Tag: க.பாலசுப்பிரமணியன்

  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 24

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருக்கோலூர்

     

    அருள்மிகு  வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்

    381119_314017728697527_90541614_n

    சங்கநிதி பதுமநிதியோடு  செழிப்பளிக்கும் நவநிதியும்

    அங்கத்திலே அழகுடனே அணிந்தாலும் குபேரன்

    கண்விழியைக் காமத்திலே கலங்கிடச் செய்தானே

    கையிருந்த நிதியெல்லாம் கைகழுவி நின்றானே !

     

    செய்ததவறால் சிந்தைவருந்திச் சிவனருளைத் தேடியவன்

    மெய்வருத்தித் தவமிருந்தே மாதவனின் அருள்நாட

    எய்தகணை இடம்சேரக் கண்திறந்து கண்ணனுமே

    மெய்சிலிர்க்க மரக்காலால் மனம்நிறையக் கொடுத்தானே !

     

    திருமகளின் விழியருளால் தழைத்தோங்கும் நவநிதியைத்

    திருமாலும் மனமிறங்கித் தந்திடுவான் தடையின்றி

    திங்களெல்லாம் மும்மாரி பெய்திடுதல் போலெங்கும்

    திகட்டும்வரை மரக்காலால் அளந்திடுவான் மாநிதியே !

     

    நல்மகனாய் தயரதனுக்குப் பெருமை சேர்த்தாய்

    நலம்காத்த யசோதையை தாயாக்கித் தாள்பணிந்தாய்

    நம்பிவந்த அனுமனையோ அரவணைத்தது நின்றாய்

    நாரணனே ! நாயகனே ! நற்கதியே தந்தருள்வாய்

     

    பூங்காற்று அணைத்திருக்கப் பூமணத்தின் போதையிலே

    பூங்குழலின் நாதத்திலே பூவுலகைக் காப்பவனே

    பூங்கோதை துணையிருக்க  புவியெல்லாம் வியந்திருக்கப்

    பூந்தமிழில்  உனைப்பாட புலனெல்லாம் சிலிர்க்குதய்யா

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 23

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருக்கடல்மங்கை (மகாபலிபுரம்)

    அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள்

     26219293_1732776533440727_6333504764046447991_n

    கடலோரம் கால்நீட்டிக் கண்ணயர்ந்த கோவிந்தா

    கல்லெல்லாம் கலையான மாமல்லை மாதவனே

    கற்பனையைக் கையிறக்கிக் கல்லுளியில் வடித்தவனே

    கரையில்லா அன்பிற்கு கண்ணனென்ற பெயர்சொன்னாய் !

     

    பாற்கடலில் இருந்தவண்ணம் உனைக்காணும் பரவசத்தை

    பார்போற்றும் புண்டரீகன் தவமிருந்து வேண்டிநிற்கப்

    பசிதீர்க்க வேண்டுமென்று  வந்தாயே   பரந்தாமா

    பாற்கடலை படைத்தங்கே பேரருளாய் அமர்ந்தாயே!

     

    பஞ்சரதம் இருந்தாலும் பார்த்தனுக்கே சாரதியாய்

    பாஞ்சாலி துயர்நீக்கப் பாண்டவரின் துணையிருந்தாய்

    பாஞ்சஜன்யம் எடுத்தவனே பாரதத்தை வென்றவனே

    பாற்கடலில் அயர்ந்தபடி பாரெல்லாம் காப்பவனே !

     

    கோதையர்கள் புடைசூழக் கோலாட்டம் ஆடியவனே

    கோபியர்கள் நெஞ்சமெல்லாம் குழலூதி நின்றவனே

    கோவர்தனம் கையேந்திக் குலமெல்லாம் காத்தவனே

    கோலமகள் இராதையுடன் குழலேந்தி வருவாயே !

     

    நல்மகனாய் தயரதனுக்குப் பெருமை சேர்த்தாய்

    நலம்காத்த யசோதையை தாயாக்கித் தாள்பணிந்தாய்

    நம்பிவந்த அனுமனையோ அரவணைத்தது நின்றாய்

    நாரணனே ! நாயகனே ! நற்கதியே தந்தருள்வாய்

     

    சொல்லினிலே நீயிருந்தால்  சுவையெல்லாம் புதிதாகும்

    சொல்லாமல் உள்வந்தால் சுடர்மேனி ஒளியாகும்

    சோதனைகள் விலக்கிடுவாய் சுகமெல்லாம் தந்திடுவாய்

    சோலையென வாழ்விருக்கச் சொந்தமாக நீவேண்டும் !

     

     

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி)  – 22

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருத்தொலைவிலிமங்கலம்

    இரட்டைத் திருப்பதி

    sri-nindra-narayana-perumal-temple_1408521493

     

    அரவெனும் வடிவுடனே அமரனாய்த் தானிருந்தும்

    அமர்ந்திடவே இடமின்றி அருள்தரும் நிழலோனை

    அகமுடைய விடம்நீக்கி அருட்கடலாய் பெருகவிட்டு

    அடியார்கள் நலம்காக்கும் அரவிந்தக் கண்ணனே !

     

    அமுதத்தைத் தானருந்தி அமரனான அரக்கனும்

    அருள்தரும் நவக்கோள்கள் நடுவினிலே ஒன்றாக

    அறிவோடு ஆன்மிகத்தை அவன்பார்வை தந்திடவே

    அடியார்கள் உனைநாட அருள்கின்ற அரங்கனே !

     

    ஏறிமலை வாராமல் ஏழுமலை அருளனைத்தும்

    ஏற்றமுடன் தருகின்ற இரட்டைத் திருப்பதியில்

    ஏலமிட்டு வாழவைத் தோற்கடிக்கும் துயரெல்லாம்

    எவ்விடமே சென்றிடுமோ ஏழுமலையான் அருளாலே !

     

    தவமிருந்து ஞானத்தால் தலைசிறந்த தவத்தோரும்

    தன்கடமை செய்திருந்து தானிழந்த பெரியோரும்

    தானழித்து ஊனுருக்கி பக்தியிலே சிறந்தோரும்

    தன்வழியில் தாளடைந்த தத்துவத்தைச் சொன்னவனே !

     

    தானமெனத் தருமங்கள் கர்ணனிடம் பெற்றவுடன்

    தன்னருளைத் தந்திடவே தன்வடிவைக் காட்டியவனே

    தலைவணங்கா நரகனுக்குத் தீபஒளி தந்தவனே

    தாள்வைத்துப் பலியினிக்குத் திருவோணம் கொடுத்தவனே!

     

    மோகினியாய் வடிவெடுத்து மனங்கவர்ந்த மாயவனே

    மேதினியில் நிகருண்டோ கருணைக்கு  மாதவனே

    மேகமெனச் சூழ்ந்திருக்கும் ஊழ்வினையைக் கார்மேகா

    மெல்லனவெ நீக்கிடுவாய் மீதமின்றி இப்பிறப்பில் !

     

     

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி)-21

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருகொடித்தானம் அருள்மிகு மகாவிஷ்ணு திருக்கோவில்

     

    அருள்மிகு அற்புத நாராயணப் பெருமாள்

    venkateswara-swamy-8

    பாற்கடலில் படுத்துறங்கும் பத்மநாபன் அற்புதமே

    படுத்திருக்கும் பரந்தாமன் பாம்பணையம் அற்புதமே

    பக்கத்தில் துணையிருக்கும் பங்கயவல்லி அற்புதமே

    பதுமத்தில் அமர்ந்திருக்கும் பிரம்மனும் அற்புதமே !

     

    சங்கோடு சக்கரமும் கைகளில் அற்புதமே

    மங்காத அழகென்றும் மனதிற்கு அற்புதமே

    பாங்கான திருநாமம் முகத்தினிலே அற்புதமே

    பாதங்கள் தொட்டவுடன் பலனளிக்கும் அற்புதமே !

     

    பாரெல்லாம் காக்கின்ற பண்பென்றும் அற்புதமே

    பாவங்கள் அழித்திடவே பிறப்பெடுத்தாய் அற்புதமே

    பாயிரங்கள் நாலாயிரமும் பேர்சொல்லும் அற்புதமே

    பாவையர்கள் உள்ளத்திலே உருவெடுத்த அற்புதமே !

     

    வாமனனாய் உருவெடுத்து வந்ததும் அற்புதமே

    வானளாவி நின்றிருந்த விஸ்வரூபம் அற்புதமே

    வான்மழைக்கு மலைதூக்கி நின்றதுவும் அற்புதமே

    வந்தவினை தீர்த்துவிடும் அற்புதமே நாரணனே !

     

    தேரோட்டி வந்தாய் பார்த்தனுக்கே அற்புதமே

    தேரமர்ந்து தந்தாய் கீதையென்றும் அற்புதமே

    தேடிவரும் அடியார்கள் குறைதீர்க்கும் அற்புதமே

    தீதில்லா வாழ்க்கைக்கு நினைவென்றும் அற்புதமே !

     

    மூவடியால் உலகளந்த மூதறிவும் அற்புதமே

    சேவடியால் அகலிகைக்கு அருள்தந்த அற்புதமே

    பூவிழியாள் மார்பினிலே வைத்திருக்கும் அற்புதமே

    பூந்தமிழில் உனைப்பாடும் பாடலெல்லாம் அற்புதமே !

     

     

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) 20

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருமொழிக்குளம் அருள்மிகு லட்சுமணஸ்வாமி திருக்கோயில்

    download

    வேள்வியில் சிறந்த வேதியன் அரீசன்

    வேண்டிய நேரத்தில் விஷ்ணுவும் வந்தான்

    வந்திடும் கலியில் வாழ்ந்திடும் வழியை

    வரமெனத் தந்தான் திருமொழி சொன்னான் !

     

    இறைவனின் திருமொழி இன்னல்கள் நீக்கிடும்

    இடைவரும் தடைகள் எளிதினில் நீங்கிடும்

    இதயத்தில் இராமனை இனிதே வைத்தால்

    இன்பங்கள் அருளிடும் திருமொழிக் கூடம் !

     

    இரகுகுலம் தழைத்திட இரகுவரன் நினைவை

    இதயத்தில் ஏந்தியே  பரதனும் வந்தான்

    இலக்குவன் சினத்தை இராமனே தணித்திட

    இளையவர் இருவரும் அண்ணலைப் பணிந்தார் !

     

    கோசலை மைந்தன் கோதண்ட இராமன்

    குலத்தின் பெருமைக்கே கலங்கரை விளக்கம் !

    குணத்தின் குன்றாய் குடிகளின் நெஞ்சில்

    கானகம் இருந்தும் கடமைகள் ஆற்றினான் !

     

    பாதுகை அருளிட பரதனின் ஆட்சி

    பார்த்ததும் வியந்ததே அண்டங்கள் அனைத்தும் !

    பாதங்கள் பணிந்த அனுமனை அணைத்து

    பாவங்கள் அழித்தான் பண்புடை மன்னன் !

     

    சினத்தால் செய்த சிறிதொரு பாவத்தை

    மனத்தால் உணர்ந்தே இலக்குவன் படைத்தான்

    குணத்தால் உயர்ந்த இராகவன் கோவில்

    நினைத்தால் விலகும் பாவங்கள் அனைத்தும் !

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 42

    க. பாலசுப்பிரமணியன்

    இறைவனின் தியானத்தில் இருந்தபோது 

    திருமூலர்-1-1

    இராமகிருஷ்ண  பரமஹம்சர் மற்றவர்களுக்குப் புரியும் வகையில் எளிதாக சிறிய கதைகளைக் கூறியிருக்கின்றார்.  ஒருமுறை காட்டில் ஒரு ஒதுங்கிய இடத்தில் தன்னுடைய குடிலை அமைத்து இறைவனை வணங்கி வந்தார் ஒரு முனிவர். அவருக்கு சில சீடர்கள் உண்டு.  தங்களுடைய குருவிற்குத் தேவையான பொருட்களை அவர்கள் சேகரித்து வந்தார்கள். அந்த முனிவரும் அமைதியாக தியானத்தில் ஈடுபட்டு வந்தார். ஒரு நாள் அவருடைய குடிலுக்கு நேர் எதிரில் ஒரு புதிய குடில் அமைக்கப்பட்டிருப்பதை அவர் கவனித்தார். சில நாட்களில் அந்தக்  குடிலுக்கு சில பேர்கள் நித்தம் வந்து செல்வதையும் அவர் கவனித்தார். தன்னுடைய சீடர்களை அழைத்து அந்தக் குடிலுக்கு வந்திருப்பவர்களைப் பற்றி விசாரிக்கச் சொன்னார்.

    சீடர்கள் தகவல் தெரிந்து குருவிடம் வந்து ” குருவே, உங்களிடம் இதை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. அங்கே புதிதாக வைத்திருப்பது ஒரு பெண். அவள் வேசியாக இருக்கின்றாள். நித்தம் அவளுக்காக பலர் வந்து செல்கின்றனர்.”

    இதைக்கேட்ட முனிவரின் மனம் துயரமுற்றது. அடுத்த நாள் அவர் பூசையில் அமரும் பொழுது அவர் உள்ளத்தில் இப்பொழுது அந்த வேசி என்ன செய்து கொண்டிருப்பாள்? எப்படியெப்படியெல்லாம் இருப்பாள் என்ற சிந்தனை வளர அவருடைய முழுக்கவனமும் பூசையில் செல்லவில்லை. ஆனால் அந்த வேசியோ தன்னுடைய தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் “இப்பொழுது அந்த முனிவர் எப்படி எப்படியெல்லாம் இறைவனை போற்றிக்கொண்டிருப்பர் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். அவள் மனம் முழுவதும் அந்த இறைவனின் பூசையில் நின்றது. இறைவன் யாருக்கு அருள் புரிவான் என்பதே கேள்வி..

    ஆகவே, சிந்தையைச் சிதறாமல் வைத்து ஒன்றே குறிக்கோளாக இறைவனை நினைப்பதும் அவனை வழிபடுவதும் உண்மையான பூசையாகும்.

    எப்படி இந்த ஒருநிலைப்படுத்திய தியானத்தை வளர்ப்பது?  திருநாவுக்கரசர் தேவாரத்தில் வெகு அழகாகச் சொல்லுகின்றார்

    காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக

    வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக

    நேயமே நெய்யும்பாலா நிறை நீரமைய வாட்டிப்

    பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டி னோமே .

    திருமூலரோ சிந்தையுள் திருவடி இருந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு பதில் அளிக்கும் வண்ணம் கூறுகின்றார்

    சிந்தையி னுள்ளே எந்தை திருவடி

    சிந்தையும் எந்தை திருவடிக்கு கீழது

    எந்தையும் என்னை யறியகி லானாகில்

    எந்தையும் யானும் அறிகிலேன்

    திருவடியைச் சிந்தையில் வைத்தால்  எப்படி இருக்கும் ? என்னென்ன உணர்வுகள் நமக்குக் கிடைக்கும்? இதோ மாணிக்கவாசகரின் வார்த்தைகள் நம்மை உணரவைக்கின்றன.

    இணையார் திருவடி என்றலைமேல் வைத்தலுமே

    துணையான சுற்றங்க ளனைத்தையும் துறந் தொழிந்தேனே .

    சிந்தையில் இறைவன் இருக்கும் வரையில் சொந்தங்களும் பந்தங்களும் அவர்களின் நினைவுகளும் நமக்கு ஏற்படுவதில்லை. அவற்றின் பாதிப்புக்கள் நம்மைக் கட்டுப்படுத்துவதில்லை

    சுற்றத்தில் எத்தனை பேர் இருந்து என்ன பயன்? எப்பொழுது இறைவன் நெஞ்சினில் இல்லையோ, அப்பொழுது இந்தச் சுற்றங்களுக்கெல்லாம் பொருளேது

    ஊரிருந் தென்னநல் லோரிருந் தென்னுப காரமுள்ள

    பேரிருந் தென்பெற்ற தாயிருந் தென்மடப் பெண்கொடியாள்

    சீரிருந் தென்ன சிறப்பிருந் தென்னவித் தேயத்தினில்

    ஏரிருந் தென்வல்ல வாவிறை வாகச்சி யேகம்பனே !

    என்று பட்டினத்தார் தன்னுடைய மனக்கவலையை வெளிப்படுத்துவது ஒரு உண்மையான பக்தியின் வெளிப்பாடகத் தெரிகின்றது

    எல்லா உறவையும் சுற்றத்தையும் விளக்கி இறைவனோடு மட்டும் இருக்கும் பொழுது உடல், பொருள், ஆவி அனைத்தும் அவனையே சார்ந்திருக்கும். அவனையே நாடியிருக்கும். அந்தப் பரவச நிலை எப்படி இருக்கும் ?

     மாணிக்கவாசகர் அந்தப் பரவச நிலைக்கு நம்மை எடுத்துச் செல்லுகின்றார்

    அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை

    ஆனந்த மாய்க்கசிந் துருக

    என்பரம் அல்லா என்னருள் தந்தாய்

    யானிதற் கிலனோர் கைம்மாறு

    முன்புமாய் பின்பு முழுதுமாய் பரந்த

    முத்தனே முடிவிலா முதலே

    தென்பெருந் துறையாய் சிவபெரு மானே

    சீருடைச் சிவபுரத் தரசனே !

    அவனோடு ஒன்றி இருக்கும்பொழுது எப்படிப்பட்ட ஆனந்தநிலை நமக்கு கிடைக்கின்றது !

    (தொடருவோம்)

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி )- 19

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருக்கடிகை (சோளிங்கர் )

     

     அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் 

    165382_168349703210073_100001051325299_395411_1321745_n

    சிந்தையிலே சினமெடுத்துச் சிங்கமென வந்தவனே

    விந்தையென வானவரும் பார்த்திருந்த நரசிம்மா !

    அகந்தையிலே தானென்று தலைவிரித்த இரணியனை

    கந்தையெனப் பிரித்தெடுத்துக் கதைமுடித்த காருண்யா !

     

    மலையமர்ந்து அருள்செய்யும் மங்கலனே மாதவனே

    மாருதியை துணைவைத்து மனமெல்லாம் ஆள்பவனே

    மலையான துயர்நீங்க மலையேறி வந்தவர்க்கு

    மடைதிறந்த வெள்ளமென அருள்செய்யும் அச்சுதனே !

     

    பயத்தோடு பலமிழந்து தன்வாழ்வைத் தானிழந்து

    பலனில்லாக் கோள்களின் பார்வையிலே பரிதவித்துப்

    பகடையென உருள்கின்ற வாழ்வினையே காப்பவனே

    பகலவனின் பேரொளியாய் அருள்கின்ற அழகியசிங்கா !

     

    நிலைகுலைந்த மனம்கொண்டு பித்தான உள்ளங்களில்

    நிழலாகத் தானமர்ந்து நினைவெல்லாம் நிறைந்தவனே

    நிறைவான நலம்தேடி நின்தாள்கள் அடைந்தவரை

    நிழலாகப் பின்தொடர்ந்து விதிமாற்றும் வல்லவனே !

     

    ஏழுமலை எறிவந்தால் என்துயர்கள் நீங்கிடுமோ ?

    நூறுமுறை பெயர்சொன்னால் நூலிழையாய் மறைந்திடுமோ ?

    சாத்துமுறை எதுவென்று யானறியேன் சடகோபா !

    சத்தியனே! சரணமென வந்திட்டேன் சந்நிதியில் !

     

    சோதனைகள் விலகிவிடும் சோகங்கள் அழிந்துவிடும்

    சோர்ந்திட்ட உள்ளங்களில் சுதர்சனின் அருள்பிறக்கும்

    சுமைகளெல்லாம் இறங்கிவிடச் சூழ்வினைகள் மறைந்துவிட

    சுவையான வாழ்விற்கு சோளிங்கர் நலம்பெருக்கும் !

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) 18

    க. பாலசுப்பிரமணியன்

     

    திரு பரமேஸ்வர விண்ணகரம்  அருள்மிகு வைகுந்தப் பெருமாள் கோவில்

    26165798_759459714238180_188493417537423249_n

    கைலாசனின் அருளாலே களிப்புற்றான் விரோசனனும்

    கையிரண்டில் தவழ்ந்தனவே காவல் தெய்வங்களே

    கைகூப்பிக் கண்ணனையே காலமெல்லாம் தொழுதிடவே

    கைலாயனின் கண்ணருகில் கண்ணனின் விண்ணகரம் !

     

    பரமசிவன் கருணையினால் பரமபதம் வந்தது

    பாரெல்லாம் போற்றிடவே பேரருளைத் தந்தது

    பல்லவனின் பேரன்பால் பரமேஸ்வரம் அமர்ந்தது

    பரவசத்தில் அடியார்களுக்கு அருட்சுனையாய் அமைந்தது !

     

    ஆழ்கடலின் நடுவினிலே அமைதியாய் அயர்ந்தவனே

    பாழ்மனமே அலைபாய நிலைக்காக்க வருவாயோ ?

    ஊழ்வினையே ஒன்றாகி உள்ளமெல்லாம் உலுக்கிவிட

    யாழிசையாய் வந்திடுவாய் என்னுயிரை மீட்டுவிட !

     

    அன்னையவள் சொல்காக்கக் கானகத்தில் நடந்தாய்

    அரியணையின் நலம்காக்கத் தூதுவனாய் நடந்தாய்

    அடியவர்கள் மனம்காக்க அகிலமெல்லாம் நடந்தாய்

    அண்டமெல்லாம் காத்திருக்கும் உன்னடிகள் எதிர்நோக்கி !

     

    தூணொடித்து நடுவாயிலில் அமர்ந்த நரசிம்மா !

    வில்லொடித்து வைதேகி கைப்பிடித்த காகுந்தா !

    சொல்லெடுத்து நான்வந்தேன் சுவையாக உனைப்பாட

    மண்ணெடுத்த பிறவியிலே வைகுந்தா! வாழ்வளிப்பாய் !

     

    வைகுந்தம் எங்கென்று யாரேனும் அறிந்தாரில்லை

    வைகுந்தன் வடிவழகை யாரேனும் கண்டாரில்லை

    வைகுந்தன் பெயர்சொல்ல யாரேனும் மறந்தாரில்லை

    வைகுந்தா ! வையகத்தில் உன்னருளிருக்க வீழ்ந்தாரில்லை!

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே – (1)

    க. பாலசுப்பிரமணியன்

    வாழ்க்கைக் கல்வி

    வாழ்ந்து பார்க்கலாமே!

    புத்தாண்டு பிறக்கின்றது! இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற பாடல் எங்கிருந்தோ காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. நித்தமும் பிறப்பதா? வேடிக்கையாக இல்லை…? பிறப்பு என்பது ஒரு முறைதானே ?

    தத்துவ மேதை ரஜ்னீஷ் கூறுகின்றார் – “நாம் உள்ளிழுக்கும் ஒவ்வொரு மூச்சும் பிறப்புத்தான்; நாம் வெளியிடுகின்ற ஒவ்வொரு மூச்சும் இறப்பின் அறிகுறிதான்”. அறிவியல் கருத்தாக நாம் அலசிப்பார்த்தாலும் நாம் வாழுகின்ற ஒவ்வொரு நொடியிலும் பல்லாயிரக்கணக்கான உயிரணுக்கள் பிறந்துகொண்டிருக்கின்றன; அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான உயிரணுக்கள் இறந்துகொண்டிருக்கின்றன. அதே போல் நம்முடைய மனதில் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் பிறந்துகொண்டும் மடிந்துகொண்டும் இருக்கின்றன. எனவே வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு கணத்திலும் புதிதாய்ப் பிறந்துகொண்டுதான் இருக்கின்றோம்.

    இந்த வாழ்க்கையை நாம் எப்படி வாழவேண்டும்? இதற்கு ஏதேனும் வழிமுறைகள் இருக்கின்றனவா என்று சற்று அலசிப் பார்த்தால், வாழ்க்கை என்பது  சமூக, பொருளாதார, சூழ்நிலை சார்ந்த ஒரு வழிமுறை. காலந்தொட்டு பல சமுதாயங்கள், பல நாடுகளில் தங்கள் தட்ப வெட்ப சூழ்நிலைகளுக்கேற்ப தங்கள் வாழ்க்கை முறைகளை வகுத்துக்கொண்டு வந்தது மட்டுமின்றி அதற்குத் தகுந்தவாறு வாழ்க்கை பற்றிய தங்கள் நோக்கங்களையும் கருத்துக்களையும் கோட்பாடுகளையும் மாற்றிக்கொண்டும் வந்திருக்கின்றன.

    வாழ்க்கையைப் பற்றி பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன?

    வாழ்க்கை என்பது ஒரு போராட்டமா?

    வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டா ?

    வாழ்க்கை என்பது ஒரு முயற்சியா ?

    வாழ்க்கை என்பது ஒரு வியாபாரமா ?

    பல அறிஞர்கள் வாழ்க்கையின் கோட்பாடுகளைப் பற்றி பலவித கோணங்களில் பல கருத்துக்களை அள்ளி வீசியிருக்கின்றனர். இத்தனை கருத்துக்களுக்கு நடுவிலும், அறிவுரைகளுக்கும் வழிகாட்டுதல்களுக்கு நடுவிலும் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள நாம் பல முயற்சி செய்துகொண்டிருக்கின்றோம். வாழ்க்கைக் கல்வி என்பது காலந்தொட்டு வீடுகளிலும் சமுதாய மேடைகளிலும் பேசப்பட்டும் அலசப்பட்டும் வரப்பட்டுள்ளன. இருந்தும் இன்றைய சமுதாயத்தில் வாழ்க்கைக்கு கல்வியின் அவசியத்தை மிக அதிக அளவில் நாம் இன்றியமையாததாகக் கருதுகின்றோம்.  காரணம் ?

    சில தோல்விகளைச் சந்திக்க முடியாமல் இளைய சமுதாயம் தற்கொலையைத் தானமாகப் பெற்றுக்கொண்டிருக்கின்றது.

    சில ஆசைகளுக்காக இந்தச் சமுதாயம் தங்கள் நேர்மையை விலை பேசிக்கொண்டிருக்கின்றது.

    சில முன்மாதிரிகளால் தவறான தலைமையைப் போற்றிக்கொண்டிருக்கின்றது.

    சில சுயநலங்களுக்கு முன்னே மனிதநேயம் மண்டியிட்டுக்கொண்டிருக்கின்றது.

    இந்தச் சூழ்நிலையில் கல்விச்சாலைகளில் வியாபர நோக்கம் பரவலாகப் பரவியிருக்கும் நேரத்தில் கல்வி என்பது மாணவர்களை வெறும் தேர்வுகளுக்குத் தயாரிப்பதற்காக மட்டும் கருதப்படுகின்றது. கல்வியின் சீரிய நோக்கமான மனித நேயம், நாட்டுப் பற்று, திறன் வளர்த்தல், கலாச்சாரப் பண்புகள் ஆகியவற்றை ஓரம்கட்டி மாணவர்களைத் தேர்வுக்குத் தயாரிக்கும் வியாபாரம் பெருகிக் கொண்டிருக்கின்றது. இதில் கல்விச்சாலைகளை மட்டும் குறைகூறிப் பயனில்லை. வீடுகளில் பெற்றோர்களின் பங்கும் நுட்பமாக கவனிக்கப்படவேண்டியது அவசியம்.

    வாழ்க்கையின் இலக்கு வெறும் உணவு, உடை மற்றும் இருக்கும் இடத்திற்காகவும், பணத்தை ஈட்டி சேமிப்பதற்காக மட்டுமின்றி பல சீரிய கருத்துகளை உள்ளடக்கி உள்ளது. வருங்காலத்தில் மாறி வரும் சமுதாயச் சந்தையில் நமது இளம் சந்ததியினர் வெற்றி பெறுவார்களா? அவ்வாறு வெற்றி பெற வேண்டுமானால் என்னென்ன வாழ்க்கைத் திறன்கள் தேவைப் படுகின்றன? அவைகள் எங்கெங்கு கிடைக்கும் ? அவைகளை அடைய நாம் என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டும்?  இவற்றைக் கருத்தில் கொண்டு இளம் சந்ததியினருக்காக எழுதப்படும் இந்தத் தொடர் முந்தய “கற்றல் ஒரு ஆற்றல் ” என்ற தொடரின் பின்னோடியாக வளர்கின்றது. இதன் அடிப்படைக் கருத்து  “கற்றல்” பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மட்டும் நடப்பதல்ல : வாழ்க்கையின் ஒவ்வொரு படிகளிலும் கற்றல் நடந்து கொண்டிருக்கின்றது என்பதை உறுதிசெய்வதே. இன்றைய மூளை நரம்பியல் வல்லுனர்களின் ஆராய்ச்சியின்படி “கற்றலின் தொண்ணூறு விழுக்காடு பள்ளிகளுக்கு வெளியே நடந்துகொண்டிருக்கின்றது.” அது முறைசாராக் கற்றலாகவே நடந்து வருகின்றது. இது நம்முடைய வாழ்க்கையின் வெற்றிக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைகின்றது. இதன் பல கோணங்களையும் உலகளாவிய பல கருத்துக்களையும் நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

    தொடர்வோம் ..

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) 17  

    க.பாலசுப்பிரமணியன்

     

    நிலாத்திங்கள் துண்டம் பெருமாள் கோவில்  அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் பெருமாள்

    cg103p007405

    மலைமகள் மனத்தை சோதிக்க மகேசனும்

    நிலைகுலையாத் தவம் நிறுத்தத் துணிந்தே

    தலைவைத்த கங்கையினைத் தவழ விட்டான்

    அலைபாய்ந்தே கங்கை பெருகி வந்தனளே !

     

    கயல்விழியும் காத்திடவே வாமனனை வேண்டிட

    கருணையுடன் வந்தான் சங்கோடு சக்கரமாய்

    மலைமகளின் தவம்காத்துத் தனியாக நின்றான்

    மண்வடித்த சிவத்தினை மாதங்கியும் அணைத்தாளே !

     

    அரனுடைய தலையிருந்து பறித்த அழகியபிறையை

    அன்னையின் தவம்காக்க முன்வைத்தான் அரியுமே

    ஆமையாகிக் கடல்கடைந்து உடல் கருத்தவனே

    மதியணிந்து ஒளிர்ந்தானே மங்கலமாய் சந்திரசூடனே !

     

    கருமேனி உனக்கென்று புறக்கண்கள் சொல்லிவிட

    திருமேனி வண்ணங்களை அகக்கண்கள் அறிந்துவிட

    ஒருமேனி உனக்கேது உலகளந்த உத்தமனே !

    உலகறியாப் பொருளேல்லாம் உன்மேனி அடங்கையிலே !

     

    கீழ்வாயில் கற்பூரம் கண்திருஷ்டி கழிந்துவிடும்

    கருவிழிகள் கருணையோ காலனையும் விரட்டிவிடும்

    கருந்துளசி நெஞ்சினிலே காதலிலே கனிந்துவிடும்

    கார்மேக வண்ணமென்றும் காந்தமென இழுத்துவிடும் !

     

    மேலிருந்து பார்த்தாலோ முகமெல்லாம் பேரழகு

    கீழிருந்து பார்த்தாலோ நிகரில்லாத தாளழகு

    உடனின்று பார்த்தாலோ உனையன்றி ஏதழகு

    உவமைக்குச் சொல்லிடவே உலகிலில்லை வேறழகு!

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -16

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருக்கச்சியூர்

    அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில்

    cg103p006707

    வெள்ளைத் தாமரை வெறிச்சென நின்றது

    வீணையின் நரம்புகள் தளர்ந்தே துடித்தன

    வேதங்கள் ஒலியில் வாட்டமும் தெரிந்தது

    வாணியின சினத்தினில வானமே இருண்டது !

     

    வேகத்தில் வந்தாள் வேள்வியைத் தடுக்க

    வேதவன் நான்முகன் வேதனை கொள்ள

    வேகவதி வழியை வாமனன் தடுத்து

    வேதங்கள் காத்து வரதனாய் நின்றான்

     

    நான்முகன் வேள்வியை நசுக்கிடத் துடித்த

    நாமகள் தூதர்கள் நடுங்கிட வைக்க

    நாரணன் வலிமையை நானிலம் கண்டது

    நாதத்தின் தேவி நல்லெண்ணம் பெறவே !

     

    வரையின்றித் தருபவனே வரதப்பா வைகுந்தா

    நிறைவான மனம் வேண்டும் நீதருவாய் !

    குறையாத பேரின்பம் குலம்காக்கும் நல்லெண்ணம்

    மறைக்காட்டும் நல்வழியும் தருவாயே நன்மதியே !

     

    அலர்மேல் மங்கையவள் அன்போடு துணையிருக்க

    அசையாத விழியோடு  அமரர்கள் பார்த்திருக்க

    ஆதிசேடன் குடைபிடிக்க அமர்ந்தாயே அழகாக

    அடியார்கள் குறைகேட்க அருளாளா வைகுந்தா

     

    மல்லாண்ட தோளுடையோய் ! மலைவாழும் பேறுடையோய் !

    மனையாளை இதயத்தில் ஆட்கொண்ட மாண்புடையோய் !

    மதியறிந்த மலரெல்லாம் மணம்நிறையச் சேர்த்துவைத்து

    மலரடியில் வைத்தாலும் மங்கிடுதே நின்னொளியில் !

     

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -15

    க. பாலசுப்பிரமணியன்

    திருக்காவலம்பாடி

    அருள்மிகு கோபாலகிருஷ்ணப்  பெருமாள் திருக்கோவில்

     297199_124390817667684_114669075306525_115432_136719534_n

    கவளச் சோறைக் களிப்புடன் ஏற்கும்

    கரியின் துயரைக் கண்ணனே துடைக்கக்

    கலியினை நீக்கும் காவலன் புகழைக்

    கற்களில் வடித்த காவலம் பாடி !

     

    நெருப்பினில் பிறந்தவள் நெருப்பாய் எரிந்திட

    நினைப்பாய் நின்றவள் நினைவாய் மறைந்திட

    உமையாள் நினைவில் உருத்திரன் ஆடினான்

    இமைகள் அசையா அமரர்கள் நடுங்கிட !

     

    சினத்தில் சிவந்தது சிவனின் சிந்தை

    சிதறிய கனலாய் சிகையும் வீழ்ந்திடச்

    சீறிய நெருப்பில் பதினோரு சிவனே

    சீற்றத்தை தணித்திட சேர்ந்தனர் அமரரே !

     

    அமரர்கள் வேண்டிட அரங்கனும்  வந்தான்

    அமைதியைக் காக்க  அரனிடம்  வேண்டினான்

    அச்சுதன் கண்டே அமைதியைப் பெற்றான்

    ஆடியபாதன் வேண்டினான் அரங்கனின் அருளே !

     

    பதினோரு வடிவில் கண்ணனின் கருணை

    பாலகன் கோவிந்தன் பசுவுடை கோபாலன்

    பரவசம் கொடுக்கும் பதினோரு வடிவங்கள்

    பார்த்ததும் சிவனே பதுமையாய் நின்றான்.!

     

    மனத்துள்ளே நீயிருந்தால் மங்கலமே பொங்கிவிடும்

    மலரடிகள் நீதந்தால் மாயையெல்லாம் விலகிவிடும்

    மாதவனே ! யாதவனே ! மனமிரங்கி அருள்தருவாய்

    மார்கழியில் பேரருளை உனையன்றி யார்தருவார் ?

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -14

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருதலைச்சங்க நாண்மதியம்

    அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோவில்

     

    OLYMPUS DIGITAL CAMERA

    நல்லதே நடக்கும் நாரணன் நினைப்பால்

    நன்மையைப் பெருக்கிடும் நாண்மதியனே !

    நலங்கிட்ட நங்கை நாச்சியார் துணைவன்

    நாமங்கள் ஆயிரம் கொண்ட நாதமூலனே !

     

    பேதங்கள் இல்லாப் பாற்கடல் மன்னன்

    சேதங்கள் இல்லாச் சிந்தையைத் தருவான்

    வேடங்கள் போடும் வேடிக்கை வாடிக்கை

    வேதங்கள் போற்றும் வைகுந்த நாயகன் !

     

    சந்திரன் சாபங்கள் சடுதியில் விலகிட

    சரணம் அடைந்தான் சாம்பனின் அருளால்

    சாபங்கள் நீக்கிச் சங்கடம் விலக்கிட

    சன்மதி பெற்றே வான்மதி வளர்ந்தான் !

     

    சங்கினைப் பரிசாய் சங்கரன் தந்திட

    அங்கத்தின் ஒளியில் அதுவும் சேரும்

    சமரினில் ஒலிக்கும் சங்கொலி கேட்ட

    அரக்கர்கள் வாழ்வோ விதையின்றி வீழும் !

     

    தலைச்சங்கப்  பெருமாள் தரணியைக் காக்க

    தலைமுதல் தாள்வரை போற்றியே நின்றால்

    அலைமகள் துணையுடன் அருள்தர வருவான்

    நிலமகள் கருணையும் தடையின்றிக் கிடைக்கும் !

     

    மலரும் மாலையும் கனிகளும் வேண்டாம்

    மாதவன் நினைப்பே  மனந்தனில் போதும்

    மாலையும் காலையும் மனதினில் நிறுத்த

    மார்கழி மணாளன் மனநலம் தருவான் !

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -13

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருத்தஞ்சை மாமணிக்  கோவில்

    thanjai-Maamani-kovil-copy

    பாற்கடலில் கடைந்தெடுத்த நல்லமுதைப் பராசரனும்

    பக்குவமாய் மணிமுத்த நதியிலே தெளித்துவிட்டே

    பார்வியக்கும் தவத்தினில்  பக்தியுடன் அமர்ந்திருக்க

    பார்த்திருந்த வானவரும் பராசரனைப் பணித்தனரே !

     

    தஞ்சகனும் தாரகனும் தண்டகனும் ஆணவத்தில்

    தவத்தோனின் நிலைகுலைக்கத்  தயங்காமலே முயன்றிடவே

    தவம்காக்கத் திருமாலும் முன்வந்தார் முக்கோலம்கொண்டு

    தஞ்சகனைத் தாரகனைத் தாடகனை வென்றிடவே !

     

    கனல்பறக்கும் சினத்தோடு கருடன் மேலமர்ந்தே

    கண்ணனும் வந்தான் கதைமுடிக்க வீரநரசிம்மனாய் !

    களமிழந்த தஞ்சகனும் தலைகுனிந்து வேண்டிடவே

    தஞ்சையெனப் பெயரெடுத்துத் தானமர்ந்தான் தயாளனே !

     

    கலக்கமுற்றுக் கடலினிலே மறைந்திட்ட தண்டகனும்

    களமிழக்கச் செய்தான் கண்ணனும் காட்டுப்பன்றியாய் !

    காளியுடன் போரிட்டுக் கலையிழந்தான் தாரகனும்

    தவத்தோனின் அன்பினிலே கண்ணனும் கட்டுண்டான் !

     

    வீரத்திலே  ஈடில்லா விவேகன் வீரநரசிம்மன்

    திருமகளைத் துணைகொண்ட இலக்குமிநரசிம்மன்

    நீர்வண்ணன் கார்மேகன் நினைவாளும் நீலமேகன்

    பார்போற்றும் பராசரனின் முன்வந்தே அருள்தந்தான் !

     

    நிலமகளும் அலைமகளும் அன்போடு துணையிருக்க

    நினைவெல்லாம் அடியார்கள் கொண்ட துயர்துடைக்க

    நிலையில்லா வாழ்கைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கே !

    நீலமேகா ! நித்தியமே ! சத்தியமே ! போற்றுகின்றேன் !

     

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -12

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருவானவண்டூர் – அருள்மிகு கோசாலப்பன் பெருமாள்

    madhava-Perumal1o

    வாழ்க்கைப் போரின் வசந்தங்கள் முடிய

    வந்தனர் பாண்டவர் வனங்களைத் தேடி

    வேதவன் கண்ணன் காட்டிய வழியில்

    விடுதலை பெற்றிட வாழ்வை வென்றிட !

     

    கோவினம் காத்த கோவிந்தன் நினைவில்

    கோவிலைக் கட்டினான் பம்பையின் கரையில்

    கோமகன் நகுலனும் கோசாலக் கண்ணனனை

    கோவிலில் வைத்துக் குறைகள் சொல்லிட !

     

    பம்பையின் கரையில் பாம்பணை அப்பனாய்

    பண்டரிபுரத்திலே பாசத்தில் புண்டரி காட்சனாய்

    பாதங்கள் போற்றிட கயையிலே விஷ்ணுவாய்

    பாலங்கள் அமைத்தாய்  பக்தர்கள் நெஞ்சுடன் !

     

    கண்களில் நிறைந்ததோ கருணையின் கடலே

    சொற்கள் படைத்ததோ அமுதெனும் கீதை

    கைகளில் அபயம்  காலங்கள் காத்திடும்

    கண்ணனின் நெஞ்சமோ காதலின் சுரங்கம் !

     

    வெம்பிய நெஞ்சங்களின் வேதனை களைந்திட

    நம்பிய உள்ளங்கள் நலமுடன் வாழ்ந்திட

    மங்கிய பாதைகளில் மங்களம் பெருகிட

    மறவாமல் வணங்குவோம் மாதவன் மலரடி !

    Share