சு. கோதண்டராமன்.

யக்ஞமும் ருதமும்

PhotosVallalar9

 

யக்ஞம் என்ற சொல் முதலில், தீ மூட்டிச் செய்யப்படும் வழிபாட்டை மட்டும் குறித்தது; பின்னர், நமக்கு இதற்கு முன் உதவி செய்த, அல்லது இனிமேல் உதவி செய்யக்கூடிய மேலோரிடம் காட்டப்படும் நன்றியையும் வணக்கத்தையும் குறிப்பதாக வளர்ந்தது என்று பார்த்தோம். இதன் பொருள் மேலும் வளர்ந்தது.

மேலோரிடம் உதவி கோரி வணங்குகிறோம். தன்னைச் சரணடைந்தோருக்கு உதவி செய்ய வேண்டுவது மேலோரின் கடமை ஆகிறது. எனவே யக்ஞம் என்பது மேலோரைப் போற்றல் மட்டுமல்ல, கீழோரைக் காத்தலும் யக்ஞம் என்பதன் பொருள் ஆயிற்று.

ருதத்தின் பல பண்புகளில் சார்ந்தோரிடம் பரிவு காட்டுவதும் ஒன்று என்று பார்த்தோம். அப்பொழுது பரிவு காட்டப்பட்டவர்களின் கடமை உதவி செய்தோரிடம் நன்றியுடனும் வணக்கத்துடனும் இருத்தல் என்று ஆகிறது. எனவே ருதம் என்பது கீழோரைக் காத்தலும் மேலோரைப் போற்றலும் என்று ஆகிறது.

இவ்வாறு பொருள் விரிவடைந்த நிலையில் யக்ஞத்துக்கும் ருதத்துக்கும் வேறுபாடு இல்லாமல் போகிறது. எனவே ருதம் என்ற சொல்லுக்குச் சாயணர் பெரும்பாலான இடங்களில் யக்ஞம் என்றே பொருள் கூறுகிறார். ருதத்தின் செயல் வடிவம் தான் யக்ஞம்.

உதவி செய்வோருக்கு வணக்கம் செலுத்துவது மட்டும் யக்ஞம் அல்ல, நம்மைச் சார்ந்தோருக்கு உதவி செய்வதும் யக்ஞமே என்பதன் அடிப்படையில் தான் பிற்கால ரிஷிகள் நாம் தினசரி செய்ய வேண்டிய கடமையாகப் பஞ்ச மஹா யக்ஞம் என்ற ஐந்து வகை யக்ஞங்களை ஏற்படுத்தினார்கள். அவற்றில் தேவ யக்ஞம், ரிஷி யக்ஞம், பித்ரு யக்ஞம் என்பவை மேலோருக்குச் செய்யப்படும் வணக்கம் ஆகும். நம்மை அண்டி வாழும் பசு முதலான பிராணிகளைக் காப்பாற்றுவது பூத யக்ஞம். அதிதிகளுக்கு உணவளித்தல் ந்ருயக்ஞம். சமூகத்தில் குழந்தைகள், முதியவர்கள், ஏழைகள் முதலான நம்மைச் சார்ந்து வாழும் பலருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதை வேதம் மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. யக்ஞத்தை பஞ்சயாம (ஐந்து வழிகள் உடையது) என வர்ணித்திருப்பது இதைத்தான் குறிப்பதாக இருக்க வேண்டும்.

இந்த விரிந்த பொருளில் யக்ஞம் செய்வதுதான் வாழ்வாங்கு வாழும் முறையாகும். தஸ்யுக்கள் யக்ஞம் செய்வதில்லை. அவ்வாறு யக்ஞம் செய்யாதவர்களை மித்ரனும் வருணனும் அழிக்கிறார்கள். (10.52.4, 10.124.1)

யக்ஞம் செய்வோரின் குலம் பெருக வேண்டும் என்றும் யக்ஞம் செய்யாதவரின் எண்ணிக்கை வர வரக் குறைய வேண்டும் என்றும் ஒரு மந்திரம் வேண்டுகிறது. (7.61.4)

யக்ஞம் செய்யாதவர் தடுமாற்றம் அடைகிறார்கள்.

யக்ஞம் செய்யாதவர் தடுமாற்றம் அடைகிறார்கள்.
யக்ஞம் என்பது உலகத்தின் நாபி, மையப்புள்ளி ஆகும். (8.13.29)
அது மனிதர்களை ரிஷி நிலைக்கு உயர்த்தும். (10.130.6)
அது இந்திரனின் நட்பைப் பெற்றுத் தரும். (10.62.1)
அது இந்திரனை வலுப்படுத்துகிறது.(6.34.4)
அது மனதைத் தூண்டுகிறது. (8.92.21)
தந்தை மகனுக்குச் செய்வது போல, உறவினர் மற்றொரு உறவினருக்குச் செய்வது போல, நண்பன் தன் நண்பனுக்குச் செய்வதைப் போல அக்னி யக்ஞம் செய்கிறார் என்று கூறுகிறது வேதம். (1.26.3)

இதிலிருந்து யக்ஞம் என்பது அன்புடன் செய்யப்பட வேண்டிய உதவி என்பது தெரிகிறது.

Picture Source: https://www.auro-ma-ramalingam.org/BiographicalPaintings_vallalar.php

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *