நிர்மலா ராகவன்

நாட்டியத்தால் நாமடையும் நன்மைகள்

உனையறிந்தால்

கேள்வி: என் மகள் (30 வயது) கணவனின் கொடுமை தாங்காது, தன் ஐந்து வயதுப் பெண்குழந்தையுடன் சட்டபூர்வமாகப் பிரிந்துவிட்டாள். குழந்தைக்கு எதைக்கண்டாலும் பயம், கூச்சம். அவளை (உளவியல் நிபுணர்களின் துணையின்றி) சரிப்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா?

இருவருமே முறைப்படி நாட்டியம் கற்பதால் பலன் அடையலாம். நாட்டியம் ஒருவித யோகம். உடலையும், மனதையும் ஒருமைப்படுத்துவது. அதனால் அதை பக்தி மார்க்கம் என்றும் கூறலாம்.

நாட்டியத்தில் தா-தா-தை என்றெல்லாம் காலைத் தரையில் ஓங்கியடிப்பார்கள் இல்லையா? அது அக்குப்ரெஷர். மூளையில் இருக்கும் நியூரான்களை இயக்கும். கணக்குப் பாடம் எளிதாகும்.

ஆடும் சமயத்தில் வேறு எந்த நினைவும் எழாது. இதனால் ஞாபகசக்தி பெருகும். நாட்டியத்துடன் இசையும் சேர்ந்திருப்பதால், தாழ்மை உணர்ச்சி மற்றும் மன அழுத்தத்திலிருந்து நாளடைவில் விடைபெறலாம்.

சிறுமிகள் பலர் நாட்டிய வகுப்பில் இருப்பார்களே! எல்லாரும் ஒரே வகுப்பில், ஒரே விஷயத்தைக் கற்கும்போது, தானாகவே நெருக்கம் உண்டாகும். சிறுகச் சிறுக கூச்ச சுபாவம் மறைந்து, பிறருடன் கலந்து பழக முடியும். எவருக்குமே தன்னம்பிக்கை அதிகரிக்க, எந்த இடர்ப்பாட்டையும் தாங்கும் சக்தி வருவதோடு, புதிய சவால்களை ஏற்கவும் தயாராக முடியும்.

நாட்டியம் ஆடுவதால் உடலுக்குப் பயிற்சி என்பதால், உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் தனக்குத் தேவையான அளவு மட்டுமே எடுத்துக்கொள்வதால்,. அளவுக்கு அதிகமாகச் சாப்பிடத் தோன்றாது. ஆதலால், பருமனாகும் அபாயமும் இல்லை!

குழந்தைகளுக்கு அபாரமான கற்பனைத்திறன் உண்டு. நாட்டிய நாடகம் போன்றவற்றில் பங்கு ஏற்பதால், அத்திறன் மேலும் சிறக்க வழியிருக்கிறது. ஒரு சிறிய பாட்டில், `அரக்கன்’ என்று வரும் இடத்தில் கண்ணைப் பயங்கரமாக உருட்டிய ஒரு சிறு பெண் பலராலும் பாராட்டப்பட்டாள். அதன்பின், அந்த இடம் வருமுன்னரே மேடையில் அவள் உற்சாகமடைந்ததைக் கண்டிருக்கிறேன். (அதற்குமுன் அவளை யாரும் எதற்கும் புகழ்ந்ததில்லை).`என்னிடம் இவ்வளவு திறமை இருக்கிறதா!’ என்று வியந்ததுபோல், அவளது தன்னம்பிக்கை கூடியது.

ஆனால் ஒன்று. பாடுவது பாட்டுக்காக இருக்கவேண்டும். இல்லாவிட்டால், ஒருவரின் இசையில் பாவம், பக்தி இராது. அதேபோல், நாட்டியமாடுவதால் நடனமணி எவ்வளவு சிறப்புப் பெறுகிறாள் என்பது முக்கியமில்லை. (குழந்தைகளை மன்னிக்கலாம்). அவர்களிடமும், `நீ நன்றாக ஆடுகிறாய். அழகாய் இருக்கிறாய். இது தெரிந்த விஷயம்தானே! பிறர் இதையெல்லாம் புகழ்ந்தால், ரொம்ப மகிழ்ந்துவிடாதே. `நன்றி’ என்று சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இரு! இல்லாவிட்டால், கலை உன்னை விட்டுப்போய்விடும்,’ என்று அறிவுரை கூறி வளர்த்தால், கர்வம் இல்லாமல் வளர்வார்கள். இந்த ஒழுக்கத்தினால், அவர்களால் பல விஷயங்களிலும் வெற்றி பெற முடியும்.

சரியான முறையில் கையாண்டால், நாட்டியம் மன அமைதியை அளிக்க வல்லது. தன்னையே உணரச் செய்யும் ஆற்றலும் இதற்கு உண்டு. ஆனால், போட்டி மனப்பான்மை இருந்தால், அமைதி எப்படிக் கிடைக்கும்? The emphasis should be on the dance, not the dancer.பலரும் தம் தனிப்பட்ட புகழுக்கும், பொருளுக்கும் நாட்டியத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது போட்டி, பொறாமை, அதனால் விளையும் சச்சரவுகளையே எழுப்பாது?

ஏதாவது ஒரு காரணத்துக்காக (பேச்சு, பாட்டு, நாட்டியம்) மேடை ஏறுபவர்கள் முதலில் அச்சத்துக்கு உள்ளாவார்கள். உலகப் புகழ் பெற்ற இசை வல்லுனர்களும், நாட்டியமணிகளும்கூட, `மேடை ஏறுமுன் எனக்குள் அட்ரினலின் (adrenaline) ஏகமாகச் சுரந்துவிடும். அதனால் படபடப்பாக இருக்கும். அப்போதுதான் என்னால் நன்றாகச் செயல்பட முடியும்!’ என்று கூறியதாக நீங்கள் படித்திருக்கலாம். இது stage fright அல்லாமல் வேறென்ன! பயம் இல்லாவிட்டால், நிகழ்ச்சி இன்னுமே சிறப்பாக இருக்கும். தன்னை முன்னிறுத்தி, கலையை இரண்டாம்பட்சமாகக் கருதுவதால் வந்த வினை இது.

யோகாசனம் அமைதியை அளிப்பது, ஆரோக்கியத்தை அளிப்பது, பயில்பவர்கள் விரைவாக மூப்பு அடைய மாட்டார்கள் (retards the decay of cells) என்றெல்லாம் என் சொந்த அனுபவத்தில் கண்டிருக்கிறேன். (விளையாட்டாகத்தான் செய்ய ஆரம்பித்தேன். உடனே, மூளை நன்றாக செயல்பட்டது கண்டு, `கல்லூரி நாட்களிலேயே ஆரம்பித்திருக்காமல் போய்விட்டோமே!’ என்ற ஏக்கம் பிறந்தது. நாற்பது வயதுக்குமேல்தான் மூப்பைப்பற்றி அறிந்தேன்).

விளையாட்டு வீரர்கள் முதலில் குனிந்து, நிமிர்ந்து என்று பல்விதப் பயிற்சிகள் செய்வதைப்போல், வகுப்பிலும் நாட்டியம் ஆடுமுன் செய்தால், உடலில் எந்த வலியும் ஏற்படாது. முதலில் சிறிது உடற்பயிற்சி (stretching exercises), பிறகு சூரிய நமஸ்காரம் என்று ஆரம்பித்தால், களைப்பின்றி வெகு நேரம் ஆட முடியும்.

மாறாக, ஆரம்பித்தவுடனேயே ஒரு பாடலுக்கு குதித்து ஆடத் துவங்குவதால், காலில் சுளுக்கு, தோள்வலி என்று ஏடாகூடமாக ஏதாவது ஆகும். தவறான `போஸ்’களாலும் இதே விளைவுதான்.

நாட்டியம் என்றால், கை முத்திரைகளும் அதில் அடங்கும் அல்லவா? ஒவ்வொன்றுக்கும் தனிப் பலன்கள் உண்டு. உதாரணமாக, ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் நீட்டி, மற்ற இரண்டையும் கட்டை விரலுடன் சேர்த்துப் பிடித்தால், கண்ணுக்கு நல்லது. ஒவ்வாமைக்கும், அசுரனுக்கும் ஒரே முத்திரைதான்!

இப்போதெல்லாம், நவீன யுகம், எங்கும் பரபரப்பு என்றெல்லாம் கூறி, ஒரு பாடலின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை அதிவேகமாக ஆடுவது வழக்கமாகிவிட்டது. இது நல்லதல்ல. மூச்சிறைக்கும் என்பதோடு, அது இருதயத்துக்கும் ஊறு விளைவிக்கும். (unnatural bio-rhythm).

எந்த வயதினரும் நாட்டியம் பயிலலாம். மேடையேறுவதே குறிக்கோளாக இல்லாதவரை, நாட்டியத்தால் ஒருவர் பயனடைவது உறுதி. அப்படி மேடையேற வாய்ப்பு இருக்கிறவர்களும், தம் சுயமதிப்பையே பெரிதாக எண்ணாமல், நாட்டியத்துக்கு முக்கியத்துவம் அளித்தால், பார்ப்பவர்களையும் அந்த அமைதியும், ஆனந்தமும் சென்றடையும்.

பி. கு. அக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் (பஞ்சாபி) பெண்ணும், அவள் மகளும் என் பெண்ணின் இலவச நாட்டிய வகுப்பில் சேர்ந்து, பெரிதும் பலன் பெற்றிருக்கிறார்கள். சிறுமி கலகலப்பாக ஆகிவிட்டாள். தமிழில் கூடவே பாடுகிறாள்! 35-வயதான மாது மிகுந்த தயக்கத்துடன் சேர்ந்தாள். இப்பவும் ஒரே negative. ரொம்ப கஷ்டப்பட்டிருப்பதால், சுயபச்சாதாபம், பயம். வயதில் சிறியவர்களை மாற்றுவது எளிது.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *