மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -13
க. பாலசுப்பிரமணியன்
திருத்தஞ்சை மாமணிக் கோவில்
பாற்கடலில் கடைந்தெடுத்த நல்லமுதைப் பராசரனும்
பக்குவமாய் மணிமுத்த நதியிலே தெளித்துவிட்டே
பார்வியக்கும் தவத்தினில் பக்தியுடன் அமர்ந்திருக்க
பார்த்திருந்த வானவரும் பராசரனைப் பணித்தனரே !
தஞ்சகனும் தாரகனும் தண்டகனும் ஆணவத்தில்
தவத்தோனின் நிலைகுலைக்கத் தயங்காமலே முயன்றிடவே
தவம்காக்கத் திருமாலும் முன்வந்தார் முக்கோலம்கொண்டு
தஞ்சகனைத் தாரகனைத் தாடகனை வென்றிடவே !
கனல்பறக்கும் சினத்தோடு கருடன் மேலமர்ந்தே
கண்ணனும் வந்தான் கதைமுடிக்க வீரநரசிம்மனாய் !
களமிழந்த தஞ்சகனும் தலைகுனிந்து வேண்டிடவே
தஞ்சையெனப் பெயரெடுத்துத் தானமர்ந்தான் தயாளனே !
கலக்கமுற்றுக் கடலினிலே மறைந்திட்ட தண்டகனும்
களமிழக்கச் செய்தான் கண்ணனும் காட்டுப்பன்றியாய் !
காளியுடன் போரிட்டுக் கலையிழந்தான் தாரகனும்
தவத்தோனின் அன்பினிலே கண்ணனும் கட்டுண்டான் !
வீரத்திலே ஈடில்லா விவேகன் வீரநரசிம்மன்
திருமகளைத் துணைகொண்ட இலக்குமிநரசிம்மன்
நீர்வண்ணன் கார்மேகன் நினைவாளும் நீலமேகன்
பார்போற்றும் பராசரனின் முன்வந்தே அருள்தந்தான் !
நிலமகளும் அலைமகளும் அன்போடு துணையிருக்க
நினைவெல்லாம் அடியார்கள் கொண்ட துயர்துடைக்க
நிலையில்லா வாழ்கைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கே !
நீலமேகா ! நித்தியமே ! சத்தியமே ! போற்றுகின்றேன் !