Tag: க.பாலசுப்பிரமணியன்

  • வாழ்ந்து பார்க்கலாமே 21

    க. பாலசுப்பிரமணியன்

    சிந்தனைகளும் திறன்களும்

    சிந்தனைகள் வேண்டும். வளமான சிந்தனைகள் வேண்டும். பலன் தரக்கூடிய சிந்தனைகள் வேண்டும். ஆனால் வெறும் சிந்தனைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

    சிந்தனைகள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் தரலாம்

    சிந்தனைகள் தெறியாத கேள்விகளுக்குப் பதில்கள் தரலாம்.

    சிந்தனைகள் புதிய கருத்துக்களுக்கு உரமாக அமையலாம்

    சிந்தனைகள் கருத்துப் பரிமாற்றங்களுக்கு உதவி செய்யலாம்

    சிந்தனைகள், சில நேரங்களில், ஒரு மனிதனின் உள்ளுணர்வுகளுக்கும் காயங்களுக்கும் மருந்தாக அமையலாம்

    சிந்தனைகள் அறிவை வளர்க்கின்றன என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் வெறும் சிந்தைகளின் உலகத்தில் தங்களைத் தொலைத்துவிட்ட சிலர் அறிவுஜீவிகளாக மாறி நடைமுறை உலகத்திலிருந்து விலகி நிற்கின்றனர்.

    சிந்தனைகள் பல நேரங்களில் மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைகின்றன. சிந்தனைகள் பல நேரங்களில் வளர்ச்சிக்கு வித்தாக அமைகின்றன.சமூக முன்னேற்றங்களிலும் வாழ்வியல் ஆதாரங்களை மாற்றி அமைப்பதற்கும் சிந்தனைகள் வழி வகுக்கின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் சிந்தனைகளே முன்னோடிகள்.

    ஆனால் எல்லாச் சிந்தனைகளும் பயனுள்ளதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் அமைவதில்லை. எனவே ஒரு தனி மனிதனுக்குத் தன் சிந்தனைகளின் பாதைகளை அறிந்து வழிப்படுத்தி இலக்குகள் நோக்கிச் செயல்படுத்துக்கொடிய திறன் தேவைப்படுகின்றது.

    சிந்தனைகளுக்கும் கற்பனைகளுக்கும் என்ன உறவு? கற்பனைகள் இலக்கற்ற சிந்தனைகள். அவைகள் கனவுகளாகவும் இருக்கலாம். நிறைவேறாத ஆசைகள் மற்றும் உணர்வுகளின் விழித்தெழுந்த வழிப்பயன்களாக இருக்கலாம். ஆயினும் கற்பனைகளும்

    சிந்தனைகளே. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு உளவியல் மேதை கூறுகின்றார் “கற்பனைகளனைத்தும் சிந்தனைகளே. ஆனால் சிந்தனைகள் அனைத்தும் கற்பனைகள் அல்ல.

    வளரும் பருவத்தில் பொதுவாகக் கற்பனைகளுக்கும்  சிந்தனைகளுக்கும் உள்ள தூரங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. அது மட்டுமல்ல,  கற்பனைகளை ஆக்க பூர்வமான சிந்தனைகளாக எண்ணித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளுபவர்கள் சிலர் உண்டு. கனவுகளும் கற்பனைகளும் வாழ்க்கைக்கு மிக்க அவசியம். ஆனால் அவற்றின் பரிமாணங்களையும் அவற்றின் ஆக்கத்தையும் சாத்தியக்கூறுகளையும் அலசிப் பார்த்து அவைகளை வளர்ச்சிப் பாதைக்கு எவ்வாறு துணையாகக் கொள்ளலாம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

    கற்பனைகளாக இருந்தாலும் சரி, சிந்தனைகளாக இருந்தாலும் சரி அவைகளைத் திறன்களாக மாற்றாதவரை அவைகளுக்கு உயிரோட்டம் கிடைப்பதில்லை. எனவே சிந்திக்காத தெரிந்த அனைவரும் தங்கள் சிந்தனைகளின் வடிவங்களை திறன்களாக வளர்க்கவும் மாற்றவும் கற்றுக்கொள்ளவேண்டும்.

    திறன்கள் சிந்தனைகளின் நடைப்பயணத்தை வலுவுள்ளதாகவும் வளமுள்ளதாகவும் ஆக்குகின்றன. வாழ்க்கையின் வெற்றிக்கு நேர்த்தியான வளமான திறன்கள் தேவை. “உங்களுடைய திறன்கள் இறைவனால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகள். அவைகளை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என்பது நீங்கள் உங்களுக்கு கொடுக்கக்கூடிய பரிசு.” என்பது மேலை நாட்டுப் பழமொழி

    திறன்கள் தாமாக நமக்கு கிடைப்பதில்லை. சிலருக்கு மட்டும் அவர்கள் மூதாதையர்களின் வழிவந்த மரபணுக்களின் தாக்கத்தில் சில திறன்களுக்கான வித்துக்கள் உள்ளுணர்வில் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. பொதுவாகத் திறன்களை நாம்தான் தேடி வளர்த்துக்கொள்ள வேண்டும். பட்டப்படிப்புக்களும் பாராட்டுக்களும் நமக்குத் திறன்களை வாரி வழங்குவதில்லை. திறன்களாலே தான் நாமக்குப் பாராட்டுக்களும் பெருமையும் கிடைக்கின்றன.

    திறன்களை எப்படி வளர்த்துக்கொள்ளுவது?

    1. முதலில் நம்முடைய ஆர்வங்கள் எந்தத் துறையில் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.
    2. அத்தகைய ஆர்வங்களின் வளர்ச்சிப்பாதையில் என்னென்ன வாய்ப்புக்கள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
    3. அந்த வாய்ப்புக்களை அடைவதற்கான திறன்களும் அறிவாற்றல்களும் எப்படிப் பெற முடியும் என்பதைத் தேடி அறிய வேண்டும்.
    4. அந்தத் திறன்களை பெறுவதற்கான பயிற்சிகள் எங்கே எப்படிக் கிடைக்கும் என்பதை அறிய வேண்டும்.
    5. அந்தத் திறன்களைப் பெறுவதற்கான முயற்சிகளைத் தங்களால் செய்ய முடியுமா அல்லது அதை அடைவதில் உள்ள தடங்கல்களை வென்று சாதனையாளராக முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.

    திறன்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு மனிதனுடைய தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு மிகவே பயனுள்ளதாக இருக்கும். திறன்களில்லாத சிந்தனை திசைதெரியாத கப்பல் பயணம் போன்றது.

    ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகின்றது.

    ஒரு கப்பல் ஒரு துறைமுகத்தில் பயணத்திற்குத் தயாராக உள்ளது. அதனுடைய கேப்டன் அதை இயக்க முயற்சிக்கின்றார். ஆனால் அந்தக் கப்பல் இயங்கவில்லை. பல பொறியாளர்கள் வந்து அதைச் சோதனை செய்து காரணத்தைக் கண்டுபிடிக்க முயலுகின்றனர். அவர்களால் முடியவில்லை. அந்தநேரத்தில் அங்குள்ள உள்ளூர்வாசி அந்தக் கேப்டனிடம்  உள்ளூரில் ஒரு பழுதுபார்க்கும் தொழிலாளி இருப்பதாகவும் அவர் வயதானவராக இருந்தாலும் திறமை உள்ளவர் என்றும் கூறுகின்றார். உடனே அந்தத் தொழிலாளி அங்கே அழைக்கப்படுகின்றார்.

    அந்த வயதான தொழிலாளி அந்தக் கப்பலை ஒரு முறை வலம்வந்து பார்த்துவிட்டு ஒரு மூலைக்குச் சென்று அங்குள்ள ஒரு இயந்திரத்தை மெல்லத் தட்டுகின்றார். பின் அந்தக் கேப்டனிடம் “இப்பொழுது கப்பலை இயக்குங்கள் ” என்று கூற அந்தக் கப்பல் முயன்றவுடன் இயங்க ஆரம்பித்து விடுகின்றது.

    தன்னுடைய வேலைக்கான கூலியை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுக்க அந்தக் கேப்டனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

    “நீங்கள் ஒரே ஒரு இடத்தில் தட்டியதற்க்கா ஆயிரம் டாலர்கள் கேட்கின்றீர்கள்?”

    “இல்லை. நான் தட்டியதற்கான கூலி இரண்டு டாலர்கள்தான். ஆனால் எங்கே தட்ட வேண்டும் என்று கண்டுபிடித்தற்கான கூலி 998 டாலர்கள்.’

    திறன்கள் மலிவானவை அல்ல. திறன்களின் மதிப்புக்களை வெறும் பணத்தால் மட்டும் மதிப்பிட முடியாது..

    ஒரு பாடகருக்கு என்ன பணம் கிடைத்தாலும் அது அவர் பலருக்கு கொடுத்த மகிழ்வுக்கும் நிறைவுக்கு ஈடு அல்ல.

    ஒரு சிற்பியின் கலையை பணத்தால் மட்டும் மதிப்பிட முடியாது.

    ஒரு மருத்துவரின் நேர்மையான தொழிலையும் திறனையும் பணத்தால் ஈடு செய்ய இயலாது.

    ஒரு ஆசிரியரின் வாழ்க்கைப் பயணத்தில் வளர்ச்சி அடைந்தவர்களின் சரித்திரங்கள் அவருடைய சம்பளத்தை நிர்ணயிக்க முடியாது.

    திறன்கள் ஒரு மனிதனின் ஆன்மாவின் அறைகூவல்.. அதை உணர்ந்து நம்முடைய திறன்களை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யலாமே !

    தொடருவோம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 18

    க. பாலசுப்பிரமணியன்

    வளமான வாழ்விற்கு வளமான சிந்தனைகள்

    உடல்நலமும் மனநலமும் இணைந்து சிறப்பாக இருந்தால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்க முடியும். உடல் நலத்திற்கு எவ்வாறு உடற்பயிற்சியும் சத்தான உணவும் தேவையோ அதேபோல் மனநலத்திற்கு நல்ல சிந்தனைப் பயிற்சியும் சத்தான சிந்தனைகளும் தேவை. ஒரு மனிதனின் சிந்தனையே அவனை உருவாக்குகிறது என்று அண்ணல் காந்தி அடிகள் கூறுகின்றார். வளமான தூய்மையான நேர்மறையான சிந்தனைகள் நமக்குத் தேவை. இவைகளை வளர்ப்பதற்கு நாம் அதைப் பேணும் சூழ்நிலைகளில் இருத்தல் அவசியம். எதிர்மறையான சிந்தனைகளைக் கொடுக்கும் மற்றும் வளர்க்கும் சூழ்நிலைகளில் நாம் இருந்தால் அதன் பாதிப்புக்கள் நம்மை உலுக்கும். அவைகளுக்கு இரையாகி நாம் வாழ்வில் வீழ்ச்சி அடைந்து கொண்டிருப்போம். இந்தக் கருத்தை பல மனநல வல்லுநர்கள் தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப் படுத்தியிருக்கின்றார்கள் நல்ல சிந்தனைகள் நம்முடைய வளர்ச்சிக்கு ஆணிவேர். நல்ல சிந்தனைகள் நம்முடைய மகிழ்ச்சிக்கு உத்திரவாதம். நல்ல சிந்தனைகள் நம்முடைய வருகாலத்திற்கு நாம் அளிக்கும் காப்பீடு. நல்ல சிந்தனைகளே நம்முடைய அன்பான உறவுகளை வளர்ப்பதற்கு  நாம் போடும் உரம்.. நல்ல சிந்தனைகளே நம்முடைய ஆளுமை வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.

    ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகின்றது. ஒரு கிராமத்தின் எல்லையில் உள்ள ஒரு அரச மரத்தடியில் ஒரு முனிவர் அமர்ந்திருந்தார். அவருடன் அவருடைய சீடர்கள் அமர்ந்திருந்தனர். அங்கே வந்த ஒரு வழிப்போக்கன் அந்த முனிவரிடம் “நான் பக்கத்துக்கு கிராமத்திருக்குச் செல்கின்றேன். அங்குள்ள மக்கள் எப்படிப் பட்டவர்கள்” என்று கேட்கின்றான். அந்த முனிவர் பதிலுக்கு அவனிடம் ‘நீ வருகின்ற கிராமத்தில் உள்ள மக்கள் எப்படி’ என்று கேட்கின்றார். அதற்கு அவனோ “அங்குள்ளவர்கள் மிக மோசமானவர்கள்” என்று பதிலளிக்கின்றான். உடனே முனிவரோ “அப்படியா, இந்த கிராமத்தில் உள்ளவர்களும் அதே போன்றவர்கள்தான்” என்று சொல்கின்றார். சிறிது நேரம் கழித்து இன்னொரு வழிப்போக்கன் அதே போல் இந்த முனிவரிடம் கேட்க முனிவரும் தன்னுடைய அதே கேள்வியை இந்த வழிப்போக்கனிடம் கேட்கின்றார். இதற்கு பதிலளிக்கும் அந்த வழிப்போக்கன் மகிழ்வுடன் “அவர்கள்  மிகவும் நல்லவர்கள்”என்று சொல்ல முனிவர் “இந்த ஊர் மக்களும் அதே போல் நல்லவர்கள் என்று பதிலளிக்கின்றார். அதிர்ச்சியடைந்த சீடர்கள் முனிவரிடம் ‘குருவே, ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விதமான பதில் கூறுகின்றீர்களே” எனக் கேட்க  முனிவரோ “உன் சிந்தனை எப்படியோ அப்படித்தான் உன் உறவுகள் அமையும் “என்று பதிலளிக்கின்றார்.

    சிந்தனைகள் நமது சக்திக்கு உயிரூட்டுபவை. சிந்தனைகளின் வளமும் தூய்மையும் உண்மையும் நம்முடைய செயல்களுக்கு வெளிச்சம் போட்டு வழிகாட்டும் தன்மையுடையவை

    ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க” என்று அறிவுரை கூறும் வள்ளுவர் மேலும் கூறுகின்றார்

    “சென்ற விடத்தாற் செலவிடாது தீதொறி

    நன்றின் பால் உய்ப்பது அறிவு.”

    பல நேரங்களில் நமக்கு துயரத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளில் மனம் தன்னைத்தானே குறைவாக மதிப்பிட்டு நமது சிந்தனைகளின் வளத்தைப் பாதிக்க வாய்ப்புக்கள் வரும். அந்த நேரங்களில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மை இளக்காரமாகவோ அல்லது நமது இயலாமையை பெரிதுபடுத்தியோ நம்மைக் கொச்சைப்படுத்த வாய்ப்புகள் ஏற்படலாம். அந்த நேரங்களில் நாம் நம்முடைய சிந்தனைகளை மேலும் பலவீனமாக்கிக்கொள்ளாமல் நம்மீது வீசப்படும் கணைகளை எவ்வாறு நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்று முற்போக்காகச் சிந்திக்க வேண்டும்.

    ஒரு கிராமத்தில் ஒரு மனிதன் கழுதையை வளர்த்துக்கொண்டிருந்தான்,. ஒரு நாள் உணவுக்காக அந்தக் கழுத்தை மேய்ந்து கொண்டிருந்த பொழுது அருகில் உள்ள பெரிய பள்ளத்தில் விழுந்து விட்டது. எவ்வளவு முயன்றும் அதனால் மேலே ஏறி வர முடியவில்லை. அதன் ஊரிமையாளருடன் ஊர் மக்கள் அனைவரும் அந்தப் பள்ளத்தின் அருகே கூடிவிட்டனர். “இது இனிமேல் மேலே வந்து என்ன செய்யப்போகின்றது “ïஇதற்கு வயதாகி விட்டது. இதை வெளியே எடுத்து என்ன செய்யப்போகின்றாய்”  என்று பல அறிவுரைகளை வீசிவிட மக்கள் சொல்கேட்டு மனம்மாறிய உரிமையாளர் அந்தப் பள்ளத்திருக்குள்ளேயே அதைப் புதைத்துவிட எண்ணி  அருகில் இருந்த மணலைப்போட்டு மூடிவிட முயற்சி செய்தார். கொஞ்சம் கொஞ்சமாக பள்ளத்தில் மண்சேர அந்தக்கழுதை அதன் மீது கால் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி வெளியே வந்து விட்டது. அதன் சிந்தனையையும் தன்னம்பிக்கையையும் பாராட்டாமல் இருக்க முடியுமா?

    எதிர்மறையான சூழ்நிலைகளிலும் வளமான முற்போக்கான நேர்மறையான சிந்தனை நமக்கு தன்னம்பிக்கையையும் வெற்றியையும் அளிக்கும் என்பதில் ஐயப்பாடு ஏதுமில்லை.

    நல்ல நேர்மறையான முற்போக்கான சிந்தனையுடனும் அதைத் தருகின்ற சூழ்நிலைகளிலும் வாழ்ந்து பார்க்கலாமே !

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே.. 17

    க. பாலசுப்பிரமணியன்

     

    வாழ்க்கைக்கு உணவு ஒரு வரப்பிரசாதம் !

    ஒரு மருத்துவர் ஒரு இளைஞனைப் பரிசோதித்துக்கொண்டிருந்தார். அந்த இளைஞனுக்குச் சில நாட்களாக வயற்றில் வலி. மருத்துவருக்கு அவன் குடலில் புண் இருந்தது தெரிய வந்தது..  அங்கே உடன் இருந்த அந்த இளைஞனின்  தந்தை வருத்தத்தோடு மருத்துவரைப் பார்த்துக்கூறினார் “இது என்ன குடலில் புண் வர வயதா அய்யா? சின்ன வயது.. சாப்பிட்டால் கல்லும் கரையும் என்று சொல்லுவார்கள் ..”

    அந்த மருத்துவர் அந்த இளைஞனின் தந்தையை சற்றே உற்று நோக்கினார்.. சிரித்தார்… “உண்மை தாங்க ,, இது கல்லும் கரையர வயது.. ஆனால் நாமே நம்முடைய உடல் உறுப்புக்களை பழுதாக விட்டால் அங்கே கல் எப்படி கரையும்?… சாப்பாடு கூட ஜீரணிப்பதில்லை…”

    மருத்துவர் கேட்டார் “உங்க பையன் வேளாவேளைக்கு ஒழுங்காகச் சாப்பிடுகிறாரா?”

    “இல்லீங்க அவன் வேலை அப்படி…  நேரத்துக்குச் சாப்பாடு கிடையாது.  அடிக்கடி காப்பிதான்”

    “அவர் உட்கார்ந்து அமைதியாக சாப்பிடுகின்றாரா?”

    “இல்லீங்க… அவர் எப்பவும் அவசர அவசரமாக சாப்பிடுவதுதான் வழக்கம். எப்பவும் காலிலே கஞ்சியைக்கொட்டிக்கொண்ட மாதிரி..  உட்கார்ந்து சாப்பிடறதே கிடையாது.. நின்றுகொண்டு.. நடந்து கொண்டு. போன் பேசிக்கொண்டு … டிவி பார்த்துக்கொண்டு.. ”

    மருத்துவர் சிரித்தார்… “அவர் ருசித்து சாப்பிடுவாரா ?”

    அந்தப் பெரியவர் சிரித்தார்.. “இவங்க சாப்பிடறதெல்லாம் அள்ளித் தெளித்த கோலம் மாதிரிங்கா.. ஏதோ எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து உள்ள தள்ளறாங்க… அறுசுவைனா என்னான்னு கேளுங்க… ஒன்றும் தெரியாது…”

    “அய்யா.. நேரத்துக்குச் சாப்பிடுவதில்லை.. அளவாகச் சாப்பிடுவதில்லை… சுவைத்துச் சாப்பிடுவதில்லை.. அமர்ந்து அமைதியாகச் சாப்பிடுவதில்லை… சாப்பிடுவது என்பது ஒரு தினசரி வேலையா.. இல்லை .. வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு ஆதாரமா.. ..நாம் உடலுக்குத் தகுந்தபடி ஒத்துழைக்கவில்லையென்றால் உடல் நம்மோடு எப்படி ஒத்துழைக்கும்? குடல் நோய்கள் ஏன் வாராது?”

    இந்த நிலையை நாம் பல வீடுகளில் பார்க்கின்றோம். உணவை உடலுக்கு ஒரு சக்தி தரும் உள்ளீட்டாகக் கருதாமல் கருதாமல், உடலையும் உள்ளத்தையும் பாதுகாக்கும் ஒரு மருந்தாகக் கருதாமல், வேகமான வாழ்க்கைக்கு ‘வேகமான உணவுகளைத்” தேடி ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

    ஒருமுறை ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் நகருக்குக் சென்றிருந்த போது அங்கிருந்த ஒரு அன்பர் கேட்டார் “அன்பரே.. உங்களுக்கு நல்ல சாப்பாடு வேண்டுமா அல்லது விலையுயர்ந்த சாப்பாடு வேண்டுமா?’  நான் சற்றே திகைத்தேன்.. “விலையுயர்ந்த சாப்பாடு வேண்டுமென்றால் அருகில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் உண்ணலாம். நல்ல சாப்பாடு வேண்டுமென்றால் அருகில் உள்ள “தாபா”வில் சாப்பிடலாம். எப்படி வசதி?”

    என்னுடைய அமைதியைக் கண்ட அவர் இந்த ‘தாபா”வில் உடனே தயாரிக்கப்பட்ட சூடான உணவு கிடைக்கும். அங்கே என்ன கிடைக்கும் என்று உங்களுக்கே தெரியும” என்கிறார்.

    நாம் எங்கே சாப்பிடுகின்றோம் என்பது முக்கியமில்லை. எதை உண்கின்றோம் எப்படி உண்கின்றோம். எந்தச் சூழ்நிலையில் உண்கின்றோம் என்பது மிகவும்  அவசியமாகக் கருதப்படவேண்டிய ஒன்று. சாப்பிடுவதற்காகவே வாழ்கின்றவர்கள் ஒரு வகை என்றும் வாழ்க்கையில் உணவின் சீரிய நோக்கத்தை சற்றும் அறியாதவர்கள் என்றும் இருவகையாகப் பிரிக்கலாம். நல்ல வாழ்விற்கான உணவு முறைகளை கூறும் வல்லுநர்கள் அறிவுரை:

    1. சத்தான உணவு
    2. சீரான உணவு
    3. சரியான நேரத்தில் உணவு
    4. சுவையான உணவு
    5. சுத்தமான உணவு

    இதை அத்தனையும் விட உண்ணும் நேரத்தில் உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது? உங்களுக்கு உணவு அளிப்பவர்கள் மனநிலை எப்படி இருக்கின்றது? கூட அமர்ந்து உண்ணுபவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? என்பதை பற்றியெல்லாம் மனநல வல்லுநர்கள் ஆலோசனைகள் கூறுகின்றனர்.

    ஒரு விழாவின் முடிவில் விருந்து அளிக்கப்பட்டது. அதில் ஏறக்குறைய நூறு வகையான உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன. அத்தனையும் சுவையாக இருந்தாலும் ஒருவரால் அத்தனையும் உண்ண முடியுமா? எது நமக்குத் தேவையோ எது நமக்கு விருப்பமோ, எது நமது உடலுக்கு உகந்தது அதைத் தானே உண்ணமுடியும் ? அதைத்தானே உண்ண வேண்டும் ?

    அன்பாகப் பரிமாறப்படும் உணவில் உள்ள ஆக்க சக்தி எவ்வளவு அதிகமானது? நமது குடும்பங்களில் சிறிதளவே உணவு தயாரிக்கப்பட்ட நிலையிலும் அதை அன்புடன் பகிரும்பொழுது வயிறோடு மனமும் நிறைந்ததைப் பார்த்திருக்கின்றோமே !

    வாழ்க்கையில் உணவு ஒரு பெரிய வரப்பிரசாதம்!  அதற்குரிய மரியாதையையும் முக்கியத்துவத்தையும் கொடுத்து வாழ்க்கையை வளம் பெறச் செய்யலாமே ! `

    சிந்திக்கலாமே !

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே.. 16

    க.பாலசுப்பிரமணியன்

     

    உணவும் வாழ்க்கை நலமும்

    ஒருவரின் வாழ்வு சிறப்புற அவருடைய உடல்நலமும் மனநலமும் இணைந்து சிறப்பாக இருத்தல் மிக அவசியமானது. இரண்டில் ஏதேனும் ஒன்று தொய்ந்து இருந்தாலோ அல்லது அதில் குறைபாடுகள் இருந்தாலோ வாழ்க்கையை நல்ல பாதையில் எடுத்துச் செல்லவும் வெற்றிப்படிகளில் கால்கள் வைப்பதிலும் தடங்கல்கள் இருப்பது உறுதி. ஒரு மனிதனின் ஆரோக்யத்தைப் பற்றி விளக்கும் புத்தத் துறவி தலாய் லாமா அவர்கள் கூறுகின்றார் ” வாழ்க்கையில் நாம் நம்முடைய உடல்நலத்தை செலவழித்தும் வீணடித்தும் பணத்தைச் சேர்க்க முயல்கின்றோம். பின்பு நாம் சேமித்த பணத்தை முழுவதுமாக நம்முடைய உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் காத்துக்கொள்ளச் செலவழிக்கின்றோம்.” இது எவ்வளவு உண்மையான வாக்கு! உடல் நலத்தைப் பற்றி பேசும் பொழுது அதை வெறும் உடற் பயிற்சிகளால் மட்டும் சிறப்பாக வைத்திருக்க முடியாது. நாம் உண்ணுகின்ற உணவு, உண்ணும் முறைகள், நமது உணவைச் சார்ந்த பழக்க வழக்கங்கள், உடல் சுகாதாரம் ஆகிய பலவற்றால் நமது உடல் நலம் பாதிக்கப் படுகின்றது. பழங்களையும் காய்கறிகளையும் கீரை வகைகளையும் மற்றும் சிறப்பாக வளர்க்கப்பட்ட பயிரினங்களிலிருந்து கிடைக்கும் தானிய வகைகளையும் உணவாக ஏற்று பல்லாண்டு காலம் வாழ்ந்து வந்த நாம் இப்பொழுது வேதியல் பொருட்களால் பயிர்ப்பிக்கப் பட்ட தானிய வகைகளை மட்டுமின்றி, உடலுக்கு ஒவ்வாத பல வேதியல் பொருள்களால் தயாரிக்கப்பட்ட உணவுப்பண்டங்களை உட்கொண்டு உடல் நலத்தை கெடுத்துக் கொண்டு வருகின்றோம்.

    இதுபற்றிய பலவித ஆரய்ச்சிகள் உலக அளவில் மேற்கொள்ளப்பட்டது மட்டுமின்றி, இவற்றால் நமக்கு ஏற்படும் பலவிதத் தீங்குகளை பற்றியும் விளக்கப்பட்டு வருகின்றன. மற்றும் உண்ணும் உணவுக்கும் நம்முடைய உடல் சக்திக்கும் மூளையின் வளர்ச்சி மற்றும் ஆற்றலுக்கும் உள்ள நேரடித் தொடர்பு பற்றியும் பல்வேறு ஆரய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக எவ்வாறு நாம் சில வகையான “துரித உணவுகளால் ” நம்முடைய உடலுக்கு கேடு விளைத்துக்கொண்டு வருகின்றோம் என்பது தெள்ளத்  தெளிவாக விளங்குகின்றது

     

    தன்னுடைய மூளை சார்ந்த கற்றல் என்ற புத்தகத்தில் மூளை-நரம்பியல் மற்றும் கற்றல் பற்றிய ஆராய்ச்சியாளர் பென் ஜெசென் (Dr. Ben Jessen) என்பவர் கூறுகின்றார் “உங்களுடைய மூளையின் திறனை நீங்கள் உண்ணும் உணவு மூலம் மேலும் சிறப்பாக செயல் படுத்த முடியும். நீங்கள் உண்ணும் உணவு உங்கள் மூளையின் கீழ்கண்ட திறன்களை பாதிக்கின்றது:

    1.உங்களுடைய மூளையின் சமநிலை

    1. உங்கள் உணர்வுசார்ந்த முடிவுகள் மற்றும் சிந்தனைகள்
    2. உங்களுடைய சிந்திக்கும் திறன் மற்றும் புத்திசாலித்தனம்
    3. உங்களுடைய புத்திகூர்மை
    4. உங்களுடைய ஞாபகசக்தி

    மேலும் அது உங்களுடைய மூளையை இளமையுடன் வைத்திருக்க உதவுகின்றது.”

     

    (The food you eat directly affects the performance of your brain. It has been proven that by eating the right food, you can boost your IQ, improve your mood, be more emotionally stable, sharpen your memory and keep your mind young-  Ben Jessen)

    அது மட்டுமல்ல, மூளைக்குத் தேவையான சத்தான உணவுகளை உண்பதன் மூலம் மூளையின் செறிவு, கவனம் மற்றும் கூறிய சிந்தனைத் திறன் இவைகளை வளர்த்துக்கொள்ள முடியும் என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். மூளைக்குத் தேவையான மூன்று முக்கியமான உள்ளீடுகள்: சத்தான உணவு, போதுமான நீர், மற்றும் நல்ல அளவில் ஆக்சிஜன் வாயு. எனவே உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணுவதற்கு நம்முடைய உணவுப் பழக்கங்களின் மீது கவனம் செலுத்துதல் மிக அவசியம்.

    தற்காலத்தில் இளைய தலைமுறையின் உணவுப் பழக்கங்கள் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட அளவில் உலக நாடுகள் அவர்களைத் தாக்கும் பல புதிய நோய்களை தடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. உதாரணமாக இளம் வயதில் சர்க்கரை நோய், (Juvenile Diabetes) உடலில் அதிகமான கொழுப்புச் சத்துக்கள், (Obesity)  வேதியல் பொருட்கள் கலந்த உணவுகளால் ஏற்படும் வயிறு மற்றும் உடல் கோளாறுகள், (Intestinal disorders), மூளை பாதிப்புகள் (psychological disturbances) ஆகியவை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. வருங்கால சமுதாயத்தின் ஆரோக்கியத்தைப் பற்றிய கவலை வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

     

    நமது உடலுக்கு சிறப்பான வாழ்விற்கும் நாமே பொறுப்பு என்பதை உணரவேண்டும். நமது உடல் நலத்தையும் நமது மன நலத்தையும் பாதுகாப்பது நாம் நமக்கு செய்துகொள்ளுகின்ற ஆன்மீகக் கடமை என்பது மட்டுமின்றி அது நமது சமுதாயக் கடமை என்பதையும் அறிந்து செயல்பட வேண்டும். நமது உணவுகளுக்கும் நமது உணவுப் பழக்கங்களுக்கும் நாமே பொறுப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும்.

    திருவள்ளுவரின் கீழ்கண்ட குறள் நமக்குப் புகுத்தும் அறிவை நாம் கருத்தில் கொள்ளுதல் நமக்கு நலம் தருமே !

    மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

    ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

    நமது வாழ்வை நாம் நல்லபடியாக வாழ்ந்து பார்க்கலாமே !

    (தொடரும்)

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 15

    க. பாலசுப்பிரமணியன்

     

    நலமான வாழ்க்கைக்கு ஒரு நடைப்பயணம் !

    வாழ்க்கையில் பல சாதனையாளர்களை நாம் சந்தித்திருக்கின்றோம். இவர்கள் அனைவருக்கும் உள்ள சில அடிப்படை ஒற்றுமைகள் என்ன? – வாழ்க்கைக்கு ஒரு இலக்கு, தெளிவான சிந்தனை, பயணத்திற்கேற்ற பாதை, முயற்சி, கடின உழைப்பு, பொறுமை, தோல்விகளை ஏற்றுக்கொண்டு சந்திக்கும் மனப்பான்மை, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுவதற்கான துணிச்சல் மற்றும் வாழ்க்கையை ரசிக்க வேண்டும் என்ற ஒரு விருப்பம்….

    இத்தனையும் இருந்தாலும் ஒருவருக்கு உடல் நலமும் மனநலமும் இல்லையென்றால் வெற்றிப்பாதையில் முன்னேறுவதற்கான பல தடைகள் வந்துகொண்டே இருக்கும். இவற்றையும் ஏற்று சந்தித்து வெற்றி பெற்றவர்கள் ஏராளம்.. ஏராளம்…

    உலகில் பாதியை தன் வீரத்தால் வென்ற ரோமாபுரி அரசன் ஜூலியஸ் சீசர் வலிப்பு நோயால் பாதிக்கப் பெற்றவர். இந்த நோய் அவருடைய வீரத்தையும் இலக்கினையும் வீழ்த்தவில்லை…தன்னுடைய திறமையினால் உலகை வியக்க வைத்த பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் சற்றே உயரம் குறைவாக இருந்ததால் சிறிது தாழ்வு மனப்பான்மைக்கு அடிமையானதாக சரித்திரம் கூறுகின்றது… ஆனால் அதுவே அவனுக்கு  உழைப்பாலும் முயற்சியாலும் வெற்றிக்கனியை பறித்திட வழி வகுத்தது. ஏழு முறை ஆஸ்கார் பரிசுகள் வென்ற விருது பெற்ற ரிச்சர்ட் பர்டன் என்பவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். பல நேரங்களில் படப்பிடிப்பின் போது மயங்கி கீழே விழுந்தவர்.. தடைகள் அவர் முன்னேற்றத்திற்கு தடையிடவில்லை.

    உலகப் பிரசித்தி பெற்ற பீத்தோவன் என்ற இசைமேதைக்கு சரியாக காது கேட்கவில்லை. பல நேரங்களில் மேடைகளில் கிடைத்த கர ஒலிகளைக்கூட அவரால் கேட்கமுடியவில்லை… ஆனால் இசையில் உலக சாதனை படைத்தவர்… தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம் பெல் என்பவருக்கு சரியாகக் காது கேட்கவில்லை. ஆனால்  உலகில் ஒருவர் பேசுவதை மற்றவர் தூரத்தில் இருந்தே கேட்பதற்கான நுண்கலையைத் தந்தவர்…பைரன் என்ற மிகச் சிறந்த கவிஞருக்கு மூளையில் நரம்புக்கோளாறு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தான் எழுதிய படைப்புகளையே அவர் மறந்தார்.ஆனால் அவர் படைப்புத் திறன் குறையவில்லை. புகழ் பெற்ற நாவலாசிரியர் சார்லஸ் டிக்கென்ஸ் என்பவர் மனநோயால் பாதிக்கப்பட்டு மனநலக் காப்பகத்தில் மூன்று முறை வைக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு முறை திரும்பி வந்ததும் ஒரு புதிய பதிப்பைத் தந்தார்..

    இது போன்ற பல சாதனையாளர்களின் சரித்திரங்கள் நமக்கு முன்னோடியாக இருந்தாலும் ஒரு சாதாரண மனிதனைப் பொறுத்த வரை வாழ்வில் அன்றாட வாழ்க்கையை சமாளித்து வெற்றிநடை போடுபவர்க்குத் தேவையானவை – உடல் நலமும் மன நலமும்.

    “சுவரிருந்தால் தானே சித்திரம் எழுத?” என்பது வழக்கு மொழி. “உன்னுடைய உடலைப் பாதுகாத்துக்கொள். உன் வாழ்க்கை அதற்குள்தான் அடங்கியிருக்கின்றது.” என்று உலகளாவிய தத்துவ மேதைகளும் அறிவியல் வாதிகளும் மருத்துவர்களும் கூறிவருகின்றனர். இந்த உடல் என்பது இறைவன் நமக்குக் கொடுத்த ஒரு மிகப் பெரிய பரிசு. எத்தனை எலும்புகள்.. எத்தனை நரம்புகள்.. எத்தனை வேதியல் பொருட்கள்.. எத்தனை விதமான அசைவுகள்…வியப்பைத்தரக்கூடிய மனித மூளை… பல நூறு கணினிகள் சேர்ந்தாலும் ஒரு மூளை செயல்படுத்தும் சாதாரணச் செயல்களைக் கூட ஈடுபடுத்த முடியாத விந்தை… இந்த மூளையின் படைப்புத்திறன்… அதனுடன் சேர்ந்த உணர்வுகள்.. ஆசைகள்.. விருப்பங்கள்.. கனவுகள்… எண்ணங்கள்.. கருத்துக்கள்… அறுசுவையை ரசிக்கின்ற நாக்கு.. எத்தனை விதமான உணவுகளை செரிக்கின்ற திறன்… இது ஒரு மிகப்பெரிய பரிசல்லவா? இதை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டாமா…?

    ஆனால் நாம் என்ன செய்கின்றோம்? இதைப் பற்றி நாம் சிறிது கூட கவலைப்படுவதில்லை. இந்த உடலில் சில உபாதைகளும் நோய்களும் வந்து நம்மைத் தாக்கும் பொழுதுதான் இதற்குத் தேவையான மரியாதை கிடைக்கின்றது..

    பணத்துக்கும் பதவிக்கும் உறவுக்கும் புகழுக்கும் கொடுக்கின்ற கவனத்தை நாம் நம்முடைய உடலுக்கு ஏன் கொடுப்பதில்லை? இந்த உடல் நலமாக  இல்லையென்றால் மீதி அத்தனைக்கும் மதிப்பு ஏது? உடல் நலம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. வாழ்கின்ற அனைவரும் தான் மரணத்தை எய்தும் முன் ஒரு நோய் நொடியின்றி படுக்காமல் போக வேண்டும் என்றுதானே நினைக்கின்றார்கள்? எனவே, வாழ்க்கையின் வெற்றிக்கும் மிக அத்தியாவசியத் தேவை உடல் நலம்.

    உடல் நலத்திற்கும் மூளைத் திறன்களும் உள்ள நெருங்கிய உறவு பற்றிய பல ஆராய்ச்சிகள் நம்மை வியப்படையச் செய்கின்றன. வளர்ச்சி உயிரியல் (Developmental Biologists) பற்றிய ஆராய்ச்சியாளர்கள் மற்ற உயிரினங்களைவிட மனித இனத்தின் மூளை சிறப்பாக இருப்பதற்கான காரணம் மனிதர்களின் வளர்ச்சியில் உடல் பயிற்சியும் உடல் உழைப்புமே என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார்கள். ஒரு காலத்தில் ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளில் பன்னிரண்டு மைல்கள் நடைப்பயணம் செய்ததாகவும் அதற்கான பலனே திறன் வாய்ந்த மூளை என்றும்  கூறுகின்றனர். உடற் பயிற்சியும் உடல் உழைப்பும் பல நோய்களிருந்து நம்மைக் காப்பாற்றுகின்றது.

    மூளையின் நியதிகள் (Brain Rules)   என்ற ஒரு புத்தகத்தில் எழுதியுள்ள ஜான் மெடினா (John Medina)  என்ற மூளை-நரம்பியல் அறிவியல் நிபுணர் கூறுகின்றார்

    உடற் பயிற்சி ஒரு மனிதனுடைய உடலைக் கோப்பாகவும், பாதுகாப்பாகவும், அழகாகவும் வைப்பது மட்டுமின்றி, அவனுடைய மூளையின் வலிமை, சிந்திக்கும் திறன், நினைவுத் திறன், படைப்பாற்றல் ஆகிய பலவற்றை  வளர்க்கவும், வலுப்படுத்தவும் காரணமாக அமைகின்றது.”

    எனவே, வளரும் பருவத்தில் குழந்தைகளுக்கு விளையாடுவதற்குப் போதுமான நேரம் ஒதுக்குவது மட்டுமல்லாது பல விதமான உடற்பயிற்சிகளைச் செய்ய வைப்பதும் அவர்களுடைய பிற்காலத்தின் வளத்திற்கு கொடுக்கப்படும் உரம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உடற்பயிற்சி குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் மட்டுமே என்ற எண்ணம் கொள்ளாது அனைத்து வயதுகளைச் சார்ந்தோருக்கும், அனைத்துப் பாலினங்களுக்கும் பொதுவானது என்பதை மனதில் கொள்ளுதல் அவசியம்.

    வாழ்க்கை என்றும் சிறப்பாகவும் புத்தொளியுடனும் இருக்க நாம் உடல் நலத்தில் சற்றே  அதிக கவனம்  செலுத்தினால் என்ன?

    வாழ்வதை சிறப்பாக வாழ்ந்து பார்க்கலாமே !

    (தொடரும்)

    Share
  • வாழ்ந்து  பார்க்கலாமே -13

    க. பாலசுப்பிரமணியன்

     

    முயற்சியில் அவசரம் எதற்கு?

    எங்கிருந்தோ  ஒரு குரல்  ஒலிப்பது  என் காதில்  விழுகின்றது  “அய்யா நீங்கள்  சொல்வது  முற்றிலும்  சரி.   என்னுடைய தன்னம்பிக்கைக்கு குறைவே  இல்லை. என்னுடைய முயற்சிக்கும் குறைவே இல்லை. ஆனால் என்னால் வெற்றிப்படிகளில் தான் ஏற முடியவில்லை. நான் எவ்வளவோ முயற்சித்தும் இருக்கும் இடத்திலேயே நின்று கொண்டிருக்கின்றேனே .” என்று அங்கலாய்ப்பது என் காதுகளில் விழுகின்றது. உண்மைதான்! எத்தனையோ பேர்களிடம் தன்னம்பிக்கையும் முயற்சியும் இருந்தும் கூட அவர்கள் சாதனையாளர்களாக மாற முடியவில்லை. யோசித்துப்பார்க்க வேண்டிய ஒன்றுதான்.

    இந்த இடத்தில் எழுகின்ற கேள்வி. அவர்கள் முயற்சி முழுமையானதாக இருக்கின்றதா? அவர்களுடைய கவனம் அவர்கள் குறிக்கோள்கள் மீது இருக்கின்றதா? அவர்கள் முயற்சியில் தொய்வுகள் ஏதேனும் இருக்கின்றதா? அவர்கள் முயற்சி காலத்தின் நேரத்தின் பரிமாணங்களுக்கு சரிப்பட்டதாக இருக்கின்றதா?

    “இலக்கை நோக்கி அம்பை எய்துகின்றவன் இலக்கில் அம்பு படாவிட்டால் இலக்கைத் தவறு என்று சொல்வதில்லை. தன் அம்பு எய்தும் திறனில் உள்ள குறைகளை பரிசீலிக்கின்றான்.” என்பது ஒரு வழக்குமொழி. அது போலத்தான். நாம் செய்யும் எந்தச் செயலிலும் முழு முயற்சியை வைக்கும்முன் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய சில உண்மைகள் :

    1. நம்முடைய இலக்கு தெளிவானதாக இருக்கின்றதா?
    2. நமது முழு கவனமும் இலக்கின் மீது இருக்கின்றதா?
    3. அந்த இலக்கை அடைய நம்முடைய பாதை சரியானதாக இருக்கின்றதா?
    4. அந்த இலக்கை அடைய நம்முடைய வளங்கள் போதுமானதாக இருக்கிறதா?
    5. அந்த இலக்கை அடைவதில் ஏற்படக்கூடிய கவனச் சிதறல்கள் யாவை?
    6. அந்த கவனச் சிதறல்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது எப்படி?
    7. அதை இலக்கை அடைவதற்கு என்ன பயிற்சி தேவை?
    8. அந்தப் பயிற்சிகள் நம்மிடம் உள்ளனவா?
    9. அந்த இலக்கை அடைவதற்கான சரியான தருணம் எது?
    10. அந்த இலக்கை அடைவதற்கு நம்முடன் போட்டியிடுபவர்கள் யார்? அவர்கள் திறன்களும் தகுதிகளும் என்ன?

    ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகின்றது.

    ஒரு கலைஞன் சிலைகளை வடிப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றவனாக இருந்தான். அவனுடைய சிற்பக் கலையைக் கண்டு எல்லோரும் வியந்தனர் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு தனவந்தன் தன்னுடைய மாளிகைக்காக அந்தக் கலைஞனிடம் ஒரு சிலையைச் செய்து தரும்படி கேட்டிருந்தான். அதைச் செய்து முடிக்க ஒரு காலக்கட்டமும் நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஆனால் அந்தக் கலைஞன் குறித்த நேரத்தில் சிலையை முடிக்கவில்லை. சற்றே ஏமாற்றமடைந்த அந்த தனவந்தன் சிற்பியை நேரில் சந்தித்துக் காரணம் கேட்கச் சென்றான். அங்கே தன்னுடைய சிற்பக்கூடத்தில் அந்தச் சிற்பி இவருக்காக தயாரிக்கப்பட்டிருந்த சிலையின் பின்புறத்தில் சற்றே உளியால் தட்டிக்கொண்டிருந்தான். அதைக் கண்ட அந்த தனவந்தன் ‘ அய்யா.. நீங்கள் காலம் தவறிவிட்டீர்களே இன்னுமா அந்தச் சிலையில் வேலை செய்து கொண்டிருக்கின்றீர்கள்?” என்று வினவ, அந்தச் சிற்பியோ “இந்தச் சிலையின் பின்புறத்தில் சற்றே மேடாக இருக்கின்றது. அதைச் சரிசெய்து தந்து விடுகின்றேன்.” என்று பதில் சொன்னான்.

    உடனே அந்த தனவந்தன் ” பின்புறத்தில் தானே ? அதை யார் பார்க்கப் போகின்றார்கள்? ” என்று சொல்ல அந்தச் சிற்பியோ சிரித்துக்கொண்டே “நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேனே” என்று பதில் கூறினான். தன் தொழிலில் எத்தனை கவனம் ! எத்தனை நேர்மை !

    ஒரு செயலைச் செய்யும் பொழுது அதில் ஒரு மனிதனின் முழு கவனமும் இருத்தல் அவசியம். அதுவே வெற்றிக்கு அறிகுறி. வெறும் வியாபாரத்திற்காகவும், மற்றவர்களை மகிழ்ச்சியூட்டுவதற்காகவும் செய்யப்படும் செயல்கள் என்றும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் தந்ததில்லை. திறமைகளை மூடிமறைத்து வெறும் பணத்திற்க்காகவும் குறிகிய மனப்பான்மையுடனும் செய்யப்படும் வேலைகள் என்றுமே நிரந்தரமான மகிழ்வையும் அமைதியையும் தந்ததில்லை.

    இதோ இன்னொரு இனிய கதை :

    ஒரு கட்டிட மேஸ்திரி ஒரு முதலாளியிடம் பணி செய்துகொண்டிருந்தார். இவருடைய மேற்பார்வையில் எழுந்த கட்டிடங்கள் புகழப்பட்டு நல்ல விலைக்குப் போய்க்கொண்டிருந்தன. பல ஆண்டுகள் நேர்மையான தொழில் செய்தபின் அவர் ஓய்வு பெற விரும்பினார். தன்னுடைய முதலாளியிடம் சென்று “இத்தனை நாள் நேர்மையாக நான் உழைத்துவிட்டேன். அதே மகிழ்வுடன் ஓய்வு பெற்றுக்கொள்ளுகின்றேன்.” என்று சொல்லிவிட, அவருடைய முதலாளி அவனுடைய நேர்மையும் தொழில் திறனையும் பாராட்டி “ஒரே ஒரு வேண்டுகோள். ஓய்வுக்குமுன் நீ கடைசியாக ஒரு நல்ல வீடு கட்டித்தர வேண்டும்” எனக் கேட்க அந்த மேஸ்திரி அதற்க்கு ஒப்புக்கொள்ளுகின்றார். அந்த நேரத்தில் அவர் மனதில் ஒரு விபரீத எண்ணம்.. “இத்தனை நாள் நான் நேர்மையாகச் செய்து என்ன கண்டேன்.. ஆகவே இந்தக் கடைசி முயற்சியில் தரமற்ற பொருள்களை உபயோகித்து கொஞ்சம் பணம் சம்பாதித்துக்கொள்ளலாமே”  என நினைத்து அந்தக் கட்டிடத்தை தரமற்ற ஒரு கட்டிடமாகக் காட்டுகின்றார். அது முடிந்ததும் அந்தக் கட்டிடத்தின் சாவியைத் தன் முதலாளியிடம் கொடுக்க முதலாளி ” இதுவரை எவ்வளவு நேர்மையாக நீ வேலை பார்த்திருக்கின்றாய். அதற்குப் பரிசாக இந்த வீட்டை உனக்கே அளிக்கின்றேன்.” என்கிறார். அந்த மேஸ்திரிக்கு ஒரே அதிர்ச்சி.!

    சில நேரங்களில் நம்முடைய தவறுகள் நமக்கே பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    முழுமையான முயற்சியில் ஈடுபடுவோமே! இலக்கை அறிந்து, புரிந்து, அதற்கான வளங்களையும் வழிமுறைகளையும் பயிற்சியையும் சேகரித்துக்கொண்டு முயற்சி செய்வோமே!  ஆத்திரக்காரனுக்கு மட்டுமல்ல , அவசரக்காரனுக்கும் கொஞ்சம் புத்திமட்டு என்பதை புரிந்து செயல்படலாமே !

    முழு கவனத்துடனும், நேர்மையுடனும் வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடருவோம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 12

    க. பாலசுப்பிரமணியன்

     

    முயற்சி திருவினையாக்கும்

    ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கேரள மாநிலத்தைச் சார்ந்த ஒரு இளைஞர் சொற்பொழிவு செய்துகொண்டிருந்தார். தன்னுடைய வெற்றிப்படிகளை அடைந்ததற்கான வழிகளையும் முயற்சிகளையும் அங்கு படித்துக்கொண்டிருந்த மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். “நான் சிறுவனாக இருந்த பொழுது ஒரு வறுமையான குடும்பத்தில் பிறந்திருந்தேன். ஒரு வேளை உணவுக்குக்கூட மிகவும் கஷ்டப்பட்டிருக்கின்றேன். மூன்று வேளை  உணவு என்பதோ பகல் கனவாக இருந்தது. ஆனால் இன்று பல கோடிகளை சேர்த்திருக்கும் ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமானவனாக இருக்கின்றேன்.” இவ்வளவு கடினமான குடும்பச் சூழ்நிலைகளிலும் அவர் பல மைல்கள் நடந்து சென்று ஒரு அரசுப் பள்ளியில் தன் தாய்மொழி மூலம் கல்வி பெற்று தொழிற்கல்வி பயின்று மேலும் இந்திய மேலாண்மைக் கழகத்தில் (ஐ. ஐ. எம்) படித்து வளர்ந்ததற்குப் பின்னணி என்ன இருக்கின்றது? .. உழைப்பு!. முயற்சி!!.

    தன்னுடைய சொந்த அறிவையும் திறனையும் நம்பி ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்ட அவர் “இட்லி,தோசை” மாவுகளை இரசாயனக் கலப்பின்றி தயாரிக்கும் ஒரு தொழிலை ஆரம்பித்து உலக அளவில் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டார். அவர் மாணவர்களுக்கு கொடுத்த அறிவுரை என்ன?  “தன்னம்பிக்கையை எப்பொழுதும் கைவிட்டுவிடாதீர்கள்”

    நாம் என்ன தொழில் செய்கின்றோம் என்பதை விட செய்கின்ற தொழிலில் நமது ஈடுபாடு எவ்வளவு உள்ளது. அதில் கவனம் எவ்வளவு உள்ளது. அதில் நாம் உணர்வுப்பூர்வமாக ஈடுபட்டிருக்கின்றோமா? அதில் வளர வேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றதா? அந்தத் தொழிலை நாம் நேர்மையாகச் செய்து கொண்டிருக்கின்றோமா ?- என்ற கேள்விகளுக்கான பதில்கள் நம்மிடம் இருக்க வேண்டும். வாழ்க்கையில் கீழே விழுந்து விழுந்து மேலே எழுந்தவர்கள் எத்தனை பேர் சாதனையாளர்களாக மாறியிருக்கின்றனர்? ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கை சரிதம் எத்தனை வியப்பைத் தரக்கூடியது? தோல்விக்கு மேல் தோல்வியை ஒவ்வொரு படியிலும் சந்தித்தும் அவர் தன்னுடைய நம்பிக்கையை விட்டு விடாமல் வளர்ந்தவர் அல்லவா?

    தோல்வியைக் கண்டு துவளுவதும் வெற்றியைக் கண்டு ஆர்பரிப்பதும் ஒரு முதிர்ச்சி அடைந்த மனிதனுக்கு அறிகுறி அல்ல. இரண்டையும் நடுநிலையுடனும் நிதானத்துடனும் எடுத்துக்கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் பழகிக்கொள்ள வேண்டும். இதுவே உணர்வுசார் புத்திக்கூர்மைக்கு (Emotional Intelligence) அடையாளம். மனித வளத்தின் வளர்ச்சிப்பாதையில் மூன்று விதமான புத்திக்கூர்மைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியின் அவசியத்தின் தேவையை மனநல வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அவை:  அறிவுசார்  புத்திகூர்மை ( Cognitive Intelligence) , உணர்வுசார் புத்திகூர்மை, (Emotional Intelligence) திறன்சார் புத்திகூர்மை (Skill-Quotient). இவற்றில் உணர்வுசார் புத்திகூர்மை மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகின்றது. இதுவே வாழ்க்கையின் வெற்றிக்கு அடிப்படையாகக் கருதப்படுகின்றது. கல்வியின் அடிப்படை நோக்கமும் இதுவே. தன்னுடைய உணர்வுகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாதவர்களும் தன்னுடைய கட்டுப்பாடற்ற உணர்வுகளுக்கு அடிமையாகி விட்டவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகச் சரித்தரமே இல்லை !

    ஒவ்வொரு மனிதனும் தன்னுள் எல்லையற்ற வளங்களைத் தன்னடக்கிக் கொண்டிருக்கின்றான். ஒவ்வொரு மனிதனும் அறிவு மற்றும் திறன் சார்ந்த வளங்களின் ஊற்றுக்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றான். ஆனால் நம்மில் பலரும் தம்முடைய சொந்தத் திறன்களையும் உணர்வுகளையும் மறந்து மற்றவர்களைப் பார்த்தது ஏங்கிக் கொண்டும் அவர்களுடைய வாழ்க்கையை நாம் வாழவேண்டும் என்ற தவறான குறிக்கோளிலும் தவித்துக்கொண்டிருக்கின்றோம். துரதிருஷ்ட வசமாக, நம்முடைய கல்வித்திட்டங்களும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருள்களைப்போல மாணவர்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. பெற்றோர்களும் தங்களுடய குழந்தைகளின் உண்மையான திறன்களையும் கனவுகளையும் ஒதுக்கிவிட்டு அவர்களை தங்களுடைய நிறைவேறாத கனவுகளுக்கு இரையாக்கிக் கொண்டிருக்கின்றனர். இதில் மாற்றம் நிச்சயமாகத் தேவை.

    உள்ளமைந்த திறன். மூளை எதையாவது படைப்பதற்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கின்றது. அதற்கு உரமிட வேண்டும். கற்றலை வெறும் புதையலாக்கி நிலத்திற்கு அடியில் புதைத்து வைக்க முயற்சிக்கக்கூடாது.  அதை எப்படி உபயோகிப்பது என்று சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. ஒரு முறை ஒரு வெளிநாட்டுக்குச் சென்றிருந்த பொழுது அங்கு கரையோரத்தில் உள்ள ஒரு இயற்கைசார் விடுதியில் தங்கியிருந்தேன். மாலையில் அந்தப் பரந்த இடத்தைச் சுற்றி வரும்பொழுது அங்கே இருந்த பலகையில் “விளையாட்டு கிராமம்” (Games Village) என்று எழுதப் பட்டிருந்தது. அதற்கான நுழைவுக்கட்டணம் பத்து டாலராக இருந்தது. கூட இருந்தவர்கள் “உள்ளே சென்று பார்க்கலாமே” என்று விரும்பியபோது “இவ்வளவு பணம் செலவழித்து உள்ளே சொல்லவேண்டுமா” என்ற தயக்கம். ஆனால் மற்றவர்களின் விருப்பத்தை மதித்து உள்ளே சென்ற எனக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

    அங்கே முதல் விளையாட்டாக சுமார் பத்து அடி நீளத்தில் செய்யப்பட்ட ஒரு பல்லாங்குழி மண்ணில் புதைக்கப்பட்டு சோழிகளுடன் விளையாடுவதற்குத் தயாராக இருந்தது. இதென்ன விளையாட்டு?  சிறிய வயதில் நாம் எவ்வளவு விளையாடியிருக்கின்றோம் ? இதைக் காசு கொடுத்துப் பார்க்க வேண்டுமா? என்று நினைத்துக்கொண்டே அடுத்த விளையாட்டிற்குச் சென்ற பொழுது அது “ஆடு புலி ஆட்டம்: !

    இப்படி ஒவ்வொரு விளையாட்டும் சிறிய வயதில் நம்முடைய தமிழ்நாட்டில் நான் மதுரையில் வாழ்ந்தபோது விளையாடிய ஆட்டங்கள் ! மனம் நொந்து போய் “இதற்கா பத்து டாலர் ஒருவர்க்கு கொடுத்தோம்?’ என்று நினைத்து அதை நிர்வகிக்கும் அந்த நாட்டின் நபரிடம் கேட்ட பொழுது , அவர் இதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், இதை கண்காணிப்பவர் வேறு ஒருவர் என்றும் சொல்லி அவரை அழைக்க, அவரோ தமிழ்நாட்டைச் சார்ந்தவர்,. தனது பெயரைத் “தங்கபாண்டி” என்று சொல்லி “நான் தூத்துக்குடியைச் சார்ந்தவன் ” என்றதும் நான் கேட்டேன் ” இது என்னய்யா.. ஏமாற்று வேலைபோல இருக்கிறது.. இதெல்லாம் நாங்கள் சிறு வயதில் விளையாடியது அல்லவா?” என்றதும் அவர் கூறிய பதில் வியப்பாக இருந்தது. “அய்யா, பல நாட்டு மனிதர்கள்  இங்கு வந்து தங்கி பகலும் இரவும் இந்த விளையாட்டுக்களை விளையாடுகின்றார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவையும் தருகின்றது. இதற்காக அவர்கள் நிறையப் பணமும் செலவழிக்கின்றார்கள். நான் என்னுடைய அறிவில் என்ன இருக்கின்றதோ அதை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றேன். இதில் என்ன தவறு?” எனக் கேட்டார். அவர் பதிலுக்குத் தலை வணங்கியது மட்டுமின்றி அவருடைய புத்திக்கூர்மைக்கும் திறனுக்கும் பாராட்டுக்கள் தெரிவித்தேன். அறிவையும் திறனையும் உபயோகித்து மற்றவர்களை ஏமாற்றாமல் நேர்மையான முறையில் எந்தத் தொழில் செய்தால் என்ன? தன்னைத் தானே தோற்கடித்துக்கொண்டு மூலையில் முடங்கி நம்முடைய தோல்விக்கு மற்றவர்களை இரையாக்கிக் கொண்டிருப்பதில் பயன் என்ன ?

    வாழ்ந்து பார்க்கலாமே !

     

    தொடருவோம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே-11

    க. பாலசுப்பிரமணியம்

     

    முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும்

    “முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும்; முயலாமை என்றும் வெல்லாது”- எனது கார் அண்ணா சாலையில் நிறுத்தப்பட்டிருந்தபொழுது சுவற்றில் எழுதப்பட்ட இந்த வாசகத்தைப் படித்தேன். திரும்பத் திரும்பப் படித்தேன். எத்தனை உண்மையான வார்த்தைகள்! முயலும் தன்னுடைய இலக்கை நோக்கிச் செல்லுகின்றது. ஆமையும் தன் இலக்கை நோக்கிச் செல்லுகின்றது. அந்த இலக்கை அடைவதில் அவர்களுக்கிடையே உள்ள வித்தியாசம் – கொஞ்ச நேரமே ! ஒன்றின் வேகத்தில் இன்னொன்றால் செல்ல முடியாது. ஏனெனில் இயற்கையில் அவைகளின் உருவகமும் உடல்  பாங்கும் வேறுபட்டுள்ளன. தங்கள் உடல் பாங்குகளுக்கேற்றவாறும் தங்களுடைய இயற்கை வாழ்விற்கேற்றவாறும் அவைகள் பயணித்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்தக் கருத்து நமக்கும் பொருந்தும். இயற்கையில் நம்முடைய உடல் பாங்குகள், சக்தி நிலைகள், உணர்வு நிலைகள் மற்றும் உடலில் ஏற்படும் சீதோஷ்ண மாற்றங்கள் வேறுபட்டவை. எனவே நாம் ஒருவேரோடு ஒருவர் போட்டி போடுதல் மிக்க தவறான செயல். நாம் நம்முடைய இயற்கைக்குத் தகுந்தவாறு வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.

    ஆனால் வெற்றி பெறுவதற்கு முயலும் முயற்சிக்க வேண்டும், ஆமையும் முயற்சிக்க வேண்டும். அதே போல் நாம் எந்த நிலையில் இருந்தாலும் சரி, வாழ்க்கையில் சாதனைகள் செய்ய, வெற்றிபெற, சிகரங்களைத் தொட முயற்சி செய்தல் மிகவும் அவசியம். அறிவையும், திறமையும் மட்டும் வைத்துக்கொண்டு முயற்சி செய்யாமல் இருந்தால் வெற்றிப் படிகளில் நிற்க முடியாது, சில நேரங்களில் முயற்சியே செய்யாமல் இறைவனின் திருவருளை மட்டும் நம்பி பலர் வாழ்வில் காத்திருக்கின்றனர். இவர்களில் சிலபேருக்கு வேறு சில காரணங்களால் ஓரளவு வெற்றி கிடைக்கின்றது. ஆனால் அனைவருக்கும் வெற்றிக்கு முயற்சிதான் வழி. முயற்சி செய்யும்பொழுது அதற்கான கூலி நிச்சயம் கிடைத்துவிடும் என்று வள்ளுவர் மிக அழகாக உரைக்கின்றார்.

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

    மெய்வருத்தக் கூலி தரும்

    முயற்சி என்பது சரியான திசையில் சரியான அளவில் சரியான நேரத்தில் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது விழலுக்கிறைத்த நீராகிவிடும். முயற்சி வெற்றி பெற ஒரு மனிதனுக்கு என்னென்ன தேவைப்படுகின்றது?

    1. தன்னம்பிக்கை (Self-confidence)
    2. ஆர்வம் ( curiosit)
    3. நோக்கத்தில் தெளிவு ( Clarity of vision)
    4. துணிவு (courage)
    5. செயல் திறன் (Skill)
    6. வளங்கள் (Resources)
    7. உழைப்பு (Hard work)
    8. பொறுமை (Patience)
    9. சவால்களை சந்திக்கும் திறன் ( Ability to face challenges)
    10. கால நிர்வாகத் திறன் (Time Management )

    மேரி கியூரி என்ற போலந்து நாட்டு விஞ்ஞானி வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தவர்.  தன்னுடைய ஆராய்ச்சிக்காக தன்னுடை கையிருப்பிக்களை எல்லாம் இழந்து, ஆறிச்சிக்குத் தேவையான உபகாணங்களைக் கூட வாங்க முடியாமல், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் ஒரு மாட்டுத் தொழுவத்தில் தன் வாழ்க்கையை நடத்தியவர். போட்டி காரணமாக அவருக்குத் தேவையான அறிவியல் மூலதனைகளைக் கூட அவரால் பெற முடியவில்லை. அந்த ஏழ்மையான நிலையிலும் இரவு பகலாக வேலை செய்து ‘ரேடியம்” என்ற பொருளைக் கண்டுபிடித்தார். இவருடைய இந்தக் கண்டுபிடுப்புத்தான் பின்பு  எக்ஸ் -ரே கதிர்வீச்சுக்கள் மூலமாக பல நோய்களை கண்டறிய உதவியாக இருந்தது. இவருடைய கண்டுபிடிப்புக்காக பின்பு இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. உலகிலேயே முதல் முதலாக நோபல் பரிசு பெற்ற பெண்மணி என்பது மட்டுமல்லாமல் இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெண்மணியாக இவர் விளங்கினார்.

    தொடர்ந்து இருந்த சவாலான சூழ்நிலைகளிலும் தன்னுடைய முயற்சியை விட்டுவிடாமல் இயலாமை என்ற சொல்லுக்குத் தலைவணங்காமல் சாதனை படைத்த இந்தப் பெண்மணி என்ன கூறுகின்றார்?

    ” வாழ்க்கையில் எதையும் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது புரிந்துகொள்வதற்கான நேரம், பயப்படுவதற்கானது அல்ல. ”

    “நாமெல்லாம் வாழ்க்கையில் சாதிக்கப் பிறந்திருக்கிறோம் என்ற உணர்வு நம் அனைவருக்கும் இருக்கவேண்டும். இதை நாம் எந்த விதத்திலாவது சாதித்தே ஆகவேண்டும்.”

    சிறிய வயதிலிருந்தே குழந்தைகளுக்கு இந்த ஆக்கப்பூர்வமான உணர்வினை ஊட்டி விட வேண்டும். அவர்களுடைய கனவுகளின் உயரம் சிகரத்தை தொடுவதாக இருக்க வேண்டும். மிகப் பெரிய கனவுகளைக் கண்டு அதற்கான முயற்சிகள் செய்து சிறிதளவு அதில் தோல்வி அடைந்தவர்கள் பலர் உண்டு. அவர்கள் சரித்திரம் படைத்தவர்களாக ஆகின்றார்கள். சிறிய கனவுகளைக் கண்டு அவற்றை உடனேயே அடைந்தவர்கள் கடலில் கரைந்த உப்பாகக் காணாமல் போகின்றார்கள்.

    பெரிய கனவுகளைக் காணலாமே.. அதற்கான தெளிவான நோக்குடனும் உறுதியுடனும் தைரியத்துடனும் முயற்சி செய்து பார்க்கலாமே.

    வாழ்க்கை என்பதே நம் கனவுகளுக்கு ஒரு உருவகம் கொடுப்பதுதானே !

    வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடருவோம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே – 10

    க. பாலசுப்பிரமணியன்

     

    பொறுத்தார் பூமி ஆள்வார்

    “அவசரப் படாதீர்கள். நிதானமாகச் செயல்படுங்கள்” என்று நாம் சொல்லும்பொழுது “ என்ன சொல்கின்றீர்கள் அய்யா. நாமெல்லாம் ஒரு அவசரமான உலகத்தில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடித்தால்  நாம் பின்னுக்குத் தள்ளப்படமாட்டோமா”  என்று பலர் முணுமுணுப்பது காதில் விழுகின்றது. ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். வேகம் வேறு, அவசரம் வேறு. சில நேரங்களில் ஒரு செயலைக்  குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதற்காகவோ அல்லது செயல்படுத்துவதற்காகவோ நாம் வேகமாகச் செயல்பட முனைகின்றோம். ஆனால் வேகமாகச் செயல்படும்பொழுதும் நாம் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். நிதானமில்லாத செயல் தவறுகளுக்கும் குழப்பதிற்கும் வழிவகுக்கும்.

    வேகம், அவசரம், நிதானம் போன்ற அனைத்தையும் கட்டுப்படுத்துவது நமது மனமே. நமது விருப்பு வெறுப்பு மற்றும் தேவைகளுக்குத் தகுந்தவாறு மனம் செயல்பட்டு அதனால் ஏற்படும் உந்துதல்களால் உணர்வுகள் பாதிக்கப்பட்டு நமது மூளைக்கு அனுப்பப்படும் தாக்கங்கள் நம்முடைய செயல்களின் வடிவங்களை நிர்ணயிக்கின்றன. உடல்-மூளை இவற்றின் இணைந்த செயல்களைப் பற்றி செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இதற்கு அழகான விளக்கம் அளிக்கின்றன.

    மனம் போன போக்கில் போகக்கூடாது என்று பல அறிஞர்களும் சமயத் தலைவர்களும் மன இயல் நிபுணர்களும் வலியுறுத்தியிருக்கின்றார்கள். மனத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான செயல். அது நினைத்தவுடன் நடக்கக்கூடிய செயல் அல்ல. சிறிது சிறிதாகப் பழக்கத்தின் மூலமாகத் தான் அதை நாம் செயல்படுத்த முடியும்.

    ஒரு மனிதனுடைய சொர்கத்தையும் நரகத்தையும் நிர்ணயிப்பது அவன் மனமே, என ஆங்கிலத்தின் மிகப்பெரிய கவியாக விளங்கிய மில்டன் தனது காப்பியத்தில் கூறுகின்றார். “நீ உன் மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள் இல்லாவிடில் நீ அதன் கட்டுப்பாட்டில் வாழ நேரிடும்’ என்ற மனித மேம்பாடு மற்றும் வள இயலில் மேதையாக விளங்கும் நெப்போலியன் ஹில் என்பவர் கூறுகின்றார்.

    வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களில் பலர் வாழ்க்கையில் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடித்தவர்கள். உலகின் மிகப்பெரிய அறிவியல் மேதையாகவும் கண்டுபிடிப்பாளராகவும் விளங்கிய ஐசக் நியூட்டன் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. -“ஒரு நாள் அவர் தன்னுடைய கண்டுபிடிப்புக்களின் குறிப்புக்களைத் தன்னுடைய மேசையின் மீது வைத்துவிட்டு சற்று வெளியே சென்றிருந்தார் . அங்கே வெளிச்சத்திற்காக ஒரு மெழுகுவர்த்தி வைக்கப்பட்டு அது ஒளிர்விட்டுக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அவர் செல்லமாக வளர்த்த அவருடைய பூனை மேசையின் மீது தாவிட அதிர்வில் மெழுகுவர்த்தி கீழே விழுந்திட அந்தக் குறிப்புக்கள் தீக்கிரையாகின. திரும்பி வந்த நியூட்டன் தன்னுடைய இவ்வளவு கடினமான உழைப்பின் குறிப்புக்கள் தீக்கிரையானதைக் கண்டும் சிறிதும் அதிர்ச்சி அடையாமலும் தன் உணர்வுகளை வெளிப்படுத்தாமலும் அந்தப் பூனையை அன்புடன் தடவிக் கொடுத்தார். இது அவர் தன் உணர்வுகள் மீதும் மனதின் மீதும் கொண்டுள்ள கட்டுப்பாட்டை தெளிவாக விளக்குகின்றது.

    நம்முடைய மனத்தைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொண்டால் நாம் செய்யும் வேலைகளில் நிதானத்தையும் பொறுமையையும் முன்வைத்து அந்தச் செயலை விவேகத்துடனும் அழகாகவும் சரியான முறையிலும் செய்யமுடியும்.

    பொறுமையும் நிதானமும் ஒரு மனிதனின் தயக்கத்திற்கு அறிகுறி அல்ல. பொறுமையும் நிதானமும் ஒரு மனிதனின் அறியாமைக்கோ அல்லது இயலாமைக்கோ அறிகுறி அல்ல. பொறுமையும் நிதானமும் ஒரு மனிதனின் கவனக்குறைவின் அறிகுறி அல்ல.

    பல நேரங்களில் பொறுமையும் நிதானமும் தெளிவான சிந்தனைக்கும் சரியான முடிவுகள் எடுப்பதற்கும் வழித்துணையாக அமைகின்றது. அவசர புத்தியும் நிதானமின்மையும் கொண்டவர்கள் பல நேரங்களில் தவறுகள் செய்வது மட்டுமின்றி நேரத்தையும் , வளங்களையும், ஆதாரங்களையும் தொலைத்து நிற்கின்றனர்.

    “இமயத்தின் முனிவர்கள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தில் நான் படித்த கதை நினைவுக்கு வருகின்றது. ஒரு அனுபவமும் முதிர்ச்சியும் வாய்ந்த முனிவருக்கு சில சீடர்கள் இருக்கின்றார்கள். இதில் ஒரு சீடனுக்குத் தன்னுடைய குருவின் மீது கோபமும் ஆத்திரமும் வருகின்றது. அவர் தமக்குத் தெரிந்த வித்தைகளையும் திறன்கள் அனைத்தையும் நமக்கு ஏன் உடனே கற்றுத் தரமாட்டேன் என்கிறார் என்ற கோபம். விரக்தி அடைந்த அந்தச் சீடன் இவரை விட்டு நீங்கி இன்னொரு குருவைத் தேடிச் செல்ல விழைகின்றான். இவனுடைய குருவும் சிரித்துக்கொண்டே அவனுக்கு ஆசி வழங்கி வழியனுப்புகின்றார்.

    சுமார் இருபது ஆண்டுகள் கழித்து அந்தச் சீடன் பல திறன்களைக் கற்றுக்கொண்டு இந்த குருவிடம் வந்து தன் திறன்களை வெளிக்காட்ட நினைத்து மிக கர்வத்துடன் வருகின்றான். அவனை வரவேற்ற குருவிடம் தன பெருமைகளை எடுத்துச் சொல்ல அவர் ” நீ அறிந்த திறன்களில் மிகவும் சிறப்பானதான ஒன்றைச் சொல்” எனக் கேட்கின்றார். அவனும் பெருமையுடன் ” குருவே, நான் என் வாயைத் திறந்தவுடன் என்னுடைய நாக்கிலிருந்து நெருப்பை வரவழைக்க முடியும்” என்று சொல்கின்றான்.

    உடனே அந்த குருவும்  ” அற்புதம்! பாராட்டுக்கள் ! பெருமைப்படுகின்றேன்.  ஆனால் இந்தத் திறனைப் பெற உனக்கு எத்தனை காலம் ஆனது? ” என்று கேட்கின்றார். அதற்கு  அவனும்  ” இதைக் கற்றுக்கொள்ள எனக்கு இருபது ஆண்டுகள் ஆனது. மிகவும் கடினமானப் பயிற்சி” என்றான்

    குரு  சிரித்துக்கொண்டே சொன்னார்  “அட முட்டாளே, ஒரு சிறிய தீக்குச்சியால் உரசினால் சில வினாடிகளில் கிடைத்துவிடும் நெருப்புக்கு உன்னுடைய வாழ்க்கையின் இருப்பது ஆண்டுகளை வீணடித்துவிட்டாயே ”

    ஒரு செயலில் நாம் ஈடுபடுவதற்கு முன்னால் நன்கு யோசிக்க வேண்டும். பொறுமையுடனும்  நிதானத்துடனும் தெளிவுடனும் அலசி ஆராய்ந்து அதில் ஈடுபடவேண்டும்.

    வாழ்க்கையில் சற்று பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடித்துப் பார்க்கலாமே !

     

    (தொடரும்)

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் -50

    க. பாலசுப்பிரமணியன்

     

    இறைவனின் திருவருளைப் பெற வழிதான் என்ன?

    “அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை” என்பது வள்ளுவம். வாழ்க்கையில் பல இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்து பொருள் சேர்த்து உயரிய நிலையை அடைந்ததாக நமக்கு நாமே அறிவித்துக் கொண்ட பின்னும் மனம் ஒரு நிலையில் இருப்பதில்லை. இவையெல்லாம் இறைவன் திருவருளை நமக்குத் பெற்றுத்தறுமா என்றால் “நிச்சயமாக இல்லை’ என்ற பதிலே கிடைக்கின்றது. அப்படியென்றால் அவனிடமே சென்று முறையிட்டாலென்ன? அவனை எங்கே காண முடியும்? இந்தக் கேள்விகளெல்லாம் நம் மனதில் எழுகின்றது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார்; “நினைப்பவர் மனத்துள்ளான்” என்று.

    பூசலாரின் மனக்கோயிலிலே அவன் வாசம் செய்யவில்லையா?

    திருமூலர் தன்னுடைய அனுபவ அறிவின் மூலம் நமக்கு விளக்குகின்றார் :

    விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்

    கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்

    பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்

    எண்ணிலா னந்தமும் எங்கள் பிரானே

    எங்கும் நிறைந்து எல்லா விதமான ஆனந்தத்திருக்கும் காரணமாக இருப்பவனன்றோ அவன்?

    “என் மனத்துள் உள்ளே வரும் பெருமான்” என்று கூறி மாணிக்கவாசகரோ தன் மனக்கதவுகளை எப்பொழுதும் இறைவனுக்காகத் திறந்து வைத்திருந்தார்.

    நாம் இறைவனை நினைத்து வாழ்ந்தாலும், நினைக்கவிட்டாலும் அவன் நிச்சயமாக நம்மை ஏற்று அருள்புரிபவனே என்ற அசையாத நம்பிக்கை திருநாவுக்கரசருக்கு இருந்தது. அந்த நம்பிக்கையை இந்தப் பாடல் மூலமாக நமக்கு வெளிப்படுத்த்துகின்றார்

    தொழுது தூமலர் தூவி துதித்து நின்று

    அழுது காமுற்று அரற்று கின்றாரையும்

    பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்

    எழுத்தும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே

    இறைவனுடைய இந்த அளவில்லாக் கருணை நம்மை காத்துக்க்கொண்டிருக்கும் பொழுது நாம் நல்ல நினைவுகளோடும் அறம் போற்றும் மனத்தோடும் வாழவேண்டாமா? அவன் அளவில்லாக் கருணையை நமக்கு விளக்கும் திருமூலர் கூறுகின்றார் :

    இங்குநின் றானங்கு  நின்றனன் எங்குளன்

    பொங்கிநின் றான்புவ  னாபதி புண்ணியன்

    கங்குல்நின் றான்கதிர்  மாமதி ஞாயிறு

    எங்குநின்  றான்மழை போலிறை  தானே .

    திருமூலர், மாணிக்க வாசகர், திருஞான சம்பந்தர், காரைக்கால் அம்மையார், பட்டினத்தார், பத்திரகிரியார் போன்ற பல அடியார்களின் பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும் அவர்களின் இறை சிந்தனையின் அடிப்படை இறைவனை நம்முடைய இதயத்தின் உள்ளேயே அறிந்து, அவனை அங்கேயே நிறுத்தி, போற்றி, அவன் சிந்தனையிலேயே இடைவிடாத நிலையான இன்பத்தையும் ஆனந்தத்தையும் காண்பதாகும். இதனால்தான் காரைக்கால் அம்மையார் சொல்கின்றார் “என்போல்வார் சிந்தையிலும் இங்குற்றான்; காண்பார்க்கு எளிது.”

    ஆகவே  இந்த அடியார்களின் கருத்தை நாமும் மனதில் கொண்டு அகத்திலும் புறத்திலும் எங்கும் நிறைந்தவனாக இருக்கும் இறைவனை உணர்ந்து போற்றி பயன்பெறுவோம்.

    ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர்

    குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி “

    (நிறைவு)

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே -9

    க. பாலசுப்பிரமணியன்

    முயற்சி வேண்டும்… அவசரம் அல்ல !

    வாழ்ந்து-பார்க்கலாமே-1

    “முயற்சி திருவினையாக்கும்” என்றும் “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்றும் நம் தமிழ் நூல்கள் முயற்சியின் அவசியத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் எங்கே தன்னம்பிக்கையிருக்கிறதோ அங்கேதான் முயற்சியின் சுவடுகளை நாம் காண முடியும். இளம் வயதிலிருந்தே இந்தத் தன்னம்பிக்கைக்கான வித்துக்களை விதைப்பதிலும் முயற்சிக்கான ஆர்வத்தை வளர்ப்பதிலும் பள்ளிகளும் பெற்றோர்களும் இணைந்து செயல்படுதல் அவசியம். இந்த இரண்டும் இல்லாத ஒரு மனிதன் எந்த உயர்வான கல்வி கற்றிருந்தாலும் தோல்வியைத் தழுவுவதில் முதன்மையாக இருப்பான். இல்லாவிடில், தோல்வியைக் கண்டு துவண்டு   தன்னுடைய வளர்ச்சிப்பாதையை மறந்து “கிடைத்தது போதும் ” என்ற மனக்குறையோடோ அல்லது “இதுதான் என் விதி” என்று அங்கலாய்த்துக்கொண்டோ வாழ்க்கையை வீணடித்து விடுவான். இதனால்தான் தலைசிறந்த ஆங்கில எழுத்தாளர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் (Oliver Goldsmith) என்பவர் கூறினார் “ஒவ்வொரு முறை நாம் வீழும் போதும் எழுந்து மீண்டும் நமது பாதையைத் தொடர்வதுதான் உண்மையான மேன்மையின் அறிகுறி.”

    தன்னுடைய முயற்சிகளில் பலநூறு முறைகள் தோல்வி அடைந்த சர் ஐசக் நியூட்டன்   (Sir Issac Newton)  மின்விளக்கினைக் கண்டுபிடித்தவுடன் கூறினார்     “நான் இதை எவ்வாறு 999 வகைகளில் செய்யக்கூடாது என்பதைக் கற்றுக்கொண்டேன்.” முதல் முயற்சியிலேயே ஒருவருக்கு வெற்றி கிடைத்துவிட்டால் அவர் பாராட்டுக்குரியவராக இருக்கலாம் ஆனால் அந்த வெற்றியின் மகத்துவத்தை அவரால் சரியாக உணர முடியாது. தமிழ்நாட்டிலே இதுபோல் தன்னம்பிக்கையும் துணிவும் முயற்சியும் கொண்டு முன்னேறியவர்கள் வரிசையிலே நமது முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், வீ ஜீ பீ சகோதர்கள் போன்று பல துறைகளில் சாதனை படைத்தவர்கள் உண்டு.

    அமெரிக்காவிலே பிராங்க் வூல்ஒர்த் (Frank Woolworth) என்பவர் இளம் வயதிலே மிகவும் துன்ப நிலையில் இருந்து சிறிது சிறிதாக முன்னேறி “ஐந்து சென்ட் விற்பனை நிலையம்” என்ற பெயரில் எல்லாப் பொருள்களையும் ஐந்து சென்டிற்கு விற்க ஆரம்பித்து தன்னுடைய விடா முயற்சியினால் அமெரிக்காவிலேயே பெரிய வியாபாரக் கட்டிடத்தை கட்டியதுமட்டுமின்றி தன்னுடைய கடைகளை  563 இடங்களில் திறந்து மிகப்பெரிய பெயர் பெற்றார்.

    எத்தனையோ பல எழுத்தாளர்கள் தாங்கள் எழுதியவைகளை பிரசுரத்திற்கு அனுப்பி பல முறை திரும்பப் பெற்று தன்னுடைய இந்தத் திறனை முழுவதுமாக இழந்து நிற்கின்றனர். எத்தனையோ பல இசை வல்லுநர்கள் தங்களுக்குப் போதிய வரவேற்பு இல்லாதததால் மனம் நொந்து ஒதுங்கி நிற்கின்றனர். எத்தனையோப் பல தொழில் வல்லுநர்கள் தங்களுடைய தாழ்வு மனப்பான்மையினால் தங்கள் வியாபாரத்தைப் பெருக்காமல் அடங்கி வாழ்கின்றனர்.

    இவர்களுக்குத் திறன் இல்லையா என்ன?  தன்னுடைய “திறன் மட்டும் போதாது” (Talent is Never Enough) என்ற தலைப்புடைய புத்தகத்தில் மால்கம் கிளாட்வெல் (Malcolm Gladwell) என்ற மேதை கூறுகின்றார் “எப்பொழுது திறன் கடினமாக உழைக்கவில்லையோ அப்பொழுது கடின உழைப்பு, திறனை வென்றுவிடுகின்றது”

    “தன்னைப் பற்றிய அறிவு, (Self-knowledge) திறன்,(Talent) உழைப்பு, (Hard work) தெளிவு (Clarity of vision) மற்றும் சரியானப் பாதை'(right direction)  ஆகியவை வெற்றியின் பல்முனை அங்கங்கள் என்று கணிக்கப்பட்டுள்ளன.

    இன்று பல பேர்களுக்கு நல்ல அறிவும் திறனும் இருந்தாலும், முயற்சி செய்யக்கூடிய ஆர்வம் இருந்தாலும் வாழ்க்கையில் பொறுமையும் நிதானமும் இருப்பதில்லை. விதையிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கும் ‘அவசர’ வாழ்க்கைக்கு அடிமையாகி நிற்கின்றனர். இந்த அவசரம் அவர்களுக்குப் பொறுமையின்மை, வேகம், போட்டி போன்ற பல தேவையற்ற உணர்வுகளை ஏற்படுத்தித் துயரத்தில் ஆழ்த்துகின்றது. மரம் வைத்தவுடன் பழம் கிடைப்பதில்லை! காலமே கேள்வி… காலமே பதில்.. என்ற கூற்றிற்கேற்ப வாழ்க்கையில் பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடித்தல் அவசியம். “அவசரம்” பல தவறுகளுக்கு முன்னோடியாக இருப்பது மட்டுமின்றி  பல மனம் மற்றும் உடல் சார்ந்த நோய்களுக்கு வித்தாக அமைகின்றது. “அவசரம்” நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான உறுதி அல்ல .. வழியும் அல்ல. விழிப்புணர்வும் தெளிவும் விடாமுயற்சியும் இருக்கவேண்டுமே தவிர அவசரம் தேவையில்லை.   இந்த “அவசரம்” வாழ்க்கையில் நமக்கு ஒரு போலியான ‘நிறைவு’ மனப்பான்மைக்கு (Gratification urge) அழைத்துச் சென்று ஏமாற்றுகின்றது. மனநல மருத்துவர்கள் “அவசரம்”  எவ்வாறு பழக்கமாகி மன உளைச்சல்களுக்கும், (Stress)  நிதானமின்மைக்கும், (Restlessness) உறவுகளின் வீழ்ச்சிக்கும் (Failure of Relationships) வழி வகுக்கின்றது என்பதைத் தெளிவு படுத்துகின்றனர்.

    ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் (Stanford University) பல ஆண்டுகளுக்கு முன்பு மன இயல் பிரிவில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனை. அதற்கு “மார்ஷ்மல்லோ பரிசோதனை” (Marshmallow experiment) என்ற பெயர். மார்ஷ்மல்லோ என்பது நமது ஊரில் உள்ள பஞ்சு மிட்டாய் போன்ற ஒரு இனிப்புப் பண்டம்.  ஒரு அறையில் இந்த இனிப்பை மேசையில் நிரப்பி வைத்து அங்கிருந்த சுமார் நாற்பது மாணவர்களிடம் “உங்களில் யாருக்கு இதை உடனே உண்ண வேண்டும் என்ற ஆசையுள்ளதோ அவர்கள் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்குப் பின் யாருக்கு இதை உண்ண வேண்டுமோ அவர்கள் இதில் இரண்டை எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டது. பின் இதில் எத்தனை பேர் உடனே எடுத்துக்கொண்டார்கள் என்றும், எத்தனை பேர் கால அவகாசத்திற்குப் பின் எடுத்துக்கொண்டார்கள் என்றும் கண்டறியப்பட்டு சுமார் இருபது ஆண்டுகளுக்கு அவர்கள் வாழ்க்கை போக்கு மற்றும் சாதனைகள் கண்டறியப்பட்டன.

    இதில் எவரெல்லாம் உடனே எடுத்துக்கொண்டார்களோ அவர்களை விட பொறுமையாக இருந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எடுத்துக்கொண்டவர்கள் தேர்வுகளில் அதிக விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றவர்களாகவும், வாழ்க்கையின் சவால்களைப் பொறுமையுடன் எதிர்கொண்டவர்களாகவும், அதிக அளவில் சாதனை படைப்பவர்களாகவும் கண்டறியப்பட்டனர். இதிலிருந்து அறியப்பட்ட உண்மை என்னவெனில் ‘பொறுத்தார் பூமி ஆள்வார்” என்பதில் உண்மை பொதிந்து கிடக்கின்றது என்பதே.

    வாழ்க்கை மிகவும் அழகானது… பொறுமையாக வாழ்ந்து பார்க்கலாமே !

    (தொடர்வோம்)

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 49

    க. பாலசுப்பிரமணியன்

    அறவழி நில்லாத வாழ்க்கையின் பயனென்ன ?

    திருமூலர்-1-1-2

    அறம் சார்ந்த வாழ்க்கையை எப்பொழுது தொடங்கவேண்டும்?  உணர்ச்சிகளால் உந்தப்பட்டு உலக மாயைகளில் உழன்று குடும்ப வாழ்க்கையில் முழுதான கவனம் செலுத்தி, வருங்காலத்திற்காக சொத்து சேமித்து வைக்கும் நேரத்திலா? அல்லது வாழ்ந்து முடித்துவிட்டோம் என்று எண்ணி எல்லாம் துறந்த நிலையிலே மனம் இருக்கும் நேரத்திலா? இந்தக் கேள்விக்கு எங்கே சரியான பதில் கிடைக்கும்?

    வாழ்ந்து அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையில் நாம் உலக மாயையில் இங்கும் அங்குமாகப் பறந்து கொண்டிருக்கின்றோம். தேவையுள்ள பொருள்களை மட்டுமின்றி தேவையற்ற பொருள்களையும் சேர்த்து பொருட்சுமை மட்டுமின்றி மனச்சுமையிலும் மூழ்கிக்கொண்டிருக்கின்றோம். அறத்தை மறந்து வாழ்கின்ற வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்களின் குணாதியங்களை எப்படி வர்ணிக்கலாம் ? பட்டினத்தாரின் இந்தப் பாடல் அதற்கு ஒரு உதாரணமாக விளங்குகின்றது.

    ஓயாமற்  பொய்ச்சொல்வர் நல்லோரை நிந்திப்ப ருற்றுப்பெற்ற

    தாயாரை வைவர் சதியா யிரஞ்செய்வர் சாத்திரங்கள்

    ஆயார் பிறற்குப காரஞ்செய் யார்தமை யண்டினர்க்கொன்

    றீயா ரிருந்தென்ன போயென்ன காண்கச்சி யேகம்பனே

    இந்த குணாதிசயங்களுடன் அறத்தைப் பற்றி சற்றும் நினையாதவர்கள் வாஸ்க்கை எப்படிப்பட்டது? “இன்றிருப்பார் நாளையில்லை என்னும் பெருமை படைத்த இவ்வுலகில்” கிடைத்த சிறிய வாழ்வில் நல்ல பல செயல்களை செய்யாமல் அதைத் தள்ளிப் போட்டு வாழ்க்கை வீணடிப்பவர்களுக்கு என்ன புத்திமதி கூற முடியும்? திருமூலரின் இந்தப் பாடல் அதற்கு பதில் அழிப்பது போல் அமைந்துள்ளது.

    கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே

    விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்

    குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்

    விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே

    எல்லாப் பொருள்களும் தோன்றி மறைகின்ற நிலையில் இருக்கும் நிலையை அறியாத மனம் எல்லாம் தனதே என்ற கருத்தை வைத்துக்கொண்டு அறத்தை செய்யாமல் வீணாக வீழ்கின்றதே என்ற திருமூலரின் கருத்து எவ்வளவு உண்மையானது. !

    அறத்தைச் சாராத வாழ்க்கையை வாழ்ந்து தேவையற்ற பொருள்களை மிகுதியாகச் சேர்த்து வைத்து பிற்காலத்தில் “இந்தப் பொருளை எங்கு விட்டுச் செல்வேன்? இதை யார் பாதுகாப்பார்கள்?” என்ற கவலையை மனதில் கொண்டு கூற்றுவனின் அழைப்பினை ஒதுக்கமுடியாமல் அவதிப்படுகின்ற உள்ளங்கள் தான் எத்தனை! உடலை விட்டு நீங்கும் நேரத்தில் இந்த அறிவு கிடைத்து என்ன பிரயோசனம்? இந்த மாயையில் அகப்பட்டு அவதிப்படும் நெஞ்சங்களை நோக்கிப் பட்டினத்தார் பாடுகின்றார்:

    வீடிருக்கத் தாயிருக்க வேண்டுமனை யாளிருக்கப்

    பீடிருக்க வூணிருக்கப்  பிள்ளைகளுந் தாமிருக்க

    மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்

    கூடிருக்க நீபோன  கோலமென்ன கோலமே.

    எவ்வளவு ஆழமாக உண்மைகளை நம் முன்னே எடுத்து நிறுத்துகின்றார் பட்டினத்தார்!

    இந்தக்  கருத்தை வலுப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் இந்த வரிகள்

    குடமுடைந்தால் அவை ஓடு என்று வைப்பர்

    உடல் உடைந்தால் இறைப்பொதும் வையாரே !

    பட்டினத்தாரைத் தொடர்ந்து இந்தப் புலம்பலை நாம் பத்திரகிரியாரிடமும் பார்க்கின்றோம்.

    வேடிக்கை யுஞ்சொகுசு மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்

    வாடிக்கை யெல்லா மறந்திருப்ப தெக்காலம் ?

    பட்டுடை பொற்பணியும் பாவனையுந் தீவினையும்

    விட்டுவிட் டுன்பாதம் விரும்புவதெக்காலம் ?

    இவ்வாறு உலக மாயையில் விழுந்து எல்லாம் எனக்கே என்ற எண்ணம் கொண்டு தன் உண்மை நிலையை அறியாது ஆசைப்படும் நெஞ்சங்களுக்கு தாயுமானவரின் இந்த வரிகள் உண்மை நிலையை விளக்கும்

    ஆசையும் பெருங்காற்றூடு இலவம்பஞ்சு

    எனவும் மனது அலையும் காலம்

    மோசம் வரும்;  இதனாலே கற்றதும்கேட்

    டதும்தூர்ந்து, முக்திக்கு ஆன

    நேசமும்நல் வாசமும் போய்ப் புலனாய் இல்

    கொடுமை பற்றி நிற்பர்: அந்தோ

    தேகபழுத்து அருள்பழுத்த பராபரமே !

    நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ?

    (தொடரும்)

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே -8

    க. பாலசுப்பிரமணியன்

    வாழ்க்கைப் பயணமும் சவால்களும்

    வாழ்ந்து-பார்க்கலாமே

    ஒரு முறை ஒரு இளைஞன் தன்னுடைய வாழக்கையில் ஏற்பட்ட பல சோதனைகளைக் கண்டு துயருற்று இறைவனிடம் சென்று முறையிடுகின்றான். “இறைவா.. ஏன் இந்த ஒர வஞ்சனை? எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துயர் கொடுக்கின்றாய்? ஒரு நாள் கூட நான் மகிழ்ச்சியை அறிந்ததில்லையே? என்னுடை உறவினரைப் பார். அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றனர். என்னுடைய நண்பன் கூட எப்பொழுதும் சிரித்துக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்கின்றான். அவன் முகத்தில் துயரத்தின் நிழல் கூடத் தெரியவில்லையே . துயரத்தை மட்டும் சுமப்பதற்கு  என்னைப் படைத்தாயா? இது நியாயமா? உனக்கு இது தகுமா? இது தான் உன்னுடைய நடுநிலைப்பாடா?”

    இளைஞனின் துயரக்குரல் இறைவனையே சற்று அசைத்து விடுகின்றது. இறைவனும் இளைஞன் முன் தோன்றி :”மகனே. ஒரு வேலை செய். இன்று மாலை நான் இந்த ஊரில் இருக்கிற எல்லா இளைஞர்களையும் அவர்களுடைய துயரத்தை ஒரு மூட்டையில் கட்டி இந்தக் கோவில் மண்டபத்தில் வந்து வைத்துவிடச் சொல்கின்றேன். அதற்குப்பின் நீ வந்து உனக்கு எந்த மூட்டை வேண்டுமோ எதில் சுமை குறைவாக இருக்கின்றதோ அதை எடுத்துக்கொள்ளலாம்” எனக் கூறி மறைகின்றார்.

    அந்த இளைஞனும் அன்று மாலை சொன்ன நேரத்தில் தன்னுடைய துயரச் சுமைமூட்டையைத் தூக்கிச் சென்று அந்தக் கோவில் வளாகத்தில் வைத்துவிடுகின்றான். அவனைப் போலவே மற்றவரும் அங்கே வந்து தங்கள் சுமைகளை இறக்கி வைக்கின்றனர். சிறிது நேரம் கழித்து, இறைவன் கூறிய நேரத்தில் அவன் அங்கே சென்று தனக்கு வேண்டிய மூட்டையைத் தேடுகின்றான். அவனுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கின்றது. எல்லா மூட்டைகளையும் விட அவனது மூட்டைதான் மிகவும் சிறிதாகவும் எளிதில் தூக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.

    வாழ்க்கையின் உண்மையே இதுதான். பல நேரங்களில் நாம் வாழ்க்கையில் நமக்குத்தான் அதிகப் பிரச்சனைகளும் அதிகத் துயரங்களும் வந்து சேருகின்றது என்று நினைக்கின்றோம். உண்மையில் அது நம் மனதிற்கு நாம் கொடுக்கும் ஒரு எண்ணமே. ஒரு உருவகமே. இந்த மாதிரியான நினைப்புக்கள், கருத்துக்கள் பல நேரங்களில் நம்மை வெற்றிப்பாதையிலிருந்து கீழே விழுவதற்கும் தன்னம்பிக்கையை இழந்துவிடுவதற்கும் துணை போகின்றன. வாழ்க்கையில் சவால்களைச் சந்திக்கும் பொழுதுதான் முன்னேற்றப்பாதையில் செல்ல தைரியமும் துணிச்சலும் கிடைக்கின்றது.

    பல நாட்களுக்கு முன்னே படித்த ஒரு கதை நினைவுக்கு வருகின்றது. ஒரு தோட்டக்காரன் தன்னுடைய நிலத்திலே சில விதைகளைத் தூவிச்  செல்லுகின்றான். இரண்டு விதைகள் அருகில் விழுகின்றன. இவற்றில் ஒன்று தன்னுடைய மேலுறையைக் கிழித்துக்கொண்டு எட்டிப் பார்க்கிறது.

    உடனே பக்கத்திலிருந்த விதையோ  “ஏய், என்ன முட்டாள்தனம் செய்கின்றாய். உள்ளேயே அடங்கிக் கிட. நீ வெளியே வந்தால் இந்த மண்ணோடு உறவாட வேண்டியிருக்கும். மேலும் வெய்யில், மழை காற்று போன்ற பல இடர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அமைதியாக இருக்கும் இடத்திலேயே இரு. சுகமாக இருக்கலாம்.”

    ஆனால் இந்த விதையோ  அதைக் காதில் வாங்கி கொள்ளாமல் இன்னும் கொஞ்சம் மேலே நோக்கியது. “அடேடே ! இதுதான் வெளிச்சமா?” விதைக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் தலையை வெளியே நீட்டியது.

    “ஐயோ! உந்தன் முடிவை நீயே தேடிக்கொள்கின்றாய் நீ மேலே சென்றால் காற்றும் மழையும் உன்னைத் தாக்கும்”இந்த விதையோ கேட்கவில்லை. இன்னும் கொஞ்சம் மேலே — காற்று, மழை, வெய்யில் போன்ற பல இடர்களைத் தொடர்ந்து எதிர்கொண்டது. ஒரு நாள் அது ஒரு பெரிய மரமாகிக்  காய்கனிகளுடன் நின்றது.

    “நான் அப்பொழுதே சொன்னேன் கேட்டாயா? எத்தனை பாரத்தைச் சுமந்து கொண்டு நிற்கின்றாய்.” என்று அந்த விதை இதை ஏளனம் செய்தது.

    அந்த நேரத்தில் பக்கத்தில் சென்ற பறவை ஒன்று கீழே இறங்கி உணவைத் தேடும் பொழுது இந்த விதையைப் பார்த்து ஒரே கணத்தில் அதை உண்டு ஜீரணித்தது.

    வாழ்க்கையும் அது போலத்தான். உழைத்து ஓடாவதா அல்லது துருப்பிடித்துத் தேய்வதா?  முடிவு நம் கைகளின் தான். போராட்டங்களுக்கும், சவால்களுக்கும் பயந்து நின்றால் வாழ்க்கையில் நம்மால் முன்னேற முடியாது. வெய்யிலில் காய்வதும், மழையில் நனைவதும், புயல் காற்றை எதிர்கொள்வதும் இயற்கை  நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம். துணிவே துணை என்று முதல் படியில் இருப்பவர்களுக்கு மீதிப்படிகள் இசைந்து விடும்.

    ஒரு தத்துவ மேதை கூறுகின்றார் “உன்னுள் இருக்கும் சக்தி உன்னைத் தாக்கும் சக்திகளை விட மிக வலிமையானது என்ற நம்பிக்கை உனக்கு இருக்க வேண்டும்.” ஒரு கப்பல் கடலில் செல்லும் பொழுது அடிக்கடி உயர்ந்து எழும் அலைகளையும் அசாதாரணமான  வானிலையையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் நங்கூரம் போடப்பட்ட கப்பலுக்கோ கவலை இல்லை.

    “துறைமுகத்தில் கப்பல்கள் பாதுக்காப்பாக இருக்கும். ஆனால் அவைகள் அதற்காகக் கட்டப்படுவதில்லை ” என்பது உண்மையான கருத்து. வாழ்க்கைக் கடலில்  நமது வாழ்வு என்ற கப்பல் செல்லும் பொழுது எதிர்பாராத சவால்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் பயணத்தைக் தொடங்கிவிட்டால் அது ஒரு இனிய பயணமாகத்தான் இருக்கும். ஒரு வினோதமான பயணமாகத்தான் இருக்கும். துணிந்து செல்பவனுக்கு வெற்றி முன்னாலேயே நிச்சயிக்கப்படுகின்றது. முயற்சி செய்யலாமே!

    வாழ்ந்து பார்க்கலாமே !

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 48

    க.பாலசுப்பிரமணியன்

    அறம் சார்ந்த வாழ்க்கை

    திருமூலர்-1-1-2

    மனத்துணையாகவும் வழித்துணையாகவும் இறைவனை ஏற்றுக்கொண்டு வாழ்க்கைப் பயணத்தை தொடரும்போது வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் நிச்சயமாகக் கிடைக்கின்றது. ஆனால் புற உலகின் சூழ்நிலைகள், தாக்கங்கள் நம்முடைய ஆசாபாசங்களைத் தூண்டிவிடும் பொழுது மனம் சஞ்சலப் படுகின்றது. மேலும் இக வாழ்விற்கு செல்வத்தைத் தேடி அலைபாய்கின்றது. இதைத் தவிர்ப்பதும் வாழ்வில் முடியாததாக அமைந்துள்ளது. ஆனால் செல்வத்தை மட்டும் சேகரிக்க வெறித்தனமாக மனம் அலையும் பொழுது அது துயரக்கடலில் வீழ்கின்றது. “இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்” என்ற மாயையில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் இழந்து தவிக்கின்றது. இதிலிருந்து மீள்வது எப்படி?

    பட்டினத்தார் மிக அழகாக பதில் அளிக்கின்றார்

    பிறக்கும் பொழுது கொடுவந்த தில்லை பிறந்துமண்மேல்

    இறக்கும் பொழுது கொடுபோவ தில்லை யிடைநடுவிற்

    குறிக்குமிச் செல்வஞ் சிவன்தந்த தென்று கொடுக்கறியா

    திறக்குங் குலாமருக் கென்சொல்லு வென்கச்சி யேகம்பனே

    அதிக அளவில் செல்வத்தைச் சேர்த்து உள்ளே பூட்டி வைத்தால் அதனால் யாருக்கு என்ன பயன்? நலிந்தோருக்கும் வாழ்க்கையில் துயருற்றோக்கும் அது பயனளிக்காத போது அது வீணாகின்றது. இதனால்தான் வள்ளுவப் பெருந்தகை கூறினார்

    ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

    பேரறி வாளன் திரு.

    இந்தக் கருத்தை எளிதாக விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் இந்தப் பாடல்

    யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை

    யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை

    யாவர்க்கு மாம்உண்ணும் போதோரு கைப்பிடி

    யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.

    மனிதனைப் போல் எத்துணை உயிரினங்கள் தமக்குள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து உண்ணுகின்றன. உதாரணத்திற்கு காக்கை ஒன்று போதாதோ? எப்பொழுதும் உணவை தம் இனத்தோடு பகிர்ந்து உண்ணுகின்றதே. திருமூலர் பாடுகின்றார்

    ஆர்க்கும் இடுமின் அவரவர் என்னன்மின்

    பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்

    வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்

    காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

    இறைவனின் அருளுக்காக ஏங்கி தன் குறைகளை எடுத்துச் சொல்லும் வள்ளலாரோ எவ்வாறு உருகுகின்றார் தெரியுமா ?

    தந்தபொரு ளிலையென்றே னோ

    தானென்று கெர்வித்துக் கொலைகளவு செய்தேனா

    ……

    ஈயாத லோபி யென் றேபெய றெடுத்தேனோ? ..

    இந்த அடியார்களின் கருத்தெல்லாம் செல்வத்தை அறவழியில் மற்றவர்களுக்காக செலவிடுவதின் பயனை செவ்வனே விளக்குகின்றது.

    அறநெறியுடன் வாழ்வதற்கும் அறம் செய்து வாழ்வதற்கும் நாம் செல்வந்தராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பதை பகிர்ந்து இல்லாதவர்க்கு ஈந்து வாழ்வது அற வாழ்விற்கு அடையாளமாகும். இதனால்தான் இளம் பிராயத்திலேயே நமக்கு தமிழ் மூதாட்டி அவ்வையார் “அறம் செய்ய விரும்பு” என்ற பாடத்தை முதல் பாடமாகப் புகட்டினார். செல்வம் இருந்தும் அறம் செய்யாமல் இருப்பவர்கள் ஏழைகளாகவே இருப்பர்.

    திருமூலர் கூறுகின்றார்

    அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்

    தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்

    விழித்திருந் தென்செய்வீர் வெம்மை பரந்து

    விழிக்கவன் றென்செய்வீர் ஏழை நெஞ்சீரே

    அறம் சார்ந்த இந்த அருள்ஞானம் தேடியே மனித உயிர்கள் அலையும் பொழுது அடியார்களின் தேடல்களை எடுத்தா சொல்லவேண்டும். பத்திரகிரியார் பாடுகின்றார்

    அஞ்ஞானம் விட்டே யருள்ஞானத் தெல்லைதொட்டு

    மெய்ஞ்ஞான வீடுபேற்று வெளிப்படுவ தெக்காலம்?

    (தொடருவோம்)

    Share
  • சிந்தையில் நிறைந்த  சிவமே

    க.பாலசுப்பிரமணியன்

    download

    கைகளில் உடுக்கை கழுத்தினில் அரவம்

    கண்களில் நெருப்பு கருணையின் சிரிப்பு 

    சிகையினில் கங்கை சிறிதொரு பிறையே 

    சிந்தையில் நிறைந்த  சிவமே !

     

    சுட்டிடும்  நெருப்போ சூட்சும அறிவோ

    சுடர்விடும் ஒளியோ சோதியின் வடிவோ

    சாம்பலைப் பூசிய சமத்துவத் தத்துவம்

    சிந்தையில் நிறைந்த சிவமே !

     

    அருவம் உருவம் ஆனந்தப் பெட்டகம் 

    சத்துவ பூரணம் நித்திய நாட்டியம்

    சத்தினில் சித்தினில் வித்தென வந்தே

    சிந்தையில் நிறைந்த சிவமே !

     

     

     

     

    Share