அறுமுகநூறு (11)
-சச்சிதானந்தம்
விமலன் பூத்த நெற்றிக் கண்ணால்,
கமலம் பூத்த கந்தன் கண்கள்,
அமிலம் போன்று வாழ்வை அறுக்கும்,
அல்லல் நீக்கும் அறிவொளி ஆகும்! 51
முற்றாத அழகும் முழுநிலவு முகமுங்கொண்டவனே,
வற்றாத அறிவுக் கடலே நின்,
பொற்பாதம் தொட்டு வணங்கிடு மிவ்வேழைக்குள்,
உற்றாட உன்னை அழைக்கிறேன் வந்திடடா! 52
சந்தனமும் சரவணனும் சந்தங்களில் வந்தாட,
சிந்தனையில் சிறுதவறும் இல்லாமல் கொண்டாட,
தந்தனத்தோம் என்றுசொல்லித் தாமாகக் காலாட,
கந்தனுற்றோம் என்றுசொல்லி மனமாடிக் கொண்டாடும்! 53
திரி கொண்ட தீபக் கார்த்திகையில்,
எரி கொண்ட கண்ணில் உதித்தவனை,
அரி கண்ட அழகு மருமகனின்செவ்,
வரி கொண்ட அடியை வணங்கிடுவோம்! 54
மலையைச் சுற்றி நடந்திடுவோம், வண்ண
மயிலைப் பற்றிப் பாடிடுவோம், உள்
மனதைச் சுற்றும் முருகன் நினைவால்,
மடைமை நீங்கி வாழ்ந்திடு வோம்! 55
ஒவ்வொரு வரியும் தமிழ்த் தேன்!!!. தொடர்ந்து படிக்க மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஆகா ! அறுமுகனே
சந்தனமும் சரவணனும் சந்தங்களில் வந்தாட,
சிந்தனையில் சிறுதவறும் இல்லாமல் சிந்தாட,
தந்தனத்தோம் என்றுசொல்லித் தாமாக நாவாட,
கந்தனுற்றோம் என்றுதுள்ளி காவடிகள் தானாட!
தொடர்ந்து ஊக்கமளித்து வரும் திருமதி. பார்வதி இராமச்சந்திரன் மற்றும் திரு.சத்தியமணி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்.