க. பாலசுப்பிரமணியன்

 

திருத்தஞ்சை மாமணிக்  கோவில்

thanjai-Maamani-kovil-copy

பாற்கடலில் கடைந்தெடுத்த நல்லமுதைப் பராசரனும்

பக்குவமாய் மணிமுத்த நதியிலே தெளித்துவிட்டே

பார்வியக்கும் தவத்தினில்  பக்தியுடன் அமர்ந்திருக்க

பார்த்திருந்த வானவரும் பராசரனைப் பணித்தனரே !

 

தஞ்சகனும் தாரகனும் தண்டகனும் ஆணவத்தில்

தவத்தோனின் நிலைகுலைக்கத்  தயங்காமலே முயன்றிடவே

தவம்காக்கத் திருமாலும் முன்வந்தார் முக்கோலம்கொண்டு

தஞ்சகனைத் தாரகனைத் தாடகனை வென்றிடவே !

 

கனல்பறக்கும் சினத்தோடு கருடன் மேலமர்ந்தே

கண்ணனும் வந்தான் கதைமுடிக்க வீரநரசிம்மனாய் !

களமிழந்த தஞ்சகனும் தலைகுனிந்து வேண்டிடவே

தஞ்சையெனப் பெயரெடுத்துத் தானமர்ந்தான் தயாளனே !

 

கலக்கமுற்றுக் கடலினிலே மறைந்திட்ட தண்டகனும்

களமிழக்கச் செய்தான் கண்ணனும் காட்டுப்பன்றியாய் !

காளியுடன் போரிட்டுக் கலையிழந்தான் தாரகனும்

தவத்தோனின் அன்பினிலே கண்ணனும் கட்டுண்டான் !

 

வீரத்திலே  ஈடில்லா விவேகன் வீரநரசிம்மன்

திருமகளைத் துணைகொண்ட இலக்குமிநரசிம்மன்

நீர்வண்ணன் கார்மேகன் நினைவாளும் நீலமேகன்

பார்போற்றும் பராசரனின் முன்வந்தே அருள்தந்தான் !

 

நிலமகளும் அலைமகளும் அன்போடு துணையிருக்க

நினைவெல்லாம் அடியார்கள் கொண்ட துயர்துடைக்க

நிலையில்லா வாழ்கைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கே !

நீலமேகா ! நித்தியமே ! சத்தியமே ! போற்றுகின்றேன் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.