(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 33

சுந்தரமான நண்பன்

அவனுக்கு உயர்நிலைப் பள்ளியில் இறைவனால் அருளப்பட்ட நண்பன் சுந்தரம். பெயருக்கு ஏற்றாற் போல நல்ல அழகும், அறிவும் உள்ளவன். கொழுகொழு என்று இருப்பான். பரமசாது. மாகா புத்திசாலி. எட்டாம் வகுப்பில் இருந்து பதினொன்றாம் வகுப்புவரை அவனுக்கு வகுப்புத் தோழனாக சுந்தரம் இருந்தான். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் பொழுது பெஞ்சில் உட்காராமல் முன்பக்கத்தில் தரையில் அமர்ந்து பாடத்தை நன்கு கவனிப்பவர்களில் சுந்தரமும் ஒருவன். சுந்தரத்தின் அருகின் அவனும், சுப்பாமணி என்கிற பாலசுப்ரமணியனும் அமர்திருப்பார்கள். அவனுக்கு சுந்தரம்தான் கணக்குப் பாடத்தின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்து, அந்தப் பாடத்தின் மீது பற்று ஏற்படும் படிச்செய்தவன். சுந்தரம் அனைத்துப் பாடங்களிலும் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்குபவன். அதனால் எல்லா ஆசிரியர்களுக்கும் சுந்தரத்தின் மீது ஒரு தனிப் பாசம் உண்டு. பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பும் பொழுது அவன் வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்திருக்கும் அவனுக்கு அம்மாவிடம் சுந்தரம் பேசுவான். இன்னிக்கு என்னென்ன வீட்டுப் பாடங்கள் செய்துவர வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள் என்று அவனுக்கு அம்மாவிடம் கூறுவதை வைத்துத்தான் அவனுக்கு அம்மா அவனைக் கேட்பாள். “என்னடா கண்ணா..இன்னிக்குள்ள வீட்டுப் பாடத்தை எழுதி விட்டு விளையாடப் போ…” என்று அவனுக்கு அம்மா சொன்னால், ” இன்னிக்கு ஒண்ணும் கிடையாதம்மா” என்று விளையாடப் போகும் குஷியில் அவன் சொல்லுவான். “சுந்தரம் சொன்னானே..இன்னிக்கு வீட்டுப் பாடம் இருக்குன்னு” என்று கேட்டு அதை முடிக்கவைத்து பிறகுதான் அவனை விளையாடச் செல்ல அனுமதிப்பாள். அவனுக்கு பாடத்தில் ஏதேனும் சந்தேகம் வந்தால் சுந்தரத்திடம் கேட்டுக்கோ என்று சொல்லும் அளவுக்கு சுந்தரமும் அவனும் நெருக்கமாக இருந்தனர்.

சுந்தரத்திற்கு ரமணி என்ற மூத்த சகோதரனும், ராம்ஜி என்ற ஒரு இளைய சகோதரனும், ஒரு சகோதரியும் உண்டு. சுந்தரம் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது அவனது சகோதரி “கைக்குழந்தை”. சுந்தரம் அம்மாவுக்கும், வீட்டிற்கும் உபகாரமாக இருப்பான். தன் சகோதர, சகோதரிகளைக் கவனித்துக் கொண்டும், தன் பெற்றோர்களுக்கு உதவியாகவும் இருந்து கொண்டு, நன்றாகப் படிக்கவும் செய்கிறவனாக இருந்த சுந்தரத்தை யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்க முடியும்.

அப்பொழுது சுந்தரம், இராமச்சந்திரபுரம் தெருவில், இப்பொழுது இருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலுக்கு நேர் எதிர் வீட்டில்தான் வசித்து வந்தான். அதே தெருவில் இருக்கும் “அம்மாமி அப்பள டெப்போவின்” அப்பளங்களை ஏற்றிச் செல்வதற்காக, சுந்தரத்தின் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் “லிங்கம் பிரதர்ஸ்” லாரி டிரைவர் (அவர் வயதானவர்) சொல்லும் கணக்குகளை எழுதி சரிபார்க்க சுந்தரத்தின் உதவியை அவர் நாடுவார். சுந்தரமும் அவருக்கு உதவுவான். அந்த லாரி “டிரைவருக்கு” சுந்தரத்தின் மீது மிகுந்த அன்பு உண்டு. பள்ளியை விட்டு வந்ததும் கைக்குழந்தையாக இருந்த தன் சகோதரியைக் கொஞ்சி விளையாடுவான். அந்த குழந்தைத் துணிகளை ஒரு வாளியில் போட்டு எடுத்துக் கொண்டு சென்று வாய்க்காலில் தோய்த்து எடுத்து வருவான். அதைப் பார்க்கும், அவனுக்கு அம்மா சுந்தரத்தின் கடமையைப் பெருமையாக,” நல்ல பொறுப்பான கொழந்தை சுந்தரம்” என்று மெச்சுவாள்.

பதினோராவது வகுப்புப் பொதுத் தேர்வுக்கு முன்பாக “ஸ்ரீநிகேதன்” என்ற அமைப்பினர் நடத்தும் ஒரு தேர்வை அந்தப் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அதை எழுதினால் பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் நன்கு தயாராகி விடுவார்கள். தேர்வு பயமே இருக்காது. அத்தனை பயிற்சிகளை ஆசிரியர்கள் அந்தத் தேர்வுக்கே தந்து விடுவார்கள். அப்படி ஒரு தேர்வு நாள் 08.02.1971 சனிக்கிழமை அவனுக்கு அமைந்தது. அன்று காலையில் ஆங்கிலப் பாடத்தின் முதல்தாள் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து மதிய உணவுக்காக அவனும், அவனுக்கு நண்பர்களும் பள்ளிக் கூடத்தின் வேப்பமர நிழலின் புல்தரையில் அமர்ந்திருந்தனர். சுந்தரம் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டு வருவதாகச் சொல்லித் தன் சைக்கிளில் ஏறினான். இன்னொரு நண்பன் கே.எஸ்.நாராயணன் தானும் வருவதாகச் சொல்லி அவனது சைக்கிளின் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டான். “ஏலே எறங்குலே..ஏலே எறங்குலே” என்று சுந்தரம் கத்திக் கொண்டே சைக்கிளை ஒட்டிக் கொண்டு பள்ளியின் வாசலின் இடது பக்கமாகத் திரும்பிச் செல்வதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனும் , மற்ற நண்பர்களும் மரத்தடியில் அமர்ந்து சாப்பிடத்துவங்கினார்கள். அடுத்த ஐந்தாவது மணித்துளியில் பள்ளியின் வாசலில் ஒரே பரபரப்பு. ஆசிரியர்களும் மாணவர்களும் சாலையில் ஓடிச் செல்வதை அவனும், நண்பர்களும்,” என்னாச்சு…” என்று கேட்ட பொழுது,” சுந்தரம்” லாரில” அடிபட்டுச் செத்துப் போய்ட்டான்” என்று பள்ளியின் மாணவர் தலைவன் “லக்ஷம்” சொன்னான். அதோடு இன்று மதியத் தேர்வும் கிடையாது என்று சொல்லி ஓடினான். அனைவரும் அப்படியே எழுந்து சாலையை நோக்கி ஓடினர் . சர்மாஜி சாலையில் ரங்கசாமி கடைக்கு நேர் எதிரில், போடப் பட்டிருந்த ஒரு “ஆர்ச் பந்தலை”த் தாண்டி அந்த “”லிங்கம் பிரதர்ஸ்” லாரி ஒரு கோணலாக நின்று கொண்டிருந்தது. அதன் பின்பக்கதின் இடது பக்கச் சக்கரத்தின் அடியில் சுந்தரம் ரத்தவெள்ளத்தில் கிடந்தான். மாணவ, மாணவியர்கள் கண்ணீர் விட்டுக் கதறிய காட்சி இன்றும் அவனுக்குத் தெரிகிறது. அந்த லாரி டிரைவர் .”நானே இந்தப் புள்ளயக் கொன்னுட்டேனே…கொன்னுட்டேனே” என்று குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ரங்கநாத ராவ், மற்றும் ஆசிரியர்கள் கண்ணீர் விட்டனர். சுந்தரத்தின் உடலை அம்பாசமுத்திரம் அரசாங்க மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கிருந்து நேராக இடுகாட்டிற்கு சுந்தரத்தின் உடல் கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப் பட்டதாக அவனுக்கு அப்பா சொன்னார். அவனை இடுகாட்டிற்குச் செல்ல வீட்டில் அனுமதிக்கவில்லை. எதற்கும் அழவே செய்யாத அவன் அன்று அவனுக்கு அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதான். அவனால் சுந்தரத்தை மறக்கவே முடியாது. சுந்தரம் கற்றுத்தந்த கணக்கும், பண்பும் இன்றும் அவனுக்கு உதவுகிறது. அவன் பதினோராவது வகுப்புப் பொதுத் தேர்வில் கணக்குப் பாடத்தில் “நூற்றுக்குத் தொண்ணூறு” மதிப்பெண்கள் வாங்கியிருந்தான். அது “சுந்தரம்” என்ற நண்பன் கற்றுத் தந்த வித்தையால் பெற்றது.

இப்பொழுதும் வெள்ளை அரைக்கை சட்டையும், பச்சை அரைக்கால் டிராயரும், காலில் ஹவாய்ச் செருப்பும், கண்களில் அறிவுச் சுடரும், நெற்றியில் அழகாகத் திருநீர்க் கீற்றும், ஆப்பிள் கன்னங்கள் குழியச் சிரிக்கும் அந்த சுந்தரம்தான் அவன் நினைவில் இருக்கிறான்.

மீ. பாலசுப்ரமணியன் என்ற சுப்பாமணி

amvமுதல் வகுப்பில் இருந்து பதினொன்றாம் வகுப்பு வரை அவனுக்குப் பள்ளித் தோழன் மீ.பாலசுப்ரமணியன் என்ற சுப்பாமணி. தொந்திவிளாகம் தெருவில் இருக்கும் அவனுக்கு அம்மாவழிப் பாட்டியின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில்தான் சுப்பமணி வசிக்கிறான். இப்பொழுதும் அங்குதான் இருக்கிறான். லக்ஷ்மீபதி பள்ளிக் கூடத்தில் அவனும் சுப்பாமணியும், ரங்கா வாத்தியாரின் மூத்த மகன் கண்ணனும், பட்டாம்பிச் சங்கரையர் மகன் வீரமணியும் வகுப்புத் தோழர்கள். அவன் அனேகமாக தொந்திவிளாகம் தெருவில் உள்ள நண்பர்களுடன்தான் விளையாடிக் கொண்டிருப்பான். மதியம் பள்ளியில் இடைவேளை விடும் சமயம், அவனும், சுப்பாமணியும் வீட்டிற்கு ஓடியே வருவார்கள். மதியம் இடைவேளையில் அவன் தொந்திவிளாகம் தெருவில் இருக்கும் அவனுக்கு பாட்டியின் வீட்டிற்குத்தான் வருவான். பாட்டி அவனுக்கு சூடாக தோசையோ, குமுட்டி அடுப்பில் தணலில் மூடிவைத்து வேகவைத்த சக்கரவள்ளிக் கிழங்கையோ (அதை திருநெல்வேலி மாவட்டத்தில் “சீனிக் கிழங்கு” என்பார்கள்) தருவாள். அதை அவன் அவசர அவசரமாகத் தன் டிராயர் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, சுப்பாமணியுடன் பள்ளிக் கூடத்திற்கு ஓட்டிவிடுவான். ஒருநாள் அப்படித்தான் நாலாவது வகுப்பு படிக்கும் சமயம், பள்ளி இடைவேளை நேரம் பாட்டி சாப்பிடத் தட்டில் போட்ட தோசைகளை எடுத்து வலது ட்ராயர் பையில் போட்டுக் கொண்டு ஓடும் சமயம் , “எச்சில் பத்து ஒண்ணும் கெடையாதா” என்று பாட்டி கத்துவதைக் கேட்டுக் கொண்டே பறந்து விட்டான் . சூடான தோசைகள் அவனது வலது தொடையைச் சுட்டுக் கொண்டிருந்தது. சுப்பாமணி முறுக்கும், சீடையும் கொண்டு வந்திருந்தான். இருவரும் கடேசி பெஞ்சுக்கு முந்தின பெஞ்சில் அமர்ந்து கொண்டிருந்தனர். அது செட்டியார் சார் வகுப்பு. மெதுவாக அவன் தோசையை எடுத்து சுப்பாமணிக்குக் கொடுத்தான். சுப்பாமணி அவனுக்கு முறுக்கும் சீடையும் தந்தான். இவர்கள் இருவரும் குனிந்து குனித்து ஏதோ செய்கிறார்கள் என்ற சந்தேகத்தில் செட்டியார் சார் அவர்கள் பக்கம் வந்த பொழுது மீதி இருந்த தோசையை அவன் வாயில் அடைத்துக் கொண்டு விட்டான். செட்டியார் சாருக்குக் கோபம் அதிகமாகி, கையில் உள்ள பிரம்பால் அவனை விளாசி விட்டார். அவனும், சுப்பாமணியும் சிரித்தனர். சாருக்கு இன்னும் கோபம் வந்து இருவரையும் பின்னி எடுத்து விட்டார்.

சுப்பாமணிக்கு “எலெக்ட்டிரிகல்” விஷயங்களில் நாடாம் அதிகம் இருந்தது. சுப்பாமணியின் அப்பா “பெர்பெக்ட் எலெக்ட்டிரிகல்” (Perfect Electrical) என்ற பெயரில் ஒரு கடையை திருநெல்வேலியில் நடத்தி வந்தார். “L & T கம்பெனியின் நெல்லை மாவட்ட வியாபாரப் பிரிவின் அதிகார பூர்வ நிறுவனம் இவர்களுடையது. அதன் வேலைகளை ஊரில் உள்ள வீட்டின் பின்புற இடத்தில் வைத்து “சுப்பையா, கோபால்” என்ற வேலையாட்கள் செய்து வந்தனர் . பெரிய பெரிய “மோட்டார்கள்” அங்கிருக்கும். வேலையாட்கள் அவைகளைச் சரிசெய்யும் பொழுது சுப்பாமணி பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொண்டிருப்பான். அந்தப் பழக்கம் சுப்பாமணியை அந்தத் துறையில் ஒரு நிபுணனாகச் செய்து விட்டது. சுப்பாமணி பதினோராவது வகுப்பில் தேறவில்லை. ஆனால் ஒரு “சிறந்த என்ஜினீயருக்கு” இருக்கக்கூடிய திறமை அவனுக்கு இருந்தது. சுப்பாமணியின் சகோதரர்கள், சகோதரிகள் அனைவருமே கல்லூரிப் பட்டப்படிப்பு முடித்தவர்கள். சகோதரர்கள் அநேகமாக என்ஜினீயர்கள். சுப்பாமணி அவர்களது குடும்பத்து நிறுவனமான “பெர்பெக்ட் எலெக்ட்டிரிகல்” அலுவலகத்தை நிர்வகித்தான். சுப்பாமணிக்கு தர்மசிந்தனை அதிகம். வலதுகை தருவது இடது கை அறியாது.

1988ம் வருடம் அவனும், அவனுக்கு மனைவி சீதாலக்ஷ்மியும் கல்லிடைகுறிச்சிக்குச் சென்றிருந்தனர். அதுசமயம், அவனும், அவனுக்கு மனைவியும் சுப்பாமணியின் அப்பாவையும், அம்மாவையும் பார்த்துவரச் சென்றனர். சுப்பாமணியின் அப்பா எல்.எம்.சுந்தரம் ஐயர் ஒரு நல்ல உழைப்பாளி. எதுவும் சரியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர். அவரது மனைவி கோமு மாமி. மகாலட்சுமி போல இருப்பாள். “விஸ்வநாதா…” என்று வாய் நிறைய அன்பொழுக, கோமுமாமி அழைப்பதே மகிழ்ச்சியாக இருக்கும்.

அவனை அருகில் அமர்த்திக் கொண்டு,” விஸ்வநாதா…நீயும், சுப்பாமணியும் சின்ன வயசுல இந்தத் தெருவுல கழுதையையும், பன்னிகளையும் மேச்சுண்டு..ஊர்சுத்தின்டிருந்தேள்…நான் உங்களச் சத்தம் போடுவேன்…ஆனா இன்னிக்கு இந்தச் சுப்பாமணிக்குத் தெரிந்த விஷயம் ஒரு என்ஜினீயருக்குத் தெரியாது…இங்க ஒரு மிஷின் சரியா இல்லைனா, எங்க சுப்பாமணி அந்த “சவுண்ட்” வச்சே அதோட ஜாதகத்தச் சொல்லிடுவன். “L & T கம்பெனி”லேந்து எந்த என்ஜினீயர் வந்தாலும், சுப்பாமணி சார் இருக்காரான்னுதான் கேப்பா…அப்படி ஒரு திறமை அவனுக்கு இருக்கு. அதுக்கு மேல அப்பா, அம்மா கிட்ட ரொம்பப் பணிவாவும், அன்பாவும் இருக்கான். அதமாதிரியே நீயும் இன்னிக்கு நல்ல கவிஞனா இருக்கே…ஒன்னோடு கவிதைகள, ஆசார்யாளப் பத்தி எழுதினதெல்லாம் படிச்சேன்…எனக்கு ரொம்பப் பெருமையா இருந்தது. எல்லாத்துக்கும் மேல ஒனக்கு சிருங்கேரி ஆசார்யாளோட கிருபையும் இருக்கு…இதுக்கு மேல என்னப்பா வேணும்..நீங்க ரெண்டு பெரும் என்னிக்கும் நல்ல நண்பர்களா நன்னா இருங்கோ…” என்று மனதாரப் பாராட்டினார். சுப்பாமணியின் அப்பாவையும், அம்மாவையும் அவனும், அவனுக்கு மனைவியும் நமஸ்காரம் செய்தனர். அந்தப் பெரியோர்கள் அவர்களை ஆசீர்வதித்தனர்..

நண்பன் சுப்பாமணியின் பெண் வித்யாவும், மாப்பிளையும், மகன் விக்னேஷ் பாலசுப்ரமணியனும் இறைவன் அருளால் நன்றாக இருக்கின்றனர். இது போன்ற நண்பர்களின் குடும்ப மகிழ்ச்சியே அவனுக்கு ஒரு பிரார்த்தனைதான்.

08.10.2015

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

 படம்  உதவி  க.வி.அன்னபூர்ணா

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அவன்,அது,ஆத்மா (33)

  1. இந்த துயர சம்பவம் நடந்ததை நான் கேள்விப்பட்டிருக்கிறேன் இந்த சம்பவம் நடந்ததும் திலகர் வித்யாலய மாணவர்கள் அனைவரும் கருப்பு  அடையாளம் சொருகிக்கொண்டு துக்கம் அனுஷ்டித்தனர் . . எஸ் கே சுப்ரமணியம் (கல்கத்தாவில் பேங்க் ஆப்  மைசூரில் மேநேஜர் ஆக சமீபத்தில் ரிடைர் ஆன என் ஒன்று விட்ட மாமா). அவர்களில் ஒருவன்.   சுப்பாமணி இதில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தான் . என் பால்ய நண்பன் அசோக்கும் இதுபோல் பிற்காலத்தில் சென்னை ஒரு விபத்தில் காலமானான் என்று கேட்டு மிகவும்   வேதனை  உற்றேன்  (என்வீயஸ் சார் மச்சினி 2வது  பையன்)  துடிப்பான , ஆல் ரவுண்டர்.  இந்த சம்பவங்கள் மனதை மிகவும் பிசையும் . அவர்களுக்கு சத் கதி கிடைக்க ஆண்டவனை வேண்டுவோம் . 

  2. Viswanathan, I too remember. My father Nana sir on that day does not allow me to go to my house for lunch.He also ordered me to take lunch with me.At that date evening, I saw a cupboard box over a pool of blood opposite to Rengasamy shop. I also remember, Kundu Sundaram. The other person at the back of cycle is “Sangurusir son Kannan”. He fell on the left side and Sundaram on the right side of the rear wheel of the ill fated lorry.Imagine how the soul is taking pain to relieve from the body. Horrible!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.