Tag: சச்சிதானந்தம்

  • தாகம் தீர்க்காத நதிகள்

     

    சச்சிதானந்தம்

     

    கொதிகலன் போலுலகைக் கதிரவன் காயவைக்க,

    மதிமுகம் சுமந்தோடிக் குளிர்ந் திருந்த,

    நதிகளின் ஊற்றுக்கண் குருடாகிக் காய்ந்திருக்க,

    விதியென நொந்துசெத்து மனிதனும் வீழுகின்றான்!

     

    வனங்கொண்ட வளங்களை தினந்தினம் அழிக்க,

    பணங்கொண்ட மமதையில் பசுமையைப் பழிக்க,

    சினங்கொண்ட மரங்களின் சாபத்தால் இப்போது,

    குணங்குன்றி ஆறுகள் நீரின்றி வறண்டன!

     

    மலர்களை, மீன்களைச் சுமந்த நதிகள்,

    மணல்வெளிப் பாதையாய் அனல்கக்கி நிற்க,

    மதகணைக் கதவெங்கும் தேனீக்கள் கூடுகட்ட,

    மலைத்தேனால் நிறைந்திருக்கும் எம்மாற்று வளங்காணீர்!

     

    ஆற்றங்கரை அரசமரம் நீரின்றிச் சாக,

    அங்குவாழும் பிள்ளையாரும் நாவறண்டு வாட,

    அழகுகங்கை சூடியவன் சடைவறண்ட கோலத்தால்,

    அகிலமெங்கும் தாகத்தில் தவித்துறைந்து நிற்கிறதே!

     

    மாதம் ஒரு செடி நடுவோம்,

    மேகஞ் சூல் கொள்ள வைப்போம்,

    மாரித் துளி பூக்க வைத்து,

    மண்ணு லகைக்  காத்திடு வோம்!

    Share
  • அறுமுகநூறு (15)

     

    -சச்சிதானந்தம்

     

    ஊருடன் கூடி இழுக்கும் போது,

    தேருடன் சுழலும் சக்கரம் போல,

    மாருத உயிர்த்தேர் சுழன்றிட முருகன்,

    மானுட யாக்கைச் சக்கரம் செய்தான்!                                                                              71

     

    வாகை மலரென எழிலுரு முருகனை,

    வாழை மலரின் சிறுமடல் போன்ற,

    வடிவுடை தீபம் ஏற்றிப் பணிந்து,

    வாமன வடிவ மனதினை விரிப்போம்!                                                                          72

     

    நோக்கத்தை மறந்து திசைமாறிப் பறக்கும்

    நெஞ்சுக்கு உண்மையைத் திடமாக உணர்த்தி,

    நல்வழிப் பாதையில் தொடர்ந்து நடத்திடும்,

    நித்தியத் தெய்வமே, நாதனே போற்றி!                                                                            73

     

    இடும்பன் சுமந்த மலையில் அமர்ந்து,

    இடும்பை நீக்கி அருளும் கடம்பா,

    நடுங்கும் நெஞ்சின் நரகத் துன்பம்,

    ஒடுங்கும் படியென் உயிரைக் காப்பாய்!                                                                          74

     

    அறுபடை வீடு என்பது உண்மையில்,

    அருள் தரும் குகனின் குறியீடு,

    அகிலம் தோறும் வாழும் மனிதரின்,

    அகமே அவனின் பெரு வீடு!                                                                                              75

     

    Share
  • அறுமுகநூறு (14)

     

    -சச்சிதானந்தம்

    வாழைக் குருத்தாகச் சுருண்டிருக்கும் மனதை,

    வாடைக் காற்றாக மென்மையாய்த் தீண்டி,

    விரிந்தகன்ற வாழ்வாக மெல்லமெல்ல விரித்து,

    வாரிக் கருணை வழங்கிடும் வேலன்!                                                                              66

     

    ஆமணக்குக் காய்போல முட்கள் முளைத்து,

    ஆந்தைகளின் அலறல்கள் அகத்தை அறுத்து,

    ஆரிருளுக் கடிமையாகிப் பேரிருளில் வாழ்ந்தவனை,

    ஆறுமுகன் அரவணைத்து அருளளித் தானே!                                                                                   67

     

    இச்சை என்னும் பறவையின் சிறகை,

    இம்மைப் பிறவியில் முழுதாய் உதிர்த்துப்,

    பிச்சை பெற்றுப் பெற்ற பிறவியைப்,

    பெற்றவ னிடமே பணிவுடன் படைப்போம்!                                                                    68

     

    வாழ்வை வெறுத்துத் தோற்றுத் துவண்டு,

    வாழும் வழிமுறை தெரியா தவர்க்கு,

    வாழும் வாய்ப்பை மீண்டும் கொடுத்து,

    வையகக் கடைமை செய்திடச் செய்வான்!                                                                     69

     

    வாழ்வை முழுதாய் வாழ்ந்து களித்து,

    வாழ்வின் பொருளை உணர்ந்த மனிதரை,

    வாழ்த்திப் போற்றி வாவென் றழைத்து,

    வேலவன் தன்னுள் கலந்திடச் செய்வான்!                                                                      70

     

    Share
  • அறுமுகநூறு (13)

     

    -சச்சிதானந்தம்

     

    விடிந்தி ருக்கும் வை கறையில்,

    படிந்தி ருக்கும் புது ஒளியே!

    படிந்தி ருக்கும் மனத் துயரைக்,

    கடிந்த கற்றும் நின் ஒளியே!                                                                                              61

     

    தணிந் தெழுந்து விளையாடும் கடலலையை,

    அணிந் தணிந்து நனைந்திருக்கும் செந்தூரனே,

    பணிந் துனது தாள்களுக் கணிவிக்கவே,

    புனைந் தேனினிய கவிதைகளே!                                                                                  62

     

    முருகனை நினைந்து இருவிழி நனைந்து,

    மருவிய மனதின் மாயை கடந்து,

    குருவென அவனைப் புனைந்தடி பணிந்து,

    கருவென குகனைப் பாவில் வைத்தேன்!                                                                         63

     

    செருக்கென்னும் சீர்கேட்டில் சிதையாமல் செம்மையுற்று,

    நெருப்பென்னும் தீமையினை நெருங்காத நெஞ்சமுற்று,

    இருள்என்னும் அறியாமை அடையாமல் ஞானமுற்று,

    பொருப்பெங்கும் பூத்தவனைப் பணிகின்ற பேறுபெற்றேன்!                                        64

     

    அதிகாலை வானம்போன்ற அழகான ஆறுமுகனை,

    நதிநீரின் சலசலப்பில் சுகமாக வாழ்பவனை,

    நொதிக்கின்ற நெஞ்சத்தின் நோய்தீர்க்கும் நாதனை,

    துதித் தென்றும் தூமனத்தைக் கொள்வோமே!                                                                65

     

     

    Share
  • அறுமுகநூறு (12)

     

    -சச்சிதானந்தம்

     

    கிரியைச் சுற்றி வலம் வருவோம்,

    விரி மனமே என்று வணங்கிடுவோம்,

    உறியைச் சுற்றிய கண்ணன் மருமகன்,

    அடியைப் பற்றி நலம் பெறுவோம்!                                                                                  56

     

    வண்ண மயில் தோகையின் தண்டாக,

    வெண்முகம் கொண்ட வடிவேலா! மனம்

    வெண்டாகிச் சருகாகி, வன்மத்திற் கிரையாகி,

    உண்டான வடு நீக்கு வேலா!                                                                                             57

     

    நடந்து நடந்து நடைபழகித் துன்பத்தைக்

    கடந்து கடந்து துயர் விலகி,

    அடர்ந்து படர்ந்த அறியாமை நீங்கி,

    தொடர்ந்து உன்னைத் தொடர்ந்திடு வேனே!                                                                   58

     

    மனம் புரண்டு, தடம் இருண்ட

    நிலை கடந்து, நிறை வடைந்து,

    இறை உணர்வில் தினம் மகிழ்ந்து,

    எனை உனக்கு அர்ப்பணிக் கின்றேன்!                                                                               59

     

    அதி மதுர மதி முகத்தில்,

    எதி ரொலிக்கும் எழில் சிரிப்பில்,

    உதித் தெழுந்த பெரும் ஒளியில்,

    உழல் வினைகள் விலகி டுமே!                                                                                           60

     

    Share
  • அறுமுகநூறு (11)

     

    -சச்சிதானந்தம்

    விமலன் பூத்த நெற்றிக் கண்ணால்,

    கமலம் பூத்த கந்தன் கண்கள்,

    அமிலம் போன்று வாழ்வை அறுக்கும்,

    அல்லல் நீக்கும் அறிவொளி ஆகும்!                                                                                51

     

    முற்றாத அழகும் முழுநிலவு முகமுங்கொண்டவனே,

    வற்றாத அறிவுக் கடலே நின்,

    பொற்பாதம் தொட்டு வணங்கிடு மிவ்வேழைக்குள்,

    உற்றாட உன்னை அழைக்கிறேன் வந்திடடா!                                                                52

     

    சந்தனமும் சரவணனும் சந்தங்களில் வந்தாட,

    சிந்தனையில் சிறுதவறும் இல்லாமல் கொண்டாட,

    தந்தனத்தோம் என்றுசொல்லித் தாமாகக் காலாட,

    கந்தனுற்றோம் என்றுசொல்லி மனமாடிக் கொண்டாடும்!                                             53

     

    திரி கொண்ட தீபக் கார்த்திகையில்,

    எரி கொண்ட கண்ணில் உதித்தவனை,

    அரி கண்ட அழகு மருமகனின்செவ்,

    வரி கொண்ட அடியை வணங்கிடுவோம்!                                                                        54

     

     

    மலையைச் சுற்றி நடந்திடுவோம், வண்ண

    மயிலைப் பற்றிப் பாடிடுவோம், உள்

    மனதைச் சுற்றும் முருகன் நினைவால்,

    மடைமை நீங்கி வாழ்ந்திடு வோம்!                                                                                  55

     

    Share
  • அறுமுகநூறு (10)

     

    -சச்சிதானந்தம்

    குதித் தோடும் மயிலினைக் கொண்டாடுவான்,

    குக் குடத்துக் கொண்டையில் நின்றாடுவான்,

    துதித் தாடும் பக்தனும் பன்பாடுவான்,

    கதித்த மலை நாதனைக் கண்டாடுவான்!                                                             46

     

     

    மிதித்தோடி மான்போல தீ தாண்டுவான்,

    மதித்தோடித் தீ மிதித்து மனமாறுவான்!

    உதித்தோடும் கதிர்காய வாடுமன்பன், மனதில்

    உதித்தாடும் கந்தனால் தீ ஏறுவான்!                                                                      47

     

    மிக்கக் கொண்ட முருகன் நினைவால்,

    சொக்கிக் கண்கள் சுழலு கிறேன்,

    முக்கண் கொண்ட ஈசனிடம், குளிர்

    நெற்றிக்கண்ணைக் கோருகிறேன் அவனைக் காண!                                            48

     

    சந்தனக் காப்பிட்ட சரவணன் முகத்தில்,

    சிந்திடும் நறுமணப் புன்னகை தவழ்ந்து,

    செந்தணல் காப்பிட்டு வடுவான நெஞ்சினுள்,

    வந்திடும் தென்றலாய், வருடிடும் மென்மையாய்!                                                   49

     

    ஆதவன் ஒளிபெற்று மலர்ந்திடும் நிலவாய்நடம்,

    ஆடிடும் ஈசனின் விழியொளியில் மலர்ந்தவனே,

    ஆனை முகனடுத்து, ஆறுமுக வடிவெடுத்து,

    ஆம்பலின் நிறமெடுத்த அழகான வடிவேலனே!                                                     50

     

    Share
  • அறுமுகநூறு (8)

     

    -சச்சிதானந்தம்

     

    செந்தூர்க் கடலின் காற்றே போற்றி,

    செந்தேன் உமிழும் இதழே போற்றி,

    செறிவுற் றுயர்ந்த அறிவே போற்றி,

    செந்தில் நாதச் சுவையே போற்றி!                                                                                   36

     

    வீரங் கத்து வெண்மதியோன் போற்றி,

    வீழும் நெஞ்சத்தைக் காத்திடுவான் போற்றி,

    வீறு கொண்டெழுந்த சம்ஹாரன் போற்றி,

    வீடு பேரளிக்கும் வேலவா போற்றி!                                                                                 37

     

    மோனைத் தொடையில் மலர்ந்தாய் போற்றி,

    மோகங் கொடுத்த மயிலோன் போற்றி,

    மோதும் அலையென எழுந்தாய் போற்றி,

    மோட்சம் கொடுக்கும் முருகா போற்றி!                                                                           38

     

    நடன மிடும் ஈசனின் மகனின்,

    வதன முகம் பேசிடும் விழிகள்,

    நுதலில் நீறு பூசிடும் முறைகள்,

    முதலில் கண்டு முழுமை அடைவோம்!                                                                           39

     

    கிடுகிடு வென உயர்ந்த மலையை,

    விடுவிடு வென விரைந்து நடந்து,

    நெடுநெடு வென நீண்ட உனது,

    முடிஅடி யினைக் கண்டு மகிழ்வோம்!                                                                             40

     

    Share
  • பொருளாதார விண்மீன்களும் சமுதாய மின்மினிகளும்………

     

    சச்சிதானந்தம்

            

    சில வாரங்களுக்கு முன்பு விஜய் டிவி யில் ஒளிபரப்பான நீயா? நானா? நிகழ்ச்சியில் சமுதாயம் மற்றும் நிச்சயமற்ற பொருளாதார சூழலில் இந்தியர்களுக்கு உண்டாகும் மன அழுத்தம் பற்றி விரிவாக விவாதிக்கப் பட்டது.

                                     ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்களுக்கு இன்றைய சூழலில் மன அழுத்தத்திற்கான காரணம், தனி மனிதப் பொருளாதாரத்தை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் தான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதிலும் பெரும்பாலானவர்கள், தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி வசதி படைத்தவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வதற்குக் காரணம், இந்த சமுதாயமும், உறவினர்களும் தங்களுக்குத் தரும் நெருக்கடிதான் என்பது போலக் கூறியது வேடிக்கையாகவும் அதே சமயத்தில் அதிர்ச்சியாகவும் இருந்தது.

                                       ஒருவர் தன்னிடம் 1௦௦ ரூபாய் இருக்கும் பட்சத்தில் 8௦ ரூபாய்க்குள் செலவுகளைத் திட்டமிட்டு 2௦ ரூபாயை சேமிக்கலாம். அந்த சேமிப்பைச் சிறுகச் சிறுகப் பல்வேறு பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து, அவரவர் தேவைகளைப் பொறுத்து 10, 15, அல்லது 20 ஆண்டுகளில் அந்த சேமிப்பின் பலனை அனுபவிக்கலாம். வாழ்க்கைத் தரத்தைச் சமுதாயத்திற்காக இல்லாமல் உண்மையாக உயர்த்திக் கொள்ளலாம்.

                                      ஆனால் பெரும்பாலானவர்கள் இவ்வாறு செய்வதில்லை. தங்களுடைய வருமானத்தைப் போல 10 முதல் 25  மடங்கு வரை அதிகமாகக் கடன் வாங்கியாவது தங்களது பொருளாதார இலக்கின் உச்சத்தை அடைய முழு மூச்சாக முயற்சி செய்து பார்க்கிறார்கள். இவ்வாறு முயல்பவர்களில் சிலர் தங்களின் இலக்கை அடைந்தும் இருக்கிறார்கள், வாழ்க்கையை வெற்றிகரமாகவும் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் திட்டமிட்டபடி செயல்படுத்த முடியாமல் உச்சகட்ட மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

                                  சரி, அதற்காகப் பொருள் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது குற்றமா? இன்று நாம் துணிந்து செயல்பட்டால்தானே அடுத்த தலைமுறை இன்னும் கொஞ்சம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும். உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றைத் தவிர “தொடர்ச்சியான முன்னேற்றம்” என்பதும் மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று என்று ஆகி விட்ட நிலையில், பொருள் சேர்க்கும் முயற்சியைத் தவறு என்று கூறவே முடியாது.

                                       விண்மீன்களைப் பிடிக்கும் ஆசையில் மின்மினிகளின் அழகைக் கண்டு இரசிக்கத் தவறுவது போல, பொருளாதார இலக்கு என்னும் விண்மீன்களை நோக்கிய நமது பயணத்தில், நண்பர்கள், உறவினர்கள் என்னும் மின்மினிகளைக் கண்டு இரசிக்கத் தவறினால் விண்மீன்களை நாம் அடைந்தும் பயனில்லை. ஒருவேளை விண்மீன்களை அடைய முடியாமல் போனால், நமக்காக எந்த மின்மினிகளும் அப்போது காத்திருக்கப் போவதும் இல்லை.

                                          உலகின் மாபெரும் பொருளாதார வல்லுனர்கள் எல்லாம் ஒரு மனிதனின் வருமானம் எவ்வளவு என்பதிலிருந்தோ, கடன் வாங்கியாவது அவன் சேர்க்கும் சொத்தின் (போலியான) மதிப்பு எவ்வளவு என்பதிலிருந்தோ அவனது பொருளாதார நிலைத்தன்மை அமையும் என்று கூறவில்லை. மாறாக ஒரு மனிதன் தனது வருமானத்தில் எவ்வளவு விழுக்காடு தொடர்ந்து சேமிக்கிறான் என்பதிலிருந்தும், கடன் வாங்கும் அவசியம் ஏற்படும் போது தனது பொருளாதார வலிமையை முழுமையாக உணர்ந்து கடன் வாங்குகிறான் என்பதிலிருந்தும்தான் அவனது வாழ்நாளின் பொருளாதார நிலைத்தன்மையும், மன அழுத்தமற்ற சுதந்திர உணர்வுடன் கூடிய மகிழ்ச்சியான மனநிலையும் அமையும் என்று கூறுகிறார்கள்.

                                    தாய்மார்களின் மொழியில் கூற வேண்டும் எனில், தங்களது பொருளாதார வலிமையைப் பொறுத்து வாழ்க்கையைத் திட்டமிட்டு, தொடர்ந்து சேமிக்கும் பழக்கத்தைப் பின்பற்றி வாழ்வது என்பது சுகப்பிரசவம் போன்றது. அந்த வலி உண்மையானது, ஆனால் சுகமானது. அந்த வலியைப் பொறுத்துக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆனால் முறையாகத் திட்டமிடப் படாமல் (சமயங்களில் முறையாகத் திட்டமிட்ட போதும் கூட) கடன் வாங்கி மேம்படுத்தப்படும் வாழ்க்கைத் தரம் என்பது அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதைப் போன்றது. அப்போதைக்கு உங்களை மயக்கத்தில் ஆழ்த்தி, வலியைத் தற்காலிகமாக உணராமல் செய்து, மகிழ்ச்சியாக வைத்திருப்பதைப் போன்று ஒரு மாயத்தை ஏற்படுத்தும். ஆனால் மயக்கம் தெளிந்தவுடன் உணரப்படும் வலியானது வாழ்நாள் முழுவதும் உங்களை இரணப்படுத்தி ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும்.

                                எனவே, தற்காலிக வலிகளைப் பொறுத்துக் கொண்டு, நீண்ட காலப் பொருளாதாரப் பலன்களை அடையத் திட்டமிட்டு சேமிக்கும் பழக்கத்தைத் தொடர்ந்து பின்பற்றி மன அழுத்தமின்றி வாழ்வோம்.

     

    Share
  • அறுமுகநூறு (7)

     

    -சச்சிதானந்தம்

     

    மழலைக்கு அமுதூட்டும் அன்னை போல,

    மனதினில் பொறுமையை மிக்க உற்று,

    மட்டற்ற கருணையால் முழுமை யுற்று,

    முருகென்னும் அருளினைப் பருகத் தந்தாய்!                                                                 31

     

    பழனியில் பழமெனப் பூத்தவன் போற்றி,

    பரமனுக் கருளிய பாலகன் போற்றி,

    பனியெனக் குளிர்ந்தவன் பாதம் போற்றி,

    படையறு வீடுகள் கொண்டவன் போற்றி!                                                                        32

     

    பழமுதிர்ச் சோலையின் தலைவா போற்றி,

    பலவண்ண எழிலுடை இறைவா போற்றி,

    பதமலர் சிவந்த பண்டிதா போற்றி,

    பதிகம் பாடிப் பணிவோம் போற்றி!                                                                                  33

     

    திருப்பரங் குன்றத் தீஞ்சுடர் போற்றி,

    திலகம் தரித்த நுதலே போற்றி,

    தில்லை நாதனின் பிள்ளாய் போற்றி,

    திசைகள் தோறும் நிறைந்தாய் போற்றி!                                                                         34

     

    திருத்தணி கைகொண்ட கந்தா போற்றி,

    தினைப்புன வள்ளியைக் கொண்டாய் போற்றி,

    திருத்தமிழ் வளர்க்கப் பிறந்தாய் போற்றி,

    திளைத்திடுவோம் உன் அழகைப் போற்றி!                                                                     35

     

    Share
  • அறுமுகநூறு (6)

     

    சச்சிதானந்தம்

     

    தக்கன் கொடுத்த தளிரை ஏற்ற,

    முக்கண் எடுத்த ஈசன் கூற்றை,

    தர்க்கம் செய்து எதிர்த்த காற்றே,

    பழனியில் வீசும் சரவணக் காற்று!                                                                                   26

     

    பாத மெனும் செம்பூவைப் பற்றிப்,

    பாட லெனும் வெண்பூவைச் சூடிப்,

    பால மெனப் பாலகனைக் கொண்டு,

    பாரிருள் வாழ்வைப் பண்புடன் கடப்போம்!                                                                     27

     

    பாடுபொருள் கிடைத்துவிட்ட பரவசத்தில் நாம்,

    பாடும்பொருள் பரமனவன் கண்ட பொருள்,

    வாடுமிருள் மனம் நீக்கி, வந்து

    கூடுமருள் குமரனருள் என்ற பொருள்!                                                                            28

     

    பாலதண் டாயுத பாணியின் பெருமையைப்,

    பாடிய படியே படிகளில் ஏறிப்,

    பாதச் சுவடுகள் பதிய நடந்தால்,

    பாவச் சுவடுகள் விலக்கிடு வானே!                                                                                  29

     

    உண வுண்ண மறுத்துச் சிரித்து,

    உடை யணிய மறுத்துக் குதிக்கும்,

    உல கின்னும் அறியா மழலையாய்,

    உன தருளை ஏற்க மறுத்தோம்!                                                                                        30

     

    படத்துக்கு நன்றி: http://www.vallamai.com/wp-content/uploads/2012/11/vayalur-murugan4.jpg

     

    Share
  • அறுமுகநூறு (5)

     

    -சச்சிதானந்தம்

     

    அச்சமுற்ற நெஞ்சம் அரகரா என்றிடட்டும்,

    அப்பனுற்ற பணிவைப் பணிவோடு கொண்டிடட்டும்,

    அப்பழுக்கு அற்று அன்புமனம் அமைந்திடட்டும்,

    அக்கினிக்கு ளுற்ற அறுமுகனைக் கொஞ்சிடட்டும்!                                                             21

     

    அச்சம் கொடுத்தான், அன்பைக் கொடுத்தான்,

    அத்தன் படைத்த அறிவைக் கொடுத்தான்,

    அல்லல் கொடுத்து, உள்ளத் தெளிவை,

    அள்ளிக் கொடுத்து அகிலம் காத்தான்!                                                                         22

     

     

    வடிவேலன் முகம்காணப் படியேறி வருவோம்,

    நெடியேறும் சந்தனக் காவடிகள் சுமப்போம்,

    கடிவாளம் இல்லாத மனதினைக் காக்க,

    அடியேனுன் னடியினில் அடிமையாய் ஆவோம்!                                                           23

     

    கந்தவேள் கண்களைக் காணு மென்னம்,

    வந்ததால் பூத்திடும் எண்ண மென்னும்,

    சிந்தையைக் குன்றெனக் கண்டு கந்தன்,

    வந்தமர்ந் தருளுவான் உள்ள மெங்கும்!                                                                         24

     

    கந்தனைப் பாடிடும் சந்த மெல்லாம்,

    வந்தெனைக் கூடிடும் சொந்த மென்று,

    பந்தமும் பாசமும் மேவி நின்று,

    விந்தைகள் செய்வது மாய மன்று!                                                                                  25

     

    படத்துக்கு நன்றி: http://www.kaumaram.com/pics/murugan_contents.jpg

     

    Share
  • அறுமுகநூறு (4)

     

    -சச்சிதானந்தம்

     

    சிதிலம் அடைந்த சிந்தனை கடந்து,

    உதிரம் அடைந்த நஞ்சினைக் களைந்து,

    எதிலும் நிலையா மனதை மறந்து,

    கதியென் றறுமுகன் மதிமுகம் தொழுவோம்!                                                                 16

     

    தா ளிரெண்டும்  தீ யாக,

    தோ ளிரெண்டும் பூ வாக,

    மே  னிஎங்கும்  நீ ரோட,

    வா என்றாய் தா விவந்தேன்!                                                                                           17

     

    பிடியோடு உறவாடும் உன்னண் ணனை,

    பிடிசாம்பல் கொண்டாடும் உன்னப் பனை,

    விடிவெள்ளி போலொளிரும் உன்னம் மையை,

    படியேறி வருகையில் பாடுகின் றேன்!                                                                             18

     

    கதிரேறி உச்சிக்கு வந்த பின்னும்,

    படியேறு மிச்சைக்கு ஏது விண்ணம்?

    நிலவேறு மிரவென்னு மினிய வெண்ணம்,

    மனமேறிக் குளிர்வதால் படி ஏறுவோம்!                                                                         19

     

    அரகரா! அரகரா! அதரங்கள் சொல்லும்,

    சரவணா! சரவணா! சிகரங்கள் சொல்லும்,

    முருகனே! முருகனே! என்றுமனம் சொல்லும்,

    பரமனின் குமரனைப் பாடிடச் செய்யும்!                                                                          20

     

    படத்துக்கு நன்றி: http://muruganarul.blogspot.com/2009/11/blog-post.html

     

    Share