Tag: கே. ரவி

  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 18

    கே.ரவி

    ஷோபனாவும், விஜயாவும், அவர்கள் வகுப்புத் தோழியர் பலருடன், ஒரு பெரிய பெண்கள் பட்டாளமாகவே வந்து சிந்தனைக் கோட்டத்தில் சேர்ந்து கொண்டனர். முதலில், பெண்களைச் சேர்க்கக் கூடாது, புத்த மதம் நிலைகுலைந்ததே அதனால்தான் என்றெல்லாம் என் நண்பர்கள் சிலர் தடுத்தும், சிவமும் நானும் வாதாடி, அவர்களைச் சமாதானம் செய்து பெண்களைச் சிந்தனைக் கோட்டத்தில் சேர்த்துக் கொண்டோம். அதற்கு முன் வள்ளியக்கா என்ற ஆசிரியை மட்டுமே சிந்தனைக் கோட்டத்தின் ஒரே பெண் உறுப்பினர். ஏற்கனவே எதிர்ப்புகளுக்கு இடையில் பெண்களைச் சேர்த்துக் கொண்டதால், ஷோபனாவிடம் நான் ஒரு தொலைவை அனுசரித்தேன். என்னிடமே எனக்கு பயம்! ஆனால், சிந்தனைக் கோட்டத்துக்காக நான் ஒரு பாட்டெழுத, ஷோபனா அதைப் பாடினாள்:

    சிந்தனைக் கோட்டம் வாழ்க செந்தமிழ் மணமே சூழ்க

    சேர்ந்திருக்கும் யாவருமே பாச உணர்ச்சியில் ஆழ்க

    அதே போல் ஒரு புத்தாண்டுத் திருநாளன்றும் என் பாடல் ஒன்றை அவர் பாடினார்:

    புத்தாண்டுத் திருமகளே பூரிக்க வைப்பவளே

    புன்னகையே தூவி வரவேற்கின்றோமே

    புத்துணர்வு நல்க வரம் கேட்கின்றோமே

    இந்த நெருக்கம் ஒரே ஆண்டுதான் நீடித்தது. அந்தப் பெண்கள் கூட்டம் வேறு வேறு கல்லூரிகளில் சேர்ந்து விடவும், என்னையும், சிவத்தையும் தவிர மற்ற நண்பர்கள் வெவ்வேறு கல்லூரிகளுக்குப் போய் விடவும், சிந்தனைக் கோட்டமும் மெல்லச் செயலிழந்து போனது. நானும் ஷோபனாவும் பிறகு ஓராண்டுக் காலம் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டவில்லை.

    1971-ஆம் ஆண்டு மீண்டும் ஷோபனா தன் தோழி மங்களசுந்தரியோடு ஏதோ நிமித்தமாக பலாத்தோப்பு வீட்டுக்கு வந்து என்னைச் சந்தித்தாள். நவராத்திரி நாளொன்றில், அவளும், மங்களசுந்தரியும் வந்து என் வீட்டில், “மலரின் மேவு திருவே” என்ற பாரதி பாடலைப் பாடும் போதுதான், என் உள்மனத்தின் ஓசையை நான் உற்றுக் கேட்டேன். ஷோபனா என் இதயத்துக்குள் நுழைந்து அமர்ந்து விட்டதை அந்தக் கணத்தில் நான் உணர்ந்தேன்.

    அவளும், மங்களசுந்தரியும் கேட்டுக் கொண்டபடியே நான் ‘மாணவரிஸம்’ என்ற மாத இதழ் தொடங்கினேன். அதன் ஆசியராக நானும், இணையாசிரியராக ஷோபனாவும் பொறுப்பேற்றுக் கொண்டோம்.

    நானும் மங்களசுந்தரியும் பேசிக் கொண்டே இருப்போம். ஆனால், ஷோபனா அதிகம் பேச மாட்டாள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ! நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகச் சொல்லிக் கொண்டதே இல்லை. திடீரென்று ஒருநாள் அவளிடம், “நம் திருமணம் இன்னும் 3 வருடங்களுக்குப் பிறகுதான் என்று நான் சொன்னதும், அது பற்றி அவள் மறுப்பு எதுவும் சொல்லாமல் இருந்ததும், வெரி கேஷுவல், நோ ப்ரோபஸல்! 25 ஆண்டுகளுக்குப் பிறகு நான் எழுதிய ஒரு கவிதை வரி நெஞ்சில் எதிரொலிக்கிறது: “மனமும் மனமும் தழுவிக் கொள்ள மௌனம் போதாதா!”

    நானும் ஷோபனாவும் தினமும் சந்தித்துக் கொள்வதும், நண்பன் சசியும், தோழி மங்களசுந்தரியும் எப்போதும் எங்களுடன் சுற்றுவதும், ஏன் ஷோபனாவுக்குப் பிறந்தநாள் பரிசு வாங்க என் சகோதரி மாலினியே வந்து பரிசைத் தேர்வு செய்ய உதவியதும், ஒருநாள் ஷோபனா படித்த கல்லூரியில், அவளுடைய ஆங்கில இலக்கியத்துறை மாணவிகள் கோனே நீர்வீழ்ச்சிக்கு மறுநாள் சுற்றுலா போக இருப்பதைக் கேள்விப்பட்டு, அதிகாலை 7 மணிக்கெல்லாம் அவள் படித்து வந்த ராணி மேரிக் கல்லூரி வாசலுக்குக் காரில் சென்று அந்தக் கல்லூரிப் பேருந்தில் ஏறிவிட்ட ஷோபனாவை இறங்கச் சொல்லி, என் காரில் ஏற்றிக் கொண்டு மஹாபலிபுரத்துக்குக் கடத்திச் சென்றதும், மாலை அவள் வீட்டுக்குப் போன பிறகு கோனே ஃபால்ஸ் எப்படியிருந்தது என்று அவள் அம்மா கேட்ட கேள்விக்கு நேரில் பார்த்தது போல் பதில் சொல்லி அவள் கதையளந்ததும், அதெல்லாம் ஒரு பொற்காலம்!

    சென்னை வானொலியில் “எந்தன் காதலி” என்ற தலைப்பில் கவிதையே படித்து விட்டேன் என்றால் அதைவிட ஊருக்கெல்லாம் பறையறைந்து சொல்ல என்ன இருக்கிறது. அந்தக் கவிதை ஏட்டிலும் இல்லை, என் நினைவிலும் முழுமையாக இல்லை என்பதால், இப்படிப்பட்ட கவிதைகளையும் சேகரித்து வைத்திருக்கும் நண்பன் சு.ரவியிடமிருந்து அதைப் பெற்று இங்கே தருகிறேன்:

    எந்தன் காதலி எப்படி இருப்பாள்

    என்பதை இங்கே இயம்பிட வந்தேன்

    நடனத் தினவை நடையிற் காட்டி

    நாடகப் பார்வையில் நளினமும் பூட்டி

    மாடத்தில் உலவும் மாருதம் போலென்

    இதயத் துள்ளே இலங்கும் தேவதை

    மதனன் விடுத்த மலர்க்கணை இன்பப்

    பதத்தில் இறக்கிய பாகு பழகும்

    விதத்துக் கேயொரு விளக்கம் ஆவாள்

    புன்னகை என்றொரு புதுப்பெய ராலே

    ஜலத ரங்கத்தின் சப்தம் எழுப்பும்

    அலங்காரக் கோயில் அவள்நுதல் நல்ல

    மங்கலத் தாமரை மலர்ந்த தடாகம்

    எங்குசென் றாலும் எந்தன் நெஞ்சின்

    நிழல்போல் வருவாள் நித்திலக் குவியல்

    தழலிடை இருப்பது போலத் தோன்றும்

    சிரித்த வாயால் சிணுங்கி மகிழ்வாள்

    கோலம் இழைத்த குளிர்நில வேபோல்

    நாணம் படர்ந்த கன்னக் கனிகள்

    தளிர்க்கரத் தாளின் தனிச்சிறப் பாகும்

    அவளுடல் அசைவுகள் அருங்கலை விளக்கம்

    சுவையூட்டும் அந்தச் சுந்தரச் சிற்பம்

    அடிக்கடி நெற்றியில் விழும்குழல் ஒதுக்கலை

    எப்படிப் புகல்வது அதுவொரு புதுக்கலை

    விழியின் சுழற்சி விந்தை முயற்சி

    அழியா அழகின் அனுபவக் கவர்ச்சி

    நேரிழை யாளிவள் நெளிகுழல் போல

    நெருங்கிய உறவும் நீடிய வாழ்வும்

    எம்மிரு வர்க்கும் என்றும் இருக்கும்

    இவ்வித மாக இருக்கும் அந்தச்

    செவ்விதழ்க் கொடியுடன் சேர்ந்து

    இன்பக் கனவில் எனைமறப் பேனே

    அந்தக் காலக் கட்டத்தில் எத்தனைக் காதல் கவிதைகள் ஊற்றெடுத்து வந்தன! ஒருநாள் வருகிறேன் என்று சொல்லி விட்டு அவள் வரமுடியாமற் போனதும் எழுதிய கவிதையின் சில அடிகள் மட்டும், அங்கொன்றும் இங்கொன்றுமாக, இன்னும் நினைவில் இருக்கின்றன:

    வடமிட் டிழுத்தால் வராத தேருண்டா

    புடமிட்ட பொன்னே புரிந்து கொள்ளடி

    . . . . . . .

    நீவர வேண்டாம் நான்வரு கின்றேன்

    நேரம் கடந்தால் நேற்றைய கதைதான்

    முதல்நாள் கடற்கரையில் சந்தித்துக் கொண்டோம். கடற்கரையை விட்டால் இளம் காதலர்களுக்குப் புகலிடம் வேறு உண்டோ? மறுநாள், அந்த நிகழ்வுகளை நினைத்துக் கொண்டேன்.

    சோகத்தில் இழைகின்ற இசையைப் போல

    சொப்பனத்தில் இழைத்திட்ட பொழுதைப் போல

    மேகத்தில் தோன்றுகிற வண்ணம் போல

    மேல்வண்ணம் இல்லாத ஏகாந் தத்தில்

    மோகத்தீ கொளுத்தியதில் மூழ்கி மூழ்கி

    முத்தமழை பொழிகின்ற இருவர் காம

    யாகத்தில் உணர்கின்ற இன்ப மெல்லாம்

    யாருக்கும் புரியாத விந்தை யன்றோ

     

    ஆடையெலாம் அர்த்தத்தை இழந்து விட்ட

    ஆனந்த நிலையினிலே ஆழ்ந்தி ருந்து

    வாடையினால் வாட்டமுடி யாத வண்ணம்

    வடவத்தீ போல்வெம்மை விளையச் செய்து

    பூடகமாய் இருந்தசில புதிர்க ளெல்லாம்

    புரிந்துவிட்ட நினைப்பினிலே புல்ல ரித்து

    கூடலிலே தமிழ்தானா வளரும் இன்பம்

    கூடத்தான் வளருமென்று கூறிக் கொண்டு

     

    நாடகமாய் நாமிருந்த நிலைமை தன்னை

    நள்ளிரவில் நினைத்தாயா நடுங்கி னாயா

    சூடுவதற் கரியதொரு மலரே வெய்யில்

    சுடுவதற்கும் அரிதான அல்லி நீதான்

    பாடுவதற் கொருராகம் வேண்டும் இன்பம்

    பரிமளிக்க நீயெனக்கு வேண்டும் பக்தர்

    தேடுகின்ற தெய்வங்கள் நமக்கு வேண்டாம்

    தெளிவான காதல்தான் நமது தெய்வம்

    போட்டி, பலத்த போட்டி! ஆம், நான் விவேகானந்தா கல்லூரியில் தத்துவம் இளங்கலை மாணவனாக இருந்த போது நிறைய படித்தேன். ப்ளேடோ முதல் கார்ல் மார்க்ஸ் வரை, ப்ரும்ம சூத்திரங்கள் முதல் ராதாகிருஷ்ணன் வரை எல்லா அறிவு மூலங்களையும் படித்துப் பயில வேண்டுமென்ற தாகம் ஒரு புறம், காதல் வயப்பட்ட வாலிபத்தின் தாக்கம் ஒருபுறம், சமுதாயத்தைச் சீர்திருத்தி நல்லுலகம் காணத் துடித்த நோக்கம் ஒருபுறம், இப்படிப்பட்ட போட்டிகளுக்கு நடுவில் சிக்கிக் கொண்டேன். ஒரு கவிதையில் இந்தப் போட்டியை இப்படித்தான் குறிப்பிட்டிருந்தேன்.

    கம்பன் வந்து கதவை இடிக்கிறான்

    வாத்ஸ்யா யனனோ வம்புக் கிழுக்கிறான்

    அசந்தர்ப்ப மாக அவசரப் பட்டு

    வசந்தம் வந்தெனை வரவேற் கின்றது

    மனத்தில் உண்மையான ஆனந்தம் குதூகலமாகப் பொங்கிப் பெருகும் தருணங்கள் எவர் வாழ்விலும் அடிக்கடி நிகழ்வதில்லை. எப்பொழுதேனும், சில கணங்களே அப்படி அமைகின்றன. அந்தக் கணங்களைச் சிதைக்கவோ, ஆனந்த அனுபவங்களைத் தடுக்கவோ வேறு யாருக்கும் உரிமை கிடையாது. காதற் கணங்கள் கடவுளின் பரிசுகள். நல்ல வேளை எங்கள் இருவர் வீட்டிலுமே எங்கள் காதலுக்குத் துளிக்கூட எதிர்ப்பு எழவில்லை. அது எங்கள் மேல் பெரியவர்கள் வைத்திருந்த நம்பிக்கையின் வெளிப்பாடு.

    1973-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் நாள், எங்கள் பால்ய விவாகம், எனக்கு 20, அவளுக்கு 19, சென்னை, ஹேமமாலினி திருமண மண்டபத்தில், திருமதி எம்.எல்.வி. கச்சேரியுடன், அன்றைய தமிழ்நாடு ஆளுநர் உட்பட, அத்தனைப் பெரியவர்களும் வந்து வாழ்த்த, மிகச்சிறப்பாக நடந்தேறியது.

    ravi

    என் திருமண வரவேற்பில், என் அத்தனை நண்பர்களுக்கும் நடுவே சிவம் மட்டும் இல்லை. ஏன் என்று எனக்கும் புரியவில்லை. வரவேற்பு முடியும் தருணம், சிவம் வேகமாக மண்டபத்துக்குள் நுழைகிறான். அவன் கையில் ஒரு பெரிய கதவு, இல்லை, கதவு அளவில் கண்ணாடி பிரேம் போட்ட வாழ்த்து மடல். “இதுக்குத்தான் இவ்வளவு நாழியாகி விட்டது” என்கிறான். அதில் இருந்த ஒரு கவிதை, அவ்வளவு கூட்ட நெருக்கடியிலும், ஷோபனாவைப் போலவே என் நெஞ்சில் நுழைந்து நீங்கா இடம் பெற்று விட்டது:

    ஒருநாள் கண்டாய் மறுநாள் நின்றாய்

    உயிரே அவர்தான் என்கின்றாய் – அவர்

    வருநாள் தானே திருநாள் என்று

    மனமே எனையேன் தின்கின்றாய்

    சிவத்தின் கவிதை ரசனையை மிகவும் ரசித்தேன். அந்தக் கவிதையை எழுதியவர், “இரவு பகல் மாலை எழுதுவதே வேலை” என்று கவிதையில் பிரகடனம் செய்த டாக்டர் மின்னூர் சீனிவாசன்.

    25 ஆண்டுகளுக்குப் பிறகு, ஷோபனா எழுதிய கண்ணன் பாடல்கள், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், வாணி ஜெயராமும் பாட, ரெஹானின் பின்னணி இசையோடு பதிவாகி, “கிரிதாரி” என்ற இசைப்பேழையாகத் தயாரானது. அதை வாணி மஹாலில் வெளியிட்டுப் பேசும்போது, எங்கள் திருமண வைபவத்தை மறவாமல் நினைவு கூர்ந்து, அதில் நாங்களும், எங்கள் தோழர், தோழியர் கூட்டமுமாக எப்படி அது ஒரு கோலாகலமான இளமைத் திருவிழாவாக இருந்தது என்று குறிப்பிட்டு, அதைத் தாம் கண்டு களித்ததைப் பகிர்ந்து கொண்டார் கவியரசி செளந்தரா கைலாசம் அம்மையார்.

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 17

    கே.ரவி

    ஒருநாள், 1969 என்று நினைக்கிறேன், சிவம் வீட்டுக்குப் பரபரப்பாகப் போகிறேன். நம்ம சுகி சிவம்தான்!

    ‘உடனே என்னுடன் வா. பி.எஸ்.ஹைஸ்கூலுக்குப் போகிறோம்” என்று சிவத்தை என் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு மயிலை பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி வளாகத்துக்குப் போகிறேன். அங்கே, . . . !

    அப்போது சிவம், அமிர்தலிங்கம் (அதாங்க, வசந்தப்பிரியன்), சீனி சுந்தரராஜன், சசீந்திரநாதன் என்ற சசி, வள்ளி, நான் ஆகிய ஆறு பேரும் மற்ற சில நண்பர்களோடு சேர்ந்து சிந்தனைக் கோட்டம் என்ற இலக்கிய அமைப்பை நிறுவி, நடத்தி வந்தோம். (இத்தொடரின் 12-ஆவது பகுதியில் உள்ள புகைப்படத்தில் அமிர்தலிங்கம் தவிர மற்ற ஐவரையும் காணலாம். அதில் சிவமும், நானும் இருக்கிறோம் என்று நாங்கள் சத்தியம் செய்தால் கூட நீங்கள் நம்புவது கடினம்தான்!). முதன்முதலாக பாரதியாரின் வரலாற்றை முழுநூலாக எழுதி “பாரதி லீலை” என்ற பெயரில் வெளியிட்ட சக்திதாசன் சுப்பிரமணியத்தின் ஒரே மகன் சசி.

    அந்தச் சமயத்தில் அமராராகியிருந்த டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார் பெயரில் “சிதம்பரநாதனார் சிந்தனைக் கோட்டம்” என்றுதான் முதலில் தொடங்கினோம். அவர் அமிர்தலிங்கத்தின் தாய்மாமன். சில நாட்களுக்குப் பிறகு, அது பொதுப்படையான நிறுவனமாக இருக்க வேண்டும் என்று கருதிச் ‘சிந்தனைக் கோட்டம்’ என்றே தொடர்ந்து நடத்தி வந்தோம். அப்படியோர் இலக்கிய அமைப்பை நிறுவி நடத்த வேண்டும் என்று எங்களைத் தூண்டியவர் எங்கள் தமிழாசான் சிதம்பரம் சுவாமிநாதன்.

    “செந்தமிழ்த் தோட்டம் சிந்தனைக் கோட்டம் சேவையில் நாட்டம் செலுத்துவோர் கூட்டம்” என்று தனக்கே உரிய அடுக்குமொழி வசனத்தில் அந்த மன்றத்தின் கொள்கையை அவரே வரையறை செய்து தந்திருந்தார்.

    விஸ்வம்
    விஸ்வம்

    நான் ஏழாம் வகுப்பில்தான் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். என் தந்தை விஸ்வம்தான் சேர்த்து விட்டார். அவருக்கு என் சரியான பிறந்த தேதி கூட நினைவில்லை. தவறாக, 09-01-1952 என்று தந்து விட்டார், ஓராண்டும் நாலு நாட்களும் கூடுதலாக! அவர் வாழ்நாள் முழுதும் ஆசிரியராகவே பணியாற்றியவர். ஆசிரியர் தொழில், நாடகங்கள் எழுதி நடிப்பது இந்த இரண்டும்தான் அவருடைய வாழ்க்கையே. இவை தவிரக் குடும்ப விவகாரங்களில் எப்பொழுதுமே அதிக ஈடுபாடு செலுத்த மாட்டார். ஆனால் தாம் சிரமப்பட்டு ஈட்டும் பணத்தையெல்லாம் குடும்பத்துக்கே தந்து விடுவார். அவருக்கு நாடகம் தவிர வேறு கெட்ட வழக்கங்கள் கிடையாது,(நாடகக்காரர்கள் மன்னிக்கவும்). நாடகமே வாழ்க்கை என்று இருந்த அவருக்கு வாழ்க்கையில் நாடகமாடத் தெரியவில்லை. மற்றவர்களைப் புகழும் வழக்கம் மட்டும் அவருக்கு இருந்திருந்தால் அவர் சினிமாவில் பெரிய நடிகராகவோ, இயக்குநராகவோ வந்திருக்கக் கூடும். மற்றவர்களைப் புகழ்வதில்லை என்பதை அவர் ஒரு விரதமாகவே பயின்று வந்தார்.

    திருச்சியில், 1940-50 களில் லேடி விஸ்வம் என்றால் எல்லாருக்கும் தெரியும். நாடக

    லேடி விஸ்வம்
    லேடி விஸ்வம்

    மேடைகளில் பெண் பாத்திரத்திலேயே அவர் அதிகம் நடித்திருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பின்னாளில் இருந்த பழனியாண்டி, வீனஸ் ரத்னம் அய்யர் (இயக்குநர் மணிரத்னத்தின் தந்தை) மற்றும் சிலரோடு விஸ்வம் திருச்சியில் விடாமல் நாடகம் நடத்தி வந்ததும், அவர்கள் எல்லாரும் தினமும் நாடக ஒத்திகை முடிந்து இரவு 11 மணிக்கு மேல் எங்கள் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியவுடன் என் அம்மா, அதாவது என் வளர்ப்புத் தாயார் (என் வளர்ப்புத் தந்தை கல்யாணராமனின் இரண்டாவது மனைவி ‘அலங்காரம்’) அவர்களுக்கெல்லாம் உணவு பரிமாற, அவர்கள் உண்டு விட்டுத் திண்ணையில் உறங்கிய கதையும் நூறுமுறை என் வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    அவருடைய நாடகக் குழுவில் பயின்ற ஒரு நடிகர் கடைசிவரை அவரை ‘வாத்தியார்’ என்றே அழைத்து வந்தார். 1972-ல் ஒருநாள், ஏ.வி.எம். ஸ்டூடியோவில் அந்த நடிகரும், இயக்குநர் ச்ரீதரும் அமர்ந்திருந்த போது நான் அங்கே சென்று என்னைக் கல்யாணராமனின் மகன் என்று அந்த நடிகரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். எங்கள் குடும்ப விவகாரம் முழுதும் தெரிந்து வைத்திருந்த அந்த நடிகர், ” வாத்தியார் செளக்கியமா” என்று கேட்டார். நான் திகைத்த போது, “உன் தந்தை விஸ்வம் சாரைத்தான் குறிப்பிடுகிறேன்” என்று விளக்கினார், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

    சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் நான் சேரும் போது எனக்குத் தமிழ் சரியாக எழுத வராது. முதலில் மந்தைவெளியில் உள்ள ‘பான்செகர்ஸ்’ என்ற கான்வெண்ட் பள்ளியிலும், பிறகு செயிண்ட் பீட்டர்ஸ் என்ற ஆங்கிலோ இந்தியப் பள்ளியிலும் 6-ஆம் வகுப்பு வரை பயின்றதால், தமிழ்ப் பயிற்சி இல்லாமல் இருந்தேன். ஆனால், செயிண்ட் பீட்டர்ஸில் ஜேம்ஸ் மிஸ் என்ற ஆசிரியை ‘மான்விழி’ என்றொரு நாடகம் போட்டபோது, எங்கள் வகுப்பில் எல்லாரையும் தமிழ் படிக்கச் சொல்லிக் கேட்டு, மான்விழி என்ற கதாநாயகியாக நடிக்க என்னைத் தேர்வு செய்தார். ‘உன் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது’ என்று பாராட்டினார். அதுதான் நான் தமிழ் ஆர்வம் கொள்ள என் நெஞ்சில் தூவப்பட்ட முதல் விதை. அப்போது நான் சுமார் பத்து வயதுச் சிறுவன். சிறுவர் அரங்கில் (பின்னாள் கலைவாணர் அரங்கம்) நடந்த குழந்தைகள் தினவிழா நாடகப் போட்டியில் ‘மான்விழி’ நாடகத்தில் நடித்து நான் முதற் பரிசு பெற்றதும் என் தந்தை விஸ்வம் பூரித்துப் போய்விட்டார், தனக்கு ஒரு கலைவாரிசு வந்து விட்டது என்று.

    ஏழாம் வகுப்பில் சாந்தோம் பள்ளியின் ஆங்கில மீடியத்தில் நான் சேர்ந்த புதிதில், சிதம்பரம் சுவாமிநாதன்தான் எங்கள் தமிழாசிரியர். நான் விடைத்தாளில் கோழி என்பதைக் ‘கேழி’ என்று எழுதியிருந்ததைப் பார்த்துக் கோபத்தோடு அதைக் கசக்கி என் முகத்தின் மீது விட்டெறிந்தார். மற்ற மாணவர்கள் முன்னால் எனக்கு அவமானமாக இருந்தது. ஏழாம் வகுப்பு முடிந்ததும், கோடை விடுமுறையில் நான் தினமும் சென்னை, மவுண்ட் ரோட்டில் இருந்த மத்திய நூலகத்தில் 3, 4 மணிநேரம் செலவிட்டுத் தமிழ் இலக்கிய நூல்களை எடுத்துப் படித்தேன். வாய்விட்டுப் படித்தேன், நூலகப் பணியாளர் ‘உஸ்’ என்று அடக்கும் வரை. நளவெண்பா, கலிங்கத்துப் பரணி, பாரதிதாசன் பாடல்கள், சிலப்பதிகாரம் என்று என் தமிழ் இலக்கியப் பயிற்சி வளர்ந்தது. கூடவே நன்னூல் இலக்கணத்தையும் பயின்றேன். இரண்டு மாதங்களில் எப்படி நான் அவ்வளவு படித்தேன்? இப்பொழுது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு வெறி என் பிடறியைப் பற்றி உந்தியதை உணர முடிந்தது.

    8-ஆம் வகுப்புப் படிக்கும் போது, சிவம், சீனி சுந்தரராஜன், சசி, போன்ற நண்பர்களுக்குக் கலிங்கத்துப் பரணியின் கடைத்திறப்பு அதிகாரத்தைப் படித்துக் காட்டி விளக்கிப் பாடம் எடுத்தது இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளது. அந்த அதிகாரத்தில் உள்ள சிருங்கார ரசப் பாடல்கள் அந்த வயதில் எங்களை ஈர்த்ததில் வியப்பொன்றும் இல்லையே!

    மதுர மானமொழி பதற வாள்விழி சிவப்ப வாயிதழ் வெளுப்பவே

    அதர பானமது பான மாகவறி வழியும் மாதர்கடை திறமினோ

    — — —

    வருவார் கொழுநர் எனத்திறந்தும்

    வாரார் கொழுநர் என அடைத்தும்

    திருகும் குடுமி விடியளவும்

    தேயும் கபாடம் திறமினோ

    இப்படிப் பல பாடல்கள் பல்கி வரும் கடைத்திறப்பு அதிகாரம் முழுவதையும், படித்தோம்.

    நானும் கவிதை எழுதத் தொடங்கினேன். என் வகுப்பு நண்பர்கள் சேர்ந்து, சீனி சுந்தரராஜன் கைவண்ணத்தில், ‘தமிழ்ச்சங்கு’ என்ற கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினோம். மூன்று, நான்கு இதழ்கள் வந்தன. அதில்தான், என் முதல் கவிதை வெளியானது. அதன் தொடக்க வரிகள் மட்டும் இன்னும் என் நினைவில் இருக்கின்றன:

    அகத்திய முனிவரின் அகத்தினில் உதித்தவள்

    என்ன பொருத்தம் பார்த்தீர்களா?

    “தழல்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்” என்று கவிச்சக்கரவர்த்தி போற்றிய அகத்திய மாமுனிவரின் அருளோடு என் கவிதைப் பயணம் தொடங்கியது. அந்தக் காலக் கட்டத்தில் எழுதிய கவிதைகள் நிறைய தொலைந்தும், மறந்தும் போய்விட்டன. ஒன்றிரண்டு மட்டும் நினைவுப் பேழையில் நீங்கா இடம் கொண்டன:

    ஒளிதந் தெரியும் விளக்கின் திரியும்

    கரியா கத்தான் திரியும் – நெஞ்சக்

    களிப்பை நல்கும் வெடியின் திரியும்

    கரியா கிப்போய் மறையும் – ஆனால்

    விளக்கில் உள்ள திரியின் நல்ல

    சேவை உலகில் நிறையும் – இந்த

    விளக்கம் தன்னை ஆய்ந்து பார்த்தால்

    விந்தை வாழ்வு புரியும்

    என்றும் வாழும் விளக்கின் திரிகள்

    ஏசு புத்தர் காந்தி

    பொன்றும் வெடியின் திரியே மற்ற

    பொல்லா உயிர்கள் எல்லாம் – இந்த

    உண்மை தன்னை உணர்ந்து நல்ல

    விளக்கின் திரிபோல் நாமே

    வண்மை கொண்டு மனிதராக

    வாழ்வோம் வாழ்விப் போமே

    முதலில் சொன்னேனே, 1969-ல் ஒருநாள் சிவத்தை அழைத்துக் கொண்டு பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி வளாகத்துக்குப் போனேன் என்று; அதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன், நான் சைக்கிளில் போய்க்கொண்டிருக்கும் போது, பள்ளி மாணவி ஒருத்தி நடுத்தெருவில் என்னை வழிமறித்தாள். அவள் சொன்னாள்: “என் பெயர் விஜயா. செயிண்ட் ஆண்டனீஸ் உயர்நிலைப் பள்ளி மாணவி. நானும் என் வகுப்புத் தோழிகளும் தமிழில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளோம். நீங்கள் ஏதோ மன்றம் நடத்துவதாகக் கேள்விப் பட்டோம். அதில் சேர விரும்புகிறோம்.”

    “பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு நான் நகர்ந்து விட்டேன். அவள் மீண்டும் என்னைச் சந்தித்தாள். “நானும் என் தோழியும்shoba1 ஒரு பேச்சுப் போட்டியில் கலந்து கொள்கிறோம். நீங்கள் வந்து பார்க்கலாமே” என்று அழைத்தாள். சரியென்றேன்.

    விஜயா சொன்ன நாளும் வந்தது.

    ஒரே வினாடியில் காலச் சுவடியின் பக்கங்களை வேகமாக ஒரு நொடிக்குள் சுமார் முப்பது ஆண்டுகள் பின்னோக்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு, மீண்டும் 1969-ஆம் ஆண்டுக்கே மீண்டுவிட்டேன். பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி அரங்கம்; என் அருகில் சிவம். அரங்கத்தில் விஜயா குறிப்பிட்ட அவள் தோழி, குருநானக் தேவரைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் குரலொலி எனக்குக் கேட்கவில்லை, முகவொளி நெஞ்சை நிறைத்திருப்பதால். பிறகு சிவத்துக்கும், எனக்கும் அந்தத் தோழியை விஜயா அறிமுகம் செய்து வைக்கிறாள்: “இவள் பெயர் ஷோபனா!”

    அந்தக் காட்சியின் மின்னல் அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை, நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகியும்!

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 16

    கே.ரவி

    ramanathan 2657மாமா, அதாவது என் வளர்ப்புத் தந்தை, கல்யாணராமனிடம் மேலோங்கி இருந்த குணம் விருந்தோம்பல். வருவோர்க்கெல்லாம் வீட்டில் நல்ல சாப்பாடு போட வேண்டும் என்பதில் அவர் விடாப்பிடியாக இருந்தார். 1956-57, அவர் சென்னை, ஶ்ரீராம் நகரில் திரைப்படத் தயாரிப்பு அலுவலகம் திறந்த போதே அதில் தினமும் சிற்றுண்டி, சாப்பாடு செய்து போட ஆட்கள் அமர்த்தி விட்டார். அவருடைய குருநாதர் கே.சுப்பிரமணியத்திடம் இருந்து வந்த வழக்கம் அது. வெளியே எங்கேயும் எதுவும் சாப்பிடாத எம்.ஜி.ஆர் அவர்கள் கூட, இசையமைப்பாளர் ஜி.ராமநாதன், தஞ்சை ராமையாதாஸ் ஆகிய இருவருடனும் சேர்ந்து காலைச் சிற்றுண்டி அருந்த, அப்பொழுது தினமும் எங்கள் அலுவலகத்திற்கு வந்துவிடுவார். மற்ற தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தங்கள் படப்பாடல்களுக்கு ஜி.ராமநாதனின் இசையும், ராமையா தாஸின் வார்த்தைகளும் பெற வேண்டி அங்கேதான் வந்து சிற்றுண்டி அருந்தி விட்டுக் காத்திருப்பார்கள். நாலு வயதுச் சிறுவனான என்னைத் தம் மடியில் அமர்த்திக் கொண்டே ஜி.ராமநாதன் ஆர்மோனியத்தில் பல பாடல்களுக்கு மெட்டுப் போட்டிருக்கிறார். என் இசை ஈடுபாடு எப்படி வந்தது தெரிகிறதா? கருவில் வந்தது பாதி, ஜி.ராமநாதன் உருவில் வந்தது மீதி. பத்து விரல்களிலும் வைரக்கல் மோதிரங்கள் பளபளக்க அவர் ஆர்மோனியம் வாசித்த அழகை அருகிருந்து ரசிக்கும் பேறு எனக்குக் கிட்டியது.

    ஜி.ஆர் மடியில் அமர்ந்து இசையின் ஆரம்பப் பாடத்தைச் செவிவழியே வாங்கிக் கொண்ட நான், ஏறக்குறைய 1பத்தாண்டுகள் கழித்துக் கல்லூரியில் காலடி எடுத்து வைத்ததும் கிடார் கற்றுக் கொள்ள ஒரு இசை மேதையிடம் சேர்ந்தேன். அவருக்கு வீடு கிடையாது. ஒண்டிக்கட்டை. சென்னை, லஸ் முனையில் இருந்த ஒரு லாட்ஜ் மாடியில் நிரந்தர அறை வாடகைக்கு எடுத்திருந்தார். அங்கேதான் குடியிருந்தார். மெய்யாகவே எப்போதும் குடியில் இருந்தார் என்று கூடச் சொல்லலாம். அவர் அறையில் ஒரு ப்யானோ இருந்தது. அது மூடியே இருக்கும். எப்பொழுதாவது அவர் அதைத் திறந்து வாசிப்பார். முதலில் எனக்கு ‘ட்விங்கிள், ட்வுங்கிள் லிட்டில் ஸ்டார்’, ‘ஜாக் அண்ட் ஜில்’ ஆகிய மழலைப் பாடல்களை கிடாரில் வாசிக்கச் சொல்லிக் கொடுத்தார். இரண்டு மாதங்கள் இந்த இரண்டு பாடல்களிலேயே கழிந்தன. எனக்குப் பொறுமை இல்லை. அத்துடன், ப்யானோ வாசிக்க வேண்டும் என்ற ஆசையும் எழுந்தது. ஒருநாள், என்னை ‘ஜாக் அண்ட் ஜில்’ வாசிக்கச் சொல்லி விட்டு, எப்பொழுதும் போல் வெளியே தனக்கு ஸ்ருதி ஏற்றிக் கொள்ள அவர் சென்ற சமயம் ப்யானோவைத் திறந்து தடவ ஆரம்பித்தேன். திடீரென்று அவர் வந்து விட்டார். ‘நீ கிடார் வாசிக்கும் லட்சணத்திற்குப் ப்யானோ ஆசையா’ என்று கோவமாக என்னைத் திட்டி விட்டு அனுப்பி விட்டார். அதோடு முடிந்தது என் கிடார் பயிற்சி. ஆனால், அந்த மாமேதையிடம் வந்து பல பிரபல இசையமைப்பாளர்கள் தாங்கள் மெட்டமைத்த பாடல்களுக்கான பின்னணி இசை முறைப்பாட்டை, ஆங்கிலத்தில் அரேஞ்மெண்ட் என்பார்கள், எழுதிக் கொண்டு போவதைப் பார்த்திருக்கிறேன். அதை விட, அவரிடம்தான் இன்னொரு மாமேதை இசை கற்றுக் கொண்டு பின்னாளில் முன்னணி இசையமைப்பாளராக உருவானார். குருவான மாமேதை தன்ராஜ் மாஸ்டர். அவரிடம் உருவான மாமேதை இளையராஜா.

    தன்ராஜ் மாஸ்டரிடம் கிடார் வகுப்புச் சடார் என்று ஒரு முடிவுக்கு வந்தும், இசையுடன் எனக்கிருந்த தொடர்பு விட்டுப் போகவில்லை. நான் இசையை விட்டாலும் அது என்னை விடுவதாகத் தெரியவில்லை.

    போன பகுதிகளில் குறிப்பிட்ட கவிஞர்களுக்கெல்லாம் காலத்தாலும், நாத யோகம் பயிலும் சீலத்தாலும் முற்பட்ட ஒருவருடைய பாடல்கள் என்னை ஆட்கொண்டன. அந்தக் கிழவரோடு நேரடியாக நான் பேசிப் பழகியதில்லை. மார்கழி மாதங்களில் மயிலைக் கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றி நாலு மாட வீதிகளிலும் அதிகாலைப் பொழுதில், வெடவெடக்கும் குளிரில் அவர் பஜனை செய்து கொண்டு வீதிவலம் போகும் போது நாலைந்து முறை நானும் அவர் திருக்கூட்டத்தில் ஒருவனாக, “நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான் நடுவே” என்று மணிவாசகப் பெருமான் பாடியது போல் சென்றிருக்கின்றேன். அவ்வளவுதான். என்றாலும் எனக்கு அந்த இளம் வயதில் (அப்போது புகுமுக வகுப்பில் பயின்று கொண்டிருந்தேன்) யாருக்கும் கிடைப்பதற்கு அரிய ஒரு வாய்ப்புக் கிட்டியது.

    என் தந்தை விஸ்வம் வித்யா சாகர் என்றொரு பள்ளி நடத்திக் கொண்டிருந்தார். அது சென்னை, மயிலை, சாயிபாபா கோயில் எதிரில் உள்ள கபாலி நகரில் இருந்தது. அந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் பள்ளிச் சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடக்கும். என் மற்றொரு சகோதரி மாலினிதான் முழுப் பொறுப்பும். அதில், அந்தக் கவிதைத் தாத்தாவின் பாடல்களை வைத்து அந்தத் தாத்தாவின் மகள் ‘பாரிஜாதம்’ என்ற நாட்டிய நாடகம் உருவாக்கித் தந்திருந்தார். அதில் கதைப் போக்குக்குச் சில பாடல்கள் இல்லாத குறையைப் போக்கச் சில பாடல்களை என் சகோதரி என்னை எழுதச் சொல்லி உருவான அந்த நாட்டிய நாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்தச் சமயத்தில் வித்யா சாகர் என்ற அந்தப் பள்ளியில் உயர்வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பானுரேகா என்ற பெண்மணியுடன் எனக்கு நட்புண்டானதும், ஜெமினி கணேசன் – புஷ்பவல்லி மகளான அவர் பின்னாளில் ரேகா என்ற புகழ்பெற்ற ஹிந்தி நட்சத்திரமாக ஜொலித்ததும் நம் கவிதைச் சரிதைக்குத் தேவையில்லை என்பதால் விட்டு விடுகிறேன்.

    நான் குறிப்பிட்ட கவிதைத் தாத்தா பழம்பெறும் பாடலாசிரியர் பாபனாசம் சிவன் அவர்கள். அவருடைய பாடல்களோடு என் பாடல்கள் கலந்து ஒரு நாடகம் உருவானது என்று சொன்னால் அது தெய்வம் தந்த வரமாகத்தானே இருக்க முடியும்!

    பைந்தமிழ் மலர்ப்பா மாலை சூட்டியுன்PapanasamSivann
    பாதமலர் பணிந்து பாடவும் வேண்டும்
    சிந்தையும் என் நாவுமெந் நேரமும் – உன்
    திருப்பெயர்ப் புகழ் மறவாமையும் வேண்டும்
    வந்த உலகில் மதி மயங்கி
    அறு பகைவர் வசமாய் அழியாமல் உன்
    அருள்பெற வேண்டும்

    இப்படிக் காதலாகிக் கண்ணீர் மல்கச் செய்யும் பாபநாசம் சிவனின் பாடல்களை எம்.கே.தியாகராஜ பாகவதரின் தேன்குரலில் கேட்டு எத்தனை முறை நெகிழ்ந்திருக்கிறேன்!

    பாபநாசம் சிவனின் மகள் நீலா ராமமூர்த்தி அம்மையார்தான் மேலே நான் குறிப்பிட்ட பாரிஜாத நாடகத்தைத் தம் தந்தையின் பாடல்களை வைத்து உருவாக்கித் தந்தவர்.

    அடுத்த ஆண்டு அந்தப் பள்ளி, தேவடி தெரு என்ற இடத்துக்கு மாறியது. இடம் மாறினாலும் தடம் மாறாமல் ஆண்டு விழாவை மேலும் சிறப்பாகக் கொண்டாட மாலினி ஏற்பாடுகள் செய்தார். அவருடன், என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விட்ட ஒரு மங்கையும் சேர்ந்து ஒரு முழு நாட்டிய நாடகம் எழுதித் தரச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள். நான் குறிப்பிட்ட மங்கை சங்கீத ஞானம் மிக்கவர்; டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் மூத்த சகோதரி; ‘நீலு அக்கா’ என்று நான் அழைத்த பாசம் மிக்க சகோதரி. நான் எழுத, அவர் மெட்டமைக்க, துர்க்கா மிஸ் என்ற ஆசிரியை பாடப் ‘பாதுகா பட்டாபிஷேகம்’ என்ற நாட்டிய நாடகம் உருவானது. அதற்கு ஆர்மோனியம் வாசித்தவர் ராமமூர்த்தி என்ற பெரியவர். தசரதன், கைகேயியிடம் பலவாறு வாதாடியும் அவள் தான் கேட்ட இரு வரங்களில் பிடிவாதமாக இருந்ததால், கடைசியில்,

    என்னுயிரைக் கேட்கின்றாய் என்ன செய்வேன்
    இருந்தாலும் நானுனக்குக் கட்டுப் பட்டேன்
    சொன்னசொல்லைக் காக்க இரு வரமும் தந்தேன்
    சுகமுறுவாய் நானெந்தன் உயிரைத் தந்தேன்

    என்று பாடிக் கொண்டே தசரதனாக நடித்த சுஜாதா என்ற சிறுமி மயங்கிவிழுந்த காட்சியில் பலர் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட காட்சியைக் கண்டேன். அட, மீண்டும் சுபபந்துவராளி ராகம் அப்பா!

    என் மனத்தில் இசையும், கவிதையும் எப்படிக் கைகோத்துக் கொண்டு வளர்ந்தன என்பதை இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன.

    ‘இசையா, கவிதையா என்று பட்டிமன்றம் வைத்தால் நீ எந்தக் கட்சி?’ என்று என்னிடம் சிகாமணி, அதான் நம்ம பழைய புத்தி சிகாமணி, முன்பு ஒருமுறை கேட்டான். பட்டென்று பாட்டாக வந்தது பதில்:

    உனக்குத் தெரியும் கவிதை என்றால்
    உயரப் பறப்பதென்று
    எனக்குத் தெரியும் இசையென் றாலது
    என்னை இழப்பதென்று
    பறந்து கொண்டே இழந்தது பாதி
    இழக்க இழக்க வளர்ந்தது மீதி

    இவ்வாறு, 1969-70 களில், அதாவது என் பதினாறு வயதினிலே, இசையும், கவிதையுமாய் என் வாழ்க்கை இப்படிச் சென்று கொண்டிருந்த போதுதான் அதில், இல்லை என் நெஞ்சில், இல்லை இல்லை, என் உயிரில் இசைக்கவிதையாகவே அவள் நுழைந்தாள். அந்தக் கதை.. .. ! பிறகு சொல்கிறேன்.

    (தொடரும்)

    படங்களுக்கு நன்றி:

    http://movieraghas.blogspot.in/2008/06/blog-post_12.html

    http://malarum.com/

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 15

    கே.ரவி

    என் வளர்ப்புத் தந்தை கவிராஜ காளமேகம் படம் தயாரிக்கத் தொடங்கிய போது எங்கள் இல்லம் மயிலை, பலாத்தோப்பில் இருந்தது. அங்கேதான் அவரை நான் முதன்முதலாகப் பார்த்தேன். கையை மடித்து விட்டிருந்த வெள்ளை ஜிப்பா, வெள்ளை வேட்டி, நெற்றியிலே குங்குமப் பொட்டு, மீசை. இந்தத் தோற்றத்துடன் அங்கே வந்தவர் கவிஞர் வாலி.

    images (1)

    மாமா படத்துக்குப் பாட்டெழுத ஏ.எல்.நாராயணன் அழைத்ததும் ‘ஹோட்டல் எல்லாம் வேண்டாம் நான் அவர் வீட்டுக்கே வந்து விடுகிறேன், அவா நம்ம ஊர்க்காரா’ என்று சொல்லி வந்து விட்டராம்.

    ஏற்கனவே இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவும், ஏ.எல்.நாராயணனும் வந்து காத்திருந்தனர். எங்கள் வீட்டுக் கூடத்தில் ஒரே வெற்றிலை மணம், ஆர்மோனியச் சத்தம்.

    ஶ்ரீரங்கம் கோவில் மடப் பள்ளியில் சமையல் செய்து கொண்டே பின்னாளில் காளமேகமாக மாற இருக்கும் கதாநாயகன் நையாண்டியாகப் பாடவேண்டிய பாடல் என்று நாராயணன் விளக்க, உடனே வாலி, நானும் அதே ஊர், ஶ்ரீரங்கம்தான் என்று சொல்லி விட்டு, 5 நிமிடங்களுக்குள் பாடலை அமர்க்களமாக எழுதிக் கொடுத்த காட்சியைக் கண்குளிரக் கண்டும், செவிகுளிரக் கேட்டும் ரசித்தேன்.

    ரெண்டு பக்கம் காவேரி எங்க ஊரு நடுவிலே
    ரெங்க நாத சாமியோ ஆதி சேஷன் மடியிலே

    சித்திரையில் தேரோட்டம் மாசியிலே படகோட்டம்
    இத்தனையும் காணவரும் எத்தனையோ ஜனக்கூட்டம்
    பக்தாளுக்குத் தெரியாதோ பெருமாளின் சங்கதி
    உள்ளூரில் ரெண்டிருக்க உறையூரில் இன்னொருத்தி

    கைவழியே நெய்வழியும் பொங்கலுண்டு காலையிலே
    சித்திரான்னம் படைப்பதுண்டு மத்தியான வேளையிலே
    ஊருக்கெல்லாம் சோறூட்டும் சாமியெங்க சாமிதான்
    நான்சமச்சுப் போடாட்டா நாள்முழுக்கப் பட்டினிதான்

    பாட்டு முடிவதற்குள் டி.எம்.செளந்தரராஜனும் வந்து சேர்கிறார். எஸ்.எம்.எஸ் மெட்டுச் சொல்லி வாசிக்க, அந்தப் பாடலை டி.எம்.எஸ் பாடிக் காட்ட, அடாடா, பெருமாளே கள்ளத்துயில் நீங்கி எழுந்து வந்து சிவதாண்டவம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானது.

    maxresdefault

    இந்தப் பாட்டை கேட்கச் சொடுக்கலாமே,

    http://youtu.be/4XSsgperblo

    என்னையும் கவிஞன் என்று ஏ.எல்.நாராயணன் வாலிக்கு அறிமுகம் செய்து வைத்ததும், “அதெல்லாம் ஒண்ணும் வேணாம்பா, ஒழுங்காப் படி” என்றார் வாலி.

    அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கவிஞர் வாலியை நான் பல ஆண்டுகள் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனாலும் அவருடைய பாடல் வரிகள் பல என்னை ஆட்கொண்ட வரிகள்.

    “மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா
    மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர வெறுத்திடுமா”

    எவ்வளவு அற்புதமான வரிகள்!

    “இடையோ இல்லை இருந்தால் முல்லைக் கொடிபோல் மெல்ல வளையும் – சின்னக்
    குடைபோல் விரியும் இமையும் விழியும் பார்த்தால் ஆசை விளையும்”

    சொற்கள் எப்படி இயல்பாக ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டு வருகின்றன!

    வாலியை அடுத்தமுறை நான் பார்த்தது 1997-ல் அவருடைய இல்லத்தில். வானவில் பண்பாட்டு மையம் எடுத்த இந்திய சுதந்திரப் பொன்விழாக் கவியரங்கத்துக்கு அவரை அழைக்கச் சென்றிருந்தேன். அப்போது என்ன சொன்னார் தெரியுமா? “ஏன்யா, நான் தப்பித் தவறி ஒரு நல்ல பாட்டு எழுதிட்டாப் போச்சு, அதையும் கண்ணதாசன் பாட்டுன்னு சொல்லிடுவீங்களே”. எனக்கு ஒன்றும் விளங்க வில்லை. அவரே விளக்கினார். நான் எழுதி வெளியிட்டு, அவருக்கும் அனுப்பி வைத்த ‘நமக்குத் தொழில் கவிதை’ என்ற நூலில்,

    “ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் – இந்த
    உண்மையச் சொன்னா ஒத்துக்கணும்
    காக்கா கூட்டத்தப் பாருங்க – அதுக்குக்
    கத்துக் கொடுத்தது யாருங்க”

    என்ற பாட்டின் எளிய நடையை நான் பாராட்டி விட்டு அதைக் கண்ணதாசன் பாடல் என்று குறிப்பிட்டு விட்டேனாம். சிரித்துக் கொண்டே கோபித்துக் கொண்டார். நான் மன்னிப்புக் கேட்டேன். அவர் என் நூலை முழுமையாகப் படித்திருந்தது குறித்து மகிழ்ச்சியடைந்தேன்.

    பின்னொரு சமயம் சபரிமலைக்கு என்னுடன் யாத்திரை போய்க்கொண்டிருந்த நண்பர் குழுவின் பக்திப் பாடல்கள் அடங்கிய ‘சந்தன மணம் கமழ் ஐய்யப்பன்’ என்ற பாட்டு நூலை வாலியைக் கொண்டு சென்னை ஆஸ்திக சமாஜத்தில் வெளியிட எங்கள் குருசாமி, என் மூத்த சகோதரர் ஶ்ரீதர், ஏற்பாடு செய்திருந்தார். அதை வெளியிட்டுப் பேசிய வாலி அவர்கள் அதில் இருந்த என் பாடல் ஒன்றை முழுக்கச் சொல்லிப் பாராட்டினார். அந்தப் பாடல்:

    நெய் அபிஷேகம் ஜமாய்க்கிறே – என்னை
    எத்தன நாளா டபாய்க்கிறே
    பொய்யில் அமுக்கிப் புழுதியிலே என்னைப்
    புரள விட்டு நீ ஏய்க்கிறே – விட்டுப்
    போவானான்னு பாக்குறே

    சங்கீதம் தெரிஞ்ச சாஸ்திரக் காரங்க
    சந்தோஷமா ஒன்னப் பாடுறாங்க
    சங்கோஜங் கொண்ட பேர்வழிங்க – சத்தம்
    போடாம ஒன்னத் தேடுறாங்க
    எல்லாரும் ஒண்ணாக் கூடுறாங்க
    வில்லாளி வீரன்னு கூவுறாங்க
    வாச்சாலம் நானும் பழகலே – ஓன்
    வீராப்பும் எனக்கு வெளங்கலே

    வெளிச்சமில்லாத சாலையிலே – ஆள்
    அரவமில்லாத மூலயிலே – வெத்துக்
    காயிதமா நான் கெடக்குறேன் – ஓன்
    கைபடத்தான் படபடக்குறேன்
    பளிச்சுனு என்ன நீவிப்புட்டு – ஒரு
    பாட்டெழுதிக் கைநாட்டுவை
    பத்துத் தலமொறைக் கதுபோதும் – மக்கள்
    பாடுவாங்க நீ கேட்டுவை

    காட்டுல போயி குந்திக்குற – கண்ண
    மூடிக்கிட் டேதோ சிந்திக்குற – நான்
    பாட்டுக்குப் படுத்துத் தூங்கையிலே – ஒரு
    பாட்டாக வந்து சந்திக்கிற

    நெய் அபிஷேகம் ஜமாய்க்கிறே – என்னை
    எத்தன நாளா டபாய்க்கிறே
    மெய்யும் பொய்யும் கலந்துவச்சு – நான்
    மெரள மெரள சதாய்க்கிறே.

    மனம்திறந்து பாராட்டி விட்டுப் பேசி முடித்த பிறகு என் காதருகே வந்து ரகசியமாக மிரட்டினார்: “ராஜகோபாலா ஒங்கம்மா தோச வாத்தாளான்னு நீ சினிமாவுக்காக ஒரு ஆபாசப் பாட்டு எழுதினேன்னு மைக்குல சொல்லட்டுமா?” சிரித்துக் கொண்டேன்.

    நானும் அவரும் சந்தித்துக் கொண்ட போதெல்லாம், ஏதாவது எடக்கு முடக்காகவோ, பொய்க்கோபத்துடனோ என்னிடம் அவர் பேசியிருந்தாலும் அவருக்கு என் மீது அன்பும், பற்றும் இருந்ததை நான் உணரத் தவறவில்லை.

    பிறகு ஓரிரு நிகழ்ச்சிகளில் நாங்கள் சந்தித்துக் கொண்டிருந்தும் அதிகம் பேசவில்லை. அவருக்கு வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விழாவில் ‘பாரதி விருது’ வழங்கிய போது, சாதரணமாக விருதுகள் பெறத் தாம் சம்மதிப்பதில்லை என்ற போதிலும், பாரதி பெயரால் தரப்படும் விருது என்பதாலும், நான் அழைத்த காரணத்தாலும் தாம் விருது பெற்றுக் கொள்ள வந்ததாகப் பேசி, என் மீது அவருக்கு இருந்த அன்பை உறுதிப் படுத்தினார்.

    அவர் இறைவனடி சேர்வதற்கு மூன்று வாரங்களுக்கு முன் அவருடன் நான் தொலைபேசியில் பேச வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் சகோதரி மகள் ஸ்வர்ணமால்யா, “நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்” என்ற தன் நாட்டிய நாடகத்தை ஒளிப்பேழையாக , அதாவது, டி.வி.டி யாகக் கொண்டுவர இருப்பதால், அதற்கு வாலி அவர்களின் முன்னுரை பெற்றுத் தர வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டாள். அது குறித்துத்தான், நான் வாலி அவர்களைத் தொலைபேசியில் கேட்டேன். அவர் சொன்னார்: ” ரவி, இப்போதெல்லாம் நான் போகிற வழிக்குப் புண்ணியம் தரக்கூடிய கடவுள் சம்பந்தமான விஷயங்களைத் தவிர வேறெதையும் படிப்பதில்லை. சிலப்பதிகாரமெல்லாம் இப்பொழுது படித்துப் பார்க்கும் மனநிலையில் நான் இல்லை” என்றார். நான் சொன்னேன், ” நீங்கள் இப்படிச் சொல்லலாமா? உங்களுக்குத் தெரியாததா? நானறிந்தவரை சிலப்பதிகாரம் ஒரு சிறந்த பக்தி இலக்கியம். ஆய்ச்சியர் குரவையில் எப்படியெல்லாம் திருமாலைப் போற்றியுள்ளார் இளங்கோவடிகள்!” என்று கூறிவிட்டுத் தொலபேசியிலேயே, “சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே”, “நாராயணா என்னா நாவென்ன நாவே” ஆகிய வரிகளைச் சொல்லி, உங்கள் ஆழ்வார்களுக்கெல்லாம் முன்னோடி இளங்கோ சார்” என்று நான் சொன்னதும் சிறிது மெளனத்துக்குப் பிறகு அவர் சொன்னார்: ” சரி ரவி, நாளை நான் என் ஆச்சாரியன் அழகிய சிங்கர் மீது ஒரு காவியம் வெளியிடுகிறேன், ம்யூஸிக் அகடமியில், அங்கே வந்துவிடு பேசுவோம்” என்றார்.

    ஏதோ காரணம் மறுநாள் நான் அந்த விழாவுக்குப் போக முடியாமல் தடுத்து விட்டது. அதற்கு மறுநாளே அவருக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டதையும் இரண்டு வாரங்களில் அவர் நம்மைப் பிரிந்ததையும் இன்னும் நினைத்து வருந்துகிறேன்.

    அவருடைய கள்ளம் கபடமற்ற கவிதையுள்ளம் நான் நன்கு அறிவேன். புன்னகை என்பது இதயத்தோடு தொடர்புடையது, காதலியின் கன்னமோ காதலனின் கையோடு தொடர்புடையது என்ற நுட்பத்தை மிக எளிமையாக அவர் பாடியுள்ளதை நினைவு கூர்ந்தால், திரைப்படப் பாடல்கள் இலக்கிய சம்பந்தம் அற்றவை என்ற பேச்சுக்கே இடமில்லை. பாடுவோமே:

    “இந்தப் புன்னகை என்ன விலை – என்
    இதயம் சொன்ன விலை – இவள்
    கன்னங்கள் என்ன விலை – இந்தக்
    கைகள் தந்த விலை”.

    தொடரும்.

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 27

    கே.ரவி

    1981-ஆம் ஆண்டில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. அதாவது, நிஜமாக ஒரு மின்னலே கவிதையான நிகழ்ச்சி. ‘என்னய்யா, இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா?’ என்ற எகத்தாளக் குரல் எனக்குள்ளேயே எதிரொலிக்கிறது. தினமும் ஆங்கில நாளேடுகளைக் கரைத்துக் குடிக்கும் ஒருவன், தமிழ் நாளேடு மட்டும் படிப்பவனைப் பார்த்துக் கிண்டலாக உனக்கு என்ன உலக நிகழ்ச்சி தெரியும்? வண்ணாரப்பேட்டை ரவுடி இன்னொருவனைச் சதக், சதக் என்று கத்தியால் குத்திக் கொன்றான் போன்ற அன்றாட விஷயங்கள் மட்டுந்தான் உனக்குச் செய்தி, நிகழ்ச்சி. காஜா தெரியுமா? சட்டைப் பொத்தானைக் கஷ்டப்பட்டு நுழைப்போமே, அந்தக் காஜா இல்லேப்பா. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடைப்பட்ட ஒரு சிறிய பகுதி. அதன் கடைசி எழுத்து ஆங்கிலத்தின் கடைசி எழுத்து. ஆனால் அதைச் சுட்டிக்காட்டத் தமிழில் ‘ஜ’வை விட்டால் வேறு எழுத்து வடிவம் இல்லையே, என்ன பண்ணுவேன்? சரி, சரி, அந்த இடத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்படும் நிகழ்ச்சி நடக்கிறதே, அந்தச் செய்தி தெரியுமா உனக்கு?

    இப்படி நக்கல் செய்யும் அந்த மேதாவியிடம், ‘ஐயா, உங்களுக்கு இந்தப் புவிக்கோளமாகிய பூமியில் நடக்கும் சமாச்சாரங்கள்தான் தெரியும்; அவைதாம் உங்களுக்குச் செய்திகள். ஆனால், பூமி மட்டுந்தானா உலகம்? பூமியைத் தாண்டிச் சூரியன் எனப்படும் நட்சத்திரத்தில் நடக்கும் அதிசயங்களை நீர் அறிவீரா? அதையும் தாண்டி அடுத்த அண்டத்தில் என்ன நடக்கிறது என்று தெரியுமா உமக்கு?’ என்றெல்லாம் நான் கேட்கப் போவதில்லை. பாரதி ஒரு கட்டுரையில் எழுதியதை மட்டும் அந்த அதிமேதாவிக்குப் படித்துக் காட்டினால் போதும். பாரதி எழுதுகிறான்:

    உலகத்தில் எங்குப் பார்த்தாலும் நிறைந்து கிடைக்கும் லாவண்யங்களைத் தமிழர்கள் கவனிப்பது கிடையாது. சனிக்கிழமை சாயங்காலந்தோறும் குளக்கரைகளிற் போய்க் கருடன் பார்ப்பதற்கென்றால் நம்மவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். சூரியாஸ்தமய காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போகிறதில்லை. அப்போது வானத்திலே இந்திரஜால மஹேந்திர ஜாலங்களெல்லாம் நடக்கின்றன. இந்த க்ஷணமிருந்த தோற்றம் அடுத்த க்ஷணமிருப்பதில்லை………நமது நாட்டில் வேதகாலத்து ரிஷிகள் பிரகிருதியின் செளந்தர்யங்களைக் கண்டு மோஹித்துப் பரமாநந்த மெய்தியவர்களாய்ப் பல அதிசயமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். பிரகிருதியின் அழகைக் கண்டு பரவசமெய்திக் காளிதாசன் முதலிய பெருங்கவிகள் அற்புதக் கவிதைகள் செய்திருக்கின்றனர். இக்காலத்திலேதான் இந்த துரதிஷ்ட நிலைகொண்ட நாட்டில் வானம் பார்த்தறியாத குருடர்களெல்லாரும் கவிகளென்று சொல்லி வெளிவருகிறார்கள்.

    மின்னல் கவிதை என்று சொன்னேனே, அந்தச் செய்திக்கு வருவோம்.

    3

    என் வளர்ப்புத் தந்தை பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 1980-ஆம் ஆண்டு கமல்ஹாஸனை வைத்து ஒரு படம் தொடங்கப் பூஜை போட்டார். இயக்குநர் சக்திதான் அதன் இயக்குநர். சக்தியும், கமலும் மிக நெருங்கிய நண்பர்கள், இருவரும் ஓரூர்க்காரர்கள், ஆம், பரமக்குடி. சக்தியும், நானும் அமர்ந்து பலநாட்கள் விவாதம் செய்து ஒரு கதையைப் பின்னினோம். அந்தக் கதையை நாங்கள் கமலிடம் சொல்ல, அவரும் ஒப்புக் கொண்டு படத்துக்கு “வாய்ப்பூட்டு” என்று பெயர்சூட்டவும் செய்தார். ‘வாய்ப்பூட்டு’ பட பூஜை மிக விமரிசையாக நடந்தது. அதற்கு இளையராஜாவை இசையமைக்கக் கோரி அணுகினோம். அவர் மூன்று மாதங்களுக்கு தமக்கு நேரமில்லை என்று சொல்லிவிட்டதால், பாடல் பதிவு எதுவும் இல்லாமல் பூஜை மட்டும் போட்டோம். ஏதோ காரணங்களால், பூஜை போட்ட சில நாட்களிலேயே அந்தப் படம் எடுக்கும் எண்ணத்தை என் தந்தை கைவிட வேண்டியதாயிற்று. எனக்கு அதற்குள் இயக்குநர் சக்தியுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டு விட்டதாலும், திரைப்பட பூஜை என்று என் நண்பர்களையெல்லாம் நான் அழைத்துக் காட்டிவிட்டு உடனே மூட்டை கட்டிவிட என் ஈகோ, அதுதான், அகங்காரம், இடம்கொடுக்காததாலும், எப்படியும் சக்தியின் இயக்கத்தில் வேறொரு படம் எடுத்தே ஆக வேண்டுமென்று என் வளர்ப்புத் தந்தை கல்யாணராமனிடம் கேட்டேன். நான் கேட்டு அவர் எதையும் மறுத்ததே இல்லை. குறைந்த பட்ஜெட்டில் எடுப்பது என்று தீர்மானம் ஆகியது. கதாநாயகனாக என் நெருங்கிய நண்பர் எஸ்.வி.சேகரையும், கதாநாயகியாக புதுமுகம் ஶ்ரீலட்சுமி என்பவரையும் வைத்து, சக்தியும் நானும் கலந்து ஒரு கதை உருவாக்கிப் படத்துக்கு பூஜை போட நாள் குறித்தோம். குறைந்த பட்ஜெட் ஆயிற்றே! இளையராஜா அளவுக்கு இசையமைப்பாளருக்குச் சம்பளம் கொடுக்க முடியாதே என்ற நிலை வர, ஏதோ ஒரு துணிச்சலில் ‘நானே இசையமைக்கிறேன்’ என்று ஒரு பேச்சுக்குச் சொன்னதும் என் தந்தையும், சக்தியும் அதை அப்படியே ஒப்புக் கொண்டு இசையமைக்குமாறு என்னைத் தூண்டினார்கள். சரியென்று கோதாவில் இறங்கினேன். பூஜை அன்றே முதற்பாடல் பதிவு செய்வது என்று முடிவானது. அப்படி முடிவாகி நாலு நாட்களுக்குள் பூஜையும், பாடல் பதிவும் நடைபெற நாள் குறித்தாகி விட்டது. நாங்கள் முடிவு செய்திருந்த கதையோ கல்லூரியில், அதுவும், ஆண்களும், பெண்களும் இணைந்து படிக்கும் ஒரு கல்லூரியிலேயே பெரும்பாலும் நடப்பதாக இருந்தது. படத்தின் பெயர் ‘ஸ்பரிசம்’ என முடிவானது.

    1

    நான் விவேகானந்தா கல்லூரியில் படிக்கும் போதே நண்பர்கள் புடைசூழ நிறைய பைலா (இன்றைய கானா) பாடல்கள் எழுதிப் பாடியிருக்கிறேன். இயல்பிலேயே எனக்கு டப்பாங்குத்துப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். இலக்கண சுத்தமாக இனிய ராகத்தில் ஒரு பாடல் எழுதுவதைவிட, ஜனரஞ்சகமாக, டப்பாங்குத்துப் பாடல் எழுதுவது ரொம்பக் கடினம். “என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு”, “தென்ன மரத்துல குந்தியிருப்பதச் சின்ன பாப்பா”, போன்ற பாடல்கள் எழுதுவது அவ்வளவு சுலபம் இல்லை. “ஜவ்வாது பொட்டாகத்தான் இட்டுக்கவா ஒன்னத் தாயத்துக் குள்ளே வச்சுக் கட்டிக்கவா” என்ற பல்லவியை எப்போது கேட்டாலும் ரசிப்பேன். ஆகவே, துணிந்து ஒப்புக் கொண்டேன்.

    பூஜை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால், என் வீட்டில் ‘சீத்தாத்தை’ என்ற அத்தை ஒருத்தி, என் வளர்ப்பு அன்னை அலங்காரத்தின் தாயார், அவள் அடிக்கடிப் பாடும் ஒரு நையாண்டிப் பாடலைப் பாடினாள். அதைக் கேட்டதும் அதுவே பல்லவியாக என் முதல் திரைப்படப் பாடல் உருவானது.

    2

    முறையாக இசை பயிலாத, எந்த வாத்தியமும் வாசிக்கத் தெரியாத, ஸ்ருதியோடு பாடுவதே இல்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த நான் இசையமைப்பாளனாக, முதன்முதலில், ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இருந்த ஆர்.ஆர். ஒலிப்பதிவுக் கூடத்தில், ஸவுண்ட் எஞ்சினியர்கள் மாணிக்கம், சம்பத் ஆகியோருக்கு அருகில் எப்படி சப்த நாடியும் ஒடுங்க அமர்ந்திருந்தேன் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். அது போதாதென்று, நான் இசையமைக்கும் அழகை பார்க்கச் சாரு அண்ணா, அதாவது, சாருஹாசன் வேறு வந்து என் அருகில் உட்கார்ந்து கொண்டு விட்டார். என் நடுக்கம் இரட்டிப்பாகியது. பாடலை யார் பாடப் போகிறார்கள் என்று கூட முடிவு செய்யவில்லை. கோவையிலிருந்து நண்பர் சுந்தரேசன் என்பவரையும், அப்போது சில படங்களில் பாடியிருந்த டி.கே.எஸ். கலா அவர்களையும் மட்டும் பாடத் தயாராக வரச் சொல்லியிருந்தேன். பாடலோ பல மாணவ, மாணவியர் பாடிக்கொண்டு ஆடுவதாக அமைந்திருந்தது. என் பாடல் வரிகளை நான் முணுமுணுக்க, அதை எப்படியோ ஒரு மாதிரியாகச் சரியாகப் புரிந்து கொண்டு ராமமூர்த்தி அவர்கள் ஹார்மோனியத்தில் வாசித்துக் காட்ட, ராக்கெட் ராமனாதன், முத்துராஜா, என் மனைவியின் தம்பி ரதீஷ் உட்பட அங்கு வந்திருந்த நண்பர்கள் பலரையும் பாட வைத்துப் பதிவானது அந்தப் பாடல்.

    நான் ஏதோ ஆபாசப் பாடல் எழுதியிருக்கிறேன் என்று மேடையில் ‘சொல்லி விடட்டுமா’ என்று வாலி மிரட்டினார் என்று முன்னொரு பகுதியில் எழுதியிருந்தேனே, அந்தப் பாடல்தான் அது.

    ராஜ கோபாலா ஒங்கம்மா தோசை வாத்தாளா

    வேணு கோபாலா ஒங்கம்மா வெண்ணை தந்தாளா

    ‘ஸ்பரிசம்’ படம் முக்கால்வாசி எடுத்தாகி விட்டது. இன்னும் வியாபாரம் ஆகவில்லை. நான் வக்கீல் தொழிலில் சம்பாதித்த கொஞ்சநஞ்ச பணமும் நேராக படச் செலவுக்கே போய்க்கொண்டிருந்தது. ஷோபனா ரொம்பப் பொறுமைசாலி.

    படம் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு நாளும், அந்த நாள் படப்பிடிப்புக்கு அல்லது பாடல் பதிவுக்குத் தேவைப்படும் பணம் அந்த நாள் காலையில்தான் யார் மூலமாவது எதிர்பாராமல் கிடைக்கும். அப்படி ஒரு ராசி அந்தப் படத்துக்கு. படம் பூஜையன்று விடியற் காலையில், செலவுக்குப் போதிய பணம் இல்லாமல் நானும், என் வளர்ப்புத் தந்தையும் புறப்பட்டு விட்டோம்; ‘பார்க்கலாம், மாலைக்குள் பணம் வரும்’ என்ற துணிவோடு, டிரைவ்-இன் ஓட்டலில் போய் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு நண்பரிடம் நான் விளையாட்டாக இதைச் சொன்னதும் அன்றைய செலவுக்குத் தேவைப்படும் பணத்தை அப்படியே தம் கைப்பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுத்தார். மெய்சிலிர்த்துப் போனேன். அவர்தான், நான் வக்கீல் தொழில் தொடங்கியதும் தம் அலுவலக வளாகத்திலேயே என் அலுவலகம் அமைக்க உதவிய டி.எஸ்.சத்யம். ‘சத்யம் அட்வர்டைஸிங்’ என்ற விளம்பர நிறுவனம் வைத்து நடத்திய அவர் எங்கள் குடும்ப நண்பர். சமீபத்தில் அமரராகிவிட்ட அவர் போன்ற நல்ல உள்ளம் படைத்த நண்பர்களே எனக்கு எப்பொழுதும் உதவிசெய்து வந்திருக்கிறார்கள்.

    5

    “சுருதி நாயகன் வரும் வரும் என்பதோர் துணிவால்” என்று அசோக வனத்தில் சீதை காத்திருந்ததைக் கம்பன் வர்ணித்தது போல், ஒவ்வொரு நாளும் யாராவது வந்து உதவக் காத்திருந்த என் துணிவை எண்ணிப் பார்த்து வியக்கிறேன். இப்படித்தான் வளர்ந்தது ‘ஸ்பரிசம்’ படம்.

    ‘என்னய்யா, மின்னல், கவிதை என்றெல்லாம் அளந்து விட்டு ஏதோ தோசை மாவை அரைத்துக் கொண்டிருக்கிறாய்?’ என்ற கேள்வி தொலைவிலிருந்து என் செவியை எட்டுகிறது. கதை என்று வந்தால் அப்படித்தான் சுற்றி வளைந்து போகும். பொறுமை தேவை.

    சரி, மின்னலுக்கு வருகிறேன்.

    அந்தப் படத்துக்கு இன்னொரு பாடலை அடுத்துப் பதிவு செய்து படம் பிடிக்க வேண்டும். கல்லூரியிலே கதாநாயகனுக்கும், நாயகிக்கும் எப்பொழுதும் சின்ன சின்ன சண்டைகள். இப்படியே பாதிப் படம் போகிறது. நாயகன் செய்த ஒரு விஷமம் நாயகியை மிகவும் பாதித்துவிட அவள் அவனிடம் நிரந்தரமாகக் கோபித்துக் கொண்டுவிட, நாயகன் அவள் மனத்தை மாற்றுவதற்குப் பாட வேண்டும். மறுநாள் அதுபற்றி விவாதிக்க இயக்குநர் சக்தி அழைத்திருந்தார். ஆனால் அதற்குள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சத்யதேவ், ஒரு வழக்கில் என்னைக் கமிஷனராக நியமித்து விட்டார். அன்றிரவே நான் தேவகோட்டைக்குச் சென்று அங்கிருந்த வயது முதிர்ந்த ஒருவரைச் சாட்சியாக விசாரித்து வரக் கட்டளையிட்டு விட்டார்.

    இரவு, புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். மனமெல்லாம் ‘ஸ்பரிசம்’ படத்திலேயே இருந்தது. இரவாகியும் தூக்கம் வரவில்லை. ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே இருந்தேன். திடீரென்று ஒரு வெட்டு மின்னல் கண்ணைப் பறித்தது. ஜன்னலை சாத்திவிட்டுப் படுத்துக் கொண்டேன். மின்னல் மட்டும் என் மனத்துக்குள் ஆழமாகத் தைத்து, ஊடுருவிச் சென்று, அங்கிருந்து ஒரு பாடலை வரவழைத்து விட்டது. இல்லை, மன்னிக்கவும், அந்தப் பாடலே மின்னலாக உருமாறி என் நெஞ்சில் குடியேறிவிட்டது. அது பல்லவியோடு நின்றுவிட்ட பாடல் போல் இரண்டே வரிகளில் முடிந்து விட்டது. நானும் தூங்கி விட்டேன். தூக்கம் கலைந்த பிறகு, நாளை மேலும் சொல்கிறேனே!

    (தொடரும்)

    புகைப்படத் தகவல்கள்:

    1. வாய்ப்பூட்டு பட பூஜையின் போது கமலுக்கு நான் மாலை அணிவிக்கும் புகைப்படங்கள்

    2. நான் ஸ்பரிசம் படப்பாடல் பதிவு செய்யும் காட்சிகள்.

    3. நானும் இயக்குநர் ஆர்.சி.சக்தியும்

    4. டி.எஸ்.சத்யம் பாரதி விழாவில் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்துக்குப் பரிசு வழங்கும் காட்சி.

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 14

    கே.ரவி

    கவிஞருடன் மூன்றாவது சந்திப்பு நிகழ்ந்தது 1972 இறுதியிலோ, 1973 தொடக்கத்திலோ என்று நினைக்கிறேன்.

    நான் பிறந்ததிலிருந்தே என்னையும், என் மூத்த சகோதரி நந்தினியையும் என் அத்தையின் கணவர் ஆர்.கல்யாணராமனும், அவருடைய இரு மனைவியரும் வளர்த்து வந்தனர். கல்யாணராமன் திரைபடத் தயாரிப்பாளர். சகோதரி பத்மா சுப்ரமணியம் அவர்களின் தந்தையார் கே.சுப்ரமணிய அய்யருடைய குருகுல வாசத்தில் பயின்ற திரைப்படத் தயாரிப்பாளர் அவர்.

    1940-களில் திரைப்படத் துறையின் முன்னணி விநியோகஸ்தராகத் திருச்சியில் கல்யாணராமன் தம்மை நிறுவிக் கொண்டார். பிறகு, 1953-ல் நான் பிறந்த பிறகு தம் குடும்பத்தோடு சென்னைக்குக் குடிபெயர்ந்து வந்து மொழிமாற்றுத் துறையில், அதாவது வேறு மொழிப்படங்களைத் தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு வெற்றி கண்டார். முதன்முதலாக, பம்பாய் (அதன் பூர்வாஸ்ரமப் பெயர்) ஹோமி வாடியாவின் ஹிந்திப் படமான, மாயா ஜாலங்கள் நிறைந்த ஹாதிம்தாய் என்ற படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு நல்ல பணம் சம்பாதித்தார். அதற்கு முன் தமிழில் ஏதாவது மொழிமாற்றுப் படங்கள் வந்திருந்தனவா என்று ராண்டார்கையிடம் தான் கேட்க வேண்டும். அடுத்து ஒரு கன்னடப் படம். சரோஜாதேவி அம்மையார், ஹொன்னப்ப பாகவதர் நடித்த ‘மஹாகவி காளிதாஸ்’. அதைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். தெலுங்கில் என்.டி.ராமராவ், அஞ்சலிதேவி நடித்த வெற்றிப் படமான ரேசுகாவை மொழிமாற்றம் செய்து, “நாட்டியதாரா” என்ற பெயரில் எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த பெரிய படங்கள் வெளியான அதே நாளில் திரையிட்டார். அதன் வசனம் முழுப்பொறுப்பையும் திரு.ஆரூர்தாஸ் தான் எங்கள் அலுவலகத்திலேயே தங்கியிருந்து செய்து கொடுத்தார். பலத்த போட்டிகளுக்கு நடுவே அந்தப் படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

    ravi1

    k.rஇந்தச் சமயத்தில் கல்யாணராமன், அவரை மாமா என்றுதான் நான் அழைப்பேன், மாமா அன்றைய பிரபல திரைப்படப் பாடலாசிரியர் தஞ்சை ராமையா தாஸ் அவர்களோடு நெருங்கிப் பழகி வந்தார். மாமாவுக்குத் தமிழில் தேர்ச்சி இல்லாவிட்டாலும் எப்படியோ கவிஞர்களிடம் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அதனால்தான் நான் சென்னை கோஷா ஆஸ்பத்திரியில் 13-01-1953-ல் பிறந்த செய்தி திருச்சியிலிருந்த அவருக்கு மறுநாள் கிடைத்ததும், அன்று சூரிய வழிபாட்டு நாள் என்பதால் எனக்கு ‘ரவி’ என்று அவர்தான் பெயர் சூட்டினார். (மஹாகவி காளிதாஸ் டப்பிங் படம் வெளியிட்ட போது பிறந்த என் தம்பிக்குக் காளிதாஸ் என்று பெயர் சூட்டியவரும் அவரே). எனக்கு ரவி என்று அவர் பெயர் சூட்டிவிட்டுச் சொன்னாராம்: “பையன் ரவீந்திரநாத் தாகூரைப் போல் பெரிய கவியாக வருவான்”. இந்தக் கதையை எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் அத்தைகள் ஸ்வர்ணாம்பாளும், அலங்காரவல்லி என்ற சரஸ்வதியும் சொல்லிச் சொல்லி என்னை வளர்த்த காரணத்தினாலோ என்னவோ நான் கவிதைப் பைத்தியமாக வளர்ந்தேன். மேலும், 2000-ஆம் ஆண்டில் என் முதல் கவிதை நூல், “உன்னோடு நான்” முழுக்கப் படித்துவிட்டு, இன்று நம்மிடையே வாழும் ரசிகமணியாக இருக்கும் பாரதி சுராஜ் அவர்கள் அந்தக் கவிதை நூலை “இன்னொரு கீதாஞ்சலி” என்று எழுதிப் பாராட்டிய பேறு பெற்றேன். யார் கண்டார்கள், கவிதைக்கான நொபெல் பரிசு காத்திருக்கிறதோ என்னவோ! வரட்டுமே!

    கவிஞரை மூன்றாவது முறை சந்தித்த கதைக்கு வாப்பா என்று நீங்கள் எல்லாரும் ஒருமனதாக என் மனத்துக்குள் முணுமுணுக்கும் பேரிரைச்சல் கேட்கிறது. கொஞ்சம் பொறுத்திருங்கள்.

    திருச்சியில் என் சகோதரி பெயரில் ‘நந்தினி பிக்சர்ஸ்’, நான் பிறந்த பிறகு ‘ரவி பிலிம்ஸ்’ ஆகிய திரைப்பட விநியோக நிறுவனங்களை நிறுவிப் பெரும் வெற்றியடைந்த மாமா, நான் பிறந்த மூன்றாண்டுகளில் சென்னைக்குக் குடியேறி டப்பிங் படங்கள் எடுத்து வெற்றி கண்ட செய்தியைச் சொல்லி விட்டேன். சொந்தமாகப் படம் தயாரிக்க நினைத்தார் மாமா. தம் நண்பர் தஞ்சை என்.ராமையாதாஸ் பெயரின் முதலெழுத்துகளைக் கொண்டே ‘டி.என்.ஆர் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தொடங்கி, முதல் படமாக ‘லலிதாங்கி’ என்ற திரைப்படத்தை எடுக்கத் திட்டமிட்டார். அவருடைய நெருங்கிய நண்பர் எம்.ஜி.ஆர் அவர்களுடன் ராஜசுலோசனா அம்மையார் நடிக்கப் படம் வேகமாக வளரத் தொடங்கியது. பாதிப் படம் தயாரித்து முடிந்து விட்டிருந்த கட்டத்தில், அரசனான கதாநாயகன், துறவறம் பூண்டு மெய்ஞான மார்க்கத்தில் ஈடுபடுவதாகக் கதை அமைந்திருந்ததால், நடராஜர் சிலைக்கு முன் கதாநாயகன் எம்.ஜி.ஆர் பாட வேண்டும் என்ற நிலை உருவானது. அப்போது கடவுள் மறுப்பு இயக்கத்தில் தீவிரமாக, அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆர் ஈடுபட்டிருந்தார். அவருக்காகவே ராமையாதாஸ் அருமையான பல்லவி எழுதியிருந்தார்.

    “ஆண்டவனே இல்லையே!”

    இந்தப் பல்லவிக்குத் தம்பிகள் எப்படி விசில் அடிப்பார்கள்! ஆனால், விசில் அடிக்கப் போகும் தம்பிகளுக்குத் தலையில் அடிப்பது போல் அடுத்த அடி எழுதியிருந்தார்.

    ஆண்டவனே இல்லையே – தில்லைத்
    தாண்டவனே உன்போல் தாரணி மீதினிலே
    ஆண்டவனே இல்லையே”

    எம்.ஜி.ஆர் நடிக்கத் தயங்கினார். தம் அரசியல் வாழ்க்கைக்கு இந்தக் காட்சி குறுக்கீடாக அமையும் என்று அவர் கருதினார். பெரும் பொருட்செலவில் செட் போடப்பட்டு சில நாட்கள் ஆகியும் எம்.ஜி.ஆர் ஒப்புக் கொள்ளவில்லை. ‘தில்லைத் தாண்டவனே’ என்பதற்கு பதில் ‘உதய சூரியனே’ என்று பாடலாமே என்று சமரசம் பேசினாராம் எம்.ஜி.ஆர். மாமா தீவிர பக்தர். சமரசத்தை நிராகரித்தார். கவியின் வார்த்தைகளை மாற்ற நமக்கு உரிமையில்லை என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லி விட்டு அடுத்த நாளே நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கி முதலில் இருந்து எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளை நீக்கி விட்டு மீண்டும் சிவாஜியை வைத்து ‘ராணி லலிதாங்கி’ என்று மாற்றிப் படாமாக்கி வெளியிட்டார். அவர் துணிச்சலைப் பின்னாளில் எம்.ஜி.ஆரே பாராட்டினார் என்பது வேறு கதை.

    கொள்கைக்காக மாமா பலத்த நஷ்டத்தை ஏற்றுக் கொண்டார். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர்-பானுமதி என்றே படங்கள் வந்து கொண்டிருந்த நிலையிலும், துணிந்து சிவாஜியுடன் நடித்துக் கொடுத்ததால், பானுமதி அம்மையாருக்கு நாடோடி மன்னன் படத்தில் இருந்து பாதியில் வெளியேற வேண்டியதாயிற்று. மாமாவால் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, மாமாவின் ஆதரவிலேயே வசித்து வந்து, அவர் மூலம் கே.சுப்பிரமணியம் தயாரித்து வந்த ‘கச்ச தேவயானை’ படத்தில் நடித்து வந்த சரோஜாதேவி அம்மையாருக்கு நாடோடி மன்னனில் நுழைய வாய்ப்புக் கிட்டியது.

    6b71a6a4-fc34-4b3d-9fe6-50ced8973dd9_S_secvpf (1)

    ராணி லலிதாங்கி நஷ்டத்தால் பாதிக்கப்பட்ட மாமா, ரஞ்சனையும், இன்னொரு பிரபல நடிகையையும் வைத்து ‘மின்னல் வீரன்’ என்ற படம் எடுத்தார். தலைப்புச் செய்தி, நான் அதில் குட்டி ரஞ்சனாக நடித்தேன். அதுவும் வியாபார ரீதியில் நஷ்டம் ஏற்படுத்தியது. இந்த நஷ்டங்களுக்கெல்லாம் பிறகு, 1970-ஆம் ஆண்டு, மாமா மீண்டும் படத்தயாரிப்பில் ஈடுபட்டார். டி.எம்.செளந்திரராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா நடிக்க அவர் ‘கவிராஜ காளமேகம்’ படம் எடுத்த போதுதான் கவிஞரோடு என் மூன்றாவது சந்திப்பு நேர்ந்தது.

    மந்தைவெளி, மேற்கு சர்குலர் சாலையில் இருந்த அலுவலகத்தில் ஒருநாள், கவிராஜ காளமேகம் படத்துக்கான அடுத்த பாடல் காட்சி பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. திருவரங்கம் பெருமாள் கோவிலில் வைணவ பட்டராக உக்ராண அறையில் பணிசெய்து கொண்டிருந்தவனுக்கு அம்பிகை அருள் செய்ய, உடனே இம்மென்றால் எழுநூறும் அம்மென்றால் ஆயிரமும் பாடல் பொழியும் ஆசுகவி காளமேகமாக மாறிய புலவனிடம், திருவானைக்கா தாசி மோகனாங்கி காதல் வயப்பட்டது பற்றி ஊரெல்லாம் வம்பு தும்பு பேசக் கேட்டு, ( “ஊரார் அலர் உரைக்கக் கேட்டு”, புரிகிறதா?), அதனால் அவளை வீட்டுக் காவலிலேயே வைத்து விடுகிறாள் அவள் அன்னை. அந்தச் சூழ்நிலையில், திருவானைக்கா கோவிலில் மோகனாங்கி நடனம் ஆட வேண்டிய நாள் வருகிறது. அந்த நடனத்துக்கான பாடலைக் கவிஞரிடமிருந்து எதிர்பார்த்தபடி நாங்கள் அலுவலகத்தில் காத்திருக்கிறோம். நாங்கள் என்றால், தயாரிப்பாளரான என் வளர்ப்புத் தந்தை, பட இயக்குநர் ஜி.ஆர்.நாதன், சிங்கப் பிடறி போல் நீண்ட, ஆனால், தும்பைப்பூப் போல் வெளுத்த தலைமுடியோடு அமர்ந்திருக்கும் வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் ஆகியோர். வசனகர்த்தாவின் உதவியாளர் கவிஞரிடமிருந்து பாடல் பெற்று அலுவலகம் வந்து கொண்டிருந்ததாகச் செய்தி வந்திருக்கிறது. எல்லாரும் ஆவலோடு காத்திருக்கிறோம்.

    பாடலுடன் உதவியாளர் வருகிறார். பாடலை வாங்கி, ஏ.எல்.நாராயணன் உரக்கப் படிக்கிறார்.

    கேளுங்கள் பெரியோர்களே – மனது
    கீழ்க்குல மாயில்லை மேற்குல மாஎன்று
    கேளுங்கள் பெரியோர்களே.”

    ravi2அதற்கு மேல் அவர் படிப்பது என் செவியில் ஏறவில்லை. அவரும், இயக்குநரும் பாடலைப் புகழ்ந்துவிட்டு மேற்கொண்டு விவாதத்தைத் தொடர, நான் மெளனமாக அமர்ந்திருக்கிறேன். திடீரென்று, விவாதமும் நிற்கிறது. ஏ.எல்.நாராயணன் என்னைப் பார்த்துக் கேட்கிறார், “என்ன ரவி, ஒண்ணும் சொல்லலே. பாட்டு நல்லா இல்லியா?” கவிஞர் பாட்டு நன்றாக இல்லை என்று சொல்ல நான் யார்? மெதுவாகச் சொல்கிறேன், “நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ‘கேளுங்கள் பெரியோர்களே’ என்ற பல்லவி ஏதோ ஓட்டுக் கேட்பது போல் இருக்கிறது.” இப்படி நான் சொல்லி முடிக்கும் முன் எம்.ஜி.எம். சிங்கம் போல் கர்ஜனை ஒலியோடு, பிடறி சிலிர்த்துக் கொண்டு எழுகிறார் நாராயணன். என் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சென்று காரில் ஏறச் சொல்கிறார். ‘கவிதா ஹோட்டலுக்கு விடு’ என்று ஓட்டுநரை விரட்டுகிறார்.

    கவிதா ஹோட்டல், அந்த அறையில் நுழைகிறோம். கட்டிலின் மேல் மதுசூதனனாக, மப்பும் மந்தாரமுமாய்க் கவிஞர் அமர்ந்திருக்கிறார். “என்ன ஆலநா?” என்று கவிஞர் கேட்கிறார். ஏ.எல்.நாராயணனைக் கவிஞர் அப்படித்தான் அழைப்பாராம். “வெட்கம் கவிஞரே. உங்க பாட்டை இந்தச் சின்னப் பையன் ஓட்டுக் கேக்கற மாதிரி இருக்குன்னு சொல்லிட்டானே!” என்று சொல்லி விட்டுப் பாட்டுத் தாளைக் கவிஞரிடம் நீட்டுகிறார். வாங்கிப் படித்துவிட்டுக் கவிஞர், “இப்ப என்ன வேணும்? ஆலநா, நீயே ஒரு பல்லவி சொல்லு” என்றதும், அந்தச் சிங்கப் பிடறி சிலிர்த்துக் கொள்கிறது. சிங்கம் சொல்கிறது: “யாராக இருந்தால் என்ன?” உடனே கவிஞர் பதிலுக்குச் சொல்ல உதவியாளர் எழுதுகிறார்: ” இதில் அரசனெனெ இல்லை ஆண்டியென்ன யாராக இருந்தால் என்ன”. மடமடவென்று அடுத்த வரிகளை ஆலநாவும், கவிஞரும் மாற்றி மாற்றிச் சொல்லப் பாடல் வளர்கிறது:

    “யாராக இருந்தால் என்ன
    இதில் அரசனெனெ இல்லை ஆண்டியென்ன
    யாராக இருந்தால் என்ன

    சிவனுக்கு உமையென்ன அத்தை மகளா – அவன்
    மகனுக்குத் தெய்வானை மாமன் மகளா
    இறைவனின் வீட்டினிலும் ஜாதியில்லையே – இதை
    எம்மிடம் கேட்க ஒரு நீதியில்லையே”.

    நான் ஸ்தம்பித்துப்போய் அமர்ந்திருக்கிறேன். அந்தப் பாடல் பெற்ற ஸ்தலம், அதாவது கவிதா ஹோட்டல் அறை, இன்னும் என் மனத்திரையில் காட்சியாகப் பதிந்திருக்கிறது. ஆலநாவையும், கவிஞரையும் கவிதை சொல்ல வைத்த மூல நாவான கலைமகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

    அந்தப் பாடலை அத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இனிய இசையில், கல்யாணி ராகத்தில் பி.சுசீலா அம்மாவின் தேன் குரலில் கேட்கவும், அதற்கு வெண்ணிற ஆடை நிர்மலாவின் நடனக் காட்சியைப் பார்க்கவும் யூ ட்யூபில் அந்தப் பாடல் பதிவு மட்டும் கிடைக்கவில்லை. படத்தின் மற்ற பாடல்கள் உள்ளன.

    சிறுகூடற்பட்டி முத்தையாவுடன் (அதாங்க, கவிஞர்) மூன்று சந்திப்புகள் என்ற கதை முற்றுப் பெறுகிறது. வாலிபக் கவிஞர் வாலியை விட்டுவிட முடியுமா? அவரோடு என் சந்திப்புகளை அப்புறம் சொல்கிறேனே!

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 13

    கே.ரவி

    0 Rநான் மூன்று முறை கவிஞரை நெருக்கத்தில் சந்தித்திருக்கிறேன். எந்தக் கவிஞரை என்று கேட்கக் கூடாது. எப்படி பாரதி என்றதும் எந்த பாரதி என்ற கேள்வி எழாதோ, எழக் கூடாதோ, அப்படியே கவிஞர் என்றால் எந்தக் கவிஞர் என்ற கேள்வியெழ வாய்ப்பே இல்லை. கவிஞர் என்றால் கண்ணதாசனே. அவருடன் நான் நெருங்கிப் பழகாத போதும் ஏனோ அவரிடம் எனக்கு ஓர் ஈர்ப்பு; அதைவிட, அவரை நினைக்கும் போதெல்லாம் ஒரு பாச உணர்வு என் நெஞ்சில் பொங்கியெழும்.

    முதல்முறை அவரை நெருக்கத்தில் சந்தித்தது சென்னை, லயோலா கல்லூரியில் நடந்த ஒரு கவிதைப் போட்டியில். 1969-ஆம் ஆண்டு, நான் விவேகானந்தா கல்லூரியில், புகுமுக வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் என் கல்லூரியின் சார்பில் கலந்து கொள்ள நானும் இன்னொரு மாணவரும் தேர்வு செய்யப்பட்டிருந்தோம். யாரந்த இன்னொரு மாணவர் என்று எனக்கு அப்பொழுது தெரியாது. அந்தப் போட்டியில் கலந்து கொள்ள நான் லயோலா கல்லூரிக்குச் சென்றிருந்தேன். அங்குதான் கவிஞரை முதன் முதலில் சந்தித்தேன். அவர்தான் கவிதைப் போட்டிக்கு நடுவர்.

    அந்த இடத்தில் அப்போது இரண்டு பெரிய கவிஞர்களைச் சந்திப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கவிஞர் ஒரு மாக்கவிஞர்; இன்னொருவர்? ஏன், அந்த இன்னொருவரைச் சந்தித்து வெகுநாட்கள் வரையிலும் அந்த இன்னொருவரை ஒரு சிறந்த கவிஞர் என்று நான் அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. அந்த இன்னொருவர்தான் விவேகானந்தா கல்லூரி சார்பில் அந்தக் கவிதைப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த இன்னொரு மாணவர். அவர் அப்போது இளங்கலை வகுப்பு, பி.எஸ்.சி தாவரவியல், மூன்றாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன்.

    நானும் அவரும் முதன்முதலாக லயோலா கல்லூரியில், அதுவும் அங்கிருந்த ஓய்வறையில் சந்தித்துக் கொண்ட போதுதான் ஒருவரை ஒருவர் இன்னார் என்று தெரிந்து கொண்டோம். அன்று கவிதைப் போட்டியின் தலைப்பு ‘அழியா அழகு’. பல கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட அந்தப் போட்டியில் எந்தப் பரிசும் நாங்கள் இருவருமே பெறவில்லை. ஆனால், என் கவிதையிடையே தெறித்த சில வரிகளை, அதுவும் குறிப்பாகக் ‘கலையும் கலையும்” என்றும் “மறையும் மறையும்” என்றும் முடியும் வரிகளைக் கவிஞர் ரசித்துக் கேட்டார் என்ற ஒரு பேறே போதுமென்றாலும், என் சக மாணவராய் வந்திருந்த அந்த இன்னொருவரைச் சந்தித்த பெரும் வாய்ப்புக்கு வேறெந்தப் பரிசுகளும் ஈடாகாது.

    அந்த இன்னொருவரை அதற்குப் பிறகுச் சில ஆண்டுகள் சந்திக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மீண்டும், 1970-களில் நாங்கள் சந்தித்துக் கொண்டதும், என்னுள் இயல்பாக இருந்த இசைவேட்கைக்குத் தூண்டுகோலாக அவருடைய பாடல்கள் அமைந்ததும் ஒரு தனி வரலாறு. அவர், ரமணன், நான் ஆகிய நாங்கள் மூவரும் இன்றைய கவிதையுலகின் கவிமூவர் என்று போற்றப் படுவோமோ என்று கூட நான் நினைத்துப் பார்த்திருக்கிறேன். கர்வம் யாரை விட்டது?

    இமை வாசலின் ஓரத்திலே – ஏனோ
    முத்துக்கள் பனிக்கின்றன – அவை
    வந்ததும் பூத்ததும் வீழ்ந்ததும் பின்னிழை
    நீர்க்கரை ஆனதும் யார்புகல்வார்

    இப்படித்தான் ஒருநாள் அமிர்தவர்ஷினி ராகத்தில் அவர் பாடினார். அப்போது அவர் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டிருந்தார். நான் பின்னால் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தேன். இடம், லஸ் அமிர்தாஞ்சன் எதிரில் விவேகானந்தா கல்லூரி போகும் சாலையில், இசையமைப்பாளர் திரு.ஆர்.சுதர்சனம் அவர்கள் வீட்டுக்கு அருகில். அப்போது ஒரு பொறிதட்டியது. அவர் ஏதோ சாதரணமான கவிஞர் இல்லை. நிச்சயம் ஒரு மிகப்பெரிய கவிஞர் என்று எனக்குள் ஒரு பட்சி சொன்னது.

    vaveesuநாளாக நாளாக எங்கள் கவிதை நட்புச் சுடர் விட்டு வளர்ந்தது. அவர், ஆம், விவேகானந்தா கல்லூரியில் என் சக மாணவர், பின்னாளில் அதே விவேகானந்தா கல்லூரியின் முதல்வராக நற்பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் தாவரயியல் பேராசிரியர், அவரே என் கவிதையார்வம் சரியான தடத்தில் செல்ல உதவ இருப்பவர்களில் ஒருவர் என்று அன்று அவரை அடையாளம் கண்டு கொண்டேன். அவரே வ.வே.சு. என்றும் வி.வி.எஸ். என்றும் நான் அழைக்கும் இனிய நண்பர். ஸ்கூட்டர் தேரில் அர்ஜுனன் போல் நான்…!

    மறுபடியும் கவிஞரிடம் வருவோம்.

    கவிஞரை நான் இரண்டாவது முறை சந்தித்தது விவேகானந்தா கல்லூரியிலே. 1970-ஆம் ஆண்டு விவேகானந்தாimages கல்லூரியில் கவிதைப் போட்டிக்கு அவர் நடுவராக வந்திருந்தார். நானும் போட்டியில் கலந்து கொண்டேன். போட்டித் தலைப்பு ‘வாய்மையே வெல்லும்’. முதலில் அவர் கவிதையாகவே பேசும் போது சொன்னார்: ‘நான் எதையும் மறைப்பதில்லை, என் குடிப்பழக்கம் உட்பட. குடித்தாலும் குடிக்கின்றேன் என்று சொல்லிக் குடிக்கின்றேன். அதனால் நான் வாய்மை தவறாதவன். வாய்மையே வெல்லும் என்ற தலைப்பில் நடக்கும் இந்தக் கவியரங்கத்துக்குத் தலைமை தாங்கும் தகுதியுள்ளவன்’. இப்படியாக அவருடைய முன்னுரை அமைந்தது.

    அன்று இளமைக்கே உள்ள துடிப்போடும், குறும்போடும் கவிதை படித்தேன்; மன்னிக்கவும், இப்பவும் உண்டுங்க. நான் எப்பவும் இளைஞன் தானுங்க. (அடாடா, இந்தப் பல்லவி நல்லா இருக்கே!).

    நான் என் கவிதை படிக்கும் போது சொன்னேன்:

    குடித்தாலும் குடிக்கின்றேன் என்று சொல்லிக்
    குடிப்பதுதான் வாய்மையெனச் சொல்லி விட்டார்
    குடியாலே குழறுகிற நாவில் உண்மை
    குடியிருக்க முடியாது மறந்து விட்டார்
    பிடிவாதம் செய்யாமல் விடச்சொல் கின்றேன்
    பிழைதிருத்த வரவில்லை விண்ணப் பம்தான்

    இப்படிப் படித்த பிறகு நமக்கெங்கே பரிசு தரப் போகிறார் என்று கவிதைப் போட்டி முடியும் வரைக்கும் காத்திருக்காமல் நான் வீட்டுக்குச் சென்று விட்டேன். அப்போது என் வீடு கல்லூரிக்குப் பக்கத்தில், மயிலை பலாத்தோப்பில் இருந்தது. இரவு 9 மணிக்கு என் வீட்டுக் கதவை யாரோ தட்டுகிறார்கள். திறக்கிறேன். என்ன ஆச்சரியம், எங்கள் கல்லூரி மாணவர் பேரவையின் தலைவர், ராஜகோபாலும், சில நண்பர்களும் என் கையைப் பற்றி இழுத்துக் குலுக்கி “உனக்குத்தான் கவிஞர் முதல் பரிசு அறிவித்தார், ஏன் வந்து விட்டாய்” என்றதும் அசந்து போய்விட்டேன். என்ன பெருந்தன்மை. கவிஞர் முதலில் ஒரு மஹா ரசிகர் என்பதைப் புரிந்து கொண்டேன்.

    கவிஞருடன் மூன்றாவது சந்திப்புப் பற்றி நாம் அடுத்த முறை சந்திக்கும் போது சொல்கிறேனே.

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் (12)

    கே.ரவி-

    ‘நந்திவர்மன்’ நாடகம். அதில் நந்திவர்ம பல்லவனாக நான் நடிக்கிறேன். நந்திவர்மன் சகோதரன் காடவர்கோன் என்ற புலவனாக நண்பன் சுகி சிவம் நடிக்கிறான். நாடகம் அரங்கேறும் இடம், சென்னை, புனித தோமையர் தேவாலயத்துக்கு எதிரில் உள்ள சாந்தோம் உயர்நிலைப் பள்ளி வளாகம். நாடகத்துக்குத் தலைமை, அப்போதுதான் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த அறிஞர் அண்ணா. 1968-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி என்று நினைக்கிறேன்.

    kr

    நாடக உருவாக்கம் எங்கள் தமிழ் ஆசிரியர் தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன். மிகுந்த எதிர்பார்ப்போடு பெருந்திரளாகக் கூடியிருந்த மக்கள் கூட்டம். பின்னாளில், ‘ஆயிரம் நிலவே வா’ என்று எம்.ஜி,ஆரை அழைத்துத் திரைப்படத் துறையில் பிரபல பாடலாசிரியராகப் போகும் புலவர் புலமைப் பித்தன் அப்பொழுது சாந்தோம் உயர்நிலைப் பள்ளியின் தமிழ்த்துறையில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அண்ணாவின் தீவிரத் தொண்டராக அரசியலிலில் கால்பதித்திருந்த அவர் நந்திவர்மன் நாடகத்தில் தண்டமிழ்க் கொண்டல் எழுதியிருந்த அழகுதமிழ், அடுக்குமொழி வசனங்களுக்கெல்லாம் கைத்தட்டலோடு, விசிலும் அடித்துக் கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு ஆர்வத் துடிப்பு மேலோங்க எல்லாரும் காத்திருக்கின்றனர், அண்ணாவின் வருகைக்கு.

    சிவமும், நானும் பொழிந்து தள்ளும் அடுக்குமொழி வசனங்களுக்கெல்லாம் பலத்த கரகோஷம் காதைப் பிளக்க, அப்போது மேடையில் அவன் வருகிறான். அவன் யார்? என் இனிய நண்பன்; அன்றைய தமிழ்நாட்டு அமைச்சர்கள் பலர் தமிழில் தேர்ச்சி பெறக் காரணமாயிருந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் அ.சிதம்பரநாதன் செட்டியாரின் சகோதரி மைந்தன்; பின்னாளில், கவிஞர் வசந்தப்பிரியன் என்று புகழ்பெற்றுச் சமீபத்தில், அகால மரணத்தால் அமரனாகிவிட்ட அன்றைய அமிர்தலிங்கம். அவன் நந்திவர்ம பல்லவனின் அமைச்சராக அந்த நாடகத்தில் நடிக்கிறான்.

    நாடகக் கதை நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். நந்திவர்மனை வீழ்த்தி விட்டுத் தான் நாடாள வேண்டும் என்று அவன் தம்பி காடவர்கோன் திட்டமிடுகிறான். நந்திவர்மனோ மாவீரன். மன்னிக்க வேண்டும், இன்றுபோல் அன்று அந்தச்சொல் ஒரு கெட்ட வார்த்தையில்லை!. மாவீரன் ஆனாலும் அவன் தமிழ்ப்பித்தன். எனவே அவனைப் போர்க்களத்தில் வீழ்த்துவதைக் காட்டிலும் மிக எளிதாகத் தன் புலமையால் வீழ்த்திவிட எண்ணிக் காடவர்கோன் தன் அண்ணா நந்திவர்மன் மீது அறச்சொற்கள் விரவிவரும் வண்ணம் பாடல்கள் புனைகிறான். அப்பாடல்களைப் பாடக் கேட்டால் நந்திவர்மன் தீப்பற்றிக் கொண்டு கருகிப் போய்விடுவான். இதுதான் அவன் திட்டம். பாடல்கள் தயார், ஆனால், கடைசி நேரத்தில் சகோதர பாசம் மேலிட்டுத் தடுக்க, அந்தப் பாடலைப் பாட அவன் மறுக்கிறான். அவன் பாடத் தான் கேட்டால் எரிந்து விடுவோம் என்று தெரிந்த பின்னும், தமிழார்வத்தால் அவன் பாடியே தீர வேண்டும் என்று நந்திவர்மன் தூண்டுகிறான். காடவன் தொடர்ந்து மறுக்க, அவன் பாடத்தான் வேண்டும் என்ற அரச கட்டளையோடு, அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்து “காடவா” என்று நந்திவர்மன், நான் தான், கர்ஜிக்க வேண்டும், உடனே வேறு வழியின்றித் தழுதழுத்த குரலில், “பாடவா” என்று காடவனாக நடிக்கும் சிவம் கேட்டுவிட்டு அறம் பாட வேண்டும். இப்படித்தான் காட்சியமைக்கப் பட்டிருந்தது.

    உணர்ச்சி வேகத்தில், ‘காடவா’ என்ற முழக்கத்தோடு நான் சிவத்தின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை, நிஜமாகவே, பலமான அறை, பளார் என்று அடித்துவிட, நிஜமாகவே வலிபொறுக்க முடியாமல் சிவம், ‘பாடவா’ என்று குரல் தழுதழுக்கச் சொன்னதும் எல்லாரும் பலத்த கரகோஷம் எழுப்ப, அந்தச் சத்தம் ஓயவே சற்று நேரமாகியது.

    எப்படியும் தானும் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்ற ஆவலில், நாடக எழுத்துருவில் இல்லாத, தண்டமிழ்க் கொண்டல் எழுதாத ஒரு சுயவசனத்தைச் சொல்லிக் கைத்தட்டலும் வாங்கி விடுகிறான், அமைச்சனாக நடிக்கும் நண்பன் அமிர்தலிங்கம். எப்படி? அது என்ன வசனம்? இப்போது காட்சியைப் பார்ப்போம்.

    காடவன் அறம்பாடுகிறான்:

    வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
    வையகம் அடைந்ததுன் கீர்த்தி
    கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
    கற்பகம் அடைந்தவுன் கரங்கள்
    தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
    செந்தழல் புகுந்ததுன் மேனி
    யானுமென் கவியும் எவ்விடம் புகுவேம்
    நந்தியே எந்தயா பரனே

    இப்படித் தான் தண்டமிழ்க் கொண்டல் நந்திக் கலம்பகப் பாடலை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தார். பல பதிப்புகளில் வெவ்வேறு வடிவில் உள்ளது இப்பாடல். ஆனால் மேற்சொன்ன பாடமே மற்றவற்றைக் காட்டிலும் பொருத்தமாகவும், சிறப்பாகவும் உள்ளது என்பது என் பணிவான கருத்து.

    அறச்சொற்கள் மிகுந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் நந்திவர்மனாகிய என்னைச் சுற்றி எரிதழல் மூண்டெழ, நான் அத்தழலில் உயிரிழக்க, அப்போது அமைசச்சர், அதுதான் நம் அமிர்தலிங்கம் தன் சுயவசனத்தைப் பேசிக் கைத்தட்டல் வாங்குகிறான். அந்த சுயவசனம் இதுதான்: “ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்ட அண்ணா மீண்டு வருவாரா” என்று நந்திவர்மனின் தம்பி காடவனிடம் அமைச்சராக நின்று அமிர்தலிங்கம் பேசுகிறான்.

    காட்சி முடிந்து திரை விழுகிறது. அமிர்தலிங்கத்தின் கன்னத்தில் பலமாக ஓர் அறை விழுகிறது. அடிப்பவர் எங்கள் ஆசான், நாடக ஆசிரியர் தண்டமிழ்க் கொண்டல். “ஏற்கனவே அறம் பாடும் நாடகத்தில் இப்படி நீவேறு சொந்தச் சரக்காக அறம்பாடி விட்டாயே! மாண்ட அண்ணா என்று சொல்லி விட்டாயே!” என்று அவர் குமுறுகிறார். திரைவிழும் முன் ஓர் அறை விழுந்தது; திரை விழுந்ததும் ஓர் அறை விழுந்தது. முதலில் சிவத்துக்கு, அடுத்தது அமிர்தலிங்கத்துக்கு. மொத்தத்தில் அன்றைய நாடகம் இரண்டு அறைகளோடு நிறைவுபெற்றது.

    அடுத்த ஆண்டே, அதே மாதம் அதே நாளில் அறிஞர் அண்ணா மாண்டார் என்ற செய்தி இடிபோல் செவிப்பறையில் பலத்த அறையாக விழும் என்று அப்பொழுது யார் நினைத்திருக்க முடியும்?

    என்ன சிகா, இப்பொழுது புரிந்து கொண்டாயா, சொல்லின் வலிமையை. கவிஞன் அழைத்தால் அமாவாசையன்றும் நிலா வரும். இசைக்கவி ரமணனின் அருட்குறளில் வருவது போல், தீயென்றால் காடெரியும், தேன் என்றால் பூ மகிழும். அதுதானப்பா வாய்நின்ற பேரருள் வாக்கு!

    சிகா முணுமுணுக்கிறான்: “மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்!”

    முணுமுணுக்காதே சிகாமணி! மந்திரங்கள் முணுமுணுப்பதற்கல்ல. முழங்குவதற்கு.

    நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
    சுற்றி வந்து முணுமு ணென்று சொல்லும் மந்த்ரம் ஏதடா
    நட்ட கல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
    சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

    சிவவாக்கியர் சொன்ன சட்டிக்கும், சட்டுவத்துக்கும் தெரியுமோ என்னமோ, எங்கள் வீட்டுச் சட்டுவத்துக்குத் தெரியும். நேற்றுத் தேங்காய் எண்ணையில் அவியலுக்குத் தாளித்த வாசனை இன்று உருளைக்கிழங்குக் கறியிலும் தொற்றிக் கொண்டிருக்கிறதே! சட்டுவத்தை எப்படித் தேய்த்தாலும் மூன்று நாட்களுக்கு அந்த வாசனை இருக்கிறதே! பூர்வ ஜன்ம வாசனையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் போகாது சாமி! சட்டுவமோ, சத்துவமோ! ராஜஸமோ, பூண்டு ரஸமோ! எதுவானால் என்ன?

    அதெல்லாம் சரி, இப்பொழுது உருளைக் கிழங்குக் கறியின் வாசனை என் மூக்கைத் துளைக்கிறது. சாப்பிட்டுவிட்டு, உண்ட களைப்புத் தீர்ந்த பிறகு மீண்டும் சந்திப்போம்!

    (தொடரும்)

    Share
  • எங்கெல்லாம் இராம நாமம்..

    எழுதியவர் : கே.ரவி

     

    பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

    எங்கெல்லாம் ராம நாமம் அங்கெல்லாம் ஆஞ்ச நேயம்images (1)
    எங்கெல்லாம் ஆஞ்ச நேயம் அங்கெல்லாம் நாத யோகம்
    ஆஞ்ச நேயம் ஶ்ரீ ஆஞ்ச நேயம்
    நெஞ்செல்லாம் பக்தி பாவம் நித்ய ப்ரும்மச் சாரி ரூபம்
    அஞ்சனா தேவி பாலன் அன்பினால் ராம தூதன்
    ராம தூதன் ஶ்ரீ ராம தூதன்
    சஞ்சலம் என்று சொன்னால் சஞ்சீவி யாக வருவான்
    நெஞ்சுரம் கொண்ட வீரன் சிரஞ்சீவியாம் ஹனுமான்

     

     

     

     

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 11

    கே.ரவி-

    Picture2

    பகவத் கீதை என்பது மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக உள்ள செய்யுட் தொகுதி. கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு செய்த உபதேசம் என்று அது கருதப்படுகிறது. 18 அத்யாயங்கள் கொண்ட நீண்ட செய்யுட் தொடரைப் போர்க்களத்தின் நடுவே நின்று சொல்லியிருக்க முடியுமா என்ற விமர்சனக் கேள்வியைப் பலர் எழுப்பியுள்ளனர்.

    உபதேசம் என்பதன் பொருள் என்ன? கதைக்குள் உபகதைகள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். அதாவது ஒரு பெரிய வெளியில், சிறிய பகுதியாக இருக்கும் வெளி அல்லது இடம் உபதேசம். பாரத தேசத்தில் தமிழ்நாடு ஓர் உப-தேசம் என்று சொல்லலாம்.

    எனவே உபதேசம் என்பது ஒரு சீடனை அவன் குரு தன் உள்வெளிக்குள் வரவழைத்துத் தன் அனுபவத்தில் அவனைப் பங்கேற்க வைப்பது என்று புரிந்து கொள்ளலாம். அதற்கு, முதல்கட்டமாக, குரு சீடனுக்குள் நுழைய வேண்டும்; நுழைந்து, அவனுடைய உயிர்நிலையைத் தம் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்; அதைக் கைப்பிடித்து மெல்ல உயர்நிலைக்கு, தம் அனுபவ நிலைக்கு ஏற்ற வேண்டும்.

    இப்போது புரிகிறதா, “காற்று வந்து கைப்பிடித்துக் கூட்டிச் செல்வது எவ்விடம்” என்ற கவிதை வரியின் பொருள்! அந்தக் காற்று குருநாதனின் ப்ராண சக்தியே! குருவின் ப்ராண சக்தியானது, அவருடைய ஸ்வாஸ கதியின் அதிர்வுகளாக மாறிச் சீடனின் ஸ்வாஸ கதியுள் நுழைவதே உபதேசத்தின் முதற்கட்டம்! வானொலி நிலையத்தில் எழுப்பப்படும் ஒலியலைகள், வெட்டவெளியில் பரவியிருக்கும் மின்காந்த அலைகளின் அதிர்வுகளாக மாறி, மீண்டும் வானொலிப் பெட்டியில் ஒலியலைகளாக மாறி ஒலிக்கின்ற நிகழ்ச்சி அன்றாடம் நடப்பதுதானே?

    அப்படியொரு நிலையில், 1988-ல் என்று நினைக்கிறேன், நான் இருந்த போது, என்னுள் இருந்து ஒருநூறு செய்யுள்கள் ஊற்றெடுத்து வந்தன. அவை, வடிவிலும் சரி, பொருளிலும் சரி, என் மற்ற கவிதைகள் போலன்றி வேறுபட்டிருந்தன. திருமூலரின் திருமந்திரம் சாயலில் இருந்ததால் அவற்றை என் கவிதைத் தொகுப்பில் “குரு மந்திரம்” என்ற தலைப்பில் சேர்த்தேன். அவற்றில் ‘உபதேசம்’ என்ற தலைப்பில் உள்ள ஐந்து செய்யுள்களைப் பொருத்தம் கருதி இங்கே தருகிறேன்:

    அமைதி கொடுத்துப்பே ரானந்தம் தந்து
    சுமையகல வைத்துச் சுழுமுனையுள் செல்லும்
    சமநிலையும் தந்துயிர் சாதிக்கப் பாதை
    அமைத்துத் தருவ(து) உபதேச மாமே

    தன்னுள் விரிந்த தனிவெளியில் தத்துவமாய்
    இன்னொன்றை வைத்திழைத்துத் தானும் அதுவாகி
    முன்சென்(று) உயிர்த்துயிர் மூலத்தை ஆட்கொள்ளும்
    உண்மைப் பிணைப்பே உபதேச மாமே

    வெளியே இருந்துவிளக் கேற்றிவைக் காமல்
    ஒளியாகி உட்புகுந்(து) ஊடுருவிச் சென்று
    வெளியையே உட்கொள்ளும் வித்தை அறிவித்(து)
    ஒளியாக்கும் உண்மை உபதேச மாமே

    மூச்சுக்கு மூச்சு முறையாகி உள்ளத்தின்
    பேச்சுக்குப் பேச்சு பதிலாகி உள்விதியின்
    ஆச்சரிய மாகி அறமாகி அத்தனைக்கும்
    சாட்சி தருவது தானுப தேசமே

    ஓதி உணர்விப்ப(து) ஏதுமில்லை உள்ளுக்குள்
    ஊதி உலைவைத்(து) ஒருகவளம் சோறாக்கிப்
    பாதிநீ பாதிநான் என்று பகிர்ந்துண்ணும்
    பேதமில் லாதது ப்ரம்மோப தேசமே

    எனவே பகவத் கீதையென்பது போருக்கு நடுவே வார்த்தைகளால் செய்யப்பட்ட வாய் உபதேசம் இல்லை; வாயு சம்பந்தத்தால் வாய்த்த உபதேசம்; மேலே சொல்லப்பட்டது போல், கண்ணபிரான் அர்ஜுனனுக்கு ஒருகணத்தில் செய்த ப்ரம்மோபதேசம். அதற்குக் காலச் செலவு தேவையில்லை. ஒரு கணம் போதும்.

    பாரதி, தன் வாழ்நாளிலேயே வெளியிட்ட ஒரு கவிதைத் தொகுப்பைத் தன் குருவுக்குக் காணிக்கையாக ஸமர்ப்பணம் செய்திருந்தான். ஸ்வாமி விவேகானந்தரின் சீடர்களில் ஒருவராக இருந்த நிவேதிதா அம்மையார் என்ற அயர்லாந்த் நாட்டுப் பெண்மணிதான் அவனுடைய குருமணி. மிகச்சுருக்கமாக பாரதி தன் காணிக்கையைச் செலுத்துகிறான்:

    “எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும், சொல்லாமல் உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஶ்ரீமதி நிவேதிதா தேவிக்கு இந்நூலை ஸமர்ப்பிக்கின்றேன்.”

    ஒரு கடிகையில் நிகழ்ந்து விடக் கூடியதே உபதேசம். அது எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். எப்படி வேண்டுமானாலும் நிகழலாம். யார்மூலமாக வேண்டுமானாலும் நிகழலாம். யார்மூலமாக உபதேசம் கிடைத்தாலும், அதை அந்த வடிவில் வந்து தந்தது சாட்சாத் பரப்ரும்மமே. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த ஒரு ஸ்லோகம் இதைத்தான் சொல்கிறது.

    “குரு ப்ரும்மா குரூர் விஷ்ணுஹு குரு தேவோ மஹேஸ்வரா
    குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மைஶ்ரீ குரவே நமஹ”.

    உபதேசம் ஒரு காட்சியாக இருக்கலாம்; ராமகிருஷ்ண பரமஹம்ஸர் விவேகானந்தருக்குத் தந்தது போல் ஒரு தொடுகையாக (ஸ்பரிஸமாக) இருக்கலாம்; “உலகெலாம்” என்று இறைவனே அடியெடுத்துக் கொடுத்ததும் சேக்கிழார் பெருமானின் உள்ளத்திலிருந்து திருத்தொண்டர்கள் வரலாறு கவிதைகளாக ஊற்றெடுத்து வந்ததே, அப்படியொரு சொல்லாகவும் இருக்கலாம். பாரதிக்கு நிவேதிதா தேவி செய்தது போல், ஏன், சனகாதி முனிவர்களுக்குச் சிவபெருமான் செய்ததுபோல், சொல்லாமல் உணர்த்தும் உபதேசமாகவும் இருக்கலாம்.

    அர்ஜுனனுக்குக் கண்ணன் காட்டியது போல எனக்குக் காட்டப்பட்ட சிகா-மணி விஸ்வரூபக் காட்சி அப்படியொரு உபதேசம்தானோ!

    பாலகுருவாக, கந்தவேள், சிவபெருமானுக்குக் காதில் உபதேச மந்திரத்தை ஓதினாரா, ஊதினாரா? பகர்ந்தார் என்று சொல்லிவிட்டார் அருணகிரியார்.

    “சிவனார் மனம்குளிர உபதேச மந்த்ரம் இரு செவிமீதிலும் பகர்செய் குருநாதா” என்பது அருணகிரிநாதர் வாக்கு. இவர் பகர்ந்தார், அவர் மனம் குளிர்ந்தார் என்று சொல்லிவிட்டார். சரிதானே! சிவ பெருமானுடைய அகத்துக்குள் சென்று அவருடைய ப்ராண சக்தியை வேறொரு குரு வந்து வழிநடத்திச் செல்ல வேண்டிய அவசியம் உண்டோ? அதனால் செவிமீது என்றார், பகர்ந்தார் என்றார். மனம் குளிர்ந்தார் என்றும் சொன்னார். தெளிவின் சிகரமான சிவபெருமானின் மனம் தெளியச் சொன்ன மந்திரமா அது? இல்லை, மனம் குளிரச் சொன்ன மந்திரம்.

    ‘பகர்செய்’ என்பதற்கு இரட்டை வினைத்தொகை என்று புது இலக்கணக் குறிப்புத் தரலாமோ?

    பாரதி சொல்கிறானே: “மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்”. என்ன பொருள்?

    அப்பப்பா, கொஞ்சம் விட்டால் சிகாமணி கேள்விக் கணைகள் தொடுத்துக் கொண்டே இருப்பான். பதில் உடனே கிடைக்குமா? பொறுத்திருக்க வேண்டும்!

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 10

    கே.ரவி

    IMG00131-20110425-1932

    தந்தையினும் களிகூரத் தழுவி எங்களைத் தமிழிலக்கியத்தின்பால் ஆற்றுப்படுத்திய டாக்டர் ஒளவை நடராஜன் போலவே என்னிடமும், சிவத்திடமும் பாசத்தோடு பழகிய இன்னுமோர் இலக்கிய அன்பர், தீபம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த நா.பார்த்தசாரதி.

    514-229x300

    1960-70 களில், ஓரளவு தமிழ் இலக்கிய ஈடுபாடும், லட்சிய தாகமும் கொண்ட இளைஞர்களிடம் நா.பா.வை ப் போலத் தாக்கம் ஏற்படுத்திய எழுத்தாளர் வேறு எவரும் இருந்திருக்க முடியாது. யதார்த்தத்தின் பக்கம் ஈர்க்கப்பட்ட இளைஞர்களுக்கு ஜெயகாந்தன் என்றால், இலட்சியத்தின் பக்கம் ஈர்க்கப்பட்ட இளைஞர்களுக்கு நா.பா.! அவருடைய குறிஞ்சி மலர், பொன்விலங்கு, மணிபல்லவம் ஆகிய நாவல்களால் பாதிக்கப் படாத இளைஞர்கள் அப்போது வெகு குறைவு.

    suki---siv1

    சிவமும், நானும் நா.பா.விடம் நெருக்கமாகப் பழகித் தமிழ் இலக்கியத்தின் பல நுட்பங்களை அவரிடமிருந்து தெரிந்து கொண்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை. பல பட்டிமன்ற மேடைகளில் அவரோடு கலந்து கொண்டு வாதாடியிருக்கிறோம்.

    1971-ல் என்று நினைக்கிறேன், நா.பா. அவர்களுடன் பூனேவுக்கு, (அப்போதைய பூனா) ஓர் இலக்கியக் கூட்டத்தில் உரையாற்ற சிவமும், நானும் சென்றிருந்தோம். பாரதி இளைஞர் சங்கத் தலைவர், பாரதி காவலர் கே.ராமமூர்த்திதான் ஏற்பாடு செய்து எங்களை அனுப்பியிருந்தார். அந்தக் கூட்டத்தில் நா.பா.அவர்கள் ஆற்றிய உரை எங்களுக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியதுடன், கவிதை ரசனையின் புதிய கோணம் ஒன்றைக் கற்றுத் தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தக் கூட்டத்தில் பாரதியின் கவிச்சொல்லாளுமை பற்றிக் குறிப்பிட்ட நா.பா., பாரதியின் கவிச்சொற்கள் முப்பரிமாணச் சொற்கள் என்று சொல்லி விளக்கினார். ‘வெள்ளிப்பனிமலை’, ‘சுட்டும்விழிச்சுடர்’, ‘சோலைமலரொளி’, இப்படிப் பல எடுத்துக்காட்டுகளை அடுக்கி வைத்தார். மலை, பனிமலை, வெள்ளிப்பனிமலை, என்று மூன்று அடுக்குகளாகக் காட்சி விரியும் அழகை அவர் விளக்கிய விதம் இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது.

    நா.பா.விடம் நல்ல கவிதை ரசனையும் இருந்தது, கவியூக்கமும் இருந்தது. அது என்ன கவியூக்கம்?

    உரைநடையில் ஏதாவது எழுதிக் கொண்டே வரும்போது, திடீரென்று ஓர் உந்து சக்தியால் ஊக்கப் பெற்றுச் சிந்தனையின் முயற்சி இல்லாமலேயே சொற்கள் ஜிவ்வென்று சிறகடித்துப் பறக்கத் தொடங்கிவிடும். ஆங்கிலத்தில் இதை ‘flight’ என்றே குறிப்பிடுவார்கள்.

    உரைநடையில் நான் அதிகம் எழுதியிராத போது, 1980-ல் என்று நினைக்கிறேன், சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதற்காக பாரதியின் மீது ‘கானப் பறவை’ என்ற தலைப்பில் ஓர் ஒலி-ஒளிச் சித்திரம் எழுதினேன். உரைநடையாக எழுதிக் கொண்டே வந்த போது, என்னையறியாமல் பல இடங்களில் மேற்சொன்னவாறு சொற்கள் சிறகடித்துப் பறந்ததை நான் அனுபவித்தேன். அதைப் படித்துப் பாராட்டித் தேர்வு செய்த தொலைக்காட்சி அதிகாரி, திரு எம்.எஸ்.பெருமாள் (நம்ம சுகி சிவத்தின் மூத்த சகோதரர்), தம் பரிந்துரையில் பல இடங்களைக் குறிப்பிட்டிருந்தார். அதில் ஒன்று: “கவிதை வெறும் ஆற்றல் இல்லை, அதுவோர் ஆற்றாமை”.

    நா.பா.வின் புதினங்களில் இப்படிப்பட்ட இடங்கள் விரவியிருக்கும். “தின்பதற்காக மட்டுமன்றித் தின்னப் படுவதற்காகவே அமைந்த பற்கள்” போல பல உதாரணங்கள் சொல்லலாம். அதையும் தாண்டி, அவருடைய உரைநடைப் புதினத்தில் திடீரென்று செய்யுள் நடையில் ஓரிரண்டு வரிக் கவிதைகளே வந்து விழுவதும் உண்டு. “முத்துநகை பூத்த முகம்” என்ற ஈற்றடியோடு மணிபல்லவத்தில் கனஜோராக வந்து குந்தியிருக்கும் வெண்பாவைச் சொல்வேனா? இல்லை, “சொல்லிவிட்ட பழமையெல்லாம் சீர்திருத்த முன்வந்தான், புல்லரித்து மனம்வாடிப் போகின்றான் போகின்றான்” என்று பொன்விலங்கில் இடம்பெற்ற உணர்ச்சி வரிகளைச் சொல்வேனா? இல்லை, “நிலவைப் பிடித்துச் சில கரைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம், தரளம் மிடைந்து ஒளி தவழக் குடைந்து இரு பவளம் பதித்த இதழ்” என்று குறிஞ்சி மலரில் சந்தம் மிடைந்து சுவை யூறிக் கலந்து மணி யாகத் தெறித்த வரி வந்த அழகைச் சொல்வேனா?

    கல்கி தொடங்கிய இந்த உத்தியை நா.பா. மிக அழகாகத் தம் புதினங்களில் பயன்படுத்தியிருந்தார்; புதினம் என்ற பூங்காவில் புதுவெள்ளம் போல் பொங்கிவந்த கவிதைப் பெருக்கு, வாசகர்களைத் திக்கிமுக்காடச் செய்தது.

    ஆனால், புதினங்களில் இடம்பெற்ற உன்னதக் கவிதை வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு அவற்றையெல்லாம் நீட்டி முழுக் கவிதைகளாக்கி அவர் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டார். அந்தக் கவிதை நீட்டல்களில் ஆரம்ப வரிகளின் ஜீவன் இல்லை. அந்த உணர்ச்சி வேகம் இல்லை. வெறும் சிந்தனை முயற்சியாகவே அந்தக் கவிதைகள் இருந்தன. படித்துவிட்டுச் சலித்துக் கொண்டேன்.

    அவரைச் சந்தித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஒருநாள் அவர் இல்லத்திலேயே நடந்த கவியரங்கத்தில் நான் கலந்து கொண்டேன். கவிஞர்கள் சொன்ன கவிதைகளை ரசித்துக் கேட்டுவிட்டு அவர் ஒரு சிற்றுரையாற்றினாரே தவிர ஏதும் கவிதை படிக்கவில்லை. கவியரங்கம் முடிந்த பிறகு மெல்ல அவர் அருகில் சென்று ‘நீங்கள் ஏன் கவிதை படிக்கவில்லை’ என்று கேட்டேன். அவர் சொன்ன பதிலில் அதிர்ந்து போனேன்.

    ‘நீதான் என் கவிதைத் தொகுப்பைப் படித்துவிட்டு வெறும் சிந்தனை முயற்சி கவிதையாகுமா என்று விமர்சனம் செய்தாயே. அது என் மனத்துக்குச் சரியென்று பட்டது. இன்ஸ்பிரேஷன் வராமல் கவிதை எழுதுவது இல்லை என்று முடிவெடுத்தேன். அதற்குப் பிறகு உள்ளூக்கமே வரவில்லை, கவிதையும் எழுதவில்லை’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார். நான் எப்பொழுது அந்த விமர்சனத்தை அவர் செவிபடச் சொன்னேன் என்று இன்றுவரை ஞாபகம் வரவில்லலை. ஆனால், அவருடைய பெருந்தன்மையால் வாயடைத்துப் போய் அப்போது ஒன்றும் சொல்லத் தோன்றாமல் வந்து விட்டேன். அதற்குப் பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவே இல்லை.

    என்ன சிகாமணி! கவனித்தாயா, கவிதையின் கதை எங்கே போகிறது? நீ ரொம்ப அலட்டிக் கொண்டால் கவிதை வராதுங்காணும். நான் மட்டுமா சொல்கிறேன். காலேஜ் பிரின்ஸிபலே சொல்லிவிட்டார் அப்பா.

    ஆம், வ.வே.சுவும் மிக அழகாகக் கவிதையிலேயே இதைச் சொல்லிவிட்டார். அந்த வரிகளை நான் வேத வாக்காகவே மதிக்கிறேன்.

    “—— ——- ——– —- —– ——– வெறும்
    புத்தியைக் கொண்டு புனைகின்ற கவிதைகள்
    பூஜைக்குச் சேர்வதில்லை — கவி
    ஒத்திகையில் கொஞ்சம் பக்தி சேராவிடில்
    உள்ளம் தொடுவதில்லை.”

    சிகா ஏதோ சொல்ல வாயெடுத்தான். நான் குறுக்கிட்டு, ‘மனோன்மணி எங்கே?’ என்றேன்.

    ‘என்ன ஓய், விவரம் புரியாத வைதிகமாயிருக்கிறீர், எப்பப் பார்த்தாலும் நான் வேறு, மனோன்மணி வேறு என்றே நினைக்கிறீர்! என் பெயரென்ன?’ என்று கேட்டான்.

    ‘சிகாமணி; புத்தி சி கா ம ணி’ என்று அழுத்தம் திருத்தமாகப் பதில் சொல்லிவிட்டு அவனை உற்றுப் பார்த்தேன். அடாடா! ஒரே கணத்தில் என் நோக்கு விரிவு பெற்றது. கண்டறியாதன கண்டேன். ஆம், சிகாவும், மனோன்மணியும் கலந்த அர்த்தநாரியாக, மாதொருபாகனாக, சிகா-மணியாக என்னெதிரே அவன் விஸ்வரூப தரிசனம் காட்டி மறைந்தான். தரிசனத்துக்குப் பிறகு உடனே எதுவும் சொல்ல வார்த்தை வருமா? பிறகு சந்திக்கிறேன்.

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி (9)

    கே. ரவி

    Smart-Air-Now
    நான் ஒரு பெரிய மனிதன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. சுரதா, ஒளவை நடராஜன், சுகி சிவம், இசைக்கவி ரமணன், வ.வே.சு. போன்ற பெரிய மனிதர்களோடு என் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பின்னியிருப்பதால், சுயசரிதை எழுதும் அளவுக்கு நானும் ஒரு பெரிய மனிதன்தான் என்ற நம்பிக்கையோடு இத்தொடரைத் தொடர்கிறேன்.

    சோவுக்கு பதில் சொல்வதாக அமைந்த சுரதாவின் கவிதையை ஒட்டியும் ஆமோதித்தும் சுகி சிவம் ஒரு கவிதை எழுதினான் என்று சொன்னேன் இல்லையா? அதில் சுரதாவைப் புகழும் போக்கில் மிக அழகாக இரண்டு வரிகள் போட்டிருந்தான்.

    ‘ஆடியடங்கும் வாழ்க்கையடா’ என்று சுரதா எழுதிய ஒரு பழைய திரைப்பாடலில் வரும் இரண்டு வரிகள் தெரிந்தால்தான் சிவத்தின் கவிதையை ரசிக்க முடியும்.

     “முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா – கண்
     மூடினால் காலில்லாக் கட்டிலடா”

    இவை சுரதாவின் கவிதை வரிகள்.

    சிவம் எழுதியிருந்தான்:

     “காலில்லாக் கட்டிலெனக் கவிதை சொன்னீர்
     எட்டுக்கால் கட்டிலென எதிர்த்துச் சொல்வேன்”

    சுரதா தம் கவிதையை மிகக் கச்சிதமாக முடித்திருந்தார்:

     “மாடுமுட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை, மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை”

    அதை அடியொட்டி, சிவம் தன் கவிதையை இப்படி முடித்திருந்தான்:

    “எலிதாக்கிப் புலியிங்கே வீழ்வதில்லை
    எருக்கம்பூ தாமரையாய் ஆவ தில்லை”

    நான் பாராட்டினேன். படித்தவர்கள் அனைவரும் பாராட்டினார்கள். ஒளவை நடராஜனும் முதலில் பாராட்டினார். பிறகு சிவத்தையும், என்னையும் தனியே அழைத்துச் சொன்னார்:

    ‘ராஜா, கோபுர மதிற்சுவரை மாடு முட்டுவது இயற்கையாக, அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. இப்படி இயல்பான ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டிவிட்டு, மாடு முட்டும் ஆனாலும் கோபுரம் சாய்வதில்லை என்கிறார் சுரதா. அது போல், கூழாங்கல் மாணிக்கம் ஆவது இயற்கையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. ஆனால் மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை என்கிறார் சுரதா. இப்பப் பாரு ராஜா, எலி போய்ப் புலியைத் தாக்கும் நிகழ்ச்சி எங்கேயாவது நடக்குமா? இல்லை எருக்கம்பூ தாமரையாவோ, தாமரை எருக்கம்பூவாவோ ஆவதுண்டா? யோசிச்சுப் பாருங்க, அப்பத்தான் சுரதாவின் உவமைகள் எவ்வளவு யதார்த்தமானவை என்பதும், அர்த்தம் பொதிந்தவை என்பதும் புரியும்’ என்று அவர் அருமையாகப் பாடம் எடுத்த லாவகம் எங்கள் மனத்தில் அப்படியே பதிந்து விட்டது.

    மெல்ல, மெல்லப் புரியத் தொடங்கியது, சிகாமணி இல்லாமல் மனோன்மணி மட்டும் பிரயோசனமில்லை என்று. சிகா-மனோ உறவில்தான் கவிதை மலர வாய்ப்புண்டாகிறது என்ற மர்ம முடிச்சு அவிழத் தொடங்கியது.

    அந்த உறவை அற்புதமாகப் பிரதிபலிக்கும் இன்னொரு கவிதை எழுந்த வரலாற்றை இங்கே சொல்லாமல் இருக்க முடியாது. அந்த வரலாற்று நாயகரும் ஒளவை நடராஜன்தான்.

    எங்கள் கல்லூரி நாட்களில், சிவமும் நானும் ஒளவையுடன் அதிக நேரம் உடனிருப்போம். பெரும்பாலும் அப்போதெல்லாம் அவரோடு எங்கள் இருவரையும் ஒன்றாகப் பார்க்கலாம். அவர் “சங்ககாலப் பெண்பாற் புலவர்கள்” என்று முனைவர் பட்டத்துக்காக ஆய்வில் ஈடுபட்டிருந்த போது அதற்கு ஓரளவு உறுதுணையாக இருந்த பெருமைக்கு நாங்கள் இருவரும் உரியவர்கள் ஆனோம். ஒரு சிலர் நாங்கள் ஒளவையோடு சுற்றிக் கொண்டிருந்ததைக் கடுமையாக விமர்சனம் செய்யுமளவுக்கு நாங்கள் நெருக்கமாகக் காணப்பட்டோம்.

    சிறிது காலத்துக்குப் பிறகு, எங்கள் படிப்பு, குடும்பம் என்ற பணிகள் காரணமாகவோ என்னவோ சிவமும், நானும் ஒளவையை அடிக்கடி சந்திக்க முடியாமற் போய் விட்டது. பல மாத இடைவெளிக்குப் பிறகு ஒரு கூட்டத்தில் ஒளவை மேடையில் வீற்றிருந்தார். நான் பார்வையாளனாக அரங்கில் சென்றமர்ந்தேன். அப்போது அவர் என்னைப் பார்த்துவிட்டு ஒரு துண்டுக் காகிதத்தில் ஏதோ எழுதி அனுப்பினார். பிரித்தேன், படித்தேன், நெகிழ்ந்தேன். அந்தத் துண்டுக் காகிதத்தில் நாலு வரிகள், அமர வரிகள், எழுதப் பட்டிருந்தன:

    “ஊரார் அலர் உரைக்கக் கேட்டு – நீ
    உள்ளம் வெதுப்புறலாமா
    ஆரார் எதுசொன்ன போதும்
    யாழா முழவோடு மோதும்”

    சற்று நேரம் சிலையாகி விட்டேன். யாழும் முழவும் மோதிக் கொள்ளலாமா? ஸ்ருதியும், லயமும் இணைந்தால்தானே சங்கீதம்! எவ்வளவு பொருத்தமான ஓர் உருவகத்தை எவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டார்! அதுவரை அவர் எழுதியதாக எந்தக் கவிதையையும் அவர் எங்களிடம் படித்ததில்லை, காட்டியதில்லை. ஏதாவது கவிதை அதற்குமுன் எழுதினாரா என்றே தெரியவில்லை. அதற்குப் பிறகும் அவர் கவிதை எழுதியதாகத் தெரியவில்லை. ஒரே பாடலால் காலம் கடந்து வாழும் காக்கைப் பாடினியார், செம்புலப் பெயல்நீரார் போன்ற மிக உயர்ந்த புலவர்கள் வரிசையில் இந்த ‘யாழ்முழவார்’ சேர்ந்து விட்டார் என்றே தோன்றுகிறது.

    சிகா-மனோ சரியான அளவில் கூடிய கவிதைக்கு இது ஓர் நல்ல எடுத்துக்காட்டு என்பதால் சொன்னேன்.

    ஆனால், சிகா-மனோ உறவு போகப் போக மேலும் தெளிவுபடலாயிற்று. அப்போதுதான் முதல் பகுதியில் சொன்னேனே, சிற்றறிவு, பேறறிவு என்று, அந்த பாகுபாடும் புரியத் தொடங்கியது; சிகாமணியின் விஸ்வரூபம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தரிசனமாகத் தொடங்கியது.

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 8

    கே.ரவி-

    download

    புத்தி சிகாமணிக்கு ஒரு மனைவி உண்டு என்று சொன்னேன் இல்லையா? அவள் பெயர் மனோன்மணி என்று வைத்துக் கொள்ளலாமே. அவள் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று எண்ணிவிட வேண்டாம். அவள்தான் கற்பனை, கற்பனைதான் அவள்.

    மனோன்மணி இல்லாமல் சிகாமணி தனியே இருக்கும் போது அவன் சொல்வதெல்லாம் வெற்று வேதாந்தமாக (எவ்வளவு உயர்ந்த சொல்லை நாம் எப்படிப் பயன்படுத்தப் பழகிவிட்டோம்!), விறுவிறுப்பில்லாத, ஸ்வாரஸ்யமில்லாத வரட்டுப் பேச்சாக இருக்கும். ஆனால், மனோன்மணியோடு சேர்ந்து விட்டாலோ சிகாமணிக்கு ரொம்ப குஷி வந்துவிடும். குதூகலமாகப் பேசுவான். அவன் சொல்லும் கதையெல்லாம் விறுவிறுப்பாகப் பழைய விட்டலாச்சார்யாவின் மாயாஜாலப் படங்கள் பாணியில் அமோகக் காட்சிகளாக ஜொலிக்கும். காந்தாராவ், ஜெயமாலினி எல்லாரும் வருவார்களா என்று கேட்டு விடாதீர்கள். சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன்.

    எனக்கென்னமோ இந்த புத்தி சிகாமணியும், மனோன்மணியும் எப்படியோ பாரதியின் படைப்பிலும் இடம்பிடித்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஆம், இரண்டு கயிற்றுத் துண்டுகளுக்குக் கந்தன், வள்ளி என்று பெயரிட்டு அவன் எழுதிய மிக உயர்ந்த, உன்னதமான காதல் காவியத்தின் நாயக, நாயகியர் இவர்களே என்று எண்ணுகிறேன். அவர்களுடைய ஊடலையும், கூடலையும் எவ்வளவு அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறான் பாரதி!

    ஆனால், சில நேரங்களில் மனோன்மணி மட்டும் சிகாமணி இல்லாமல் ஏதேதோ பேசத் தொடங்கி வகையாக மாட்டிக் கொள்வாள். ஒரு சம்பவம் சொல்கிறேன். அதை சொல்வதற்கு முன் ஒரு சிறு வரலாற்றைச் சொல்ல வேண்டும். பீடிகை பீதாம்பரம் என்று எனக்குப் பட்டம் கொடுத்தாலும் பரவாயில்லை, நான் அதைச் சொல்லியே ஆக வேண்டும்.

    இன்று மிகச்சிறந்த பேச்சாளராக மதிக்கப்படும் என் இனிய நண்பன் சுகி சிவம், பள்ளி,கல்லூரி நாட்களில், அதாவது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கவிதைகளும் எழுதியிருக்கிறான். உலகம் போற்றும் பேச்சாளனாகவும், சிந்தனையாளனாகவும் வளர்ந்துவிட்ட அவனை இப்பொழுது ஒருமையில் அழைக்கவே கூச்சமாக உள்ளது. ஆனால் மரியாதை நிமித்தம் அவர், இவர் என்று போட நெருக்கம் இடம்தர மறுக்கிறது.

    அவன் எழுதிய கவிதைகள் தரமானவை, சுவையானவை. அதுவும் வேற்காடு கருமாரியம்மன் மீது அவன் எழுதி, நாங்கள் கூட்டுப் பிரார்த்தனையில் வாரம்தோறும் பாடிய பாடல்கள் எங்கள் குழுவில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல்கள்.

    “அண்ட முட்டையினை விண்டு கண்டிடினும்
    அன்னை சக்திவரு வாளடா – அவள்
    தீமை வெட்டுமொரு வாளடா

    . . .. . .
    . . . . . .
    . . . . . .

    கொத்து வேப்பிலைக் கைத்த லத்திடை
    வைத்த நற்குங்கு மச்சிலை – தொழ
    வாடும் உன்மன்ம தக்கலை”

    போன்ற பக்திமணம் கமழும் வரிகள்;

    கொடியோர்கள் கண்டஞ்சும் தாரார்புஜம் – கொண்ட
    கொடிநின்னை அல்லாமல் வேறார்நிஜம்
    விடியாத படிசெய்த மாபாதகம் – தீர்க்கக்
    குடிலுக்குள் குடிகொண்ட கோமேதகம்”

    போன்ற வைர வரிகள்!

    இவையெல்லாம் அவனுடைய சொல்லாளுமைக்கும், கற்பனை வளமிக்க கவிதையுள்ளத்துக்கும் சில சான்றுகள்.

    ஒருநாள்…! இப்பொழுது நான் சொல்வதை யாரும் தயவு செய்து அவன் மனைவி ராஜியிடம் போய் சொல்லி வத்தி வைத்து உள்நாட்டுக் கலகத்தைத் தூண்டிவிட வேண்டாம் என்ற வேண்டுகோளோடு சொல்கிறேன். ஒருநாள், அதாவது, சிவத்துக்குத் திருமணம் ஆவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன் அவன் கனவில் ஒரு பேரழகியைப் பார்த்ததாகச் சற்று படபடப்போடு சொன்னான். நீ என்ன செய்தாய் என்று கேட்டேன். பளிச்சென்று கவிதையிலேயே பதில் சொன்னான், அசந்து விட்டேன்.

    “கண்ணளந்து நின்றிருந்தாள் கதலித்தேன்
    கையளைந்து நானவளைக் காதலித்தேன்

    கையளந்து இல்லையப்பா, கையளைந்து! “சிறுகை அளாவிய கூழ்” நினைவுக்கு வருகிறதோ!

    எவ்வளவு சுவையான வரிகள். கதலித்தேன் நீண்டு காதலித்தேன் என்று ஆன சுவையைத் தாண்டிப் போக முடியவில்லையே! உஷ், மூச்சுவிடக் கூடாது.

    சிவமும் நானும் எங்கள் கல்லூரி நாட்களில் ரசித்துப் படித்துக் கொண்டிருந்த கவிஞர்களில் உவமைக் கவிஞர் சுரதாவுக்கே முதலிடம். அதற்குக் காரணமாக இருந்தவர் திரு.ஒளவை நடராஜன்.

    சுரதா, அப்போது தொடர்ந்து ஆனந்த விகடனில் செய்திகளையெல்லாம் செய்யுள் நடையில் எழுதி வந்தார். திருமதி கே.ஆர்.விஜயாவுக்குக் குழந்தை பிறந்த செய்தியை “கேயார் விஜயா தாயார் ஆனார்” என்று அவர் எழுதியது மிகவும் பிரபலமானது.

    அவருடைய இந்த முயற்சிகளைக் கேலி செய்து ‘கம்பாசிடர் கவிதைகள்’ என்று திரு.சோ அவருக்கே உரிய பாணியில் விமர்சனம் செய்து விட்டார்.

    அந்த விமர்சனத்துக்கு ஓர் அருமையான கவிதை மூலம் சுரதாவே விடை சொல்லியிருந்தார். அந்தக் கவிதையின் நிறைவு வரிகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப் படவேண்டிய வரிகள்:

    “மாடுமுட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை
    மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை”

    தீவிர சுரதா ரசனையின் பிடியிலிருந்த சிவமும், சோவின் விமர்சனத்துக்கு ஒரு நல்ல பதில் கவிதை எழுதி அதுவும் பிரசுரமானது. ஆனால் ஆனந்த விகடனில் இல்லை. பின் எந்தப் பத்திரிகையில்? அது ஒரு பெரிய கதை!

    எங்கோ போய்விட்டோம். மீண்டும் சிகாமணி, மனோன்மணி விவகாரத்துக்கு, (விவாக ரத்துக்கு என்று மாற்றிப் படித்துவிட வேண்டாம்) வருவோம். கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்வோமே.

    “என்னய்யா, மூச்சு விடாதே என்கிறீர், மூச்சு விடு என்கிறீர்” என்று நீங்கள் அங்கலாய்த்துக் கொண்டாலும் பரவாயில்லை. சற்று நேரம் என்னை நான் ஆசுவாசப் படுத்திக் கொண்டு, சிகாமணி-மனோன்மணி விஷயத்துக்கும், சிவம் கவிதைக்கும் என்ன சம்பந்தம் என்பதைச் சொல்கிறேனே! அப்புறம் சந்திப்போமா?

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 7

    கே. ரவி

    jungle-morning-mist-breeze-cool-path-wild-142659

    புத்தி சிகாமணி கேட்டானே, “காற்றும் கவிதையும் ஒன்றா?” என்று, அந்தக் கேள்விக்கு நான் பாட்டாலேயே பதில் சொல்வதற்குள் அவன் எங்கோ காற்றுவாக்கில் பறந்து போய்விட்டான். பரவாயில்லை. அது என்ன பதில் என்று நாமும் கேட்டு வைப்போமே.

    பழைய பாட்டு சாமி, 1988-ல் வந்தது. சுத்தமான சுபந்துவராளி ராகத்தில்தான் வந்தது. ஆனால், அமரர், கவிமாமணி தேவநாராயணன் வீட்டில் நடந்த பாரதி கலைக் கழகக் கவியரங்கத்தில் என்னால் கொஞ்சம் அப்படி இப்படியாகப் பாடப் பட்டது. மிஸ்ர நடை வேறு. பாரதி கலைக் கழக உறுப்பினர்கள் ரொம்பப் பொறுமைசாலிகள். இதோ பாட்டு:

    காற்று வேறு கவிதை வேறு
    இரண்டும் ஒன்றாய் இணையும் போது
    பாடல் உருவாகும் – அதில்
    பார்வை தெளிவாகும்

    நேற்றும் இன்றும் நாளை யென்றும்
    மாற்ற மின்றி மலர்ந்தி ருக்கும்
    தோற்றம் உருவாகும் – உயிர்
    தோயும் ஒளியாகும்

    வெண்ணி லாவில் அமுதம் அள்ளிக்
    கொண்டு வந்த தென்றலும்
    சொற்க ளுக்குள் சொக்கி வீழும்
    சொர்க்கம் எங்கள் பாடலே
    மின்னிமின்னித் தார கைகள்
    கண்சி மிட்டும் தாளத்தில்
    மெல்ல மெல்லச் சொல்லெ டுத்து
    மீட்டும் எங்கள் பாடலே
    (காற்று வேறு)

    தூண்டி லுக்குள் துவளும் மீனின்
    தோல்வி எங்கள் பாடலே
    காண்டி பத்தில் இடிமு ழக்கும்
    வெற்றி எங்கள் பாடலே
    மலரில் வண்டு துயிலு கின்ற
    மர்மம் எங்கள் பாடலே
    தனிமை யுள்ளும் தர்க்கம் செய்யும்
    தர்மம் எங்கள் பாடலே
    (காற்று வேறு)

    நாம் காற்றைத் தேடுவதுபோல், காற்றும் கவிதை தேடுகிறதோ என்று சகோதரி கீதா மதிவாணன் இன்று காலை என்னை வியக்க வைத்து விட்டார்.

    “கவிதைப் புத்தகத்தின் வெற்றுப் பக்கங்களைப் படபடப்போடு புரட்டிக் கொண்டிருந்தது காற்று”

    பக்கங்களைப் படபடப்போடு புரட்டுவது என்றதும் அந்த ஹிட்லர் மீசைக்காரர்தான் நினைவுக்கு வருகிறார். அவர் பாடல் ஒன்று நினைவுத் திரையில் நிழலாடுகிறது.

    அவன் ஏதோ மும்முரமாகப் படித்துக் கொண்டிருக்கிறானாம். அவனையே வைத்தகண் வாங்காமல் அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாளாம். இல்லை, ஓடையிலே பூத்திருக்கும் குளிர்ந்த மலர்ப் பார்வையினால் அவனை அருந்திக் கொண்டிருக்கிறாளாம். அப்போது சட்டென்று அவன் நிமிர்ந்து பார்க்க, அவன் பார்வையில் அவள் பார்வை பட்டுத் தெறிக்க. . . .! அடடா, பார்வை தெறித்துச் சிதறும் சத்தம் கண்ணாடி உடைவது போல் கேட்கிறதா? அந்தவொரு கணச் சிதறலில், தன் ஆடைவிலகிப் போய்த் தான் நிர்வாணப் பட்டது போல் அவளுக்கு ஒரு நாணம் விளைய, சரியாகவே இருக்கும் ஆடையை அவள் சரிசெய்து கொள்கிறாளாம்! அவனோ, ” ஐய்யய்யோ, நான் பார்க்கவே இல்லை அம்மாடீ!” என்பதுபோல் குனிந்து கொண்டு புத்தகத்தின் பக்கங்களைப் படபடவென்று புரட்டுகிறானாம். ஆயிரம் ஏடு திருப்புகிறான் என்று முடிக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்:

    “கூடத்தி லேமனப் பாடத்தி லேவிழிக்
    கூடிக் கிடந்திட்ட ஆணழகை
    ஓடைக் குளிர்மலர்ப் பார்வையி னாலவள்
    உண்ணத் தலைப்படும் நேரத்திலே
    பாடம் படித்து நிமிர்ந்த விழிதனில்
    பட்டுத் தெறித்தது மானின்விழி
    ஆடை திருத்திநின் றாளவள் தானவன்
    ஆயிரம் ஏடு திருப்புகிறான்”

    விழிகள் பட்டுத் தெறிக்கும் ஓசையும், ஒருசில பக்கங்களையே ஆயிரம் பக்கங்கள்போல் சரசரவென்று அவன் புரட்டிக்கொண்டே இருக்கும் ஓசையும் கேட்க வைக்கும் நல்ல கவிதையிது. ஆங்கிலத்தில் onomatopoeic என்பார்களே, அப்படிப்பட்ட த்வனிச் சிறப்போடு விளங்குகிறது.

    கவிதையில் சொல்லப்படும் அறிவு சார்ந்த கருத்துகள் படிப்பவன் அறிவு வரை மட்டுமே செல்லும். ஆனால் அதன் த்வனியாகிய ஒலியின்பமே அறிவைக் கடந்து மனத்தளத்தின் ஆழத்தில் போய் அதிர்வுகளை ஏற்படுத்த வல்லது. அதுவே ஆகாயத்தை அளாவி நிரந்தரமான, அட்சரம் என்ற அழிவற்ற நிலையில் பரவியிருக்கக் கூடியது.

    “என்ன ஓய், உபன்யாசமெல்லாம் பலமா இருக்கு?”

    கலகலவென்று சிரித்துக் கொண்டே கேட்டது நான்; கேள்விக்குப் பதில்சொல்ல முடியாமல் துவண்டு போனது, வேறு யாருமில்லை, ஓடிப்போய்விட்டு நடுவில் சடாரென்று திரும்பி வந்து எனக்குள் புகுந்து கொண்டு வசனம் பேசிய நம்ம பழைய பிரஹஸ்பதி, சாட்சாத் புத்தி சிகாமணிதான்.

    புத்தி சிகாமணிக்கு ஒரு மனைவியுண்டு. எனக்குத் தெரிந்தவரை ஒரே மனைவி. அவள் பெயர் . . . .ம்! என்ன பெயர் வைக்கலாம்? கொஞ்சம் யோசித்து விட்டு அப்புறம் வருகிறேனே.

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 6

    கே.ரவி 

    நேற்று மாலை எனக்கும் அவனுக்கும் நடந்த உரையாடலை அப்படியே தருகிறேன். அவன் பெயர், தெரியவில்லயே! சரி, புத்தி சிகாமணி என்று வைத்துக் கொள்வோமே! சுருக்கமாக ‘சிகா’.

    சிகா: என்ன கவிஞா, ரொம்பத்தான் அளந்து கொட்டுகிறாய் போலிருக்கு!

    கவி: அப்படியெல்லாம் இல்லை, எல்லாம் அளவாகத்தான் இருக்கிறது.

    சிகா: ஏம்பா, காற்று வந்து உன் கையைப் பிடித்துக் கூட்டிப் போகிறது என்றாயே, காது குத்துகிறாயா?

    கவி: ஏன், அதிலென்ன தப்பு? நடந்ததைத் தானே சொன்னேன்!

    சிகா: அது சரி, காற்றுக்குக் கையுண்டு என்று கதையா அளக்கிறாய்?

    கவி: ஏன் இருக்கக் கூடாது? உனக்கு ஒன்று சொல்கிறேன். நேற்று ஒரு பெரும்புலவரைப் பற்றிச் சொன்னேனே.

    சிகா: ஆமாம். ஆண்டாள் ஊர்க்காரர்.

    கவி. ரொம்ப சரி. வில்லிபுத்தூர் ஆழ்வார். அவருடைய பாரதக் காவியத்தில் உள்ள இன்னொரு பாடலைச் சொல்கிறேன் கேள். கதை கேட்பதென்றால் உனக்குக் கொள்ளைப் பிரியமாயிற்றே. பாரதப் போர் தொடங்கும் முன்பு எப்படியாவது கண்ணனை, அதாம்பா, ஶ்ரீ க்ருஷ்ண பகவானைத் தங்கள் பக்கம் வரச்செய்துவிட வேண்டும் என்று பாண்டவர்களும், கெளரவர்களும் ஆகிய இரு தரப்பினரும் விரும்பினார்கள். ஊம் சொல்லு, அப்போதுதான் கதை சொல்வேன்.
    சிகா: ஊம்.

    கவி: கண்ணனை இதுபற்றிச் சந்தித்துப் பேச துரியோதனன் மதுராபுரிக்குச் செல்கிறான். மதுராபுரியை அவன் நெருங்கியதும், அந்நகரின் கோட்டை மதில்களின் மேல் பறந்து கொண்டிருக்கும் கொடிகள் என்ன செய்தன தெரியுமா? இப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு கட்சிக் கொடிகள் பறந்து கொண்டிருப்பதைப் போல் அப்போது அந்தந்த நாட்டுக் கொடிகள் அந்தந்த நாட்டுக் கோட்டைச் சுவர்களில் எல்லாம் பறந்து கொண்டிருக்கும். மதுராபுரியின் கொடிகள் துரியோதனனைப் பார்த்து, ” அப்பா, நீ இங்கே வந்து என்ன முயற்சி செய்தாலும் மேக வண்ணனாகிய எங்கள் மன்னன், கண்ணன் பாண்டவர்களுக்குத்தான் துணைபோவான், நீயேன் வருகிறாய், வேலை மெனக்கெட்டு? போ போ” என்று சொல்வதுபோல் …

    சிகா: என்ன செய்தனவாம்?

    கவி: பாட்டையே சொல்கிறேனே:
    “ஈண்டுநீ வரினும் எங்கள் எழிலுடை எழிலி வண்ணன்
    பாண்டவர் தங்கட் கல்லால் படைத்துணை யாக மாட்டான்
    மீண்டுபோ கென்றென் றந்த வியன்மதிற் குடுமி தோறும்
    காண்தகு பதாகை யாடை கைகளால் தடுப்ப போன்ற”

    புரிகிறதா? கொடிகள் துரியோதனனைக் கைகளால் தடுத்தன என்று புலவர் பாடுகிறாரப்பா!
    சிகா: ஆஹா, பிரமாதம்.

    கவி: பார்த்தாயா, கொடிகளுக்குக் கையுண்டு என்கிறாரே. அது போகட்டும், நிலாவை ஒருகவளச் சோறு என்று நினைத்து யானை வழிமறித்த அழகை, “அம்புலியைக் கவளமென்று தும்பிவழி மறிக்கும்” என்று குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் பாடுவது ஒருபுறம் இருக்கட்டும். முத்தொள்ளாயிரம் என்ற கவிதை நூலில் ஒரு பாடல் கேளு:

    “அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ
    வெள்ளம்தீப் பட்ட தெனவெரீஇப் – புள்ளினம்தம்
    கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
    நச்சிலைவேல் கோக்கோதை நாடு”

    அரக்கு நிற ஆம்பல் பூக்கள் அடர்த்தியாகக் குளத்தில் மலர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, ஓ, வெள்ளமே தீப்பிடித்து எரிகிறதோ என்று பயந்துபோய் பறவைகள் எல்லாம் தங்கள் குஞ்சுகளைக் கைச்சிறகால் அணைத்துக் கொள்ளச் சிறடிக்கும் ஆரவாரம் மிகுந்த நாடு என்கிறார் அந்தப் புலவர். பறவைகளுக்கும் கையுண்டே. அதனால்தான், திருவள்ளுவரும் சொன்னார், எவனொருவன் கொலைத்தொழிலை வெறுத்துப் புலால் உண்ண மறுக்கிறானோ அவனை எல்லா உயிரும் கைகூப்பித் தொழுமாம்.

    “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிரும் தொழும்”

    சிகா: அப்பா, ஒப்புக் கொள்கிறேன், காற்றுக்குக் கையுண்டு. ஆளை விடப்பா!

    (புத்தி சிகாமணி ஓடி மறைகிறான். நான் மட்டும் தனியே, ஒரு மாமாங்கத்துக்கு முன் எழுதிய என் பழைய பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி நடக்கிறேன்.)

    காற்றுவந்து கைப்பிடித்துக் கூட்டிச்செல்வ தெவ்விடம்
    காதல் கவிதை கண்ண டித்துக் காட்டும் இன்ப ஓவியம்
    தோற்றம் என்பதா – ஒரு – தொடர்கதையாய் வளர்நிழலா

    நேற்றும் இன்றும் நாளை யென்றும் மாற்றி மாற்றி ஒருசுழல்
    நினைவு கனவு மலரு முறவு அனைத்திலும் அதேநிழல்
    தோற்றம் என்பதா – ஒரு – தொடர்கதையாய் வளர்நிழலா

    நிலாமுகில் தொடாதது தொலைவில் உள்ளது – என்
    றாலும் போர்வை நாட கம்கண் வளைவில் உள்ளது – வெறும்
    தோற்றம் என்பதா – ஒரு – தொடர்கதையாய் வளர்நிழலா

    மீட்டு கின்ற வீணை யின்வி ளிம்பி லேஇசைப்பொறி – கண்
    காட்டு கின்ற பாதை யெங்கும் கற்பனைத் திரள்
    கேட்ட றிந்த பாட லுக்குள் கோடிக் கோடி நெளிவுகள்
    தேடித் தேடிச் செல்லு கின்ற தேவதைக் குரல் – அந்தக்
    காற்றுவந்து கைப்பிடித்துக் கூட்டிச்செல்வ தெவ்விடம்
    காதல் கவிதை கண்ண டித்துக் காட்டும் இன்ப ஓவியம்
    தோற்றம் என்பதா – ஒரு – தொடர்கதையாய் வளர்நிழலா

    சம்பவம் நடந்த இடம்: மனவீதி;
    நேரம்: நேற்று மாலை;
    புத்தி சிகாமணி: என் புத்திதான்!

    என்னப்பா இது மாயாஜாலம்! கவிதையும் காற்றும் ஒன்றா? இந்தக் கேள்விக்குப் பாட்டாலேயே பதில்சொல்கிறேன், அடுத்தமுறை.

    (தொடரும்)

    Share