மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 24
க. பாலசுப்பிரமணியன்
திருக்கோலூர்
அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்
சங்கநிதி பதுமநிதியோடு செழிப்பளிக்கும் நவநிதியும்
அங்கத்திலே அழகுடனே அணிந்தாலும் குபேரன்
கண்விழியைக் காமத்திலே கலங்கிடச் செய்தானே
கையிருந்த நிதியெல்லாம் கைகழுவி நின்றானே !
செய்ததவறால் சிந்தைவருந்திச் சிவனருளைத் தேடியவன்
மெய்வருத்தித் தவமிருந்தே மாதவனின் அருள்நாட
எய்தகணை இடம்சேரக் கண்திறந்து கண்ணனுமே
மெய்சிலிர்க்க மரக்காலால் மனம்நிறையக் கொடுத்தானே !
திருமகளின் விழியருளால் தழைத்தோங்கும் நவநிதியைத்
திருமாலும் மனமிறங்கித் தந்திடுவான் தடையின்றி
திங்களெல்லாம் மும்மாரி பெய்திடுதல் போலெங்கும்
திகட்டும்வரை மரக்காலால் அளந்திடுவான் மாநிதியே !
நல்மகனாய் தயரதனுக்குப் பெருமை சேர்த்தாய்
நலம்காத்த யசோதையை தாயாக்கித் தாள்பணிந்தாய்
நம்பிவந்த அனுமனையோ அரவணைத்தது நின்றாய்
நாரணனே ! நாயகனே ! நற்கதியே தந்தருள்வாய்
பூங்காற்று அணைத்திருக்கப் பூமணத்தின் போதையிலே
பூங்குழலின் நாதத்திலே பூவுலகைக் காப்பவனே
பூங்கோதை துணையிருக்க புவியெல்லாம் வியந்திருக்கப்
பூந்தமிழில் உனைப்பாட புலனெல்லாம் சிலிர்க்குதய்யா