, பெருமிதத்துடன் மனைவியை அடக்கியாள நினைக்கிறார்களோ, பலர்?
    `என் பெண் கூடப்படிக்கும் பையன்களுடன் பழகுகிறாள். நம் காலம் போலில்லை. அவள் என்ன செய்துவிடுவாளோ என்று பயமாக இருக்கிறது!’ என்று ஒரு தாய் என்னிடம் கூற, `நாம் வளர்த்த பெண் தப்பு செய்வாளா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்!’ என்றேன். தாயின் முகம் தெளிந்தது.

    `ஆண்களுடன் எந்த அளவு பழகலாம்?’ என்று ஒரு பெண் அறியாமையுடன் கேட்கும்போது, எல்லையை வகுக்கலாம். தாய் தடுமாறி, தன் சங்கடத்தை மறைக்க கோபத்தை வெளிக்காட்டினால், பெண்ணின் குழப்பம் அதிகரிக்குமே! வெளிப்படையாகப் பேசுவது பூசி மெழுகுவதைக் காட்டிலும் சிறந்தது.

    தொடருவோம்.

    Share
  • உன்னையறிந்தால் ………. (33)

    நிர்மலா ராகவன்

    பொது இடங்களில் குழந்தைகள்

    உனையறிந்தால்121
    கேள்வி: பெற்றோர் வெளியே போகும்போது தானும் வருவேன் என்ற் அடம் பிடிக்கிறான் எங்கள் குழந்தை. ஆனால் பொது இடங்களுக்கு அவனை அழைத்துப் போனால், அடக்கவே முடிவதில்லையே, ஏன்?

    விளக்கம்: நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளால் பெரியவர்களைப்போல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க முடியாது. சில நிமிடங்களுக்குமேல் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துவதும் அவர்களால் இயலாத காரியம். அலுப்பு ஏற்படும்.

    அது என்ன சில நிமிடங்கள்?

    இரண்டு வயதான குழந்தை நான்கிலிருந்து பத்து நிமிடங்கள்வரைதான் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும். அதாவது, அதன் வயதை இரண்டிலிருந்து ஐந்துவரை பெருக்கினால் கிடைக்கும் நேரம். நான்கு வயதான பிள்ளையின் படிப்பில் செலுத்தும் கவனம் அதிக பட்சம் பத்து நிமிடங்கள்தான். பசி, தூக்கம், அதிக வெப்பம் அல்லது குளிர் முதலியவை வேறு அவர்களை அலைக்கழிக்குமே! அதனால்தான் சண்டித்தனம் செய்கிறார்கள். விளையாடுவது போன்ற பிடித்த காரியமாக இருந்தால் நேரம் அவர்களைப் பாதிக்காது.

    சிறு குழந்தைகளை பூங்கா, கோயில் போன்ற இடங்களைத் தவிர வேறு எங்கு அழைத்துப்போனாலும் நமக்குத்தான் தொந்தரவு. உறவினர் வீடுகளுக்கோ, திருமண வைபவங்களுக்கோ அழைத்துப்போனால்கூட, `அம்மா நம்மை மறந்துவிட்டு வேறு யார்கூடவோ பேசுகிறாளே!’ என்று `வழிவார்கள்’. `நேரமாச்சு. வீட்டுக்குப் போகலாம்,’ என்று தொணதொணப்பாரகள்.

    `பிறர் முன்னிலையில் மானம் போகிறது!’ என்று, பற்களைக் கடித்துக்கொண்டு தாய் முறைத்தாலோ, திட்டினாலோ குழந்தையின் அடம் மேலும் அதிகரித்துவிடும்.

    வெளியே அழைத்துப் போவதைத் தவிர்க்க முடியாது என்ற நிலை வந்தால், அங்கு வித்தியாசமாக அமைந்திருப்பவற்றைக் காட்டி விளக்குங்கள். தொங்கும் விளக்கு, பூந்தொட்டியில் பிளாஸ்டிக் செடிகள், மீன் தொட்டி இப்படி அவர்கள் பார்த்திராதது ஏதாவது இருக்குமே! குழந்தைகளின் ஆர்வம் வளர்ந்து அறிவு பெருகுவதுடன், ஒழுக்கப் பிரச்னை எழாது. வயதேற ஏற, புது அனுபவங்களை அச்சமின்றி நாடுவார்கள்.
    நமக்குச் சாதாரணமாகத் தோன்றுபவைகூட குழந்தைகளுக்கு அபூர்வம்தான். நாம் காட்டினால் ஒழிய, தானே ஒரு பொருளைப் பார்த்து, அது ஏன் அங்கே இருக்கிறது என்று அலசும் திறன் அவர்களுக்கு ஏது!

    உதாரணமாக, ஒரு கோயில் அர்ச்சகர் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி மந்திரங்கள் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். `கோயில்ல எத்தனை பேர், பாத்தியா? எல்லாருக்கும் காதில விழணுமே! அதான் அவர் குரல் பெரிசா கேக்க மைக். அதோ!’

    ஒரு முறை சொல்லிக் கொடுப்பதைக்கூட மறக்காமல் நினைவில் பதித்துக்கொண்டு, `மைக் பாரு!’ என்று மறுமுறை உங்களுக்கே காட்டும், பெருமையுடன்! உங்களுக்குத் தெரியாது என்றல்ல, தனக்குத் தெரிந்ததை வெளிக்காட்டிக் கொண்டால், உங்கள் பாராட்டைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்பில்தான்.

    புகழ்ந்து வைங்களேன்! காசா, பணமா!

    கதை: ஒரு கர்ப்பிணி தன் உடல் நிலையைப் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவரிடம் போகுமுன், `இன்னிக்கு டாக்டர்கிட்ட போறோம். ரொம்பப் படுத்தாம, சமர்த்தா இரு!’ என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். பரிசோதனையின்போது அவளுக்குச் சிறிது பயம் ஏற்பட்டாலும், கரு அதனால் பாதிக்கப்படாமல், உருளாமல் ஒத்துழைத்தது!

    அந்தக் குழந்தை ஒன்றரை வயதில் பேச ஆரம்பித்தது. புரியாவிட்டாலும், `அப்படியா? நல்ல வேடிக்கை!’ என்று சிரித்து வைப்பார்கள் குடும்பத்தினர்.

    பிறர் கூறுவதைக் கூர்ந்து கவனித்து, அதற்கேற்ப நாமும் இடையிடையே கொஞ்சம் பேசுவது பரஸ்பர மதிப்பை, அன்பை வளர்க்கும் அல்லவா? அதுபோல், குழந்தை பேசுவதை நாம் கவனிக்கிறோம் என்று காட்டிக்கொண்டால், அதன் தன்னம்பிக்கையும் வளரும்.

    ஆனால், பாலர் பள்ளியிலோ, ஆரம்பப் பள்ளியிலோ ஆசிரியர்கள் இத்தகைய மாணவர்களை `தலைவலி’ என்று கருதுவார்கள். ஏனெனில், இவர்களுக்குச் சராசரி மாணவர்களைவிட நிறைய தெரிந்திருக்கும், அதிக வேகமாகப் புரியும். ஆசிரியர்கள் ஏன் அம்மாவைப்போல் புகழுவதில்லை என்ற குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. புதிதான சூழ்நிலை, வித்தியாசமான மனிதர்கள்! இவை எந்த வயதிலுமே குழப்பம் விளைவிப்பதுதானே!

    அதன் விளைவாக குழந்தை வீட்டிலும் முரண்டு செய்தால், நல்ல விதமாக விசாரித்து, அனுசரணையாக இருத்தல் நலம். நாளடைவில் உலகைப் புரிந்து கொள்வான்.

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் …. (32)

    நிர்மலா ராகவன்

    வீட்டைவிட்டு ஏன்ஓடிப்போகிறார்கள்?

    உனையறிந்தால்12

    கேள்வி: விவரம் புரியாத வயதில் பெண்கள் வீட்டைவிட்டு ஓடிப்போவது ஏன்?

    விளக்கம்: எந்த நாடாக இருந்தால் என்ன, சிறுவர், சிறுமிகளின் மனநிலை ஒத்ததாகத்தானே இருக்கும்!

    ஓர் அறிக்கையின்படி, மலேசியாவில் ஒரு நாளைக்கு பத்திலிருந்து பதினெட்டு வயதானவர்களில் நான்கு பெண்களாவது வீட்டைவிட்டு ஓடிவிடுகிறார்கள். பிடிபட்டவர்கள் புனர்வாழ்வு இல்லங்களில் ஒரு வருடம்வரை வைக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஓர் இடத்திற்கு (பலத்த சிபாரிசுடன்) நான் போயிருந்தேன். சாதாரணமாக வெளிமனிதர்கள், அதிலும் ஆண்கள், இங்கு நுழையவே முடியாது. அவசர புத்தியுடன், அடுத்து என்ன செய்வது என்று புரியாத இளம்பெண்கள்! அவர்களைத் தீய வழிக்கு ஆசைகாட்டி இழுத்துச் செல்ல பிறருக்கு எத்தனை நேரமாகும்!

    பொதுவாகப் பேசப்படுவதுபோல், காதலுக்காக வீட்டைவிட்டு வெளியேறிய பெண்கள் இல்லை இந்த இல்லத்தில் இருப்பவர்கள் என்று அறிய முடிந்தது. என்னுடன் மிகவும் அன்புடன் பழகினார்கள். பிறகுதான் புரிந்தது காரணம்: வீட்டில் இவர்களுக்கு அன்பு கிடைக்கவில்லை என்று ஏங்கியிருக்கிறார்கள்! நான் பல மணி நேரம் அவர்களுடன் உரையாடிவிட்டுக் கிளம்பும்போது, `போகாதீர்கள்,’ என்று என் கையைப் பிடித்துக் கொண்டார்கள்.

    அவர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்ட மனக்குறைகள்:

    `வீட்டில் ஓயாமல் என்னைத் திட்டிக்கொண்டே இருப்பார்கள். (இதுதான் முக்கியக் காரணம்).

    `நான் எங்கும் போகக்கூடாது. எவருடனும் பேசக்கூடாது’ — உணர்ச்சிபூர்வமான வதை.

    `என் பெற்றோருக்கு என்னுடன் பேச நேரமில்லை. வேலைதான் அவர்களுக்கு முக்கியம்!’

    முதலில் கோபத்துடன், `அவளுடைய நன்மைக்காகத்தானே உழைக்கிறோம்? காலம் இருக்கிற இருப்பில், வயதுப்பெண்ணை வெளியில் அனுப்பிவிட்டு, வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்க வேண்டுமா?’ என்றெல்லாம் தம்மேல் குற்றம் வராமல் பார்த்துக்கொள்வார்கள் பெற்றோர். ஆனால், தவறு என்னவோ அவர்கள்மேல்தான்.

    உண்மைக் கதை:

    அவ்விடத்தில் என் பழைய மாணவிகள் இருவர் இருந்ததாக தலைவி கூறினார். அப்பா, அம்மா இருவரின் பெயரையும் இணைத்து, புதிய மாதிரிப் பெயர்களாக இருந்ததால், நான் உடனே இனம் கண்டுகொண்டேன். அடுத்தடுத்த வருடங்கள் என் வகுப்பு மாணவியாக இருந்தவர்கள்.

    பதினான்கு வயதில் ஆண்களைப்போல் கிராப்புத்தலை! வகுப்பில் ஆசிரியையின் கவனம் முழுவதும் தன்னிடமே இருக்க வேண்டும் என்று நினைத்து, ஓயாத எதிர்ப்பு. (`அவளைக் கவனிக்காதீங்க, டீச்சர்,’ என்று பிற மாணவிகள் எனக்குப் புத்தி சொல்லும்வரை நான் அதைப் புரிந்து கொள்ளவேயில்லை).

    பள்ளியில் பொறுக்க முடியாத நடத்தையுடன், அவளைக் கவுன்சிலரிடம் அனுப்பியபோது, நான் முகம் கொடுத்துப் பேசாதது மிகவும் வருத்துகிறது என்றாளாம். என்ன பிரச்னை என்று யாருக்கும் புரியவில்லை.

    `உன் அப்பாவை என்னை வந்து பார்க்கச்சொல்லு!’ என்று நான் மிரட்டியதும், அம்மாவிடம் கெஞ்சி, `அப்பா அடிப்பார். நீங்களே வந்துவிடுங்கள்,’ என்றிருக்கிறாள். அந்த இளம் தாயே இதை என்னிடம் சொன்னாள்.

    சகோதரிகள் இருவரும் பதினைந்து வயதில் வீட்டை விட்டு ஓடி, தெருக்களில் ஐம்பது காசுக்குத் தங்களை விற்றுக் கொண்டிருந்தபோது, காவல் துறையினரிடம் பிடிபட்டிருந்தனர். `பரீட்சை எழுதப்போகிறோம்,’ என்று காவலுடன் சென்றவர்கள், மீண்டும் தப்பியோடிவிட்டனர் என்றெல்லாம் இல்லத்தலைவி விவரித்தபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

    ராணுவத்தில் இருந்த அவர்களுடைய தந்தை எம்மாதிரியான கொடுமைக்கு அவர்களை ஆளாக்கியிருந்தால், இரு பெண்களும் இப்படிச் சீரழிந்து போயிருப்பார்கள் என்று யோசித்தேன். `பாலியல் வதை என்றில்லை. அவர்களால் பொறுக்க முடியாத எதுவாகவாவது இருக்கலாம்,’ என்றார் நான் சந்தேகம் கேட்ட ஒரு உளவியல் நிபுணர்.

    குழந்தைகளுடன் பேசுவது என்பது, `சாப்பிடு,’ `குளி’ என்பதுடன் நின்றுவிடுவதில்லை. எந்த வயதினருக்கும் அவர்களுக்கே உரிய தனிப்பட்ட பிரச்னைகள், கவலைகள் இருக்கும். அவர்களுடன் பேசாவிட்டால், பிரச்னைகளை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?

    மூன்று வயதுக்குட்பட்ட குழந்தை இடியோசை கேட்டு நடுங்கும். `இதில் பயப்பட ஒன்றுமில்லை. சும்மா, பட்டாசு!’ என்று சொல்லிப் பாருங்கள். அடுத்த முறை, `பட்டாஸ்!’ என்று கைதட்டி ஆர்ப்பரிக்கும்.

    `சிறுவர்களுடன் அப்படி என்ன பேசுவது!’ என்று அலுத்து, பல குடும்பங்களில் சிறுவர்கள் அருகில் இருப்பதைப் பொருட்படுத்தாது, வெட்டிப் பேச்சிலும், தமக்குச் சம்பந்தமே இல்லாத பிறரைப்பற்றிய வம்பிலும் பொழுதைக் கழிப்பார்கள். குழந்தைகளுக்கும் அதே குணம்தானே படியும்? வயதுக்கு மீறிய எண்ணங்கள் எழ, நல்லது, கெட்டது புரியாது குழப்பம் அடைகிறார்கள். பெரியவர்கள் பேசும்போது, சிறுவர்களை அங்கிருந்து விலகச் சொல்ல வேண்டும் என்கிற விதி இதற்குத்தான்.

    சிறுவர்களுடன் பேச எவ்வளவு சமாசாரங்கள் இருக்கின்றன! ஓர் அல்ப உதாரணம்: நீங்கள் சிறுவயதில் செய்த அசட்டுத்தனங்களைப் பகிர்ந்துகொள்ளலாமே! அதனால் அவர்களுக்குச் சிரிப்பு வருமே தவிர, உங்களை மட்டமாக எடைபோட மாட்டார்கள். உண்மையே பேசக் கற்பார்கள்.

    `என் பேத்திக்கு மரியாதையே கிடையாது,’ என்று ஒரு மூதாட்டி என்னிடம் குறையாகச் சொன்னார். கோயிலில், ஒரு சிறுமி தானே வந்து என் காலைத் தொட்டு ஆசி பெற்றதைப் பார்த்து வந்த வார்த்தைகள். மரியாதை கற்றுக்கொடுக்கும் வழியா இது!

    உடனே , `உங்கள் பேத்தி நல்ல பெண்தான். அவளிடம் அப்படிச் சொல்லி விடாதீர்கள்,’ என்றேன். பாட்டி தன்னைப்பற்றிப் பிறரிடம் மட்டமாகச் சொல்லி விட்டார்களே என்று அந்த பத்து வயதுச் சிறுமி வருந்துவாள். தான் அப்படித்தானோ என்று அவள் எண்ணம் போகும்.

    சற்றுப் பொறுத்து, அந்தச் சிறுமியின் தாய் விடைபெறும்போது, `பெரிய டீச்சருக்கு நமஸ்காரம் பண்ணு. காலைத் தொட்டு நல்லா பண்ணணும்,’ என்று விரிவாக விளக்க, அவள் அப்படியே செய்தாள்.

    ஞாபகமாக, `இவள் செய்ததை உன் அம்மாவிடம் சொல்!’ என்று அந்தத் தாயிடம் சொன்னேன்.

    தம் குடும்பத்தினரைப்பற்றிப் பிறரிடம் குறையாகச் சொன்னால், தான் அவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டிருக்கிறோம் என்று நினைப்பார்கள் பலர். இதனால் இளையவர்களை உசுப்பி நல்வழிப்படுத்தலாம் என்று நினைப்பது தவறு. வேறு ஒருவருடன் ஒப்பிடப்படும்போது, குழந்தைகள் ரோஷம் அடைந்து, முன்னேறுவது கிடையவே கிடையாது. இன்னும் அதிகமாக ஒடுங்கிப்போவார்களே!

    வேடிக்கைக் கதை ஒன்று;

    `அந்தப் பிள்ளையைப் பாருடா. எவ்வளவு நல்லா படிக்குது!’ என்று தன் தந்தை அடிக்கடி சொன்னதில், முதல் வாக்கியத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, எதிர்வீட்டுப் பெண்ணை பார்க்கப் பார்க்க, காதல் வசப்பட்டாராம். `வேறு சாதி’ என்று தந்தை ஆட்சேபிக்க, `நீங்க சொன்னதைத்தானே செய்தேன்!’ என்ற இவர் மடக்கினாராம்! அவளையே கல்யாணமும் செய்துகொண்டு விட்டதாக ஒரு நண்பர் சொல்லக் கேட்டபோது, அடக்கமுடியாது சிரித்தேன்.

    நாம் ஒவ்வொருவரும் ஒரு தனி ஆத்மா. ஒருவரைப்போல் இன்னொருவர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயலாத காரியம். இது புரியாமல், அடித்தோ, ஓயாது ஏசிப் பேசியோ ஒரு சிறுவனை இன்னொருவனைப்போல மாற்ற நினைப்பது அவனைச் சிறுமை உணர்ச்சிக்குத்தான் ஆளாக்கும்.

    முதல் குழந்தை, இரண்டாவது குழந்தை என்று ஒவ்வொரு எண்ணுக்கும் (ORDINAL NUMBER) பிரத்தியேகமான குணங்கள் உண்டு. பொதுவாகவே, முதல் குழந்தை நிதானமாக, பொறுமையாக இருக்கும். பெற்றோர்கள் பார்த்துப் பார்த்துச் செய்வதில், எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்ற தீவிரம் இருக்காது. பொறுப்புள்ள தலைவனாக இருக்கும் தகுதி கொண்டிருக்கும்.

    இரண்டாவது குழந்தையின்போது, பெற்றோருடைய ஆர்வம் சற்றுக் குறையலாம். அதனால், போட்டி உணர்வு மிகுந்திருக்கும். துணிச்சலாக எதையும் அடித்துப் பிடித்து வாங்கும். அதிகப் பொறுமை இல்லாததால், சண்டைபோட அஞ்சாது. பத்து மாதக் குழந்தையே அக்காளின் முடியைப் பிடித்து இழுக்கும்!

    பிறப்பிலேயே இவ்வளவு வித்தியாசங்கள் கொண்ட குழந்தைகளை `ஒரே மாதிரி இருங்கள். அண்ணா எவ்வளவு சாந்தமாக இருக்கிறான். நீயும் இருக்கிறாயே, பிடாரி!’ என்றோ, `உன்னைவிடச் சின்னவள்! எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறாள்!’ என்றோ ஒப்பிடுவது ஒருவரை வருத்தும்; மற்றவரை கர்வியாக, அல்லது குற்ற உணர்வு கொண்டவராக மாற்றும்.

    தாவர வர்க்கத்தை எடுத்துக் கொள்வோம். மல்லிகைச் செடியில் இலைகளை மட்டும் களைந்தால், செடி மீண்டும் துளிர்த்து, நிறைய மொட்டுக்கள் விடும். இப்படி ரோஜாச் செடியில் செய்து பார்த்திருக்கிறீர்களா? நான் செய்துபார்த்தேன். செடி செத்துவிட்டது. ரோஜாவின் கிளைகளை மட்டும்தான் வெட்ட வேண்டும் என்று புரிந்தது. (இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை: ஒரு சிறு மொட்டைக் கிள்ளி எடுத்துவிட்டால், அந்த இடத்தில் நிறைய மொட்டுக்கள் கட்டும்).

    தாவரங்களிலே இத்தனை வித்தியாசங்கள் இருக்க, உணர்ச்சிகள் நிரம்பிய மனித இனத்தில் மட்டும் வெவ்வேறு குணங்கள் கொண்ட இருவரை ஒரே மாதிரி நடத்துதல் சரியா?

    நம் எதிர்பார்ப்பை ஒட்டியே குழந்தைகள் வளர்கிறார்கள். தகுதிக்குட்பட்ட வேலையை ஒரு சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு, `உன்னால் இது முடியும்!’ என்று ஊக்குவித்துப் பாருங்களேன். உங்கள் நம்பிக்கை பொய்க்காது. நீங்கள் எதிர்பார்த்தபடி அமையாவிட்டாலும், முயற்சி செய்ததையாவது பாராட்ட வேண்டும். அடுத்த முறை, நீங்கள் இட்ட பணியை உற்சாகத்துடன் செய்ய முன்வருவான்.

    ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னபின், அதைச் சிறுவர்களிடமே விட்டுவிடுதல் சிறந்தது. `அப்படிச் செய், இப்படிச் செய்,’ என்று அடிக்கடி குறுக்கிடுவது பெரியவர்களின் குறைவான தன்னம்பிக்கையைத்தான் காட்டுகிறது. இவ்வாறு அவர்கள் சுயமாகச் சிந்திக்க விடாது குறுக்கிடுவதால், குழந்தைகளுக்குத் தம் திறமையிலேயே சந்தேகம் எழாதா!

    பெரியவர்கள் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறோமா? இல்லையே! பின், சிறுவர்கள் மட்டும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்? அவர்களுக்கு இயற்கையாக எதில் திறமையோ, ஆர்வமோ இருக்கிறது என்றறிந்து, அதில் முன்னேற ஊக்கமளித்தால், `வீடே சொர்க்கம்!’ என்று உணர மாட்டார்களா!

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் …. (31)

    நிர்மலா ராகவன்

    கறுமை நிறம்

    உனையறிந்தால்1

    கேள்வி: சில நாடுகளில் உள்ளவர்கள் சிவப்பாக, வெளுப்பாக இருக்கிறார்கள். பெரும்பான்மையான தமிழர்கள் கறுப்புதான். யார் செய்த பாரபட்சம் இது?

    விளக்கம்: ஃபிசியோக்னோமி (PHYSIOGNOMY) என்ற விஞ்ஞானப்பிரிவு உலகின் வெவ்வேறு பாகங்களில் பிறக்கும் மனிதர்கள் ஏன் நிறத்திலும், உருவ அமைப்பிலும் மாறுபட்டிருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது.

    மலேசியா, இந்தோனீசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகள், இந்தியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் பூமத்திய ரேகை வரைபடத்தின் குறுக்கே, அல்லது மிக அருகில் இருக்கும். அதனால் சூரிய வெப்பம் அதிகம். இந்நாட்டு மக்களை இயற்கைச் சீற்றத்திலிருந்து காக்கவேபோல், அவர்களது சருமத்தில் மெலனின் என்ற வேதியப் பொருள் அமைந்திருக்கிறது. இது நமக்குக் கிடைத்த பேறு. நாம்தான் புரியாமல், நொந்து கொள்கிறோம்.

    மலேசியாவில் உச்சிவேளையில், பன்னிரண்டு மணியிலிருந்து ஒரு மணிவரை வெள்ளைக்காரர்கள் வெற்றுடம்போடு வெளியில் திரிந்தாலோ, `சூரியக் குளியல்’ என்ற பெயரில் அரை நிர்வாணமாக வெயிலில் காய்ந்தாலோ, அவர்களுக்குச் சருமப் புற்று நோய் வரும் சாத்தியக்கூறு நூறு சதவிகிதம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சூரியனின் கிரணங்கள் பட்டாலே வியாதி வரும் என்ற நிலை எவ்வளவு கொடியது!

    இங்கிலாந்திலும், தென்னாப்பிரிக்காவிலும் வெள்ளையர்கள் இருந்தும், ஓட்டப் பந்தயங்களில் இந்நாடுகளைப் பிரிதிநிதிப்பவர்கள் கறுப்பர்களாகவே இருப்பார்கள். கவனித்திருக்கிறீர்களா?

    சில வருடங்களுக்கு முன், ஒரு இத்தாலிய நாட்டு மூதாட்டி என் மணிக்கட்டைப் பிடித்துக்கொண்டு, என் கரத்தைத் தோளிலிருந்து கீழ்வரை தடவினாள்.

    நான் நீச்சல் குளத்திற்குத் தினமும் போய், நீச்சலடிப்பேன். இயற்கையான பழுப்புடன் சிவப்பு கலந்த நிறமாக சருமம் மாறி இருந்தது.

    `எவ்வளவு அழகான நிறம்! இதற்கு எவ்வளவு கொடுத்தாய்?’ என்று ஏக்கத்துடன் அவள் கேட்டபோது, எனக்குச் சிரிப்புப் பொங்கியது. அப்போதுதான் அறிந்தேன், சருமத்தை TAN செய்வதற்கான சலூன்கள் இருக்கின்றன, அதற்காகப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள் என்று.

    நாம் வெள்ளைக்காரர்களைப் பார்த்து பிரமிக்கிறோம். அவர்கள் நம் நிறத்தை மெச்சுகிறார்கள்!

    மலேசிய பினாங்குத் தீவு, லங்காவித் தீவு ஆகிய இடங்களில் உள்ள கடற்கரைகளில், தங்கள் தோல் பழுப்பு நிறமாக மாற வேண்டும் என்று மிக விரும்பி, வெள்ளைக்காரர்கள் ரசாயனக் குழம்பை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு, மிகக் குறைவான ஆடை அணிந்து, (நிர்வாணமாக இருக்க அனுமதி கிடையாது), காலைத் தலைமேல் வைத்துக்கொள்ளாத குறையாக சாய்வு நாற்காலிகளில் படுத்தபடி உறங்குவதையோ, புத்தகம் படிப்பதையோ காணலாம். பல மாதங்கள், பல மணி நேரம் இப்படித் `தவம்’ புரிந்தால்தான் சருமத்தின் வெண்மையோ, சிவப்போ சிறிதேனும் மாறும்.

    அவரவர் அடிப்படை உணவுகூட தட்ப வெப்பத்தைப் பொறுத்தே அமைகிறது. வெப்ப நாடுகளில் வாழ்வோர் மிளகாய், மசாலை வகைகளை உணவில் சேர்ப்பதால் வியர்வை வெளியாகிறது. குளிர் பிரதேசங்களிலோ நிறைய உருளைக்கிழங்கு சாப்பிடுகிறார்கள். புலால், வெண்ணை, பீர் போன்ற கொழுப்பு நிறைந்த ஆகாரம் உடலை ஓரளவாவது குளிரிலிருந்து பாதுகாக்கிறது..

    வட சீனாவில் குளிர் அதிகம். அங்குள்ளவர்களின் சருமம் தடிமனாக இருப்பதுடன், ஆண்களின் முகத்தில் ரோமம் அவ்வளவாக வளராது. (மலேசிய சீனர்கள் தினமும் சவரம் பண்ணிக்கொள்ளும் அவசியமே கிடையாது). பெண்களுக்கோ புருவம் வளருவதில்லை. அதனால், அவர்கள் தினமும் வரைந்து கொள்வார்கள், அல்லது TATTOO முறையில் (பச்சை குத்திக்கொள்வதைப்போல) நிரந்தரமாகச் செய்துகொள்வார்கள்.

    மலேசியாவுக்கு வந்து சில தலைமுறைகள் தெருக்களில் வியாபாரம் செய்யும் சீனர்கள் சற்றே கறுத்து விடுவர். இல்லையேல், சூரிய வெப்பம் இவர்களைப் படாத பாடு படுத்தும்.

    இங்குள்ள சீனப் பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, `உனக்கென்ன! நீ நல்ல நிறம்!’ என்று மெச்சுவார்கள். அவர்கள் எல்லாருமே சற்று மஞ்சள் கலந்த வெண்மை நிறமாகத்தான் தோன்றுவார்கள் நமக்கு. அதிலும், உயர்வு, மட்டம்! இங்கு சரும நோயால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் சீனர்கள்தாம். நான் தொழுநோயைப்பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டபோது கிடைத்த தகவல் இது. இப்போது கோலாலம்பூரில் பார்க்குமிடமெல்லாம் சீன மருத்துவர்களின் சரும வைத்திய நிலையங்கள்!

    ஆப்பிரிக்கவாழ் கறுப்பர்களில் ஒருவர் எவ்வளவுக்கெவ்வளவு கறுப்பாக இருக்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு அழகாகக் கருதப்படுகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, தமது கருமை நிறம் இயற்கை அளித்த வரப் பிரசாதம் என்று.

    ஆனால், ஆங்கிலக் காலனித்துவத்துக்கு அடிமைப்பட்ட இந்தியர்களும், பிற நாட்டவரும்தான் வெள்ளைக்காரர்களின் மனோ நிலையைப் பின்பற்றி, தம்மைத் தாமே மட்டமாக எடை போட்டுக் கொள்கின்றனர்.

    ஒருவரை மனோதத்துவ ரீதியாக வீழ்த்த அவரிடம் இருக்கும் நிறையையே குறையெனப் பழித்தது வெள்ளைக்காரர்களின் சாமர்த்தியம். அதை நம்பி, இன்றளவும் நம்மை வருத்திக்கொள்வானேன்!

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் ……. (30)

    நிர்மலா ராகவன்

    நட்பும் அதிகாரமும்

     உனையறிந்தால்

    கேள்வி: விளையாடும்போது குழந்தைகள் ஏன் ஓயாமல் சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்? தம் குழந்தைகளுடன் தோழமையுடன் பழகுவது பெற்றோரால் முடிந்த காரியமா?

    குழந்தைகள் பிற குழந்தைகளுடன் இணைந்து விளையாடுவது பிற்காலத்தில் பிறருடன் பழக ஒரு பயிற்சி. வெற்றி, தோல்வி இதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. தம்மை வீட்டில் நடத்தும் விதத்தில் பிறரை நடத்துவார்கள். ஏழு வயதுவரை சுயநலம் மிகுந்திருக்கும். அதனால், பிறருக்கு விட்டுக்கொடுப்பது அவர்களுக்குக் கைவராத கலை.

    கதை: திருமணமாகி பல வருடங்களுக்குப்பின் பிறந்த குழந்தை என்பதால், ஏஞ்சல் என்று பெயரிட்டு, தம் பெண்ணை மிகுந்த செல்லம் கொடுத்து வளர்த்தார்கள் அவளுடைய பெற்றோர். அவள் கேட்ட எதையும் மறுத்ததில்லை.

    தான் ஓர் அற்புதமான பிறவி என்று தோன்றிப் போயிருக்கவேண்டும். எட்டு வயதில், தான் பிற சிறுமிகளுடன் விளையாடும்போது, அதே அதிகாரத்தை மற்றவர்களிடம் பிரயோகித்தாள் ஏஞ்சல்.

    அவள் விரும்பியபடியெல்லாம் நடந்துகொள்ள அவர்கள் மறுக்க, தெருவின் குறுக்கே நின்றுகொண்டு, `நான் சொல்வதை நீங்கள் எல்லாரும் கேட்காவிட்டால், காரில் அடிபட்டு சாகப்போகிறேன்!’ என்று மிரட்டியிருக்கிறாள். சில குழந்தைகள் பயந்து, வீட்டில் தெரிவித்தார்கள். ஆனால், அவர்கள் யாரும் அதற்குப்பின் அவளுடன் விளையாடத் துணியவில்லை.

    `என்னை ஏன் யாருக்குமே பிடிக்கவில்லை?’ என்று தனிமையில் அழத்தான் முடிந்தது அவளால். அவளால் மாறவும் முடியவில்லை. ஏனெனில், வீட்டில் தொடர்ந்து ராஜபோகம்தான்.

    குழந்தைகள் தமக்குள் சண்டை பிடித்துக்கொண்டால், பெரியவர்கள் கண்டும் காணாததுமாதிரி இருந்து விட வேண்டும். ஏனெனில், சிறிது நேரத்தில் அதை மறந்து, நட்பாகப் பழகுவார்கள். அதேபோல், குழந்தைகள் விளையாட்டில் தோல்வி அடைந்தால், அது பெற்றோருக்குத் தலைகுனிவு என்பதில்லை. குழந்தைகள் தம் வயதுக்கேற்ப நடக்கும்போது, அதற்காக ஏன் வெட்கப்பட்டு, அவர்கள் நடத்தைக்கு நியாயம் கற்பிக்க வேண்டும்? அவர்கள் தவறிழைக்கும்போதெல்லாம் தாமே சிறுமைப்பட்டு விட்டதைப்போல் குறுகி, குழந்தைகளைப் பழிப்பது தகாது.

    தம் அறிவையெல்லாம் குறுகிய காலத்தில் குழந்தைகளுக்குப் புகட்டிவிட வேண்டும் என்று எண்ணுபவர்கள்போல, `இப்படி விளையாடு,’ `இந்தச் சாமானை வைத்து விளையாடு,’ என்று தொணதொணப்பது ஒழுக்கம் கற்பிக்கும் வழியில்லை. ஒன்றுமே சொல்லாமல் குழந்தையை அதன் போக்கில் விளையாடவிட்டால் போதும். அதன் சிந்தனைத்திறன், ஆர்வம், தன்னம்பிக்கை எல்லாம் வளரும்.

    அப்படியின்றி, தாயின் மறு உரு குழந்தை என்பதுபோல் நடத்தினால், `அம்மா சொற்படி நடந்தால், அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கலாம். வசவும் கிடைக்காது!’ என்று நினைக்கத் தலைப்படுவார்கள் குழந்தைகள்.

    அறியாப் பருவத்தில் அடக்கு முறையை அன்பு என்று நினைத்து கீழ்ப்படிந்தவர்கள், வயது ஏறியதும், பிறருடன் தம்மை ஒப்பிட்டுக்கொள்கின்றனர். தாம் ஏதோ விதத்தில் பலவீனமாக இருப்பதாக உணர்கிறார்கள். பிறர் சொற்படி நடந்தே பழகிவிட்டவர்களுக்கு சுயமாக எதையும் செய்யத் துணிவிருப்பதில்லை. அப்படியே செய்தாலும், அதிகாரமான பாவனை.
    தம்மை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்ட தாய், தந்தை, அல்லது இருவர்மேலும் தீராத ஆத்திரம் கொள்கிறார்கள். அந்த பரிதாபத்துக்குரியவர்களின் மறைவுக்குப் பின்னரும் ஆத்திரம் என்னவோ மறைவதில்லை.

    தான் இன்னும் விவரம் அறியாப்பிள்ளை இல்லை, நல்லது, கெட்டது அறியும் வயதாகிவிட்டது, எதுவானாலும் பொறுப்பு தன்னுடையதுதானே என்றெல்லாம் சிந்தனை போக, பதின்ம வயதினர் பெற்றோரை எதிர்க்கிறார்கள். அறிவோ, அனுபவமோ அதிகம் இல்லாத நண்பர்களுடன் கூடிப் பழகுகிறார்கள்.

    `நாம் இவ்வளவு விரட்டும்போதே கெட்ட பழக்கங்களும், கூடா நட்பும் ஏற்பட்டு விடுகின்றன. ஒன்றுமே சொல்லக்கூடாதா?’ என்று சிலர் யோசிக்கலாம்.

    `உன் ஃப்ரெண்ட்ஸ்கூடப்போறபோது, எப்படியோ டிரெஸ் பண்ணிக்க. என்கூட வரபோது, அதுவும் கோயிலுக்கோ, கச்சேரிக்கோ வர்றபோது சூடிதார், இல்ல புடவைதான்! பெரியவங்க பேசறபோது குறுக்கே பேசக்கூடாது!’ — இப்படி சற்று விட்டுக்கொடுத்து, ஆனால் அதே சமயம் கண்டிப்பையும் விடாது கூறுங்கள். உரத்த குரலில், அதிகாரமாக இல்லை. சாதாரணமாகப் பேசுவதுபோல்.

    அதைக்கூடப் பொறுக்காது, பிள்ளைகள் கத்தினால், ` நான் நல்ல விதமாகச் சொன்னேனே!’ என்று பொறுமையாகச் சுட்டிக் காட்டுங்கள். இருவரும் சேர்ந்து கத்தினாலோ, அல்லது ஒருவர் பயந்து வாயை மூடிக்கொண்டாலோ, மனக்கசப்புதான் மிஞ்சும். இந்த நியதி எல்லா உறவுகளுக்கும் பொருந்தும்.

    எந்த வயதுக் குழந்தையானாலும், பொறுமையோடு அணுக வேண்டும்.

    கதை: `எனக்குப் பொறுமையே கிடையாது!’ என்று எரிச்சலுடன் அடிக்கடி கூறிவந்தாள் ஒரு தாய். குழந்தை விஷமம் பண்ணினால் தன் பொறுமை மீறி, படபடப்பு ஏற்பட்டுவிடும் என்று ஆறு வயதான பின்னரும், `ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் அடி!’ என்று மகனைப் பழக்கியிருந்தாள். தாய் கவனிக்காதபோது, நெருப்புக்குச்சியைப் பற்ற வைத்துக் கொண்டிருப்பான் சிறுவன்! அவனுக்கும்தான் பொழுது போக வேண்டாமா?

    குழந்தை விழுந்தால் அதன் உயிரே போய்விடும் என்பதுபோல், `ஓடாதே! விழுந்துடுவே!’ என்று பல பெற்றோர் எச்சரிக்கிறார்கள். நடக்கப் பழகும்போது, கீழே விழாதவர்கள் யார்?

    அவர்கள் கீழே விழுந்தால், அதைப் பார்க்காத மாதிரி முகத்தைத் திருப்பிக்கொண்டு விடுங்கள். தாய் பதட்டப்படும்போதுதான் அது குழந்தைகளையும் தொற்றிக் கொள்கிறது. பரிவுக்காக அதிகமாக நடிப்பார்கள்.

    குழந்தைகள் விளையாடப் போகுமுன், `நீ சமர்த்து! சண்டை போடாம விளையாடுவே!’ என்று முன்னெச்சரிக்கையாக, ஆனால் புகழ்ச்சிபோல சொல்வது, `மற்ற குழந்தைகளை அடிக்கக்கூடாது!’ என்ற எதிர்மறையான அறிவுரையைவிட நல்ல பயனளிக்கும்.

    அன்பாக இருக்கும் தாயிடம் குழந்தைகள் தங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். (`ஒரு பையன் என்னைக் கேலி செய்தான். நான் அவனை உதைச்சேன்!’) அவனுக்குத் தெரிந்த வகையில் எதிர்த்திருக்கிறான். அது புரிந்து, அவனுடைய மனநிலையில் உங்களை வைத்துப்பாருங்கள். ஒரேயடியாக புத்தி சொல்ல வேண்டாம்.

    அதுபோல், `உங்கள் செவிகளுக்கு மட்டும்!’ என்று பகிர்ந்துகொள்வதைப் பிறரிடம் கூறுவது அவனை அவமானப்படுத்துவதாகும்.

    உங்கள் அறிவுரையைப் புரிந்துகொள்ளாது மீறி, தவறிழைக்கிறான். மனம் வருந்தி, அதை உங்களிடமும் சொல்கிறான். அப்போது, `நான் சொன்னதைக் கேட்டிருந்தா, இப்படி ஆகியிருக்குமா?’ என்று இடித்துரைக்கவும் வேண்டாம்.

    அவர்களே குழம்பிக் கொண்டிருக்கும்போது, எதுவும் பேசாது, கேட்டுக்கொள்வதே அன்பின் அடையாளம். நட்பும் வளரும்.
    வீட்டில் காட்டும் நட்புதான் வெளியுலகத்திலும்

    தொடரும்.

    Share
  • உன்னையறிந்தால் ……… (29)

    நிர்மலா ராகவன்

    ஒழுக்கத்தைக் கற்பிப்பது

    உனையறிந்தால்

    கேள்வி: குழந்தைகளுக்கு எப்படி ஒழுக்கத்தைப் புகட்டுவது?

    விளக்கம்: வீட்டில் பெரியவர்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து குழந்தைகள் தாமே ஒழுக்கத்தைக் கற்கிறார்கள். அதை விட்டுவிட்டு, ஓயாத போதனைகளாலும், வன்முறையாலும் இது முடியாத காரியம்.

    கதை 1:

    ஒரு நீர்வீழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கு ஒரு சீன மாது தன் இரண்டு வயதுப் பெண்குழந்தையிடம், `எவ்வளவு அழகா இருக்கு, பாத்தியா? மேலேயிருந்து எவ்வளவு வேகமா கொட்டுது!’ என்று காட்டிக்கொண்டிருந்தாள்.

    அத்துடன் விட்டிருக்கலாம். `நீ விஷமம் பண்ணினா, அதிலே தூக்கிப் போட்டுடுவேன்!’

    முதலில் மகிழ்ந்து சிரித்த குழந்தை தாயின் மிரட்டலைக் கேட்டு அச்சத்துடன் தலையைப் பின்னால் இழுத்துக்கொண்டாள்.

    இது கண்டிப்பாக ஒரு குழந்தையை ஒழுக்கப்படுத்தும் வழியல்ல. பயமுறுத்தல் நாளடைவில் ஒரு குழந்தையை எதற்கும், யாரிடமும் பயப்படச் செய்யுமே தவிர, நாம் விரும்பும் நல்ல குணங்களை வளர்க்காது.

    சில ஆசிரியர்கள் `என் கடமையை எவ்வளவு ஒழுங்காகச் செய்கிறேன், பார்!’ என்பதுபோல், காரணமின்றியே தண்டிப்பார்கள்.

    போதிப்பது என்ன? ஒழுக்கமா, ஒழுங்கீனமா?

    கதை 2: ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் எல்லாரும் அமைதியாக உட்கார்ந்து, சொற்பொழிவொன்றைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஓர் ஆசிரியை கையில் பிரம்புடன், ஒவ்வொரு மாணவனின் பின்புறத்திலும் ஓங்கி அடித்தபடி நகர்ந்துகொண்டிருந்தாள். அதைப் பார்த்த தாய் ஒருவர், `அவர்கள் மௌனமாகத்தானே இருக்கிறார்கள்! எதற்கு அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, `அடித்தால்தான் இப்போது பேசவே கூடாது என்று புரியும் அவர்களுக்கு!’ என்றாளாம்.
    குழந்தைகளின் மன வளர்ச்சி, மனோதத்துவம் இதைப்பற்றி எல்லாம் எவருக்கும் சரியாகத் தெரியாத காலத்தில், ஓயாது அடித்தாலும், பழித்தாலும் ஒரு சிறுவன் ஒழுங்காகிவிடுவான் என்று நம்பினார்கள். அந்த வழியில் வளர்க்கப்பட்ட ஆசிரியர்கள் இன்றளவும் அதே வழியைப் பின்பற்றுகிறார்கள். `நான் அம்முறையால்தான் உருப்படியாக வளர்ந்தேன்!’ என்பார்கள். இவர்கள் மனோபலம் மிகுந்தவர்கள் என்பதில்லை. தங்கள் பலகீனத்தை அதிகாரத்தால் மறைத்துக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். இதனால், வீட்டில் அடி வாங்காது, நல்ல விதமாக வளர்க்கப்படும் குழந்தைகளுக்குத் தங்கள் ஆற்றலிலேயே ஐயம் எழுந்துவிடாதா!

    அதிகார வர்க்கத்தின்மேலேயே வெறுப்பை வளர்த்துக் கொள்பவர்களும் உண்டு.

    கதை 3: என் பதினான்கு வயது மாணவன், அடுனன் (ADNAN), கேட்டான்: `செய்வது தப்பு என்று தெரியும். இருந்தாலும், அதைச் சுட்டிக்காட்டினால், ஏன் சில ஆசிரியர்கள் ஆத்திரப்படுகிறார்கள்?’

    நான் மெல்லச் சிரித்தேன். `அவர்களை POWER CRAZY (அதிகார வெறி கொண்டவர்கள்) என்கிறோம்!’

    தலையைப் பக்கவாட்டில் ஆட்டிக்கொண்டான் அடுனன். `அப்படிப்பட்ட ஆசிரியர்கள் நம் பள்ளியில் நிறைய பேர் இருக்கிறார்கள்!’ என்றான், வயதுக்கு மீறிய அறிவுடன். பிறகு, `நான் இப்படிப்பட்ட ஒருவருடைய பாடத்தைச் செய்யாமலிருந்தால் என்ன ஆகும்? காரணமில்லாமல் என்னைத் திட்டிக்கொண்டே இருக்கிறார்!’

    தனக்குப் பிடிக்காத ஆசிரியரைப் பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு, அவரை மீறத் துணிகிறான்!

    `நீ படிப்பதும், தேர்ச்சி பெறுவதும் உனக்காகத்தான்!’ என்று புத்தி சொல்லிப்பார்த்தேன். அதைக் காதில்வாங்கும் நிலையில் அவன் இருக்கவில்லை.

    இறுதிப் பரீட்சைக்கு சேர்க்கப்படும் வீட்டுப் பாடத்தைச் செய்யாமல் விட்டுவிட்டான் அடுனன் என்று அந்த ஆசிரியர் பொது அறையில் அலறிக் கொண்டிருந்தபோதுதான் நடந்ததை அறிந்தேன்.

    `ஒழுக்கம்’ என்ற பெயரால் அந்த ஆசிரியர் செய்த அனர்த்தத்தால் விளைந்த வினை! ஒரு வேளை, இந்தப் பையன் தன்னைவிட முன்னுக்கு வந்துவிடுவானோ என்ற பொறாமையில் விளைந்த அச்சமோ? (அந்த ஆசிரியர் பல முறை பதவிக்குறைப்பு கண்டவர்).

    பெற்றோரால் மிரட்டி வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு அவர்கள் எப்போது, எதற்குத் தண்டிப்பார்கள் என்றுகூடப் புரியாது என்பதுதான் சோகம். இம்மாதிரியான வளர்ப்பு முறையால் கற்பனைத்திறன் அறவே வளராது என்பது ஒரு பக்கம் இருக்க, குழப்பத்தில், பயத்தில், சுயமுயற்சியுடன் புதிதான எது ஒன்றைச் செய்யும் துணிவையும் இழந்துவிடுகிறார்கள். இவர்கள் ஆட்டுமந்தையைப்போல், தம்மைவிடத் துணிச்சலானவர்களைப் பின்பற்றுவார்கள். மேலதிகாரிகள் சொல்வதை இம்மி பிசகாமல் கடைப்பிடிப்பார்கள். அதனால், தம்மீதே கசப்பையும், வெறுப்பையும் வளர்த்துக்கொள்வார்கள்.

    ஒரு பையன்(16) என்னிடம் கூறினான், `எங்கப்பா தினமும் திட்டுவார், அடிப்பார். எதுக்கு அடிக்கிறாருன்னே புரியாது!’

    இந்தமாதிரி சந்தர்ப்பங்களில், கணவரை எதிர்த்தால், மகனுக்கு அப்பாமேல் மரியாதை போய்விடும் என்று சாக்குச்சொல்லி, தாய் கண்டும் காணாததுபோல் நடக்கலாமா? மகனைத் தனியாக அழைத்துப்போய், `ஒன்மேல ஒரு தப்பும் இல்லே. அப்பாவுக்கு இன்னிக்கு ஆபீசில ரொம்ப வேலை! இல்லை, மேலதிகாரி நாலுபேர் முன்னால் அப்பாவைக் கண்டபடி திட்டியிருப்பார். அந்த கோபத்தை ஒன்மேல காட்டுகிறார்!’ என்று விளக்கினால், பையன் தெளிவடைவான்.

    இம்மாதிரியான பெற்றோர் இருந்தால், சிறுவர்கள் பள்ளி நண்பர்களிடம் தம் இயலாமையைக்கூறி ஆறுதல் தேடப் பார்ப்பார்கள். ஆனால், பிரச்னை என்னவோ தீராது.

    `இந்த அப்பாக்களே இப்படித்தான்!’ என்று நண்பர்கள் கசப்புடன் முடிவு செய்து, தங்களின் எண்ணிக்கையால் பலம் பெறுவதாக எண்ணுகிறார்கள். `வேடிக்கை’என்று நினைத்து, வயதில் மூத்தவர்களை எதிர்க்கிறார்கள். தண்டனை பெற்றால், நடத்தை இன்னும் மோசமாகிறது. படிப்பில் அக்கறை அறவே போய்விடுகிறது. ஒன்றாகச் சேர்ந்து தீய பழக்கங்களில் ஈடுபடுவதும் இப்படித்தான்.

    கதை 4: மன் லீ என்ற என் சீன மாணவி(17) வகுப்பில் கீழ்ப்படியாதவளாக இருந்தாள். காரணத்தை அறிய நான் அவளைத் தனியே அழைத்துப் பேசினேன்.

    `நான் கொஞ்ச நாள் போதைப்பழக்கம் உள்ளவளாக இருந்தேன். இப்போது விட்டுவிட்டேன். ஆனால், அதையே சொல்லிச் சொல்லி, என் பெற்றோர் என்னைத் துன்புறுத்துகிறார்கள்!’ என்று ஒத்துக்கொண்டாள்.

    உளவியல்படி, ஏழ்மை, பெற்றோருக்கிடையே ஓயாத சண்டை, ஒற்றுமையற்ற பெரிய குடும்பம், வன்முறையில் பிள்ளைகளைத் தண்டித்தல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால்கூட மனதின் ஆரோக்கியம் குறைய வாய்ப்பிருக்கிறது. வீட்டில் பெரியவர்கள் சண்டை போட்டுக்கொண்டே இருந்துவிட்டு, பிள்ளைகள் மட்டும் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், நடக்கிற காரியமா?

    பெற்றோரின் சரியான கவனிப்போ, பாராட்டோ இல்லாததால்தான் மன் லீ தீய பழக்கத்தில் ஈடுபட்டிருக்கிறாள்! அது புரிந்து, மதிப்பெண்களுடன் அவள் பெற்றோருக்கு ஒரு குறிப்பு எழுதி அனுப்பினேன்: ` மன் லீ நல்ல பெண். இப்போது இருக்கிறபடியே ஏற்றுக்கொள்ளுங்கள்’.

    வீட்டில் நிலவரம் சுமுகமாக ஆகியிருக்க வேண்டும். அதன்பின், அவள் ஒரேயடியாகச் சிரித்தபடி, எனக்கு உதவ எப்போதும் ஓடி வந்தாள்!

    மரியாதை குறையாது, பெற்றோர் அல்லது ஆசிரியரின் கருத்தை வெட்டி பேச அனுமதித்தால்தானே, இளம் வயதினர் மகிழ்ச்சியுடன் தம் முழுத்திறமையை வெளிப்படுத்துவார்கள்?

    மாறாக, அதிகாரம் செலுத்தி, பயத்தால் பணியவைக்க நினைத்துவிட்டு, `இந்தக் காலத்தில் எல்லா இளைஞர்களும் மோசம்!’ என்று சலித்துக்கொள்வதால் யாருக்கு என்ன லாபம்?

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் ……. (28)

    நிர்மலா ராகவன்

    பாதுகாப்பு யாருக்காக?

    உனையறிந்தால்

    கேள்வி: நாம் குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்த்தால், அது அவர்களுக்கு நன்மைதானே? ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்?

    விளக்கம்: சிறு பிராயத்திலிருந்தே மனிதனுக்கு முரணான இரு குணங்கள் இருக்கின்றன. ஒன்று சுதந்திரம், இரண்டாவது பாதுகாப்பு. உதாரணமாக, `நான் பெரியவன்! தானே அம்மா கை பிடிக்காமல் நடக்க முடியும்!’ என்பதுபோல் தனியாக ஓடும் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று, குரைத்தபடி ஓடும் நாயைப் பார்த்தால், அம்மாவை ஓடி வந்து கட்டிக்கொள்ளும். இந்த இயற்கையைப் புரிந்துகொண்டு, குழந்தையை வழிநடத்திச் செல்ல வேண்டும்.

    ஒரு தாய்க்குப் பிறந்த எல்லாக் குழந்தைகளும்கூட ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒரு குழந்தை பசி வந்தால், பிராணன் போகிறமாதிரி அலறும். இன்னொன்று வெறுமனே முனகும். ஜீன் வித்தியாசப்படுவதால், ஒவ்வொன்றும் தனி ஜீவன்தான். இது புரியாது, தனி மனிதனின் நன்மையைவிட பொது நலனே முக்கியம் என்று வளர்க்கப்படும்போது, ஒருவனின் தனித்தன்மைகள் வெளிப்பட வாய்ப்பு இல்லாது போகிறது. எப்போதும் பாதுகாப்பாக உணர்ந்தாலும், சுதந்திரம் கிடைப்பதில்லை.

    `வயது முதிர்ந்ததும், எனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டாமா?’ இப்படி யோசிக்கும் தாய், மகன் தன்னைப் பாதுகாப்பான் என்ற எதிர்பார்ப்புடன், `பாசம்’ என்ற பெயரில் குழந்தைப் பருவத்திலிருந்து அவன் தன்னையே சார்ந்து, எதற்கும் நாடும்படி,வேண்டியதை எல்லாம் கவனித்துச் செய்வாள் — மகனுக்கு எத்தனை வயதானாலும். முதலில் சௌகரியம் என்று பட்டது இப்போது இரு தரப்பிலும் ஆத்திரத்தை விளைவிக்கும்.

    குழந்தை தாயை எதிர்த்து, தானே தன் காரியங்களைச் செய்ய முற்படும்போது, இத்தகைய தாய் நொந்து போகிறாள் –தன்னை உபயோகமானவள் என்று மகன் நினைக்கவில்லையே என்று.  மகன் விரும்புவதெல்லாம் சிறிது சுதந்திரம். அவ்வளவுதான். அது அவளுக்குப் புரியவில்லை.

    ஒரு சிறுவன் தானே தனது காரியங்களைச் செய்துகொள்ள வேண்டும் என்று அடம் பிடிப்பது அகம்பாவத்தால் அல்ல. `என்னாலும் முடியும்!’ என்ற தன்னம்பிக்கையைப் பெற.  இது புரிந்து, அபாயமற்ற காரியங்களில் அவனைத் தன் போக்கில்விட்டு, சிறு தவறுகள் நிகழும்போது, அவைகளைப் பெரிதுபடுத்தாது, எப்படித் தடுப்பது என்று சொல்லிக் கொடுப்பதுநல்லது. இல்லாவிட்டால், எந்த வயதிலுமே புதிய காரியங்களைச் செய்யத் தயங்குவான் — எங்கே தவறு நிகழ்ந்து, பிறரது கேலிக்கு ஆளாக வேண்டி வருமோ என்று.

    குழந்தை சுயமாகச் சிந்திக்கும் சூழ்நிலைகளை ஒன்றரை வயதிலிருந்தே சிறுகச் சிறுக  உருவாக்குங்கள்.

    `இன்னிக்கு இந்த சட்டை போட்டுக்கறியா, இல்லே இதுவா?’

    `உனக்கு மைலோ வேணுமா, ஹார்லிக்ஸா?’

    குழந்தை முதலில் ரொம்ப யோசிக்கும்.

    `மைலோ பிரௌன் கலர். ஹார்லிக்ஸ் வெள்ளையா இருக்கு, பாத்தியா? எது வேணும்?’

    காலையில் ஒன்று, மாலையில் மற்றொன்று என்று பெருமையாகத் தேர்ந்தெடுக்கும்.

    குழந்தை காலையில் ஹார்லிக்ஸ் கேட்டு, நீங்கள் தவறாக மைலோ கொடுத்தால், தன் கருத்து மதிக்கப்படவில்லையே என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்யும். வெள்ளை நிறத்தில் சிறிது பிரௌன் கலந்தால், அந்த விஷயத்திற்கு ஒரு நல்ல முடிவு கட்டிவிடலாம். குழந்தைகளை ஏமாற்றுவது எளிது!

    பொதுவாக எல்லாக் குழந்தைகளுமே தங்கள் வயதுக்கு மீறிய செயல்களைச் செய்ய முற்படுகிறார்களே, ஏன் தெரியுமா?தங்கள் எல்லை எவ்வளவு என்று அறியும் முயற்சி அது. அவ்வப்போது வாய் வார்த்தையாகக் கண்டிக்க வேண்டுவது அவசியம். `குழந்தை! அவனுக்கு என்ன தெரியும்!’ என்று நீண்ட காலம் விட்டுக்கொடுத்தால், பிறகு அடக்க முடியாது.

    குழந்தைகளுக்கு விளையாடுவதைத் தவிர மற்ற எல்லாமே அநாவசியம்தான். குளிப்பது, பல் துலக்குவது போன்ற அவசியமானவற்றைக்கூட செய்ய மறுக்கும் குழந்தைகள் உண்டு.

    `பல் தேய்ச்சாதானே பல் முத்து மாதிரி மின்னும்! இல்லாட்டா பூச்சி வரும்!’ என்று ஆசை காட்டியும், மிரட்டியும் காரியத்தைச் சாதித்துக்கொள்ள  வேண்டியதுதான். பள்ளிக்கூடத்துக்குப் போக அழுது ஆர்ப்பாட்டம் செய்த குழந்தைகள் பிற்காலத்தில் பெரிய படிப்பாளிகள் ஆவது போலத்தான்!

    தான் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையே என்று ஆத்திரப்பட்டு அடித்து மசியவைத்தால், `நான் ஒரு பயந்தாங்குளி!’என்று பெருமை பேசுகிறவர்களாகிறார்கள். இவர்களால் தனித்து எதையும் செய்ய துணிவில்லாததால், தம்மைப்போன்ற பிறரையும் கூட்டு சேர்த்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் தம்மைப் பார்த்து பயப்பட வேண்டும் என்பதுபோல் நடப்பார்கள்.

    தம்மைப்போல் இல்லாது, சிறு வயதிலேயே போதிய சுதந்திரம், பாதுகாப்பு என்று அன்புடன் வளர்ந்தவர்களைக் கண்டுபொறாமை எழுகிறது. அவர்களை மறைமுகமாகவோ, நேரிடையாகவோ பழித்து, தங்களைப்போல் மாற்ற எண்ணுவார்கள். அவர்களுக்கு வேண்டியது நட்பு. அதனால் கிடைக்கும் பலம், பாதுகாப்பு. ஆனால், சண்டையில் துவங்குவார்கள்.

    பிறர் நம்மிலிருந்து எவ்வளவு மாறுபட்டிருந்தாலும், அவர்களை அப்படியே ஏற்பதுதான் பெருந்தன்மை. எல்லாரிடமும்இருக்கும் குற்றம் குறைகளையே பார்த்துக் கொண்டிருந்தால், நட்பும், உறவும் எப்படி வளரும்?

    Share
  • உன்னையறிந்தால் …… (27)

    நிர்மலா ராகவன்

    வயதுக்கேற்ற வளர்ச்சி

    உனையறிந்தால்31

    `குழந்தை’ என்று கூறும்போது நம் நினைவுக்கு வருவது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்தாம். சுமார் பதினெட்டு வயதில் அவர்களது உடல் வளர்ச்சி பரிபூரணம் அடைவதுவரை அவர்களுடைய மனப்போக்கும் சிறிது சிறிதாக விசாலமடைகிறது. இதில் ஏதாவது தடை ஏற்பட்டால், மனவளர்ச்சி அந்த நிலையிலேயே நின்றுவிடுகிறது.

    குழந்தை பிறந்து இரண்டு வயதுவரை தன்னைச் சுற்றி உள்ள உலகை ஐம்புலன்களின் உதவிகொண்டு அறிய முனைகிறது. ஒளியோ, ஒலியோ இருக்கும் திசையை நோக்கித் தலையைத் திருப்பும் முதலில். பிறகு, கைக்கெட்டுவதை எல்லாம் எடுக்க முனையும். எந்த ஒரு பொருளும் தின்னத் தகுந்ததா இல்லையா என்று அறிவதில்தான் இந்த வயதினருக்கு ஆர்வம். மற்றபடி, தானும் தாயின் ஒரு பகுதிதான் என்பதுபோல்தான் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் நடந்துகொள்ளும்.

    இரண்டு வயதுவரை யார் உணவூட்டினாலும் உட்கொள்ளும் குழந்தைகள் அதன்பின், தாமும் ஒரு தனிப்பிறவி என்று உணர்கிறார்கள். பிறர் சொல்வது சரியாக விளங்காது. தமது செய்கையால் பிறருக்கு ஏற்படும் விளைவுகளும் இவர்கள் அறிவுக்கு எட்டாத சமாசாரம். இருந்தாலும், உலகமே இவர்களைச் சுற்றித்தான் இயங்குகிறது என்று எண்ணம் கொண்டிருப்பார்கள்.

    வீட்டிற்கு யார் வந்தாலும், தம்முடன் விளையாடத்தான் வருகிறார்கள் என்றெண்ணி மகிழ்வார்கள். தனக்குக் கிடைத்ததைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணம் இந்த வயதில் கிடையாது. இந்த அறிவை நாம்தான் புகட்ட வேண்டும்..

    ஒரு டப்பாவில் பிஸ்கோத்தோ, சாக்லேட்டோ போட்டு, `எல்லாருக்கும் கொடுத்துவிட்டு, நீயும் சாப்பிடு!’ என்று இரண்டு வயதுக் குழந்தையின் கையில் கொடுங்கள். பெரியவர்கள் பேச்சை மறுப்பின்றி ஏற்கும் குழந்தை அதை அப்படியே கடைப்பிடிக்கும். தின்பண்டத்தை வாங்கிக்கொண்ட ஒவ்வொருவரும் நன்றி தெரிவித்து, குழந்தையின் `தாராள’ மனப்பான்மையைப் பாராட்டினால், நாளடைவில் அதுவே பழக்கமாகிவிடும்.

    (`சாக்லேட்டா? ஐயோ, வேண்டாம்! குண்டாகிடும். ஏற்கெனவே, சர்க்கரை வியாதி!’ என்றெல்லாம் பிகு பண்ணாது, வாங்கிக்கொள்ளுங்கள். தின்ன வேண்டிய அவசியமில்லை. பிறகு டப்பாவிலேயே போட்டுவிடலாம். தான் கொடுக்கும்பொது வாங்கிக்கொள்ள மறுப்பது குழந்தையின் மனதை நோகடிக்கும். நிலவரம் புரியாது, அழுகையில் உதடு பிதுங்கும்).

    பிறர் வீட்டுக்கு அழைத்துப் போகும்போது உங்கள் குழந்தை அவர்கள் வீட்டுச் சாமான்களை எடுத்து ஆராய்ச்சி செய்கிறானா? கண்ணாடிச் சாமானாக இருந்தால், கைதவறி கீழே விழுந்துவிட உடைந்தும் போகலாம். `வளர்க்கத் தெரியாமல் வளர்த்திருக்கிறீர்களே!’ என்பதுபோல் முறைப்பவர்களை அலட்சியம் செய்யுங்கள்.
    ஏன் தெரியுமா?

    காரண காரியம் புரியாத வயது ஏழுவரை. அதாவது, பிறர் பொருளை எடுப்பது தவறு என்று புரியாது. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். வெளியே அழைத்துப்போவதற்கு முன்பே, `இன்னொருவர் வீட்டுச் சாமான்களில் கை வைக்கக்கூடாது!’ என்று எச்சரித்து விடுங்கள்.

    அதேபோல், மற்ற குழந்தைகளின் விளையாட்டுச் சாமான் ஒன்றை எடுத்துக்கொண்டு, தன்னுடையதுதான் என்று அடம் பிடிக்கிறானா? `மானம் போகிறதே!’ என்று குழந்தையை அடித்தோ, திட்டியோ செய்வதைவிட, `உனக்கும் இதேமாதிரி வாங்கித் தருகிறேன்!’ என்று நல்லவிதமாகச் சொல்லலாம்.

    அப்படியும் மசியாவிட்டால், பேச்சை மாற்றுங்கள். குழந்தைகள் கவனம் அதிக நேரம் ஒன்றில் நிலைத்திருக்காது. `ஜூவில அன்னிக்கு சிங்கம் பாத்தோமே!’ என்று சம்பந்தம் இல்லாது எதையாவது ஆரம்பியுங்கள். அவ்வளவுதான்! அழுகை மாறி, உற்சாகம் பீறிடும் குழந்தையிடம்.

    கடைவீதியில் பார்ப்பதை எல்லாம் கேட்கிறானா? `உனக்குத்தான் வீட்டில் நிறைய இருக்கிறதே!’ என்று சொன்னால் சமாதானமாகிவிடுவான்.

    ஒரு கடைக்காரர் என் நான்கு வயது மகனிடம், `இது வேணும்னு அம்மாகிட்ட கேளு!’ என்று ஏதோ விளையாட்டுச் சாமானைக் காட்டி, தூண்டிவிட்டார். குழந்தை கேட்டால், தாய் மறுப்பது கடினம் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது.. அவனோ, `ஆத்தில நெறை..யா இருக்கு!’ என்று பதிலளிக்க, அவர் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தார். எனக்கு ஒரே பெருமை. `சமத்து!’ என்று அவனை வாயாரப் பாராட்டினேன் — அவர் தலைமறைந்ததும்!

    ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பொம்மைகளும் உயிரும், உணர்ச்சியும் கொண்டவை. அதனால்தான் தம் கரடிப் பொம்மையையும், விளையாட்டுக் காரையும் சரிசமமாகப் பாவித்துப் பேசி விளையாடுவார்கள். இதில் அசட்டுத்தனம் எதுவுமில்லை. இந்தக் குணத்தை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    கதை:

    என் பேரனுக்கு மூன்று வயதானபோது, டவுனுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். திடீரென்று பெரிதாக அழுதான். நிற்க வைக்கப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டரில் காலைக் கிழித்துக் கொண்டதில், ஆழமான காயம்.

    நடந்தது தன் தவறா, இல்லையா என்று புரியாது, குற்ற உணர்ச்சியோ (`அடி கிடைக்குமோ?’) அல்லது அவமானமோ எளிதில் அடையும் பருவம் இது. அதனால், பழியைத் திசைதிருப்பி விடுதல் நன்று.

    நான் பின்னோக்கி நடந்தேன். `இந்த ஸ்கூட்டரா ஒன் காலில ரத்தம் வர வைச்சது? எதுக்கு குழந்தை போற வழியில நின்னே?’ என்று வீராவேசமாகக் கேட்டபடி, அதை நான்கு போடு போட்டேன். அவன் அழுகை மறைந்தது. வலியை மறந்தான்.

    என் போக்கைப் பார்த்து, சில இளைஞர்கள் தம் கண்களையே நம்ப முடியாது வெறித்தனர்! `பார்த்தா நார்மலா இருக்கா! வாகனத்தோட சண்டை போடறாளே! ஒரு வேளை, லூசோ?’ என்று அவர்கள் நினைத்தது எனக்குப் புரிந்தது.

    அவர்களுக்காக ஸ்கூட்டருக்கு இன்னும் இரண்டு அறை விட்டு, `ஒன்னோட வலி சரியாப் போச்சு!’ என்று குழந்தையிடம் கூவினேன். என் வார்த்தைகளை நம்பி, நொண்டியபடி நடந்தவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவசரமாக, பிளாஸ்திரி வாங்கி ஒட்டினேன்.

    சில குழந்தைகள் குளிக்கப் படுத்துவார்கள். `ஒன்னோட வாத்து குளிக்கணுமாம்!’ என்று குளியலறைக்குப் போனால், குழந்தையும் ஆர்வத்துடன் பின்னால் வருவான்.

    ஏழிலிருந்து பதினோரு வயதுவரை வேறு மாற்றங்கள். தாழ்வு மனப்பான்மைக்கும், சுறுசுறுப்புக்கும் இடையிலான போட்டி. இந்தப் பருவத்திலும் பெற்றோர் தொடர்ந்து, `நீ புத்திசாலி. நல்ல பையன்!’ என்று (அளவோடு) பாராட்டினால், தன்னம்பிக்கை வளரும். பிறருடைய மன ஓட்டம் புரியத் தொடங்கும். `இப்படிச் செய்தால் இன்னது நடக்கும்,’ என்ற தெளிவு பிறக்கும். தான் அடித்தால் பிறருக்கு வலிக்கும், இன்னொருவர் பொருளை அவர் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது என்றெல்லாம் புரியும்.

    பதினோரு வயதுக்குமேல் தனக்குரிய வேலை, தனது நிலை, தான் ஆற்றவேண்டிய பங்கு முதலியவை தெரிய வேண்டும். அப்போதுதான் பொறுப்பும், அதை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ளும் சாமர்த்தியமும் ஏற்படும். ஆனால், நான்கில் ஒருவர்தான் அறிவிலும், எண்ணங்களிலும் முதிர்ச்சிகொண்ட இந்த நிலையை அடைவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    `எனக்கு வேலை செய்யப் பிடிக்காது அதனால், என் குழந்தைகள் வேலை செய்தாலும் எனக்கு மனசாகாது,’ என்று கூறும் தாய், தன்னையுமறியாது குழந்தைக்குத் தீங்கு இழைக்கிறாள். தலைமைப் பொறுப்பு இவர்களுக்கு எளிதில் கைவராது.
    ஒரு குழந்தை வயதுக்கேற்றபடி நடந்துகொள்ளும்போது, அதைப் பெரிதுபடுத்தி, ஏளனம் செய்தால் குழப்பம்தான் விளையும். உதாரணமாக, பொது இடங்களில், இரண்டு வயதுக் குழந்தை கைகால்களை உதைத்துக்கொண்டு அழலாம், `ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடு,’ என்று. வயதுக்குரிய நடத்தைதான் அது. அதற்காக நாம் அவமானப்படத் தேவையில்லை. பசி, தூக்க வேளையில் வெளியில் அழைத்துப் போவதைத் தவிர்க்கலாம். அதுபோல், இடியோசை கேட்டு குழந்தைகள் பயப்பட்டால், `சும்மா இடி! மழை வரப்போறது,’ என்று வானிலை அறிக்கை விட்டால், புரிகிறதோ, இல்லையோ, சமாதானமாகிவிடுவார்கள்.

    ஆனால், பத்து வயதுச் சிறுவன் அப்படி நடந்துகொண்டால், எங்கோ தவறு விளைந்திருக்கிறது என்று அர்த்தம். தாய் தந்தையரின் ஓயாத சண்டை, குழந்தையை அவர்கள் நடத்தும் முறை, வீட்டுக்கு வெளியே குழந்தை அடையும் அனுபவங்கள் — இப்படி எத்தனை காரணங்கள் இல்லை, குழந்தையின் மனவளர்ச்சியைத் தடை செய்ய!

    சிறுபிள்ளைத்தனம் கொண்ட பெரியவர்கள் அந்தந்த வயதுக்கேற்ப வளர்ச்சி அடையாது இருந்திருப்பார்கள். பழையதை அலசி, தடைகள் ஏற்படக் காரணமாக இருந்தவைகளை ஏற்றாலே தெளிவும், மனப்பக்குவமும் அடையலாம். ஆனால், கடந்த காலத்திலேயே நின்றுவிடக்கூடாது. நிகழ்காலத்திலேயே கவனம் கொண்டிருப்பவன்தான் முன்னேறுகிறான்.

    தொடருவோம்

    Share