என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 41
–சு. கோதண்டராமன்.
தேவ ரிஷி பித்ருக்களும் ருதமும்
பித்ருக்களும் ருதமும்:
பித்ருக்கள் ருதத்தை நன்கு அறிந்துள்ளார்கள், அதன்படி நடப்பவர்கள், அதை வளர்ப்பவர்கள் அதனால் அவர்களும் ருதக்ஞ, ருதாவான், ருதாவ்ருத என்ற அடைமொழி பெறுகின்றனர்.
அவர்கள் தங்கள் வம்சத்தவருக்கு ருதம் பற்றிய அறிவைப் போதித்து வந்தனர். நான் என் தந்தையிடமிருந்து ருதம் பற்றிய ஆழ்ந்த அறிவை அடைந்தேன் (8.6.10) என்கிறார் ரிஷி.
ரிஷிகளும் ருதமும்:
ரிஷிகளும் புரோகிதர்களும் ருதத்தைப் பின்பற்றி நன்மை அடைந்துள்ளனர். ரிஷிகள் ருதத்தின் இடத்தைக் காப்பாற்றி உயர்ந்த பெயர்களை அதனுள் மறைத்து வைக்கின்றனர். (10.5.2)
புரோகிதர்கள் ருதத்தைப் பற்றிச் சிந்தித்து வலன் என்ற அரக்கனைக் கொன்றார்கள். குத்ஸரைப் பற்றிச் சிந்தித்து அஹி என்னும் விருத்திரனைக் கொன்றார்கள். (10.138.1)
தேவர்களும் ருதமும்:
எல்லாத் தேவர்களும் ருதத்திலிருந்து தோன்றியவர்களாகக் கூறப்படுகிறார்கள். அவர்கள் ருதத்தை அறிந்தவர்களாகவும் ருதத்தைப் பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர். அவர்கள் ருதத்தின் நண்பர்கள், ருதத்தைக் காப்பாற்றுகின்றனர், ஒரு தேரோட்டி போல வழி நடத்திச் செல்கின்றனர், ருதத்தைப் புகழ்கிறார்கள், வணங்குகிறார்கள், மக்கள் ருத வழி நடக்கத் தூண்டுகிறார்கள், அவர்களது பாதையைச் செம்மைப்படுத்தித் தருகிறார்கள். அவர்கள் ருதத்தின் ஆறுகளாகக் கூறப்படுகின்றனர். இந்திரன் வேத தெய்வங்களுக்குள் மிகுந்த வலிமை உடையவராக, பல அருஞ் செயல்களைச் செய்தவராகப் போற்றப் பட்டாலும் அவர் அச்செயல்களை ருதத்தின் உதவியால்தான் செய்ய முடிந்தது என்கிறது வேதம்.
ருதத்தின் எண்ணங்களைக் கொண்டும் ருதக் குதிரைகளைக் கொண்டும் இந்திரன் பிளக்க முடியாத மலைகளைப் பிளந்தார். (6.39.2)
ருதத்தின் ஆணைகள் இந்திரனை வலுப்படுத்துகின்றன.(6.68.2)
எல்லாத் தேவர்களும் ருதத்தைப் பாதுகாத்தாலும் வருணன், மித்ரன், அர்யமான் ஆகிய மூவருக்கும் இதில் சிறப்பான இடம் கூறப்பட்டிருக்கிறது. அதிலும் வருணன் மிகச் சிறப்பான இடம் பெறுகிறார். இம்மூவரும் ருதத்தின் சிறப்பான காவலர்கள். இவர்கள் ருதத்தை நிலைநாட்டி அதைக் கவனமாகக் கண்காணிக்கிறார்கள்.
ருதத்தை மீறியவர்-களைத் தண்டிக்கிறார்கள். மித்ரா வருணா, அன்ருதத்தை வென்று எங்களை ருதத்தோடு இணைத்து வைப்பீராக. (1,152.1)
மித்ர வருண அர்யமான்கள் ருதத்தை நிலை நாட்டிக் கண்காணிப்பவர்கள் என்றாலும் அவர்களும் ருதத்திற்கு மேம்பட்டவர்கள் அல்லர். அவர்கள் ருதத்தில் தோன்றியவர்கள். அவர்களது வலிமைக்கு ருதமே காரணம் என்பதும் சொல்லப் பட்டிருக்கிறது.
மித்ர, வருண, அர்யமான்கள் அன்ருதத்தைக் கண்டுபிடித்து ருதத்தின் இருப்பிடத்தில் வலிமையாக வளர்கிறார்கள். (7.60.5)
வருணன் சூரியனுக்கு ஒரு பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அவர் கடலை நோக்கிச் செல்லும் ஆறுகளின் அலைகளை உண்டாக்கினார். ருதத்தை அனுசரித்து அவர் இரவையும் பகலையும் பிரித்து வைத்தார். (7.87.1)
வருணன் விண்ணில் பறக்கும் பறவைகளின் பாதைகளை அறிந்துள்ளார்(1.25.7) என்று கூறப்படுவதிலிருந்து இயற்கையின் ஒவ்வொரு அசைவும் ருதப்படியே, வருணனின் ஆணைப்படியே நடக்கிறது என்பதை அறிகிறோம். அதனால்தான் இன்றும் எல்லா வைதிகச் சடங்குகளிலும் வருணனைத் தியானிக்கிறோம்.
த்ருவம் தே ராஜா வருணோ த்ருவம் தேவோ ப்ருஹஸ்பதி: த்ருவம் ச இந்த்ரச்ச அக்னிச்ச ராஜ்யம் தாரயதாம் த்ருவம் என்ற மந்திரம் வருணன் முற்காலத்தில் பெற்றிருந்த தேவர்களின் ராஜா என்ற பெருமையின் நினைவுச் சின்னமாக இன்றும் ஒவ்வொரு வைதிகச் சடங்கிலும் முதலில் ஓதப்படுகிறது.
ருதமும் முழுமுதல் கடவுளும்:
ருதத்தை அமல் நடத்துகின்ற வருணனைப் படைத்ததே ருதம்தான் என்று கூறப்பட்டிருப்பதால் அது முழு முதல் கடவுளுக்கு நிகரானதாக மதிக்கப்பட்டது என்று அறிகிறோம். படைப்பின் துவக்கத்தில் கடவுளையும் ஸ்வதாவையும் தவிர வேறு ஒன்றும் இல்லை. (10,129.5)
Picture Credits:
http://www.herbalsafari.com/2011/09/ayurveda-yoga-perspective.html