Tag: கவிஜி

  • ருசி

    -கவிஜி 

    உன்னை அறிய
    உன்னை அரி!

    ஞான ஒளி
    போகட்டும்
    பின் உன் விழி
    போகட்டும்

    திண்ணைப் பேச்சு கவனி
    தின்னும் சூட்சுமம் பவனி

    காதலைக் கட
    காமத்தை விட
    உற்றாரா நண்பரா
    இடம் பொருள்
    ஏற்று நடத்து

    பெற்றோரா பேரின்பமா?
    முன்னது முன்
    பின்னது பின்

    படி படித்ததை
    எழுதாதே
    எழுது எழுதியதை
    எழுதாதே

    சாமி சமயம்
    உள்ளாடை
    வெளியே காட்டினால்
    ஓட்டை என்பேன்

    ஒன்பது ஓட்டை
    ஒவ்வொன்றும் அற்புதம்
    சுத்தம் செய்

    ரசி புசி ருசி
    பசி கசி வசி
    எண்ணாதே வரும் மரணம்…!

     

    Share
  • ’மழை’ புத்தகம்!

    -கவிஜி 

    திறக்காத ஜன்னலுக்குள்ளும்
    கசிந்துருகும் துளிகளின்
    வட்டங்களில் வளைதல்
    திரும்புதலென
    மழையின் மாயங்கள்…!

    கவ்விய போர்வைக்குள்
    பட்டுத் தெறிக்கும்
    புது வாசமென
    அப்பிக் கொண்ட கருமேகப்
    பிழிதலாக மழையின் வேகங்கள்…!

    விரட்டி வரும்
    தாகங்களின் நூலிடை வெளிகளாகத்
    தொட்டுத் தொட்டுப் பட்டுப் படரும்
    பூமியின்
    சாயமென மழை சாட்சிகள்…!

    இதுவரைக் கேட்காத
    சத்தத்தில் இன்றைய
    மதிய மழைச்
    சாரலே அல்லாத
    நெடுந்தொடர் எனச்
    சில்லிட்ட நினைவுகளை
    உணர்ந்த போது
    வாசித்து முடித்திருந்தேன்
    “மழை’ புத்தகத்தை…!

     

     

    Share
  • அம்பிளி இல்லம்

    –கவிஜி.

    “இது மாலை நேரத்து மயக்கம் …”- பாடல் கேட்டுக் கொண்டே மழை பார்த்துக் கொண்டிருந்தேன். சோவென மழை, இல்லை … பலத்த மழை, பழுத்த மழை.

    சனிக்கிழமை மாலை வேறு. கொஞ்சம் குடித்துக் கொண்டும் இருந்தேன். டாஸ்மாக் முன்னால் விழுந்து கிடப்பது போல் இல்லை எனது குடி. இது முன்னால் காதலியின் பிரிவு முத்தம் போல. அத்தனை மென்மையானது. மேன்மையானது. தானாக புன்னகைத்துக் கொண்டே ஏதேதோ யோசிக்கத் தோன்றியது. “ஜன்னல் தாண்டி வந்து முகம் தொட்ட சாரலில் கடவுளின் எச்சில்” என்று மொக்கையாக கவிதை கூட வாய்மொழியாக நினைத்த போது தான் எதிர் வீட்டு ஜன்னல் கதவுகள் முன்னும் பின்னும் வேக வேகமாக அடித்துக் கொண்டிருந்தன, அத்தனையும் காற்று. பெருங்காற்றில் பெரு மழை. பெருமழைக்குள் மாலை மூடுகிறது, கவ்விய மௌனமாக.

    இப்போது, “ஏதோ நினைவுகள், மனதிலே மலருதே…” பாடல்.

    எப்போதும் அடைத்தே கிடக்கும் ஜன்னல் எப்போதாவது எட்டாவது அதிசயமாய் திறக்கும். ஒன்பதாவது அதிசயமாக ஜன்னலில் ஒரு பெண்ணின் முகம் சோர்ந்து காணப்படும். அதுவும் பின்னிரவு நேரங்களில் மழை நாட்களில் அடர் வெயில் சமயங்களில் இப்படி எப்போதாவது தெரியும் முகத்தில் ஒரு வித தெளிவும் இல்லாத, குழப்பமும் இல்லாத வெற்றிட வட்டம் போல அந்த முகம் வெறித்திருக்கும். முன் அறையில் பெரியவர்கள் பேசுவதும், போவதும் வருவதுமாகவே இருப்பார்கள் அந்த வீட்டுத் தாத்தா கூட என்னுடன் எப்போதாவது வாக்கிங் வருவார்.

    “சார், அது உங்க பேத்திங்களா?” என்று கேட்கத் தோன்றும். பின், “ம்… சரி எதுக்கு வம்பு!” என்று வாய் சாத்திக் கொண்டு நடை சாற்றுவேன். பெரிதாகப் பழக்கம் இல்லை என்பதால் கடந்து போவது சுலபமாக இருக்கும். சரி, இன்று என்ன ஆனாலும் பரவாயில்லை கை காட்டி விட வேண்டும். ‘அம்பிளி இல்லம்’, என்று வாயில் ஸ்லாபில் பெயர் பதிந்து வைத்திருக்கிறார்கள் ஒரு வேலை அம்பிளிதான் பெயராக இருக்குமோ?

    வாய்க்குள் மழை வைத்தது போல மெல்லமாக, ஆனால் மன சத்தத்தில் அதிகமாக ‘அம்பிளி’ என்று கத்தினேன். எனக்கே கேட்டதாகத் தெரியவில்லை. “இந்த பொண்ணுங்கள நம்பவே முடியாது திடீர்னு போட்டு குடுத்துட்டு போயிட்டே இருப்பாங்க. அதான்…”யோசித்தேன். யோசிக்க யோசிக்க அவளின் தீர்க்கப் பார்வை கவிழ்ந்து கொண்டே இருந்தது. மிகப் பெரிய மேகத்தின் கரிய நடையைக் கொண்டிருத்த கூர் முகத்தில், வட்ட வட்டமாய் விழுந்த துளியின் நிறப் பிரிகையில் வானவில்லின் இரு நிறம் கூட அவள் முகம் தாங்கிப் போனது போல நீண்டு வளைந்து கிடந்தன என் பார்வையின் குறிப்புகள்.

    கையை ஆட்டிக் கொண்டே ஜன்னலுக்கு வெளியே உடலை சற்று தள்ளி முகத்தை நீட்டினேன். மழைப் பெண் நனைத்த முகத்தை கவிப் பெண் நனைக்கவில்லை, இன்னும் குனிந்தே இருந்தது முகம்.

    சற்று சத்தமாகவே ‘அம்பிளி’ என்று கத்தினேன். வெற்றிடம் நிரப்பிய மழைச் சாரல்கள் தாண்டி சத்தம் அவளை அடைய நொடிக்குள் நொடி ஆனது. மெல்லத் தலை தூக்கிப் பார்த்தவள், என் கண்களை ஆழமாக, தீர்க்கமாக, கூர்மையாகப் பார்த்தாள். ஒளி நிறைந்த அழகிய முகம். செதுக்கிய கண்களில் குதித்தது பார்வைகள்.

    ‘ம்ம்ம்ம்ம்….’ என்று யாரோ என் அருகே முனகுவது போல இருக்க, மெல்ல திரும்பிப் பார்த்தேன்.

    தலை இல்லாத பெண் உடல் ஒன்று எனக்குப் பின்னால் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தது.

    கண்கள் விரிய மூச்சடைத்து நடுங்கிக் கொண்டே, நா வறண்டு கத்திக் கொண்டே சட்டெனத் திரும்பி அம்பிளியைப் பார்த்தேன்.

    இப்போது என் ஜன்னல் விளிம்பில் அதே அம்பிளியின் தலை இருந்தது.

    ஆ…ஆஹ்…ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்…

    Share
  • நூறாண்டுத் தனிமைகள்

    -கவிஜி

    நூறாண்டுத் தனிமைக்குள்
    குறையாத தேடலின்
    நயனங்களின் நீண்ட கனவாய்க்
    காற்றுப் புரவியொன்றின்
    பயணங்கள்…

    புதைந்து பதிந்த, விதைந்து
    குளிர்ந்த, பாதச் சுவடுகளின்
    வைகறைத் தோட்டங்கள்
    விளைவதாக, கற்பனை பூத்த
    மயானங்கள்…

    நள்ளிரவு தேசங்கள், நரை தாண்டிய
    கரை வேண்டிய, யதார்த்தங்களின்
    உடைதலின் கூட்டு முயற்சிகள்
    கொத்துக் கொத்தாய், சத்தமிட்ட புதைகுழிச்
    சயனங்கள்…

    நித்திரைத் தேரின், சித்திர வேரின்
    முத்திரை கரைய, முகத் திரை அறைய
    விரைந்தோடும், வழி தேடும்
    தேகச் சூட்டின் ஆற்றாமைக்குள்
    இன்னும் இன்னும் அதே
    நூறாண்டுத் தனிமைகள்…!

     

     

    Share
  • தலைமுறை

    -கவிஜி  

    ஒவ்வொரு முறையும்
    ஒருவன் எழுதியதை
    இன்னொருவன்
    மாற்றி எழுதி விடுகிறான்…
    அவனையும்
    மாற்றி எழுதுவதுதான்
    ஒருவன் என்பதே
    ஒவ்வொரு முறையும்
    எழுதப்பட்டவை…
    அது முதல்முறை
    கடைசி முறை
    என்பதையெல்லாம்
    தாண்டிய
    ஒரு தலைமுறை
    அவ்வளவே…!

     

    Share
  • கடந்தது காலம்

    -கவிஜி 

    இல்லாதவனைத் தேடும்
    இருப்பவன் இருப்பு
    நெருப்பு…

    கடந்த பாதை முள்
    என்றால்
    கடக்கப் போவதும்
    பாதங்களே…

    சுட்டும் விழிச்சுடர் ஆன
    சிந்தனையில்
    அடர்மத்தியக் காடு
    தொலைந்திருந்தது…

    தேடல் ஒன்றாய்
    இரண்டாய், ஒன்றும்
    இல்லாமலும்
    கூடில்லாப் பறவையின்
    தாகம்…

    இறந்தவளின் புடவை
    நுனியில் சமையலறை
    சிணுங்கிக் கொண்டிருக்கிறது
    குழந்தையாக…

    சாமர்த்தியம் எதுவெனப்
    புரிந்த கணம்
    சாமர்த்தியமாய்க் கடந்தது
    காலத்தை…!

     

    Share
  • மதுவிலக்கு அவசியமா! மதுவிலக்கு சாத்தியமா?

    — கவிஜி.

    திடும்மென விழித்துக் கொண்டு, “நான் எங்க இருக்கேன்? நான் எங்க இருக்கேன்?” என்று கேட்பது போலத்தான் இருக்கிறது, மதுவிலக்குக்கு ஆதரவாக ஆங்காங்கே இருந்து வரும் குரல்களின் கூக்குரல். மது இன்று நேற்றா வந்தது? அது மனிதன் தோன்றிய காலம் முதல் வேறு வேறு வடிவங்களில், வேறு வேறு நிலைகளில் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. வேட்டை மனிதன் இரவுகளைக் கொண்டாடித் தீர்க்க மதுவைக் கையாண்டான். கொண்டாட்டங்களின் நீட்சிக்காகத்தானே இந்த வாழ்வு. பகல் முழுக்க மிருகங்களோடு மல்லுக் கட்டியவனுக்கு மது தேவையுமாக இருந்தது. அவனின் உடல்வாகும் மனநிலையும் அதற்கு பொருந்திப் போனது. வாழும் வரை வாழ்ந்தான். ஓங்கு தாங்கி செழித்தான்.

    ஆனால், இன்று நடப்பது வேறு. இங்கு விற்பது மதுவுமல்ல, குடிக்கும் மனிதனும் ஆதி மனிதன் அல்ல. அவன் பறந்து விரிந்து கிடந்த உடலோடு ஆரோக்கியத்தைப் பசுமையாக கொண்டவன். இன்று இருப்பவனோ சர்க்கரையும், ரத்தக் கொதிப்பும் கொண்டு கூனிக் குறுகி இதயம் அடைத்துக் கிடப்பவன். தரமற்ற தயாரிப்பாகவே மது இருக்கும் பட்சத்தில் பலவீனமான இன்றைய மனிதன் மனதாலும் உடலாலும் அடிமை ஆகிறான். மடிந்தும் போகிறான். எல்லாவற்றிலும் கலப்படம் உப்பில் தொடங்கி, கடுகு வரை. காகிதத்தில் தொடங்கி ஆணுறை வரை. அரிசி, மாவு, காய்கறி என்று கலப்படம் இல்லாத பொருள்கள் ஒன்றுமே இல்லை. அதில் மது மட்டும் என்ன விதி விலக்கா? அதிலும் கலப்படம். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், மதுவில் கலப்படம் அல்ல மதுவே கலப்படம்.

    மதுப் போத்தலுக்குள் ஊசி, ஆணி, ஆணுறை, பல்லி, தேள் என்று சமீபத்திய செய்திகள் நிறைய. அதையெல்லாம் தாண்டி, மதுவுக்குள் மிகப் பெரிய அரசியல் பூதம் ஒளிந்து கொண்டு அச்சுறுத்துவதுதான் ஆதாரத்தையே ஆட்டிப் பார்க்கிறது. இன்று நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு மது விலக்கு வேண்டும் என்று கோசம் இடும் எதிர்க் கட்சி மற்றும் இதர கட்சி தோழர்களிடம் ஒரு கேள்வி. தமிழ் நாட்டில் மதுக் கடைகளை திறந்தது யார்? தொடர்ந்து குடித்த மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட போது எங்கு போனீர்கள்?

    No-alcoholமக்களிடம் திரும்பி ஒரு கேள்வி, ஏன் இத்தனை நாட்கள் மது போதை என்பது உயிர்க் கொல்லி என்று உங்களுக்குத் தெரியவில்லை? ஆளும் கட்சியிடம் ஒரு கேள்வி. இத்தனை பேர் கத்தியும் இப்படி காதிருந்தும் கேளாமல் இருப்பது நியாயமா? இது நீங்கள் இருக்கும் இடத்துக்கு அழகா?

    சரி, சொல்லிப் பார்த்தோம், கேட்கவில்லை என்று மாணவர்கள் கையில் எடுத்த ஆயுதம் சரியானதா? மாணவர்களே சிந்தியுங்கள். “என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்”- என்று காவல் துறை சொல்லும் அளவுக்குப் போனது உங்களின் அராஜக போக்கு. நல்ல தலைவன் இருந்திருந்தால், கல்லைக் கையில் எடுத்திருக்க மாட்டீர்கள். இது என்ன ஷங்கர் படமா புரட்சி என்பதைச் சாலையில் கத்திக் கொண்டு கூட்டம் சேர்த்து பிரமாண்டப் படுத்துவதற்கு.

    என்ன செய்திருக்க வேண்டும்? மதுக்கடை வேண்டாம் நல்ல முடிவுதான். மாணவர்கள் திரண்டார்கள் சரிதான். நாளைய எதிர்காலம் இன்றைய மாணவர்களின் கையில் ஒப்புக் கொள்கிறோம். சாத்வீக முறைப்படிதானே போராட்டம் நடந்திருக்க வேண்டும்? ஆயுதம் ஒரு போதும் நிரந்தரத் தீர்வை அளிக்காது என்று யாருமே கூறி கேட்டது இல்லையா? எடுத்ததும் அத்தனை பெரிய கல்முறையா? கலாம் காண சொன்ன கனவை இப்படிதான் நிறைவேற்றுவதா மாணவர்களே? இத்தனை கலவரம் நடந்து கொண்டிருக்கையிலும் தங்களின் வேலைக்கு நேரமாச்சு என்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு போன சில மனிதர்களைப் பார்த்து என்ன சொல்வது? அட, முட்டாள் மக்களே உங்களுக்காகத்தானே அந்தப் பிஞ்சு மனிதர்கள் தாங்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்து, அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒலி எழுப்பி ஒதுங்கிப் போகிறீர்களே, நீங்கள் என்ன மாதிரி மனிதர்கள்? புரியவில்லை, மீண்டும், மீண்டும் மேலும், மேலும் போதை ஏறிய பொழுதாகவே இருந்தது. புரட்சி வெடித்த அன்று.

    இந்தக் கட்சிக்காரர்களின் கையில் 60 சதவீதம் மது உற்பத்தி உரிமம். அந்தக் கட்சிக்காரர்களின் கையில் 40 சதவீதம் மது உற்பத்தி உரிமை. விளங்குமா? மது வேண்டாம் என்று அவர்களின் பங்குக்கு அவர்களும் வந்து பேட்டி கொடுத்துக் கொள்கிறார்கள் (முதல்ல உங்க கடையை சாத்திட்டு வாங்க). இதுல உண்ணாவிரதம், தற்கொலை வேற. ஏன் சாப்பிடாமல் வெயிலில் உட்கார வேண்டும்? ஏன் சாக வேண்டும்? நன்றாகச் சாப்பிடுங்கள். போராட வலிமை வேண்டும். உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்ந்தேன் என்பது திருமூலர் வாக்கு. சத்தம் போட்டுக் கத்திக் கூப்பாடு போட்டுப் போராடுங்கள். இது மக்களுக்காக மக்களால் மக்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக நாடு. மன்னர் ஆட்சி ஒன்றும் நடை பெறவில்லை. அப்படி நடப்பதாக அதிகார வர்க்கம் பகல் கனவு கண்டால், தெளிய வைக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. இது வேண்டும், இது வேண்டாம் என்று சொல்ல, கேட்க உரிமை ஓட்டுப் போட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு (ஓட்டுப் போடாத வெட்டி ஆபிசர்ஸ் எல்லாம் போய் கிரிக்கெட் பாருங்க).

    சரி நாளையே அனைத்து மதுக்கடைகளையும் மூடி விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம், தினக் குடிகாரர்களின் நிலை என்ன? அத்தனை சுலபத்தில் ஒரே நாளில் விட்டு விடும் பழக்கமா அது? செத்தே போக மாட்டான்? தற்கொலைகள் நிரம்பாதா? கொலைவரை கூட நீடிக்கும். அடுத்தடுத்த எதிர்பாராத அத்தனை பிரச்சினைகளும் வீதிகளில் நிறையும். வருடக் கணக்கில் வாழ்க்கையில் பாதி நாட்கள் குடித்த பழக்கத்தை ஒரே நாளில் எப்படி விட்டு விட முடியும்? அதன் நீட்சியாக கள்ளச் சாராயம் முளைக்குமே! மற்ற இதர போதை வஸ்துக்கள் துளிர் விடத் தொடங்குமே, என்ன செய்வது?

    சரி, இன்று அனைவருமே போராடுகிறோம். அப்போ இதுவரை குடித்தவர்கள் எல்லாம் யார்? (கண்ண கட்டுது). இது என்ன சுய விளம்பர மேடையா? ஆளாளுக்கு நானும் இருக்கிறேன் என்று காட்டிக்க கருத்துச் சொல்வதற்கு? எங்கே ஒரு கேள்வி கேட்கிறேன், இன்று போராடுகிற கூட்டத்தில் பெரும்பாலானவர்களில் ஒருவர் கூட ஒரு முறை கூட குடித்தது இல்லை என்று கூறுங்கள் பார்ப்போம். ம்ஹும்… அப்படிச் சொன்னால் அது குடிகாரன் விடிந்ததும் கேட்கிற, நேற்று சொன்ன பொய். சரி, இப்போதாவது நல்ல புத்தி வந்ததே என்று பாராட்டத்தான் வேண்டும், பாராட்டுவோம். ஆனால், அதே சமயம் இத்தனை போராட்டத்தையும் கண் கொத்திப் பாம்பாக பெருமூச்சு விட்டபடி ஒரு குடிகார கூட்டம் சத்தமே இல்லாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறதே, அவர்களுக்கு என்ன செய்ய போகிறோம்? ம்ம்ம்ம்…

    மெல்ல மெல்லத்தான் குறைக்க வேண்டும். உடலுக்குள் வந்த வைரசை ஒரேடியாக அழிக்க முடியுமா? மெல்ல மெல்லத்தான் அழிக்க முடியும். முள் மீது விழுந்த சேலையை உடனே எடுக்க நினைத்தால் கிழிந்து விட்ட சேலைதான் மிஞ்சும். மெல்ல மெல்லத்தான் எடுக்க வேண்டும். குடிக்க வைத்துக் கெடுத்து, சாவு வரை கொண்டு போய் விட்டு விட்டோம். இப்போது, திரும்ப அழைத்து வருவது அத்தனை சுலபம் அல்ல. மெல்ல மெல்லத்தான் அழைத்து வர முடியும். 10 டு 10 என்பதை மதியம் 2 டு 8 என்று மதுக் கடைகளின் நேரத்தைக் குறைக்க சொல்வோம். மதுக் கடைகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கச் சொல்லுவோம். மதியம் மட்டும் தான் மதுக் கடைகள் திறந்திருக்கும் என்று குடிமகன்களை மனதளவில் தயார் படுத்துவோம். அதே சமயம், மதுவின் தீங்கை செயல் முறையாக ஒவ்வொரு குடிகாரனுக்கும் அவனவன் குடும்பமே தீவிரமாக வகுப்பு எடுக்க கற்றுக் கொடுப்போம்(ரொம்ப முடியலனா சோத்துல விஷத்தை வைச்சிருங்க தாய்மார்களே, 4 பேர் செத்தா 40 பேர் யோசிப்பான்).

    அதே சமயம் அரசு கொடுக்கும் மதுவைக் கூட தரமாகக் கொடுக்க சொல்வோம்(குறைந்த பட்சம் தேளும், பல்லிகளும் இல்லாமலாவது இருக்க வேண்டும்)
    மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்யும் மது கூடங்களுக்கு ஆர்டர்கள் தருவதை அரசு நிறுத்த வேண்டும் என்போம் (மெல்ல மெல்ல அவர்களை வேற தொழில் செய்ய அவர்களை மனதளவில் தயார் படுத்துவோம், பாவம் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள் ?)
    மது பார்களை இல்லாமல் செய்ய அரசு முடிவெடுக்க வேண்டும் (ஒரு பிளாஸ்டிக் டம்ளர் 6 ரூபாய்க்கு விற்ற பிசினெஸ் புத்தி மந்தமானால் ஆகட்டும்)
    கொடுத்த லைசன்சுகளை ரத்து செய்யக் கோரிக்கை வைப்போம் (குடித்தே தீர்வேன் என்று கடவுள் மீது ஆணை இட்டவன் சரக்கை வாங்கிக் கொண்டு சென்று தன் மனைவி மக்கள் முன் அமர்ந்து வீட்டுக்குள் குடிக்கட்டும்)
    வீதிகளில், சாலைகளில் எவனாவது குடித்தால் வெளுத்து விடக் காவல் துறை ஆங்காங்கே உலாவட்டும் (இன்று காவல் காப்பதை விட அது ஒன்றும் கேவலம் இல்லை)
    பெற்றவர்களும் பிள்ளைகளைக் கவனியுங்கள் (பெரிய பள்ளியில் படிக்க வைத்து விட்டால் போதுமா?)
    ஆசியர்களும் மாணவர்களைக் கவனியுங்கள்(எப்போ எவன் மாட்டி விடுவானென்னு பயமா?)
    மாணவர்களும் உலகத்தை கவனியுங்கள் (போதைக்காகவா இந்த பிறப்பு? போதி சொன்ன இந்த மண்ணில் போதை சரியா? கேள்வியை உணருங்கள். பதில் கிடைத்து விடும்)
    அரசும் சிறுவர்களுக்கு மது விற்கக் கூடாது(!)

    இத்தனைக்குமான போராட்டமாக நம் செயல்பாடுகள் அகிம்சை முறையில் நடக்கட்டும். கல் கொண்டு எறிந்தால் காவல் துறை லத்தி கொண்டு அடிக்கத்தான் செய்யும். இரண்டையும் தவிர்ப்போம் இது நீண்ட நெடிய வாழ்வின் மைல்கல். சற்று போராடித்தான் நட முடியும். நட்டு விட்டால், பின் அசைக்க முடியாது.

    குடிக்கும் மனதை மாற்றுவதே பாதி சிக்கலைத் தவிர்த்து விடும். ஒரு குடும்பத்தில் குடிக்கும் ஒருவரை மாற்ற முடியாத குடும்பங்கள்தான் தமிழ் பாரம்பரியத்தின் பதிவுகளா?!!!!

    இன்றைய ஒரு துளிதான் நாளைய பெரு மழை. அது போல இன்று இருக்கும் நூறு மதுக் கடைகள் 50 ஆகும் பின் அது 25 ஆகும். பின் அது 5 ஆகும். பின் ஒரு நாளில் இல்லாமலே போகும்.

    மது இல்லாத உலகம் படைக்கும் கனவை விதைக்கும் முன் “காசு வாங்கிட்டு ஓட்டுப் போடுவதை நிறுத்தி விட்டு மதுக்கடையைத் தூக்கு… ஓட்டு போடுகிறேன்,”என்று சொல்லுங்கள். நாளை நமதே.

    கலவரமோ உயிர்ப் பலியோ இனியும் வேண்டாம் போராட்டம். வலுப்பெற வலுப்பெற, ஆயுதங்கள் கை நழுவி விடும் அவர்களுக்குமே என்பதுதான் நியதி. அது வரை வேண்டும் … நமக்குத் திடமான மன நிலையும், விட்டு விடாத கொள்கையும்.

    Share
  • ஆத்தா …

    கவிஜி.

    confusedகாலை 11 மணி – 28.11.1984.
    எல்லாரும் ஓடி வந்தார்கள். ஒரு சேர கொஞ்சம் முன் பின்னாக, “என்னாச்சு, என்னாச்சு குட்டி, எங்க இருக்க?” என்று கத்திக் கொண்டே வாசல் பக்கம் ஓடி வந்து தேடினார்கள்.

    எனக்கு மூச்சு அடைத்துக் கொண்டு வந்தது போல திக் திக் நிமிடங்களில் தொங்கிக் கொண்டிருந்தேன். என்னால் இப்போது கத்த முடியவில்லை. மேல் கிளையில் இருந்து தவறி கீழ் கிளைக்கு வந்த நொடிகளில் பயத்தின் உச்சியில் பறந்து கொண்டு கத்திய என்னால் இப்போது கீழ் கிளையின் முனையில் கை மாட்டி தொங்கிக் கொண்டிருக்கும் போது கத்த முடியவில்லை. என் மாமா என்னை சீக்கிரம் கண்டு பிடித்து விட்டார். நான் வழக்கமாக ஏறி அமர்ந்து கொள்ளும் எங்கள் கொய்யா மரத்தின் பாதியில் நான் பாம்பாய் தொங்கிக் கொண்டிருந்ததை சில பல பார்வையிலேயே கண்டு பிடித்து விட்டார்.

    “பயப்படாத, பயப்படாத. யாரும் திட்டாதீங்க. எல்லாரும் அமைதியா இருங்க,” என்று என்னையும் அதே சமயம் வீட்டில் அனைவரையும் அமைதியாக்கி விட்டு கொய்யா மரத்தின் அடியில் வந்தார்.

    பிறகு ஏணி வந்தது. மெல்ல நான் இறக்கப் பட்டேன்.

    மதியம் 12.30 – 28.11.1984.
    தண்ணிகாய் மரத்தின் அடியே விளையாடிக் கொண்டிருந்த நான் வீட்டை நோக்கி தலை தெறிக்க ஓடி வந்தேன். என் பின்னால் ஒரு பாம்பு என்னை விரட்டியதா? இல்லை. என்னைக் கண்டு பயந்து மரத்தின் மேல் ஊர்ந்து ஏறியதா என்று என்னால் அப்போது கவனிக்க முடியவில்லை. என்னால் வீட்டை நோக்கி மட்டுமே ஓட முடிந்தது. கத்துகிறேன், மீண்டும் வீட்டில் உள்ளவர்கள் திடு திடுவென வாசலுக்கு ஓடி வந்தார்கள்.

    “என்னாச்சு என்னாச்சு” என்று அவர்கள் கத்துவதற்கும். நான் “பாம்பு, பாம்பு” என்று கத்திக் கொண்டு ஓடி வருவதற்கும் சரியான இடைவேளையில் மதிய உணவுக்கு வந்த என் மாமா மீண்டும் என்னை நோக்கி ஓடி வந்து என்னை தாவி அனைத்துக் கொண்டார் என் உடல் நடுங்கியது.

    “என்னாச்சு குட்டிப்பா?”-என்று கேட்டுக் கொண்டே நான் எங்கிருந்து ஓடி வந்தேனோ அங்கேயே மறுபடியும் மெல்ல, கவனமாக பார்த்து பார்த்து போனார். நான் காட்டிய அந்த பாம்பு இன்னும் மரத்தின் மேல் ஒரு கிளையில் அமர்ந்து எங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. எல்லாரும் என்னை முறைத்தார்கள். அம்மா குச்சியை ஒடித்துக் கொண்டு அடிக்கவே வந்து விட்டார்.

    எல்லாரையும் போக சொல்லி விட்டு, மாமா என்னைப் பார்த்து ஆறுதலாக, “ஏன் குட்டிப்பா. இது அணிலுன்னு உனக்கு தெரியாதா!” என்று வாஞ்சையாக கேட்டார்.

    “ஓ அணிலும் இப்டிதான் இருக்குமா மாமா? என்று கேட்டேன். அப்போதைக்கு சிரித்து விட்டார் மாமா.

    அதன் பிறகு சாப்பிட்டுக் கொண்டே என் அத்தையிடம் “இன்னைக்கு நாளே நல்லா இல்லயே. மனசுக்கு என்னமோ மாதிரி இருக்கு” புலம்பிக் கொண்டிருந்தார்

    1984 – அக்டோபர் ஒரு மழை நாள்.
    மழை தூரத் தொடங்கி, இந்தா வந்துட்டே இருக்கேன் என்றது போல ஒரு சிணுங்கல், ஒரு முறைப்பு என்று அப்டி இப்டி என்று சாரலாய், பொல பொலவென வந்து கொண்டிருந்தது. நான் ஆத்தாவிடம் சென்று “எனக்கு மிச்சர் வேணும்” என்றேன்.

    “வா”- என்று எனக்கு மட்டும் மழைக் கோட்டை மாட்டி விட்டு கடைக்கு தூக்கி சென்றது. என்னைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்ட ஆத்தா தன் முந்தானையை என் தலை மேல் போர்த்திக் கொண்டு நடந்தது. நான் எது கேட்டாலும், எப்போது கேட்டாலும் ஆத்தா மறுக்காது. என் ஆத்தாவுக்கு கொஞ்சம் காது மந்தம். சாலையில் போகும் போது நான்தான் இடுப்பில் உக்கார்ந்து கொண்டு முன்னால் பின்னால் வரும் வண்டிகளை சொல்லி, விலக சொல்லிக் கொண்டே போவேன்.

    வழியெல்லாம் மழையோடு சேர்த்து மிச்சரையும், வாயில் கொஞ்சம் மண்ணில் கொஞ்சம் என்று போட்டபடியே வந்தேன். இந்தக் காட்சியை இப்போது என் நினைவுகளின் வெளியில் காண்கிறேன். அது ஒரு அற்புத ஓவியம் போல, மழையினூடே ஒரு சிவத்த குட்டை கிழவி, இடுப்பில் ஒரு குட்டிப் பையனை வைத்துக் கொண்டு வேக வேகமாக நடந்து வரும் காட்சியில் அசைகின்ற ஓவியம் ஒன்று தன்னை வரைந்து கொண்டே நகர்ந்து கொண்டு இருப்பது போல தோன்றுகிறது.

    வீட்டை நெருங்கும் போது ஒரு வளைவினில் மழை வேகம் எடுத்து விட அருகினில் இருந்த ஒரு வீட்டு வாசலில் மறைந்து கொண்டோம். நான் மழைக் கோட்டு போட்டு இருந்தாலும் முன்னால் ஜிப் போடத் தெரியாமல் என் நெஞ்சு, வயிறு பகுதி நனையத் தொடங்கியிருந்தது. ஆத்தாவும் எவ்ளவோ முயற்சி செய்து கண்களைக் கூராக்கி ஜிப்பை போட்டு விட முயன்றது, முடியவில்லை. அந்த வீட்டு ஆள் (அவர் பெயரை மறந்து விட்டேன்) “என்னடா குட்டி, ஆத்தாள மழைல போட்டு இப்பிடி கஷ்டப் படுத்தறயே” என்றபடியே வெளிய வர, ஆத்தா அவரிடம், “தம்பி இந்த சிப்ப கொஞ்சம் போட்டு விடுய்யா” என்று கேட்டது. இப்போது நினைக்கிறேன், ஆத்தா கேட்கும் தோரணை மற்றவர்களிடம் பேசும் முக பாவம், கொஞ்சமாக மனதில் புகை போல தங்கி இருந்தாலும் ஊதி ஊதி நினைவுகளைக் கிளறுகுறேன். அது அத்தனை அன்பானது, வாஞ்சையானது, தூய்மையானது, வெகுளித்தனமனது. ஒரு போதும் யாருக்கும் எந்த துரோகமும் நினைத்திடாத ஒரு மனம் அது. ஜிப்பை போட்ட பிறகு, நான் நனைய மாட்டேன் என்று நம்பிய அந்த முகத்தில் விழுந்த மழைத் துளிகள் இன்னும் என் நெஞ்சினில் சொட்டிக் கொண்டிருக்கின்றன. சுருக்கம் விழுந்த அந்த முகத்தை ஒரு வெண்ணிற புகை வடிவமாக பின்னொரு நாள் நான் கண்டேன்.

    1985 ஜனவரி – ஒரு நாள்.
    தாத்தா அதை கதை போல சொல்லிக் கொண்டிருந்தார்.

    அதே இடம், மதியம் 3 மணி இருக்குமாம், வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்ப வண்டியில் ஏறிய பிறகுதான் தன் தலைக்கு கட்டும் மைக்கா கவர் கீழேயே இருக்கிறது என்று பார்த்திருக்கிறார். அதற்குள் வண்டியும் நகரத் தொடங்கி விட, டிரைவரைப் பார்த்து வண்டியை நிறுத்த சொல்ல எத்தனிக்க, கீழே இருந்து மைக்கா கவர் தானாக வண்டிக்குள் வந்து விழுந்ததை ஆச்சரியத்தோடு பயந்து கொண்டே பார்த்து, வாயடைத்து அதே இடத்தில் உற்றுப் பார்த்திருக்கிறார். ஆத்தா சிரித்துக் கொண்டே மறைந்திருக்கிறது. நான் மிரண்டு போய் இன்னும் கொஞ்சம் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு சுருண்டு கொண்டேன். தாத்தா கண்கள் கலங்கி வாசல் வெறித்த கணத்தை இப்போது நானும் வெறிக்கிறேன். கலங்க ஒன்றுமில்லாதது போல வெற்றுப் பார்வையில் என் கண்கள் தூசுகள் கடக்கின்றன.

    1992 மே – ஒரு நாள்.
    நான் எப்போதுமே ஜன்னலோரம்தான் படுப்பேன். நான் வந்திருக்கிறேன் என்றால் அந்த இடத்தை எனக்கு விட்டு விடுவார்கள். அன்றும் அப்படிதான் ஜன்னலோரம் படுத்திருந்தேன். எனக்கு அடுத்து என் தம்பி, அதற்கு அடுத்து எங்க அக்கா, அடுத்து எங்க அண்ணி, அடுத்து எங்க தாத்தா படுத்திருந்தார்கள்.

    தூங்குவதற்கு முன் எனக்கு நேராக மேலே இருந்த பரணின் அடிபாகத்தில் கண்கள் விழுந்தது. குட்டி என்று என் பெயர் எழுதி இருந்தேன். வருடம் கூட 1984 என்று அருகினில் எழுதி இருக்கிறேன். அது இன்னும் அழியாமல் இருக்கிறது எப்படி என்று அப்படி ஓர் ஆச்சரியம் (அது இன்றும் அழியாமல் இருக்கிறது ஆச்சரியம் தொடர்கிறது).

    இதே ஜன்னல்தான் காற்றே இல்லாதது போல இருந்த ஒரு முன்னிரவில் படாரென அடித்து தானாக மூடிக் கொண்டது ஞாபகத்தில் வந்தது. யாரோ ஜன்னலை அடித்து சாத்தி விட்டு போவதை தான் உணர்ந்ததாக பெரியப்பா சத்தியம் செய்து கூறினார். அந்த நேரத்தில் இங்கே வந்து போக யாரும் இல்லை என்பது ஏக மனது கருத்தாக உணரப் பட்டது. பின் நேரம் ஆக ஆக, கொய்யா மரத்தினடியில் யாரோ விசும்பிக் கொண்டே இருந்ததும், அதைத் தொடர்ந்து சில குருவிகளின் பயம் கலந்த கத்தலும், தூரத்தில் ஏதோ ஒரு காட்டுப் பன்றியின் உறுமலும் மாறி மாறிக் கேட்டுக் கொண்டே இருந்ததையும், வீட்டுக்குள் எல்லாரும் விழித்துக் கொண்டும், யாரும் யாருடனும் எதுவும் பேசாமல் எழுந்து அமர்ந்து கொண்டு, ஒருவரையொருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டு, திக் திக் இரவைக் கழித்தது ஞாபகத்தில் வந்து போனது.

    நான் மெல்ல தூங்கி போனேன். அது ஒரு கனவு காட்சி. தாத்தாவின் கால் மேட்டில் என் ஆத்தா வெள்ளையாக புகை வடிவில் அமர்ந்து கொண்டு எங்கள் அனைவரையும், குறிப்பாக என்னை அதே வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தது.

    ஆத்தா எப்போதும் ஒரு காலை உள் நோக்கி மடக்கி, தன் இடது கையை தரையில் ஊன்றி கொஞ்சம் சாய்ந்தார் போலத்தான் அமரும். அன்றும் அப்படித்தான் அமர்ந்திருந்தது. அந்த அறை கொஞ்சம் சூடாகவே இருந்தது, வழக்கத்துக்கு மாறாக. நன்றாக என்னால் உணர முடிந்தது. ஆத்தா எனைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. அது ஆத்தாவேதான். ஆனால், பால் போல வெள்ளை நிறத்தில் மிதந்து கொண்டிருப்பது போல அமர்ந்து கொண்டிருக்கிறது. எனக்கு உள்ளுக்குள் நடுக்கமாக, என் மூச்சு, பெரு மூச்சாக மாறியிருந்தது. தடுமாற்றம், தவிப்பு, தாகம் எடுப்பதைப் போல உணர்ந்தேன். என் உடல் தானாக ஆடுவது போல ஒரு பிரமை. என் உடல் இன்னும் எடை கூடினார்போல உணர்ந்தேன். சட்டென விழித்து படாரென எழுந்து, எழுந்த வாக்கிலேயே அமர்ந்தேன். எழும்போதே என் பார்வை முழுக்க நான் பார்த்துக் கொண்டிருந்த என் ஆத்தா மீதுதான் இருந்தது. எழுந்து அமர்ந்த பின்னும் ஆத்தா என்னை பார்த்துக் கொண்டிருந்தது. நான் கண்களைத் தேய்த்துக் கொண்டு பார்த்தேன். இப்போதும் ஆத்தா என்னையே பார்த்தது. நேருக்கு நேராக கண்களில் தெரிந்த புகை போலான உருவம் மெல்ல மறையத் துவங்கியது. அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் அதே வேகத்தில் படுத்து போர்வையை தலையோடு போர்த்திக் கொண்டு என் தம்பியைக் கட்டிக் கொண்டேன்

    இன்று – 28-12-2014.
    இப்போது நினைத்தாலும் சில்லிடும் காட்சி அது. அதன் பிறகு நான் எல்லாரிடமும் கூறினேன். யாரும் நம்பவில்லை. வெறும் ஞாபகங்கள் என்று கடந்து விட்டார்கள். ஆனால் என்னால் அதை வெறும் ஞாபகமாக கடக்க முடியவில்லை. ஞாபகங்கள் மட்டுமா மரணத்துக்கு பின் இருக்கிறது. அதன் பிறகும் ஒரு தேடல் இருப்பதை நான் உணர்கிறேன். அங்கும் ஒரு மொழி இருக்கிறது. அந்த பாஷை நமக்கு புரிவதில்லை. இதோ இந்த கிணறு. வெறும் சாட்சி மட்டும் அல்ல. ஒரு மௌன மொழியின் ராட்சச கதறலை உள் வாங்கிக் கொண்டு மாயங்களின் குறியீடாக இங்கே இருக்கிறது. இதைத் தேடித்தான் நான் இன்று வந்திருக்கிறேன். கடந்த வாரம் முழுக்க என் ஆத்தாவின் நினைவுகள் என்னை தூண்டி ஏனோ இங்கு வர சொல்வது போல, ஒரு முரண்பாட்டு முகவரிக்குள் தொலைந்து விடும் முயற்சியை என்னில் விதைப்பது போல, ஒரு முடிச்சாகிக் கொண்டே இருந்தது. வந்தே விட்டேன். யாரும் சட்டென கண்டு பிடிக்க முடியாத பூமி வளையத்துக்குள் இந்த கிணறு இப்போது இருப்பது போல நான் நம்புகிறேன். காலம் ஓட ஓட பாதைகள் சுருங்குவதும் விரிவதும் எத்தனை எத்தனை மாயங்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன. இதோ இந்த கிணறுகூட தன் வட்டத்தை சுருக்கிக்கொண்டிருக்கிறது. இத்தனை குறுகிய கிணறல்ல இது. இங்கு வரும் பாதை கூட இத்தனை குறுகியது அல்ல. ஒரு பேருந்து போகும் அளவுக்கு இருந்த பாதை இப்போது ஒரு ஜீப் போகும் அளவுக்குத்தான் இருக்கிறது.

    இந்தக் கிணறு.
    நான் மெல்ல அருகினில் செல்கிறேன். என் அலைபேசி கொண்டு புகைப்படம் எடுக்கிறேன். ஆள் அரவமற்ற காட்டுக்குள் ஒரு பூதமாக மறைந்து இருக்கிறது. இனம் புரியாத பயத்தை எனக்குள் தெளிக்கிறது. உற்று நோக்குகிறேன். இதே கிணறுதான். 1984 டிசம்பர் 28 நான் கொய்யா மரத்தில் இருந்து விழுந்து தொங்கிய பின், அணிலை பாம்பென்று சொல்லி கத்திய பின், ஒரு, ஒரு மணி நேரம் கழித்து இந்த கிணற்றுக்குள் விழுந்து இறந்து போனதாக, தண்ணீர் சொட்ட சொட்ட ஆத்தாவைத் தூக்கி கொண்டு வந்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆத்தாவை படுக்க வைத்து அனைவரும் கத்திக் கொண்டும் கதறிக் கொண்டும் இருந்தார்கள். நான் எப்போதும் போல மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஆத்தா வாங்கிய கடைசி மிச்சர் அது. இப்போது அழ வேண்டும் போல இருந்தது. கொலைக்கார கிணறு உயிரைக் கொண்டு விட்டு ஒன்றுமே தெரியாதது போல, வாய் மூடி கிடக்கிறது சனியன். ஒரு கல்லை எடுத்து வேகமாக வீசினேன். ரெம்ப நேரம் கழித்து குபுக்கென்று ஒரு அமிழும் சத்தம் ஆழ் மனதில் இரைச்சலாக குபீர் என கேட்டது. அது எனக்கு மட்டுமே எதிரொலிக்கும் மிக நீண்ட சத்தமாக இருக்க போகிறது, இருந்தது.

    என்னால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. ஒரு புகைப்படம் போல அமர்ந்திருந்தேன். ஒரு தீர்க்கத்தை கலைத்துப் போடும் வேஷங்கள் நிறைந்த இடமாக அது இருந்தது. தேடலின் நிசப்தங்கள் யுத்தமற்ற போர்க்களத்தின் ஒரு மூலையில் படிந்து போன ரத்தக் கரையை சுரண்டி சுரண்டி எனக்கு பூசிக் கொள்ளும், பாரா ஆன்மாவை கசியச் செய்யும் இடமாக அது இருந்தது. இறப்பின் மணம் அங்கு வீசிக் கொண்டிருப்பதாக ஒரு உள்ளுணர்வு. என்னிலும் அந்த கிணற்றை சுற்றிலும். எனக்கு ஆத்தாவை பார்க்க வேண்டும் போல இருந்தது. தேடிப் பார்த்தேன் நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். மெல்ல கூப்பிட்டுப் பார்த்தேன் எனக்கே அச்சமாக இருந்தது.

    அந்த ஆத்தா என்கிற வார்த்தை இத்தனை வருடங்களில் எனக்கு எழுத்துப் பிழையை நாவில் நீட்டியது. முதல் முதல் பேசி பழகும் நாவைப் போல மடங்க மறுத்து. பயந்து ரத்தம் பீய்ச்சும் வலியோடு வெளி வந்தது.

    ஆ….த்தா….

    இப்போது ஏதோ ஒரு ஆர்வக் கோளாறில், எடுத்த புகைப்படத்தை அலைபேசியில் பார்க்கத் தொடங்கினேன்.

    ஒவ்வொரு புகைப்படமாக பார்த்தேன். திக் என்று இதயம் ஒரு நொடி நின்றது. புகைப்படத்தில் இருந்து எடுத்த நடுங்கும் கண்களை மீண்டும் கிணற்றில் வீசினேன். அதும் வெறும் கிணறாய் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. மீண்டும் புகைப்படத்தைப் பார்த்தேன். இனி அங்கு நிற்பது சரி இல்லை என்று உள்ளே என்னைத் தூண்டிய உயிர் பயத்தில் வேக வேகமாக வீடு நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தேன். என்னால் திரும்பிப் பார்க்க முடியவில்லை என் உடல் நடுங்கியது. எனை சுற்றி பனி மூட்டம் என்னை விரட்டுவது போலத் தோன்றியது. வேகமாக என் நண்பனுக்கு அலைபேசியில் அழைத்தேன் நடந்து கொண்டே …

    “சொல்லு மச்சான்”

    “மாப்ள, கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. நம்ம ராஜாவும் வேம்புவும். எங்க போனாங்க.”

    “அவுங்கதான் ஓடி போய்ட்டாங்களேடா, எங்க இருக்காங்கனு தெரியல. சிக்குனாங்கனா கொன்னேபுடுவாங்க. அவுங்கவுங்க வீட்டுல.”

    “டேய் மச்சா, ஏற்கனவே அவுங்கள கொன்னுதான் போட்ருக்காங்கடா. எங்க ஆத்தா செத்த கிணத்துக்குள்ளதான் அவுங்க பாடி இருக்குது.”

    அலைபேசியில் விழுந்திருந்த புகைப்படத்தில் வேம்புவும், ராஜாவும் கிணற்று மேட்டில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். அலைபேசியை சட்டென மூடி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு நடையைக் கூட்டினேன்.

    Share
  • ரயில் சொல்லும் கதை!

    -கவிஜி 

    இதில்…
    இல்லை…அதில்…

    இல்லையில்லை 
    கடைசியில்…
    பனி படர்ந்த 
    அதிகாலையில் 
    படர்ந்திருந்த தண்டவாளங்களில்
    எதில் வரப் போகிறது 
    எங்களுக்கான ரயில்…?
    என்பதோடு கதைமுடிந்த 
    முதல் பாகத்தின் இரண்டாவது 
    பாகம் இப்படித்
    தொடங்குகிறது… 

    எல்லாத் தண்டவாளங்களிலும்
    நிறைந்து நின்றன ரயில்கள்…

    ஊரை விட்டு 
    ஓடிப்போக நின்றிருந்த
    நாங்கள் 
    என்ன ஆனோம்
    என்பதை ஏதாவது
    ஒரு ரயில் சொல்லும்
    திருப்புக் காட்சியாக…!

     

     

     

    Share
  • வெண்ணிற இரவுகளின் மறுபக்கம்

    கவிஜி.

    வெண்ணிற இரவுகள்.

    உங்களை ஆழமாக நீங்கள் நேரில் பார்த்ததுண்டா…..?

    வெகு சுலபம்….

    தாஸ்தாவெஸ்கி – யை படியுங்கள்….

    அவரின் படைப்புகளின் இருட்டு, உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்….கனவுகளை தூக்கத்தில் தேடாமல், கனவுகளுக்குள்ளேயே தேடும், கனவல்லாத நிஜம் அவர்….. கை நடுக்கமுள்ளவரிடம் கை குலுக்குவது போன்றது அவரின் படைப்பை படிப்பது என்று எஸ். ரா. சொல்வது எத்தனை பொருத்தம் என்று வெண்ணிற இரவுகளை படித்த பின் புரிய முடிந்தது….தேடிக் கொண்டே தொலைதலை, டெலஸ்கோப்பை உடைத்து விட்டு, பார்க்க அவரின் கதை நாயகனால் முடிகிறது….

    தாஸ்தாவெஸ்கிவெண்ணிற இரவுகளில் காணாமல் போன அன்று, என் கண்களுக்கு தெரிந்த அமானுஷ்யங்களில் இரவை செதுக்கிக் கொண்டிருந்தார் தாஸ்தாவெஸ்கி. இன்று நாம் காணும் எத்தனையோ முக்கோண காதல் கதைகளின் முதல் முடிச்சை போட்டு விட்டது தாஸ்தாவெஸ்கியின் இந்த வெண்ணிற இரவுகள்தான்….கதவுகளை அடைத்துக் கொண்டு, ஜன்னல்களை திறந்து விடும் எழுத்துக்கள் அவருடையது….நிஜங்களை கருப்பு வெள்ளையாக்கி, முதலும் முடிவுமில்லாத கனவுகளாக்கும் பயணம் அவரின் பாத்திரங்கள்…தனிமனிதனின் ஆழ்மனதில் தீரவே முடியாத பாதை ஒன்று இருப்பதாக நம்மை பயணிக்க வைக்கும் உண்மைகள் அவரின் பக்கங்கள்….

    ஒவ்வொரு பக்கத்திலும் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டு, ‘இது அப்படி, அது இப்படி’ என்று கதை சொல்லிக் கொண்டிருக்கும் பாட்டிகளின் உருவகம் அவர்…

    அவரின் விரல்களில் வழிந்தோடும் துயரங்களே நமது சிந்தனையின் பாரங்களை தளர்த்திக் கொண்டு செல்வதாக தோன்றும் மௌனமொழியின் நடையில், உடையும் பாவனையும், பொம்மலாட்டம் ஆடுவதை தவிர்க்கவே முடியாது….

    காதல் காதல் காதல்……. அதுதான் வெண்ணிற இரவுகள்….

    எனக்கு தெரிந்த முதல் புதுமைப் பெண் இந்த கதையின் நாயகியாகத்தான் இருக்க முடியும்…..

    அவன் வருவான் வருவான் என்று இவனை வேண்டாமென்பதில் தொடங்கும் அவள் பாத்திரத்தின் நடை, அவன் வரவேமாட்டான் என்று நினைத்து இவனின் பேரன்பை பகிர உள்ளுக்குள் நினைக்கையில், அவன் வந்து விட, செய்வதறியாமல் இவனை ஒரு முறை கட்டி அணைத்து விட்டு அவனுடன் செல்லும் போது தொங்கு பாலத்தில் நடக்கிறது….

    வாசிக்கும் இதழ்கள் வரண்டு போவதை தடுக்க முடிவதில்லை . மொத்த வாழ்நாளுக்கும்,நான்கு இரவுகளும் ஒரு பகலும் போதுமானதாக மாறுவதை, ரசிக்காமல் இருக்க முடியவில்லை….பெயரற்ற, கதை சொல்பவன், நம் பெயர்களையும் மறக்க செய்வதாக பின்னப்பட்ட வரிகளில் கானல் நீராகி கண்ணாமூச்சி ஆடுகிறார் தாஸ்தாவெஸ்கி…. ஆழ் மனதில் குதிக்கும் அருவிகளின் கீதத்தை இரவெங்கும் தெளித்தபடியே இருக்கிறது வெண்ணிற இரவுகளின் வீதிகளும், தனிமையும்….சுவரெல்லாம் கிறுக்கிய விரலில் சுவர் கொஞ்சம் ஒட்டியிருப்பது போல, வெண்ணிற இரவுகளை படித்து முடிக்கும் நொடிகளில், விழியோரம் ஒட்டிக் கிடக்கிறது தாஸ்தாவெஸ்கியின் கண்ணீர்…..

    ஆழ்கிணற்றை சுமந்தே திரிகிறார் தாஸ்தாவெஸ்கி. அவரை எட்டி பார்க்கையில் எதிரொலிப்பது, நமது பேசாத குரல் என்பதில் ஒரு அழியாத வானவில் பூக்கத் துவங்குகிறது …..படம் வரைந்த ஓவியனை காணாமல், கண்டுபிடிக்க, வரைந்த படத்துக்குள் ஓடிக் கொண்டேயிருக்கும் எறும்பின் நகலேன நகருகிறது, வெண்ணிற இரவுகளின் மறுபக்கம்…..

    உங்கள் ஆசை நிறைவேறாத பொழுதுகளிலும் நீங்கள் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறீர்கள்?…. அப்போது, வாழ்வதே ஆசையாகி போகிறது என்பதை நிறைவேறாத பிரமிப்புடன் மனம் திறந்து மௌனம் புக செய்கிறது இந்த வெண்ணிற இரவுகள்…..இரவுகளின் நிறம் மாற்றும் வேலையை, அந்த பெண் செய்கிறாள்… பகலின் தீரா தூரத்தை காதலன் கடக்கிறான்.. இரவுகளையும் பகலையும் தூக்கி சுமக்கையில் பூத்த வியர்வை, பூவென அவளை மனமெங்கும் உருளச் செய்து, மௌனங்களின் ஊடே கண்களை மூடிக் கொண்டு தியானிக்கிறான் கதையின் நாயகன். அவனை நாமே ஒரு கட்டத்தில் தேடுவதை விட்டு விடுகிறோம்..அவன் எங்கு தொலைந்தாலும் அவளிடம் இருப்பதாக நம் மனமென்னும் கதவை, திறந்து காத்திருக்க செய்கிறது,தாஸ்தாவெஸ்கியின் சிந்தனை. விசித்திரம் நிறைந்த சித்திரமாகி வழியும் தாஸ்தாவெஸ்கி, நம் சுவர்களின் அழியாத கோலங்களை படித்தே செல்கிறார்….

    காதல் எல்லாருக்கும் எப்போதும் சாத்தியம்.. (அட காதல் கூட இல்லையென்றால் வாழ்ந்தென்ன? வீழ்ந்தென்ன?)

    கதையின் நாயகியை காதலிக்கும் நாயகர்கள் மொத்தம் மூன்று… இருவர் கதைக்குள்… ஒருவர் கதைக்கு வெளியே….அந்த ஒருவர் நானாகவும் இருக்கலாம். நீங்களாகவும் இருக்கலாம்.. ஏன்? தாஸ்தாவெஸ்கியாகக் கூட இருக்கலாம்….

    Share
  • மூக்குத்தியின் ரத்தம்

    -கவிஜி 

    அகம் கிழித்துக்
    குருதி பீய்ச்சும் சாந்த
    முகம்!
    புறம் தாண்டிய பேருந்து
    ஜன்னலோடு
    நசுங்கிப் போன
    எதிர் வாகனப் பயணத்தில்
    மைல் கல்லாய்
    உறைந்து சிதறியிருக்கலாம்
    மூக்குத்தியின் ரத்தம் தோய்ந்த
    படிநிலையோடு…
    அகம் அடங்காத் தவம் மட்டும்
    இப் பேருந்துக்குள்
    தொடரலாம், இறந்த கால
    எச்சங்களோடு…!

     

    Share
  • ஜடாமுனியும் சிவப்புக்கத்தியும் – 2

    – கவிஜி.

    அத்தியாயம் 2:

    “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை உண்டு. நான் தாண்டா ஓட்டுக்கு ராஜா, வாங்கலடாநோட்டுக்கு கூஜா”, பாடிக் கொண்டே பயணிக்கும் ஜடாமுனியைப் பார்த்து;

    “என்ன ஆலம்பனார், நகர்வலமா”? என்றது குதிரையின் காதின் மேல் அமர்ந்து கொண்டிருந்த சிவப்பு.

    “பின்ன ராஜாவாக முடிவு பண்ணிட்டா. கன்னத்துல மருவை ஒட்டித்தான ஆகணும் சிவப்பு” என்றபடியே தன் கூந்தலின் கட்டை அவிழ்த்து விட்டான் ஜடாமுனி. அது காற்றுக்கு அப்படியே கால்களைத் தூக்கிக் கொண்டு காற்றோடு மேல் எழும்பியது.

    “எப்டி நம்ம கெட் அப்?” என்பது போல பார்த்தான் ஜடா.

    “ஆலம்பனார், எல்லாம் சூப்பர் ஆனா குதிரைக் கலர்தான்…..” என்று இழுத்தது சிவப்பு.

    “என்ன சிவப்பு, என்ன கலர், மஞ்சள் கலர்ல குதிரை இருக்க கூடாதா? இங்கு எல்லாமே சாத்தியம். சிவப்பு, நம்மல்ல நிறைய பேர் கருப்பு மையால அழுத்தமா, ஆழமா ஒரு கோட்டைப் போட்டுக்கிட்டு உள்ள பத்திரமா உக்காந்து இருக்கறதா நினைச்சிட்டு இருக்காங்க. ஆனா, அது நிஜம் இல்ல. பூமி ஒரே ஒரு குலுங்கு அப்புறம் பொட்டணம் சாப்பாட்டுக்கு வரிசையில நாய் மாதிரி நிக்கணும்” மருவை சரியாக பொருத்திக் கொண்டே பேசினான். குதிரை மிதமான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது.

    “என்னடா சம்பந்தம் சம்பதம் இல்லாம பெசறேன்னு பாக்கறியா? கருத்து சொல்லனும்னு முடிவு பண்ணிட்டா, எந்த சீனையும் ஃபிரீஸ் பண்ணிட்டு சொல்லிடனும் (அட ப்ளேக் ஹுமர் ப்பா).

    அவினாசி சாலையில் மஞ்சள் குதிரையில் ஜடாமுடியோடு ஒருவன் போய்க் கொண்டு இருப்பது போய் வரும் வாகனங்களை சற்றுத் திரும்பி, எட்டிப் பார்க்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். எதிரே வந்த ஒருவனைப் பார்த்து “அண்ணே ரோட்ட பாத்து ஒட்டுங்க. கோமாளிய பார்த்து கோமாவுக்கு போய்டாதீங்க” என்றபடியே ஒரு ராஜாவைப் போல கம்பீரமாக அமர்ந்து கொண்டு இருபக்கமும் பார்த்துக் கொண்டே சென்றான் ஜடாமுனி.

    “ஆமா ஆலம்பனார், இந்த சிக்னல் மேட்டர இன்னுமா புடிச்சிட்டு இருக்கீங்க. இன்னும் எவ்ளோ இருக்கு, பாருங்க ரோட்ல பாதியக் காணோம்,” என்று சிவப்பு சொல்லும் போதே, பைக்கில் ஒருவன் கண் இமைக்கும் நேரத்தில் இவர்களைக் கடந்தான்.

    சட்டென திரும்பிய சிவப்பு, “ஆலம்பனார் இந்த ரோட்ல 40 கி மீ வேகத்துலதான் போகணும் அவன் 100ல போறான்.”

    சிவப்பு சொல்ல சொல்லவே குதிரையின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது.

    “சிவப்பு, கொஞ்சம் பேக் ரவுண்டு மியூசிக் போடேன், செமையா இருக்கும்,” என்ற ஜடாமுனி தேவையே இல்லாமல் குதிரையில் நின்று கொண்டு பயணிக்கத் தொடங்கினான்.

    “என்ன சிவப்பு பாக்கற ? ஒரு விளம்பரம் வேணும்ல. விளம்பரம் இல்லாம எவன் இருக்கறான், யோசிச்சு பாரு. எத்தன மொக்கைகள ஒரு நாள்ல பாக்கறோம். புரட்சி பண்றேன்னு சொல்லி என்னல்லாம் பண்ணுதுங்க, நான் நிஜமாவே புரட்சி பண்றேம்பா. அப்போ கொஞ்சம் பண்லாம்தான?”

    அடுத்து ஜடாமுனியை பேசவே விடவில்லை. இளையராஜா ஆர்கெஸ்ட்ராவை அரங்கேற்றி, ஆபாவாணனின் கிளைமேக்ஸ் போல பட்டையை கிளப்பியது சிவப்பு.

    அவனுக்கு மட்டுமே கேட்கும், உணரும் இசையோடு அந்த சேசிங் காட்சி அரங்கேறிக் கொண்டிருந்தது.

    “ம்ம்ம்ஹும்… டே தம்பி நீ படிச்ச பள்ளிக் கூடத்தைக் கட்டுனதே நான்தாண்டா. என்ன பாக்கற. நான் அந்தக் காலத்து குழந்த தொழிலாளிடா முண்டம்,” என்றபடியே சீறிப் பாய்ந்த பைக்கின் முன்னால் கச்சக் என்று குதிரையை நிறுத்தினான் ஜடாமுனி.

    அவன் பைக் பாவம், சற்று தூரம் இழுத்து சென்று, டிவைடரில் சற்று உரசி, தடுமாறி, அங்கும் இங்கும் இழுத்து, பின் நின்றது. மஞ்சள் குதிரையில் ஜடாமுடியோடு ஒருவன் வந்து குறுக்கே நிற்பதைக் கண்ட அவன் பைக்கை விட்டு மெல்ல கீழே இறங்கினான். அவன் உடல் கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்தது. அவனின் உடல் எல்லாம் கேள்விகள். தலையோடு மாட்டி இருந்த ஹெட் போன் கழன்று கழுத்தில் தொங்கியது.

    “இஃப் யூ ஆர் பேட், ஐ அம் யுவர் டாட்” என்று பைக்கின் தலையில் எழுதி இருந்தது. “உங்கப்பா வாங்கி குடுத்த பைக்கா?” என்றான் ஜடாமுனி பைக்கையும் அவனையும் மாறி மாறி பார்த்தபடியே.

    அவன் அமைதியாக நின்றான். வாத்து திருடியவன் போல.

    “அதான் இந்த வாசகம். நீ சம்பாரிச்சு வாங்கி இருந்தா உண்மை, உழைப்பு, உயர்வுனு எழுதிருப்ப. யார்க்குடா ப்ரூவ் பண்ண போறீங்க?” என்றபடியே தலையை ஒரு சிலுப்பு சிலுப்பிக் கொண்டு “ஏன்டாஇவ்ளோ வேகமா போன?” என்று அவனின் கண்களைப் பார்த்து கேட்டான் ஜடாமுனி.

    “அத கேக்க நீ யாருடா?” என்றான் பேட் பாய்.

    “உங்க டாட் டா, பேடு,” என்று செவுனியொடு ஒரு அறை விட்டான் ஜடாமுனி.

    “வேடிக்கை பாக்கறது எல்லாம் ஒரு பொழப்பு, இல்ல. போடா… போய் ரெண்டு நிமிஷம் லேட் ஆனதுக்கு ஆயா செத்துட்டான்னு சொல்லு. கார்பெரெட் கூலி,” என்று அத்தனை நேரம் வண்டியை ஓரமாக நிறுத்தி இவர்களையே குறு குறுவெனப் பார்த்துக் கொண்டிருந்த நெஞ்சுக்கு பேண்ட்டைப் போட்டிருந்த ஒரு ஆள் மாதிரி இருந்த ஒருவனிடம் கத்திக் கூறினான் ஜடாமுனி.

    தலை கிறுகிறுத்து, “ஏன் சார் அடிக்கறீங்க?” என்றான் பேட் பாய்.

    அவன் கண்கள் அங்கும் இன்னும் சுழன்று பார்த்தன, யாராவது உதவிக்கு வருவார்களா என்று பார்ப்பது போல இருந்தது. “நீ என்னைக்காவது யாருக்காவது உதவி பண்ணிருக்கியா? ” என்று அவன் மனசாட்சி கேட்க, சட்டென பார்வையை ஜடாமுனியைப் பார்த்தே திருப்பினான். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழுந்து விடலாம் என்பது போல.

    “ம்ம்ம்ம்… அடிச்சா தாண்டா மரியாதை வருது. இந்த ரோட்ல 40 கி மீ வேகத்துலதான் போகணும். மீறி போனா அடிப்பேன். பைக் ஓட்றது அவ்ளோ புடிக்கும்னா போ. எங்க ஓட்டணுமோ அங்க ஓட்டு, நாட்டுக்கு ரெண்டு தங்கம் ஜெய்ச்சு குடுடா. அது நீ வேகமா ஓட்றதுக்கு அர்த்தம். அத விட்டுட்டு இந்த ரோட்ல ஓட்டுனா? தலை சிதறி. ரோட்டோட சகதி மாதிரி அப்பிக்குவ. நீ சாகறது மட்டுமில்லாம முன்னால போறவன், பின்னால போறவன், பொழுது போகாம ஊரை சுத்தறவன், எந்த புள்ள பின்னாலயாது பல்ல இளிச்சிட்டு வெட்டியா, தண்டமா, ரோடு பொறுக்கறவன், எல்லாரும் சேர்ந்து இல்லடா சாவாங்க. இந்த ரோட்டுல இவ்ளோ வேகமா லூசு மாதிரி ஓட்டினா ஒருத்தியும் பாக்க மாட்டா (அதான ஆழ்மன தேடல்). அவ, அவ இன்சூரன்ஸ் இருக்கா? 25,000 மேல சம்பாதிக்கரானா? அக்கா தங்கச்சி இல்லாதவனா? துணி துவைச்சு குடுக்கறவனா? கழுத மாதிரிக் கத்துனாக் கூட உனக்கு ஜானகி குரல்லுனு சொல்றவனானு பார்த்து பார்த்து பொருத்தம் பாக்காறாளுங்க(சேஃப்ட்டி முக்கியம்டா). அதும் தப்பில்ல இல்லையா! உன் ஹீரோயிசமெல்லாம் இங்க வேகாதுடி. சரி, போ இனி வேகமா போறத பார்த்தேன் சுட்டே போடுவேன்” என்று துப்பாக்கியை காட்டியபடியே குதிரையில் ஏறி பறக்கத் தொடங்கினான் ஜடாமுனி .

    “ஆலம்பனார். அடி கொன்னுட்டீங்க,” சிவப்பு விசில் அடித்தது.

    “இல்ல சிவப்பு, இதெல்லாம் சாம்பிள் தான். மெயின் பிச்சரே இனிதாம்மா” என்றபடியே அடுத்து அவன் போய் நின்ற இடம், பசப்பூர்.

    கண்கள் தெரியாதவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக நியாயமான 9 கோரிக்கைகள் கொண்டு செய்யும் அறவழிப் போராட்டம் நடந்து கொண்டிருந்த இடத்தில் ஜடாமுனி போய் சேரும் முன்னமே, மக்களுக்காகவே அல்லும் பகலும், அயராது சேவை செய்யும் காவலர்கள், தங்கள் கடமையை செவ்வனே செய்து கொண்டிருந்தார்கள்.

    “இந்த சட்டம் அனைவருக்கும் பொது, தப்பு யார் செய்தாலும் அடிப்போம். சாமியை சட்டை கூட அணிய விடாமல் அதிகாலையில் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் இழுத்து போவோம். கண்ணு தெரியாதவர்களை சாலையில் போட்டு அடிப்போம், மிதிப்போம், தள்ளி விடுவோம். முடியாத பட்சத்துக்கு அனைவரையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு போய் ஏதாவது ஒரு காட்டுக்குள் இரவு நேரத்தில் இறக்கி விட்டு விட்டு வந்து விடுவோம்.”

    போன முறை சென்னையில் செய்தது போல, அதற்கான ஆயத்தம் தான் நடந்து கொண்டிருந்தது.

    “சீ…மனுஷங்களா, முதல்ல மனுசங்களா இருங்கடா. அப்புறம் போலிஸ்காரனா இருக்கலாம்” என்று முணங்கிய ஜடாமுனி, இனி மரு வேலைக்காகாது சிவப்பு, எடு என் முகமூடியை ” என்று சிவப்பு வண்ண முகமூடியை எடுத்து மாட்டிக் கொண்டான்.

    “என்ன சிவப்பு பாக்கற? சில போது நாம் என்ன அடையாளத்தில் வர வேண்டும் என்று அந்த சூழலே தீர்மானிக்கிறது. காற்று விடுவதில்லை போல”

    ஜடா… ஜடா… ஜடாமுனி! ஜடா… ஜடா முனி! ஜட… ஜட… ஜட முனி! பின்னணி இசை. பிரளயம் செய்யத் தொடங்கியது.

    “சிவப்பு மியூசிக்கல எங்கயோ பிசிறு தட்டுது பாரு, வயலின் சரி பண்ணு” என்றபடியே பறந்து சென்று, கண்ணு தெரியாத ஒரு பெண்ணை அடித்த ஒரு பெண் போலீஸ்க்கு சில்லு மூக்கு உடையும் அளவுக்கு ஒரு குத்து விட்டான். ஒரே குத்து. குபுக்கென்று குருதி பீறிட்டது. “*** காசு குடுத்து சேர்ந்திருப்பா போல.” என்று முணங்கியபடியே மொத்த கூட்டத்தையும் பார்த்தான். கூட்டம் அப்டியே ஃபிரீஸ். மியூசிக் உள்பட. கண்களற்றவர்கள் ஏதோ நடக்கிறது யாரோ ஒரு தேவதூதன் நமக்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான் என்று மட்டும் யூகித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு இயல்பாகவே அவர்களின் பகுத்தறிவு கூர்மையாக வேலை செய்யும். செய்கிறது…

    பறந்து பறந்து அடி விழுந்தது. பல பேரின் விரல்களை உடைத்து எறிந்தான். துப்பாக்கியை எடுத்து சராமரியாகச் சுட்டான்.

    “என்னடா நடக்குது இங்க? ஏன் கண்ணு தெரியாதவன் இந்த நாட்டுக்காரன் இல்லையா? அவனுக்கும் சேர்த்து தாண்டா அரிசி விதைக்கறோம், சொம்பைகளா. வா, வா என்கிட்டே மோது. நீங்க டிரைனிங்ல அப்டி என்னத்த கிழிச்சீங்கன்னு பாக்கறேன்” என்றபடியே, இரண்டு போலிஸ்காரர்களின் வயிறையும் ஒன்றோடு ஒன்று மோத விட்டான் ஜடாமுனி. மலையை வெடி வைத்து தகர்த்தாற் போல, டாம் என்று சத்தம் எழும்பியது.

    “ஏண்டா ஒரு போலீஸ்காரன் இவ்ளோ தொப்பையோட இருக்கலாமாடா? ” ஜடாமுனி கேட்க கேட்கவே.

    “ஆலம்பனார், லாஸ்ட் சீன்லயே தொப்பை மேட்டர் வந்துடுச்சு,” என்று காதுப் பக்கம் கிசுகிசுத்தது சிவப்பு.

    “சிவப்பு, சில சீன் ரிபீட் ஆனாலும் அபீட்டு ஆகாது,” என்றபடியே ஒரு காவலன் ஒருவனின் காதைப் பியித்து எறிந்தான்.

    “டேய், ருத்ராபுரத்துல போன வாரம் முட்டை பரோட்டா கடைக்காரன்கிட்ட முட்டை பரோட்டாக்கு காசு தரமாட்டேனு நாய் மாதிரி கெஞ்சிட்டு இருந்தவன் தான நீ, வா, வா” என்று அழகு குத்துவது போல துப்பக்கியை ஒரு கன்னத்தில் வைத்து மறு கன்னத்தில புல்லட்டை வெளியே எடுத்தான்.

    அந்த இடமே கலவர பூமி ஆனது.

    “வேற வழியே இல்லை, நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என நீங்களே தீர்மானிக்கிறீர்கள். டேய், தப்பு யார் பண்ணினாலும் தண்டனை உண்டுடா.”

    “அடுத்து,”என்றது சிவப்பு

    “வெயிட் அண்ட் சி”

    மஞ்சள் குதிரை காற்றில் மறையத் தொடங்கியது.

    Share
  • தேடும் கண்கள்!

    -கவிஜி

    கழுத்தை அறுப்பதோடு
    நிறுத்திக் கொண்டது
    80களின் காதல்
    வாய் குவித்துக்
    குருதி  குடிக்கிறது
    90களின் காதல்!

    ***

    காரியமெல்லாம்
    முடிந்த பின்னிரவில்
    விசும்பிக் கொண்டிருந்தார்
    இன்னும் மூன்று நாட்களில்
    மரிக்கப் போகிறவர்
    கிமுவில் ஒரு நாள்…!

    ***

    மீன்களற்ற குளத்தில்
    தேடும் கண்கள்
    மீன்களாகிறது!

     

    Share
  • மனச் சிறகு

    -கவிஜி 

    சுழன்று சென்ற
    கல்லுக்குப்
    பயந்து
    அத்தனைக் காகங்களும்
    மரம்விட்டுப் பறந்தன…

    எதற்கும் பயப்படாமல்
    அமர்ந்திருந்த
    ஒரே ஒரு காகத்தையும்
    விரட்ட விரும்பினால்
    கல்லை
    உங்களை நோக்கி
    எறியுங்கள்…!

     

    Share
  • ஜடாமுனியும் சிவப்புக்கத்தியும் – 1

    — கவிஜி.

    அத்தியாயம் 1:

    கவுண்டம் பாளையம் சிக்னல் …

    புற்றீசல் போல சாய்பாபா கோயிலில் இருந்து வாகனங்கள் மேட்டுப்பாளைய சாலையை கடத்திக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. இதோ… இதோ… இதோ… பச்சை விளக்கு மறைந்து மஞ்சள் விளக்கு விழ, அதை ஓடிக் கொண்டிருக்கும் சிக்னலின் எண்ணை வைத்து முடிவெடுத்து விட்ட ஜடாமுனி கண்டிப்பாக சிக்னலைத் தாண்டி விட முடியாது என்பது உணர்ந்தபடி தன் இரு சக்கர வாகனத்தை சிக்னல் கோட்டுக்கு முன்னாலேயே நிறுத்தினான். தலையில் ஹெல்மெட்டோடு வண்டியில் அமர்ந்திருந்தான். ஜடாமுனியின் கண்களில் சிவப்பு விளக்கின் எண் ஓடிக் கொண்டிருந்தது.

    “மஞ்ச மாக்கான். இவுனுங்களும் போக மாட்டாங்க. போறவனையும் விட மாட்டாங்க,” என்று பின்னால் கிட்டத்தட்ட ஜடாமுனியின் பைக்கில் முட்டி விட்ட ஒரு பைக்கில் கிருதாவை மீசையாக்கி அமர்ந்திருந்த கல்லூரி மாணவன் ஒருவன் பேசுவது பைக்கோடு சற்று குலுங்கிய ஜடாமுனிக்கு நன்றாகவே கேட்டது.

    சட்டென பைக்கை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி, வண்டியை விட்டு இறங்கினான். ஹெல்மட்டைக் கழற்றி பைக்கின் சீட்டில் வைத்து விட்டு. ஒரு அடி பின்னால் சென்று… பளார் என்று ஒரு அறை வைத்தான் அந்த கிருதாக் கோமாளியை.

    “முட்டாக் கிறுக்கனாடா நீ, மஞ்ச லைட் விழுந்தா எப்டிடா போக முடியும்? போக கூடாதுங்கறக்குதாண்டா மஞ்ச லைட்டு, “என்று கூறியவன் அவனையே உற்றுப் பார்த்து விட்டு மீண்டும் தொடர்ந்தான், “மரியாதை இல்லாம பேசற புண்ணாக்கு மண்டையா, “என்று இன்னொரு அறை விட்டான்.

    காற்றில் முன்னால் வந்து விழுந்த கூந்தலை பின்னால் தூக்கி போட்டான் ஜடாமுனி.

    “ஏம்பா, இப்போ என்ன ஆச்சுனு அடிக்கற? கை நீட்ற வேலையெல்லாம் தப்பு. ஏதோ அவசரம். எல்லாரும் அப்டி இப்டி தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிட்டே இருக்கணும்,” என்று கூறிய சொட்டைத் தலையன் ஒருவனிடம் சென்றான் ஜடாமுனி.

    அருகில் நின்றவர்கள் எல்லாரும் ஜடாமுனியையே பார்த்தார்கள், பேசலாமா வேண்டாமா என்பது போல ஒரு உடல்மொழியுடன்.

    தீர்க்கமாகப் பார்த்த ஜடாமுனி பின் பேசத் தொடங்கினான்.

    “என்ன அட்ஜஸ்ட்மெண்ட், எனக்கு உன் பைக்க இன்னைக்கு மட்டும் குடேன், பாக்கலாம், ஒரு சின்ன அட்ஜஸ்ட்மெண்ட்தான?” என்றவன் கண்களில் தீப் பார்வை.

    சொட்டை கண்கள் சுருக்கி யோசிக்க… சொட்டை மண்டை மேல் ஒரு குட்டை நங்கென்று போட்டபடியே பேசத் தொடங்கினான் ஜடாமுனி.

    “கிழட்டுப் புண்ணாக்கு, உன்ன மாதிரி க்ரௌண்டுக்கு அலையற ஆளுங்கனாலதாண்டா இந்த மாதிரி கோமாளிங்க நிறைய பேர் இருக்கானுங்க” என்றபடியே பார்வையை சற்று இடது பக்கவாட்டில் விட்டான்.

    இப்போது நின்றிருந்தவர்கள் கண்களில் கொஞ்சம் கலக்கம் அனைவருமே காற்றினில் தன் தலையை இழுத்துக் கொள்ள முயற்சித்தார்கள்.

    3, 4, 5, 6, 7 ம்ம்ம்… 10 பேர், தண்டாக் கூடாது என்பதற்காக போட்ட கோட்டை தாண்டி வண்டிகளை நிறுத்தி இருந்தார்கள். சட்டென முன்னால் போய் கோட்டைத் தாண்டி நின்றவர்களை ஒரு சேரப் பார்த்தான். ஏதோ முடிவெடுத்த உடல்மொழியோடு, ஒவ்வொருவனுக்கும் பளார், பளார்னு அறை விட்டான்.

    “போடா பின்னால. டேய். மண்வெட்டி தலையா. போடா. என்னடா முறைக்கற? கோட்டைத் தாண்டக் கூடாதுன்னுதாண்டா கோடு போடறாங்க, அதை மதிக்க மாட்டியா? அவரசம் கிவசரம்னு எவனாது பேசுனீங்க,” என்றபடியே முகம் முழுக்க துணியால் சுற்றிக் கொண்டு டூ வீலரில் இருவரை உட்கார வைத்துக் கொண்டு பின்னால் நகர தடுமாறிக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு பத்து முறை தலையில் நங்கு நங்கென்று குட்டினான். குட்டி முடித்த அவளையே பார்த்தான். முகம் முழுக்க சுற்றி இருந்த துணியைத் தாண்டி கண்களில் நீர் ஓடியது. பின்னால் அமர்ந்திருந்த இருவரும் கையை அவரவர் தலைக்கு வைத்து நடுங்கிக்கொண்டிருந்தார்கள். கண்கள் உருண்டு விழுந்து விடும் போல.

    “வாட்ஸ் அப், ஃபேஸ் புக், ட்விட்டர்ன்னு அப்டேட் ஆக்கத் தெரியுதுல்ல, பைக்ல மூணு பேர் போக கூடாதுன்னும், ஹெல்மெட் இல்லாம ஓட்டக் கூடாதுன்னும், ரியர் மிர்ரர் இல்லாம வண்டிய எடுக்க கூடாதுன்னும் தெரியாதா? சுண்ணாம்பு… வெண்ணை…போடி பின்னால” என்று விரட்டினான்.

    ஜடாமுனி செய்யும் செயல்கள் அங்கு இருந்தவர்களை நடுங்க செய்தது. ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பார்த்துக் கொண்டே பின்னால் நகர்ந்து நகர்ந்தபடியே இருக், ஒரு வித சலசலப்பும் குழப்பமும் அங்கு படரத் தொடங்கின. முன்னால். சிக்னல் போட்டும் வண்டி நகராததைக் கண்ட பின்னால் நின்ற ஒருவன் “யோவ் மூவ் பண்ணுங்கையா” என்று அங்கு நடக்கும் எதுவும் தெரியாமல் கத்த.

    “டே, கத்தறவனே, மூடுடா. என் டுங்குறு, அவுங்க வாராங்க இவுங்க வராங்கன்னு மணிக்கணக்கா வாய பொளந்துகிட்டு ரோட்ல நிக்கும் போது தெரியலையா? மூடிட்டு கொஞ்ச நேரம் நில்லு” என்று கத்தினான் ஜடாமுனி

    “யார்டா அது கலாட்டா பண்றது?” என்று பின்னால் வந்து நின்றது ட்ராபிக் போலீஸ். மெல்ல திரும்பினான் ஜடாமுனி.

    அதற்குள் ஆளாளுக்கு, “சார், இந்த ஆள் ஓவரா ரவுஸ் விடறான், அடிக்கறான், குட்டறான், என்னன்னு கேளுங்க, முன்னால நின்னுட்டு நகராம வம்பிழுக்கறான்” என்று ஒருவன் கூற. அவனைப் பார்த்து “இன்னைக்கு நீ செத்த” என்று நாக்கை துருத்தி சொல்லியபடியே பார்வையை அவனிடம் இருந்து திருப்பி போலீசைப் பார்த்தான்.

    நிற்கும் போலீசைப் பார்த்த ஜடாமுனி, “நீ யார்டா?” என்றான் தலையை கோதியபடி, அவன் கண்களில் சிறு சலனம் கூட இல்லை.

    இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பாக்காத போலிஸ், “என்ன! நான் யாரா? அதும் “டா” வேறயா” என்றபடியெ ஓங்கி ஒரு அறை விட கையைத் தூக்க, வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டான் முந்திக் கொண்ட ஜடாமுனி.

    “அடிங் … என் தொப்ப மவனே. அவன் வயித்த பாரு. எத்தன மாசம்டா நீ? டேய்… பத்து ரூபா லஞ்சம் வாங்கறவனே, நீ யார்டா? உன் பேர் என்ன? நீ மட்டும் “டா” போடலாம் நான் போடக் கூடாதா? சொல்டா? நீ யாரு?” என்று மாற்றி மாற்றி நாலு அறை விட்டான் ஜடாமு.

    அடி வாங்கிய தொப்பை போலிஸ் பயந்து ஒடுங்கி ஒரு ஓரமாய் உட்கார, “இந்த முடி வேற மூஞ்ச மறைக்குது” என்ற முணங்கியபடியே, “மகா ஜனங்களே, எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கறேன். மரியாதையா, பச்சை விளக்கு, மஞ்சள் விளக்கு, சிவப்பு விளக்குன்னு பார்த்து பார்த்து போகணும். மீறி போறத பார்த்தேன்” என்றபடியே தன்னை போட்டுக் கொடுத்த அந்த ஒருவனைப் பார்த்தபடியே “என்ன பண்ணுவேன்னு பாக்கறியா?” என்று சற்று யோசித்தவன், “டே… டுபுக்கு மண்டயா, நீ செத்தனு சொன்னேன்ல இப்போ பாரு…” என்றபடியே உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ‘பட்’ என்று சுட்டான். அவ்ளோதான் காக்கா கூட்டம் போல சிதறியது கூட்டம். என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாத கூட்டம் மிரண்டு கத்திக் கொண்டு சிதறியது.

    “என்னடா ஒருத்தன சுட்டதும் எதுத்து நிப்பீங்கன்னு பார்த்தா இப்டி ஓடறீங்க? உங்க புரட்சி எல்லாம் முகப்புத்தகத்துல மட்டும்தானா? முகமே இல்லாத மண்டுகளா நில்லுங்கடா” என்று சுற்றும் முற்றும் பார்த்தவன், ஆங்காங்கே சிதறிய ஓடிக் கொண்டிருந்தவர்களில் ‘லொள்ளு’ பேசிய சிலரைப் பார்த்து பார்த்து சுட்டான். சிக்னலே ஸ்தம்பித்தது கூட்டம் ஒன்றும் விவரம் புரியாமல் அங்கும் இங்கும் அலைமோதியது.

    “இதாண்டா உங்ககிட்ட இருக்கற பிரச்சனை. சுயநலவாதி கூட்டங்களா. எவனாது உப்பு போட்டு சாப்டற மனுசனா இருந்தா என்னைய எதுத்து நில்லுங்கடா பாக்கலாம். பயந்தாங்கொல்லி பசங்களா, ஒற்றுமைய கிரிக்கெட்டுல மட்டும், அதும் ஒரே ஒரு நாடு கூட விளையாடற அன்னிக்கு மட்டும் வாய தொறந்துகிட்டு கத்திட்டு கிடக்கற கூட்டம் தான. பொறம்போக்குகளா, நான் செத்தாலும் பரவாயில்ல இனி ஒருத்தன சாக விட மாட்டேன்னு எவனாது சொல்றீங்களா? பொருளாதாரமும் தெரியாது, உலக மயமாக்கலும் புரியாது. மாடு மாதிரி உழைக்க வேண்டியது. வாரக் கடைசியல நல்லா குடிக்க வேண்டியது” என்று கத்திக் கொண்டே ஒரு பெண் பின்னால் ஓடி ஒளிந்தவனை எட்டி பார்த்து குறி வைத்து சுட்டான் ஜடாமுனி.

    அப்படியே திரும்பியவன், “டேய் கிருதா, இங்க வா” என்று அந்தக் கல்லூரி மாணவனிடம் செல்ல, அவன், நடுங்கிக் கொண்டே நின்றான். கை மட்டும் செல்லில் ஏதோ டைப் பண்ணிக் கொண்டே இருந்தது.

    அவனையும் செல்லையும் மாறி மாறிப் பார்த்த ஜடாமுனி. இந்தியன் கமல் ஸ்டைலில், துப்பாக்கியை தலையில் அடித்த படியே”நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்கடா” என்றபடியே, “சட்டையத் தூக்குடா தறுதலை” என்றான்.

    அவன் நடுங்கிக் கொண்டே தூக்கினான் பேண்ட், பாதி டிக்கியில் இதோ விழப்போறேன் என்பது போல நிற்க, ஜட்டி தெரிந்தது.

    “கருமம்டா” என்று யோசிக்கும் அளவுக்கு நேரம் எடுத்துக் கொண்டு, பின் “இந்த கம்பெனிக்கு நீ விளம்பர தூதுவனா? சொல்லுடா? இடுப்புல பேண்ட் நிக்காதவனே, சொல்லுடா?” என்று டிக்கியிலேயே சுட்டான் ஜடாமுனி”இப்போ செல்பி எடுத்து போடு, ஆளும்… அவன் மண்டையும். இதுல தாவாங்கட்டை வரை கிருதா வேற” என்று குப்புற விழுந்து வலியில் துடித்துக் கொண்டிருந்த கிருதாவை ஓங்கி ஒரு மிதி வைத்து விட்டு, “எல்லாரும் திருந்திக்கோ… அந்நியன் மாதிரி தனியா கூட்டிட்டு போய் எண்ணையில போட்டு வறுக்கவெல்லாம் மாட்டேன். எண்ணை விலை வெண்ணை விலை விக்குது. சுட்டுட்டு போயிட்டே இருப்பேன்” என்றபடியே பைக்கில் ஏறிப் பறக்கத் தொடங்கினான் ஜடாமுனி.

    எத்தனை முறை ஓட்டிப் பார்த்தாலும். சிக்னலில் இருந்த கேமராவில் அவன் உருவம் மட்டும் பதியவே இல்லை.

    “சார், இது எதோ அமானுஷ்யம் போல இருக்கு. சார் இன்னோர் விஷயம். சுடப்பட்ட எல்லாருமே அடுத்த 2 மணி நேரத்துல பிழைச்சுகிட்டாங்க. ஆனா குண்டு பட்ட இடத்துல காயம் இருக்கு. எல்லாமே போலியான குண்டுகள். ஆனா வலி உயிர் போகுதாமா. ஒன்னும் புரியலயே சார். யார் என்ன ஒன்னும் தெரிலையே ஒரு க்ளூவும் கிடைக்கல”

    போலிஸ் சங்கம் எப்போதும் போல மீசை முறுக்கி பேசிக் கொண்டிருக்க; ஜடாமுனி அவன் அறையில் பப்பரபான்னு தூங்கிக் கொண்டு இருந்தான். ஜடாமுனி போன வரம் வரை ஒரு சாராசரி மனிதன்தான். நடக்கும் தவறுகளைக் கண்டு வெகுண்டு எழுந்து, கவிதை எழுதி, அவனே படித்து, சுவற்றில் முட்டி மோதி, வாழ்க்கையை, தத்துவம் பேசி வீணடித்துக் கொண்டு இருந்தவன்தான்.

    அவனுக்கு ஒரு கத்தி கிடைத்தது. அது எங்கிருந்து கிடைத்தது, ஏன் கிடைத்தது என்று இனிதான் நான் யோசிக்க வேண்டும்.

    கத்தியைக் கொண்டு ஒரு நாள் முதுகு சொரியும் போது அதிலிருந்து ஒரு வகையான புகை கிளம்பியது. மிரண்டு, என்ன ஏது என்று யோசித்து தடுமாறிக் கொண்டிருக்கும் போதே அந்த புகையில் இருந்து ஒரு குட்டி மனிதன் உருவம் வெளியே வந்தது.

    ஜடாமுனி இன்னும் மிரண்டு போனான். கத்தி கூச்சலிட்டு கட்டிலில் ஏறி நின்று அதகளம் பண்ணிக் கொண்டிருக்கும் போது. “ஆலம்பனார், நான் உங்கள் அடிமை என் பெயர் சிவப்பு, நீங்கள் இந்தக் கத்தியை எப்போது தேய்த்தாலும் நான் உங்கள் முன் தோன்றுவேன்,” என்றது அந்த குட்டி மனிதன் உருவம்.

    ஜடாமுனி அங்கும் இங்கும் தேடி, பயந்து, கடைசியில் தனக்கு கீழே குட்டியாக நின்ற மனிதனைப் பார்த்து முதலில் நம்ப மறுத்து, மிரட்சியில் வேர்த்து பூத்து, பின் ஒருவழியாக நம்பி, அருகில் சென்று அமர்ந்தான்.

    சிவப்பு அவனைப் பார்த்து கண்ணடித்து, “நீங்கள் என்ன சொன்னாலும் செய்வேன்” என்றது.

    சற்று அதையே உற்றுப் பார்த்தவன், சற்று தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, இந்த காட்சியை எங்கோ பார்த்தது போல இருக்கிறதே என்று யோசித்த படியே ஒரு முடிவுக்கு வந்தவனாய், “ஓ… அப்டியா எங்க, எனக்கு நூறு ரூபாய், சில் பீர் ஒன்னு, நூறு ரூபாய்க்கே வாங்கிட்டு வா பாக்கலாம்” என்றான்.

    அடுத்த கணம் முகத்தை தொங்க போட்டுக் கொண்டு வந்தது சிவப்பு.

    “என்ன சிவப்பு?” என்றான்

    “அஞ்சு ரூபாய் அதிகம் வாங்கி விட்டார்கள் ஆலம்பனார். மன்னிக்கவும். ஆனால் வாங்கியவன் கையை பிய்த்து எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்” என்றது.

    ஜடாமுனி சிரித்துக் கொண்டே, “ஆமா சிவப்பு நீங்க பொதுவா ரெம்ப பெருசாத்தானே இருப்பீங்க?” சந்தேகத்தோடு கேட்டான். அவன் மனக் கண்ணில் பெரிய பூதம் தெரிந்தது.

    “ஆலம்பானார், அது எங்க தாத்தா காலம். இது கணிப்பொறி உலகம் அதுதான் நானும் சுருங்கி விட்டேன்” என்று சொல்லி சிரித்தது ஜடாமுனியும் சிரித்தான்.

    “சரி சிவப்பு. உன்னையும் இந்த கத்தியையும் வைத்து எனக்கு நிறைய வேலை இருக்கிறது. இந்த பூமியை சரி செய்ய வேண்டும் திட்டம் போடுகிறேன். நீ இப்போது போ” என்றான்.

    சிவப்பு, தலையை சொரிந்து கொண்டு நின்றது.

    “என்ன சிவப்பு?” என்றான்.

    “இல்லை. வேறு ஏதாவது வேண்டுமா ஆலம்பனார்?”

    “வேண்டும் என்றால் கூப்டுகிறேன், சிவப்பு.”

    “இல்லை… பிசின், பின்ஷிகா, குருஷ்கா என்று நடிகைகள் யாராவது?”

    “எதற்கு? நான் ஒன்றும் கட்சி ஆரம்பிக்க போவதில்லையே?”

    “ஐயோ… ஆலம்பனார் நீங்கள் சிறு பிள்ளையாகவே இருக்கிறீர்கள்” என்று கண்ணைக் காட்டியது சிவப்பு.

    “அடிங்… கொய்யால” என்று ஜடாமுனி கத்த கணத்தில் காணாமல் போனது சிவப்பு.

    இனி சிவப்பு தான் எங்கும்.

    Share