க. பாலசுப்பிரமணியன்

 சூழ்நிலைகளும் குழந்தைகளின் கற்றலும்

education1

ஒரு குழந்தையிடம் குடும்பத்தினர் பேசும் பொழுதும் பழகும் பொழுதும் அவர்களுடைய குரலும்  உடல் மொழிகளும் நம்பிக்கையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும். அதட்டிப் பேசும் பொழுதும் கடுமையாகப் பேசும் பொழுதும் அந்தக் குரலின் ஏற்றதாழ்வுகள் குழந்தையின் உள்மனத்தை பாதிப்பதாக உள்ளன. இந்த பாதிப்புகளை குழந்தைகள் தங்கள் கண்களின் மூலமாகவோ அல்லது தங்கள் உடல் அசைவுகள் மூலமாகவோ வெளிப்படுத்துகின்றன. சில நேரங்களில் கடுமையான சொற்களைக் குழந்தைகள் புரிந்து கொள்ளாவிட்டாலும் அந்தச் சொற்களின் உள்நோக்கத்தை புரிந்து கொள்கின்றன. இதனால் குழந்தைகள் மனதில் ஒரு இனம் புரியாத பயம் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.

இந்த பயத்தின் காரணமாக குழந்தைகள் ஒரு செயலைச் செய்ய விரும்பாமலோ அல்லது முயற்சிக்காமலோ இருக்கலாம். அல்லது சில சம்பந்தப்பட்ட செயல்கள் மீது விரும்பத்தகாத ஒரு வெறுப்பும் ஏற்படலாம்.

ஒரு உரையாடல் நடக்கும் பொழுது குழந்தைகள் சம்பந்தப்பட்ட நபர்களின் உடல் மொழியை உன்னிப்பாக கவனிக்கின்றன. உடல் மொழிகள் வார்த்தைகளைவிட அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை.

உதாரணமாக கைகளை  நீட்டிப் பேசுதல், விரல்களால் அவர்களை குறித்துப் பேசுதல், அலட்சியமான முகத்தையும் பார்வையையும் கொண்டு பேசுதல், கோபத்தையும் வெறுப்பையும் காட்டுகின்ற பார்வைகொண்டு பேசுதல் போன்றவேற்றை  முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும்.  அனேக நேரங்களில் குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் உடல் மொழிகளை அப்படியே பிரதிபக்கின்றன. சில நேரங்களில் இந்த மாதிரியான கற்றல் ஆழமாக நினைவுகளில் பதிந்து பல ஆண்டுகள் வரை அவற்றின் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

வளரும் பருவத்தில் கற்றல் நேர்முகமாக  (direct learning )   இல்லாமல் அதிகமான விழுக்காடு மறைமுகமாக (indirect  learning ) ஏற்படுகின்றது. குழந்தைகள் பெற்றோர்கள் மட்டுமின்றி தன் வயதுசார்ந்த மற்ற குழந்தைகள் மூலமாகவும் கற்றுக் கொள்கின்றன. தங்களைப் போன்ற  மற்ற குழந்தைகள் என்ன செய்கின்றன, எப்படிச் செய்கின்றன எதற்க்காகச் செய்கின்றன என்ற  கேள்விகள் குழந்தைகள் மனதில்  எழுகின்றன..  அவர்களின்  செயல்களைப்  பார்த்தவுடன் தானும் அதேபோல் செய்யவேண்டும் என்ற ஒரு உந்துதல் உள் மனத்தில் எழுகின்றது. மனநல மற்றும் மூளை வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் மூளையில் உள்ள “கண்ணாடி நியூரான்கள் ” (Mirror neurons ) மூலம் ஏற்படும் பாதிப்புக்களை ஆராய்ந்து “சமூகக் கற்றல்” (social learning )எவ்வாறு நம்முடைய கற்றல் திறன்களை பாதிக்கின்றது என்று விளக்கியிருக்கின்றனர்.

பொதுவாகக் குழந்தைகள் தங்கள் விளையாட்டுக்களை ஆரம்பிக்கும் பொழுது  முதலில் ‘அப்பா-அம்மா’ விளையாட்டைத் தொடங்குகின்றன. பின்பு “டீச்சர்’ மாணவர் சூழ்நிலையை முன்னிறுத்தி  விளையாடுகின்றன.இவ்வாறு வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் ஒரு கருத்தை முன்னிறுத்தி செயல் படுகின்றன. இவை அனைத்தும் சூழ்நிலைகளிலிருந்து கற்றுக் கொள்ளப்பட்டவை.

சூழ்நிலைகளால் ஏற்படும் பாதிப்புகள் ஆக்கபூர்வமாகவும் இருக்கலாம் அல்லது கேடுகளை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம். ஆகவே குழந்தைகளின் வளர்ச்சிப் பாதையை மன நலத்திற்கு ஏற்றதாக அமைத்துத் தருதல் குடும்பத்தில் உள்ள அனைவரின் பொறுப்பாகும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *