–சு. கோதண்டராமன்

மனிதனும் ருதமும்

amrita rig veda
மனிதர்கள் ருதத்தை அனுசரித்து நடக்க வேண்டும். அப்படி நடந்தால் கிடைப்பது அம்ருதம். எல்லாத் தேவர்களும் காப்பாற்றுவார்கள். ருதத்தை மீறினால், அதாவது அன்ருதத்தைக் கைக்கொண்டால், வருணன் தண்டிப்பார் என்கிறது வேதம்.

ருத வழி நடக்க எளிது.(8.31.13)
ருதத்தைக் காப்பாற்றுபவனை அக்னி காப்பாற்றுகிறார். (6.3.1, 6.7.1)
இந்திர வருணர்களைப் பூசிப்பவன், தானம் கொடுப்பவனாகவும், ருதத்தை அனுசரிக்கிறவனாகவும், எதிரிகளை வெல்பவனாகவும், செல்வம் பெறுபவனாகவும் இருக்கிறான். (6.68.5)

மனிதருக்கென்று தனி ருதம் உண்டா? உண்டு. சென்ற கட்டுரையில் சொன்ன மூன்று உதாரணங்களை ஆழ்ந்து கவனித்தால் தெரியவரும்.
ஆற்றைப் போலத் தன்னிடமுள்ள செல்வத்தை வாரி வழங்குவது, சூரியனைப் போல இடையறாது செயல்படுவது, பசுவைப் போலத் தன்னைச் சார்ந்தாரைக் காப்பது, மூன்றையும் போலப் பிறர்க்குப் பயன்படுபவனாக இருப்பது இவை தாம் மனிதனின் விரதம், தர்மம், ஸ்வதா, ருதம்.

1. மனிதன் தன் செல்வத்தை வாரி வழங்க வேண்டும்:

வேதத்தில் பல இடங்களில் தாசுஸ் என்ற சொல் காணப்படுகிறது. கொடுப்பவன் என்று பொருள். தாசுஸுக்குச் செல்வம், மக்கட் பேறு, புகழ், உணவு முதலியன கொடுங்கள் என்று தேவர்கள் வேண்டப்படுகிறார்கள். அதாசுஸ் (கொடுக்காதவன்) அழிய வேண்டும் என்று வேண்டுகிறார்கள்.

2. எப்பொழுதும் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்:

தேவர்கள் அளிக்கும் செல்வத்தை மனிதன் உழைப்பு என்னும் வருத்தத்தை அளிக்கும் வழியினாலேயே அடைகிறான்.(8.47.6)
தேவர்கள் எப்பொழுதும் கடுமையாக உழைப்போருக்கு நண்பர்களாக இருப்பர். (4.33.11)

3. தன்னைச் சார்ந்து வாழும், தாழ்ந்த நிலையில் இருப்போரைக் காக்க வேண்டும்:

சார்ந்து வாழ்வது மனிதனின் நியதி. பட்சிகள் மிருகங்கள் எல்லாம் சிறிது காலத்துக்குத் தாயைச் சார்ந்து வாழ்கின்றன. அதன்பின் தன் காலில் நிற்கப் பழகிக் கொள்கின்றன. பின் கடைசி மூச்சு வரை அவை சுதந்திரமாகவே இருக்கின்றன. மனிதன் குழந்தைப் பருவத்தில் பெற்றவரைச் சார்ந்து வாழ்கிறான். படிப்படியாக அந்த நிலையிலிருந்து விடுபடுகிறான். பின்னர் சமுதாயத்தில் மற்ற மக்களைச் சார்ந்து வாழவேண்டி இருக்கிறது.

வேதம் கூறுகிறது, மனிதன் செல்வத்தைப் பற்றிச் சிந்திக்கட்டும். ருதத்தின் பாதையில் தெய்வங்களைப் பக்தி மரியாதையுடன் வணங்கட்டும். அவன் தன் அறிவைக் கொண்டு சிறந்ததைப் பேசட்டும். அவன் வலிமையுள்ளோரைச் சார்ந்து வாழட்டும். (10.31.2)
ஏழைகளுக்கு உணவு அளிப்பவன் வள்ளல். அவன் போரில் வெல்கிறான். பகைவர்களும் அவனுக்கு நண்பர்கள் ஆவர். (10.117.3)
உணவு நாடி வந்த நண்பனுக்கு உணவு அளிக்காதவன் நண்பனே அல்ல. (10.117.4)
பணக்காரன் ஏழை யாசகனைத் திருப்தி செய்விக்க வேண்டும். (10.117.5)

ஆனால் சில மனிதர்கள் அறியாமையால் சில சமயங்களில் விரதத்தை மீறிவிடுகிறார்கள். எனவே தவறுகளை மன்னித்துப் பாவங்களிலிருந்து விடுவிக்கும்-படியான பிரார்த்தனைகள் காணப்படுகின்றன.

வருணனின் தர்மத்தை மீறியதற்காக நம்மை அவர் தண்டிக்காது இருக்கட்டும். (7,89.5)
தவறு இழைத்து அறியாமையால் நாங்கள் தேவர்களின் விரதங்களை மீறும்போது அக்னி எங்கள் பிழைகளைத் திருத்தி தேவர்களை உரிய முறையில் மகிழ்விக்க உதவுகிறார். (10,2.4)
யார் வேண்டுமென்றே விரதங்களை மீறுகிறார்களோ, அதற்காக வருந்துவது இல்லையோ அவர்களை தேவர்கள் அழிக்கிறார்கள். (1.130.8)

 

 

 

 

 
Graphics courtesy: http://tutudutta.blogspot.com/2012/11/the-devas-and-asuras.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *