-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

தமிழரது தலைநிமிர
தைப்பொங்கல் உதவிடட்டும்
தமிழேறி அரசாள
தைப்பொங்கல் விளங்கிடட்டும்!

வீடிழந்து நாடிழந்து
வேதனையில் நிற்பார்க்கு
விடிவெள்ளி தோன்றுதற்கும்
இப்பொங்கல் உதவிடட்டும்!

படுகொலைகள் தனைநினைந்து
பரிதவிக்கும் உள்ளமெலாம்
அதைமறந்து இனிவாழ
அமைந்திடட்டும் இப்பொங்கல்!

இனிமேலும் இத்துயர்போல்
எவர்க்குமே வாராமல்
இறைவாநீ காத்திடென
எல்லோரும் பொங்கிநிற்போம்!

மங்கலங்கள் பலநிகழ
வழிவகுக்க வேண்டுமென்று
பொங்கிடுவோம் பொங்கலினைப்
புத்துணர்வு பிறப்பதற்காய்!

சங்கெடுத்து ஊதிடுவோம்
சங்கடங்கள் ஓடிடட்டும்
பொங்கல்பொங்கி வருவதுபோல்
புதுவாழ்வு பிறந்திடட்டும்!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “புதுவாழ்வு பிறந்திடட்டும் !

  1. இதயத்தில் பொங்கல் வைத்தாய் .. இது
    இலங்கைத் தமிழருக்கான பொங்கல்!
    இருளகன்று ஒளிதொடரும் புதுவாழ்வை நம்
    இனம்பெறவேண்டி பொங்கட்டும் பொங்கல்!

    எவரெவர்க்கோ பொங்கல்வாழ்த்து
    எழுதுவதைக் காட்டிலும் இன்று
    ஈழத்தமிழருக்காய் எழுதிய இதயத்தை வாழ்த்துகிறேன்!

    அமைதியிலே நம் மக்கள் வாழ்ந்திருக்க
    அமையட்டும் புதியதோர் நல்லாட்சி!
    இனவெறியே அடங்கியதோர் இலங்கைத்தீவை
    இனிவரும் சந்ததிகள் காணட்டும்!!

    தமிழர்தம் நிலை உயர..தலைநிமிர..
    தைப்பொங்கல் பொங்கட்டும் தரணியிலே!
    யுகங்களினி புதுயுகமாய் மலர்ந்திடவே
    இடும்பொங்கல் ஈழர்நலம் காணட்டுமே!!

    அன்புடன்
    காவிரிமைந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *