என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 42

0

சு. கோதண்டராமன்.

 

ஸத்யமும் ருதமும்

ravi அர்த்தநாரீஸ்வரர்

 

ஸத்யம் த்வா ருதேன பரிஷிஞ்சாமி  என்பது இறைவனுக்கு உணவு படைக்கும்போது சொல்லப்படும் மந்திரம். ஸத்யமே, உன்னை ருதத்தால் நனைக்கிறேன் என்பது பொருள்.

ருதம் என்பது இயற்கை நியதியைக் குறிக்கிறது என்று பார்த்தோம். இனி, ஸத்யம் என்ற சொல்லின் அடிப்படைப் பொருள் பற்றிப் பார்ப்போம். ஸத்யம் என்பது ஸத் என்ற சொல்லிலிருந்து தோன்றியது. அதற்கு உள்ளது என்று பொருள். எது உள்ளதோ அது உண்மை, ஸத்யம்.
(தமிழில் உள்ளது, இருக்கிறது ஆகிய இரு சொற்களும் ஒரே பொருள் உடையவை ஆயினும் உள்ளது என்ற சொல்லுக்கு மட்டும் இறந்த காலமும் வருங்காலமும் இல்லை. அது முக்காலத்தையும் குறிக்கும் வினையாகும்.)

ஸத்யம் என்பது முக்காலத்திலும் எது இருக்குமோ அதைக் குறிப்பிடுகிறது. காலத்ரய அபாத்யம் (மூன்று காலங்களிலும் பாதிக்கப்படாமல் நிலைத்து நிற்பது) என்று சாஸ்திரங்கள் ஸத்யத்திற்கு விளக்கம் அளிக்கின்றன. எனவே ஸத்யம் என்பது பரம் பொருளைக் குறிப்பது அறியப்படுகிறது.

ஸத்யம் தோற்பதில்லை:
ஸத்யம் ஏவ ஜயதே என்ற உபநிடத வாக்கியத்தை, ‘வாய்மையே வெல்லும்’ என்று மொழி பெயர்த்து, கடைசியில் என்றோ ஒரு நாள் ஸத்யம் வெல்லப்போகிறது என நாம் கருதுகிறோம். அது சரியான பொருள் அல்ல.

ஜயதே என்ற சொல் முக்காலத்திலும் வெல்கிறது என்று பொருள் தரும் நிகழ்கால வினை ஆகும். என்றும் வென்று நிலை நிற்பது உண்மையே (பரம் பொருளே) என்பதுதான் சரியான பொருள்.

ருதமும் ஸத்யமும்:
ருதம் என்பது பிரபஞ்சத்தின் ஒழுங்கு முறை. அதன் இயக்கத்துக்குக் காரணமான நியதி. இது இறைவனின் செயலாக்கத்தைச் சுட்டுவது. ஸத்யம் என்பது பரம்பொருளின் இருப்பைக் கூறுகிறது. பரம் பொருள் வெறுமனே இருக்கிறது, அது வேறு ஒன்றும் செய்வதில்லை (It just exists)என்னும் போது அது ஸத்யம் எனப்படுகிறது.

உபநிடதக் காலத்தில் பரம்பொருளின் செயல்படும் தன்மையை ஸகுண ப்ரம்மம் என்றும் செயலற்று எந்த விதமான மாற்றமும் இன்றி இருக்கும் தன்மையை நிர்க்குண ப்ரம்மம் என்றும் கூறினர்.

அதற்கும் பிந்திய புராணக் காலத்தில் தேவர்களாகிய இயற்கைச் சக்திகளை உண்டாக்கி அவற்றை இயங்கச் செய்யும் ருதத்தை சக்தி என்றும் செயலற்றுத் தன்னில் தான் அடங்கிச் சிவனே என்று இருக்கும் ஸத்யத்தைச் சிவன் என்றும் அழைத்தனர்.

தூய்மையானவர்கள், பிறரைத் தூய்மைப்படுத்துபவர்கள், ருதத்தைப் பின்பற்றுபவர்கள் ருதத்தின் மூலம் ஸத்யத்தை அடைகிறார்கள். 7.56.12

ருதத்தின் மூலம்தான் ஸத்யத்தை உணர முடியும் எனக் கூறப்படுவதால் ருதத்தைத் தாயாகவும் ஸத்யத்தைத் தந்தையாகவும் கருதி, தாயினுடைய பரிந்துரையின் பேரில்தான் தந்தையின் அருளைப் பெற முடியும் என்ற கருத்து பிறந்தது. இதுவே வைணவத்தில் தாயாரின் கருணை பெற்றுத்தான் பெருமாளின் திருவடியை அடைய முடியும் என்று கூறப்படுகிறது.

பரம்பொருளின் இந்த இரு தன்மைகளும் பிரித்துப் பேசப்பட்டாலும் அவை பிரிக்க முடியாத ஒரே பரம்பொருளிடம் அமைந்திருப்பதால் சிவனும் சக்தியும் அம்மையப்பனாக ஒரே உடலில் இருப்பதாகக் கூறினர்.

அன்ருதமும் அஸத்யமும்:
ருதம் என்பதற்கு எதிர்ச்சொல்லாக அன்ருதம் என்பதை வேதம் கூறுகிறது. தர்மத்திற்கு மாறாக ஒருவன் பேசினாலோ, நடந்தாலோ அது அன்ருதம். இதைத் தேவர்கள் தண்டிக்கின்றனர் என்கிறது வேதம். ஸத்யம் என்ற சொல்லுக்கும் அன்ருதம் என்பது தான் எதிர்ச் சொல். அஸத்யம் என்ற சொல் வேதத்தில் காணப்படவில்லை.

அஸத்யம் என்பது முக்காலத்தும் உள்ள பரம் பொருள் ஒன்று இல்லை என்று பொருள் ஆகிறது. அவ்வாறு யார் சொல்ல முடியும்? பல வேறு மதக்காரர்களும் வெவ்வேறு பெயரிட்டு அழைப்பர். ஆனால் பரம்பொருள் இல்லை என்று சொல்வதில்லை. நாத்திகர்கள் வணக்கம் அவசியமில்லை என்பரே அன்றி என்றும் நிலைத்திருக்கும் ஒரு இயற்கை நியதி உள்ளது என்பதை மறுப்பதில்லை. அதனால் ஸத்யம் என்பதற்கு எதிர்ச் சொல்லான அஸத்யம் என்ற சொல் வேதத்தில் ஒரு இடத்திலும் காணப்படவில்லை.

பரம்பொருளின் செயல்படும் சக்தி வடிவையும் உருவற்ற, குணமற்ற, வேண்டுதல் வேண்டாமை அற்ற, சுத்த சத்துவ நிலையையும் ஒரு சேர நினைக்கிறேன் என்ற கருத்தைத்தான் ஸத்யத்தை ருதத்தால் நனைக்கிறேன் என்ற மந்திரம் கூறுகிறது.

சக்தியின் திறமையைப் பெற்று நாம் செயலாற்றுகிறோம். சிவத்தின் மௌனத்தில் நம்மை ஆழ்த்தி அமைதியுறுகிறோம்.

 

 

 

படம் உதவி: வல்லமை ஓவியர் திரு. சு. ரவி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *