மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -14
க. பாலசுப்பிரமணியன்
திருதலைச்சங்க நாண்மதியம்
அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோவில்
நல்லதே நடக்கும் நாரணன் நினைப்பால்
நன்மையைப் பெருக்கிடும் நாண்மதியனே !
நலங்கிட்ட நங்கை நாச்சியார் துணைவன்
நாமங்கள் ஆயிரம் கொண்ட நாதமூலனே !
பேதங்கள் இல்லாப் பாற்கடல் மன்னன்
சேதங்கள் இல்லாச் சிந்தையைத் தருவான்
வேடங்கள் போடும் வேடிக்கை வாடிக்கை
வேதங்கள் போற்றும் வைகுந்த நாயகன் !
சந்திரன் சாபங்கள் சடுதியில் விலகிட
சரணம் அடைந்தான் சாம்பனின் அருளால்
சாபங்கள் நீக்கிச் சங்கடம் விலக்கிட
சன்மதி பெற்றே வான்மதி வளர்ந்தான் !
சங்கினைப் பரிசாய் சங்கரன் தந்திட
அங்கத்தின் ஒளியில் அதுவும் சேரும்
சமரினில் ஒலிக்கும் சங்கொலி கேட்ட
அரக்கர்கள் வாழ்வோ விதையின்றி வீழும் !
தலைச்சங்கப் பெருமாள் தரணியைக் காக்க
தலைமுதல் தாள்வரை போற்றியே நின்றால்
அலைமகள் துணையுடன் அருள்தர வருவான்
நிலமகள் கருணையும் தடையின்றிக் கிடைக்கும் !
மலரும் மாலையும் கனிகளும் வேண்டாம்
மாதவன் நினைப்பே மனந்தனில் போதும்
மாலையும் காலையும் மனதினில் நிறுத்த
மார்கழி மணாளன் மனநலம் தருவான் !