உன்னையறிந்தால் …. (31)
நிர்மலா ராகவன்
கறுமை நிறம்
கேள்வி: சில நாடுகளில் உள்ளவர்கள் சிவப்பாக, வெளுப்பாக இருக்கிறார்கள். பெரும்பான்மையான தமிழர்கள் கறுப்புதான். யார் செய்த பாரபட்சம் இது?
விளக்கம்: ஃபிசியோக்னோமி (PHYSIOGNOMY) என்ற விஞ்ஞானப்பிரிவு உலகின் வெவ்வேறு பாகங்களில் பிறக்கும் மனிதர்கள் ஏன் நிறத்திலும், உருவ அமைப்பிலும் மாறுபட்டிருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது.
மலேசியா, இந்தோனீசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகள், இந்தியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் பூமத்திய ரேகை வரைபடத்தின் குறுக்கே, அல்லது மிக அருகில் இருக்கும். அதனால் சூரிய வெப்பம் அதிகம். இந்நாட்டு மக்களை இயற்கைச் சீற்றத்திலிருந்து காக்கவேபோல், அவர்களது சருமத்தில் மெலனின் என்ற வேதியப் பொருள் அமைந்திருக்கிறது. இது நமக்குக் கிடைத்த பேறு. நாம்தான் புரியாமல், நொந்து கொள்கிறோம்.
மலேசியாவில் உச்சிவேளையில், பன்னிரண்டு மணியிலிருந்து ஒரு மணிவரை வெள்ளைக்காரர்கள் வெற்றுடம்போடு வெளியில் திரிந்தாலோ, `சூரியக் குளியல்’ என்ற பெயரில் அரை நிர்வாணமாக வெயிலில் காய்ந்தாலோ, அவர்களுக்குச் சருமப் புற்று நோய் வரும் சாத்தியக்கூறு நூறு சதவிகிதம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சூரியனின் கிரணங்கள் பட்டாலே வியாதி வரும் என்ற நிலை எவ்வளவு கொடியது!
இங்கிலாந்திலும், தென்னாப்பிரிக்காவிலும் வெள்ளையர்கள் இருந்தும், ஓட்டப் பந்தயங்களில் இந்நாடுகளைப் பிரிதிநிதிப்பவர்கள் கறுப்பர்களாகவே இருப்பார்கள். கவனித்திருக்கிறீர்களா?
சில வருடங்களுக்கு முன், ஒரு இத்தாலிய நாட்டு மூதாட்டி என் மணிக்கட்டைப் பிடித்துக்கொண்டு, என் கரத்தைத் தோளிலிருந்து கீழ்வரை தடவினாள்.
நான் நீச்சல் குளத்திற்குத் தினமும் போய், நீச்சலடிப்பேன். இயற்கையான பழுப்புடன் சிவப்பு கலந்த நிறமாக சருமம் மாறி இருந்தது.
`எவ்வளவு அழகான நிறம்! இதற்கு எவ்வளவு கொடுத்தாய்?’ என்று ஏக்கத்துடன் அவள் கேட்டபோது, எனக்குச் சிரிப்புப் பொங்கியது. அப்போதுதான் அறிந்தேன், சருமத்தை TAN செய்வதற்கான சலூன்கள் இருக்கின்றன, அதற்காகப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள் என்று.
நாம் வெள்ளைக்காரர்களைப் பார்த்து பிரமிக்கிறோம். அவர்கள் நம் நிறத்தை மெச்சுகிறார்கள்!
மலேசிய பினாங்குத் தீவு, லங்காவித் தீவு ஆகிய இடங்களில் உள்ள கடற்கரைகளில், தங்கள் தோல் பழுப்பு நிறமாக மாற வேண்டும் என்று மிக விரும்பி, வெள்ளைக்காரர்கள் ரசாயனக் குழம்பை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு, மிகக் குறைவான ஆடை அணிந்து, (நிர்வாணமாக இருக்க அனுமதி கிடையாது), காலைத் தலைமேல் வைத்துக்கொள்ளாத குறையாக சாய்வு நாற்காலிகளில் படுத்தபடி உறங்குவதையோ, புத்தகம் படிப்பதையோ காணலாம். பல மாதங்கள், பல மணி நேரம் இப்படித் `தவம்’ புரிந்தால்தான் சருமத்தின் வெண்மையோ, சிவப்போ சிறிதேனும் மாறும்.
அவரவர் அடிப்படை உணவுகூட தட்ப வெப்பத்தைப் பொறுத்தே அமைகிறது. வெப்ப நாடுகளில் வாழ்வோர் மிளகாய், மசாலை வகைகளை உணவில் சேர்ப்பதால் வியர்வை வெளியாகிறது. குளிர் பிரதேசங்களிலோ நிறைய உருளைக்கிழங்கு சாப்பிடுகிறார்கள். புலால், வெண்ணை, பீர் போன்ற கொழுப்பு நிறைந்த ஆகாரம் உடலை ஓரளவாவது குளிரிலிருந்து பாதுகாக்கிறது..
வட சீனாவில் குளிர் அதிகம். அங்குள்ளவர்களின் சருமம் தடிமனாக இருப்பதுடன், ஆண்களின் முகத்தில் ரோமம் அவ்வளவாக வளராது. (மலேசிய சீனர்கள் தினமும் சவரம் பண்ணிக்கொள்ளும் அவசியமே கிடையாது). பெண்களுக்கோ புருவம் வளருவதில்லை. அதனால், அவர்கள் தினமும் வரைந்து கொள்வார்கள், அல்லது TATTOO முறையில் (பச்சை குத்திக்கொள்வதைப்போல) நிரந்தரமாகச் செய்துகொள்வார்கள்.
மலேசியாவுக்கு வந்து சில தலைமுறைகள் தெருக்களில் வியாபாரம் செய்யும் சீனர்கள் சற்றே கறுத்து விடுவர். இல்லையேல், சூரிய வெப்பம் இவர்களைப் படாத பாடு படுத்தும்.
இங்குள்ள சீனப் பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, `உனக்கென்ன! நீ நல்ல நிறம்!’ என்று மெச்சுவார்கள். அவர்கள் எல்லாருமே சற்று மஞ்சள் கலந்த வெண்மை நிறமாகத்தான் தோன்றுவார்கள் நமக்கு. அதிலும், உயர்வு, மட்டம்! இங்கு சரும நோயால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் சீனர்கள்தாம். நான் தொழுநோயைப்பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டபோது கிடைத்த தகவல் இது. இப்போது கோலாலம்பூரில் பார்க்குமிடமெல்லாம் சீன மருத்துவர்களின் சரும வைத்திய நிலையங்கள்!
ஆப்பிரிக்கவாழ் கறுப்பர்களில் ஒருவர் எவ்வளவுக்கெவ்வளவு கறுப்பாக இருக்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு அழகாகக் கருதப்படுகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, தமது கருமை நிறம் இயற்கை அளித்த வரப் பிரசாதம் என்று.
ஆனால், ஆங்கிலக் காலனித்துவத்துக்கு அடிமைப்பட்ட இந்தியர்களும், பிற நாட்டவரும்தான் வெள்ளைக்காரர்களின் மனோ நிலையைப் பின்பற்றி, தம்மைத் தாமே மட்டமாக எடை போட்டுக் கொள்கின்றனர்.
ஒருவரை மனோதத்துவ ரீதியாக வீழ்த்த அவரிடம் இருக்கும் நிறையையே குறையெனப் பழித்தது வெள்ளைக்காரர்களின் சாமர்த்தியம். அதை நம்பி, இன்றளவும் நம்மை வருத்திக்கொள்வானேன்!
தொடருவோம்