Tag: சு.கோதண்டராமன்

  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 47

    சு. கோதண்டராமன்.

     

    சிரத்தை

    Sambrani Powder2

    பக்தியோடு சேர்ந்தே வருவது சிரத்தை. பக்தி இல்லாமல் சிரத்தை வராது. சிரத்தை இல்லாத பக்தி பயன் தராது.

    சிரத்தை என்பது என்ன? இது பல அம்சங்கள் அடங்கியது.

    1. ஒரு செயல் செய்ய ஆரம்பிக்கும் முன் அதன் நோக்கம் என்ன, அடைய வேண்டிய இலக்கு என்ன என்பதை மனதில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    2. அதை எப்படிச் செய்வது என்று அனுபவமுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    3. யாரிடம் நமக்கு முழு நம்பிக்கை இருக்கிறதோ அவரை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். அவரிடத்தில் உள்ள நம்பிக்கை கடைசி வரை நிலையாக இருக்க வேண்டும். பாதி வேலையில் இருக்கும்போது நாம் செல்லும் பாதை சரியானது தானா என்ற சந்தேகம் வர இடம் கொடுக்கக் கூடாது.

    (சிரத்தையின் முக்கிய பகுதி இந்த நம்பிக்கை என்பதால் சிரத்தை என்பதற்கு நம்பிக்கை என்றே பொருள் சொல்லப்படுகிறது. சிரத்தை என்பது விடாத நம்பிக்கை. நம்புவதே வழி என்ற மறை தனை நாம் இன்று நம்பி விட்டோம் என்கிறார் பாரதி. ஆனால் நம்பிக்கை தவிர வேறு சில அம்சங்களும் கொண்டது சிரத்தை.)

    4. அவர் சொன்னபடி, இலக்கை அடைவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். ஒவ்வொரு சிறு அம்சத்தையும் விடாமல் கவனத்துடன் செய்ய வேண்டும்.

    5. அதற்கு மாறான செயல் எதுவும் செய்யக் கூடாது.

    6. இடையூறுகள் ஏதேனும் ஏற்பட்டால் மனம் தளராது தொடர்ந்து முயல வேண்டும்.

    சிரத்தையோடு படிக்கும் மாணவன் தன் இலக்கு 100 சதவீதம் மதிப்பெண் பெறுவது என்பதை எப்பொழுதும் மனதில் இருத்திக் கொள்கிறான். எதை எதை எப்படிப் படிக்க வேண்டும் என்பதை ஆசிரியர் சொன்னபடி திட்டமிடுகிறான். அவர் மேல் முழு நம்பிக்கை வைத்து அவர் சொன்ன சொல் தவறாது படிக்கிறான். எல்லா முயற்சிகளையும் செய்கிறான். ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்துகிறான். கவனத்தைச் சிதறடிக்கக் கூடிய வேலைகளைப் புறக்கணிக்கிறான். கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடந்து கொள்கிறான். அவ்வப்போது ஏற்படும் இடையூறுகளால் மனம் தளராமல் முழு கவனத்துடன் படிக்கிறான்.

    இத்தனையையும் மனதில் கொண்டு ஒரு செயலைச் செய்தால் அது சிரத்தையுடன் செய்யப்பட்டதாகிறது. சிரத்தையுடன் செய்யப்பட்ட செயல்கள் வெற்றி பெறும். சில சமயங்களில் தோல்வி ஏற்பட்டாலும் அதில் ஏற்பட்ட படிப்பினை அடுத்த முறை வெற்றி பெற நிச்சயம் உதவும். சிரத்தை இல்லாமல் செய்யப்படும் காரியம் பலன்  தராது. முயற்சி வீணாகும். மனதுக்கும் உடலுக்கும் துன்பம் தரும். வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் சிரத்தை பலன் தரும். சிரத்தை இல்லாதவர் வாழ்வு சீரழியும்.

    ரிக் வேதத்தில் 10வது மண்டலம் 151வது சூக்தம் ச்ரத்தா சூக்தம் எனப்படுகிறது. சிரத்தை என்னும் பண்பு இதில் போற்றப்படுகிறது. அதில் சொல்லப்பட்ட கருத்துகளைப் பார்ப்போம்.

    அக்னியை மூட்டுவதும் ஆகுதி அளிப்பதும் சிரத்தையுடன் செய்யப்பட வேண்டும். பிறருக்குக் கொடுப்பதை சிரத்தையோடு கொடுத்தால்தான் பலன் கிடைக்கும். தேவர்களும் தங்களை விட வலிமை வாய்ந்தவர்கள் மீது சிரத்தை கொண்டிருக்கிறார்கள். சிரத்தை  செல்வம் தரும்.

    இப்படிப்பட்ட சிரத்தையை அடைவது எப்படி? அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல சிரத்தா தேவியைத் தியானித்தால்தான் சிரத்தை வளரும் என்கிறது வேதம். அதாவது சிறு செயல்களைச் சிரத்தையுடன் செய்ய முயன்றால் அதுவே பெரும் செயல்களிலும் சிரத்தையை வளர்க்கும். இதைச் சிறு வயதிலேயே பயிற்றுவிக்க வேண்டும்.

    சடங்குகள்:

    சடங்குகள் பல கட்டுப்பாடுகளை விதித்துச் சிரத்தையை வளர்க்கும் சிறந்த பயிற்சிக் கூடங்களாக உள்ளன. எப்படி என்று பார்ப்போம்.

    சந்தியா வந்தனம் முதலாக எத்தனையோ சடங்குகளை நாம் அனுசரிக்கிறோம். ஒவ்வொன்றிலும் பல மந்திரங்கள் உள்ளன. பல செயல்கள் அடங்கி உள்ளன. ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு செயலோடு இணைக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும். அவற்றுடன் மூச்சும் இணைய வேண்டும்.

    துவக்கத்தில் இதை எதற்காகச் செய்கிறோம் என்பதை நம் மனதுக்குள் நாமே தெளிவுபடுத்திக் கொள்கிறோம். அதுதான் சங்கல்பம் எனப்படுகிறது.

    நாமாகவே விரும்பி நம்மைக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்திக் கொண்டு சடங்குகளைச் செய்வதால் மற்ற விஷயங்களிலும் மனத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி ஏற்படுகிறது. எந்த விஷயத்தையும் நிதானமாக அணுகி, செய்ய வேண்டியதைத் திட்டமிட்டு, ஒவ்வொரு சிறு அம்சத்துக்கும் கவனம் செலுத்திச் செய்யும் பழக்கம் ஏற்படுகிறது.

    சிராத்தம் என்பதற்குச் சிரத்தையுடன் செய்யப்படுவது என்பது பொருள். எல்லாச் சடங்குகளும் சிரத்தையாகத்தான் செய்யப்படவேண்டும். ஆனால் இறந்தவர்களுக்கு ஆண்டு தோறும் செய்யப்படும் சடங்கு மட்டும் சிராத்தம் எனப்படுவது ஏன் என்றால் இதில் கர்த்தா மட்டும் அல்லாது அவனது குடும்பத்தவரும் செய்து வைக்கும் புரோகிதரும் மற்றவர்களும் கூட சிரத்தையை அனுசரிக்க வேண்டும். இன்ன மாதிரித் தூய்மை செய்து கொள்ள வேண்டும், இன்னின்ன பொருள்களைப் பயன்படுத்தலாம், இன்னின்ன பயன்படுத்தக் கூடாது, இன்ன மாதிரி உடை அணிய வேண்டும், இலையின் நீளம் இவ்வளவு இருக்க வேண்டும், இன்னின்ன திசைகளில் உட்கார வேண்டும், குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற ஆயிரக் கணக்கான கட்டுப்பாடுகள் இதில் உள்ளன. இது பல பேருடைய சிரத்தைக்கும் ஒரு சோதனைக் களம்.

    ஜப்பானியர் டீ குடிப்பதை ஒரு தியான முறையாக ஆக்குகின்றனர். அதில் செய்யப்படும் முயற்சிகளில் ஒவ்வொரு நிலையிலும் மிகுந்த நிதானம் கடைப்பிடிக்கப்படுகிறது. நம் பல்வேறு சடங்குகளும் அது போன்ற மனக்கட்டுப்பாட்டுப் பயிற்சிகள் தாம். எல்லா வைதீகச் சடங்குகளிலும் ஏதோ சில வேத மந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. பொருளைப் பார்த்தால் சடங்குக்கும்  சொல்லப்படும் மந்திரத்தின் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இராது.

    உதாரணமாக, தர்ப்பண மந்திரத்தில் வரும் மதுவாதா ருதாயதே என்ற மந்திரம் “என் கொள்ளுப் பாட்டனாரே, திருப்தி அடைவீர்களாக” என்று பொருள் தருவது அல்ல. இது தர்மத்தை அனுசரிக்கிறவனுக்கு உலகமே இனிமையாக உள்ளது என்பதைக் கூறுவது.

    சிராத்தத்தின் போது இலை போடப்படும் இடத்தைத் தர்ப்பையால் கூட்டும்போது சொல்லப்படும் மந்திரம், “இங்கிருந்து போய்விடுங்கள், இந்த இடம், இறந்து போன இந்த மனிதனுக்காகப் பித்ருக்கள் ஒதுக்கியது, யமன் இதை ஒளியாலும் நீராலும் அலங்கரித்துள்ளார்” என்பது.

    தெய்வத்துக்குச் சாம்பிராணி போடும் போது சொல்லும் தூரஸி தூர தூர்வந்தம் என்ற மந்திரம் என் பகைவனை அழி என்று வேண்டுவது. பரிஷேசனத்தில் சொல்லப்படும் மந்திரம் ஸவிதா என் புத்தியைத் தூண்டட்டும் என்ற வேண்டுகோளையும் ருதத்துடன் ஸத்யத்தை சேர்த்து உணர்ந்து வாழ்வோமாக என்ற அறிவுரையையும் கொண்டது.

    எதற்காக, இப்படி சம்பந்தமில்லாத வேத மந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்? உண்மை என்னவென்றால், வேத மந்திரங்களின் பொருள் முக்கியமல்ல. அவை சிரத்தையோடு கற்கப்பட்டவை, சிரத்தையோடு பாதுகாக்கப்படுபவை, சிரத்தைப் பயிற்சி பெற்ற வைதிகர்கள் அதை உச்சரித்து வழி நடத்துகிறார்கள் என்பதால் நமக்கும் சிரத்தை ஏற்படும் என்பதற்காக நம் முன்னோர்கள் வெவ்வேறு மந்திரங்களை வெவ்வேறு சடங்குகளுடன் இணைத்து வைத்தனர்.

    வேதம் பயிற்றுவிக்கப்படும் முறை பற்றி நாம் நன்கு அறிவோம். குரு ஒரு சொல்லை ஒரு முறை சொல்ல, மாணவர்கள் அதை இரு முறை திருப்பிச் சொல்கிறார்கள். அதில் எந்தத் தவறும் அனுமதிக்கப்படுவதோ, மன்னிக்கப்படுவதோ இல்லை. சரியான உச்சரிப்பில் சரியான ஸ்வரத்தில் மாணவன் திரும்பச் சொல்லும் வரையிலும் குரு விடுவதில்லை. இப்படி அடிக்கடிச் சொல்வதால் அது மனப்பாடம் ஆகிறது. தவறில்லாத நூறு சதவீதம் முழுமை தான் லட்சியமாகக் கொள்ளப்படுகிறது. 35 சதவீதம் வாங்கினால் பாஸ், 60 சதம் வாங்கினால் முதல் வகுப்பு என்று கூறும் பள்ளிப் படிப்புப் போன்றது அல்ல அது. அதைத் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடித்ததால் தான் வேதம் இன்றளவும் உருமாறாமல் இருக்கிறது. கடுமையான சிரத்தைப் பயிற்சிக்கு உட்பட்டு வெளிவருவதால் தான் எல்லா வைதிகச் சடங்குகளிலும் புரோகிதர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடக்கின்றனர்.

    புரோகிதரின் பொறுப்பு மிகப் பெரியது. ஒரு சமுதாயத்தையே வழி நடத்தி முன்னேற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் சிரத்தைக் குறைவு ஏற்பட்டால் சமுதாயம் முழுவதும் பாதிக்கப்படும். தானும் சிரத்தையுடன் நடந்து கொண்டு மற்றவர்களுக்கும் சிரத்தையை ஏற்படுத்துவது தான் அவர்களது முதல் லட்சியம், பணம் சம்பாதிப்பது அல்ல.

    சமிதா தான மந்திரம், அக்னியே எனக்குச் சிரத்தையைக் கொடு என்று வேண்டுகிறது. சிறு வயதிலிருந்து சந்தியா வந்தனம், சமிதா தானம் முதலானவற்றின் மூலம் சிரத்தைப் பயிற்சி ஏற்பட்டுவிட்டால் அவன் வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுகிறான். பிராமணர்களுக்கு என்று கடவுள் விசேஷமாக அறிவைக் கொடுக்கவில்லை. அவர்களது வளர்ப்பு முறையில் இந்தச் சிரத்தைப் பயிற்சி தான் அவர்களது அறிவைச் சுடர் விட்டு விளங்கச் செய்கிறது. தந்தை சந்தியா வந்தனத்தைக் கைவிடுவதன் மூலம் தன் சிரத்தைக் குறைவைக் காண்பித்தால் அவரையே முன் மாதிரியாகக் கொண்டு பையனும் கைவிடுகிறான். சமுதாயம் சீரழிய இது காரணமாகிறது.

    தற்காலக் கல்வி முறையில் சிரத்தைப் பயிற்சி வேறு வகையில் அளிக்கப்படுகிறது. இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்பதில் தொடங்கி, பல வகையான கட்டுப்பாடுகளுக்கு மாணவர்களை உட்படுத்தும் பள்ளி சிறந்த பள்ளியாகத் திகழ்கிறது என்பதைப் பார்க்கிறோம். கிராமப் புறங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஏனோ தானோ என்று நடத்தும் இடங்களில் சுதந்திரமாகத் திரியும் மாணவர்களின் கல்வித் தரம் தாழ்வதையும் பார்க்கிறோம்.

    பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் அடக்கு முறையால் அமல் நடத்தப்படுகின்றன, ஆசிரியர் இல்லாத நேரத்தில் கட்டுப்பாட்டை மீறும் ஆசை ஏற்படுகிறது. வீட்டில் வைதிகச் சடங்குகளின் கட்டுப்பாடுகள் தெய்வ நம்பிக்கையின் அடிப்படையில் இருப்பதால் அவற்றை மீறும் துணிச்சல் ஏற்படுவதில்லை. அவற்றில் பயம், பக்தி, சிரத்தை மூன்றும் கலந்து இருப்பதால் அவை மாணவர்களின் ஒழுக்கத்தை நல்ல முறையில் வளர்க்கின்றன.

     

     

    படம் உதவி: https://anticastregoneria.wordpress.com/blog/page/22/

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 46

    –சு. கோதண்டராமன்.

     

    பக்தி மாத்திரம்தான் உண்டு

     

    praying-figurine

     

     

    பொதுவாக, யக்ஞம் செய்வதை ஆதரிக்காத உபநிடதங்களை ஞான காண்டம் என்றும் அதை ஆதரிக்கும் ஸம்ஹிதை உள்ளிட்ட பிற வேதப் பகுதிகளைக் கர்ம காண்டம் என்றும் சொல்வது வழக்கம்.

    ஸம்ஹிதைகளைப் பொறுத்தவரை அவை யக்ஞங்கள் செய்வதை ஆதரிப்பதாகவும் கூற முடியாது, எதிர்ப்பதாகவும் கூற முடியாது. யக்ஞம்தான் உலகின் மையப் புள்ளி என்றும் யக்ஞம் செய்யாதவர்கள் அழிகிறார்கள் என்று கூறும் ரிக் ஸம்ஹிதை, யக்ஞம் இல்லாமல் பிரார்த்தனை மூலமே தேவர்களை மகிழ்விக்க முடியும் என்றும், யக்ஞத்தை விட உழைப்பு மேலானது என்றும் கூறுவதை முன்பு கண்டோம். சாயணரின் விளக்கம்தான் அதைக் கர்மகாண்ட நூலாக்கியது. அதன் உண்மையான பொருளைப் பார்க்கும்போது அது ஒரு பக்தி நூலாகத்தான் தெரிகிறது.

    ஸம்ஹிதைகளைக் கர்ம காண்டமாகப் பார்க்கும் தத்துவமாகிய பூர்வ மீமாம்சை கர்மா செய்தால் அததற்குரிய பலன் தானே விளையும், இதற்குப் பலதாதாவாகிய ஈச்வரன் ஒருவன் அவசியமில்லை என்று கூறும்.

    இறைவன் என்று ஒருவன் இருப்பதையே மறுப்பதாகக் கூறப்படும் ஸம்ஹிதையில் பக்தி மாத்திரம்தான் உண்டு என்று பாரதி சொல்வதன் விளக்கத்தைப் பார்ப்போம்.

    பக்தி என்பது என்ன? பாரதி வரையறுக்கிறார்- எப்போதும் எப்போதும் எப்போதிலும் எதிலும் எங்கும் நம்மைக் கடவுள் காக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருத்தல் பக்தி என்று சொல்லப்படும்.

    இறைவனை, என்றும் எங்கும் நம்மைக் காப்பவராக, தனக்கு மிக நெருங்கியவராக- தாயாக, தந்தையாக, நண்பனாக, குழந்தையாகக்- கருதுவது, அவனையே சரணடைவது, அவன் புகழைக் கூறுவது, அவனிடம் தன் குறைகளைத் தெரிவித்து நீக்குமாறு வேண்டுவது, அவனன்றி வேறு ஒருவரையும் நாடாமல் இருப்பது – இதுதான் பக்தியின் அடையாளங்கள்.

                புகழுள்ள உன் நாமத்தை நான் எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பேன் என்று  நாம ஜப மஹிமை பற்றிப் பேசுகிறது. 7.22.5

    கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே என்ற மாணிக்க வாசகர் கூற்றின் ஆழ்ந்த பக்தியை இங்கு காணலாம். இந்திரா, நாங்கள் உன்னை மடி நிரம்பிக் கன்றை அழைக்கும் பசுப் போலக் கதறி அழைக்கிறோம். எங்கள் பிரார்த்தனையைச் செவி மடுப்பாயாக என்று வேண்டுகிறது 7.32.22.

    அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல உன்னைத் துதிக்க வலிமையும் நீயேதான் கொடுக்க வேண்டும் என்று அக்னி வேண்டப்படுகிறார். 5.10.7

                இறைவன் என்னை அறிவான், நான் அவனது செல்வத்தை அனுபவிக்கிறேன். ஆனால் அவனை அறியவில்லை. 5.12.3

                மனதிற்கெட்டாதவன் இறைவன். 5.17.2

    தெய்வத்தை மிக உரிமையுடன் நெருங்கிப் பேசுகிறார் ரிஷி  விரூப ஆங்கிரஸர். அக்னியே, நான் நீயாகவும், நீ நானாகவும் இருந்தால் நான் உன் வேண்டுகோளை உடனே நிறைவேற்றியிருப்பேன் என்கிறார். 8.44.23

    மற்றொரு ரிஷியான காண்வாயனர் என்பவர், நான் இந்திரனாக இருந்தால் என் பக்தன் நிறைய பசுக்களைப் பெறுவான். என்கிறார். 8.14.1 நான் எத்தனை சொன்னாலும் நீ காதில் போட்டுக் கொள்ள மாட்டேன் என்கிறாயே, தெய்வம் என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படியா இருப்பது என்ற அவர்களது ஆதங்கம் அதில் தொனிக்கிறது.

    இந்திரன் விலை பேசப்படுகிறார். யாராவது இந்த இந்திரனை 10 மாடு கொடுத்து என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இந்திரனைக் கொண்டு, தங்கள் பகைவர்களை கொன்ற பிறகு, அவனை என்னிடம் திருப்பித் தரலாம் என்கிறது ஒரு மந்திரம். 4.24.10

    நீ எங்களுடையவன், நாங்கள் உன்னுடையவர்கள் என்கிறது ஒரு ரிக்.8.92.32

                இந்திரா, மற்றவர்களுடைய பூசைக்குச் செல்லாமல் முன்னதாக என் பிரார்த்தனைக்குச் செவி மடுப்பாயாக. 10.160.1

                இந்திரா, நீ பிறந்தது முதல் சகோதரனோ வேறு உறவோ இல்லாமல்  இருக்கிறாய். அதனால் என்னை உறவினன் ஆக்கிக் கொள்ள விரும்புகிறாய் என உறவு கொண்டாடுகிறார் ஒருவர். 8.21.13

                தந்தையின் ஆடை முனையைப் பிடித்திழுக்கும் மகனைப் போல நான் உன்னை என் பிரார்த்தனையால் பிடித்திழுக்கிறேன் 3.53.2 என்பது சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே என்று மாணிக்க வாசகர் கூறுவதற்கு முன்னோடி.

    அக்னியை, இந்திரனைத் தந்தையாக, உறவினனாக, நண்பனாகப் பாவித்துப் போற்றும் மந்திரங்கள் பல உள்ளன. இதோ ஒரு மந்திரம் மருத்துகளைத் தந்தையாகக் காண்கிறது. மருத்துகளே, தந்தை மகனை அணைத்துக் கொள்வது போல, நீங்கள் என்னை எப்பொழுது இருகைகளாலும் அணைத்துக் கொள்வீர்கள்? 1.38.1

    சூரனே, நீ எங்களை ஒரு குற்றத்துக்காகக் கொல்லாதே, இரு குற்றங்களுக்காகக் கொல்லாதே, மூன்று குற்றங்களுக்காகக் கொல்லாதே, பல குற்றங்களுக்காகக் கொல்லாதே என்ற மந்திரம் 8.45.34 கந்தர் சஷ்டி கவசத்தில் வரும் எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு, பொறுப்பது உன் கடன் என்ற வாக்கியத்தை நினைவூட்டுகிறது.

                உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன், பின்னை ஒருவரை யான் பின் செல்கேன் என்ற திருமுருகாற்றுப்படையின் பிற்சேர்க்கைப் பாடல் கருத்து  உன்னையன்றி எனக்கு சுகப்படுத்துபவன் எவரும் இல்லை  என்று 8.66.1 இல் காணப்படுகிறது.

                உன் மேல் நம்பிக்கை வைத்துத் தான், இந்திரா, நான் கதிர் அரிவாளுடன் களத்தில் நிற்கிறேன். கை நிறைய தானியங்களை அருள்வாய்  என்று தன் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் ஒருவர். 8.78.10

    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றுஅறியேன் என்று மணிவாசகர் கூறியதின் முன்னோடி ரிக் 1.7.7 இல் காணப்படுகிறது. இந்திரனைப் புகழும் வகையை நான் அறியேன் என்கிறார் ரிஷி.

                இந்திரன் எனக்கு மட்டுமே உரியவனாகட்டும் என்கிறார் ரிஷி. 1.7.10

    இந்திரன் என்றும் அக்னி என்றும் பல பெயர் கூறி அழைத்தாலும் எல்லாம் ஒன்றேயான அந்தப் பரம்பொருளையே குறிப்பிடுகின்றன என்பதைப் பார்த்தோம்.  வேதத்தில் பல வேறு தெய்வங்களையும் அன்புடன் அழைத்து, தன் மன விருப்பங்களைத் தெரிவித்து அவற்றை நிறைவேற்றுமாறு உரிமையுடன் வேண்டுகின்ற பக்தி மணம் கமழும் மந்திரங்கள் பல உள்ளன.

    படம் உதவி:   http://www.crystalsrocksandgems.com/

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 45

    –சு. கோதண்டராமன்.

    துன்பம் நீங்க வேதம் கூறும் வழி

    boston.com.bigpicture

     

    நம் விருப்பம் நிறைவேறாமல் தடுக்கும் தடையே துன்பம் என்பது. இது வேதத்தில் பல சொற்களால் குறிக்கப்படுகிறது. ஒவ்வொரு சொல்லும் துன்பத்தின் ஒரு குறிப்பிட்ட வகையைக் குறிக்கிறது.

    ரேபஸ் என்பது அங்கக் குறைபாட்டைக் குறிக்கும். தேவர்கள் ரேபஸ் இல்லாதவர்கள் என வேதம் கூறுகிறது.

    நோயைக் குறிக்க ரபஸ், அமீவா என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ருத்ரன் ரபஸை நீக்குபவராகக் கூறப்படுகிறார். (2.33.7)          மருத்துகளே, உடைந்த எலும்பைச் சரி செய்து ரபஸை நீக்குக என்கிறது மற்றொரு ரிக். (8.20.26)

    உயிர் வாழத் தேவையான உணவு, நீர் இவை கிடைக்காத நிலை, அதாவது வறுமை – அம்ஹஸ், அம்ஹதி என்ற சொற்களால் கூறப்படுகிறது. இந்திரா எங்களுக்கு செல்வம் கொடுத்து அம்ஹஸை நீக்குக என்கிறது ஒரு மந்திரம். (4.20.9) சிறையிலகப்படுதல், சித்திரவதை செய்யப்படுதல் முதலியனவும் இதே தலைப்பில் அடங்கும்.

    நமக்கு நெருங்கினவரது மரணத்தால் ஏற்படும் துன்பம் அகஸ் अघस्. எங்களது அகஸ்ஸைப் போக்கிச் செல்வத்தை அருளுக, அக்னியே என்கிறது வேதம். (1.97.1 )

    இந்த சூக்தத்தில் உள்ள எட்டு மந்திரங்களும் சிதைக்கு எரி மூட்டுவதற்கு முன்பாக, பிரேதத்தைச் சுற்றி வரும்போது சொல்லப்படுகிறது.

    அக்னியே எங்களை அகஸ்ஸுக்கோ, விஷகடிக்கோ உள்ளாக்காமல் காப்பாயாக.(1.189.5)    

     எங்களுக்குத் துன்பம் தருபவர்க்கு நீ அகஸ்ஸைக் கொடுப்பாயாக. (5.3.7)

    பிறருக்குக் கொடுக்காமல் உண்பவன், மரண துக்கம் வரும்போது அதைத் தனியாக அனுபவிக்கிறான் என்பதைக் கேவலாதி கேவலாக: என்று சுருக்கமாகக் கூறுகிறது ஒரு ரிக். (10.117.6)      

    பிரத்தியட்சமாக அனுபவிக்கும் துன்பங்கள் மட்டுமன்றி, வரவிருக்கும் துன்பம் வராமல் காப்பாற்ற வேண்டும் மந்திரங்கள், இந்திரா, எங்களைத் துன்பத்தில் தள்ளாதே (1.54.1)   போன்று பல உள்ளன.

    துரிதம் என்பது எல்லா வகையான துன்பங்களையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்.

    பெரும்பாலான மந்திரங்கள் எங்களது துன்பத்தை நீக்கு என்றுதான் வேண்டுகின்றன. என்னுடைய துன்பத்தை நீக்கு என்று வேண்டும் மந்திரங்கள் மிகக் குறைவு.

    துன்பத்தின் காரணத்தைப் பற்றிக் கூறும்போது, மனிதர்களால் ஏற்படுவது, தேவர்களால் கொடுக்கப்பட்டது என இரண்டு வகையாகப் பிரிக்கிறது வேதம் – மர்த்ய க்ருதம், தேவ க்ருதம். மனிதரால் ஏற்பட்ட துன்பத்தையும் தான் செய்த தவற்றினால் ஏற்படுவது, மற்றவர்கள் செய்த தவற்றினால் ஏற்படுவது என இரண்டாகப் பிரிக்கிறது.

    எங்கள் முன்னோர்கள் செய்த தவறுகளிலிருந்தும் நாங்கள் செய்த தவறுகளிலிருந்தும் எங்களை விடுவிப்பாயாக. (7.86.5)           மற்றவர்கள் செய்த பாவத்தின் பலனை நாங்கள் அனுபவிக்காமல் இருப்போமாக.(2.28.9)

    திரிகளின் சாபத்தால் ஏற்படும் துன்பத்திலிருந்து (அபிசஸ்தி), காக்குமாறு வேண்டுகிறது. (1.18.3, 6.42.4)       

    தான் செய்த தவறு என்பது ஆகஸ் (आगस्) எனப்படுகிறது. அதுவே சிறியதாக இருந்தால் அது ஏனஸ் எனப்படுகிறது.

    எது பாவம்? ருதத்தை (இயற்கை நியதியை) மீறுவது பாவம். அதன் விளைவாகத் தேவர்கள் துன்பம் கொடுக்கிறார்கள். ருதம் என்பது மேலோரைப் போற்றலும் சார்ந்தோரைக் காத்தலும் ஆகும் என்பதை முன்னர் பார்த்தோம். மனிதன் ஏன் ருதத்தை மீறுதலாகிய பாவத்தைச் செய்கிறான்?

    பாவத்திற்குத் தூண்டு கோல்கள் யாவை என்று ரிஷி பட்டியல் இடுகிறார். அவை மது, கோபம், சூது, அறியாமை, கனவுகள் என அறிகிறார். பாவம் செய்யாதிருக்கப் புத்தி கொடு என்று வேண்டுகிறார். (7.86.6,7.)

    மற்றொரு மந்திரத்தில், அறியாமை, ஆணவம், கவனமின்மை, தூண்டுதல்களை எதிர்கொள்ள முடியாத பலவீனம் ஆகியவை பாவம் செய்வதன் காரணமாகக் கூறப்படுகின்றன. (4.54.3)   

    செயலால் செய்யப்படுவது மட்டும் பாவம் அல்ல. வாயினால் தவறாகப் பேசுவதும் பாவம் என்கிறது வேதம்.

        மற்றவர்களிடம் பேசுவதிலோ, மற்றவர்களைப் பற்றிப் பேசுவதிலோ, தெரிந்தோ தெரியாமலோ தூங்கும்போதோ விழித்திருக்கும்போதோ நாங்கள் என்ன தவறு செய்தாலும் அதை வருங்காலத்திலும் செய்யாமல் காப்பாயாக. (10.164.3)

    பாவத்திலிருந்தும் அதன் விளைவான துன்பத்திலிருந்தும் தப்புவது எப்படி? பிரார்த்தனை ஒன்றுதான் வழி. தேவர்களைச் சரணடைந்து மன்னிப்புக் கேட்பதுதான் துன்பங்களிலிருந்து நீங்க வேதம் கூறும் ஒரே மார்க்கம்.

    தேவர்களைச் சரணடைந்து விட்டால் துன்பங்களிலிருந்து தப்பித்து விடலாம் என்ற துணிச்சலில் பாவம் செய்து கொண்டே இருக்கலாமா? முடியாது. தேவ பூசைக்கு முன்னதாக நாம் நம்மைப் பாவங்கள் இல்லாதவர்களாகச் செய்து கொள்ள வேண்டும்.

    “பாவம் நீங்கினால்தான் தேவ பூசை செய்யலாம், தேவரைப் பூசித்தால்தான் பாவம் நீங்கும்” என்பது குழப்பமாகத் தோன்றும். இதன் பொருள் என்னவெனில், பாவத்தைப் போக்கிக் கொள்ள நம்முடைய முயற்சியும் அவசியம், அதாவது செய்த பாவங்களுக்காக நாம் மனமார வருந்த வேண்டும் என்பதுதான். மனதில் பாவ நாட்டம் இல்லாமல் தூய்மை செய்து கொண்டால்தான் பூசை செய்வதற்கு உரிய தகுதி கிடைக்கும். பூசை செய்வதன் மூலம் பாவத்தின் விளைவுகளைத் தேவர்கள் நீக்குவார்கள்.

    தேவர்களைப் பூசிப்பதால் செய்த பாவங்கள் போவது மட்டுமல்ல, இனி வருங்காலத்தில் பாவம் செய்வதற்குக் காரணமான எண்ணங்களும் நீக்கப்பட்டு மனம் தூய்மை அடையும் (10.63.8)  என்பது தெரிகிறது. ஆண்டாளின் திருப்பாவையில் வரும் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய் என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது அல்லவா?

    பாவக் கோட்பாட்டின் பரிணாம வளர்ச்சி:

    புராண காலத்தில் ருதம் என்ற கருத்துரு மறைந்து முழுமுதல் கடவுள் என்ற கோட்பாடு உண்டாயிற்று. அந்நிலைக்கு சிவனை உயர்த்தின சில நூல்கள். விஷ்ணுவை உயர்த்தின வேறு சில நூல்கள்.

    ருதம் வழக்கு ஒழிந்ததால் ருதத்தை மீறுதல் பாவம் என்பதும் மறைந்தது. பிறர்க்கு துன்பம் தருவது தான் பாவம் என்ற எண்ணம் பரவலாயிற்று. அத்துடன் பிறர்க்கு உபகாரம் செய்தல் புண்ணியம் என்ற புதிய கருத்தும் வளர்ந்தது. பரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம்.

    இது புத்த சமயத்தின் தாக்கமாக இருக்கக் கூடும்.

     

     

     

    Picture Source: http://www.boston.com/bigpicture/2013/04/daily_life_march_2013.html

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 44

    –சு. கோதண்டராமன்.

    ரிஷிகள் வேண்டிய செல்வம்

    atllUXQ

     

    (இதுவரை வேதத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள மூன்று சொற்களான, தேவ, யக்ஞ, ருதம் ஆகியவற்றைப் பற்றிப் பார்த்தோம். இனி வேதத்தின் வேறு சில குறிப்பிடத் தகுந்த விஷயங்கள் பற்றிப் பார்க்கலாம்.)

    ரிக் வேதத்தின் முதல் மந்திரம் அக்னியை வேண்டுவது. அதில் அக்னி செல்வம் தருபவராகப் போற்றப்படுகிறார். இதைத் தொடர்ந்து பல இடங்களில் அக்னியைச் செல்வத்தின் தலைவராகவும் செல்வம் தருபவராகவும் கூறுகிறது வேதம்.

    அக்னி மட்டுமல்ல, வாயு, இந்திரன், அஸ்வினி தேவர்கள், சூரியன், உஷை ஆகிய எந்தத் தெய்வத்தை வேண்டினாலும் அவர்களிடம் “எங்களுக்குச் செல்வம் கொடு” என்ற கோரிக்கை முன் வைக்கப் படுகிறது.

    இவ்வாறு நூற்றுக்கணக்கான இடங்களில் இந்தப் பிரார்த்தனை திரும்பத் திரும்ப வருவதைப் பார்க்கும் போது ரிஷிகள் செல்வத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களே என வியப்புத் தோன்றும். இது பற்றி ஆராய்வோம்.

    செல்வம் என்பதற்கு அங்கு பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் – வஸு, ரயி, ரேக்ண, தனம், ராதஸ் முதலியவையாம். இவை அனைத்தும் ஒரு பொருட்சொற்கள்.

    செல்வம் என்றால் எத்தகைய செல்வம்? அவர்கள் பிரார்த்தனையில் எங்களுக்கு நீண்ட ஆயுள் கொடு, மக்கட்பேறு கொடு, உணவு கொடு என்பதோடு கூட செல்வமும் கொடு என்று வேண்டுவதால் செல்வம் என்பது மேலே கண்டவை அல்லாத வேறு ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என அறிகிறோம்.

    அது பணமா? அக்காலத்தில் பண்டமாற்று முறையே வழக்கில் இருந்ததால் பொருளாதாரப் பரிவர்த்தனைச் சாதனமாக தங்கமோ வெள்ளியோ பயன்படுத்தப்படவில்லை என்பதையும்  அறிகிறோம். அவர்கள் தங்கம் வெள்ளியை அறிந்திருந்தும் கூட எங்கும் தங்கம், வெள்ளி கொடு என்று வேண்டவில்லை.

    தெய்வங்களைப் போற்றும்போது பொன் வண்ணமுடையவர் என்று போற்றுகின்றனரே அன்றி ஆடவரோ, பெண்டிரோ தங்க நகை அணிந்து மகிழ்ந்ததற்குச் சான்றான குறிப்புகளும் அங்கு இல்லை. தெய்வத்திடம் கேட்டுப் பெற்ற செல்வத்தை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்தார்கள் என்ற விவரங்களும் இல்லை.

    எனவே அவர்கள் கோரிய செல்வம் என்பது வேறு ஏதோ ஒரு பொருளைக் குறிப்பதாக இருக்கவேண்டும் என்று தெரிகிறது. இன்னும் ஆராய்வோம்.

    ரிஷிகள் வேண்டிய மற்ற பொருள்களான உணவு, நீண்ட ஆயுள், மக்கட் பேறு இவை உலக வாழ்வின் பௌதிகத் தேவைகளை நிறைவு செய்து சந்தோஷம் தருவன. செல்வம் என்பது ஆனந்தம் தருவதாகக் கூறப்பட்டுள்ளது.

    இந்த இடத்தில் ஆனந்தம் சந்தோஷம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டுமே தமிழில் மகிழ்ச்சி என்று மொழிபெயர்க்கப்பட்டாலும் இவற்றினிடையே நுட்பமான வேறுபாடு உண்டு. சந்தோஷம் என்பது திருப்தியடை என்ற பொருளுள்ள ‘துஷ்’ என்ற வேரிலிருந்து பிறந்தது. ஆனந்தம் என்பது மகிழ்ச்சி அடை எனப் பொருளுடைய ‘நந்த்’ என்ற தாதுவிலிருந்து தோன்றியது. நமக்கு ஒரு தேவை இருந்து அது நிறைவேறுவதால் ஏற்படும் திருப்திக்குப் பெயர் சந்தோஷம். தேவைகள் அற்ற நிலையில் உள்ளத்தில் தோன்றும் மகிழ்ச்சிக்குத்தான் ஆனந்தம் என்பது பெயர்.

    உதாரணமாக, பசியினால் வருந்தும் ஒருவனுக்கு உணவு கிடைத்தால் அவனது தேவை நிறைவடைகிறது. அந்த திருப்தி உணர்வு சந்தோஷமாகும். பசி முதலான உடல் தேவைகள் தீர்ந்த குழந்தை தனக்குத் தானே பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் அடையும் உணர்வு ஆனந்தம். அவ்வாறே மனநலம் சரியில்லாத ஒருவன் எந்தக் காரணமுமின்றி சிரித்துக் கொள்கிறான். அதுவும் ஆனந்தமே. (இந்த இரண்டாவது உதாரணம் வியப்பூட்டலாம். ஆனால் ஆதி சங்கரர் பஜகோவிந்தம் என்னும் நூலில் பிரம்மத்தில் ஈடுபட்ட ஞானியின் சித்தம் அளவற்ற ஆனந்தம் அடைவதாகவும் குழந்தைகள் போலவும் பித்தர்கள் போலவும் ரமிப்பதாகவும் கூறுகிறார்.)

    யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம் நந்ததி நந்ததி நந்தத்யேவ. 19

    யோகீ யோக நியோஜித சித்தோ ரமதே பாலோன்மத்தமதேவ 22

    கவிஞர்கள் இந்த ஆனந்தத்தைத்தான் பெரிதாக மதித்தார்கள். அன்றாட வயிற்றுப் பாட்டுக்குக் காணி நிலத்துக்கு மேல் ஆசைப்படாத பாரதி, அங்கே கத்தும் குயிலோசை சற்றே வந்து காதிற் பட வேண்டும் என்கிறார். கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலாவை உணர்ந்து இன்பம் காண்கிறார். பார்க்கும் மரங்களில், காக்கைச் சிறகினில் எல்லா இடங்களிலும் இறைவனைக் கண்டு ஆனந்தம் அடைகிறார்.

    ஆங்கிலக் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் தன் கவிதையில் குறிப்பிடுகிறார்.

    I gazed—and gazed—but little thought

    What wealth the show to me had brought:

    நான் அந்த டாபோடில் மலர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அது எனக்கு எத்தகைய செல்வம் தந்தது என்பதை அப்பொழுது உணரவில்லை.   பின்னர் வீட்டில் தனிமையில் நாற்காலியில் சாய்ந்து அமைதியான மன நிலையில் இருந்தபோது அது என் உள்ளத்தை ஆனந்தத்தால் நிறைத்து மலர்களுடன் நடனமாடச் செய்தது என்று கூறுகிறார்.

    நம்மைச் சுற்றிலும், இறைவனால் படைக்கப்பட்ட அழகான இயற்கைச் சூழல் அமைந்துள்ளது. இதைப் பார்த்து ஆனந்திக்கும் மனம் வேண்டும். ரசிக்கும் மனம் இல்லாவிட்டால் எந்தப் பொருளும் ஆனந்தம் தராது. அது மட்டும் இருந்துவிட்டால் எந்தப் பொருளிலும் அழகைப் பார்க்க முடியும். அத்தகைய மனம் தம்மிடம் என்றும் மாறுதலின்றி இருக்க வேண்டும் என்று ரிஷிகள் விரும்புகிறார்கள். அதைத்தான் அவர்கள் செல்வம் என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் என்றும் குறையாத இச்செல்வம் பிறரால் களவாடப்பட முடியாதது. இது ஒன்று இருந்து விட்டால் உலகத் தேவைகளில் ஒரு சில குறைந்திருந்தாலும் குறையாகத் தோன்றாது.

    இதோ இந்தக் கவிதையைப் பாருங்கள். மதுவாதா ருதாயதே என்று தொடங்கும் இது ரிக் முதல் மண்டலம்  90 வது சூக்தத்தில் உள்ளது.

    ருதத்தைப் பின்பற்றுபவனுக்குக் காற்று இனியது. நதிகள் இனிமையாக ஓடுகின்றன.

    செடிகொடிகள் எங்களுக்கு இனியவையாக இருக்கட்டும்.

    இரவும் பகலும் எங்களுக்கு இனியன. மண் இனியது. விண் இனியது.

    சூரியன் இனியவன், பசுக்கள் இனியன.

    இந்தக் கருத்தைத்தான் பாரதி தன் வசன கவிதையில் இப்படிப் பாடுகிறார்.

    இவ்வுலகம் இனியது, இதிலுள்ள வான் இனிமையுடைத்து.

    காற்றும் இனிது. தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது.

    ஞாயிறு நன்று, திங்களும் நன்று.

    வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.

    மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது.

    கடல் இனிது, மலை இனிது, காடு இனிது.

    ஆறுகள் இனியன.

    சூரியன் தன் தெய்வீக வசுக்களுடன் தோன்றுகிறான் என்னும் போது அது இயற்கை எழிலைத்தான் குறிக்கிறது என அறிகிறோம். வைகறைப் பொழுதை வியந்து போற்றும் ரிக் 1-113 இன் மொழிபெயர்ப்பை முன்பு பார்த்தோம். அதில் ஒரு பகுதியை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம்.

    உலகிற்கு ஒளிதரும் உஷையெனும் நங்கை

    இனிய சொற்களின் எழில்மிகு தலைவி

    பல நிறப் பாங்குடன் ஒளிர்வது கண்டோம்,

    கதவினைத் திறந்து, காட்டினள் செல்வம்.

    ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

    எனக்கு முன்னர் எத்தனையோ மாந்தர்

    எண்ணிலா விடியல் கண்டு களித்து

    எங்கோ போயினர், இன்று அவர் இல்லை.

    உஷையின் ஒளி கண்டு உள்ளம்    மகிழ்ந்திட

    இன்று கிடைத்தது எமக்கொரு வாய்ப்பு.

    புதிய மக்கள் நாளை வருவர்

    விடியலின் எழிலை வியந்து போற்றுவர்.

    பாரதியும் வேர்ட்ஸ்வொர்த்தும் மற்றும் உயர்ந்த கவிஞர்கள் பிறரும் எதைச் செல்வம் என்று கருதினரோ, அந்த இயற்கையின் எழில் வளத்தை ரசித்து, அதனால் அடையும் ஆனந்தத்தையே செல்வம் என்று ரிஷிகள் கருதினர் என்று அறிகிறோம். மழையைக் குறித்தும் புயற் காற்றைக் குறித்தும் பிற இயற்கைத் தோற்றங்களைக் குறித்தும் அவர்கள் பாடிய கணக்கற்ற பாடல்கள் இதை நமக்கு உணர்த்துகின்றன.

    இந்த ரயி (செல்வம்)ஒருவருக்குக் கிடைக்கப் பெற்றால் அவருக்கு வாழ்க்கையாகிய போர்க் களத்தில் தோல்வி என்பதே இல்லை. அவருக்குப் பகைவர்கள் இல்லை.

                ஜயத்திற்கு மூலமாயிருப்பதும், பகைவர்களைத் தாழ்த்துவதுமான ரயியை எங்களுக்கு அளிக்கவும். குதிரை மீது செய்யப்படும் போரிலோ அல்லது கைகலந்து செய்யும் போரிலோ அந்தச் செல்வத்தால் நாங்கள் பகைவர்களை வெல்வோமாக. 1.8.1,2

    இவ்வுலக வாழ்க்கை மட்டுமல்ல. வாழ்க்கையின் இறுதி லட்சியமாகிய ஒளியை அடையவும் இந்த  ரயி உதவும் என்பது இதை ஒளியை அறிய உதவும் செல்வம் (ஸ்வர்விதம் ரயிம்) 8.13.5 என்று குறிப்பிடுவதிலிருந்து தெரிகிறது.

    Picture Source: http://viralscape.com/city-nature-cinemagraphs/

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 43

    சு. கோதண்டராமன்.

    யக்ஞமும் ருதமும்

    PhotosVallalar9

     

    யக்ஞம் என்ற சொல் முதலில், தீ மூட்டிச் செய்யப்படும் வழிபாட்டை மட்டும் குறித்தது; பின்னர், நமக்கு இதற்கு முன் உதவி செய்த, அல்லது இனிமேல் உதவி செய்யக்கூடிய மேலோரிடம் காட்டப்படும் நன்றியையும் வணக்கத்தையும் குறிப்பதாக வளர்ந்தது என்று பார்த்தோம். இதன் பொருள் மேலும் வளர்ந்தது.

    மேலோரிடம் உதவி கோரி வணங்குகிறோம். தன்னைச் சரணடைந்தோருக்கு உதவி செய்ய வேண்டுவது மேலோரின் கடமை ஆகிறது. எனவே யக்ஞம் என்பது மேலோரைப் போற்றல் மட்டுமல்ல, கீழோரைக் காத்தலும் யக்ஞம் என்பதன் பொருள் ஆயிற்று.

    ருதத்தின் பல பண்புகளில் சார்ந்தோரிடம் பரிவு காட்டுவதும் ஒன்று என்று பார்த்தோம். அப்பொழுது பரிவு காட்டப்பட்டவர்களின் கடமை உதவி செய்தோரிடம் நன்றியுடனும் வணக்கத்துடனும் இருத்தல் என்று ஆகிறது. எனவே ருதம் என்பது கீழோரைக் காத்தலும் மேலோரைப் போற்றலும் என்று ஆகிறது.

    இவ்வாறு பொருள் விரிவடைந்த நிலையில் யக்ஞத்துக்கும் ருதத்துக்கும் வேறுபாடு இல்லாமல் போகிறது. எனவே ருதம் என்ற சொல்லுக்குச் சாயணர் பெரும்பாலான இடங்களில் யக்ஞம் என்றே பொருள் கூறுகிறார். ருதத்தின் செயல் வடிவம் தான் யக்ஞம்.

    உதவி செய்வோருக்கு வணக்கம் செலுத்துவது மட்டும் யக்ஞம் அல்ல, நம்மைச் சார்ந்தோருக்கு உதவி செய்வதும் யக்ஞமே என்பதன் அடிப்படையில் தான் பிற்கால ரிஷிகள் நாம் தினசரி செய்ய வேண்டிய கடமையாகப் பஞ்ச மஹா யக்ஞம் என்ற ஐந்து வகை யக்ஞங்களை ஏற்படுத்தினார்கள். அவற்றில் தேவ யக்ஞம், ரிஷி யக்ஞம், பித்ரு யக்ஞம் என்பவை மேலோருக்குச் செய்யப்படும் வணக்கம் ஆகும். நம்மை அண்டி வாழும் பசு முதலான பிராணிகளைக் காப்பாற்றுவது பூத யக்ஞம். அதிதிகளுக்கு உணவளித்தல் ந்ருயக்ஞம். சமூகத்தில் குழந்தைகள், முதியவர்கள், ஏழைகள் முதலான நம்மைச் சார்ந்து வாழும் பலருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதை வேதம் மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. யக்ஞத்தை பஞ்சயாம (ஐந்து வழிகள் உடையது) என வர்ணித்திருப்பது இதைத்தான் குறிப்பதாக இருக்க வேண்டும்.

    இந்த விரிந்த பொருளில் யக்ஞம் செய்வதுதான் வாழ்வாங்கு வாழும் முறையாகும். தஸ்யுக்கள் யக்ஞம் செய்வதில்லை. அவ்வாறு யக்ஞம் செய்யாதவர்களை மித்ரனும் வருணனும் அழிக்கிறார்கள். (10.52.4, 10.124.1)

    யக்ஞம் செய்வோரின் குலம் பெருக வேண்டும் என்றும் யக்ஞம் செய்யாதவரின் எண்ணிக்கை வர வரக் குறைய வேண்டும் என்றும் ஒரு மந்திரம் வேண்டுகிறது. (7.61.4)

    யக்ஞம் செய்யாதவர் தடுமாற்றம் அடைகிறார்கள்.

    யக்ஞம் செய்யாதவர் தடுமாற்றம் அடைகிறார்கள்.
    யக்ஞம் என்பது உலகத்தின் நாபி, மையப்புள்ளி ஆகும். (8.13.29)
    அது மனிதர்களை ரிஷி நிலைக்கு உயர்த்தும். (10.130.6)
    அது இந்திரனின் நட்பைப் பெற்றுத் தரும். (10.62.1)
    அது இந்திரனை வலுப்படுத்துகிறது.(6.34.4)
    அது மனதைத் தூண்டுகிறது. (8.92.21)
    தந்தை மகனுக்குச் செய்வது போல, உறவினர் மற்றொரு உறவினருக்குச் செய்வது போல, நண்பன் தன் நண்பனுக்குச் செய்வதைப் போல அக்னி யக்ஞம் செய்கிறார் என்று கூறுகிறது வேதம். (1.26.3)

    இதிலிருந்து யக்ஞம் என்பது அன்புடன் செய்யப்பட வேண்டிய உதவி என்பது தெரிகிறது.

    Picture Source: https://www.auro-ma-ramalingam.org/BiographicalPaintings_vallalar.php

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 42

    சு. கோதண்டராமன்.

     

    ஸத்யமும் ருதமும்

    ravi அர்த்தநாரீஸ்வரர்

     

    ஸத்யம் த்வா ருதேன பரிஷிஞ்சாமி  என்பது இறைவனுக்கு உணவு படைக்கும்போது சொல்லப்படும் மந்திரம். ஸத்யமே, உன்னை ருதத்தால் நனைக்கிறேன் என்பது பொருள்.

    ருதம் என்பது இயற்கை நியதியைக் குறிக்கிறது என்று பார்த்தோம். இனி, ஸத்யம் என்ற சொல்லின் அடிப்படைப் பொருள் பற்றிப் பார்ப்போம். ஸத்யம் என்பது ஸத் என்ற சொல்லிலிருந்து தோன்றியது. அதற்கு உள்ளது என்று பொருள். எது உள்ளதோ அது உண்மை, ஸத்யம்.
    (தமிழில் உள்ளது, இருக்கிறது ஆகிய இரு சொற்களும் ஒரே பொருள் உடையவை ஆயினும் உள்ளது என்ற சொல்லுக்கு மட்டும் இறந்த காலமும் வருங்காலமும் இல்லை. அது முக்காலத்தையும் குறிக்கும் வினையாகும்.)

    ஸத்யம் என்பது முக்காலத்திலும் எது இருக்குமோ அதைக் குறிப்பிடுகிறது. காலத்ரய அபாத்யம் (மூன்று காலங்களிலும் பாதிக்கப்படாமல் நிலைத்து நிற்பது) என்று சாஸ்திரங்கள் ஸத்யத்திற்கு விளக்கம் அளிக்கின்றன. எனவே ஸத்யம் என்பது பரம் பொருளைக் குறிப்பது அறியப்படுகிறது.

    ஸத்யம் தோற்பதில்லை:
    ஸத்யம் ஏவ ஜயதே என்ற உபநிடத வாக்கியத்தை, ‘வாய்மையே வெல்லும்’ என்று மொழி பெயர்த்து, கடைசியில் என்றோ ஒரு நாள் ஸத்யம் வெல்லப்போகிறது என நாம் கருதுகிறோம். அது சரியான பொருள் அல்ல.

    ஜயதே என்ற சொல் முக்காலத்திலும் வெல்கிறது என்று பொருள் தரும் நிகழ்கால வினை ஆகும். என்றும் வென்று நிலை நிற்பது உண்மையே (பரம் பொருளே) என்பதுதான் சரியான பொருள்.

    ருதமும் ஸத்யமும்:
    ருதம் என்பது பிரபஞ்சத்தின் ஒழுங்கு முறை. அதன் இயக்கத்துக்குக் காரணமான நியதி. இது இறைவனின் செயலாக்கத்தைச் சுட்டுவது. ஸத்யம் என்பது பரம்பொருளின் இருப்பைக் கூறுகிறது. பரம் பொருள் வெறுமனே இருக்கிறது, அது வேறு ஒன்றும் செய்வதில்லை (It just exists)என்னும் போது அது ஸத்யம் எனப்படுகிறது.

    உபநிடதக் காலத்தில் பரம்பொருளின் செயல்படும் தன்மையை ஸகுண ப்ரம்மம் என்றும் செயலற்று எந்த விதமான மாற்றமும் இன்றி இருக்கும் தன்மையை நிர்க்குண ப்ரம்மம் என்றும் கூறினர்.

    அதற்கும் பிந்திய புராணக் காலத்தில் தேவர்களாகிய இயற்கைச் சக்திகளை உண்டாக்கி அவற்றை இயங்கச் செய்யும் ருதத்தை சக்தி என்றும் செயலற்றுத் தன்னில் தான் அடங்கிச் சிவனே என்று இருக்கும் ஸத்யத்தைச் சிவன் என்றும் அழைத்தனர்.

    தூய்மையானவர்கள், பிறரைத் தூய்மைப்படுத்துபவர்கள், ருதத்தைப் பின்பற்றுபவர்கள் ருதத்தின் மூலம் ஸத்யத்தை அடைகிறார்கள். 7.56.12

    ருதத்தின் மூலம்தான் ஸத்யத்தை உணர முடியும் எனக் கூறப்படுவதால் ருதத்தைத் தாயாகவும் ஸத்யத்தைத் தந்தையாகவும் கருதி, தாயினுடைய பரிந்துரையின் பேரில்தான் தந்தையின் அருளைப் பெற முடியும் என்ற கருத்து பிறந்தது. இதுவே வைணவத்தில் தாயாரின் கருணை பெற்றுத்தான் பெருமாளின் திருவடியை அடைய முடியும் என்று கூறப்படுகிறது.

    பரம்பொருளின் இந்த இரு தன்மைகளும் பிரித்துப் பேசப்பட்டாலும் அவை பிரிக்க முடியாத ஒரே பரம்பொருளிடம் அமைந்திருப்பதால் சிவனும் சக்தியும் அம்மையப்பனாக ஒரே உடலில் இருப்பதாகக் கூறினர்.

    அன்ருதமும் அஸத்யமும்:
    ருதம் என்பதற்கு எதிர்ச்சொல்லாக அன்ருதம் என்பதை வேதம் கூறுகிறது. தர்மத்திற்கு மாறாக ஒருவன் பேசினாலோ, நடந்தாலோ அது அன்ருதம். இதைத் தேவர்கள் தண்டிக்கின்றனர் என்கிறது வேதம். ஸத்யம் என்ற சொல்லுக்கும் அன்ருதம் என்பது தான் எதிர்ச் சொல். அஸத்யம் என்ற சொல் வேதத்தில் காணப்படவில்லை.

    அஸத்யம் என்பது முக்காலத்தும் உள்ள பரம் பொருள் ஒன்று இல்லை என்று பொருள் ஆகிறது. அவ்வாறு யார் சொல்ல முடியும்? பல வேறு மதக்காரர்களும் வெவ்வேறு பெயரிட்டு அழைப்பர். ஆனால் பரம்பொருள் இல்லை என்று சொல்வதில்லை. நாத்திகர்கள் வணக்கம் அவசியமில்லை என்பரே அன்றி என்றும் நிலைத்திருக்கும் ஒரு இயற்கை நியதி உள்ளது என்பதை மறுப்பதில்லை. அதனால் ஸத்யம் என்பதற்கு எதிர்ச் சொல்லான அஸத்யம் என்ற சொல் வேதத்தில் ஒரு இடத்திலும் காணப்படவில்லை.

    பரம்பொருளின் செயல்படும் சக்தி வடிவையும் உருவற்ற, குணமற்ற, வேண்டுதல் வேண்டாமை அற்ற, சுத்த சத்துவ நிலையையும் ஒரு சேர நினைக்கிறேன் என்ற கருத்தைத்தான் ஸத்யத்தை ருதத்தால் நனைக்கிறேன் என்ற மந்திரம் கூறுகிறது.

    சக்தியின் திறமையைப் பெற்று நாம் செயலாற்றுகிறோம். சிவத்தின் மௌனத்தில் நம்மை ஆழ்த்தி அமைதியுறுகிறோம்.

     

     

     

    படம் உதவி: வல்லமை ஓவியர் திரு. சு. ரவி

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 41

    –சு. கோதண்டராமன்.

     

    தேவ ரிஷி பித்ருக்களும் ருதமும்

     

    yoga

    பித்ருக்களும் ருதமும்:
    பித்ருக்கள் ருதத்தை நன்கு அறிந்துள்ளார்கள், அதன்படி நடப்பவர்கள், அதை வளர்ப்பவர்கள் அதனால் அவர்களும் ருதக்ஞ, ருதாவான், ருதாவ்ருத என்ற அடைமொழி பெறுகின்றனர்.

    அவர்கள் தங்கள் வம்சத்தவருக்கு ருதம் பற்றிய அறிவைப் போதித்து வந்தனர். நான் என் தந்தையிடமிருந்து ருதம் பற்றிய ஆழ்ந்த அறிவை அடைந்தேன் (8.6.10) என்கிறார் ரிஷி.

    ரிஷிகளும் ருதமும்:
    ரிஷிகளும் புரோகிதர்களும் ருதத்தைப் பின்பற்றி நன்மை அடைந்துள்ளனர். ரிஷிகள் ருதத்தின் இடத்தைக் காப்பாற்றி உயர்ந்த பெயர்களை அதனுள் மறைத்து வைக்கின்றனர். (10.5.2)

    புரோகிதர்கள் ருதத்தைப் பற்றிச் சிந்தித்து வலன் என்ற அரக்கனைக் கொன்றார்கள். குத்ஸரைப் பற்றிச் சிந்தித்து அஹி என்னும் விருத்திரனைக் கொன்றார்கள். (10.138.1)

    தேவர்களும் ருதமும்:
    எல்லாத் தேவர்களும் ருதத்திலிருந்து தோன்றியவர்களாகக் கூறப்படுகிறார்கள். அவர்கள் ருதத்தை அறிந்தவர்களாகவும் ருதத்தைப் பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர். அவர்கள் ருதத்தின் நண்பர்கள், ருதத்தைக் காப்பாற்றுகின்றனர், ஒரு தேரோட்டி போல வழி நடத்திச் செல்கின்றனர், ருதத்தைப் புகழ்கிறார்கள், வணங்குகிறார்கள், மக்கள் ருத வழி நடக்கத் தூண்டுகிறார்கள், அவர்களது பாதையைச் செம்மைப்படுத்தித் தருகிறார்கள். அவர்கள் ருதத்தின் ஆறுகளாகக் கூறப்படுகின்றனர். இந்திரன் வேத தெய்வங்களுக்குள் மிகுந்த வலிமை உடையவராக, பல அருஞ் செயல்களைச் செய்தவராகப் போற்றப் பட்டாலும் அவர் அச்செயல்களை ருதத்தின் உதவியால்தான் செய்ய முடிந்தது என்கிறது வேதம்.

    ருதத்தின் எண்ணங்களைக் கொண்டும் ருதக் குதிரைகளைக் கொண்டும் இந்திரன் பிளக்க முடியாத மலைகளைப் பிளந்தார். (6.39.2)

    ருதத்தின் ஆணைகள் இந்திரனை வலுப்படுத்துகின்றன.(6.68.2)

    எல்லாத் தேவர்களும் ருதத்தைப் பாதுகாத்தாலும் வருணன், மித்ரன், அர்யமான் ஆகிய மூவருக்கும் இதில் சிறப்பான இடம் கூறப்பட்டிருக்கிறது. அதிலும் வருணன் மிகச் சிறப்பான இடம் பெறுகிறார். இம்மூவரும் ருதத்தின் சிறப்பான காவலர்கள். இவர்கள் ருதத்தை நிலைநாட்டி அதைக் கவனமாகக் கண்காணிக்கிறார்கள்.

    ருதத்தை மீறியவர்-களைத் தண்டிக்கிறார்கள். மித்ரா வருணா, அன்ருதத்தை வென்று எங்களை ருதத்தோடு இணைத்து வைப்பீராக. (1,152.1)

    மித்ர வருண அர்யமான்கள் ருதத்தை நிலை நாட்டிக் கண்காணிப்பவர்கள் என்றாலும் அவர்களும் ருதத்திற்கு மேம்பட்டவர்கள் அல்லர். அவர்கள் ருதத்தில் தோன்றியவர்கள். அவர்களது வலிமைக்கு ருதமே காரணம் என்பதும் சொல்லப் பட்டிருக்கிறது.

    மித்ர, வருண, அர்யமான்கள் அன்ருதத்தைக் கண்டுபிடித்து ருதத்தின் இருப்பிடத்தில் வலிமையாக வளர்கிறார்கள். (7.60.5)

    வருணன் சூரியனுக்கு ஒரு பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அவர் கடலை நோக்கிச் செல்லும் ஆறுகளின் அலைகளை உண்டாக்கினார். ருதத்தை அனுசரித்து அவர் இரவையும் பகலையும் பிரித்து வைத்தார். (7.87.1)

    வருணன் விண்ணில் பறக்கும் பறவைகளின் பாதைகளை அறிந்துள்ளார்(1.25.7) என்று கூறப்படுவதிலிருந்து இயற்கையின் ஒவ்வொரு அசைவும் ருதப்படியே, வருணனின் ஆணைப்படியே நடக்கிறது என்பதை அறிகிறோம். அதனால்தான் இன்றும் எல்லா வைதிகச் சடங்குகளிலும் வருணனைத் தியானிக்கிறோம்.

    த்ருவம் தே ராஜா வருணோ த்ருவம் தேவோ ப்ருஹஸ்பதி: த்ருவம் ச இந்த்ரச்ச அக்னிச்ச ராஜ்யம் தாரயதாம் த்ருவம் என்ற மந்திரம் வருணன் முற்காலத்தில் பெற்றிருந்த தேவர்களின் ராஜா என்ற பெருமையின் நினைவுச் சின்னமாக இன்றும் ஒவ்வொரு வைதிகச் சடங்கிலும் முதலில் ஓதப்படுகிறது.

    ருதமும் முழுமுதல் கடவுளும்:
    ருதத்தை அமல் நடத்துகின்ற வருணனைப் படைத்ததே ருதம்தான் என்று கூறப்பட்டிருப்பதால் அது முழு முதல் கடவுளுக்கு நிகரானதாக மதிக்கப்பட்டது என்று அறிகிறோம். படைப்பின் துவக்கத்தில் கடவுளையும் ஸ்வதாவையும் தவிர வேறு ஒன்றும் இல்லை. (10,129.5)

     

     

     

    Picture Credits:
    http://www.herbalsafari.com/2011/09/ayurveda-yoga-perspective.html

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 40

    –சு. கோதண்டராமன்

    மனிதனும் ருதமும்

    amrita rig veda
    மனிதர்கள் ருதத்தை அனுசரித்து நடக்க வேண்டும். அப்படி நடந்தால் கிடைப்பது அம்ருதம். எல்லாத் தேவர்களும் காப்பாற்றுவார்கள். ருதத்தை மீறினால், அதாவது அன்ருதத்தைக் கைக்கொண்டால், வருணன் தண்டிப்பார் என்கிறது வேதம்.

    ருத வழி நடக்க எளிது.(8.31.13)
    ருதத்தைக் காப்பாற்றுபவனை அக்னி காப்பாற்றுகிறார். (6.3.1, 6.7.1)
    இந்திர வருணர்களைப் பூசிப்பவன், தானம் கொடுப்பவனாகவும், ருதத்தை அனுசரிக்கிறவனாகவும், எதிரிகளை வெல்பவனாகவும், செல்வம் பெறுபவனாகவும் இருக்கிறான். (6.68.5)

    மனிதருக்கென்று தனி ருதம் உண்டா? உண்டு. சென்ற கட்டுரையில் சொன்ன மூன்று உதாரணங்களை ஆழ்ந்து கவனித்தால் தெரியவரும்.
    ஆற்றைப் போலத் தன்னிடமுள்ள செல்வத்தை வாரி வழங்குவது, சூரியனைப் போல இடையறாது செயல்படுவது, பசுவைப் போலத் தன்னைச் சார்ந்தாரைக் காப்பது, மூன்றையும் போலப் பிறர்க்குப் பயன்படுபவனாக இருப்பது இவை தாம் மனிதனின் விரதம், தர்மம், ஸ்வதா, ருதம்.

    1. மனிதன் தன் செல்வத்தை வாரி வழங்க வேண்டும்:

    வேதத்தில் பல இடங்களில் தாசுஸ் என்ற சொல் காணப்படுகிறது. கொடுப்பவன் என்று பொருள். தாசுஸுக்குச் செல்வம், மக்கட் பேறு, புகழ், உணவு முதலியன கொடுங்கள் என்று தேவர்கள் வேண்டப்படுகிறார்கள். அதாசுஸ் (கொடுக்காதவன்) அழிய வேண்டும் என்று வேண்டுகிறார்கள்.

    2. எப்பொழுதும் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்:

    தேவர்கள் அளிக்கும் செல்வத்தை மனிதன் உழைப்பு என்னும் வருத்தத்தை அளிக்கும் வழியினாலேயே அடைகிறான்.(8.47.6)
    தேவர்கள் எப்பொழுதும் கடுமையாக உழைப்போருக்கு நண்பர்களாக இருப்பர். (4.33.11)

    3. தன்னைச் சார்ந்து வாழும், தாழ்ந்த நிலையில் இருப்போரைக் காக்க வேண்டும்:

    சார்ந்து வாழ்வது மனிதனின் நியதி. பட்சிகள் மிருகங்கள் எல்லாம் சிறிது காலத்துக்குத் தாயைச் சார்ந்து வாழ்கின்றன. அதன்பின் தன் காலில் நிற்கப் பழகிக் கொள்கின்றன. பின் கடைசி மூச்சு வரை அவை சுதந்திரமாகவே இருக்கின்றன. மனிதன் குழந்தைப் பருவத்தில் பெற்றவரைச் சார்ந்து வாழ்கிறான். படிப்படியாக அந்த நிலையிலிருந்து விடுபடுகிறான். பின்னர் சமுதாயத்தில் மற்ற மக்களைச் சார்ந்து வாழவேண்டி இருக்கிறது.

    வேதம் கூறுகிறது, மனிதன் செல்வத்தைப் பற்றிச் சிந்திக்கட்டும். ருதத்தின் பாதையில் தெய்வங்களைப் பக்தி மரியாதையுடன் வணங்கட்டும். அவன் தன் அறிவைக் கொண்டு சிறந்ததைப் பேசட்டும். அவன் வலிமையுள்ளோரைச் சார்ந்து வாழட்டும். (10.31.2)
    ஏழைகளுக்கு உணவு அளிப்பவன் வள்ளல். அவன் போரில் வெல்கிறான். பகைவர்களும் அவனுக்கு நண்பர்கள் ஆவர். (10.117.3)
    உணவு நாடி வந்த நண்பனுக்கு உணவு அளிக்காதவன் நண்பனே அல்ல. (10.117.4)
    பணக்காரன் ஏழை யாசகனைத் திருப்தி செய்விக்க வேண்டும். (10.117.5)

    ஆனால் சில மனிதர்கள் அறியாமையால் சில சமயங்களில் விரதத்தை மீறிவிடுகிறார்கள். எனவே தவறுகளை மன்னித்துப் பாவங்களிலிருந்து விடுவிக்கும்-படியான பிரார்த்தனைகள் காணப்படுகின்றன.

    வருணனின் தர்மத்தை மீறியதற்காக நம்மை அவர் தண்டிக்காது இருக்கட்டும். (7,89.5)
    தவறு இழைத்து அறியாமையால் நாங்கள் தேவர்களின் விரதங்களை மீறும்போது அக்னி எங்கள் பிழைகளைத் திருத்தி தேவர்களை உரிய முறையில் மகிழ்விக்க உதவுகிறார். (10,2.4)
    யார் வேண்டுமென்றே விரதங்களை மீறுகிறார்களோ, அதற்காக வருந்துவது இல்லையோ அவர்களை தேவர்கள் அழிக்கிறார்கள். (1.130.8)

     

     

     

     

     
    Graphics courtesy: http://tutudutta.blogspot.com/2012/11/the-devas-and-asuras.html

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 38

    சு. கோதண்டராமன்

    ருதம் என்பது என்ன?

    மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொற்களில் மூன்றாவதான ‘ருதம்’ என்ற சொல், ரிக் வேதத்தில் 600 தடவைகளுக்கு மேல் வருகிறது.
    அகராதியில் ஸத்யம், ருதம் என்ற இந்த இரண்டு சொற்களுக்கும் உண்மை என்றே பொருள் சொல்லப்படுகிறது. ஸத்யமும் ருதமும் ஒன்றா என்றால் இல்லை.

    பரிஷேசன மந்திரம் “ஸத்யமே, உன்னை ருதத்தால் நனைக்கிறேன்” என்கிறது. வேத இலக்கியத்தில் ருதம் வரும் இடங்களில் எல்லாம் ஸத்யமும் கூடவே வருகிறது.

    ருதம் வதிஷ்யாமி, ஸத்யம் வதிஷ்யாமி
    ருதம் அவாதிஷம், ஸத்யம் அவாதிஷம்
    ருதம் ஸத்யம் பரம் ப்ரம்ம

    ருதத்தை அனுசரித்து, அங்கிரஸ்கள் ஸத்யத்தை அடைந்தனர். (5.45.7)
    மருத்துகள் ருதம் வழியாக ஸத்யத்தை அடைகின்றனர். (7.56.12)
    கடும் தவத்தின் விளைவாக ருதமும் ஸத்யமும் தோன்றின. (10.190.1)
    மேற் கண்ட மந்திரங்களிலிருந்தும் ருதமும் ஸத்யமும் வேறு வேறு

    பொருள் கொண்டவை என்பதும் அவை ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்ட இரட்டைகள் என்பதும் தெரிகிறது.
    ருதம் என்பதன் அடிப்படைப் பொருள் இயற்கை நியதி என்பது. அதைத் தெரிந்து கொள்ள அச் சொல் பயன்படும் எல்லா இடங்களையும் தொகுத்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்ததால் கிடைத்த முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

    ரிஷிகளுக்கு வியப்பை ஊட்டிய மூன்று விஷயங்கள் ருதம் என்ற சொல்லோடு தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன.

    ஆறுகள்

    ஆறுகள் ஆண்டாண்டு காலமாக இடைவிடாமல் குறிப்பிட்ட திசையிலேயே ஓடிக் கொண்டிருக்கின்றன. அவை ஒரு போதும் திசை மாறி, அதாவது கீழிருந்து மேலாக, ஓடுவதில்லை. தன்னிடமுள்ள நீரைக் கடலில் சேர்ப்பதால் அவை வற்றுவதில்லை. எவ்வளவு நீர் வந்தாலும் கடல் நிரம்புவதில்லை. அது தன் நீரை ஆவியாக்கிக் கொடுத்து விடுகிறது. ஆவியாவதால் கடல் வற்றுவது இல்லை. புதிய புதிய மேகங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மேகங்கள் தன்னிடமுள்ள நீரைப் பொழிந்து கொண்டிருக்கின்றன.

    இது ருதத்தின் வேலை என்று ரிஷிகள் நினைக்கிறார்கள். அதனால் ஆறுகளை ருதாவரி என்று அழைக்கிறார்கள். ஆறுகள் கொண்டு வரும் நீரையும் அதற்குக் காரணமான மழையையும் மேகத்தையும் ருதம் என்றே அழைக்கின்றனர்.

    ஆறுகள் தங்கள் வெள்ளப் பெருக்கில் ருதத்தைக் கொண்டு வருகின்றன. (1.105.12)

    “மேகம் எப்பொழுதும் தாவரங்களுக்கு நீர் தந்து கொண்டிருக்கிறது. அதனிடத்தில் அசையும் பொருள் அசையாப் பொருள் எல்லாவற்றின் உயிரும் இருக்கிறது. அதுதான் ருதம். (7.101.6)

    ருதத்தின் காரணமாக தெய்விக ஆறுகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. (4,3.12)

    சவிதாவிற்காகவோ இந்திரனுக்காகவோ ஆறுகள் நிற்பதில்லை. அவை ஓடத் தொடங்கி எவ்வளவு காலம் ஆகியிருக்கும்?(2.30.1)

    ஆறுகள் வருணனின் ருதத்தால் ஓடுகின்றன. அவை நிற்பதில்லை, ஓய்வெடுப்பதில்லை. (2.28.4)

    ஆறுகள் எவ்வளவு வெள்ளம் கொண்டு வந்தாலும் கடல் நிரம்புவதில்லை. அதற்குக் காரணமான சிறந்த அறிவுடைய அந்தத் தேவனின் மாயா சக்தியை ஒருவரும் தடுக்க முடிந்ததில்லை. (5.85.6)

    இடையறாத இயக்கமும், அதில் காணப்படும் ஒழுங்கு முறையும், தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும் தன்மையும் ருதத்தின் பண்புகள் ஆகும்.

    சூரியன்

    விண் வெளியில் சூரியன் இடைவிடாமல் இயங்கி இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்துக்கு முன் உஷை தோன்றி உயிரினங்களைச் செயல்படத் தூண்டுகிறாள். நம்முடைய முன்னோர் பலர் இதைப் பார்த்துச் சென்று விட்டனர். நம்முடைய சந்ததியினர் பலர் இதைக் காணப் போகிறார்கள். ஆதி அந்தம் இல்லாத, இடையறாத இந்த சூரிய உதயம் ரிஷிகளுக்கு ருதத்தின் அடையாளமாகத் தோன்றுகிறது. அதனால் சில சமயங்களில் சூரியனை ருதம் என்ற பெயரால் குறிப்பிடுகின்றனர். உஷஸ் ருதாவரீ (ருதத்தோடு கூடியவள்) எனப்படுகிறாள்.

    கீழ்க்கண்ட மந்திரங்களைக் கவனியுங்கள்.

    ருதத்தால் பூட்டப்பட்ட குதிரைகளைக் கொண்டு உஷஸ் உலகம் முழுவதும் உறங்கும் மக்களை, பறவைகளை, மிருகங்களைத் துயிலெழுப்பிக் கொண்டு பயணிக்கிறாள். (4.51.5)

    கிழக்கே உஷஸ் தோன்றுகிறாள். அவள் ருதத்தின் பாதையைப் பின்பற்றுகிறாள். அவள் ஒரு போதும் தவறுவதில்லை. (1.124.3)

    உலகம் தோன்றிய நாள் பற்றி உஷஸ் அறிவாள். அவள் ருதத்தை மீறுவதில்லை. நாள் தோறும் குறித்த இடத்துக்கு வந்து விடுகிறாள்.(1.123.9)

    ருதத்தின் பாதை கிரணங்களால் அமைக்கப்பட்டுள்ளது. (1.136.2)

    வருணன் சூரியனுக்கு ஒரு பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அவர் கடலை நோக்கிச் செல்லும் ஆறுகளின் அலைகளை உண்டாக்கினார். ருதத்தை அனுசரித்து அவர் இரவையும் பகலையும் பிரித்து வைத்தார்.(7.87.1)

    ருதத்தின் அடிப்படையில் உஷையை முன் தள்ளிக் கொண்டு விண்ணிலும் மண்ணிலும் சூரியன் தோன்றினார். மித்திர வருணர்களின் அற்புதச் செயலை அவர் நிறைவேற்றினார். (3.61.7)

    ருதத்திலிருந்து தோன்றியது ருது. பருவ காலங்கள் குறித்த நியதிப்படி ஆண்டு தோறும் வந்து செல்வதால் அவை ருது எனப்படுகின்றன.
    இடையறாத இயக்கமும் அதில் காணப்படும் சீர்மையும் ருதத்தின் பண்பு என்பதை இதுவும் உறுதிப்படுத்துகிறது.

    பசுக்கள்

    ரிஷிகள் கவனித்து வியந்த மூன்றாவது விஷயம் – பசுங் கன்று மாடாக வளர்ந்து இனிய பாலைக் கொடுப்பது. அது வரையில் இல்லாதிருந்த பால் கன்று ஈன்றதும் சுரப்பது அதிசயம். மாடு எந்த நிறத்தில் இருந்தாலும் பால் மட்டும் வெள்ளையாகவே உள்ளது மற்றொரு அதிசயம் என வியக்கிறார்கள்.

    கன்றாக இருந்தது பால் கொடுக்கத் துவங்குகிறது. மாடு கறுப்பாக இருந்தாலும் அதன் பால் வெள்ளையாக இருக்கிறது. ருதத்தால் நிர்ணயிக்கப்பட்ட இந்த ருதத்தைப் போற்றுகிறேன். (4.3.9)

    தன்னைச் சார்ந்து வாழும் கன்றுக்கு உணவளிக்கும் உந்துதலும் அதற்குரிய வசதிகளும் தானாகவே பசுவுக்கு ஏற்படுகின்றன.
    பசு என்பது ஒரு உதாரணம்தான். உண்மையில் எல்லாப் பிராணிகளுக்கும் மனிதருக்கும் இத் தன்மை பொருந்தும்.
    எனவே ருதம் என்பது இடையறாத தொடர்ச்சி, சுழற்சி, வளர்ச்சி, ஒழுங்கு முறை, தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும் இயல்பு, சார்ந்தாரைக் காத்தல் ஆகியவை கொண்ட இயற்கை நியதியைக் குறிப்பது அறியப்படுகிறது.

    ருதத்தின் தாய்மார்கள்

    பூமியும் ஆகாயமும் ருதத்தின் தாய்மார்களாகக் கூறப்படுகின்றனர். அவ்வாறே இரவும் பகலும் ருதத்தின் தாய்மார்களாகக் கூறப்படுகின்றனர். இரண்டு தாய்கள் என்பதே பொருந்தாக் கூற்று. இரண்டு ஜோடித் தாய்மார்கள் என்பது முரண்பாடு போல் தோன்றுகிறது அல்லவா?

    வேத மொழி நடையின் தனிச் சிறப்பை நாம் அறிவோம். தாய் என்று சொன்னால் அதை அப்படியே நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. ருதம் என்னும் கருத்துருவை ரிஷிகளுக்குத் தந்தவை விண்ணும் மண்ணும். அதே போல இரவும் பகலும் உதவியிருக்கின்றன. விண்ணையும் மண்ணையும் உற்று நோக்கி அதில் காணப்படும் ஒழுங்கு முறையைக் கவனித்து ருதம் என்னும் கருத்துருவைப் பெற்றனர் அவர்கள். அதே போல இரவும் பகலும் மாறி மாறி வருவதில் நிலவும் சீர்மை அவர்களுக்கு இதில் ஒரு இயற்கை நியதி உள்ளது என்பதைப் புரிய வைத்தது.

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 36

    சு.கோதண்டராமன்.

    முரண்பாடான கருத்துகள்

     

    Five_great_Yagnas

     

    சென்ற பகுதிகளில் யக்ஞம் பற்றிக் கூறப்பட்டவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம்.

    தேவர்களைக் குறித்து அக்னியில் ஆகுதி செய்வது தான் யக்ஞம். இதனால் தேவர்கள் மகிழ்கிறார்கள். இது உணவு, சந்ததி, ஆயுள் முதலான எல்லா நலன்களையும் தரும். இதுவே உலகின் மையப்புள்ளி. யக்ஞம் செய்யாதவர்கள் அழிகிறார்கள் என்று சொல்லப்பட்டது.

    ஆகுதி மட்டுமே யக்ஞம் ஆகாது. பிரார்த்தனை இல்லாமல் யக்ஞம் பயனில்லை. ஆனால் யக்ஞம் இல்லாமல் பிரார்த்தனை மட்டுமே பலன் தரும் என்ற கூறப்படுவதைப் பார்த்தோம்.

    இதற்கு மாறாக, வெறும் தோத்திரங்கள் பலன் தரா, ஹவிஸும் அவசியம் என்றும் கூறுகிறது வேதம். (8.9.6)

    யக்ஞம் செய்தால் மட்டும் போதாது, கடுமையாக உழைக்கவும் வேண்டும். பிறர் நலனுக்காகச் செய்யப்படும் அருஞ்செயலான சமீகள் யக்ஞத்தை விட மேலானவை. யக்ஞம் செய்யாதவருக்கும், சமீகள் தேவ பதவியைக்கூடப் பெற்றுத் தரும் என்று சொல்லப்பட்டிருப்பதையும் பார்த்தோம்.

    இப்படி ஒன்றுக்கொன்று முரணான செய்திகள் காணப்படுவதால் குழப்பமே ஏற்படும். வேதத்தில் ஏன் இப்படிக் குழப்பம்? அதனுடைய உண்மையான நிலை என்ன? தீ மூட்டி வழிபாடு செய்வதா, வேண்டாமா? ஆராய்வோம்.

    வேதத்தில் இருவகையான எண்ண ஓட்டங்கள் காணப்படுவது உண்மை. சடங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மந்திரங்களும் உள்ளன. சடங்கை விட பக்தி மனோபாவம், உழைப்பு இவைதான் முக்கியம் என்று கூறும் மந்திரங்களும் உள்ளன.

    வெவ்வேறு ரிஷிகள் வெவ்வேறு விதமாகப் பேசினால் இது அந்தந்த ரிஷியின் கருத்து என்று விட்டுவிடலாம். ஒரே ரிஷியின் பெயரால் வழங்கும் சூக்தத்திலேயே இருவகைக் கருத்துகளும் வரும்போது அதற்குக் காரணம் என்ன என்று ஆராயத் தோன்றுகிறது.

    வேதம் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு ரிஷிகளால் இயற்றப்பட்டது, வியாசரால் தொகுக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்.

    வேத இலக்கியத்தின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். ரிக் வேதத்திலும் அதன் ஆறாவது மண்டலம் மிகப் பழமையானது. இந்த ஆறாவது மண்டலம் இயற்றப்படுவதற்கு முன்பும் மக்கள் இருந்தார்கள். நாகரிகம் இருந்தது. மொழி இருந்தது. அதற்கு ஒரு இலக்கணம் இருந்தது. இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். யாப்பிலக்கணமும் இருந்தது. சந்தஸ்கள் வரையறுக்கப்பட்டிருந்தன.

    இவ்வளவு வளர்ச்சி பெற்ற மக்களிடம் கடவுள் பற்றிய ஏதோ ஒரு கோட்பாடும் இருந்திருக்க வேண்டும். அக்னியையும் இந்திரனையும் வேத ரிஷிகள் புதிதாகக் கண்டு பிடித்துச் சொல்லவில்லை. முன்பே அந்தத் தேவர்களும் இருந்தார்கள், அவர்களுக்கான ஏதோ ஒரு வழிபாட்டு முறையும் இருந்திருக்கிறது.

    வேத ரிஷிகள் இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறார்கள். ரிஷிகளின் வாக்கில் “நாம் ஒரு புதிய பிரார்த்தனை படைப்போம்” என்ற கருத்து அடிக்கடி காணப்படுகிறது. (6.17.13, 6.18.15) அப்படிப் புதிய பிரார்த்தனை புதிய கருத்துகளுடன் படைக்கும்போது அவர்கள் பழைய கருத்துகளுடன் மோதவில்லை, தவறு என்று ஒதுக்கவில்லை. நான் சொல்வது மட்டுமே உண்மை என்று கூறாமல், ஒரே உண்மையைப் பலர் பலவிதமாகக் காண முடியும் என்பதை ஏற்றுக் கொண்டு பழைய கருத்துகளையும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறார்கள்.

    ஒரே மந்திரம் வெவ்வேறு ரிஷிகளின் பெயரால் வழங்கப்படுகிறது. (உ-ம் 1.23.20 – 10.72.2) இதிலிருந்து பழைய ரிஷிகளின் மந்திரங்கள் பிற்காலத்தவரால் தங்கள் புதிய படைப்புகளுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்று நாம் அறிகிறோம்.

    ஒன்று உள்ளது. அதைப் பலரும் பல விதமாகப் போற்றுகிறார்கள் என்பது அவர்கள் கொள்கை. (1.164.46) எனவே பழைய கருத்துகளை அலட்சியம் செய்யாமல் அதையும் சேர்த்துக் கொண்டு புதியதும் படைக்கிறார்கள். இதுதான் இந்த இரு வகையான வேறுபட்ட எண்ண ஓட்டங்களுக்குக் காரணம்.

    தீ மூட்டி வழிபடுவது பழைய வழக்கமாக இருக்கக் கூடும். புதிய ரிஷிகள் அதைக் கண்டிக்கவில்லை. அத்துடன் கூடத் தங்கள் கருத்துகளையும் சொல்கிறார்கள். யக்ஞத்தை விட சமீ மேலானது, யக்ஞம் மட்டும் போதாது, உழைக்கவும் வேண்டும், ஆகுதி மட்டுமே யக்ஞத்தை முழுமை ஆக்காது, பிரார்த்தனையும் நமஸ்காரமும் புத்தியும் அவசியம் என்று வருபவை தாம் அந்தப் புதிய கருத்துகள்.

    புதிய கருத்துகளைத் தனி அத்தியாயமாகப் பிரித்து வைக்காமல் ஒரே சூக்தத்திலேயே முந்திய ரிஷிகள் செய்த பழைய பாடல்களையும் போற்றுகிறார்கள், புதிய கருத்துகளையும் சொல்கிறார்கள். பிறருடன் முரண்படாமல் தன் கருத்தைக் கூறும் இந்த முறை ரிக் வேதத்தின் சிறப்பு.

    இதை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா? எப்பொழுதும் எந்தப் புதிய கருத்துக்கும் வரவேற்பு இருப்பதும் எதிர்ப்பு இருப்பதும் இயற்கை. அது போல, ரிக் வேத ரிஷிகளின் இந்தப் புதுமைகளைச் சிலர் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும். சிலர் புறக்கணித்துப் பழைய முறைகளையே அனுசரித்து இருக்கக் கூடும். அவரவர் இஷ்டம் போல் வழிபடலாம் என்ற சுதந்திரம் இருந்ததால் இந்த இரு சாராரிடையே பிணக்குகள் பிளவுகள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் அதே வேதத்தைப் பின்பற்றி வந்தனர்.

    நாளடைவில் பழைய சடங்குக் கட்சியினரின் கை ஓங்கியிருக்க வேண்டும். அவர்கள் ரிக் வேத மந்திரங்களில் பலவற்றை வேள்விக்குப் பயன்படும் வகையில் ஆங்காங்கு மாற்றிக் கொண்டனர். அதில் வேள்வியை வலியுறுத்தும் பல புதிய மந்திரங்களையும் சேர்த்துக் கொண்டனர். தங்கள் சந்ததியினருக்கு அதை மட்டுமே சொல்லிக் கொடுத்தனர். இந்தப் புதிய தொகுப்பு யஜுர் வேதம் (வேள்விக்கான வேதம்) என்று பெயரிடப்பட்டது.

    யஜுர்வேதத்தில் பிரார்த்தனையை விட, மனோபாவத்தை விட அக்னியில் செய்யப்படும் ஆகுதிச் சடங்குக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. யாக குண்டம் எப்படி அமைய வேண்டும், எத்தனை செங்கற்கள் அடுக்கப்பட வேண்டும், ஹவிஸ்ஸாக என்னென்ன பொருள் சமர்ப்பிக்கப்பட வேண்டும், அப்பொழுது என்ன மந்திரம் சொல்லப்பட வேண்டும் என்பது பற்றிய தகவல்களே மிகுதியாகக் கொண்டது யஜுர்வேதம். பிராமண இலக்கியங்களில் இது மேலும் விரிவடைந்தது. இவை வேத மந்திரங்களின் பொருளை யாகத்திற்குப் பயன்படும் வகையில் விளக்கின.

    யாகங்கள் மிகுதியாகப் பெருகியதால் இவை சாமானிய மக்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக ஆயின. அந்நிலையில் தான் யாக முறைகளைக் கண்டிக்கும் புத்த சமண சமயங்கள் தோன்றின. யாகங்களுக்குப் புதிய தத்துவ விளக்கம் தந்து அவற்றை மறைமுகமாக எதிர்க்கும் உபநிடதங்கள் தோன்றின.

    இந்திரனைத் துதிக்கும்போது நீயே முதல் தெய்வம் என்று கூறுவதும் அவ்வாறே அக்னியைப் போற்றும்போது நீயே பரம்பொருள் என்று பேசுவதும் முரண்பாடு போல நமக்குத் தோன்றும். ஆனால் அவை முரண்பாடு அல்ல, எப்பெயரிட்டு அழைத்தாலும் தெய்வம் ஒன்று என்பதன் அடிப்படையில் சொல்லப்பட்டது என்பதை முன்பு பார்த்தோம்.

    அதே போல யக்ஞம் செய்து வழிபடுவதும் யக்ஞம் செய்யாமல் வழிபடுவதும் இரண்டுமே ஒன்றுதான். வழிபாடு தான் முக்கியமே தவிர, முறை முக்கியம் அல்ல என்பதே வேதத்தின் கருத்து.

     

     

     

    படம் உதவி: விக்கிபீடியா

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 35

    சு.கோதண்டராமன்.

     

    யக்ஞத்தை விடமேலான வழிகள்

    http://www.dreamstime.com/-image1626895

    யக்ஞத்தை விட பிரார்த்தனை சிறந்தது:
    மருத்துகள் பக்தர்களின் வழிபாட்டை யக்ஞத்துடனோ அல்லது பிரார்த்தனைகளுடனோ ஏற்றுக் கொள்கிறார்கள் (1.86.2) என்று சொல்லப் படுவதிலிருந்து யக்ஞம் இல்லாமல் வெறும் பிரார்த்தனை மந்திரங்கள் மட்டுமே கொண்டு வழிபடுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்று அறிய முடிகிறது. பிரார்த்தனை இல்லாமல் யக்ஞம் பயனில்லை. அதே நேரத்தில் யக்ஞம் இல்லாமல் பிரார்த்தனை மட்டுமே பலன் தருவது என்பதால் யக்ஞம் என்பது வெளிப்புறச் சடங்கு மட்டுமே என்பதும் அதை விடப் பிரார்த்தனையே அதிகப் பலன் தருவது என்பதும் தெரிய வருகிறது.

    அதே கருத்து வேறு வகையாகவும் சொல்லப்படுகிறது – இந்திரனை யக்ஞங்களால் மனிதர்கள் அறிவதில்லை. அவர்கள் ஸ்தோமங்களால் அறிகிறார்கள் (1.131.2).

    உழைப்பின் முக்கியத்துவம்:
    யக்ஞமும் செய்து கடுமையாக உழைக்கவும் செய்பவனுக்கு தேவர்கள் அருள் புரிகிறார்கள் (1.142.2, 4.23.2, 6.3.2).

    தேவர்கள் எப்பொழுதும் கடுமையாக உழைப்போருக்கு நண்பர்களாக இருப்பர் (4.33.11) என்று கூறும் வேதம் வேள்வியோடு கூட முயற்சியும் தேவை என்பதை வலியுறுத்துகிறது.

    யக்ஞத்தை விட சமீ மேலானது:
    ரிபு சகோதரர்களைப் பற்றி முன்னர் பார்த்ததை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம். அவர்கள் ஒரு மண் கிண்ணத்தை நான்காக மாற்றினர். தங்கள் பெற்றோர்களை இளமையாக்கினர். எலும்பும் தோலுமாக இருந்த ஒரு பசு மாட்டை உயிர்ப்பித்தனர். இந்திரனுடைய ரதத்திற்காக, வாய்ச் சொல்லைப் புரிந்து கொண்டு செயல்படவல்ல இரு குதிரைகளை உருவாக்கினர். அச்வின்களுக்காக மூன்று சக்கரம் உடைய, எளிதில் இயங்க வல்ல ஒரு ரதத்தை உருவாக்கினர்.

    அவர்களுடைய செயல்கள் தீ வழிபாடு என்ற பெயருக்கு உரியவை அல்ல. வேதத்தில் அவை சமீ என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. தமிழில் அருஞ் சாதனை என்று கூறலாம்.

    யக்ஞத்தினால் ஏற்படக்கூடிய பலன்களை ரிபுக்கள் சமீ மூலமாக அடைந்தார்கள் என்கிறது வேதம் (1.20.2).

    ஆழ்ந்து ஆராய்ந்தால் யக்ஞத்தை விட சமீ மேம்பட்ட பலனைத் தருவது என்பதை அறிய முடியும். யக்ஞம் மனிதனை ரிஷி நிலைக்குத் தான் உயர்த்தும். சமீயோ மனிதனைத் தேவநிலைக்கு உயர்த்தும். ஆம், ரிபுக்கள் தேவர்களுக்குச் சமமாக ஹவிர்பாகம் பெறும் உரிமையும் அமரத்வமும் பெற்றனர்.

    வணங்கினாலோ, சமீ செய்தாலோ, அல்லது மகம் (யாகம்) செய்தாலோ அக்னி அவருக்கு வளங்களை அளிக்கிறார் (8.75.14) என்று சொல்லப்படுவதிலிருந்து சமீயும், வணக்கமும் யாகத்தைப் போலவே பலன் தருபவை என்பது பெறப்படுகிறது.

    இந்திரனுக்கே ஆகாயத்தைத் தூக்கி நிறுத்தியது போன்ற பல அருஞ் செயல்கள் செய்ததனால்தான் இந்திர பதவி கிடைத்தது என்கிறது ரிக் வேதம் (8.89.5, 8.89.6).

    இவற்றிலிருந்து வேதம் யக்ஞத்தை மட்டுமே உயர்வாகப் பேசவில்லை, பிரார்த்தனைக்கும் உழைப்புக்கும் சமமான முக்கியத்துவம் தருகிறது என்பதை அறிகிறோம்.

    படம் உதவி: http://www.dreamstime.com/royalty-free-stock-photo-gold-statue-indian-woman-praying-hands-image1626895

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 34

    சு.கோதண்டராமன்.

     

    யக்ஞம் – உலகின் மையப் புள்ளி

    yajna

     

     

    தேவ என்ற சொல்லுக்கு அடுத்தபடியாக ரிக் வேதத்தில் மிகுதியாகத் தென்படும் வார்த்தை யக்ஞம் என்பதாகும். வழிபடுதல் என்ற பொருள் உடைய யஜ் என்ற தாதுவிலிருந்து தோன்றியது இது. யஜ் என்ற வினைச் சொல்லும் அதனிடத்தில் தோன்றிய யக்ஞம், யஜமான, யஜிஷ்ட, யக்ஞிய, யஜத்ர முதலான சொற்களும் ஆயிரம் தடவைகளுக்கு மேல் ரிக் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    யக்ஞம் என்றால் என்ன?
    யக்ஞம் என்ற சொல்லுக்கு வழிபாடு என்பது பொருள். யாகசாலையில் அக்னியை மூட்டி சமித்தையும் நெய்யையும் இட்டு ஸ்வாஹா முதலான மந்திரங்களுடன் செய்யப்படும் வழிபாடு யக்ஞம் என்பதாக வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. யக்ஞத்தில் முதலில் அக்னி அழைக்கப்பட்டு தோத்திரங்களால் மகிழ்விக்கப்படுகிறார். ஹவிஸ் என்று அழைக்கப்படும் ஒரு உணவு அக்னியில் இடப்படுகிறது. அதைத் தேவர்களிடம் சேர்ப்பிக்கும்படி அவர் வேண்டிக் கொள்ளப்படுகிறார். ஹவிஸை எடுத்துக் கொண்டு அக்னி தேவலோகத்துக்குச் சென்று தேவர்களிடம் தந்து அவர்களைப் பூமிக்கு வருமாறு அழைக்கிறார். அதனால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் பூமிக்கு வருகிறார்கள். விதத என்று அழைக்கப்படும் யாக சாலையில் பர்ஹிஸ் எனப்படும் தர்ப்பாசனத்தின் மீது அமர்ந்து, அங்கு அளிக்கப்படும் சோம பானத்தைக் குடிக்கிறார்கள். மேலும் மகிழ்ச்சி அடைந்த அவர்கள் பக்தர்களுக்குப் பல வகை வரங்களைத் தருகிறார்கள். இவ்வாறு அக்னி தேவலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இடையில் தூதராகப் பணிபுரிவதாக வேதம் கூறுகிறது. ஹவிஸ் என்பது பொதுவாக, பக்குவப்படுத்தப்பட்ட தானியங்களைக் கொண்டதாகவும், சில சமயங்களில் மிருகங்களைக் கொண்டதாகவும் இருப்பது தெரிய வருகிறது.
    யக்ஞம் வேத காலத்து வழிபாட்டு முறை. கோயில், சிலைகள், பூவினால் அர்ச்சனை செய்தல், அபிஷேகம், பிரதட்சிணம், ஹாரத்தி முதலான வேறு வகையான வழிபாட்டு முறைகள் ரிக் வேதத்தில் சொல்லப்படவில்லை.

    யக்ஞத்தில் அக்னிக்குச் சிறப்பிடம்:
    எல்லாத் தேவர்களுக்கும் அக்னி மூலமாகத்தான் ஹவிஸ் போய்ச் சேருகிறது. எனவே யக்ஞத்தில் அக்னிக்கு ஒரு சிறப்பிடமும் அதன் காரணமாகச் சில சிறப்புப் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
    யக்ஞத்தின் கேது (அடையாளம்),
    யக்ஞத்தின் தேவன்,
    யக்ஞபந்து,
    யக்ஞ பிதா, யக்ஞ ப்ராவிதா- அபிசஸ்தி பாவா (காப்பாற்றுபவர்)
    யக்ஞநீ- யக்ஞநேதா- யக்ஞபூர்வ்ய (தலைவர்),
    புரோஹித (முன் நிலையில் வைக்கப்படுபவர்)
    ரித்விக்- ஹோதா- யந்தா, யக்ஞ ஸாதக (நடத்துபவர்),
    அத்வரஸ்ரீ (வேள்விச் செல்வம்),
    ஹவ்ய வாட்- ரத்ய- யக்ஞ வாஹ (ஹவிஸைச் சுமந்து செல்பவர்),
    யக்ஞ நாபி (மையம்),
    ஸுக்ரது (நன்றாக யாகம் செய்பவர்),
    யக்ஞ வித்வான் (யக்ஞங்களை நன்றாக அறிந்தவர்),
    அத்வரேஷு ஈட்ய (யாகங்களில் போற்றப்படுபவர்)

    அக்னி யக்ஞத்தைத் தூண்டுகிறார். அவர் தீமை செய்பவர்களையும் தீயன பேசுபவர்களையும் அழித்து பக்தர்களுக்கு யக்ஞத்தின் பாதையை எளிதாக ஆக்குகிறார். நற்செயல்கள் செய்வோர் வீட்டில் யக்ஞத்தை நிலை நிறுத்துகிறார். பூமிக்கும் ஆகாயத்துக்கும் இடையில் போய் வருகிறார். ஹவிஸ்ஸை தேவர்களுக்கு அளித்து திருப்தி செய்விக்கிறார். யக்ஞம் பற்றி நமக்கு எதுவும் தெரியாவிட்டாலும் அக்னி தானே பொறுப்பேற்று யக்ஞத்தை நிறைவேற்றிக் கொடுக்கிறார். அவர் யக்ஞத்தின் வடிவம்.

    எல்லாத் தேவர்களும் யக்ஞத்திற்கு வருகிறார்கள். அவர்கள் அதனால் மகிழ்விக்கப் படுகிறார்கள், வலுவூட்டப்படுகிறார்கள். அவர்கள் யக்ஞத்தைக் காக்கிறார்கள். யக்ஞம் செய்யும் யஜமானனுக்கு அவர்கள் நீண்ட ஆயுள், பாதுகாப்பு, பாவங்களிலிருந்து விடுதலை, செல்வம், புகழ், வலிமை, வெற்றி, சந்ததி, குதிரைகள், உணவு மற்றும் அக்னியின் சக்தி ஆகியவற்றை அளிக்கிறார்கள். பித்ருக்களும் யக்ஞங்களால் மகிழ்கிறார்கள்.

    யக்ஞமும் யாகமும் :

    யாகம் என்ற சொல்லும் யக்ஞம் என்ற பொருளிலேயே தற்போது வழங்கப்படுகிறது. ஆனால் இது ரிக் வேதத்தில் காணப்படவில்லை, பிற்காலத்தில் ஏற்பட்டது. யக்ஞம் என்ற சொல் ஆழமான பொருள் உடையது. பிற்காலத்தில் அது மேலும் விரிவடைந்தது. யாகம் என்ற சொல் அக்னி வழிபாட்டை மட்டுமே குறிப்பதாக நின்று விட்டது. தமிழில் வேள்வி என்பதும் இந்தத் தீ வழிபாட்டை மட்டுமே குறிப்பதாக இருக்கிறது. யக்ஞத்தின் விரிவான பொருளைப் பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

    யக்ஞத்தின் துணை அங்கங்கள்- மனம் :
    யக்ஞத்தில் ஹவிஸ்ஸை விட முக்கியமானது மனப்பாங்குதான். “என்னிடம் யக்ஞத்தில் சமர்ப்பிக்க நெய் இல்லை அதற்குத் தேவையான பசு இல்லை. சமித்து கொண்டு வருவோம் என்றால் அதை வெட்டி வருவதற்கான கோடரியும் இல்லை. கரையான் அரித்த சுள்ளிகளும் எறும்பு மொய்த்த எண்ணெயும்தான் உள்ளன. இதையே நெய்யாக ஏற்றுக் கொள்க” என்று அக்னியை வேண்டுகிறார் ஒரு ரிஷி. (8.102.19, 8.102.21)

    அக்னியில் நெய், ஹவிஸ் சேர்ப்பிப்பது நம் மனதில் இருக்கும் நன்றி மற்றும் பணிவின் அடையாளம். ஆனால் இவை மட்டும் போதாது.

    தேவர்களுக்கு நமஸ்காரம் செய்வதன் மூலம் நம் மனதின் வணக்கத்தை உடலால் வெளிப்படுத்த வேண்டும்.

    பெற்ற உதவிகளுக்கு நன்றி தெரிவித்தும் மேற்கொண்டு உதவிகள் கோரியும் பிரார்த்தனை மந்திரங்களைக் கூறவேண்டும். இது வாக்கினால் செய்யப்படுவது. பிரார்த்தனை இல்லாத யக்ஞம் பலன் தருவதில்லை என்கிறது வேதம்.(10.105.8)

    பிரார்த்தனையில் அர்க்க, உக்த, கிர, ப்ரஹ்ம, ஸ்தோமம் (अर्क, उक्थ, गिरः, ब्रह्म, स्तोम) என்ற ஐந்து வகை உண்டு. இவற்றின் தனித் தன்மை என்ன என்பது அறியப்பட முடியவில்லை. இது தவிர தீதி, தீ:, மன்ம, மதி, கான என்ற சொற்களும் (धीतिः, धीः, मन्म, मतिः, गानम्) பிரார்த்தனையையே குறிக்கின்றன.

    செய்யும் யக்ஞத்தை எதற்காகச் செய்கிறோம் என்பதை உணர்ந்து செய்யவேண்டும். இதற்கு புத்தியைப் பயன்படுத்தல் அவசியமாகிறது.

    இவ்வாறு மனம், வாக்கு, உடல், புத்தி இந்த நான்கும் ஒருங்கிணைந்து ஸ்தோமம், நமஸ்காரம், ஹவிஸ், சோமம் எல்லாம் சேர்ந்த யக்ஞம்தான் அத்வரம், அதாவது, குறைவில்லாத, முழுமையான யக்ஞம் ஆகும்.

    கீழ்க்கண்ட மந்திரங்கள் வெறும் ஆகுதி மட்டுமே முழுமையான யக்ஞம் ஆகாது, அது அத்வரமாக ஆவதற்கு, அதாவது குறை இல்லாமல் இருக்க அத்துடன் ஸ்தோமம், நமஸ்காரம், புத்தி, ஹவிஸ் சேரவேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றன.
    சோமா, இந்த யக்ஞத்தையும் பிரார்த்தனை மந்திரங்களையும் ஏற்றுக்கொள்க. (1.91.10)
    நாங்கள் இந்திரனை யக்ஞத்தைக் கொண்டும் மந்திரங்களைக் கொண்டும், ஹவிஸைக் கொண்டும் வழிபடுகிறோம்.(10.24.2)
    இந்த யக்ஞத்தில் நான் பூமியையும் ஆகாயத்தையும் நமஸ்காரத்தைக் கொண்டு போற்றுகிறேன்.(1.185.7)
    நாங்கள் பிரகஸ்பதிக்கு யக்ஞங்களைக் கொண்டும் நமஸ்காரங்களைக் கொண்டும் ஹவிஸைக் கொண்டும் வழிபடுகிறோம். (4.50.6)
    புரோகிதர்கள் அக்னியை யக்ஞத்தைக் கொண்டும் புத்தியைக் கொண்டும் வழிபடுகிறார்கள். (3.27.6)

    யக்ஞத்தின் பொருள் விரிவடைதல் :
    யக்ஞம் என்பது ஆகுதியை மட்டும் குறிப்பதல்ல என்பதைக் கீழ்க் கண்ட மந்திரம் கூறுகிறது.
    தேவர்கள் யக்ஞம் செய்கிறார்கள்.(10.90.15, 16)
    தேவர்கள் அக்னிக்கு யக்ஞம் செய்கிறார்கள். (5.21.3)
    அக்னி, மானிடர் சார்பில், தேவர்களுக்கு யக்ஞம் செய்கிறார். (1.15.12)
    அக்னி மானிடர்களுக்கு யக்ஞம் செய்கிறார். (1.26.3)

    தேவர்கள் நம்மைப் போல் யாக குண்டம் அமைத்து நெய், சமித், ஹவிஸ் இவற்றைக் கொண்டு ஆகுதி செய்தார்கள் என்பதற்கான சான்றுகள் எதுவும் வேதத்தில் இல்லை. எனவே மேற்கண்ட மந்திரத்தில், யக்ஞம் என்ற சொல் தீ மூட்டி ஹவிஸ்ஸைச் சமர்ப்பித்தல் என்ற பொருளில் அல்லாமல், வணங்குதல் அல்லது மரியாதை செய்தல் என்ற பொருள் உடையதாகக் காணப்படுகிறது. மற்ற தேவர்களும் அக்னியும் ஒருவர்க்கொருவர் உதவி செய்கிறார்கள். தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் வணக்கம் செய்கிறார்கள் என்பதுதான் ஒருவர்க்கொருவர் யக்ஞம் செய்வதாகக் கூறப்படுகிறது.

    போரில் வெற்றி பெற உதவும் ரதத்திற்கு யக்ஞம் செய்வதாகவும் ரதம் அதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறும் மந்திரங்கள் உள்ளன.(6.47.27, 6.47.28)

    போரில் வெற்றி பெற ரதம் எவ்வளவு உதவியாக இருந்தது என்பதை அந்த மனிதர் நன்றியுடன் நினைவு கூர்வதாகத் தான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

    எனவே உதவி செய்தவர்களை நன்றியுடன் நினைவு கூர்வதும், அவர்களை மேலானவர்களாகக் கருதி அவர்களிடம் பணிவுடன் இருப்பதும் யக்ஞம் என்பதன் விரிந்த பொருள்.

    இது மேலும் விரிவடைந்ததைப் பின்னர் ருதமும் யக்ஞமும் என்ற தலைப்பில் பார்ப்போம்.

    அத்வரம் என்ற சொல்லின் விரிந்த பொருள் :
    அத்வரம் என்ற சொல்லின் பொருளும் மேலும் விரிவடைந்தது. அது பயணம் என்ற பொருள் தரும் அத்வ என்ற சொல்லிலிருந்து வந்தது, அது ஆன்மிக வாழ்க்கைப் பயணத்தைக் குறிக்கும் என்று அரவிந்தர் சொல்வது சில இடங்களில் பொருத்தமாக இருக்கிறது. அக்னியே, நீ எங்கள் யக்ஞத்தினால் மகிழ்வாயாக, எங்கள் அத்வரத்தினால் மகிழ்வாயாக(4.9.7) என்பதிலிருந்து அத்வரம் என்பது யக்ஞம் அல்லாத வேறொன்றாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அக்னியே, நீ எனக்கு அத்வரத்தில் வலிமையும், மக்கட்பேறும், பெரும் செல்வமும், மகிழ்ச்சியும், புகழும் தருவாயாக (3.16.6)  என்ற மந்திரத்தில் அத்வரம் என்பதற்கு வாழ்க்கை என்ற பொருள்தான் பொருத்தமாக உள்ளது.

    அக்னியே, நீ யக்ஞங்களில் அமர்கிறாய். எங்கள் அத்வரங்களை நடத்துக. (1.14.11 )  இதில் யக்ஞம் என்பது முயற்சிகளையும் அத்வரம் என்பது வாழ்க்கையையும் குறிக்கும்.

    படம் உதவிக்கு நன்றி: https://www.kksblog.com/2013/04/accepting-krsnas-plan/

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 33

    சு.கோதண்டராமன்.

     

    நீர், ஒளி, பசுக்கள்

    BRAHMIN_VEDAS_by_VISHNU108

     

    மூன்று வகையான உருவகங்களும் பொருந்தாத மந்திரங்களும் உண்டு. கீழே வருவனவற்றைப் பாருங்கள்.
    பசுக்களை விரும்பி அங்கிரஸ்கள் உட்கார்ந்தார்கள். அமர வாழ்வுக்கான பிரார்த்தனைகளை இயற்றினர். ருதத்தின் (தர்மத்தின்) மூலம் அவர்கள் பல மாதங்கள் செய்த முயற்சி மகத்தானது. (3.31.9)
    அங்கிரஸ்கள் பிரார்த்தனைகள் மூலம் மலைகளைப் பிளந்து பசுக்களை மீட்டனர். (6.65.5)
    இந்திரா, குத்ஸனுக்காக நீ வைகறைப் பொழுதுகளைக் கொடுத்து நீரைப் பெருக விட்ட போது, உன்னிடம் நட்புக் கொண்ட புரோஹிதர்கள் ருதத்தை (தர்மத்தை) மனதில் கொண்டு வலனைக் கொன்றார்கள். (10.138.1)
    இந்திரா, பசுக்களை நாடும் எங்களுக்கு பசுச் செல்வம் பற்றிய அறிவைத் தருகிறாய். (1.33.1)
    இந்திரா, நீ யாரை விரும்புகிறாயோ, அவரிடம் பசுவை ஓட்டி வருகிறாய். (1.33. 3)
    இருட்டுக்கு அப்பால் எந்த ஒளிமயமான உணவு உள்ளதோ, அதை எங்களுக்குக் கொடு. (1.46.6)
    இருட்டு நீரைத் தடுத்தது. (1.54.10)
    இந்திரன் தன் நண்பர்களின் உதவியோடு பசுக்களைப் பின் தொடர்ந்தார், இருளில் மறைந்து கிடந்த சூரியனை வெளிப்படுத்தினார். (3.39.5)
    மேற்கண்ட மந்திரங்களில், பசு என்பது ஞான ஒளியின் குறியீடு என்றும் சரமா என்னும் நாய் மனிதனின் உள்ளுணர்வின் குறியீடு என்றும் அரவிந்தர் கூறுகிறார்.

    அக்னி மறைத்து வைக்கப்பட்ட நீரையும், ஒளியையும், பசுக்களையும் (अपः, स्वः, गाः) கண்டுபிடித்தார். (5.14.4)
    சோமன் நீர் ஒளி பசுக்களை அடைய விரும்புகிறார். (9.90.4)
    சோமனே, எனக்கு நீர் ஒளி பசுக்களைத் தருவீராக. (9.91.6)
    மேலே காட்டியது போன்று பல இடங்களில் நீர், ஒளி, பசுக்கள் (ஆப, ஸ்வர், கோ) மூன்றும் சேர்த்துப் பேசப்படுகின்றன. அரவிந்தர் கூற்றுப்படி பசுவை ஞான ஒளி என்று கொண்டால் ஆப என்னும நீரையும் ஸ்வர் என்னும் ஒளியையும் எப்படிப் பொருள் கொள்வது? தெய்விக இன்பங்கள் என்ற அவரது விளக்கம் நமக்குத் தெளிவு தரவில்லை.

    இம் மூன்றுமே இறை அருளின் வெவ்வேறு நிலைகளைக் குறிக்கும் சொற்கள் என்று கொண்டால் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடுகிறது.

    எல்லா உயிர்களுக்கும் அடிப்படையில் உணவு முதலான உடல் தேவைகள் உள்ளன. மனிதரில் சிலர், பாரதி காட்டும் வேடிக்கை மனிதர்கள், இந்த உணவு நாட்டம் மட்டுமே கொண்டுள்ளனர். இதற்கு மேம்பட்ட நிலை ஒன்று உண்டு என்பதை உணராமலே வாழ்ந்து ஒரு நாள் கூற்றுக்கு இரையாகிறார்கள்.

    பல மனிதர்கள் இதோடு நிறைவு அடைவதில்லை. மற்றவரை விட மேம்பட்டு வாழ விரும்புகிறார்கள். அடுத்தவரை விடச் செல்வத்தில், வலிமையில், கல்வி கலைகளில் மேலோங்க முயல்கிறார்கள். சிலர் மட்டும் சாதனைகள் புரிந்து புகழ் பெற்று இறப்புக்குப் பின்னும் பிறரால் போற்றப்படும் நிலையை அடைகிறார்கள். வேதத்தில் பெரும்பாலான இடங்களில் இந்த தேவ நிலை, அமரத்துவம், ஸ்வர் என்னும் ஒளியே மனிதனின் லட்சியமாகக் காட்டப்பட்டுள்ளது.

    புகழை நாடுபவர்கள் அதற்கு மேல் நிலை ஒன்று இருப்பதை அறியார். சில மனிதருக்கு மட்டும் புகழ் நிலைக்கும் மேலான நிலை ஒன்று இருக்கக் கூடும் என்பது உள்ளுணர்வால் தெரிகிறது. தேவர்களுக்கெல்லாம் மேலான பரம் பொருள் ஒன்று இருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். அது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், அதனோடு இணைய வேண்டும் என்ற பேரவா கொள்கிறார்கள்.

    ஆனால் அதை அடைவது எளிதல்ல. மனிதனின் உலகியல் அறிவு அவனை மேல் நோக்க விடாமல் செய்கிறது.

    நேற்று எனக்கு உதவி செய்தவருக்கும், நாளை எனக்கு நிச்சயமாக உதவி செய்யக் கூடியவருக்கும் மட்டுமே நான் உதவி செய்வேன் என்று சொல்வது வணிக புத்தி. இதை நாம் இறைவனிடமும் காட்டுகிறோம். திருமணம் கை கூடினால் அபிஷேகம் செய்கிறேன், வேலை கிடைத்தால் 108 தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டுவதும், இன்னின்ன தானம் செய்தால் இன்னின்ன நன்மை கிடைக்குமென்று நம்புவதும் அந்த வணிக புத்தியால் தான். இதனால் சிறு சிறு நன்மைகளைக் குறிக்கோளாகக் கொள்கிறோமே அன்றி உயர்ந்த லட்சியமாகிய நமக்கு உரிமையான பேரானந்தத்தை இழக்கிறோம். இந்த வணிக புத்தியைக் கொன்றால் தான் பேரானந்தமாகிய பசுக் கூட்டங்கள் நமக்குத் திரும்பக் கிடைக்கும் என்பதைத் தான் தேவர்கள் பணியைக் கொன்று பசுக்களை மீட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    அங்கிரஸ்கள் தங்கள் உள்ளுணர்வால் ஆனந்தம் இருக்குமிடத்தை அறிந்தனர். உழைப்பாலும், நற்செயல்களாலும், பிரார்த்தனைகளாலும் மலையைப் பிளந்தனர், பசுக்களை அடைந்தனர் என்ற (1.83.4, 1.71.2) மந்திரங்கள் பெரும் முயற்சி செய்து பல தடைகளைக் கடந்து இறை அனுபவம் பெற்ற அங்கிரஸ்கள் மற்றவர்கள் பேரானந்தம் அடைய இதையே பாதையாக அமைத்தனர் என்பதையே காட்டுகின்றன.

    இறைவன் என்ன செய்கிறான்? உணவு நாட்டம் கொண்டவனுக்கு உணவு கிடைக்கச் செய்கிறான். இதற்கு மானிடன் பெருமுயற்சி செய்யத் தேவை இல்லை. கல்லினுட் தேரைக்கும் கருப்பை அண்டத்து உயிர்க்கும் புல்லுணவு அளித்துக் காக்கும் இறைவன் அதற்கு ஏதேனும் தடை ஏற்படும்போது அதை நீக்கி உணவு கிடைக்க அருள் புரிகிறான். இது தான் இந்திரன் விருத்திரனைக் கொன்று நீரைப் பெருக விட்ட கதை.

    ஸ்வர் என்பதும் ஜ்யோதி என்பதும் புகழைக் குறிக்கின்றன. இந்தப் புகழ் ஜ்யோதியை மறைக்கும் தஸ்யு யார்? ஜ்யோதியை எவராவது மறைக்க முடியுமா? ஆம். நமது கையிலுள்ள குடை மறைக்கக் கூடும். நாம் அமைத்துக் கொண்ட வீடு மறைக்கக் கூடும். நாம் கண் இமைகளை மூடினால் கூட ஜ்யோதி புலப்படாமல் போகும். நம் புகழை மறைக்கும் தஸ்யு வெளியில் இல்லை. நம்மிடத்தில் தான் இருக்கிறான். ராட்சசர்களைப் பற்றிப் பார்க்கும் போது ராட்சசர் என்பார் நம் மனத்தில் உள்ள தீய பண்புகள் தான் என்று பார்த்தோம். நாம் விரும்பிய போதும் முயன்ற போதும் புகழ் பெற முடியாமல் தடை செய்பவை சோம்பல், கவலை, கோபம், பயம், பொய், ஆசை ஆகிய நம் மனத்தில் உள்ள பகைவர்களே. இந்தப் பகைவர்களை வென்று நாம் புகழ் பெற வழி காட்டுகிறான் இறைவன். இது தான் தேவர்கள் தஸ்யுக்களை வென்று ஜ்யோதியை மீட்ட கதை.

    முதல் நிலையில் நீர் கிடைக்காத துன்பம் நாம் வேண்டாமலே நீக்கப்படுகிறது. இரண்டாவது நிலையில் புகழ் இல்லாத நிலை நம்முடைய மனத்தைத் தூய்மை செய்து கொண்டால் போய் விடுகிறது. மூன்றாவது நிலையில் பேரானந்தம் பிறர் நலனுக்கான நற்செயல்கள் செய்வதில் உழைப்பதாலும், பிரார்த்தனைகளாலும் கைகூடுகிறது. இந்த மூன்றுமே மனிதர்க்குத் தேவை என்பதைத் தான் நீர், ஒளி, பசு தருக என்று வேண்டும் மந்திரங்கள் தெரிவிக்கின்றன.

    படம் உதவி: http://vishnu108.deviantart.com/art/BRAHMIN-VEDAS-160338756

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 32

    சு.கோதண்டராமன்.

    தஸ்யு – மூன்று உருவகங்கள்

    indra-on-elephant

     

    தஸ்யுக்கள் என்போர் வேற்று இனத்தவர் அல்ல என்பதை அறிந்து கொண்டோம். பின் அவர்கள் யார்? இந்திரன் முதலானோர் ஆர்யர்களுக்காக தஸ்யுக்களை அழித்தனர் என வேதம் கூறுகிறது. தஸ்யுக்கள் ஆர்யர்களுக்கு இழைத்த தீங்கு என்ன? எதற்காக அவர்கள் அழிக்கப்பட்டனர்?

    தஸ்யுக்கள் பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று பார்த்தோம். அவர்களில் விருத்திரன் என்பவன் மலைப் பாம்பு வடிவத்தில் நீர் வரும் வழியில் படுத்துக் கொண்டு நீரைத் தடுத்தான். வலன் என்பவன் ஆர்யர்களுக்குச் சொந்தமான பசுக்களைச் சிறைப் பிடித்து வைத்திருந்தான். பெயர் குறிப்பிடப்படாத சில தஸ்யுக்கள் ஆர்யர்களுக்குச் சொந்தமான ஒளியைத் திருடிக் கொண்டனர். இந்திரன் விருத்திரனைக் கொன்று ஆறுகளைப் பெருகச் செய்தார். வலனைக் கொன்று பசக்களை மீட்டார். மற்ற தஸ்யுக்களைக் கொன்று ஒளியை மீட்டார்.

    ஒளியை யார் திருட முடியும் என்று சிந்திக்கும்பொழுது இது ஒரு உருவகமாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெரிகிறது.

    சாயணர் அளிக்கும் உருவகப் பொருள்- மேகம்
    விருத்திரன் என்பது மேகங்கள். இந்திரன் தன் நண்பர்களாகிய மருத் என்னும் காற்றின் துணை கொண்டு அதை அழித்து மழை பொழிய வைக்கிறார் என்கிறார் சாயணர். கறுத்த மேகத்தினூடே மின்னல் மின்னுகிறது. இடி இடிக்கிறது. மழை பொழிகிறது. வானம் வெளி வாங்குகிறது. மறைந்து இருந்த சூரியன் வெளிப்படுகிறது. இந்திரனை மின்னல் இடியை ஆயுதமாகக் கொண்டவர் என்பதிலிருந்து இது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

    பசுக்கள் என்பதற்கு ஒளிக் கிரணங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் சாயணர். இதுவும் பொருத்தமே. ஏனெனில் வேதத்தில் பல இடங்களில் சூரிய கிரணங்களும் வைகறை ஒளியும் பசுக்களாக உருவகிக்கப்பட்டுள்ளன.

    ஆனால் சாயணரின் இக்கருத்தை ஏற்றுக் கொள்வதில் ஒரு இடைஞ்சல் உள்ளது. பசுக்களை (சூரிய கிரணங்களை) மேகம் மறைத்ததை தஸ்யு திருடினான் என்று கொண்டால் சரமா என்னும் நாயின் உதவியால் அங்கிரஸ் முனிவர்கள் பசுக்களின் இருப்பிடத்தை அறிந்தனர் என்பதை எப்படிப் பொருள் கொள்வது?

    உருவகம் -2 நிலச்சரிவு
    இதோ மற்றொரு ஊகம். இது சாயணர் கூறாதது.

    மலைப் பிரதேசங்களில் நிலச் சரிவு என்பது வழக்கமான ஒன்று. சில சமயங்களில் இந்த நிலச் சரிவு நதிகளில் விழுந்து நதிகளின் போக்கைத் தடுத்து விடும் அல்லது மாற்றி விடும். 2008 மே 12இல் சீனாவில் வென்சுவான் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச் சரிவு, ஒரு நதியைத் தடுத்து அதை ஏரியாக மாற்றி விட்டது. நதியின் கீழ்புறம் வறண்டுவிட்டது. ஏரியில் மேலும் மேலும் தண்ணீர் வந்து சேரவே அது வேறு திசைகளில் உடைப்பு எடுத்துப் பெருகக் கூடிய அபாயம் ஏற்பட்டது. அப்பொழுது சீன அரசு அங்கு உடனடியாக ஆட்களை அனுப்பி, அந்த ஏரிக்கரையை குண்டு போட்டு உடைத்து நதியை முன்பு போல ஓடச் செய்தது.

    இந்திரன் செய்ததும் இது போலத்தான் இருக்க வேண்டும். விருத்திரன் என்பது நிலச் சரிவால் நதியின் போக்கில் மலைப் பாம்பு வடிவத்தில் ஏற்பட்ட ஒரு தடையாக இருக்க வேண்டும். வலிமையுள்ள அரசனான இந்திரன், தன் படையுடன் அங்கு சென்று அந்தத் தடையை அகற்றி இருக்க வேண்டும். வ்ருத்ரன் என்ற சொல்லுக்கு சூழ்ந்திருப்பது என்று பொருள். அந்தத் தடை நதியின் நீர் ஓடாதபடி சுற்றிலும் சூழ்ந்து இருந்ததால் அது அப் பெயர் பெற்றிருக்க வேண்டும்.

    அதே போல, வலன் என்றும் பணி என்றும் பெயரிடப்பட்ட ஒரு நிலச்சரிவால் அங்கிரஸ்களின் மாடுகள் இருந்த இடம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். மோப்ப நாயின் உதவியால் மறைவுக்குப் பின்புறம் மாடுகள் இருப்பதை அறிந்த அங்கிரஸ்கள் இந்திரனின் துணையால் அந்தத் தடையை வென்று மாடுகளை மீண்டும் பெற்றிருக்க வேண்டும். மண் அகற்றும் திறமை படைத்த ஒரு பெரும் படை இந்திரனிடம் இருந்திருக்க வேண்டும்.

    இந்த ஊகம் ஒரு வகையில் பொருத்தமாக இருந்தாலும், இந்திரனும் அச்வின்களும் தஸ்யுக்களைக் கொன்று ஆர்யர்களுக்கு ஜ்யோதியைக் கொடுத்தார்கள் என்று சொல்லப்படும்போது (1.117.21, 7.5.6) இந்த உருவகம் பொருந்தவில்லை. நிலச்சரிவு ஒளியை எப்படித் தடுக்க முடியும்?

    கோத்ரம்
    மூன்றாவது உருவகத்தைப் பார்க்கும் முன் வேத காலத்தில் பசு எப்படிக் கருதப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

    ரிக் வேதத்தில் சில மந்திரங்கள் எங்களுக்கு நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான பசுக்களைக் கொடு என வேண்டுகின்றன. ஓரிடத்தில் ரிஷி தனக்கு அறுபதினாயிரம் பசுக்கள் தானமாகக் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறார் (1.126.3).

    மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்றாலும் அவர் குறைந்தது 60 பசுக்களாவது பெற்றிருக்கக் கூடும். இத்தனை பசுக்களை வைத்துக் கொண்டு அவர் எப்படிப் பராமரித்தார் என்ற கேள்வி எழுகிறது.

    வேதத்தில், பசு மந்தைக்கும் அவை தங்கும் இடத்துக்கும் கோத்ரம் என்பது பெயர். பிற்காலத்தில் இந்தப் பெயர் ஒரு பரம்பரையைக் குறிக்கும் சொல்லாக மாறியது. ஒரு பசு மந்தையின் உடைமையாளர்கள் ஒரு கோத்ரக்காரர்கள். இவர்கள் ஒரே கிராமத்து மக்களாக இருந்ததும், அவர்களுடைய பொது உடமையாக இந்தப் பசுக்கள் கருதப்பட்டிருந்ததும் ஊகித்து அறிய முடிகிறது.

    உருவகம் 3 – பொது உடமைப் பொருட்களைத் திருடும் சமூக விரோதி
    நீரையும், ஒளியையும் போல பசுவும் எல்லோருக்கும் பொதுவான பொருளாக இருந்தது. இதன் அடிப்படையில் மூன்றாவது உருவகத்தைப் பார்ப்போம்.

    கிராமத்துக்குப் பொதுவான பசுக்களைப் பராமரிக்க, உழைக்க வலிமையுள்ள சிலர் நியமிக்கப் பட்டிருக்க வேண்டும். வலிமையற்றவர்கள் அவர்களது உழைப்பின் பலனை அனுபவிப்போராக இருந்திருப்பர். ஒவ்வொருவருக்கும் அவரவருக்குத் தேவையான பொருள் கிடைத்தது. ஒவ்வொருவரும் அவரவருக்கு முடிந்த வேலைகளைச் செய்தனர். இது ஒரு சமதர்ம சமுதாயம்.

    பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைக்கும் வரை இந்த சமுதாயத்தில் பிரச்சினை எதுவும் வர வாய்ப்பில்லை. தட்டுப்பாடு ஏற்படும்போது, வலிமையுள்ள சிலர் தனக்கென்று மிக அதிகமான பொருட்களைப் பதுக்கி வைப்பது இயல்பு. பொதுச் சொத்துக்களைத் தன் சொந்த நலனுக்கென்று பயன்படுத்துவோரை நாம் இன்று சமூக விரோதிகள் என்று அழைக்கிறோம்.

    வலன் என்ற பணி பசுக்களைச் சிறைப் பிடித்தான். பணி என்ற சொல்லுக்கு வணிகர் என்பது அடிப்படைப் பொருள். வணிகர் தான் கொடுத்த பொருளின் மதிப்புக்குச் சமமான வேறு பொருளை பெற்றுக் கொள்வதில் குறியாக இருக்கிறார். பொதுச் சொத்தைப் பராமரிப்பவர் தான் செய்வதைச் சேவையாகக் கருதாமல், தன் உழைப்பினால் கிடைத்த உற்பத்திப் பொருட்கள் தனக்கு மட்டுமே சொந்தம் என்று இருந்தால் அவர் பணியாக(சமூக விரோதியாக)க் கருதப்படுவார். அதனால் அவர்களை வேதம் தஸ்யு (பகைவர்) என்று கூறுகிறது.

    அக்ரது (செயல் அற்றவர்கள்), அராதி (தானம் செய்யாதவர்கள்), அச்ரத்தா (சிரத்தை இல்லாதவர்கள்), அவ்ருதா (நல்ல காரியங்களை ஊக்குவிக்காதவர்கள்) என்ற அடைமொழிகளிலிருந்து தஸ்யுக்கள் சமூக நலனுக்குப் பாதகமான குணங்களைக் கொண்டவர்கள் என்று கருத இடம் உள்ளது.

    விருத்திரன் சமுதாயத்துக்குச் சொந்தமான நீரை மக்கள் அனுபவிக்காதபடி வளைத்துப் போட்டான். வலன் பொதுச் சொத்தான பசுக்களைத் தன் நலனுக்காகச் சிறைப் பிடித்து வைத்திருந்தான். இந்த சமூக விரோதச் செயல்களைச் செய்யும் பகைவர்களை வழிக்குக் கொண்டு வரும் பொறுப்பு அந்தச் சமுதாயத்தின் தலைவனின் பொறுப்பாகிறது. பகைவர்கள் தங்களைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு செய்து கொள்வது இயல்பே. பலர் உதவியுடன், தடைகளைச் சமாளித்து இவர்களைத் தோற்கடித்ததுதான் மலையைப் பிளந்து வலனைக் கொன்று பசுக்களை மீட்டதாகவும், விருத்திரனைக் கொன்று ஆறுகளைப் பெருகச் செய்ததாகவும் கூறப்படுகிறது. தஸ்யுக்களைத் தண்டிக்கும் வகையில் அவர்களை கட்டாயப்படுத்தி அடிமைத்தனத்துக்கு உட்படுத்தும் முறை இருந்திருக்க வேண்டும் என்பது அறியப்படுகிறது. இதனால் தஸ்யுக்கள் தாஸர்கள் ஆனார்கள்.

    அவர்கள் செல்வம் மிகப் பெற்றிருந்தும் அதைப் பிறருக்குப் பயன்படுமாறு கொடுக்காமல் இருந்தார்கள், இனிமையான பேச்சு இல்லாதவர்கள் என்பதை அறிய முடிகிறது.

    தஸ்யுக்களை அழிக்குமாறு தேவர்களை வேண்டுகிறார்களே தவிர, ஆர்யர்கள் தாங்களே ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. தேவர்களால் தோற்கடிக்கப்பட்ட தஸ்யுக்கள் ஆர்யர்களுக்குத் தாஸர்களாக வாழத் தொடங்கினர். அந்த அடிமைகள் பிறருக்குத் தானமாகவும் கொடுக்கப்பட்டனர் என்பதை ஒரு ரிஷி தான் 100 தாஸர்களைப் பெற்ற விவரத்தைக் கூறுவதிலிருந்து அறிகிறோம் (8.56.37).

    அந்த தாஸர்கள் நன்றாக உழைத்தார்கள் என்பது நான் தாஸனைப் போலக் கடுமையாக தேவர்களுக்கு உழைத்தேன் என்பதிலிருந்து தெரிகிறது (7.86.75 ).

    சமூக விரோதிகளைத் தற்காலத்தில் காவலர்கள் சிறைப்படுத்தி வேலை செய்ய வைப்பது போல இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. தண்டனையால் மனம் திருந்திய தாஸர்கள் கொடையாளிகளாக மாறினாலும் தங்கள் பழைய பெயராலேயே அழைக்கப்பட்டார்கள் என்பதை முன் சொன்ன பல்பூதன், தருக்ஷன் பற்றிய குறிப்பிலிருந்து அறிகிறோம்.

    ஆர்யர்களாக இருந்தவர்களில் கூடச் சிலர் காலப்போக்கில் சமூக விரோதிகளாக மாறியிருப்பர். அவர்கள் பழைய பெயரால் ஆர்யர்கள் என்று கூறப்பட்டாலும் எதிரிகளாகக் கருதப்பட்டனர். எங்கள் எதிரிகளைக் கொல்வாயாக, அவர்கள் தாஸர்களானாலும், ஆரியர்களானாலும் என்ற வேண்டுதல் காணப்படுகிறது (10.38.3).

    பொது உடைமைப் பொருட்களை அபகரிப்பவரே தஸ்யு என்னும் இந்த உருவகப் பொருள் ஜ்யோதியை எந்தத் தஸ்யு அபகரிக்க முடியும் என்பதை விளக்கவில்லை.

    இது வரையில் மூன்று வகையான உருவகப் பொருள்களைப் பார்த்தோம்- மேகங்களை அழித்து மழை பொழியச் செய்தல், நிலச் சரிவை அகற்றி நீர் மற்றும் பசுக்களின் பாதையைத் திறந்து விடுதல், பொது உடமைப் பொருட்களை அபகரிக்கும் சமூக விரோதிகளைத் தண்டித்தல். இந்த மூன்றுமே தஸ்யு பற்றிய எல்லாச் செயல்களையும் விளக்கவில்லை. இருப்பினும் இவற்றை முழுமையாகத் தள்ளிவிடவும் முடியாது. ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு உருவகம் பொருத்தமாக இருக்கும். அதை அங்கு ஏற்றுக் கொள்ளலாம்.

    படம் உதவிக்கு நன்றி:
    How Many People did Indra Kill?
    http://tamilandvedas.com/2014/07/17/how-many-people-did-indra-kill/

     

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 31

    சு.கோதண்டராமன்.

    தஸ்யுக்கள்

     

    rig veda enemy

     

    ராட்சசரைப் போலவே தேவர்களால் அழிக்கப்படத்தக்க வேறு ஒரு கூட்டம் உண்டு. இவர்கள் தஸ்யு என்று அழைக்கப்படுகிறார்கள். தஸ்யு என்ற சொல் எதிரி எனப் பொருள் படும்.

    யக்ஞம், பிரார்த்தனை, விரதம் இவற்றை அனுசரிக்காமல் இருப்பதில் இவர்கள் ராட்சசர்களைப் போன்றவர்கள் என்றாலும் தஸ்யுக்களுக்கும் ராட்சசர்களுக்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு.

    ராட்சசர்கள் இறை வழிபாட்டைத் தடுக்கும் தீய பண்புகள் என்று அறிந்தோம். ஆனால் தஸ்யுக்கள், மற்றவர்களின் இறை வழிபாட்டிற்கு இடையூறு செய்வது இல்லை.

    ரிக் வேதத்தில் எந்த ராட்சசரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சில தஸ்யுக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. – நமூசி, துனி, சும்ரி, சுஷ்ணன், சம்பரன், கௌலிதரன், வர்சின், அஹிசுவன், பிப்ரு, அனர்சனி, வ்ருஷசிப்ர. இவர்களை இந்திரன், அச்வினிகள், அக்னி, சோமன், மருத்துகள் ஆகியோர் அழித்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

    ராட்சசர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள், எங்கிருந்தும் வருவார்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தஸ்யுக்கள் குறிப்பிட்ட இடத்தில், வலுவான நகரங்களில் அல்லது கோட்டைகளில் வசிப்பவர்களாகக் கூறப்படுகிறார்கள். அவர்கள் வசம் 100 கோட்டைகள் இருந்ததும் கூறப்பட்டுள்ளது.

    தஸ்யுக்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக ரிஷிகள் தங்களை ஆர்யர்கள் (உயர்ந்தவர்கள்) என்று கூறிக் கொள்கிறார்கள்.

    தஸ்யுக்களைப் பற்றி ரிக் வேதம் கூறும் விவரங்களைப் பார்ப்போம்.

    1. அநாஸ (மூக்கில்லாதவர்கள்),
    2. க்ரதின், (உளறுபவர்கள்), ம்ருத்ரவாச (இகழ்ச்சியாகப் பேசுபவர்கள்),
    3. அயக்ஞா (யக்ஞம் செய்யாதவர்கள்), அன்யவ்ரதர்கள் (வேறு வகையான விரதம் கடைப்பிடிப்பவர்கள்), மாயையால் விண்ணை அடையும் செல்லும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள் (8.14.14)
    4. ஆரியர்களின் எதிரிகளாகச் சிச்ன தேவர்கள் என்போர் இரு இடங்களில் கூறப்பட்டுள்ளனர் (7.21.5, 10.99.3).  சிச்ன என்பது குறி எனப் பொருள்படும்.
    5. தஸ்யு (எதிரி) என்ற சொல்லும் தாஸ (அடிமை) என்ற சொல்லும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

    மேலே கண்ட குறிப்புகளைக் கொண்டு மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முடிவு கட்டியது பின் வருமாறு.
    ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது வட இந்தியாவில் வசித்தவர்கள் தஸ்யுக்கள்.

    1. நீண்ட மூக்கு உடைய ஆரியர்களைப் போல அல்லாமல் இவர்கள் சப்பை மூக்கு உடையவர்களாக இருந்ததால் அநாஸ எனப்பட்டார்கள்.
    2. ஆரியர்களுக்குப் புரியாத வேறு மொழி பேசியதால் உளறுபவர்கள், இகழ்ச்சியாகப் பேசுபவர்கள் என வர்ணிக்கப்பட்டனர்.
    3. யக்ஞம் அல்லாத வேறு வகையான வழிபாட்டு முறை உடையவர்கள்.
    4. சிச்னத்தை (சிவலிங்கத்தை) வழிபட்டவர்கள்.
    5. இரு இனத்தாருக்கும் இடையே தொடர்ந்து போர் நடைபெற்றது. போரில் தோற்றவர்களை அடிமைப்படுத்தினார்கள் ஆரியர்கள். இறுதியில் திராவிடர்கள் தோற்று வட இந்தியாவை விட்டே விலகித் தென்னிந்தியாவில் குடியேறினார்கள். அவர்கள் திராவிடர்கள்.
    6. தாசர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த தண்ணீரை ஆரியர்களுக்காக இந்திரன் விடுவித்தான் (5.30.5) என்பதிலிருந்து நீர் வரும் பாதையில் மேல் மட்டத்தில் உள்ள அண்டை நாட்டுக்காரர்களாக இருக்கலாம் என்றும் அவர்களுக்கிடையே நதி நீர்ப் பங்கீடு பற்றிய தகராறு (தற்போதைய தமிழ்நாடு கர்நாடகக் காவிரி நீர்ப் பிரச்சினை போல) இருந்திருக்கலாம் என்றும் சந்தேகம் வருகிறது.

    மேலை நாட்டவர் கண்ணில் படாத அல்லது அவர்கள் சொல்ல விரும்பாத விஷயங்கள் வேதத்திலும் உண்டு, நமது பொது அறிவிலும் உண்டு.

    1. தஸ்யுக்களாகக் கருதப்படும் தென்னாட்டவர்களுக்கும், ஆரியர்களாகக் கருதப்படும் வடநாட்டவர்களுக்கும் மூக்கு விஷயத்தில் வேறுபாடு இல்லை. எப்படிப் பார்த்தாலும் மூக்கில்லாதவர்கள், சப்பை மூக்கு உடையவர்கள் என்ற சொல்லுக்குத் தென்னாட்டவர் உரியவர்கள் அல்லர் என்று அரவிந்த கோஷ் கூறுகிறார்.
    2. ஆரியர்களும் தாசர்களும் வேறு வேறு மொழி பேசுபவர்கள் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. உளறுபவர்கள், இகழ்ச்சியாகப் பேசுபவர்கள் என்பதற்கு வேற்று மொழியாளர் எனப் பொருள் கொள்வது பொருத்தமாக இல்லை. ஆரியர்களும் தாசர்களும் சேர்ந்து ஒரே சமூகமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதால் அவர்களிடையே மொழி வேறுபாடு இருந்திருக்க வாய்ப்பில்லை.
    3. வேதமே பல வகையான வழிபாட்டு முறைகளை ஏற்றுக் கொண்டிருப்பதை யக்ஞம் என்ற தலைப்பில் காணப் போகிறோம். எனவே வழிபாட்டுமுறை மாறுபட்டிருப்பதன் காரணமாகப் பகைமை ஏற்பட்டிருக்காது. மேலும், எந்தத் தேவருடைய வழிபாடும் இல்லாத இடத்திலும் அச்வின்களின் வழிபாடு நடைபெறுகிறது (8.10.4) என்பதிலிருந்தும், தாசர்கள் தந்த உணவை அச்வின்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்(8.5.31) என்பதனாலும் வழிபாட்டு முறையில் தாசர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் அல்லர் என்பது தெரிகிறது.
    4. ஆரிய திராவிடப் பிரச்சினைகள் தோன்றாத காலத்தில் எழுதப்பட்ட சாயணர் உரையில் சிச்ன தேவர் என்பதற்கு லிங்க வழிபாடு செய்பவர் என்ற பொருள் காணப்படவில்லை. மாறாக, புலன் நுகர்ச்சியில் அளவு கடந்த நாட்டம் உடையவர் என்றே காணப்படுகிறது. சிச்னத்தைச் சிவலிங்கமாகக் கருதியது ஆங்கிலேயரின் விஷமத்தனமான வேலையே.
    5. ஆரியர்களும் தஸ்யுக்களும் நிரந்தரப் பகைவர்கள் அல்லர். ஒரு மந்திரத்தில் (8.46.32 ) வச அச்வ்ய என்ற ரிஷி, தான் பல்பூத மற்றும் தருக்ஷ என்ற தாசர்களிடமிருந்து 100 பசுக்களைப் பரிசாகப் பெற்றதைக் கூறுகிறார். செல்வந்தனான ருசம பவிரு என்பவரிடத்தில் ஆரியர்களும் தாசர்களும் தானம் பெறக் குழுமினர் என மற்றொரு மந்திரம் (8.51.9) கூறுகிறது. இதிலிருந்து ஆரியர்களும் தாசர்களும் ஒரே சமூகத்தில் ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள் தான் என்பது உறுதியாகிறது.
    6. வேதம் இயற்றப்பட்ட இடமாகக் கருதப்படும் சிந்து கங்கைச் சமவெளியில் மழைக்கோ ஆற்று நீருக்கோ பஞ்சம் இல்லை. எனவே அணை கட்டித் தண்ணீரைத் தேக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் அடுத்தவருக்குத் தண்ணீர் போகாமல் தடுக்கக் கூடிய அணை கட்டும் தொழில் நுட்பமும் அவர்களிடத்தில் இருந்ததற்கு ஆதாரம் இல்லை. எனவே ஆப: (தண்ணீர்) என்ற சொல் வேறு பொருளைக் குறிப்பதாக இருக்க வேண்டும்.

    மேலும், பிரார்த்தனைகள் மூலம் மலைகளைப் பிளந்து தஸ்யுவால் மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை மீட்டனர் என்றும், தர்மத்தை மனதில் கொண்டு தஸ்யுவைக் கொன்றார்கள் என்றும் கூறப்படுவதால் தஸ்யு என்பது ஒரு உண்மையான பகைவனைக் குறிப்பிடாமல், வேறு ஒரு மறை பொருளைக் குறிப்பிடுவதை அறிகிறோம். ரிக் வேதத்தில் கிடைக்கின்ற தரவுகளைக் கொண்டு, அந்த மறைபொருளை அறிய முயல்வோம்- அடுத்த கட்டுரையில்.

    படம் உதவிக்கு நன்றி: http://www.harekrsna.com/sun/features/09-13/dasarajna5.jpg

    Share