மதுவிலக்கு அவசியமா! மதுவிலக்கு சாத்தியமா?
— கவிஜி.
திடும்மென விழித்துக் கொண்டு, “நான் எங்க இருக்கேன்? நான் எங்க இருக்கேன்?” என்று கேட்பது போலத்தான் இருக்கிறது, மதுவிலக்குக்கு ஆதரவாக ஆங்காங்கே இருந்து வரும் குரல்களின் கூக்குரல். மது இன்று நேற்றா வந்தது? அது மனிதன் தோன்றிய காலம் முதல் வேறு வேறு வடிவங்களில், வேறு வேறு நிலைகளில் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. வேட்டை மனிதன் இரவுகளைக் கொண்டாடித் தீர்க்க மதுவைக் கையாண்டான். கொண்டாட்டங்களின் நீட்சிக்காகத்தானே இந்த வாழ்வு. பகல் முழுக்க மிருகங்களோடு மல்லுக் கட்டியவனுக்கு மது தேவையுமாக இருந்தது. அவனின் உடல்வாகும் மனநிலையும் அதற்கு பொருந்திப் போனது. வாழும் வரை வாழ்ந்தான். ஓங்கு தாங்கி செழித்தான்.
ஆனால், இன்று நடப்பது வேறு. இங்கு விற்பது மதுவுமல்ல, குடிக்கும் மனிதனும் ஆதி மனிதன் அல்ல. அவன் பறந்து விரிந்து கிடந்த உடலோடு ஆரோக்கியத்தைப் பசுமையாக கொண்டவன். இன்று இருப்பவனோ சர்க்கரையும், ரத்தக் கொதிப்பும் கொண்டு கூனிக் குறுகி இதயம் அடைத்துக் கிடப்பவன். தரமற்ற தயாரிப்பாகவே மது இருக்கும் பட்சத்தில் பலவீனமான இன்றைய மனிதன் மனதாலும் உடலாலும் அடிமை ஆகிறான். மடிந்தும் போகிறான். எல்லாவற்றிலும் கலப்படம் உப்பில் தொடங்கி, கடுகு வரை. காகிதத்தில் தொடங்கி ஆணுறை வரை. அரிசி, மாவு, காய்கறி என்று கலப்படம் இல்லாத பொருள்கள் ஒன்றுமே இல்லை. அதில் மது மட்டும் என்ன விதி விலக்கா? அதிலும் கலப்படம். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், மதுவில் கலப்படம் அல்ல மதுவே கலப்படம்.
மதுப் போத்தலுக்குள் ஊசி, ஆணி, ஆணுறை, பல்லி, தேள் என்று சமீபத்திய செய்திகள் நிறைய. அதையெல்லாம் தாண்டி, மதுவுக்குள் மிகப் பெரிய அரசியல் பூதம் ஒளிந்து கொண்டு அச்சுறுத்துவதுதான் ஆதாரத்தையே ஆட்டிப் பார்க்கிறது. இன்று நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு மது விலக்கு வேண்டும் என்று கோசம் இடும் எதிர்க் கட்சி மற்றும் இதர கட்சி தோழர்களிடம் ஒரு கேள்வி. தமிழ் நாட்டில் மதுக் கடைகளை திறந்தது யார்? தொடர்ந்து குடித்த மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட போது எங்கு போனீர்கள்?
மக்களிடம் திரும்பி ஒரு கேள்வி, ஏன் இத்தனை நாட்கள் மது போதை என்பது உயிர்க் கொல்லி என்று உங்களுக்குத் தெரியவில்லை? ஆளும் கட்சியிடம் ஒரு கேள்வி. இத்தனை பேர் கத்தியும் இப்படி காதிருந்தும் கேளாமல் இருப்பது நியாயமா? இது நீங்கள் இருக்கும் இடத்துக்கு அழகா?
சரி, சொல்லிப் பார்த்தோம், கேட்கவில்லை என்று மாணவர்கள் கையில் எடுத்த ஆயுதம் சரியானதா? மாணவர்களே சிந்தியுங்கள். “என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்”- என்று காவல் துறை சொல்லும் அளவுக்குப் போனது உங்களின் அராஜக போக்கு. நல்ல தலைவன் இருந்திருந்தால், கல்லைக் கையில் எடுத்திருக்க மாட்டீர்கள். இது என்ன ஷங்கர் படமா புரட்சி என்பதைச் சாலையில் கத்திக் கொண்டு கூட்டம் சேர்த்து பிரமாண்டப் படுத்துவதற்கு.
என்ன செய்திருக்க வேண்டும்? மதுக்கடை வேண்டாம் நல்ல முடிவுதான். மாணவர்கள் திரண்டார்கள் சரிதான். நாளைய எதிர்காலம் இன்றைய மாணவர்களின் கையில் ஒப்புக் கொள்கிறோம். சாத்வீக முறைப்படிதானே போராட்டம் நடந்திருக்க வேண்டும்? ஆயுதம் ஒரு போதும் நிரந்தரத் தீர்வை அளிக்காது என்று யாருமே கூறி கேட்டது இல்லையா? எடுத்ததும் அத்தனை பெரிய கல்முறையா? கலாம் காண சொன்ன கனவை இப்படிதான் நிறைவேற்றுவதா மாணவர்களே? இத்தனை கலவரம் நடந்து கொண்டிருக்கையிலும் தங்களின் வேலைக்கு நேரமாச்சு என்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு போன சில மனிதர்களைப் பார்த்து என்ன சொல்வது? அட, முட்டாள் மக்களே உங்களுக்காகத்தானே அந்தப் பிஞ்சு மனிதர்கள் தாங்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்து, அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒலி எழுப்பி ஒதுங்கிப் போகிறீர்களே, நீங்கள் என்ன மாதிரி மனிதர்கள்? புரியவில்லை, மீண்டும், மீண்டும் மேலும், மேலும் போதை ஏறிய பொழுதாகவே இருந்தது. புரட்சி வெடித்த அன்று.
இந்தக் கட்சிக்காரர்களின் கையில் 60 சதவீதம் மது உற்பத்தி உரிமம். அந்தக் கட்சிக்காரர்களின் கையில் 40 சதவீதம் மது உற்பத்தி உரிமை. விளங்குமா? மது வேண்டாம் என்று அவர்களின் பங்குக்கு அவர்களும் வந்து பேட்டி கொடுத்துக் கொள்கிறார்கள் (முதல்ல உங்க கடையை சாத்திட்டு வாங்க). இதுல உண்ணாவிரதம், தற்கொலை வேற. ஏன் சாப்பிடாமல் வெயிலில் உட்கார வேண்டும்? ஏன் சாக வேண்டும்? நன்றாகச் சாப்பிடுங்கள். போராட வலிமை வேண்டும். உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்ந்தேன் என்பது திருமூலர் வாக்கு. சத்தம் போட்டுக் கத்திக் கூப்பாடு போட்டுப் போராடுங்கள். இது மக்களுக்காக மக்களால் மக்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக நாடு. மன்னர் ஆட்சி ஒன்றும் நடை பெறவில்லை. அப்படி நடப்பதாக அதிகார வர்க்கம் பகல் கனவு கண்டால், தெளிய வைக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. இது வேண்டும், இது வேண்டாம் என்று சொல்ல, கேட்க உரிமை ஓட்டுப் போட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு (ஓட்டுப் போடாத வெட்டி ஆபிசர்ஸ் எல்லாம் போய் கிரிக்கெட் பாருங்க).
சரி நாளையே அனைத்து மதுக்கடைகளையும் மூடி விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம், தினக் குடிகாரர்களின் நிலை என்ன? அத்தனை சுலபத்தில் ஒரே நாளில் விட்டு விடும் பழக்கமா அது? செத்தே போக மாட்டான்? தற்கொலைகள் நிரம்பாதா? கொலைவரை கூட நீடிக்கும். அடுத்தடுத்த எதிர்பாராத அத்தனை பிரச்சினைகளும் வீதிகளில் நிறையும். வருடக் கணக்கில் வாழ்க்கையில் பாதி நாட்கள் குடித்த பழக்கத்தை ஒரே நாளில் எப்படி விட்டு விட முடியும்? அதன் நீட்சியாக கள்ளச் சாராயம் முளைக்குமே! மற்ற இதர போதை வஸ்துக்கள் துளிர் விடத் தொடங்குமே, என்ன செய்வது?
சரி, இன்று அனைவருமே போராடுகிறோம். அப்போ இதுவரை குடித்தவர்கள் எல்லாம் யார்? (கண்ண கட்டுது). இது என்ன சுய விளம்பர மேடையா? ஆளாளுக்கு நானும் இருக்கிறேன் என்று காட்டிக்க கருத்துச் சொல்வதற்கு? எங்கே ஒரு கேள்வி கேட்கிறேன், இன்று போராடுகிற கூட்டத்தில் பெரும்பாலானவர்களில் ஒருவர் கூட ஒரு முறை கூட குடித்தது இல்லை என்று கூறுங்கள் பார்ப்போம். ம்ஹும்… அப்படிச் சொன்னால் அது குடிகாரன் விடிந்ததும் கேட்கிற, நேற்று சொன்ன பொய். சரி, இப்போதாவது நல்ல புத்தி வந்ததே என்று பாராட்டத்தான் வேண்டும், பாராட்டுவோம். ஆனால், அதே சமயம் இத்தனை போராட்டத்தையும் கண் கொத்திப் பாம்பாக பெருமூச்சு விட்டபடி ஒரு குடிகார கூட்டம் சத்தமே இல்லாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறதே, அவர்களுக்கு என்ன செய்ய போகிறோம்? ம்ம்ம்ம்…
மெல்ல மெல்லத்தான் குறைக்க வேண்டும். உடலுக்குள் வந்த வைரசை ஒரேடியாக அழிக்க முடியுமா? மெல்ல மெல்லத்தான் அழிக்க முடியும். முள் மீது விழுந்த சேலையை உடனே எடுக்க நினைத்தால் கிழிந்து விட்ட சேலைதான் மிஞ்சும். மெல்ல மெல்லத்தான் எடுக்க வேண்டும். குடிக்க வைத்துக் கெடுத்து, சாவு வரை கொண்டு போய் விட்டு விட்டோம். இப்போது, திரும்ப அழைத்து வருவது அத்தனை சுலபம் அல்ல. மெல்ல மெல்லத்தான் அழைத்து வர முடியும். 10 டு 10 என்பதை மதியம் 2 டு 8 என்று மதுக் கடைகளின் நேரத்தைக் குறைக்க சொல்வோம். மதுக் கடைகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கச் சொல்லுவோம். மதியம் மட்டும் தான் மதுக் கடைகள் திறந்திருக்கும் என்று குடிமகன்களை மனதளவில் தயார் படுத்துவோம். அதே சமயம், மதுவின் தீங்கை செயல் முறையாக ஒவ்வொரு குடிகாரனுக்கும் அவனவன் குடும்பமே தீவிரமாக வகுப்பு எடுக்க கற்றுக் கொடுப்போம்(ரொம்ப முடியலனா சோத்துல விஷத்தை வைச்சிருங்க தாய்மார்களே, 4 பேர் செத்தா 40 பேர் யோசிப்பான்).
அதே சமயம் அரசு கொடுக்கும் மதுவைக் கூட தரமாகக் கொடுக்க சொல்வோம்(குறைந்த பட்சம் தேளும், பல்லிகளும் இல்லாமலாவது இருக்க வேண்டும்)
மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்யும் மது கூடங்களுக்கு ஆர்டர்கள் தருவதை அரசு நிறுத்த வேண்டும் என்போம் (மெல்ல மெல்ல அவர்களை வேற தொழில் செய்ய அவர்களை மனதளவில் தயார் படுத்துவோம், பாவம் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள் ?)
மது பார்களை இல்லாமல் செய்ய அரசு முடிவெடுக்க வேண்டும் (ஒரு பிளாஸ்டிக் டம்ளர் 6 ரூபாய்க்கு விற்ற பிசினெஸ் புத்தி மந்தமானால் ஆகட்டும்)
கொடுத்த லைசன்சுகளை ரத்து செய்யக் கோரிக்கை வைப்போம் (குடித்தே தீர்வேன் என்று கடவுள் மீது ஆணை இட்டவன் சரக்கை வாங்கிக் கொண்டு சென்று தன் மனைவி மக்கள் முன் அமர்ந்து வீட்டுக்குள் குடிக்கட்டும்)
வீதிகளில், சாலைகளில் எவனாவது குடித்தால் வெளுத்து விடக் காவல் துறை ஆங்காங்கே உலாவட்டும் (இன்று காவல் காப்பதை விட அது ஒன்றும் கேவலம் இல்லை)
பெற்றவர்களும் பிள்ளைகளைக் கவனியுங்கள் (பெரிய பள்ளியில் படிக்க வைத்து விட்டால் போதுமா?)
ஆசியர்களும் மாணவர்களைக் கவனியுங்கள்(எப்போ எவன் மாட்டி விடுவானென்னு பயமா?)
மாணவர்களும் உலகத்தை கவனியுங்கள் (போதைக்காகவா இந்த பிறப்பு? போதி சொன்ன இந்த மண்ணில் போதை சரியா? கேள்வியை உணருங்கள். பதில் கிடைத்து விடும்)
அரசும் சிறுவர்களுக்கு மது விற்கக் கூடாது(!)
இத்தனைக்குமான போராட்டமாக நம் செயல்பாடுகள் அகிம்சை முறையில் நடக்கட்டும். கல் கொண்டு எறிந்தால் காவல் துறை லத்தி கொண்டு அடிக்கத்தான் செய்யும். இரண்டையும் தவிர்ப்போம் இது நீண்ட நெடிய வாழ்வின் மைல்கல். சற்று போராடித்தான் நட முடியும். நட்டு விட்டால், பின் அசைக்க முடியாது.
குடிக்கும் மனதை மாற்றுவதே பாதி சிக்கலைத் தவிர்த்து விடும். ஒரு குடும்பத்தில் குடிக்கும் ஒருவரை மாற்ற முடியாத குடும்பங்கள்தான் தமிழ் பாரம்பரியத்தின் பதிவுகளா?!!!!
இன்றைய ஒரு துளிதான் நாளைய பெரு மழை. அது போல இன்று இருக்கும் நூறு மதுக் கடைகள் 50 ஆகும் பின் அது 25 ஆகும். பின் அது 5 ஆகும். பின் ஒரு நாளில் இல்லாமலே போகும்.
மது இல்லாத உலகம் படைக்கும் கனவை விதைக்கும் முன் “காசு வாங்கிட்டு ஓட்டுப் போடுவதை நிறுத்தி விட்டு மதுக்கடையைத் தூக்கு… ஓட்டு போடுகிறேன்,”என்று சொல்லுங்கள். நாளை நமதே.
கலவரமோ உயிர்ப் பலியோ இனியும் வேண்டாம் போராட்டம். வலுப்பெற வலுப்பெற, ஆயுதங்கள் கை நழுவி விடும் அவர்களுக்குமே என்பதுதான் நியதி. அது வரை வேண்டும் … நமக்குத் திடமான மன நிலையும், விட்டு விடாத கொள்கையும்.
