“ஆறு படை அழகன்” — (5)
க. பாலசுப்பிரமனியன்
விழி தேடும் அழகன் நீ
மதி தேடும் அறிவு !
உயிர் தேடும் உறவு நீ
துயர் தீர்க்கும் மருந்து !
தேயாத நிறை நிலவு நீ
திகட்டாத அருள் வடிவு !
குறையாத கருணை வெள்ளம் நீ
கலையாத அழகின் மஞ்சம் !
சுவையான சொல்லுக்குச் சொந்தம் நீ
சுடரில் பிறந்த ஒளிவெள்ளம் !
கருத்துக்குள் அடங்காத கவிதை நீ
கன்னித்தமிழுக்குத் தந்தை!
புவி காணாத ஈர்ப்பு நீ
புலன் சிலிர்க்கும் வியப்பு !
பழமாகப் பழுத்த பிள்ளை நீ
பரமனுக்கும் குருவான விந்தை !
தினைக் காட்டுத் தலைவன் நீ
தீந்தமிழ் போற்றும் பண்பு !
வினை தீர்க்கும் வேலன் நீ
வேதனைகள் தேடும் விடியல் !